Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கல்கியின் அலை ஒசை

முப்பத்து ஒன்றாம் அத்தியாயம்

பிழைத்த அகதி

குளிர் என்றால் இன்னதென்பதை அறிய வேண்டுமானால் டில்லியில் குளிர்காலத்தில் வசிக்க வேண்டும். கனமான கம்பளிச் சட்டைகளுக்குள்ளும் பஞ்சடைத்த ரஜாய் மெத்தைகளுக்குள்ளும் அந்தக் குளிர் புகுந்து, தோல், சதை, இரத்தம் இவற்றை ஊடுருவிக் கொண்டு சென்று எலும்புக்கு உட்புறத்திலும் புகுந்து பனிக்கட்டியைப்போல் சில்லிடச் செய்யும் சக்தியுடையது. 1948-ம் வருஷம் ஜனவரி மாதத்தில் டில்லியில் வழக்கத்தைக் காட்டிலும் அதிகக் குளிராயிருந்தது. நாட்டை விட்டு, ஊரை விட்டு வீட்டை விட்டு, உற்றார் உறவினரை விட்டு ஓடிவந்த இரண்டு லட்சம் அகதிகள் டில்லி மாநகரின் வீதிகளிலும் சுற்றுப்புறங்களிலும் குளிரில் விறைத்துக் கொண்டு கிடந்தார்கள். அவர்கள் உடம்பு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்ததே தவிர உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அகதியின் இருதயத்திலும் கோபத் தீ கொழுந்து விட்டெரிந்தது. அந்தத் தீ டில்லி நகரிலுள்ள பத்து லட்சம் ஜனங்களின் இருதயத்தையும் பற்றி எரித்துக் கொண்டிருந்தது. அந்தக் கோபத்தீயை அணைத்துச் சாந்தம் உண்டுபண்ண ஒரு மகான் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார். மாலை ஏழு மணிக்கு ஜந்தர் மந்தர் சாலையில் ஒரு மோட்டார் வண்டி மூடுபனிப் படலத்தைக் கிழித்துக்கொண்டு விரைந்து சென்றது. சாலையின் வண்டிப் போக்கு வரவோ மனுஷர்களின் நடமாட்டமோ அதிகம் இல்லையாதலால் மோட்டார் ஓட்டுவதில் ஜாக்கிரதை தேவையாயிருக்கவில்லை. ஆனால் இது என்ன? திடீரென்று ஒருவன் குறுக்கே வந்து விழுகிறானே? கடவுளே! பலமாகப் 'பிரேக்'கைப் போட்டதில் 'கார்' 'கர்புர்ர்' என்ற சத்தத்துடன் மோட்டார் நின்று ஒரு குலுங்குக் குலுங்கிற்று. அந்த மனிதன் ஒரு மயிரிழையில் தப்பினான்! அடப்பாவி! சாலை ஓரத்திலுள்ள நடைபாதையில் நடந்து போகக்கூடாதோ! பஞ்சாபிலிருந்து வந்து குவிந்திருக்கும் அகதிகளில் ஒருவனாயிருக்கவேண்டும். வேணுமென்று உயிரைப் போக்கிக் கொள்வதற்காக வந்து விழுகிறான் போலிருக்கிறது.

நின்ற மோட்டார் வண்டியிலிருந்து இருவர் இறங்கினார்கள்; ஒரு புருஷன்; ஒரு ஸ்திரீ. அவர்கள் சௌந்தரராகவனும் பாமாவுந்தான். விழுந்தவனுக்கு ஏதாவது காயம் பட்டிருக்கிறதா என்று பார்ப்பதற்காக அவர்கள் முன்னால் சென்றார்கள். அதே சமயத்தில் கீழே விழுந்த மனிதன் எழுந்து நின்றான். அவன் உடையினாலும் தோற்றத்தினாலும் ஒரு பஞ்சாப் அகதியைப் போலவே காணப்பட்டான். ஆயினும் அவன் முகத்தின் தோற்றம் அவன் யார் என்பதை வெளிப்படுத்திவிட்டது. "அடே! இது என்ன கூத்து? சூரியா! நீ எப்படி இங்கே வந்து முளைத்தாய்? யாரோ பஞ்சாப் அகதி தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தான் என்றல்லவா நினைத்தேன்?" என்றான் சௌந்தரராகவன். ராகவனையும் பாமாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த சூரியா பதில் சொல்லலாமா, வேண்டாமா என்று தயங்கினது போலக் காணப்பட்டது. பிறகு மனதில் அவன் ஒரு முடிவு செய்து கொண்டது அவனுடைய முகத்தில் பிரதிபலித்தது. "நீங்கள் நினைத்ததில் பாதி சரிதான், மிஸ்டர் ராகவன்! நானும் ஒரு அகதிதான். ஆனால் நான் உயிரை விடுவதற்கு முயற்சி செய்யவில்லை. என் உயிரை வைத்துக் கொண்டிருப்பது இன்னும் கொஞ்ச காலத்துக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. இந்த மட்டும் என்பேரில் உங்கள் வண்டியை ஏற்றாமல்விட்டீர்களே? அதற்காக மிக்க வந்தனம்!" என்றான் சூரியா. "அதற்காக வந்தனம் தேவையில்லை. இந்த மோட்டாரின் துரிதமான 'பிரேக்'குக் குத்தான் வந்தனம் செலுத்த வேண்டும். பரிகாசப் பேச்சு இருக்கட்டும், சூரியா! இப்போது நீ எங்கே போய்க்கொண்டி ருக்கிறாய்? இல்லாவிட்டால் என்னோடு கொஞ்சம் வந்து விட்டுப் போகலாமே? உன்னிடம் பல விஷயங்கள் கேட்க வேண்டும்; பல விஷயங்கள் சொல்லவேண்டும்!" என்றான் ராகவன். "எனக்கு அவசர வேலை இருக்கத்தான் இருக்கிறது. ஆனாலும் அரை மணி நேரம் பின்னால் போவதால் பாதகமில்லை" என்றான் சூரியா. அவனுக்கும் சௌந்தரராகவனிடம் பல விஷயங்கள் கேட்கவேண்டியிருந்தது; சொல்ல வேண்டியிருந்தது.

சௌந்தரராகவனுடைய பழைய வீட்டு வாசலில் வண்டி நின்றது. பாமா வண்டியிலிருந்து இறங்காமல் விடைபெற்றுக் கொண்டாள். மற்ற இருவரும் இறங்கினார்கள். வீட்டுக்குள்ளே நுழைந்தபோது சூரியாவின் உள்ளம் பதைபதைத்தது. முன்னே அந்த வீட்டுக்குள் பிரவேசித்தபோதெல்லாம் சீதா இருந்து தன்னை வரவேற்றாள். ஒருதடவை துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளத் தயாராயிருந்த சீதாவைச் சூரியா காப்பாற்றினான். அந்தப் பழைய ஞாபகங்கள் எல்லாம் அணை உடைந்த வெள்ளம் போல் அவன் மனதில் புகுந்து கொந்தளிப்பை உண்டாக்கின. "சூரியா! இந்த வீடு எவ்வளவு சூனியமாயிருக்கிறது, பார்!" என்று ராகவன் கூறியபோது சூரியாவுக்கு அழுகையே வந்து விட்டது, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். "உங்களுடைய உத்தியோகம் மறுபடியும் கிடைத்து விட்டதா?" என்று சூரியா கேட்டான். "ஆமாம்; கிடைத்துவிட்டது. இல்லாவிட்டால், இந்த வீடு கிடைத்திருக்குமா? உத்தியோகம் கிடைத்த பிறகுகூட இந்த வீட்டைச் சம்பாதிப்பதற்குப் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. இதிலே ஒரு பஞ்சாபி வந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினேன். ஆனாலும் இந்தப் பஞ்சாபிகளைப்போல் கோழைத் தடியர்களை நான் பார்த்ததேயில்லை. பஞ்சாபியர் எல்லோரும் வீரர்கள் என்று ஒரு காலத்தில் எண்ணிக் கொண்டிருந்தேன். சுத்தப் பிசகு! இவர்கள் சென்ற வருஷம் ஆகஸ்டு மாதத்தில் மேற்குப் பஞ்சாபிலிருந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தார்களே, அந்தக் காட்சியை நீ பார்த்திருந்தாயானால்....." "நீங்கள் அதைப் பார்த்தீர்களா?" என்று சூரியா கேட்டான். "ஆமாம், பார்த்தேன்." "அதெப்படி? நீங்கள்தான் போன ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி கல்கத்தாவுக்குப் போயிருந்தீர்களே?" என்றான் சூரியா. "ஓகோ! நினைவு வருகிறது, நீ அப்போது இங்கேதான் இருந்தாயல்லவா? உன்னிடம்கூட நான் கல்கத்தா போகிறது பற்றிச் சொன்னேனே! சூரியா! அதுமுதல் நீ இங்கேதான் இருக்கிறாயா? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று ராகவன் கேட்டான்.

"என்னத்தைச் செய்கிறது? அங்குமிங்கும் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறேன்" என்றான் சூரியா. "அங்குமிங்கும் என்றால்....." "இந்த அகதி முகாம்களில்தான், ஏதாவது என்னாலான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறேன்." உடனே சௌந்தரராகவன் மிக்க ஆவலுடன், "சூரியா! எந்த அகதி முகாமிலாவது நமக்குத் தெரிந்தவர்கள் யாரையாவது பார்த்தாயா?" என்று கேட்டான். "நமக்குத் தெரிந்தவர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்?" "தாரிணியை அல்லது வஸந்தியைத்தான்." "இல்லை, மிஸ்டர் ராகவன்! அவர்களைப்பற்றி நான் உங்களைக் கேட்கலாம் என்றல்லவா நினைத்துக் கொண்டு வந்தேன்." "இவ்வளவுதானா?" என்று ராகவன் பெருமூச்சு விட்டான். "அவர்களைப்பற்றி உங்களுக்கு ஒன்றுமே தகவல் கிடைக்க வில்லையா?" என்று சூரியா கேட்டான். "அப்படியும் சொல்வதற்கில்லை, இரண்டு மாதத்துக்கு முன்னால் ஒரு அதிசயமான கடிதம் வந்தது. அது தாரிணியின் கையெழுத்தில் இருந்தது. தானும் குழந்தை வஸந்தியும் பத்திரமாக இருப்பதாகவும் கூடிய சீக்கிரம் வந்து சந்திப்பதாகவும் எழுதியிருந்தது. அதில் வேடிக்கை என்னவென்றால் கடிதம் சீதா பெயருக்கு எழுதப்பட்டி ருந்தது. அதிலிருந்து சீதாவின் கதி தாரிணிக்குத் தெரியாது என்று அறிந்து கொண்டேன்." "சீதாவின் கதி என்ன?" என்று சூரியா கேட்டான்.

அவன் முகம் அப்போது ஒரு பெரிய ஆச்சரியக் குறியாக நீண்டது. "அது ஒரு பெரிய சோகக்கதை, சூரியா! உலக வாழ்க்கையில் என்னைப்போல் துரதிர்ஷ்டங்களுக்கு உள்ளானவர்கள் யாருமே இல்லை. வெண்ணெய் திரண்டு வரும் சமயத்தில் தாழி உடைந்ததுபோல் பல சம்பவங்கள் என்னுடைய வாழ்க்கையிலேயே நடந்துவிட்டன. அதிலும் கடைசியாகச் சீதாவை நான் இழந்ததைப் போன்ற துரதிர்ஷ்டம் வேறு ஒன்றுமே இல்லை. ஆகா! பஞ்சாபில் ஹௌஷங்காபாத்தில் ஒரு வருஷ காலம் நாங்கள் எவ்வளவு ஆனந்தமாக வாழ்க்கை நடத்திக்கொண் டிருந்தோம் தெரியுமா? அது கடவுளுக்கே பொறுக்க வில்லை!..." "கடவுளை ஏன் இழுக்கிறீர்கள், ராகவன்! கடவுள் என்ன செய்வார்? என் தகப்பனார் கிட்டாவய்யரை உங்களுக்குத் தெரியுமல்லவா? அவர் மூன்று பிள்ளைகளைப் பெற்று வளர்த்துப் பிறகு 'உங்கள் இஷ்டம்போல வாழ்க்கை நடத்துங்கள்' என்று தண்ணீரைத் தெளித்து விட்டுவிட்டார். அது மாதிரிதான் கடவுளும் செய்திருப்பார் என்பது என் நம்பிக்கை. இந்த உலகத்தையும் மனிதர்களையும் கடவுள் படைத்துவிட்டு 'உலகத்தைச் சொர்க்கமாக்குவதோ நரகமாக்கு வதோ உங்கள் இஷ்டம்!' என்று மனிதர்களுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்து விட்டிருக்க வேண்டும்! ஆகையால் உலகத்தில் நடக்கும் காரியங்களுக்குக் கடவுளைப் பொறுப்பாக்குவது நியாயமல்ல!... போகட்டும் சீதாவைப் பற்றிச் சொல்லுங்கள்!" என்றான் சூரியா. "ஆகஸ்டு 14இல் உன்னை நான் இந்தப் புது டில்லியிலே பார்த்துக் 'கல்கத்தா போகிறேன்' என்று சொன்னேன் அல்லவா? அதிலிருந்து ஆரம்பித்துச் சொல்கிறேன்" என்றான் ராகவன்.
 
முப்பத்து இரண்டாம் அத்தியாயம்

ராகவன் துயரம்

கல்கத்தாவுக்குச் சௌந்தரராகவன் போன அன்றைக்கு அங்கே சுதந்திரத் திருநாள் குதூகலமாகக் கொண்டாடப் படுவதைக் கண்டான். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கட்டித் தழுவிக் கொள்வதைப் பார்த்தான். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஏகோபித்து ஒரே குரலில், "ஜே ஹிந்த்" என்றும், "வந்தே மாதரம்" என்றும், "ஹிந்து முஸ்லிம் ஏக் ஹோ!" என்றும் கோஷ மிடுவதைக் கேட்டான். சென்ற வருஷத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் கொன்று இரத்த வெள்ளம் பெருகிய அதே கல்கத்தாவில்தானா இதெல்லாம் நடைபெறுகிறது என்று அதிசயித்தான். இனி இந்தியாவுக்கு அதிர்ஷ்ட காலந்தான் என்று தீர்மானித்துக் கொண்டான். அமரநாதனின் வீட்டில் சென்ற வருஷம் விட்டுவிட்டுப்போன தன் உத்தியோக சம்பந்தமான தஸ்தாவேஜிகளை வாங்கிக்கொண்டு புறப்பட்டான். திரும்ப டில்லிக்கு வந்தபோது பஞ்சாப்பில் தீப்பிடித்து எரியும் விஷயம் தெரியவந்தது. ஸ்ரீ மதி பாமா அவனைத் தேடிக் கண்டுபிடித்துப் பஞ்சாப்பில் நடப்பதைப் பற்றியெல்லாம் சொன்னாள். அத்துடன் தான் ஹௌஷங்காபாத் சென்றிருந்ததையும், தன்னுடன் வந்து விடும்படி சீதாவை அழைத்ததையும், அவள் வர மறுத்ததையும் பற்றிக் கூறினாள். சௌந்தரராகவனுக்குச் சீதாவின் பேரில் சிறிது கோபமாகத்தான் இருந்தது. 'பாமாவுடன் அவள் புறப்பட்டு வந்திருந்தால் எவ்வளவு சௌகரியமாகப் போயிருக்கும்?" என்று எண்ணினான். ஆனாலும் அதைப்பற்றி நினைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. எப்படியாவது சீதாவையும் குழந்தை வஸந்தியையும் காப்பாற்றியாக வேண்டும். புலியின் குகைக்குள் நுழைவது போலவும், தீப்பிடித்து எரியும் பஞ்சாலைக்குள் பிரவேசிப்பது போலவும், பாம்புப் புற்றுக்குள் கையை விடுவது போலவும் பஞ்சாப்புக்குள் சென்றாக வேண்டும்.

பாமாவின் தைரியமும் சாமர்த்தியமும் பலருடன் சரளமாகப் பழகும் இயல்பும் இச்சமயம் ராகவனுக்கு மிக்க உதவியாயிருந்தன. பாமாவின் பேரில் அவனுக்கு ஏற்கனவே இருந்த அருவருப்பெல்லாம் இப்போது மாறிவிட்டது. பெண்கள் என்றால் இப்படித்தான் தைரியமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. இரண்டு பேரும் ஆகாச விமானத்தில் இடம் பிடித்துக் கொண்டு லாகூர் போய்ச் சேர்ந்தார்கள். நல்ல வேளையாக லாகூரில் இன்னும் அவர்களுடைய கம்பெனியின் கிளை வேலை செய்து கொண்டிருந்தது. கம்பெனி உத்தியோகஸ்தன் என்ற முறையில் சௌந்தரராகவன் லாகூருக்குப் பிரயாண அநுமதிச்சீட்டுப் பெறுவது சாத்தியமாயிற்று. லாகூரில் ஒரு பகுதி பற்றி எரிந்து கொண்டிருந்தது. தெருக்கள் எல்லாம் குத்தும் கொலையும் பிணக்காடுமாயிருந்தன. பஞ்சாப்பின் உள் பிரதேசங்களில் நிலைமை இன்னும் பயங்கரம் என்று சொன்னார்கள். அதிர்ஷ்டவசமாகச் சௌந்தரராகவனையும் பாமாவையும் நடை உடை பாவனைகளைக் கொண்டு ஹிந்து மதத்தினர் என்று உடனே தெரிந்து கொள்ளுதல் கஷ்டமாயிருந்தது. ஆங்கிலோ இந்தியர்கள் என்றோ, பார்ஸிகள் என்றோ அவர்களைக் கருதும்படியிருந்தது. ஆகையால் உள் நாட்டில் அவர்கள் பிரயாணம் செய்வதில் அவ்வளவு அபாயம் இல்லை என்பதாகத் தெரிந்து கொண்டார்கள். ஆங்கிலேய உத்தியோகஸ்தர்களின் தயவினால் ஒரு ஜீப் வண்டி சம்பாதித்துக் கொண்டு பிரயாணமானார்கள்; வழியெல்லாம் அவர்கள் பார்த்த காட்சிகள் அவர்களுக்குச் சீதாவின் கதியைப் பற்றிய கவலையையும் பயத்தையும் உண்டாக்கின. ஆயினும் எப்படியோ கடைசியில் ஹௌஷங்காபாத் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் போய்ச் சேர்ந்த சமயம் அந்த ஊரில் படுகொலைக்குத் தப்பிப் பிழைத்தவர்கள் எல்லாரையும் ஓரிடத்தில் சேர்த்து வைக்கப் பட்டிருந்தது. பாதுகாப்புக்குச் சீக்கிய சோல்ஜர்கள் வந்ததும் தப்பிப் பிழைத்தவர்களின் பிரயாணம் தொடங்குவதாயிருந்தது. அதிகாரிகளின் அநுமதியுடன் சௌந்தரராகவனும் பாமாவும் அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து தேடித் தேடிப் பார்த்தார்கள்.

சீதாவையாவது குழந்தையையாவது காணவில்லை. பிறகு துணிச்சலாக ஊருக்குள்ளேயே புகுந்தார்கள். சௌந்தர ராகவன் குடியிருந்த வீட்டை நோக்கிச் சென்றார்கள். வீடு இருந்த இடத்தில் இடிந்து கரியுண்ட சில குட்டிச்சுவர்களும் கல்லும் கரியும் சாம்பலும் கலந்த கும்பல்களும் கிடந்தன! சில இடங்களிலிருந்து இன்னும் இலேசாகப் புகை வந்து கொண்டிருந்தது! ராகவன் அவனுடைய வாழ்நாளிலே என்றும் இல்லாத விதமாக அன்றைக்கு அங்கேயே உட்கார்ந்து விம்மி விம்மி அழுதான். பாமாவும் அவனுடன் சேர்ந்து 'ஓ'வென்று கதறினாள். இதற்குள்ளே அந்த வேடிக்கையைப் பார்ப்பதற்கு ஜனக்கூட்டம் சேரத் தொடங்கியது. பின்னோடு வந்திருந்து போலீஸ் அதிகாரி அவர்களை அங்கிருந்து புறப்படும்படி வற்புறுத்தினார். கிளம்புகிற சமயத்தில் ஒரு பையன் அவர்களை நெருங்கி வந்தான். அவனை முன்னர் பார்த்திருந்த ஞாபகம் ராகவனுக்கு இருந்தது. அந்த ஊர் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் கோவேறு கழுதை வண்டியுடன் அவன் ராகவனைப் பார்த்து, "சாகிப்! ஒரு சமாசாரம் சொல்லவேண்டும்!" என்றான். அவனை ஜீப் வண்டியில் ஏறிக்கொள்ள சொன்னான் ராகவன். வண்டி புறப்பட்ட பிறகு "என்ன விஷயம்?" என்று கேட்டான். அந்த வீட்டிலிருந்த அம்மாள் சாகவில்லையென்றும் அவளை ஒரு முஸ்லிம் கிழவர் அழைத்துக்கொண்டு போனதாகவும் தன்னுடைய வண்டியில் ஏறிக்கொண்டுதான் அவர்கள் போனதாகவும் பையன் கூறினான். குழந்தையைப் பற்றி யாதொரு தகவலும் தெரியாது என்று சொன்னான். இரவெல்லாம் அவர்கள் பிரயாணம் செய்து விடியும் சமயத்தில் ஒரு பாறைக்குப் பின்னால் தங்கினார்கள் என்பதையும் சொல்லி அந்த இடத்தைக் காட்ட முடியும் என்று கூறினான். அந்தப் பையனையும் ஜீப் வண்டியில் அழைத்துக்கொண்டு போனார்கள். பையன் காட்டிய இடத்தில் கட்டை வண்டியின் சக்கரச் சுவடுகள் தெரிந்தன. அது மட்டுமல்லாமல் சீதா வழக்கமாக அணியும் கண்ணாடி வளையல் ஒன்று அங்கே உடைந்து கிடந்தது. அதைப் பார்த்ததும் ராகவனுடைய துயரம் பன்மடங்கு ஆயிற்று.

துயரம் விரைவில் கோபமாக மாறியது. யாரோ ஒரு முஸ்லிம் கிழவன் சீதாவைக் கொண்டுபோய் விட்டதாக எண்ணினான். அவளை எங்கே கொண்டு போய் விற்கப் போகிறானோ, அல்லது என்ன செய்யப் போகிறானோ? அதைக் காட்டிலும் சீதா செத்துப் போயிருந்தால், எரிந்து போன வீட்டிலேயே இருந்து மாண்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்குமே! சீதாவுக்கு நேரக்கூடிய கதியை நினைக்க நினைக்க ராகவனுக்குக் கோபம் பொங்கி வந்தது. இதற்கு யார் பேரிலாவது பழிக்குபழி வாங்கவேண்டும் என்று ஆத்திரம் பொங்கியது. பையனை இறக்கி விட்டுவிட்டு ராகவனும் பாமாவும் ஜீப் வண்டியை ஓட்டிக்கொண்டு விரைந்து சென்றார்கள். வழியில் எங்கேயாவது ஒரு முஸ்லிம் தனியே போவதைக் கண்டால் அவனை ராகவன் கைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுப் போனான். இதைப் பாமா தடுக்கப் பார்த்தும் பயன்படவில்லை. வழியில் ஒரு ஊரில் அவர்கள் இராத்திரி தங்கும்படி நேர்ந்தது தங்கிய வீடு ஒரு பிரபல ஹிந்து வக்கீலின் வீடு. ஏற்கெனவே கம்பெனி உத்தியோகம் சம்பந்தமாக அவருடன் சௌந்தரராகவனுக்குப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அந்த ஊரில் ஹிந்துக்கள் அதிகமாதலால் அதுவரை அபாயம் ஏற்படவில்லை. ஆனால் எந்த நிமிஷம் அபாயம் வருமோ என்று எதிர்பார்த்துத் தயாராயிருந்தார்கள். ராகவன் அவருடைய வீட்டில் தங்கிய இரவு ஒரு செய்தி வந்தது. ஒரு ஹிந்துப் பெண்ணுக்கு முஸ்லிம் ஸ்திரீகள் அணியும் பர்தா உடையைப் போட்டு ஒரு முஸ்லிம் கிழவன் ஜீப் வண்டியில் வைத்து அழைத்துப் போகிறான் என்பது அந்தச் செய்தி. சுற்றுப்புறங்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக அவர்கள் வைத்திருந்த துப்பறியும் ஒற்றர்கள் இந்தச் செய்தியைக் கொண்டு வந்தார்கள். இதைக் கேட்டதும் சௌந்தரராகவனுக்கு ஒருவேளை அந்தப் பெண் சீதாவாயிருக்கலாம் என்ற சந்தேகம் உதித்தது.

இல்லாவிட்டால்தான் என்ன? ஒரு ஹிந்து ஸ்திரீக்கு அபாயம் நேர்ந்திருக்கிறது என்றால், அதைத் தடுக்காமல் தான் உயிர் வாழ்ந் திருப்பதில் என்ன பிரயோஜனம்? பழைய காலத்து ராஜபுத்திர வீரர்கள் தங்களுடைய குலப் பெண்களின் மானத்தைக் காப்பாற்றுவதற்காகச் செய்த வீர சாகஸச் செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் ராகவனுக்கு அப்போது நினைவு வந்தது. உடனே அந்த ஜீப் வண்டி எந்தச் சாலையில் போகிறது என்று தெரிந்து கொண்டு அதே சாலையில் சௌந்தரராகவன் தன் வண்டியையும் விட்டான். வழியில் பல தடங்கல்கள் நேர்ந்தன. ஆயினும் முன்னால் போன வண்டியை விட்டுவிடாமல் தொடர்ந்து போனான். ஒரு இடத்தில் முன் வண்டி தப்பிப் போய் விட்டதாகவே தோன்றியது. பிறகு அது பெரிய சாலையிலிருந்து, பிரிந்து குறுக்குச் சாலையில் திரும்பியிருக்க வேண்டும் என்று ஊகித்து அதே குறுக்குச் சாலையில் தானும் திரும்பினான். சிறிது நேரத்துக்கெல்லாம் 'சேனாப்' நதியின் கரையை அடைந்தான். அங்கே ஒரு படகு ஏறக்குறைய நடு ஆற்றில் போய்க் கொண்டிருந்தது. அதில் ஒரு முஸ்லிம் கிழவனும் ஒரு ஹிந்து ஸ்திரீயும் இருப்பதை ராகவன் பார்த்து விட்டான். அதற்கு மேல் பார்ப்பதற்கோ யோசிப்பதற்கோ என்ன இருக்கிறது? வேறு எந்த விதத்திலும் அந்தப் படகைப் பிடிக்கவோ தடுக்கவோ முடியாது. துப்பாக்கியை எடுத்துக் கிழவனைக் குறி பார்த்துச் சுட்டான். குறி தவறாமல் குண்டு பட்டது. கிழவன் படகிலிருந்து சாய்ந்து தண்ணீரில் விழுந்தான். அதற்குப் பிறகு நடந்ததை ராகவன் எதிர்பார்க்கவில்லை. படகிலிருந்த பெண்ணும் இன்னொரு மனிதனும் தண்ணீரில் குதித்தது போலத் தோன்றியது. படகில் படகோட்டி மட்டுமே பாக்கியிருந்தான். ராகவனுக்கு அப்போது வெறியே பிடித்திருந்தது. அந்தப் படகோட்டி மனிதனையும் நோக்கிச் சுட்டான். படகு குண்டுபட்டு ஓட்டையாகியிருக்க வேண்டும். சிறிது நேரத்துக்கெல்லாம் படகு கவிழ்ந்து விட்டது. இந்தச் சம்பவம் ராகவனுடைய வெறியைத் தணித்தது. தான் செய்தது நியாயமோ என்னமோ என்ற ஐயம் எழுந்தது. நியாயந்தான் என்று மனதை உறுதி செய்து கொண்டான். ஒருவேளை படகில் இருந்தது சீதாவாக இருக்கலாமோ என்ற சிறு சந்தேகம் எழுந்தது.

அப்படியிருக்க முடியாது என்றும், சீதாவாக இருந்தால் அந்த முஸ்லிம் கிழவன் நீரில் விழுந்ததைக் கண்டு அவளும் விழுந்திருக்க நியாயமில்லையென்று எண்ணி ஆறுதல் பெற்றான். ஒருவேளை அப்படிச் சீதாவாயிருந்தால் என்ன? ஒரு முஸ்லீம் வீட்டுக்குப் போய்ப் பலவந்தத்துக்கு ஆளாகி உயிர் வாழ்வதைக் காட்டிலும் அவள் நதியில் முழுகி இறப்பதே மேலல்லவா? பிறகு ராகவனும் பாமாவும் பல அபாயங்களைத் தாண்டி டில்லிக்கு வந்து சேர்ந்தார்கள். வந்த பிற்பாடு ராகவனுடைய மனது கேட்கவில்லை. டில்லியில் உள்ள அகதி முகாம்களில் மட்டும் அல்லாமல் பானிபெத், கர்னால், குருக்ஷேத்திரம் முதலிய ஊர்களில் உள்ள அகதி முகாம்களில் எல்லாம் போய்த் தேடிப் பார்த்தான். எங்கும் சீதாவைப் பற்றியாவது வஸந்தியைப் பற்றியாவது தகவல் கிடைக்கவில்லை. அவர்கள் இருவரும் இறந்து போயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கே வரவேண்டிய தாயிருந்தது. ஆனால், இரண்டு மாதத்துக்கு முன்பு சீதாவின் பெயருக்குத் தாரிணியிடமிருந்து வந்த கடிதமானது சௌந்தர ராகவனுக்கு மறுபடியும் மனக் குழப்பத்தை உண்டாக்கியது. "சூரியா, இப்போது நீ எங்கே தங்கியிருக்கிறாய்?" என்று சௌந்தரராகவன் கேட்டான். "இன்னும் ஒரு இடம் என்று நிலையாக ஏற்படவில்லை. ஏற்பட்டதும் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். தங்களுக்கும் பாமாவுக்கும் திருமணம் நடக்கும்போது எனக்குக் கட்டாயம் அழைப்பு அனுப்பவேண்டும் மறந்து விடக்கூடாது" என்று சூரியா கூறினான். அவனுடைய முகத்தில் வெறுப்பும் வேடிக்கையும் கலந்த குரூரமான புன்னகை காணப்பட்டது. "ஆகா! அதைப் பற்றி உனக்கு எப்படித் தெரிந்தது, சூரியா? நாங்கள் இன்னும் யாரிடமும் சொல்ல வில்லையே?" என்றான் ராகவன். "சொல்லுவானேன்? ஊகித்துத் தெரிந்து கொள்ளக் கூடியதுதானே? பாவம்! நீங்கள் எத்தனை காலம் சூனியமாக இருக்கும் இந்தப் பெரிய வீட்டில் தனியாகக் குடியிருக்க முடியும்?" "ஆம், அப்பா! நீயாவது என்னுடைய நிலைமையைத் தெரிந்து அநுதாபப்படுகிறாயே? உலகத்தில் சுயநலம் அதிகமாகிப் போய்விட்டது?

பிறர் கஷ்டத்தைக் கவனித்து அநுதாபப்படுவாரே இல்லை. அதுவும் தியாகிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் எவ்வளவு சுயநலம் பிடித்தவர்களாகப் போயிருக்கிறார்கள், தெரியுமா? அவர்களை உத்தேசித்தால் நம்முடைய மாஜி திவான் ஆதிவராகாச்சாரியார் போன்றவர்கள் எவ்வளவோ தேவலை!" என்றான் ராகவன். "ஆமாம்; உலக இயல்பே அப்படித்தான். நல்லவர்கள் கெட்டவர்கள் ஆவார்கள், கெட்டவர்கள் நல்லவர்கள் ஆவார்கள். தியாகிகள் சுயநலத்தை மேற்கொள்வார்கள். சுயநலம் பிடித்தவர்கள் பரோபகாரிகள் ஆவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் காந்தி மகான் ஒருவர் மட்டும் மாறாமல் இருந்து கொண்டு திண்டாடுகிறார்!" ஆம், உன்னுடைய காந்தி மகானை நீதான் புகழ வேண்டும். காந்தி செய்கிற அநியாயத்தை எங்களால் பொறுக்க முடியவில்லை. அவர் எதற்காக இந்தப் புது டில்லியில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது; கோபமாய்க் கூட இருக்கிறது. இவ்வளவு அகதிகளையும் இவர்கள் படுகிற துயரங்களையும் பார்த்துவிட்டுப் பாகிஸ்தானுக்குப் பரிந்து பேச எப்படித்தான் மகாத்மாவுக்கு மனது வருகிறதோ தெரியவில்லை. பட்டினி கிடந்து சர்தார்படேலைக் கட்டாயப்படுத்தியல்லவா பாகிஸ்தானுக்கு அறுபது கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்தார்? அவரை 'மகாத்மா' என்று சொல்வதற்கே என் நாக்குக் கூசுகிறது." "கூசினால் சொல்ல வேண்டாமே! சொல்லாம லிருப்பதால் மகாத்மாவுக்கு நஷ்டமில்லை, உங்களுக்கும் கஷ்டம் இல்லை. நாங்கள் என்னமோ சில பைத்தியக்காரர்கள், மகாத்மா எது சொன்னாலும் எது செய்தாலும் அதுவே சரி என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதனாலும் யாருக்கும் லாபமோ நஷ்டமோ இல்லை. போகட்டும், உங்கள் கலியாணம் எப்போது?" என்றான் சூரியா.

"அதைப் பற்றித்தான் தயக்கமாயிருக்கிறது, சூரியா! நான் இப்படியே என் வாழ்க்கையை நடத்த முடியாது என்பது நிச்சயம். ஆனால் சீதாவைப் பற்றியோ உறுதியாக ஒன்றும் தெரியவில்லை. போதாதற்கு, தாரிணியின் கடிதம் வேறு என் மனதை அடியோடு குழப்பி விட்டிருக்கிறது..." "தாரிணியின் கடிதம் இந்த விஷயத்தில் உங்கள் மனதைக் குழப்புவானேன்?" என்றான் சூரியா. "உன்னிடம் சொன்னால் என்ன, ஒருமாதிரி உனக்கு முன்னமேயே தெரிந்த விஷயந்தான். தாரிணி என்னுடைய முதற்காதலி, சூரியா! சீதாவை இழந்ததினால் எனக்கேற்பட்ட மனத்துயரத்தை மாற்றக்கூடியவள் தாரிணி ஒருத்திதான். ஒருவேளை உனக்கு இந்த விஷயத்தில் ஆட்சேபணை இருக்கக் கூடும். ஆனாலும் நீ இதில் தலையிடாம லிருந்தால் நல்லது" என்றான் ராகவன். "மன்னிக்க வேண்டும், ராகவன்! நான் அப்படியெல்லாம் பிறர் காரியத்தில் தலையிடுகிறவன் அல்ல. ஒரு தடவை பிறர் காரியத்தில் தலையிட்டு விட்டு அதன் பலன்களை இன்றுவரை அநுபவித்துக் கொண்டிருக்கிறேன், போதும் போதும் என்றாகிவிட்டது. சீதா செத்துப் போயிருந்து ஒருவேளை ஆவி வடிவத்தில் இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தால் நீங்களும் தாரிணியும் கலியாணம் செய்து கொள்வதைப் பார்த்து ஆனந்தமடைவாள். உங்கள் கலியாணத்துக்கு வந்திருந்து சீதா ஆசிகூடக் கூறுவாள்!" என்றான் சூரியா.
 
முப்பத்து மூன்றாம் அத்தியாயம்

ராகவன் கோபம்

ராகவனுக்கு திடீர் என்று கோபம் வந்துவிட்டது. சூரியா தன்னைப் பரிகாசம் செய்கிறானோ என்ற சந்தேகம் அவன் மனதில் உதித்தது. உடனே குதித்து எழுந்து, "அடே! உன்னுடைய அகம்பாவமும் கெட்ட சுபாவமும் இன்னும் மாறவில்லை போலிருக்கிறது. இந்த க்ஷணமே எழுந்து போய்விடு! கெட் அவுட்!" என்று கூவினான். "நீங்கள் இன்னும், 'கெட் அவுட்' சொல்லவில்லையே என்றுதான் காத்திருந்தேன்!" என்று கூறிக் கொண்டே சூரியா எழுந்தான். அதற்குள் ராகவனுடைய கோபம் கொஞ்சம் தணிந்தது. "இல்லை, சூரியா! சற்று உட்காரு! நீ உண்மையாகவே அப்படி எண்ணுகிறாயா? அதாவது நான் தாரிணியைக் கலியாணம் செய்து கொள்வது சீதாவுக்கு..." என்று தயங்கினான். சூரியா நின்றுகொண்டே, "அதைப் பற்றி ஏன் தயங்கவேண்டும்? சீதாவின் ஆத்மாவுக்கு அது நிச்சயம் திருப்தி அளிக்கும். அதற்கு ஒரு விசேஷ காரணம்!" என்றான். "அது என்ன அவ்வளவு பொருத்தமான காரணம்?" "சீதாவும் தாரிணியும் சொந்தச் சகோதரிகள் என்பதுதான். அவர்கள் ஒரே தந்தையின் புதல்விகள். ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். இதைக் காட்டிலும் வேறு என்ன காரணம் வேண்டும்?" "என்ன உளறுகிறாய்! உன்னுடைய மூளை குழம்பி விட்டதா? புத்தி சுவாதீனத்துடன்தான் பேசுகிறாயா?" என்றான் ராகவன். "எப்படி வைத்துக் கொண்டாலும் சரிதான்! நான் போய் வருகிறேன்" என்று சூரியா புறப்பட்டான். "இல்லை, சூரியா போகாதே! திடீரென்று ஒரு பெரிய அணுகுண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறேன் என்கிறாயே? சற்றுமுன் நீ சொன்னது நிசந்தானா? தாரிணியும் சீதாவும் அக்கா தங்கைகளா? யார் சொன்னார்கள்? என்ன அத்தாட்சி?" என்று பரபரப்புடன் ராகவன் கேட்டான். "அவர்களைப் பெற்ற தகப்பனாரே சொன்னார்! அவருடைய வாய்மொழியாகவே தெரிந்து கொண்டேன்!" என்றான் சூரியா. பிறகு, துரைசாமி ஐயரின் இல்வாழ்க்கை ஆரம்பத்தில் நடந்த அதிசய சம்பவங்களைப் பற்றியும் சூரியா விவரமாகக் கூறினான். நம்புவதற்கு அரிய அபூர்வமான சம்பவங்கள்தான். ஆயினும் ராகவனுடைய மனதுக்குள் அவையெல்லாம் உண்மையாகத்தானிருக்கும் என்ற உணர்ச்சி ஏற்பட்டது. அவனுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்கெனவே நன்கு விளங்காமல் மர்மத் திரையினால் மறைக்கப்பட்டிருந்த பல சம்பவங்கள் இப்போது பிரகாசமாகத் துலங்கின.

"சூரியா! அவர் எங்கே? அந்தப் பிராமணர் துரைசாமி ஐயர் எங்கே? சீதாவின் கலியாணத்துக்குப் பிறகு அவர் ஏன் திடீரென்று மறைந்து போனார்? அவரை எங்கே பார்த்தாய்?" என்று கேட்டான். "ராகவன்! அதையெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்? தெரிந்து கொண்டால் உங்கள் மனம் கஷ்டப்படும்!" "எதற்காக என் மனம் கஷ்டப்படவேண்டும்? நீ பேசுவதெல்லாம் மர்மமாகவே பேசுகிறாயே?" "நீங்கள் வைதிக சிரேஷ்டர், உங்கள் மாமனார் ஒரு மௌல்வி சாகிப் என்று தெரிந்தால் உங்களுக்குக் கஷ்டமாயிராதா? உங்கள் தகப்பனார் பத்மலோசன சாஸ்திரிகளின் இருதயமே நின்றுவிடுமே?" "என் தந்தையை எதற்காக இதில் சம்பந்தப்படுத்துகிறாய்? என் அழகான மாமனார் உனக்கும் தாய் மாமன்தானே? அவர் எதற்காக மௌல்வி சாகிபு ஆகவேண்டும்? ஹிந்து மதத்தைவிட முஸ்லிம் மதம் சீக்கிரத்தில் மோட்சம் அளித்துவிடும் என்கிற நம்பிக்கையினாலா?" "அவ்வளவு தூரம் எனக்கு அவருடைய மதக் கொள்கையைப் பற்றித் தெரியாது. என்னுடைய அபிப்பிராயம், அவர் ஊரை ஏமாற்றுவதற்கே அப்படி வேஷம் போட்டுக் கொண்டு திரிந்தார் என்பதுதான். ஆனால் அந்த வேஷம் அவர் எதிர்பாராத முறையில் அவருக்குத் திடீர் என்று மோட்சத்தை அளித்து விட்டது!" ராகவனுடைய இருதயத்தில் இனந்தெரியாத ஏதோ ஒருவித பயம் ஏற்பட்டது. பயங்கரமான பாவம் ஒன்று கரிய முகமூடி போட்டுக்கொண்டு தன் முன்னால் வந்து நிற்பதாகத் தோன்றியது. அந்த முகமூடியைக் கிழித்து அந்த உருவத்தைப் பார்க்கும் தைரியம் அவனுக்கு ஏற்படவில்லை. ஆகையால் உடனே அவன் பேச்சை மாற்றிவிட விரும்பினான். "கிரகசாரந்தான்! துரைசாமி ஐயர் மௌல்வி சாகிபு ஆவதாவது? அதைப்பற்றி நினைக்கவே எனக்கு அருவருப்பாயிருக்கிறது வேறு ஏதாவது விஷயமிருந்தால் பேசு!"

"வேறு ஒன்றும் இல்லை" என்று கூறிவிட்டுச் சூரியா மறுபடியும் புறப்பட்டான். "ஒருவேளை நீ தப்பித் தவறிச் சீதாவை எங்கேயாவது பார்க்கும்படி நேர்ந்தால்...." "சீதாவின் ஆவியைப் பார்த்தால் என்று சொல்லுங்கள்." "நீ பேசுவதைக் கேட்டால் சீதா இறந்துவிட்டாள் என்று உறுதியாக நம்புகிறாய் போலிருக்கிறது!" "கண்ணால் கண்டதை நம்பாமல் என்ன செய்கிறது?" "என்னத்தை நீ கண்ணால் பார்த்தாய்!" என்று ராகவன் குரல் நடுக்கத்துடன் வினவினான். "நதியின் பிரவாகத்தில் சீதா முழுகுகிறதைக் கண்ணால் பார்த்தேன்" என்றான் சூரியா. "ஐயோ!" என்றான் ராகவன். "அந்தப் படகிலே நானும் இருந்தேன். நாங்கள் மூன்று பேருந்தான் இருந்தோம். கரையிலிருந்து படகைப் பார்த்துச் சுட்டது யார் என்பது பற்றி எனக்குச் சந்தேகம் உதித்திருந்தது; அது உண்மை என்று இன்றைக்குத் தெரிந்தது!" "என்ன சொல்கிறாய், சூரியா? என் மூளை குழம்புகிறது! படகில் நீங்கள் மூன்று பேரும் இருந்தீர்கள் என்றால்? யார் யார் இருந்தீர்கள்?" "நானும் சீதாவும், சீதாவின் தகப்பனாருந்தான் இருந்தோம். பஞ்சாப் நகரத்திலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தோம். சீதாவின் தகப்பனார் என்ன நினைத்தார் என்றால், தம்முடைய மௌல்வி சாகிபு வேஷம் சீதாவுக்கு ஒரு பாதுகாப்பு என்று நினைத்தார். அவர் ஒன்று நினைக்க, அவருடைய மாப்பிள்ளை வேறொன்று நினைத்து விட்டார்!" "ஐயையோ! அப்படியென்றால் அந்த படகில் நான் குறிபார்த்துச் சுட்ட முஸ்லிம்..." "ஆமாம்; உங்களுடைய மாமனாரை நோக்கித்தான் சுட்டீர்கள். குறியும் தப்பவில்லை, ராகவன்! இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தை அறிந்திருப்பவன் நான் ஒருவன்தான்; இப்போது உங்களுக்கும் தெரியும். நான் இதை வேறு யாரிடமும் சொல்லப் போவதில்லை. நீங்களும் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்."

ராகவன் திடீரென்று குதித்து எழுந்தான். கோபத்தினால் முகத்தில் நரம்புகள் புடைக்க, சூரியாவை நோக்கிக் கைகளை ஆட்டிக்கொண்டு, "அடமடையா! நீயும் ஒரு ஆண்பிள்ளையா? ஒரு பெண் ஆற்றுவெள்ளத்தில் விழுந்து முழுகி இறந்ததை நீ பார்த்துக் கொண்டிருந்தாயா? அவளைக் காப்பாற்ற முயலாமல் பெரிய வீரன் சூரன் தியாகி என்றெல்லாம் உன்னை நீயே புகழ்ந்து கொள்வாயே? மணலைக் கயிறாய்த் திரித்தேன், வானத்தை வில்லாய் வளைத்தேன் என்றெல்லாம் பீற்றிக் கொள்வாயே? வெள்ளத்தில் முழுகிப் போகாமல் ஒரு பெண்ணைக் கரை சேர்க்கக் கையினால் ஆகவில்லையா?" என்று நெருப்பை கக்கினான். சூரியா சாந்தமான குரலில், "ராகவன்! நான் அப்போது சீதாவைக் காப்பாற்றியிருப்பேன்? காப்பாற்றிக் கரை சேர்த்திருக்க முடியும் ஆனால் அவ்விதம் செய்யவில்லை. முழுகிச் சாகட்டும் என்று பார்த்துக் கொண்டிருந்து விட்டேன்! ஏன் தெரியுமா! பிழைத்து வந்தால் உம்மைப்போன்ற அயோக்கிய சிகாமணியோடு அவள் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதி னால்தான்! முன்னொரு சமயம் நீர் என்னை மாடியிலிருந்து பிடித்துத் தள்ளியபோது பழிக்குபழி வாங்குவதாகச் சபதம் செய்தேன். பழி வாங்கியாகிவிட்டது! போய் வருகிறேன்," என்று சொல்லி விட்டு நடந்தான். ராகவன் திகைத்து உட்கார்ந்து விட்டான். சூரியாவின் கடைசி வார்த்தைகள் அவனுடைய உள்ளத்தில் கூரிய அம்புகளைப் போலத் தைத்தன. சூரியா கூறிய செய்திகளின் பலா பலன்களைப் பற்றி யோசிக்கும் சக்தியே அவனுக்கு இல்லை. இந்த விஷயம் ஒன்றும் தாரிணிக்குத் தெரியக்கூடாதே என்ற கவலை மட்டும் அவனுடைய மனதில் தோன்றியது. சூரியா வீட்டு வாசலை அடைந்ததும் விடுவிடு என்று நடக்கத் தொடங்கினான். அவனுடைய நடையின் வேகம் அவனுடைய உள்ளப் பரபரப்புக்கும் அறிகுறியாக இருந்தது. "நான் சொன்னதில் அவ்வளவாகப் பொய் அதிகம் இல்லைதானே? சீதாவின் ஆவியைத்தான் இப்போது நான் பார்க்கப் போகிறேன். சௌந்தரராகவனைப் பொறுத்தவரையில் சீதா இறந்தவள் மாதிரிதானே?" என்று எண்ணமிட்டுக் கொண்டே நடந்தான்.
 
முப்பத்து நான்காம் அத்தியாயம்

சீதாவின் ஆவி

தலைக்கு மேலே வெள்ளம் ஓடிக் கொண்டே, ஓடிக் கொண்டே, ஓடிக் கொண்டே இருந்தது. நெற்றியின் மேலே அலை மோதிக்கொண்டே, மோதிக்கொண்டே, மோதிக்கொண்டே இருந்தது. காதில் 'ஹோ' என்று இரைந்த அலை ஓசை பல்லாயிரம் மக்களின் சோகம் நிறைந்த ஓலத்தையொத்த அலை ஓசை, மற்ற எல்லா ஓசைகளையும் அமுக்கிக் கொண்டு மேலெழுந்த பேரலையின் பேரோசை கேட்டுக் கொண்டே, கேட்டுக் கொண்டே இருந்தது. தலைக்கு மேல் ஓடிய வெள்ளத்தின் பாரமும் நெற்றியில் மோதிய அலையின் வேகமும் காதில் தாக்கிய அலை ஓசை இரைச்சலும் முடிவில்லாமல், இடைவெளியில்லாமல் நீடித்துக்கொண்டே இருந்தன. இல்லை, இல்லை; முடிவில்லாமல் இல்லை! அப்பாடா! கடைசியாக இதோ வெள்ளம் வடிந்து வருகிறது. நெற்றியில் அலையின் மோதலும் குறைந்து வருகிறது. இதோ வெள்ளம் வடிந்துவிட்டது. கழுத்துக்குக் கீழே இறங்கிவிட்டது. மூச்சுவிட முடிகிறது; கண்ணால் பார்க்க முடிகிறது. ஆனால் காதிலே அலை ஓசை கேட்பது மட்டும் நின்றபாடில்லை. வேறு ஒரு சத்தமும் கேட்க முடியவில்லை. இது என்ன? எங்கே இருக்கிறேன்? என்னத்தைப் பார்க்கிறேன்? இங்கே எப்படி வந்தேன்? படகிலிருந்து நதியில் விழுந்து முழுகியவள் இங்கே எப்படி வந்தேன்? செத்துப் போன பிறகு இங்கே வந்து சேர்ந்தேனா? இதுதான் மறு உலகமா? மறு உலகமாயிருந்தால் இருட்டும் குப்பையும் நிறைந்து துர்நாற்றம் அடிக்கும். இந்த இடம் நரக வீடாகத்தான் இருக்க வேண்டும்! நான் செய்திருக்கும் பாவங்களுக்கு நரகத்தைத் தவிர வேறு என்ன இடம் கிடைக்கும்? பதியை விட்டுவிட்டு ஓடிப்போனவளுக்கு வேறு என்ன கதி கிடைக்கும்? அருமைச் சிநேகிதி லலிதாவுக்குத் துரோகம் செய்தவளுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்! சொற்ப பாவம் செய்தவர்கள் கொஞ்சநாள் நரகத்திலிருந்துவிட்டு அப்புறம் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்று கேட்டதுண்டு? ஆனால் எனக்குச் சொர்க்கத்தின் ஆசையே வேண்டியதில்லை. என்றென்றைக்கும் இந்த நரகத்தில் கிடந்து உழல வேண்டியதுதான்?

இதோ என் தலைமாட்டில் நிற்கிறது யார்? யமனா? யமதூதனா? இல்லை தெரிந்த முகமாயிருக்கிறதே? எப்போதோ பார்த்த மாதிரி இருக்கிறதே?... கையில் என்ன வைத்துக் கொண்டிருக்கிறார்? இல்லை; தண்டாயுதமில்லை. வேறு எந்த ஆயுதமும் இல்லை. அது ஒரு கிண்டி; மண்ணால் செய்த கிண்டி. அதன் நீண்ட குறுகிய மூக்கு வழியாகத் தண்ணீர் சொட்டுகிறது. எதற்காக நம்முடைய நெற்றியில் ஜில் என்று குளிர்ந்த தண்ணீரை விடுகிறார்? ஆகா எத்தனை இதமாயிருக்கிறது? இந்த மனிதர் யார்...... சீதா சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். படுக்கை என்பதும் தரையில் விரித்திருந்த ஒரு பழைய கம்பளிதான். அது உடம்பின் மேல் பட்ட இடங்களில் சொர சொரவென்று குத்தியது. அதைப் பொருட்படுத்தாமல் தன் நெற்றியில் சொட்டுச் சொட்டாகத் தண்ணீரை விட்ட ஆசாமி யார் என்று நன்றாகத் திரும்பிப் பார்த்தாள். அந்த மனிதரின் மெலிந்த சுருங்கிய முகத்தில் அப்போது புன்னகை மலர்ந்தது. ஆகா இந்த மனிதர் என் அப்பா அல்லவா; பழைய அப்பா துரைசாமி ஐயர் அல்லவா? அந்தத் தாடியுள்ள மௌல்வி சாகிபு அல்ல. இளைத்து மெலிந்து கறுத்துப் போயிருக்கிறார். கன்னங்களின் எலும்பு வெளியே நீட்டிக்கொண்டு தெரிகிறது; கண்கள் குழி விழுந்திருக்கின்றன. ஆயினும் பழைய அப்பாதான்; சந்தேகமில்லை. அந்த மௌல்வி சாகிபு என் தந்தை என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு வந்தது ஏதோ வஞ்சகம் போலிருக்கிறது. அவரிடமிருந்து நிஜமான அப்பா என்னைக் காப்பாற்றி அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார். ஒருவேளை அதெல்லாம் அந்தப் பயங்கர நிகழ்ச்சிகள் எல்லாம் கனவுதானோ, என்னமோ? - எல்லாவற்றுக்கும் அப்பாவைக் கேட்டுப் பார்க்கலாம்!

சீதா பேச முயன்றாள், தகப்பனாரிடம் தன் மனதிலெழுந்த சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முயன்றாள். "நீங்கள் என் அப்பா துரைசாமி ஐயர்தானே? எதற்காகக் கிண்டியிலிருந்து சொட்டுச் சொட்டாகத் தண்ணீரை என் நெற்றியில் விடுகிறீர்கள்? நாம் எங்கே இருக்கிறோம்? சூரியா எங்கே?" குழந்தை வஸந்தி எங்கே? இவர் - என் அகத்துக்காரர் எங்கே?" என்று இவ்வளவு கேள்விகளையும் கேட்க அவள் மனம் விரைந்தது; நாக்குத் துடித்தது; உதடுகள் திறந்தன; மூடின ஆனால் வார்த்தை ஒன்றும் வரவில்லை. முயன்று முயன்று பார்த்ததும் வார்த்தை ஒன்றும் வெளிவரவில்லை. அப்பா ஏதோ சொல்லுவது போலிருந்தது. வாயைத் திறந்து திறந்து மூடினார். பேச்சில்லாத சினிமாப் படங்களில் பாத்திரங்கள் வாயைத் திறந்து மூடுவது போலிருந்தது. பேசியது ஒன்றும் அவள் காதில் விழவில்லை; காதில் விழவேயில்லை. எப்படிக் காதில் விழும்? வேறு சத்தம் எதுவும் காதில் விழ முடியாதபடிதான் இந்தப் பயங்கரமான அலை ஓசை ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கிறதே! இதுதான் என்னைப் பைத்தியமாக அடித்துக்கொண்டு வருகிறது. "எதற்காகத் தப்பிப் பிழைத்தோம்; நதியில் முழுகிச் செத்துத் தொலைந்து போயிருக்கக் கூடாதா?" என்ற எண்ணத்தை உண்டாக்கி வருகிறதே! ஒரு நிமிஷத்துக்குள்ளே சென்ற சில மாதத்து அநுபவங்கள் எல்லாம் சட், சட்டென்று ஞாபகம் வந்தன. குருக்ஷேத்திரம் முகாமில் கண்ணுக்கெட்டிய தூரம் போட்டிருந்த ஆயிரக்கணக்கான அகதி முகாம் கூடாரங்கள் கண் முன்னால் வந்தன. உடுக்க ஒரு துணிக்கு மேல் இல்லாத லட்சக்கணக்கான அகதி ஸ்திரீகளும் குழந்தைகளும் நினைவுக்கு வந்தார்கள். சில நாள் குடி தண்ணீருக்குப் பட்ட கஷ்டம் நினைவு வந்தது.

இன்னும் சில நாள் பெருமழை பெய்து கூடாரத்துக்குள் முழங்கால் ஆழம் தண்ணீர் நின்ற காட்சி நினைவுக்கு வந்தது. தனக்குக் கடுமையான சுரம் வந்ததும் அப்பாவும் சூரியாவும் தனக்குச் செய்த சிசுருஷைகளும் நினைவுக்கு வந்தன. ஒரே ஒரு நாள் அகதி முகாமில் ஓரிடத்தில் பெருங்கூட்டத்தைக் கண்டு தான் அங்கே சென்று பார்த்ததும் காந்தி மகாத்மா கூட்டத்தின் நடுவில் நின்று ஏதோ பேசியதும் நினைவுக்கு வந்தன. துரதிர்ஷ்டம், அந்த அவதார புருஷர் பேசிய பொன் மொழியைத் தன் காதுகள் கேட்கக் கொடுத்து வைக்கவில்லை! காந்திமகான் ஏறியிருந்த காருக்குப் பின்னால் சென்ற பெரும் ஜனக் கூட்டத்தோடு அவளும் சென்றாள். அகதி முகாமிலிருந்து அவர் புறப்பட்டபோது தானும் அவருடன் போய்விடப் பிரயத்தனம் செய்தாள் அந்த முயற்சி பலிக்கவில்லை. பக்கத்திலிருந்தவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி விட்டார்கள். அதற்குப் பிறகு கடுங்குளிர் காலம் வந்தது. அந்தக் குளிரிலும் பனியிலும் கூடாரத்தில் வசித்தால் தன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று அப்பாவும் சூரியாவும் எண்ணினார்கள். ஆகையால் ஒரு மச்சுக் கட்டிடத்துக்கு அழைத்துப்போக வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ரொம்பவும் சிரமப்பட்டு அகதி முகாம் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொண்டு குருக்ஷேத்திரத்திலிருந்து பிரயாணமானார்கள். பானிபத் என்னும் பட்டணத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே அதிர்ஷ்டவசமாக ஒரு பழைய காலத்து முஸ்லிம் பக்கிரியின் சமாதி மண்டபம் காலியாயிருந்தது. அந்த இடத்தை இவர்கள் பிடித்துக் கொண்டார்கள், அதில் வசித்து வந்தார்கள். அடிக்கடி சீதாவுக்குத் திடீர் என்று பிரக்ஞை தவறிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட சமயங்களில் அவளைக் கட்டை மாதிரி போட்டுவிட்டது. குளிர்ந்த தண்ணீரைக் கிண்டி மூக்கு வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாய் நெற்றியில் விட்டுக் கொண்டிருந்தால் பிரக்ஞை திரும்ப வந்தது. அப்பா இன்றைக்கும் அம்மாதிரி செய்துதான் உணர்வு வரப் பண்ணியிருக்கிறார்.

சூரியா டில்லிக்குப் போயிருக்கிறான், ஆம்; டில்லியிலேயே ஜாகை கிடைக்குமா என்று பார்த்து வரப் போயிருக் கிறான். தாரிணியையும் வஸந்தியையும் இவரையும் பற்றிக்கூட ஏதாவது தகவல் கிடைக்குமா என்று விசாரித்து வருவதற்குப் போயிருக்கிறான். அது மட்டுமல்ல; காந்தி மகாத்மாவைப் பற்றி விசாரித்துக் கொண்டு வருவதற்கும் போயிருக்கிறான். சீதாவின் மனதிற்குள் அடிக்கடி தான் இனி வெகுகாலம் பிழைத்திருப்பது துர்லபம் என்று தோன்றிக் கொண்டிருந்தது. பிழைத்திருக்க அவள் விரும்பவும் இல்லை. பேசும் சக்தியை வாய் இழந்து விட்டது. பேச முயன்றால், தாடைகள் வலிப்பதைத் தவிர வேறு பயன் ஒன்றுமில்லை. காதோ கேட்கும் சக்தியை அடியோடு இழந்துவிட்டது. ஒரு பயங்கரமான அலை ஓசை காதில் சதா சர்வகாலமும் கேட்டுக் கொண்டிருந்தது. எப்படியும் சீக்கிரம் தன் உயிர் போவது நிச்சயம். அதற்குள் தன் அருமைக் குழந்தை வஸந்தியை ஒரு தடவை பார்த்துக் கட்டி முத்தமிடவேண்டும். அப்புறம் வாழ்விலும் தாழ்விலும் இன்பத்திலும் துன்பத்திலும் விழிப்பிலும் தூக்கத்திலும் நன்மையிலும் தீமையிலும் தன்னுடைய வழிபடு தெய்வமாகக் கொண்டு போற்றி வந்த காந்தி மகாத்மாவை இன்னொரு தடவை தரிசிக்க வேண்டும். அவருடைய புனிதமான திருமேனியைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும். அவருடைய மனோரதம் இவ்வளவு தான். இதையெல்லாம் பற்றிச் சீதா மின்னல் மின்னும் வேகத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தபோது அப்பா துரைசாமி ஐயர் சூடான டீ போட்டுக்கொண்டு வந்தார். சீதா வாங்கிக் சாப்பிட்டாள்; பிறகு அப்பாவைத் தொட்டுக் கூப்பிட்டு, சமிக்ஞையினால், "சூரியா எங்கே? இன்னும் வரவில்லையா?" என்று விசாரித்தாள். அப்பாவும் சமிக்ஞையினால் "இன்னும் வரவில்லை!" என்று தெரிவித்தார்.சீதாவின் முகம் முன்னைக் காட்டிலும் அதிகமாக வாடியது. டில்லியில் இன்னும் கலகம் நின்றபாடில்லை என்று சொன்னார்களே, ஒருவேளை சூரியாவுக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ என்று எண்ணினாள். ஆமாம்; இந்த துரதிர்ஷ்டக்காரிக்கு உதவி செய்தவர்களோ, சிநேகமாயிருந்தவர்களோ, யார்தான் கஷ்ட நஷ்டங்களை அடையாமலிருந்தார்கள்? நான் இந்த உலகத்தை விட்டுத் தொலைந்து போனால் எத்தனையோ பேர் சுகமடைவார்கள். ஆனாலும் எனக்கு இன்னும் முடிவு காலம் வரவில்லையே? பஞ்சாப் பயங்கரத்தில் எத்தனையோ லட்சம் பேர் செத்துப் போனார்கள்; நான் மட்டும் சாகவில்லையே? எல்லா ஆபத்துக் களுக்கும் பிழைத்து உட்கார்ந்திருக்கிறேனே? சீதா தன் தலைமாட்டில் பத்திரமாய் வைத்திருந்த காந்தி மகாத்மாவின் படத்தை எடுத்துப் பார்த்தாள். "பாபுஜீ! என்னைத் தங்கள் சிஷ்ய கோஷ்டியில் சேர்த்துக் கொள்ளக்கூடாதா? என்னாலான பணிகள் செய்து கொண்டிருக்க மாட்டேனா?" என்று இரங்கி வேண்டினாள்.
 
முப்பத்தைந்தாம் அத்தியாயம்

பானிபத் முகாம்

பானிபத் என்னும் சிறு நகரம் இந்திய சரித்திரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. டில்லிக்கு வடக்கே சுமார் முப்பது மைல் தூரத்தில் அந்தப் பட்டணம் இருக்கிறது. இந்தியாவின் சரித்திரப் போக்கை மாற்றி அமைத்த மூன்று பெரிய சண்டைகள் அங்கே நடந்திருக்கின்றன. பட்டாணிய வம்சத்தின் கடைசி அரசனான இப்ராஹிம் லோடி டில்லியில் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் நொண்டித் தைமூர் என்பவனின் சந்ததியில் வந்த பாபர் டில்லி மீது படையெடுத்து வந்தான். பாபருடைய பத்தாயிரம் வீரர்களும் இப்ராஹிம் லோடியின் ஒரு லட்சம் போர் வீரர்களும் பானிபத் நகருக்கு அருகில் விஸ்தாரமான மைதானத்தில் சந்தித்தார்கள். லோடியின் ஒரு லட்சம் வீரர்களும் சோற்றுப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள். பாபரின் பத்தாயிரம் வீரர்கள் கட்டுப்பாடு பெற்ற வீரர்கள். அன்றியும் பாபரிடம் பீரங்கிகள் சில இருந்தன. எனவே, இப்ராஹிம் லோடியின் ஒரு லட்சம் வீரர்களும் சொற்ப நேரத்துக்குள்ளே பெருந் தோல்வியடைந்து நாலா பக்கமும் சிதறி ஓடினார்கள். பாபர், டில்லி பாதுஷா ஆனான். சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற மொகலாய மன்னர்களின் சாம்ராஜ்யம் டில்லியில் ஆரம்ப மாயிற்று. பின்னர், பதினான்கு வயதுப் பாலனாகிய அக்பர், அதே பானிபத் போர்க்களத்தில், ஹேமுவின் மாபெரும் சைன்யத் தைத் தோற்கடித்துத் தன் தந்தையான ஹுமாயூன் இழந்துவிட்ட டில்லி சாம்ராஜ்யத்தை மீண்டும் அடைந்தான். இதற்கு இருநூறு வருஷங்களுக்கும் பிறகு பாரஸீகத்திலிருந்து ஆமத் ஷா என்னும் பெரும் மன்னன் டில்லி மீது படையெடுத்து வந்தான். அப்போது மத்திய இந்தியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆண்டு வந்த மகாராஷ்டிரர்கள் ஒரு பெரும் சைன்யத் தைத் திரட்டிக் கொண்டு போனார்கள். மீண்டும் அதே பானிபத்தில் மிகப் பெரும் சண்டை நடந்தது. அதில் மகாராஷ்டிர சேனா வீரர்கள் படுதோல்வியடைந்தார்கள். அந்தச் சண்டையிலிருந்து மகாராஷ்டிர சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம் ஆரம்பமாயிற்று.

இத்தகைய பிரசித்தி பெற்ற பானிபத் நகரத்தில், இந்திய சரித்திரத்தையே, மாற்றி அமைத்த சண்டைகள் பல நடந்த மைதானத்தில், இப்போது ஆயிரக்கணக்கான கூடாரங்கள் போட்டிருந்தன. அவற்றில் பஞ்சாப் அகதிகள் குடியிருந்தார்கள். ஆறு மாதத்திற்கு முன் லட்சாதிபதிகளாக இருந்தவர்கள் இப்போது கந்தைத் துணி உடுத்தி வயிற்றுப் பசியை ஆற்றக் காய்ந்த ரொட்டிகள் எப்போது கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தார்கள். பெண்டு பிள்ளைகளை இழந்தவர்களும், பெற்றோர்களை இழந்தவர்களும், கணவனை இழந்தவர்களும், தம்மைத் தவிர குடும்பம் அனைத்தையும் இழந்தவர்களும் அந்தக் கூடாரங்களில் வசித்தார்கள். தங்களுடைய கண்ணெதிரே தங்கள் உற்றார் உறவினருக்குப் பயங்கரமான கொடுமைகள் இழைக்கப்படுவதைப் பார்த்துச் சித்தப் பிரமை கொண்ட பித்தர்கள் பலரும் அங்கே இருந்தார்கள். சூரியா கொஞ்ச காலமாக அந்த அகதிகள் முகாமில் தன்னாலியன்ற தொண்டு செய்து கொண்டிருந்தான். ஆகையால் அவன் அன்று விடுதிக்குள் நுழைந்த உடனே அவனைப் பலர் சூழ்ந்து கொண்டார்கள் "டில்லியில் என்ன நடக்கிறது? இன்னும் அங்கே ஹிந்து- முஸ்லிம் சண்டை நடப்பது உண்மைதானா? காந்தி மகாத்மா இப்படி அநியாயம் செய்யலாமா? முஸ்லிம்களுக்காக இவர் எதற்காகப் பரிந்து பட்டினி கிடக்க வேண்டும்? டில்லியில் முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றிய வீடுகளையெல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்றும் வெளியேறியவர்களைக் கூப்பிட்டுக் குடிவைக்க வேண்டும் என்று சொல்கிறாராமே? இது என்ன அநீதி? பாகிஸ்தானத்திலே நாங்கள் விட்டுவந்த எங்கள் வீடுகளையெல்லாம் திருப்பிக் கொடுப்பார்களா? டில்லியில் அகதிகள் தங்கியிருக்கும் முஸ்லிம் மசூதிகளையெல்லாம் காலிசெய்து முஸ்லிம்களிடம் ஒப்புவிக்க வேண்டும் என்கிறாராமே? இது சரியா? முஸ்லிம்கள் ஹிந்துக்களின் கோயில்களையும் சீக்கியர்களின் குருத்துவாரங்களையும் நெருப்பு வைத்துக் கொளுத்தி மண்ணோடு மண்ணாக்கி விட்டார்களே! அப்படியிருக்க ஹிந்து அகதிகள் சில காலம் மசூதிகளில் தங்கியிருந்து விட்டால் மோசம் என்ன?

அவர்களை ஏன் விரட்டி அடிக்க வேண்டும்"- இப்படி எல்லாம் அகதிகள் கேட்டார்கள். ஒரு ஸ்திரீ பரபரவென்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து சூரியாவைப் பார்த்து, "டில்லியில் சுயராஜ்யம் ஸ்தாபனமாகிவிட்டது என்று சொல் கிறார்களே! அது நிஜந்தானா? நம்முடைய தலைவர்கள் ராஜ்யம் ஆளுகிறார்கள் என்று சொல்கிறார்களே? அதுவும் உண்மை தானா?" என்று கேட்டாள். "ஆமாம்; ஆமாம்" என்றான் சூரியா. "அப்படியானால் எனக்கு ஒரு புதுத் துணி (நயா கபடா) கிடைக்குமா?" என்று வினவினாள் அந்த ஸ்திரீ, அவள் உடுத்தியிருந்த சேலை ஆயிரம் கந்தலாயிருந்தது. சூரியா கண்ணில் துளிர்ந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, கிடைக்கும்" என்றான். கேள்வி கேட்டவர்கள் எல்லாருக்கும் கூடிய வரையில் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தான். அகதி முகாமின் தலைமை அதிகாரியைப் பார்த்துத் தான் திரும்பி வந்து விட்டதைத் தெரியப்படுத்தி விட்டு மேலே பானிபத் பட்டணத்துக்குள் போனான். பானிபத் பட்டணம் மற்றும் பல வட இந்தியாவின் பட்டணங்களைப் போலவே சந்தும் பொந்துமாயிருந்தது. தெரு வீதிகள் மேட்டில் ஏறிப் பள்ளத்தில் இறங்கின. வீதிகளிலும் சந்து வழிகளிலும் கருங்கல்களைப் பதித்திருந்தபடியால் வண்டிகள் கடக்முடக் என்று கஷ்டப்பட்டுக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. ஒருகாலத்தில், அதாவது ஆறு மாதத்திற்கு முன்பு, பானிபத் பட்டணத்தில் பாதிப் பேர் முஸ்லிம்களா யிருந்தார்கள். அவர்களும் அந்தப் பட்டணத்தில் வசித்த மற்ற ஹிந்துக்களும் அந்யோன்யமாக இருந்தார்கள். இஸ்லாமிய மதத்தின் மகான்கள் சில பானிபத்தில் சமாதி அடைந்திருக்கிறார்கள். அந்தச் சமாதிகளுக்கு வருஷந்தோறும் உற்சவம் நடப்பதுண்டு. அந்த உற்சவத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களோடு உற்சாகமாய்க் கலந்து கொள்வதுண்டு. ஹிந்து - முஸ்லிம்கள் அண்ணன் தம்பிகளைப்போல் பலநூறு ஆண்டுகளாகப் பானிபத்தில் வாழ்ந்து வந்தார்கள்.

இப்போதோ, பானிபத் தெருக்களில் ஒரு முஸ்லிம் புருஷனையோ, ஸ்திரீயையோ குழந்தையையோ பார்க்க முடியாது. அவ்வளவு பேரும் ஊரைவிட்டு வீட்டை விட்டு நாட்டை விட்டு போய்விட்டார்கள். மேற்குப் பஞ்சாபில் கொடுமைக்காளான ஹிந்து அகதிகள் ஆயிரக்கணக்கில் தங்கள் துயரக் கதைகளைச் சொல்லிக் கொண்டும் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை முகத் தோற்றத்தின் மூலம் காட்டிக் கொண்டும் மேலும் மேலும் வந்துகொண்டிருந்த போது கிழக்குப் பஞ்சாப் ஹிந்துக்களின் இரத்தம் கொதித்தது. அவர்களில் பலர் வெறிகொண்டு பழிக்குப்பழி வாங்க எழுந்தார்கள். ஆனால் அதற்குள்ளே முஸ்லிம்கள் மூட்டை கட்டிக்கொண்டு புறப்படத் தொடங்கிவிட்டார்கள். டில்லியிலிருந்து அமிருதசரஸ் வரையில் கிழக்குப் பஞ்சாப் முழுவதிலும் பெயருக்கு ஒரு முஸ்லிம்கூட இல்லாமற் போய்விட்டது. பானிபத்திலும் அப்படியேதான்! ஊருக்குள்ளே உற்சாகமோ கலகலப்போ இல்லை. வீதிகளில் நடமாட்டமும் குறைவுதான். தப்பித்தவறிப் பார்த்தவர்களின் முகங்கள் களையிழந்திருந்தன. சுமாரான அகலமுள்ள தெருக்களையும் குறுகலான சந்து பொந்துகளையும் கடந்து சூரியா சென்றான். ஒரு சந்திலிருந்து குறுக்குக் கால் நடைபாதை ஒன்று செங்குத்தான மேட்டின் மேலே ஓடியது அதன் வழியே சூரியா போனான். மேட்டின் உச்சியில் ஒரு மசூதி இருந்தது. அநாதையான ஸ்திரீ அகதிகளுக்கு அந்த மசூதிக்குள்ளே இடம் தரப்பட் டிருந்தது. அந்தப் பெண்களில் சிலர் ராட்டினத்தில் நூல் நூற்றார்கள். சிலர் தையல் இயந்திரங்களில் குழந்தைகளுக்குரிய சட்டை தைத்தார்கள். சிலர் சிங்காரப் பூக்கூடைப் பின்னினார்கள். ஆனால் அந்த ஸ்திரீகளின் முகத்தில் உயிர்க் களை கிடையாது. அவர்களுடைய குழிவிழுந்த கண்களில் ஒளி என்பதே இல்லை. எதிரில் உள்ளவற்றைக் குருடர்கள் பார்ப்பதைப் போல் அவர்கள் காதில் விழுந்ததாகவே தோன்றுவதில்லை. உயிரற்ற பிரேதங்களை ஏதோ ஒரு மந்திர சக்தியால் எழுப்பி உட்கார வைத்து வேலை செய்யப் பயிற்றுவதைப் போலவே இருந்தது. நரகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டுத் திரும்பி வந்தவர்களின் முகத்தோற்றம் இப்படித்தான் இருக்கும் போலும்!

இவர்களையெல்லாம் பரிதாப நோக்குடன் பார்த்துக் கொண்டே சூரியா மசூதியைக் கடந்து அப்பால் சென்றான். ஒரு மிகக் குறுகிய சந்தில் இருந்த இருளடைந்த வீட்டில் பிரவேசித்தான். அதிலேதான் சீதாவும் அவள் தகப்பனாரும் வசித் தார்கள். சீதாவுக்குச் சுய உணர்வு வந்த பிறகு அவள் சமையல் அறையில் காரியம் செய்யப் புகுந்தாள். துரைசாமி ஐயர் முன்னறையில் பத்திரிகை படித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். "சூரியா, வா! என்ன இவ்வளவு தாமதம்? நேற்று ராத்திரியே ஏன் வரவில்லை?" என்று கேட்டார். சூரியா சும்மா இருந்தான். "ஏன் அப்பா, மௌனமாக இருக்கிறாய்? டில்லியில் ஏதாவது விசேஷம் உண்டா?" என்று கேட்டார் துரைசாமி ஐயர். "வழக்கமான விசேஷந்தான்; வேறொன்று மில்லை, எங்கே பார்த்தாலும் துவேஷம், குரோதம், பீதி?- யார் மனதிலும் நிம்மதி கிடையாது." "காந்தி மகாத்மாவின் பிரார்த்தனைக்கு இந்தத் தடவை நீ போகவில்லையா? பிரார்த்தனைக்குப் போனால் மனம் நிம்மதியடைகிறது என்று சொல்லுவாயே!" "போனேன்; ஆனால் அங்கேயும் இந்தத் தடவை மனம் சாந்தியடையவில்லை. மகாத்மா தற்சமயம் டில்லியில் இருப்பதே தப்பு என்று தோன்றுகிறது. வேறு எங்கேயாவது அவர் போய்விட்டால் நன்றாயிருக்கும்." "இது என்ன, இப்படி ஆரம்பித்து விட்டாய், தம்பி! மகாத்மா டில்லியில் இருந்தால் உனக்கு என்ன வந்தது?" "எங்கே பார்த்தாலும், காந்திஜியைப் பற்றிக் கோபமாகப் பேசுகிறார்கள். அவருடைய காரியங்கள் டில்லியில் யாருக்கும் பிடிக்கவில்லை. உத்தியோகஸ்தர்கள், காங்கிரஸ்காரர்கள், வியாபாரிகள், மற்ற பொது ஜனங்கள் எல்லாருமே அவரிடம் வெறுப்பாயிருக்கிறார்கள். அகதிகளுடைய கோபத்தைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. காந்திஜி எந்த முஸ்லிம்களுக்காகப் பரிந்து பேசுகிறாரா, அவர்களாவது அவரிடம் நன்றி செலுத்து கிறார்களா என்று கேட்டால், அப்படியும் தெரியவில்லை."

"பெரியவர்கள் 'யதார்த்தவாதி பஹுஜன விரோதி' என்று தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள்? யார் எப்படிப் பேசினாலும் யார் என்ன மாதிரி நடந்து கொண்டாலும் மகாத்மாஜிக்கு ஒரு பரமானந்த சிஷ்யை இருக்கிறாள். உன் அத்தங்காளைத்தான் சொல்கிறேன். நீ ஒரு தடவை அவளை அழைத்துக்கொண்டு போய் மகாத்மாவின் தரிசனம் பண்ணி வைக்கவேண்டும். அந்தப் புண்ணிய புருஷரின் தரிசனத்தால் ஒரு வேளை சீதாவின் சித்தப்பிரமை மாறினாலும் மாறலாம். இன்றைக்கு ஒரு தடவை சீதாவுக்கு மயக்கம் போட்டுவிட்டது. மறுபடி ஸ்மரணை வரப் பண்ணுவதற்கு ரொம்பவும் கஷ்டமாய்ப் போய்விட்டது. உன்னையும் என்னையும் தவிர வேறு யாராலேயும் அதைச் சகிக்க முடியாது." "சீதா மகாத்மாஜியைத் தரிசிக்க வேண்டும் என்றால் சீக்கிரமே அழைத்துப் போக வேண்டும். அதிக நாள் காந்திஜி டில்லியில் இருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. அங்கே சூழ்நிலை அப்படி இருக்கிறது. பிரார்த்தனைக் கூட்டத்தில் யாரோ குண்டு எறிந்த விஷயம் தெரியும் அல்லவா?" "தெரியாமல் என்ன? பத்திரிகைகளிலேதான் படித்தோமே, அதற்கெல்லாம் மகாத்மாகாந்தி பயந்துவிடுகிறவரா, என்ன?" "அவர் பயப்படவுமில்லை; இலட்சியம் செய்யவுமில்லை. பத்திரிகையில் படித்தபோது எனக்கும் ஏதோ வேடிக்கை மாதிரிதான் தோன்றியது. அங்கே போய்ப் பார்த்தபோது வேடிக்கையாக இல்லை, குண்டு வெடித்ததில் ஒரு பக்கத்துச் சுவரே இடிந்து போயிருக்கிறது." "மகாத்மா பயப்படா விட்டாலும் நீ ரொம்பப் பயந்து போயிருக்கிறாய். அது போனால் போகட்டும், சூரியா! டில்லியில் வேறு யாரையாவது பார்த்தாயா? ஏதாவது செய்தி உண்டா?" என்று துரைசாமி ஐயர் கேட்டார். "பார்த்தேன்! உங்கள் அருமையான மாப்பிள்ளையைப் பார்த்தேன்!" என்று சூரியா சொன்னதும் துரைசாமி ஐயரின் முகத்தில் திடீரென்று ஆர்வத்தின் அறிகுறி தோன்றியது. "நீ அவனை எதற்காகப் பார்த்தாய்? நான்தான் பார்க்க வேண்டா மென்று சொல்லி யிருந்தேனே?" "நானாகத் தேடிக்கொண்டு போய்ப் பார்க்கவில்லை, சந்தர்ப்பம் அப்படி நேரிட்டது. உங்கள் மாப்பிள்ளை மூன்றாந் தடவையாக என்னைக் கொன்றுவிடப் பார்த்தார்! சாலையோடு போய்க் கொண்டிருந்தவன் பேரில் மோட்டாரை விட்டு ஓட்டிவிடலாம் என்று பார்த்தார். கடவுள் அருளால் தப்பிப் பிழைத்தேன்."

"நீ பிழைத்துக்கொண்டாய் என்றுதான் தெரிகிறதே!அப்புறம் என்ன? உன்னோடு அவன் பேசினானா? ஏதாவது உன்னைக் கேட்டானா?" "பேசாமல் என்ன? கேட்காமல் என்ன? என்னை மோட்டாரில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துப் போனார். சீதாவைப் பற்றி எனக்கு ஏதாவது தெரியுமோ என்று கேட்டார்." "நீ என்ன பதில் சொன்னாய்?" "சீதா செத்துப்போய் விட்டாள் என்று சொல்லி வைத்தேன்!" "அட பாவி எதற்காக அப்படிச் சொன்னாய்?" "பின்னே என்ன சொல்லச் சொல்கிறீர்கள்! உங்கள் குமாரியோ தான் உயிரோடு இருப்பது அந்த மனுஷருக்குத் தெரியவே கூடாது என்கிறாள். அவரோ மறுபடியும் கலியாணம் செய்துகொள்ளத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்!" "அவனுக்கு இன்னொரு கலியாணம் வேறேயா? அந்தக் கிராதகனை எவள் கலியாணம் செய்து கொள்ளுவாள்?" "அத்திம்பேரே! அதென்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? உங்கள் மூத்த பெண் ஒருத்தி இருக்கிறாளே?அவளைப் பற்றித் தான் அவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்." இத்தனை நேரமும் சாய்ந்து படுத்திருந்த துரைசாமி ஐயர் சடக்கென்று நிமிர்ந்து உட்கார்ந்தார். "சூரியா! தாரிணியைப் பற்றி ஏதாவது அவன் சொன்னானா?" என்று கேட்டார். தாரிணி சீதாவின் பெயருக்கு எழுதியிருந்த கடிதத்தைப் பற்றிச் சூரியா அவருக்குத் தெரிவித்துவிட்டு, "தாரிணியும் வஸந்தியும் பிழைத்திருக்கிறார்கள் அந்த வரையில் நல்ல செய்திதான்!" என்றான். "தாரிணியை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும். சூரியா! நீ சொன்னது போல் ஏதாவது நடந்துவிட்டால் தடுக்க வேண்டும்" என்று பரபரப்புடன் கூறினார் துரைசாமி. "தாரிணியைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் நான் டில்லியில் இருந்தாக வேண்டும். எப்படியும் உங்கள் மாப்பிள்ளையின் வீட்டைத் தேடிக்கொண்டு அவள் வருவாள். நான் டில்லியில் இருந்தால் கண்டுபிடித்து விடுவேன்" என்றான் சூரியா.

"அப்படியே செய்யலாம்! நாம் எல்லோருமே வேணுமானாலும் டில்லிக்குப் போய்விடலாம்." "அத்திம்பேரே! நான் ஒரு யோசனை சொல்லுகிறேன் தயவு செய்து கேட்பீர்களா?" என்று சூரியா நயமாகக் கூறினான். "அது என்ன யோசனை? புதிதாக என்ன சொல்லப் போகிறாய்? சொல், கேட்கலாம்!" என்றார் துரைசாமி. "யோசனையைச் சொல்வதற்கு முன்னால் வேறு சில விஷயங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். உங்கள் குமாரி சீதாவை முதன் முதலில் நான் ராஜம்பேட்டைச் சாலையில் சந்தித்தேன். வண்டி குடை சாய்ந்து அதன் பக்கத்திலிருந்த ஓடையில் விழுந்தாள். அவளைக் காப்பாற்றுவதற்காக ஓடினேன். ஆனால் ஓடையில் தண்ணீர் முழங்கால் ஆழந்தான் என்று தெரிந்ததும் ஏமாற்றமடைந்தேன். அதற்குப் பிறகு எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. தங்களுடைய தந்தியை மறைத்து வைத்து, சீதாவுக்கும் சௌந்தரராகவனுக்கும் கலியாணம் ஆவதற்கு நானே காரணமானேன்." "அதற்காக உன்னை நான் எத்தனையோ தடவை சபித்தாகிவிட்டது அப்புறம் சொல்!" என்றார் கிழவர். "அத்திம்பேரே! நல்ல எண்ணத்துடன் நான் அப்போது செய்த தவறுக்கு அப்புறம் பல தடவை பிராயச்சித்தம் செய்து விடவில்லையா? கைத் துப்பாக்கியினால் சுட்டுக் கொள்ளப் போனவளை நான் தடுத்துக் காப்பாற்றவில்லையா?" "காப்பாற்றினாய்; ஆனால் அதற்குப் பிறகு என்ன ஆயிற்று? உன்னால் அவள் எத்தனை கஷ்டங்களுக்கு உள்ளானாள்? நான் மட்டும் உங்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிராவிடில் அவளுடைய கதி என்ன ஆகியிருக்கும்?"

"அதுவும் போனால் போகட்டும், சேனாப் நதியின் பயங்கரமான வெள்ளத்தில் அவள் முழுகிச் சாகாமல் நான் காப்பாற்றவில்லையா? அவளைக் கரையேற்றிக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டு உங்களையும் காப்பாற்றுவதற்கு வந்தேன். நீங்கள் என்னை அமுக்கிக் கொன்று விடப் பார்த்தீர்கள். கடவுள் அருளால், - இல்லை, அல்லாவின் அருளால், இருவரும் பிழைத்தோம். உங்களை முஸ்லிம் என்று எண்ணிக் கொண்டு அக்கரையிலிருந்து ஒரு முஸ்லிம் படகுக்காரன் வந்து காப்பாற்றினான். பிறகு அவனிடமிருந்து நாம் தப்பிப் பிழைத்தபாடு தெய்வம் அறிந்து போயிற்று." "உனக்கென்ன பைத்தியமா, சூரியா! அந்தப் பயங்கர அநுபவங்களையெல்லாம் எதற்காக மறுபடியும் ஞாபகப்படுத்துகிறாய்?" "எதற்காகவென்றால், சீதாவின் பேரில் எனக்குள்ள உரிமையை ஸ்தாபித்துக் கொள்வதற்காகத்தான். நீங்கள் அவளைப் பெற்று வளர்த்தீர்கள். நான் அவளை இரண்டு தடவை யமதர்மனின் கையிலிருந்து விடுதலை செய்தேன். இப்போதுள்ள சீதாவின் உயிர் பழைய உயிர் அல்ல. நான் அவளுக்குக் கொடுத்த புதிய உயிர். ஆகையால் ராகவனுக்கு இப்போது சீதாவின் பேரில் எந்தவித பாத்தியதையும் இல்லை. நீங்கள் இதை ஒப்புக் கொண்டால் நாம் இருவரும் ராகவனிடம் நேரில் சென்று சீதாவுக்கு விவாக விடுதலை கொடுத்து விடும்படி வற்புறுத்துவோம்!....." "அவன் விடுதலை கொடுத்துவிட்டால்?...." என்று துரைசாமி ஐயர் கேட்டார். அவருடைய முகம் கோபத்தினால் சிவந்திருந்தது. "தாங்களே ஊகித்துக் கொள்வீர்கள் என்று நினைத்தேன். சொல்ல வேண்டும் என்றால் சொல்கிறேன். விவாகப் பிரிவினை ஆனபிறகு நானே சீதாவை மணம் செய்து கொள்ளுகிறேன். கலியாணம் செய்துகொண்டு அவளை காஷ்மீருக்கு அழைத்துப் போகிறேன். இல்லாவிட்டால் நோபாளத்திற்கு அழைத்துப் போகிறேன். புதிய இடங்களைப் பார்த்துப் புதிய மனிதர்களுடன் பழகினால் சீதாவின் சித்தப்பிரமை நீங்கிவிடும். அத்திம்பேரே! உங்கள் குமாரியைக் கடைசி வரை காப்பாற்றுவதாகச் சத்தியம் செய்து கொடுக்கிறேன்."

துரைசாமி ஐயரின் பக்கத்தில் ஒரு கைத்துப்பாக்கி கிடந்தது. அதை அவர் எடுத்துக் கொண்டார்; சூரியாவை நோக்கிக் குறிபார்த்தார். "சூரியா! முன்னொரு தடவை இந்தத் துப்பாக்கி குறி தவறிவிட்டது. இரண்டாவது தடவை நிச்சயமாய்க் குறி தப்பாது. சீதாவைப்பற்றி இப்படி மறுபடியும் ஒரு தடவை பேசினாயோ உன்னைக் கட்டாயம் சுட்டுக் கொன்று விடுவேன்!" என்றார். சூரியா சற்று நேரம் தலைகுனிந்த வண்ணமிருந்தான்; பிறகு நிமிர்ந்து பார்த்தான். "அத்திம்பேரே! எனக்கு நிச்சயமாகப் பைத்தியம்தான் பிடித்துவிட்டது, இல்லாவிட்டால் இப்படி நான் உளறியிருக்க மாட்டேன்" என்றான். "பைத்தியம் பிடித்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறாயல்லவா? அதனால் புத்தி தெளிவு இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது என்று ஏற்படுகிறது; போகட்டும். நீ இப்போது உளறியதை நானும் மறந்து விடுகிறேன்; நீயும் மறந்து விடு! டில்லிக்குப் புறப்படுவதற்கு யத்தனம் செய்!" "டில்லிக்குப் போக வேண்டியதுதான், ஆனால் இங்கேயுள்ள அகதிகளை விட்டுப் போக வேண்டுமே என்று வருத்தமாயிருக்கிறது. அத்திம்பேரே! பத்து வருஷ காலமாகச் 'சுதந்திரம்! சுதந்திரம்!' என்று அலறிக் கொண்டிருந்தேன். சுதந்திரம் என்னமோ வந்து விட்டது. ஆனால் அந்தச் சுதந்திரம் இவ்வளவு கசப்பு மருந்தாக இருக்குமென்று கனவிலும் கருதவில்லை!" என்றான் சூரியா. "மருந்து என்றால் கசப்பாகத்தானிருக்கும். அதற்குப் பயப்பட்டு என்ன செய்கிறது?" என்றார் கிழவர். துரைசாமி ஐயர் இன்னும் துப்பாக்கியைக் கையிலே வைத்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயம் சீதா அங்கு வந்தாள். சூரியாவைப் பார்த்ததும் அவளுடைய முகம் சிறிது மலர்ந்தது.

அதற்குள் அவளுடைய பார்வை தன் தந்தையின் கையில் வைத்திருந்த துப்பாக்கியின் பேரில் சென்றது. துரைசாமி ஐயரைச் சீதா துயர முகத்துடன் உற்றுப் பார்த்தாள். அவளுடைய கண்களிலிருந்து சலசலவென்று கண்ணீர் பொழிந்தது. துரைசாமி ஐயரின் கையிலிருந்து கைத்துப்பாக்கி நழுவி விழுந்தது. அதை எடுத்துச் சீதாவின் கையில் கொடுத்துச் சமிக்ஞையினால் அதைத் தூர எறிந்து விடும்படி சொன்னார். பிறகு சூரியாவைப் பார்த்து, "சூரியா! சூரியா!" உன் அத்தங் காளுக்கு மயக்கம் வந்துவிடப் போகிறது. காந்தி மகாத்மாவைப் பார்க்க அவளை டில்லிக்கு அழைத்துக்கொண்டு போவதாகச் சொல்!" என்றார். சூரியா மகாத்மா காந்தியின் படத்தைச் சுட்டிக் காட்டி, அவரைப் பார்ப்பதற்குச் சீதாவை அழைத்துக் கொண்டு போவதாக ஜாடையினால் தெரியப்படுத்தினான். சீதா தந்தையின் முகத்தைப் பார்த்தாள். அவரும் 'சரிதான்' என்று சமிக்ஞை செய்தார். உடனே சீதாவின் கண்ணீர் நின்றது. அவள் முகம் பிரகாசம் அடைந்தது. அவளுடைய கண்களில் ஒரு புதிய ஒளி பிறந்தது. பேதைப் பெண்ணே! வாழ்க்கையில் உன்னுடைய கடைசி மனோரதமாவது நிறைவேறப் போகிறதா? பிறந்ததிலிருந்து கஷ்டமும் நஷ்டமும் உன்னுடைய ஜாதக ரீதியாக இருக்கும் போது நீ விரும்பும் அந்த மகா பாக்கியம் மட்டும் உனக்கு எப்படிக் கிட்டும்?
 

New Threads

Top Bottom