Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வண்ணங்கள் சிறுகதை போட்டி முடிவுகள்

siteadmin

Administrator
Staff
Messages
7
Reaction score
1
Points
1
எழுத்தாள தோழமைகளுக்கும் வாசகர்களுக்கும் வணக்கம்,

வண்ணங்கள் சிறுகதை போட்டி சகாப்தத்தின் ஒரு சின்ன சோதனை முயற்சிதான். அம்முயற்சியில் என்னோடு கரம்கோர்த்திருந்த அத்துனை படைப்பாளிகளுக்கும், ஆதரவளித்த வாசக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்களுடைய பங்களிப்பில்லாமல் வண்ணங்கள் இல்லை. மீண்டுமொருமுறை எனதன்பும் நன்றிகளும்.



தலைப்புக்கு ஏற்றார் போல், போட்டியில் பல வண்ணக் கதைகளும் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பாக இருந்தது. ஆனாலும், போட்டி என்று வருகையில், முன்வரையறை செய்யப்பட்ட வரம்புகளைப் பொறுத்து, கதைகளை ஒவ்வொரு படிநிலையிலும் வடிகட்ட வேண்டியது கட்டாயமாகிறது.




எழுத்துப்பிழை, கதை நடையில் தடுமாற்றம். முற்றுப்பெறாத வாக்கியங்கள், தருக்கப் பிழைகள் அல்லது ஒவ்வாமைகள் முதலானவற்றின் அடிப்படையிலேயே, முதற்கட்டமாக இருபது கதைகளை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.



அவற்றுள் சில, பிழைகளோடு தப்பி அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. காரணம் பிழைகளுக்காக குறைக்கப்பட்ட மதிப்பெண்ணை விட, கதையின் கருவும் அதை அவர்கள் கையாண்ட விதமும் முயற்சியும் எம் நடுவர்களைக் கவர்ந்திருந்தது.



மற்றபடி போட்டியில் பங்குபெற்ற கதைகள் அனைத்திலும் சிறப்பு அம்சங்கள் பலவும், குறைகள் சிலவும் இருந்தன.




இரண்டாம் சுற்றில், வெற்றியைத் தீர்மானிக்கும் சல்லடையின் துளைகள் இறுக்கம் பெற்றன. படைப்பாளிகளின் கற்பனைவளமும், மொழியாளுமையும், சிறுகதை வடிவநேர்த்தியும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.



இரண்டாம் சுற்றில் வடிகட்டப்பட்ட கதைகள் அனைத்திலும் அழகான கற்பனையும், மொழி ஆளுமையும் இருந்தது. எழுத்தில் திரைபோட்டு காட்சிகளை வாசகர் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும்படி இருந்தது. ஆனாலும், அவை சிறுகதை என்கிற வடிவத்திற்குள் அடங்கவில்லை. அவற்றில் அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. காட்சிகள் குறுநாவல் அளவிற்கு விரிவுபடுத்தப்பட்டிருந்தன.



இன்னும் சில கதைகள் அழகாக கொண்டு செல்லப்பட்டு கருத்து சொல்ல வேண்டிய இடத்தில் அதை அழுத்தமாக சொல்ல நினைத்தோ என்னவோ கொஞ்சம் திணித்துவிட்டார்கள். வாழைப்பழத்தில் ஏற்றும் ஊசி போல் கதையில் கருத்துக்கள் இயல்பாக... போகிற போக்கில் இருக்க வேண்டும். காலில் இடரும் கல்லாக உறுத்தக் கூடாது என்பது நடுவர்களின் எண்ணம்.



இதைத் தவிர, நாடகத்தனமான காட்சியமைப்பு, உணர்வுகளை இன்னும் சரியாக எழுதியிருக்கலாம், பெண் லீட் கேரக்டரை இன்னும் ஸ்ட்ராங்காக காட்டியிருக்கலாம், காட்சியமைப்பு இன்னும் உயிரோட்டமாக இருந்திருக்கலாம் போன்ற வடிகட்டிகளின் அடிப்படையில், அவையனைத்தும் தரம்பிரிக்கப்பட்டிருக்கின்றன.




போட்டியின் இறுதி முடிவை அறிவிக்கும் பொறுப்பு என்னுடையதாகிறது.



யார் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? எந்த கதை வெற்றி பெற்றது என்பதை அறிய வேண்டுமா?



அவள் இந்த தலைமுறை பெண். இணையம் அவள் உலகம். நிழலுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாதவள். வாழ்க்கையை வாழத்தெரியாமல் பிறர் வாழ்க்கையின் விடுபட்ட பக்கங்களை எண்ணிக் கொண்டிருந்தவள். கண்டுபிடித்துவிட்டீர்களா? எஸ்... #சஞ்சனி_சதீஷின் #விடுபட்ட_பக்கங்கள் வண்ணங்கள் போட்டியில் #மூன்றாம்_இடத்தைப் பிடித்துள்ளது.



இன்றய வாழ்க்கை முறையின் எதார்த்தத்தையும் எதிர்பார்ப்பையும் ஆனந்த் அர்ச்சனாவின் வாழ்க்கை அப்படியே படம்பிடித்து காட்டியிருந்தது. எழுத்து நடையும் அருமை. வாழ்த்துக்கள் சஞ்சனி...

கோடிக்கணக்கான மனிதர்கள் வாழும் இந்த பூமியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். எண்ணங்களும் விருப்பங்களும் அதை சார்ந்த உணர்வுகளும் வித்தியாசப்படும். அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான மனிதன், தான் வாழும் சமூகத்திற்கு சற்றும் பழக்கமில்லாத ஒரு புதுவித வாழ்க்கைமுறையை தேர்ந்தெடுக்கிறான். அந்த முடிவு அவனை சார்ந்தவர்களை அவன் குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்பதை பதினைந்து ஆண்டுகள் கழித்து பின்னோக்கி சென்று காட்டியிருக்கிறார் கதாசிரியர். இதில் முக்கியமான விஷயம் அந்தந்த மனிதர்களின் உணர்வுகளை அவரவர் போக்கில் அப்படியே விட்டுவிட்டு விலகிநின்று கதையை இயல்பாக நகர்த்தியிருக்கும் விதம் சிறப்பு. #வேல்முருகன் அவர்களது #தாயுமானவன் கதை #இரண்டாம்_இடத்தைப் பிடித்துள்ளது. வாழ்த்துக்கள் திரு.வேல்முருகன்.


இந்த கதையை படிக்கும் பொழுதே மனதிற்குள் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி உருவாகியது. ஒரு தைரியம் உருவாகியது. இதெல்லாம் சாத்தியமா? கதையில் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்றெல்லாம் தோன்றினாலும், நிதானமாக யோசித்தால் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு பலவழிகளில் கிடைக்கும் என்பதை கன்வெர்ஜன்ஸ் தியரியுடன் ஒப்பிட்டு விலகியிருந்தது வெகு சிறப்பு. பொள்ளாச்சியில் நடந்த பெரும் குற்றத்துடன் இதை ஒப்பிட்டு பார்க்க முடிந்தது. அங்கு குற்றவாளிகள் தப்பிவிட்டதை வருத்தத்துடன் எண்ணிப்பார்க்க வைத்தது. லேசான அரசியல் சாடலை ரசிக்க முடிந்தது. எழுத்துநடையில் தேர்ச்சியிருந்தது. கதையின் முடிவு சட்டத்திற்கு புறம்பானது என்றாலும், பெண்களின் மன ஆதங்கத்தின் பிரதிபலிப்பாக அதை எடுத்துக்கொண்டு #முதல்_பரிசானது #ரிஷா-வின் #அஞ்சுவது_பேதைமை-க்கு வழங்கப்படுகிறது. வாழ்த்துக்கள் ரிஷா.



போட்டியில் பங்குபெற்ற அனைத்து நண்பர்களுக்கும், ஆதரவளித்து அணைத்த அனைத்து வாசக நல்லிதயங்களுக்கும் எங்கள் சகாப்தம் குழுவினரது சார்பாக, எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்,
நித்யா கார்த்திகன்.​
 
Top Bottom