காதலில் விழுந்தேன் காதலா
காதல் (பாகம்) ஒன்று
- கவிஞர் க.மணிஎழிலன்
சட்டென்று வந்த மின்னலாய்
என் இதயத்தில் ஒளிர்ந்தாய்
பட்டாம்பூச்சி
தொட்டுவிட்டுப்போன சுகத்தை
உன் அறிமுகத்தில் தந்தாய்
கட்டழகன் நீ
கண்பார்வையில் ஏதேதோ
என்னிடம் சொன்னாய்
வட்டமிடும் வெண்ணிலவாய்
உன் நினைவுகளையே
சுற்ற வைத்தாய்
பட்டமிடும் உன் கையில்
என் மனதைப்
பிடித்துக்கொண்டாய்
கொட்டித் தீர்க்க
எவ்வளவோ உள்ளது
என்னிடத்தில்
எப்போது கூறுவேன்
உன்னிடத்தில்
அதற்கும் நேரம் நீ தந்தால்
கட்டிலின் மீது காதலை
மொத்தமாய்ச் சொல்கிறேன்
காதல் செய்வோம் வா காதலா
பிரேமாவின் குறுஞ்செய்தியில் வந்த கவிதையை மனோ படித்துக்கொண்டிருந்தான். இதற்கு என்ன பதில் அனுப்புவது என்கிற குழப்பத்தோடு செல்ஃபோனையே பார்த்துக்கொண்டிருந்தான். நாம் ஒருவரை காதலிக்கிறோம் என்பதைவிட நம்மை ஒருவர் காதலிப்பது எப்போதும் குதூகலம்தான். எந்த வயதானாலும், எந்தச் சூழலாக இருந்தாலும் அந்தக் காதலை நினைத்து உள்ளூர மகிழ்வோம்.
பிரேமாவை முதன்முதலாகச் சந்தித்தது இரண்டு நாட்களுக்கு முன்புதான். அதற்குள் இப்படி ஒரு குறுஞ்செய்தியை அவன் எதிர்பார்க்கவில்லை. மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. ஆனாலும் பதில் அனுப்ப தயக்கம் இருந்தது. அதற்கு நிறைய காரணங்கள். இருப்பினும் பிரேமாவின் மனதை இந்தத் தயக்கம் காயப்படுத்திவிடுமோ என்கிற எண்ணத்தால் உடனடியாக அவளுக்கு பதில் அனுப்பவில்லை. அவள் என்ன செய்கிறாள் என்று காத்துக்கொண்டிருந்தான்.
“நான் காத்திருக்கவா?” என்று மீண்டும் அவளிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. அதற்கும் எவ்வித பதிலும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.
“நான் காத்திருப்பது நியாயம்தானா என்கிற குழப்பம் எனக்கே உள்ளது. உங்களுக்கு அனுப்பிய செய்தி உங்கள் மனதைக் காயப்படுத்தினால் என்னை மன்னித்துவிடுங்கள்” என்று அடுத்த குறுஞ்செய்தி வந்தது.
காதலில் காத்திருத்தல்தான் அழகு. ஆனால் பொறுமை இழந்து அவள் அடுத்தடுத்து அனுப்பும் செய்தி இவனைத் தடுமாறச் செய்தது. இனி பதில் அனுப்பாவிட்டால் அவள் என்னென்ன செய்வாளோ? என்று பயந்து உடனே செல்ஃபோனை எடுத்து “வெயிட்... பிறகு சொல்கிறேன்” என்று மட்டும் டைப் செய்து அனுப்பிவிட்டான்.
கன்னத்தில் கைவைத்து காத்திருக்கும் ஒரு சிம்பளை மட்டும் அவள் திருப்பி அனுப்பினாள்.
பிரேமா அருமையாகக் கவிதை வாசித்தாள். அவளது கவிதையில் ஒரு ஜீவன் இருந்தது. கவிதை வாசிக்கும்போது அடிக்கடி இவனையும் பார்த்துக்கொண்டிருந்ததை அவனும் கவனித்தான். அவள் வாசித்துமுடித்த பின் இருவர் கவிதை வாசித்தனர். அதற்குப்பின் இறுதியாக மனோ கவிதை வாசித்தான். அதில் அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது. யார் இவன்? எங்கிருந்து வந்தான்? இப்படி பட்டாசாக கொளுத்துகிறானே என்று ஆச்சரியப்படும்படி கம்பீரமாகவும் நறுக்கென்றும் இருந்தது அவனது கவிதைகள். விழா முடிந்ததும் அனைவரும் அவனை மொய்த்துக் கொண்டார்கள். பலர் அவனது செல்ஃபோன் எண்ணை வாங்கிக்கொண்டார்கள். பிரேமாவும் வாங்கினாள். அவள் எண் வாங்கும்போது “உங்க கவிதை ரொம்ப அருமையாக இருந்தது. நீங்க எங்க இருக்கீங்க? என்ன பண்றீங்க?” அடுக்கடுக்கான இவனது கேள்வியில் சற்றுத் தடுமாறியே பதில் சொன்னாள்.
தான் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தமிழ்பேராசிரியையாக வேலை செய்வதாகவும், இந்த விழாவில் கலந்துகொள்ளவே சென்னை வந்ததாகவும் சொன்னாள்.
யாரும் கவனிக்காத நேரத்தில் “உங்க கண் ரொம்ப அழகு” என்றாள்.
மனோ அவளை நிமிர்ந்து பார்த்ததும் பட்டென்று திரும்பிக் கொண்டாள். அவளிடமிருந்துதான் அந்த வார்த்தை வந்ததென்று தெரிந்தும் தெரியாததுபோல் அவன் நடந்துகொண்டான்.
அவள் இரவு இரயிலில் ஏறியவதும் சாட் பண்ணத் தொடங்கிவிட்டாள்.
‘வணக்கம். நான் பிரேமா.’
‘வணக்கம். சொல்லுங்க.’
‘வீட்டுக்குப் போய்ட்டீங்களா?’
‘ம்...’ நீங்க கிளம்பிட்டீங்களா?
‘ம்... நான் டிரெயின் ஏறிட்டேன்.’
‘ஓ... ஹேப்பி ஜர்னி’
‘தேங்க்ஸ். அப்புறம்’
‘என்னது”
‘ம்... ம்... சாப்ட்டீங்களா?
காதலர்களின் தொடக்கம் இப்படித்தானோ? மனதுக்குள் நினைத்தபடி மனோ கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தான்.
என்ன சொல்வது? இதைத் தொடரலாமா? சற்று குழப்பமான மனநிலையுடன்... டைப் செய்தான்.
‘ம்... சாப்பிட்டேன். ஓகே. நீங்க போனவுடன் மெசேஜ் பண்ணுங்க. பை’
‘ம்... பேசலாமா?’
இவனுக்கு தடுமாற்றம் ஆரம்பித்தது.
‘இப்போது வேண்டாம். வீட்டில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்.’
‘அப்போ... சாட் பண்ணலாமா?’
‘சாரி... கொஞ்சம் வேலையாக இருக்கிறேன். நாளை பேசுகிறேன்.’
மனோவின் இந்த பதில் அவளுக்கு என்னவோ போல் இருந்தது.
அவள் மனதை காயப்படுத்துகிறோமோ என்று கவலையாக இருந்தது மனோவுக்கு. சற்று நேரம் கழித்து.
‘ஓகே. ஊருக்குப் போனவுடன் மெசேஜ் பண்ணுங்க. குட் நைட்’ என்று டைப் செய்தான்.
அவள் முகத்தில் ஒளி வீசியது.
கோபமான முக சிம்பளை இரண்டு போட்டுவிட்டு ‘ஓகே’ என்று மட்டும் டைப் செய்து அனுப்பினாள்.
மெல்லிய சிரிப்புடன் ஆன்லைனிலிருந்து ஆஃப்லைனுக்கு வந்தான். ஆனால் அவன் மனதுக்கு ஏதோ ஆன் ஆனது. அதை ஆஃப் செய்யலாமா வேண்டாமா என்று அவனுக்குள் குழப்பம் ஆனது.
மறுநாள் காலை.
‘குட்மார்னிங். நான் வந்துட்டேன்’ பிரேமாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்ததும்,
‘ஓகே’ என்று டைப் செய்து அனுப்பினான்.
‘அவ்வளவுதானா?’ கேள்வி அனுப்பினாள்.
‘கொஞ்சம் வேலையாக இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்’ பதில் அனுப்பினான்.
காத்திருந்தாள்.
அவனிடமிருந்து எந்தக் குறுஞ்செய்தியும் அதற்குப்பின் வரவில்லை. அன்று இரவு ஒரு கவிதை வந்தது. ஆர்வமாக திறந்து படித்தாள்.
“கண்ணாடிச் சட்டத்தில்
அழகாய்த் தெரிந்தது முகம்
உடையும்வரை”
அவனிடமிருந்து ஹைக்கூ கவிதை ஒன்று வந்திருந்தது.
இதற்கு என்ன அர்த்தம்? புரிந்தும் புரியாமல் அதற்கு என்ன பதில் அனுப்பலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவனிடத்தில் ஏதோ ஒரு குழப்ப நிலை என்பது மட்டும் புரிந்தது. அதே குழப்பம் இவளுக்கும் இருப்பதை அவனால் எப்படி புரிந்துகொள்ள முடிந்தது. இது அவளை ஆச்சரியப்படுத்தியது. அவன் இவ்வளவு துல்லியமாக யோசித்திருக்கிறானே என்று நினைக்கையில் அவன் மேல் உள்ள காதல் அதிகரித்தது.
“ஒரே சிந்தனையில்
இருவரும் இருகோடுகளாக
இணைக்கமுடியாத
தண்டவாளங்களாய்
ஆனாலும் அவைதானே
உண்மையான
அன்புக்கு அச்சாரம்”
அவளிடமிருந்து இப்படி பதில் வந்தது.
மனோ இதைப் புரிந்துகொண்டான்.
‘அன்பு என்பது
அன்பாகவே இருக்கட்டும்
அத்துமீற வேண்டாம்
இருக்கும் நட்பும்
இழந்துவிடுவோமோ என்கிற
பயம் எனக்கு’
அவனது பதிலில் கிறங்கிப் போனாள். தனக்காக கவிதை எழுதும் ஒருவரிடம் மனதைப் பறிகொடுப்பது காலம்காலமாக இருந்துவரும் ஒன்றுதானே. தனக்காகக் கவிதை எழுதி வரும் புலவர்களுக்கு தன் நாட்டையே கொடுத்த அரசர்களும் இருந்திருக்கிறார்கள். பைரன் என்கிற இளவரசனின் கவிதைக்கு மயங்கிய அழகிகளின் எண்ணிக்கை 200க்கும் மேலாம். அந்த அழகிகளை தன் அரண்மனையிலேயே கல்லறையாக்கிய கதையை அவளும் படித்திருக்கிறாள். எழுத்தால் தன்னைக் கட்டிப்போடும் இவனை விட்டுவிடக் கூடாது என்பது மட்டும் அவளுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.
மறுநாள் காலை அவளிடமிருந்துதான் அந்தக் கவிதை அவனுக்கு குறுஞ்செய்தியாக வந்தது.
‘காதல் செய்வோம் காதலா’ என்று ஆரம்பித்தது அந்தக் கவிதை. முதல் வரியைப் படித்ததும் குப்பென்று வேர்த்தது அவனுக்கு...
‘டிபன் சாப்பிடாம என்ன போனையே பார்த்துட்டிருக்கீங்க? முதல்ல சாப்புடுங்க...’ என்று அதட்டினாள் மனோவின் மனைவி.
- தொடரும்...