உயிர் துடிப்பாய் நீ!
அத்தியாயம் 36
திகழொளி கணவனின் அணைப்பில் சில நொடிகள் அமைதியாக நின்றிருந்தாள். அவள் மனதில் ஆயிரம் வலிகள் இருந்தாலும், அதை காட்டிக் கொள்ளாமல் மெளனமாகவே அசையாமல் நின்றாள்.
மனைவியின் தோள்களில் அழுத்தமாக முகம் புதைத்திருந்த மிகனுக்கு அவள் எந்த வித எதிர்வினையும் காட்டமல் நிற்பது சிறு சந்தேகத்தை கொடுத்தது.
சில நிமிடங்கள் கழித்து மெல்ல அவளை தன் அணைப்பில் இருந்து விடுவித்தவன், "ஒளி என் மீது இன்னும் கோவமா.." என்றான் தயங்கிய படியே..
"உங்க மீது கோபப்பட நான் யாரு..?"
"ஏன் இப்படி பேசறே..என்னை மன்னிக்கவே மாட்டீயா..?"
"உங்களை மன்னிக்கும் அளவு நான் பெரிய மனுசி இல்லே.."
"ஒளி ப்ளீஸ் இப்படி ஒட்டாமல் பேசாதே..உண்மையாளுமே நான் என் தப்பை உண்ரந்துட்டேன்..உங்கூட காலம் பூராவும் சேர்ந்து வாழனும்ன்னு ஆசைப்படறேன் டா..உன்னை பிரிந்த இந்த ஒன்றரை மாதத்தில் நான் நானாக இல்லை.."
"ஓ..அவ்வளவு அன்பா..!"
"அன்பு இல்லாமல் வேறென்ன ..?"
"அன்பு ஜாஸ்தியானதால் தான் ஊரை விட்டு போக முடிவு பண்ணீட்டீங்களா..?"
"ஒளி..!"
"பதில் சொல்லுங்க..?"
"நீ இல்லாமல் என்னால் இங்கே இருக்க முடியலே..தினம் தினம் உன்னை அருகில் பார்த்துக் கொண்டு யாரோ போல் தள்ளி இருக்க என்னால் முடியலே..வேறு என்ன தான் நான் செய்ய முடியும்..?"
"அவ்வளவு அன்பு இருக்கிறவர் திரும்ப என்னிடம் பேசுனீங்களா? எந்த பிரச்சனையையும் நேரா எதிர்கொள்ளவே மாட்டீங்களா? எப்போதும் பிரச்சினைகளிலிருந்து ஓடத் தான் பார்ப்பீங்களா..?"
"அப்படி இல்லை ஒளி! உன்னைக் கஷ்டப்படுத்த வேண்டாமேன்னு தான் உன் கோவம் குறைய காத்திருந்தேன்."
"அப்படியா ! அப்போ ,எதுக்கு புனே போக முடிவெடுத்தீங்க..?"
"ஒளி என்னால் முடிந்தவரை உன்னே கஷ்டப்படுத்திட்டேன்..அந்த குற்றவுணர்வே என்னை கொல்லாமல் கொள்ளுது டா.."
"ம்..!ரொம்ப சீக்கிரம் ரியலைஸ் பண்ணிட்டீங்க.."
"ஒளி..!"
"எப்போதுமே தப்பாத் தானே முடிவெடுக்கிறீங்க.. உங்களை நம்பி மூன்று பெரியவங்க இருக்காங்க..குழந்தை இருக்கா..வயசனாவங்களை தனியா தவிக்க விட்டுட்டு உங்க நிம்மதி தான் பெரிசுன்னு யாரைப் பற்றியும் கவலைப்படாமல் போறீங்க அப்படித் தானே..!"
"ஒளி அப்படி இல்லை.. கொஞ்சம் என் நிலையில் இருந்து பாருடா.."
எல்லாரும் உங்க நிலையில் இருந்து தான் எப்போதும் பார்க்கனும்! ஆனால் நீங்க மத்தவங்களைப் பற்றி ஒரு நொடி கூட நினைக்க மாட்டீங்க.."
"அப்படி இல்லை டா.. எனக்கு உண்மை தெரிந்த பின் என்னால் நிம்மதியா இருக்க முடியலே..யாருடனும் பேச கூட முடியலே..என் நிலையை நான் எப்பிடி உனக்கு புரிய வைப்பேன்.."
"மிகன் இப்ப கூட நான்இங்கே வந்தது மாமாவுக்காகத் தான்..நீங்க திரும்பவும் புனே போறேன்னு சொன்னவுடன் மாமா உடைந்து போய்விட்டார்.. ரொம்பவே வருத்தப்பட்டு என்னிடம் பேசினார் . அவர் சொல்லித் தான் எனக்கே விஷயம் தெரியும்.."
"ஓ..!"
உங்களுக்கு தான் யாரைப் பற்றியும் கவலை இல்லை..ஆனால் எனக்கு அப்படி இல்லை மாமாவுக்காகத் தான் நான் திரும்ப வந்தேன்.."
"ஓ!அப்ப எனக்காக வரலையா உங்க மாமனாருக்காக தான் வந்தீயா ..?"
"ஆமாம்..என்னால் அவரின் சொல்லைத் தட்டமுடியலே.."
"என்னை மன்னிக்கவே மாட்டீயா..?"
"தெரியலே.."
"ம்ம்..ஆனால் நீ மன்னிக்கும் வரை நான் காத்திருப்பேன்..நான் நினைத்திருந்தால் அன்றே உன்னை இழுத்துட்டு வந்திருப்பேன்! ஆனால் உன் மனநிம்மதிக்காகத் தான் அமைதியா இத்தனை நாள் இருந்தேன்.
"ஓ.. ! அவ்வளவு தைரியமா..நீங்க இழுத்துட்டு வர வரைக்கும் நான் அமைதியா இருப்பேன்னு நினைச்சீங்களா..!"
"நீ என்ன செய்திருந்தாலும் நான் நினைச்சு இருந்தா! உன்னை விட்டு இருக்க மாட்டேன்..ஆனால் என் தப்புக்கு தண்டனையாக தான் நான் அமைதியா இருந்தேன்.உன் இஷ்டப்படி விட்டேன்.."
"கொஞ்சம் கூட நீங்க மாறவே இல்லை ..இப்ப கூட எவ்வளவு தெனாவெட்டா பேசறீங்க.."
"ஹோய் ! நான் சொல்ல வந்ததை நீ சரியா புரிஞ்சுக்கலே.நான் நினைச்சு இருந்தா.அப்பவே அப்படி செய்திருக்க முடியும் ! ஆனால் நான் அப்படி செய்யாமல் நீயே என்னை மன்னித்து ஏற்கனும்ன்னு காத்திருந்தேன்னு சொன்னேன்.."
"ஓ..!நான்இங்கே வந்தது மாமாவுக்காகத் தான்..! உங்களுக்குத் தான் உங்க அப்பா மேலே அக்கறை இல்லை.ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது.அவருக்காகத் தான் திரும்ப வந்தேன்.உங்க மேலே இப்பவும் நான் அதே கோவத்துடன் தான் இருக்கேன்.."என்றவள் அதற்கு மேல் அவன் அருகில் நிற்காமல் தன் உடமைகளை உரிய இடத்தில் வைக்கச் சென்றாள்.
மனைவியின் பதிலைக் கேட்ட மிகன் சில நிமிடங்கள் கண்களில் சொல்ல முடியாத வலியுடன் நின்றான்.
மனைவி வந்த மகிழ்ச்சி எல்லாம் அவனுள் மழை நீராய் வடிந்து போனது..கைகள் இறுக மடக்கியபடி கண்களை முடித் திறந்தவன் தன் துக்கத்தை முழுங்கிக் கொண்டான்.
யானைப் பசிக்கு கிடைத்த சோளப்பொறி போல் அவள் இங்கே தன் அருகில் இருப்பதே போதும் என்ற மனநிலைக்கு வந்தவன் அமைதியாய் மனைவியின் செயல்களை பார்த்தவாறு படுக்கையில் சென்று அமர்ந்தான்.
கணவனிடம் தன் மனநிலையை சொன்ன திகழொளி அதன் பிறகு மிகனை ஏறெடுத்தும் பார்க்காமல் தன் வேலையை முடித்துக் கொண்டு மணியரசிக்கு சமையலில் உதவச் சென்றாள்.
மகிழினி அவளைக் கண்டதும் மகிழிச்சியுடன் அவளிடம் "அம்மா.. அம்மா.." என்று ஒட்டிக் கொண்டாள்.
இரவு உணவை அனைவரும் உண்டு முடித்த பின் அடுக்களையை ஒதுக்கி சுத்தம் செய்து விட்டு மணியரசி சொல்லச் சொல்ல கேட்காமல் மகிழினியை தன்னுடனே தூங்கட்டும் என்று கூறிவிட்டு தங்கள் அறைக்குத் தூக்கி வந்தாள்.
மிகனும் எதுவும் பேசாமல் மனைவி பின்னோடு தங்கள் அறைக்கு வந்தான்.
மகிழினியுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு அவளுக்கு இரவு உடை மாற்றிவிட்டு தன்னுடனே படுக்க வைத்துக் கொண்டாள்.
கணவன் மனைவி இருவருக்கும் நடுவில் மகிழினியை படுக்க வைத்தவள், குழந்தையின் புறம் திரும்பி படுத்து அவளுக்கு தட்டிக் கொடுத்தபடியே படுத்திருந்தாள்.
மிகனும் மனைவியை பார்த்தபடியே திரும்பி படுத்துக் கொண்டான்.அவனின் பார்வை மனைவியின் மதி முகத்தை விட்டு நகரவில்லை.
கணவனின் பார்வை தன்னையே வட்டமிடுவதை அறிந்தாலும் திகழொளி எதையும் கண்டு கொள்ளாமல் தன் வேலயிலேயே கவனமாக இருந்தாள்.
சிறிது நேரத்தில் அசதியா? இல்லை தன் இருப்பிடம் சேர்ந்து விட்ட நிம்மதியா? ஏதோ ஒன்று அவளை விரைவில் உறக்கத்திற்கு அழைத்து சென்றது.குழந்தை உறங்கும் முன்பே அவள் உறங்கி விட்டாள்.
மனைவி உறங்கும் வரை அமைதியாக இருந்தவன் அவள் நன்கு உறங்கி விட்டாள் என்று உறுதிப்படுத்திக் கொண்டு, மகிழினியை தூக்கி தன் நெஞ்சோடு படுக்க வைத்தவன் மனைவி அருகில் நெருங்கி படுத்து அவளின் தூக்கம் கலையாமல் அவளின் உறக்கம் கலையாமல் தன் தோளோடு அணைத்துக் கொண்டு படுத்தான்.
மகிழினியும் உறங்கிய பின் தன் மனைவியின் பிறை நெற்றியில் பட்டும் படாமல் தன் இதழ்களை பதித்தவன்! தன் நெஞ்சோடு அவளை இறுக அணைத்தபடி நிம்மதியாக அவனும் உறங்கிப் போனான்.
விடியும் வரை இருவரும் அசையவே இல்லை..உரிய இடத்தில் சேர்ந்து விட்ட மனநிலை இருவரையும் அடித்துப் போட்டது போல் உறக்கத்தை கொடுத்தது.
பறவைகளின் இன்னிசை முதலில் திகழொளியின் உறக்கத்தை மெல்ல கலைத்தது.
தலையைனை என்று நினைத்து கணவனின் நெஞ்சில் முகத்தை மேலும் அழுத்தியவளுக்கு ஏதோ வித்தியாசமாக தெரியவும் சட்டென்று விழிகளை திறுந்து பார்த்தவள் தூக்கி வாரிப் போட எழுந்து அமர்ந்தாள்.
'அச்சோ! என்ன வேலை செய்திருக்கோம்.உனக்காக வரவில்லை என்று வீரவசனம் பேசிட்டு இப்படி அவன்நெஞ்சில் படுத்து தூங்கி இருக்கோமே !அவன் பார்த்தால் என்ன நினைப்பான் ..!'என்று தன்னையே கடிந்து கொண்டு அவசர அவசரமாக எழுந்து சென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
மிகனும் மனைவி குளித்து விட்டு கிளம்பி வரும் வரை அசந்து உறங்கிக் கொண்டு தான் இருந்தான்.
திகழொளி குளித்து முடித்து தயாராகி மணியரசிக்கு சமையலுக்கு உதவச் சென்றாள்.
மிகனும் உறக்கம் கலைந்ததும் மனைவியைத் தான் தேடினான்.மனைவி அருகில் இல்லை என்றதும் ஒரு பெருமூச்சுடன் தன் மேல் உறங்கிய மகிழினியை எடுத்து அருகில் படுக்க வைத்துவிட்டு அவனும் குளியலறைக்குச் சென்றான்.
மணியரசியின் வற்புறுத்தலில் கணவனுக்கு காஃபி கலந்து எடுத்துக் கொண்டு வேண்டா ..வெறுப்பாக தங்கள் அறைக்குச் சென்ற திகழொளி கண்டது! குளித்துக் கிளம்பி அலுவலகத்திற்கு தயாராக நின்ற மிகனைத் தான்.
மனைவியை கண்டதும் இன்முகத்துடன் "குட் மார்னிங் ஒளி.." என்றான் சிரித்த முகத்துடன்..
கணவனின் புன்னகை திகழொளியை ஒரு நொடி அதிரச் செய்தது.அதுவும் எத்தனை வருடங்கள் கழித்து அவன் விழிகளும் சிரித்தது. பழைய மிகன் அவள் கண்ணுக்குள் வந்துச் சென்றான்.
கூட சேர்ந்து சிரிக்கத் தூண்டும் சத்தம் இல்லாத மென் புன்னகை..கண்களில் தெரிந்த மகிழ்ச்சி அவளை என்னமோ செய்தது.
ஆனாலும், தறிகெட்டு ஓடிய தன் எண்ணத்துக்கு தடை போட்டுவிட்டு எந்த உணர்வையும் காட்டாமல் பதிலுக்கு "குட் மார்னிங்" என்றவள் அவனுக்கு எடுத்து வந்த காஃபியை கொடுத்தாள்..
மனைவி கொடுத்ததை வாங்கி அவளையே விழி எடுக்காது பார்த்தபடி காஃபியை குடித்து முடித்தான்.
கணவனின் பார்வை அவளுக்கு பெரும் சங்கடத்தைக் கொடுத்தாலும், கண்டு கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருந்த மகிழினியை மெல்ல உறக்கம் கலையாமல் தூக்கினாள்.கீழே மணியரசியின் அறையில் படுக்க வைக்க..
மனைவியின் செயலைக் கண்டதும் அவசர அவசரமாக காஃபியை குடித்து முடித்துவிட்டு கப்பை மேஜை மீது வைத்து விட்டு "ஒளி விடு! பாப்பாவே நான் தூக்கி வரேன்.." என்று குழந்தையை வாங்க அருகில் சென்றான்.
"இல்லை வேண்டாம்! நானே பார்த்துக் கொள்கிறேன்.." என்று சொன்னதைக் கேட்காமல் குழந்தையை பிடுங்கவும், மகிழினி விழித்துக் கொண்டாள்.
குழந்தை விழித்துக் கொண்டு அரைத் தூக்கத்தில் சினுங்கியதும் திகழொளிக்கு கணவன் மீது அளவு கடந்த கோபம் வந்தது."ஏங்க நானே கஷ்டப் பட்டு அவள் தூக்கம் கலையாமல் தூக்குனா! இப்படி வந்து எழுப்பி விட்டுட்டீங்களே? இனி அவள் எப்படி என்னை வேலைக்கு போக விடுவா..உதவி செய்யாட்டியும் உபத்திரம் செய்யாமல் இருக்க மாட்டீங்களா.." என்று கடிந்து கொண்டவளிடம்..
"சாரி.. சாரி கொடு நான் அவளை தட்டிக் கொடுத்து தூங்க வைக்கிறேன்.."
"ஒண்ணும் வேண்டாம் நீங்க கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாலே போதும்.." என்றவள் குழந்தையை தன் தோள்களில் சாய்ந்து தட்டிக் கொடுத்தாள்.
"ஒளி ! இனி பாப்பா நேரமா விழித்துப் பழகட்டும் இனி அவளை ஸ்கூல்லே சேர்த்தனும்.."
"ஸ்கூல்லேயா! இப்பவே என்ன அவசரம்.."
"ம் ! அவளுக்கு வயசு நாலு முடியப் போகுது..இதுவே லேட்.."
"ஓ..! ஃப்ரீ கேஜியா..?"
"இல்லை 4 முடியப் போகுதே! டேரக்ட்டா எல் கேஜியே சேர்க்கலாம்.."
"ம்ம்.."என்று மட்டும் யோசனையுடன் கூறியவளிடம் "என்ன அமைதியாகிட்டே..?"
"இல்லே பாப்பா வளர்ந்துட்டாளான்னு தோணுது.."
"வளர்ந்தா நல்லது தானே..!"
"ம்! நல்லது தான் ! ஆனால், குழந்தை தனம்..மழலை மொழி எல்லாமே மாறுமே..இனி படிப்பை நோக்கி ஓடனுமே..அவளை நான் மிஸ் பண்ணுவேன்.."
"அதனால் என்ன.. ? நான் வேணா அதுக்கு ஒரு சூப்பர் ஐடியா தரட்டுமா..?"
என்ன? என்று புரியாமல் கணவனின் முகத்தை ஏறிட்டு பார்த்துவளிடம்..
"பாப்பாவுக்கு ஒரு குட்டி தம்பியோ! குட்டி பாப்பாவோ! நீ பெற்றுக் கொடுத்துட்டா அவளும் சந்தோஷமாக விளையாடுவா..நீயும் குழந்தைகளுடனே இருக்கலாம்.." என்று விழிகள் மின்ன புன்னகைத்தவனை கண்டு கண்கள் சிவக்க முறைத்தாள்.
என்னமோ சொல்றான் என்று ஆர்வமாக கேட்டவளிடம் அவன் கூறிய பதில் அவளுக்கு சினத்தைக் கொடுத்தது.
அவனோ அவளின் கோபத்தை பொருட் படுத்தாமல் அவளின் அருகில் வந்து "உன் ஜாடையில் எனக்கு ஒரு குழந்தை வேண்டும் ஒளி! பெற்றுக் கொடுப்பாயா..?" என்று அவளின் முகவாயை தன் விரல்களால் பட்டும் படாமல் தொட்டபடி அவளின் விழிகளைப் பார்த்து கேட்டான்..
அவளோ, பேச்சற்ற சிலையாக விக்கித்துப் போய் நின்றாள்.
தொடரும்..
Hi friends,
உயிர் துடிப்பாய் நீ! அடுத்த அத்தியாயம் 36 பதிந்து விட்டேன். இத்தனை நாள் தாமதத்திற்கு மன்னிக்கவும்..
படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.. அடுத்த அத்தியாயம் நாளை..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்