Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலா! காதலா!- கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,024
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் ‌14



ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுடன் அனைவரும் வெளியே வந்தனர்.


சந்தானம் நேரே‌‌ அங்கு உட்கார்ந்திருந்த அக்னிமித்ரனிடம் சென்றவர், தன் தொண்டையை செருமினார்.


அவன் அலட்சியமாக நிமிர்ந்து பார்த்தான்.


"உன் முடிவுக்கு நாங்க சம்மதிக்கறோம். இந்தா நீ கேட்டது" என்று தாங்கள் கையெழுத்து போட்ட பேப்பரை அவனிடம் நீட்டினார்.


"ஓகே வெல். உங்க டாக்குமெண்ட்ஸ் என்கிட்ட இருக்கற வரைக்கும் உங்களுக்கு ஒரு பாதிப்பும் வராது. என்னை நீங்க டெஃபனட்டா நம்பலாம். இப்ப நீங்க என் பேரெண்ட்ஸுக்கு கால் பண்றீங்களா? இல்ல, நானே பண்ணிடவா?" என்று கேட்க, சந்தானத்தின் உத்தரவின் படி பூர்ணிமாவிற்கு தானே அழைப்பு விடுத்தாள் கல்பனா.


மறுபுறம் ஏற்கப்பட்டவுடன், "பூர்ணி நீயும் நானும் சம்பந்தியாகப் போறோம்டி" என்று பாசாங்காக சந்தோஷக் கூச்சலிட்டாள்.


"என்னடி சொல்ற? மித்ர வர்ஷினி கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாளா?" என்று சந்தேகத்துடன் கேட்டாள் பூர்ணிமா.


பூர்ணிமாவின் சந்தேகத்திற்கு காரணம், மித்ர வர்ஷினி எப்படி கருப்பாக இருக்கும் அக்னிமித்ரனை கட்டிக்கொள்ள சம்மதித்தாள் என்பதே.


"அதுவந்து நீ நேர்ல வா சொல்றேன். நாங்க இந்த மாசத்துலயே கல்யாணத்தை வச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டோம். ஸோ, நீ இப்பவே உன் ஹஸ்பண்டை கூட்டிக்கிட்டு தாம்பூலத் தட்டோட எங்க வீட்டுக்கு வந்துருடி" என்று கூற, சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த பூர்ணிமா, உடனேயே அந்த விஷயத்தை நீதிதாசனுக்கு தெரிவித்து, அவள் கூறியபடி கையில் தாம்பூலத தட்டுடன் அவர்களின் வீட்டிற்குச் சென்றாள்.


வந்தவர்கள் அங்கு நடு நாயகமாக சோபாவில் மிடுக்காக கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த, தங்கள் புதல்வன் அக்னிமித்ரனை கண்டதும், திடுக்கிட்டு நின்றார்கள்.


அவர்களை பார்த்தவன் எழுந்து நின்று, "நம்ம வீடு தாம்ப்பா. உள்ள வாங்க. என் மாமனார் வீடு தான் இது" என்று கையிலிருந்த அலைபேசியை டீபாயின் மேல் வைத்துவிட்டு வரவேற்க, அவனின் பெற்றோர் இருவரும் குழம்பிப்போய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


அவனின் குரலில் கலைந்த சந்தானமும், மற்றவர்களும் அப்போது தான் வந்திருந்தவர்களை கவனித்தனர்.


ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றவர்களின் அருகில் சென்று, கைகளைப் பற்றி வரவேற்றனர்.


நீதிதாசனை பார்த்து கண்ணடித்த அக்னி, "கமோன் ப்பா" என்று சொல்ல, சம்பிரதாயமாக சிரித்தவர் பூர்ணிமாவுடன் சோபாவில் உட்கார்ந்தார்.


அக்னிமித்ரன் அவர்களுக்கு வலப்புறம் இருந்த இருக்கையில் அமர்ந்தான். நீதிதாசனுக்கு எதிரே இருந்த சோபாவில் சந்தானமும் பிரகாஷும் அமர்ந்திருந்தனர்.


நீதிதாசன் தன் மகனிடம் என்ன நடக்கிறதென தனது புருவங்களை உயர்த்திக் கேட்க, "அப்பா அது வந்து நான் உங்ககிட்ட முன்னாடியே சொல்லணும்னு இருந்தேன். நானும் ரதியும் ரொம்ப நாளாவே லவ் பண்றோம்பா. நான் தினமும் காலையில பீச் ரோட்ல வாக்கிங் போவேனே? அப்ப தான் ரதி எனக்கு பழக்கம். அவ வீட்ல திடீர்னு ப்ரித்விகூட மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணினதும், அவளுக்கு என்ன பண்றதுனே தெரியல. என்கிட்ட சொல்லி ரொம்ப அழுதா. நானும் அவளை எவ்வளவோ சமாதானம் பண்ண ட்ரை பண்ணினேன் ப்பா. பட் அவ என் பேச்சை கேட்கறதாவே இல்ல. நாங்க ரெண்டுபேரும் நம்ம ரெண்டு ஃபேமலியும் இதை எப்படி எடுத்துக்குமோனு பயந்து, உங்க கன்சர்ன் இல்லாமலேயே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம் ப்பா. சாரி ப்பா" என்று திண்ணக்கமாய் தன் பொய்யை சொல்லி முடித்தான்.


ஏற்கனவே மித்ரவர்ஷினி அவனை கல்யாணம் பண்ணிக்கொள்ள சம்மதித்து விட்டால் என்றதற்கே தன் கையை கிள்ளிப் பார்த்து, இது கனவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பூர்ணிமாவிற்கு, இப்போது மயக்கமே வரும் போல் இருந்தது.


‘என்னது லவ்வா? அதுவும் ரதிக்கூடயா?’ என அதிர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்தவள், அனைவரின் முன்பும் தன் வாயைப் பிளக்க, அதைப் பார்த்து மனம் குமுறியது கல்பனாவிற்கு.


‘இருடி உன்னை லேடிஸ்கிளப்ல மாட்டிவிட்டு என்ன பண்றேனு மட்டும் பாரு’ என வன்மமாய் நினைத்து கொண்டாள்.


பூர்ணிமாவின் கையைப் பிடித்து அழுத்திய நீதிதாசன் அவன் கூறியவற்றை கேட்டு அவனை நம்பாத பார்வை பார்க்க, அவரை நெஞ்சை நிமிர்த்தி தைரியமாக பார்த்தான் அக்னிமித்ரன்.


இதில் வேறு ஏதோ இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார் அவர்.


எனினும் அதை வெளிக்காட்டாமல் "ஓ! எல்லாம் முடிஞ்சிடுச்சா? இதுல நாங்க சொல்ல என்னப்பா இருக்கு?” என்று அவனிடம் தன் அதிருப்தியைக் காட்டியவர்,


சந்தானத்திடம் திரும்பி, “நீங்க போன்ல சொன்னது மாதிரியே இன்னும் ஒரு மாசத்துல இவங்க கல்யாணத்தை வச்சிக்கலாம்" என்று சொல்லி கையிலிருந்த தாம்பாளத்தை நீட்டினார்.


உடனே குறுக்கே புகுந்த கல்பனா, "ஒரு நிமிசம். இந்த சம்பந்தம் மட்டும் இல்லாம, பூர்ணிமா முன்னாடி ஆசைப்பட்ட மாதிரி மித்ரவர்ஷினியையும் உங்களுக்கு மருமகளா அனுப்பி வைக்க எங்களுக்கு சம்மதம்” என்றாள்.


அக்னியோ திகைத்தான்.


“எனக்கு ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கல்லாம் விருப்பம் இல்ல" என்றான் மிடுக்காக.


அவன் பண்ணும் பகுமானத்தைக் கண்டு உள்ளுக்குள் கொதித்தாள் கல்பனா. பூர்ணிமாவும் தான்.


கல்பனா தன் பல்லைக் கடித்தபடி, “மாப்பிள்ளைக்கு ரொம்ப குறும்பு. நாங்க வர்ஷினியை உங்க இன்னொரு பையன் அசோகமித்ரனுக்கு தான் கல்யாணம் பண்ணித்தரதா சொன்னோம். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வர்ஷினிக்கு வாட்ஸப்ல நம்ம அச்சு போட்டோவை அனுப்பி ஓகேவான்னு கேட்டோம்.‌ அவளும் ஓகே சொல்லிட்டா. அச்சுவை நாளைக்கு வந்து எங்க வர்ஷினியை பார்க்கச் சொல்லுடி பூர்ணி. உங்க எல்லாருக்கும் ஓகேன்னா மேற்கொண்டு பேசலாம். நம்ம பிள்ளைங்க விருப்பம் தானே நமக்கு முக்கியம்? ஒருவேளை எல்லாம் ஓகேவாச்சினா‌ ரெண்டு கல்யாணத்தையும், ஒரே நாள்ல ஒரே மேடையில வச்சிக்கலாம். நீங்க என்னண்ணா சொல்றீங்க?" என்று நீதிதாசனிடம் கேட்க, சிறிது நேரம் நெற்றியை சுருக்கி யோசித்தவர், சரியென்று சம்மதித்தார்.


அக்னிமித்ரன் மட்டும் அவர்களின் திட்டத்தை முன் கூட்டியே அறிந்தவன் போல் கேலியாக அவர்களை பார்த்து நகைத்தான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,024
Reaction score
1,132
Points
113
திருமணம் பற்றி சில முக்கிய முடிவுகளை எடுத்த திருப்தியுடன் நீதிதாசன் தன் மனைவியுடன் வெளியேற, அவர்களுடனேயே அக்னியும் சென்று விட்டான்.


வீட்டிற்கு சென்றவர்கள் இரவு பத்தரை மணிக்கு வீடு வந்து சேர்ந்த அசோகமித்ரனிடம், அக்னிமித்ரனின் திடீர் திருமணத்தைப் பற்றி கூற, முதலில் அதிர்ந்தவன் பின்பு, ‘இவன் இப்படி பண்ணலைனா தான் அதிசயம்’ என்று தன்னை சமாளித்துக் கொண்டான்.


இருப்பினும் ஏதோவொரு வலி அவனின் மனதோரம்.


அதன் பின் பூர்ணிமா மித்ரவர்ஷினியை பற்றிக் கூற, வேண்டாவெறுப்பாய் அனைத்தையும் கேட்டவன் மனதிற்குள், ‘அவ அப்பாவும் பெரியப்பாவும் ஒன்னாம் நம்பர் மொள்ளமாரிங்க. இதுல இவளை வேற வீட்டுக்குள்ள விடனுமா? இந்த அக்னி தன் சுகத்துக்காக என்னை இப்படி சிக்கல்ல மாட்டி விட்டுட்டானே’ என்று பாவமாகப் புலம்பினான்.


இவன் இப்படி எக்குத்தப்பாக மாட்டி புலம்புகிறான் என்று கூறினால் அவன் அலுவலகத்தில் உள்ள, சிறு எறும்பு கூட அதனை நம்பாது.


ஏனெனில், தனது கட்டுப்பாட்டிற்கு கீழுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் மிகக்கட்டுக்கோப்பான காவலதிகாரி என பெயர் எடுத்திருப்பவன் அவன்.


காலையில் கூட அவனது உயரதிகாரி அழைத்து வைத்து மெச்சும் அளவிற்கு தான் ஒரு சம்பவத்தை செய்திருந்தான்.


நீண்டநாட்கள் காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிக் கொண்டிருந்த ரவுடி ஒருவன், ஆறுமாதஙக்ளுக்குப் பின் இப்போது பூனேவிலிருந்து எழும்பூர் ரயில்நிலையத்திற்கு வந்திறங்கப்போவதாக துப்பு கிடைக்கவும், அவனுக்காக அங்கு தன்‌ ஆட்களுடன் மாற்றுடையில் பயணிகளைப் போல் காத்திருந்தான்.


அப்போது தூரத்தில் ரயில் ஒன்று ஓட்டப் போட்டியில் கலந்து முதல் பரிசு வாங்கப்போவது போல் வேகமாக வந்து கொண்டிருக்க, நடைமேடையில் வந்து கொண்டிருந்த பார்வையற்ற பெண்மணி ஒருவர், தனது‌ பார்வையற்ற ஏழு வயது மகனை ஆளுயர நடைமேடை கொண்ட அந்த தண்டவாளத்தில் தவறவிட்டார்.


ஒருபுறம் இரயில் வேகமாக வந்து கொண்டிருக்க, அந்த ஆளுயரப் பள்ளத்திலிருக்கும் தண்டவாளத்திற்குள் குதித்தால் அந்தக் குழந்தையுடன் உயிரோடு மீண்டு வருவது கடினம் என்று பயணிகள் அனைவரும் பார்வையாளர்களாய் நின்று பதறிக்கொண்டிருந்தனர்.


தங்களால் முடிந்தது தாயைக் காப்பது மட்டும் தான் என அந்தப் பார்வையற்ற பெண்மணியை மட்டும் தண்டவாள விளிம்பிலிருந்து தள்ளி இழுத்துச் சென்றனர். ரயில் வந்தாலும் பாதிக்கப்படாத தூரத்திற்கு.


ஆனால், சற்றுத்தள்ளி கல் இருக்கையில் அமர்ந்திருந்த அசோகமித்ரன் இதைப் பார்த்ததும், சற்றும் யோசிக்காமல் தண்டவாளத்திற்குள் பாய்ந்து குழந்தையை மேலே தூக்கி‌க் கொடுத்தான்.


மேலதிகாரி என்பதால் அவனைத் தொடர்ந்து ஓடி வந்திருந்த அவனது குழுவினரும், குழந்தையை வாங்கி நகர்ந்துவிட்டனர். இரயில் அவனை இடிக்க இருந்த கண்ணிமைக்கும் நேரத்தில் அசாத்தியமாக நடைமேடையின் மேல் எகிறிக்குதித்து சடுதியில் புரண்டான் அசோகமித்ரன்.


சுற்றியிருந்த கூட்டம் அவனது இந்த வீரதீர செயலுக்காக கைகளைத் தட்டி‌ ஆர்ப்பரித்தது. அவனோ தனது சட்டையிலிருந்த தூசியை தட்டிவிட்டு யாரோ எவரோ போல் கூட்டத்திற்குள் கலந்துவிட்டான். அவனுக்கு தனது கடமையே முதன்மையாக தெரிந்தது.


ஆனால், அவன் தண்டவாளத்திற்குள் குதித்தது; அந்தக் குழந்தையை காப்பாற்றியது என்று அனைத்தையும் தன் ஆப்பிள் அலைபேசியில் புகைப்படம் எடுத்திருந்தாள் அந்த நவநாகரீக மங்கை.


உடனே, அதை அவள் சமூகவலைதளத்தில் பதிவேற்றவும் செய்தாள். அதன் பார்வைகளும், பகிரல்களும் அசுர வேகத்திலிருந்தன.


உபரித்தகவலாய் அவன் ஒரு காவல்துறை அதிகாரி என்பதும் பரவ, அவனின் உயரதிகாரி அவனை அழைத்து, பூங்கொத்து கொடுத்து பாராட்டினார்.


அவனோ டிமிக்கி கொடுத்த ரவுடியை பிடித்ததற்காகத் தான் அவர் உற்சாகமாக தன்னை நேரில் அழைக்கிறார் என்று நினைத்து ஆர்வமாக வந்திருக்க, நடந்ததோ வேறு. விதியை நினைத்து தலையாட்டிக் கொண்டான்.


தற்போது வீட்டில் அந்த நிகழ்வைச் சொல்லி தன் பெற்றோரையும் பெருமிதத்தில்‌ ஆழ்த்த அவன் நினைத்திருக்க, அவன் தலையில் ஒரு கூடை கங்கினைக் கொட்டினாள் பூர்ணிமா.


அவள் அவனிடம் மித்ரவர்ஷினியின் புகைப்படத்தைத் தர, விருப்பமேயில்லாமல் அதை வாங்கிக்கொண்டு தனதறைக்குள் புகுந்தவன், அதனை புத்தகமேசையின் மேல் வீசிவிட்டு படுக்கையில் விழுந்தான்.


‘இப்ப மேரேஜ் வேணாம்னு சொன்னா மாம் நிச்சயமா கேட்கப்போறதில்ல. கண்டிப்பா ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் நான் கல்யாணம் பண்ணி தான் ஆகணும். பேசாம இவளுக்கே ஓகே சொன்னா தான் என்ன? சும்மா பேருக்கு நாளைக்குப் போய் பார்ப்போம்’ என்று நினைத்தவன், எழுந்து போய் மேசையில் கிடந்த அப்புகைப்படத்தைப் பார்த்தான்.


அவனை பார்த்து புன்னகைத்தாள் மித்ரவர்ஷினி.


மறுபுறம் சந்தானத்தின் வீட்டில் தனது அப்பத்தாவை தவிர, வீட்டில் யாரும் தன்னிடம் பேசவில்லையே என்று துவண்டு போனாள் ரதிதேவி.


கல்பனா அவளைப் பார்க்கும் போதெல்லாம், "ஊமைக்கொட்டான் மாதிரி இருந்துக்கிட்டு எவ்வளவு பெரிய வேலை பார்த்திருக்க? அப்பா அப்பானு சொல்லிச் சொல்லியே அந்தாளு கழுத்தை அறுத்துட்டல்ல?" என்று திட்ட, எதுவும் பேசாமல் மாலைமாலையாய் கண்ணீர் உகுத்தாள் அவள்.


அவளுக்கு அக்னிமித்ரனின் பெற்றோர் வந்தது, திருமணம் குறித்து பேசியது என்று எதுவும் தெரியாததால், திருமணம் முடிந்தக் கையோடு அக்னிமித்ரன் தன்னை வாழாவெட்டியாய் தன் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, தன் வீட்டிற்குச் சென்று விட்டான் என்றே தவறாக புரிந்து கொண்டாள்.


தன் தலைவிதியை எண்ணி நொந்துபோனவள், தன் அருகிலமர்ந்து ஆறுதல் வார்த்தைகள் கூறிக்கொண்டிருக்கும் மணியம்மையின் மடியில், முகம் புதைத்து அழுது தீர்த்தாள்.


இவள் இங்கு அழுது கொண்டிருக்க, அவளின் கண்ணீருக்கு காரணமானவனோ, தன் உடைமை தன்னிடமே சேர்ந்துவிட்ட நிம்மதியில், சுகமாய் உறங்கிக் கொண்டிருந்தான்.


உதயமான வெகுநேரத்திற்கு பின் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி சந்தானத்தின் இல்லத்திற்குள் புகுந்தது அந்த வெண்ணிலவு.


வந்தவளிடம் யார் அவளின் திருமண விஷயத்தைப் பற்றி பேசுவது என்று தங்களுக்குள்ளேயே இங்கி பிங்கி பாங்கி போட்டுக் கொண்டிருந்தார்கள், அவ்வீட்டின் பெரியவர்கள்.


அவளோ தன்னறைக்குள் நுழைந்ததும், தனது குதிரைவாலை அவிழ்த்துவிட்டு, கழுத்தில் கட்டியிருந்த ஸ்கார்ப்பையும் ஒருபுறம் வீசிவிட்டு, அப்பாடா என சோபாவில் விழுந்தாள்.


பின், தனது பூந்துவாலையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.


பத்திரிக்கையாளர் ஆனதும் போதும் ஊர் ஊராக சுற்றித் திரிய வேண்டியிருக்கிறது என்று சலித்துக்கொண்டே, ஷவரிலிருந்து தூவிய மிதமான வெந்நீர் தூறல்கள் தன் பளிங்கு மேனியில் வழுக்கிவிழும் அளவிற்கு வாளாவிருந்தாள்.


அவளை தழுவிச்சென்ற துளிகளோ தங்களது பிறந்த பயனை அடைந்த நிம்மதியில், அவள் பாதங்களின் அருகிலிருந்த சல்லடைக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டன.


ஒரு மணி நேரம் அந்த ஏகாந்த குளியலில் மெய் மறந்து நின்றவள், பின்பே சென்னை மக்களின் பேரிடர் கால நீர் தட்டுப்பாடு ஞாபகம் வந்து, பூந்துவாலையை உடலில் சுற்றிக்கொண்டு வெளியே வந்தாள்.


இரவு உடைக்குள் தன்னை திணித்து கொண்ட பின், கீழே வரவேற்பறையில் தனக்காக காத்திருந்த யாரையும் கவனிக்காமல், கவனித்தாலும் பொருட்படுத்தாமல் டைனிங் டேபிள் சென்றாள்.


வெள்ளி‌த் தட்டொன்றில் தானே இரண்டு சப்பாத்திகளையும், கிண்ணத்தில் சன்னாவையும் நிரப்பிக்கொண்டு உண்ண ஆரம்பித்தாள்.


அவள் அப்படித்தான் ரதிதேவிக்கு நேர் எதிர். தன் போக்கில் இருப்பாள். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே அவர்களின் உதவியை நாடுவாள்.


மெதுவாக அவளருகில் வந்த அவளின் தந்தை பிரகாஷ், சன்னாவின் மணத்தை நுகர்ந்துக்கொண்டே தயக்கமாய் பேச ஆரம்பித்தார்.


"வர்ஷுமா டாட் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா" என்றார்.


அவளும், "சொல்லுங்க டாட்" என்று அவர் கூறப்போவதை கேட்க, காதுகளை கூர் தீட்டினாள்.


"அதுவந்து‌ நாங்கல்லாம் சேர்ந்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்டா. கூடவே ஒருத்தவங்களுக்கு வாக்கும் கொடுத்திருக்கோம். இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம். நீ கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கணும்டா. மாப்பிள்ளை ஐ.பி.எஸ் ஆஃபிஸரா, இங்க சென்னையில தான் வேலைப் பார்க்கறார். பேரு அசோகமித்ரன்" என்று சிங்கத்தின் குகைக்குள் சிக்கிய சிறுநரியாய் பயத்தில் திக்கித் திணறி, நாக்குழறி ஒரு வழியாய் தான் சொல்ல வந்ததை சொல்லி முடித்தார்.


அவரை தன் வேல்விழிகளால் துளைத்தெடுத்தவளோ, "எனக்கு கல்யாணமா? எப்ப யாரைக் கேட்டு முடிவு பண்ணீங்க டாட்? திடீர்னு வந்து எவனோ ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா, உடனே நானும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டி ஒத்துக்கணுமா? நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லி இருக்கேன் டாட். முதல்ல என் புரொஃபஷன் அன்ட் ஃபேஷனுக்கு தான் இம்பார்ட்டன்ஸ்னு. இந்த கல்யாணம் கருமாதியெல்லாம்‌ இப்ப உங்களை யார் டாட் முடிவு பண்ண சொன்னது? ம்?" என்று தன் தந்தை என்றும் பாராமல், தன் சரமாரியான கேள்விகளால் அவரை திணறடித்தாள்.


மேலும், "இங்க பாருங்க டாட்! இட்ஸ் மை லைஃப்; மை ரூல். உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால ஆட முடியாது. ஒருவேளை, நான் கல்யாணம் பண்ணிக்கலைனு நீங்க சூசைட் அட்டெம்ப்ட் ஏதாவது பண்ணிப்பீங்கனாலும் பரவாயில்ல. நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன். பிகஸ், ஒருத்தர் உயிரோட வாழ்றதும், சாகறதும் அவங்கவங்க விருப்பம். அதுல நான் எப்பவும் தலையிடுறது இல்ல. ஐ அம் லைக் அ ஃப்ரீபேர்டு டாட். ப்ளீஸ் என்னை எதுலயும் அடைச்சு வைக்க ட்ரை பண்ணாதீங்க. நான் சுக்குநூறா உடைச்சிட்டு வெளிய வந்திருவேன்” என்று தரையில் தன் கால்கள் பதியாமல் குதித்துக் கொண்டிருந்தாள்.


ஆனால், அவளை உடைக்க முடியாத கூட்டிற்குள் தள்ள அவ்விடம் வந்தார் சந்தானம்.


அவரைக் கண்டதும் பசை போட்டது போல் தன் வாயை இறுக மூடிக்கொண்டாள் மித்ரவர்ஷினி.



தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,024
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 15



அவளருகில் வந்தவர் தான் அணிந்திருந்த பதினாறு வைரக்கற்கள் பதிக்கப்பட்ட நீள் செவ்வக வடிவ மோதிரம் வெளியே தெரியும் படி, தன் புலிவால் மீசையை நீவி விட்டார்.


"வர்ஷுமா உன் அப்பன் சொன்னதெல்லாம் கேட்டல்ல?" என்று உறும,


“ஆமா பெரியப்பா” என பவ்யமாய் தலையசைத்தாள் வர்ஷினி.


அவள்‌ தைரியமனைத்தும் நத்தைப்போல் கூட்டுக்குள் சுருங்கின.


இதுவரை நடந்தவைகளில் சிலவற்றை தவிர்த்து, மற்ற அனைத்தையும் பொறுமையாய் அவளிடம் எடுத்துக் கூறியவர், "இப்ப எங்க இல்லீகல் பிசினஸ் பத்தின டாக்குமெண்ட்ஸும், பினாமி பத்தின டாக்குமெண்ட்ஸும் அந்த ஐ.பி.எஸ் அசோகமித்ரன் கிட்ட மாட்டியிருக்குமா. உன்னைத் தவர வேற யாரையும் நாங்க இப்ப நம்புறதுக்கில்ல. நீதான் எங்களுக்கு அதை திருடிக் கொடுக்கணும். வாழ்நாள் முழுசும் அதை நினைச்சி பயந்து பயந்து வாழ முடியாது எங்களால. அந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எங்க கைக்கு வரணும்னா, நீ கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சு தான் ஆகணும். ஒரு வருஷம் கழிச்சு நீ நெனச்ச மாதிரி சந்தோசமா வாழலாம். ஆனா இந்த ஒரு வருஷத்துக்கு மட்டும் அவனுக்கு பிரியமான பொண்டாட்டியா நடிச்சி, காரியத்தை சாதிக்கனும். எங்களுக்கு இந்த ஒரு உதவி மட்டும் நீ பண்ணனும். நான் சொன்னதெல்லாம் செய்வேன்னு பெரியப்பாவுக்கு சத்தியம் பண்ணிக்கொடு" என்று கையை நீட்ட, அவள் திகைப்பூண்டை மிதித்தாற்போல் ஸ்தம்பித்தாள்.


அவ்வேளை குறுக்கிட்ட கல்பனா, "எங்களோட டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் திருடினது மட்டுமில்லாம, அவனோட தம்பி கிட்டப்போய் கொடுத்துட்டான்‌ அந்த அக்னிமித்ரன். அதுவுமில்லாம உன் தங்கச்சியையும் ஏமாத்தி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டான். அந்தக் குடும்பத்தை நீ எப்படியாவது நடிச்சி நாசம் பண்ணனும் வர்ஷு. அது உன்னால மட்டும் தான் முடியும். நீ எங்க நம்பிக்கையை காப்பாத்தனும் வர்ஷு." என்று பகையுணர்வோடு சொன்னாள்.


தான் மதிக்கும் தன் பெரியப்பா முதல் முறை தன்னிடம் கேட்ட ஒன்றில் மறுக்க முடியாமல், அவள் சரி என்று சம்மதித்து, அவரின் கையிலடித்து சத்தியம் செய்தாள்.


அவளருகில் வந்து தலையை தடவிக் கொடுத்த சந்தானம், "நான் உன்னை பொண்ணா பெத்திருக்கனும் வர்ஷூம்மா. ஒரு தண்டத்தை பெத்துத் தொலைச்சிட்டேன். ஒரே ஒரு வருஷம் தான். அதுக்கப்புறம் உன் விருப்பத்துக்கு நாங்க எந்தக் காலத்துலயும் குறுக்க நிற்கவே மாட்டோம். நீ எப்படி நினைக்கறயோ அப்படி இருக்கலாம்." என்று கூற, முகம் வெளிறிப்போயிருந்தவள், மௌனமாய் சரி என தலையசைத்தாள்.


தாங்கள் நினைப்பதை தங்கள் மகள் செய்து முடிப்பாள் என்ற நம்பிக்கையில் அண்ணன் தம்பி இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.


வர்ஷினியின் கண்களோ தன் தந்தையையே வெறுமையாய் பார்த்துக் கொண்டிருந்தன.


அப்போது கல்பனா அவளிடம் திடுக்கிடும் தகவல் ஒன்றை சொன்னாள்.


"வர்ஷூ நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்கறதுக்கு அந்த அசோகமித்ரன் வர்றானாம். ஸோ, கொஞ்சம் அவனுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ. அப்பறம் சொல்ல மறந்துட்டேன் பாரு. உன் வேலையையும் நீ ராஜினாமா பண்ண வேண்டியிருக்கும், சாரி." என்று கூற, நடைபிணமாய் தனதறைக்குச் சென்றாள்.


கதவை தாழிட்டு தனது கட்டிலில் வந்து படுத்தவள், தனது தலையணை உறையுள் இருந்த புகைப்படத்தை எடுத்துகொண்டு, "நீங்க என்னை விட்டுட்டு வேற ஒருப் பொண்ணை லவ் பண்ணிட்டிருந்தாலும், நான் எப்படி ரோமியோ உங்களை விட்டுட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணுவேன். ஐ லவ் யூ ரோமியோ. நீங்க எப்படி இருந்தாலும் என்னால உங்களை தவர, வேற யாரையும் மனசுல நெனச்சுப் பார்க்கக்கூட முடியாது. இதை எப்படி நான் என் குடும்பத்துக்கிட்ட சொல்லுவேன்?" என்று அந்த இரவு முழுவதும் அறையின்
விட்டத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள்.


அவளின் கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர் துளிகள் முத்தாகிவிடும் நோக்கில் அவளின் சிப்பிக் காதுகளுக்குள் சென்று தஞ்சமடைந்தன.


வீட்டிலிருக்கும் அந்த இரண்டு செல்லக்கிளிகளும், தனித்தனியே அறையில் தங்கள் எதிர்காலத்தை எண்ணி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தனர்.


மறுநாள் காலையில் சரியாக ஏழு மணிக்கு ரதிதேவியின் அலைபேசி அலறியது.


இரவு முழுவதும் அழுகையில் கரைந்தவள் அப்போது தான் கண் அயர்ந்திருக்க, இடைவிடாது ஒலித்தப் பாடலில் திடுக்கென்று விழித்தாள்.


தொடுதிரையை பார்த்தவளுக்கு உடல் தூக்கி வாரிப் போட்டது. அக்னிமித்ரன் தான் அழைப்பு விடுத்திருந்தான்.


சிறிது நேரம் அது பாட்டுக்க இடை விடாது அலறிக் கொண்டிருக்க, அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவள், நீங்கள் ஏன் என்னை இங்கேயே விட்டுவிட்டுப் போனீர்கள் என்று கடைசியாய் ஒருமுறை கேட்கவென, கோபமாக அழைப்பை ஏற்றாள்.


"ஹாய் பேபி! குட் மார்னிங். என்ன பேபி பெட்லயிருந்து இன்னும் எந்திரிக்கலையா? என்ன கல்யாணக் கனவா? என்ன சாங்குக்கு பேபி நம்ம டூயட் ஆடினோம்?" என்று கேட்க, அவனின் இந்த அடுக்கடுக்கான கேள்விகளில் தான் கேட்க வந்ததை மறந்தாள் ரோஸ்மில்க் சிற்பம்.


"ஹான் பேபி, நம்ம கல்யாணத்தை எல்லாருக்கும் அனவுன்ஸ் பண்ற மாதிரி ஒரு சின்ன கெட் டூ கெதர் வைக்கலாம்னு இருக்கேன். உனக்கு ட்ரெஸ் அளவெடுக்க ஃபேஷன் டிசைனர்ஸ் உன் வீட்டுக்கு வருவாங்க. உனக்கு எந்த மாடல் பிடிச்சிருக்குனு அவங்கக்கிட்ட சொல்லிரு என்ன?" என்று அவன் போக்கில் பேசிக்கொண்டேப் போக, திருதிருவென விழித்தவள் கேட்டாளே ஒரு கேள்வி, யாருக்கு கல்யாணம் என்று.


"ம்? உன் பாட்டிக்கும் செத்துப்போன தாத்தாவுக்கும். என்ன பேபி நீ இப்படியிருக்க? நீ இன்னும் தூக்கத்துல தான் இருக்கியா? ஹே‌! கமான்யா. நம்ம கல்யாணத்தை பத்தி தான் நான் பேசிட்டிருக்கேன். சரி, சரி, டிசைனர்ஸ் உன் வீட்டுக்கு வருவாங்க. நீ ரெடியாயிரு!" என்று கட்டளை பிறப்பிக்க, அவன் எதிரே உள்ளது போல் அவள் தலை தானாக ஆடியது சரியென்று.


"என்ன பேபி தலையாட்டுறியா?" என்று சரியாக அவளை கணித்தவன், "பை பேபி" என்றதோடு அழைப்பை துண்டித்து விட்டான்.


தலையும் புரியாமல் வாலும் புரியாமல் விழித்தவள் குளித்து கிளம்பி கீழே வர, அவளின் சித்தி மீனாட்சி இரண்டு வாரங்களுக்குப் பின் நடக்கவிருக்கும் அவளின் திருமணத்தை பற்றியும், இன்று நடக்கவிருக்கும் மித்ரவர்ஷினியின் பெண் பார்க்கும் படலத்தை பற்றியும் விரிவாகச் சொன்னார்.


அதில் சற்று தெளிந்தவள், தற்போது தன் வர்ஷூக்காவும் தன்னுடன் அந்த வீட்டிற்கு வரப்போகிறாள் என்ற தைரியத்தில், முக மலர்ச்சி கொண்டாள்.


ஆனால், அது பொறுக்கவில்லை கல்பனாவிற்கு. மறுபடியும் அவளை குத்திக்காட்டி பேசி அறைக்குள் முடங்கச் செய்தாள்.


முக்கியமான அலுவலிலிருந்த அசோகமித்ரனுக்கு பூர்ணிமா அடிக்கடி அலைபேசியில் அழைப்புவிடுத்து, தன் வருங்கால‌ மருமகள் மித்ரவர்ஷினியை நேரில் சென்று பார்க்குமாறு வற்புறுத்த, நச்சரிப்பு தாங்காமல் அவளின் வீட்டிற்கு புறப்பட்டான் அவன்.


மதியம் ஒரு மணியளவில் வெள்ளை நிற முழுக்கை சட்டையும், காக்கி நிற பேண்ட்டும் அணிந்து, கண்களில் கூலர்ஸ் உடன் ஃபார்மல் லுக்கில் அட்டகாசமாய் மித்ரவர்ஷினியைப் பார்க்க, தனித்துச் சென்றான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,024
Reaction score
1,132
Points
113
அவன் வரவை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த சந்தானமும் பிரகாஷும் அவனை வரவேற்று, சோபாவில் அமர வைத்தனர்.


அவன் மேல் உள்ள விரோதத்தை முகத்தில் காட்டாமலிக்க அரும்பாடுபட்ட சகோதரர்கள், மீனாட்சி காபி கொண்டு வர உள்ளே போயிருக்கவும், "தம்பி, உங்களுக்கு இந்த சாஸ்திரம் சம்பிரதாயமெல்லாம் பிடிக்காதுனு நினைக்கறேன். மேல தான் வர்ஷு‌ ரூம் இருக்கு. நீங்களே போய் பாருங்களேன்" என அவனை மாடிக்கு வழியனுப்பி வைத்தனர்.


மாடிப்படியை நெருங்கியவனின் அருகில் வந்த கல்பனா அவனை மேலிருந்து கீழாக அளவிட்டுவிட்டு, "மேலப் போய் ரைட் திரும்பினா ஃபர்ஸ்ட் ரூம். அங்க தான் வர்ஷூ இருக்கா." என்று வழி காட்ட, இரண்டு இரண்டு படிகளாக தாவிக்குதித்து ஏறியவன், அவளறையை அடைந்தான்.


இரண்டு தடவை கதவைத் தட்டியும் எந்த பதிலும் வராமல் போக, கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.


வெள்ளை நிறத்துணியில் தங்க நிறப் பூக்கள் நெய்யப்பட்ட, பஃப் கை கொண்ட ரவிக்கை அணிந்து, பால் பச்சை நிறத்திலான சேலை காற்றில் பறந்து ஓவியம் வரைந்து கொண்டிருக்க, ப்லோவ் ட்ரை செய்யப்பட்ட ஸ்டெப் கட் முடியை அழகுற விரித்துவிட்டிருந்தவளின் பின்புற தோற்றம் மட்டுமே அவனுக்கு நன்றாக தெரிந்தது.


பால்கனிக்கான கண்ணாடிக்கதவில் வெளியே வெறித்தபடி நின்றிருந்தவளை திரும்ப வைக்கும் பொருட்டு, “மிஸ் மித்ரவர்ஷினி” என்று காற்றுக்கும் நோகாமல் மென்மையாய் அழைத்தான் அசோகா.


திரும்பினாள் அந்த நறுமுகை. வீழ்ந்தான் ஆண்மகன்.


தன் காஜல் போட்ட இமைகளுயர்த்தி அவனைப் பார்த்தாள். லேசாய் பிளந்திருந்த அவளிதழ்கள் இரண்டும் வெயிலில் உருகும் மாதுளம் பனிக்கூழாய் அநியாயத்திற்கு மின்னின.


அவன் தான் தன் வாழ்க்கையில் சந்தித்த மூன்றாவது பேரழகி அவள் என்று நினைத்தான்.


பொங்கும் பால் நுரையைப் போல் வெண்மையான பற்களுடன் புன்னகைத்தவளை, மூட்டை மூட்டையாய் பொங்கிய உணர்வுகளுடன் பார்த்துக்கொண்டே நின்றான்.


"பார்க்கறதைப் பாரு. இதுக்கு முன்னாடி பொண்ணுங்களையே பார்க்காத மாதிரி. அப்படியே கண்ணு முழியை நோண்டி வெளிய எடுக்கணும்" என்று உள்ளுக்குள் அவனை கழுவி ஊற்றியவள்,


"ஹலோ!" என்று அவன் முகத்தின் முன் சொடுக்கிட,


அதில் நினைவு பெற்றவன், ‘ச்சே! இப்படியா அப்பட்டமா அவளுக்கே தெரியற மாதிரி அவளை பார்த்து ஜொள்ளு விடுவ’ என த்தன் ஹார்மோன்களை கடிந்துகொண்டு, தன் செயலால் அசடு வழிந்து, "ஹலோ, ஐ அம் அசோகமித்ரன்" என்று தன் வலக்கையை அவள்புறம் நீட்டினான்.


"ஐ அம் மித்ர வர்ஷினி" என்று பதிலுக்கு மிடுக்காய் கூறியவள், தன் கைகளை கூப்பி வணக்கம் வைத்தாள்.


அவளின் இந்த உதாசீனத்தில் அவனின் தன்மானம் தலை தூக்க, அவளின் கண்களை பார்க்காமல் எங்கோ வெறித்துக்கொண்டு, இவ்வளவு நேரம் தான் யோசித்து வைத்ததனைத்தையும் அவளிடம் கொட்டத் தயாரானான்.


"நான் என் பேரண்ட்ஸுக்காகத்‌ தான் இந்த மேரேஜுக்கு சம்மதிக்கறேன். நான் கடமைனு வந்துட்டா ஃபேமிலி சென்டிமெண்ட் எதையும் பார்க்க மாட்டேன்"


அக்னிமித்ரன் கேட்டிருந்தால் சிரித்திருப்பான்.


‘ஆனா அழகான பொண்ணுங்களை பார்ப்பீங்க போலத் தெரியுதே? அப்படியே சிலை மாதிரி நிற்கறீங்க’


"நான் எப்பவும் நியாயத்துக்கு பக்கம் தான் நிற்பேன்."


"ஆஹான்!"


"எனக்கு என் வேலை தான் முதல் பொண்டாட்டி"


‘அட! அப்ப போலீஸ் ஸ்டேஷனை மாமியார் வீடுனு சொல்றது உங்க விஷயத்துல கரெக்ட் தான் போலயே?’


"என் கடமையை செய்ற நேரத்துல உன்னை கவனிக்க முடியாம போகலாம். சில முக்கியமான விசயங்களை உன்கிட்ட கலந்துக்க முடியாம கூடப் போகலாம். அதுக்காக நீ என்னை எந்த விதத்துலயும் தொந்தரவு செய்யக்கூடாது. என் மனைவியா வரப்போறவக் கிட்ட நான் எதிர்பார்க்கறது இது ஒன்னைத் தான்"


‘என்ன தொந்தரவு செய்யக் கூடாதா? இனி உன்னை இருபத்தி நாலு மணிநேரமும் அலற விடுறது தான்டி மாப்ள என் எய்ம்மே’ என தொடர்ந்து அவன் கூறிய ஒவ்வொன்றிற்கும் மனதிற்குள் சுவையாக விடை கொடுத்துக்கொண்டே வந்தாள்.


ஆனால், இறுதியில் அவன் கூறிய ஒன்றைக் கேட்டு தான் மின்சாரத் தாக்குண்டாள்.


"உங்க அப்பா பண்ற இல்லீகல் பிசினஸ் பத்தி உனக்கு தெரியுமா இல்லையானு தெரியல. எப்ப வேணும்னாலும் நான் அவரை அரெஸ்ட் பண்ற நிலைமை வரலாம். இப்ப உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு பின்னாடி உன்னை வருத்தப்பட வைக்கக்கூடாது‌ பாரு? அதனால இந்தக் கல்யாணம் வேண்டாம்னு உன் பேரெண்ட்ஸ் கிட்ட நீயே சொல்லிடு" என்று சொல்லி புறப்பட்டவனைக் கண்டு, ஒரு கணம் தான் சிலையாய் சமைந்து நின்றவள், பின் சுரணை வந்து அவனை தடுக்க முயன்றாள்.


வெளியே செல்ல கதவை திறந்தவனை தடுத்து நிற்பாட்டியது அவளின் கொஞ்சும் கிளிக்குரல்.



தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,024
Reaction score
1,132
Points
113
இந்த நாவல் உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணவும் கமெண்ட் பண்ணவும் மறக்காதீங்க லட்டூஸ்🙂
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom