நீதிதாசனின் செயலில் கொந்தளித்திருந்தவர்களுக்கு மூன்று மாதம் கழித்து பூர்ணிமா கருவுற்றிருப்பதாக செய்தி வர, புது வரவை எண்ணி பூரித்துப் போயினர்.
ஆனாலும் தாங்களாக அங்கு செல்ல அவர்களது தன்மானம் இடம் கொடுக்காததால், அங்கு செல்லத் துடிக்கும் தங்கள் மனதை அடக்கி வைத்தனர்.
ஐந்து மாதம் கழித்து மறுபடியும் வந்த தொலைபேசி அழைப்பில், இரு கருவினை சுமந்திருக்கும் பூர்ணிமாவிற்கு இது எட்டாம் மாதம் என்பதால் அடிக்கடி ஏற்படும் உடல் உபாதைகளை பற்றி சொல்லி வருத்தப்பட்டான் நீதிதாசன்.
தற்போது அவள் பலவீனமடைகிறாள் எனவும், தான் உடனிருந்து கவனிக்க முடியாமல் திண்டாடி வருவதாகவும் அவன் சொல்ல, மனமிறங்கியவர்கள், "நாங்க அங்க வர முடியாதுலேய். வேணும்னா உன் பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு நீ இங்க வா. நாங்க அவளை பார்த்துக்கிடுதோம்." எனக் கூறினர்.
அதில் மகிழ்ச்சியடைந்த நீதிதாசன் உடனே தன் பூமா செல்லத்தைக் கூட்டிக்கொண்டு திருநெல்வேலி செல்ல ஆயத்தமானான்.
ஆனால், ஏற்கனவே நீதிதாசனின் பெற்றோர்கள் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றிய அவமானத்தில் இருந்த பூர்ணிமா, நான் அங்கு வர மாட்டேன் என பிடிவாதம் செய்தாள்.
"பூமா பிடிவாதம் பிடிக்காத. உனக்கு பிரசவம் பார்த்து பக்குவம் செய்ய இங்க ஆளில்ல, புரிஞ்சிக்கோ. என்னாலயும் எப்பவும் உன் கூடவே இருக்க முடியாது. என் வொர்க் ப்ரசர் பத்தித்தான் உனக்கு தெரியுமே? ஜஸ்ட் ட்ரை டு அண்டர்ஸ்டான்ட்மா. எங்கம்மா இதுவரை எத்தனை பிரசவம் பார்த்திருக்காங்கத் தெரியுமா? அவங்க உன்னையும் நல்லா பார்த்துக்குவாங்க" என பல பசப்பு வார்த்தைகளை கூறி பூர்ணிமாவை சம்மதிக்க வைத்தான்.
அவர்கள் திருநெல்வேலிக்கு காரில் செல்ல முடிவெடுத்து கிளம்பும் நேரத்தில், சாதிக் கலவரத்தால் சாலைகளில் செல்லும் வாகனங்களையெல்லாம் சிலர் வழி மறித்து தீ வைத்து கொழுத்திவிடுவதாக தகவல் கிடைக்க, வேறு வழியில்லாமல் கடைசி நேரத்தில் ரயிலில் செல்ல முடிவெடுத்தான்.
தற்போது தன் மனைவியுடன் இரயில் நிலையத்தை வந்தடைந்து, தேநீருக்காக கடையில் வரிசையிலும் காத்திருந்தான்.
ஒரு வழியாக காகிதக்கப்புகளை ஏந்தியபடி பூர்ணிமாவிடம் வர, சினுங்கினாள் அவள்.
"அத்தான் இதுக்கு தான் சொன்னேன் நான் அங்க வரமாட்டேனு. பாருங்க விதி கூட என்னை அங்க போகவிடாம தடுக்குது. அங்க போனதுக்கப்பறம் உங்க அம்மாவும் அப்பாவும் சேர்ந்து என்னை என்னப்பாடு படுத்தப் போறாங்களோ? எனக்கு பயமா இருக்கு அத்தான். நம்ம அங்கப் போக வேணாம்" என்றாள்.
அவனோ எரிச்சல்பட்டான்.
“ஆரம்பிச்சிட்டியா? மறுபடியும் என்னை கெஞ்ச வைக்காத பூமா, ப்ளீஸ்” என கடுகடுத்தவன், ‘கடவுளே சீக்கிரம் ரயிலை அனுப்பி வை’ என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டான்.
அப்பயணம் அவன் குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்தபின், அவர்கள் தலைவிதியையே மாற்றியமைக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தால், நீதிதாசன் இப்படி வேண்டியிருக்க மாட்டானோ என்னவோ?
முகத்தை தாங்கலாய் வைத்திருந்தவள் தன் பெருத்த வயிற்றை பிடித்துக்கொண்டு பெருமூச்சு வாங்க, அவளைப்போலவே கர்ப்பிணிப்பெண்ணாய் குத்துமதிப்பாக ஆயிரம் உயிர்களை தன்னுள் சுமந்துக்கொண்டு, ஆடி அசைந்து நடைமேடை எண் ஒன்றில் வந்து நின்றது அனந்தபுரி எக்ஸ்ப்ரெஸ்.
இருவருக்கும் ஒரு வழியாய் இருக்கைகள் கிடைக்கப்பெற, சொகுசாய் சென்று அமர்ந்து கொண்டனர். பல வகை மனிதர்களுடன் உண்டான உரையாடல்களுடன் இனிதாய் அப்பயணமும் நிறைவு பெற, இரயில் திருநெல்வேலியை வந்தடைந்தது.
"ஹல்வா ஹல்வஹல்வா ஹல்வா" என்னும் இனிமையான ராகம் நிறைந்த பல குரல்கள் அவர்களின் செவிகளை சென்றடைந்தன.
ஹல்வாவில் இரண்டு பாக்கெட்டுகளை வாங்கியவர்கள் திருநீலகண்டன் அனுப்பியிருந்த காரில் களக்காட்டை நோக்கி பயணமாகினர்.
ஒரு மணிநேரப் பயணத்திற்கு பின்பு வீட்டையடைய மாலை ஐந்து மணியாக, வாசலை அடைந்தவர்களை ஆரத்தி சுற்றி வரவேற்றனர் திருநீலகண்டன்-மரகதம் தம்பதியர்.
உள்ளே சாமரம் வீசி வரவேற்றவர்களை மிதப்பாக பார்த்த பூர்ணிமா வார்த்தைக்கு மட்டும், "நல்லாயிருக்கீங்களா?" என்று கேட்டாள்.
"எங்களுக்கென்னமா? நீ சொகமாயிருக்கியா தாயி?" என பதிலுக்கு வாஞ்சையுடன் விசாரித்தார் மரகதம்.
"ம்" என்றவள், "எனக்கு ரொம்ப அசதியாயிருக்கு. என் ரூம் எங்க?" எனக்கேட்டு அதற்குள் புகுந்து கொண்டாள்.
அங்கிருந்த முதலிரண்டு நாட்களும் மரகதம் தன்னிடம் பேசினால் மட்டும், ஆம் இல்லை என ஓரிரு வார்த்தைகளில் பதிலளித்தவள், மற்ற நேரங்களில் ஒரு வேலையும் செய்யாமல் கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டாள்.
இரு கருவினை சுமந்திருப்பவள் என்பதால், மரகதமும் அவளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.
இரண்டு நாட்கள் கழித்து நீதிதாசன் சென்னை புறப்பட, இவ்வளவு நேரம் எங்கு தான் வைத்திருந்தாள் இவ்வளவு கண்ணீரையும் என எண்ணுமளவிற்கு, முதல் பிரிவில் உண்மையாகவே அழுது தீர்த்தாள் பூர்ணிமா.
"வேண்டாம் அத்தான் போகாதீங்க. எனக்கு பயமாயிருக்கு. ப்ளீஸ் அத்தான். என் கூடவே இருங்க." என கதறி அழ, திருநீலகண்டனின் கண்ணசைவில் பூர்ணிமாவின் அருகில் சென்றார் மரகதம்.
"அட! நீ என்ன தாயி புதுசா பண்ணிக்கிட்டிருக்கா? ஒரு மூணு மாசம் அதுக்கு போய் இப்படி கண்ணீர் வடிக்குதியே? மொத நாள் உன்னை பார்த்தப்போ எங்களுக்கு தெரியாம இப்படி காதல் பண்ணிக்கிட்டு வந்து நிக்குதானேனு தான் தாயி நாங்க அப்படி கோபப்பட்டு பேசினோம். மத்தபடி இப்ப எங்க மனசுல ஒன்னுமில்ல தாயி. வடக்கால நிக்க அந்த பகவதியம்மா மேல சத்தியம் பண்ணி சொல்லுதேன் தாயி. உன்னை என் மொவளைப் போல பார்த்துக்கிடுதேன்" என உறுதிமொழி தர, நம்பிக்கையுடன் அவளை அங்கு விட்டுவிட்டு, சென்னை நோக்கிப் புறப்பட்டான் நீதிதாசன்.