Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கல்கியின் அலை ஒசை

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
நாற்பத்தொன்றாம் அத்தியாயம்

சூரியாவின் இதயம்

சூரியா அடிக்கடி ஆத்ம பரிசோதனை செய்து கொள்வதுண்டு. தன்னுடைய வெளி மனம் என்ன நினைக்கிறது. தன்னுடைய அறிவு என்ன முடிவு சொல்கிறது. தன்னுடைய இதய அந்தரங்கத்தில் எத்தகைய ஆசை குடிகொண்டிருக்கிறது என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து பார்ப்பான். எந்த விஷயத்திலேனும் மனதில் குழப்பமிருந்தால், மனத்திற்கும் அறிவுக்கும் இதயத்துக்கும் வேற்றுமை இருப்பதாகத் தோன்றினால், அந்த விஷயத்தைப் பற்றி தீர்க்கமாகச் சிந்தனை செய்வான். தன்னுடைய உணர்ச்சிகளில் உள்ள குழப்பத்தைப் போக்கித் தெளிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டுச் சில சமயம் அவன் 'டைரி' எழுதுவதும் உண்டு. பிப்ரவரி மாதம் 10-ம் தேதியன்று சூரியா தன்னுடைய 'டைரி'யில் பின்வருமாறு எழுதத் தொடங்கி னான். இன்று சீதாவின் பத்தாவது நாள் கிரியைகள் முடிவடைந்தன. அவளுடைய கணவன் சௌந்தரராகவன் பக்திசிரத்தை யுடன் வைதிகக் கிரியைகளைச் செய்தான். இத்தனை நாளும் வைதிகத்தில் இல்லாத பற்றுத் திடீரென்று ராகவனுக்கு ஏற்பட்டிருப்பதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. ராகவனுடைய சிரத்தையைக் காட்டிலும் வேடிக்கை என்னவென்றால், அந்தப் புண்ணியவதி பாமா காட்டிய வைதிக சிரத்தைதான். சீதாவின் சரமக் கிரியைகளையெல்லாம் அவள் தான் நடத்தி வைத்தாள் என்று சொல்ல வேண்டும். ராகவனுக்கு அது விஷயத்தில் கொஞ்சங்கூடக் கஷ்டமோ கவலையோ ஏற்படாமல் பாமா தன்னுடைய வீட்டிலேயே சகலவசதிகளும் செய்து கொடுத்தாள். சீ! இது என்ன வெட்கக்கேடு! இதுவும் ஒரு மானிட ஜன்மமா? பெண்டாட்டியைப் பறிகொடுத்தவன் கொஞ்ச நாளைக்காவது காத்திருக்கக் கூடாதா? அதற்குள்ளே இப்படி நாலு பேர் பார்த்துச் சிரிக்கும்படி நடந்து கொள்ள வேண்டுமா?

சீதா! இப்பேர்ப்பட்ட இதயமற்ற கிராதகனிடமிருந்து விடுதலையடைந்து நீ போய்ச் சேர்ந்தாயே? யமன் கருணையில்லாதவன் என்று சொல்லுவது எவ்வளவு அறிவீனம்? உன்னை யமன் கொண்டு போனதைப் போல் கருணையுள்ள செயல் வேறு என்ன இருக்க முடியும்?.... சீதா விஷயத்தில் என்னுடைய கடமையைச் சரிவரச் செய்துவிட்டேனா? என் அத்தைக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேனா? இந்த எண்ணம் எனக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டுதானிருக்கும். வாழ்நாள் உள்ள வரையில் அந்தக் கேள்விகள் மனதில் உதயமாகிக் கொண்டுதானிருக்கும். ஆயினும் என்னாலியன்றவரை என் கடமையைச் செய்துதானிருக்கிறேன். என் உயிரைத் திரணமாக மதித்துச் சீதாவைக் காப்பாற்றி யிருக்கிறேன். ஆனால் என்ன பிரயோஜனம்! சீதாவுக்காக நான் செய்த ஒவ்வொரு உதவியும் அவளுக்கு அபகாரமாகவே முடிந்திருக்கிறது. உண்மையில் அவளுடைய துயர வாழ்க்கைக்குக் காரணமானவன் நானே. அத்திம்பேரின் தந்தியை மட்டும் அன்று நான் மறைத்திரா விட்டால்.... சீதாவின் தகப்பனார், - அத்திம்பேர் துரைசாமி ஐயரின் - வாழ்க்கையும் முடிந்து விட்டது. பரிதாபம்! பரிதாபம்!- சீதா பல தடவை சொன்னாளே? அந்தத் துப்பாக்கியை அவர் தூர எறிந்திருக்கக் கூடாதா? அந்தத் துப்பாக்கியினால் அவருக்கு சாவு என்று ஏற்பட்டிருக்கும்போது எப்படித் தூர எறிந்திருக்க முடியும்! ஒருவிதத்தில் பார்த்தால் அவருக்கு இது நல்ல முடிவுதான்! அவருடைய இரு புதல்விகளில் ஒருத்தி செத்துவிட்டாள். இன்னொரு பெண் சாவைக் காட்டிலும் பயங்கரமான கதியை அடைந்திருக்கிறாள். இத்தகைய கொடூரத்தை எந்தத் தகப்பனார்தான் சகிக்க முடியும்? இதற்கெல்லாம் காரணம் தன்னுடைய தீச்செயல்களே என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு செத்துப்போனார். பாவம்! நான் பானிபத் பட்டணத்துக்குப் போவதற்குள்ளே அனாதைப் பிரேத சம்ஸ் காரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள். மனிதருக்கு இறந்த பிறகு நல்ல யோகம். காந்தி மகான் காலமான செய்தியைக் கேட்டுத் துக்கம் தாங்க முடியாமல் சுட்டுக்கொண்டு செத்தார் என்று பத்திரிகைகளில் செய்தி வந்திருந்தது. இதுவும் ஒரு விதமான யோகந்தானே!.....

சீதா இறந்துவிட்டாள்; துரைசாமி ஐயரும் போய்விட்டார் ஆனால் தாரிணி உயிரோடிருக்கிறாள். செத்துப் போனவர்களை மறந்துவிட்டு உயிரோடிருப்பவர்களைப் பற்றி கவனிக்க வேண்டும். தாரிணி விஷயத்தில் நான் என்னுடைய கடமையைச் செய்யத் தயாராயிருக்கிறேனா? என்னுடைய இதயத்தின் உணர்ச்சியும் உள்ளத்தில் ஆசையும் என் அறிவு சொல்லும் முடிவும் ஒன்றாயிருக்கின்றனவா? தாரிணியிடம் இன்றைக்கு நான் சொன்ன வார்த்தைகள் எல்லாம் சத்தியமானவை தானா? என் இதயத்திலிருந்து உண்மையாகச் சொன்னவைதானா? அல்லது வீம்புக்காகவோ ஜம்பத்துக்காகவோ அவசரப் பட்டுச் சொல்லி விட்டேனா? இன்று தான் சொன்ன வார்த்தைகளுக்காகப் பிறகு எக்காலத்திலேனும் வருத்தப் படுவேனா?.... காந்தி மைதானத்தில் பழைய இடத்தில் இன்று மாலை நாங்கள் சந்தித்தோம். எங்கள் வருங்கால வாழ்வைப் பற்றிப் பேசினோம். அந்தச் சம்பாஷணையை ஒருவாறு இங்கே எழுதப் பார்க்கிறேன். எழுதிய பிறகு படித்துப் பார்த்தால் ஒருவேளை என்னுடைய பிசகை நானே தெரிந்து கொள்ள முடியும் அல்லவா? முதலில் கொஞ்ச நேரம் சீதா, துரைசாமி ஐயர் - இவர்களுடைய பரிதாப மரணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தாரிணி விம்மினாள்! அழுதாள், அவளுடைய கண்ணிலிருந்து கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்ற ஆர்வம் என் மனதில் எழுந்தது. ஆனால் அதற்குத் துணிவு வரவில்லை. ஏனெனில் அவள் முகத்தை முகமூடியால் மறைத்துக் கொண்டிருந்தாள். எதற்காக என்றுதான் எனக்குத் தெரியுமே? அன்றைக்கு - சீதாவின் உயிர் பிரிந்த அன்றைக்கு, - ஒரு நிமிஷம் பார்த்தேன். ஐயோ! அதை நினைக்கவே பயங்கரமாயிருக்கிறது. ஆயினும் அதனாலே தாரிணியின் விஷயத்தில் என்னுடைய மனம் சிறிதாவது சலித்ததா? ஒரு நாளும் இல்லை. அவளுடைய முகத்தை விகாரப்படுத்துவனவென்று மற்றவர்கள் நினைக்ககூடிய காரியங்கள் அவளுடைய சௌந்தர்யத்தை அதிகமாக்குகின்றன என்றே நான் எண்ணுகிறேன். சீதா உயிர் விடும் தருவாயில் அவளுடைய கண்களுக்கு அப்படித்தானே தோன்றியது?

என்றாலும், தாரிணியின் முகமூடியை நீக்குவதற்கோ கண்களைத் துடைப்பதற்கோ எனக்குத் தைரியம் வரவில்லை. ஒருவாறு விம்மலும் அழுகையும் நின்ற பிறகு 'எத்தனை நேரம் போனதைப் பற்றியே வருத்தப்பட்டுக் கொண்டிருப்பது? வருங்காலத்தைப் பற்றி யோசிக்க வேண்டாமா? என்ன செய்வதாக உத்தேசம்?' என்று நான் கேட்டேன். பேச்சை அப்படித் திருப்பினால் அவளுடைய அழுகை நிற்கும் என்பதற்காகத்தான் அவ்விதம் கேட்டேன். 'எனக்கு ஒரு உத்தேசமும் இல்லை. யோசனை செய்யும் சக்தியும் இல்லை, நீங்கள்தான் சொல்லவேண்டும். உங்களுடைய வருங்காலத் திட்டம் என்ன?' என்று தாரிணி கேட்டாள். 'என்னுடைய திட்டத்தை இப்போது எப்படிச் சொல்ல முடியும்? உன்னுடைய உத்தேசம் தெரிந்த பிறகுதான் என்னுடைய திட்டம் தயாராகும்' என்றேன். 'எந்த விஷயத்தில் என்னுடைய உத்தேசம் தெரியவேண்டும்? என் தந்தையைப்போல் உயிரை விட்டுவிட எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை!' என்றாள் தாரிணி. 'உயிரை விடுவதற்குத் தைரியம் வேண்டாம்; உயிரோடிருப்பதற்குத்தான் தைரியம் வேண்டும்' என்று நான் சொன்னேன். 'அந்தத் தைரியம் எனக்கு வேண்டிய அளவு இருக்கிறது. மேலும், வஸந்தி விஷயமான பொறுப்பு ஒன்றும் எனக்கு இருக்கிறதல்லவா?' என்றாள் தாரிணி. 'வஸந்தி விஷயமான பொறுப்பும் இருக்கிறது. சீதாவுக்குக் கொடுத்த வாக்குறுதியும் இருக்கிறது. தாரிணி! அந்த வாக்குறுதியின்படி ராகவனைக் கலியாணம் செய்துகொள்ள விரும்பினால் அதற்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன்!' என்றேன். தாரிணி சிரித்தாள், அந்த நேரத்தில் அவள் அவ்விதம் சிரித்தது எனக்குப் பிடிக்கவில்லை. 'என்னத்திற்குச் சிரிப்பு' என்று கேட்டேன். 'நான் விரும்பினால் மட்டும் என்ன பிரயோசனம்? அதற்குச் சௌந்தரராகவன் அல்லவா இஷ்டப்பட வேண்டும்' என்றாள். 'இது என்ன பேச்சு? உன்னை விரும்பி மணந்து கொள்ள இஷ்டப்படாத மூடன் இந்த உலகத்தில் யார் இருக்க முடியும்? என்றேன்.

'சூரியா! நீங்கள்கூட இப்படிப் பொய் வார்த்தை சொல்லுவது எனக்கு அதிசயமாயிருக்கிறது. இந்த முகமூடியை நீக்கி என் முகத்தின் கோர ஸ்வரூபத்தைப் பார்த்த யார்தான் என்னை மணந்து கொள்ளத் துணிவார்கள்?' என்றாள் தாரிணி. 'மன்னிக்க வேண்டும், தாரிணி! ராகவனுடைய சுபாவம் தெரிந்ததும் நான் அவ்விதம் எதிர்பார்த்தது பிசகுதான்!' என்றேன். 'அவரை மட்டும் சொல்வானேன்! இந்த உலகத்தில் பிறந்த எந்தப் புருஷனும் இப்படிப்பட்ட கோர முகம் உடையவளைக் கலியாணம் செய்து கொள்ள மாட்டான்' என்றாள். 'அப்படிச் சொல்ல வேண்டாம், சௌந்தரராகவனோடு எல்லோரையும் சேர்த்துவிட வேண்டாம். ராகவனுக்கு முகத்தின் அழகு ஒன்றுதான் தெரியும்; அகத்தின் அழகைப்பற்றி அவன் அறிய மாட்டான். உண்மைக் காதல் என்பது இன்னதென்று அவனுக்குத் தெரியவே தெரியாது. ஆக்ரா கோட்டையில் அக்பர் சக்கரவர்த்தியின் அரண்மனையில் முதன் முதலில் பார்த்ததிலிருந்து நான் உன்னைக் காதலித்து வருகிறேன். உன் முகத்தை நான் காதலிக்கவில்லை; உன்னைக் காதலிக்கிறேன்!' என்று ஆவேசமாகப் பேசினேன். தாரிணி சற்று மௌனமாயிருந்தாள். பிறகு, 'சூரியா! உங்களுடைய காதலைப் பற்றி எனக்கு எப்போதும் சந்தேகம் இல்லை. ஆனால் காதல் வேறு; கலியாணம் வேறு. கலியாணம் என்றால் புருஷன் மனைவியின் கரம் பிடிக்க வேண்டும் அல்லவா? பிடிப்பதற்கு கை இல்லாவிட்டால்.....?' என்றாள். நான் குறுக்கிட்டு, 'ராகவனுக்கு அது ஒரு தடையாயிருக்கலாம். கை கோத்துக் கொண்டு 'பார்ட்டி' களுக்குப் போக முடியாததை எண்ணி அவன் கலியாணம் வேண்டாம் என்று சொல்லலாம். ஆனால் என் விஷயத்தில் அது ஒரு தடையாகாது. கரம் பிடிப்பதுதான் கலியாணம் என்று நான் கருதவில்லை, மனம் பிடிப்பதுதான் கலியாணம். நம் இருவருடைய மனமும் ஒத்திருப்பதுபோல் வேறு எந்தத் தம்பதிகளின் மனமும் ஒத்திருக்கப் போவதில்லை.

வேறு என்ன தடை? நீ முடிவு சொல்ல வேண்டியதுதான்; உடனே கலியாணத்துக்குத் தேதி குறிப்பிட்டு விடலாம்!' என்றேன். உணர்ச்சி மிகுதியினால் தொண்டை அடைக்க, ஆனந்த மிகுதியினால் நாத் தழுதழுக்க, தாரிணி, 'சூரியா! உங்களைப் போன்ற உத்தமர் ஒருவர் இந்த உலகத்தில் இருக்கிறார் என்பதை நினைக்கும்போது எனக்கும் இந்த உலகத்தில் உயிரோடிருக்கலாம் என்ற ஆசை உண்டாகிறது. உங்களுடைய உயர்ந்த நோக்கத்தை நான் அறிந்து கொண்டேன். ஆயினும் யோசனை செய்வதற்கு எனக்குச் சில நாள் அவகாசம் கொடுங்கள்!' என்று சொன்னாள். மேலே நான் எழுதியிருப்பதையெல்லாம் இன்னொரு தடவை படித்துப் பார்த்தேன். தாரிணியிடம் நான் கூறிய வார்த்தையெல்லாம் உண்மைதானா என்று சிந்தித்தேன். என் இதயத்தின் ஆழத்தை எட்டிச் சோதனை செய்து பார்த்தேன், சந்தேகமே இல்லை. தாரிணியிடம் நான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான். அவளிடம் நான் கொண்ட காதலுக்கு ஆதி அந்தமில்லை; அழிவில்லை; முடிவில்லை. அது உடம்பைப் பற்றிய காதல் அல்ல? முகத்தையோ நிறத்தையோ பற்றிய காதல் அல்ல; மனதுக்கு மனம் கொள்ளும் காதல் அல்ல, இரண்டு ஆத்மாக்கள் இதயாகாசத்தில் ஒன்று சேரும்போது ஏற்படும் புனிதமான தெய்வீகக் காதல். எங்களுடைய காதலுக்கு ஒப்புமில்லை; உவமையும் கிடையாது. சீதாவின் பேரிலும் முதல் தடவை அவளை நான் பார்த்த நாளிலிருந்து எனக்குப் பாசம் ஏற்பட்டது உண்மைதான். அதற்கும் இதற்கும் எவ்வளவோ வித்தியாசம். சீதாவுக்காக நான் என் உயிரைக் கொடுக்கத் தயாராயிருந்தேன். ஆனால் என் இதயத்தை அவளுக்குக் கொடுக்கத் தயாராயில்லை.

சௌந்தரராகவனிடம் வந்த கோபத்தினால் சில சமயம் சீதாவின் விடுதலைக்கு நான் விசித்திரமான சாதனங்களை எண்ணியதுண்டு. 'விவாகப் பிரிவினை செய்வித்துச் சீதாவை நான் கலியாணம் செய்து கொண்டால் என்ன?' என்று அசட்டு எண்ணம்கூட ஒரு தடவை உண்டாயிற்று. அதை மனம் விட்டு அத்திம்பேரிடங்கூட ஒரு தடவை சொல்லிவிட்டேன். ஆனால் என் மனதில் ஒரு லவலேசமும் சீதா விஷயத்தில் களங்கம் ஏற்பட்டதில்லை. இது சௌந்தரராகவனுக்கும் நன்றாய்த் தெரியும். ஆகையினால்தான் அவனுக்குச் சீதாவும் நானும் நெருங்கிப் பழகுவதில் கோபம் உண்டாவதேயில்லை. தாரிணிக்கும் எனக்கும் சிநேகம் என்பது பற்றித்தான் அவன் குரோதம் கொண்டான். அந்தக் கோபத்தினால் என்னைக் கொன்றுவிடவும், போலீஸாரிடம் என்னைப் பிடித்துக்கொடுத்து விடவும், ராகவன் யத்தனித்தான். அவனுக்கு இப்போது படுதோல்வி தெய்வாதீனமாக நேர்ந்துவிட்டது. உடலழகு ஒன்றையே கருதும் அந்தச் சுயநலம் பிடித்த தூர்த்தன், இனி என்னுடன் போட்டியிட முடியாது. அவனுடைய காதல் எல்லாம் வெறும் பொய் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவன் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். அந்தப் பாமாவையே அவன் கட்டிக்கொண்டு அழட்டும்! தாரிணி இனிமேல் என்னுடையவள்; எனக்கே அவள் முழுதும் உரியவள். என்னிடமிருந்து இனி யாரும் அவளை அபகரிக்க முடியாது. இதை நினைத்தால் எனக்குக் குதூகலமாய்த் தானிருக்கிறது. சீதா இறந்துவிட்டதையும் அவள் தகப்பனார் சுட்டுக் கொண்டு செத்ததையும் நினைக்கும்போது கஷ்டமா யிருந்தாலும், இனித் தாரிணி எனக்கே உரியவள் என்பதை நினைத்தால் உற்சாகமாயிருக்கிறது. கலியாணத்துக்குத் தேதி குறிப்பிட வேண்டும்; காஷ்மீருக்குப் போக ஏற்பாடு செய்ய வேண்டும்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
நாற்பத்திரண்டாம் அத்தியாயம்

லலிதாவின் மன்னி

தேவபட்டணத்துத் தேரோடும் வீதியில் எதிர் எதிராக நின்ற இரு மச்சு வீடுகளின் வாசலிலும் இப்போது போர்டு பலகைகள் தொங்கவில்லை. அட்வகேட் ஆத்மநாதய்யரைப் பின் தொடர்ந்து அவருடைய நண்பர் தாமோதரம்பிள்ளையும் தேவலோக நீதிமன்றத்தில் வழக்காடுவதற்குச் சென்றுவிட்டார். "ஆத்மநாதய்யர், பி.ஏ. பி.எல்." என்ற போர்டு தொங்கிய இடத்தில் சில காலம் "ஏ. பட்டாபிராமன், சேர்மன், முனிசிபல் கௌன்சில்" என்ற போர்டு தொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அதைச் சீக்கிரத்திலேயே எடுத்துவிட வேண்டியதாயிற்று. ஏனெனில், பட்டாபிராமனுக்குப் போட்டியாக நின்ற கள்ள மார்க்கெட் முதலாளி பட்டாபிராமனுடைய தேர்தலில் ஊழல் நடந்ததாகவும் அந்தத் தேர்தல் செல்லுபடியாகாதென்றும் வழக்குத் தொடர்ந்தார். பணத்தின் பலத்தினால் கள்ள மார்க்கெட் ஆசாமியின் பக்கம் தீர்ப்பாயிற்று. பட்டாபிராமனுடைய சேர்மன் பதவி போயிற்று. அப்பீல் பண்ணும்படி சிலரும் மறுபடியும் தேர்தலுக்கு நிற்கும்படி சிலரும் பட்டாபிராமனுக்கு உபதேசித்தார்கள். லலிதா மட்டும், "போதும், போதும், ஒரு தடவை தேர்தலுக்கு நின்று பட்டதெல்லாம் போதும்!" என்று சொன்னாள். அவளுடைய யோசனையை ஏற்றுக்கொண்டு, பட்டாபிராமன் அப்பீல் செய்யவும் மறு தேர்தலுக்கு நிற்கவும் கண்டிப்பாக மறுதளித்து விட்டான். தாமோதரம்பிள்ளையின் மரணத்தறுவாயில் ஊருக்கு வந்து சேர்ந்த அமரநாதன் திரும்பக் கல்கத்தாவுக்குப் போக விரும்பவில்லை. நண்பர்கள் இருவரும் சுதந்திர இந்தியாவின் பொருள் வளத்தைப் பெருக்குவதற்கு ஏதேனும் தொழில் செய்யவேண்டும் என்று யோசனை செய்து கொண்டிருந்தபோது காந்தி மகாத்மா சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி வந்து அவர்களைக் கலக்கத்தில் ஆழ்த்தி விட்டது. நாள்கணக்காக அந்தச் சம்பவத்தைப் பற்றியே அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்களே தவிர, வேறு எதைப் பற்றியும் சிந்தனை செய்ய ஓடவில்லை.

இந்த நிலைமையிலேதான் சீதாவின் மரணத்தைப்பற்றிய செய்தியும் வந்து அவர்களுடைய கலக்கத்தை அதிகமாக்கியது. கல்கத்தா சாலையில் மூர்ச்சையடைந்து கிடந்த சீதாவை எடுத்துச் சென்று உயிரளித்துக் காப்பாற்றியவனான அமரநாத், அவளுக்கு முடிவில் நேர்ந்த கதியை அறிந்து பெரிதும் பரிதாபப்பட்டான். பட்டாபிராமனோ சீதா தன் வீட்டில் தங்கியிருந்தபோது வாழ்க்கை எவ்வளவு குதூகலமாயிருந்தது என்பதையும், உணர்ச்சி வசப்பட்டுத் தான் செய்த சிறு தவறினால் அவளுக்கு நேர்ந்த கஷ்டங்களையும் நினைத்து நினைத்து வருந்தினான். சீதாவிடமிருந்த நல்ல குணங்களையும் துர்க்குணங்களையும் பற்றி அந்த நண்பர்கள் இருவரும் தத்தம் அபிப்பிராயங்களை வெளியிட்டு ஒத்துப் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களுடைய தர்ம பத்தினிகளான லலிதாவும் சித்ராவும் சீதாவிடம் எந்தவிதமான துர்க்குணமும் இருந்ததாக ஒப்புக்கொள்ளவில்லை. லலிதா எல்லாத் தவறுகளையும் தன் பேரிலேயே போட்டுக்கொண்டு பச்சாதாபப்பட்டாள். சீதாவுக்கு நேர்ந்த கஷ்டங்களுக்கெல்லாம் தானே காரணம் என்று சொல்லிச் சொல்லிக் கண்ணீர் விட்டாள். சௌந்தரராகவன் தன்னைப் பார்க்க வந்த இடத்திலேதான் சீதாவைப் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டான்? தான் பட்டிருக்க வேண்டிய கஷ்டங்களையெல்லாம் அவனைக் கலியாணம் செய்து கொண்டு சீதா அல்லவா அனுபவித்தாள்? அப்படிப்பட்டவள் தன்னுடைய சொந்த மனக் கஷ்டங்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இங்கே இருந்த சமயம் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாள்? அவள் இருந்தபோது தன் வீடு எவ்வளவு கலகலப்பாக இருந்தது? வாழ்க்கையே ஒரு புது மெருகு பெற்று ஆனந்த கோலாகலமாக மாறியிருந்ததே! அப்படிப்பட்டவளை அநாவசியமாகச் சந்தேகித்து வீண் பழி சொல்லி நடுராத்திரியில் வீட்டை விட்டு ஓடும்படி செய்தேனே? அந்தப் பாவத்துக்காகக் கடவுள் என்னை என்னமாதிரி தண்டிப்பாரோ தெரியவில்லையே? - இப்படியெல்லாம் ஓயாது புலம்பிய லலிதாவுக்கு அவளுடைய தோழி சித்ரா பலவிதமாக ஆறுதல் சொன்னாள்.

"நீயும் நானும் என்னடி செய்யக் கிடக்கிறது? அவரவர்கள் தலைவிதிப்படியல்லவா எதுவும் நடக்கிறது?" என்றாள் சித்ரா. "அழகாயிருக்கிறது நீ சொல்லுகிறது! எல்லாம் தலைவிதி என்றால் பாவ புண்ணியமே கிடையாதா? காந்தி மகாத்மா இறந்ததும் அவருடைய தலைவிதிதானா? அவரைச் சுட்டுக் கொன்ற மகாபாவியின் பேரில் குற்றம் ஒன்றும் இல்லை என்றுகூடச் சொல்வாயோ?" என்றாள் லலிதா. "எதற்கும் எதற்கும் உவமானம் சொல்கிறாய், லலிதா! காந்தி மகாத்மா இறந்தது அவருடைய தலைவிதி என்றால், அவரைக் கொன்றவனைத் தண்டித்தால் அதுவும் அவன் தலைவிதிதானே? நாம் செய்யும் காரியங்களில் பாவ புண்ணியம் பார்த்துச் சரியான காரியத்தைச் செய்யவேண்டும். அப்புறம் நடக்கிறது அவரவர்களின் தலைவிதிபோல் நடக்கும்!" என்றாள் சித்ரா. "சில பேர் இந்த உலகத்தில் பாவ புண்ணியம் பார்த்து நல்ல காரியங்களையே செய்து வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். வாழ்க்கையெல்லாம் சந்தோஷமே யில்லாமல் கஷ்டப்பட்டு சாகிறார்கள். இது அவர்கள் தலைவிதியா? பகவானுடைய செயலா? உன்னுடைய தத்துவம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை!" என்றாள் லலிதா. "முதலாவது நீ சொல்கிறதே தப்பு. வாழ்க்கையெல்லாம் சந்தோஷமில்லாமல் கஷ்டப்பட்டுச் சாகிறார்கள் என்கிறாய், ஏன் அப்படிச் சாகிறார்கள்? வெளிப்பார்வைக்கு நமக்கு அப்படித் தோன்றலாம்; எல்லாருடைய வாழ்க்கையிலும் சந்தோஷமும் துக்கமும் மாறி மாறித்தான் வருகின்றன!" "இல்லவே இல்லை! சீதாவையே பாரேன்! வாழ்க்கையெல்லாம் அவள் கஷ்டப்பட்டுக் கடைசியில் செத்தும் போனாளே?" "சீதா சந்தோஷமென்பதையே அறியாமல் செத்துப் போனாள் என்றா சொல்லுகிறாய்? சுத்தத் தவறு, லலிதா! நானும் சீதாவுடன் கொஞ்சம் பழகியிருக்கிறேன். அவள் சந்தோஷப்பட்டதும் அதிகம்; துக்கப்பட்டதும் அதிகம். இந்த உலகத்தில் சிலருடைய வாழ்க்கை சந்தோஷமும் இல்லாமல் துக்கமும் இல்லாமல் எப்போதும் சப்புச் சவுக்கென்று இருந்து கழிந்து விடுகிறது. அவர்கள்தான் இந்த உலகத்தில் பாக்கியசாலிகள் என்று என்னால் ஒத்துக்கொள்ள முடியாது.

வங்காளத்து மகாகவி ரவீந்திரநாத் தாகூர் என்ன சொல்கிறார் தெரியுமா? 'ஆண்டவனே? எனக்கு வேறு ஒரு பாக்கியமும் இந்த உலகத்தில் வேண்டாம்; கண்ணீர் பெருக்கி அழும் பாக்கியத்தைக் கொடு!' என்று கடவுளை வரம் கேட்கிறார். துக்கமும் சந்தோஷமும் கலந்த வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை. காவியங்கள், இதிகாசங்கள், கதைகள், - எல்லாவற்றையும் பார்! கதாநாயகர்கள்- கதாநாயகிகளில் கஷ்டப்படாதவர்கள் யார்?" "சீதாவின் வாழ்க்கையும் ஒரு கதையாகத்தான் முடிந்து விட்டது. சித்ரா! உனக்குத் தெரியுமோ என்னமோ? சீதாவுக்கு அந்த நாளிலிருந்தே கதை என்றால் ரொம்பப் பிரியம். ராஜம்பேட்டைக் குளத்தங்கரையில் முன்னிலவு எரிக்கும் இரவுகளில் அவளும் நானும் கதைபேசிக் கழித்த நாட்களை நினைத்தால் எனக்குப் பகீர் என்கிறது. எத்தனை எத்தனை கதைகள் சொல்வாள்? லைலா மஜ்னுன் கதை, ரோமியோ ஜுலியட் கதை, அனார்கலியின் கதை, - தமயந்தி நளன் கதை, சகுந்தலை துஷ்யந்தன் கதை இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டிருப்பாள். கதை சொல்லும் போதெல்லாம் தானே அந்தக் கதாநாயகி என்று நினைத்துக்கொண்டுவிடுவாள். பாவம்! அவளுக்கா இப்படிப்பட்ட கதி வரவேண்டும்? அவள் எத்தனை எத்தனையோ கனவு கண்டாள்! ஒரு கனவும் பலிக்காமல், ஒரு சுகத்தையும் அநுபவிக்காமல் போய் விட்டாளே?" என்று சொல்லிவிட்டு லலிதா 'ஓ'வென்று அழுதாள். சித்ரா அவளைச் சமாதானப்படுத்த முயன்றாள். நல்ல வார்த்தை சொல்லிப் பயன்படாமற் போகவே கோபமாகவும் பேசினாள். கடைசியாக, சீதாவுக்காக இவ்வளவு வருத்தப்பட்டுக் கண்ணீர் விடுகிறாயே? அவளுடைய தமக்கையைப் பற்றிக் கொஞ்சம் அநுதாபங் காட்டக் கூடாதா? செத்துப் போன சீதாவைக் காட்டிலும் ஒரு கண்ணையும் ஒரு கையையும் இழந்து உயிரோடு இருக்கிறாளே, அவளுடைய கதி இன்னும் பரிதாபம் இல்லையா?" என்றாள். லலிதாவின் அழுகையும் கண்ணீரும் நின்றன. "அதை நினைத்தால் ரொம்பப் பரிதாபமாய்த்தானிருக்கிறது. என் மூத்த அத்தங்காளை நான் பார்த்ததேயில்லை. முதன் முதலில் பார்க்கும்போது இப்படிப் பார்க்க வேண்டுமா என்று கஷ்டமாயிருக்கிறது!" என்று சொன்னாள் லலிதா.

"இதிலேகூட உன்னுடைய மனக் கஷ்டத்தையே பார்க்க வேண்டுமா, லலிதா! அடுத்தாற்போல் உன் தமையன் சூரியாவைப் பார்! தீரன் என்றால் அவன் அல்லவா தீரன்? அப்படி அங்கஹீனமானவளைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்ல யாருக்குத் துணிச்சல் வரும்! உன் அகத்துக்காரரும் சரி, என் அகத்துக்காரரும் சரி, பத்துக் காத தூரம் ஓடிப் போவார்கள். சீதாவின் கணவன் இருக்கிறானே, அந்த மகராஜன் அவனைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை! கல்கத்தாவிலே அவன் சுரம் வந்து படுத்தபோது எனக்குக் கொஞ்சம் இரக்கமாயிருந்தது. இப்போது என்ன தோன்றுகிறது, தெரியுமா? அவன் எதற்காகப் பிழைத்தான், கல்கத்தாவிலே செத்துப் போன அத்தனை ஆயிரம் பேரோடு அவனும் தொலைந்து போயிருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது." "அதெல்லாம் சரிதான், சித்ரா! அவர்கள் எல்லாரும் பொல்லாதவர்களாகவே இருக்கட்டும். சூரியா இந்த விஷயத்தில் செய்கிற காரியம் சரியா? எனக்கென்னமோ சரியாகத் தோன்றவில்லை. அப்படியாவது என்ன கலியாணம் வேண்டிக் கிடந்தது! ஒரு கையும் ஒரு கண்ணும் இல்லாதவளைக் கலியாணம் செய்து கொள்ளவாவது? ஊருக்கெல்லாம் பரிகாசமாய்ப் போய்விடும்?" என்றாள் லலிதா. "அது உனக்கும் ரொம்ப அவமானமாகத்தான் இருக்கும்! ஒரு கண்ணும் ஒரு கையும் இல்லாதவளை மன்னி என்று அழைக்க உனக்கு வெட்கமாயிராதா? ஆனால் லலிதா! உன்னை அப்படியெல்லாம் சூரியா அவமானப்படுத்த மாட்டான். இங்கே தாரிணியை அழைத்துக்கொண்டு வரவே மாட்டான். அப்படி வருவதாயிருந்தால் நீ ராஜம்பேட்டைக்குப் புறப்பட்டுப் போய் விடு! வந்தவர்களை நான் நன்றாய்த் திட்டித் திருப்பி அனுப்பி விடுகிறேன். அந்த வெட்கங்கெட்ட மூளிகள் இங்கே எதற்காக வரவேண்டும்?" என்று சித்ரா லலிதாவை ஏசுகிற பாவத்தில் பேசினாள். "அவ்வளவு கொடுமையானவள் அல்ல நான். இருந்தாலும் சூரியாவுக்கு இப்படியா ஒரு கலியாணம் என்று நினைத்தால் வருத்தமாய்த்தானிருக்கிறது. அம்மாவுக்கு இது தெரிந்தால் உயிரையே விட்டு விடுவாள்."

"உயிரை விட்டால் விடட்டுமே! உலகத்தில் எத்தனையோ பேர் செத்துப் போகிறார்கள்! நிமிஷத்துக்கு லட்சம் பேர் சாகிறார்கள்! காந்தி மகானே போய்விட்டார். உன் அம்மா இருந்து என்ன ஆகவேணும்? சூரியாவைப் போன்ற பிள்ளையைப் பெறுவதற்கு உன் அம்மா தபஸ் செய்திருக்க வேண்டும். அதை அவள் தெரிந்து கொள்ளாவிட்டால் யாருடைய தப்பு? நீயும் அவளோடு சேர்ந்து ஏன் அழ வேண்டும்? நானாயிருந்தால் இப்பேர்பட்ட தமையனைப் பெற்றதையெண்ணி இறுமாந்து போவேன். 'என் அண்ணனுக்கு நிகர் இல்லை' என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிப்பேன். எங்கே லலிதா! சூரியாவின் கடிதத்தில் அந்தப் பகுதியை மட்டும் எனக்கு இன்னொரு தடவை வாசித்துக் காட்டடி!" கீழே கிடந்த கடிதத்தை லலிதா எடுத்து ஒரு தடவை மேலெழுந்தவாரியாகப் பார்த்தாள். அவளுடைய கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, கடிதத்தில் பின் வரும் பகுதியைப் படிக்கத் தொடங்கினாள்: "அருமைத் தங்கையே! உனக்கும் சீதாவுக்கும் ஒரே பந்தலில் இரட்டைக் கலியாணம் நடந்ததே ஞாபகமிருக்கிறதா? இது என்ன கேள்வி? உன் கலியாணம் உனக்குக் கட்டாயம் ஞாபகம் இருக்கும். கலியாணத்துக்கு இரண்டு நாளைக்கு முன்னால் நமக்குள்ளே ஒரு விவாதம் நடந்தது. சீதாவும் நீயும் நானும் குளத்தங்கரைப் பங்களாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோதுதான் 'கலியாணத்தின் போது அம்மி மிதிப்பதற்கு முன்னால் அக்கினி வலம் வருகையில் மாப்பிள்ளை மணப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டுமே, - எந்தக் கையினால் எந்தக் கையைப் பிடித்துக் கொள்வது?' என்ற கேள்வி ஏற்பட்டது. மாப்பிள்ளையின் வலது கரத்தினால் மணப்பெண்ணின் இடது கரத்தைப் பிடிப்பதா? அல்லது வலது கரத்தைப் பிடிப்பதாயிருந்தால் இரண்டு பேரும் நடந்து எப்படிப் பிரதட்சணம் வரமுடியும் என்று வெகுநேரம் தர்க்கம் செய்தோம். தலைக்கு ஒரு அபிப்பிராயம் சொன்னோம். கலியாணம் நடந்தபோது அந்த விஷயத்தை நான் கவனிக்கவில்லை; அதைப் பற்றிப் பிறகு பேசவும் இல்லை.

லலிதா! அத்தங்காள் தாரிணியை நான் கலியாணம் செய்து கொள்ளும்போது அந்தக் கஷ்டமான பிரச்னை ஏற்படவே ஏற்படாது. அவளுக்கு இருப்பது ஒரே ஒரு கைதான். அதைத்தான் நான் பிடித்துக்கொண்டாக வேண்டும். இன்னொரு கை இல்லை என்பது பற்றி எனக்கு வருத்தம் கிடையாது. அதை நினைக்கும்போதெல்லாம் நான் பூரித்து மகிழ்வேன். தாரிணி இழந்துவிட்ட அந்த ஒரு கை இருநூறு ஸ்திரீகளைக் காப்பாற்றியது என்பதையும், சீதாவின் குழந்தையைக் காப்பாற்றிய கை அதுதான் என்பதையும் நினைத்து நினைத்துக் கர்வம் அடைவேன். நான் மிகவும் அதிர்ஷ்டக்காரன், இத்தனை நாள் கலியாணம் செய்து கொள்ளாமல் நான் காத்துக்கொண்டிருந்தது வீண் போகவில்லை! இனி என் வாழ்நாளில் என்றென்றைக்கும் ஆனந்தந்தான்!.... லலிதா! தாரிணியின் அழகைப்பற்றி முன் இரண்டொரு தடவை உனக்குச் சொல்லியிருக்கிறேன். ஆனால் முன்னேயெல்லாம் அவளுடைய அழகு மனித உலகத்துக்குரிய அழகாயிருந்தது. இப்போதோ தெய்வீக சௌந்தர்யம் பெற்று விளங்குகிறாள், என் கண்களுக்கு, வேறு யார் என்ன நினைத்தால் அதைப்பற்றி எனக்கு என்ன? யார் என்ன வம்பு பேசினால்தான் எனக்கு என்ன?...." கடிதத்தைப் படிக்கும்போது லலிதாவுக்கு தொண்டையை அடைத்தது. சித்ராவுக்கோ கண்ணில் கண்ணீர் வந்து விட்டது. கொஞ்சம் உணர்ச்சி அடங்கிய பிறகு சித்ரா கூறியதாவது:- "லலிதா! நம்முடைய தேசத்து மகான்கள் 'உலகத்தில் துன்பம் என்பதே இல்லை; துன்பம் என்பது வெறும் மாயைதான்' என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சில மகான்கள், 'துன்பத்திலே தான் உண்மையான இன்பம் இருக்கிறது' என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதன் பொருள் இத்தனை நாளும் எனக்கு விளங்காமலிருந்தது, இன்றைக்குத்தான் விளங்குகிறது. பிறருடைய துன்பத்தைத் துடைப்பதற்காக நாம் கஷ்டப்பட்டோ மானால் அதைப் போன்ற இன்பம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை; மறு உலகத்திலும் கிடையாது. உனக்கு மன்னியாக வரப் போகிறவள் அந்த ஆனந்தத்துக்கு உரியவளாயிருக்கிறாள். அதை அறிந்த அதிர்ஷ்டசாலி உன் தமையன் சூரியா! அவர்கள் இரண்டு பேரையும் மணம் புரிந்த தம்பதிகளாகப் பார்க்க வேண்டும் என்று எனக்கு மிக்க ஆவலாயிருக்கிறது!" என்றாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
நாற்பத்துமூன்றாம் அத்தியாயம்

பாமா விஜயம்

ராஜம்பேட்டை கிராமச்சாலை முன்போலவே இருபுறமும் மரம் அடர்ந்து நிழல் படர்ந்து விளங்கியது. தபால் சாவடியும் பதினைந்து வருஷத்துக்கு முன்னால் அளித்த தோற்றத்துக்கு அதிக மாறுபாடில்லாமல் காட்சி அளித்தது. ரன்னர் தங்கவேலு முன்னைப்போல் அவ்வளவு அவசரப்படாமல் சாவதானமாக நடந்து தபால் கட்டை எடுத்துக்கொண்டு வந்தான். 'ஜிங் ஜிங்' என்ற சதங்கையின் ஒலி சவுக்க காலத்தில் கேட்டது. ராஜம்பேட்டை அக்கிரகாரம் அன்றிருந்த மேனிக்கு அழிவில்லாமல் இருந்தது. உலகமே தலைகீழாகப் புரண்டாலும் நம்முடைய கிராமங்களில் அவ்வளவாக மாறுதலைக் காண முடிவதில்லை. அப்படி மாறுதல் இருந்தால் முன்னே வீடாயிருந்த கட்டிடங்கள் இப்போது குட்டிச்சுவர்களாக மாறியிருக்கலாம். வேறு பிரமாத மாறுதலைப் பார்த்துவிட முடியாது. ராஜம்பேட்டை முன்னைப்போல அவ்வளவு கலகலப்பாயில்லை என்பது மட்டும் உண்மை. ஏனெனில், இப்போது அங்கே பட்டாமணியம் கிட்டாவய்யர் இல்லை. அவர் பார்த்த பரம்பரைக் கிராம முனிசீப் உத்தியோகத்தைச் 'சுண்டு' என்கிற சியாமசுந்தர் பார்த்து வந்தான். சினிமா டைரக்டர் ஆகும் ஆசையையெல்லாம் அவன் விட்டு விட்டான். 'படம் எடுத்தால் சீதாவைக் கதாநாயகியாக வைத்து எடுக்க வேண்டும்; இல்லாவிடில் என்ன பிரயோஜனம்?' என்பது அவன் கருத்து. கொஞ்ச நாள் முன்பு வரையில்கூட அந்த ஆசை அவனுக்குச் சிறிது இருந்தது. சீதா இறந்த செய்தி வந்தபின் அடியோடு போய்விட்டது. பின்னர் நிம்மதியாகக் கிராம முனிசீப் வேலையைப் பார்த்து வந்தான். ஊரில் கலகலப்புக் குறைந்திருந்ததற்கு இன்னொரு காரணம் "என்ன ஓய்?" சீமாச்சுவய்யர் ஊரில் இல்லாதது. அவர் இப்போது சிறைச்சாலையில் இரண்டு வருஷம் கடுங்காவல் அநுபவித்துக் கொண்டிருந்தார். கள்ள மார்க்கெட் கேஸில் அசல் முதலாளி தப்பித்துக் கொண்டு சீமாச்சுவய்யரை மாட்டி வைத்துவிட்டான். அதைப் பற்றி ஊரில் யாரும் அனுதாபப்படவில்லை. நடுவில் பணம் அதிகமாக வந்தபோது சீமாச்சுவய்யர் யாரையும் இலட்சியம் செய்யாமல் அகம்பாவத்துடன் நடந்து கொண்டார். ஆகவே அவர் சிறைப்பட்டபோது கிராமத்தார், "என்ன ஓய்? சீமாச்சு உயிரோடு திரும்பி வருவானா?" என்று கேட்டுக் கொள்வதுடன் திருப்தியடைந்தார்கள்.

கிட்டாவய்யர் வீட்டுக் கூடத்தில் லலிதா உட்கார்ந்து குழந்தை பட்டுவின் தலையை வாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். சரஸ்வதி அம்மாள் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்தாள். குழந்தை பாலசுப்பிரமணியன் ஏதோ வாரப் பத்திரிகையில் வந்திருந்த காந்தி மகான் கதையை எழுத்துக் கூட்டி இரைந்து படித்துக் கொண்டிருந்தான். தபால் ரன்னர் வரும் 'ஜிங் ஜிங்' சத்தம் கேட்டதும் லலிதாவுக்குப் பழைய ஞாபகங்கள் உண்டாகிக் கண்கள் ஈரமாயின. "லலிதா! பட்டுவின் வயதில் நீ தபால் கட்டு வரும் சத்தம் கேட்டதும் எழுந்து தபாலாபீஸுக்கு ஓடுவாயே; ஞாபகமிருக்கிறதா?" என்று சரஸ்வதி அம்மாள் கேட்டாள். "ஞாபகம் இல்லாமல் என்ன? நன்றாய் இருக்கிறது. இப்போது கூடத் தபாலாபீஸுக்குப் போய் ஏதாவது கடிதம் வந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு வரத் தோன்றுகிறது!" என்றாள் லலிதா. "நீ அப்படிப் போனாலும் போவாய்! உன் நெஞ்சுத் தைரியம் யாருக்கு வரும்?" என்றாள் தாயார். அரை மணி நேரத்திற்குப் பிறகு வாசலில் "தபால்!" என்ற சத்தம் கேட்டதும் லலிதா விழுந்தடித்து ஓடினாள். ஒரு கணம் ஒருவேளை தபால்கார பாலகிருஷ்ணனாயிருக்குமோ என்று எண்ணினாள். பார்த்தால், உண்மையிலேயே அந்தப் பழைய பாலகிருஷ்ணன்தான்! "நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்களா, அம்மா! ரொம்ப சந்தோஷம், எனக்கும் டவுன் வாழ்க்கை பிடிக்கவில்லை. ஒரு வழியாக இங்கேயே வந்துவிட்டேன்" என்றான் பாலகிருஷ்ணன். "கொஞ்ச நாளாக உன்னை தேவபட்டணத்தில் காணோமே என்று பார்த்தேன்! குழந்தைகள் சௌக்கியமா?" என்றாள் லலிதா. "கடவுள் புண்ணியத்திலே சௌக்கியந்தான். ஆனால் என்ன சௌக்கியம் வேண்டிக் கிடந்தது? அப்பேர்ப்பட்ட காந்தி மகாத்மாவையே சுட்டுக்கொன்று விட்டார்கள். இனிமேல் யார் சௌக்கியமாயிருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?" என்றான் பாலகிருஷ்ணன்.

பிறகு, "இந்தாருங்கள் தபால்!" என்று ஒரு கடிதத்தை லலிதாவிடம் கொடுத்துவிட்டுப் போனான். லலிதா கடிதத்தைப் பிரித்துப் பார்த்தாள். அவளுடைய கணவனிடமிருந்து வந்திருந்தது. அதில் அவர் குழந்தைகளின் ஷேம லாபங்களை விசாரித்த பிறகு எழுதியிருந்ததாவது:- "ஒரு அதிசயமான சமாசாரம் சொல்லப் போகிறேன். ஆச்சரியப்பட்டு மூர்ச்சையாகி விழுந்து விடாதே! உன் தமையன் சூரியா வந்திருக்கிறான். அவனுடைய மனைவியையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறான். அவனுடைய மனைவியைப் பார்த்ததும் உனக்கு ஒருவேளை ஏமாற்றம் உண்டாகலாம். விஷயம் என்னவென்று கடிதத்தில் எழுத விரும்பவில்லை. நேரிலேயே பார்த்துத் தெரிந்து கொள் மூன்று பேரும் நாளை ரயிலில் புறப்பட்டு அங்கே வருகிறோம்." இதைப் படித்ததும் லலிதா மிக்க கலக்கம் அடைந்தாள். அவள் முக்கியமாக ராஜம்பேட்டைக்கு வந்தது தன் தாயாரிடம் சூரியாவின் கலியாணத்தைப் பற்றிச் சொல்வதற்காகத்தான். ஆனால் இன்றுவரை அவளுக்குத் தைரியம் வரவில்லை. இனிமேல், தள்ளிப்போட முடியாது. அவர்கள் நாளைக்கு வந்துவிடுவார்களே! சரஸ்வதி அம்மாளிடம் லலிதா மாப்பிள்ளையிடமிருந்து கடிதம் வந்தது பற்றி முதலில் சொன்னாள். சூரியாவையும் அவர் அழைத்து வருவது பற்றிப் பிறகு சொன்னாள். சூரியா கலியாணம் செய்து கொண்டு மனைவியையும் தன்னுடன் அழைத்து வருவதைப் பற்றிக் கடைசியாகக் கூறினாள். சரஸ்வதி அம்மாள் வியப்படைந்தாள்; மகிழ்ச்சியடைந்தாள்; பிறகு திடுக்கிட்டுப் போனாள். "கலியாணமா? அது என்ன? நம் ஒருவருக்கும் சொல்லாமலா? இப்படியும் உண்டா? பெண் யாரோ, என்னமோ, தெரியவில்லையே?" என்று புலம்பி அங்கலாய்த்தாள். "அதென்னமோ, போ, அம்மா! நானும் முன்னாலேயே கேள்விப்பட்டேன், உண்மையிராது என்று நினைத்தேன். இப்போது வந்திருக்கும் கடிதத்தைப் பார்த்தால் உண்மை என்றே தோன்றுகிறது" என்றாள்.

"என்னடி உண்மை? நீ என்ன கேள்விப்பட்டாய்?" என்றாள். "சூரியா கலியாணம் செய்து கொண்டிருக்கும் பெண்ணுக்கு ஏதோ அங்கஹீனம் என்று கேள்வி. சிலர் 'ஒரு கண்ணில்லை' என்கிறார்கள். சிலர் 'ஒரு கையில்லை' என்கிறார்கள். சூரியாவின் காரியமே இப்படித்தான். என்னமோ, போ, அம்மா! ரொம்ப விசாரமாயிருக்கிறது!" "இதென்னடி அநியாயம்? இப்படியும் ஒரு பிள்ளை செய்வானா? அது நிஜமாயிருக்குமாடி? நிஜமாயிருந்தால் நாலு பேர் முகத்தில் எப்படி விழிப்பேன்!" என்று சரஸ்வதி அம்மாள் புலம்பினாள். பட்டாபிராமனும், சூரியாவும், சூரியாவின் மனைவியும் ஜல்ஜல் என்று சதங்கை சப்தித்த மாட்டு வண்டியில் வந்து இறங்கினார்கள். லலிதா பரபரப்புடன் ரேழிக்குப் போனாள். தாரிணியைப் பார்ப்பதற்கு அவள் மனது துடிதுடித்தது. எவ்வளவுதான் மனதைத் திடப்படுத்திக் கொண்டிருந்தாலும் சமயத்தில் கேட்கவில்லை. நெஞ்சு படபட என்று அடித்துக் கொண்டது. தாரிணியைப் பார்த்ததும் அம்மா என்ன ரகளை செய்யப் போகிறாளோ என்ற பீதி வேறு இருந்தது. முதலில் பட்டாபியும் சூரியாவும் இறங்கினார்கள், பிறகு ஒரு ஸ்திரீ இறங்கினாள். இது என்ன விந்தை? எதிர்பார்த்தபடி இல்லையே! இரண்டு கையிலும் இரண்டு கைப் பெட்டியுடன் இறங்குகிறாளே? கண்களிலும் ஊனம் இல்லையே? கொஞ்சம் நவநாகரிகத்தில் அதிகம் மூழ்கினவளாகக் காணப்பட்டாள். மற்றபடி அங்கஹீனம் ஒன்றும் தெரியவில்லை. பின்னால் ஒருவேளை தாரிணி இறங்குகிறாளோ என்று பார்த்தாள். அப்புறம் யாரும் இறங்கவில்லை. வந்தவர்களை முகமன் கூறி க்ஷேமம் விசாரித்து உள்ளே அழைத்துப் போனாள். "சூரியா இந்த லேடி யார்? நீ எழுதியிருந்தாயே?...." "நான் எழுதியிருந்தது வேறு, இந்தப் பெண்ணரசிதான் என்னை மணக்க முன்வந்த என் மனைவி திவான் ஆதிவராகாச்சாரியார் மகள்; இவள் பெயர் பாமா. எங்களுக்குக் கலியாணம் ஆகி இரண்டு வாரம் ஆகிறது. 'ஹனிமூன்' வந்திருக்கிறோம்" என்றான் சூரியா. லலிதாவின் மனம் நிம்மதி அடைந்தது. லலிதாவின் தாயாரும் தன் மாட்டுப் பெண் பார்ப்பதற்கு ஒரு மாதிரி பரட்டைத் தலைப் பிசாசு மாதிரி இருந்தாலும் லலிதா சொன்னதுபோல் அங்கஹீனமாயில்லை என்பது குறித்து மனதிற்குள்ளே திருப்தி அடைந்தாள்.

பிறகு லலிதா சூரியாவை தனியாக சந்தித்துப் பேசியபோது அவன் கூறியதாவது:- "உனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தானிருக்கும். எனக்கோ அதைவிட ஏமாற்றமாயிருந்தது. ஆனால் ஏமாற்றியவள் அத்தங்கா தாரிணி அல்ல! சௌந்தரராகவன்தான். அவனுடைய சுபாவத்தை அறிந்திருந்த அனைவரையும் ஏமாற்றிவிட்டான். தாரிணியைத் தான் கலியாணம் செய்து கொண்டே தீருவேன் என்றும், அவளுடைய முகலாவண்யத்துக்காக அவளிடம் தான் பிரியம் வைக்கவில்லை என்றும் சத்தியம் செய்தான். மேலும் சீதாவுக்குத் தாரிணி கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாதென்றும் தன்னிடமும் அதே விஷயத்தைச் சொல்லியிருக்கிறாள் என்றும் வற்புறுத்தினான். தாரிணி அநேக ஆட்சேபங்களைச் சொல்லியும் கேட்கவில்லை. 'டில்லியில் உங்களுடைய உத்தியோக வாழ்க்கைக்கு இடைஞ்சலாயிருக்கும்' என்று தாரிணி சொன்னபோது, உத்தியோகத்தை விட்டுவிட முன்னமே தீர்மானித்து விட்டதாகப் பதில் சொன்னான்! லலிதா! உண்மையில் தாரிணிக்கும் ராகவன் பேரில் இருதய பூர்வமான அன்பு என்று தெரிந்து கொண்டேன். ஆகவே நான் விட்டுக் கொடுத்து அவர்களுடைய திருமணத்தையும் கூட இருந்து நடத்தி வைத்தேன். சௌந்தரராகவன் உண்மையாகவே உத்தியோகத்தை விட்டுவிட்டான். இருவரும் வஸந்தியை அழைத்துக்கொண்டு ரஜினிபூருக்குப் போயிருக்கிறார்கள். ரஜினிபூர் ராஜ்யம் இந்தியாவுடன் சேர்ந்து ஐக்கியமாகிவிட்டாலும், ரஜினிபூர் ராணியம்மாளுக்கு ஏராளமான சொந்த சொத்து இருக்கிறது. தாரிணியின் பேரில் அவளுக்கு மிக்க பிரியம். இரண்டு பேரும் ரஜினிபூருக்கு வந்து பஞ்சாப் அகதிகளுக்கு உதவி செய்து குடியும் குடித்தனமுமாக்க முயலவேண்டும் என்றும், அதற்காகத் தன் சொத்துக்களையெல்லாம் எழுதி வைப்பதாகவும் ரஜினிபூர் ராணியம்மாள் சொன்னாள். அதனால் இருவரும் ரஜினிபூருக்குப் போயிருக்கிறார்கள். குழந்தை வஸந்தியையாவது நான் என்னுடன் ராஜம்பேட்டைக்கு அழைத்துப் போவதாகச் சொன்னேன். அந்தக் குழந்தையும் கண்டிப்பாக வர மறுத்துவிட்டாள்!"

இந்தக் கடைசி வாக்கியங்களை மட்டும் கேட்டுக் கொண்டு வந்த சரஸ்வதி அம்மாள், "ரொம்ப நல்லதாய் போயிற்று. அவளுடைய தாயார் இங்கே படுத்திய பாடெல்லாம் போதாதா பெண் வேறே வந்து கலகம் பண்ண வேண்டுமா?" என்றாள். அம்மாவின் சுபாவம் தெரிந்தவர்களானதால் மற்றவர்கள் சும்மா இருந்துவிட்டார்கள். பிறகு லலிதா, "இந்தப் பெண்ணை எப்படிப் பிடித்துக் கலியாணமும் செய்து கொண்டாய்?" என்று கேட்டாள். "முதலில் இவள் பேரில் எனக்கு மிக்க வெறுப்பு இருந்தது. இவளுடைய குணாதிசயங்களைப் பற்றி மிகவும் தப்பான அபிப்பிராயம் கொண்டிருந்தேன். தாரிணிதான் இவளைப்பற்றி எனக்குச் சொன்னாள். முதன் முதலில் என்னைப் பார்த்ததிலிருந்து இவளுக்கு என் பேரில் பிரியம் என்றும் சொன்னாள். அது மட்டுமல்ல; 1942 - இயக்கத்தின் போது இவள் சர்க்கார் உத்தியோக கோஷ்டியுடன் வெளிப்படையாகப் பழகிக் கொண்டே உள்ளுக்குள் இயக்கத்துக்கு மிக்க உதவி செய்தாளாம். தாரிணியைப் போலீஸார் கைது செய்யாமல் இவள்தான் ரொம்ப நாள் பாதுகாத்து வந்தாளாம். என்னைப் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்புவிப்பதற்கும் இவள்தான் உதவி புரிந்தாளாம். இவ்வளவுக்கும் மேலே, இவள் பஞ்சாபுக்கு முன்னதாகவே போய்ச் சீதாவைக் காப்பாற்றிக் கொண்டு வர முயன்றாளாம். இதையெல்லாம் கேட்டதும் என் மனம் அடியோடு மாறிவிட்டது. பேசிப் பார்த்ததில் என்னுடைய இலட்சியமும் இவளுடைய இலட்சியமும் ஏறக்குறைய ஒன்று என்று தெரிந்தது. இவளுடைய வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒன்றும் முடிவு செய்யாதே, லலிதா! உன் மன்னியுடன் பழகிப் பார்த்து விட்டுப் பிறகு சொல்லு!" வெளியே சென்றிருந்த சியாமசுந்தர் திரும்பிவந்து அண்ணாவையும் மன்னியையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தான். சூரியாவின் கலியாணம் ஆகிவிட்டதால், தன்னுடைய கலியாணத்துக்குத் தடை நீங்கி விட்டதல்லவா? "அண்ணா! ரிடர்ன் டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்தாயா அல்லது கொஞ்சநாள் இங்கே இருப்பதாக உத்தேசமா?" என்று கேட்டான். "நீ எங்களை விரட்டியடித்தாலொழிய ரொம்ப நாள் இங்கே இருப்பதாக உத்தேசம்.

தேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது. காந்தி மகாத்மா இறுதியாக ஆத்மத் தியாகம் செய்து நாட்டில் அமைதியையும் ஢லைநாட்டிவிட்டார். இனிமேல் தேசத்தில் செய்யவேண்டியதெல்லாம் பொருள் உற்பத்தியும் உணவு உற்பத்தியும்தான். முதலில் நம்முடைய சொந்த கிராமத்திலிருந்து ஆரம்பிக்க உத்தேசித்திருக்கிறேன். உழுது பாடுபடுகிறவர்களுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும்..." "இப்போது இங்கேயெல்லாம் அவ்வளவு கிஸான் தொந்தரவு இல்லை. கிளர்ச்சிக்கு தலைமை வகித்தவன் கிஸான் சங்கத்தின் பணம் ஐயாயிரத்தைச் சூறையிட்டுக் கொண்டுபோய் விட்டான். அதிலிருந்து இயக்கம் படுத்துவிட்டது. இனிமேல், நீ ஆரம்பித்தால்தான் உண்டு!" "கிஸான் இயக்கம் இல்லை என்று திருப்திப்படுவதில் பயனில்லை, சுண்டு! உழவர்கள் மனத்திருப்தியும் உற்சாகமும் அடைய வேண்டும், தாங்கள் உற்பத்தி செய்வதில் தங்களுக்கு நியாயமான பங்கு கிடைக்கிறது என்று அவர்கள் உணர வேண்டும். இல்லாவிட்டால் என்றைக்கிருந்தாலும் கலகமும் குழப்பமும்தான். உணவு உற்பத்தியும் தடைப்படும். ஆகையால் முதலில் உழைப்பாளிகளைச் சரிக்கட்டிக்கொள்ளப் போகிறேன். பிறகு விவசாயத்தில் நவீன முறைகளைக் கையாண்டு காட்டப் போகிறேன். என்னுடைய மனைவி பாமாவும் எனக்கு உதவி செய்வதாகச் சொல்லுகிறாள். நீ என்ன சொல்லுகிறாய், சுண்டு?" "சொல்லுவதென்ன அண்ணா? நம்முடைய நிலம் முழுவதையும் பிரித்து, உழவர்களுக்குக் கொடுத்துவிட்டாலும் எனக்குச் சம்மதந்தான். நீ ஊர் ஊராக அலையாமல் இந்த ஊரிலேயே இருந்தால் போதும்! நான் எங்கேயாவது போய் ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்வேன்!" என்றான் சுண்டு. "அப்படி நிலத்தைப் பிரித்துக் கொடுக்கவேண்டிய காலமும் வரும். அதற்கும் நாம் தயாராகத்தானிருக்கவேண்டும். வேறு வேறு தொழில்கள் செய்து பிழைக்க இப்போதிருந்தே நாம் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்!" என்றான் சூரியா. சுண்டு, 'சினிமா டைரக்ஷன் வேலை இருக்கவே இருக்கிறது' என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.

அவர்களுடைய தாயார் சரஸ்வதி அம்மாள் அங்கு வந்து, "நான் கண் மூடும் வரையில் பொறுத்திருங்கள்; அப்புறம் எது வேணுமானாலும் செய்யுங்கள்" என்றாள். "நாங்கள் காத்திருக்கலாம், அம்மா! ஆனால் பூகம்பமும் புயலும் எரிமலையும் பிரளயமும் காத்திருக்குமா?" என்றான் சூரியா. லலிதா, "பூகம்பம், பிரளயம் என்றெல்லாம் நீ சொல்லும் போது, அத்தையும் சீதாவும் அடிக்கடி 'காதில் அலை ஓசை கேட்கிறது' என்று சொல்லிக்கொண்டிருந்தது ஞாபகம் வருகிறது. அவர்களுக்கு என்ன சித்தப் பிரமையா அல்லது அவர்களுடைய காதில் ஏதாவது கோளாறா?" என்று கேட்டாள். "பிரமையா, காதில் ஏதேனும் கோளாறா என்று எனக்குத் தெரியாது; அல்லது ஏதேனும் ஒரு தெய்வீகச் சக்தியினால், வரப்போகும் பயங்கர விபத்துக்களின் அறிகுறி அவர்களுடைய மனசில் தோன்றியதா என்றும் தெரியாது. பஞ்சாபிலிருந்து தப்பி ஓடிவந்து நதியில் முழுகியபோது சீதாவின் காது அடியோடு செவிடாகி ஒன்றுமே கேட்காமல் போய்விட்டது. உரத்த பயங்கரமான அலை ஓசை போன்ற சத்தம் மட்டும் ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்ததாம். ஆனால் காந்திஜியின் புனித உடல் தகனமான அன்று சீதாவின் காது கேட்கத் தொடங்கியது. 'ஹரி! மக்களின் துன்பத்தைப் போக்குவாயாக' என்ற மகாத்மாவின் மனதுக்கு உகந்த கீதந்தான் முதலில் அவள் காதில் கேட்டதாம். இது ஒரு சுப சூசகம் என்று எனக்குத் தோன்றுகிறது. மகாத்மாவின் மகா தியாகத்துக்குப் பிறகு இந்தப் பெரிய தேசத்துக்குப் பெரும் விபத்து ஒன்றும் கிடையாது! இனிமேல் சுபிட்சமும் முன்னேற்றமுந்தான்!" என்றான் சூரியா. அந்தத் தேசபக்தத் தியாகியின் விருப்பம் நிறைவேறுமாக!


கல்கியின் அலை ஒசை (கடைசி பாகம்-4 : 'பிரளயம்') முற்றிற்று
 
Top Bottom