Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

அத்தியாயம் 45​



துர்கா தன் வீட்டில் கலங்கி கொண்டிருந்தாள். அவன் இல்லாதது வேறு மனதிற்குள் வெறுப்பாய் இருந்தது. இன்னும் இரண்டு மூன்று நாளில் வருவதாக சொன்னானே! வந்த பின் அவன் காட்டும் அன்பில் நடிப்பில்லை என்பதை நான் புரிந்து கொள்வேன் என்றானே! அப்படி என்ன செய்ய போகிறான்? ஒரு வேளை ஏதாவது தவறான முடிவு எதுவும் எடுப்பானோ? அய்யோ! கடவுளே! அப்படி எதுவும் இருக்க கூடாது என்று பலவாறு சிந்தித்தபடி அவனை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

அந்த அடியாள் ராபர்ட் இரண்டு மாதம் தலை மறைவாய் இருந்துவிட்டு பணம் அனைத்தும் செலவானதும் அன்று தான் வீடு வந்தான். இனிமேல் நமக்கு பயம் இல்லை. நம்மை யாரும் கண்டு கொள்ளவில்லை. இனிமேல் வெளியில் தைரியமாக செல்லலாம் என்று நினைத்துக் கொண்டே ஒளிப்பதிவு பெட்டியில் பாடல் ஒன்றை ஒலிக்கவிட்டு அதை ரசித்தபடியே ஓய்வு எடுத்து கொண்டிருந்தான். தீடீரென்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும் யாராக இருக்கும்? ஒரு வேளை எதிர்கடையில் உணவு தருமாறு சொல்லியிருந்தேன், அந்த பையன் தான் வந்திருக்கிறானோ! என்று நினைத்தபடி கதவை திறக்க, உள்ளே நுழைந்த காவலாளிகள் அவனை வெளியில் செல்லாதவாறு வளைத்து கொண்டு இறுக்கமாக பிடித்துக் கொண்டனர். இந்த திடீர் தாக்குதலால் அவனால் தப்பிக்க முடியவில்லை. அந்த உயர் காவல் அதிகாரி அவனை அங்கேயே வெளுத்து வாங்கி விட்டார். ஏன்டா! இனிமேல் நீ மருத்துவமனையில் இருந்து குழந்தைகளை கடத்துவே! எவ்வளவு கஷ்டப்பட்டு, பாடுபட்டு தாய்மார்கள் குழந்தைகளை பிரசவிக்கிறார்கள்! அந்த குழந்தைகளை நீங்கள் நோகாமல் எடுத்துக் கொண்டு போய் விக்கிறீங்க! அந்த பிறந்த குழந்தை என்னடா பாவம் பண்ணிச்சு! அந்த பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என கொஞ்சமாவது நினைத்தாயடா! என சொல்லி கொண்டே அவன் கையில் விலங்கு மாட்டி அவனால் எழுந்திருக்க கூட முடியாத நிலையில் அவனை இழுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

அங்கு சுஹேல், கயல், டாக்டர் கௌசல்யா மற்றும் ரேச்சல் அனைவரும் அந்த காவல் அதிகாரியின் வரவுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர். அவர் உள்ளே ராபர்ட் உடன் நுழைந்ததும் அனைவரின் பார்வையும் அவன் மேல் திரும்பியது. சுஹேல் அவனிடத்தில் வந்து என் குழந்தைகள் உனக்கு என்னடா பண்ணிச்சு? இல்ல நான் தான் உனக்கு என்ன பாவம் பண்ணேன்! என்னையும் என் மனைவியையும் தவிக்க விட்டுடீங்களடா! என்று தன்னிலை மறந்து அவன் சட்டையை பிடுத்து உலுக்க, அந்த காவல் அதிகாரி அவனிடத்தில் வந்து, அமைதியாய் இரு சுஹேல். இவனை நாங்க விசாரிக்கும் விதத்தில் விசாரிச்சு உண்மையை வரவழைக்கிறோம் என்று சொல்லி அவனை உள்ளே கொண்டு போய் அடி பின்னி எடுத்தனர்.

சிறிது நேரத்தில் அந்த அதிகாரி திரும்பி வந்து சுஹேலிடம் அவன் எல்லா விஷயத்தையும் கக்கி விட்டான். உங்களுடைய மற்றொறு குழந்தை உயிரோடு தான் இருக்கிறது. குழந்தையை மலர்வனம் என்னும் ஆசிரமத்தில் விட்டு விட்டதாக கூறுகிறான். நாம் முதலில் குழந்தையைப் போய் பார்க்கலாம். மற்றதை எல்லாம் பிறகு கவனித்து கொள்ளலாம் என்று அனைவரும் மலர்வனம் நோக்கி சென்றனர். அங்கு சென்றதும் அந்த ஆசிரமத்தை நடத்தும் விசாலாக்ஷி அம்மையார் அங்கிருக்கும் குழந்தை ஒன்றுக்கு உணவு கொடுத்து கொண்டிருக்க, இவர்களை பார்த்ததும் யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? நீங்கள் காவல் துறையினரா? என்று பயந்தபடி கேட்க, சுஹேல் முன்வந்து அந்த அம்மையாரிடம் வணக்கம் அம்மா. என் பெயர் சுஹேல் என்று அன்று நடந்த அனைத்தையும் விவரிக்க, அந்த அம்மையார் உள்ளே சென்று சுஹேலின் குழந்தையை கொண்டு வந்து கொடுத்தார். நீங்கள் சொல்லும் நாளைக்கு மறுநாள் காலையில் தான் இந்த குழந்தை என் ஆஸ்ரமத்தில் வெளியே கிடத்தி இருந்தார்கள் என்று கூறி அந்த குழந்தையை கொடுக்க சுஹேல் அதை வாரி அணைத்து கொண்டான். ரொம்ப நன்றி அம்மா. இந்த குழந்தை இறந்து விட்டதாக நானும் என் மனைவியும் மிகவும் வருந்தி கொண்டிருந்தோம். இதுவரை பத்திரமாக என் குழந்தையை பார்த்து கொண்ட உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை. பரவாயில்லை தம்பி. இங்கு இருக்கும் அனைத்து குழந்தைகளும் ஏதோ ஒரு வழியில் பெற்றோர்களை இழந்தவர்கள் தான். ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு இவர்களை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறவும், நான் கண்டிப்பாக உங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன் அம்மா என்று உறுதியளித்துவிட்டு வெளியே வர அந்த அதிகாரி, சுஹேல் இந்த குழந்தையை அவனாக கடத்தவில்லை வேறு யாரோ சொல்லி கடத்தி இருப்பதாக தெரிகிறது. அதை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். சில சட்ட நடைமுறைகள் உள்ளன. அதை மட்டும் நீங்கள் நிறைவேற்றிவிட்டு செல்லுங்கள் என கூற, சுஹேல் கயலிடம், கயல்! நீ இந்த குழந்தையை எடுத்து கொண்டு உன் வீட்டிற்கு செல். நான் இங்கு இருக்கும் சட்ட முறைகளை முடித்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு டாக்டர் கௌசல்யாவிற்கும் ரேச்சலுக்கும் நன்றி தெரிவித்தான். அனைவரும் தம் தம் வீடு திரும்பினர்.

ரெபேக்கா கையில் குழந்தையுடன் கயலை பார்த்ததும், என்ன கயல் இந்த குழந்தை ஏது என்று கேட்க, கயல் நடந்த அனைத்தும் விவரித்தாள். எல்லாவற்றையும் கேட்ட ரெபேக்கா, கயல் அவர்களுக்கு ஒரு குழந்தை போதாதா? நம்மிடம் இருக்கும் குழந்தையையும் கொடுக்க வேண்டுமா? என்று ஏக்கத்துடன் கேட்க, அத்தை இது அவர்களுடைய குழந்தை. உரியவர்களிடம் ஒப்படைப்பது தானே நியாயம். என்ன செய்வது? இவ்வளவு நாள் இந்த குட்டி தேவதை நம் எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்து விட்டாள். எனக்கு கூட இவளை பிரிய மனம் இல்லை தான் இருந்தாலும் பெற்றோரிடம் ஒப்படைப்பது தானே தர்மம் என்று கூறி அவளை சமாதானம் செய்தாள்.

கயல் குழந்தைகளுக்கு தேவையான உடமைகளை எடுத்து வைத்தாள். கூடவே தன்னுடைய உடைமைகளையும் எடுத்து வைத்து கொண்டிருந்தபோது அங்கே ரெபேக்கா வந்தாள். கயல் , நீ தனியாக இரண்டு குழந்தைகளையும் எடுத்துக் கொண்டு அவ்வளவு தூரம் செல்கிறாய் என்கிறாய், துணைக்கு நானும் உன் கூட வருகிறேன் என்று கூற, நான் தனியாக செல்லவில்லை அத்தை ! என் கூடவே சுஹேலும் வருகிறார். அவர் வந்தால் என்னம்மா! அவர் என்னதான் மருத்துவராய் இருந்தாலும் அவருக்கும் சின்ன வயதுதானே! கைக்குழந்தைகளை சமாளிக்க அனுபவம் தேவையம்மா என்று கூற, சரி அத்தை! நீங்களும் வாருங்கள்! நான் அனைவர்க்கும் பயணசீட்டு பதிவு செய்து விடுகிறேன் என்று கூறி வேளையில் ஆழ்ந்தாள்.
சிறிது நேரத்தில் சுஹேல் வர, அவனை வரவேற்ற ரெபேக்காவை அவன் நன்றியுடன் பார்த்தான். அவன் கண்கள் பனிக்க, இவ்வளவு நாள் என் குழந்தையை அன்போடு பார்த்து கொண்டதற்கு நான் என்ன கைமாறு செய்ய போறேன் என்றே தெரியவில்லை. அனைத்திற்கும் ரொம்ப நன்றி அம்மா என்று கூற, பரவாயில்லை தம்பி! நீயும் எனக்கு ஒரு பிள்ளை போலத்தான். நன்றி எல்லாம் எதற்கு? என்ன! இவ்வளவு நாள் எங்களிடம் இருந்த குழந்தையை பிரிய மனம் சங்கடமாய் இருக்கிறது என்று கூற, சுஹேல் ,அம்மா உங்களுக்கு எப்போது என் குழந்தையை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதோ ஒரு தகவல் மட்டும் சொன்னால் போதும். உங்களை நானே வந்து கூட்டி செல்கிறேன் என்று கூற ரெபெக்காவும் தலை அசைத்தாள்.

மூவரும் இரண்டு குழந்தைகளுடன் வாரணாசியை அடைந்தனர். இந்த மூன்று நாளில் துர்கா பயத்திலும் அழகையிலுமே தன் நேரத்தை கடத்தினாள். சுஹேல் எப்போது வருவான் என்று வாசலையே பார்த்து கொண்டு காத்திருந்தாள். கார் அரவம் கேட்டதும் ஓடி வந்து கதவை திறக்க, அங்கு முதலில் சுஹேலை கண்டதும் தான் அவளுக்கு போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது. அவளையும் அறியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. பின் கயலையும், ரெபேக்காவையும் அவர்கள் கையில் இருக்கும் குழந்தைகளை பார்த்ததும் அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இது கயலின் குழந்தையா? என்று கேட்டுக் கொண்டே அதனை வாங்கி கொள்ள கயல், இது என்னுடைய குழந்தைகள் இல்லை துர்கா, நீ பெற்று எடுத்த உன்னுடைய குழந்தைகள் என்று கூறியதை கேட்ட துர்காவிற்கு ஒன்றுமே புரியவில்லை. என் குழந்தைகள் தான் பிறந்த போதே தவறி விட்டது என்று கூறினார்களே என்று இறுக்கமான முகத்துடன் கூற, கயல் அவளிடம் நடந்த சம்பவங்களை முழுவதும் விளக்கினாள்.
 
அத்தியாயம் 46​


அனைத்தையும் கேட்ட துர்கா அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. என் கண்மணிகளா! என்று வாரி அணைத்து இரு குழந்தைகளுக்கும் மாறி மாறி முத்த மாரி பொழிந்தாள். கயல் துர்காவிடம் நீ குழந்தை வேண்டும் என்பதற்காகவே சுஹேலை ஒரு வழி பண்ணி விட்டாய் போல இருக்கிறது. பாவம் அவர்! உன்னை பிரிய மன இல்லாமல் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை வரை போய் விட்டார். அப்போதுதான் நீ அவரை மறுமணம் செய்ய வற்புறுத்தமாட்டாய் என்று இந்த காரியத்தை செய்ய துணிந்தார் என்று கூறவும், துர்கா மனம் மிகவும் நெகிழ்ந்து ஓடி போய் சுஹேலின் காலில் விழுந்து என்னை மன்னித்து விடுங்கள் சுஹேல். என்னால் இந்த குடும்பத்திற்கு வாரிசு தர முடியாது என்று தோன்றியது. என் மீது அளவு கடந்து அன்பு வைத்திருக்கும் உங்களுக்கும் அத்தை மாமாவிற்கும் நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் உங்களை மறுமணம் செய்ய வற்புறுத்தினேன். அதன் மூலம் இந்த குடும்பத்திற்கு வாரிசு வந்து விடும் என்று நினைத்து தான் நான் அப்படி நடந்து கொண்டேன். இந்த பாவியை மன்னிப்பீர்களா? என்று அவன் பாதம் நனைய கண்ணீர் சிந்திய துர்காவை பார்த்ததும் சுஹேலின் மனம் தாங்கவில்லை. அவளை எழுப்பி நீ என் மீது கொண்ட அன்பின் காரணமாகத்தான் இப்படி நடந்து கொண்டிருக்கிறாய், நீ என் உயிர்! என்னில் பாதி! என் காலில் விழலாமா! என்று கூறி அவளை கட்டி அணைத்து கொண்டான். நீயும் என்னை மன்னிக்க வேண்டும் துர்கா. உன்னுடைய எண்ணம் புரியாமல் நானும் உன்னை தவறாக நினைத்து விட்டேன். சென்னை சென்றதும் தான் உன் மனதை நான் நன்றாக புரிந்து கொண்டேன். கயலும் உன் மனநிலையை எடுத்து சொன்னாள். உடனே கயல், சுஹேல் நானும் அத்தையும் இங்கே தான் இருக்கிறோம் என்று கூற உடனே இருவரும் விலகி நின்றனர். துர்காவின் முகத்தில் வெகு நாட்களுக்கு பிறகு வெட்கம் படர்ந்திருந்தது.

வெளியே சென்றிருந்த ஜரீனாவும் உசைனும் வர, அவர்களிடமும் விஷயத்தை கூறினர். அவர்களும் அதை கேட்டு ஆனந்தம் அடைந்தனர். தங்களின் பேரன் பேத்தியை கொஞ்சி மகிழ்ந்தனர். அந்த வீடே ரொம்ப நாளைக்கு பிறகு கலகலப்பில் மூழ்கியது.

மறுநாள் சென்னையில் இருந்து சுஹேலுக்கு போன் வந்தது. அந்த உயர் காவல் அதிகாரி தான் போனில் பேசினார். அவர், ராபர்டை அடித்து விசாரித்ததில் உங்கள் வாரணாசியில் உமர் அலி என்பவர் தான் குழந்தைகளை கடத்த சொன்னதாக கூறுகிறான் சுஹேல். உங்களுக்கு அவரை தெரியுமா? என்று கேட்க, சுஹேலுக்கு அதை கேட்டவுடன் நான் சந்தேகப்பட்டபடி அவரே தான் என்று எண்ணியவனாக, தெரியும் சார் என்று பதிலுரைக்க, நான் உங்கள் மாநிலத்தில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லிருக்கிறேன். நீங்கள் இருக்கும் இடத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தால் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூற, எனக்கு இவ்வளவு உதவிகள் செய்தமைக்கு ரொம்ப நன்றி சார். நான் இங்கு பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி போனை வைத்ததும் அவனுக்குள் கோபம் பொங்கியது. என்ன மனிதர் இவர்! எங்களையே சுற்றி சுற்றி வந்து எங்களுக்கு கெடுதல் மேல் கெடுதல் செய்து கொண்டிருக்கிறார்.நான் அவருக்கு அப்படி என்ன துன்பம் செய்தேன்! அவர் மகளை மணக்க முடியாது என்று கூறியதற்காகவா இவ்வாறெல்லாம் செய்கிறார். இந்த தடவை இவரை சும்மா விடக்கூடாது. கடுமையான தண்டணை வாங்கி கொடுக்க வேண்டும் என்று நினைத்து பின் துர்கவை அழைத்து நடந்ததை கூறினான். துர்கா சுஹேலிடம் நான் அவருக்கு என்ன பாவம் செய்தேன்
என்னை ஆள் வைத்து அடித்தது இல்லாமல் என் குழந்தைகளையும் என்னிடம் இருந்து பறித்து என்னை மன உளைச்சலுக்கு தள்ளி விட்டார். நானும் உங்க கூட வருகிறேன், இருவரும் செல்லலாம் என்று கூறி குழந்தைகளை கயல் ரெபேக்காவின் பாதுகாப்பில் விட்டு விட்டு இருவரும் காவல் நிலையம் விரைந்தனர்.

காவல் நிலையம் அடைந்ததும் சுஹேல் அங்கிருக்கும் காவல் அதிகாரியிடம் விஷயத்தை சொல்ல அவர் சென்னைக்கு போன் போட்டு தகவல்களை பெற்று கொண்ட பின் அனைவரும் உமர் அலி வீட்டை அடைந்தனர்.

வீட்டை அடைந்ததும் அங்கு ஒரே நிசப்தம் பரவி இருந்தது. ஒரு காவலர் சென்று அவரின் வீட்டின் மணியை அழுத்த உமர் அலியே வந்து கதவை திறந்தார். அவர் இவர்களை பார்த்ததும் சற்றும் மனம் பதறவில்லை. ஆனால் அவர் முகம் வாடி வதங்கி இருந்தது. கண்களில் சோர்வு தெரிந்தது. உள்ளே நுழைந்ததும் ஹாலில் ஒரு பெரிய அளவில் ஒரு பெண்ணின் படம் மாட்டப்பட்டு சந்தன மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. அந்த படத்தை பார்த்ததும் சுஹேல் மற்றும் துர்கா திகைத்து பின் வாங்கினர். ஆம். அது மும்தாஜ் படம் தான். யாருக்காக உமர் இவ்வளவு குற்றங்கள் செய்தாரோ அந்த செல்ல மகளின் படம் தான். இருவரும் அதிர்ச்சியில் நிற்க, உமர் அலி சுஹேலின் கைகளை பிடித்து குலுங்கி குலுங்கி அழுதார். என்னை மன்னித்து விடு சுஹேல். உனக்கும் உன் மனைவிக்கும் நான் பல கொடுமைகள் செய்து விட்டேன். அதன் பலனாகத்தான் இப்போது என்னுடைய மகளை இழந்து நிற்கிறேன். மூன்று நாட்களுக்கு முன் தோழிகளுடன் சுற்றுலா சென்ற என் மகளின் கார் விபத்துக்குள்ளாகி அந்த இடத்திலேயே என் மகள் இறந்து விட்டாள். அவள் கூட சென்ற தோழிகள் இருவரும் சின்ன காயத்துடன் தப்பித்து இருக்கின்றனர். அவர்கள் தான் எனக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்கள். அன்றே என் உயிர் என்னை விட்டு பிரிந்து விட்டது. இப்போது நடை பிணமாகத்தான் உன்னிடம் பேசி கொண்டிருக்கிறேன். அவளுக்காகத்தான் எல்லாம் செய்தேன் ஆனால் என் ஒரே மகள் ஆசை ஆசையாய் வளர்த்த செல்ல மகள் இன்று இல்லை. துர்காவிடம் சென்று நீயும் என்னை மன்னித்து விடு துர்கா, உனக்கு நான் பல துன்பங்கள் கொடுத்து விட்டேன் என அவள் காலில் விழ போக துர்கா பதறி நகர்ந்து கொண்டாள்.
என்ன சார்! நீங்கள் வயதில் மிக பெரியவர். என் தந்தை வயதை ஒத்தவர். நீங்கள் போய் என் காலில் விழுவதெல்லாம் தவறு சார் என்று கூறிவிட்டு சுஹேலிடம் திரும்பி, சுஹேல் நாம் இவர் மேல் கொடுத்த புகாரை திரும்ப பெற்று கொள்ளலாம் என கூற, சுஹேல் அதிர்ந்து என்ன துர்கா? என்ன உளறுகிறாய்? அவர் உனக்கு என்னவெல்லாம் தீங்கு பண்ணியிருக்கிறார்! அவரை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று இங்கே வந்தால் நீ புகாரை திரும்ப பெற சொல்கிறாய்! சுய நினைவோடு தான் சொல்கிறாயா? என சுஹேல் வெகுண்டு எழ, துர்கா கடவுளே அவருக்கு மிக பெரிய தண்டணை கொடுத்து விட்டார். இந்த வயதான காலத்தில் தன் ஒரே மகளை இழந்து வாடுகிறார். இதில் நாம் வேறு அவரை தண்டிக்க வேண்டுமா? என கேட்க, சுஹேல் அவளை முறைத்தான். தயவு செய்து எனக்காக புகாரை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என அவள் மேலும் கூற, அருமை மனைவியின் மனதை கஷ்டப்படுத்த விரும்பாத சுஹேல் வேறு வழி இல்லாமல் புகாரை திரும்ப பெற்று கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.

ஒரு வாரம் கழித்து அன்று சுஹேலின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆங்காங்கே வண்ண வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு வித விதமான பலூன்களும் கட்டப்பட்டிருந்தன, சுஹேல் அன்றைக்கு தன் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா வைத்திருந்தான். கயலும் ரெபெக்காவும் துர்காவின் வற்புறுத்தலின் காரணமாக விழாவை காண அங்கேயே தங்கிவிட்டனர். சுஹேல் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். தனக்கு தெரிந்த அனைவரையும் விழாவிற்கு அழைத்து இருந்தான்.வாசுதேவனும் பார்வதியின் குடும்பத்தோடு வந்திருந்தனர். அவர்கள் அந்த குழந்தைகளின் அழகில் சொக்கி தான் போயினர். லாவண்யாவும், சூரியாவும் அந்த குழந்தைகளை விட்டு நகரவேயில்லை. சூர்யா அதன் சின்ன சின்ன செய்கைகளை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள். அவள் தன் அம்மாவிடம்." அம்மா நாம பாப்பாவை நம்ம வீட்டிற்கு தூக்கிட்டு போய்டலாம்" என்று தன் மழலை மொழியில் சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தாள். சுஹேலின் முதல் எழுத்து 'சு' வும் துர்காவின் கடைசி எழுத்து 'க' வையும் எடுத்து குழந்தைகளுக்கு "சுகன்", "சுகிதா" என்று பெயர் வைத்தனர். அடுத்தவருக்கு சுகத்தையும் சந்தோஷத்தையும் தருபவர் என்று அந்த பெயருக்கு அர்த்தத்தையும் கூறினான் சுஹேல் .

விழா கோலாகலமாக நடைபெற்று அனைவரும் விடைபெற்று சென்ற பின்னர் கயலும் ரெபெக்காவும் நாங்களும் ஊருக்கு புறப்படுகிறோம் என்று தன் உடைமைகளை எடுத்து கொண்டு புறப்பட ஆயுத்தமானபோது, கயல் தான் வளர்த்த சுகிதாவிடம் சென்று சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் கண்களில் இருந்து இரண்டு கண்ணீர் மணித்துளிகள் அக்குழந்தையின் பிஞ்சு பாதத்தில் பட்டு தெறித்தன. அவள் மயங்கி சரிந்தாள். அதை பார்த்து கொண்டிருந்த துர்கா, உடனே ஓடி போய் அவளை தாங்கி பிடித்தாள். ரெபெக்காவும் உடன் வர அவளுக்கு தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்தனர். சற்று நேரத்தில் சுஹேல் அங்கே வந்து துர்காவிடம், கயலுக்கு என்னவாயிற்று? என்று கேட்டவாறே அவள் கையின் நாடியை பிடித்து பார்க்க, அவன் கண்களில் மின்னல் பளிச்சிட்டது. அவன் ரெபேக்காவிடம் திரும்பி என் பொண்ணுக்கு நான் சூட்டியுள்ள பெயருக்கு ஏற்றாற்போல உங்கள் வீட்டுக்கு சந்தோஷத்தையும் சுகத்தையும் தர போறா! ரெபேக்கா அவனை புரியாமல் பார்க்க, உங்களுக்கு பேரனோ பேத்தியோ சீக்கிரமாக வரப்போகுது என்று கூற, கயலுக்கு அப்போதுதான் கடந்த இரண்டு மாதங்களாக அது வரவில்லை என்று ஞாபகம் வந்தது. நான் ஒரு மருத்துவராக இருந்தும் இதை எப்படி கவனிக்காமல் இருந்தேன் என்று நினைத்து வெட்கப்பட, அவளது பட்டு போன்ற ரோஜா கன்னங்கள் சிவந்தது. ரெபேக்கா சந்தோஷத்தில் திக்கு முக்காடினாள். அவள் உடனே சமையல் அரை சென்று அங்கிருக்கும் சர்க்கரையை எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்தாள்.

துர்கா கயலிடம் இன்னும் கொஞ்ச நாள் தங்கி விட்டு போங்களேன், கயல், இல்லை துர்கா. இந்த விஷயத்தை நான் அவரிடம் நேரில் சென்று சொல்லவேண்டும். அவர் முகத்தில் வரும் சந்தோஷத்தை பார்த்து இரசிக்க வேண்டும் என்று கூறியவாறு இருவரும் புறப்பட்டனர்.

விழா இனிதே முடிந்து அனைவரும் புறப்பட்ட பின்னர் துர்கா, வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு சுகன் சுகிதாவை தூங்க வைத்துவிட்டு சுஹேலிடம் வந்தாள். சுஹேல், துர்காவின் முகத்தில் புன்னகையும் அமைதியையும் பார்த்த பின் அவனுக்கு பழைய துர்கா கிடைத்துவிட்டதாக தோன்றியது. அவன் துர்காவிடம் என்னை இன்னொரு பெண்ணுக்கு மணமுடிக்க எப்படி உன்னால் முடிந்தது துர்கா என கேட்க, துர்கா அவனை பார்த்து உங்கள் மீது வைத்த அளவு கடந்த அன்பு தான் என்னை அவ்வாறு செய்ய தூண்டியது. உங்களுக்கு மறுமணம் செய்து விட்டு நான் விலகி கொள்ளலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் உங்கள் அன்பினால், நான் கொண்ட இந்த எண்ணம் தவறு என்று நிருபித்துவிட்டீர்கள். என்னை மன்னித்து விடுங்கள் என்று மறுபடியும் கூற, எத்தனை தடவை தான் மன்னிப்பு கேட்பாய் துர்கா. ஒன்று புரிந்து கொள். என்னுடைய மனம் என்னும் தர்காவில் நீ மட்டும் தான் துர்கா. வேறு எந்த பெண்ணுக்கும் இடமில்லை என்று சுஹேல் கூற, துர்கா அவன் தோள் மேல் சந்தோஷமாக சாய்ந்து கொண்டாள்.

சாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்து அன்பை மட்டுமே அடித்தளமாக கொண்ட இவர்களின் காதல் என்றென்றும் வாழ நாமும் வாழ்த்துவோம்.

நன்றி.
 

New Threads

Top Bottom