அத்தியாயம் 3
பூர்ணிமா கருவுற்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சியடைந்த நீதிதாசன்,
"இந்த முறை எனக்கு பொம்பளப்புள்ள தான் வேணும் பூமா" எனக் கேட்டுக்கொண்டே அவளின் மூக்கோடு மூக்கு உரச, அவனிடமிருந்து விலகினாள் பூர்ணிமா.
"இந்த குழந்தை நமக்கு வேண்டாம் அத்தான். இவ்வளவு வருசம் கழிச்சி குழந்தையானு எல்லாரும் கிண்டல் செய்வாங்க. நம்ம யாருக்கும் தெரியாம இந்தக் குழந்தையை கலைச்சிடலாம்" என்றாள்.
நீதிதாசனுக்கு ஆத்திரம் தலைக்கேறினாலும், அவளின் குணமறிந்து கனிவாகப் பேசினான்.
"இல்ல, கண்டிப்பா எனக்கு இந்தக் குழந்தை வேணும் பூமா. பிளீஸ்" எனத் தன் அன்பால் அவளை கட்டுப்படுத்தி பிள்ளையை பெற்றுக் கொடுக்க சம்மதிக்க வைத்தான்.
இம்முறையும் பூர்ணிமா பிரசவத்திற்காக திருநெல்வேலிக்கு சென்றிருந்தாள். ஒன்பது வயது நிரம்பியிருந்த அசோகமித்ரன் அப்போது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனின் படிப்பு கெடக்கூடாதென அவனை நீதிதாசனுடன் சென்னையிலேயே விட்டுவிட்டு திருநெல்வேலிக்கு தான் மட்டும் வந்திருந்தாள்.
மரகதம் தன் பேரனிடம், "உனக்கு தங்கச்சி பொறக்கப்போறா அக்னி. உன் அம்மை வயித்துல ஒரு பாப்பா இருக்கா" என சொல்ல, மண்பானையை கவிழ்த்து வைத்தது போல் உருண்டிருந்த தனது அன்னையின் மணிவயிற்றை ஆர்வமாக பார்த்தான் அவன்.
பூர்ணிமா தன்னுடன் பேசாவிடினும் அவ்வப்போது அவளையே பார்ப்பது, தூங்கும் போது அவளை நெருங்கி அவள் வயிற்றில் முத்தமிடுவது என்று பாசத்தை வாரியிறைத்துக் கொண்டிருந்தான்.
காலையில் தன் பேரனுக்கு காய்ச்சிய பாலில் நாட்டு முட்டையை அடித்து கொடுத்த மரகதம், தன் மருமகளுக்கு குங்குமப்பூ கலந்த பாலைக் கொடுக்கச் செல்ல, அவரை தடுத்த அக்னிமித்ரன், "பாட்டி எங்கம்மைக்கு மட்டும் பாலுல என்ன கலந்து கொடுக்குதா?" என சந்தேகமாகக் கேட்டான்.
"அது குங்குமப்பூ மக்கா" என்றார் மரகதம்.
"என்னது குங்குமப்பூவா? இந்த பூவுலயிருந்து தான் குங்குமம் வருதா பாட்டி?" என்றவன் மறுகேள்வி கேட்க,
அவன் கேள்வியில் திகைத்தவர், "இல்ல மக்கா. அது மஞ்சள்ல இருந்து வருது. இது ஒரு பூவு. இது குங்கும கலர்ல இருக்குல்லா? அதான் இது பேரு குங்குமப் பூவுனு வச்சுருக்காவ" என விளக்கமாகக் கூறினார்.
"ஓ! அப்படியா? அந்தப் பூவ ஏன் பாட்டி அம்மாவுக்கு கொடுக்குதா?” என்றதும்,
"இதை பால்ல போட்டு குடிச்சா வயித்துலயிருக்க உன் தங்கச்சி நல்லா செவப்பா பொறப்பா மக்கா. அதான்" என்றதும்,
"ஓ! அப்போ ஏன் பாட்டி நான் எங்கம்மை வயித்துல இருக்கப்போ நீ எனக்கு இதை கொடுக்கல? கொடுத்திருந்தா நானும் அசோகா மாதிரியே வெள்ளையா பொறந்திருப்பேம்லா?” என்றதும், மாட்டிக்கொண்டது போல் விழித்தார் மரகதம்.
ஆனால், அவர்கள் பேசுவதையெல்லாம் ஒற்றுக்கேட்டுக் கொண்டிருந்த பூர்ணிமா வெடுக்கென்று பேசினாள்.
“அதெல்லாம் உங்கப்பா டப்பா டப்பாவா வாங்கிக் கொடுத்தாருடா. ஆனா அச்சு அப்படியும், நீ இப்படியும் தான் பொறக்கணும்னு என் தலையில எழுதியிருக்கு. அதான் எதுவும் வேலை செய்யாப்போச்சு. இப்ப எல்லாம் புரிஞ்சிடுச்சா? துரை இப்ப ஸ்கூலுக்கு கிளம்பறீங்களா?" என நக்கலாகக் கேட்டதும், மரகதம் முகத்தைத் தூக்கினார்.
"புள்ளைக்கிட்ட போய் எப்படி பேசறாப் பாரு?" என்று அவளை மரகதம் வில்லிப் பார்வை பார்த்துக் கொண்டிருக்க, பூர்ணிமா கூறியதில் அக்னிமித்ரன் தலைகுனிந்தபடியே பள்ளிக்கு புறப்பட்டான்.
அங்கு பள்ளியிலோ கடைசி வரிசையில் அமர்ந்திருந்த தன் உயிர் நண்பர்கள் விஜி மற்றும் மொக்கையிடம் காலையில் தங்கள் வீட்டில் நடந்த தனைத்தையும் கூறினான்.
அதில் விஜி என்றழைக்கப்படும் விஜய்குமார், "ஏலேய் அக்னி! அதை குடிச்சா உங்க பாப்பா அருந்ததில வர அனுஷ்கா அக்கா மாதிரி கலரா பொறப்பாலாலேய்? எங்களுக்கு அந்த பூவை காட்டுலேய் பார்க்கணும்" என்றதும், வேறு வழி இல்லாமல் அவர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தான்.
யாருமில்லாத சமயமாய் பார்த்து சமையலறைக்கு அழைத்துச் சென்று அந்த குங்குமப்பூவை காண்பித்தவன், அதிலிருந்த சில காய்ந்த துணுக்குகளை எடுத்து தின்று பார்க்கக் கொடுத்தான்.
விஜய்குமார் முகத்தை சுளித்து, "லேய் இது கசக்குதுலேய்" என அருகிலிருந்த காசிப் பானையிலிருந்து இரண்டு டம்ளர் நீரைக்கோரி பருக,
அக்னிமித்ரன் சிரித்துக்கொண்டே பூஸ்ட் பாட்டீலில் இருந்து சாக்லேட் மாவையும், டப்பாவிலிருந்து முந்திரி, கிஸ்மிஸ் பழத்தையும் எடுத்து அவர்களின் கையில் தின்னக் கொடுத்தான்.
வேக வேகமாய் தின்றவர்கள் தங்கள் சட்டைப்பைகளுக்குள்ளும் பூஸ்ட்டை அடைத்துக் கொண்டனர்.
குங்குமப்பூவைப் பார்த்துவிட்டு வெளியே செல்லப்போனவர்கள், திறந்து கிடந்த கதவின் வழியே, தன் அறையில் ஒரு பக்கமாய் சாய்ந்து படுத்து குறட்டைவிட்டுக் கொண்டிருந்த பூர்ணிமாவைக் கண்டனர்.
அவளின் அறைக்குள் நுழைந்த விஜய்குமார், "இந்த பெரிய முட்டை வயித்துக்குள்ள தான் உங்க பாப்பா இருக்காளா அக்னி?" என வினவ,
"ஆமாலேய், இதுக்குள்ள தான் இருக்கா" எனத்தன் அன்னையின் சேலைத் தலைப்பை விலக்கி பழக்க தோஷத்தில் முத்தம் பதித்தான்.
அதனைப் பார்த்த மொக்கை என்கிற மோகன், "ஏலேய் அக்னி உங்க பாப்பா செவப்பா தாம்லேய் பொறக்கப்போறா" என மெதுவாக கிசுகிசுத்தான்.
"எப்படிலேய் சொல்லுதா?" என சந்தேகமாய் கேட்டான் அக்னிமித்ரன்.
"உங்க அம்மை வயிறு நல்லா செவப்பா இருக்குதுலா? அதாம்லேய் சொல்லுதேன்.
நம்ம கற்பகவல்லி அக்கா இருக்காவல்லா? அவிய வயிறு கருப்பா இருந்ததால தான் அவிய பாப்பாவும் கருப்பா பொறந்துச்சு.” எனவும்,
"அப்படியாலேய்? அப்போ நானும் அசோகாவும் பொறக்கறப்போ எங்கம்மையோட வயிறு என்ன கலருலலேய் இருந்திருக்கும்?" எனத்தன் அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்டான்.
தன் நாடியில் ஆட்காட்டி விரல் வைத்து யோசித்த மோகன், "ஹான்! அப்ப உங்கம்மையோட வயிறு ஒரு பக்கம் கருப்பாவும், ஒரு பக்கம் செவப்பாவும் இருந்திருக்கும்லேய். உங்கப்பா அந்தப்பூவை உங்கம்மைக்கு கொடுக்கறப்ப, அந்த அசோகா உன்னை தள்ளி விட்டுட்டு மொத்தப் பூப்பாலையும் அவனே குடிச்சிருப்பாம்லேய். அதான் நீ கருப்பாயிருக்கா" என்றதும், தன்னையறியாமலேயே அசோகமித்ரன் மீது விரோதத்தை வளர்த்துக் கொண்டான் அக்னிமித்ரன்.
சிறு சிறு கோபங்கள் தானே வன்மமாய் உருவெடுக்கும்?
"ஏலேய் அக்னி, நானும் உங்க பாப்பாவுக்கு முத்தம் கொடுக்கவாலேய்?" எனக்கேட்ட மோகன், அனுமதி வாங்கியவுடன் பூர்ணிமாவின் அருகில் சென்று அவள் வயிற்றில் முத்தம் பதித்தான்.
மோகன் முத்தம் கொடுத்தப்பின் விஜய்குமாரும், "நானும் முத்தம் கொடுக்குதேம்லேய்" எனத் தன் கண்களை சுருக்கிக் கேட்டான்.
"சரி கொடு" என்றதும், அவன் முத்தம் பதிக்க, திடீரென உள்ளிருந்து யாரோ அடித்தது போல் இருந்தது.
உடனே நிமிர்ந்து தன் நண்பர்களை பார்த்தவன், "ஏலேய் உள்ள ஏதோ அசையுதுலேய்" எனக் கூற, உடனே தனது பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது அக்னிமித்ரனுக்கு.
"அது எங்க பாப்பா உன்னை காலால எட்டி உதைக்குதாலேய்" என சிரித்துக்கொண்டே அவன் வெளியேற, உடன் வந்த விஜய்குமார் விழி பிதுங்கினான்.
"எதுக்குலேய் உங்க பாப்பா என்னை மட்டும் உதைக்குதா?" என அழாக்குறையாக கேட்டான்.
உடனே அக்னிமித்ரனின் மூளை வருங்கால தொழிலதிபனாய் பலவற்றை கணக்குப்போட்டது.
"ஏலேய் விஜி, நேத்து நீ எனக்கு சேமியா ஐஸ் வாங்கித் தராம நீ மட்டும் தின்னுட்டால்லா? அதை நான் எங்க பாப்பாக்கிட்ட சொன்னேன். அதாம்லேய் அவா உன்னை அடிக்குதா" என்றதும்,
"ஓ அப்படியா? அதான் அவா என்னை அடிக்குதாளா? சரிலேய், நாளைக்கு மதியம் நான் உனக்கு சேமியா ஐஸ் வாங்கித் தரேன் என்ன? நீ என்னை அடிக்க வேணாம்னு உன் பாப்பாக்கிட்ட சொல்லிரு" எனவும், வேகமாக தலையாட்டினான் அக்னிமித்ரன்.