உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 38
திகழொளிக்கு கணவனைக் கண்டதும் தான்! போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது! தன்னை மறந்து !சுற்றம் மறந்து! கணவனை அணைத்திருந்தாள்..
மிகனுக்கு மனைவியின் செய்கை சுத்தமாக புரியவில்லை..தன்னை கண்டாலே தீயாக காந்துபவள் இன்று பெரியவர்கள் முன் அணைச்சு இருக்கிறாளே ! என்று குழம்பினான்.
மிகனைக் கண்ட நிம்மதியுடன், பெரியவர்கள் கணவன், மனைவிக்கு தனிமை கொடுத்து விலகி சென்றார்கள். இனியாவது எல்லாம் நல்லதாக நடக்கட்டும் என்று மனதிற்குள் நினைத்தனர்.
"திகழி என்னாச்சு டா .."என்று அவளை தன்னிடமிருந்து பிரித்த படியே மிகன் கேட்டான். ஆனால், திகழொளி பதில் சொல்லாமல் கணவனை விட்டு அசையாமல் அதே நிலையில் நின்றாள்.
மனைவியிடம் பதில் வரமால் போகவே !
என்னாச்சு இவளுக்கு! ஏதோ பயந்து இருக்கிறாள் போல் என்று எண்ணியவனுக்கு தன்னவளின் அணைப்பிலிருந்து விலகவே மனமில்லாமல்
"திகழி இதெல்லாம் வாசலில் வேண்டாம்..நம் அறைக்கு போய் எத்தனை நேரம் வேண்டுமானாலும் இதே நிலையில் நில்லு! எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.." என்று சற்று கேலியாக சொன்னதும் சுற்றுப்புறம் உணர்ந்து சட்டென்று கணவனிடமிருந்து விலகினாள்.
திகழொளி மனதிற்குள் தன் செயலை நினைத்து வெட்கியவள் கணவனை நிமிர்ந்து பார்க்கவே கூச்சப்பட்டாள்.
அவனும் அதற்கு மேல் அவளைச் சீண்டாமல் தங்கள் அறைக்குச் சென்றான்.
திகழொளியும் குட்டி போட்ட பூனையாக கணவன் பின் சென்றாள்.
அறைக்குள் வந்தவளை நொடி கூட தாமதிக்காமல் இழுத்து அணைத்த மிகன் "திகழி என்னை மன்னித்து விட்டாயா..?" என்றான் மனம் நெகிழ்ந்து..
கணவனின் கேள்விக்கு பதில் கூறாமல் சிறிது நேரம் கணவனின் அணைப்பில் கட்டுண்டு திகழொளி அமைதியாக நின்றாள்..அந்த அணைப்பு அவளுக்கும் அப்போது தேவைப்பட்டது.
இருவரும் எத்தனை நேரம் தங்களை மறந்து அதே நிலையில் நின்றார்களோ! அந்த மோன நிலையை திகழொளி தான் முதலில் கலைத்தாள்.
கணவனின் அணைப்பில் இருந்து மெல்ல விலகியவள், கணவன் எதிர்பாராத நேரத்தில் அவனின் சட்டையை பிடித்து " உங்களுக்கு நான் ஒரு நிமிஷம் கூட நிம்மதியா இருக்க கூடாதா..?ஏன் என்னை இந்த பாடு படுத்தறீங்க.." என்று கோவமாக கேட்டாள்.
மனைவியின் செய்கை சுத்தமாக மிகனுக்கு புரியவில்லை !இத்தனை நேரம் ஆசையாக அணைத்துக் கொண்டவள்,. இப்போது எதற்கு கோவப் படுகிறாள் என்றே அவனுக்கு புரியவில்லை..
"திகழி! என்னாச்சு ?நீ சொல்வது எதுவுமே எனக்கு புரியலை டீ.."
"ஆமாம் !உங்களுக்கு எப்பவுமே ஒண்ணும் புரியாது ! இத்தனை நேரம் எங்கே போனீங்க? உங்க போனுக்கு என்னாச்சு? மணி எத்தனை தெரியுமா ? வீட்லே இருப்பவங்க பற்றி கொஞ்சமாவது நினைச்சு பார்த்தீங்களா?" என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டவளிடம் அப்பாவியாக..
" போன் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகிடுச்சு! மீட்டீங் லேட்டாத் தான் முடிஞ்சுச்சு.மனசும் என்னமோ போல் இருந்துச்சு ! அது தான் கொஞ்ச நேரம் வெளியில் சுத்திட்டு வந்தேன்.ஆனால் அது கூட நல்லது தான்..!"
"என்ன நல்லது..?"
"ம்.. நான் லேட்டா வந்ததால் தானே! நீ என்னைச் சுற்றுப்புறம் மறந்து கட்டிபிடிச்சுட்டு நின்னே..!" என்றவனை வெட்டவா ?குத்தவா? என்று பார்த்து வைத்தாள் அவனின் ஆரூயிர் மனைவி..
மனைவியின் பார்வையை தாங்கிய படியே "சாரி மா.." என்றான்.
"எப்ப பாரு எல்லா தப்பையும் செய்துட்டு ஈஸியாக சாரி கேட்பதே உங்க வேலை..நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? உங்களுக்கு எப்போதும் உங்க நிம்மதி மட்டும் தான் முக்கியம். மத்தவங்களைப் பற்றி எப்போதும் கவலையே இல்லை.."
.என்றவளுக்கு அதற்கு மேல் தாங்க முடியாமல் விழிகளில் கண்ணீர் வடிந்தது.
மனைவியின் கண்ணீரைக் கண்டதும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன், அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணீர் துளிகளை மென்மையாக துடைத்து விட்டான்.
கணவனின் செய்கைக்கு எதிர்வினை ஆற்றாமல் அசையாமல் நின்றவளிடம் "திகழி ரியலி சாரி டா மா..எல்லாமே என் தப்பு தான்! எனக்காக வீட்டில் ஒருத்தி காத்திருப்பாள்ன்னு அறிவே எனக்கு இல்லை..எல்லா முடிவும் தப்புத் தப்பாவே எடுக்கிறேன்..இனி மாத்திப்பேன் என்னை நம்பு டா..நீ என்ன சொல்றீயோ! அதை அப்படியே இனி கேட்பேன் .."என்று
கூறியவனை முறைத்தாள்.
தன்னை முறைத்து பார்த்த மனைவியின் முகத்தை தன் கைகளில் ஏந்தி அவளின் விழிகளின் மென்மையாக இதழ் பதித்தவன் "இந்த விழிகள் எப்போதும் என்னை காதலோடு தான் பார்க்கனும்..!அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.." என்றான்.
அப்போதும் திகழொளி எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்..
"ஏதாவது பேசு டீ ! மனசுக்குள்ளே என் மீது அளவு கடந்த காதலே வச்சுட்டு! எதுக்கு டீ தள்ளி தள்ளி போறே..அதானால் யாருக்கு என்ன லாபம்..நாம் சந்தோஷமா வாழனும் ! அது தான் எல்லாருக்கும் சந்தோஷம் கொடுக்கும்..இன்னும் எத்தனை நாள் தான் இப்படி கோவத்தை இழுத்து பிடிச்சுட்டே இருப்பே..என்றவனிடம் பதில் சொல்லாமலேயே நின்றாள்.
"நான் செத்தால் தான் என் மீது உனக்கு கோவம் தீருமா..?" என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே அவனின் இதழில் கை வைத்து "ஏன் இப்படி பைத்தியம் மாதிரி பேசறீங்க.."என்று கோவமாக கேட்டவளிடம்..
"அப்புறம் எப்படி பேசறது..!லேட்டா வந்தா மட்டும் கட்டிபிடிப்பே! இல்லைன்னா தீயா காயறே! நான் என்ன தான் செய்யறது. நானும் மனுசன் தான் டீ!"
"இப்ப நான் அதுக்கு என்ன தான் செய்யனும்ங்கிறீங்க..!" என்று சலிப்புடன் கேட்டதும்.
" ம் ..பழசை எல்லாம் மறந்து எங்கூட சண்டை போடாம சந்தோஷமா வாழனும்! என்னை கொஞ்சிட்டே இருக்கனும்! நான் தாய் இல்லா பிள்ளை! நீ தானே நல்லா பார்த்துக்கணும்..!"
"இது என்ன புதுசா டயலாக் எல்லாம் விடறீங்க.."
"ஏன் டீ ! நான் பீல் பண்ணி பேசுனா அது உனக்கு டயலாக்கா..?
"ஓ..!"
"என்ன ஓ..! இங்க பாரு! இனி மயிலே மயிலே இறகு போடுன்னு நான் வெய்ட் எல்லாம் பண்ண மாட்டேன்.."
"அப்புறம்.."
"ஒழுங்கா நீயே என்னை ஏத்துட்டா உனக்கு பிரச்சினை இல்லை.."
"இல்லைன்னா..?"
"இல்லைன்னா சேதாரம் உனக்கு தான்.."
"என்ன செய்வீங்க..?"
"வேண்டாம் அதை என் வாயால் சொல்ல வைக்காதே..!"
"சொல்லித் தான் பாருங்களே! அப்படி என்ன பண்ணுவீங்க..?"
"என்ன பண்ணுவேனா..?" என்றவன் அவள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவளை அப்படியே தூக்கிச் சென்று கட்டிலில் படுக்க வைத்து! அவளின் இருபுறம் தன் கைகளை அரணாக ஊன்றி !"இதற்கு மேல் என்னால் காத்திருக்க முடியாது.." என்று சொல்லியபடி அவளின் முகத்தருகே குனிந்தான்.
கணவனின் அதிரடியில் திகழொளி ஒரு நொடி அரண்டு போனவள், அடுத்த நொடி தன் சக்தியை எல்லாம் திரட்டி அவனை தன்னிடமிருந்து விலக்கி விட்டு "இங்க பாருங்க !என் சம்மதம் இல்லாமால் ஏதாவது செய்தீங்க அப்புறம் மாமா கிட்ட சொல்லிடுவேன்.."
"ஓ..! அப்படியா? என்ன மேடம் சொல்லுவீங்க!"
"ம்..உங்க மகன் எங்கிட்ட தப்பா நடக்கிறார்ன்னு .."
"அப்படியா ! சரி வா இப்பவே சொல்லு! அவர் எப்படியும் தூங்கி இருக்க மாட்டார்..போலாமா..?" என்று நக்கலாக கேட்டான்.
"என்னது !"
என்று திகைத்தவளிடம்..
மனைவியின் திகைப்பை ரசித்தபடியே "என்னங்க மேடம்! உங்க மாமனாரை இழுத்தா? நான் அமைதியாய்டுவேன்னு நினைச்சீயா ..இனி உங்கிட்ட அமைதி எல்லாம் வேலைக்கு ஆகாது. அதிரடி தான் !"என்றவன் மீண்டும் அவள் முகம் நோக்கி குனிந்தான்.
அவனின் செயல்களை பொறுக்க முடியாமல் "ப்ளீஸ் மிகன் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும். நாம் முதலில் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கலாம்.." என்றாள் கணவனின் எண்ணம் புரிந்ததால் தன் இதழ்களை கை வைத்து மறைத்தபடியே..
"புரிந்த வரை போதும் ஒளி அழகி!" என்றவனுக்கு மனைவியின் செயல் கோபத்திற்கு பதில் புன்னகையை தான் கொடுத்தது.
'என்ன சொன்னாலும்! இன்று கணவனிடமிருந்து தப்பிக்க முடியாது போல்! என்று நினைத்தவள், அவன் வந்ததும் தன்னை மறந்து ஓடிச் சென்று அவனை அணைத்து தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுகிட்டோம்' என்று தன்னையே நொந்து கொண்டாள்.
அவனோ ,மனைவியை அதிகம் யோசிக்க விடமால், அவளின் இதழ் மீது இருந்து அவளின் கைகைளைப் பற்றி அகற்றியவன், அவளின் கண்களில் தெரிந்த அச்சத்தை கண்டு கொள்ளாமல், குனிந்து அவளின் இதழில் தன் முதல் முத்திரையைப் பதித்தான்.
இருவரும் தங்களை மறந்து சில நொடிகள் அதே நிலையில் மெய் மறந்து இருந்தனர்.
கணவனின் செய்கை திகழிக்கு புது உணர்வை கொடுத்தது..நெஞ்சமெல்லாம் படபடப்பாக விவரிக்க முடியாத நிலையில் இருந்தாள். அவளை விட்டு கணவன் விலகிய பிறகும் சிலையாக அமர்ந்திருந்தாள்.
மிகன் அதற்கு மேல் அவளை சோதிக்காமல் அவள் காதருகில் குனிந்து "இது வெறும் ட்ரெயல் தான்! மெயின் பிக்சர் இனிமேல் தான்!" என்றவன் அவள் முகத்தில் தெரிந்த கலவரத்தை ரசித்தபடியே குளியலறை நோக்கிச் சென்றான்.
திகழொளிக்கு கணவன் கூறியதைக் கேட்டதும் அவளின் நெஞ்சுக்கூடு எல்லாம் குளிர்ந்தது.அவன் திரும்பி வரும் வரை பனிக்கட்டியாக உறைந்து போய் அமர்ந்திருந்தாள்..
தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, இரவு உடை அணிந்து வந்தவன் "திகழி பசிக்குது சாப்பாடு எடுத்து வை !"என்றான் அதிகாரமாக! அவள் சிலையாக அமர்ந்திருந்ததைக் கண்டு அவளை மாற்றும் பொருட்டு சொன்னான்.
கணவனின் குரலில் சாவி கொடுத்த பொம்மையாக திகழொளி உணவு எடுத்து வைத்து பரிமாறினாள்.
அவனோ, "நீயும் சாப்பிட்டு இருக்க மாட்டே உட்கார்ந்து நீயும் சாப்பிடு! என்று அவளையும் உணவு உண்ணச் செய்தான்.
உலக மாறனுக்கு தூக்கமே வரவில்லை..மகனுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்ல வேண்டும்! என்று எண்ணியவருக்கு, சமையலறையில் மகனின் பேச்சு சத்தம் கேட்கவும் எழுந்து வந்துவிட்டார்.
தந்தையை கண்டதும் "அப்பா நீங்க இன்னும் தூங்கலையா ? சாப்ட்டீங்களா ?என்று அக்கறையாக கேட்ட மகனிடம்..
" நீ எங்க என்னை தூங்க விடறே..வெளியில் போனால் நேரம் காலமாக வீட்டிற்கு வரத் தெரியாதா ? இன்னும் நீ என்ன சின்ன பையனா ? உன்னை நம்பி ஒருத்தி இருக்கான்னு எப்பத் தான் உன் மர மண்டைக்கு புரியும்.." என்று சற்று கோவமாகவே மகனை கடிந்து கொண்டார்.
தந்தையின் கோவத்தை கண்டு வருந்தியவன், "சாரிப்பா இனிமேல் இது போல் நடக்காது.." என்றான் தலை குனிந்த படி..
"எங்கிட்ட சாரி கேட்காதே ..!உன்ன கட்டிட்டு படாத பாடு படறாளே! அவகிட்ட கேளு ! கிடைச்ச வாழ்க்கையை வாழத்தெரியாமல் கெடுத்துக்காதே !என்று கடிந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.
திகழொளி மாமனார் பேசும்பொழுது அமைதியாகவே இருந்தாள்.
தந்தையின் வார்த்தைகள் மிகனை வெட்கி தலை குனியச் செய்தது..நிஜமாளுமே தனக்கு சூழ்நிலையை கையாளத் தெரியவில்லையே என்று வருந்தினான்.
கணவனின் முகவாட்டம் திகழியை என்னமோ செய்தது.."மிகன் மாமா சொன்னதை நினைத்து கவலைபடாதீங்க! நீங்க லேட்டா வந்ததால் அவருக்கு டென்ஷன் !அது தான் அப்படி பேசிட்டார்.."
"ம்..!"என்றவன் வேறு எதுவும் பேசாமல் அமைதியாகவே உண்டு முடித்து விட்டு தங்கள் அறைக்குச் சென்றான்.
திகழொளியும் உண்டு முடித்ததும் ,பாத்திரங்களை ஒதுக்கி சமையலறையை சுத்தம் செய்து விட்டு தூங்கச் சென்றாள்.
அறைக்குள் சென்றவளின் விழிகளில் பட்டது கணவன் சாளாரத்தின் வழியே யோசனையுடன் வெளியில் பார்த்தபடி நின்றிருந்த தோற்றம் தான்.
கணவன் வருந்துகிறான் போல என்று நினைத்து அவன் அருகில் சென்று "தூங்கலையா,இன்னும் அதையே நினைத்துக் கொண்டு இருக்கீங்களா..?" என்றவளிடம்..
"இல்லை .அப்பா பேசியதை அப்பவே மறந்துட்டேன்..உன்னை எப்படி கரெக்ட் பண்றதுன்னு தான் யோசிச்சுட்டு இருந்தேன்..என்றான் இதழ் ஓரங்களில் தவழும் புன்னகையுடன்..
"என்னது !"
ம்..எதுக்கு மேடம் இத்தனை அதிர்ச்சி ..எனக்கு சீக்கிரம் உன்னைப் போல் ஒரு பாப்பா வேணும்..!மகிழினி வேறு கூட விளையாட தங்கச்சி பாப்பா கேட்கிறா! அதைப் பற்றி தான் யோசிச்சுட்டு இருந்தேன்.."
"மாமா பேசியதை நினைத்து கவலைபடறீங்கன்னு வந்தேன் பாரு! என்னைச் சொல்லனும்..எப்ப பாரு எடக்கு மடக்காகவே பேசறது..திகழி ஒழுங்கா போய் தூங்கு இல்லைன்னா தேவை இல்லாத பிரச்சனை.." என்று தனக்கே புத்தி சொல்லிக் கொண்டு நகர்ந்தவளை ஒரே எட்டில் தடுத்து நிறுத்தி தூக்கியவன்..
"கரெக்ட்டா சொன்னே வா! நாம் தூங்கலாம்.." என்று அவளை தூக்கிச் சென்று படுக்கையில் கிடத்தினான்.
"இங்க பாருங்க !பேசாம தள்ளி படுத்து தூங்குங்க! ஏடா, கூடமா ஏதாவது செய்தீங்க! அப்புறம் அவ்வளவு தான் .."
" என்ன மேடம் செய்வீங்க..? உன் மிரட்டலுக்கு எல்லாம் வேறு ஆளைப்பாருங்க? உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை நீ செய் என் ஒளி அழகி ! என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்யறேன்.." என்றவன் கண்கள் மின்ன அவளை நெருங்கினான்!
தொடரும்..
Hi friends,
உயிர் துடிப்பாய் நீ! அடுத்த அத்தியாயம் 38 பதிந்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.. இறுதி அத்தியாயம் முடிந்தவரை இரண்டு நாட்களுக்குள் போடுகிறேன்.. உங்கள் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி ப்ரெண்ட்ஸ்..
அன்புடன்
இனிதா மோகன்..