Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed வேங்கியின் மோகினி

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி21



“ஆதித்தா! என்ன விளையாட்டு இது? “என்றான் அரிஞ்சயன்.



“தப்பிக்க நான் செய்யும் தந்திரம் அண்ணா இது! அவர்களின் அம்பு பாயும் தூரத்தை நாம் இன்னும் கடக்கவில்லை.அதை கடக்க இந்த விளையாட்டு உதவும்.!”



“இதன் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறாய்? “



“அவர்களின் கவனத்தை திருப்பி தேக்கி நிறுத்த போகிறேன்.!”



“எப்படி? “



“உண்டி வில்லில் நான் கற்களாக பயன்படுத்த போகின்றவைகளை கவனி! “



சிறு கருப்பு நிற துணியில் பச்சை நிற இலை தூள்களுக்கு நடுவே ஒரே ஒரு கல்லை வைத்திருந்தான் ஆதித்தன்.



“இது என்ன? “



“யானையை மிரண்டு ஓட செய்யும் நூதன ஆயுதம்! “



“இதன் பெயர்? “



“செந்தட்டி! செடிவகையை சேர்ந்தது.!உள்ளங்கையிலும், காலிலும் மட்டும் அரிப்பை ஏற்படுத்தாது.மற்ற இடங்களில் பட்டால் அரிப்பும், எரிச்சலும் கடுமையாக ஏற்படும்! “



“புரிந்தது! ஆரம்பி உன் விளையாட்டை! “



ஆதித்தன் ஆகாயத்தை நோக்கி விட்ட கல் இலை துகள்களை காற்றில் பரப்பியது.காற்று அந்த துகள்களை நாயக்கனின் படையின் பக்கம் திருப்பியது.ஆதித்தனின் அடுத்தடுத்த கற்கள் ஆகாயத்தில் விரிந்து பச்சை நிற மழையை பொழிந்தன.



நாயக்கனின் படை சுதாரிக்கும் முன்பாக அரிப்பும் எரிச்சலும் அவர்களை ஆட் கொள்ள துவங்கின.!சுதாரித்த நாயக்கன் “தாக்குங்கள்! “என்று கட்டளையிட்ட போது அம்புகள் அரிப்பினால் இலக்கு தவறி பறந்தன.சற்று நேரத்தில் மொத்த படையும் எரிச்சலால் மணலில் புரண்டு கொண்டிருந்தது.ஆற்று நீரில் இறங்கியும், எண்ணையை பூசியும் அரிப்பை தீர்க்க படைகள் முயன்று கொண்டிருந்தன.



“அவற்றால் குணப்படுத்த இயலாது நாயக்கரே! “



வலியால் கதறிய நாயக்கன் “வேறு சிகிச்சை முறைதான் என்ன? “என்றான்.



“மருத்துவமுறை அவ்வளவு சிறப்பானதல்ல! “



“எவ்வளவு கேவலமாக இருந்தாலும் பரவாயில்லை.செய்ய தயாராக இருக்கிறேன்.சொல்லி தொலையுமய்யா! “



“சொல்கிறேன்.!உமது சிறுநீரை மணலில் கழிந்து அதை மணலோடு பிசைந்து தடவினால் எரிச்சல் அடங்கும்! “



“பகடி செய்கிறாயா! “



“இல்லை! உண்மையான மருத்துவம் இது.!”



“ஆதித்தா! இன்று நீ தப்பிக்கலாம்.ஜெயிக்கலாம்.ஆனால் இறுதி வெற்றி எனக்கே! மறந்து விடாதே! “



என்ற நாயக்கன் மறைவிடம் தேடி ஓடினான்.படகு தாக்குதல் எல்லையை கடந்து நகர ஆரம்பித்தது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி22



“ஆதித்தனிடம் நாம் தோற்று விட்டோம் அமைச்சரே!”என்றான் வீரசிம்மன்.அவன் முகமும் உடலும் அரிப்பினால் வீங்கியிருந்தன.



“அப்படி தோன்றுகிறதா உமக்கு?”என்றான் தண்டநாயக்கன் அதற்கு சற்றும் குறையாத வீக்கத்துடன்.!



“இல்லையா? குதிரையை களவாடி சென்று விட்டானே? அது தோல்விதானே? “



“இல்லை! அவன் குதிரையை களவாட செய்த செயல்கள் அவனுக்கே பாதகத்தை ஏற்படுத்த போகின்றன! “



“எப்படி? என்ன செய்தாலும் குதிரை திரும்ப கிடைக்காதே? “



“அது உண்மைதான்! ஆனால் கடத்தி செல்லும் புரவியால் அவனுக்கு சற்றும் பயனில்லை.!அவன் முயற்சியும், உழைப்பும், திறமையும் விழலுக்கு இறைத்த நீராகப் போகிறது! “



“புதிர் போடுகிறீர் நீர்! “



“ஆதித்தன் உண்மையாகவே திறமைசாலிதான்.வர்ண ரகசியம் என்று ரவிதாசனை ஏமாற்றி மோகினியோடு சரளமாக பழக வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டான்.ஆழித்தேரின் சேதத்திலும் அவனின் கை வண்ணம் இருக்கக்கூடும்.மிக தெளிவான திட்டத்தோடுதான் வந்து என் சக்கர வியூகத்தை தகர்த்திருக்கிறான்!,”



“எதிரியை புகழ்கிறீர்கள்? “



“அதற்கு அவன் தகுதியானவனாக இருப்பதால்!”



“நாம் மற்றொரு படகை செய்து அவர்களை பின் தொடரலாமே? “



“அவர்களை தொடர நம் கைவசம் படகுகள் எதுவும் இல்லை.அப்படி எதாவது செய்து அவர்களை பின் தொடர்ந்தால் மரணத்தை நேரில் சந்திப்போம்! “



“அந்த இருவரால் நம் படையை அழித்து விட முடியுமா? “



“அப்படி எண்ண வேண்டாம்.சமவெளி பகுதியில் இருக்கும் கள்வர் கும்பலோடு நம்மை மோத விட்டு விட்டு லாவகமாக தப்பி சென்று விடுவான்.மேலும் அது வேங்கியின் எல்லையில் உள்ளது.போர் தொடுக்க காரணம் தேடும் மார்த்தாண்ட வர்மன் இதை வாகாக பயன்படுத்தி கொள்வான்.ஆக இவர்களை பின் தொடர்வது ராஜதந்திர ரீதியில் தவறாகவே முடியும்! “



“அப்படியானால் ஆதித்தன் கள்வர் கும்பலிடம் சிக்கி கொள்வானா? “



“எனக்கு சிக்கி கொள்வான் என்று தோன்றவில்லை.இந்த விடியற்காலை நேரம் ஆதித்தனுக்கு சாதகமாயிருக்கும்.!இரவு கொள்ளையில் ஈடுபட்ட கள்வர்களின் கும்பல் அயர்ந்து உறங்கி கொண்டிருக்கும் தருணம் இது! பாம்பின் கால் பாம்பறியும் என்பதை போல் கள்வர்களின் இயல்பை கள்வனான ஆதித்தன் கணித்திருப்பான்.அதனால் யவன வணிகனுடன் எந்த இடையூறும் இன்றி கடகத்தை அடைந்து விடுவான்! “



“இனி நாம் செய்ய எதுவுமில்லை! “



“இல்லை! இனிதான் நிறைய வேலை இருக்கிறது.ஆதித்தனின் பலவீனத்தோடு நான் விளையாட போகிறேன்.!”



“அவனது பலவீனம் என்று நீங்கள் குறிப்பிடுவது? “



“அரசியல் உத்திகள்! தான் கஷ்டப்பட்டு திருடி வந்த மோகினி அதற்கான கௌரவத்தை அடையாமல் அல்லல்படுவதை ஆதித்தனே பார்ப்பான்.தன் உழைப்பு வீணாகி போனதையும் என்னிடம் தோற்றதையும் அப்போதுதான் உணர்வான்! “



“இங்கே நடந்த சம்பவங்கள்? “



“அரசனின் காதுகளுக்கு போக கூடாது.இங்கிருக்கும் யாராவது இந்த சம்பவத்தை பற்றி மூச்சு விட்டாலும் அவர்களின் உயிர்பறவை உடலை விட்டு பறக்கும். இதை உன் வீரர்களிடம் சொல்லி வை! “



“உத்தரவு! “



தண்ட நாயக்கன் ஆழ்ந்த யோசிப்புடன் குதிரையை விரட்டினான்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி23



படகு நகர துவங்கியதும் கப்பல் தலைவனின் கழுத்திலிருந்த வாளை எடுத்த அரிஞ்சயன் “எங்களை காப்பாற்றிக் கொள்ள வேறு வழி தெரியவில்லை ஐயா! எங்களை மன்னியும்! “என்றான்.



“ஒரு விதத்தில் உமது படகையும், யவன வணிகனின் புரவிகளையும் நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம்.இல்லையென்றால் எரி அம்புகளுக்கு படகும். குதிரையும் இரையாகி இருக்கும்! “என்றான் ஆதித்தன்.



“நன்றி ஐயா! பிரதியுபகாரமாக பயண செலவு உங்களுக்கு இலவசம்! “என்றான் படகு தலைவன்.



“ஆதித்தா! எனக்கு ஒரு சந்தேகம்! ஒரே ஒரு குதிரை வரைய சொல்லிக் கொடுத்த ரவிதாசனுக்கு வர்ண ரகசியத்தை அறிவித்த நீ அஸ்வ சாஸ்திரம் போதித்த அனுபூதிக்கு ஏன் துரோகமிழைத்தாய்? “



“அவன் காலத்தை வெல்லும் ஓவியத்தை படைக்க நினைத்தான்.கற்று கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு போதித்து தன் கலையை அழியாது பாதுகாக்க விரும்பினான்.ஆனால் அனுபூதி தனக்கென்று ஒரு சீடனை கூட வைத்து கொள்ளாமல் யாருக்கும் சொல்லித்தராமல் தனக்குள்ளாக வைத்து கொள்ள விரும்பினான்.அரச கட்டளைக்கு பயந்தே எனக்கு போதித்தான்.ஆனால் முழுக்கவும் எனக்கு வித்தை கற்று தந்திருப்பானென்ற நம்பிக்கை எனக்கில்லை! குடியனிடம் இருக்கும் திறமை வீண்! அதனால் அவனுக்கு குரு துரோகம் புரிந்தேன்! “



“நல்ல விளக்கம்! இனி இடையூறு கள்வர்கள் பயம்! “



“அதை யவன வணிகனின் கூலிப்படையின் துணையோடு கடந்து விடலாம்! கள்வர்கள் உறங்கும் நேரம் இது.!”



அவர்கள் நினைத்தது போல் படகு கரையை அடைந்ததும் யவன வணிகன் ஒத்துழைக்க மறுத்தான்.

“உங்களை என்னுடன் அழைத்து செல்ல முடியாது.”என்றவனை ஆதித்தன் மிரட்ட ஆரம்பித்தான்.



“இதோ பார் யவனனே! அரசின் முத்திரை மோதிரம்.அரசின் ஆட்கள் நாங்கள்.ஒத்துழைக்க மறுத்தால் தண்டனைக்குள்ளாவாய்! மேலும் வேங்கியில் கழிக்கப்பட்ட புரவிகளை என் அரசரின் தலையில் கட்ட பார்க்கிறாய் என்று உண்மையை சொல்வோம்.தண்டனையுடன் வணிகமும் படுத்து விடும்.எப்படி வசதி? “



யவனனின் கண்களில் பயம் கிளை விட்டது.உடனடியாக ஒத்துழைத்தவனின் உதவியுடன் சமவெளியை கடந்தனர்.நல்லவேளையாக கள்வர்கள் வழியில் குறுக்கிடவில்லை.இரண்டு நாட்களுக்கு பிறகு அவர்கள் கடக நாட்டின் கோட்டையை அடைந்த போது மழவராயர் வழியை மறித்தார்.



“எங்கே வெண்ணிற மோகினி? “



“இருக்கிறதய்யா! நீர் எப்படியோ எமனிடமிருந்து தப்பி நடமாடுகிறீர் ஐயா! “



“ஹாஹாஹா!சித்ர குப்தனிடம் என் கணக்கு இல்லை தம்பி! ஆனால் உங்களின் பெயர் இருக்கிறது.”



“என்ன சொல்கிறீர்கள் கிழவனாரே? “



“முன்பு மோகினி இல்லாமல் வந்தால் மரணம் என்றேன்.இப்போது மோகினியோடு வந்தால் மரணம் என்கிறேன்.!”



“உளறாதீர் பெரியவரே! “



“உளறவில்லை! உண்மையை உறைக்கிறேன்.”



“உற்சவரிடம் பேச எனக்கு விருப்பமில்லை.மூலவரை வரசொல்! அவர்தான் எங்களிடம் சகாயம் தேடி வந்தவர்.!”



“வர சொல்கிறேன் சிறுவர்களே! வீரர்களே! வாளை பதமாக தீட்டி வையுங்கள்! இருவரின் சிரசுகளை வெட்டி சோதிக்க வேண்டும்! “



மழவராயர் அரண்மனைக்குள் சென்ற சற்று நேரத்தில் மார்த்தாண்ட வர்மன் இறுகிய முகத்துடன் வெளியே வந்தான்.இருவரின் வணக்கத்தை கண்டு கொள்ளாமல் நின்ற வர்மன் “இங்கே ஏன் வந்தீர்கள்? “என்றான்.



“மோகினியை ஒப்படைக்க மன்னரே! “



“துரதிர்ஷ்டத்தின் சின்னம் அது! எனக்கு அது தேவையில்லை.!”



“அபூர்வ பொருளென்று களவாட சொன்னவர் நீர்! “



“அது அப்போது! “



“இப்போது நிலையில் மாற்றம்! காரணம் ஏன் மன்னவா? “



“இதோ! நேற்று வேங்கியில் உள்ள என் தூதன் புறா மூலம் அனுப்பிய சேதி! படித்து பாருங்கள்! உண்மை விளங்கும்! “



ஓலையை படிக்க தொடங்கிய ஆதித்தன் தண்டநாயக்கனிடம் தான் தோற்று போனதையும் தன்னுடைய திட்டங்கள் நாயக்கனுக்கு சாதகமாக மாறி விட்டதையும் நினைத்து வருந்த ஆரம்பித்தான்.நாயக்கனின் விஸ்வரூபம் ஆதித்தனை வியக்க வைத்தது.!
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
பகுதி 24



ஓலையை படித்த ஆதித்தனின் முகம் இருட்டுக்கு போனது.அவன் முழுதாக வாசிக்கும்வரை காத்திருந்த மார்த்தாண்டவர்மன் “முழுவதுமாக வாசித்தீரா? உமக்கு சாதகமாக இருந்த நிலவரம் இப்போது கலவரமாக மாறி உள்ளது! “என்றான்.



“தண்ட நாயக்கன் அப்படி மாற்றி விட்டான் அரசே! ஆழித்தேர் தீப் பிடித்ததை அசுப சகுனம் என்று மகிபாலன் கருதியிருக்கிறார்.தெய்வ நிந்தனையால் நாட்டிற்கும். அரசிற்கும் எதாவது ஆபத்து வருமோ என்று மகாதேவி கோயிலில் நிமித்திகம் பார்த்திருக்கின்றனர்.அப்போது அங்கே அருள் வந்து ஆடிய ஒரு பெண் அபூர்வமான அசைந்தாடும் வெண்ணிற பொருளால் நாட்டின் நலனுக்கு ஆபத்து வரக்கூடும் என்று சொல்லியிருக்கிறாள்.நிமித்திகரும் அதையே வழி மொழிந்துள்ளார்.மோகினியை தீச்சகுனம் என்று கருதிய மகிபாலர் அதை நஞ்சிட்டு கொன்று விட்டார்.மோகினி இறந்ததாக உலகம் நினைக்கிறது.ஆனால் இறந்தது வர்ணம் மாற்றப்பட்ட என் குதிரை என்பதை நாம் மட்டுமே அறிவோம்! எல்லாம் நாயக்கனின் ஏற்பாடு! "



“போன ஜென்மத்தில் நாயக்கன் குள்ளநரியாகத்தான் பிறந்திருக்க வேண்டும்! “என்றான் அரிஞ்சயன்.



“உன் உழைப்பும், திறமையும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது! “என்றான் வர்மன்.



“எதிரியை சற்று தவறுதலாக எடை போட்டு விட்டேன்.அவனோ என் திட்டங்களை கொண்டே என்னை மடக்கி விட்டான்.!”என்றான் ஆதித்தன்.



“எப்படியோ நீ தோற்று விட்டாய்.எனக்கு ஆனந்தம் தரும் செய்தி அது ஒன்றுதான்! “என்றார் மழவராயர்.



“இப்போது மோகினியின் கதி? “என்றான் ஆதித்தன்.



“வேங்கியிலிருந்து வதந்தி பரவி வருகிறது.இரட்டைசுழியுள்ள வெண் குதிரை அபச குணமுள்ளதென்று! உன் குதிரைக்கு நேர்ந்த கதிதான் மோகினிக்கும்! “



“அதை நீங்கள் நம்புகிறீர்களா? “



“கடகத்தின் மக்கள் நம்ப ஆரம்பித்து விட்டார்கள்.நாளை நாட்டில் அசம்பாவிதம் எதாவது நடந்தால் மோகினியின் ராசி என்று நானும் நம்ப கூடும்.!”



“விபரீதத்தை இதற்காகவென்றே நிகழ்த்த தயாராக இருக்கிறான் நாயக்கன்! “என்றான் அரிஞ்சயன்.



“மோகினியின் மீதான கற்பிதங்களை உண்மையென்று நம்ப வைத்ததில் தண்ட நாயக்கன் என்னை வென்று விட்டான்.!”



“அரசே! இன்னும் என்ன வீண் பேச்சு? என்னை பகடி செய்து சிரித்த இவர்களை என் வாளால் கொல்ல வேண்டும்! “என்றார் மழவராயர்.



“உம்மை உசுப்பேற்ற சொன்ன பொய் ஐயா அது.!இருவரும் ஏராளமாக உழைத்திருக்கிறார்கள்.அவர்களை கொல்ல நினைப்பேனா? உம்மை சந்தோஷப்படுத்த நான் சொன்ன சிறு பொய் அது! “என்று வர்மன் புன்னகைத்தான்.



“இப்போது என்ன செய்வது மன்னரே? “என்றான் ஆதித்தன்.



“மோகினிக்கு நஞ்சிட வேண்டியதுதான்.நல்லவேளையாக அது இன்னும் கருப்பு வண்ணத்திலேயே உள்ளது.உங்களின் திறமையை மெச்சி ஏதேனும் பரிசு தர விரும்புகிறேன்.எது வேண்டுமோ கேளுங்கள்! “



“எதுவும் வேண்டாம் மன்னரே! மோகினியை கொல்லாமல் எனக்கு பரிசாக தந்து விடுங்கள்! “என்றான் ஆதித்தன்.



“ஆமாம்! இந்த திமிர் பிடித்தவனுக்கு இதுதான் சரியான தண்டனை.தான் தோற்று போனதன் நினைவு சின்னமான குதிரையை பார்த்து தினமும் அழட்டும்.அதுதான் சரியான தண்டனை! “என்று மகிழ்ந்தார் மழவராயர்.



“அப்படியே ஆகட்டும்.!மோகினியை நீங்களே வைத்து கொள்ளுங்கள்.சிறிது நாட்கள் தங்கி போகலாமே? “என்ற வர்மனை வணங்கியவர்கள் “இல்லை அரசே! நாங்கள் உடனடியாக கிளம்ப வேண்டும்.இல்லையேல் இந்த கிழவர் எங்களை கேலி செய்து தற்கொலைக்கு தூண்டி விட்டு விடுவார்! “என்றனர்.



“ஆதித்தன் பயப்படுவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.அதுவும் என்னை பார்த்து! “என்றார் மழவராயர்.



“பயணம் இனிதாகட்டும்! சென்று வாருங்கள்! “என்ற வர்மன் அரண்மனைக்குள் சென்று மறைந்தான்.



“கதையின் நாயகன் தோற்பது இதுதான் முதல்முறை.!மிகவும் கேவலமாக உள்ளது கதையின் முடிவு! “என்றார் ராயர்.



“ராயரே! நாயகன் தோற்றதாக வரலாறு கிடையாது.என்னால் இங்கிருந்தே தண்ட நாயக்கனை வெற்றி கொள்ள முடியும்! “



“அது எப்படி? “



“என்னுடன் சிறிது நேரம் பயணப்பட்டால் ரகசியம் தெரியும்! “



“அப்படியானால் வருகிறேன்.”



“ஒரே நிபந்தனை! நீர் எதுவும் பேசாமல் வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும்! “



“சம்மதிக்கிறேன்! “



“ஆதித்தா! இதென்ன விபரீதம்! இங்கிருந்து எப்படி நாயக்கனை ஜெயிக்க முடியும்? “என்றான் அரிஞ்சயன்.



“மனமிருந்தால் மார்க்கமுண்டு! பொறுத்திருந்து பார் அண்ணா! உன் தம்பி தண்ட நாயக்கனை வெற்றி கொள்வதை! “



மூவரின் புரவிகளும் கோட்டை வாயிலிலிருந்து கிளம்பின.

மூவரின் புரவியும் அங்கிருந்து கிளம்பி ஒரு காததூரம் சென்றன.அங்கேயிருந்த விடுதி ஒன்றின் முன்னால் புரவிகளை நிற்க செய்த ஆதித்தன் அங்கிருந்த காவலனிடம் ஒரு பொற்காசை கொடுத்து தன் குதிரையை மட்டும் நன்றாக குளிப்பாட்ட சொன்னான்.இரண்டு நாட்களாக கருப்பு வண்ணத்தை பூசியிருந்த மோகினி குளிப்பாட்ட தொடங்கியதும் பளீரென்ற வெண் நிறத்தில் மின்னலாயிற்று.



“இந்த விடுதிக்கு நாம் யாரை பார்க்க வந்திருக்கிறோம் ஆதித்தா? “என்றான் அரிஞ்சயன் குழப்பத்துடன்!



“மோகினியின் அருமை தெரிந்த ஒருவனை சந்திக்க போகிறோம்! ராயரே! இந்த கணத்திலிருந்து நீர் ஊமை! மறந்து விடாதீர்! “என்றான் ஆதித்தன்.

சம்மதமாக தலையசைத்தார் ராயர்.!



மூவரும் விடுதியின் உள்ளே நுழைந்த போது விடுதி காப்பாளன் “நீங்கள் யாரை பார்க்க வேண்டும்? “என்றான்.



“யவனத்திலிருந்து புரவிகளுடன் வந்திருக்கும் யவனனை சந்திக்க வேண்டும்! “



“கிழக்கு பக்கமுள்ள அறையில் தங்கியிருக்கிறார்.போய் பாருங்கள் ! “



"அவனை நாம் ஏன் சந்திக்க வேண்டும்?"என்றான் அரிஞ்சயன்.



"தற்செயலாக வந்த இந்த யவனனிடமிருந்தே மோகினி போன்ற குதிரையை வாங்குவதாக வர்மரிடம் கூறினேன்.நினைவிருக்கிறதா? அதை வேறு மாதிரி பயன்படுத்த போகிறேன் அண்ணா!"என்றான் ஆதித்தன்.



மூவரையும் கண்ட யவனனம் மரியாதையுடன் வரவேற்றான்.ஏற்கனவே ஆதித்தனையும், அரிஞ்சயனையும் கப்பலில் சந்தித்த யவனன்தான் இவன்.ஆதித்தனிடமிருந்த முத்திரை மோதிரம் யவனனிடம் மரியாதையை வரவழைத்திருந்தது.விடுதியில் ஓய்வெடுக்க பாதியில் கழன்று கொண்டு விட்டவன் இவர்களின் வருகையால் குழப்பமடைந்தான்.



“யவன வணிகனே! உம்மிடம் ஒரு வணிகத்திற்காக வந்துள்ளேன்! “என்றான் ஆதித்தன்.



“உங்களின் அரசிடம்தானே குதிரைகளை விற்க வந்துள்ளேன்! அதை பற்றி பேச போகிறீர்களா? “



“இல்லை! இது உமக்கும் எனக்குமான தனி வணிகம்! “



“அது சரி! இந்த முதியவர் யார்? “



“அவர் பெயர் மழவராயர். பிறவி ஊமை.அரண்மனையின் முக்கியஸ்தர்களில் ஒருவர்.இவர் நீரற்ற கிணற்றில் விழ சொன்னாலும் மன்னர் குதிப்பார்! “என்றான் ஆதித்தன்.



“ப்பே! “என்று பெருமையுடன் ஆமோதித்தார் ராயர்.



“வந்தனம் ஐயா! உங்களின் உறவு எனக்கு வரவு! என்னிடம் என்ன வணிகம் செய்ய வந்துள்ளீர் ஆதித்தரே? “



“ஒரு வெண்புரவியை விற்க வேண்டும்! “



“குதிரையை பார்த்த பின்பே விலை பேச முடியும்.!”



“வெளியே நிற்கிறது! வந்து பார்வையிட்டு விட்டு விலை சொல்லும்! “



வெளியே வந்து மோகினியை பார்வையிட்ட யவனனின் கண்கள் வியப்பில் விரிந்தன.



“இரட்டை சுழியுள்ள வெண்புரவி! அபூர்வ பிறவியாயிற்றே? இதை போல் ஒன்றை என் சக வணிகன் வேங்கியின் அரசரிடம் விற்றான்! “



“அதுவல்ல இது!இது வேறு குதிரை! “



“சோதித்தால் தெரிந்து விடும்! “என்ற யவனன் யவன மொழியில் சில கட்டளைகளை பிறப்பித்தான்.மோகினி கீழ் படிவதை கண்டதும் “நிச்சயமாக இது இந்த மண்ணில் பிறந்த குதிரையல்ல.சிறு வயதிலிருந்து கேட்ட யவன மொழிக்கு கீழ் படிவதால் இது யவனத்தில் பிறந்த குதிரையாகத்தான் இருக்க முடியும்! இது மோகினியாக இருக்கவும் வாய்ப்புண்டு! “



“வணிகத்தில் ரிஷிமூலம், நதி மூலம் பார்க்காதீர் யவனரே! “



“இதனால் எந்த ஆபத்தும் நேராது என்ற உத்தரவாதம் எனக்கில்லை.!”



“நான் உறுதி தருகிறேன்.உமக்கு எதுவும் நேராது! “



“எந்த வில்லங்கமும் இல்லாவிட்டால் லட்சம் பொன் தரலாம்.ஆனால் இதற்கு நான் குறைவாக தரவே விரும்புகிறேன்.!”



“எவ்வளவு தருவீர்? “



“ஐம்பதாயிரம் பொன் தரலாம்.ஆனால் கையிருப்பாக நாற்பதாயிரம் பொன்தான் இருக்கிறது.!”



“பரவாயில்லை! அதை கொடு! மீதி பத்தாயிரம் பொன்னை வாய் பேச இயலாத என் நண்பருக்கு கொடுத்து விடு! ஒரே ஒரு நிபந்தனை உண்டு.கடகத்திலும், வேங்கியிலும் இந்த குதிரையை நீ விற்க கூடாது.மீறினால் வரும் இன்னலுக்கு நான் பொறுப்பல்ல!



“இதற்கு இசைகிறேன்! வட புலத்தை நோக்கியே செல்கிறேன் “என்ற யவனன் பணத்தை எடுத்து வர விடுதிக்குள் சென்றான்.



“இலவசமாக வாங்கி வந்ததை விற்று விட்டாய்! திறமைசாலிதான்! “என்றார் ராயர்.



“கேளும் ராயரே! மோகினியை கொல்ல வேண்டும் என்பது நாயக்கனின் திட்டம்.அது தவிடு பொடியாகி விட்டது.மோகினி வேறு எங்காவது தனக்குரிய மரியாதையோடு வாழ்ந்து கொண்டிருக்கும்.வருடம் முழுக்க திருடினால் கிடைக்க கூடிய ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பொன்னை நான் ஒரு குதிரையில் ஈட்டி விட்டேன்.முதியவனான அனுபூதி இறந்தால் உலகில் அஸ்வசாஸ்திரம் அறிந்த ஒரே ஆள் நான்தான்.!கள்வர் புரத்தின் பெருமையை எங்களின் திறமையை இரு நாடுகளுக்கும் உணர்த்தி விட்டோம்.இப்போது கூறும் யார் தோற்றார்கள் என்று! “



“இதை கேட்டால் நாய்க்கனின் தூக்கம் இரண்டு நாட்களுக்கு பறி போகும்! “



“யவனன் விற்கும் குதிரைகளிலிருந்து பத்தாயிரம் பொன்னை வாங்கி கொள்ளும் பெரியவரே! “



“எனக்கு எதற்கு பொன்? “



“இன்னா செய்தாரை ஒறுக்க? “



வெளியே வந்த யவனன் பொன் முடிப்பை கொடுத்தான்.



“யவனரே! ஒரு வேண்டுகோள்! “



“என்ன அது? “



“என் ஊமை நண்பர் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசினாலும் நீர் பத்தாயிரம் பொன்னை தர வேண்டியதில்லை! இது எங்களுக்குள்ளான ஒப்பந்தம்.இதை நீர் கடை பிடிக்க வேண்டும்! “



“நிச்சயமாக! அவர் ஒரு வார்த்தை பேசினாலும் பணம் தர மாட்டேன்! “



“அவர் சற்று நேரம் சைகையில் எங்களுடன் பேசி விட்டு வருவார்.நீர் ஓய்வெடும்! “

யவனன் விடுதிக்குள் சென்றான்.



“ஆதித்தா! இது என்ன புது நிபந்தனை? “என்றார் மழவராயர்! .



“காரணமாகத்தான் ராயரே! இப்போது இங்கு இரண்டு புரவிகள் மட்டுமே உள்ளன.அவற்றில் நாங்கள் பயணப்படுவோம்.!”



“என் புரவியை நீங்கள் எடுத்து கொண்டால் நான் எப்படி கோட்டைக்கு பயணப்படுவது? “



“யவனனிடம்தான் நாற்பது குதிரைகளும்,உம்முடைய பொன்னும் இருக்கிறதே? போய் கேளும்! உதவுவான்! “



“ஆம்! சரிதான்! “



“நீர் சாடையில்தான் பேச வேண்டும் ராயரே! உணர்ச்சி வேகத்தில் ஒரு சொல்லை உதிர்த்தாலும் கோட்டைக்கு பணமின்றி நடந்துதான் போக வேண்டும்! “



“கிராதகர்களே! உங்கள் வேலையை காட்டி விட்டீர்களா? “



“சத்தமாக பேசாதீர்! யவனனின் காதில் விழுந்தால் பொன் போய்விடும்! “



மழவராயர் மவுன மொழியில் வசவுகளை உதிர்த்து கொண்டிருக்க சகோதரர்கள் இருவரும் கிளம்பினர்.”வாழ்க்கையில் உன்னை மறக்க இயலாது வெண் புரவியே!போய் வருகிறோம் மோகினி! “என்ற ஆதித்தனின் கண்கள் கலங்கின.வெகு தூரத்தில் கள்வர் புரம் அவர்களுக்காக காத்திருந்தது.



முற்றும்
 

bbk

Member
Messages
6
Reaction score
2
Points
18
ராஜா காலத்து கதைய சூப்பரா எழுதுரீங்க
 

bbk

Member
Messages
6
Reaction score
2
Points
18
லைக் செய்தது ஒட்டுமொத்த கதைக்கும்
 
Top Bottom