காதலில் விதிகள் ஏதடி
அத்தியாயம் 1
பொதுவாக புயலுக்கு முன்னும் பின்னும் அமைதி என்று நம் முன்னோர்கள் கூறுவது உண்டு. ஒருவேளை அந்த இரண்டும் ஒரே தருனத்தில் நிகழ்ந்தால் எத்தனை அமைதியாக இருக்குமோ, அத்தனை அமைதி நிலவியது அக்கிராமத்தில். கிராம மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இருந்த அம்மக்களி
ன் பார்வை, எப்போது வேண்டுமானாலும் வெடிக்க தயாராக இருக்கும் எரிமலையைப் போல கோபத்தின் உச்சியில் நின்று கொண்டிருந்த ஆதிரையின் மீதே இருந்தது. ஆனால் ஆதிரையின் பார்வையோ தன் கழுத்தில் சுமார் ஒரு ஒரு மணி நேரத்துக்கு முன் தாலி கட்டியவனின் மீதே இருந்தது. கதைகளில் வருவதை போல அவளுக்கென சக்திகள் இருந்திருந்தால் அவனை தன் கண்களாலேயே எரித்திருப்பாள் என்றால் மிகையாகாது.
ஆதிரையால் நடந்த நிகழ்வுகளை நம்பவே முடியவில்லை. சிறு வயதில் இருந்தே அப்பா, அம்மா, தம்பி அவள் இதுவே அவள் குடும்பம் என்று வாழ்ந்து வந்தாள். உறவினர்கள் என்றால் அது தந்தை வீட்டு உறவினர்களே. தாய் வீட்டு உறவினர்கள் என யாரையும் அவள் இதுவரை பார்த்ததே இல்லை. வளர வளர இது கருத்தில் படவும் ஆதிரையே ஒரு முறை தன் தாயிடம் கேட்டது உண்டு
“ஏன் அம்மா! உங்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லையா? ஏன் யாரையுமே நான் பார்த்தது இல்லை?” என்றாள்.
ஆனால் அதற்கும் தாயிடம் இருந்து சரியான பதில் கிடைக்காததால், ‘முதலில் காதல் திருமணமாக இருக்குமோ! அதை தாய் வீட்டு பெரியவர்கள் யாரும் ஏற்று கொள்ளவில்லையோ’ என்று எண்ணினாள். கூடவே “ கல்யாணத்தின் முன்பே இவரை பற்றி தெரிந்திருந்தால் இவரை திருமணமே செய்திருக்க மாட்டேன்” என சண்டைகளுக்கு நடுவில் கூறும் தாயின் புலம்பல்கள் நினைவு வர இவர்கள் திருமணம் காதல் திருமணம் இல்லை என்று நினைத்தவள், தன் தாய்கென உறவினர்கள் யாரும் இல்லை போல எனதான் எண்ணியிருந்தாள். ஆனால் உண்மைகள் என்றுமே இரகசியமாக இருந்திடுவது இல்லையே!.
ஒரு வாரத்திற்கு முன்பு முத்து என்பவர் ஆதிரையின் தாய் மாமா என்று கூறிக்கொண்டு அவள் வீட்டிற்கு வரும் வரை அவளும் தன் தாய்கென உறவினர்கள் யாரும் இல்லை என்றே நம்பி கொண்டிருந்தாள். திடிரென ஒருவர் அவள் வீட்டிற்கு வந்ததும் இல்லாமல் அவர்தான் அவளது தாய் மாமா என்றும் அவளது தாயின் பூர்விகம் தஞ்சைக்கு அருகில் ஒரு கிராமம் என்றும் கூறினார். அவரது மகள் திருமணத்திற்கு அழைக்க வந்திருப்பதாகவும் கூறினார். முதலில் கிராமத்திற்கு வர மறுத்த பெற்றோர்களும் நீண்ட நேர பேச்சி வார்த்தகளுக்கு பிறகு
‘திருமண நாள் அன்று வருகிறோம்’ என்றனர்.
முத்துவோ அதையெல்லாம் காதில் வாங்காமல் கையோடு கூட்டி வருவதாக ஊரில் கூறி வந்தேன். எத்தனை நாட்கள் ஆனாலும் இருந்து கூட்டி செல்கிறேன் என பிடிவாதமாக இரண்டு நாட்கள் அவர்கள் வீட்டிலேயே தங்கி ஆதிரையின் குடும்பத்தை இந்த கிராமத்திற்கு அழைத்து வந்தார்.
நடப்பவை எதுவுமே புரியாமல் முழித்து கொண்டிருந்த பிள்ளைகளிடம் எதுவாக இருந்தாலும் இந்த திருமணம் முடிந்து மீண்டும் நம் வீட்டிற்கு வந்த பிறகு பேசி கொள்ளலாம் என்று பெற்றோர்கள் கூறியதால் பிள்ளைகளும் அதற்கு மேல் எதுவும் பேசி கொள்ளவில்லை. இவ்வாறே சென்னையில் இருந்து ஆதிரையின் குடும்பம் தஞ்சைக்கு அருகில் உள்ள அவளது தாயின் பூர்விகமான இக்கிராமத்திற்கு வந்தனர்.
ஆனால் தோண்ட தோண்ட புதையல் வரும் என்பார்களே அதைப்போல் கிராமத்திற்கு வந்த பிறகும் ஆதிரைக்கும் அவள் தம்பிக்கும் பல ஆச்சிரியங்கள் இருந்தன. உறவினர்களே இல்லை என்று நினைத்திருந்த தாய்க்கு முத்து என்பவரோடு சேர்த்து இரண்டு அண்ணன்களும் ஒரு அக்காவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றாகவே அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய பிள்ளைகள் என ஆதிரையின் வயதுடைய ஆறு ஏழு பிள்ளைகள் இருந்தனர். முதலில் யாருடனும் அதிகம் சேராமல் இருந்த ஆதிரையும் அவள் தம்பியும் இரண்டு நாட்களில் அங்குள்ள பிள்ளைகளுடன் நன்றாக ஒட்டி கொண்டனர்.
அங்குள்ள அனைவரும் இவர்கள் இருவரிடமும் நன்றாக பழகினாலும் கூட அவர்களது தாயுடன் அங்குள்ள அனைவருக்கும் என்ன பிரச்சனை என்றோ அல்லது இத்தனை ஆண்டுகளாக ஏன் யாரும் அவர்களை பார்க்க வரவில்லை என்பதை பற்றியெல்லாம் அங்கு யாரும் பேசவே இல்லை.
ஒரு வாரம் முழுவதுமாக திருமண வேலைகள் மற்றும் கடைசி நேர சாப்பிங் என அனைவரும் மிகவும் மும்மரமாக இருந்தனர். ஒருவழியாக அவர்கள் வந்த கல்யாண நாளும் வந்தது. திருமணத்திற்கு வந்த அனைவரும் ஆதிரையும், அவள் தம்பியையும் இவர்கள் தான் மங்களத்தின் மக்களா என நலம் விசாரித்து சென்றனர்.
அந்த குடும்பத்தில் நடக்கும் முதல் திருமணம் என்பதால் உறவினர்கள் நண்பர்கள் என கூட்டம் அலைமோதியது. பெரியவர்கள் அனைவரும் விருந்தினர்களை வரவேற்பதிலும் திருமண வேலைகளிலும் மும்மரமாக இருந்ததால், இளைஞர்களே அனைவரையும் உணவிற்கு அழைத்து செல்வது மற்றும் வந்த அனைவரும் உண்டார்களா என்று கவணிக்கும் பொறுப்புகளையும் எடுத்து கொண்டனர். ஒருவழியாக கூட்டம் குறைய தொடங்கியது.
சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என இளைஞர்கள் பட்டாலம் அமரும் வேலையில் திடிரென மண்டபத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. என்ன நடக்கின்றது என்று புரியாமல் அனைவரும் பார்க்க ஒரு பத்து பதினைந்து பேர் கைகளில் தாம்பழ தட்டுகளுடன் அங்கு வந்து கொண்டிருந்தனர். அதில் பட்டு புடவைகள் அணிந்து ஆறு ஏழு பெண்களும் அவர்களுக்கு பின்னால் நான்கைந்து ஆண்கள் மிகவும் கம்பீரமாகவும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை பார்த்ததும் மண்டபத்தில் இருந்த அனைவரும் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டனர். “பெரிய வீட்டிலிருந்து வந்திருக்கின்றார்களே! என்ன நடக்க போகிறதோ?” எனறு சிலர் பேசிக்கொள்வது ஆதிரையின் காதுகளில் விழுந்தது.
“பெரிய வீடா? அவர்கள் வந்தால் என்ன பிரச்சனை?” என எண்ணிக் கொண்டே அவள் குடும்பத்தை பார்த்த ஆதிரைக்கு அதிலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
அவள் குடும்பத்தில் யாருமே வந்தவர்களை கண்டுகொண்டதை போல் தெரியவில்லை. மேடையிலிருந்து அனைவரும் விலகிக் கொண்டிருந்தனர். வந்த விருந்தினர்களும் இவர்களது வரவேற்பை எதிர்பார்பது போல் தெரியவில்லை. அவர்கள் நேராக மேடையில் ஏறி விழாவின் நாயகியான மணப்பெண்ணுக்கு அவர்கள் கொண்டு வந்த வரிசைகளையும், தங்கத்தில் நகைகளும் பரிசு அளித்தனர். முதலில் தயங்கிய மணப்பெண் அவளது பெற்றோர்களை ஒருமுறை பார்த்துவிட்டு பரிசுகளை வாங்கிக் கொண்டாள்.
வந்தது பரிசு கொடுக்கதான் என்பதை போல புகைபடத்திற்காகவும் நிற்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். அவர்கள் செல்லும் போது சில விருந்தினர்கள் அவர்களுக்கு வணக்கம் வைப்பதையும் பார்க்க முடிந்தது. வணக்கம் வைப்பவர்களுக்கு நடக்கும் பொழுதே ஒரு சிறிய தலை அசைப்புடன் எங்கும் நின்று சிறு தாமதம் கூட இல்லாமல் சென்று விட்டனர்.
‘யார் இவர்கள்?’ என்று கேட்கலாம் என உடன் இருக்கும் நண்பர்களை பார்த்தால் அவர்களோ அங்கு நடந்த எதையுமே பார்காதவர்கள் போல அமர்ந்திருந்தனர்.
‘என்ன இது’ என்று ஆதிரை சிந்திக்கும் பொழுதே அவள் காதருகில் ஒரு குரல் கேட்டது. அது வேறு யார் குரலும் இல்லை ஆதிரையின் தம்பி விக்ரம் தான்.
“என்ன அக்கா, இந்த ஊரில் நம் வீட்டைப் போலவே பல மர்மங்கள் இருக்கும் போல?” என விணவினான்.
“இங்கிருந்து சென்ற உடனே, அம்மாவை பிடித்து முழு கதையையும் கேட்டு விட வேண்டும் இல்லையெனில் எனது குட்டி தலை வெடித்துவிடும் அக்கா” என்று விக்ரம் அவனது தலையை ஆட்டி ஆட்டி கூறவும் ஆதிரைக்கு சிரிப்பு வந்து விட்டது. ஆனால் அதுவே அவர்கள் வாழ்வில் பல மாற்றங்கள் வர போகிறது என்றோ அந்த தருனத்தில் அவர்கள் அறியவில்லை.
திருமணம் முடிந்த அன்றே ஊருக்கு கிளம்புகிறோம் என ஆதிரையின் பெற்றோர்கள் கூறியதை அங்கு யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு நாட்களாவது தங்கிதான் ஆக வேண்டும் என்று கூறவும் வேறு வழியில்லாமல் தங்கினர்.
மறுநாள் காலை பொழுது மிகவும் அழகாக விடிந்ததை போல் இருந்தது ஆதிரைக்கு. கண்கள் திறக்கும் முன்பே அவளது காதுகளில் பல பறவைகளின் சத்தங்கள் கேட்டன. மெதுவாக கண்களை திறந்து பார்த்தால், கல்யாண வேலையில் இரவு பகலாக வேலை பார்த்ததின் அசதியில் அனைவரும் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
யாரையும் தொந்தரவு செய்ய மனம் இல்லாமல் மெதுவாக எழுந்து முகம் கழுவி விட்டு வீட்டின் வாசலிற்கு வந்தாள். வாழ்நாளில் அதிகமாக நகரத்திலேயே வாழ்ந்த ஆதிரைக்கு அந்த கிராமத்தின் தோற்றம் மிகவும் இரம்மியமாக தோன்றியது.
நகரத்தில் காலையில் எழுந்தாலே வாகனத்தின் சத்தங்கள் தான் முதலில் காதில் விழும், காலையில் எழுந்தவுடனே வாகன நெரிசலில் மாட்டினால் நேரம் ஆகிவிடும் என்ற பயத்தில் அன்றைய நாள்காக ஓட தொடங்கிவிட வேண்டும். அதற்கும் இதற்கும் எவ்வளவு வேற்றுமைகள் உள்ளன என ஆதிரை மிகவும் வியந்து போனால்.
சிறிது நேரம் சாலையில் நடக்கலாமா என்று நினைத்தவள் அவளது பெரிய அத்தை பத்மாவின் குரலில் திரும்பி பார்த்தால்.
“என்னடா ஊர்மீ? என்ன சிந்தனையில் உள்ளாய்?” என்று கேட்டார்.
“ஊர்மியா?” என்று ஆதிரை கேட்கவும்.
“ஊர்மியா? அப்படியா சொன்னேன்! இல்லையேடா. ஒருவேளை தூக்க கலக்கத்தில் ஏதாவது சொல்லிருப்பேன் அதைவிடு இங்கு என்ன செய்கிறாய்?” என்றார்.
“பரவாயில்லை அத்தை, சும்மா நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் எவ்வளவு அழகாக இருக்கின்றது. எங்கும் பசுமையாகவும் அமைதியாகவும் உள்ளது, அதனுடன் இந்த பறவைகளின் சத்தம் கேட்கும் பொழுது மிக நன்றாக உள்ளது அத்தை” என்றாள். அவள் கண்ணில் இருந்த பலபலப்பும் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும் பத்மாவை ஏதோ செய்யவும்
“அதற்கென்னடா கண்ணு அனைவரும் தூங்கி எழுந்தவுடன் உனக்கு ஊரை சுற்றி காட்ட சொல்கிறேன், சரியா? இப்போது காபி குடிகிறாயா?” என்றார்.
வந்தநாள் முதல் ஊரைச் சுற்றி பார்க்க வேண்டும் என தாயிடம் கேட்டு கேட்டு அழுத்து போன ஆதிரைக்கு இன்று ஊரைச் சுற்றி பார்க்கலாம் என்றவுடன் மகிழ்ச்சியில் அவளுக்கு தலைகால் புரியவில்லை.
“சரி அத்தை” என்று கூறிவிட்டு துள்ளிகுதித்து வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.
காலை உணவு முடிந்தவுடன் பத்மா பிள்ளைகளிடம் ஆதிரைக்கும் விக்ரமிற்கும் ஊரைச் சுற்றி காட்ட சொல்லி கூறவும் பிள்ளைகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியானாலும் ஆதிரையின் பெற்றோர்கள் முதலில் தயங்கினர். ஆனால் பிள்ளைகள் அனைவரும் செல்வதால் எதுவும் சொல்லாமல் அனுமதித்தனர்.
பத்மாவின் இளைய மகள் கவிதா தான் அங்கு வந்ததில் இருந்து ஆதிரைக்கு மிகவும் நெருக்கமாக இருந்தாள். அனைவரும் சேர்ந்து நடந்தே ஊரைச் சுற்றி பார்கலாம் என கிளம்பி விட்டார்கள். செல்லும் வழியில் கவிதா ஆதிரையிடம் “நாம் முதலில் எனக்கு மிகவும் பிடித்த இடத்தை தான் பார்க்க போகிறோம்” என்றாள்.
“அப்படி என்ன இடம்?” என்ற ஆதிரையிடம்
“நாமே வந்து விட்டோம்” என கூறி அவர்களுக்கு முன் இருந்த இடத்தை கை காட்டினாள்.
அவள் கை காட்டிய இடத்தை பார்த்த ஆதிரை ஒரு நிமிடம் அப்படியே உரைந்து விட்டாள். நகரத்திலேயே வாழ்ந்த ஆதிரைக்கு அந்த காட்சி மிகவும் இரம்மியமாக இருந்தது.
அவர்களுக்கு எதிரில் ஒரு பெரிய ஆறு ஒன்று இருந்தது. அதற்கும் ஒரு கரையில் இவர்கள் நின்றுக் கொண்டிருந்தனர். மறுகரையில் அவர்கள் கண்கள் எட்டும் வரை வயலாக இருந்தது. அதை பார்க்கும் பொழுது பூமிதாய் பச்சை நிற பட்டு உடுத்தி அழகாக சிரிப்பது போல் இருந்தது ஆதிரைக்கு. அவர்கள் நிற்கும் இடத்திற்கு அருகில் கல்லால் ஆன இருக்கைகள் சில இருந்தனர். அதைக்காட்டி அதில் சிறிது நேரம் அமருவோம் என்று அனைவரும் சென்று அமர்ந்தனர். பெண்கள் அங்கு அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். ஆண்கள் அங்கிருந்த ஆறில் இறங்கி விளையாடி கொண்டிருந்தனர்.
கவிதா “இந்த இடம் தான் ஆதிரை எனக்கு மிகவும் பிடித்த இடம். பரிச்சையின் போது கூட நான் இங்கு தான் அமர்ந்து படிப்பேன்” என்றவளை இடைமறித்து.
“ஆமாம். ஆமாம். வீட்டில் அத்தையிடம் அடி வாங்கினாள் கூட அழுதுக் கொண்டே இங்கு தான் வருவாள்” என்று கூறி அவளை போல அழுது காட்டினான் ஆதிரையின் பெரியம்மா மகன் ராம்.
ராம் கவிதாவை போல் அழுது காட்டவும் அங்கொரு சிரிப்பலை பரவியது. உடனே கோபத்துடன் கவிதாவும் ராமை அடிக்க ஓடவும், அவளது கைகளில் சிக்காமல் ராம் ஓட தொடங்கி விட்டான். இவை அனைத்தையும் பார்த்த ஆதிரையும் விக்ரமும் அடக்க முடியாமல் சிரிக்க தொடங்கி விட்டனர்.
திடிரென அனைவரும் சிரிப்பை நிறுத்தி விட்டு ஒருவகையான பதட்டத்துடன் காணப்பட்டனர். ஆற்றுக்குள் விளையாடிக் கொண்டிருந்தவர்களும் வேகமாக கரையேறி பெண்கள் அமர்ந்திருக்கும் இடத்திர்க்கு வந்து அவர்களை மறைத்தவாரு நின்று கொண்டனர். சிறிது வினாடிகளில் ஒரு ஜீப் ஒன்று அவர்களை கடந்து சென்றது. அது சென்றதும் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர். என்ன நடக்கிறது என்று புரியாமல் ஆதிரையும் விக்ரமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு “என்ன நடந்தது? ஏன் அனைவரும் பதட்டமாக இருக்கின்றீர்கள்” என கேட்டார்கள்.
ஒன்றுமில்லை என்று பதில் வரவும் விக்ரம் “அந்த ஜீப் யாருடையது” என்றான்.
“எந்த ஜீப்பை பற்றி கேட்கிறாய்” என்று ராம் பதட்டத்துடன் கேட்கவும்
“இப்போது நம்மை கடந்து போனதே. அதை பார்த்து தானே அனைவரும் பதட்டம் அடைந்தீர்கள்?” என்றான்.
“அது தேவ் அண்ணனின் ஜீப்” என்று கவிதா கூறவும்
“யார் தேவ்” என்று ஆதிரை கேட்டாள்.
“அது” என்று ஆரமித்த கவிதாவை இடைமறித்த கவிதாவின் அண்ணன் மணி.
“அன்று அக்காவின் திருமணத்தில் கடைசியாக ஒரு கும்பல் வந்ததே. அவர்கள் வீட்டு பையன், அதை தவிர பெருசாக ஒன்றுமில்லை” என்றான்.
“ஓ!” என்று ஆதிரை முடித்தாலும் விக்ரம் விடுவதாக இல்லை. அவன் மேலும் கேள்வி கேட்டான். அவனுக்கு அப்படி என்ன தான் இந்த குடும்பத்தில் மர்மம் என்று தெரிந்த்து கொள்ள வேண்டும் என ஆர்வம்.
“அவர்கள் யார்? ஏன் அவர்களை யாரும் வரவேற்கவில்லை அப்படி என்ன பிரச்சனை” என்றான்.
இவன் பதில் தெரியாமல் விடபோவதில்லை என்று அங்குள்ள அனைவருக்கும் புரிந்ததால் மணியே தொடர்ந்தான்.
“அவர்கள் தாத்தாவும் நம் தாத்தாவும் சகோதரர்கள். அவர்கள் நம்மை பல விஷயங்களில் ஏமாற்றிவிட்டார்கள், அங்கு யாரும் நல்லவர்களும் இல்லை. பணம் தான் முக்கியம். அதனால் இரு வீட்டுக்கும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. இப்போதைக்கு இந்த அளவு தெரிந்தால் போதும்” என்று கூறி பேச்சை முடித்து விட்டான்.
பேச்சு வேறு பக்கம் போவதை கவணித்த ராம் “சரி பேசியது போதும். ஆதிரைக்கும் விக்ரமிற்கும் ஊரைச் சுற்றி காட்ட தான் வந்தோம், மதியம் சாப்பிடவேறு வீட்டிற்கு போகனும். ஒரே இடத்தில் அமர்ந்து கதையடிக்காமல் கிளம்புங்கள். அருகில் உள்ள கோவிலுக்கு செல்லலாம்” என்றான். விக்ரம் ஏதோ சொல்ல வந்தவனை ஆதிரையின் பார்வை அடக்கவும், அனைவரும் கோவிலுக்கு சென்றனர்.
கோவிலா அல்லது திருமண மண்டபமா என்னும் அளவு கோவில் மிகவும் பெரியதாக இருந்தது. கிராமத்தில் அத்தனை பெரிய கோவிலை அக்காவும் தம்பியும் எதிர் பார்க்கவில்லை. அவர்கள் எண்ண ஓட்டத்தை படித்தது போல் ராம் “சிலர் இங்கு வேண்டிக் கோண்டு இங்கே திருமணமும் நடத்துவார்கள்” என்றான்.
கோவிலில் வழிபட்டு விட்டு அனைவரும் வீட்டுக்கு செல்லலாம் என நடக்க தொடங்கினர். செல்லும் வழியெல்லாம் கேலியும் சிரிப்புமாக சென்றனர். திடிரென அவர்கள் வழியில் காலையில் பார்த்த ஜீப் வந்து நின்றது.
அதில் இருந்து ஒரு முப்பது வயதை ஒட்டிய இளைஞன் ஒருவன் இறங்கினான். வெள்ளை நிற வேஷ்டியின் ஓரத்தில் சிவப்பு நிற கோடிட்டும் அதற்கு ஏற்றவாறு சிவப்பு நிற சட்டையும் அனிந்திருந்தான். வெள்ளையாகவும் இல்லாமல் கருப்பாகவும் இல்லாமல் மாநிறமாக இருப்பதே அவனுக்கு மேலும் அழகை சேர்த்தது. தனது உடம்பில் அதிக அக்கரை செலுத்த வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்தாலே அது சாத்தியம் என்பதை போல தேகம் வைத்திருந்தான். யாரையும் மயக்கி விடும் அவனது கண்கள் மிகவும் திடமாக ஆதிரையின் மீது இருந்தது. அவனை பார்த்ததும் முதலில் புரியாமல் முழித்தார்கள். அதிலிருந்து தன்னை உடனே சுதாரித்துக் கொண்டு பேசியது மணிதான்.
“என்ன? பிரச்சனை எதுவும் செய்ய வேண்டும் என்றே வழியை மறைக்கின்றாயா?” என்றான்.
அவன் கூறியதை காதில் கூட வாங்காதவன் யாரும் எதிர் பார்காத நேரத்தில் ஆதிரையின் கழுத்தில் தாலி கட்டிவிட்டான்.
ஆதிரையின் உடன் இருந்தவர்கள், அந்த சாலை வழியில் சென்றவர்கள் என அனைவரும் உரைந்து நின்று விட்டார்கள். ஆனால் அங்கு உரையாமல் இருந்தது விக்ரம் மட்டும் தான். அவனது கைகள் அவன் அக்கா கழுத்தில் தாழி கட்டியவனை பதம் பார்த்து கொண்டிருந்தது சிறிது வினாடிகளில் அவனுடன் ராமும் மணியும் கூட சேர்ந்து கொண்டார்கள். அதற்குள் ஊர் மக்கள் அனைவரும் அங்கு கூடிவிட்டனர். ஒரு வழியாக சண்டையை விலக்கிவிட்டு இரு வீட்டு பெரியவர்களுக்கும் சொல்லி அனுப்பவும், அவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.
விக்ரம் அங்கு ருத்ரதான்டவம் ஆடிக்கொண்டிருந்தான். அனைவரது பார்வையும் ஆதிரையின் மீதே இருந்தது. ஆனால் தாலி கட்டிய நொடியில் இருந்து இந்த நொடி வரை அவளிடம் எந்த அசைவும் இல்லை. அவளது பார்வையும் தன் மீது தாழி கட்டியவனின் மீதிருந்து மாறவில்லை. அவனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
தொடரும்...
வாசகர்களின் கருத்துகளே எழுத்தாளர்களை அதிகம் ஊக்கப்படுத்தும். எனது கதை அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது உங்கள் கருத்துகளும் விமர்சனங்களும் மிகவும் முக்கியமான கருவியாக இருக்கும் என நான் நம்புகிறேன். உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் பதிவிடவும். நன்றி.
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
www.sahaptham.com
நன்றி