Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93
உயிர் துடிப்பாய் நீ !


அத்தியாயம் 18


வாழ்க்கையில் சில நிகழ்வுகளை நாம் எதிர் கொண்டு தான் ஆக வேண்டும்.நம் மனம் விரும்புகிறதோ! இல்லையோ! சூழ்நிலை கைதியாக சில நேரங்களில் நாம் மாற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம்.


திகழொளியும் அப்படி ஒரு நிலையில் தான் இருந்தாள்.மணியரசி பால் சொம்பை கையில் கொடுத்து மிகன் அறைக்குப் போகச் சொன்னதும், அவளுள் சிறு பயம் தொற்றிக் கொண்டது.


அவளொன்றும் இந்த நிகழ்வைப் பற்றி அறியாத சிறு குழந்தை இல்லை தான்.ஆனாலும், மனதின் குழப்பமும், மிகனின் கோவமும் அவன் அறைக்குச் செல்ல அவளுள் பெரும் தயக்கத்தை உண்டாக்கியது.



மணியரசி முன்பு எதையும் காட்டிக் கொள்ள முடியாமல் தயக்கத்துடனேயே தங்கள் அறைக்குச் சென்றாள்.இனி அவள் இருப்பிடமும் அது தானே..!



மெல்ல அடிமேல் அடி வைத்து சென்றவளின் மனதிற்குள் காலையில் அவன் பேசிய வார்த்தைகள் நினைவு வந்து தீயாக காந்தியது.



இப்போது இன்னும் சுட்டெரிக்கும் ஆதவனாய் காத்திருப்பான் என்று மனம் கூப்பாடு போட்டாலும், வேறு வழி அறியாது அவனை எதிர்கொள்ளும் மனநிலையுடன் அவனின் அறையை நோக்கிச் சென்றாள்.



நாகரீகம் கருதி திறந்திருந்த அறைக் கதவை மெல்லமாக தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.



மிகனோ, சாளரத்தின் அருகில் நின்று இறுகிய முகத்துடன் ஆகாயத்தை அளந்து கொண்டிருந்தான்.



மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கணவனின் அருகில் சென்றாள்.


மனைவியின் வரவை அறிந்தாலும் கண்டு கொள்ளாமல் தன் நிலையிலேயே நின்றிருந்தான்.



கணவனின் செயல் வலியைக் கொடுத்தாலும், அதை பொருட்படுத்தாமல் " மணியம்மா பால் கொடுத்து விட்டாங்க .. இந்தாங்க .."என்று பால் சொம்பை அவன் புறம் நீட்டினாள்.



"எனக்கு வேண்டாம்.." என்று மிகன் அவள் புறம் திரும்பாமலேயே பதில் சொன்னான்.



அவளோ, என்ன சொல்வது என்று புரியாமல் அப்படியே நின்றிருந்தாள். சில நொடி கழித்து அருகில் இருந்த மேஜை மீது பால் சொம்பை வைத்தவிட்டு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக நேரத்தைக் கடத்தினாள்.



மிகனோ, அவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் கற்சிலையாக சாளரத்தின் அருகிலேயே நின்றிருந்தான்.



சில நிமிடங்கள் அந்த அறையில் மின் விசிறியின் சத்தம் மட்டுமே கேட்டது.



கணவனை எப்படி அணுகுவது என்று அறியாமல் நெருப்பின் மீது நிற்பது போல் நின்றிருந்தாள். ஒருவாறு மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தன் மெளனத்தைக் கை விட்டு , " மிகன் நான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றாள்.



"எனக்கு இப்போது பேசும் மனநிலை இல்லை.." என்று இறுகி போய் பதில் உரைத்தான்.



"ப்ளீஸ் மிகன் நம் வாழ்க்கை பற்றி பேசியே ஆகனும்.."என்றவளிடம்..



கண்கள் சிவக்க திரும்பி அவளை தீர்க்கமாக பார்த்தபடி "என்னடீ பேசனும்? பேச என்ன இருக்கிறது! எத்தனை அழகாக நமக்குள் இருந்திருக்க வேண்டிய இரவு. ஆனால், அத்தனையும் உன்னால் வீணாய் போனது.."



"மிகன் எல்லா செயலுக்கும் இன்னொரு பக்கம் நியாயம் இருக்கும். அதை அறியாமலும் ,தெரிந்து கொள்ளாமலும் நீங்களே என் மீது தவறு என்று முடிவு செய்துவிட்டால் எப்படி..?"



"எல்லா குற்றவாளிகளும் தான் குற்றம் செய்ய வில்லை என்று தான் சொல்லுவார்கள்.."


"குற்றம் செய்யவில்லை என்றால் செய்யவில்லைன்னு தானே சொல்ல முடியும். ஒரே ஒரு நிமிடம் நான் சொல்வதை கேளுங்க மிகன்.எனக்கொரு வாய்ப்பு கொடுங்களே.."


"வாய்ப்பு கொடுத்தால் நடந்தது எல்லாம் சரியாகிடுமா..?இல்லை உன்னால் ஒவ்வொரு நொடியும் சாகவும் முடியாமல், வாழவும் முடியாமல் புழுவா துடித்துட்டு இருக்கேனே அது தான் சரியாகிடுமா?"என்று அடங்காத கோவத்துடன் கத்தினான்.



அவளோ"மிகன் !" என்று கலங்கிய குரலில் அழைத்தாள்.



அவனின் அழைப்பை கண்டு கொள்ளாமல் " நான் என்று உன்னை நேசிக்க தொடங்கினேனோ ! நீ என் மனசுக்குள் என்று வந்தாயோ! அன்றிலிருந்து நான் உன்னுடன் எப்படி எல்லாம் வாழ வேண்டுமென்று கோட்டை கட்டி வைத்திருந்தேனோ ! அதை எல்லாம் சுக்கு நூறாக உடைத்தது நீ தான் டீ.." என்றவன் அவள் புறம் வேகமாக வந்து அவளின் தோள்களைப் பற்றி அழுத்தினான்.


அவளோ, கண்களில் உயிரே இல்லாமல் அவனை வெறித்துப் பார்த்தாள்.


அவளின் பார்வையயை தாங்கியபடியே "மாசு மருவற்ற இந்த முகம் பெளர்ணமியைப் போல் என் வாழ்வில் ஒளி வீசும் என்று நினைத்தேன். ஆனால், என் வாழ்வை இருளாக்கிவிட்டதே .."என்று வார்த்தைகளில் அமிலத்தைக் கொட்டினான்.



அவளோ, கண்களில் நீர் கோர்க்க மெளனமாக நின்றாள்.



மனைவியின் மனதைக் காயப்படுத்திக் கொண்டு இருக்கிறோம் என்று உணராமல் மேலும் மேலும் வார்த்தைகளை விஷமாக கக்கினான்.



"என்னை நினைத்தால் எனக்கே அருவருப்பாக இருக்கிறது. உன் குணமும், புத்தியும் தெரிந்தே உன்னை விலக முடியாமல், உன்னையே கல்யாணம் பண்ணி இருக்கேனே நான் எவ்வளவு பெரிய முட்டாள்.." என்றவன் அவளின் முகவாயைப் பற்றி , உன்னைக் கல்யாணம் செய்ததது உன் கூட வாழ இல்லை.. நீ வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமாக வாழக்கூடாது என்று தான். வாழ் நாள் முழுவதும் ஏன் டா இவனுக்கு துரோகம் செய்தோம்ன்னு நீ நினைத்து நினைத்து கதறனும். உன்னை காதலித்த பாவத்திற்கு நானும் உன்னை அருகில் வைத்துக் கொண்டே சாவனும்.." என்று வார்த்தைகளில் அனலை அள்ளி வீசயவன் அவளை விட்டு சென்று படுக்கையில் படுத்தான்.


கணவனின் சுடு சொற்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வேரறுந்த கொடியாக அப்படியே தொய்ந்து அமர்ந்தவள், முகத்தை முழங்காலில் மறைத்துக் கொண்டு சத்தம் இல்லாமல் அழுதாள்.


தேற்றுவாரற்று அழுது கரைந்தவள் மனமும் உடலும் சோர்ந்து போய் அப்படியே தரையில் சுருண்டு படுத்தவள் தன்னை அறியாமல் உறங்கிப் போனாள்.


மிகனோ, பலதையும் யோசித்தபடியே உறங்கிப் போனான். நடு இரவில் விழிப்பு வர விழித்தவன் அருகில் மனைவியைக் காணாமல் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவன், அறையை கண்களாலேயே வலம் வந்தான்.


மனைவி சிறுகுழந்தை போல் தரையில் படுத்திருப்பதைக் கண்டவனுக்கு மனதிற்குள் ஏதோ செய்தது.மெதுவாக எழுந்து சென்று அவள் அருகில் சத்தம் இல்லாமல் அமர்ந்து, அவளின் முகத்தை சில நிமிடங்கள் தன்னை அறியாமலேயே பார்த்துக் கொண்டு இருந்தான்.


குழந்தை போல் உறங்கி கொண்டிருந்தவளைப் பூப் போல் தூக்கிச் சென்று படுக்கையில் படுக்க வைத்தான்.அவனும் மனைவி அருகில் சென்று படுத்தபடியே அவளின் முழு நிலவாக மின்னிய முகத்தைப் பார்த்துக் கொண்டே நெடுநேரம் விழித்திருந்தவன் விடியற்காலையில் தான் கண் அயர்ந்தான்.


பகலவனின் வருகையும்,பறவைகளின் இன்னிசையும் திகழொளியின் உறக்கத்தை மெல்ல கலைத்தது.


உறக்க கலக்கத்திலேயே கண் விழித்தவளுக்கு படுக்கையின் மென்மை குழப்பியது. அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவளுக்கு சில நொடிகள் ஒன்றும் புரியவில்லை.



தரையில் தானே படுத்து இருந்தோம்! எப்படி கட்டில் மேல் வந்தோம் என்று யோசித்தவளுக்கு பதில் தான் கிடைக்கவில்லை.



பலத்த யோசனையுடன் அருகில் கணவனின் முகத்தைக் கண்டதும் அவளின் முகம் ரோசா மொட்டாக விரிந்தது.



ஒருக் கழித்துப் படுத்து இருந்தவனின் முகத்தில் தெரிந்த மென்மையும்,அவனைப் போலவே சிலிர்த்துக் கொண்டிருந்த சிகை முடியும் அவள் கவனத்தை ஈர்த்தது.


இரவு அவன் பேசியது எல்லாம் மண்டைக்குள் ஓடினாலும், அவன் மீது அவளுக்குள் இருந்த நேசம் அவளை மீறி கணவனை ரசித்துக்க வைத்தது.


முகத்தில் மலர்ச்சியுடன் தயங்கி, தயங்கி கணவனின் தலையை பட்டும் படாமல் தடவினாள்.


மனதிற்குள் கணவனின் செயல்களைப் பற்றி யோசித்தாலும்,அவளின் விரல்கள் தன் வேலையை செவ்வனே செய்தது.கண்களும் அவன் முகத்திலேயே நிலைத்து இருந்தது.


சில நிமிடங்களில் அவனிடம் அசைவு தெரிந்ததும், சட்டென்று மிகினின் தலையிலிருந்து விரல்களை எடுத்தவள், படுக்கையில் இருந்து, எழுந்து சென்று குளியலறையில் தஞ்சம் புகுந்தாள்.


மிகன் எழுதுவதற்கு முன் குளித்து முடித்து அழகான மாம்பழக் கலரில் இளஞ்சிவப்பு கரை வந்த சில்க் காட்டன் புடவையும் .அதற்கு பொருத்தமாக சிவப்பு ரவிக்கையும் அணிந்து ,ஈரத்தலையில் காதோரம் இருபக்க முடி எடுத்து நடுவில் கிளிப் மாட்டினாள்.



முகத்திற்கு லேசான ஒப்பனை உடன் தலைவகிடுக்கு குங்கமமும் வைத்துக் கொண்டு தன் அலங்காரத்தை முடித்துக் கொண்டாள்.



அதுவே அவளை பேராழகியாக காட்டியது.மிகனின் உறக்கம் கலையாமல் அவர்களின் அறைக் கதவை சாத்தி விட்டு மணியரசியை தேடிச் சென்றாள்.



மணியரசியோ திகழொளியைக் கண்டதும் முகத்தில் புன்னகையுடன் "வாம்மா திகழி குளித்து விட்டாயா ? காஃபி கலந்து தரவா ..?என்று கேட்டபடி நெருக்கமா தொடுத்து இருந்த மல்லிகை பூவைக் அவளிடம் கொடுத்து தலையில் வைத்துக் கொள்ளச் சொன்னார்.


திகழொளியும் மறுக்காமல் வாங்கி தலையில் வைத்துக் கொண்டாள்.


மணியரசியோ ,மணக்க மணக்க இரண்டு கோப்பையில் காபி கலந்து அவள் கையில் கொடுத்து, " திகழி மிகனுக்கு கொடுத்துட்டு நீயும் குடிம்மா.." என்றார்.


"அம்மா இன்னும் அவர் விழிக்கவில்லை.." என்றவளிடம்..


"பரவாயில்லை எழுப்பி விடும் மா..இன்னைக்கு குலதெய்வ கோவிலுக்கு போகனும்.சீக்கிரம் மிகனை குளித்து விட்டு கிளம்பி வரச் சொல்லுமா.." என்று அவர்கள் அறைக்கு அனுப்பி வைத்தார்.



தயங்கிய படியே தங்கள் அறைக்குச் சென்றவளை மிகனின் கோவமான முகம் தான் வரவேற்றது.



இவளைப் பார்த்தவுடன் "எங்க டீ போனே, உன் தம்பி ஏழு வாட்டி போன் பண்ணிட்டான்.மனுசனை நிம்மதியா அக்காளும் தம்பியும் தூங்க கூட விட மாட்டீங்களா..? ஏன் ஒரு நாள் கூட உன் தம்பிக்கு உன் கூட பேசாம இருக்க முடியாதா? விடிந்தும் விடியாதற்குள்ளே நூறு போன்.."என்று கடுப்பாக கத்தியவனிடம் பதிலே பேசாமல் காஃபியை நீட்டினாள்.



காப்பியை வாங்காமல் அவளையே முறைத்தவனை "சீக்கிரம் பல் தேய்த்துட்டு வந்து காஃபியை குடிங்க! சூடு ஆறிடப் போகுது.." என்றாள் அதிகாரமாக.


"என்ன அதிகாரம் எல்லாம் தூள் பறக்குது.." என்று நக்கலாக கேட்டவனிடம்..


"ம்.. இனி அப்படித் தான்.."


"ஓ! எது கொடுத்த தைரியம்.."


"ம்ம்..இது கொடுத்த தைரியம்.." என்று தன் கழுத்தில் மஞ்சள் மனம் மாறாமல் புத்தம் புது பொலிவுடன் தொங்கிய தாலிக் கயிற்றைக் எடுத்துக் காட்டீனாள்.



அவனே அதை வெறித்துப் பார்த்தபடி அவள் அருகில் வந்து, அதை தன் கையில் ஏந்திக் கொண்டே அவளின் கண்களைப் பார்த்தபடி "இது எனக்கும் முழு அதிகாரத்தையும், உரிமையும் கொடுத்து இருக்கு.." என்றான் விழிகள் பளபளக்க..


கணவனின் பதிலில் மனம் பதை பதைக்க அசையாமல் நின்றாள் திகழொளி.


தொடரும்

அடுத்த யூடி சனிக்கிழமை
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 19

மிகன் சொன்னதைக் கேட்டதும் அசையாமல் நின்றிருந்தவளின் முன் விரல்களால் சொடுக்கிட்டு "ஹலோ மேடம் என்ன அப்பப்ப பீரீஸ் ஆகிறே.." என்று புருவத்தை உயர்த்திக் கேட்டான்.


அவளோ ,அவனின் செய்கையில் விழி எடுக்காது அவனையே பார்த்தவளிடம் "என்னமா நான் ஒரு வார்த்தை சொன்னதற்கே இப்படி பேந்த பேந்த விழிக்கிறே! இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லே அதுக்குள்ளேயே வியந்தால் எப்படிங்க மேடம்.." என்று கூறியவனிடம் பதிலேதும் சொல்லாமல் நகர்ந்தாள்.


அவனோ, தன்னிடமிருந்த விலகியவளை ஒரே எட்டில் பற்றி நிறுத்தியவன். " திகழி நான் இன்னும் பேசி முடிக்கலே ..பேசப் பேச பாதியில் போனால் என்ன அர்த்தம்! இனி இப்படி செய்யாதே ..!"என்று எச்சரித்தவனை சலனமே இல்லாமல் பார்த்து வைத்தாள்.


அவனோ, அவளின் செய்கையில் மேலும் எரிசலுற்று" என்ன டீ ஒண்ணும் செய்ய மாட்டேன்னு நினைக்கிறீயா ? எப்போதும் அமைதியா இருப்பேன்னு நினைச்சுக்காதே..என்னை கோவப்படுத்தி பார்த்தால் சேதாரம் உனக்கு தான் ஞாபகம் வச்சுக்கோ..!" என்றவனை மனதிற்குள்' எப்படா நீ எங்கிட்ட கோவப்படாம இருந்திருக்கே..இப்ப மட்டும் கோவப்படுவதற்கு' என்று நினைத்தவள் அதைக் காட்டிக் கொள்ளாமல்..


"அத்தை சீக்கிரம் ரெடியாகி வரச் சொன்னாங்க..குலதெய்வ கோவிலுக்கு போகனுமாம்..நான் கீழே இருக்கேன் ..நீங்க ரெடியாய் வாங்க..!" என்றவள் அவன் பேசுவதற்கு இடமே கொடுக்காமல் தப்பித்தால் போதும் என்று தன் கைபேசியை எடுத்துக் கொண்டு அறையை விட்டு ஓடினாள்.


மிகனோ, மனதிற்குள்' போடி போ.. எத்தனை நாள் இப்படி ஓடுவேன்னு நானும் பார்க்கிறேன்.எங்க போனாலும் எங்கிட்ட தானே வந்தாகனும் !' என்று கடிந்தபடி கோவத்தில் அவள் கொடுத்த காபியை குடிக்காமல் குளியலறைக்குள் புகுந்தான்.


திகழொளியோ, ஏழு எட்டு முறை அலைபேசியில் அழைத்திருந்த தம்பியை அழைத்துப் பேசினாள்.


அந்தப் பக்கம் அமுதனின் குரலைக் கேட்டதும் அவளை அறியாமல் கண்களில் நீர் கோர்த்தது. ஆனால் தம்பியிடம் தன் மனதைக் காட்டிக் கொள்ளாமல் நலம் விசாரித்தவள், தம்பியின் கேள்விக்கும் மகிழ்ச்சியாகவே பதில் சொன்னாள்.


அமுதனுக்கோ, என்ன தான் திகழொளி மகிழ்ச்சியாக பேசினாலும் அவனால் ஏனோ நிம்மதி அடையமுடியவில்லை.. மனதிற்குள் ஒரு சிறு சந்தேகம் அவனை ஆட்டி வைத்தது.


தனக்காகத் தான் அக்கா மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிக்கிறாளோ? என்று எண்ணினான். தமக்கை இடம் பேசி முடித்த பின் அதே சிந்தனையுடனேயே இருந்தான்.


திகழொளியோ, தம்பியிடம் பேசிவிட்டு சமையலறை சென்று மணியரசிக்கு சமையலில் உதவினாள்.


மணியரசி சொல்லச் சொல்ல கேட்காமல் மகிழினியையும் தங்களுடன் அழைத்துச் செல்ல குழந்தையை கிளப்பிக் கொண்டிருந்தாள்.


மணியரசியோ, "குழந்தை எதற்கு? நீங்க இரண்டு பேர் மட்டும் போய்ட்டு வாங்க.." என்று சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் மகிழினையை தயார் செய்தாள்.


திகழொளிக்கு மிகன் கூட தனியாக வெளியே செல்ல பயம். மகிழினி கூட இருந்தால் அவன் கொஞ்சம் தன்னிடம் கோவப்படாமல் அமைதியாக இருப்பான் என்று நினைத்தாள்.


ஆனால், அவளின் கணவன் அப்படி எல்லாம் அமைதியாக போகும் ஆள் இல்லை என்று அப்போது அவள் அறியவில்லை.


மிகன் கிளம்பி வந்ததும் இருவரும் சேர்ந்தே காலை உணவை உண்டனர். மணியரசி கணவன் மனைவிக்கு தனிமை கொடுத்து மகிழினியை தூக்கிச் சென்றார்.


உண்டு முடித்ததும் மகிழினியை தூக்கிக் கொண்டு பெரியவர்களிடமும் சொல்லிக் கொண்டு, குலதெய்வக் கோவிலுக்கு சென்றனர்.


காரில் திகழொளி மகிழினியை மடியில் வைத்துக் கொண்டு முன் இருக்கையில் மெளனமாக அமர்ந்து வந்தாள்.


மிகனோ, கோவில் செல்லும் வரை அவளிடம் எதுவும் பேசாமல் வழியில் கவனம் வைத்தபடியே காரை ஓட்டீனான்.


கோவிலில் கூட்டம் அதிகம் இல்லாததால் சீக்கிரமாகவே தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பினார்கள்.


திகழொளியோ, மனதிற்குள் அப்பாடா பயந்தபடி இல்லாமல் மிகன் அமைதியாக இருக்கானே ! என்று அவள் நினைத்து நிம்மதி அடைந்தாள்.


ஆனால், அவள் அப்படி எல்லாம் நிம்மதி அடைய அவளுடைய ஆரூயிர் கணவன் விட்டு விடுவானா ?


மடியில் தூங்கிய மகிழினியை தன் நெஞ்சோடு வாகாக சாய்த்துக் கொண்டு வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தவளிடம் "என்னங்க மேடம் வாயே திறக்காமல் வரீங்க..?"என்றான் நக்கலாக..


அவளோ, என்ன பதில் சொன்னாலும் ஏதாவது சொல்லுவான் என்று நினைத்து மெளனமாகவே இருந்தாள்.


அவனுக்கோ ,அது இன்னும் எரிச்சலை உண்டாக்கியது. "கேட்டால் பதில் சொல்லமாட்டீயா ?உன் தம்பி கிட்ட மட்டும் வாய் ஓயாமல் பேசத் தெரியுது ! எங்கிட்ட பேசனும்ன்னா மட்டும் வாய்லே பசை போட்டு அடைச்சு வச்சுக்குவே.." என்றான் கடுப்பாக..


அவளோ , 'அச்சோ ஆரம்பிச்சுட்டான்' என்று மனதிற்குள் எண்ணியவள் "இரண்டு நாளாக சரியா தூக்கம் இல்லை அது தான் தலைவலிக்குதுன்னு பேசாமல் இருந்தேன்.."


"ஓ..! ரொம்ப வலிச்சா சொல் டாக்டர் கிட்ட போலாம்.."


"இல்ல இல்லே.. அந்தளவு இல்லே .. லேசாகத்தான் வலிக்குது கொஞ்ச நேரம் தூங்கினா சரியாகிடும்.."


"ம்! நான் காரை ஓரமா நிறுத்துறேன் .நீ பாப்பாவே பின்னாடி சீட்லே படுக்க வச்சுட்டு நீ நல்லா சாய்ந்து தூங்கு! "


"இல்லை வேண்டாம் இப்படியே வசதியாகத்தான் இருக்கு .அவ என் மடியிலேயே தூங்கட்டும்.."


" நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டே .. என்னமோ பண்ணு..!" என்று கடிந்து கொண்டவனிடம் சமாதானமாக " இல்லை மிகன் பாப்பாவே அசைச்சா எழுந்துக்குவா ! அப்புறம் அரை தூக்கத்தில் அழுதுட்டே இருப்பா அது தான்.."என்றவளிடம் பதில் எதுவும் சொல்லாமல் முகத்தை கடுப்பாரையை விழுங்கியவன் போல் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.


அவளோ, அவனின் மனநிலையை மாற்றும் பொருட்டு "மிகன் லீவு முடிந்த பின் நான் மீண்டும் வேலைக்கு வரட்டும் தானே.."என்று மெல்ல கேட்டாள்.


அவனோ, திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சாலையில் கவனம் வைத்துக் கொண்டே "வேலைக்கு வராமல் வீட்டில் என்ன செய்வதாக உத்தேசம்.."


"இல்லை உங்களுக்கு நான் வேலைக்கு போவது பிடிக்குமோன்னு தான் கேட்டேன்.."


"ஆமாம் ! இதுவரை எல்லாம் எனக்கு பிடிச்ச மாதிரி தான் நடந்துக்குறே இதுக்கு மட்டும் பர்மிஷன் கேட்கிறா..?" என்றான் பற்களை கடித்தபடி..


திகழொளியோ, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிடுச்சு! இனி ஏதாவது பேசுனா வீண் வம்பு தான் ! என்று நினைத்து வாயை இறுக மூடிக் கொண்டு வெளியே தலையை திருப்பிக் கொண்டாள்.


அவனுக்கு அவளின் செயல் மேலும் எரிச்சலைக் கூட்ட" என்ன பதிலே காணோம் ? இவனை எல்லாம் மதித்து பேசனுமான்னு முகத்தை அந்தப்பக்கம் திருப்பீட்டீயா..?" என்றவனிடம்..


"இங்க பாருங்க நான் உங்க கூட இப்ப சண்டை போடற மனநிலையில் இல்லை..அது தான் பேசாமல் இருந்தேன்.."


"அப்ப எனக்கு மட்டும் சண்டை போட ஆசையா..?"

"அது எனக்கு எப்படி தெரியும்.. அது தான் எப்ப பார்த்தாலும் சண்டை போடற மாதிரி தானே பேசறீங்க..!"


"அப்படி பேச வைப்பதே நீ தான் டீ.. "

"நான் என்ன செய்தேன்? நான் அமைதியா வந்தாலும் பேசறீங்க! ஏதாவது கேட்டாலும் குத்தலா பேசறீங்க! நின்னா குத்தம் ! உட்கார்ந்தா குத்தம்ன்னா நான் என்ன தான் செய்யட்டும்..?"


"அது தான் செய்யறது எல்லாம் செஞ்சுட்டே ! இப்ப எங்கிட்டயே தைரியமா கேள்வி கேட்கிறே .."


"இங்க பாருங்க நான் எதுவும் செய்யலே..நீங்க நம்புனாலும் சரி ! நம்பாட்டீயும் சரி ! .என்னால் இனி உங்க கூட போராட முடியலே.."என்று அவள் சொல்லும் போதே வீடு வந்துவிட மகிழினியை தூக்கிக் கொண்டு காரிலிருந்து இறங்கி வீட்டீற்குள் சென்றாள்.


மிகனோ, அவள் செல்வதையே பார்த்தபடி சில நொடிகள் இருந்தவன் மனதிற்குள்' நீ சொல்வது எல்லாம் உண்மையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.' என்று நினைத்து பெருமூச்சு விட்டபடி அவனும் இறங்கி வீட்டிற்குள் சென்றான்.

கடுப்புடனே வீட்டிற்குள் சென்றவனின் கண்களின் அமுதனும், திகழொளியும் சிரித்து பேசிக்கொண்டு இருந்தத காட்சி தான் முதலில் பட்டது.


ஏற்கனவே கோவத்தில் இருந்தவனுக்கு அந்த காட்சி தூபம் போட்டது போல இருக்கவும் " திகழி தலைவலி உயிர் போகுது, கொஞ்சம் காஃபி எடுத்துட்டு வா ..!" என்று அதிகாரமாக சொன்னபடி தங்கள் அறைக்குச் சென்றான்.


திகழொளியோ ,கணவனின் சொல்லை நிராகரிக்கவும் முடியாமல், தம்பியுடன் நின்று பேசவும் முடியாமல் தவித்தாள்..


சரியாக அந்த நேரம் இரண்டு கப் காஃபி கோப்பையுடன் வந்த மணியரசி ஒன்றை அமுதனிடமும், மற்றொன்றை திகழொளியிடம் கொடுத்து மிகனிடம் அனுப்பி வைத்தார்.


திகழொளியோ, வேறு வழியே இல்லாமல் காஃபியை வங்கிக் கொண்டு தம்பியிடம் " நீ காஃபி குடித்துட்டு இரு ! நான் இதை மாமாவுக்கு கொடுத்துட்டு வந்துடறேன்.." என்று கூறிவிட்டு தங்கள் அறைக்குச் சென்றாள்.


அமுதனுக்கோ, காலையில் எழுந்ததில் இருந்தே அக்கா எப்படி இருக்காளோ? என்ற எண்ணம் தான் அவனை படாய்ப்படுத்தியது. அதுவும் அக்காவிடம் அலைபேசியில் பேசிய பின்பு நேரில் அக்காவை பார்த்தே ஆகவேண்டும் என்று வீட்டிற்கு வந்து விட்டான்.


இப்போது தான் அவனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.இருந்தாலும் மிகன் ஒரு வார்த்தை கூட பேசாமல் போனது மனதிற்குள் நெருடலாகவே இருந்தது.


சம்பிரதாயத்திற்கு கூட அவனை 'வா! ' என்று அழைக்காதது அவனுக்கு வருத்தமாக இருந்தது.


திகழொளிக்கும் மிகன் தன் தம்பியிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் போனது கோவத்தையும், வருத்தத்தையும் கொடுத்தது.


கோவமாக தங்கள் அறைக்குச் சென்றவளின் கண்களில் பட்டது நெற்றியை பிடித்த பிடி அமர்ந்திருந்த மிகனின் முகம் தான்.


மெல்ல அவன் அருகில் சென்று "இந்தாங்க காஃபி..!" என்று காஃபி கப்பை நீட்டினாள்.


ஆனால் அவனோ, அதை வாங்காமல் அவளை முறைத்து பார்த்தபடி " ஒரு நாள் கூட அக்காவும், தம்பியும் பார்க்காமல் இருக்க மாட்டீங்களா? அதற்குள் எதுக்கு டீ அவனை வரச் சொல்லி இருக்கே? அப்படி என்ன டீ நான் உன்னை கொடுமை படுத்துனேன்.."


" நான் ஒன்றும் வரச் சொல்லலே .. அவனே தான் பார்க்க வந்து இருக்கான்.இப்ப வந்தா என்ன? வீட்டுக்கு வந்தவனை வான்னு ஒரு வார்த்தை கூப்பிடாமல் எங்கிட்ட சண்டை போடுங்க.."


"நானா சண்டை போடறேன்..நீ தான் தலைவலியோட இருக்கிற எங்கிட்ட வம்புக்கு வரே.."


"நான் எந்த வம்புக்கும் வரலே.. இந்த காஃபியை குடிச்சுட்டு வந்து தம்பியை வான்னு கூப்பிடுங்க !அவன் என்ன நினைப்பான்! மாமா பேசலைன்னு வருதப்படுவான்.."


"எனக்கும் சேர்த்து நீ தான் ! நல்லா பல்லு சூளுக்கும் வரை சிரிச்சு சிரிச்சு பேசறீயா அப்புறம் என்ன..?"


"இங்க பாருங்க ! நம்ம சண்டையை அப்புறம் வச்சுக்கலாம். இப்ப வந்து நீங்க அவங்கூட பேசறீங்க.."


"என்ன டீ கொஞ்சம் விட்டா ஓவரா போறே.."

"நான் என்ன ஓவரா போறேன்.. வீட்டுக்கு வந்தவர்களை மரியாதைக்கு வாங்கன்னு கூப்பிடச் சொன்னா அதுக்கு இத்தனை பேச்சா..?"என்றவள் காஃபியை அவன் கையில் திணித்து விட்டு அறையை விட்டு வெளியில் வந்தாள்.


திகழொளியோ ,மனதிற்குள் 'இவனுடன் ஒரு நொடி கழிப்பது கூட ஒரு யுகம் போல் இருக்கே! எப்படி இவன் கூட காலம் முழுவதும் நான் வாழ்வேன். நான் விரும்பிய மிகன் எங்கே?அன்பையும், அக்கறையும் கொட்டிக் கொடுத்த அந்த மிகன் இவன் இல்லையே..'


எப்போதும் கண்களில் கருணை மட்டுமே பொங்கி வழியும் அந்த மிகன் இப்போது எங்கே..?ஏன் இப்படி மாறினான்.?அன்றிலிருந்து இன்று வரை என்னை நம்பவே இல்லையே ? என்னை எப்போது தான் புரிந்து கொள்வான்..!' என்று அவள் மனம் கூப்பாடு போட்டது.


தொடரும்..
உங்கள் கருத்துகளை கீழே உள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துக்கள் மட்டுமே எனக்கு வேகமாக எழுதும் ஆற்றலைத் தரும்..கதை எப்படி போகுது என்று சொல்லுங்கள்.
(அடுத்த யூடி புதன்கிழமை மாலை)
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93
உயிர் துடிப்பாய் நீ !


அத்தியாயம் 20


திகழொளி மிகனை நினைத்து மனதிற்குள் குமறினாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமுதனிடம் நல்லவிதமாக பேசிக் கொண்டு இருந்தாள்.



சற்று நேரத்தில் கீழே வந்த மிகனும் மனைவி சொல்லைத் தட்டாமல் அமுதனிடம் "வாப்பா நல்லா இருக்கீயா? அம்மா, அப்பா நல்லா இருக்காங்களா? கோவிலுக்கு போயட்டு வரும் போது கொஞ்சம் தலைவலி! அது தான் நான் உன்னை கவனிக்காமல் ரூமுக்கு போய்ட்டேன்.." என்று சிரித்த முகமாகவே பேசினான்.



கணவனின் பேச்சு திகழொளிக்கு ஆச்சரியமாக இருந்தது. கொஞ்சம் முன்னாடி அப்படி கத்தியவன் இப்போது சிரித்த முகமாக பேசியது வியப்பைக் கொடுத்தது.தன்னை மறந்து கணவனையே இமை சிமிட்டாமல் பார்த்தாள்.



மிகனோ, மனைவியின் பார்வை தன் மீது நிலைத்திருப்பதைக் கண்டு "திகழி அமுதனுக்கு சாப்பிட ஏதாவது கொடு ! இப்படி வெட்டியா பேசிட்டு நிற்காதே ..!"என்றான் அதிகாரமாக..



அமுதனோ , மணியம்மா இப்ப தான் காஃபி , ஸ்நேக்ஸ் எல்லாம் கொடுத்தாங்க.. நானும் வந்து ரொம்ப நேரமாச்சு.. நான் கிளம்புறேன்.." என்றவன் பெரியவர்களிடம் சொல்லிக் கொண்டு தமக்கையிடம் மட்டும் தலையை ஆட்டினான்.



திகழொளியோ, தம்பியின் பின்னோடு சென்றாள்.மிகனோ, திகழொளி அமுதன் பின் செல்வதை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டு நின்றான்.



தன்னோடு வந்த தமக்கையிடம் .. "அக்கா நீ நல்லா இருக்கே தானே..கம்பர்டபிளா பீல் பண்றீயா..?உனக்கு எதுவும் பிரச்சினை இல்லை தானே.."! என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டான்.



இப்போது தான் தமக்கையிடம் தனியாக பேச அவனுக்கு வாய்ப்பு கிடைத்தது.. வீட்டிற்குள் அவர்கள் அருகில் யாராவது இருந்து கொண்டே இருந்தார்கள்.



திகழொளியோ, தம்பியின் தலையை மெல்ல வருடியபடி "அம்மு நான் நல்லா இருக்கேன்.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ..நீ கண்டதையும் நினைத்து குழப்பிக்கொள்ளாதே..!அம்மா, அப்பாவை நல்லா பார்த்துக்கோ! நீயும் ஒழுங்கா சாப்பிடு! நான் டைம் கிடைக்கும் போது அங்கே வரேன்.."என்றவளிடம் கண்கள் லேசாக கலங்க தலையை ஆட்டி விடை பெற்றான் அமுதன்.



தம்பியை அனுப்பிவிட்டு உள்ளே வந்தவளின் கைகளைப் பற்றி தரதரவென தங்கள் அறைக்கு அழைத்து வந்தான் மிகன்.



திகழொளிக்கோ, கணவனின் செயல் புரியாமல் அவன் இழுத்த இழுப்புக்கு பின்னே வந்தாள்.



அறைகுள் வந்ததும் கதவை அடித்து சாத்திவிட்டு "ஏன் டி உன் தம்பியை வால் பிடித்துட்டே போகாட்டி என்ன? ஏன் வந்தவனுக்கு போகத் தெரியாதா? இல்ல வாசலுக்கு வழி தான் தெரியாதா? வாசல்லே போய் நின்னுட்டு அவன் தலையைப்பிடித்து கொஞ்சிட்டு நிற்கறே.. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க.." என்று காரணமே இல்லாமல் கத்தினான்.



திகழொளிக்கோ, அவன் பேசியது எரிச்சல் வர அதுவரை அடக்கி வைத்திருந்த கோவம் எல்லாம் பொங்கி கொண்டு வந்தது.



" மிகன் உங்களுக்கு என்ன தான் பிரச்சினை.. வீட்டுக்கு வந்தவர்களை வாசல் வரை வழி அனுப்புவது தானே முறை. நேத்து வரை அவன் தான் எனக்கு எல்லாமுமாக இருந்து இருக்கிறான். உங்களால் நான் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் அவன் தான் எனக்கு ஆறுதலாக இருந்து இருக்கான்.அவன் மட்டும் இல்லைன்னா இந்நேரம் என்னை புதைத்த இடத்தில் மரமே முளைத்து வந்து இருக்கும்.."என்று மூச்சு வாங்க பேசியவள்.ஒரு நிமிடம் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு..



"மிகன் என்னை என்ன வேணா பேச உங்களுக்கு உரிமை இருக்கு..ஆனால் ,என் தம்பிக்கும், எனக்கும் நடுவில் என்னைக்கும் வராதீங்க.அவன் என் உயிர்.." என்று கோவத்துடன் தொடங்கி அமைதியாக முடித்தாள்.



மிகனோ, அவளை இன்னும் தன் அருகில் இழுத்து "அவன் உன் உயிர் என்றால் நான் யாரு டீ.." என்றான் கோவமாக..தான் என்ன கேட்கிறோம் என்று புரியாமல்..



அவன் மனம் முழுவதும் அப்போது பொறாமை தான் நிரம்பி வழிந்தது.



தன் மனைவிக்கு தன்னைவிட அவள் தம்பியை தான் அதிகம் பிடிக்குதோ?என்ற எண்ணத்தில் தன்னை மறந்து அந்த வார்த்தையை கேட்டான்.



அவளோ, " நான் சொன்னால் நீங்க நம்பப் போவதில்லை.. இருந்தாலும், சொல்றேன் . நீங்க என் உயிருக்கு மேல்.." என்றவள் சட்டென்று அவனிடமிருந்து விலகி அறையை விட்டு வெளியில் சென்றாள்.



மிகனோ, அவள் சொன்ன வார்த்தையில் உறைந்து போய் அப்படியே படுக்கையில் அமர்ந்தான்.



அவன் மனதை பல்வேறு உணர்வுகள் ஆட்கொண்டது.மகிழ்ச்சி ,நிம்மதி, வியப்பு . சந்தேகம் என்று எல்லாமே வந்து அவனைக் குழப்பியது.



திகழொளிக்கோ ,கணவனின் செயல்கள் புரியாத புதிராக இருந்தது. ஏன் தான் அமுதனை தன்னோடு ஒப்பிட்டு சண்டை போடறான் என்று அவளுக்கு சலிப்பாக இருந்தது.



இவன் என்னை என்று தான் புரிந்து கொண்டு மனம் மாறி என்னோடு வாழப்போறானோ ..? என்ற கேள்வி அவளைத் துளைத்து எடுத்தது.ஆனால் அதற்கான விடை தான் தெரியவில்லை..



மனதிற்குள் பல குழப்பங்கள் இருந்தாலும் பெரியவர்கள் முன் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக அவர்கள் உடன் பொருந்திக் கொண்டாள்.



மகிழினி அவளுக்கு பெரும் ஆறுதலாக இருந்தாள்..தன் நேரத்தை எல்லாம் மணியரசி உடனும் மகிழினி உடனுமே கழித்தாள்.



மிகனோ, அதன் பிறகு அவளிடம் எதுவுமே பேசவில்லை ..முகத்தில் பல யோசனையுடனே அன்று இரவு வரை வலம் வந்தான்.



இரவு உணவு முடித்துவிட்டு அறைக்கு வந்தவளிடம்.. " நீ இனி கீழே படுக்காதே..மேலேயே படு ..!"என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவளுக்கு முதுகாட்டி படுத்துக் கொண்டான்.



திகழொளியோ , அவன் சொல்வதைக்‌ கேட்பதா ? வேண்டாமா? என்று தன் மனதிற்குள் சில நிமிடங்கள் பட்டிமன்றம் நடத்தினாள்.



கடைசியில் கணவனின் வார்த்தையைத் தட்டாமல் கட்டில் மேல் ஓர் ஓரமாக படுத்துக் கொண்டாள்.



அவள் அறிந்து முதல் முறை மிகன் அருகில் படுத்து இருப்பது அவளுக்கு சங்கடமாக இருந்தது.


நேற்றைய இரவில் அவன் அருகில் தூங்கியது காலையில் தான் அவளுக்கு தெரிந்தது.


ஆனால், இப்போது தெரிந்தே படுத்து இருப்பது கொஞ்சம் கூச்சமாக இருந்தது.எதையும் நினைக்க கூடாது .இனி இது தான் தன் வாழ்க்கை எல்லாவற்றையும் ஏற்று பழகிக் கொள்ள வேண்டும் .என்று மனதிற்குள் தனக்கே சொல்லிக் கொண்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.



அடுத்த நாள் விடியல் அழகாகவே விடிந்தது.எந்த பிரச்சினையும் இல்லாமல் சாதாரணமாகவே சென்றது.



அன்று மட்டும் இல்லாமல் அதன் பிறகு வந்த நாட்களும் மிகன் அமைதியாகவே இருந்தான். இருவருக்கும் பாலமாக மகிழினி இருந்தாள்.



அடிக்கடி மகிழினியை அழைத்துக் கொண்டு வெளியில் சென்று வந்தார்கள்.மூவரும் ஒரே குடும்பம் என்ற எண்ணம் அவர்களுள் ஆழமாக பதியத் தொடங்கியது.



நாட்கள் வேகமாக நகர்ந்து.அவர்களின் விடுப்பும் முடிந்தது. இருவரின் விடுமுறை முடிந்த பின் மிகனுடன் திகழொளியும் வேலைக்குச் சென்றாள்.



மகிழினி தான் திகழொளி வீட்டில் இல்லாதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அழுதாள்.



தாய் இல்லாமல் ஏக்கத்துடன் வளர்ந்த குழந்தை திகழொளியை கண்டதும் அழகாக ஒட்டிக் கொண்டது . அம்மா.. அம்மா என்று வளைய வந்த குழந்தைக்கு அவள் இல்லாமல் மீண்டும் ஏக்கத்தை கொடுத்தது.



திகழொளிக்குமே முதலில் தவிப்பாகத் தான் இருந்தது.அதுவும் எப்போதும் மிகனின் கோவத்தில் இருந்து மகிழினி தான் அரணாக இருந்து காத்தவள்..அவள் இருந்தாள் மிகன் கொஞ்சம் அடக்கி வாசித்தான்.



ஆனால், சூழ்நிலைகளை ஏற்றுத் தான் ஆக வேண்டும்.என்று தன்னைத் தேற்றிக் கொண்டாள்.



குழந்தையும் பழகிக் கொள்ளும் என்று நினைத்து தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள்.


அலுவலகத்தில் இவர்களின் திருமணம் அனைவருக்கும் தெரிந்ததே இருந்தது.இவர்கள் வந்தவுடன் இருவரிடமும் கூட வேலை செய்பவர்கள் வாழ்த்து சொன்னார்கள்.


இரண்டு நாள்கள் எந்த பிரச்சனையும் இன்றி கணவனுடன் வேலைக்கு சென்று வந்தாள்.



ஆனால், எல்லா நாளும் நாம் நினைத்த படியே அமைந்து விடுமா? அன்று வேலையில் மும்முரமாக இருந்தவளை பீயூன் வந்து மேனேஜர் அழைப்பதாக கூறிச் சென்றான்.



திகழொளியோ, உடனே செல்லாமல் தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு கணவன் தானே என்ற மிதப்பில் மெதுவாகச் சென்றாள்.



ஆனால் , தன் கணவனைப் பற்றி இன்னுமே அவள் புரிந்து கொள்ளவில்லை..அவனுள் அப்பப்ப மிருகம் ஒன்று வந்து போகும் என்று அவள் மறந்து போய் இருந்தாள்.



இந்து பத்து நாள்களில் அவன் அமைதியாக இருந்தது அவளுக்கு கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தது.



அந்த தைரியத்துடன் அறைக்கதவைத் தட்டி அனுமதி பெற்றுக் கொண்டு, உள்ளே சென்றவளை ஏறெடுத்தும் பார்க்காமல், அமரவும் சொல்லாமல் மிகன் தன் வேலையிலேயே கவனமாக இருந்தான்.



திகழொளியோ, சில நிமிடங்கள் பொறுமையாகவே நின்று இருந்தாள்.ஆனால் அவள் பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து.



எதற்கு இப்படி நிற்க வைத்து இருக்கிறான் என்று அவளுக்கு புரியவே இல்லை.



அரை மணி நேரமாக அவளை நிற்க வைத்துவிட்டு கணினியில் பார்வையைப் பதித்திருந்த மிகனை மனதிற்குள் வருத்தெடுத்துக் கொண்டிருந்தாள் திகழொளி.



'மூஞ்சியப்பாரு இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே எப்ப பாரு வச்சுட்டு இருக்கு..அப்படியே சிலுப்பீட்டு இருக்கிற அந்த முடியைப் பிடித்து இழுத்து நாலு கொட்டு மண்டையில் நறுக்குன்னு வைக்கனும்..'என்று மனதிற்குள் குமுறிக் கொண்டு இருந்தவளின் எண்ண அலைகள் புரிந்தது போல் கணினியில் இருந்த பார்வையை அவள் புறம் திருப்பினான் மிகன்..



திகழொளியோ ,அவன் பார்வையைக் கண்டதும் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டாள்.


அவனோ, "என்னடி இத்தனை நேரம் என்னை தின்னுடற மாதிரி பார்த்தே..இப்ப நான் பார்த்ததும் நல்ல பிள்ளையாட்டா பார்வையை மாத்திட்டே.."



"நான் நார்மலா தான் பார்த்தேன்.."


"நீ நார்மலா பார்த்ததை நானும் பார்த்தேன்.கேமராவில் .."

என்று அவன் சொன்னதும் அவளுக்கு பக்குன்னு மனசு பதறியது.



'தான் இப்போது அவனைப் பற்றி நினைத்து மட்டும் தெரிந்தால் அவ்வளவு தான் இன்னைக்கு என்னை பிரியாணி ஆக்கிடுவான்' என்று அவள் மனதிற்குள் எண்ணும் போதே..



நாற்காலியில் இருந்து சட்டென்று எழுந்து அவள் அருகில் வந்தவன், அவளின் முகத்தில் தன் ஒற்றை விரலால் கோடு வரைந்த படியே.."நீ என்ன செய்தாலும், என்ன நினைத்தாலும் உன் முகமே காட்டிக் கொடுத்துவிடும்..இப்ப என்னை மனசுக்குள் திட்டிட்டு தானே இருந்தே.."என்றவனை தன் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லாமல் சொல்லியது அவள் வதனம்.



அவனோ, அவளின் முகமாறுதலைக் கண்டு தன் வெண் பற்கள் ஒளிர மென் புன்னகை சிந்திய படியே அவளின் இடையில் கை வைத்து தன் புறம் இழுத்து, "மனதில் நினைப்பதை முகத்தில் காட்டாமல் இருக்க முதலில் பழகிக் கொள் .."என்றான் குரலை உயர்த்தாமல் மென்மையாக.



திகழொளியோ, அவனின் நெருக்கத்தில் விதிர்விதித்து போனாள்.அவனின் பார்வையில் தெரிந்த மாற்றமும்,கிறங்கிய குரலும் ,அவனின் தொடுகையும் நேசம் கொண்ட அவள் மனதை அவன் பால் ஈர்த்தது.



கொஞ்சம் முன்பு அவனை மனதிற்குள் கடிந்து கொண்டவள், இப்போது அதை எல்லாம் மறந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ளச் சொன்ன தன் மனதுடனேயே போராடிக் கொண்டிருந்தாள்.



அவனோ, அவளின் அவஸ்தையை ரசித்துக் கொண்டு இருந்தான்.

நிமிடங்கள் யுகமாக கரைய திகழொளி தன் உணர்வுகளிடமிருந்து தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்தவள் கணவனை தன்புறம் இருந்து தள்ளிவிட்டாள்.



அவனும் அவளின் இந்த செயலை எதிர் பார்க்காத தால் சற்று தடுமாறி தன்னை நிலைப் படுத்திக் கொண்டு "எதுக்கு இப்படி தள்ளறே..!" என்று கடுப்புடன் கேட்டவனிடம்..



"முதலில் நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க! எதுக்கு என்னை வரச் சொல்லி இத்தனை நேரம் நிற்க வச்சீங்க.."



"ம்!நான் எப்ப கூப்பிட்டேன்..நீ எப்ப வரே! சாவுகாசமா வர இது என்ன உன் மாமனார் வீடா..?"


"ம்.. இது என் மாமனார் வீடு இல்லைன்னு எனக்கும் தெரியும் . ஆனால், என் புருசன் தானே கூப்பிட்டாங்கன்னு மீதமிருந்த வேலையை முடித்து விட்டு வந்தேன்.."




ஓஹோ! புருசன் எல்லாம் வீட்டுலே! இங்க உனக்கு நான் மேனேஜர் என்பதை மனதில் வச்சுட்டு வேலை செய்..புருசனாம் புருசன்..புருசன்ங்கிற நினைப்பு எல்லாத்துலையும் இருக்கனும் என்று முனங்கியவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே நின்றாள்.




தொடரும்..

படித்து விட்டு உங்கள் கருத்துகளை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..அடுத்த யூடி சனிக்கிழமை.


நன்றி
அன்புடன்
இனிதா மோகன்






 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93
Thambi kitta pesuradhuku ellam poramaiya.... Nice interesting ud sis ❤️
🤩🤩 ஆமாம்..அவனைத் தவிர யார் உடன் பேசினாலும் இவனுக்கு பொறாமை தான்.. மிக்க நன்றி டியர் 💕
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 21

திகழொளிக்கு மிகன் முனுமுனுத்தது நன்றாகவே கேட்டது. ஆனாலும் ,பதில் எதுவும் சொல்லாமல் சில நொடிகள் நின்றிருந்தாள்.


மிகனோ, மறுபடியும் தன் கணினியில் பார்வையை பதிந்திருந்த வேளை அவனின் அலைபேசி அழைத்தது.


அழைப்பை யோசனையுடன் எடுத்தவனின் குரலில் பதற்றம் தென்பட்டது. அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ? குரலில் தவிப்புடன் "இதோ இப்பவே வரேன்.." என்றான்.


அதுவரை அமைதியாக நின்றிருந்த திகழொளி அவன் அருகில் சென்று.."மிகன் என்னாச்சு ? ஏன் இவ்வளவு டென்ஷன்..?" என்று அவளுமே தவிப்புடன் கேட்டாள்..


"திகழி பாப்பா கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு விட்டதாம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போய் இருக்காங்க.." என்றான் குரல் தழுதழுக்க..


"அச்சோ..அடி பலமா? மகிழினி எப்படி இருக்கிறா..? பெரிய காயம் இல்லை தானே..? என்று கணவனின் பதட்டத்திற்கு சற்றும் குறையாமல் அவளும் பதறினாள்.


"தெரியலே அப்பா தான் போன் செய்தார். அடி பட்டு இருப்பதை மட்டும் தான் சொன்னார் . வேறு எதுவும் சொல்லலே.."

"சரி வாங்க நானும் வரேன் சீக்கிரம் போலாம்.."


"ம்.. ஒரு நிமிஷம் நம்ம இரண்டு பேருக்கும் ஆஃப் டே லீவ்க்கு நான் மெயில் போட்டுட்டு வரேன்.."


"சரி நான் போய் என் ஹேண்ட்பேக்
எடுத்துட்டு வரேன்.." என்று அவளும் தன் இருக்கைக்கு அவசரமாக ஓடினாள்.


இருவரும் ஒரு வழியாக கிளம்பி நேராக உலக மாறன் சொன்ன மருத்துவமனைக்கு சென்றார்கள்.


அவசரமாக உள்ளே ஓடியவர்களை உலக மாறன் தான் எதிர்கொண்டு மகிழினி இருந்து அறைக்கு அழைத்துச் சென்றார்.


குழந்தைக்கு தலையில் பெரிய காயம் ! இரத்தமும் அதிகமாக வீணாகி இருந்தது. காயத்திற்கு ஏழு ,எட்டு தையல் போட்டு இருந்தார்கள்.


குழந்தை வலியிலும்,அழுத களைப்பிலும் தூங்கி இருந்தாள் .


காஞ்சிதுரை அழுது கொண்டிருந்த தன் மனைவி மணியரிசியை சமாதனாப்படுத்திக் கொண்டிருந்தார்.


திகழொளி மணியரசியிடம் சென்று "மணியம்மா பாப்பாக்கு எப்படி அடிபட்டுச்சு.." என்று கண்களில் கண்ணீர் தேங்க கேட்டாள். அவளுக்கு குழந்தை இருந்த நிலமையை பார்க்க சகிக்கலே..


"வீட்டிற்குள் விளையாடிட்டு இருந்தவ வெளியில் ஏதோ கார்‌ சத்தும் கேட்டதும், நீங்க வந்துட்டீங்கன்னு நினைச்சு நான் கூப்பிட கூப்பிட ஓடியவள் கால் தட்டி கீழே விழுந்துட்டா..படியின் முனை மண்டையில் பட்டு அடிபட்டுருச்சு திகழி.. இரத்தம் நிறைய வந்துருச்சு..குழந்தை பயந்துட்டா.."என்றார் அழுதுகொண்டே..


"அச்சோ.. காயம் பெரிசா இருக்கே ? அத்தை டாக்டர் என்ன சொன்னாங்க.."என்று கவலையுடன் கேட்ட மிகனிடம்..


"எதுக்கும் ஸ்கேன் எடுத்து பார்த்துக்கலாம்ன்னு சொல்றார்..ஒரு நாள் இருந்துட்டு போகச் சொன்னார்.." என்றார் குரல் கம்ம..


"ஓ..!"என்றவன் சொல்ல முடியாத வருத்தத்துடன் குழந்தையின் அருகில் சென்று மகிழினியின் பிஞ்சு விரல்களை மென்மையாக பற்றினான்.


திகழொளியோ, குழந்தையின் தலையை மென்மையாக வருடியபடி அவள் அருகிலே அமர்ந்து கொண்டாள்.



ஒரு வழியாக குழந்தைக்கு எடுக்க வேண்டிய அனைத்து பரிசோதனையும் எடுத்துப் பார்த்துவிட்டு, " பயப்படும் படி எதுவும் இல்லை..இன்று மட்டும் இருந்துவிட்டு போங்க.." என்று மருத்தவர் கூறிய பின் தான் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.


அன்று இரவு திகழொளியும், மிகனும் மருத்துவமனையில் மகிழினியுடன் தங்கிக் கொண்டார்கள்.பெரியவர்களைக் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.


மகிழினியோ, திகழொளியை பார்த்தவுடன் அவளை தூக்கி வைக்கச் சொல்லி அழுதாள்..


குழந்தைக்கு வலி ஒரு புறமும் பயம், ஒரு புறமும்‌ இருந்ததால் தாய்யின் அரவணைப்புக்கு ஏங்கியது.


அமுதனும் , பொன்னியும் விஷயம் கேள்விப்பட்டதும் குழந்தையை வந்து பார்த்துச் சென்றார்கள்.

இரவு வரை பொழுது வேகமாக ஓடியது.

அதன் பிறகு திகழொளி குழந்தைக்கு விளையாட்டு காட்டி இரவு உணவை ஊட்டிவிட்டாள்.

குழந்தையோ, அவளை விட்டு நகராமல் அவளோடே ஓட்டிக் கொண்டது.


சினுங்கிக் கொண்டே இருந்த குழந்தையை படுக்கையில் அமர்ந்து தன் நெஞ்சில் சாய்த்து தட்டிக் கொடுத்து உறங்க வைத்தாள்.

மிகனோ ,மனைவி தூங்காமல் இருப்பதைக் கண்டு "திகழி எத்தனை நேரம் இப்படியே வைச்சுட்டு இருப்பே..பாப்பா தூங்கிட்டானா பெட்லே படுக்க வச்சுட்டு நீயும் படுத்து தூங்கு.."

" பாப்பா கொஞ்சம் அசைத்தாளே எழுந்துக்கிறா.. பராவாயில்லை நான் இப்படியே தூங்கிக்கிறேன் நீங்க போய் படுங்க.." என்றாள்.

"விடிய விடிய இப்படியே எப்படி தூங்குவே? இரு நான் மெல்ல அவளை எடுத்து கீழே படுக்கவைக்கிறேன் .."என்று குழந்தையை மெல்ல தூக்கியதும் மகிழினி சினுங்கத் தொடங்கினாள்.

மிகனோ ,சட்டென்று படுக்கையில் அப்படியே அமர்ந்து குழந்தையை தன் நெஞ்சோடு சாய்த்து தட்டிக் கொடுத்தான்.

ஆனால், மகிழினி நன்றாக விழித்துக் கொண்டு அழுது கொண்டு திகழொளியிடம் தாவியது.

மிகனோ, ஒரு பெருமூச்சுடன் மனைவியிடம் குழந்தையை கொடுத்து விட்டு அவன் படுக்கையில் இருந்து எழுந்தான்.

ஆனால், மகிழினி அவனையும் விடாது அருகில் அமரச் சொல்லி அழுதது.


காயம் பட்டதில் குழந்தை மிகவும் பயந்து இருந்தாள். அதுமட்டுமின்றி பரிசோதனைகள் எல்லாம் அவளை மேலும் கலவரப் படுத்தி இருந்தது.


அதனால் அம்மா, அப்பா அருகில் வேண்டும் என்று அடம் பிடித்தாள்.

மிகனும் குழந்தைக்காக படுக்கையில் கால் நீட்டி அமர்ந்தான்.

திகழொளியிடமும், மிகனிடமும் மாறி மாறி குழந்தை தாவிக் கொண்டே இருந்தவள் ஒரு வழியாக திகழொளியின் நெஞ்சில் சாய்ந்து படி தூங்கியது.

ஒரு வழியாக குழந்தை உறங்கியதும் திகழொளியும், மிகனும் அப்படியே அமர்ந்தபடியே தூங்கினார்கள்.

பாதி இரவில் விழிப்பு வர விழித்த மிகன்! திகழொளி குழந்தையை இறுக்கிப் பிடித்தபடி குழந்தையின் தலை மீது தன் தலையை சாய்த்து வைத்து, தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்தான்.

அவள் இப்படியே காலை வரை தூங்கினால் கண்டிப்பாக கழுத்து சுளுக்கு பிடித்துக் கொள்ளும் என்று நினைத்தவன், அவள் அருகே நகர்ந்து அமர்ந்து மனைவியின் தலையை தன் தோளில் சாய்த்த படி அணைத்துக் கொண்டான்.

அதன் பிறகு கணவன் மனைவி இருவருமே நன்றாக தூங்கினார்கள்.

பொழுது விடிந்த பின்னரே திகழொளிக்கு விழிப்பு வந்தது .தூக்க கலக்கத்தில் விழித்தவளுக்கு ஏதோ வித்தியாசமாக பட நன்றாக கண்களை திறந்து பார்த்தாள்.


அப்பொழுது தான் கணவன் தன்னை அணைத்துக் கொண்டு அமர்ந்து இருப்பது தெரிந்தது.

ஏனோ, அது மனசுக்கு இதமாக இருந்தது. அவனின் அணைப்பில் இருந்து விலக தோன்றவில்லை.. மீண்டும் கண்களை மூடி அந்த நிகழ்வை அனுபவித்தாள்.


அவள் மனம் தன் பழைய மிகன் திரும்ப கிடைத்து விட்டான் என்று மகிழ்ந்தது. எத்தனை அன்பானவன்! வாய் திறந்து தன் நேசத்தை சொல்லாவிட்டாலும் , ஒவ்வொரு நொடியும்,ஒவ்வொரு செயலிலும் உணரவைப்பான். ஆனால், இந்த காலமும் , சில மனிதர்களும் செய்த சூழ்ச்சியால் எப்படி மாறி விட்டான்.



இன்று வரை என்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்று அப்போதும் அவள் மனம் அழுதது.


சில நிமிடங்கள் கண்மூடி அப்படியே இருந்தவள், அப்புறம் மெல்ல அவனிடமிருந்து விலகினாள்.

ஆனால், இவளின் விலகலில் அவனுமே விழித்துக் கொண்டான்.விழித்ததும் மனைவியைத் தான் திரும்பி பார்த்தான்.

திகழொளி மடியில் தூங்கிய குழந்தையை வாகாக தன் நெஞ்சோடு படுக்க வைத்துக் கொண்டு இருப்பதை பார்த்தவன் "நைட் நல்லா தூங்குனீயா ?" என்று கேட்டான்.


கணவனின் கேள்வியில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் தலையை மட்டும் ஆட்டினாள்.

"சரி பாப்பாவே கீழே படுக்க வச்சுட்டு, நீ கொஞ்ச நேரம் அப்படியே அவள் பக்கத்தில் படுத்து தூங்கு.." என்றான்.

"இல்லை நீங்க தான் அன்கம்பர்டப்பிளா தூங்குனீங்க.. நான் நல்லாத் தான் தூங்கினேன். நீங்க வேணா கொஞ்ச நேரம் கால் நீட்டி படுங்க.." என்றவளிடம்..

"நானும் ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் நல்லாத் தூங்கினேன்..எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை..முதலில் பாப்பாவே கீழே படுக்க வை..!" என்றான்.

திகழொளி அதற்கு மேல் மறுப்பு சொல்லாமல் குழந்தையின் தூக்கம் கலையாமல் படுக்கையில் அவன் அருகில் படுக்க வைத்து விட்டு ரெஸ்ட் ரூம் சென்றாள்.

மிகன் அவள் வரும் வரை குழந்தையின் தலையை மெல்ல வருடிக் கொண்டு அமர்ந்து இருந்தான்.

அவன் மனதிற்குள் பல யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தது. அது அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

திகழொளி ப்ரஸ் ஆகி ரெஸ்ட் ரூமிலிருந்து வெளியே வந்தததும் கணவன் முகத்தில் தெரிந்த யோசனையைக் கண்டு "என்னாச்சு ஏன் ஒரு மாதிரியாக இருக்கீங்க..?கொஞ்ச நேரம் நல்ல படுத்து தூங்கறீங்களா.." என்று அக்கறையாக கேட்டவளிடம்..

"திகழி உனக்கு மகிழினியை பார்த்துக் கொள்வதில் சிரமம் இல்ல தானே? எப்போதும் இதே போல் பார்த்துக்குவீயா ?..யார் மீது உனக்கு என்ன கோவம் இருந்தாலும் அதை குழந்தை மீது காட்டிட மாட்டீயே.?"

"ஏன் மிகன் இப்படி கேட்கிறீங்க..? யார் மீது எனக்கு என்ன கோவம் இருந்தாலும் அதற்கு குழந்தை என்ன செய்யும். அவள் நான் பெறாத குழந்தை ! என்றுமே எனக்கு அவள் தான் முதல் குழந்தை ..!"என்றவளிடம்.

ம்ம்! என்று மட்டும் யோசனையாக சொன்னவனிடம்..

"ஏன் உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம்! என்னை அவள் எப்போது அம்மா என்று சொன்னாளே ! அப்போதே அவள் நான் பெறாத என் முதல் குழந்தை.." என்றபடி குழந்தையின் தலையை மெல்ல வருடினாள்.


அவனோ, "சந்தேகம் எல்லாம் இல்ல..ஆனாலும், கேட்கனும்ன்னு தோணுச்சு அவ்வளவு தான். நமக்கே ஒரு குழந்தை வந்தாலும் நீ அப்போதும் இப்படியே இருப்பீயா!" என்றான் அவனையும் அறியாமல்..


திகழொளியோ, அவன் சொன்னதைக் கேட்டு ஒரு நொடி அதிர்ந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் " எப்போதும் எனக்கு மகிழினி தான் முதல் குழந்தை போதுமா ..
உங்கள் சந்தேகம் தீரந்தா.." என்றாள் சற்று கோவமாக..


அவனோ, அதற்கு பதில் சொல்லாமல் "நான் கேண்டீன் போய் காஃபி வாங்கிட்டு வரேன். நீ பாப்பவே பார்த்துக்கோ..!" என்று கூறிக்கொண்டு காஃபி வாங்க ஃப்ளாஷ்க்கை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றான்.

திகழொளியோ, மிகன் சென்றதும் கணவன் சொன்னதையே மனதிற்குள் அசைபோட்டாள்.. 'நமக்கு குழந்தை வந்தாலும்..' என்று அவன் சொன்னது அவளுக்கு திரும்பத் திரும்ப அவள் காதுகளில் இனிமையாக ஒலித்துக் கொண்டே இருந்தது.


அப்படி தங்களுக்கு என்றாவது குழந்தை வந்தால், அது மிகன் மாதிரி இருக்குமோ ?என்றெல்லாம் அவள் கற்பனைக் குதிரைப் பறந்தது.

ஆனால் , அவளை அதிக நேரம் கற்பனையில் மிதக்க விடாமல் மகிழினி விழித்துக் கொண்டாள்.

அதன் பிறகு அவளுக்கு எதைப்பற்றியும் சிந்திக்க முடியவில்லை..

திகழொளி குழந்தையின் தேவையை கவனித்துக் கொண்டு இருக்கும் போதே மிகனும் வந்துவிட்டான்.

மிகன் சென்று தன்னை சுத்தப்படுத்தி தயாராகி வரும் வரை குழந்தையிடம் விளையாடிக் கொண்டு இருந்தாள்.

அவன் வந்ததும் குழந்தை அவனிடம் தாவிக் கொண்டது.

மிகன் வாங்கி வந்த காஃபியை இருவருக்கும் ஊற்றி ஒன்றை அவனிடம் கொடுத்து விட்டு தானும் குடித்தாள்.


அதன் பிறகு நேரம் ரெக்கை கட்டிக் கொண்டுப் பறந்தது. மருத்தவர் வந்து பார்த்துவிட்டு வீட்டிற்கு போகச் சொல்லி விட்டார்.
இரண்டு நாளுக்கு ஒரு முறை வந்து காயத்திற்கு டிரஸ்சிங் மட்டும் செய்து கொள்ளச் சொன்னார். ஒன்பது நாள் கழித்து வந்து தையல் பிரித்துக் கொள்ளாம் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

திகழொளி வீடு வந்ததும் மகிழினியை கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொண்டாள்.ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு மகிழினி கூடவே இருந்தாள்.

அதன் பின் வந்த நாட்களில் மிகனுக்கும் அவளுக்கும் அழகான நெருக்கம் உருவானது.மிகனும் அவளைக் காயப்படுத்தாமல் அன்பாகவே இருந்தான்.

அன்றும் அப்படித் தான் மகிழினி கூட விளையாடிக் கொண்டிருந்தான் மிகன்.

திகழொளியோ துவைத்த துணிகளை மடித்து அலமாரியில் வைத்துக் கொண்டு இருந்தாள் .

அப்போது "அம்மா இங்கே வா..! என்று குழந்தை அழைத்தாள். திகழொளி அவள் அருகில் சென்றதும் மிகனிடமிருந்து அவளை தூக்கச் சொன்னாள்.

குழந்தையை அவளும் ஆசையாக தூக்கியதும் , திகழொளி கன்னத்தில் அழகாக தன் பட்டு இதழ்களால் முத்தம் பதித்தது.

திகழொளியும் சிரித்தபடி "என் பட்டுக்குட்டி.." என்றபடி குழந்தையின் இரு கன்னங்களிலும் தன் இதழ் பதித்தாள்.

மிகன் அவர்களையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அதுவரை நன்றாகத் தான் எல்லாம் இருந்தது. சட்டென்று மகிழினி அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த மிகனைக் காட்டி "அம்மா அப்பாக்கு முத்தா..?" என்று கூறியதும் கணவன் மனைவி இருவரும் திகைத்து விழித்தனர்.

குழந்தையோ, விடாமல் "அப்பாவுக்கு முத்தா தா..!" என்று தன் மழலை மொழியில் அடம்பிடிக்க ஆரம்பித்தது.

திகழொளியோ, என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிய படி நின்றாள்.

மிகனோ, சூழ்நிலையை உணர்ந்து எழுந்து அவரகள் அருகில் சென்று நின்று பேச்சை மாற்றும் பொருட்டு "பாப்பா முதல்லே அப்பாக்கு முத்தா கொடு! அப்புறம் நாம அம்மாவுக்கு கொடுக்கலாம்.." என்றவன் தன் கன்னங்களை குழந்தை புறம் காட்டினான்

குழந்தையும் "ஐ ! என்றபடி தந்தையின் கன்னத்தில் தன் இதழ்களை பதித்தது.


மிகன் என்ன தான் பேச்சை மாற்றினாலும் குழந்தை அவன் சொன்னதையே பிடித்துக் கொண்டது.

"அப்பா .. ! அம்மாக்கு முத்தா..அம்மாக்கு முத்தா..
" என்று குழந்தை அடம் பிடித்தது.


வேறு வழி இல்லாமல் பித்து பிடித்தது போல் நின்றிருந்த மனைவியின் கன்னத்தில் பட்டும் படாமல் தன் முதல் முத்திரையை பதித்தான் அவளின் ஆரூயிர் நாயகன்.


தொடரும்..
 
Last edited:

New Threads

Top Bottom