Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பார்த்திபன் கனவு

அத்தியாயம் முப்பது

நள்ளிரவில்

படகுகள் போன பிறகு, குந்தவி பொன்னனைப் பார்த்து, "படகோட்டி! உன் மனைவியை எங்கே விட்டு வந்திருக்கிறாய்?" என்று கேட்டாள். பொன்னன் அக்கரையில் குடிசையில் விட்டு வந்திருப்பதைச் சொன்னான். "உடனே போய் அவளை இங்கே அழைத்துக்கொண்டு வா! பிறகு நமக்குப் பெரிய வேலையிருக்கிறது. உங்கள் மகாராஜாவை எப்படியாவது விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்து இரகசியமாக மாமல்லபுரத்துக்கு அனுப்ப வேண்டும். அவரை இந்த அமாவாசையன்று செண்பகத் தீவு செல்லும் கப்பலில் ஏற்றிய பிறகுதான் நமக்கு நிம்மதி" என்றாள் குந்தவி. பொன்னன் வியப்புடன், "தேவி! எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே!" என்றான். "உங்கள் மகாராஜா இங்கே ஜுரம் அடித்துக் கிடந்தாரல்லவா, பொன்னா? அப்போது அவர் தம்மை அறியாமல் கூறிய மொழிகளிலிருந்து அவர் யார், எதற்காக வந்தார் என்பதையெல்லாம் அறிந்து கொண்டேன். ஒவ்வொரு அமாவாசையன்றும் அவருக்காகச் செண்பகத் தீவின் கப்பல் மாமல்லபுரம் துறைமுகத்தில் வந்து காத்திருக்கும். அடுத்த அமாவாசை வருவதற்குள்ளே அவரைத் தப்புவித்து இரகசியமாக அனுப்பி வைக்க வேண்டும்!" என்றாள் குந்தவி.

"அம்மணி! கோபித்துக் கொள்ளக்கூடாது. எனக்கு இன்னும் ஒரு விஷயம் விளங்கவில்லை, எதற்காக இப்படியெல்லாம் செய்ய வேண்டும்? தங்கள் தகப்பனாருக்கு ஒரு செய்தி அனுப்பினால் போதாதா?" என்றான் பொன்னன். "என் தகப்பனாரை நீ சரியாய்த் தெரிந்து கொள்ளவில்லை. பொன்னா! ஆனால் மாரப்பன் தெரிந்து கொண்டிருக்கிறான். அவருக்குச் சட்டம் என்றால் சட்டம்தான்; நீதி என்றால் நீதிதான். சக்கரவர்த்திக்குத் தெரிவதற்கு முன்னால், உங்கள் மகாராஜா கப்பலில் ஏறினால்தான் தப்பலாம். நல்ல வேளையாக, என் தந்தை இப்போது காஞ்சியில் இல்லை. ஏதோ காரியமாய் மாறு வேஷத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுதான் நமக்குச் சமயம்...." இவ்விதம் குந்தவி கூறிவந்ததைக் கேட்டபோது பொன்னனுக்கு ஒரு நிமிஷம், தனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிவிடலாமா என்று தோன்றியது. ஆனால் தான் சிவனடியாருக்குச் சத்தியம் செய்து கொடுத்திருந்தது நினைவுக்கு வந்தது. மேலும் அவர் என்ன முக்கிய நோக்கத்துடன் இம்மாதிரி இரகசியமாய்க் காரியங்கள் செய்து வருகிறாரோ, தெரியாது. அந்த நோக்கத்துக்குத் தன்னால் பங்கம் விளையக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டு, குந்தவியின் மொழிகளைப் பொறுமையுடன் கேட்டு வந்தான். கடைசியில், "தேவி! விக்கிரம மகாராஜாவின் க்ஷேமம் ஒன்றைத் தவிர எனக்கு உலகில் வேறு ஒன்றும் பொருட்டில்லை. தங்கள் கட்டளைப்படி எதுவும் செய்யக் காத்திருக்கிறேன்" என்றான். "சந்தோஷம். நான் மாளிகைக்குப் போகிறேன். நீ முதலில் போய் வள்ளியை இங்கே அழைத்து வா!" என்றாள் குந்தவி.

குந்தவியின் கட்டளையின் பேரில் கிடைத்த படகை எடுத்துக் கொண்டு பொன்னன் அக்கரைக்குச் சென்றான். இதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. பொன்னனுடைய கைகள் படகைச் செலுத்திக் கொண்டிருக்க, அவனுடைய உள்ளம் அலைந்து கொண்டிருந்தது. உறையூர் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்தவேண்டிய விக்கிரம மகாராஜா இன்று இரவு அதே உறையூரில் சிறையில் படுத்திருப்பார் என்பதை எண்ணியபோது அவனுடைய நெஞ்சு புண்ணாயிற்று. அன்றிரவே உறையூருக்குப் போய் ஊர் ஜனங்களிடமெல்லாம், "உங்கள் மகாராஜா சிறையில் இருக்கிறார்!" என்ற செய்தியைப் பரப்பி ஒரு பெரிய கலகத்தை உண்டு பண்ணலாமா என்று பொன்னன் நினைத்தான். பிறகு, அது நடக்காத காரியம் என்று அவனுக்கே தோன்றியது. சோழ நாட்டு மக்கள் இப்போது வீரமிழந்த கோழைகளாகப் போய்விட்டார்கள். அயல் மன்னனின் ஆதிபத்தியத்தை ஒப்புக் கொண்டு வாழ்கிறார்கள். மாரப்பனைப் போல் பல்லவச் சக்கரவர்த்தியின் கட்டளைகளை அடிபணிந்து நிறைவேற்றவும் காத்திருக்கிறார்கள்.

தன்னுடைய நிலைமையும் அதுதானோ என்ற எண்ணம் பொன்னனுக்குத் தோன்றியபோது அவனுடைய உடம்பு வெட்கத்தினால் குறுகியது. சிவனடியாரின் வேஷத்தையும் அவருடைய பேச்சையும் முழுவதும் நம்பலாமா? அவர் கூறியதெல்லாம் உண்மை என்பது என்ன நிச்சயம்? ஒருவேளை தானே ஏமாந்து போயிருக்கலாமல்லவா.... விக்கிரம மகாராஜாவிடம் உண்மையான அன்பு கொண்டு அவரைக் காப்பாற்றக் கவலை கொண்டிருப்பவர் குந்தவி தேவி என்பதில் சந்தேகமில்லை. யமன் வாயிலிருந்தே அவரை மீட்டு வரவில்லையா? - இவ்விதம் பலவாறாக யோசித்துக் கடைசியில் பொன்னன் குந்தவிதேவியின் விருப்பத்தின்படிக் காரியம் செய்வதென்று உறுதி செய்து கொண்டான். படகு அக்கரையை அடைந்ததும் பொன்னன் தன் குடிசையை அடைந்து கதவு சாத்தித் தாளிட்டிருப்பதைப் பார்த்து அதிசயத்துக் கதவைத் தட்டினான். "யார் அது?" என்று வள்ளியின் அதட்டுங் குரல் கேட்டது. பொன்னனின் குரலைத் தெரிந்து கொண்ட பிறகுதான் அவள் கதவைத் திறந்தாள். 'கதவை அடைப்பானேன்?' என்று கேட்டபோது அவள் கூறிய விவரம் பொன்னனுக்கு வியப்பையும் பயங்கரத்தையும் உண்டாக்கிற்று.

பொன்னன் வருவதற்குச் சற்று முன்னால், இருட்டுகிற சமயத்தில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டு வள்ளி குடிசைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள். பேச்சுக் குரல் குடிசையின் பக்கம் நெருங்கி வந்தது. ஒரு பயங்கரமான பேய்க்குரல், "நீ இங்கேயே இருந்து பூபதியை அழைத்துக் கொண்டு வா! நான் கோயிலுக்குப் போகிறேன்" என்றது. இன்னொரு குரல், "மகாப் பிரபோ! இந்தக் குடிசையில் தங்கியிருக்கலாமே!" என்றது. "நீ இருந்து அழைத்து வா!" என்று முதலில் பேசிய பயங்கரக் குரல் கூறிற்று. சற்றுப் பொறுத்து வள்ளி மெதுவாகத் திறந்து பார்த்த போது தூரத்தில் இருவர் போவது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது. அவர்களில் ஒருவன் நெட்டையாக வளர்ந்தவன்; அவனுக்கு ஒரு கை இல்லை என்பதைக் கண்டதும் நெஞ்சுத் துணிவுள்ள வள்ளிகூடப் பயந்து நடுங்கிவிட்டாள். காவேரி சங்கமத்தில் சூரிய கிரகணத்தின்போது அருள்மொழி ராணியைத் தூக்கிச் சென்ற உருவம் இதுதான் என்பது அவளுக்கு நினைவு வந்ததினால் திகில் அதிகமாயிற்று. அவனுக்குப் பக்கத்திலே போனவன் ஒரு சித்திரக்குள்ளனாகத் தோன்றினான். இந்தக் குள்ளனுக்குப் பக்கத்தில் அந்த நெட்டை உருவம் இன்னும் நெடியதாய்க் காணப்பட்டது.

நெடிய ஒற்றைக்கை மனிதன் சாலையோடு கிழக்கே போய்விட்டான். குள்ளன் சாலை ஓரத்தில் ஒரு மரத்தில் உட்கார்ந்து கொண்டான். வள்ளி மறுபடியும் கதவைச் சாத்திக் கொண்டாள். இதையெல்லாம் சொல்லிவிட்டு வள்ளி சுற்றுமுற்றும் பார்த்தாள். பொன்னனுடைய கையைச் சட்டென்று பிடித்துக் கொண்டு, "அதோ பார்" என்றாள். சாலை ஓரத்து மரத்தடியில் அந்தக் குள்ள உருவம் காணப்பட்டது. அவன் குடிசைப் பக்கம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தோன்றியது. பொன்னன் சற்று யோசித்துவிட்டு, "வள்ளி! வா! இன்று ராத்திரி உனக்கு வேலை இருக்கிறது" என்றான். "எங்கே வரச் சொல்லுகிறாய்! உறையூருக்கா?" என்று வள்ளி கேட்டாள். "இல்லை; வஸந்தத் தீவுக்குத்தான். குந்தவி தேவி உன்னை அழைத்துவரச் சொன்னார்." "அப்படியா? இளவரசர் - மகாராஜா - சௌக்கியமா? அவர் யாரென்று தேவிக்குத் தெரியுமா?" என்று வள்ளி ஆவலுடன் கேட்டாள். "ரொம்ப விஷயம் இருக்கிறது. எல்லாம் படகில் சொல்கிறேன் வா!" என்றான் பொன்னன்.

இரண்டு பேரும் நதிக்கரைக்குச் சென்றார்கள். பொன்னன் வேண்டுமென்றே அதிகமாகச் சத்தப்படுத்திப் படகை அவிழ்த்து விட்டதோடு, சலசலவென்று சப்திக்கும்படியாகக் கோலைப் போட்டு படகைத் தள்ளினான். படகு போவதை அந்தக் குள்ள உருவம் கவனிக்கிறது என்பதை அவன் கவனித்துக் கொண்டான். நடுநிசிக்கு ஒரு நாழிகைப் பொழுது இருக்கும் சமயத்தில் பொன்னன் மறுபடியும் படகைத் தள்ளிக்கொண்டு காவேரியின் தென்கரைக்கு வந்தான். இப்போது அவன் தோணித் துறைக்குப் படகைக் கொண்டு வராமல் கொஞ்சம் கிழக்கே கொண்டு போய்ச் சத்தம் செய்யாமல் நிறுத்திவிட்டுக் கரையேறினான். சாலையோரத்தில் தான் முன் பார்த்த இடத்திலேயே குள்ளன் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தான். குடிசைச் சுவரின் பக்கத்தில் தானும் உட்கார்ந்து உறையூர்ச் சாலையைக் கவனிக்கலானான். ஏதோ முக்கியமான சம்பவம் நடக்கப் போகிறதை எதிர்பார்த்து அவனுடைய உள்ளம் பெரிதும் பரபரப்பை அடைந்திருந்தது. 'டக் டக்' 'டக்டக்' என்ற குதிரைக் குளம்பின் சத்தத்தைக் கேட்டுப் பொன்னன் விழிப்புடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். ஆம், உறையூர்ப் பக்கத்திலிருந்துதான் அந்தச் சத்தம் வந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் குதிரை அருகில் வந்துவிட்டது. அதன்மேல் அமர்ந்திருப்பது சாக்ஷாத் மாரப்ப பூபதிதான் என்று நட்சத்திர வெளிச்சத்தில் பொன்னன் தெரிந்து கொண்டான். நடுச் சாலையில் நின்ற குள்ளனருகில் வந்து குதிரையும் நின்றது.
 
அத்தியாயம் முப்பத்தொன்று

பைரவரும் பூபதியும்

பொன்னன் சிறிதும் சத்தம் செய்யாமல் மரங்களின் இருண்ட நிழலிலேயே நடந்து சாலையருகில் சென்று ஒரு மரத்தின் மறைவில் நின்றான். "சித்திர குப்தா, எங்கே மகாப் பிரபு?" என்று மாரப்பன் கேட்டது பொன்னன் காதிலே விழுந்தது. பிறகு, பின்வரும் சம்பாக்ஷணை நடந்தது. "அய்யனார் கோவிலில் இருக்கிறார். என்னை இங்கே இருந்து உங்களுக்கு வழிகாட்டி அழைத்து வரும்படி சொன்னார்... ஆமாம், அவன் எங்கே?" "எவன்?" "அவன்தான். பல பெயர் கொண்டவன்... இரத்தின வியாபாரி... தேவசேனன்... உம்முடைய தாயாதி....ஹிஹிஹி, என்று குள்ளன் கீச்சுக் குரலில் சிரித்தான். "அவனா? ஹா ஹா ஹா!" என்று மாரப்பனும் பெருங் குரலில் சிரித்தான். அந்த நள்ளிரவில் அவர்கள் இருவரும் சிரித்த சிரிப்பின் ஒலி பயங்கரமாகத் தொனித்தது. மரங்களில் தூங்கிக் கொண்டிருந்த பட்சி ஜாதிகளை எழுப்பி விட்டது. சில பறவைகள் சிறகுகளை அடித்துக் கொண்டன. வேறு சில பறவைகள் தூக்கக் கலக்கத்தில் பீதியடைந்து தீனக் குரலில் சப்தித்தன.

"அவன் பத்திரமாகயிருக்கிறான் நீ கவலைப்படாதே. அடே! அன்றைக்கு அந்த இரத்தின வியாபாரிக்கு வழிக்காட்டிக் கொண்டு போனாயே, அந்த மாதிரிதான் எனக்கும் வழி காட்டுவாயோ?" என்று கூறி மாரப்பன் மறுபடியும் உரத்த குரலில் சிரித்தான். சித்திர குப்தன் கூறிய மறுமொழி பொன்னன் காதில் விழவில்லை. மீண்டும் மாரப்பன், 'ஓஹோஹோ! எனக்கு வழிகாட்டி அழைத்து வரச் சொன்னாரா? எங்கே? அழைத்துப் போ, பார்க்கலாம்" என்று சொல்லித் தன் கையிலிருந்த சவுக்கைச் சடீரென்று ஒரு சொடுக்கச் சொடுக்கினான். சவுக்கின் நுனி சித்திரகுப்தன் மீது சுளீரென்று பட்டது. சவுக்கு சொடுக்குகிற சத்தத்தைக் கேட்டதும் குதிரை பிய்த்துக் கொண்டு பாய்ந்து சென்றது. குள்ளன் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே பின்னால் விரைவாகச் சென்றான். அவன் இவ்வளவு வேகமாக நடக்க முடியுமென்பதைக் கண்ட பொன்னனுக்கு ஆச்சரியமாயிருந்தது. அவனைச் சற்று தூரத்தில் பின் தொடர்ந்து ஓட்டமும் நடையுமாகப் பொன்னனும் போனான். ஒரு நாழிகை தூரம் சாலையோடு கிழக்கே போன பிறகு, சாலையில் குதிரை நிற்பதும், பக்கத்தில் மாரப்பன் நிற்பதும் தெரிந்தது. சித்திரகுப்தன் மாரப்பனைப் பார்த்து, "ஏன் நிற்க வேண்டும்? போவதுதானே?" என்று கேட்க, "ஏண்டா, காட்டுப் பூனை! இருட்டு ராஜாவாகிய நீ வழிகாட்டிதான் இனிமேல் போகவேண்டும்" என்றான் மாரப்பன்.

"ஆகா! வழி காட்டுகிறேன், ஆனால் காட்டுப் பூனையிடம் நீ சற்று ஜாக்கிரதையாகயிரு. விழுந்து புரண்டினாலும் புரண்டி விடும்!" என்று சொல்லிவிட்டுப் குள்ளன் சாலைக்கு வலது புறத்தில் புதர்களும் கொடிகளும் மண்டிக் கிடந்த காட்டில் இறங்கிப் போகலானான். பொன்னனுக்கு அவர்கள் எங்கே போகிறார்கள் என்பது இப்போது சந்தேகமறத் தெரிந்துவிட்டது. பாழடைந்த அய்யனார் கோவிலுக்குத்தான் அவர்கள் போகிறார்கள். செடி, கொடிகளில் உராய்வதினால் சத்தம் கேட்கக் கூடுமாதலால் பொன்னன் சற்றுபின்னால் தங்கி அவர்கள் போய்க் கால்நாழிகைக்குப் பிறகு தானும் அவ்வழியே சென்றான். நள்ளிரவில் அந்தக் காட்டுவழியே போகும்போது பொன்னனுக்கு மனதில் திகிலாய்த்தானிருந்தது. திகிலை அதிகப்படுத்துவதற்கு ஆந்தைகள் உறுமும் குரலும், நரிகள் ஊளையிடும் குரலும் கேட்டன. மரம், செடிகள் அசைந்தாடும் போது, தரையில் கிடந்த இலைச் சருகுகளின் சரசரவென்னும் சத்தம் கேட்கும்போதும் பொன்னனுக்கு என்னவோ செய்தது. ஆனால் ஏதோ ஒரு முக்கியமான சம்பவம் நடக்கப் போகிறது - முக்கியமான இரகசியத்தைத் தெரிந்து கொள்ளப் போகிறோம் - என்ற ஆவலினால் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அய்யனார் கோயில் உள்ள திசையை நோக்கிச் சென்றான்.

சற்று நேரத்துக்கெல்லாம் தூரத்தில் ஒரு தீவர்த்தியின் வெளிச்சம் தெரிந்தது. சரி, அதுதான் ஐயனார் கோயில். கிட்ட நெருங்க நெருங்கக் கோயிலுக்கு முன்னால் வைத்திருந்த பிரம்மாண்டமான வீரர்களின் சிலைகளும் மண் யானைகளும், குதிரைகளும் தீவர்த்தி வெளிச்சத்தில், கோரமாகக் காட்சியளித்தன. இந்த ஏகாந்தக் காட்டுப் பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கோவிலுக்குப் பட்டப்பகலில் வந்தபோதே பொன்னனுக்குத் திகிலாயிருந்தது. இப்போது கேட்க வேண்டியதில்லை. கோயிலின் வாசற்படிக்கருகில் பொன்னன் கண்ட காட்சி அவனுடைய திகிலை நூறு மடங்கு அதிகமாக்கிற்று. அங்கே, புராணங்களில் வர்ணித்திருப்பது போன்ற கோர ராட்சஸ ரூபமுடைய ஒருவன் கையில் தீவர்த்தியுடன் நின்று கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்தில் நெடிய கம்பீர உருவமும் வஜ்ரசரீரமும் கொண்ட மகாகபால பைரவர் நின்று கொண்டிருந்தார். தீவர்த்தியின் சிவந்த ஒளியில் அவருடைய நெற்றியில் அப்பியிருந்த சந்தனமும் குங்குமமும் இரத்தம் மாதிரி சிவந்து காட்டின. அவருடைய கழுத்தில் தொங்கிய கபால மாலை பொன்னனுக்குக் குலை நடுக்கம் உண்டாக்கிற்று. அவன் நடுங்கிக் கொண்டே கோயிலுக்குப் பின்புறமாகச் சென்று கோயில் வாசற்படிக்கு அருகில் இருந்த பெரிய வேப்பமரத்துக்குப் பின்னால் மறைந்து கொண்டு நின்றான். அதே சமயத்தில் சித்திரகுப்தனும், மாரப்பனும் மகா கபால பைரவரின் முன்னால் வந்து நின்றார்கள்.

"மகாப் பிரபோ!" என்று மாரப்பன் பைரவருக்கு நமஸ்கரித்தான். "சேனாதிபதி! மாதாவின் ஆக்ஞையை நிறைவேற்றினாயா? பலி எங்கே?" என்று கபால பைரவரின் பேய்க் குரல் கேட்டது. அந்தக் குரல் - மகேந்திர மண்டபத்தின் வாசலில் அன்றிரவு கேட்ட குரல் - ஏற்கனவே பயப் பிராந்தியடைந்திருந்த பொன்னனுடைய உடம்பில் மயிர்க்கூச்சு உண்டாக்கிற்று. அடித் தொண்டையிலிருந்து அதற்கும் கீழே இருதயப் பிரதேசத்திலிருந்து - வருவதுபோல் அந்தக் குரல் தொனித்தது. எனினும், உரத்துப் பேசிய மாரப்பனுடைய குரலைக் காட்டிலும் தெளிவாக அக்குரல் பொன்னனுடைய செவிகளில் விழுந்தது. கபால பைரவரின் கேள்விக்கு மாரப்பன், "மகாப்பிரபோ! பலி பத்திரமாயிருக்கிறது" என்றான். "எங்கே? ஏன் இவ்விடம் கொண்டு வரவில்லை? காளிமாதாவின் கட்டளையை உதாசீனம் செய்கிறாயா, சேனாதிபதி!" "இல்லை, இல்லை. மகாப் பிரபோ! இன்று சாயங்காலந்தான் இளவரசனைக் கைப்பற்ற முடிந்தது. உடனே இவ்விடம் கொண்டு வருவதில் பல அபாயங்கள் இருக்கின்றன, பிரபோ! அந்த ஓடக்காரன் இங்கே தான் இருக்கிறான்..."

"இதைக் கேட்டதும் மரத்தின் பின்னால் மறைந்து நின்ற பொன்னனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவனுடைய அடிவயிறு மேலே நெஞ்சுக்கு வந்துவிட்டது போலிருந்தது. மாரப்ப பூபதியின் அடுத்த வார்த்தையினால் அவனுக்குக் கொஞ்சம் தைரியம் பிறந்தது. "...அவனைக் கைப்பற்ற முடியவில்லை. சக்கரவர்த்தியின் மகள் குறுக்கே நின்று மறித்தாள். மகாப்பிரபோ! குந்தவி தேவியும் இன்னும் இங்கேதான் இருக்கிறாள். இளவரசனைத் தப்புவிப்பதில் முனைந்திருக்கிறாள். ஆகையால் நாம் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காரியம் கெட்டுப் போய் விடும்." மகா கபால பைரவர் இப்போது ஒரு சிரிப்புச் சிரித்தார். அந்த வேளையில் அந்தப் பயங்கரத் தொனியானது நாலா பக்கமும் பரவி எதிரொலி செய்தபோது, பல நூறு பேய்கள் ஏக காலத்தில் சிரிப்பது போலிருந்தது. "சேனாதிபதி! நீதானா பேசுகிறாய்? காளிமாதாவின் கட்டளையை நிறைவேற்றப் பயப்படுகிறாயா? அதுவும் ஒரு பெண் பிள்ளைக்கும் ஒரு ஓடக்காரனுக்கும் பயந்தா?" "இல்லை, சுவாமி, இல்லை! நான் பயப்படுவதெல்லாம் காளி மாதாவின் கைங்கரியத்துக்குப் பங்கம் வந்து விடுமோ என்பதற்குத்தான். மகாப் பிரபோ! தாங்கள் எனக்கு இட்ட கட்டளையை எப்படியும் நிறைவேற்றுவேன். அமாவாசையன்று இரவுக்குள் பலியைக் கொண்டு வந்து சேர்ப்பேன்." "சேர்க்காவிட்டால்....?" என்றது கபால பைரவரின் கடூரமான குரல். "என்னையே மாதாவுக்குப் பலியாக அர்ப்பணம் செய்வேன்."

"வேண்டாம். பூபதி! வேண்டாம். உன்னால் மாதாவுக்கு இன்னும் எவ்வளவோ காரியங்கள் ஆக வேண்டும். இந்தச் செழிப்பான தமிழகத்தில் மகா காளியின் சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்போது நீதான் பிரதம தளகர்த்தனாயிருக்க வேண்டும்." "மகாப்பிரபுவின் கட்டளையையும், காளி மாதாவின் ஆணையையும் எப்போதும் சிரமேற் கொள்ளக் காத்திருக்கிறேன்." "மாரப்பா! மாதாவுக்கு உன் பேரில் பூரண கிருபை இருக்கிறது. மேலும் மேலும் உனக்குப் பெரிய பதவிகளை அளிக்கப் போகிறாள்.... இருக்கட்டும்; இப்போது எந்த இடத்தில் பலியைக் கொண்டு வந்து சேர்ப்பாய்?" "அமாவாசையன்று முன் ஜாமத்தில் பராந்தகபுரத்தைத் தாண்டி மகேந்திர மண்டபத்துக்கு அருகில் கொண்டு வந்து சேர்ப்பேன். அங்கே சாலை வழியில் தங்களுடைய ஆட்களை அனுப்பி ஏற்றுக் கொள்ளவேண்டும்." "ஏன் அந்த வேலையை எனக்குக் கொடுக்கிறாய்?" "மகாப்பிரபோ! இங்கே உள்ள ஆட்களிடம் எனக்கு முழு நம்பிக்கை இல்லை. சக்கரவர்த்தியின் கட்டளைப் பிரகாரம் இளவரசரைக் காஞ்சிக்கு அனுப்புவதாகச் சொல்லித்தான் அனுப்பப் போகிறேன். அவர்களைத் தொடர்ந்து சற்றுப் பின்னால் நான் வருவேன். தங்களுடைய ஆட்கள் வந்து வழிமறித்து இளவரசரைக் கொண்டு போக வேண்டும். ஆனால், நான் அனுப்பும் ஆட்கள் அவ்வளவு அசகாயசூரர்களாயிருக்க மாட்டார்கள். தங்களுடைய திருநாமத்தைச் சொன்னால், உடனே கத்திகளைக் கீழே போட்டுவிட்டு நமஸ்கரிப்பார்கள்."

"அப்படியே யாகட்டும், சேனாதிபதி! ஆனால் ஜாக்கிரதை! காளிமாதா அடுத்த அமாவாசை இரவில் அவசியம் பலியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்!" "இன்னொரு விஷயம் தெரிவிக்க வேணும். மகாபிரபோ!" "சீக்கிரம் சொல்; பொழுது விடிவதற்குள் நான் ஆற்றைத் தாண்ட வேண்டும்." "இந்த ஓடக்காரப் பொன்னனைச் சில நாளாகக் காணவில்லை. அவன் மகாராணியைத் தேடிக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. அவனைப் பற்றி அறிய நான் ஆள் விட்டிருந்தேன். நேற்றுத்தான் அவனைப்பற்றித் தகவல் கிடைத்தது. பொன்னனும் இன்னொரு மனிதனும் குதிரை மேல் காட்டாற்றோடு கொல்லிமலைப்பக்கம் போனதாக என்னுடைய ஒற்றன் வந்து சொன்னான்..." "ஓடக்காரன் இங்கே இருக்கிறான் என்றாயே?" "ஆமாம்; இன்றைக்குத்தான் இங்கே வந்து சேர்ந்தான்." "அவ்வளவுதானே?" "பொன்னனுடன் போன இன்னொரு மனிதன் யார் தெரியுமா, பிரபோ?" "யார்?" "தங்களுக்கும் எனக்கும் ஜன்ம விரோதிதான்." "என்ன? யார் சீக்கிரம் சொல்!" "பொய் ஜடாமுடி தரித்த அந்த போலிச் சிவனடியார் தான்." "இதைக் கேட்டதும் மகா கபால பைரவனின் முகத்தில் ஏற்பட்ட பயங்கரமான மாறுதலைப் பார்த்து பொன்னன் திகைத்துப் போனான். ஏற்கெனவே கோரமாயிருந்த அந்த முகத்தில் இப்போது அளவில்லாத குரோதமும் பயமும் பகைமையும் தோன்றி விகாரப்படுத்தின. அதைப் பார்த்து "ஐயோ!" என்று பொன்னன் அலறிய குரல் நல்ல வேளையாகப் பயத்தின் மிகுதியால் அவன் தொண்டையிலேயே நின்றுவிட்டது.

கபால பைரவரும் சித்திரகுப்தனும் மாரப்ப பூபதியும் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள். தீவர்த்தி பிடித்துக் கொண்டு நின்ற ராட்சதன் அவர்களுக்கெல்லாம் முன்னால் போனான். சற்று நேரத்துக்கெல்லாம் தீவர்த்தி வெளிச்சம் மறைந்தது. கீழ்வானத்திலே இளம்பிறைச் சந்திரன் உதயமாயிற்று. அவர்கள் போய்க் கொஞ்சம் நேரத்துக்குப் பிறகு தான் பொன்னன் அங்கிருந்து கிளம்பினான். அவனுடைய உடம்பு மிகவும் தளர்ச்சியடைந்திருந்தாலும், மனத்தில் ஒருவித உற்சாகம் ஏற்பட்டிருந்தது. விக்கிரம மகாராஜாவை இந்த நரபலிக்காரர்களிடமிருந்து தப்புவிக்கும் வழி அவனுடைய மனத்தில் உதயமாகியிருந்தது. மாரப்பனுடைய தந்திரம் இன்னதென்பது அவனுக்கு இப்போது ஒருவாறு புலப்பட்டது. இளவரசரைக் காஞ்சிக்கு அனுப்புவதில் பிரயோஜனமில்லை என்று மகாக் கபால பைரவரின் நரபலிக்கு அவரை அனுப்ப மாரப்பன் எண்ணியிருக்கிறான். ஆனால், தன் பேரில் குற்றம் ஏற்படாதபடி இந்தக் கரியத்தைத் தந்திரமாகச் செய்ய உத்தேசித்திருக்கிறான். அவனுடைய தந்திரத்துக்கு மாற்றுத் தந்திரம் செய்து விக்கிரம மகாராஜாவை விடுவிக்க வேண்டும். விடுவித்து நேரே மாமல்லபுரம் துறைமுகத்துக்கு அழைத்துப் போகவேண்டும். குந்தவி தேவியின் உதவியைக் கொண்டு இந்தக் காரியத்தைச் செய்து முடிக்க வேண்டும்... இவ்விதமெல்லாம் சிந்தித்துக்கொண்டு பலபலவென்று பொழுது விடியும் தருணத்தில் பொன்னன் தோணித் துறையை அடைந்தான்.
 
அத்தியாயம் முப்பத்திரண்டு

உறையூர் சிறைச்சாலை

விக்கிரமன் உறையூர் சிறைச்சாலையில் ஒரு தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தான். சிங்காதனம் ஏறிச் செங்கோல் செலுத்த வேண்டிய ஊரில் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடப்பதை நினைத்து நினைத்து அவன் துயரச் சிரிப்புச் சிரித்தான். அவனுடைய தந்தை அரசு செலுத்திய காலத்து ஞாபகங்கள் அடிக்கடி வந்தன. பார்த்திப மகாராஜா போர்க்கோலம் பூண்டு கிளம்பிய காட்சி அவன் மனக்கண் முன்னால் பிரத்யட்சமாக நின்றது. அதற்கு முதல்நாள் மகாராஜா இரகசிய சித்திர மண்டபத்துக்குத் தன்னை அழைத்துச் சென்று தம்முடைய கையால் எழுதிய கனவுச் சித்திரங்களைக் காட்டியதெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன. ஐயோ! அவையெல்லாம் 'கனவாகவே போகவேண்டியதுதான் போலும்!" தந்தைக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றலாமென்னும் ஆசை அவனுக்கு இதுவரையில் இருந்தது. இப்போது அடியோடு போய்விட்டது. பல்லவச் சக்கரவர்த்தியின் கட்டளையை எதிர்பார்த்து இந்தச் சிறைச்சாலையில் எத்தனை நாள் கிடக்கவேண்டுமோ தெரியவில்லை. அவரிடமிருந்து என்ன கட்டளை வரும்? மரண தண்டனையை நிறைவேற்றும்படி தான் அநேகமாகக் கட்டளை வரும். மாரப்பன் அந்தக் கட்டளையை நிறைவேற்றச் சித்தமாயிருப்பான். தன்னுடைய கதியைப் பற்றி யாருக்கும் தெரியவே போவதில்லை. பார்த்திப மகாராஜாவின் பெயராவது ஜனங்களுக்குச் சில காலம் ஞாபகம் இருக்கும். தன் பெயரைக் கூட எல்லாரும் மறந்துவிடுவார்கள்.

செண்பகத் தீவிலிருந்து ஏன் திரும்பி வந்தேன்? - என்னும் கேள்வியை விக்கிரமன் அடிக்கடி கேட்டுக் கொண்டான். சின்னஞ்சிறு தீவாயிருந்தாலும் அங்கே சுதந்திர ராஜாவாக ஆட்சி செய்தது எவ்வளவு சந்தோஷமாயிருந்தது! அதைவிட்டு இப்படித் தன்னந்தனியே இங்கே வரும் பைத்தியம் தனக்கு எதற்காக வந்தது? அந்தப் பைத்தியத்தின் காரணங்களைப் பற்றியும் அவை எவ்வளவு தூரம் நிறைவேறின என்பது பற்றியும் விக்கிரமன் யோசித்தான். செண்பகத் தீவிலிருந்தபோது பொன்னி நதியையும் சோழ வள நாட்டையும் எப்போது பார்க்கப் போகிறோம் என்ற ஏக்கம் மீண்டும் மீண்டும் அவனுக்கு ஏற்பட்டு வந்தது. ஆனால், சோழ நாட்டின்மேல் அவனுக்கு எவ்வளவு ஆசை இருந்தாலும் சோழநாட்டு மக்கள் சுதந்திரத்தை மறந்து, வீரமிழந்து பல்லவ சக்கரவர்த்திக்கு உட்பட்டிருப்பதை நினைக்க அவன் வெறுப்பு அடைவதும் உண்டு. அந்த வெறுப்பு இப்போது சிறையில் இருந்த சமயம் பதின்மடங்கு அதிகமாயிற்று. வீரபார்த்திப மகாராஜாவின் புதல்வன் உள்ளூர்ச் சிறைச்சாலையில் இருப்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் தானே இந்த ஜனங்கள் இருக்கிறார்கள்.

தாயாரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஒன்று இருந்தது, அதுவும் நிறைவேறவில்லை. நிறைவேறாமலே சாகப்போகிறோமோ, என்னவோ? அப்புறம், குந்தவி! - அவளை நினைக்காமலிருப்பதற்கு விக்கிரமன் ஆனமட்டும் முயன்றான். ஆனால் முடியவில்லை. குந்தவியை நினைத்ததும், விக்கிரமனுக்குப் பளிச்சென்று ஓர் உண்மை புலனாயிற்று. செண்பகத் தீவிலிருந்து கிளம்பி வந்ததற்குப் பல காரணங்கள் அவன் கற்பித்துக் கொண்டிருந்தா னென்றாலும், உண்மையான காரணம் - அவனுடைய மனத்தின் அந்தரங்கத்தில் கிடந்த காரணம் இப்போது தெரிய வந்தது. குந்தவிதான் அந்தக் காரணம். இரும்பு மிகவும் வலிமை வாய்ந்ததுதான்; ஆனாலும் காந்தத்தின் முன்னால் அதன் சக்தியெல்லாம் குன்றிவிடுகிறது. காந்தம் இழுக்க, இரும்பு ஓடிவருகிறது. குந்தவியின் சந்திரவதனம் - சீ, இல்லை!- அவளுடைய உண்மை அன்பு தன்னுடைய இரும்பு நெஞ்சத்தை இளக்கி விட்டது. அந்தக் காந்த சக்திதான் தன்னை செண்பகத் தீவிலிருந்து இங்கே இழுத்துக் கொண்டு வந்தது. ஜுரமாகக் கிடந்த தன்னை எடுத்துக் காப்பாற்றியவள் அவள் என்று தெரிந்த பிறகுகூட விக்கிரமனுக்குக் குந்தவியின் மேல் கோபம் இருந்தது; தன்னுடைய சுதந்திரப் பிரதிக்ஞையை நிறைவேற்றுவதற்கு அவள் குறுக்கே நிற்பாள் என்ற எண்ணந்தான் காரணம். ஆனால், கடைசி நாள் அவளுடைய பேச்சிலிருந்து அது தவறு என்று தெரிந்தது. 'இவரை மன்னிக்கும்படி நான் என் தந்தையிடம் கேட்கமாட்டேன்; ஆனால் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னால் இவரை மணம் புரிந்து கொள்ள அனுமதி கேட்பேன்' என்று எவ்வளவு கம்பீரமாய்க் கூறினாள்! இத்தகைய பெண்ணின் காதலை அறிவதற்காகச் செண்பகத் தீவிலிருந்து தானா வரலாம்? சொர்க்க லோகத்திலிருந்து கூட வரலாம் அல்லவா? ஆகா! இந்த மாரப்பன் மட்டும் வந்து குறுக்கிட்டிராவிட்டால், குந்தவியும் தானும் வருகிற அமாவாசையன்று கப்பலேறிச் செண்பகத் தீவுக்குக் கிளம்பியிருக்கலாமே!

அமாவாசை நெருங்க நெருங்க, விக்கிரமனுடைய உள்ளக் கிளர்ச்சி அதிகமாயிற்று. அமாவாசையன்று செண்பகத் தீவின் கப்பல் மாமல்லபுரம் துறைமுகத்துக்கு வரும். அப்புறம் இரண்டு நாள் தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். எப்படியாவது இச்சிறையிலிருந்து தப்பி அமாவாசையன்று மாமல்லபுரம் போகக் கூடுமானால்! இவ்விதம், விக்கிரமன் எண்ணாததெல்லாம் எண்ணினான். ஒவ்வொரு நிமிஷமும் அவனுக்கு ஒரு யுகமாயிருந்தது. கடைசியில் அமாவாசைக்கு முதல்நாள் மாலை மாரப்பபூபதி வந்தான். விக்கிரமனைப் பார்த்து நகைத்துக் கொண்டே, "ஓ! இரத்தின வியாபாரியாரே! காஞ்சியிலிருந்து கட்டளை வந்துவிட்டது" என்றான். ஒரு கணம் விக்கிரமன் நடுங்கிப்போனான். கட்டளை என்றதும், மரண தண்டனை என்று அவன் எண்ணினான். மரணத்துக்கு அவன் பயந்தவனல்ல என்றாலும், கொலையாளிகளின் கத்திக்கு இரையாவதை அவன் அருவருத்தான். ஆனால், மாரப்பன், "காஞ்சிக்கு உன்னைப் பத்திரமாய் அனுப்பி வைக்கும்படி கட்டளை, இன்றிரவு இரண்டாம் ஜாமத்தில் கிளம்பவேண்டும், சித்தமாயிரு" என்றதும் விக்கிரமனுக்கு உற்சாகம் பிறந்தது. வழியில் தப்புவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் நேரிடலாமல்லவா? அல்லது போராடி வீர மரணமாவது அடையலாமல்லவா? இது இரண்டும் சாத்தியமில்லாவிட்டால், சக்கரவர்த்தியின் முன்னிலையில் இன்னொரு தடவை, "அடிமை வாழ்வை ஒப்புக் கொள்ள மாட்டேன்; சுதந்திரத்துக்காக உயிரை விடுவேன்" என்று சொல்வதற்காவது ஒரு சந்தர்ப்பம் ஏற்படலாமல்லவா? ஆகா! குந்தவியும் பக்கத்தில் இருக்கும்போது இம்மாதிரி மறுமொழி சொல்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதைவிடப் பெரிய பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும்?



அத்தியாயம் முப்பத்திமூன்று

அமாவாசை முன்னிரவு

அன்றிரவு ஒரு ஜாமம் ஆனதும் சிறைச்சாலைக் கதவு திறந்தது. மாரப்பனும் ஆயுதந் தரித்த வீரர் சிலரும் வந்தார்கள். விக்கிரமனுடைய கைகளைச் சங்கிலியால் பிணைத்து வெளியே அழைத்துச் சென்றார்கள். வாசலில் கட்டை வண்டி ஒன்று ஆயத்தமாய் நின்றது. அதில் விக்கிரமன் ஏறிக்கொண்டான். அவனுக்கு முன்னும் பின்னும் வண்டியில் சில வீரர்கள் ஏறிக் கொண்டார்கள். அவ்விதமே வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் சிலர் நின்றார்கள். சிறைவாசலில் மாரப்பன் அந்த வீரர்களின் தலைவனாகத் தோன்றியவனைக் கூப்பிட்டு அவன் காதோடு ஏதோ இரகசியமாகச் சொன்னான். பிறகு உரத்த குரலில், "கிளம்பலாம்!" என்றான். உடனே வண்டிக்காரன் வண்டியை ஓட்ட, முன்னாலும் பின்னாலும் நின்ற வீரர்களும் போகத் தொடங்கினார்கள். உறையூர் வீதிகளின் வழியாக வண்டி போய்க் கொண்டிருந்தது. முன்னெல்லாம்போல் இப்போது இரவில் விளக்குகள் எரியாமல் நகரம் இருளடைந்து கிடப்பதைப் பார்த்ததும், விக்கிரமனுக்கு என்னமோ செய்தது! ஆகா! சோழ நாட்டுத் தலைநகரமான உறையூர்தானா இது?

"ஏனுங்க சாமிங்களே! இந்தப் பிள்ளையாண்டான் யாரு? இவனை எங்கே அழைத்துப் போறீங்க!" என்ற பேச்சைக் கேட்ட விக்கிரமன் திடுக்கிட்டான். பேசியவன் வண்டிக்காரன்தான் ஆனால், அந்தக் குரல் பொன்னன் குரலாக அல்லவா? இருக்கிறது? அப்படியும் இருக்க முடியுமா? வீரர்களில் ஒருவன், "உனக்கு ஏன் அப்பா இந்த வம்பு? பேசாமல் வண்டியை ஓட்டு!" என்றான். அதற்கு வண்டிக்காரன் "எனக்கு ஒன்றுமில்லை, அப்பா! ஆனால் ஊரெல்லாம் பேசிக் கிட்டிருக்காங்க, யாரோ செண்பகத் தீவிலிருந்து வந்த ஒற்றனாம்! இரத்தின வியாபாரி மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு வந்தானாம். சக்கரவர்த்தி மகள் குந்தவி தேவியையே ஏமாற்றி விட்டானாம். அப்பேர்பட்டவனை நம்ம சேனாதிபதி கண்டுபிடித்துவிட்டாராம். அப்படியெல்லாம் ஊரிலே பேச்சாயிருக்கே. அவன் தானா இவன் என்று கேட்டேன்" என்றாள். "ஆமாம். அவன்தான் என்று வைத்துக் கொள்ளேன்" என்றான் ஒரு வீரன். "எங்கே அழைத்துக் கொண்டு போறீங்களோ?" என்று வண்டிக்காரன் கேட்க, "எங்கே அழைத்துக் கொண்டு போவாங்க? காஞ்சிமா நகருக்குத்தான்" என்று மறுமொழி வந்தது. "அடே அப்பா! அவ்வளவு தூரமா போக வேண்டும்? நீங்கள் ஏழெட்டுப் பேர் காவலுக்குப் போறீர்களே, போதுமா? வழியிலே இவனுக்கு யாரளுறுவது ஒத்தாசை செய்து தப்பிச்சுவிட்டு விட்டாங்கன்னா என்ன செய்வீங்க?" என்றான் வண்டிக்காரன். பேசுகிறவன் உண்மையில் பொன்னன்தானோ? தனக்குத்தான் சமிக்ஞைச் செய்தி தெரிவிக்கிறானோ? வழியில் வந்து ஒத்தாசை செய்வதாகக் கூறுகிறானோ? இவ்விதம் விக்கிரமன் வியப்புடன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போது, சற்றுப்பின்னால் வந்த வீரர் தலைவன், "யார் அங்கே? என்ன பேச்சு!" என்று அதட்டவே மௌனம் குடிகொண்டது. பிறகு வண்டிக்காரனாவது வீரர்களாவது பேசவில்லை. காவேரிக் கரைக்கு வந்ததும் வண்டி நின்றது. விக்கிரமனும் வண்டியிலிருந்த வீரர்களும் இறங்கினார்கள். ஆற்றங்கரையோரமாக ஒரு படகு ஆயத்தமாயிருந்தது. அங்கே ஒருவன் கையில் தீவர்த்தியுடன் நின்று கொண்டிருந்தான்.

எல்லாரும் கீழிறங்கியதும் வண்டிக்காரன் வண்டியைத் திருப்பிக் கொண்டே, "போயிட்டு வரீங்களா? ஒற்றனை ஜாக்கிரதையாகக் கொண்டுபோய்ச் சக்கரவர்த்தியிடம் சேருங்கள், ஐயா! வழியில் ஒரு காட்டாறு இருக்கிறது. பத்திரம்!" என்றான். அப்போது தீவர்த்தி வெளிச்சம் அவன் முகத்தின்மேல் அடித்தது. விக்கிரமனுக்கு அந்த முகத்தைப் பார்த்ததும் பெரும் ஏமாற்றமுண்டாயிற்று. ஏனெனில், அவன் பொன்னன் இல்லை. ஆனால் அவனுடைய கண்களில் அந்த ஒளி - எங்கேயோ பார்த்த முகமாயிருக்கிறதே? சட்டென்று உண்மை புலனாயிற்று. பொன்னன்தான் அவன் முகத்தில் பொய் மீசை வைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறான். அவன்கூறிய வார்த்தைகளின் பொருள் என்ன? வழியில் காட்டாற்றின் சமீபத்தில் தன்னை விடுவிக்க வருவதாகத்தான் சொல்லியிருக்க வேண்டும். இந்த எண்ணத்தினால் விக்கிரமனுக்கு மிகுந்த உற்சாகம் உண்டாயிற்று. படகில் ஏறி ஆற்றைக் கடந்தபின் அவர்கள் நடுஜாமம் வரையில் கால்நடையாகப் பிரயாணம் செய்தார்கள். பிறகு சாலையோரம் இருந்த ஒரு மண்டபத்தில் படுத்துத் தூங்கினார்கள். மீண்டும் அதிகாலையில் எழுந்து மாட்டுவண்டி பிடித்துக் கொண்டு பிரயாணமானார்கள். அன்று பொழுது சாயும் சமயத்தில் பராந்தகபுரத்தைத் தாண்டினார்கள்.

இனிச் சிறிது தூரத்தில் காட்டாறு வந்துவிடும் என்று விக்கிரமன் ஒருவாறு தெரிந்து கொண்டிருந்தான். அந்த வண்டிக்காரன் பொன்னனாயிருக்கும் பட்சத்தில், இங்கே தான் தனக்கு உதவிக்கு வரவேண்டும் "யார் வருவார்கள்; எப்போது வருவார்கள்?" என்றெல்லாம் எண்ணி விக்கிரமனுடைய உள்ளம் பரபரப்பை அடைந்தது. அஸ்தமித்து இரண்டு நாழிகை இருக்கும். அந்த அமாவாசை இருட்டில் சாலையில் ஜனநடமாட்டம் அதிகமாயிருந்ததைக் கண்டு விக்கிரமன் வியந்தான். ஆங்காங்கு சிறுசிறு கும்பலாக ஜனங்கள் போய்க் கொண்டிருந்தார்கள். கோயிலுக்குப் போகிறவர்களைப் போல் அவர்கள் காணப்பட்டார்கள். வெறிபிடித்தவர்களைப்போல் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் போனார்கள். சிலர் மஞ்சள் வஸ்திரம் அணிந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கும்பலிலும் ஒருவன் தீவர்த்தி பிடித்துக் கொண்டிருந்தான். இன்னும் இந்தக் கும்பல்களில் சிலர் நீண்ட கத்திகளை எடுத்துச் சென்றது விக்கிரமனுக்கு ஒருவாறு பயங்கரத்தையளித்தது. இவர்களெல்லாம் எங்கே போகிறார்கள்? கையில் கத்திகள் என்னத்திற்குக் கொண்டு போகிறார்கள்?

இந்தக் காட்சிகளைப் பார்த்த மாரப்பனுடைய வீரர்கள் தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொண்டதில் சில வார்த்தைகள் விக்கிரமனுடைய காதிலும் விழுந்தன. "பத்திரகாளி", "நரபலி", "கபால பைரவர்" என்னும் சொற்கள் அவனுக்குத் திகைப்பையும் பயத்தையும் உண்டாக்கின. மகேந்திர மண்டபத்தின் வாசலில் மகாக் கபால பைரவரும், மாரப்பனும் பேசிக் கொண்டது அவனுக்கு நினைவு வந்தது. ஓஹோ! இன்றைக்கு அமாவாசை இரவல்லவா? மாரப்பன் ஒருவேளை தன்னைக் காஞ்சிக்கு அனுப்புவதாகச் சொல்லி உண்மையில் கபால பைரவனின் பலிக்குத் தான் அனுப்பியிருப்பானோ! இவ்விதம் அவன் எண்ணிக் கொண்டிருக்கும்போதே "ஓம் காளி ஜய காளி!" என்ற பல குரல்களின் ஏகோபித்த கோஷம் அவன் காதில் விழுந்து, மயிர்க்கூச்சு உண்டாகிற்று. அவ்விதம் கோஷித்தவர்கள் அடுத்த நிமிஷம் விக்கிரமன் இருந்த வண்டியைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் கையில் நீண்ட கூரிய கத்திகள் நட்சத்திர வெளிச்சத்தில் மின்னியது தெரிந்தது. "ஓம் காளி, ஜய காளி" என்ற கோஷங்களுக்கு மத்தியில் "எங்கே பலி?" என்று ஒரு பயங்கரமான குரல் கேட்டது. இதற்குள் வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் வந்த உறையூர் வீரர்கள் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டார்கள். வண்டியில் இருந்தவர்களும் தொப்புத் தொப்பென்று குதித்து ஓட்டம் பிடித்தார்கள். வண்டிக்காரன் அந்தர்த்தானமாகிவிட்டான். விக்கிரமன் கைகள் சங்கிலிகளால் வண்டியின் சட்டத்துடன் பிணைக்கப்பட்டிருந்தமையால் அவனால் மட்டும் வண்டியிலிருந்து குதிக்க முடியவில்லை. அப்போது வண்டியின் பின்புறத்தில் ஒரு குரல், "மகாராஜா! பதற வேண்டாம்! நான்தான்" என்றது. உடனே பொன்னன் வண்டியில் ஏறிச் சங்கிலிகளை அவிழ்த்தெறிந்தான். விக்கிரமன் வண்டியிலிருந்து குதித்ததும், இரண்டு உயர்ஜாதிக் குதிரைகள் சித்தமாய் நிற்பதைக் கண்டான். "மகாராஜா ! ஏறுங்கள் குதிரை மேல்; ஒரு கணமும் தாமதிப்பதற்கில்லை!" என்றான் பொன்னன்.
 
அத்தியாயம் முப்பத்தினான்கு

"ஆகா! இதென்ன?"

விக்கிரமனும் பொன்னனும் குதிரைகள் மீது தாவி ஏறிக் கொண்டார்கள். "பொன்னா! முண்டாசு கட்டி மீசை வைத்துக் கொண்டிருந்த வண்டிக்காரன் யார்? நீதானே!" என்று குதிரைகள் போய்க் கொண்டிருக்கும்போதே விக்கிரமன் கேட்டான். "ஆமாம், மகாராஜா!" "சிறைக்குள்ளிருந்தபோது நீ என்னை மறந்து விட்டாயாக்கும் என்று நினைத்தேன்." "நான் ஒருவேளை மறந்தாலும், என்னை மறக்க விடாதவர் ஒருவர் இருக்கிறாரே!" "யார் அது?" "வேறு யார்? தங்களை யமன் வாயிலிருந்து மீட்ட தேவிதான்." இதைக் கேட்டதும் விக்கிரமனுடைய உள்ளம் மகிழ்ச்சியினால் துள்ளிற்று. குந்தவியைப் பற்றி மேலும் விசாரிக்க வேண்டுமென்கிற ஆவல் உண்டாயிற்று. ஆனால் சிறிது தயக்கமாகவுமிருந்தது. சற்றுப் பொறுத்து, "எங்கே போகிறோம் இப்போது?" என்றான் விக்கிரமன். "மாமல்லபுரத்துக்கு, மகாராஜா!" "பொன்னா!" "என்ன, மகாராஜா?" "நாளைக் காலைக்குள் மாமல்லபுரம் போய்விட வேண்டும்." "ஆமாம், மகாராஜா! அதனால்தான் ஒரு கணம் கூடத் தாமதிப்பதற்கில்லை என்று நான் சொன்னேன்." "நாளை மத்தியானம் வரையில் அங்கே கப்பல் காத்துக் கொண்டிருக்கும்."

"அதற்குள் நாம் போய்விடலாம், மகாராஜா!" விக்கிரமன் சற்றுப் பொறுத்து மறுபடியும், "தேவி எங்கே இருக்கிறார், பொன்னா! அவரிடம் கடைசியாக ஒரு தடவை விடை பெற்றுக்கொண்டு கிளம்பியிருந்தால், எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும்!" என்றான். "அது முடியாது, மகாராஜா!" "எது முடியாது?" "தேவியிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்புவது." "ஆமாம்; முடியாதுதான்! இனி உறையூருக்கு மறுபடியும் எப்படிப் போக முடியும்?" "தேவி உறையூரில் இல்லை, மகாராஜா!" "தேவி உறையூரில் இல்லையா? பின் எங்கே?" "மாமல்லபுரத்தில்!" "ஆ!" என்றான் விக்கிரமன். சில நாட்களாகச் சிறைப்பட்டிருந்த பிறகு விடுதலையடைந்த உற்சாகம், குளிர்ந்த இரவு நேரத்தில் குதிரைமீது செல்லும் கிளர்ச்சி, இவற்றுடன், 'குந்தவி மாமல்லபுரத்தில் இருக்கிறாள்' என்னும் செய்தியும் சேர்ந்து அவனுக்கு எங்கேயோ ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று.

"அப்படியானால் அவரிடம் விடைபெற முடியாது என்று சொன்னாயே, ஏன்? பொன்னா! ஒரு கண நேரமாவது அவரை நான் அவசியம் பார்க்க வேண்டும். பார்த்து நன்றி செலுத்த வேண்டும். அதோடு என் தாயாரைக் கண்டுபிடித்துப் பாதுகாக்கும் பொறுப்பையும் அவரிடம் ஒப்புவிக்க வேண்டும்." "அதுதான் முடியாது!" என்றான் பொன்னன். "ஏன் அவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறாய்?" "தேவியின் உறுதி எனக்கும் தெரிந்திருப்பதினாலே தான். தங்களுக்கு விடை கொடுத்து அனுப்பும் உத்தேசம் அவருக்குக் கிடையாது. தங்களோடு அவரும் புறப்படச் சித்தமாயிருக்கிறார்." "ஆகா! நிஜமாகவா? - இவ்வளவு முக்கியமான செய்தியை முன்னமே எனக்கு ஏன் சொல்லவில்லை?" "இப்போதுகூட நான் சொல்லியிருக்கக்கூடாது. தாங்கள் கப்பல் ஏறிய பிறகு தங்களை அதிசயப்படுத்த வேண்டும் என்று தேவி உத்தேசித்திருந்தார் அவசரப்பட்டுச் சொல்லி விட்டேன்." விக்கிரமன் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். திடீரென்று, "அதோ பாருங்கள் மகாராஜா!" என்று பொன்னன் கூறியதும் விக்கிரமன் சிறிது திடுக்கிட்டுப் பார்த்தான். சாலையில் ஒரு பக்கத்து மரத்தடியில் பத்துப் பன்னிரண்டு பேர் கும்பலாக நின்றார்கள். அவர்களில் ஒருவன் தீவர்த்தி வைத்துக் கொண்டிருந்தான். தீவர்த்தி வெளிச்சத்தில் அவர்களுடைய உருவங்கள் கோரமான காட்சி அளித்தன. அவர்களுடைய கழுத்தில் கபால மாலைகள் தொங்கின. அவர்களுடைய கைகளில் கத்திகள் மின்னின. நெற்றியில் செஞ்சந்தனமும் குங்குமமும் அப்பிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் நின்ற இடத்தைக் குதிரைகள் தாண்டிய போது ஒரு கணம் விக்கிரமனுக்கு உடம்பு நடுங்கிற்று. அவர்களைக் கடந்து சிறிது தூரம் சென்றது, "அப்பா! என்ன கோரம்" என்றான் விக்கிரமன். "மகாராஜா! தங்களுக்காகத்தான் இங்கே இவர்கள் காத்திருக்கிறார்கள். இவர்களிடம் தங்களை ஒப்பிவித்துவிடும்படிதான் மாரப்ப பூபதி கடைசியாகத் தம் ஆட்களுக்குக் கட்டளையிட்டார். நான் இவர்களை முந்திக் கொண்டேன். தாங்கள் குதிரை மேல் இவ்விதம் தனியாகப் போவீர்கள் என்று இவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இன்னும் ரொம்ப நேரம் காத்திருப்பார்கள். பிறகு கபால பைரவரிடம் போய்த் தாங்கள் வரவில்லையென்று தெரிவிப்பார்கள். இன்று கபால பைரவருக்கு மாரப்பபூபதி மேல் பிரமாதமான கோபம் வரப்போகிறது!" என்றான் பொன்னன்.

"பொன்னா! சக்கரவர்த்தியின் சிரஸாக்கினை, கபாலிகர்கள் பலி இந்த இரண்டுவித ஆபத்துக் களிலிருந்துமல்லவா என்னை நீ தப்புவித்திருக்கிறாய்? முன்னே காட்டாற்றில் போனவனை எடுத்து உயிர் கொடுத்துக் காப்பாற்றினாய். சோழ வம்சத்தின் குலதெய்வம் உண்மையில் நீதான். உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? நாளைய தினம் உன்னைவிட்டுப் பிரிவேன். மறுபடியும் எப்போது காண்பேனோ, என்னவோ?" "லட்சணந்தான்!" என்றான் பொன்னன். "என்ன சொல்கிறாய்?" "என்னை விட்டாவது தாங்கள் பிரியவாவது?" "ஏன் அப்படிச் சொல்கிறாய்?" "இன்னொரு தடவை தங்களைக் கப்பலில் அனுப்பிவிட்டு நான் இங்கே இருப்பேன் என்று நினைக்கிறீர்களா? இங்கே எனக்கு என்ன வேலை? வள்ளி ஏற்கெனவே குந்தவி தேவியுடன் மாமல்லபுரத்தில் இருக்கிறாள். நானும் அவளும் தங்களுடன் வரப்போகிறோம்."

விக்கிரமன் சற்று மௌனமாயிருந்துவிட்டு, "பொன்னா! நீ சொல்வது எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சியளிக்கிறது. நீயும் வள்ளியும் என்னுடன் வந்தால், சோழ நாடே வருகிற மாதிரிதான். ஆனால் , ஒரு விஷயந்தான் என் மனத்தை வருத்திக் கொண்டிருக்கிறது. மகாராணியின் கதி என்ன? அவரை யார் தேடிக் கண்டுபிடிப்பார்கள்? அவருக்கு யார் உன்னைப் பற்றிச் சொல்வார்கள்? - நான் தாய்நாட்டுக்கு வந்ததின் முக்கிய நோக்கம் மகாராணியைப் பார்ப்பதற்கு, அவரைப் பார்க்காமலே திரும்பிப் போகிறேன். அவருக்கு என்னைப் பற்றிச் செய்தி சொல்லவாவது யாரேனும் இருக்க வேண்டாமா!" என்றான். பொன்னனுடைய மனத்திலும் அந்த விஷயம் உறுத்திக் கொண்டிருந்தது. சிவனடியாரிடம் தான் சொன்னபடி ஒன்றுமே செய்யவில்லை. அவர் என்ன ஆனாரோ, என்னவோ? மகாராணியை ஒருவேளை கண்டுபிடித்திருப்பாரோ? பொன்னனுடைய மனத்தில் சமாதானம் இல்லாவிட்டாலும், வெளிப்படையாக, "மகாராணியைப் பற்றித் தாங்கள் கவலைப்பட வேண்டாம். மகாராஜா! அவரைச் சிவனடியார் பாதுகாப்பார். சிவனடியாரால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. மகாசக்தி வாய்ந்தவர்" என்றான்.

"ஆமாம்; அவர் நம்மை மாமல்லபுரத்துக்கருகிலுள்ள சிற்ப வீட்டில் சந்திப்பதாகச் சொன்னாரல்லவா?" "அது இப்போது முடியாத காரியம்; சிவனடியாரைப் பார்க்கத் தங்கினோமானால், கப்பலைப் பிடிக்க முடியாது." "உண்மைதான். ஆனாலும் அன்னையையும் சிவனடியாரையும் பார்க்காமல் போவதுதான் மனத்திற்கு வேதனை அளிக்கிறது" என்றான் விக்கிரமன். அப்போது "ஆகா! இதென்ன?" என்று வியப்புடன் கூவினான் பொன்னன். இதற்குள் அவர்கள் காட்டாற்றைச் சமீபித்து அதன் இக்கரையிலுள்ள மகேந்திர மண்டபத்துக்கருகில் வந்து விட்டார்கள். அந்த மண்டபத்தின் வாசலில் தோன்றிய காட்சிதான் பொன்னனை அவ்விதம் வியந்து கூவச் செய்தது. அங்கே ஏழெட்டு ஆட்கள் ஆயுதபாணிகளாக நின்றார்கள். இரண்டு பேர் கையில் தீவர்த்தி பிடித்துக் கொண்டிருந்தார்கள். மண்டபத்தின் வாசல் ஓரமாக ஒரு பல்லக்கு வைக்கப்பட்டிருந்தது.

"இன்று ராத்திரி என்னவெல்லாமோ ஆச்சரிய சம்பவங்கள் நடைபெறுகின்றன!" என்று பொன்னன் முணுமுணுத்தான். "இந்த வேளையில் இங்கே யார், பொன்னா?" என்றான் விக்கிரமன். "தெரியவில்லை, மகாராஜா!" "இவர்கள் கபாலிகர்கள் இல்லை, நிச்சயம். வேறு யாராயிருக்கலாம்?" "ஒரு வேளை குந்தவி தேவிதான் நமக்கு உதவிக்காக இன்னும் சில ஆட்களை அனுப்பியிருக்கிறாரோ, என்னவோ? ஆனால் பல்லக்கு என்னத்திற்கு?" இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே மகேந்திர மண்டபத்தின் வாசல் வந்துவிட்டது. குதிரைகளை இருவரும் நிறுத்தினார்கள். அங்கு நின்ற ஆட்களில் ஒருவனை எங்கேயோ பார்த்ததாகப் பொன்னனுக்கு நினைவு வந்தது. எங்கே பார்த்திருக்கிறோம்? - ஆகா! திருச்செங்காட்டாங்குடியில்! பரஞ்சோதி அடிகளின் ஆள் குமரப்பன் இவன். அந்த மனிதனும் பொன்னன் முகத்தைப் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டான். "ஓ! பொன்னனா? என்று அவன் ஆச்சரியத்துடன் கூறி, "பொன்னா! சமாசாரம் தெரியுமா? உறையூர் மகாராணி அகப்பட்டு விட்டார்! இதோ இந்த மண்டபத்துக்குள்ளே இருக்கிறார். உன்னைப் பற்றிக்கூட விசாரித்தார்" என்றான்.



அத்தியாயம் முப்பத்தைந்து

தாயும் மகனும்

"மகாராணி அகப்பட்டுவிட்டார்" என்று வார்த்தைகளைக் கேட்டதும் விக்கிரமனுக்கும் பொன்னனுக்கும் உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிற்று. இருவரும் குதிரை மேலிருந்து கீழே குதித்தார்கள். அப்போது உள்ளேயிருந்து, "குமாரப்பா! யார் அங்கே? பொன்னன் குரல் மாதிரி இருக்கிறதே!" என்று ஒரு பேச்சுக்குரல் கேட்டது. அது மகாராணி அருள்மொழி தேவியின் குரல். "அம்மா!" என்று அலறிக்கொண்டு விக்கிரமன் மகேந்திர மண்டபத்துக்குள் நுழைந்தான். பொன்னனும் பின்னோடு சென்றான். அப்போது அந்த இருளடைந்த மண்டபத்துக்குள்ளேயிருந்து ஒரு பெண் உருவம் வெளியே வந்தது. அது அருள்மொழி ராணியின் உருவந்தான். ஆனால், எவ்வளவு மாறுதல்? விக்கிரமன் கடைசியாக அவரைப் பார்த்தபோது இன்னும் யெளவனத்தின் சோபை அவரை விட்டுப் போகவில்லை. இப்போதோ முதுமைப் பருவம் அவரை வந்தடைந்துவிட்டது. மூன்று வருஷத்துக்குள் முப்பது வயது அதிகமானவராகக் காணப்பட்டார்.

விக்கிரமன் ஒரே தாவலில் அவரை அடைந்து சாஷ்டாங்கமாய்க் கீழே விழுந்து அவருடைய பாதங்களைப் பற்றிக் கொண்டான். அருள்மொழி ராணி கீழே உட்கார்ந்து விக்கிரமனுடைய தலையைத் தூக்கித் தன் மடிமீது வைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். விக்கிரமனைப் பின்தொடர்ந்து மண்டபத்துக்குள் நுழைந்த பொன்னன் மேற்படி காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். தற்செயலாக அவனுடைய பார்வை மண்டபத்தின் ஒரு பக்கத்தில் கட்டுண்டு கிடந்த உருவத்தின் மேல் விழுந்தது; மங்கலான தீவர்த்தியின் வெளிச்சத்தில் அது குள்ளனுடைய உருவம் என்பதைப் பொன்னன் கண்டான். பொன்னனுடைய பார்வை குள்ளன்மீது விழுந்ததும் குள்ளன், "ஹீஹீஹீ" என்று சிரித்தான். அந்தச் சிரிப்பைக் கேட்டு விக்கிரமனும் அவனைப் பார்த்தான். திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து, "பொன்னா!" என்றான். "ஆம், மகாராஜா! மாமல்லபுரத்திலிருந்து தங்களுக்கு வழிகாட்டி வந்த சித்திரக்குள்ளன்தான் இவன்!" என்றான். குள்ளன் மறுபடியும் "ஹீஹீஹீ" என்று சிரித்தான்.

அருள்மொழி ராணி எல்லோரையும் மாறி மாறிப் பார்த்தாள். யாரை என்ன கேட்பது என்று தெரியாமல் திகைப்பவளாகக் காணப்பட்டாள். கடைசியில் "பொன்னனைப் பார்த்து, பொன்னா எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டது போலிருக்கிறது. அந்த மலைக்குகையில் எத்தனை நாள் இருந்தேன் என்பதே தெரியாது. கடைசியில் அருவியில் விழுந்து உயிரை விடலாம் என்று எத்தனித்தபோது சிவனடியார் வந்து தடுத்துக் காப்பாற்றினார். 'உன் மகன் திரும்பி வந்திருக்கிறான், அவனை எப்படியும் பார்க்கலாம்' என்று தைரியம் கூறினார். பொன்னா, காட்டாற்று வெள்ளத்திலிருந்து விக்கிரமனை நீ காப்பாற்றினாயாமே?" என்று கேட்டாள்.

அப்போது விக்கிரமன், "வெள்ளத்திலிருந்து காப்பாற்றியதுதானா? சக்கரவர்த்தியின் சிரசாக்ஞையிலிருந்து - காளிக்குப் பலியாவதிலிருந்து - இன்னும் எவ்வளவோ விதத்தில் பொன்னன் என்னைக் காப்பாற்றினான்" என்றான். "காளிக்குப் பலியா?" என்று சொல்லிக் கொண்டு அருள்மொழி நடுநடுங்கினாள். குள்ளன் மறுபடியும் "ஹீஹீஹீ" என்று பயங்கரமாய்ச் சிரித்தான். "பலி! பலி! இன்று ராத்திரி ஒரு பெரிய பலி - விழப்போகிறது! காளியின் தாகம் அடங்கப் போகிறது!" என்றான். எல்லோரும் அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். "இன்று அர்த்த ராத்திரியில் சிவனடியார் பலியாகப் போகிறார்! மகாபத்திர காளியின் இராஜ்யம் ஆரம்பமாகப் போகிறது! அப்புறம் ஹா ஹா ஹா!.. அப்புறம் ... மண்டை ஓட்டுக்குப் பஞ்சமே இராது!" என்றான் குள்ளன். விக்கிரமன் அப்போது துள்ளி எழுந்து, "பொன்னா! இவன் என்ன உளறுகிறான்? சிவனடியாரைப் பற்றி...." என்றான். "ஹிஹிஹி! உளறவில்லை, உண்மையைத்தான் சொல்கிறேன். அந்தக் கபடச் சாமியாரை இத்தனை நேரம் காலையும் கையையும் கட்டிப் பலிபீடத்தில் போட்டிருப்பார்கள். நடுநிசி ஆச்சோ, இல்லையோ, கத்தி கழுத்திலே விழும்" என்றான்.

அப்போது அருள்மொழித் தேவி விக்கிரமனைப் பார்த்து, "குழந்தாய்! இவன் முன்னேயிருந்து இப்படித்தான் சொல்லி என்னை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறான். ஐந்தாறு நாளைக்கு முன்னால் நான் குகையிலிருந்து தப்பி அருவியில் விழப்போன போது சிவனடியார் தோன்றி, சீக்கிரத்தில் என்னை மீட்டுக் கொண்டுபோக ஆட்கள் வருவார்கள் என்று தெரிவித்தார். அந்தப்படியே இவர்கள் வந்து என்னை மீட்டுக் கொண்டு வந்தார்கள். வழியில் மறைந்து நின்ற இந்தக் குள்ளனையும், பிடித்துக் கொண்டு வந்தார்கள். இங்கு வந்து சேர்ந்தது முதல் இவன் இன்று ராத்திரி சிவனடியாரைக் கபாலிகர்கள் பலிகொடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஐயோ! எப்பேர்ப்பட்ட மகான்! நமக்கு எத்தனை ஒத்தாசை செய்திருக்கிறார்....! அவருக்கா இந்தப் பயங்கரமான கதி!" என்று அலறினாள். விக்கிரமன் பொன்னனைப் பார்த்து, "பொன்னா! நீ என்ன சொல்கிறாய்? இந்தக் கொடும் பாதகத்தைத் தடுக்காவிட்டால் நாம் இருந்து என்ன பிரயோஜனம்?" என்றான். "அதெப்படி முடியும், மகாராஜா! உங்கள் நிலைமையை மறந்து பேசுகிறீர்களே! நாளைப் பொழுது விடிவதற்குள் நாம் மாமல்லபுரம் போய்ச் சேராமற்போனால்..." சேராமற்போனால் என்ன? கப்பல் போய்விடும், அவ்வளவுதானே?"

அப்போது பொன்னன் அருள்மொழி ராணியைப் பார்த்து, "அம்மா, இவரைப் பெரும் அபாயம் சூழ்ந்திருக்கிறது. தேசப் பிரஷ்டமானவர் திரும்பி வருவதற்குத் தண்டனை என்னவென்று தங்களுக்குத் தெரியாதா? இவர் இங்கே வந்திருப்பது மாரப்ப பூபதிக்குத் தெரிந்து காஞ்சிச் சக்கரவர்த்திக்கும் தெரியப்படுத்தி விட்டார். நாளைக் காலைக்குள் இவர் மாமல்லபுரம் போய்க் கப்பலில் ஏறியாக வேண்டும். இல்லாவிட்டால் தப்புவது அரிது. இப்போது சிவனடியாரைக் காப்பாற்றுவதற்காகப் போனால், பிறகு இவருடைய உயிருக்கே ஆபத்துதான். நீங்களே சொல்லுங்கள் இவர் என்ன செய்யவேணுமென்று?" என்றான். அருள்மொழி ராணி பெருந் திகைப்புக்குள்ளானாள். விக்கிரமன் அன்னையைப் பார்த்து, "அம்மா! பார்த்திப மகாராஜாவின் வீரபத்தினி நீ! இந்த நிலைமையில் நான் என்ன செய்யவேண்டும், சொல்! நமக்குப் பரோபகாரம் செய்திருக்கும் மகானுக்கு ஆபத்து வந்திருக்கும்போது, என்னுடைய உயிருக்குப் பயந்து ஓடுவதா? என் தந்தை உயிரோடிருந்தால் இப்படி நான் செய்வதை விரும்புவாரா?" என்றான்.

"சுவரை வைத்துக் கொண்டு தான் சித்திரம் எழுத வேண்டும். இவர் பிழைத்திராவிட்டால் பார்த்திப மகாராஜாவின் கனவுகளை நிறைவேற்றுவது எப்படி?" என்றான் பொன்னன். அருள்மொழி ராணி இரண்டு பேரையும் மாறி மாறிப் பார்த்தாள். கடைசியில், பொன்னனைப் பார்த்து, "பொன்னா! என்னைக் கல்நெஞ்சமுடையவள், பிள்ளையிடம் பாசமில்லாதவள் என்று ஒருவேளை நினைப்பாய். ஆனாலும் என் மனத்திலுள்ளதைச் சொல்கிறேன். நமக்கு எவ்வளவோ உபகாரம் செய்திருக்கும் ஒருவருக்கு ஆபத்து வந்திருக்கும்போது என் பிள்ளை உயிருக்குப் பயந்து ஓடினான் என்ற பேச்சைக் கேட்க நான் விரும்பவில்லை!" என்றாள். உடனே விக்கிரமன், தாயாரின் பாதங்களில் நமஸ்கரித்து, எழுந்து, "அம்மா! நீதான் வீரத்தாய்! பார்த்திப மகாராஜாவுக்குரிய வீர பத்தினி!" எனக் குதூகலத்துடன் உரைத்தான். பிறகு பொன்னனைப் பார்த்து, "கிளம்பு, பொன்னா! இன்னும் என்ன யோசனை?" என்றான். "எங்கே கிளம்பிப் போவது? பலி எங்கே நடக்கிறதென்று யாருக்குத் தெரியும்?" என்றான் பொன்னன். "ஹீஹீஹீ! நான் வழி காட்டுகிறேன்; என்னைக் கட்டவிழ்த்து விடுங்கள்" என்று சித்திரக் குள்ளன் குரல் கேட்டது. குள்ளனுடைய கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. அவன் கையில் ஒரு தீவர்த்தியைக் கொடுத்தார்கள். விக்கிரமனும் பொன்னனும் குதிரைகள் மேல் ஏறிக் கொண்டார்கள். குள்ளன் கையில் தீவர்த்தியுடன் மேற்கு நோக்கிக் காட்டு வழியில் விரைந்து செல்ல, விக்கிரமனும் பொன்னனும் அவனைத் தொடர்ந்து பின்னால் சென்றார்கள்.
 
அத்தியாயம் முப்பத்தாறு

பலிபீடம்

காட்டாற்றங்கரையோடு மேற்கு நோக்கி இரண்டு நாழிகை வழி தூரம் போனதும் குள்ளன் தென்புறமாகத் திரும்பி அடர்ந்த காட்டுக்குள் புகுந்து சென்றான். காட்டைத் தாண்டியதும் அப்பால் ஒரு பெரிய மேடு இருந்தது. அந்த மேட்டின் மேல் குள்ளன் வெகு லாவகமாக ஏறினான். குதிரைகள் ஏறுவதற்குக் கொஞ்சம் சிரமப்பட்டன. மேட்டின் மேல் ஏறியதும், அது ஒரு ஏரிக்கரை என்று தெரிந்தது. "அதோ!" என்று குள்ளன் சுட்டிக் காட்டிய இடத்தை விக்கிரமனும் பொன்னனும் நோக்கினார்கள். மொட்டை மொட்டையான மலைக்குன்றுகளும், அவற்றின் அடிவாரத்தில் அடர்த்தியாக வளர்ந்திருந்த குட்டையான மரங்களும் நூற்றுக்கணக்கான தீவர்த்திகளின் வெளிச்சத்தில் அரைகுறையாகத் தெரிந்தன. அந்த மலையடிவாரக் காட்டில் நடமாடிக் கொண்டிருந்த உருவங்கள் மனிதர்களாய்த்தானிருக்க வேண்டுமென்றாலும் தூரத்திலிருந்து பார்க்கும்போது பேய் பிசாசுகள் தான் நடமாடுகின்றனவோ என்று எண்ணும்படியிருந்தது. பயங்கரத்தை அதிகமாக்குவதற்கு அந்த இடத்திலிருந்து தாரை தப்பட்டைகளின் முழக்கம், உடுக்கு அடிக்கும் சத்தம் - இவையெல்லாம் கலந்து வந்து கொண்டிருந்தன.

விக்கிரமன், பொன்னன் இருவருக்குமே உள்ளுக்குள் திகிலாய்த்தானிருந்தது. ஆனாலும் அவர்கள் திகிலை வெளிக்குக் காட்டாமல் குள்ளனைப் பின்பற்றி ஏரிக்கரையோடு சென்றார்கள். குள்ளனுடைய நடை வேகம் இப்போது இன்னும் அதிகமாயிற்று. அவன் ஏரிக் கரையோடு சற்றுத் தூரம் போய் ஜலம் வறண்டிருந்த இடத்தில் இறங்கி, குறுக்கே ஏரியைக் கடந்து செல்லலானான். அவனைப் பின் தொடர்ந்து விக்கிரமனும் பொன்னனும் குதிரைகளைச் செலுத்தினார்கள். குதிரைகளும் பீதி அடைந்திருந்தன என்பது அவற்றின் உடல் நடுக்கத்திலிருந்து தெரிய வந்தது. இன்னொரு கால் நாழிகைக்கெல்லாம் அவர்கள் குன்றின் அடிவாரத்துக் காட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே குதிரைகள் நடுக்கம் அதிகமானபடியால் விக்கிரமனும் பொன்னனும் குதிரைகள் மீதிருந்து இறங்கி அவற்றை மரத்தில் கட்டினார்கள். பிறகு காட்டுக்குள் பிரவேசித்தார்கள்.

தீவர்த்திகளின் வெளிச்சத்தில் ஆங்காங்கே ஜனங்கள் ஆவேசம் வந்ததுபோல் ஆடுவதையும் சிலர் மஞ்சள் வஸ்திரம் தரித்துக் கண் மூடித் தியானத்தில் இருப்பதையும், சிலர் அடுப்பு மூட்டிப் பொங்கல் வைப்பதையும், இன்னும் சிலர் கத்திகளைப் பாறைகளில் தீட்டிக் கொண்டிருப்பதையும், சிலர் உடுக்கு அடிப்பதையும் பார்த்துக் கொண்டு போனார்கள். திடீரென்று மரங்கள் இல்லாத வெட்டவெளி தென்பட்டது. அந்த வெட்டவெளியில் வலது புறத்தில் ஒரு மொட்டைக் குன்று நின்றது. அதில் பயங்கரமான பெரிய காளியின் உருவம் செதுக்கப்பட்டு, அதன்மேல் பளபளப்பான வர்ணங்கள் பூசப்பட்டிருந்தன. காளியின் கண்கள் உருட்டி விழித்துப் பார்ப்பது போலவே தோற்றமளித்தன. அந்த உருவத்துக்குப் பக்கத்தில் சிலர் கும்பலாக நின்றார்கள். அவர்களுக்கு நடு மத்தியில் எல்லாரையும் விட உயர்ந்த ஆகிருதியுடனும், தலையில் செம்பட்டை மயிருடனும், கழுத்தில் கபால மாலையுடனும், நெற்றியில் செஞ்சந்தனமும் குங்குமமும் அப்பிக் கொண்டு, கபால பைரவர் நின்றார். அவருக்குப் பின்னால் ஒருவன் நின்று உடுக்கை அடித்துக் கொண்டிருந்தான். கபால பைரவருடைய கண்கள் அப்போது மூடியிருந்தன. அவருடைய வாய் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அவருடம்பு லேசாக முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தது.

மகாக் கபால பைரவர் நின்ற குன்றின் அடிவாரத்துக்கு எதிரே கொஞ்ச தூரத்தில் ஒரு சிறு பாறை இருந்தது. இயற்கையாகவே அது பலி பீடம்போல் அமைந்திருந்தது. அந்தப் பலி பீடத்தின்மேல் சிவனடியார் கையும் காலும் உடம்பும் கயிறுகளால் கட்டப்பட்டுக் கிடந்தார். அவருடைய கண்கள் நன்றாகத் திறந்திருந்தன. அங்குமிங்கும் அவருடைய கூரிய கண்கள் சுழன்று சுழன்று பார்த்துக் கொண்டிருந்தன. பலி பீடத்துக்குப் பக்கத்தில் ஒரு ராட்சத உருவம் கையிலே பிரம்மாண்டமான கத்தியுடன் ஆயத்தமாய் நின்றது. மகா கபால பைரவர் கண்ணைத் திறந்து பார்த்து ஆக்ஞை இடவேண்டியதுதான். உடனே சிவனடியாரின் கழுத்தில் கத்தி விழுந்துவிடச் சித்தமாயிருந்தது! மேலே விவரித்த காட்சியையெல்லாம் விக்கிரமன் ஒரு நொடிப் பொழுதில் பார்த்துக் கொண்டான். பின்னர், ஒரு கணங்கூட அவன் தாமதிக்கவில்லை. கையில் கத்தியை எடுத்து வீசிக் கொண்டு ஒரே பாய்ச்சலில் பலி பீடத்துக்கருகில் சென்றான். அந்த ராட்சத உருவத்தின் கையிலிருந்த கத்தியைத் தன் கத்தியினால் ஓங்கி அடிக்கவும், அது தூரத்தில் போய் விழுந்தது. உடனே, சிவனடியாரின் பக்கத்திலே வந்து நின்று கொண்டான். தன்னைப் பின் தொடர்ந்து வந்திருந்த பொன்னனைப் பார்த்து, "பொன்னா! ஏன் நிற்கிறாய்? கட்டுக்களை உடனே அவிழ்த்து விடு!" என்றான்.

இவ்வளவும் கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் நடந்து விட்டது. சுற்றிலும் நின்றவர்கள் எல்லோரும், "ஹா! ஹா!" என்று கூச்சலிட்டதைக் கேட்டு கபால பைரவர் கண்விழித்துப் பார்த்தார். நிலைமை இன்னதென்று தெரிந்து கொண்டார். நிதானமாக நடந்து பலிபீடத்துக்கு அருகில் வந்து விக்கிரமனை உற்றுப் பார்த்தார். "ஹா ஹா ஹா!" என்று அவர் நகைத்த ஒலி குன்றுகளும் பாறைகளும் அடர்ந்த அந்த வனாந்திரப் பிரதேசமெல்லாம் பரவி எதிரொலி செய்தது. அதைக் கேட்பவர்களுக்கெல்லாம் மயிர்க் கூச்சு உண்டாயிற்று. இதற்குள் என்னவோ மிகவும் நடக்கிறது என்று அறிந்து நாலாபக்கத்திலிருந்தும் ஜனங்கள் ஓடிவந்து பலி பீடத்தைச் சூழ ஆரம்பித்தார்கள். அதைக் கண்ட மகாக் கபால பைரவர் தமது ஒற்றைக் கையைத் தூக்கி, "ஹும்!" என்று கர்ஜனை செய்தார். அவ்வளவுதான் எல்லோரும் சட்டென்று விலகிச் சென்று சற்று தூரத்திலேயே நின்றார்கள். கீழே விழுந்த கத்தியை எடுத்துக் கொண்டு வந்த ராட்சதனும் அந்த ஹுங்காரத்துக்குக் கட்டுபட்டுத் தூரத்தில் நின்றான். பொன்னனும் நின்ற இடத்திலேயே செயலிழந்து நின்றான்.

மகாக் கபால பைரவர் விக்கிரமனை உற்றுப் பார்த்த வண்ணம் கூறினார் :- "பிள்ளாய்! நீ பார்த்திப சோழனின் மகன் விக்கிரமன் அல்லவா? தக்க சமயத்தில் நீ வந்து சேர்வாய் என்று காளிமாதா அருளியது உண்மையாயிற்று, மாதாவின் மகிமையே மகிமை!" காந்த சக்தி பொருந்திய அவருடைய சிவந்த கண்களின் பார்வையிலிருந்து விலகிக் கொள்ள முடியாதவனாய் விக்கிரமன் பிரமித்து நின்றான். "பிள்ளாய்! உன்னைத் தேடிக் கொண்டு நான் மாமல்லபுரத்துக்கு வந்தேன். அதற்குள் அந்தப் பித்தன் மாரப்பன் தலையிட்டுக் காரியத்தைக் கெடுத்துவிட்டான். ஆனாலும் இன்றிரவு நீ இங்கு எப்படியும் வருவாய் என்று எதிர்பார்த்தேன்!" மந்திரத்தினால் கட்டுண்ட நாக சர்ப்பத்தின் நிலைமையிலிருந்த விக்கிரமன், விம்முகின்ற குரலில், "நீர் யார்? எதற்காக என்னை எதிர்பார்த்தீர்?" என்றான். "எதற்காகவா? இன்றிரவு இந்தத் தக்ஷிண பாரத தேசத்தில் காளிமாதாவின் சாம்ராஜ்யம் ஸ்தாபிதமாகப் போகிறது. இந்த சாம்ராஜ்யத்திற்கு உனக்கு இளவரசுப் பட்டம் கட்டவேண்டுமென்று மாதாவின் கட்டளை!" என்றார் கபால பைரவர். அப்போது எங்கிருந்தோ 'க்ளுக்' என்று பரிகாசச் சிரிப்பின் ஒலி எழுந்தது. கபால பைரவரும் விக்கிரமனும் உள்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். ஆனால் சிரித்தது யார் என்பதைக் கண்டுபிடிக்க யாதொரு வழியும் தென்படவில்லை.

விக்கிரமனை அத்தனை நேரமும் கட்டியிருந்த மந்திர பாசமானது மேற்படி சிரிப்பின் ஒலியினால் அறுபட்டது. அவன் சிவனடியாரை ஒருமுறை பார்த்துவிட்டுத் திரும்பிக் கபால பைரவரை நேருக்கு நேர் நோக்கினான்: "நீர் சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. எனக்கு இளவரசுப் பட்டம் கட்டப் போவதாகச் சொல்கிறீர். அது உண்மையானால், முதலில் நான் செய்யப்போகும் காரியத்துக்குக் குறுக்கே நிற்கவேண்டாம். இதோ இந்தப் பலிபீடத்தில் கட்டுண்டு கிடக்கும் பெரியார் எங்கள் குலத்தின் நண்பர். எனக்கும் என் அன்னைக்கும் எவ்வளவோ பரோபகாரம் செய்திருக்கிறார். அவரை விடுதலை செய்வது என் கடமை. என் கையில் கத்தியும் என் உடம்பில் உயிரும் இருக்கும் வரையில் அவரைப் பலியிடுவதற்கு நான் விடமாட்டேன்!" என்று சொல்லி விக்கிரமன் பலிபீடத்தை அணுகி, சிவனடியாரின் கட்டுக்களை வெட்டிவிடயத்தனித்தான். "நில்...!" என்று பெரிய கர்ஜனை செய்தார் கபால பைரவர். அஞ்சா நெஞ்சங் கொண்ட விக்கிரமனைக்கூட அந்தக் கர்ஜனை சிறிது கலங்கச் செய்துவிட்டது. அவன் துணுக்குற்று ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றான். சிவனடியாரின் கட்டுக்களை வெட்டுவதற்காக அவன் நீட்டிய கத்தி நீட்டியபடியே இருந்தது.

கபால பைரவர் மறுபடியும் உரத்த குரலில், "பிள்ளாய் விக்கிரமா! இந்தப் போலிச் சிவனடியார் - இந்த வஞ்சக வேஷதாரி - இந்தப் பொய் ஜடாமகுடதாரி யார் என்று அறிந்தால், இவ்விதம் சொல்லமாட்டாய்! இவரைக் காப்பாற்றுவதற்கு இவ்வளவு முனைந்து நிற்கமாட்டாய்!" என்றார். அவருடைய குரலில் தொனித்த ஆத்திரமும் அழுத்தமும் விக்கிரமனைத் திகைப்படையச் செய்தன. சிவனடியார் பல்லவ ராஜ்யத்தின் ஒற்றர் தலைவன் என்று தான் முன்னமே சந்தேகித்ததும் அவனுக்கு நினைவு வந்தது. கபால பைரவர் மீண்டும், "இந்த வேஷதாரியையே கேள், "நீ யார்?' என்று; தைரியமிருந்தால் சொல்லட்டும்!" என்று அடித் தொண்டையினால் கர்ஜனை செய்தார். விக்கிரமன் சிவனடியாரைப் பார்த்தான். அவருடைய முகத்தில் புன்னகை தவழ்வதைக் கண்டான். அதே சமயத்தில், "விக்கிரமா! கபால மாலையணிந்த இந்த வஞ்சக வேஷதாரி யார் என்று முதலில் கேள்; தைரியமிருந்தால் சொல்லட்டும்!" என்று இடிமுழக்கம் போன்ற ஒரு குரல் கேட்டது. இவ்வாறு கேட்டுக் கொண்டு, பக்கத்திலிருந்த பாறையின் மறைவிலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டது. அங்கிருந்தவர்கள் அத்தனை பேருடைய கண்களும் அந்த உருவத்தின் மேல் விழுந்தன. தீவர்த்தி வெளிச்சம் அந்த முகத்தில் விழுந்தபோது, "ஆ!" என்ற வியப்பொலி ஏககாலத்தில் அநேகருடைய வாயிலிருந்து எழுந்தது. விபூதி ருத்திராட்சமணிந்து, முகத்தில் ஞான ஒளி வீசித் தோன்றிய அப்பெரியாரைப் பார்த்ததும் விக்கிரமனுக்கு என்றுமில்லாத பயபக்தி உண்டாயிற்று. வந்தவர் வேறு யாருமில்லை; பல்லவ சாம்ராஜ்யத்தின் பழைய சேனாதிபதியும், வாதாபி கொண்ட மகாவீரருமான சிறுத் தொண்டர்தான்
 

New Threads

Top Bottom