Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL காத்திருந்தேன்! உனையே எதிர்பார்த்திருந்தேன்! - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
583
Reaction score
588
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:
காத்திருந்தேன்..! உனையே எதிர்பார்த்திருந்தேன்..!

அத்தியாயம் 1:


ஒருபுறமோ மங்கை அவள் கார்கூந்தலில் முல்லை அரும்புகளை அள்ளி தெளித்ததைப் போல், வானமெங்கும் விரவிக் கிடந்தது நட்சத்திர கூட்டம். மற்றொரு புறமோ அதற்கு நேர்எதிர் திசையில், செங்காந்தள் மலர்களை அரைத்துப் பூசியதைப் போல செக்கசிவந்து கிடக்கிறது வானம். கருமையும் செம்மையும் சேருமிடத்தை பிரித்தரிய முடியா வண்ணம், செம்மையில் தொடங்கி கருமையில் முடிந்திருந்தது வானம்.

தன்னை சுற்றிலும் சகாரா பாலைவனமாய் வரிவரியாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு விரவிக் கிடக்கிறது வெண்மணல் பாதை. அப்படி இருந்தும் மண்ணும் விண்ணும் தொடும் அந்த ஒற்றை புள்ளி, அவன் கைக்கெட்டிய தொலைவில்.

மலரின் மகரந்தம் மண்ணில் விழுந்தாலும் பேரிகையாய் அதிரக்கூடும். அப்படியொரு அசாத்திய அமைதி. ஆள் அரவமற்ற கொடிய தனிமை. அந்த தனிமைக்கு இனிமை சேர்க்கும் வண்ணம் மெல்லிய ஊதல் காற்று அவனின் உடலெங்கும் உல்லாச பயணம் செல்ல, உடன் வந்த மெல்லிசையோ செவி வழி புகுந்து சிந்தையை மொத்தமாய் ஆலிங்கனம் செய்கிறது. இன்னிசை தான் என்றாலும் மென்சோகம் ஒன்று இழைந்தோடுகிறது அந்த இசையில். அந்த சோகம் அவன் உயிரையும் ஒரு உலுக்கு, உலுக்க தவறவில்லை.

சுற்றும் முற்றும் கண்களால் துழவுகிறான் அவன். அவனையன்றி கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமேயில்லை. 'பிறகெப்படி இந்த இசை மட்டும் சாத்தியம்?' வண்டாய் மனதைக் குடைகிறது கேள்வி. மூளை கட்டளையிடும் முன்னே கால்கள் அனிச்சை செயலாய் இசையின் திசை நோக்கி பயணப்படுகிறது. சில நொடிகளா? சில மணி நேரங்களா? இல்லை சில யுகங்கள் தான் கடந்துவிட்டன அவன் அறியவில்லை. அந்த பாதையும் முடியவதாயில்லை. அந்த இசையும் நின்றபாடில்லை. கால்கள் சற்றே இளைப்பாற இறைஞ்சுகிறது. இளைப்பாறவும் இடமின்றி வெறித்து கிடக்கிறது அந்த வெண்மணல் பாதை. நின்ற இடத்தில் அப்படியே சோர்ந்து அமர, பார்வை விழும் தூரம் வரை கண்களால் வலை வீசுகிறான் அவன்.

அதோ, அங்கே தூரமாய் ஒரு புள்ளிப் போல ஏதோ ஒன்று கண்ணுக்கு புலனாகிறது. இன்னதென்று வரையறுக்க முடியவில்லை அவனாலும். 'பாலைவன கானல் நீராய் இருக்குமோ? ஆனால் இசை அந்த புள்ளியில் இருந்து தானே புறபடுகிறது.' தனக்குள் எண்ணமிட்டவன், சோர்ந்த மனதை தெம்புட்டி அந்த புள்ளி நோக்கி பயணித்தை தொடர்கிறான். இந்த பாதைக்கொரு முடிவேயில்லையா என்னும் விதமாய் நெருங்க நெருங்க விலகிக் கொண்டே போகிறது அந்த புள்ளி.

நடந்து நடந்து அலுத்துப் போனவன் இனி நடக்கவே முடியாதென்று எண்ணுகின்ற வேளையில் கைக்கெட்டும் தொலைவில் பிரமாண்டமாய் உயர்ந்து நிற்கிறது அரண்மணை ஒன்று. இது வரை புள்ளியாய் தோன்றிய காட்சி இப்போது எப்படி கைக்கருகில். சந்தேக கேள்விகளுக்கு தடைவிதித்து அவனின் சிந்தனையை மொத்தமாய் சிரையெடுக்கிறது அந்த அரண்மனையினீ அழகியலும் நுண்வேலைபாடுகளும்.

வானில் ஜொலிக்கும் ஒற்றை நிலாவாய் அரண்மனை மாடத்தில் அவள். தாமரையாய் சிவந்திருந்த முகமோ, மோப்ப குழையும் அனிச்சயாய் வாடிக் கிடக்கிறது. மைதீட்டிய கூர் விழிகளோ கலங்கி சிவந்து எந்நேரமும் கண்ணீர் முத்துக்களை உகுக்க தயாராய் இருக்கிறது. காற்றோடு கதைப் பேசிய கார்கூந்தல் ஆதவனின் செங்கதிரின் உபயோகத்தால் பளபளத்துக் கொண்டிருக்கிறது. அவளின் வெண்பிஞ்சு விரள்கள் பற்றியிருந்த மகரயாழோ நீண்ட காலமாய் முகாரி மட்டுமே பாடி பழக்கப்பட்டதைப் போல சோககீதம் வாசித்துக் கொண்டிருக்கிறது.

அவளின் இந்நிலை அவனை ஏதோ செய்கிறது. ஏதோ என்ன உயிரை வேறோடு அறுத்துச் செல்கிறது. இமைக்க மறந்து(த்து) அவளின் வதன முகம் தான் பார்த்திருக்கிறான் அவன். ஏனிந்த சோகம்? ஏனிந்த கலக்கம்? கேட்க துடிக்கிறது நாவு. அவனின் எண்ணம் உணர்ந்தவளாய், சற்றே பார்வையை தாழ்த்தி, அவனை நோக்குகிறாள். என்ன செய்கிறாள் அவள். விழி வழி அவள் சோகத்தை அவனிடத்தில் கடத்த முயல்கிறாளா? ஒற்றை முத்து உருண்டு திரண்டு அவள் கன்னம் தான்டி, அவன் கரங்களில் வந்து அடைக்கலம் சேர்கிறது. அதே நேரம் வரவரிவாய் இருந்த வெண்பஞ்சு மணல் ஆழிப் பேரலையாய் மாறி அவனை தன்னுள் சுருட்டிக் கொள்ளப் பார்க்கிறது.

சர்வமும் அடங்கி அதிர்ந்து தான் போகிறது ஒரு நொடி. வரிவரியான வெண்பஞ்சு மணல் பாதை, துள்ளி குதிக்கும் அலைகளாகவும், அதன் வெண்மை நிறம் அலை அமர்ந்த வெண்பஞ்சு நுரையாகவும் தெரிகறது. அப்போது தான் புரிகிறது இதுகாறும் அவன் நடந்தது, நின்றது அத்தனையும் கடலின் மேற்பரப்பிலென்று. அத்தனையும் அவன் உணரும் நொடிக்குள்ளேயே அந்த பேரலை அவனைத் தன்னோடு சேர்த்து வாறி சுருட்டிக் கொள்கிறது.

பெரும் போராட்டத்திற்கிடையே அவளின் நிலை அறிய முற்படுகிறான் அவன். அவளுமே அந்த அரண்மனையோடு சேர்த்து நீருக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் மூழ்கிக் கொண்டிருக்கிறாள். அப்போதும் இவனைத்தான் இமைக்காது பார்த்தபடி அசையாமல் யாழ் மீட்டிக் கொண்டிருக்கிறாள். 'என்னை காக்க மாட்டாயா?' என்ற வினாவோடு சோகமும் விரவிக் கிடகிறது அவளின் விழிப்படலத்தில். அவளை எப்படியும் காத்துவிட கரங்கள் துடிக்கிறது. இருந்தும் அந்த பேரலையில் இருந்தும் மீள முடியவில்லை அவனால்.

இவனைப் பார்த்தபடியே கொஞ்சம் கொஞ்சமாய் நீருக்குள் மூழ்கி மொத்தமாய் மறைந்துப் போகிறாள் அவள். இவனையும் அப்பேரலை தன்னுள் இழுத்துக் கொள்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் உடலில் உட்புகுந்த உவர்நீர் மொத்தமாய் நுரையீரலை ஆட்சிச் செய்கிறது. மூச்சு முட்டிகிறது. எக்கி எக்கி தலையை வெளியே நீட்டி சுவாசத்தை தன்னுள் கடத்த முயல்கிறான். முழுதாய் நீரை நிரப்பிக் கொண்ட நுரையீரலும் பாங்காய் வேலைநிறுத்தம் செய்ய, மத்த உறுப்புகளும் அதனுடன் சேர்ந்துக் கொண்டு ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறது. இறுதி கட்ட போராட்டமாய் அந்த பேரலையிலிருந்து மீண்டிட தவித்து துடிக்கிறது அவன் உயிர். ஆனால் அதற்கு கொஞ்சம் பலனின்றி உயிரை தனியே தவிக்கவிட்டு உடல் மட்டும் மொத்தமாய் அந்த பேரலைக்குள் மூழ்கி மறைந்தேப் போகிறது.

"அடி யாத்தே... எடிபட்ட பய... என் இடுப்ப உடைச்சுபுட்டானே..." அலறிய படியே கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்திருந்தான் ஜெகன். அவனின் இந்நிலைக்கு காரணமானவனோ இன்னும் கனவுலகில் சஞ்சரித்தபடி உயிரை காக்கும் இறுதிக்கட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்தான்.

ஜெகனின் அலறல் சத்ததில் அதே அறையில் மற்றொரு கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த டேவிட்டும் சுமனும் என்னவோ ஏதொவென்று அடித்துப் பிடித்து எழுந்து அமர, ஜெகனோ இன்னும் எழ முடியாமல் இடுப்பை பிடித்தபடி புலம்பிக் கொண்டிருந்தான்.

"ஐய்யோ ஜெகா... என்னடா ஆச்சு உனக்கு... ஏன் இடுப்ப புடிச்சுட்டு கீழ கிடக்க..?" என்றான் டேவிட். அவனின் பரிதாப குரலுக்கும் இதழ் சிந்திய குறும்பு புன்னகைக்கும் கொஞ்சமும் சம்மந்தம் இருப்பதாய் தெரியவில்லை.

"நான் ஏன் கீழ கிடக்கனேனு உனக்கு தெரியாவே தெரியாது... அப்படிதானே... நல்லா நடிக்கறடா யப்பா... படிச்சு படிச்சு சொன்னேனடா... பொத்துனாப்புல செவுத்த ஒட்டி ஒரு ஓரமா படுத்துக்கறேனு... கேட்டீங்களா... சிரிக்காதடா செம கடுப்பாகுது எனக்கு..." என்றவன் அதற்கு காரணமானவனை பார்க்க பற்றிக் கொண்டு வந்தது. 'உதைக்கறதையும் உதைச்சு தள்ளிட்டு தொர இன்னும் தண்ணீல தத்தளிக்கறத பாரு...' என்றவன் மெல்ல முனகியபடியே தட்டு தடுமாறி அருகிலிருந்த மேஜையின் கால்களை பற்றிக் கொண்டு எழ, மற்ற இருவரும் அவனின் வினோத முனகல் சத்தத்தில் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.

"ஏன்டா தடுமாட்டு பயலுவளா... ஒருத்தன் ஏந்திரிக்க முடியாம தடுமாறிட்டு இருக்கானே... கைய குடுத்து தூக்கி விடுவோனு இல்லாம என்னாடா இழிப்பு வேண்டி கடக்கு இழிப்பு..." என்க, சிரித்தபடியே தான் வந்து தூக்கிவிட்டனர் அவர்கள்.

"இல்லடா மச்சான்... எப்ப பாரு உன் குறுக்கையே உடைக்கறேனே... என்னைக்காவது ஒரு நாள் தப்பி தவறி ஒரு ஜான் இறக்கி உதைச்சா என்னாகுமுனு நினைச்சேன்... சிரிச்சேன்..." என டேவிட் சொல்ல, "வேற என்னாகும் மச்சானுக்கு பத்து பைசா செலவில்லா குடும கட்டுபாடு ஆப்ரேஷன் நடக்கும்..." என்றபடி சுமனும் அவனோடு சேர்ந்து சிரிக்க, இவற்றிற்கெல்லாம் காரணமானவனோ இன்னும் கட்டிலிலேயே நீச்சல் பழகிக் கொண்டிருந்தான்.

"எல்லாம் இந்த எடுபட்ட பயலால வரது..." என்றபடியே அருகில் இருந்த குளிர்ந்த நீரை எடுத்து அவன் தலைமுதல் பாதம் வரை ஊற்ற,

"தண்ணீ... தண்ணீ... காப்பாத்துங்க... யாராவது என்ன காப்பாத்துங்க..." என்றபடியே இன்னும் கட்டிலில் தான் கவிழ்ந்து படுத்து நீச்சல் பழகிக் கொண்டிருந்தான் அவன்.

இதில் இன்னும் அதிக எரிச்சலுன்ற ஜெகன், "நேமி... டேய்... நேமி... இன்னும் நீ சாகல... என்ன தான் தினம் தினம் சாவடிச்சுட்டு இருக்க... ஏந்திரி முதல..." என தோளைப்பற்றி வேகமாக உலுக்கவும் தான் கண்ணை கசக்கிக் கொண்டு மெல்ல எழுந்தமர்ந்தான் நேமியோன். 'இப்ப நான் எங்க இருக்கேன்..?' என்ற ஒற்றை வினாவை தவிர, சித்தம் பிறதழ்கான மற்ற அத்தனை அறிகுறிகளும் அம்சமாய் பொருந்தி இருந்தது அவனுக்கு.

"எரும மாடே... மாசத்துல நாலு நாள் இதே பொழப்பா போச்சு உனக்கு... உன்ன நம்பி நிம்மதியா பக்கத்துல படுக்க முடியுதாடா... நீயெல்லாம் ஒரு மனுஷ ஜென்மமாடா..?" என்றபடியே நேமியை முறைத்துக் கொண்டிருந்தான் ஜெகன்.

அவனோ அசடு வழிந்தபடியே, "சாரிடா ஜெகா... பயங்கரமான ஒரு கனவுடா..." என விவரிக்க தொடங்க, அவனை இடையிட்டு தடுத்தனர் மற்ற மூவரும்.

"தெய்வமே... இத்தோட நிறுத்திக்க... இதேயே இதுவரைக்கும் நாலாயிரத்து நானூத்தி நாலு தடவ சொல்லிட்ட..." என ஜெகன் கையெடுத்துக் குடும்பிட, அதைக் கவனியாதவன் போல, மீண்டும் தொடங்கியவனை தடுத்து நிறுத்தி சுமனே தொடர்ந்தான்.

"யாருமே இல்லாத அத்துவான காட்டுல நீ மட்டும் தன்னந்தனியா நின்னுட்டுருக்க... அதானடா..." என சுமன் வடிவேலு பாணியில் கேட்க,

"அதே தான்..." என்றனர் மற்ற இருவரும் கோரஸாக.

"ஒரு பக்கம் பாத்தா இருட்டு... இன்னொரு பக்கம் பாத்தா வெளிச்சம்... சுத்தி வெறும் மண்ணு அதானேடா..."

"அதே தான்..."

"அப்ப தீடிருனு ஒரு பாட்டு சத்தம்... அதனாடா..."

"அதே தான்..." மற்ற இருவர்.

"அதான் இல்ல... அது பாட்டுல்ல... ஏதோ மியூசிக்..." என்றான் நேமி இடைபுகுந்து.

"ரொம்ப முக்கியம்... நீ அத கேட்டு மயங்கி பேக்கு மாதிரி மியூசிக் வந்த திசையில போய்ட்டு இருக்க... அதானேடா..."

"அதேதான்..."

"அப்படி போகும் போது திடீருனு ஒரு அரண்மனை... அங்க ஒரு பொண்ணு உக்காந்து..."

"சிறு திருத்தம் நின்னுட்டு..." என இடைபுகுந்த நேமியை முறைத்தவாறே தொடர்ந்தான் சுமன்.

"நின்னுட்டு சோகமா என்னத்தையோ வாசிச்சுட்டு இருக்கு... நீ அவள பாக்குற... அவ உன்ன பாக்குறா... இப்படி நீ பாக்க... அவ பாக்க... இப்படி பாத்துட்டே இருக்கும் போது பெரிய அலை ஒன்னு வந்து இரண்டு பேரையும் மூழ்கடிச்சு சாவடிச்சுடுது... அதானேடா..."

"அதேதான்..."

"நீ சாவப் போறதா நினைச்சுட்டு பக்கத்துல படுத்திருக்கவன ஒவ்வொரு தடவையும் சாவடிச்சுட்டு இருக்க... அதானேடா..." என புதிதாய் ஒரு குரல் கேட்க, குரல் வந்த திசையில் நால்வரும் திரும்பி பார்க்க அவர்களை முறைத்தபடி இடுப்பில் கைவைத்து நின்றுக் கொண்டிருந்தாள் சாரா.

"இப்படியே உக்காந்து கதாகாலட்சேபம் பண்ணிட்டு இருந்தா எப்ப கிளம்பி வேலைக்கு போறதாம்... இப்பவே மணி எட்டரையாகுது... இனிமே எப்ப நீங்க கிளம்பி வந்து... கேப்டன் வந்து உங்க எல்லாரையும் கிழிச்சு நார்நாரா தொங்க விட்டா தான்டா அடங்குவீங்க... இதுல தொர சீப் ஆபிஸர் வேற... சீக்கரம் வந்து தொலைங்க..." படபடவென பொறிந்தவள் தனது சீருடையை சரி செய்தபடியே வெளியே செல்ல,

"பூட்டுன கதவு பூட்டுன மாதிரியே தானடா இருக்கு... இந்த குட்டி சாத்தான் எப்படிடா உள்ள வந்துச்சு..." என்ற டேவிட்டுக்கு பால்கனி பக்கம் கையைக் காட்டிவிட்டு கதவை ஓங்கி அறைந்து சாற்றிவிட்டு வெளியேறிவிட்டாள் அவள்.

அவள் சென்றதுமே அடித்துப் பிடித்துக் கொண்டு மற்ற மூவரும் அவரவர் அறைக்கு எழுந்து ஓட, உண்மைக்கும் ஒரு பேரலை அடித்து ஓய்ந்தது போல தான் இருந்தது அந்த அறையில். அதே அவசரம் நேமியையும் தொற்றிக் கொள்ள வேகமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

சரியாக அடுத்த கால்மணி நேரத்தில் தனது வெண் சீருடை சகிதம் தயாராகி வந்திருந்தான் நேமியோன். திறந்திருந்த பால்கனியின் வழியே சில்லென்ற காற்று அவன் உடலை தழுவ அங்கே சென்று இரு கரங்களினாலும் கம்பிகளை பற்றியபடி நின்றான் அவன்.

இன்னும் இரவு முழுதாய் முழுதாய் முடிந்திருக்கவில்லை. முழுநிலவுக்கு முந்தைய நாள் என்பதால் நிலவு சற்றே பிரகாசமாய் ஒளிர்ந்துக் கொண்டிருந்து. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் விரிந்து கிடந்தது. அந்த ஆழ்கடலின் அமைதியோடு அந்த சொகுசு கப்பலும் சிறு சலனமும் இன்றி மெல்ல அக்கடலின் மேல்பரப்பில் ஊர்ந்துக் கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு புள்ளியில் சங்கமிக்கும் கடலலையும் நிலவையுமே இமைக்காது பார்த்திருந்தான் அவன். அழகான குறுநகை ஒன்று தானாய் வந்து ஒட்டிக் கொண்டது அந்த இதழ்களில்.

இந்த பரந்து விரிந்த பெரும் கடலுக்கு அவன் தான் அரசனாமே. இந்த பெயருக்கு கூட அர்த்தம் அதுதான். ஆயிரம் முறை அவன் அன்னை சொல்ல கேட்டிருக்கிறான். ஒவ்வொரு முறை சொல்லும் போது அப்படியொரு பெருமிதம் மின்னி மறையும் அவர் கண்களில். மீண்டும் ஒரே ஒரு முறை அவர் அதை சொல்ல கேட்க மாட்டோமா என்றிருத்தது.

நான்கு மணி ஆகிவிட்டதை கடிகாரத்தில் இருந்த செயற்கை குயில் நான்கு முறை கூவி உறுதிப்படுத்த, சுயம் மீண்டவனாய் அவசர அவசரமாக பால்கனி கதவை இழுத்து மூடிவிட்டு வெளியே வந்தான் அவன். அவனுக்கு முன்பே வந்துவிட்ட மற்றவர்கள் தங்கள் பணிகளை துவங்கியிருக்க, இவனும் தன் படியை துவங்கினான். அவசர அவசரமாக கையில் ஒரு காபி கோப்பையோடு வந்த சாரா, அதை அவன் கைகளில் திணித்துவிட்டு, ஒரு வார்த்தை பேசாமல் விறுவிறுவென தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டாள். அவள் செயலால் அழகாய் மலர்ந்த முறுவலை மறைக்க அவன் முற்படவில்லை.

நேமியோன், ஜெகன், சுமன், டேவிட், சாரா ஐவரும் பள்ளி காலம் தொட்டு இன்று வரை நட்பு வட்டத்திற்குள் இருப்பவர்கள். இந்த நெருங்கிய பிணைப்பிற்கு அவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியை அதிலும் குறிப்பாக அனைவருமே தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர்களாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். பள்ளி, கல்லூரி முடித்து இதோ இந்த சொகுசு கப்பலில் பயிற்சியில் சேர்ந்து படிபடியாக உயர்ந்து அனைவருமே தலைமை அதிகாரி (chief officer - grade 1) என்ற நிலையில் இருக்கின்றனர். அவர்களின் பணி நேரம் காலை நான்கு முதல் எட்டு வரை. மீண்டும் மாலை நான்கு முதல் இரவு எட்டு வரை. அன்றைய நிகழ்வுகளை சரிபார்த்து கப்பலின் கேப்டனிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.

8 தளங்களைக் கொண்ட அவர்களின் சொகுசு கப்பல் 1320 பயணிகளையும் 350 ஊழியர்களையும் சுமந்துக் கொண்டு நியூயார்கில் இருந்து கிளம்பி இன்றோடு பத்து நாட்கள் ஆகிறது. இன்னும் 140 நாட்கள் பயணம் பாக்கி இருக்கிறது. நியூயார்கில் இருந்து கிளம்பி மீண்டும் நியூயார்கையே வந்தடைகறது. இடையில் 57 துறைமுகங்களில் தங்க திட்டமிடப்பட்டுள்ளது. விரும்பும் பயணிகள் அருகிலிருக்கும் புகழ்மிக்க சுற்றுலா தளங்களுக்கு சென்று வர நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யபடும்.

காலை எட்டு மணிக்கு தங்கள் பணியை முடித்துக் கொண்டு இரண்டாம் தளத்திலிருந்த உணவு கூடத்தில் அவர்களுக்கான உணவுடன் குழுமி இருந்தனர் ஐவரும்.

"சுமன்... நாளைக்கு கப்பல் மியாமி துறைமுகம் போய்டும்... இரண்டு நாள் அங்க தான்... எங்க போகலானு பிளான் பண்ணிட்டீங்களா..." என்றாள் சாரா.

"எங்க போறது எல்லாமே பாத்த இடம் தானே... சாப்பிட்டு இங்கேயே தூங்கி ரெஸ்டாவது எடுக்கலாம்..." என்றான் ஜெகன் தன் கை மறைவில் நீண்ட கொட்டாவியை வெளியேற்றியபடியே.

"ஆமான்... ஆமான்... நடுகடல நின்னுட்டு இருந்த கப்பல தள்ளி தள்ளி தொர ரொம்ப களைச்சுப் போய்ட்டீங்கல... ரெஸ்ட் அவசியம் தான்..." என்றான் டேவிட் தன்னிடமிருந்த பழச்சாற்றை எடுத்து உறிஞ்சியபடி படு நக்கலாக.

"அப்ப எங்க போகலாம் நீயே சொல்லு..." என்றான் சுமன்.

"மியாமில பாக்கவா இடம் இல்ல... அந்த நீலமும் பச்சையும் கலந்த கடலோட வெள்ளை மணலும்னு... எத்தன தடவ பாத்தாலும் அழுத்து போகுமா என்ன... இந்த தடவையும் நாம மியாமி பீச்சுக்கே போகலாம்..." என்றான் டேவிட்.

"நீ எதுக்கு அடிப் போடறனு நல்லா தெரியுது மகனே... எத்தன தடவ பீச்சுக்கு போறது... இந்த ஒரு தடவ சாப்பிங் போகலாம்ப்பா..." என்றான் சுமன்.

"எப்ப பாரு சாப்பிங் சாப்பிங்... சம்பாதிக்கற மொத்த பணமும் இப்படி தான் காலியாகுது உனக்கு... அப்படி என்னதான் இருக்கோ இந்த சாப்பிங்ல..." சாரா அலுத்துக் கொள்ள,

"அதெல்லாம் ரசிச்சு அனுபவிச்சு பாத்தா தான்டி தெரியும் எரும மாடே..." என்றான் சுமன். அவனுக்கு பழங்கால பொருட்களை சேகரிப்பதில் அப்படி ஒரு ஆர்வம். தேடி அலைந்து எத்தனை விலை என்றாலும் கொடுத்து வாங்கி விடுவான்.

"நாம ஏன் அக்வரியம் போக கூடாது... செமையா இருக்கும்... வெரைட்டி வெரைட்டியா கண்ண பறிக்கற மாதிரி கலர் கலர் மீனுங்க..." சிலிர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள் சாரா.

"ஏன்... வெரைட்டி வெரைட்டியா இருந்தா எண்ண சட்டில போட்டு வறுத்தா தீங்க போற... ஒழுங்கா பீச்சுக்கே போகலாம்..." என்றான் டேவிட்.

"நீங்க எங்க வேணாலும் போங்க... ஆனா இவனையும் கூட்டி போய் தொலைங்க... நான் ரெண்டு நாள் இவன் தொல்ல இல்லாம நிம்மதியா தூங்குவேன்..." நேமியை கைக்காட்டி ஜெகன் சொல்ல, "சரியான கும்பகர்ணன்டா நீ..." என்றாள் சாரா.

இப்போது தான் மற்ற நால்வருமே நேமியை கவனித்தனர். அத்தனை அமைதியாய் ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தான் அவன்.

"டேய் நேமி... நீ என்னடா யோசிக்கற..." என சாரா அவனை லேசாக உலுக்கி கேட்க,

"நாம ஏன் ஒரு லாங் ட்ரைவ் போக கூடாது..." என்றான் அவன் யோசனையாய்.

"யா...ஹூ... சூப்பர் ஐடியா..." நால்வரும் ஒரு சேர ஆமோதிக்க, கடலிலேயே சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு தரையில் சுற்றவும் ஆசை இருக்கும் தானே.

"ஆனா நமக்கு கார் வேணுமே... ரெண்ட்க்கு எடுக்கலாம்னா கூட உடனே எப்படி கிடைக்கும் கிடைக்கும்... முன்னாடியே ஏற்பாடு பண்ணி இருக்கனும் இல்ல..."

"ஏ... மேன் கடல லாங் ட்ரை போறதுக்கு கார் எதுக்கு மேன்... சிப்ல இருக்க ஒரு போட் போதாது..." என்றான் அவன் யோசனையாய்.

"நீயெல்லாம் உண்மைக்குமே மனுஷன் தானா... எத்தன நாள் இந்த கடல சுத்தனாலும் இந்த கடல் பைத்தியம் உன்னவிட்டு போகாதா..?" ஜெகன் வெளிப்படையாய் தலையில் அடிந்துக் கொள்ள, மற்ற மூவரும் முறைத்துக் கொண்டிருந்தனர் அவனை.

"இரண்டு நாளுக்கப்பறம் கப்பலையும் அதே கடலுக்குள்ள தான போக போற... அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு..."

"இரண்டு நாளைக்கு அப்பறமும் போவோம் தான்... ஆனா பெர்முடா போக மாட்டேமே..." என்றவனை அதிர்ந்துப் பார்த்தனர் மற்றவர்கள்.

"நீ விளையால தான நேமி..." சாரா அச்சமாய் அவனை வினவ,

"இதுல விளையாட என்ன இருக்கு சாரா... நான் முடிவு பண்ணிட்டேன்... பெர்முடா இந்த தடவ போயே ஆகனும்... யார் வருவீங்க... வர மாட்டீங்க... அதெல்லாம் உங்க விருப்பம்... நான் போக தான் போறேன்..." என உறுதியாக மொழிந்தவனை உடலில் உதறல் எடுக்க அச்சத்துடன் பார்த்திருந்தனர் மற்ற நால்வரும்.

- காத்திருப்பு தொடரும்...

வாசித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி. கருத்துக்கள் பெரும் ஆவலோடு எதிர்ப் பார்க்கப்படுகிறது.
 
Last edited:
காத்திருந்தேன்..! உனையே எதிர்பார்த்திருந்தேன்..!

அத்தியாயம் 2:


நேமி பெர்முடா செல்வோம் என சொல்லவுமே அத்தனை பேரின் முகமுமே அதிர்ச்சியை தத்தெடுத்தது என்னவோ ஒரு சில நிமிடங்கள் தான்.

"வாங்க... வாங்க... எல்லான் ஒன்னா போகலாம்... போய் செத்து செத்து விளையாடலாம்..." என்றான் சுமன்.

"சாவுறதா இருந்தா நீ போய் சாவு மேன்... ஒய் அஸ்..." என்றான் ஜெகன்.

"நைஸ் ஜோக் மேன்... அப்படியே இன்னொரு ஜோக் சொல்லேன்..." என டேவிட் சொல்ல,

நேமியோனின் முகத்தில் தெரிந்த தீவிரத்தை அவதானித்தபடி எப்படி தடுக்கலாம் என யோசனையில் ஆழ்ந்திருந்தாள் சாரா.

"உங்கள எவன்டா இங்க வெத்தல பாக்கு வச்சு கூப்பிட்டா... நான் தனியாவே போறேன்... சாவறேன்... யாரும் என் கூட வந்து சாவுங்கனு நான் கூப்பிடலையே..." என எழுந்து செல்ல முயன்றவனின் கையைப் பற்றி அமர வைத்தாள் சாரா.

"இது விளையாட்டு இல்ல நேமி... மியாமில இருந்து பெர்முடா போகனுமுனா பெர்முடா முக்கோணத்து வழியா தான் போகனும்... அது அவ்வளவு பாதுகாப்பு இல்ல... அதனால தான் நாமே கடல சுத்தி ஊர்கோலம் போய்ட்டு இருக்கோம்... தெரியும் தான உனக்கு... அப்பறமும் என்னடா..?" என்றாள் சாரா அவனை சாமாதானப் படுத்தும் வகையில்.

"ஆமான்... ஆமான்... பெர்முடா முக்கோணம் வழியா எல்லாம் போகமுடியாது... ஏதோ அங்க ஏலியன்ஸ் இருக்குன்றாங்க... அது நம்ம கடத்திட்டு போய்டுமுனு சொல்லறாங்க..." என்றான் சுமன் சந்திரமுகி வடிவேலு பாணியில்.

அவனை தொடர்ந்து அதேப் போலவே, "ஏதோ அட்லாண்டாங்கற பெரிய இடம் கடலுக்குள்ள முழ்கிட்டதாவும், அதுல பையர் கிரிஸ்டல் இருக்கதாவும், அதுல இருந்து வர லைட் வேவ்ஸ் கப்பலையே கவுந்துடுனும் சொல்லறாங்க..." என்றான் ஜெகன்.

"அது எல்லாத்துக்கும் மேல அங்க எப்ப வேணா என்ன வேணா நடக்கலாம்னு சொல்லறாங்க முருகேசு..." என்றான் டேவிட் படு தீவிரமாக.

"என்ன நக்கலா... இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா என்ன... அந்த கட்டு கதையெல்லாம் நம்ப நான் தாயாரா இல்ல... இந்த தடவ நான் போயே ஆகனும்..." என்றான் நேமி.

"ஒவ்வொரு தடவ மியாமி வரப்பவும் உனக்கு இதே பொழப்பா போச்சுடா... இவங்க எல்லாரும் சொல்லறதுக்கு வேணா ஆதரம் இல்லாம இருக்கலாம்... ஆனா அங்க நிலவுற அசாதாரண காலநிலை பத்தி உனக்கே தெரியும் தானே...அப்பறமும் ஏன்டா ஒவ்வொரு தடவ மியாமி வரப்பையும் அடம் பிடிக்கற... எந்நேரம் வேணாலும் கடல் சூறாவளி வரலாம்... அங்க இருக்க அரியவகை கடல்பாசிங்க அதிகபடியா வெளியிடற மீத்தேன் வாயுவோட அழுத்தத்தால குண்டி வெடிப்பு மாதிரியும் நிகழலாம்... இன்னும் அந்த இடத்துக்கு நாம போக வேண்டானு சொல்லறதுக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கு... புரிஞ்சுக்கோ நேமி..." என்றாள் இறைஞ்சுதலாக சாரா.

"நீங்க எல்லாம் போக வேண்டானு சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம்... ஆனா நான் போகனுமுனு சொல்லறதுக்கு ஒரே ஒரு காரணம் தான்... உங்க யாருக்கும் தான் என்னோட மனசு புரியல... அது தவிக்கற தவிப்பு புரியல... என்னோட குற்ற உணர்ச்சி புரியல... இந்த தடவ யார் என்ன சொன்னாலும் நான் கேட்க போறதில்ல... எத்தனையோ கப்பல் விமானங்கள் அந்த வழியா போய்கிட்டு தான இருக்கு... யாரும் ஒன்னும் கடலுக்குள்ள விழுந்து செத்துடல... ஆனா நம்பிக்கையில்லாம யாரும் என்கூட வந்து சாக வேண்டாம்... என்ன எப்படி பாத்துக்கறதுனு எனக்கே தெரியும்..." என்றான் நேமி கண்களில் வலியோடு. ஒருசில கண்ணீர் முத்துக்களும் உருண்டு திரண்டு நின்றிருந்தது அவனின் இமையோரம்.

"பச்... இதென்ன சின்னபுள்ள மாதிரி அடம்பிடிக்கற நேமி... உன்ன புரியாதா எங்களுக்கு..." என்றாள் சாரா ஆறுதலாக அவன் கையைப் பற்றிக் கொண்டு.

"இல்ல சாரா உங்க யாருக்குமே என்னோட வலிப் புரியல... புரிஞ்சு இருந்தா இத்தன வருஷமா என்ன தடுத்து இருப்பீங்களா..." என்றான் வேதனை சுமந்த குரலில் நேமி.

"ஹாலோ தம்பி... நீங்களே நினைச்சாலும் அந்த பாதையில போக முடியாது... ஏன்னா அது அரசாங்கம் தடை செஞ்ச கடல் பகுதி..." என்றான் சுமன்.

"அப்படியே யாருக்கும் தெரியாம போகனும்னாலும் போய் இருக்க முடியாது... ஏன்னா இந்த வருஷம் தான் நமக்கு சீஃப்பா ப்ரோமோஷன் கிடைக்குச்சு இருக்கு... அதுக்கு முன்னாடி நீங்களே நினைச்சாலும் சீஃப் கிட்டையும் கேப்டன் கிட்டையும் ரிப்போர்ட் பண்ணாம போட்ல கைய வைக்க முடியாது தெரியும்ல..." என்றான் டேவிட்.

"அதே தான் ராசா... தலையால நீ நின்னு தண்ணீ குடிச்சாலும் இதுக்கு முன்னாடி பெர்முடா போய் இருக்க முடியாது... இனிமேலும் போக முடியாது..." என்றான் ஜெகன்.

"கண்டிப்பா முடியும்... நீங்க உதவி பண்ணிருந்தா போய் இருக்கலாம்... ஆனா உங்க யாருக்கும் தான் என்னோட உணர்வுகளே புரியலையே... அப்பறம் எப்படி உதவி பண்ணுவீங்க... ஆனா இந்த தடவ அப்படி இல்ல... நானுமே சீஃப் தான்... என்னால என்ன முடியுமோ அத நானே பாத்துக்கறேன்..." என்றவன் பற்றியிருந்த சாராவின் கைகளை உதறித் தள்ளிவிட்டு அவர்கள் கத்தி கத்தி அழைப்பதையும் காதில் வாங்கிக் கொள்ளாது கிளம்பி விட்டான்.

"பச்... இந்த தடவையும் பொறுமையா என்னத்தையாவது சொல்லி அவன போக விடாம தடுத்து இருக்கலாம்... நீங்க மூணுப் பேரும் தேவையில்லாம பேசிப் பேசி தான் இப்ப அவன் கோவிச்சுட்டு போறான்..." என்றாள் சாரா கடுப்பாக.

"விடு சாரா... அவன் நினைக்கற மாதிரி எல்லாம் அவ்வளவு ஈஸியா கிளம்பிட முடியாது... உலகத்துக்காக இந்த இடத்துல எந்த மர்மமும் இல்லனு அரசாங்கம் சொன்னாலும் இன்னும் இதை தடை செய்யப்பட்ட பகுதியா தான் வச்சிருக்காங்க..." என்றான் டேவிட் ஆறுதலாக.

"போகனுமுனு முடிவு பண்ணிட்டா முறைப்படி அனுமதி வாங்கிட்டா போவானு நினைக்கறீங்க... அவனுக்கு இங்க இருந்து யாருக்கும் தெரியாம கிளம்பறது அவ்வளவு ஒன்னும் பெரிய விசயமும் இல்ல... சார் இப்போ சீஃப் வேற... சும்மா இருந்தவன சொறிஞ்சு விட்ட விட்ட கணக்கா இந்த லூசு குரங்கு வேற கிளப்பிவிட்டுட்டு..." என ஜெகனுக்கு நங்கென்று ஒரு கொட்டு வைத்தவள், "இப்போ அவன் யார் சொன்னாலும் கேட்க மாட்டான்... அவன் பதவிய யூஸ் பண்ணி எப்படியும் போக தான் பாப்பான்..." என்றாள் சாரா.

"பாத்துக்கலாம் விடும்மா... இதெல்லாம் ஒரு பிரச்சனையினு..." என்றான் சுமன்.

"அதானே... அவன் போறேனு சொன்னா நாம தான் விட்டுடுவோமா என்ன..." என்றான் ஜெகன்.

"இருந்தாலும், எனக்கு என்னமோ பயமாவே இருக்கு... இந்த தடவ அவன் குரல அப்படியொரு உறுதி தெரியுது..." என்றாள் சாரா உள்ளுக்குள் விரவிய பயத்தோடு. ஏனோ இம்முறை யார் பேச்சையும் நேமி கேட்பானென்று அவளுக்குத் தோன்றவில்லை.

அவர்களிடம் கோபித்துக் கொண்டு அறைக்குள் வந்தவனோ தனது உடையை மாற்றிக் கொண்டு, மீண்டும் கடலை வெளித்தபடி, அந்த பால்கனி பக்கமே வந்து நின்று விட்டான். இந்த கடலுக்கும் அவனுக்குமான பந்தம் இன்றோ நேற்றோ ஏற்பட்டதா என்ன? நினைக்க நினைக்க இனம்புரியாத உணர்வொன்று உள்ளுக்குள் அழுத்தியது. கடலின் உவர் காற்றின் ஓலத்தோடு அவன் அன்னையின் 'நேமி கண்ணா...' என்ற பிரத்தியேக அழைப்பும் காதில் மீண்டும் மீண்டும் ஒலிப்பதைப் போன்றதொரு மாயத் தோற்றம். பத்து வயது வரையான அவனின் வாழ்வு தான் அன்னை தந்தையென எத்தனை எத்தனை இன்பமானது. ஆனால் இன்றோ? நினைக்க நினைக்க ஆறவில்லை அவனுக்கு. அவனுக்கு அத்தனை இன்பங்களையும் வாறி வழங்கியதும் இந்த கடல் தான். அதேப் போல அதை திரும்ப தன்னுள்ளே பறித்துக் கொண்டதும் இதேக் கடல் தான்.

அவனின் தந்தை சார்லஸ். அமெரிக்க குடிமகன். ஒரு சொகுசு கப்பலின் கேப்டன். ஒரு கடல் பயணத்தின் போது அவரின் கப்பலில் பயணியாக வந்தவர் தான் கார்குழலி. தமிழகத்தின் காஞ்சிபுரத்தை பூர்விகமாக கொண்டவர். கண்டதும் காதல் என்று சொல்லும் அளவிற்கு இல்லையென்றாலும் எதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருவருக்குள்ளும் உண்டானது உண்மை. அந்த ஆறுமாத பயணத்திற்குள் காதலில் மூழ்கி அந்த கப்பலிலேயே கல்யாணத்தையும் முடிந்துக் கொண்டு தான் தரையில் கால் பதித்தனர் அந்த ஜோடி.

நேமியோன் பிறந்தது கூட இந்த கடல் அன்னையின் மடியில் தான். அவனின் அன்னைக்கு இந்த கடலின் மீது அப்படி ஒரு ஈர்ப்பு. அந்த ஈர்ப்பு தான் தேடி பிடித்து இந்த பெயரைக் கூட அவனுக்கு சூட்ட வைத்தது. ஒவ்வொரு முறை 'நேமி' என அவனை அழைக்கும் போதும், என்னவோ உண்மையில் மகன் இந்த கடலைக் கட்டியாண்டுக் கொண்டிருப்பதைப் போல அப்படி ஒரு பெருமிதம் தெரிக்கும் அவர் குரலில். எப்போது எல்லாம் சார்லஸ் கடல்பயணம் செல்கிறாரோ அப்போது எல்லாம் மறவாது தவிர்காது கார்குழலியும் உடன் கிளம்பி விடுவார். நேமி பள்ளி படிப்பை தொடங்கும் முன்பு வரை அவனையும் உடன் அழைத்துச் செல்வர். எத்தனை எத்தனை இன்பமான நாட்கள் அவை.

அப்படி தான் நேமிக்கு பத்து வயதிருக்கும் போது அவனை விடுதியில் விட்டுவிட்டு நியூயார்கில் இருந்து கிளம்பியது சார்லஸின் கப்பல் அடன் கார்குழலியையும் அழைத்துக் கொண்டுதான். அன்று தான் அவன் அன்னையும் தந்தையையும் இறுதியாய் பார்த்தது. அதற்கடுத்து அவனை அடைந்தது அவர் தந்தை சென்ற கப்பல் மொத்தம் 57 ஊழியர்களோடும் 412 பயணிகளோடும் சேர்த்து கடலில் தொலைந்துப் போனது என்ற செய்தியை தான். அது தொலைந்த இடம் பெர்முடா முக்கோணம். அன்றைய நாட்களில் இது பெரும் செய்தியாய் கூட பேசப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த முக்கிய செய்திகளில் இந்த செய்தி பின்னுக்கு சென்றுவிட, இழந்தவர்களுக்கு தான் இன்றளவும் அது ஒரு பெரும் வலியாக இருக்கும். அடிக்கடி இந்தோனேசியாவில் ஏற்படும் சுனாமி ஒரு செய்தி. ஆனால் இந்தியாவில் ஏற்பட்ட சுனாமி வலி.

அதன்பிறகு நேமி ஒரு அரசாங்கத்தின் பொறுப்பில் ஏற்கப்பட்ட ஒரு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டான். குடும்பத்தை இழந்து தனிமையில் தவித்தவனை தங்களோடு இணைத்துக் கொண்டனர் சுமன், டேவிட், ஜெகன், சாரா குழுவினர். அன்று தொடங்கிய நட்பு. இன்றுவரை தொடர்கிறது.

தன் தாய் தந்தைக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்துக் கொள்ள தான் அவன் கப்பலில் வேலைக்கு சேர்ந்ததே. அவனை பிரிய முடியாது என்ற காரணத்துக்காகவே மற்ற நால்வரும் இந்த வேலையில் சேர்ந்துவிட்டனர். ஆனால் என்ன அவனின் எண்ணம் தான் இத்தனை தான் நாட்களாக ஈடேறவில்லை.

எப்படி இருந்தாலும் தன் நண்பர்களை பிரச்சனையில் சிக்கவைக்க அவன் விரும்பவில்லை. தாய் தந்தைக்கு நேர்ந்ததை போல தனக்கும் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். அவர்களின் உயிருக்கு உத்தரவாதமென்று எதுவும் தரவும் இயலாது. அன்றி உயிரோடு திரும்பினாலும் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அனுமதியின்றி சென்றதற்காக வேலை போகும் வாய்ப்பு தான் அதிகம். அவன் பொருட்டு அவர்கள் துன்புறுவதை அவன் விரும்பவில்லை. அதனால் தான் இத்தனை காலமாக அந்த பயணத்தை தள்ளிப் போட முடியாது. ஆனால் இம்முறையும் வாய்ப்பை தவறவிட விரும்பவில்லை அவன். இத்தனை ஆண்டு காலமாக அவர்களின் இறப்பிற்கான காரணத்தை அறிந்துக்கொள்ள வழியிருந்தும் முயற்சிக்காதது பெரும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது அவனுள்ளே.

சிந்தைனையில் ஆழ்ந்திருந்தனை பற்றி இழுத்துக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தினர் மற்ற நால்வரும். எப்படி எப்படியோ பேசி அவனை மூளை சலவை செய்ய அவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்க, அவனுமே நல்ல பிள்ளைப் போல அத்தனையும் கேட்டுக் கொண்டான்.

"எனக்குமே அதுதான் சரியா தோனுது... பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி கடல காணாப் போனவங்கள கண்டுபிடிக்கறதும் கஷ்டம் தான்... நாம வழக்கம் போல பீச்சுக்கே போகலாம்..." என்றான் அவன்.

"இவ்வளவு நல்லவனாடா நீ... சொன்னதும் பொசுக்குனு ஒத்துக்கிட்ட..."

"இப்படியெல்லாம் ஒத்துக்கற ஆள் இல்லையே நீ..."

"ஏன்டா கடப்பாரைய விழுங்கன காண்டாமிருகம் மாதிரி பேந்த பேந்த முழிக்கற... வேற ஏதாவது பிளான் வச்சுருக்கீயா..."

"யாருக்கும் தெரியாம தனியா போகலானு நினைக்கறீயா... அப்படி எல்லாம் எதுவும் இல்ல தான..." சந்தேகமாய் சாரா அவனைப் பார்க்க,

"அதான் கேக்கறா இல்ல... ஏன்டா ஆட்ட களவாண்ட பய கணக்கா இந்த முழி முழிக்கற..."

"நேமி... உன்னதான் கேக்கறோம்... வாய தொறந்துப் பேசுடா..."

நால்வரும் அவனை சுத்தி நின்று கேள்விகளால் வண்டாய் துளைக்கவும் சமாளிக்க முடியவில்லை அவனால். இத்தனை நாளாய் அவனின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் அறிந்து வைத்திருப்பவர்களிடம் சட்டென்று பொய் சொல்லவும் வரவில்லை அவனுக்கு.

"பச்... இப்போ எதுக்கு ஐ.எஸ்.ஐ தீவிரவாதியை விசாரிக்கற மாதிரி சுத்தி நின்னு உசுர வாங்கறீங்க... எப்படியும் என்ன தனியா அனுப்ப மாட்டீங்க... சரி ஒன்னா போகலானாலும் திரும்பி வருவோனு உத்திரவாதம் இல்ல... அப்படியே வந்தாலும் வேலைக்கு உத்திரவாதம் இல்ல... அதான் போக வேண்டானு முடிவு பண்ணிட்டேன்..." என்றான் நேமி பாதி உண்மையும் பாதி பொய்யுமாக.

"உன்ன நம்பலாமா..?" நால்வரும் ஒரே நேரத்தில் சந்தேகமாக அவனை வினவ,

"நம்பறதும் நம்பாததும் உங்க விருப்பம்... நான் போகல... அவ்வளவு தான்... ஒரே டையரட்... நைட் வேற சரியாவே தூங்கல..." என கோட்டாவி விட்டபடியே தூங்க போனவனை இழுத்துப் பிடித்தே அமர வைத்தனர் அவர்கள்.

"இப்ப என்ன..."

"பகல நீ தூங்க மாட்டீயே..." என்றான் டேவிட் அவனை ஆழ்ந்துப் பார்த்தபடியே.

"என்ன தூங்க விடாம பண்ணிட்டு உனக்கென்ன தூக்கம் வேண்டி கிடக்கு தூக்கம்..." என்றது ஜெகன்.

"டேய் யப்பா சாமிங்களா... நம்புக்கடா ப்ளீஸ்... நைட்டெல்லாம் ஏதேதோ கனவு... நிம்மதியா தூங்கவே முடியல... இந்த மூதேவி வேற பேய் படம் பாக்கறேனு பன்னெண்டு மணி வரைக்கும் உசுர வாங்கிட்டு... கண்ணொல்லாம் எரியுதுடா... தூங்க விடுங்கடா... ப்ளீஸ்..." என்றவன் தலைவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டான். இன்னும் அவர்கள் துளைத்து துளைத்துக் கேள்விக் கேட்டால் மாட்டிக் கொள்வானே.

யாரும் அறியாமல் எப்படி தனது திட்டத்தை செயல்படுத்தலாம் என யோசித்தபடியே படுத்திருந்தவன் அவனை அறியாமலேயே கொஞ்ச நேரத்தில் உறங்கியும் போனான். நேற்றிரவு கண்ட பேய்படம், கனவு, போதாகுறைக்கு எழுந்ததிலிருந்து அவன் மனதை ஆக்கிரமித்திருத்த தாய்தந்தையரின் நினைவு என மனம் உடலும் ஒரு சேர மொத்தமாய் சோர்ந்திருந்தது.

'இவன நம்பலாமா... எந்த ஆர்கியூமெண்டும் இல்லாம உடனே ஒத்துக்கிட்டேனே...' என்ற ரீதியில் அவனையேப் பார்த்திருந்தவர்கள், அவனின் சுவாசம் சீராக ஏறி இறங்கவும் தான் உறங்குவதை உறுதிப் படுத்திக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

"டேய்... அவ்வளவு சீக்கிரம் எல்லாம் இவன நம்ப முடியாது... எதுக்கும் யாராவது ஒருத்தன் அவன் கூடவே இருங்க..." என அறிவுறுத்தி விட்டு தான் நகர்ந்தாள் சாரா.

இரவு ஒன்றரை மணி.

முகத்தை மூடியிருந்த போர்வையை மெல்ல விலக்கிவிட்டு தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டிப் பார்த்தான் நேமி. விடிவிளக்கின் உபயத்தால் மெல்லிய நீல நிற ஒளி அறையெங்கும் கசிந்துக் கொண்டிருந்தது. தனக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த ஜெகனை உற்றுப் பார்த்தான் நேமி. மெல்லிய குறட்டை சத்தத்தோடு ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் அவன். மொத்தமாய் போர்வையை விலக்கிவிட்டு சத்தம் வராது எழுந்தவன், மெல்ல அவனை உலுக்க, ஒரு சிணுங்களோடு புரண்டு படுத்தானே அன்றி எழவில்லை. அவனைப் போல மற்ற இருவரையும் பரிசோத்துப் பார்த்தவன் அவர்களும் ஆழ்ந்த நித்திரையில் தான் இருக்கிறார்கள் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டான்.

மெல்ல அடிமேல் அடியெடுத்து வைத்து தனது தோள் பையில் இரண்டு செட் உடைகளை எடுத்து வைத்துக் கொண்டவன், மெல்ல தண்ணீர் குழாயை திறந்து முகத்தைக் கழுவிக் கொண்டு தானும் உடைமாற்றி வந்தான். குளித்தால் எங்கே தண்ணீர் சத்தம் கேட்டு மற்றவர்கள் எழுந்து விடுவார்களோ என்று தான் முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு கிளம்பிவிட்டான் அவன். மீண்டும் மற்ற மூவரையும் பார்க்க இன்னுமே உறக்கத்தில் தான் இருந்தனர். ஒசைப்படாமல் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தான். இதுவரை இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக வெளியிட முடிந்தது அவனால்.

ஆழ்ந்து நீண்ட மூச்சுகளை உள்ளிழுத்துக் கொண்டவன், கப்பலின் தரைதளத்தை நோக்கி நகர்ந்தான். அங்கு தான் ஆபத்துக் காலங்களில் அவசரத்திற்கு பயன்படுத்தபடும் சிறுசிறு கப்பல்கள் நிறுத்தப் பட்டிருந்தன. இரவு நேர காவலுக்கு இருப்பவர்களை தவிர மொத்த கப்பலுமே நித்திரையில் ஆழ்ந்திருந்தது. அங்கு சூழ்ந்திருந்த அமானுஷ்ய அமைதியே உள்ளுக்குள் ஒரு திகிலை பரப்ப, நேரங்கெட்ட நேரத்தில் நேற்றிரவு பார்த்த பேய் படத்தின் காட்சிகள் வேறு கண்முன் விரிந்தது.

அவனின் மூச்சு சத்தமே பெரும் இரைச்சலாய் கேட்க, அவனின் காலடி சத்தம் வேறு அதற்கு ஸ்ருதி சேர்ப்பதைப் போல அச்சத்தைக் கூட்டியது. முகமெங்கும் முத்து முத்தாய் பூத்துவிட்ட வியர்வை துளிகளைப் புறங்கையால் துடைத்து விட்டபடியே, படபடக்கும் இதயத்தை விரல் கொண்டு நீவியபடியே வேக வேகமாய் தரைதளத்தை நோக்கி நடந்துக் கொண்டிருந்தான் அவன்.

சரியாக காலை மூன்று மணியளவில் கப்பல் மியாமியை அடைந்துவிடும். அதற்குப்பின் அங்கிருந்து யாருமறியாமல் செல்வது கடினம். முக்கியமாக அந்த நால்வர். அதுவும் இந்த இடத்திலிருந்து பெர்முடா தீவுக்கு செல்வது சற்றே சுலபம். ஐந்தே மணி நேரத்தில் பெர்முடாவை அடைந்துவிடலாம் என்றுதான் இப்போது அவன் கிளம்பியது.

தரைத்தளத்தில் காவலுக்கென இருந்த ஒருசில ஊழியர்களும் கூட இப்போது அரைகுறை உறக்கத்தில் தான் இருந்தனர். இவனை அந்த நேரத்தில் அங்கேக் கண்டதும் அவர்கள் எழ முயல, கண் அசைவிலையே அதை வேண்டாமென்று மறுத்து, படகுகள் நிறுத்தி வைத்திருக்கும் இடத்திற்கு விரைந்தான் அவன். அவன் தலையை அதிகாரி என்பதால் தடுத்தி நிறுத்தி கேள்விகள் கேட்க அவர்கள் யாரும் முன்வரவில்லை.

இரண்டு பேர் மட்டும் செல்லகூடிய சிறிய அளவிளான ஏந்திரப் படகினை இறக்கி கடலில் நிறுத்திவிட்டு, சுற்றும் முற்றும் தன்னை யாரும் கவனிக்கிறார்களா எனப் பார்த்தான் நேமி. யாரும் அவனைக் கவனிக்கவில்லை எனவும் நிம்மதி அடைந்தவனாக அந்த கப்பலில் ஏற முயன்றவனை ஒரு கரம் தடுத்து நிறுத்த, அதிர்ந்துப் போனான் அவன்.

உள்ளம் தடதடக்க, உடலெங்கும் வியர்வைப் பெருக, மெல்ல திரும்பிப் பார்த்தவனை, கைக்கட்டி முறைத்துக் கொண்டு நின்றிருந்தனர் மற்ற நால்வரும்.

- காத்திருப்பு தொடரும்.
 
Last edited:
காத்திருப்பு 3:

தீடிரென அவர்கள் நால்வரையும் அங்கே கண்டவன்,செய்வதறியாது பேந்த பேந்த விழித்தபடி நின்றிருக்க, கையை கட்டிக் கொண்டு அவனையே முறைத்துப் பார்த்தபடி நின்றிருந்தனர் மற்ற நால்வரும்.

"என்ன தொர... அர்த்த ராத்திரில எங்கையோ கிளம்பிட்ட மாதிரி இருக்கு..." நேமியின் கழுத்தில் கைப்போட்டு தன்னோடு இறுக்கியப்படியே கேட்டான் டேவிட்.

"பாத்தா தெரியல டேவி... மூன் லைட்ல லாங் ட்ரைவ் போனா மூளைக்கு நல்லதாம்... அதான் சார் கிளம்பிட்டாரு..." என்றாள் சாரா குரலை ஏற்றி இறக்கி எள்ளலாக.

நேமியின் டீசர்டின் காலரை பிடித்து இழுத்து தன் அருகே நிறுத்திய சுமன், "அதெல்லாம் சரிதான்... ஆனா அது மூளை இருக்கவன் இல்ல போகனும்... இந்த முட்டாபய எதுக்கு கிளம்பி நிக்கறனாமான்..." என்றான் நேமியை ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டே.

"அதகூட விடுடா... இதென்ன மிட் நைட்ல கருப்பு கலர்ல சொக்கா... என்ன பாரு என் அழக பாருனு வந்து நிக்கற..." என்றான் புருவத்தை ஏற்றி டேவிட் இறக்கி மேலும் கீழும் நேமியை நோட்டம் விட்டபடியே.

"இது தெரியல பாரேன் உனக்கு... சாரு நமக்கெல்லாம் தெரியாமா இருட்டோட இருட்டா காத்தோட காத்தா கிளம்பி போக வேண்டாமா... இதுக்கு தான் இந்த கெட்டப்பு செட்டப்பு எல்லாம்..." சாரா இன்னும் நேமியை முறைத்துக் கொண்டே சொல்ல, அவனோ விழிப் பிதுங்கி நின்றான்.

விழி பிதுங்காமல் வேறு என்ன செய்யும். டேவிட் தான் அவனின் கழுத்தை இறுக்கி தன்னோடு சேர்த்து இழுத்து பிடித்திருக்கிறான் என்றால், இன்னொரு பக்கம் சுமன், அவனின் சட்டை காலரை பிடித்து தன் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தான்.

"அடே... அர்த்த ராத்திரில இந்த கருமம் புடிச்ச பஞ்சாயத்து எல்லாம் இப்ப தேவையா..? இதுல நல்லா தூங்கிட்டு இருந்தவன வேற தலையிலேயே தட்டி சட்டைய மாட்டி இழுத்துட்டு வந்து நிக்க வச்சுருக்கீங்க... முடியலடா என்னால... பஞ்சாயத்த முடிச்சு கிளம்பறோமா இல்லையானு ஒரு முடிவ சொல்லுங்க... அது வரைக்கும் அப்படிக்கா போய் நான் இந்த கட்டைய கொஞ்ச நேரம் சாய்க்கறேன்..." என்றான் ஜெகன் தன் கையிடுக்கில் கொட்டாவியை வெளியேற்றிய படியே. இன்னும் அரை தூக்கத்தில் தள்ளாடியபடியே தான் நின்றிருந்தான் அவன்.

"அட... தூங்கு மூஞ்சு கழுத..." என்ற ரீதியில் இம்முறை மற்ற மூவரும் ஜெகனை முறைக்க, அவனோ அதை எல்லாம் கண்டுக் கொள்ளதவனாக அருகிலிருந்த நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு விட்ட தூக்கத்தை தொடர முன்றவனை தலையிலேயே தட்டி மீண்டும் எழுப்பி நிற்க வைத்தனர் அவர்கள்.

"இப்படியே தூங்கி வழிஞ்சா எப்ப நாம கிளம்பறது... வந்து தொல சீக்கரம்... போட்ட இறக்கி கீழ நிறுத்துவோம்..." என்றான் டேவிட்.

"அதான் அவன் இறக்கிட்டானே..." என சுமன் வினவ,

"அதுல நீயும் அவனும் மட்டும் தான் போகனும்... என்ன போறீங்களா..." சாரா புருவத்தை ஏற்றி இறக்கி நக்கல் குரலில் கேட்க,

"ஐய்யோ... சாமி ஆள விடுங்க... எங்க போனாலும் ஒன்னாவே போய் சேருவோம்..." என்றான் சுகன் கையெடுத்துக் கும்பிட்டு.

"அப்ப நீங்களும் என்கூட வறீங்களா..?" டேவிட் விட்ட கழுத்தை நீவிவிட்டபடியே நேமி அதிர்ச்சியாய் வினவ,

"ம்ம்ம்... பேய்க்கு வாக்கபட்டா நாய்க்கு பயந்து தானே ஆகனும்..."

"இது என்னடா ரொம்ப கேவலமான பழமொழியா இருக்கு..." என்றான் சந்தேகமாய் ஜெகன்.

"இது பழமொழி இல்ல இந்த டேவிட்டோட புதுமொழி..." டேவிட் சட்டை காலரை உயர்த்தி விட்டு பெருமையாக சொல்ல,

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சுமனும் சாராவும் பத்துப் பேர் அமரக்கூடிய தானியங்கி படகை கடலுக்குள் இறக்கி நிறுத்தி இருந்தனர்.

"அட... அறிவு கெட்ட எரும மாடே... குரங்குக்கு வாக்கப்பட்டா மரத்துக்கு மரம் தவ்விதான் ஆகனுங்கறத தான் இந்த மூதேவி அப்படி சொல்லிட்டு திரியுது... இதுக்கெல்லாம் விளக்கம் ஒரு கேடு உனக்கு... வந்து போட்ல ஏறுங்க முதல... எவனாவது வந்து தொலைக்க போறான்..." சாரா கடுகடுக்க, ஜெகன் டேவிட் இருவருமே அவனை முறைத்துப் பார்த்தனர்.

"ஏன் தொரைக்கு தனியா வெத்தல பாக்கு வச்சு அழைக்கனுமோ..." என்றான் சுமன் நேமியை முறைத்துக் கொண்டே,

"யாருக்கும் தெரியாம ஊருக்கு முன்ன கிளம்பி வர தெரியுது... ஆனா போட்டுல ஏற தெரியாதா..? பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு முழிக்கறத பாரு... திருவிழாவுல காணப் போன திருட்டு கருங்கொரங்கு மாதிரி..."

"இல்ல... நான் மட்டும் கிளம்பறேன்... நீங்க இங்கயே இருங்க..." மேலே என்ன சொல்லி இருப்பானோ, நால்வரும் சேர்ந்து ஒன்றாக முறைத்த முறைப்பில் கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.

"அதான் மொத்தமா கூட்டிட்டுப் போய் சுறாக்கு இரையாக்குறதுனு முடிவு பண்ணிட்டீயே... வந்து ஏறி தொல சீக்கரம்... இன்னும் தேவையில்லாம வெட்டி வியாக்கியானம் ஏதாவது பேசிட்டு இருந்த சுறாவுக்கு வேலையே வைக்காம நானே உன் சங்க கடிச்சு துப்பிடுவேன்..." என்றான் டேவிட் கண்களில் கொவைவெறி மின்ன.

அதற்கு மேலும் பேச அவன் என்ன முட்டாளா? அமைதியாக படகில் ஏறி அமர்ந்துக் கொள்ள, அவனும் ஏறிக் கொண்டதும் மெல்ல ஆடி அசைந்தபடி நகரத் துவங்கி இருந்தது படகு.

ஜெகன் ஒரு ஓரமாய் அமர்ந்த படியே தூங்கிவிட, மற்ற மூவரும் தங்களுக்குள்ளேயே பேசியபடி வந்தவனரே தவிர மறந்தும் நேமியிடம் பேச்சுக் கொடுக்கவில்லை. அவனே பேச முன்றாலும் அவர்கள் மூவரும் சேர்ந்து ஒன்றாக முறைத்த முறைப்பில் சட்டென்று வாயை மூடிக் கொண்டான். என்னதான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாலும் ஒருக்கு ஒருமுறை அவர்களைப் ஏக்கமாக பார்த்தாலும் அவர்கள் யாரும் மலையிறங்கி வருவதைப் போல தெரியவில்லை.

"இந்நேரம் நம்ம கிளம்பிட்டோனு தெரிஞ்சு இருக்கும் இல்ல..." மீண்டும் மெல்ல பேச்சுக் கொடுக்க முயன்றான் நேமி.

"பேசன அவ்வளவு தான் சொல்லிட்டேன்... பண்ணறதெல்லாம் பண்ணிட்டு ஓடிப் போன கல்யாணப் பொண்ணு மாதிரி கேக்கறான் பாரு கேள்வி..." என்றான் சுமன் கடுப்பாக.

"இல்லடா சுமன்... நான் என்ன நினைச்சேனா..."

"பேசாம வாய மூடிட்டு இருந்துடு சொல்லிட்டேன்... நாங்க யாராவது ஏன் கிளம்பி வந்தனு கேட்டோமா..?" என்றது டேவிட்.

"அதானே... நீயா ஒரு முடிவு எடுத்து கிளம்பிட்ட இல்ல... அப்பறம் அதுக்கு என்ன விளக்கம் வேண்டியிருக்கு..." என்றது சுமன்.

"அவ்வளவு தான் நீ எங்கள நம்புனது இல்ல... நீ எங்க போனா என்ன..? செத்தா எங்களுக்கு என்னனு அப்படியே விட்டுடுவோனு நினைச்சுட்ட இல்ல... நாங்க எல்லாம் அவ்வளவு சுயநலவாதினு நினைச்சுட்ட இல்ல... அப்போ நம்ம எல்லாம் ஒரே குடும்பம் இல்ல... அப்படி இல்லனா நீ எங்கள உன் குடும்பமா நினைக்கல... அப்படி தானே... எதுக்காக உன்ன போக வேண்டானு சொன்னோம்னு உனக்கே தெரியும்... அப்படியே நீ பிடிவாதமா போகனுமுனு சொல்லி இருந்தா உன்ன யாரு தடுத்து இருக்க போறா... இது நாள் வரைக்கும் ஒன்னா தானே இருந்தோம்... சாவுனு ஒன்னு வந்தா அதுவும் ஒன்னாவே வரட்டும்... அதுவும் உன்னோட அப்பாம்மா இறந்த காரணத்த கண்டு புடிக்கனா தாராளமா சாவு வரட்டும்... அதுக்கென்ன இப்போ... ஆனா நீ அப்படி நினைக்கல இல்ல..." குரலில் வருத்தம் தொனிக்க சொல்லி முடித்தவள் வேகமாக அங்கிருந்து வெளியே வந்துவிட்டாள். சுமனும் டேவிட்டும் கூட அவள் பின்னோடே சென்றுவிட, அதிர்ந்து செயலிலந்து நின்றது என்னவோ நேமி தான்.

அப்படி அவன் நின்றதென்றவோ ஒரு சில வினாடிகள் தான். வேகமாக சாராவின் பின்னோடு ஓடிச் சென்றவன், அவளின் கரம் பற்றி நிறுத்தினான்.

"என்ன பத்தி உங்களுக்கு தெரியாதா என்ன..? இல்ல நான் தனியா ஏன் கிளம்பி வந்தேனு தான் உங்களுக்கு தெரியாதா..? இதோ இதே கடல தான் பதினெட்டு வருஷத்துக்கு முன்ன என்னோட ஒரு குடும்பத்த தொலைச்சேன்... மறுபடியும் இதே இடத்துல என்னோட இன்னொரு குடும்பத்தையும் தொலைக்க விரும்பல..." அத்தனை சோகம் வலிந்தது அவனின் குரலில்.

"நீ ஓரமா உக்காந்து ஒரே மணி நேரம் சென்டிமென்ட் சீன் ஓட்டுனாலும் உன்னையெல்லாம் நம்பவே முடியாது..."

"அடேய்... கொலவெறி ஆக்காதீங்கடா என்னய... ஆமான் தனியா கிளம்பி வந்தேன்... இப்போ என்ன அதுக்கு... பேச மாட்டீங்களா... சரி... வேண்டாம்... போங்க... அப்படியே வந்து உங்க பின்னாடி கெஞ்சுகிட்டு அலைவேனு யாரும் நினைக்க வேண்டாம்..."

"இப்ப யார் உன்ன கெஞ்ச சொன்னா... அப்பாலே போ சாத்தானே..." என அவன் முகத்தில் கை வைத்து ஓரமாய் ஒதுக்கி தள்ளிவிட்டு படகின் விளிம்பை நோக்கி நடந்து வந்தனர் மூவரும்.

"டேய்... டேய்... தெரியா தனமா சொல்லிட்டேன்டா... உங்களோட பேசாம எப்படி இருப்பேன்டா... சாரா... என் தங்ககுட்டி... பட்டு செல்லம் இல்ல நீ... நீயாவது சொல்லும்மா..." நேமி அவர்களின் பின்னோடே கெஞ்சிக் கொண்டுச் செல்ல,

"அவன்களாவது வாயால சொன்னானுங்க... என்கிட்ட வந்த மண்டைய இரண்டா பொழந்துடுவேன் பாத்துக்கோ... அவ்வளவு கடுப்புல இருக்கேன் உன் மேல..." என்றவள் இன்னும் வேகமாக முன்னோக்கி சென்று அப்படியே அந்த சிறு படகை சுற்றிக் கொண்டு நடக்க ஆரம்பித்துவிட,

"அடேய் பாவிங்களா... வேணுமுனா கால கூட விழறேன்டா... ஆனா இப்படி சுத்தல விடாதீங்கடா... முடியலடா என்னால..." அவன் கெஞ்சிக் கொண்டே அவர்களின் பின்னோடு சுற்றி வர, விறுட்டென்று படகின் குடிலுக்குள் ஓடி மறைந்தது ஒரு உருவம்.

முதல் முறை சரியாக கவனிக்காதவன் அடுத்தடுத்த முறைகள் அந்த படகை சுற்றி வரும்போது குறிப்பிட்ட அந்த இடத்தில் மட்டும் ஏதோ ஒரு உருவம் சட்டென்று படகின் குடிலுக்குள் சென்று மறைவதை பார்த்தவனுக்கு யோசனையில் புருவம் சுருங்கியது.

"பக்கிங்களா... கொஞ்சம் பொறுமையா தான் வந்து தொலைங்களேன்... ஓடி ஓடி மூச்சு வாங்குது எனக்கு..." அ
மூச்சிரைத்தபடியே அவர்களின் முன்னே நின்றிருந்தான் ஜெகன்.

"மூதேவி... இப்ப நீ எதுக்கு உள்ள வெளிய விளையாடிட்டு திரியற..." என்ற நேமியை சூழ்ந்து நின்றனர் நால்வரும்.

"சர்ப்ரைஸ்... ஹாப்பி பொறந்த டே நேமி..." என அவன் காதுக்கு மிக அருகில் நால்வரும் ஒன்றாக கத்த, இரண்டு காதுகளையும் இறுக மூடிக் கொண்டான் அவன்.

"அட பக்கி மாடுங்களா... இதுக்கா இத்தன பாடு படுத்துனீங்க என்ன..." அவன் புன்னகை முகமாய் வினவ,

"வேற எதுக்காம்... கோபம்... உன் மேல... அப்படியே எங்களுக்கு வந்துட்டாலும்... போவீயா... எப்படியும் நீ இப்படி ராத்திரியோட ராத்திரியா ஓடி வருவனு எங்களுக்கு தெரியாதா... அதான் இந்த ஏற்பாட்டை எல்லாம் நேத்தே இந்த போட்ல பண்ணி வச்சுட்டோம்..." என்றபடியே அவர்கள் விலக,

சிறு மேசை ஒன்றின் நான்கு கால்களிலும் கலர் கலரான பலூன்கள் கட்டபட்டு, அதன் நடுவே அழகான வட்ட வடிவில் ரெட் வெல்வெட் கேக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

நேமியின் பிறந்த நாள் மட்டும் தான் அவர்கள் கொண்டாடுவது. அறிந்ததும் அவன் பிறந்த நாளை மட்டும்தான். மற்ற நால்வருமே நினைவு தெரியும் முன்பே அங்கு வந்து சேர்ந்திருந்தனர். ஆசிரமத்திற்கு வந்த முதல் வருடம் தன் பிறந்த நாள் அன்று அன்னையையும் தந்தையையும் நினைத்து நேமி தேம்பி தேம்பி அழ, ப்ரட் துண்டுகள் நான்கை ஒன்றாக வைத்து அதன் மேல் மெழுகுவர்த்தியை ஏற்றி அப்போது தான் முதன்முதலில் அவனுக்காய் பிறந்தநாள் கொண்டாடினர் மற்ற நால்வரும். அன்றிலிருந்து இன்றுவரைக் கூட அவன் பிறந்த நாள் மட்டும் தான் அங்கே கொண்டாடப்படுகிறது.

நன்றாக நினைவு தெரிந்த பின் மற்றவர்களுக்கும் செய்ய அவன் எவ்வளவோ முயன்றிருக்கிறான். ஏன் அவன் பிறந்த நாளையே ஐவரின் பிறந்த நாளாக நினைத்து ஒன்றாக கொண்டாடலாம் என்றிருக்கிறான். ஆனால், அவர்கள் அதை விரும்பவில்லை. அவர்களுக்கு அவனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் தான் அத்தனை இன்பம்.

"நிஜமாவே மறந்துட்டேன்டா..." என்றபடி கேக் முன் வந்து நின்றான் நேமி.

"எப்படிடா ஓடிப் போகலாங்கற நினைப்புலையே இருந்தா பர்த்டே எல்லாம் எப்படி நியாபகம் இருக்கும்... சரிசரி முறைக்காத... கேக்க வெட்டு முதல..." என சுமன் பிளாஸ்டிக் கத்தி ஒன்றை எடுத்து நீட்ட,

மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு ஒரு சிறுசிறு துண்டை வெட்டி எடுத்தவன், நால்வரையும் மாறிமாறி பார்த்தபடி அப்படியே நின்றான். 'யாருக்கு முதலில் ஊட்டினாலும் மற்ற மூவரும் இந்த வருடம் முழுவதும் அதையே சொல்லி காட்டி ஒரு வழி செய்துவிடுவர். பேசாமல் தானே உண்டுவிட்டால் என்ன?' என அவன் சிந்தனை ஓட,

"பக்கி... யோசிக்குது பாரு எப்படி... நீ ஒன்னும் எங்களுக்கு தர வேண்டாம்... நாங்களே எடுத்துக்கறோம்..." என்றவர்கள் அவனின் கையில் வைத்திருந்த சிறுதுண்டை அப்படியே ஆளுக்கு ஒரு பக்கம் கடிக்க, அதில் டேவிட் அவன் கையையும் சேர்த்து கடித்துவிட,

"ஸ்ஸ்ஸ்ஸ்... ஆ... அம்மா... விரல்டா... எரும..." அவன் வேகமாய் கையை இழுத்து உதற, பெரிய கேக் துண்டு ஒன்றை வெட்டி அவனின் வாயில் வைத்து திணித்தான் சுமன்.

அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டபடியே அந்த கேட்டை உண்டு முடிக்கவும் கிழக்கே செந்தனலாக ஆதவனின் கதிர்கள் கடல் பரப்பலிருந்து கொஞ்சமாய் மெல்ல மேலே எழும்பவும் சரியாய் இருந்தது.

மணி அதிகாலை ஐந்து. கிழக்கே சூரியன் வராத வானில் செந்நிறம் நீரெங்கும் பட்டு வானமெங்கும் எதிரொளிக்க அப்படி ஒரு ரம்மியமான காட்சி அது.

"ஏய்... சன்ரைஸ் நேமி... உனக்கு ரொம்ப பிடிக்கும் இல்ல... அங்க பாரு..." என சாரா அவனை இழுத்து வந்து படகின் விளிம்பில் நிற்க வைக்கவும், ஆசை ஆசையாய் அதைப் பார்த்திருந்தான் நேமி. மற்றவர்களும் ரசனையுடன் அதைப் பார்த்திருக்க, குளிர்பானம் எடுக்க உள்ளே சென்ற சுமனோ அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் உள்ளிருந்தபடியே குரல் கொடுத்தான்.

மற்ற மூவரும் உள்ளே ஓட, நேமியோ அசையாது அதே இடத்தில் தான் நின்றிருந்தான். ஏனோ எழும் சூரியனிலிருந்து கண்களை அப்பறபடுத்தவே அத்தனை பயமாய் இருத்தது. திரும்பிப் பார்த்தாலே ஆபத்தென்று அடித்து கூறியது உள்ளம். படபடவென வேகமாக இதயம் அடித்துக் கொண்டதின் விளைவாக உடலெங்கும் கடலின் ஊதக்காற்றையும் மீறி வியர்வைப் பெருக தொடங்கி இருந்தது.


இதோ இதே இடத்தில் தான் தந்தையும் அவருடன் வந்தவர்களும் தொலைந்துப் போனதாய் சொல்கிறது முந்தைய ஆவணங்கள். நினைக்க நினைக்க மூச்சு முட்டியது. கால்கள் அதே இடத்தில் வேரோடி விட்டத்தைப் போல இம்மியுடம் அசைக்க முடியவில்லை அவனால்.

அதே நேரம் உள்ளிருந்த மற்ற நால்வரின் குரலிலும் பதட்டத்தையும் கூச்சலையும் சுமந்தபடி வெளியேவரை கேட்க, சட்டென்று வந்து ஒட்டிக் கொண்ட பதற்றத்தோடு உள்ளே ஓடினான் அவன்.

"நேமி... காம்பஸ் நார்த் காட்டலடா..."

"எந்த எலக்ரானிக் டிவைஸ்யூம் ஓர்க் ஆக மாட்டேங்குது..."

"ரோடார் கூட வேலை செய்யல... திடீருனு என்ன ஆச்சுனே புரியல..."

ஆளாளுக்கு ஒரு பக்கம் கத்தியபடியே அடுத்து அவர்களால் என்ன செய்ய முடியும் என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கே கீழே கிடந்த திசைக்காட்டியை மெல்ல நடுங்கும் கரம் கொண்டு இறுக பற்றிக் கொண்டவன், அதில் தன் கண்களை நிலைப் பெற செய்தான். திசைக்காட்டியில் இருந்த முள் 360°யிலும் எந்த ஒழுங்குமின்றி சுற்றி சுற்றி வந்ததுக் கொண்டிருந்து. எந்த நொடி எந்த பக்கம் திரும்பும் என்று கணிக்கவே முடியாதபடி அசுர வேகத்தில் சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது அது.

அவன் அதைப் பார்த்துக் கொண்டிருந்த அதே நொடி கண்களை கூசச் செய்யும் அளவுக்கு ஒரு வெளிச்சம். ஒரு சில நொடிகள் அவர்கள் அத்தனை பேரின் விழிகளும் செயலிழந்துப் போனது உண்மை. அதுமட்டும் மின்னலென்றால் இன்னும் சில நொடிகளில் பெரும் இடி ஒன்று விழக்கூடும். அவன் எண்ணி முடிப்பதற்குள்ளேயே அந்த இடி அவர்கள் படகின் மீது விழுந்திருந்தது.

படகின் ஒரு பக்கம் மொத்தமும் சேதமடைந்து கொஞ்சம் கொஞ்சமாய் கடல்நீர் உட்புக தொடங்கி இருந்தது. அடுத்து என்ன..? யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இறுக ஒருவர் கையை மற்றவர்கள் பற்றிக் கொள்ள, பதற்றத்துடன் சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இப்போது தான் கவனித்தான் நேமி. ஒரு பக்க வானம் சூரிய உதயத்தால் செக்க சிவந்திருந்தது. அதே மற்றொரு பக்கம் கருமேகங்கள் சூழ்ந்து இருண்டு கிடந்தது. அந்த இருளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மின்னல் வெட்டி தெரிக்க, நட்சத்திரங்கள் கொட்டிக் கிடந்தது.

"அப்படி... அப்படியென்றால்... இப்போது நீர் சுழல் வருமா..." அவன் எண்ணம் முற்றுப் பெறும் முன்பே வேகமாக காற்று சுழன்றடிக்க தொடங்கியது.

நிற்க முடியாத அளவிற்கு வேகமாக காற்று சுழன்று சுழன்று வீச, அது கொஞ்சமாய் நீரையும் வாறி அவர்களின் மீதிறைத்தது.

"எல்லாம் அங்க பாருங்க..." சுமன் கைக்காட்டி கத்த, அவன் கைகாட்டிய திசையில் பார்த்தவர்களுக்கு அத்தனை அதிர்ச்சி. பேரலை ஒன்று அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது.

இனி என்ன முயன்றாலும் படகின் திசையையும் மாற்ற முடியாது; அந்த பேரலையிலிருந்தும் தப்ப முடியாது. உறுதியாய் தெரிந்த பின் ஐவரும் ஒருவர் கையை ஒருவர் பற்றியபடியே இறுக கண்களை மூடிக் கொள்கின்றனர்.

பெரும் இரைச்சலோடு நீரை வாறி அவர்களின் மீது ஊற்றியபடி, கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களை நெருங்குகிறது அந்த பேரலை. மனதில் இறைவனை நினைத்தபடியே ஐவரும் ஒன்றாய் கண்டிக் கொள்கின்றனர்.

இனி இந்த பூமியில் வாழப் போவதில்லை... வாழும் கடைசி நொடி வரை ஐவரும் பிரியவோ ஒருவர் கையை ஒருவர் விலக்கவோ கூடாது என்ற எண்ணம் உறுதிப்பட்டு கிடக்கிறது அவர்களின் உள்ளத்தில்.

மெல்ல அப்பேரலை அவர்களை வாறி இழுத்து தன்னுள் சுருட்டிக் கொள்கிறது. அந்த நீரில் படகு மூழ்கிப் போகும் என்ற எண்ணத்தை பொய்யாக்கும்படி வேகமாக அந்த அலைக்குள்ளேயே சுழன்றுக் கொண்டிருந்தது படகு.

அது சுழன்ற வேகத்தில் மூச்சு திணறி, வாந்தி வரும் போலிருந்தது. தலையும் கிறுகிறுத்து மயக்கம் வேறு வந்தது.

மெல்ல கண்களை திறந்து பார்கிறான் அவன். மற்ற நால்வரும் ஏற்கனவே மயங்கி விட்டிருந்தனர். எழுப்ப முயன்றாலும் முடியவில்லை. அத்தனை வேகமாய் சுழன்றுக் கொண்டிருந்தது படகு.

'தன்னால் தானோ இத்தனையும்... தான் இங்கு வர நினைத்திருக்கவோ கூடாதோ..? இனி என்ன செய்தாலும் தன்னால் இவர்களை காப்பாற்ற முடியுமா..? எத்தனை சொன்னார்கள்..? இப்படி அவர்களையும் இழுத்துக் கொண்டு வந்து மரணத்தின் வாசலில் தள்ளிவிட்டேனே..?' நினைக்க நினைக்க நேமியின் கண்களில் கண்ணீர் ஆறாய் பெருகுகிறது.

இனி அவன் செய்ய ஒன்றுமில்லை. இதுவே அவன் வாழ்வின் கடைசி நொடிகள் என்று தெரிந்ததும் மனமெங்கும் நீங்காமல் வந்து நிறைகிறது அவனின் அன்னை முகமும், 'நேமி கண்ணா...' என்ற பிரத்தியேக அழைப்பும். 'அம்மா... நீங்க தான் இவங்கள காப்பாதனும்... நான் கூட உங்க கூடவே வந்துடறேன்... ஆனா எனக்காக வந்த இவங்களோட உயிர நீங்க தான் காப்பாத்தனும்... ப்ளீஸ் ம்மா...' மனமுருகி மன்றாடியவனின் சுயமும் கொஞ்சம் கொஞ்சமாய் தப்பிப் போக, சுயத்தை இழக்கும் கடைசி நிமிடத்திருக்கு முன்பு உடைந்திருந்த படகின் வழியே தான் கண்டான் அந்த காட்சி.

அந்த பேரலைக்குள் சுழன்ற படகானது மெல்வ மெல்ல ஆழ்கடலின் விளிம்பை நோக்கி சுழன்றபடியே சென்றுக் கொண்டிருந்தது. கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர் விட்டம் கொண்ட சுழல் அது. அதன் முடிவு தெரியவில்லை என்றாலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு கிடந்தது. அதில் தான் சுழன்றபடியே கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கிக் கொண்டிருந்தது அவர்களின் படகு.
- தொடரும்
 
காத்திருப்பு 4:

இறுக மூடிய விழிகளின் உள்ளே ஓயாத அலைகள் அடங்காது ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் அதே சோகம் நிறைந்த இசை, அவனின் செவிப்பறைகளை வந்து வந்து மோதி இம்சையைக் கூட்டிக் கொண்டிருந்தது. அழுந்த தலையை பற்றியபடியே மெல்ல எழுந்து அமர்ந்தவனுக்கு, இன்னும் தலையை சுற்றுவதைப் போலவே ஒரு பிரமை. இன்னும் முழுதாக விழிகளைத் திறக்க கூட முடியவில்லை. இரண்டு கைகளாலும் இறுக தலையைப் பற்றிக் கொண்டவன், மெல்ல இமைகளைப் பிரிக்க முயன்றான்.

எத்தனை முயன்றும் அத்தனை சுலபமாய் இமைகளைத் திறக்க முடியவில்லை அவனால். ஏதோ பெரும் பாறை ஒன்றை இடம் பெயர்த்து இமைகளின் மீது ஒட்டி வைத்ததை போல பாரம் ஏறிக் கிடந்தது.

மெல்ல இரண்டு இமைகளையும் நீவி விட்டபடியே இருந்தவனுக்கு, இறுதியாக நீண்ட நேரத்திற்கு பின்பு இமைகளை கொஞ்சமாய் அதனிடத்தில் இருந்து பிரிக்க முடிந்தது. ஆனால், எரிச்சலென்றால் அப்படி ஒரு எரிச்சல். மிளகாய் சாந்தை அரைத்து இமைகளின் மீது பூசி அதைப்போல் பெரும் எரிச்சல். அந்த எரிச்சலை உணர்ந்த நொடியில் சட்டென்று மீண்டும் இமைகளை இறுக மூடிக் கொண்டான். இப்படியாக அவனின் நீண்ட நேர முயற்சியன் பயனாக ஒரு வழியாக இமைகள் பிரிந்து விழிகளுக்கு வழிவிட்டது.

விரிந்த விழிகளின் வழியே, தன்னை சுற்றிப் பார்வையை ஓட்டினான் நேமி. கைக்கெட்டும் தூரத்திலேயே மற்ற நால்வரும் விழுந்து கிடந்தனர். அதேபோல அவர்கள் வந்த படகின் ஒரு சில பகுதிகளும் ஆங்காங்கே விழுந்து கிடந்தது. ஆனால் அவை படகின் ஒரு பகுதிதான் என்று கண்டுபிடிக்கவே நீண்ட நேரம் எடுக்கும். அப்படி சிறுசிறு துண்டங்களாக சிதிலமடைந்து கிடந்தது.
தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை உணரவே நீண்ட நேரம் பிடித்தது அவனுக்கு. அதை உணர்ந்த அடுத்த நொடி அவன் சிந்தையை ஆக்கிரமித்தது நண்பர்கள் நால்வரின் நினைவு தான். விழிகளைத் திறந்த அடுத்த நொடி அவர்களை கண்டதும், வேகமாக அவர்களை நோக்கி ஓட விழைந்தது கால்கள். ஆனால் அவனின் மூளை இட்ட கட்டளையை ஏற்க மறுத்த கால்களோ தரையோடு ஒட்டி கொண்டதைப் போல இருந்த இடம் விட்டு நகர மறுத்தன.

கண்களின் எரிச்சலையும் பொருட்படுத்தாது, மாறி மாறி அவர்கள் நால்வரையும் தான் பார்த்துக் கொண்டிருந்தான் நேமி. சீராக ஏறி இறங்கும் நெஞ்சுக்கூடே அவர்களின் உயிருக்கு எதுவும் இல்லை என்பதை பறைசாற்ற, இப்போது தான் சீராக அவனாலும் மூச்சுவிட முடிந்தது.

மனதில் ஒரு நிம்மதி பரவியதும் தான் தன்னைச் சுற்றிலும் கவனிக்கத் தோன்றியது அவனுக்கு. இது வரையிலுமே அந்தப் பெரும் அலைக்குள் சிக்கி ஏதோ ஒரு தீவின் பக்கம் கரை ஒதுங்கி இருக்கிறோம் என்றுதான் எண்ணியிருந்தான் நேமி. ஆனால், அவனின் எண்ணத்தை உறுதிப்படுத்தும் விதமாக எந்த ஒரு காட்சியும் அவன் கண்ணுக்கு தென்படவில்லை.

எந்தப் பக்கமும் கடலின் கரை இருப்பதைப் போல தெரியவில்லை. ஏன் கடலே அங்கு இருப்பதற்கான எந்த ஒரு சிறு அறிகுறியும் இல்லை. வெள்ளியை உருக்கி பூந்துகள்களாக தூவி விட்டதைப் போல எங்கும் வெண்மணல் பாதை காணக் கிடைக்கிறது. வானை மறைக்கும் அளவிற்கு நெடிதுயர்ந்த மரக்கூட்டங்கள் சுற்றி எங்கும் விரவிக் கிடக்கிறது. அந்த மர கூட்டங்களை தாண்டி வானை காண இயலவில்லை. மென்மையான கண்ணை உறுத்தாத நீலமும் சிவப்பும் கலந்த இளம் ஒளி ஒன்று தங்களை சூழ்ந்திருப்பதை போன்று தோன்றியது.

அதே நேரம் தான் சொறுமியபடியே தலையை பற்றிக் கொண்டு தள்ளாடியபடியே எழுந்து அமர்ந்தான் சுமன். நேமியைப் போல தான் அவனும் உணர்ந்திருக்க வேண்டும். அதனாலேயே இந்த தள்ளாட்டம். அடுதற்கு அடுத்து கொஞ்ச நேரத்திலேயே ஒருவர் பின் ஒருவராக அம்முறையிலேமே எழுந்து அமர்ந்தனர். அவர்கள் எல்லாம் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு, விழிகளை திறக்க அரைமணி நேரத்திற்கும் மேல் பிடித்தது.

தன்னை சுற்றி சுற்றி பார்த்தபடியே, "ஆமா நேமி... எங்க இருக்கோம் இப்ப நாம..." தலையை உலுக்கிக் கொண்டு சுமன் வினவ, மற்றவர்களின் முகமும் அதேக் கேள்வியை தான் தாங்கி நின்றது.

"எனக்கு மட்டும் என்ன தெரியும்... நானும் உங்கள மாதிரி தான ஏந்திரிச்சு உக்காந்து இருக்கேன்..." என்றான் நேமி தலையை அழுந்தப் பற்றிக் கொண்டு. இன்னும் முழுதாய் அவனின் தலைபாரம் நீங்கி இருக்கவில்லை.

"ஆமான்... நாம எல்லாம் கடல தானே வந்தோம்... உன் பர்த்டே கூட கொண்டாடுனோமே... இப்ப என்னடா சுத்தி எங்கையும் கடலே இருக்க மாதிரி தெரியல..." என்றான் டேவிட் சுற்றி சுற்றிப் பார்த்து.

"அதான்டா எனக்கும் ஒன்னும் புரியல..." என நேமி யோசனையாக சொல்ல,

"ஏய்... வழக்கம் போல இதுவும் உன் கனவு தான... நாங்க எல்லாம் உன் கனவுல தான இருக்கோம்... ஆமானு மட்டும் சொல்லிடு நேமி... உனக்கு புன்னியமா போகும்..." என்ற ஜெகனின் மீது சிறு கல் ஒன்று விழ, அது ஏற்படுத்திய வலியில் "ஸ்ஸ்ஸ்... ஆஆஆஆ..." என கத்தினான் அவன்.

'ஏன் பக்கி...' என்ற ரீதியில் அவன் நேமியைப் பார்த்து வைக்க, "வலிக்குதுல்ல... அப்போ இது கனவில்ல..." என்றான் அவன் கடுப்பாய்.

"ஆமான் இதென்ன ப்ளுவையும் ரெட்டையும் மிக்ஸ் பண்ண மாதிரி ஒரு லைட்..." என டேவிட் மீண்டும் சந்தேகமாய் நேமியைப் பார்க்க,

"அடேய்... கொலகாரனா மாத்தாதீங்கடா என்னைய... நானும் உங்கள மாதிரி தானே தேமேனு உக்காந்து இருக்கேன்... என்ன நோண்டி நோண்டி கேள்விக் கேட்டா எனக்கு மட்டும் என்ன தெரியும்..." கடுப்புடன் தான் மொழிந்தான் அவன்.

"நீ தான எங்க எல்லாரையும் இங்க கூட்டிட்டு வந்து தள்ளுன... அதுவும் இல்லாம எங்களுக்கு முன்ன எழுந்து தெம்பா வேற உக்காந்து இருக்க... அப்ப உன்ன தானே கேட்க முடியும்..."

"ஏந்திரிச்சு வந்தேன் எட்டி மிதிச்ஞு இடுப்ப உடைச்சுப் புடுவேன்... நானே தலைவலி தாங்க முடியலனு உக்காந்து இருக்கேன்... உனக்கு தெம்பா உக்காந்து இருக்க மாதிரி இருக்கோ..?"

"யாருடா இவன்... நீ வேற தனியா என் இடுப்ப உடைக்க போறீயாக்கும்... அது ஏற்கனவே பார்ட் பார்ட்டா டேமேஜ் ஆகிதான் இருக்கு... போவீயா அங்குட்டு..."

இதுவரை தாங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தவர்கள் அப்போது தான் கவனித்தனர் சாராவை. எழுந்ததிலிருந்து ஏதோ யோசனையாய் தலையைப் பற்றியபடி அமைதியாக அமர்ந்திருந்தாள் அவள்.

"சாரா... இங்க பாரு... உனக்கு ஒன்னுமில்ல தானே... நாங்க பேசறது கேக்குது தானே உனக்கு... சாரா... சாரா..." என்றபடியே அவர்களுக்கு அருகில் இருந்த ஜெகன் அவளை நெருங்கி உலுக்கவும், வேகமாக அவனை உதறி தள்ளினாள் அவள்.

"ப்பா... தோள்பட்டையே கழன்டுடும் போல... என்னா உலுக்கு உலுக்குற... அஞ்சலி பட கிளைமாக்ஸ் மாதிரி... முடியலடா சாமி உன்னோட..." என அவள் சிலிர்த்து கொள்ளவும்,

"அப்பாடி என்ற சாராவுக்கு பேச்சு வந்துடுச்சு..." என்றபடியே அவளை தாவி அணைக்க முயன்ற ஜெகனை தனது வெட்டும் பார்வையாலேயே தள்ளி நிறுத்தினாள் அவள்.

"ஏன் இத்தன நாள் நான் ஊமையாவா இருந்தேன்... எனக்கு பேச்சு வர... இதான் சாக்குனு பக்கத்துல வந்தா கழுத்த நெறுச்சி கொன்னுடுவேன் பாத்துக்கோ..."

"சரிதான் போடி... ஏதோ புள்ள ஏந்திரிச்சதுல இருந்து சித்தம் கலங்கின மாதிரி ஒரே இடத்த வெறிச்சுட்டு உக்காந்து இருக்கே கேட்டா... ரொம்ப தான் பண்ணுற... சாரா இல்லனா ஒரு தாரா... சிம்பிள்..."

"ஆமான்டா சிம்பிள் தான்... சிம்பிளே தான்... ஒரு கத்திய எடுத்து உன்ன குத்தறது கூட எனக்கு ரொம்ப சிம்பிள் தான்... என்ன பண்ணட்டுமா..?" என்றாள் அவள் புருவத்தை ஏற்றி இறக்கி அவனை முறைத்துக் கொண்டே.

"தாயே பரதேவத... உனக்கு தான் என்ன புடிக்கலனு சொல்லிட்ட இல்ல... அப்ப ந் தாரா பின்னாடி போனா என்ன..? மீரா பின்னாடி போனா என்ன..? வந்துட்டா பெருசா கேள்விக் கேட்க..." ஜெகனும் அவளுடன் மல்லுக்கு நிற்க,

"அடச்சே... பக்கிங்களா... ஆரம்பிச்சிட்டீங்களா உங்க பஞ்சாயத்த... இதுக்கெல்லாம் ஒரு நேரங்காலமே இருக்காதே... எங்க இருக்கோம்... அடுத்து என்ன பண்ண போறோம் தெரியல... இப்ப இது ரொம்ப முக்கியம்..." இரண்டு பேருக்கும் இடையில் இருந்த டேவிட் காதை குடைந்துக் கொண்டே கத்த, சட்டென்று வாயை மூடிக் கொண்டனர் மற்ற இருவரும். வாயை மூடிக் கொண்டனரே ஒழிய ஒருவரை ஒருவர் முறைப்பதை நிறுத்தவில்லை.

"விடு டேவிட்... இது என்ன புதுசா நமக்கு... முதல இது என்ன இடம்னு கண்டுபிடிக்கனும்... அப்ப தான் இங்கயிருந்து நம்பளால போக முடியும்..." என்றான் நேமி யோசனையாக.

"ஆமான்டா... இந்த இடமே ரொம்ப வித்தியாசமா இருக்கு... எவ்வளவு மரம் இருக்கு... ஆனா, காத்து அடிக்கற சத்தமா... பறவைங்க சத்தமோ கேக்கவே இல்ல பாரேன்... காத்தே அடிக்கலைனாலும் வேர்க்கவே இல்ல... ஏசி போட்ட மாதிரி குளுகுளுனு இருக்கு..." என்றான் சுமன் யோசனையாக.

"ஆமான்டா... எனக்குமே இந்த இடம் ரொம்ப வித்தியாசமா தான் இருக்கு... எவ்வளவு சீக்கிரம் இங்க இருந்து போக முடியுதோ அவ்வளவு சீக்கிரமே போய்டனும்..." கண்களில் ஒரு மிரட்சியுடன் சொல்லிக் கொண்டிருந்தான் ஜெகன்.

"எனக்கு என்னமோ அப்படி தோனல..." என்றாள் சாரா யோசனையை சுமந்த முகபாவனையுடன்.

"ஏன் வேற எப்படி தோனுதாம்..." என்றான் ஜெகன் கடுப்புடன்.

திரும்பி அவனை முறைத்துப் பார்த்தவள், "நாம தேடி வந்ததுக்கு இங்க தான் விடைக் கிடைக்குமுனு தோனுது... ஏன் நேமி உங்க அப்பாம்மா வந்த கப்பல் காணப் போனது கூட நம்ம கப்பல் அந்த அலையில மாட்டுன இடத்துக்கு பக்கத்துல தான" என்றாள் சாரா.

"ஆமான் சாரா... கடைசியா அப்பவோட கப்பல இருந்து அந்த இடத்துலருந்து தான் ஹெல்ம் கேட்டு ரேடார் சிக்னல் வந்ததா ரெக்கார்ட் இருக்கு..."

"அப்போ ஏன் அவங்களும் நம்மள மாதிரியே அந்த அலைக்குள்ள மாட்டிகிட்டு இந்த இடத்துக்கு வந்துருக்க கூடாது... உங்க அப்பாம்மாவுக்கும் அவங்க கூட வந்தவங்களுக்கும் என்ன ஆச்சுனு கண்டுபிடிக்கனும் நேமி... எனக்கு என்னமோ அவங்க எல்லாம் உயிரோட தான் இருப்பாங்கனு தோனுது... மே பீ இங்கையே மாட்டிகிட்டு வெளி உலகத்துக்கு அவங்களால வர முடியாம போய் இருக்கலாம்... இல்ல வர வழிய அவங்களால கண்டுபிடிக்க முடியாம போய் இருக்கலாம்..." என யோசனையாய் சொல்லிக் கொண்டே போனவளை தாவி அணைத்திருந்தான் நேமி.

"யூ ஆர் கிரேட் சாரா... நான் கூட உயிர் பயம் வந்ததும் எதுக்கு வந்தோம்னே மறந்துட்டேன்... பட் யூ ஆர் ரியலி கிரேட்... கண்டிப்பா என்னோட அப்பாம்மா இங்க தான் எங்கையாவது இருக்கனும்... நிச்சயம் நம்ம அவங்கள தேடிக் கண்டு பிடிச்சுடலாம்..." என்றான் ஆனந்த மிகுதியில் துள்ளிக் கொண்டே.

"கண்டிப்பா கண்டு பிடிச்சுட்டலாம்... யூ டோன்ட் வொர்ரி நேமி..." என்றாள் சாராவும் அவனைக் கட்டிக் கொண்டு.

"நானும் ஒன்னு கண்டு பிடிச்சுட்டேன்..." என கத்திய ஜெகனை மற்ற அனைவரும் "என்னனு சொல்லி தொல நாயே..." என்ற ரீதில் நோக்க,

"எல்லாருக்கும் தல சுத்தற மாதிரி கிறுகிறுனு இருக்கா..." என ஜெகன் கேட்க,

"ஆமான்... இருக்கு..." என்றனர் மற்றவர்கள் கோரஸாய்.

"காதெல்லாம் அடைச்ச மாதிரி மந்தமா இருக்கா..."

"ஆமான்... இருக்கு..." என்றனர் இம்முறை கொஞ்சம் கடுப்புடன்.

"கண்ணு ரெண்டும் இருட்டிட்டு மங்கலா தெரியுதா..."

"ஆமான்... தெரியுது..." என்றனர் ஒன்றுப் போல் அதித கடுப்புடன்

"ஏன் அப்படி தெரியுது தெரியுமா..?"

"என்னனு தான் சொல்லி தொலேயேன் மூதேவி..?" என்றனர் பெரும் கொலைவெறியுடன்.

"ஏன்னா... ஏன்னா..." என அவன் இழுத்து நிறுத்தி ஒவ்வொருவரையும் நிம
தானமாக நோட்டமிட,

"ஏதாவது மொக்கயா சொல்லு... இங்கையே உனக்கு சமாதிக் கட்டிட்டு தான் மறுவேலை..." என்றான் டேவிட்.

"ஏன்னா நமக்கெல்லாம் உசுர போற அளவுக்கு பசிக்குதுடா... அதான் காதடைக்குது... கண்ணு தெரியல... தல வேற கிறுகிறுனு சுத்தி மயக்கமா வருது... முதல சாப்பிட ஏதாவது கிடைக்குதானு தேடிக் கண்டு பிடிப்போம்... இல்ல இங்கையே செத்து தொலைச்சுடுவோம்... அப்பறம் நம்மள கண்டுபிடிக்க வேற ஒரு க்ரூப் தான் வரனும்..." என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவனை 'அட அல்பமே...' என்ற ரீதியில் பார்த்தவர்களுக்கும் அப்போது தான் பசி என்ற உணர்வே எழுந்தது.

"ஆமான்டா எனக்கும் இப்ப தான் பசியே தெரியுது... முதல ஏதாவது சாப்பிடுவோம்..." என்றான் சுமன் வயிற்றை இறுக பிடித்துக் கொண்டே.

"ஆனா இங்க கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்குமே ஆள் நடமாட்டமே இல்லையே... சாப்பிட எதுவும் கிடைக்குமுனு நினைக்கற..." டேவிட் யோசனையாய் சொல்ல,

"விளங்காத பயலே... கிளம்ப முன்ன வாய வச்சுட்டீயா... இனிமே சாப்பாடு கிடைச்ச மாதிரி தான்..." என்றான் சுமன் அவனின் முதுகில் ஒன்று வைத்து.

"மரமெல்லாம் இருக்கு... அப்போ கண்டிப்பா மனுஷங்களும் இருப்பாங்க... சாப்பாடும் இருக்கும்... முதல தேடிப் பாப்போம் வாங்க..." என நேமி எழுந்துக் கொள்ள,

"ஆமான் ஆளுக்கு ஒரு பக்கமா தேடிப் போவோம்... யாருக்கு முதல சாப்பாடு கிடைக்குதோ அவங்க மத்த எல்லாரையும் திரும்ப இதே இடத்துக்கு வர சொல்லிடலாம்..." என அதிபுத்திசாலியாய் ஜெகன் ஒரு ஐடியாவை சொல்ல,

"எப்படி சார் சாப்பாடு கண்டுபிடிச்ச உடனே மத்தவங்களுக்கு தகவல் சொல்லுவீங்க... போனெல்லாம் கிடையாது பாத்துக்கோ... அதுவும் இல்லாம இது புது இடம்... இங்க தனியாப் போறது அவ்வளவு சேஃப் இல்ல நமக்கு..." என்றாள் சாரா.

"ஆமான்... ஒரு வேள இங்க இருக்கவங்க நர மாமிசம் சாப்பிடறவங்களா இருந்தா... அத்தோட முடிஞ்சுது உன் ஜோலி..." டேவிட் கிண்டலாக சொல்ல, அரண்டுப் போய் பார்த்தான் ஜெகன்.

"முடிஞ்ச அளவுக்கு யாரும் தனியா போக வேண்டாம்... புதுசா யாரப் பாத்தாலும் பேச்சுக் குடுக்க வேண்டாம்... முதல இந்த இடத்த பாத்தியும் இங்க உள்ளவங்கள பாத்தியும் கொஞ்சமாவது தெரிஞ்சுப்போம்... அதுக்கு பிறகு அவங்ககிட்ட போய் பேசலாம்... சரிதானே..." என்றான் நேமி...

"சரிதான் முதல சோத்த தேடுவோம்... வாங்கடா..." என்றபடியே ஜெகன் முன்னே செல்ல, 'இவன எல்லாம் திருத்தவே முடியாது..." என்ற எண்ணத்துடனும் எழுந்துவிட்ட முறுவலுடன் அவனைப் பின்தொடர்ந்தனர் அவர்கள்.

அவர்கள் எத்தனை நேரம் நடந்திருப்பார்களோ தெரியவில்லை. நடந்து நடந்து கால்கள் சேர்ந்துப் போய் இருந்தது. எத்தனை நடந்தாலும் அந்த காடும் முடிவதைப் போல இல்லை. அவர்களுக்கு உணவும் கிடைப்பதைப் போல தெரியவில்லை.

"இன்னும் எவ்வளவு நேரம்டா... இதுக்கு மேல என்னால நடக்க முடியல... இப்படியே நடந்துப் போய்ட்டே இருந்தா இங்கையே ஜீவ சாமாதி ஆகிடுவோம் போல..." ஜெகன் புலம்பிக் கொண்டே வர,

"உன் வாயிலேயிருந்து நல்ல வார்த்தையே வராதா நாயே... பேசாமா முடிட்டு வா... நாங்களும் உன்ன மாதிரி தானே வருவோம்..."

"நீங்க வருவீங்க... என்னால முடியாதுடா யப்பா..."

"அதுக்கு உன்ன இடுப்புல தூக்கி வச்சுக்கிட்டா வர முடியும்..."

"ஏன் தூக்கி வச்சுகிட்டா என்ன குறைஞ்சா போய்டுவ... அதான் ஜிம்முக்கு போய் சிக்ஸ் பேக்கெல்லாம் வச்சு தடிமாடு மாதிரி உடம்பெல்லாம் வளத்து வச்சு இருக்கில... பேசாம என்ன தூக்கிட்டு போ..." என டேவிட்டின் முதுகில் ஜெகன் தொற்றிக் கொள்ள,

அவனின் கழுத்தை சுற்றி பிடித்து இழுத்து கீழே போட்டவன், "நீயெல்லாம் அடங்கவே மாட்ட இல்ல... இந்தா வாங்கிக்க..." என்றபடி அவனை எட்டி உதைத்து உருட்டி தள்ளிவிட்டு தன் நடையை தொடர,

"அடே எடுபட்ட பாவிப் பயலே... நீயெல்லாம் நல்லா இருப்பீயா.. ஆளாலுக்கு என் இடுப்பையே உடைக்கறானுவளே... அப்படி என்ன தப்புடா பண்ணுச்சு இந்த இடுப்பு... ஒரே ஒரு நாள் 'ஒல்லி பெல்லி இடுப்பு... ஒட்டியாணம் எதுக்குனு...' உங்க முன்னாடியெல்லாம் ஆட்டி ஆட்டி காட்டுனதுக்காடா இப்படி எட்டி எட்டி மிதிக்கறீங்க... உங்களுக்கு இவ்வளவு அழகான இடுப்பு இல்லைனா... என் இடுப்ப உடைக்க பாப்பீங்களா... நல்லா இருக்கே நியாயம்..." கீழே உருண்டுக் கொண்டே இடுப்பைப் பிடித்தபடி கத்திக் கொண்டிருந்தான் ஜெகன்.

வேகமாக அவனிடம் திரும்பி வந்த டேவிட், ஒற்றை விரலை அவனின் முன்பு நீட்டி, "பேசாம வாய மூடிட்டு வந்துடு... இல்ல ப்ரண்டுனு கூட பாக்காம இங்கையே குழி தோன்டி புதைச்சுட்டு போய்டுவேன்..." என மிரட்ட,

"டேய்... உயிர் நண்பன ஒருத்தன் கொல்லுவேனு சொல்லிட்டு இருக்கான்... உங்களுக்கு அங்க என்னடா கெக்கபிக்கனு சிரிப்பு... வந்து ஒருத்தவனாவது நியாத்த கேளுங்கடா டே..." என மீண்டும் ஜெகன் கத்த தொடங்க, அவன் கழுத்தையே நெறிக்க தொடங்கி இருந்தான் டேவிட்.

இன்னுமே மற்ற மூவரும் நின்று சிரித்துக் கொண்டிருக்க, ஜெகனோ விழிப் பிதுங்கிப் போய் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"சரி சரி விடுடா... என்ன இருந்தாலும் நம்ம பய... செத்து கித்து தொலைச்சுட்டானா புதைக்க வேற டைம் எடுக்கும்... விடு அப்பறம் பாத்துக்கலாம்..." என சுமன் டேவிட்டை சாமாதனப் படுத்த பார்க்க,

"துரோகி..." எனதான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெகன்.

"நானு செம பசியில இருக்கேன்... இதுல நீ வேற லூசுபயலாட்டம் பினாத்திட்டே வந்த அவ்வளவு தான் சொல்லிட்டேன்..." என மீண்டும் எச்சரிக்க,

"இனிமேலும் பேச எனக்கு என்ன பைத்தியமா... நண்பனு நம்பி கூட வந்ததுக்கு உயிர் பயத்த காட்டிட்ட இல்ல... பாத்துக்கறேன்டா உன்ன..." என ஜெகன் வாயிக்குள்ளேயே முணுமுணுக்க,

"ஸ்ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்ஸ்..." என வாயில் விரலை வைத்து அனைவரையும் அமைதியாக இருக்கும்படி சொன்னாள் சாரா.

"ஏதோ சவுண்ட் கேக்குது..." சாரா மெல்லமாக சொல்ல மற்றவர்களும் கூர்ந்து கவனிக்க தொடங்கினர்.

மெல்ல மெல்ல அந்த சத்தம் அருகில் வரவும் தான் தெரிந்தது அது ஒரு குதிரையின் குழம்படி சத்தமென்று. அத்தனை ஆச்சரியம் அவர்களுக்கு. இதுவரை அவர்கள் வந்த பாதையில் பெயருக்கென்று கூட ஒரு விலங்கை பார்க்கவில்லை அவர்கள். அப்படியிருக்க குதிரை மட்டும் இங்கே எப்படி சாத்தியம்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த குதிரையின் குளம்படி சத்தம் தங்களை நெருங்கவும் தான் தெரிந்தது அந்த குதிரையின் மீது யாரோ அமர்ந்திருப்பது. ஒரு நொடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் வேகமாக ஆளுக்கு ஒரு மரத்தின் பின்னல் சென்று ஒளிந்துக் கொண்டனர்.

அந்த குதிரையின் காலடி சத்தம் அவர்களை நெருங்க நெருங்க இதயம் தாறுமாறாக துடிக்க தொடங்கி இருந்தது. வியர்வை வெள்ளம் பெருகி அவர்களின் உடல் முழுவதையும் தெப்பமாய் நனைத்திருந்தது. அந்த குதிரை அருகில் வரவும் தான் கண்டனர் அந்த குதிரையில் அமர்ந்திருப்பவன் ஒரு வீரனென்று. உடல் முழுவதும் மறைத்தபடி பழங்கால கவச உடை அணிந்து இருந்தவனின் கண்கள் மட்டுமே அவர்களுக்கு காண கிடைத்தது. கையில் நீண்ட ஈட்டி ஒன்றை பிடித்திருந்தான் அவன். மெல்ல அந்த ஈட்டியை தரையுல் ஊன்றி எம்பி குதித்தவன் நோக்கிய இடம் கண்டு சர்வமும் அடங்கிப் போனது மற்றவர்களுக்கு. ஏனெனில் அது ஜெகன் ஒளிந்திருந்த இடம். மெல்ல மெல்ல அவன் அடியெடுத்து வைத்து ஜெகனை நெருங்க, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தபடி சம்பித்து நின்றிருந்தனர் மற்றவர்கள்.

-காத்திருப்பு தொடரும்...
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom