Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பொய்மான் கரடு

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
10. பத்தாம் அத்தியாயம்



செம்பா மிகவும் கெட்டிக்காரப் பெண். அந்த நிலைமையில் என்ன செய்ய வேண்டும் என்பதை உடனே முடிவுசெய்து கொண்டாள். வட கொரியர்களின் அறுபது டன் டாங்கிகளைக் கண்டு அமெரிக்கர்கள் செய்த காரியத்தையே அவளும் செய்யத் தீர்மானித்தாள். இச் சமயம் அவசரமாகப் பின் வாங்குவதுதான் முறை. வேறு வழியில்லை! செங்கோடன் காதில், "ஜாக்கிரதை நான் சொன்னதையெல்லாம் நினைவு வைத்துக்கொள்...." என்று சொல்லி விட்டுப் பின்புறம் திரும்பிச் சென்று வைக்கோற் கட்டின் பின்னால் மறைந்தாள்.



வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரனுடைய கவனத்தை நாயின் குரைப்புச் சத்தம் செங்கோடன் நின்ற பக்கம் திருப்பியது. சற்றுத் தூரத்துக்கு அப்பால் ஒரு பெண் உருவத்தின் நிழல் ஒரு கணம் தெரிந்து உடனே மறைந்தது.



போலீஸ்காரன் தலைப்பாகையைக் கையில் எடுத்துத் தலையைச் சொறிந்து கொண்டான். தொண்டையை ஒரு தடவை பலமாகக் கனைத்தான். "சீ ராஸ்கல்! சும்மா இரு! உன் நாய்க் குணத்தைக் காட்டுகிறாயா? திருடனைக் கண்டால் பயந்து ஓடுவாய்! நம்ம ராஜா செங்கோடக் கவுண்டரைப் பார்த்துவிட்டுக் குரைக்கிறாயே" என்றான். நாயும் அவன் சொன்னதைத் தெரிந்து கொண்டது போல் குரைப்பதை நிறுத்தியது. போலீஸ்காரன் செங்கோடனை நெருங்கிக் கொண்டே, "நம்முடைய போலீஸ் டிபார்ட்மென்டிலும் நீ செய்கிற மாதிரிதான் வேலை செய்கிறார்கள். உன்னை எஸ்.பி.யாகவோ, டி.எஸ்.பி.யாகவோ போடவேண்டும்!" என்று முணு முணுத்தான். தன்னுடைய சாமர்த்தியத்தைப் போலீஸ் இலாக்கா சரியாகத் தெரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குறை அவனுடைய மனத்தில் நீண்ட காலமாகக் குடி கொண்டிருந்தது.



செங்கோடன் தான் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். போலீஸ்காரன் அவன் அருகில் வந்ததும், "யார் அது? செங்கோடக் கவுண்டன் போல் இருக்கிறதே!" என்றான்.



சில நாளாகவே செங்கோடனுக்குப் பழைய சங்கோசம், பயம் எல்லாம் நீங்கிப் புதிய தைரியம் பிறந்திருந்தது.



"உங்களைப் பார்த்தால் போலீஸ்காரர்போல் இருக்கிறதே?" என்றான்.



"அடே அப்பா! கெட்டிக்காரனாயிருக்கிறாயே? நான் போலீஸ்காரன் என்று எப்படிக் கண்டுபிடித்தாய்?"



"அது என்ன கஷ்டம்? உங்கள் உடுப்பைப் பார்த்தால் தெரிந்து போகிறது?"



"உடுப்பைப் பார்த்து நம்பிவிடக்கூடாது, அப்பனே! இந்தக் காலத்தில் திருடன்கூடப் போலீஸ்காரன் உடுப்பைப் போட்டுக்கொண்டு வந்துவிடுகிறான்!"



"திருடனா? திருடன் இங்கு எதற்காக வருகிறான்?"



"ஏதாவது அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு போகிறதற்குத்தான்."



"இங்கே சுருட்டுவதற்கு ஒன்றுமில்லையே! கிழிந்த கோரைப்பாய் ஒன்றுதான் இருக்கிறது!"



"என்ன, தம்பி, இப்படி ஒரே புளுகாய்ப் புளுகுகிறாய்? நீ நிறையப் பணம் சேர்த்து எங்கேயோ புதைத்து வைத்து இருக்கிறாய் என்று ஊரெல்லாம் சொல்லுகிறார்களே?"



செங்கோடன் திடுக்கிட்டுப் போனான். இதே மாதிரி வேறு யாரோ தன்னைக் கேட்டார்களே, சமீபத்தில்; யார் கேட்டார்கள்? அதற்குத் தான் சொன்ன பதில் என்ன?- இதை நினைத்து நினைத்துப் பார்த்து ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றான். ஆனால் ஞாபகத்துக்கு வரவில்லை.



"என்ன கவுண்டரே! ஏன் விழித்துக்கொண்டு நிற்கிறீர்? ஊரார் சொல்லுவது உண்மைதான்போல் இருக்கிறது. எத்தனை ரூபாய் புதைத்து வைத்திருக்கிறீர்?"



"அதெல்லாம் சுத்தப் பொய்! ஊராருக்கு என்ன? வாயில் வந்ததைச் சொல்லுவார்கள். ஏழைக் குடியானவனிடம் அவ்வளவு ரூபாய் ஏது? புதைத்து வைப்பதற்கு? யாரோ கதை கட்டிவிட்டிருக்கிறார்கள்!"



இப்படிச் செங்கோடன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவனுடைய மனத்துக்குள், 'இந்தப் போலீஸ்காரருடன் வந்திருக்கும் நாயைப்போல் ஒரு நல்ல சாதி நாய் வளர்க்க வேண்டும்' என்ற எண்ணம் உதயமாயிற்று.



"அது கிடக்கட்டும். தம்பி! ஊரார் என்ன சொன்னால் எனக்கு என்ன? அப்படியே உன்னிடம் நிறையப் பணம் இருந்தால் எனக்கு ஒரு தம்படி கொடுக்கப் போகிறாயா?" என்றான் போலீஸ்காரன்.



"அப்படிச் சொல்லாதீங்க, ஐயா! என்னிடம் பணம் இருந்தால், ஒரு தம்படி என்ன, இரண்டு தம்படிகூடக் கொடுப்பேன், கையில் இல்லாத தோஷந்தான்!"



"கையிலே இல்லை; பூமியிலே இருக்கிறது! அப்படித்தானே?"



"இது என்னடா வம்பு! நான் பணம் புதைத்து வைக்கவில்லை என்று சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டீங்க போலிருக்கே?"



"அதைச் சொல்லவில்லை, அப்பா! நீ பயிர் செய்கிறாயே, இந்த வளமான பூமியிலே பாடுபட்டால் பணம் இருக்கிறது என்று சொன்னேன்."



"அப்படிச் சொன்னீர்களா? அது கொஞ்சம் நிஜந்தான். ஆனால் இந்தப் பூமியிலிருந்து பணத்தை எடுப்பதற்குள்ளே வாய்ப் பிராணன் தலைக்கு வந்துவிடுகிறது. சுத்த வறண்ட பூமி!"



"என்ன அப்படிச் சொல்கிறாய்? உன் காட்டில் சோளப்பயிர் கருகருவென்று வளர்ந்திருக்கிறதே! ஆறு அடி உயர ஆள் புகுந்தால் கூடத் தெரியாது! அவ்வளவு உயரம்...!"



"ஐயோ! சாமி; கண்ணைப் போடுறீங்களே?"



"கண்ணைப் போடவில்லை! ஆனால் இந்த மூக்கை ஊரிலேயே வைத்துவிட்டு வந்திருக்கவேணும்! வெங்காயக் குழம்பின் வாசனை ஜம் என்று வருகிறது!" என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரன் இரண்டு மூன்று தடவை பலமாக மூச்சை இழுத்து வாசனை பிடித்தான்.



"இருந்து சாப்பிட்டுவிட்டுப் போங்களேன்" என்றான் செங்கோடன்.



"இன்றைக்கு எனக்கு வேறு இடத்தில் சாப்பாடு. குடிசைக்குள்ளே வேறு யாராவது உண்டா? நீதான் சமைத்துக்கொள்கிறாயா?"



"என்னைத் தவிர இங்கே வேறு யாரும் இல்லை. நான் ஏகாங்கி."



"அப்படி இருக்கக்கூடாது. சீக்கிரத்தில் யாராவது ஒரு பெண்ணைக் கட்டிப் போடவேண்டும். நான் வரும் போது இங்கே உன்னோடு நின்று யாரோ பேசிக்கொண்டு இருக்கவில்லை? அவசரமாய்ச் சோளக்கொல்லையில் புகுந்து போகவில்லை?"



"என்னங்க, கதையாயிருக்கிறது! இங்கே ஒருத்தரும் இல்லையே!"



"யாரோ சேலை கட்டிய பெண்பிள்ளை மாதிரி தோன்றியதே!"



"உங்களுக்கு ஏதோ சித்தப் பிரமை. இங்கே பெண் பிள்ளை யாரும் இல்லை."



"ஆமாம், இருந்தாலும் இருக்கலாம். கொஞ்ச நாளாக எனக்கு எங்கே பார்த்தாலும் செம்பவளவல்லி நிற்கிறதாகவே பிரமை உண்டாகிறது. கொப்பனாம்பட்டி சிவராமக் கவுண்டர் மகள் செம்பா இல்லை? அவளை நான் கலியாணம் கட்டிக்கொள்ளப் போகிறேன். அப்புறம் பார்; 374-ஆம் நம்பர் கான்ஸ்டேபிள் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து அதிகாரம் பண்ணிச் சாப்பிட மாட்டாரா?"



அந்தப் போலீஸ்காரனை அங்கேயே கழுத்தை முறித்துக் கொன்று போட்டுவிடலாமா என்று செங்கோடனுக்கு ஆத்திரம் வந்தது. செம்பாவின் மனசை அவன் நன்றாய் அறிந்து கொண்டிருந்தபடியால் பொறுமையைக் கடைப்பிடித்தான்.



"அதெல்லாம் இருக்கட்டும், போலீஸ் ஐயா! எதற்காக இவ்வளவு தூரம் மெனக்கெட்டு இங்கே வந்தீங்க? அதைச் சொல்லுங்க?" என்றான்.



"அடாடா! மறந்தே போய்விட்டேனே! உன்னோடு பேசுகிற சுவாரஸ்யத்திலே வந்த காரியம் மறந்து விட்டது" என்று சொல்லிவிட்டுச் சட்டைப் பையிலிருந்து எடுத்த தபாலைக் கொடுத்தான் போலீஸ்காரன்.



"இது ஏது தபால்? எனக்கு யார் தபால் போட்டு இருப்பார்கள்? அதிசயமாய் இருக்கிறதே!" என்றான் செங்கோடன்.



"கூடார சினிமாவிலே உன் கன்னத்திலே அறைந்தாளே, ஒரு பெண்பிள்ளை-குமாரி பங்கஜா-அவள் கொடுத்தாள். சாலையில் பொய்மான் கரடு சமீபமாய் நின்றாள். நான் கொப்பனாம்பட்டி போகிறேன் என்றேன். 'இதை ராஜா செங்கோடக் கவுண்டரிடம் கொடுத்துவிட்டுப் போங்கள்' என்றாள். பாவம்! ஒரு பெண்பிள்ளை கெஞ்சிக் கேட்டுக் கொள்ளும்போது மாட்டேன் என்று எப்படிச் சொல்கிறது? 'சரி' என்று வாங்கிக் கொண்டு வந்தேன். நான் போகட்டுமா?"



"கொஞ்சம் இருங்க; இந்தக் கடுதாசை வாசித்துக் காட்டிவிட்டுப் போங்க!"



"என்ன தம்பி, உனக்குப் படிக்கத் தெரியாதா?"



"தெரியாமல் என்ன? மூன்றாம் வகுப்புவரை படித்திருக்கிறேன். அச்சு எழுத்துப் படிக்கத் தெரியும். கூட்டு எழுத்தாயிருந்தால் படிக்கிறது சிரமம். ஒருவேளை அந்த அம்மா இங்கிலீஸிலே எழுதியிருந்தாலும் எழுதியிருப்பாங்க. எனக்கு இங்கிலீஸ் தெரியாது."



இப்படிச் சொல்லிக் கொண்டே செங்கோடன் குடிசை அருகில் சென்று வாசற்படிக்குப் பக்கத்தில் வைத்திருந்த ஹரிக்கன் லாந்தரை எடுத்துப் பெரிதாகத் தூண்டிவிட்டுக் கடிதத்தை வாசித்தான். எழுத்துப் புரியும்படியாகவே எழுதியிருந்தது. ஆகையால் எழுத்துக் கூட்டி இரைந்து வாசித்தான்:



"என் இதயத்தைக் கொள்ளை கொண்ட ராஜா செங்கோடக் கவுண்டர் அவர்களுக்கு,



நான் பெரிய சங்கடத்திலும் அபாயத்திலும் சிக்கிக்கொண்டிருக்கிறேன். நாளைச் சாயங்காலம் கட்டாயம் வந்து என்னைச் சந்திக்கவும். நீங்கள் நாளைச் சாயங்காலம் வரத் தவறினால் அப்புறம் என்னை உயிரோடு காண முடியாது.



இப்படிக்கு,

குமாரி பங்கஜா,"



இதைப் படித்தபோது செங்கோடனுக்கு வியர்த்து விறுவிறுத்தது. படித்து முடித்துவிட்டுப் போலீஸ்காரனுடைய முகத்தைப் பார்த்தான். போலீஸ்காரன் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே, "பார்த்தாயா அதிர்ஷ்டம் உன்னைத் தேடிக்கொண்டு வருகிறது!" என்றான்.



"எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இதில் என்ன எழுதி இருக்கிறது? நீங்க ஒரு தடவை படித்து காட்டுங்க!"



"விளங்காமல் என்ன இருக்கிறது? அதுதான் வெட்ட வெளிச்சமாய் எழுதியிருக்கிறதே!" என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரன் ஒரு தடவை படித்துக் காட்டினான்.



"நீங்களே ஒரு யோசனை சொல்லுங்க. இது நிஜமாயிருக்குமா? நான் போக வேணுமா?"



"போய்த்தான் பாரேன், என்ன நடக்கிறது என்று? உன்னைக் கடித்தா விழுங்கிவிடப் போகிறாள்?"



"சரி உங்கள் யோசனைப்படியே செய்கிறேன். ஆனால் உங்களை ஒன்று கேட்டுக்கொள்கிறேன்."



"என்னை நீ இரண்டு வேண்டுமானாலும் கேட்கலாம்."



"ஒன்றுதான், அதற்கு மேலே இல்லை. இராத்திரி கொப்பனாம்பட்டி கவுண்டர் வீட்டில் சாப்பிடப் போறீங்க அல்லவா? அங்கே என்னையும் இந்தக் குமாரி பங்கஜாவையும் பற்றி ஏதாவது கன்னாபின்னாவென்று பேசி வைக்காதீங்க! பேசினால் காரியம் கெட்டுப் போய்விடும்."



"அது என்ன? அப்படி என்ன காரியம் கெட்டுப்போய்விடும்?"



"உங்களிடம் சொல்லுகிறதற்கு என்ன? அந்த வீட்டுப் பெண் செம்பாவை நான் தான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன்!..."



"என்ன? என்ன? ஒரே போடாய்ப் போடுகிறாயே!"



"நான் போட்டாலே ஒரே போடாய்த்தான் போடுகிறது; இரண்டு மூன்று போடுகிறதில்லை. செம்பாவுக்கும் எனக்கும் குறுக்கே யார் வந்தாலும், அவன் தசகண்ட இராவணனாயிருந்தாலும் சரி. ஒன்று அவன் சாக வேணும்; அல்லது என் உயிர் போக வேணும். நான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன். அப்புறம் உங்கள் இஷ்டம்!"



"என் இஷ்டமும் இல்லை; உன் இஷ்டமும் இல்லை! அந்தப் பெண் இஷ்டப்பட்டு யாரை..."



"அதைப்பற்றிச் சந்தேகம் வேண்டாம்! செம்பாவுக்கு என்னைக் கட்டிக்கொள்ளத்தான் இஷ்டம். நீங்களே கேட்டுக் கொள்ளலாம்!"



"கவுண்டரே! இதை முன்னமே சொல்லித் தொலைக்கிறதுதானே? சொல்லியிருந்தால் நான் அந்தப் பெண் பேச்சையே எடுத்திருக்க மாட்டேனே! செம்பாவின் தகப்பனார் சொன்னார், மகளுக்கு இந்த வருஷம் அவசியம் கலியாணம் செய்துவிட வேண்டும் என்று. உனக்கு அவளைக் கட்டிக்கொள்ள இஷ்டம் இல்லையென்றும் தெரிவித்தார். நீயே கலியாணம் செய்து கொள்கிறதாயிருந்தால் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று! இன்றைக்கு இராத்திரியே பெரிய கவுண்டரிடம் சொல்லி விடுகிறேன்."



"போலீஸ்கார ஐயா! நீங்க ஒன்றும் சொல்லாமல் சும்மா இருந்தால் அதுவே பெரிய உபகாரமாயிருக்கும். நாளைக் காலையில் நானே எல்லாம் சொல்லிக் கொள்வேன்" என்றான் செங்கோடன்.



போலீஸ்காரன் போன பிறகு குடிசைக்குள்ளே போய் லாந்தரை நன்றாய்த் தூண்டிவிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தான். ஓர் அடுப்பில் குழம்பு கொதித்து அடங்கியிருந்தது. இன்னும் ஓர் அடுப்பில் பழைய சாம்பல் குவிந்திருந்தது. அந்த அடுப்பை உற்றுப் பார்த்துவிட்டு, "எப்படிப்பட்ட, சித்திரகுப்தனாயிருந்தாலும் கண்டு பிடிக்க முடியாது. நாம் பயப்படுவது அநாவசியம்" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.



இராத்திரி பாயில் படுத்த பிறகு, செங்கோடனுடைய மனத்தில் பலவிதமான எண்ணங்கள் அலைமோதிக் குமுறின. அவற்றின் மத்தியில், ஏதோ ஒரு முக்கியமான விஷயம் மறந்துபோய்விட்டது. அதை எப்படியாவது ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று எண்ணிப் பெரும் பிரயத்தனம் செய்தான். எவ்வளவோ முயன்றும் அது ஞாபகத்துக்கு வராமலே தூங்கிப் போனான்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
11. பதினொன்றாவது அத்தியாயம்



மறுநாள் காலையில் செங்கோடன் வழக்கம்போல் வீடு சுத்தம் செய்துவிட்டு, கேணியில் பாதித் தண்ணீர் இறைத்து விட்டு, குளித்து, வெள்ளை வேட்டி சொக்காய் தரித்துக் கொண்டு, கொப்பனாம்பட்டிக்குப் போனான். பெரியகவுண்டர் செங்கோடனைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டது போல் பாவனை செய்து, "நீ எங்கே வந்தாய்?" என்று கேட்டார்.



"என்ன மாமா! அப்படிக் கேட்டீங்க ஒரு கேள்வி? நான் வரக்கூடாதா?" என்றான்.



"நன்றாய் வரலாம். வரக்கூடாது என்று யார் சொன்னது? ரொம்ப நாளாய் உன்னைக் காணுகிறதேயில்லையே, எங்களை அடியோடு மறந்துவிட்டாயோ என்று பார்த்தேன்."



"அப்படியெல்லாம் மறப்பேனுங்களா? வெள்ளாமை வேலை அதிகமாயிருந்தது. உங்களுக்குத் தெரியாதா? மழையில்லாமல்..."



"அதெல்லாம் தெரியும்! அப்பா! ஆனால் நீ வெள்ளாமையிலே மட்டும் கவனாயிருந்ததாகத் தெரியவில்லையே? சின்னமநாயக்கன்பட்டிக்கு அடிக்கடி போகிறாயாம்? அங்கே யாரோ காவாலிகள் வந்திருக்கிறார்களாம். அவர்களோடு சேர்ந்துகொண்டு திரிகிறாயாம்! சாலையிலே போகிறபோதே ஏதேதோ பேத்திக்கொண்டு போகிறாயாம், குடிகாரனைப் போல. அப்படியிருக்க..."



"அதெல்லாம் முந்தாநாளோட தீர்ந்தது மாமா! எனக்குத் தாயா, தகப்பனாரா, வீட்டிலே வேறு பெரியவர்களா, யார் இருக்கிறார்கள்? நான் அப்படியே தப்பு வழியில் போனாலும் நீங்கள் தானே புத்தி சொல்லித் திருத்த வேணும்?"



"புத்தி சொன்னால் நீ கேட்கிற நிலைமையிலே இல்லையே? அது போகட்டும்; இப்போது எதற்காக வந்தாய்? ஏதாவது யோசனை கேட்பதற்காக வந்தாயா?"



"ஆமாம், மாமா! ஒரு யோசனை கேட்கத்தான் வந்தேன். நம்ப செம்பாவைக் கலியாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று வெகு நாளாக எனக்கு எண்ணம். அதைப் பற்றி இன்றைக்குப் பேசி..."



"வெகுநாளாக உனக்கு எண்ணம் என்றால், இத்தனை நாள் ஏன் சொல்லாமல் இருக்கவேணும்? இப்போது வந்து சொல்கிறாயே? நான் அந்தப் போலீஸ்காரருக்கு வாக்குக் கொடுத்துவிட்டேனே?"



"அது எப்படி நீங்கள் வாக்குக் கொடுக்கலாம்? செம்பா விஷயமாக என் மனசில் இருந்த உத்தேசம் உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?"



"மறுபடியும் அதையே சொல்கிறாயே? மனசிலே உத்தேசம் இருந்தால் என்ன பிரயோசனம்? வாயை விட்டுச் சொல்கிறதுதானே? கடவுள் வாயை எதற்காகக் கொடுத்திருக்கிறார்?"



"சரி; இப்போதுதான் வாயைவிட்டுச் சொல்லியாகி விட்டதே? ஒரு மழை நல்லாப் பெய்து ஊரிலே கொஞ்சம் செழிப்பு உண்டாகட்டும், அப்புறம் உங்களிடம் வந்து கேட்கலாம் என்று எண்ணியிருந்தேன்."



"மழை பெய்யாவிட்டால் உனக்கு என்ன? மற்றவர்களுக்குக் கஷ்டம். உன் கேணியிலேதான் வற்றாமல் தண்ணீர் வருகிறது! சோளம், நெல் எல்லாம் நன்றாய் வந்திருக்கிறதே?"



"நான் மட்டும் நல்லாயிருந்தால் போதுமா? உங்கள் காட்டிலும் மழை பெய்து நல்லா விளைந்தால்தானே என் சோளம் எனக்குக் கிட்டும்! இல்லாவிட்டால் இந்த வீட்டுக் குழந்தைகள் வந்து சோளம் முற்றுகிறதற்குள்ளே பிடுங்கித் தின்றுவிடமாட்டார்களா?"



"தம்பி! நானும் பார்த்தாலும் பார்த்தேன். உன்னைப் போன்ற கருமியைப் பார்த்ததில்லை. செம்பாவுக்கு நீதான் சரியான புருஷன். அவள் பெரிய ஊதாரி..."



"அதெல்லாம் உங்கள் வீட்டிலே; என்னிடத்துக்கு வந்தால் சரியாய்ப் போய்விடும். குடும்பப் பொறுப்பு வந்துவிடும் அல்ல?"



இச்சமயம் செம்பாவின் தம்பி தான் படித்துக் கொண்டிருந்த பாடத்தை நிறுத்திவிட்டு, "அப்பா! நம்ம அக்காளை அந்தப் போலீஸ்காரருக்கே கட்டிக் கொடுங்க! இந்த ஆளுக்குக் கொடுக்காதிங்க!" என்றான்.



"ஏண்டா அப்படிச் சொல்லுகிறாய்? நம்ம செங்கோடனுக்கு என்ன குறை வந்தது?"



"நேற்று அந்தப் போலீஸ்காரர் பெப்பர்மிண்ட் வாங்கிக் கொடுத்தார். அப்புறம் ஒருநாள் எங்களையெல்லாம் சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போவதாகச் சொல்லியிருக்கிறார். இந்தக் கருமிக் கவுண்டர் என்னத்தைக் கொடுப்பார்?"



"தம்பி! நான் உனக்கு அன்றைக்குக் கொடுக்கவில்லை?" என்றான் பையன்.



"என்ன கொடுத்தீங்க? ஒன்றும் கொடுக்கவில்லை! சும்மாச் சொல்றீங்க" என்றான் பையன்.



"நினைச்சுப்பார், தம்பி! நீ அன்றைக்கு என் சோளக் கொல்லைக்கு வந்து சோளக் கொண்டையை ஒடித்த போது நான் ஓடிவந்து உன் முதுகில் நாலு அடி கொடுக்கவில்லை? ஒன்றுமே கொடுக்கவில்லை என்கிறாயே?"



உள்ளேயிருந்து 'கலீர்' என்று சிரிக்கும் சத்தம் கேட்டது.



பெரிய கவுண்டரும் புன்னகை பூத்தார். "சரி; இப்போது என்ன சொல்கிறாய்?" என்றார்.



"என்ன சொல்கிறது? கலியாணத்துக்குத் தேதி வைக்க வேண்டியதுதான்!" என்றான் செங்கோடன்.



"அடுத்த தை மாதத்திலே வைத்துக் கொள்ளலாமே!"



"அவ்வளவு நாள் ஏன் தள்ளிப் போடணும்? இந்த மாதத்திலேயே வைத்துவிடுங்க! இனிமேல் தாமதிக்கிறது உசிதமில்லை!"



"அது என்ன, அவ்வளவு அவசரப்படுகிறாய்! அந்தப் போலீஸ்காரருக்கு வேறு நான் சமாதானம் சொல்லியாக வேண்டும்."



"அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் நான் தான் செம்பாவைக் கட்டிக்கொள்ளப் போகிறேன் என்று நேற்றே சொல்லிவிட்டேன்."



"அப்படியென்றால், அடுத்த வாரத்திலே புதன்கிழமை ஒரு முகூர்த்தம் இருக்கிறது. கலியாணம் வைத்துக் கொள்ளலாமா?"



"அப்படியே வைத்துவிடுங்கள். இன்னும் சீக்கிரமாய் வைத்தாலும் சரிதான்!" என்றான் செங்கோடன்.



இந்தச் சமயத்தில் உள்ளேயிருந்து செம்பவளவல்லி அவசரமாக வந்தாள்.



"அப்பா! இவரிடம் ஒரு கேள்வி கேட்கவேணும் அதற்குச் சரியான பதில் சொன்னால்தான் கல்யாணம்!"



"கேட்டுக்கொள்! நன்றாய்ச் சந்தேகமற என்னென்ன கேட்கவேணுமோ எல்லாவற்றையும் இப்போதே கேட்டுக் கொள்! நீயும் இவனுந்தானே ஆயுள் முழுவதும் வாழ்க்கை நடத்தவேணும்?" என்றார் பெரிய கவுண்டர்.



"சினிமாக் கொட்டகையிலே ஒரு பெண்பிள்ளை இவரைக் கன்னத்திலே அடித்தது வாஸ்தவமா?" என்றாள்.



செங்கோடன் தலையைக் குனிந்துகொண்டு யோசித்தான்.



"ஏன் தலையைக் குனிந்து கொள்கிறாரு? என் கேள்விக்குப் பதில் சொல்லப்போகிறாரா, இல்லையா?"



செங்கோடன் தலை நிமிர்ந்து, "அது வாஸ்தவந்தான். அதற்கு என்ன செய்யவேணும்?" என்றான்.



"இவர் ஆண்பிள்ளைதானே? கன்னத்தில் பெண் பிள்ளை அறைந்தால் இவர் ஏன் சும்மா வரவேணும்? திரும்பி நாலு அறை கொடுப்பதற்கென்ன?"



"பெண் பிள்ளையாயிருந்தபடியால்தான் சும்மா விட்டு விட்டு வந்தேன். ஆண் பிள்ளையாயிருந்தால் அங்கேயே பொக்கையில் வைத்திருப்பேன்!"



"பெண் பிள்ளையாயிருந்தால் அதற்காகச் சும்மா விட்டு விடுவதா? அவள் தவடையில் இரண்டு அறை கொடுத்து விட்டு வரவேணும். இல்லாவிட்டால்..."



"இல்லாவிட்டால்...?"



"இல்லாவிட்டால் நான் போய் அவள் கன்னத்தில் நாலு அறை கொடுத்துவிட்டு வருவேன். அதற்குப் பிறகுதான் கலியாணம்!" என்றாள் செம்பவளவல்லி.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
12. பன்னிரண்டாவது அத்தியாயம்



அன்று சாயங்காலம் செங்கோடன் சின்னமநாயக்கன்பட்டிக்குப் போனான். அங்கே எஸ்ராஜ், பங்காரு முதலியவர்கள் குடியிருந்த வீடு பூட்டிக் கிடந்தது.



பிறகு சினிமாக் கூடாரத்துக்குப் போனான். அவர்களைக் காணவில்லை.



"மானேஜர் எங்கே?" என்று கேட்டான். யாரோ ஒருவரைக் காட்டினார்கள். அவர் எஸ்ராஜும் அல்ல; பங்காருசாமியும் அல்ல. விசாரித்ததில் பழைய மானேஜர் 'டிஸ்மிஸ்' ஆகிப் புது மானேஜர் வந்துவிட்டார் என்று தெரியவந்தது!



பொய்மான் கரடுக்கு வந்தான். போலீஸ்காரன் நிற்கக் கண்டான்.



"அதுதான் சரி, தம்பி! கடிதத்தில் கண்டபடி வந்து விட்டாயே?" என்றான் போலீஸ்காரன்.



"வந்தேன். வந்து என்ன பிரயோஜனம்? ஆசாமிகளைக் காணோமே!"



"எந்த ஆசாமிகளைத் தேடுகிறாய்! உனக்குக் கடிதம் எழுதியவள் இந்தப் பொய்மான் கரடுக்குப் பின்புறம் காத்துக் கொண்டிருக்கிறாள்!..."



"ரொம்ப தூரம் பார்த்து வைத்திருக்கீங்களே? ஆனால் அந்த இரண்டு ஆண்பிள்ளைகளும் எங்கே?" என்று கேட்டுவிட்டு, சினிமாக் கூடாரத்தில் தான் விசாரித்துத் தெரிந்து கொண்டதைச் சொன்னான்.



"அந்த ஆட்களைத்தான் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். டிமிக்கி கொடுத்துவிட்டார்கள் போலத் தோன்றுகிறது! அது போனால் போகட்டும். நீ இந்த மலைக்குப் பின்னால் போய் அந்தப் பெண்ணின் கதையைக் கேள்!"



"ஆகட்டும்; நீங்களும் பக்கத்திலே எங்கேயாவது இருங்கள்!"



"பயமாயிருக்கிறதா, தம்பி!"



"பயம் ஒன்றுமில்லை; பக்கத்தில் சாட்சிக்கு யாராவது இருக்கட்டுமே என்று பார்க்கிறேன்!"



இப்படிச் சொல்லிவிட்டுச் செங்கோடன் பொய்மான் கரடுக்குப் பின்புறமாகப் போனான். அங்கே ஒரு தனியான இடத்தில் மொட்டைப் பாறை ஒன்றின் மீது குமாரி பங்கஜா உட்கார்ந்திருந்தாள். அசோகவனத்துச் சீதையைப் போலவும் காட்டில் தனியாக விடப்பட்ட தமயந்தி போலவும் அவள் சோகமே உருவம் எடுத்தவளாய்த் தோன்றினாள்.



"இது என்ன? இங்கே தனியாக வந்து எதற்காக உட்கார்ந்திருக்கிறாய்? உன்னைப் பார்த்தால், லோகிதாசனை பறிகொடுத்த சந்திரமதி மாதிரி இருக்கிறதே?" என்றான் செங்கோடன்.



அப்போதுதான் செங்கோடன் வந்ததைத் தெரிந்து கொண்டவள்போல் குமாரி பங்கஜா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு சேலைத் தலைப்பினால் முகத்தை மூடிக்கொண்டு விசித்து விசித்து அழுதாள்.



செங்கோடன் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு அவளைச் சமாதனப்படுத்த முயன்றான். பாவம்! அந்தப் பட்டிக்காட்டுக் குடியானவனுக்குச் சோகத்தில் ஆழ்ந்த கதாநாயகியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்பது என்னமாய்த் தெரியும்? தெரியாமல் சிறிது நேரம் திகைத்து நின்றான். பிறகு, இப்பேர்ப்பட்ட நிலைமையில் என்ன செய்ய வேண்டும் என்று செம்பா சொல்லிக் கொடுத்தது ஞாபகத்துக்கு வந்தது.



அந்தப்படி செய்வதற்கு எண்ணி அந்தப் பெண்ணின் மேவாய்க் கட்டையைத் தொட்டான்.



உடனே குமாரி பங்கஜா இரண்டாவது தடவையாகப் 'பளீர்' என்று செங்கோடன் கன்னத்தில் அறைந்தாள் பாவம்! செங்கோடன் கன்னத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டான்.



சற்றுப் பொறுத்து, "சரி, அப்படி என்றால் நான் போகட்டுமா? ஏதோ ஆபத்து என்று கடுதாசி எழுதினாயே என்று வந்தேன்!" என்று எழுந்திருக்க முயன்றான்.



உடனே குமாரி பங்கஜா அவனுடைய கைகளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள். "என்னை நீயும் கைவிட்டு விட்டால் நான் இந்தப் பாறையிலிருந்து விழுந்து சாக வேண்டியதுதான்!" என்று சொல்லிவிட்டு அவனுடைய தோளில் முகத்தை வைத்துக்கொண்டு விம்மினாள்.



செங்கோடன் கஷ்டப்பட்டுத் தன்னுடைய கைகளையும் தோளையும் விடுவித்துக் கொண்டான். அந்தப் பெண் பூசிக்கொண்டிருந்த 'ஸெண்டு' அவனுடைய மூக்கைத் துளைத்துத் தலைவலியை உண்டு பண்ணிற்று!



"அப்படியானால், உனக்கு என்ன கஷ்டம் என்று சொல்! என்னால் முடிந்த உதவி செய்கிறேன். அந்த இரண்டு ஆண் பிள்ளைகளும் எங்கே?" என்று கேட்டான்.



"அவர்கள் பேச்சையே எடுக்காதே! துரோகிகள்! பாதகர்கள்! சண்டாளர்கள்! என்னை ஆசை காட்டி அழைத்துக்கொண்டு வந்து என் நகைகளையெல்லாம் பிடுங்கிக்கொண்டு பணத்தையும் பறித்துக்கொண்டு..."



"ஐயோ! இது என்ன அநியாயம்! உன் சொந்தத் தமையனோ அப்படிச் செய்துவிட்டான்?"



"உன்னிடம் நிஜத்தைச் சொல்வதற்கென்ன! அவன் என்னுடைய தமையன் அல்ல; அவன் எனக்கு எந்தவித உறவும் இல்லை."



"இன்னொருவன் உன்னைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றானே?"



"அதுவும் பொய்!"



"பின் ஏன் அவர்களுடன் வந்தாய்?"



"என்னை சினிமாவில் சேர்த்துவிடுகிறேன் என்று ஆசை காட்டி அழைத்துக்கொண்டு வந்தார்கள், பாவிகள்! அவர்கள் நாசமாய்ப் போகவேணும்!"



"வீணாக அலட்டி என்ன பிரயோஜனம்? அவர்கள் இப்போது எங்கே சொல்? செம்மையாகத் தீட்டிவிடுகிறேன். ஒரு பெண்பிள்ளையை இப்படியா மோசம் செய்வது? அவர்கள் இப்போது எங்கே?" என்று மறுபடியும் கேட்டான்.



"யாருக்குத் தெரியும்? இத்தனை நேரம் ரெயில் ஏறி இருப்பார்கள்! கையிலே ரெயில் சார்ஜுக்குக் கூடப் பணம் இல்லாமல் என்னை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். நீதான் என்னைக் காப்பாற்ற வேணும். உன்னைத் தான் நம்பி இருக்கிறேன்."



"எதற்காக இப்படி உன்னை விட்டுவிட்டு அவர்கள் போனார்கள்? ஏதாவது சண்டை வந்துவிட்டதா என்ன?"



"அதையும் சொல்லிவிடுகிறேன். உன்னை ஏமாற்றி உன்னிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கவேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். நான் கூடாது என்றேன். அதனால்..."



"என்னிடம் இருக்கும் பணமா? என்னிடம் பணம் ஏது?"



"நீ பணம் சேர்த்துப் புதைத்து வைத்திருக்கிறாய் என்று யாரோ சொல்லிவிட்டார்கள். நீ கூடக் கஞ்சா மயக்கத்திலே இரண்டொரு தடவை சொல்லிவிட்டாய்...!"



செங்கோடன் ஏதோ மறந்துபோன விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளப் பார்த்தான் அல்லவா? அது இப்போது பளிச்சென்று ஞாபகம் வந்துவிட்டது. கஞ்சா மயக்கத்தில் அந்தத் திருட்டுப் பயல்களிடம் சொல்லக் கூடாத இரகசியத்தைச் சொல்லிவிட்டதாக நினைவு வந்தது. உடனே செங்கோடன் அளவில்லாத பரபரப்பு அடைந்து எழுந்து நின்றான்.



"எங்கே போகிறாய்?" என்று சொல்லி அவன் கையைப் பற்றிக் குமாரி பங்கஜா இழுத்து உட்காரவைக்க முயன்றாள்.



"வெறுமனே இங்கே உட்கார்ந்திருந்து என்ன லாபம்? அந்தத் திருட்டுப் பயல்களை உடனே கண்டுபிடிக்க வேண்டாமா? இந்தக் காட்டுக்கு அந்தப் புறத்தில் போலீஸ்காரர் இருக்கிறார். வா, போய்ச் சொல்லலாம்!"



"ஐயோ! போலீஸ்காரா? எனக்குப் பயமாயிருக்கிறதே!"



"பயம் என்ன? நீ நேற்று அவரிடந்தானே எனக்குக் கடுதாசி கொடுத்து அனுப்பினாய்?"



"ஆமாம்; வேறு யாரும் இல்லாதபடியால் அவரிடம் கொடுத்து அனுப்பினேன். கடிதத்தில் எழுதியிருந்த விஷயம் அவருக்குத் தெரிந்து போச்சோ?"



"தெரியாமல் எப்படி இருக்கும்? அவர்தான் கடிதத்தைப் படித்தார்!"



"ஐயையோ! அதனாலேதான் அவர் இங்கே வட்டமிடுகிறார்போல் இருக்கிறது! கவுண்டரே! எனக்குப் பயமாய் இருக்கிறது. அந்தப் போலீஸ்காரப் பாவி என்மேல் மோகம் கொண்டிருக்கிறான்!"



"அப்படியிருந்தால், அவனையும் ஒரு கை பார்த்து விடுகிறேன். வா, போகலாம்!" என்று சொல்லிச் செங்கோடன் மளமளவென்று மலைமீது தாவி ஏறினான். குமாரி பங்கஜாவும் மூச்சு வாங்க, அவனைத் தொடர்ந்து ஏறினான்.



இருவரும் பொய்மான் கரடின் உச்சியை அடைந்தார்கள்.



நிலவின் வெளிச்சம் குமாரி பங்கஜாவின் முகத்தில் விழுந்தது. செங்கோடன் அசப்பில் அவள் முகத்தைப் பார்த்தான். அவனுடைய சந்தேகம் உறுதிப்பட்டது. அவள் அழவும் இல்லை, கண்ணீர் விடவும் இல்லை! அவ்வளவும் பாசாங்கு! வேஷம்! நடிப்பு!



செங்கோடன் அந்தப் பாறையின் உச்சியிலிருந்து சாலையைப் பார்த்தான். சாலையில் ஜன நடமாட்டமே இல்லை. போலீஸ்காரரையும் காணவில்லை. எங்கே போயிருப்பார்! அடாடா! சாட்சி இல்லாமல் போய் விட்டதே!



செங்கோடனுடைய பார்வை மேலும் கிழக்கு நோக்கிச் சென்றது. அவனுடைய கேணியும் குடிசையும் இருந்த இடத்துக்குச் சென்று நின்றது, ஆகா! அது என்ன? அவனுடைய குடிசைக்குள்ளே என்ன வெளிச்சம்? எப்படி வந்தது? யாராவது...!



உடனே அவன் ஒரு நிச்சயத்துக்கு வந்தான். "இதோ பார்! என்னுடைய குடிசையில் ஏதோ வெளிச்சமாய் இருக்கிறது. நெருப்புப் பிடித்துக் கொண்டது போல் தோன்றுகிறது. நான் உடனே போய்ப் பார்க்கவேணும். நாளைக்கு மறுபடி வருகிறேன். மற்ற விஷயங்கள்..." என்று அவன் சொல்வதற்குள் குமாரி பங்கஜா, "ஐயோ! என்னை நீயும் விட்டு விட்டுப் போய்விட்டால் என் கதி என்ன?" என்று கூச்சலிட்டு, அவனுடைய சட்டைத் துணியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.



செங்கோடன் கையை ஓங்கினான்! பளீர் பளீர் என்று அவளுடைய ஒரு கன்னத்தில் இரண்டு அறை அறைந்தான். சுளீர் சுளீர் என்று இன்னொரு கன்னத்தில் இன்னும் இரண்டு அறை கொடுத்தான்!



"இதோ பார்; நான் போவதைத் தடுத்தாயோ உன்னை நானே இந்தப் பாறையிலிருந்து தள்ளிக் கொன்று விடுவேன்!" என்றான்.



குமாரி பங்கஜா விம்மிக்கொண்டே, "உன்னை நான் தடுக்கவில்லை. ஆனால் நீ என்னைக் கொன்றாலும் சரி, உன்னோடு நானும் வருவேன். எனக்கு வேறு நாதியில்லை!" என்றாள்.



செங்கோடன் முன்னால் விரைந்தோட, குமாரி பங்கஜாவும் இரைக்க இரைக்க அவனோடு ஓடினாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
13. பதின்மூன்றாவது அத்தியாயம்



செங்கோடனிடம் குமாரி பங்கஜா தன்னுடைய சோகக் கதையைச் சொல்ல ஆரம்பித்த அதே சமயத்தில் செம்பவளவல்லியின் தாயிடம் அவளுடைய தந்தை சொன்னார்: "எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை. இந்தக் கலியாணம் நடக்கும் என்று. இன்று காலையில் இங்கே செங்கோடன் அப்படியெல்லாம் சக்கரவட்டமாகப் பேசினானே, சாயங்காலம் அவன் பொய்மான் கரடுக்குச் சமீபமாகப் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தேன்!" என்றார்.



"இது என்ன அபசகுனப் பேச்சு? அந்தப் பிள்ளை ஏதாவது மண்ணெண்ணெய், நெருப்புப் பெட்டி வாங்கக் கடைக்குப் போயிருப்பான். அதற்காகக் 'கலியாணம் நடக்காது' என்று ஏன் சொல்ல வேண்டும்?" என்று கேட்டாள் செம்பாவின் தாயார்.



"என்னமோ 'கோல்மால்' நடந்து கொண்டிருக்கிறது! இவன் அங்கே போவதை அந்தப் பட்டணத்துக் காலிகள் ஒரு மரத்தின் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். செங்கோடனைச் சுட்டிக்காட்டி ஏதோ பேசிக் கொண்டார்கள். அந்தப் போலீஸ்காரர் வேறே அங்கு வளைய வளைய வந்து கொண்டிருக்கிறார். அவர்களுடன் வசிக்கும் பெண்பிள்ளை பாறைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறாள். எனக்கு என்னமோ சந்தேகமாயிருக்கிறது. செங்கோடன் பெருஞ் சங்கடத்தில் மாட்டிக் கொள்ளப் போகிறான்!" என்றார் கவுண்டர்.



"செங்கோடன் எதற்காகச் சங்கடத்தில் மாட்டிக் கொள்கிறான்? அந்தப் பட்டணத்து மனுஷர்களுக்கும் இவனுக்கும் என்ன வந்தது?" என்று கவுண்டரின் மனைவி கேட்டாள்.



"போலீஸ்காரர் என்னிடம் சொன்னதைச் சொல்கிறேன்; நீ வேறு யாரிடமும் சொல்லி வைக்காதே! இந்த ஜில்லாவில் ஐம்பது அறுபது வருஷத்துக்கு முன்னால் கூழைக் காலன் என்று ஒரு பக்காத் திருடன் இருந்தான். கேள்விப்பட்டிருக்கிறாயா...?"



"கேள்விப்படாமல் என்ன? நான் செம்பாவைவிடச் சிறு பெண்ணாயிருந்தபோது கூழைக் காலனைப் பற்றிக் கதை கதையாய்ச் சொல்லுவார்கள். அவன் ஒரு தடவை ராசிபுரத்திற்கு வந்து..."



"சரி, நிறுத்து! உன் கதையை இப்போது எடுத்து விடாதே! அந்தக் கூழைக் காலன் கொள்ளையடித்த பணத்தை எங்கேயோ ஓர் இடத்தில் புதைத்து வைத்திருந்தானாம். அது இந்தப் பட்டணத்து ஆட்களிடம் எப்படியோ அகப்பட்டுவிட்டதாம். கிடைத்த புதையலைச் சர்க்கார் கண்ணில் காட்டாமல் ஒளித்து வைக்க முயற்சி செய்து வருகிறார்களாம். அதற்கு நம் செங்கோடனும் உடந்தையாய் இருக்கிறானாம். எல்லாரும் ஒரு நாள் ஜெயிலுக்குப் போகப் போகிறார்கள் என்று சொல்கிறார் போலீஸ்காரர்!"



"வெறும் கதையாக அல்லவா இருக்கிறது? கூழைக் காலன் பணத்தைப் புதைத்து வைத்திருந்தால் அது நம்ப கையிலேயெல்லாம் அகப்படாமல் நேற்றைக்கு வந்த இவர்களிடம் அகப்பட்டுவிடுமா? அப்படி அகப்பட்டாலும் அவர்கள் போயும் போயும் செங்கோடனைத் தானா தேடிப் பிடிக்க வேண்டும்? அவன் தான் அப்படிப்பட்ட காரியங்களில் தலையிடுவானா? அப்படி ஏதாவது இருந்தாலும், 'இதிலெல்லாம் நீ சிக்கிக் கொள்ளாதே!' என்று செங்கோடனுக்கு நீங்கள் புத்தி சொல்ல வேண்டாமா? உலகந் தெரியாத பிள்ளையை இப்படி விட்டு வேடிக்கை பார்ப்பார்களா?" என்றாள் செம்பாவின் தாயார்.



"செங்கோடனுக்கு எச்சரிக்கை செய்யலாம் என்று தான் நானும் பார்த்தேன். ஆனால் அந்தப் போலீஸ்காரர் உண்மையைக் கண்டுபிடிக்கும் வரையில் பொறுத்திருக்கச் சொல்கிறார்..."



"என்னத்திற்கு பொறுத்திருக்கிறது? அந்தப் பிள்ளையையும் சேர்த்து ஜெயிலுக்கு அனுப்புவதற்கா? போலீஸ்காரர் சொல்லுவது நன்றாயிருக்கிறதே! அடுத்த வீட்டுப் பிள்ளையைக் கேணியில் போட்டு ஆழம் பார்க்கிற கதையாய் இருக்கிறதே!"



"செங்கோடனை எப்படியாவது தப்பித்து விடுகிறதாகச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்."



"அதையெல்லாம் நீங்கள் நம்பாதீங்க! நாளைக்கே அந்தப் பிள்ளையைக் கூப்பிட்டுச் சொல்லிவிட்டு மறுகாரியம் பாருங்கள்!"



மேற்படி சம்பாஷணையைச் செம்பா ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள். செங்கோடனைப் பற்றி தன் பெற்றோர்கள் பேசுவதை அவள் எப்படி ஒட்டுக் கேட்காமல் இருக்க முடியும்? அதுவரையில் உற்சாகமாக இருந்தவளுடைய மனத்தில் இப்போது கவலையும் பயமும் தோன்றின. மறுநாள் வரையில் காத்திருக்க அவள் விரும்பவில்லை. உடனே அவனிடம் சொல்லியாக வேண்டும்! மேலும் முதல் நாள் சாயங்காலம் வைக்கோல் கட்டின் மேல் உட்கார்ந்து சல்லாபம் செய்ததெல்லாம் அவளுடைய ஞாபகத்தில் பதிந்திருந்தது. அந்த நினைவும் அவளுடைய ஆர்வத்தை அதிகப்படுத்தியது.



தாயும் தகப்பனும் கவனியாத சமயத்தில் வீட்டை விட்டுக் கிளம்பிச் செங்கோடனுடைய கேணியை நோக்கிப் புறப்பட்டாள். போகும்போது யோசித்துக் கொண்டே சென்றாள். அப்பா சென்ன விஷயம் சரியாயிருக்கும் என்றே அவளுக்குத் தோன்றவில்லை. அந்தப் போலீஸ்காரர் அப்பாவை நன்றாய் ஏமாற்றியிருக்கிறார். செங்கோடனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டுத் தன்னைக் கலியாணம் செய்து கொள்ள எண்ணுகிறார்! ஓகோ! சிவப்புத் தலைப்பாக்காரரே! அப்படியா உம் உத்தேசம்? செம்பாவிடம் அதெல்லாம் நடக்குமா? ஒரு நாளும் இல்லை! செம்பா செத்தாலும் சாவாளே தவிர, செங்கோடனையன்றி வேறு யாரையும் கலியாணம் செய்துகொள்ள மாட்டாள்!



ஒரு வேளை இப்படியும் இருக்கலாம்; அந்தப் பட்டணத்து ஆட்களும் அந்த வெட்கங்கெட்ட சூர்ப்பனகையும் அந்தப் போலீஸ்காரரும் - எல்லாரும் ஒரு கட்சியாயிருக்கலாம்! கூழைக் காலன் புதையலாவது, மண்ணாங்கட்டியாவது! - எல்லாருமாகச் சேர்ந்துகொண்டு செங்கோடன் கஷ்டப்பட்டுச் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைப் பறிக்கப் பார்க்கிறார்கள்! அதற்காகத்தான் ஏதோ பெரிய சூழ்ச்சி செய்கிறார்கள்!... பெண்ணே! செம்பா! உன்னுடைய சமர்த்தை நீ காட்டவேண்டும். பணம் போய் விட்டால் செங்கோடனுக்குப் பிராணன் போய்விடும், அல்லது பைத்தியமே பிடித்தாலும் பிடித்துவிடும். பணத்தை நீ காப்பாற்றிக் கொடுத்தால் செங்கோடன் எவ்வளவோ சந்தோஷப்படுவான். என்றைக்கும் உன் அடிமையாயிருப்பான்! ஆகையால் செங்கோடனுடைய பணத்தைக் காப்பாற்றிக் கொடுப்பது உன்னுடைய பொறுப்பு! குடும்ப வாழ்க்கையில் நீ சந்தோஷமாயிருப்பதெல்லாம் இது விஷயத்தில் நீ செய்வதைப் பொறுத்திருக்கிறது!



செம்பாவுக்குச் சாதாரணமாகப் பயம் என்பதே கிடையாது. "பேயும் பிசாசும் என்னை என்ன செய்யும்! என்கிட்டப் பிசாசு வந்தால் கன்னத்தில் நாலு அறை அறைந்து அனுப்ப மாட்டேனா!" என்பாள். இருட்டு நேரங்களில் சிறிதும் பயமின்றி எங்கும் போவாள். ஆனால் இன்றைக்கு என்னவோ, அவளுடைய உள்ளத்தில் அடிக்கடி பயம் புகுந்து வேதனை செய்தது. இருட்டைக் கண்டே பயமாயிருந்தது. 'இருட்டில் திடீரென்று யாராவது திருடன் எதிர்ப்பட்டாலோ...' என்று எண்ணியபோது நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. கால்கள் தடுமாறின. வயற்காட்டில் அங்கங்கே தெரிந்த சிறிய மொட்டைப் பாறைகளுக்குப் பின்னால் திருடர்கள் ஒளிந்திருப்பார்கள் என்று தோன்றியது. கூழைக்காலன், செவிட்டுக் காதன், நொண்டிக் கையன், குருட்டுக் கண்ணன் முதலிய பயங்கரமான கொள்ளைக்காரர்கள் அவளைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டதாகப் பிரமை உண்டாகி அடிவயிற்றில் திகில் ஏற்பட்டது. தொண்டை வறண்டது. நா உலர்ந்தது. ஆனால் அவளுடைய நடையின் வேகம் மட்டும் குறையவில்லை. செம்பா! நீ இப்படி மெள்ள நடந்து கொண்டிருக்கையில் செங்கோடனுக்கு என்ன ஆபத்தோ! அல்லது அவனுடைய பணத்துக்குத் தான் என்ன ஆபத்தோ?... சின்னானுக்குக் கூடக் காய்ச்சல்; ஒரு வாரமாய் வேலைக்கு வருவதில்லை. ஆகையால் இவன் எங்கேயாவது போய்விட்டால் குடிசைக்குக் காவல் கிடையாது! ஆண் பிள்ளைகளின் அசட்டுத்தனத்தை என்னவென்று சொல்லுவது? நாலு வருஷம் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தைத் தரையில் தோண்டி வைத்துவிட்டுச் சாயங்கால நேரங்களில் வெளியிலே போகலாமா? இந்தக் காலத்திலும் கூழைக்காலனைப் போன்ற திருடர்கள் இல்லாமலா போகிறார்கள்? ஒரு வேளை இதே நிமிஷத்தில்-எந்தத் திருடனாவது தரையை தோண்டிப் புதைத்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம்!... இந்த எண்ணம் செம்பாவின் கால்களுக்கு அதிகமான துரிதத்தைக் கொடுத்தது.



குடிசைக்குக் கிட்டத்தட்ட அருகில் வந்தபோது நாய் குரைக்கும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு நின்றாள். குரைப்புச் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு நின்றாள். குரைப்புச் சத்தம் இரண்டு தடவைதான் கேட்டது. அதற்குப் பிறகு, அம்மம்மா! அந்தப் பயங்கரத்தை என்னவென்று சொல்வது? குரைத்த நாயின் நீண்ட ஊளைக் குரல் கேட்டது. அந்தச் சகிக்கமுடியாத தீனமான சோகக் குரல் கொஞ்சம் கொஞ்சமாக மௌனமாகிக் கடைசியில் மறைந்தது. நாய் ஊளையிடும் சத்தம் கிராமங்களில் அடிக்கடி கேட்கக் கூடியதுதான். ஆயினும் இப்போது கேட்ட ஊளைச் சத்தம் செம்பாவைக் கலக்கிவிட்டது. ஆடிக் காற்றில் சோளப்பயிர் ஆடுவதுபோல் அவளுடைய உடம்பு ஆடிற்று; கைகளும் கால்களும் நடுநடுங்கின. நாய் ஊளையிடுவது சாவுக்கு அடையாளம் என்று சொல்லக் கேட்டிருந்தாள். யாராவது மனித உயிரைக் கொண்டு போக யமராஜன் வரும்போது, நாயின் கண்களுக்கு அவனுடைய தோற்றம் புலப்பட்டு விடுமாம்! அதனால் நாய் ஊளையிடுமாம்!...இந்தப் பேச்சு உண்மையா? அப்படியென்றால், இப்போது ஏதேனும் சாவு ஏற்படப் போகிறதா? ஐயோ! யமன் யாருக்காக வருகிறானோ தெரியவில்லையே? இங்கே யார் இருக்கிறார்கள்? ஒருவரையும் காணோமே? குடிசை நிச்சப்தமாய் இருக்கிறதே! நேற்று இங்கு வந்தபோது வைக்கோற் கட்டின் மேல் செங்கோடன் உற்சாகமாக உட்கார்ந்து தெம்மாங்கு பாடினானே?...அந்த இடம் இப்போது காலியாய், வெறிச்சென்று இருக்கிறதே!...சுவாமி முருகக் கடவுளே! காளியம்மா! தெய்வங்களே! ஒன்றும் நேராமல் காப்பாற்றுங்கள். செங்கோடனைக் காப்பாற்றுங்கள். என்னைக் காப்பாற்றுங்கள், எல்லாரையும் காப்பாற்றுங்கள்!...



அது என்ன? சரசரவென்று கேட்கும் சத்தம் என்ன? அதோ பேச்சுக்குரல் கேட்கிறதே! சோளக் கொல்லையில் புகுந்து யாரோ இரண்டு பேர் வருகிறார்களே!... இல்லை; வருகிறது செங்கோடன் இல்லை! அப்பா சொன்ன பட்டணத்து ஆசாமிகள்! எதற்காக இங்கே வருகிறார்கள்? ஒருவன் தலைமீது ஏதோ சுமந்துவருகிறானே, அது என்ன? இன்னொருவனும் கையில் ஏதோ பெட்டி மாதிரி எடுத்துக்கொண்டு வருகிறான்!... ஒரு வேளை அப்பாவிடம் போலீஸ்காரர் சொன்னது உண்மைதானோ? கூழைக்காலன் புதையலை ஒளித்து வைக்க வருகிறார்களோ?...செங்கோடனை மாட்டிவைத்து ஜெயிலுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார்களோ?... செங்கோடன் எங்கே? ஏன் இன்னும் வரவில்லை? இருட்டில் இத்தனை நேரம் வேறிடத்தில் என்ன வேலை? இவர்கள் ஏதோ சூழ்ச்சி செய்து செங்கோடனை ஏமாற்றிவிட்டு வந்திருக்கிறார்கள் போல் இருக்கிறது!



நாய் குரைத்ததே!...அது எந்த நாய்?...அது ஏன் அப்படி ஊளையிட்டது?...அப்புறம் அதன் குரலைக் காணோமே, ஏன்? செத்துப் போய்விட்டதோ? ஒரு வேளை இவர்கள்தான் கொன்று விட்டார்களோ?



இதோ கேணி அருகில் வந்துவிட்டார்கள்! அவர்கள் கண்ணில் படக்கூடாது. இந்தச் சோளத் தட்டைக் குவியலுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளலாம். ஒளிந்துகொண்டு இவர்கள் என்ன செய்கிறார்களோ, பார்க்கலாம்! தனியாக ஏன் வந்தேன்? அப்பாவையாவது தம்பியையாவது அழைத்து வராமற் போனேனே? இந்த மாதிரி ஏதோ நடக்கப் போகிறது என்று யாருக்குத் தெரியும்? கூப்பிட்டாலுங்கூட அவர்கள் வந்திருக்கமாட்டார்கள். நான் வருவதைக்கூடத் தடுத்து நிறுத்தியிருப்பார்கள்...



ஆ! அது என்ன 'பொத்' என்ற சத்தம்! அப்புறம் சலசலப்புச் சத்தம்! கிணற்றில் பெரிய கல்லைத் தூக்கிப் போட்டதுபோல்!...அந்த மனுஷன் கேணிக் கரையில் நின்று குனிந்து பார்க்கிறான்! அவன் தலையில் தூக்கிக் கொண்டு வந்ததைக் கேணிக்குள்ளே போட்டிருக்கவேண்டும்! அதனால்தான் அந்தச் சத்தம் கேட்டிருக்கிறது! கேணியில் என்னத்தைப் போட்டான்? ரொம்ப கனமான சாமானாக இருக்க வேண்டும்! அதனாலேயே அவ்வளவு சத்தம் கேட்டது! என்ன சாமானைப் போட்டிருப்பான்?...செம்பாவின் உடம்பெல்லாம் சிலிர்த்தது! சொல்லமுடியாத பயங்கரம் அவளைப் பீடித்தது! ஆளைக் கொலை செய்து சாக்கில் போட்டுக் கட்டிக் கிணற்றில் போட்ட ஒரு பயங்கர சம்பவத்தைப் பற்றி அவள் சமீபத்தில் கேள்விப்பட்டிருந்தாள்! ஒரு வேளை அப்படியிருக்குமோ? யாரை அப்படிக்கொன்று சாக்கில் கட்டிக்கொண்டு வந்திருப்பார்கள்! ஐயோ! ஒரு வேளை செங்கோடனை!...செம்பாவைச் சுண்ணாம்புக் காளவாயில் போட்டு எரித்ததுபோல இருந்தது.



அவர்கள் ஏதோ பேசுகிறார்கள். ஒருவன் சொல்கிறான்: "என்னடா, கேணிக்குள்ளே பார்த்துக்கொண்டு நிற்கிறாய்? தண்ணீரில் மிதக்கும் என்று பயமா? சீ! சீக்கிரம் வா! அந்தப் பைத்தியக்காரச் செங்கோடக் கவுண்டன் திடீரென்று எதையாவது நினைத்துக்கொண்டு ஓடி வந்து தொலைப்பான்! அதற்குள் காரியத்தை முடிக்க வேண்டும்!"



அதற்குள் இன்னொருவன், "வந்தால் வரட்டும்; செங்கோடன் தான் வரட்டும். அவன் பாட்டன் வேணுமானாலும் வரட்டும்!" என்று சொல்கிறான்.



ஆகையால் செங்கோடனுடைய உயிரைப்பற்றிக் கவலையில்லை. அவனை எங்கேயோ நிறுத்தி வைத்து விட்டு இவர்கள் வந்திருக்கிறார்கள். எதற்காக? கிணற்றில் என்ன போட்டார்கள்? இன்னும் என்ன செய்யப் போகிறார்கள்?



இதோ குடிசையை நோக்கி வருகிறார்கள். ஒருவனுடைய கையில் ஏதோ பெரிய மூட்டையைப் போல் இருக்கிறது. அவர்களுடைய கண்ணில் நான் படக்கூடாது!... சோளத்தட்டை குவியலுக்கு அடியில் செம்பா நன்றாக ஒளிந்து மறைந்து கொண்டாள். அவளுடைய காதுகள் மட்டும் வெகு கூர்மையாகக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தன. ஊசிவிழும் சத்தங்கூட அவளுக்குக் கேட்டிருக்கும். குடிசையின் கதவைப் பலாத்காரமாகத் திறக்கும் சத்தம் கேட்காது போகுமா?



வந்த மனிதர்கள் பூட்டோ டு நாதாங்கியைக் கழற்றி விட்டுக் கதவைத் திறந்து உள்ளே போனார்கள். பிறகு செம்பாவும் எழுந்து நின்று குடிசைப் பக்கம் கவனித்துப் பார்க்கத் தொடங்கினாள். அவள் நின்ற இடத்துக்கு நேரே, குடிசைச் சுவரில் காற்றோட்டத்துக்காக வைத்திருந்த துவாரப் பலகணி இருந்தது. ஆகையால் உள்ளே நடப்பதையெல்லாம் அங்கிருந்தே பார்க்கலாம்.



இரண்டு மனிதர்களும் உள்ளே போனார்கள். ஏதோ பேசிக் கொண்டார்கள். இருட்டில் அவர்கள் தடுமாறும் சத்தம் கேட்டது. பிறகு தீக்குச்சி கிழிக்கும் சத்தமும் கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரே பிரகாசமாய்த் தெரிந்தது. குடிசைக்குள்ளே தீப்பிடித்துப் பற்றி எரிவதுபோலத் தோன்றியது. செம்பா திகிலினால் வாயடைத்துப் போயிராவிட்டால் "ஐயோ!" என்று அலறியிருப்பாள். அச்சமயம் பயத்தினால் அவளுடைய வாய் அடைத்துப் போயிருந்ததும் கால் செயலற்றுப் போயிருந்ததும் நல்லதாய்ப் போயிற்று. ஏனெனில் சிறிது நேரத்துக்கெல்லாம் குடிசைக்குள் நெருப்பின் பிரகாசம் மெதுவாகக் குறையத் தொடங்கியது.



"மடையா! இப்படி ஒரே அடியாகக் கொளுத்துகிறாயே! வெளியே தெரியுமே! கொஞ்சம் கொஞ்சமாகக் கொளுத்து! எல்லாவற்றையும் கொளுத்திவிடாமல் பாக்கி கொஞ்சம் வைத்திரு! கவுண்டனுடைய புதையல் உண்மையாயிருந்தால் அதற்குப் பதிலாக நம்முடைய சரக்கில் கொஞ்சம் வைத்து விட்டுப் போகலாம்!" என்றான் ஒருவன். "அதெல்லாம் என்னத்துக்கு அப்பா, வீண்வம்பு? நம் காரியம் ஆனதும் ஒரேயடியாய்க் குடிசைக்கு நெருப்பு வைத்துவிட்டுப் போகலாம்" என்றான் மற்றவன். அட சண்டாளப் பாவிகளா! இப்படியா மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நான் ஒருத்தி இருக்கிறேன்! குடிசையில் நீங்கள் நெருப்பு வைப்பதற்கு முன்னால் உங்களை....



என்ன செய்ய முடியும்? அவர்களை என்ன செய்ய முடியும்? தன்னந்தனியாக ஒரு பெண் இரண்டு ஆண் பிள்ளைகளை, கொலைக்காரப் பாவிகளை என்ன செய்யமுடியும்?... ஏன் முடியாது? ஏதாவது செய்துதான் ஆக வேண்டும்! ஒரு பெரிய கல்லைத் தூக்கி அவர்கள் தலையில் போட்டல் என்ன? எப்படி போடுகிறது? எங்கிருந்து போடுகிறது? கல் எங்கே இருக்கிறது? அவர்கள் பார்த்து விட்டால்... செங்கோடனிடம் ஜம்பமாக அன்று கத்தியை எடுத்துக் காட்டினோமே! அது இப்போது கையில் இல்லாமல் போய் விட்டதே?... இருந்தால் தான் என்ன? இரண்டு ஆண் பிள்ளைகளை எதிர்த்து...சீச்சீ! அவர்கள் ஆண் பிள்ளைகளா? திருடர்கள்! பெண் பிள்ளைகளை விடக் கேடானவர்கள்!



குடிசைக்குள்ளே இப்போது சிறிய விளக்கின் ஒளி மட்டுமே தெரிந்தது. ஆனால் 'தங்' 'தங்' என்ற சத்தம் கேட்கத் தொடங்கியது. அது என்ன சத்தம்? தரையை இடித்துத் தோண்டும் சத்தம்! எதற்காகத் தரையைத் தோன்றுகிறார்கள்? செங்கோடனுடைய பணத்தைக் கொள்ளையிடுவதற்குத்தான்! எங்கே புதைத்து வைத்திருக்கிறான் என்று இவர்களுக்குத் தெரியுமா? எனக்கே தெரியாதே! இவர்களுக்கு எப்படித் தெரிந்தது? கண்ட கண்ட இடத்தில் தோண்டிப் பார்க்கிறார்களா? அல்லது ஏமாற்றித் தெரிந்து கொண்டார்களா?...ஐயையோ! நாலு வருஷம் உழைத்துப் பாடுபட்டுச் சேர்த்த பணத்தை-சேலம் முதலியாரின் நிலத்தை வாங்குவதற்காக வைத்திருக்கும் பணத்தை-இவர்கள் கொண்டுபோக விட்டுவிடுவதா!...முடியாது! இந்தச் செம்பாவின் உடம்பில் உயிர் இருக்கும் வரையில் அது முடியாத காரியம்.



செம்பாவின் உடம்பில் தெம்பும் மனத்தில் ஊக்கமும் பிறந்தன. சோளத்தட்டைக் குவியலை விட்டு நகர்ந்து மெள்ள மெள்ள நடந்து குடிசையை நோக்கிச் சென்றாள். சுவர் ஓரமாக வந்து பலகணித் துவாரங்களின் வழியாக உள்ளே பார்த்தாள்.



அந்தக் குடிசைக்குள்ளே இரண்டு அடுப்புகள் உண்டு என்பது செம்பாவுக்குத் தெரியும். ஓர் அடுப்பில் எப்போதும் சாம்பல் குவிந்து கிடக்கும். அந்த அடுப்பைப் பெயர்த்து எடுத்துப் பக்கத்தில் வைத்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் சிறிய கடப்பாரையினால் அங்கே தோண்டிக் கொண்டிருந்தான். இன்னொருவன் தோண்டிய குழியிலிருந்து மண்ணை எடுத்து வெளியில் போட்டான். கடப்பாரை விழுந்தபோது 'தங்' 'தங்' என்று கேட்ட சத்தம் ஒரு தடவை 'டங்' என்று கேட்டது.



"இருக்கிறது, அப்பா, புதையல் இருக்கிறது! கவுண்டன் கஞ்சா போதையில் சொன்னது பொய்யல்ல!" என்று ஒருவன் சொன்னான்.



"நீதானே சந்தேகப்பட்டாய்!" என்றான் இன்னொருவன்.



ஆகா! இந்தப் பாவிகள் இப்படியா செய்கிறார்கள்? நாலு வருஷம் பாடுபட்டுத் தேடிய பணத்தை அடித்துக் கொண்டு போகவா பார்க்கிறார்கள்? இதை எப்படித் தடுப்பது? கூக்குரல் போடலாமா? பிசாசு மாதிரி தலையை விரித்துப் போட்டுக் கொண்டு உள்ளே போய்ப் பயமுறுத்தலாமா? அல்லது...



எங்கேயோ தூரத்தில் பேச்சுக் குரல் கேட்கிறது போலிருக்கிறதே! ஆம்! தெய்வம் எனக்குத் துணை அனுப்புகிறதா? யார் வந்தாலும் நல்ல சமயத்தில் தான் வருகிறார்கள்! அவர்கள் யாராயிருக்கும்? ஒரு வேளை இந்தத் திருடர்களைச் சேர்ந்தவர்களாகவேயிருந்தால்?...தெய்வம் அப்படியும் என்னைச் சோதிக்குமா?



செம்பாவின் காதில் விழுந்த பேச்சுக்குரல் குடிசைக்குள் இருந்தவர்களின் காதிலும் கேட்டது. தோண்டிக் கொண்டிருந்தவன் சட்டென்று நிறுத்தினான். காது கொடுத்து இருவரும் கேட்டார்கள். ஏதோ மெல்லிய குரலில் பேசிக் கொண்டார்கள். கடைசியில், "நீ போ! யாராயிருந்தாலும் கொஞ்ச நேரம் தடுத்து நிறுத்து! அதற்குள் காரியத்தை முடித்து விடுகிறேன்!" என்று ஒருவன் கூறியது கேட்டது. "விளக்கை அணைத்துவிடு! எனக்கு விளக்கு வெளிச்சம் வேண்டாம்! நிலா வெளிச்சமே போதும்!" என்று அவன் சொல்லியதும் செம்பாவின் காதில் விழுந்தது.



ஒருவன் எழுந்து விளக்கை அணைத்துவிட்டு வெளியில் விரைவாகச் சென்றான். இன்னொருவன் வேகமாகத் தோண்டினான். மறுநிமிஷம் குழியிலிருந்து ஒரு செப்புத் தோண்டியை எடுத்து வெளியில் வைத்தான். பெண்ணே செம்பா! இதோ உன் சந்தர்ப்பம் வந்துவிட்டது! போ! துணிச்சலாகப் போ! குடிசைக்குள் சென்று உன் காதலனுடைய பொருளைக் காப்பாற்று! தயங்காதே! போ! போ!...
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
14. பதினான்காவது அத்தியாயம்



செங்கோடன் முதலில் கொஞ்ச நேரம் குடல் தெறிக்க ஓடினான். பிறகு அவனுக்கே, 'எதற்காக இப்படி ஓடுகிறோம்? என்ன பைத்தியக்காரத்தனம்!' என்று தோன்றியது. ஓட்டம் நடையாக மாறியது. குடிசையில் தான் பார்த்த வெளிச்சம் உண்மையாகப் பார்த்ததா அல்லது வீண் பிரமையா என்ற ஐயம் உதித்தது. திருட வந்தவர்கள் அவ்வளவு பெரிய வெளிச்சம் போட்டுக் கொண்டா திருடுவார்கள்? அவ்வளவு துணிச்சலுடன் திருட வரக் கூடியவர்கள்தான் யார்? அந்தப் பட்டணத்துச் சோம்பேறிகளுக்கு அவ்வளவு தைரியமா? ஒருநாளும் இராது!-வீண்பயம்!-ஒருவேளை செம்பா வந்திருப்பாள். தன்னைக் காணாதபடியால் சிறிது நேரம் காத்திருக்கலாமென்று விளக்கேற்றி இருப்பாள்... இருந்தாலும் குடிசை ஓலைக் குடிசை, பக்கத்தில் வைக்கோலும் சோளத் தட்டையும் போர் போட்டிருக்கிறது. விளக்கேற்றும் போதுகூட ஜாக்கிரதையாக ஏற்ற வேண்டும். ஆனால் செம்பா மிகக் கெட்டிக்காரி! அவளுக்கு ஜாக்கிரதை சொல்லித் தர வேண்டியதில்லை.



நடை கொஞ்சம் மெதுவானதும், "கவுண்டரே! கவுண்டரே!" என்று கூச்சல் போட்டுக்கொண்டு ஓடிவந்து குமாரி பங்கஜா செங்கோடனுடைய கையைப் பிடித்துக் கொண்டாள். "இப்படி என்னை விட்டுவிட்டு ஓடி வரலாமா!" என்று கேட்டாள்.



"சனியனே! நீ விடாமல் தொடர்ந்து வந்துவிட்டாயா? நீ வருவது தெரிந்திருந்தால் ஓட்டத்தை நிறுத்தியிருக்க மாட்டேனே?" என்றான்.



கையை உதறி குமாரி பங்கஜாவைத் தடுமாறிக் கீழே விழச் செய்துவிட்டுச் செங்கோடன் மறுபடியும் விரைவாக நடந்தான்.



"ஐயோ! நான் விழுந்துவிட்டேன். கொஞ்சம் இரு! என்னைத் தூக்கிவிடு" என்று பங்கஜா கத்தினான்.



செங்கோடன் அவளைத் திரும்பியே பார்க்காமல் நடந்தான்.



குடிசைக்குச் சுமார் நூறு கஜ தூரத்தில் வந்தபோது சோளக் கொல்லையில் ஏதோ வெள்ளையாய் விழுந்து கிடப்பது அவன் கண்ணில் பட்டது. ஒரு தீனமான, பரிதாபமான, இதயத்தைப் பிளக்கும் துன்ப ஒலியும் கேட்டது. அது என்னவென்று பார்க்காமல் செங்கோடனால் மேலே போக முடியவில்லை. அருகில் போய்ப் பார்த்தான். அது ஒரு நாய், அது சாகும் தறுவாயில் கிடந்தது. அதன் வயிற்றிலிருந்து இரத்தம் சிந்திக் கொண்டிருந்தது.



ஐயோ! இந்த வாயில்லாப் பிராணி இங்கே எப்படி வந்தது? எந்த மகாபாவி இதை வயிற்றில் குத்திக் கொன்றான்?...ஆஹா! அந்தப் போலீஸ்காரருடைய உயர்ந்த ஜாதி நாய் அல்லவா இது? இங்கே எப்படி வந்தது? யார் இதைக் குத்தியிருப்பார்கள்?



நாயைப் பார்த்ததனால் செங்கோடனுடைய மனத்தில் திகில் அதிகமாயிற்று. அதோடு ஆத்திரமும் பரபரப்பும் மிகுந்தன. குடிசையை மேலும் அணுகிச் சென்றான். ஆனால் இப்போது சர்வ ஜாக்கிரதையுடன் எந்தவித ஆபத்துக்கும் தயாராக நடந்தான். நாயைப் பார்ப்பதற்காக நின்ற நேரத்தில் குமாரி பங்கஜா அவனை வந்து பிடித்து விட்டாள். சளசளவென்று ஏதோ அவனைக் கேள்விகள் கேட்டு பேச வைக்க முயன்றாள். எதற்காக இவள் இவ்வளவு கூச்சல் போட்டுப் பேசுகிறாள்? செவிடனுடன் பேசுவது போலப் பேசுகிறாளே ஏன்?



கேணிக்கரை மேடும் அதன் அருகில் தென்னை மரமும் குடிசை வாசற் புறத்தை மறைத்துக் கொண்டிருந்தன. ஆனால் அந்தப் பக்கத்திலிருந்து ஒரு மனிதன் வெளிப்பட்டு வந்தது தெரிந்தது. அவன் யார் என்று சீக்கிரத்திலேயே தெரிந்துவிட்டடு. எஸ்ராஜ் என்பவன் தான். இவன் ஏன் இங்கே வந்தான்? இன்னொருவன் எங்கே?-சந்தேகித்ததெல்லாம் உண்மைதான்போல் இருக்கிறது. செங்கோடா! உன்னை இந்தப் பட்டணத்துச் சோம்பேறிகள் ஏமாற்றி விட்டார்களா? நல்லவேளை! காரியம் மிஞ்சிப் போவதற்குள் வந்துவிட்டாய்! பார் ஒரு கை!



செங்கோடன் ஒரு கை பார்க்க யத்தனிப்பதற்குள்ளே வேறு காரியங்கள் நடந்துவிட்டன.



"எஸ்ராஜ்! எஸ்ராஜ்! இந்தக் கவுண்டன் என் கன்னத்தில் அறைந்தான்! விடாதே இவனை! இங்கேயே கொன்று குழியை வெட்டிப் புதைத்துவிடு!" என்று குமாரி பங்கஜா கத்தினாள்.



"அப்படியா! உன்னையா இந்தப் பட்டிக்காட்டான் தொட்டு அடித்தான்? அவ்வளவுக்கு ஆகிவிட்டதா? இதோ பார்! ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன்!" என்று எஸ்ராஜ் கர்ஜித்துக்கொண்டே செங்கோடனுடைய மார்பில் ஒரு குத்து விட்டான்.



அவ்வளவுதான்! செங்கோடனுடைய உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த எரிமலை பொங்கியது. எஸ்ராஜின் மார்பிலும் தலையிலும் முதுகிலும் மோவாய்க் கட்டையிலும், கண்ட கண்ட இடங்களிலெல்லாம் செங்கோடனுடைய இரும்புக் கைகள் சரமாரியாக அடிகளையும் குத்துக்களையும் பொழிந்தன.



'ஐயோ!' 'அப்பா!' 'போதும்!' 'வேண்டாம்!' என்னும் எஸ்ராஜின் அபயக் குரல்கள் செவிடன் காதில் ஊதின சங்காகவே முடிந்தன.



இவர்கள் இருவரும் இவ்விதம் முஷ்டி யுத்தம் செய்து கொண்டிருக்கையில் குமாரி பங்கஜா குடிசையை நோக்கிச் சென்றாள். கேணிக்கரையில் ஏறி அப்பாலும் இறங்கி விட்டாள்.



அச்சமயம் குடிசைக்குள்ளேயிருந்து, "ஐயோ ஓஓஓ!" என்ற ஒரு நீடித்த பரிதாப ஓலம் கேட்பவர்களின் உடம்பின் இரத்தத்தைச் சுண்டச் செய்யும் பயங்கரத்துடன் எழுந்தது. அதே குரல் ஒரு கணம் நின்று, மறுபடியும், "ஆ! செத்தேன்!" என்று அலறியது. பிறகு, ஒரு நிண்ட முக்கல், விம்மல், அப்புறம் நிச்சப்தம்! சகிக்க முடியாத நிச்சப்தம்!



முதல் ஓலத்திலேயே எஸ்ராஜும் செங்கோடனும் சண்டையை நிறுத்திவிட்டார்கள். மறுஓலத்திற்குப் பிறகு இருவரும் குடிசையை நோக்கி ஓடினார்கள். அவர்களுக்கு எதிர்ப்புறமாக வந்த குமாரி பங்கஜா கேணி மேட்டில் செங்கோடன் மேல் முட்டிக் கொண்டாள்.



"பங்கஜா! என்ன? என்ன?" என்று நடுங்கிய குரலில் எஸ்ராஜ் கேட்டான்.



"தெரியவில்லையே? ஐயோ! தெரியவில்லையே" என்றாள் பங்கஜா.



"சத்தம் குடிசைக்குள்ளிருந்தா?"



"ஆமாம்."



"நீ அங்கே-குடிசைக்குள்ளே-போனாயா?"



"இல்லை; வாசலண்டை போனதும் சத்தம் கேட்டது. திரும்பிவிட்டேன்!"



"கவுண்டரே! தீக்குச்சிப் பெட்டி வைத்திருக்கிறீரா? உள்ளே போய்ப் பார்க்கவேண்டும்?"



"பார்க்க வேண்டும்; பார்க்கத்தான் போகிறேன். முதலில் நிஜத்தைச் சொல்! எதற்காக இங்கே இந்த நேரத்தில் வந்தாய்? உன்னுடன் யார் வந்தது? குடிசைக்குள் யார்? என்ன செய்தீர்கள்?"



"அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன், கவுண்டரே! முதலில் உள்ளே போய்ப் பார்க்கலாம்."



"அப்படியானால் நீங்கள் இரண்டு பேரும் என்னுடன் வாருங்கள். ஓடிப் போய்விடாதீர்கள்!"



"சத்தியமாய் நாங்கள் ஓடவில்லை. எப்படி ஓட முடியும்? நடந்ததைத் தெரிந்துகொள்ளாமல்?... நீர் முதலில் தீக்குச்சிப் பெட்டியைக் கண்டுபிடித்து விளக்கைப் பொருத்தும்!"



நிலா வெளிச்சத்தில் எஸ்ராஜ், பங்கஜா இவர்களுடைய முகங்களைச் செங்கோடன் பார்த்தான். அந்த முகங்களில் பீதி குடிகொண்டிருந்தது. அவர்களுடைய கால்களும் கைகளும் வெடவெடவென்று நடுங்கின.



செங்கோடனுக்கும் திகிலாய்த்தான் இருந்தது. ஆயினும் மர்மம் இன்னதென்று தெரிந்துகொள்ள அவன் ஆவல் கொண்டிருந்தான். அதுமட்டுமா? சாம்பல் குவிந்த அடுப்பின் அடியில் யாருக்கும் தெரியாது என்று எண்ணிப் புதைத்து வைத்திருந்த பணம் என்ன ஆயிற்று? பரபரப்புடன் செங்கோடன் மேலே நடந்தான். தென்னை மரத்துக்குப் பின்னால் குடிசைச் சுவர் ஓரமாக ஒரு நிழல் ஒரு கணம் தெரிந்து உடனே மறைந்தது! சீச்சீ! செங்கோடா! உனக்குக் கூடவா இந்தப் பிரமை! பேய், பிசாசு, பூதம் எல்லாம் வெறும் பொய் என்பாயே? அறிவு எங்கே போயிற்று?



குடிசையின் முன்கூரை முகப்பில் செங்கோடன் வழக்கமாகத் தீப்பெட்டி வைப்பது வழக்கம். ஹரிக்கன் லாந்தரைச் சுவருக்கு வெளியே நீண்டிருந்த மூங்கில் கழியில் கட்டித் தொங்கவிடுவது வழக்கம். தீப்பெட்டியை வழக்கமான இடத்திலிருந்து எடுத்துக் கொண்டான்; லாந்தரையும் எடுத்துப் பொருத்தினான்.



லாந்தர் வெளிச்சத்தில் குடிசையின் வாசற் கதவு திறந்து உட்புறமாகச் சுவரோடு சாத்தியிருந்தது தெரிந்தது. திறந்திருந்த வாசற்படியின்மேல் சில இரத்தத் துளிகள் சிந்தியிருந்தன. இன்னும், அதோ இரத்தத்தைப் போலவே சிவப்பாகக் கிடந்து பளபளக்கும் பொருள் என்ன? செங்கோடன் குனிந்து அதைக் கையில் எடுத்துக் கொண்டான். பின்னால் வந்தவர்கள் அறியாதபடி அதை மடியில் செருகிக் கொண்டான். பிறகு குடிசைக்குள்ளே சென்றான்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
15. பதினைந்தாவது அத்தியாயம்



சேலத்திலிருந்து நாமக்கல்லுக்குச் சென்ற வழியில் மோட்டார் சாரதி சொன்ன கதை இது என்பதை நேயர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவர் சொன்ன கதையை ஏதோ எனக்குத் தெரிந்த பாஷையிலும் பாணியிலும் எழுதிக்கொண்டு போகிறேன். சேலம் ஜில்லா கிராமங்களில் குடியானவர்கள் கையாளும் சக்தி வாய்ந்த பேச்சு நடையை என்னால் அவ்வளவு நன்றாகக் கையாள முடியுமா? அல்லது அவர்களுடைய பேச்சில் காணும் ரஸத்தைத்தான் எழுத்திலே கொண்டு வர முடியுமா?



செங்கோடன் லாந்தரைப் பொருத்திக்கொண்டு குடிசைக்குள்ளே நுழைந்த கட்டத்தில் கதை நின்று போயிற்று. ஏனெனில், அதற்குள் நாமக்கல் வந்துவிட்டது. "இந்த நாமக்கல்லுக்குக் கொஞ்சங்கூடப் புத்தியில்லை. இன்னும் கொஞ்சம் அப்பால் தள்ளியிருக்கக் கூடாதோ! கதையின் நடுவில் வந்து குறுக்கிட்டு விட்டதே!" என்று நொந்து கொண்டேன்.



நாமக்கல்லுக்கு வந்த காரியம் முடிந்து முன்னிரவில் திரும்பிப் புறப்பட்டோ ம். மணி சுமார் ஒன்பது இருக்கும். காலையில் போட்ட தூற்றலைக் காட்டிலும் இப்போது கொஞ்சம் அதிகமாகவே விழுந்துகொண்டிருந்தது. 'மழை' என்று கூட அதைச் சொல்லலாம். மேலே வானமும் கீழே நான்கு திசைகளும் இருட்டியிருந்தன. மோட்டார் வண்டியின் முன் விளக்குகள் அந்த இருட்கடலைக் கிழித்துக் கொண்டு சாலையில் சற்று தூரத்துக்கு வெளிச்சமாக்கிக் கொண்டு சென்றன. அந்தப் பிரகாசமான ஒளியில் மழைத்துளிகள் வைரத்துளிகளாக ஒளிர்ந்தன. ஒவ்வொரு சமயம் வானத்தை வெட்டிய மின்னல் பூமியில் நெடுந்தூரத்தைப் பிரகாசமாக்கி விஸ்தார வெட்டவெளிகளையும் ஆங்காங்கு நின்ற மொட்டைப் பாறைகளையும் குட்டை மரங்களையும் ஒரு கணம் காட்டி விட்டு மறைந்தது.



பாக்கிக் கதையைக் கேட்க வேண்டும் என்ற என் ஆர்வத்தை மோட்டார் சாரதியிடம் தெரிவித்துக் கொண்டேன். அவரும் கதையைத் தொடங்கினார்:



*******



குடிசைக்குள் செல்லும்போதே செங்கோடனின் உள்ளம் பதைபதைத்தது. என்னத்தைப் பார்க்கப் போகிறோமோ என்று திகில் கொண்டிருந்தது. அங்கே அவன் பார்த்த காட்சியோ பதைபதைப்பையும் திகிலையும் அதிகமாக்கியது. மனிதன் ஒருவன் அலங்கோலமாய் விழுந்து கிடந்தது தெரிந்தது. தன்னைக் கெடுப்பதற்கு முயன்ற இருவரில் ஒருவன் தான் அவன்! பங்காருசாமி என்ற பெயரை உடையவன். அவன் பக்கத்தில் ஒரு கூரிய கத்தி கிடந்தது. அதில் இரத்தக் கறை பட்டிருந்தது. அப்புறம், அடுப்பைத் தோண்டி எடுத்து அப்பாற்படுத்திவிட்டு அங்கே குழி தோண்டியிருந்ததையும் அவன் பார்த்தான். குழி காலியாயிருந்ததையும் கவனித்தான். ஆனால் அந்தச் செம்புக் குடம் பக்கத்தில் எங்கேயாவது இருக்கிறதா? இல்லை! மாயமாய் மறைந்துவிட்டது! தான் எண்ணியது சரிதான்! ஆனால் இது என்ன? ஒரு சிறிய பெட்டி திறந்து கிடக்கிறதே! அதற்குள்ளே... ஆத்தாடி! நோட்டுக்கள்! ரூபாய் நோட்டுக்கள்! பெட்டிக்கு வெளியில் பக்கத்திலும் ரூபாய் நோட்டுக்கள்! இன்னும் ஏதோ கறுப்பாகச் சுருள் சுருளாகக் கிடந்தது! ஒன்றும் புரியாமல் திக்பிரமையுடன் செங்கோடன் அந்தப் பெட்டிக்குச் சமீபத்தில் சென்று குனிந்து பார்த்தான். அப்போது தரையில் விழுந்து கிடந்த மனிதன் முனகினான். செங்கோடன் விளக்கை அவன் பக்கம் திருப்பினான். அந்த மனிதன் கொஞ்சம் தலையைத் தூக்கித் தன் சிவந்த கண்களினால் செங்கோடனை விழித்துப் பார்த்தான்! அதனால் செங்கோடனுக்குக் குலை நடுக்கம் ஏற்பட்டது.



"நீயா....! நீயா வந்து தொலைந்தாய்....அவள் எங்கே! அந்தப் பெண் பேய் எங்கே?-அவள்தான் என்னைக் கொன்றவள்!" என்று மெல்லிய குரலில் முணு முணுத்தான், கீழே கிடந்த பங்காருசாமி. "பாவி! சண்டாளி...!" என்று சபித்துக்கொண்டே எழுந்திருக்க முயன்றான். முடியாமல் கீழே விழுந்தான். அவன் தலை சாய்ந்தது. கோரமாக விழித்த சிவந்த விழிகள் மூடிக் கொண்டன.



செங்கோடன் உடனே மந்திர சக்தியிலிருந்து விடுபட்டவன் போலானான். கீழே கிடந்த இரத்தம் தோய்ந்த கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தான். அந்தச் சமயத்தில்தான் எஸ்ராஜும் குமாரி பங்கஜாவும் தயக்கத்துடன் நெருங்கி வந்து குடிசைக்குள்ளே எட்டிப் பார்க்க முயன்றார்கள்.



அவர்களைப் பார்த்ததும், செங்கோடன் ஆவேசம் வந்தவனைப் போல் கத்தியைக் காட்டி, "உள்ளே வராதீர்கள்! வந்தால் உங்களையும் பலி கொடுத்துவிடுவேன்!" என்று கத்தினான். அவர்கள் பயந்து அப்பால் விலகிக் கொண்டார்கள். செங்கோடன் வெளியில் வந்து குடிசையின் கதவைச் சாத்தினான். "ஓகோ!", "கொலை!", "கொலை!" என்று கத்திக்கொண்டு கேணியைப் பார்த்து ஓடி மேட்டின் மீது ஏறினான். கேணி ஓரத்தில் வந்ததும் மடியை அவிழ்த்து அதிலிருந்த பொருளைக் கேணியில் விழும்படி செய்தான்.



அதே சமயத்தில் பக்கத்து தென்னை மரத்துக்குப் பின்னாலிருந்து போலீஸ் கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டர் வெளிப்புறப்பட்டார்.



"அப்பனே, செங்கோடா! என்ன விஷயம்? எதற்காக இப்படி அலறுகிறாய்? கேணியில் என்னத்தைப் போட்டாய்?" என்றார்.



ஒரு நிமிஷ நேரம் செங்கோடன் திகைத்து நின்று விட்டு "நானா? நான் ஒன்றும் கேணியில் போடவில்லை! இனிமேலே தான் போடப் போகிறேன்!" என்றான்.



"என்னத்தைப் போடப் போகிறாய்?"



"ஒரு மனுஷனைத் தூக்கிப் போடப்போகிறேன்."



"மனுஷனையா? மனுஷனைக் கேணியிலே தூக்கிப் போடலாமா? செத்துப் போவானே?"



"அவன் முன்னமே செத்துப் போய்விட்டானுங்க!"



"யார் செத்துப் போனது? செத்தவனை எதற்காகக் கேணியில் போடப் போகிறாய்?"



"ஒருவனைக் கொலை செய்தால், அவனைச் சாக்கிலே கட்டிக் கிணற்றிலே போடலாம் என்று சினிமாவிலே காட்டினாங்களே!"



"யாரை நீ கொலை செய்தாய்?"



"அந்தப் பங்காருசாமியை நான் கொலை செய்து விட்டேன்! இந்தக் கத்தியினால்தான்...!" என்று செங்கோடன் சொன்னபோது, அவன் கை கொஞ்சம் நடுங்கிற்று.



"இங்கே கொடு, அந்தக் கத்தியை!" என்று போலீஸ்காரர் கேட்டதும் செங்கோடன் கொடுத்டுவிட்டான்.



"சரி! வா! நீ கொன்ற ஆளைப் போய்ப் பார்க்கலாம். அவனைத் தூக்கிப் போடுவதற்கு நானும் ஒரு கை கொடுக்கிறேன்!" என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரர் குடிசையை நோக்கிப் போனார். செங்கோடனும் அவர் பின்னால் போனான்.



குடிசை வாசலில் எஸ்ராஜும் குமாரி பங்கஜாவும் நின்று கொண்டிருந்தார்கள். பங்கஜா அழுது கொண்டிருந்தாள். எஸ்ராஜ் அவளைத் திட்டிக்கொண்டிருந்தான். கான்ஸ்டேபிளைப் பார்த்ததும் பங்கஜா, "ஐயோ! இங்கேயும் வந்துவிட்டாயா! இந்தப் பாவிகளால் என் கதி இப்படியாச்சு!" என்று அலறினாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
16. பதினாறாவது அத்தியாயம்



போலீஸ்காரர் அங்கே அந்தச் சமயத்தில் எப்படி வந்தார் என்று சொல்வதற்குக் கொஞ்சம் கதையை பின்னால் கொண்டுபோக வேண்டும். கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டர் முன்னம் சேலத்தில் வேலை பார்த்து வந்தார். அடிக்கடி அவர் 'கை காட்டி மரவேலை செய்ய வேண்டியதாயிருக்கும். அதாவது வீதி முனையில் நாற்சந்தியின் நடுவில் நின்று வண்டிகள் போகவும் நிற்கவும் கைகாட்ட வேண்டி வரும். அப்படி நின்றிருந்த நாட்களில் ஒருநாள், நடுப்பகலில் ஓர் இளம்பெண் அவரிடம் வந்து, "போலீஸ்கார ஐயா! நேற்று முதல் சாப்பிடவில்லை! பசியினால் பிராணன் போய்விடும்போல் இருக்கிறது. ஒரு நாலு அணாக் கொடுத்தால் ஓர் அநாதைப் பெண்ணைக் காப்பாற்றிய புண்ணியம் கிடைக்கும்" என்றாள். போலீஸ்காரருக்குப் பாவ புண்ணியத்தில் அவ்வளவு நம்பிக்கையில்லை. ஆயினும் அந்தப் பெண்ணின் அநாதைத் தோற்றத்தைப் பார்த்துப் பரிதாபங் கொண்டார். "நீ யார், அம்மா! ஏன் உன்னை அநாதை என்று சொல்லிக்கொள்கிறாய்" என்றார். "ஆம் ஐயா! நான் அநாதைதான். நாங்கள் மலாய் நாட்டில் கிள்ளானில் இருந்தோம். அப்பா பெரிய வியாபாரி. யுத்தம் ஆரம்பித்த சில நாளைக்கெல்லம் புறப்பட்டு ஓடி வந்து விட்டோ ம். வழியிலே கப்பலிலேயே அப்பா செத்துப்போய் விட்டார். நானும் என் தம்பியும் அம்மாவும் மட்டும் இங்கே வந்து சேர்ந்தோம். இங்கே நாங்கள் எதிர்பார்த்து வந்த பந்துக்கள் யாரும் இல்லை. மலாய் நாட்டிலிருந்து சொத்து வருவதற்கும் வழியில்லை. ஜப்பான்காரன் பறிமுதல் செய்து விட்டான். நாங்கள் கையோடு கொண்டு வந்த நகை நட்டுக்களை விற்று இத்தனை நாள் காலட்சேபம் செய்தோம். எல்லாம் தீர்ந்துவிட்டது! இப்போது பிச்சை வாங்கிப் பிழைக்க வேண்டியதாயிருக்கிறது!" என்று சொன்னாள்.



"ஐயோ! பாவம்! நீ படித்த பெண் மாதிரி தோன்றுகிறதே! ஏதாவது வேலை பார்த்துக்கொள்வதுதானே?" என்றார் போலீஸ் கான்ஸ்டேபிள்.



"வேலைக்கு நான் எவ்வளவோ பிரயத்தனம் செய்தேன்; கிடைக்கவில்லை. வேலை கேட்கப் போன இடத்தில் ஆண் பிள்ளைகளாயிருந்தால் கண்ணை அடித்து துன்மார்க்கத்துக்குக் கூப்பிடுகிறார்கள். பெண்களாயிருந்தால் நன்றாகத் திட்டி அனுப்புகிறார்கள். நான் என்ன செய்யட்டும்!" என்றாள் அந்தப் பெண்.



"வாஸ்தவந்தான்; உலகம் அப்படிக் கெட்டுப் போய்க் கிடக்கிறது. மனிதர்களுடைய நெஞ்சில் இரக்கம் என்பதே இல்லை!" என்றார் போலீஸ்காரர். இப்படிச் சொல்லி விட்டு நாலு அணாவுக்கு எட்டு அணாவாகக் கொடுத்து அனுப்பினார்.



அந்தப் பெண் போய் விட்டாள். ஆனால் போலீஸ்காரருடைய மனத்திலிருந்து அவள் போகவில்லை. சில நாளைக்கெல்லாம் மறுபடியும் அந்தப் பெண், போலீஸ்காரரை சந்தித்தாள். சாப்பாட்டுக்கு நாலு அணாக் கொடுக்கும்படி கேட்டாள். போலீஸ்காரர் ஒரு ரூபாய் கொடுத்தார். அவர்களுக்குள் மேலும் கொஞ்சம் பழக்கமும் சிநேகமும் ஏற்பட்டன. பெண்ணின் பெயர் பங்கஜம் என்று தெரிந்து கொண்டார். ஒழிந்த நேரங்களில் அந்தப் பெண்ணின் வீட்டுக்குப்போய் அவளுடனும் அவள் அம்மாவுடனும் பேசிக் கொண்டிருப்பதில் அவர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.



போலீஸ்காரருடைய முதல் மனைவி காலமாகி விட்டாள். இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ளும் எண்ணமே அவருக்கு இருக்கவில்லை. ஆனால் குமாரி பங்கஜாவைப் பார்த்த பிறகு அவருடைய மனம் சிறிது சிறிதாக மாறிக் கொண்டு வந்தது.



இன்னொரு நாள் வழக்கம்போல் போலீஸ்காரர் கைகாட்டி உத்தியோகம் செய்த இடத்துக்குக் குமாரி பங்கஜா வந்து "வீட்டில் அரிசி ஆகிவிடது. ஒரு ரூபாய் தர முடியுமா? உங்களை அடிக்கடி கேட்க வெட்கமாயிருக்கிறது" என்றாள். போலீஸ்காரர், "ஏன் வெட்கப்படவேண்டும்? கூடிய சீக்கிரத்தில் நான் மாதா மாதம் வாங்கும் சம்பளத்தை அப்படியே உன்னிடம் கொண்டு வந்து மொத்தமாகக் கொடுக்கும் காலம் வரலாம், இல்லையா? உன் தாயாரைக் கூடக் கேட்டாகிவிட்டது. உனக்குச் சம்மதம் என்றால் உடனே கலியாணந்தான்!" என்றார்.



"சீ! நீங்களும் மற்றவர்களைப் போலத்தானா?" என்றாள் பங்கஜா.



"மற்றவர்களையும் என்னையும் ஒப்பிட்டுப் பேசுகிறாயே! மற்றவர்கள் உன்னைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னார்களா?" என்று கேட்டார்.



"ஆமாம், பின்னே என்ன? எல்லோரும் என்னைக் கந்தர்வமணம் செய்துகொள்வதாகத்தான் சொன்னார்கள். ஓர் அநாதைப் பெண் அகப்பட்டால் நீங்கள் ஆண்பிள்ளைகள் என்ன வேணுமானாலும் செய்வீர்கள்! சீ சீ! உன்னுடைய பணம் எனக்கு வேண்டாம்!" என்று ரூபாயை விட்டெறிந்துவிட்டுக் குமாரி பங்கஜா நடையைக் கட்டினாள்.



போலீஸ்காரர் மிக்க ஏமாற்றத்துடனும் வருத்தத்துடனும் அவள் போவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவள் பத்து அடி தூரம் போனதும் ஒரு விசித்திரமான சம்பவம் ஏற்பட்டது. அந்த வழியே வந்த சைக்கிள்காரன் ஒருவன் குமாரி பங்கஜாவின் மீது தன் வண்டியை மோதினான். அந்த வேகத்தில் அவள் கையில் இருந்த சிறிய பெட்டி தவறிக் கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அதன் கதவு திறந்தது. திறந்த பெட்டிக்குள் கான்ஸ்டேபிள் பார்த்தார். ரூபாய் நோட்டுக் கத்தைகளாகக் குவித்து வைத்திருந்தது. சில நோட்டுகள் வெளியிலும் சிதறி விழுந்தன. குமாரி பங்கஜா அவசர அவசரமாக அந்த நோட்டுகளைப் பொறுக்கி எடுத்துப் பெட்டியில் வைத்து மூடிப் பூட்டினாள். அதே சமயத்தில் கடைக் கண்ணால் போலீஸ்காரர் தன்னைக் கவனிக்கிறாரா என்று பார்த்துக் கொண்டாள். இப்படிப் பூட்டியதும் அவசரமாக நடையைக் கட்டினாள்.



போலீஸ்காரர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். பெட்டி நிறைய ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு தன்னிடம் அரிசி வாங்கப் பணம் இல்லை என்றாளே? இது என்ன விந்தை? ஆரம்பத்திலிருந்தே என்னை ஏமாற்றிக்கொண்டு வருகிறாளா? அல்லது இன்றைக்குத்தானா? திடீரென்று இவ்வளவு பணம் இவளுக்கு எப்படிக் கிடைத்தது?



மறுநாள் குமாரி பங்கஜா அவரைத் தேடிக்கொண்டு வந்தாள். "நேற்றே ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். ஆனாலும் உங்கள் மனத்தைச் சோதிக்க விரும்பியதால் சொல்லவில்லை. மலாய் நாட்டில் எங்கள் வீட்டையும் தோட்டங்களையும் விற்றுப் பணம் அனுப்பியிருக்கிறார்கள். நேற்றுத்தான் வந்தது. ஒரு சினேகிதர் வீட்டில் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வந்தேன்!" என்றாள்.



அவ்வளவு பணத்தை நம்பிக் கொடுக்கும்படி அப்படிப்பட்ட சிநேகிதர் உனக்கு இருக்கிறாரா? அதைவிட பாங்கியில் போட்டு வைப்பதுதானே?" என்றார் போலீஸ்காரர்.



"பாங்கியிலே போட்டால் வட்டி எங்கே கொடுக்கிறார்கள்? நான் கொடுத்தது பங்காருசாமி என்பவரிடம். நல்ல இடத்தில் கடன் கொடுத்து நிறைய வட்டி சம்பாதித்துக் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்."



பங்காருசாமி என்பவன் 'கே. டி.' ஜாபிதாவில் இல்லையே தவிர, மற்றபடி அவன் பேரில் போலீஸ் இலாக்காவுக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. அப்படிப் பட்டவனிடமா இவள் பணத்தை நம்பிக் கொடுத்திருக்கிறாள்? ஐயோ! விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவானே? இன்னொரு சந்தேகமும் போலீஸ்காரரின் மனத்தில் தோன்றியது. அதைக் கேட்டுவிட்டார்:



"நேற்று எதற்காக என்னிடம் பணம் கேட்க வந்தாய்?" என்றார்.



"அதுவா? உங்களிடம் ஏதாவது ஒரு வியாஜத்தை வைத்துக்கொண்டு பேச வேண்டும் என்று இருந்தது. அதனாலே தான் வந்தேன். மன்னித்துக் கொள்ளுங்கள். நான் கஷ்ட தசையில் இருந்தபோது நீங்கள் செய்த உதவிகளுக்காக மிக்க வந்தனம். ஒரு நாள் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்த்துக் கொடுத்துவிடுகிறேன்!" என்று சொல்லிவிட்டு, விடு விடு என்று போய்விட்டள்.



போலீஸ்காரருக்கு அவள் சொன்ன சமாதானத்தில் நம்பிக்கை ஏற்படவில்லை. இந்தப் பேதைப் பெண்ணை அந்தப் பங்காருசாமி ஏதோ குழியில் கவிழ்க்கப் பார்க்கிறான் என்று சந்தேகித்தார். ஆகையால் குமாரி பங்கஜாவையும் பங்காருசாமியையும் கவனிக்கத் தொடங்கினார்.



திடீரென்று சேலத்திலிருந்து பங்காருசாமி, குமாரி பங்கஜா இருவரும் காணாமற் போனார்கள். பங்கஜாவின் தாயாரைப் போய்ப் பார்த்துக் கேட்டதிலும் தகவல் தெரியவில்லை.



போலீஸ்காரரின் மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தது. இந்த நிலையில் அவரைச் சேலத்திலிருந்து சின்னமநாயக்கன் பட்டிக்கு மாற்றினார்கள்.



அங்கே பங்காருவையும் பங்கஜாவையும் கண்டு போலீஸ்காரர் ஆச்சரியப்பட்டார். பங்கஜா ஒரு நாள் அவரைத் தனிமையில் சந்தித்துத் தன்னைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடினாள். போலீஸ்காரர் அப்படியே வாக்களித்தார். ஆயினும் இங்கே ஏதோ கிருத்திரிமம் நடக்கப்போகிறது என்ற சந்தேகம் அவர் மனத்தில் உதித்தது. ஆகையால் மேற்படி ஆசாமிகளுக்குத் தெரியாமலேயே அவர்களைக் கவனித்துக்கொண்டு வந்தார்.



போலீஸ்காரருடைய சந்தேகத்தை அதிகப்படுத்தும்படியான சம்பவம் ஒன்று ஒரு நாள் நேரிட்டது. நாமக்கல் சாலையில் அவர் போக நேரும்போதெல்லாம் பொய்மான் கரட்டையும் அந்தக் கரட்டின் சந்தில் தெரிந்த பொய் மானையும் பார்த்து வியக்காமல் போவதில்லை. 'அருகிலே போய்ப் பார்த்தால் இருட்டைத் தவிர ஒன்றுமில்லை; சாலையிலிருந்து பார்த்தால் தத்ரூபமாக அழகிய மான் தெரிகிறதே? இது என்ன விந்தை? எப்படி நேருகிறது?' என்று அடிக்கடி அவர் யோசிப்பதுண்டு. ஒரு நாளைக்குத் திடீரென்று மேற்படி குன்றின் குகையில் பொய்மானுடைய முழுத் தோற்றத்தையும் காண முடியாமற்போகவே, அவருக்கு ஒரே வியப்பாய்ப் போய்விட்டது. ஒரு காலும் ஒரு காதும் முகத்தில் பாதியும் மட்டும் தெரிந்தன. மானின் முழு உருவத்தைக் காணவில்லை. இந்த அதிசயத்தைக் கண்டுபிடிக்க எண்ணிக் குன்றின் மீது ஏறிப் பார்த்தார். பொய்மான் குகையில் ஒரு சாக்கு மூட்டையும் ஒரு கள்ளிப் பெட்டியும் வைக்கப்பட்டு இருந்தன. 'மானின் நிழல்தோற்றத்தின் மேல் இச்சாமான்களின் நிழல் எப்படியோ விழுந்திருக்கிறது! ஆகையினாலேதான், முழுமானின் அழகிய தோற்றம் கீழேயிருந்து பார்க்கும்போது காணப்படவில்லை' என்று தெரிந்து கொண்டார்.



அதிசயத்தின் காரணத்தைக் கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனால் குகையில் வைத்திருக்கும் சாமான்களின் மர்மங்களைக் கண்டுபிடித்தாக வேண்டும். அந்தச் சாமான்கள் யாருடையவை? எதற்காக அங்கே வைத்திருக்கிறார்கள்? சாமான்களை உடனே பரிசோதித்துப் பார்க்கப் போலீஸ்காரர் விரும்பவில்லை. மற்றவர்கள் யாரும் கவனிக்க முடியாத சமயத்தில் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வைத்தவர்கள் யார் என்றும் கவனித்து வரவேண்டும்.



பங்காருசாமி, பங்கஜா, எஸ்ராஜ்-அவர்களைச் சுற்றிக் கொண்டிருந்த செங்கோடன் ஆகியவர்கள் மீது போலீஸ்காரருக்குச் சந்தேகம் தோன்றியிருந்தது. பொய் மானை மறைந்த பொருள்களை அவர்களில் யாராவது வைத்திருக்க வேண்டும் என்றும், அவை திருட்டுப் பொருள்களாகயிருக்கலாம் என்றும் எண்ணினார்.



ஒரு நாள் பங்கஜா போலீஸ்காரரைத் தேடிப்பிடித்து "எனக்காக ஓர் உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டாள். செங்கோடனிடம் தன் கடிதத்தைக் கொண்டு போய்க் கொடுக்கச் சொன்னாள். கூழைக்காலன் புதையல் இருக்குமிடம் செங்கோடனுக்குத் தெரியும் என்றும், அவனிடமிருந்து அந்த இரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே அவனிடம் சிநேகங்கொண்டதாக நடிப்பதாகவும் கூறினாள். புதையல் கிடைத்தால் போலீஸ்காரருக்கும் பங்கு கொடுப்பதாகச் சொன்னாள். போலீஸ்காரர் மர்மம் இன்னதென்று கண்டு பிடிக்கும் நோக்கத்துடன் கடிதத்தைக் கொண்டு போய்க் கொடுக்கச் சம்மதித்தார்.



மறுநாள் பொய்மான் கரட்டுக் குகையில் மானின் முழு உருவமும் தெரிந்தது. ஆகையால், தான் செங்கோடக் கவுண்டனுக்குக் கடிதம் கொடுக்கப் போன சமயத்தில் ஆசாமிகள் அச்சாமான்களை எடுத்துக் கொண்டு விட்டார்கள்! அவை என்னவாயிருக்கும்?



மறுபடியும் போலீஸ்காரர் ஏமாற விரும்பவில்லை. செங்கோடன் பொய்மான் கரடுக்குப் பின்னால் குமாரி பங்கஜாவைச் சந்தித்ததும் செங்கோடனுடைய குடிசையை நோக்கிச் சென்றார். மற்ற இரண்டு மனிதர்களும் அங்கே வருவார்கள் என்பது நிச்சயம். ஆகையால் முன்னாலேயே போய்க் கேணிக்கரை மேட்டில் தென்னை மரத்தின் பின்னால் மறைந்து கொண்டார். அங்கிருந்து பார்த்தால் குடிசையின் சமீபத்தில் சுற்றுப்புறமெல்லாம் நன்றாய்த் தெரியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் எதிர்பாராதது ஒன்று நிகழ்ந்துவிட்டது. போலீஸ்காரர் போன திசையை மோப்பம் பிடித்துக்கொண்டு அவருடைய நாயும் செங்கோடனுடைய குடிசையை நோக்கி வந்தது. குடிசைக்குச் சமீபத்தில் அதன் குரைப்புச் சத்தமும், மரண ஓலமும் போலீஸ்காரருக்குக் கேட்டது. அவருடைய இரத்தம் கொதித்தது. ஆனாலும் கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டருக்கு டியூடி என்றால் டியூடிதான்; வேலை என்றால் வேலைதான்! ஒரு பெரிய மர்மத்தைக் கண்டுபிடிக்கப் போகிற கட்டத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு, காரியத்தைக் கெடுத்துவிட விரும்பவில்லை! நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வெளிப்பட வேண்டிய சமயத்தில் வெளிப்பட்டு வந்தார்.



குடிசைக்கு வெளியில் செங்கோடனை நிற்கச் சொல்லி விட்டுப் போலீஸ்காரர் உள்ளே போனார். சுற்றுமுற்றும் பார்த்தார். கீழே விழுந்து கிடந்தவனையும் லாந்தர் வெளிச்சத்தில் கூர்ந்து கவனித்தார். கவனித்துவிட்டு அவர் வெளியில் வந்து செங்கோடனைப் பார்த்து, "ஏனப்பா! நீயா கொலை செய்தாய்? யாரோ பெண்பேய் தன்னைக் கொன்றதாகவல்லவா உள்ளே கிடக்கிறவன் பழி சொல்லுகிறான்?" என்றார்.



"ஐயோ! என்பேரிலா பழி சொல்லுகிறான்? எனக்கு ஒன்றும் தெரியாதே? நான் உள்ளேயே போகவில்லையே?" என்று பங்கஜா கூவினாள்.



"கொலைகாரி! ஏன் பொய் சொல்லுகிறாய்? என்னையும் இந்தக் கவுண்டனையும் சண்டைபோட விட்டுவிட்டு நீதானே குடிசைக்குத் தனியாகப் போனாய்?" என்றான் எஸ்ராஜ்.



"இப்படி அபாண்டமாய்ப் பொய் சொல்லுகிறாயே?" என்று பங்கஜா ஓவென்று அலறி அழத் தொடங்கினாள்.



சேலத்திலிருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முதலிய மேலதிகாரிகள் இரவுக்கிரவே வந்து சேர்ந்தார்கள். போலீஸ் அதிகாரிகள் மட்டும் அல்ல. அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் ஜனங்கள் வந்து கூட ஆரம்பித்து விட்டார்கள். செங்கோடனுடைய புதையலை யாரோ திருடன் அடித்துக் கொண்டு போகப் பார்த்தான் என்றும் அதற்காகச் செங்கோடன் அவனைக் கொன்று விட்டான் என்றும் அக்கம் பக்கங்களில் வதந்தி பரவி விட்டது.



ஜனங்களையெல்லாம் தடுத்துக் குடிசைக்குத் தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டுப் போலீஸ் இன்ஸ்பெக்டரை மட்டும் கான்ஸ்டேபிள் உள்ளே அழைத்துச் சென்றார்.



பங்காருசாமியின் உதடுகள் இன்னும் ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தன. "அந்தப் பெண் பிள்ளையை விடாதீர்கள்! அவள்தான் கொலைகாரி" என்ற வார்த்தைகள் இன்ஸ்பெக்டரின் காதிலும் விழுந்தன.



பிறகு காயம் பட்ட அந்த மனிதனை எடுத்துப் போவதற்கு இன்ஸ்பெக்டர் ஏற்பாடு செய்தார். செங்கோடன், எஸ்ராஜ், குமாரி பங்கஜா ஆகிய மூவரையும் கைது செய்து கையில் விலங்கு போட்டுக் கொண்டு போனார்கள்.



இதற்குள்ளே சிவராமலிங்கக் கவுண்டரின் குடும்பமெல்லாம் அங்கே வந்துவிட்டது! செம்பவளவல்லி செங்கோடனைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் பெருக்கினாள். அவளுடைய மனத்தில் சொல்ல முடியாத வேதனை குடிகொண்டிருந்தது என்பதை அவளுடைய முகக்குறி தெரியப்படுத்தியது. வேதனை இல்லாமல் எப்படி இருக்கும்? இரண்டு நாளைக்கெல்லாம் கலியாணத்துக்குத் தேதி வைத்திருக்கிறபோது இந்த மாதிரி கொலைக் குற்றம் சாட்டி மாப்பிள்ளை கையிலே விலங்கு போட்டுக் கொண்டு போனால் கலியாணப் பெண்ணின் உள்ளம் துடிக்காமல் என்ன செய்யும்?



வேதனைக்கு உள்ளாகியிருந்த செம்பவளவல்லிக்குச் செங்கோடக் கவுண்டன் ஜாடைமாடையாகவும் வாய் வார்த்தை மூலமாகவும் பலவிதமாக ஆறுதல் கூறினான்.



"நீ கொஞ்சங்கூடக் கவலைப்படாதே! என்னை ஏழு வருஷம் ஜெயிலில் போட்டாலும் சரி, திரும்பி வந்து உன்னையே கட்டிக் கொள்கிறேன்!" என்று அவன் சொன்னதைக் கேட்டவர்கள் சிரித்தார்கள்.



"எதற்காகச் சிரிக்கிறீர்கள்? சிரிப்பதற்கு என்னத்தைக் கண்டுவிட்டீர்கள்?" என்று செங்கோடன் அதட்டிவிட்டு, மறுபடியும் செம்பாவைப் பார்த்துச் சொன்னான்: "நான் இல்லாதபோது நீதான் வயல் காடுகளைப் பார்த்துக் கொள்ளவேண்டும். எல்லாவற்றையும் நீதான் கவனித்துக் கொள்ளவேண்டும். தெரிகிறதா? உன் அப்பா கவனிக்க மாட்டார்; அலட்சியமாய் இருந்துவிடுவார்; நீயும் அலட்சியமாய் இருந்துவிடாதே! என் சொத்தெல்லாம் இனிமேல் உன்னுடையதுதான். கேணி வற்றும்படி தண்ணீர் இறைத்துவிடப்போகிறார்கள்; ஒட்ட இறைத்துவிட்டால் தண்ணீர் ஊறாது. ஜாக்கிரதை! உன் அழகான தம்பிமார்கள் சோளக் கொண்டைகளைத் தீர்த்துவிடப் போகிறார்கள். கொல்லையில் கால் வைக்காமல் பார்த்துக்கொள். அப்படி ஏதாவது உன் தம்பிகள் செய்தார்களோ, தூக்கு மேடைக்குப் போனாலும் திரும்பி வந்து அவர்களுடைய முதுகுத் தோலை உரித்துப் போடுவேன்! ஜாக்கிரதையாய் இருக்கும்படி சொல்லிவை...!"



இப்படிச் செங்கோடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனைப் போலீஸ்காரர்கள் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள்!



செம்பா அங்கேயே விம்மிக் கொண்டு நின்றாள். அவளுக்குச் சமாதானம் சொல்லவே முடியவில்லை!
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
17. பதினேழாவது அத்தியாயம்



மறுநாள் சேலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாசராவ் நாயுடு 374ஆம் நம்பர் கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டரைக் கூப்பிட்டு, "அப்பா 374! உன்னை என்னமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீ சுத்த உபயோகமற்றவன்!" என்றார்.



"வந்தனம், ஸார்! நான் உபயோகமற்றவனாயிருந்தாலும் சுத்த உபயோகமற்றவன் என்றாவது சொன்னீங்களே! இந்தப் போலீஸ் இலாக்காவில் சுத்தமாயிருக்கிறதே பெரிய காரியந்தானே?" என்றார் நம்பர் 374.



"உனக்கு இப்போது வாய் அதிகமாகிவிட்டது. காரியத்தில் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!"



"இப்படிச் சொல்லிவிட்டீர்களே, ஸார்! உங்களிடம் நான் ஒப்புக்கொண்ட காரியத்தைச் செய்து முடித்தேனா, இல்லையா?"



"அப்படி என்ன பிரமாதமான காரியத்தைச் சாதித்துவிட்டாய்?"



"பிரதமான காரியமோ என்னமோ, எனக்குத் தெரியாது, ஸார்! இந்த ஜில்லாவில் கள்ள நோட்டு நடமாடத் தொடங்கியிருப்பதாக நீங்கள் ஒரு நாள் சொல்லிக் கவலைப்பட்டீர்கள். நான் குற்றவாளிகளைக் கண்டு பிடித்துத் தருவதாக ஒப்புக்கொண்டேன். கண்டுபிடித்துக் கொடுத்தேனா, இல்லையா?"



"குற்றவாளிகளோடு, குற்றவாளியில்லாத 'இடியட்' ஒருவனையும் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறாய்! அவன் கேஸையே குட்டிச் சுவராக அடித்துவிடுவான் போல் இருக்கிறது."



"செங்கோடக் கவுண்டனைத்தானே சொல்லுகிறீர்கள்!"



"அவனையேதான்! அவனை உண்மை பேசச் செய்தால் ஒழிய இந்த கேஸில் வீண் குழப்பம் ஏற்படும்."



"அவனையும் உடந்தைக் குற்றத்துக்காகப் பிடித்துத் தீட்டினால் போகிறது!"



"அவனையும் சேர்த்தால் கேஸ் உருப்படாமல் போய்விடும். நம் தரப்பில் அவன் சாட்சி சொன்னால் கேஸை ருசுப்படுத்துவது சுலபம்."



"இதில் என்ன கஷ்டம்? 'உன்னை மன்னித்துவிடுகிறோம், என்று சொன்னால், நாம் சொல்லிக் கொடுக்கிறபடி சாட்சி சொல்லுகிறான்!"



"அது நடக்கிற காரியம் என்று தோன்றவில்லை. கிளிப்பிள்ளையைப் போல், 'நான் தான் கொன்றேன்; நான் தான் கொன்றேன்' என்று உளறிக் கொண்டிருக்கிறான். எதற்காக அப்படி உளறுகிறான் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது! நீ அவனுக்கு அந்தரங்கமானவனைப் போல் நடித்து உண்மையை அறியவேண்டும்."



"பிரயத்தனப்பட்டுப் பார்க்கிறேன், ஸார்! ஆனால் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் தோன்றியிருக்கிறதா, எதற்காக அவன் அப்படி உளறுகிறான் என்று?"



"ஒரு சந்தேகம் தோன்றுகிறது. இந்தப் பெண் அழகு சுந்தரி இருக்கிறாளே-சினிமா உலகத்தையே ஒரு கலக்குக் கலக்கப் போகிற வருங்கால பிரபல நட்சத்திரம்!-இந்தக் குமாரி பங்கஜா கள்ள நோட்டுப் பங்காருசாமியைக் குத்திக் கொன்றுவிட்டதாக செங்கோடன் நினைத்துக் கொண்டிருக்கிறான்! அவள்பேரில் இந்தப் பைத்தியக்காரனுக்கு மோகம்போல் இருக்கிறது. அவளைக் காட்டிக் கொடாமல் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு இவன் இப்படி பிதற்றுகிறான்...! இது என்னுடைய ஊகம். உனக்கு ஏதாவது ஊகம் தோன்றுகிறதா?"



"மன்னிக்கவேணும், ஸார்! எனக்கு ஒன்றும் தோன்றவில்லை."



"இதோ பார், சின்னமுத்து! நீ கூட எதையாவது மறைக்கப் பார்க்கிறாயோ, தெரிந்ததையெல்லாம் சொல்லாமல் இருக்கிறாயோ என்று எனக்குச் சந்தேகம் ஏற்படுகிறது."



"இல்லவே இல்லை, ஸார்! நான் எதற்காக மறைக்க வேணும்? இந்தக் கேஸில் உண்மை வெளியாகிக் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்தால், எனக்குப் பிரமோஷன் கிடைக்கும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்! எஜமான் முன்னமே வாக்குக் கொடுத்திருக்கிறீங்களே!"



"அதை நான் மறந்துவிடவில்லை. இந்தக் கேஸ் மட்டும் சரியாக ருசுவாகி குற்றவாளிகளுக்கு 'கன்விக்ஷன்' கிடைக்கட்டும்; உன்னை உடனே மேலே தூக்கிப் போடும்படி அவசியம் சிபாரிசு செய்கிறேன்!"



"எஜமான்! அவசரத்தில் என்னைத் தூக்கிப் போடுவதற்குப் பதிலாகத் தூக்கிலே போடச் சிபாரிசு செய்து விடாதிங்க!"



"சேச்சே! உன்னைத் தூக்கிலே போட்டால், அப்புறம் நம்ம டிபார்ட்மென்டு என்ன ஆகிறது?"



கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டர் இன்ஸ்பெக்டரின் அறையிலிருந்து வெளியில் சென்றபோது, "எல்லாம் இப்போது தேன் ஒழுகப் பேசுவீங்க! அப்புறம் 374ஆம் நம்பரை அடியோடு மறந்துவிட்டு உங்கள் சுயகாரியத்தைப் பார்த்துக் கொள்ளுவீங்க!" என்று முணுமுணுத்துக்கொண்டே போனார். ஆனாலும் தம்முடைய கடமையைச் செய்வதில் அவர் பின்வாங்கவில்லை. போலீஸ் லாக்அப்பில் இருந்த செங்கோடக் கவுண்டனிடம் சென்றார்.



"தம்பி! இப்படியெல்லாம் அநாவசியமாகப் பொய்யும் புளுகும் சொல்லி அகப்பட்டுக்கொண்டாயே? உன்னைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது!" என்றார்.



செங்கோடக் கவுண்டன் மேலே உச்சி மேட்டைப் பார்த்துக் கொண்டு "பொய்யும் புளுகும் சொல்லும் வழக்கம் எனக்குக் கிடையாது!" என்றான்.



"உண்மைதான் உனக்குப் பொய் சொல்லி வழக்கம் இல்லை. ஆகையினால்தான் முன்னுக்குப் பின் முரணாக உளறி அகப்பட்டுக்கொள்கிறாய்! பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டுமல்லவா?"



செங்கோடன் போலீஸ்காரரின் முகத்தைக் கவலையுடன் பார்த்து, "அடியிலிருந்து ஒரே மாதிரிதானே சொல்லி வருகிறேன்?" என்றான்.



"என்னத்தைச் சொல்லி வருகிறாய்? 'பங்காரு சாமியை நான் தான் கொன்றேன்' என்று உளறிக் கொண்டு வருகிறாய்! இல்லையா?"



"ஆமாம்; அது நிஜந்தானே!"



"பொறு! 'கத்தியினால் குத்திக் கொன்றேன்' என்றும் பிடிவாதமாய்ச் சொல்லிவருகிறாய், இல்லையா?"



"ஆமாம்; என் கையில் இருந்த கத்தியைக் கூடப் பார்த்தீங்களே?"



"உன் கையில் இருந்த கத்தியை என்னிடம் காட்டினாய். அதில் இரத்தம் தோய்ந்திருந்தது. உன் கையிலும் இரத்தக் கறை இருந்தது. இதெல்லாம் சரிதான். அந்தக் கத்தியினால் நீ பங்காருசாமியைக் குத்திக் கொன்றதாக என்னிடம் சொன்னதையே இன்ஸ்பெக்டரிடமும் சொன்னாயா?"



"ஆமாம்; அப்படித்தான் சொன்னேன். ஓர் எழுத்துக் கூட மாற்றிச் சொல்லவில்லை."



"இனிமேலும் அப்படிச் சொல்லப் போகிறாயா?"



"ஆமாம்; மாற்றிச் சொல்லுகிற வழக்கம் என்னிடம் இல்லை. அந்தக் குலத்தில் நான் பிறக்கவில்லை..."



"குலம் கிடக்கட்டும், தம்பி, குலம்! குலத்தினால் வரும் கேட்டை எவ்வளவோ நான் பார்த்தாகிவிட்டது. இதைக் கேள்! பங்காருசாமியை நீ கத்தியால் குத்திக் கொன்றதாகச் சொன்னாய் அல்லவா? இந்த ஊர்ப் பெரிய டாக்டர் வந்து இன்றைக்கு அவனைச் சோதனை செய்து பார்த்தார். பங்காருசாமியின் உடம்பில் கத்திக் குத்துக் காயமே இல்லை என்று சொல்லிவிட்டார்!"



செங்கோடக் கவுண்டன் திருதிருவென்று விழித்தான்.



"அது எப்படி? கத்தியில் இரத்தம் இருந்ததே?" என்றான்.



"தம்பி! கத்தியில் இருந்த இரத்தம் நாயின் இரத்தம்!" என்றார் போலீஸ்காரர்.



செங்கோடன் மறுபடியும் உச்சி மோட்டைப் பார்க்கத் தொடங்கினான்.



"பங்காருசாமியின் பின் தலையிலேதான் காயம் இருந்தது. அது கத்திக் காயம் இல்லை; கடப்பாறையினால் அடிபட்ட காயம்...!"



"ஓகோ! மறந்துபோய்விட்டேன். நல்ல வேளை ஞாபகப்படுத்தினீங்க! கடப்பாரையினால்தான் அவன் தலையில் அடித்தேன். இப்போதுதான் நினைவு வருகிறது. கத்தியால் குத்தவில்லை. போலீஸ் ஐயா! கொஞ்சம் தான் இப்போது சொல்லுகிறதை எழுதிக் கொள்ளுங்கள்..."



"தம்பி! இப்படியெல்லாம் முன்னுக்குப்பின் விரோதமாக உளறினால் என்ன பிரயோஜனம்? யாரும் நம்ப மாட்டார்கள். இன்ஸ்பெக்டர் சவுக்கு எடுத்துக்கொண்டு வந்து உன்னைச் செம்மையாய்த் தீட்டிவிடுவார்! முதுகுத்தோலை உரித்து விடுவார். விரல் நகங்களில் ஊசியை ஏற்றுவார். என்னிடம் உண்மையைச் சொல்லிவிடு! நான் உன்னைத் தப்புவிக்கிறேன்! பயப்படாதே...!"



"நான்மட்டும் தப்பி என்ன பிரயோஜனம்?" என்று செங்கோடன் கவலையுடன் கூறினான்.



"இன்னும் யார் தப்ப வேண்டும்?" என்றார் போலீஸ்காரர்.



செங்கோடன் தான் தவறாகப் பேசிவிட்டதை உணர்ந்து வாயை இறுக மூடிக்கொண்டான்.



"நீயும் தப்ப வேண்டும்? செம்பவளவல்லியும் தப்ப வேண்டும். அவ்வளவுதானே?" என்றார் போலீஸ்காரர்.



செங்கோடன் மிகக் கோபமாக, "செம்பாவின் பெயரை இதில் இழுக்கவேண்டாம். இழுத்தால் உமக்கும் பங்காருசாமியின் கதிதான்! ஜாக்கிரதை!" என்றான்.



"அப்பனே! என்னிடம் ஏன் மறைக்கப் பார்க்கிறாய்? கிணற்று மேட்டிலிருந்து நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தேன். சகல விவரமும் எனக்குத் தெரியும். செம்பாவின் குற்றத்தை மறைப்பதற்காக நீ செய்த காரியங்கூடத் தெரியும்..."



"உன்னையும் அந்தக் கத்தியால் அங்கேயே கொல்லாமல் போனேனே?" என்றான் செங்கோடன்.



"போனது போய்விட்டது. இனி நடக்க வேண்டியதையல்லவா பார்க்கவேண்டும்? நீயும் தப்பித்துச் செம்பாவும் தப்பிக்க வேண்டுமென்றால் நடந்ததை நடந்தபடி என்னிடம் சொல்லிவிடு!" என்றார் போலீஸ்காரர்.



இன்னும் கொஞ்சம் நயத்தையும் பயத்தையும் கையாண்ட பிறகு செங்கோடன் வேறு வழியில்லையென்று தனக்குத் தெரிந்ததைச் சொன்னான். அவன் குடிசைக்குச் சற்று தூரத்தில் எஸ்ராஜுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது குடிசைக்குள்ளிருந்து, "ஐயோ! செத்தேன்!" என்ற குரல் கேட்டதல்லவா? உடனே அவன் சண்டையை நிறுத்திவிட்டுக் குடிசையை நோக்கி ஓடினான். கேணிக்கு அருகில் எதிரே ஓடி வந்த பங்கஜா அவன் பேரில் முட்டிக் கொண்டபடியால் சிறிது தாமதித்தான். அதே சமயத்தில் ஒரு நிழல் உருவம் குடிசையிலிருந்து வெளிப்பட்டதை அவன் கவனிக்க நேர்ந்தது. அது ஒரு பெண்ணின் உருவம் என்பதைக் கண்டு கொண்டான். அந்தப் பெண் உருவம் கையில் ஒரு பாத்திரத்தைத் தூக்கிச் சென்றது.



ஏற்கனவே, செங்கோடன் மனத்தில் செம்பா அங்கு வந்திருக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியிருந்தது. இப்போது உறுதியாயிற்று. செம்பா தப்பிச் செல்வதற்கு அவகாசம் கொடுப்பதற்கென்றே சிறிது நேரம் பங்கஜாவுடனும் எஸ்ராஜுடனும் பேச்சுக் கொடுத்துக் கொண்டு நின்றான். பிறகு குடிசையை அணுகினான். அப்போது ஓர் உருவம் ஒரு கணம் தோன்றி மறைந்தது. இதனால் குழம்பிய மனத்துடன் குடிசை வாசலுக்குச் சென்று விளக்கை ஏற்றினான். குடிசையின் வாசற்படியில் இரத்தக் கரைக்குப் பக்கத்தில் சிவப்பான ஒரு பொருள் கிடந்தது. அது செம்பா அணிந்திருந்த வளையல் என்பதைக் கண்டுகொண்டான். அவசரமாக எடுத்து மடியில் வைத்துக் கொண்டான். இப்போது அவனுடைய மனத்தில் நிச்சயம் ஏற்பட்டு விட்டது. செம்பாதான் உள்ளேயிருந்த ஆசாமியைக் குத்திக் கொன்றவன்; தான் புதைத்து வைத்த பணம் பறிபோகாமலிருப்பதற்காகவே இந்தக் கொலையை அவள் செய்துவிட்டாள்; அவள் கையில் எடுத்துப் போவது அடுப்பின் அடியில் தான் புதைத்து வைத்திருந்த செப்புக் குடந்தான்! தனக்காக இப்படிப்பட்ட காரியம் செய்த பெண்ணைக் காட்டிக் கொடாமல் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று உறுதி கொண்டான். குடிசைக்கு உள்ளே போய்ப் பார்த்ததும் பங்காருசாமி கீழே கிடந்தது தெரிந்தது. அந்தப் பாவி இன்னும் செத்தபாடில்லை; தன்னைக் கொன்றவள் ஒரு பெண் என்பதாக முணுமுணுத்துக் கொண்டிருந்தான். ஆகவே செம்பாவின் வளையல் அவளைக் கொலைக் கேஸில் மாட்டிவிடக் கூடிய தடையமாகலாம். இன்னும் ஏதாவது அப்படிப்பட்ட தடையம் கீழே கிடக்கிறதா என்று சுற்றுமுற்றும் பார்த்தான். பங்காருவின் பக்கத்தில் கிடந்த இரத்தம் தோய்ந்த கத்தியை எடுத்துக் கொண்டான். தரையில் சிதறிக் கிடந்த பண நோட்டுகள் அவனுடைய மனத்தைக் குழப்பின. அதைப்பற்றியெல்லாம் தெரிந்துகொள்வதற்கு முன்னால், முதலில் தன் மடியிலிருந்த செம்பாவின் வளையலைக் கிணற்றுக்குள் போடவேண்டும் என்று தோன்றியது. உடனே வெளியே ஓடி வந்தான். எஸ்ராஜையும் பங்கஜாவையும் பயமுறுத்திக் குடிசைக்கு வெளியிலேயே நிறுத்தி வைத்துவிட்டுக் கேணிக் கரைக்கு ஓடிவந்து வளையலைக் கேணியில் போட்டான். இரத்தம் தோய்ந்த கத்தியையும் கிணற்றில் போட்டுவிட வேண்டும் என்பது அவன் எண்ணம். அதற்குள்ளே போலீஸ்காரர் தோன்றிவிட்டார். செம்பவளவல்லியைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தினால், 'நான் தான் கொன்றேன்!' என்று போலீஸ்காரரிடம் அவன் அலறினான். பிறகு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரிடமும் அதே மாதிரி வாக்குமூலம் கொடுத்தான்.



"ஐயா! போலீஸ்காரரே உள்ளது உள்ளபடி எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். நீங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்களா?" என்று கேட்டான் செங்கோடன்.



"நான் என்ன வாக்குக் கொடுத்தேன்?" என்றார் போலீஸ்காரர்.



"அதற்குள் மறந்து விட்டீர்களா? உண்மையைச் சொன்னால் என்னையும் செம்பாவையும் தப்பித்து விடுவதாகச் சொன்னீங்களே! என்னைத் தூக்கிலே போட்டால் கூடப் பரவாயில்லை. செம்பாவை மட்டும் காப்பாற்றி விடுங்கள்!" என்றான்.



"ஏதோ என்னால் ஆனமட்டும் பார்க்கிறேன். ஆனால் நீயும் நான் சொல்லிக் கொடுக்கிறபடி இன்ஸ்பெக்டரிடம் சொல்ல வேண்டும். அப்போதுதான் செம்பாவைக் காப்பாற்ற முடியும்."



"என்ன சொல்ல வேண்டும்?"



"அவரிடம் செம்பாவின் பேச்சையே எடுக்காதே! குமாரி பங்கஜாவிடம் நீ மோகங் கொண்டிருந்ததாகவும். அவள் பேரில் சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக நீ குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் சொல். திடுதிப்பென்று உடனே அவ்விதம் சொல்லிவிடாதே! இன்ஸ்பெக்டர் உன் கன்னத்தில் இரண்டு அறை கொடுத்துக் கேட்ட பிறகு சொல்!"



செங்கோடன் தன் கன்னத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான். "இன்ஸ்பெக்டர் அடித்தால் ரொம்ப வலிக்குமா?" என்று கேட்டான்.



"அதிகமாக வலிக்காது; பேய் அறைகிறதுபோல் இருக்கும்!"



செங்கோடன் இன்ஸ்பெக்டரிடம் அப்படிச் சொல்ல வேண்டிய அவசியத்தைப் பற்றிப் போலீஸ்காரர் மேலும் வற்புறுத்திய பிறகு ஒருவாறு ஒப்புக்கொண்டான்.



"போலீஸ்கார ஐயா! இந்த விஷயம் செம்பாவின் காதில் விழுந்தால் என்ன செய்கிறது?" என்று கேட்டான்.



"எந்த விஷயம்?"



"நான் குமாரி பங்கஜாவைக் காதலித்தேன் என்று ஒப்புக் கொண்டது!"



"அதைப்பற்றிச் சமாதானம் சொல்வதற்கு உனக்கு வேண்டிய அவகாசம் கிடைக்கும். கலியாணம் ஆன பிறகு ஆயுள் முழுதும் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கலாம்."



"அது போனால் போகட்டும். செம்பாவைப் பார்த்து எனக்காக ஒரு விஷயம் மட்டும் சொல்லிவிடுங்கள். செப்புக் குடத்தில் இருந்த எட்டு நூறு ரூபாயையும் பத்திரமாய் வைத்திருக்கச் சொல்லுங்கள். என்னுடைய கேஸுக்காக ஒரு காலணா கூடச் செலவழிக்க வேண்டாம். நடக்கிறது நடக்கட்டும்!"



"நல்ல கருமி அப்பா, நீ!"



"செம்பாவின் தம்பிகள் சோளக் கொல்லையில் புகுந்து அழித்துவிடப் போகிறார்கள்! நன்றாய் முற்றுவதற்கு முன்னால் ஒரு சோளக் கொண்டை கூடப் பறிக்கக் கூடாது. அப்படி அந்த வாண்டுகள் இளஞ் சோளக் கொண்டையைப் பறித்ததாகத் தெரிந்தால் வந்து அவர்களுடைய மென்னியை முறித்துக் கொன்றுவிடுவேன் என்று சொல்லுங்கள்!"



"போதும்; நீ ஒரு கொலை செய்ததே போதும்! உன் பணத்துக்கும் ஆபத்து வராது. சோளக் கொல்லைக்கும் ஆபத்து வராது. கவலைப்படாதே!" என்றார் போலீஸ்காரர்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
18. பதினெட்டாவது அத்தியாயம்



போலீஸ்காரர் சின்னமுத்துக் கவுண்டர் பிறகு அதே லாக் அப்பில் இன்னொரு அறையில் இருந்த குமாரி பங்கஜாவைப் பார்க்கச் சென்றார். போலீஸ்காரரைப் பார்த்ததும் பங்கஜா கண்ணீர் விட்டுக் கதறி அழுது விட்டாள். "நீங்கள் சொன்னதைக் கேட்காதபடியால் இந்தக் கதிக்கு வந்தேன். அந்தப் பாதகர்கள் என்னை இப்படிப் படுகுழியில் தள்ளிவிட்டார்கள்! நீங்கள் தான் என்னைக் காப்பாற்றவேண்டும்!" என்றாள்.



"நடந்தது நடந்தபடி எல்லாவற்றையும் சொன்னால் உன்னைக் காப்பாற்றப் பார்க்கிறேன்! ஒரு விஷயத்தையும் என்னிடம் மறைக்கக்கூடாது!" என்றார் போலீஸ்காரர்.



"இல்லை; மறைக்கவில்லை. உங்களிடம் சொல்லாமல் மறைத்து வைத்ததனால்தானே இப்படிப்பட்ட கதியை அடைந்தேன்! எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன்!" என்றாள் பங்கஜா. அவள் தட்டுத் தடுமாறி முன்னும் பின்னுமாய்ச் சொன்னதன் சாராம்சம் இதுதான்:



குமாரி பங்கஜாவும் அவள் குடும்பத்தினரும் மலாய் நாட்டிலிருந்து சொத்து சுதந்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு வந்தவர்கள். வரும் வழியில் தகப்பனாரையும் பறி கொடுத்தாள். போலீஸ்காரரிடம் ஆரம்பத்தில் அவள் நாலு அணா யாசகம் வாங்கியதற்குக் கூறிய காரணமும் உண்மையேயாகும். இதற்கிடையில், பங்காருசாமி என்பவனிடம் அவளுக்கு அறிமுகம் ஏற்பட்டது. போலீஸ்காரரிடம் கேட்டதுபோல் அவனிடம் அரிசி வாங்க நாலு அணா கேட்டதிலிருந்து அந்த அறிமுகம் உண்டாகி வளர்ந்தது. பங்காரு சாமி அடிக்கடி, "உன்னைப் போன்ற அழகும், முகவெட்டும் படிப்பும் புத்திசாலித்தனமும் உள்ள பெண் எதற்காக இப்படிப் பிச்சை எடுக்க வேண்டும்? சினிமாவில் சேர்ந்தால் பிரபல நட்சத்திரமாகி லட்சக்கணக்காகப் பணம் சேர்க்கலாமே!" என்று போதனை செய்து வந்தான். அதிலிருந்து சினிமாவில் நடிக்கும் சபலம் அவளுக்கு ஏற்பட்டது. பங்காருசாமி அடிக்கடி அவளைச் சந்தித்துத் தூபம் போட்டு ஆசையை வளர்த்துவந்தான். குமாரி பங்கஜா மலாய் நாட்டில் சுயேச்சையாக வளர்ந்தவள். வரும் வழியில் பல அநுபவங்களைப் பெற்றவள். ஆகையால் அவளுக்கு மற்றப் பெண்களைப் போல் அவ்வளவு நாணம், அச்சம், சங்கோசம் முதலியவை இருக்கவில்லை. பங்காருசாமி ஒரு சமயம் அவளை ஒரு சினிமா முதலாளியிடம் அழைத்துப் போனான். அதே சமயத்தில் இன்னொரு பிரபல சினிமா நடிகை வந்திருந்தாள். அந்த நடிகை சிரித்தால் அரைப் பைத்தியம் மாதிரி இருந்தது; அழுதால் முழுப் பைத்தியம் மாதிரி இருந்தது. அவளைப் போல் பங்கஜாவுக்குச் சிரிக்கவும் அழவும் தெரியவில்லையென்று கருதியதால், சினிமாவில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று சொல்லி வருத்தத்துடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.



இதனால் அவள் ஏமாற்றம் அடைந்திருந்தபோதிலும் நிராசை அடையவில்லை. பங்காருசாமியும் தைரியப்படுத்தினான். தானே ஒரு படம் எடுக்கப் போவதாகவும் அதற்காகப் பணம் சேகரித்துக் கொண்டு வருவதாகவும் சொன்னான். படம் ஆரம்பிக்கும் வரையில் காலட்சேபத்துக்காக அவளிடம் பாக்கியிருந்த ஒரே ஒரு நகையான வைர அட்டிகையை விற்றுத் தருவதாகச் சொன்னான். பங்கஜா நம்பிக் கொடுத்தாள். பங்காருசாமியும் விற்றுக் கொண்டு வந்து பணத்தைக் கொடுத்தான். பங்கஜா அதைப் பத்திரமாய் வைத்திருந்தாள். அவசரச் செலவுக்காக ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துப் போய்க் கடையில் சாமான் வாங்கினாள். கடைக்காரன் அந்த நோட்டை வாங்கி மேலும் கீழும் திருப்பிப் பார்த்தான். "அம்மா! இது கள்ள நோட்டு. யாரோ உன்னை ஏமாற்றி விட்டிருக்கிறான். முடியுமானால் அவனிடம் திருப்பிக் கொடுத்து வெள்ளி ரூபாயாக வாங்கு. இல்லாவிட்டால் நோட்டைக் கொளுத்தி விட்டுச் சும்மா இரு. போலீஸுக்குச் செய்தி தெரிந்தால் ஆபத்து வரும்!" என்று எச்சரிக்கை செய்து அனுப்பினான்.



பங்கஜா சொல்ல முடியாத கோபத்துடனும் தாபத்துடனும் உடனே வீடு திரும்பினாள். நோட்டுகளை அடுக்கி வைத்திருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு பங்காருசாமியைத் தேடிப் போனாள். வழியிலேதான் 374 ஆம் நம்பர் கான்ஸ்டேபிளைச் சந்தித்தாள். பார்த்துப் பேசாமல் போனால் சந்தேகம் ஏற்படும் என்று எண்ணி வழக்கம் போல் பணம் கேட்டாள். பெட்டி திறந்து கொண்டதனால் போலீஸ்காரரின் சந்தேகத்துக்கு உள்ளானாள்.



பங்காருசாமியிடம் பங்கஜா கள்ள நோட்டுகளைத் திருப்பிக் கொடுத்துச் சண்டை பிடித்தபோது அவன் தானும் வேறொருவனிடம் ஏமாந்து போய்விட்டதாகக் கூறினான். அவனைக் கேட்டு வேறு நல்ல பணம் வாங்கித் தருவதாகக் கூறினான். அப்படி பங்காருவை ஏமாற்றியவனான எஸ்ராஜ் ஏற்கனவே கோ-ஆபரேடிவ் சங்கப் பணத்தைக் கையாடியவன். இப்போது சின்னமநாயக்கன்பட்டி கூடார சினிமாவில் எப்படியோ மானேஜர் வேலை சம்பாதித்துக் கொண்டிருந்தான். அவனைத் தேடிக் கொண்டு பங்காரு போனான். பங்காரு தப்பி ஓடி மறைந்துவிடப் போகிறான் என்ற பயத்தினால் பங்கஜாவும் அவன் கூடப் போனாள். சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தில் யாருக்கும் தன்பேரில் சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காகத் தான் பஞ்சாயத்து மானேஜர் என்றும், பங்கஜா தன் தங்கை என்றும் பங்காரு சொல்லிக் கொண்டான். எஸ்ராஜும் பங்காருவும் கள்ள நோட்டு அச்சிடுவதில் கூட்டாளிகள் என்று பங்கஜா அங்கே தெரிந்து கொண்டாள். எப்படியாவது தன்னுடைய பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அவர்களிடமிருந்து தப்பித்துக் கொண்டு சேலம் போகலாம் என்று எண்ணியிருந்தாள்.



ஒரு நாள் அவர்கள் சினிமாக் கொட்டகையில் டிக்கட் விற்கும் இடத்தில் கள்ள நோட்டுகளில் சிலவற்றைச் செலாவணி செய்வதற்காக வைத்திருந்தார்கள். அந்த இடத்துக்குப் போலீஸ்காரர் வந்து எட்டிப் பார்க்கவே இரண்டு ஆசாமிகளுக்கும் சந்தேகம் உண்டாகி விட்டது. உடனே பழைய ஃபிலிம்கள் சிலவற்றைக் கள்ள நோட்டுகளுடன் சேர்த்து வைத்துக் கொளுத்தி விட்டார்கள். ஃபிலிம்கள் சீக்கிரம் தீப்பற்றி எரியுமாதலால் அப்படி செய்தார்கள். அன்றைக்குத்தான் செங்கோடக்கவுண்டன் கூடார சினிமாவில் செய்த கலாட்டாவும் நடைபெற்றது. அந்தப் பட்டிக்காட்டுக் கவுண்டன் மூலமாகத் தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று எஸ்ராஜும் பங்காருவும் உத்தேசித்தார்கள். போலீஸுக்குச் சந்தேகம் ஏற்பட்டு விட்டபடியால் கள்ள நோட்டு அச்சடித்த இயந்திரங்களையும் அச்சடித்த நோட்டுகளையும் அழித்துவிட எண்ணியிருந்தார்கள். அதற்குச் செங்கோடனின் கேணியும் குடிசையும் தக்க இடம் என்று கண்டுபிடித்தார்கள். அத்துடன் செங்கோடக் கவுண்டன் புதைத்து வைத்திருந்த பணத்தையும் கபளீகரம் செய்ய யத்தனித்தார்கள். இதற்கு உதவி செய்யும்படி குமாரி பங்கஜாவைக் கேட்டுக் கொண்டார்கள். அவள் உதவி செய்து அந்தப் பட்டிக்காட்டானைத் தன் மோகவலையில் ஆழ்த்தி வைத்திருந்தால் காரியம் கைகூடிவிடும்; அவளுக்குச் சேரவேண்டிய பணமும் கிடைத்துவிடும். அதோடு எஸ்ராஜுக்குச் சென்னையில் சில சினிமா முதலாளிகளைத் தெரியும் என்றும், அவர்களிடம் பங்கஜாவை அழைத்துப் போய்ச் சிபாரிசு செய்வதாகவும் வாக்களித்தார்கள். அவர்களுடைய துர்போதனைக்குப் பங்கஜாவும் சம்மதித்தாள். அவர்கள் சொற்படியே போலீஸ்காரரிடம் செங்கோடனுக்குக் கடிதம் கொடுத்தனுப்பினாள். பங்கஜா-செங்கோடன் சந்திப்பில் என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ளப் போலீஸ்காரரும் அங்கு இருப்பார் என்றும் அச்சமயம் செங்கோடன் குடிசையில் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்றும் நம்பியிருந்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாகச் சில காரியங்கள் நடந்து விட்டன. செங்கோடன் பொய்மான் கரடு உச்சியில் நின்றபோது தன் குடிசையில் வெளிச்சம் தெரிந்ததைப் பார்த்துவிட்டான். பார்த்து, குமாரி பங்கஜா தடுத்தும் கேளாமல் ஓடத் தொடங்கினான்.



"அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியுமே, கான்ஸ்டேபிள் ஸார்! எப்படியாவது என்னை இந்தத் தடவை காப்பாற்றிவிடுங்கள்! இனிமேல் இப்படிப்பட்ட போக்கிரிகளின் அருகிலும் போவதில்லை. பிச்சை எடுத்தாவது பிழைத்துக் கொள்கிறேன்!" என்று சொல்லிவிட்டுக் குமாரி பங்கஜா மறுபடியும் விம்மி விம்மி அழுதாள்.



அவள் அழுகையை நிறுத்தும்படி செய்வதற்குப் போலீஸ்காரர் மிகவும் பிரயாசைப்பட வேண்டியிருந்தது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
90
Points
48
19. பத்தொன்பதாவது அத்தியாயம்



மேற்படி கள்ள நோட்டு வழக்கு விஷயமாக இன்னும் இரண்டொரு துப்புகள் துலங்கவேண்டியது பாக்கி இருந்தது. அதற்காகப் போலீஸ்காரர் கொப்பனாம்பட்டிக்குப் போனார். சிவராமலிங்கக் கவுண்டரிடம் அவருடைய மகள் எப்பேர்ப்பட்ட இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதைத் தெரிவித்தார். எப்படியாவது செம்பாவின் பெயர் இந்த வழக்கில் அடிபடாமல் காப்பாற்ற வேண்டுமென்று கவுண்டர் ரொம்பவும் கேட்டுக் கொண்டார்.



செம்பவளவல்லி திக்பிரமை பிடித்தவள் போல் இருந்தாள். அவளுடைய மனத்தில் கேணியும், கேணிக்கரைக் குடிசையும், சோளத் தட்டைக் குவியலும், இரத்தம் தோய்ந்த கத்தியும், சாகும் நாயின் ஓலமும், குழிதோண்டும் மனிதர்களும், பயங்கர ஆயுதம் ஏந்திய போலீஸ்காரரும், சிதறிக் கிடந்த நோட்டுக்களும், கையில் விலங்கு பூட்டிய செங்கோடனும், அவனைப் போலீஸார் கொண்டுபோன போது தன்னைப் பார்த்த பார்வையும், அவன் சொன்ன வார்த்தையும் ஒரே குழப்பமாக வட்டமிட்டுச் சுழன்று கொண்டிருந்தன. எல்லாவற்றிலும் அதிகமாக அவள் மனக்கண் முன்னால் ஒரு செப்புக்குடம்-உள்ளே காலியான செப்புக்குடம்-வாயைப் பெரிதாகத் திறந்துகொண்டு காட்சி அளித்தது. அந்த வெறுங்குடம் மனக்கண் முன் தோன்றியபோதெல்லாம் அவளுடைய அடி வயிற்றில் என்னவோ வேதனை செய்தது.



இத்தகைய நிலைமையிலேதான் போலீஸ்காரர் வந்தார். அவரைப் பார்த்ததும் செம்பா பரபரப்புடன், "வாருங்கள்! நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்!" என்றாள்.



"அது எப்படி? எதற்காக?" என்று கேட்டார் போலீஸ்காரர்.



"எதற்காக, எப்படி என்று உங்களுக்கே தெரியும்!" என்றாள் செம்பா.



"ஓகோ! அப்படியா?"



"உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் என்றிருந்தேன் கேட்கட்டுமா?"



"பேஷாய்க் கேட்கலாம்."



"அவர் எதற்காக 'நான் தான் கொலை செய்தேன்', 'நான் தான் கொலை செய்தேன்' என்று கத்தினார்? என்னைக் காப்பாற்றுவதற்காகத்தானே?"



"ஆமாம்."



"நான் செய்திருப்பேன் என்று அவருக்கு எப்படித் தோன்றியது?"



"நீ குடிசையிலிருந்து வெளியேறியதைச் செங்கோடன் பார்த்துவிட்டான். அதைத் தவிர இன்னொரு காரணமும் உண்டு. அவன் லாந்தரைக் கொளுத்திக் கொண்டு குடிசைக்குள் புகுந்தபோது வாசற்படியில் உடைந்த வளையல் ஒன்று கிடந்தது. அது உன்னுடையதுதான் என்பது அவனுக்குத் தெரிந்துவிட்டது... பின்னே தெரியாமல் இருக்குமா?"



செம்பா தன்னுடைய கைகளைப் பார்த்துக் கொண்டாள்.



"உன்னுடைய ஒரு கையில் சிவப்பு வளை இருக்கிறது. இன்னொரு கையில் இல்லை. மற்றவர்கள் கண்ணில் இது பட்டிருந்தால் ஆபத்தாய்ப் போயிருக்கும்!" என்றார் போலீஸ்காரர்.



"அப்புறம்? அந்த வளையல் என்ன ஆயிற்று?" என்று செம்பா ஆவலோடு கேட்டாள்.



"செங்கோடன் அதை ஒருவரும் அறியாமல் சட்டென்று மடியில் எடுத்துக் கொண்டு கேணிக்கரைக்கு ஓடி வந்து மடியை உதறினான். வளையல் கேணியில் விழுந்தது."



"எவ்வளவு சாமர்த்தியமாகச் செய்திருக்கிறார்! என் பேரில் என்ன கரிசனம்! என்ன அன்பு! அவருக்கு என்னால் இப்படி நேர்ந்துவிட்டதே!" என்று சொல்லிவிட்டுச் செம்பா கண்ணீர் பெருக்கினாள்.



"வேண்டாம், செம்பா! உன் செங்கோடனுக்கு ஆபத்து ஒன்றும் வராது. அவனை விடுதலை செய்து கொண்டு வந்து சேர்க்க நான் இருக்கிறேன். வருத்தப் படாதே!" என்றார் போலீஸ்காரர்.



செம்பா போலீஸ்காரரை ஏறிட்டுப் பார்த்து, "நான் அதற்காக வருத்தப்படவில்லை. அவரை நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். அப்படி நீங்கள் செய்யாவிட்டால் நான் கோர்ட்டில் வந்து நடந்ததை நடந்தபடி சொல்கிறது என்று தீர்மானித்திருந்தேன்."



போலீஸ்காரர் சிறிது திடுக்கிட்டு, "அதெல்லாம் வேண்டாம். நீ கோர்ட்டுக்கு வந்தால் வீண் சிக்கல் ஏற்படும். செங்கோடனைக் காப்பாற்றுவதற்கு நான் ஆயிற்று!" என்றார்.



"அதற்காக நான் வருத்தப்படவில்லையென்றுதான் சென்னேனே!"



"பின்னே எதற்காக வருத்தம்? எதற்காகக் கண்ணீர்?"



"அப்படி எனக்காகத் தம் உயிரைக் கொடுக்கத் துணிந்தவருக்கு நான் பதில் என்ன சொல்லப் போகிறேன்! திரும்பி வந்ததும் பணக்குடம் எங்கே என்று கேட்பாரே?"



"ஏன், பணக்குடம் எங்கே? பத்திரமாய் வைத்திருக்கிறாய் அல்லவா?"



"குடம் பத்திரமாக ஐயனார் கோயில் குட்டையில் கிடக்கிறது. அதனால் என்ன பிரயோஜனம்? அந்தக் குடத்தை அவசரமாய்த் தூக்கிக்கொண்டு ஓடினேன் அல்லவா? கொஞ்ச தூரம் போன பிறகுதான் அது கனக்கவே இல்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது. உடனே நிலா வெளிச்சத்தில் குடத்துக்குள் பார்த்தேன். குடம் காலியாயிருந்தது! அதைப் பார்த்து என் மூளை குழம்பி விட்டது. நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தேன். ஊர்க்காரர்கள் ஓடி வரும் சத்தம் கேட்டுக் குடத்தைக் குட்டையில் போட்டுவிட்டு அவர்களோடு நானும் சேர்ந்து கொண்டேன். கவுண்டர் விடுதலையாகித் திரும்பி வந்து, 'குடத்தில் இருந்த பணம் எங்கே?' என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவேன்? நான் பணத்தை பத்திரமாய் வைத்திருப்பேன் என்ற நம்பிக்கையுடன் அவர் இருப்பாரே! அவருடைய கேஸுக்காகக் காலணா செலவழிக்க வேண்டாம் என்று சொல்லியனுப்பியிருக்கிறாரே! அரும்பாடுபட்டுச் சேர்த்த எண்ணூறு ரூபாயும் போய்விட்டது என்று தெரிந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? என்னிடம் அவருக்குள்ள அன்பெல்லாம் விஷமாய் மாறிவிடுமே!" என்று செம்பா புலம்பினாள்.



----------------------

20. இருபதாம் அத்தியாயம்



கதை சொல்லிக்கொண்டே வந்த மோட்டார் டிரைவர் வண்டியை நிறுத்தியதும், மறுபடியும் 'பொய்மான் கரடு'க்குச் சமீபம் வந்திருக்கிறோம் என்று தெரிந்து கொண்டேன். இடது பக்கத்தில் செங்குத்தாகக் கரிய குன்று நின்றது. மழைக்கால இருட்டுச் சூழ்ந்திருந்தபடியால் குகையும் மானும் கண்ணுக்குத் தெரியவில்லை. கார் செல்லும் சத்தமும் கதை சொன்ன குரலும் நின்றவுடனே மழைத் தூற்றலின் சளசளச் சத்தமும் பூமியில் மழை விழுந்ததும் எங்கிருந்தோ கிளம்பும் ஆயிரக்கணக்கான சிறிய ஜீவராசிகளின் கதம்பக் குரலும் சேர்ந்து கேட்டன.



"இப்போது இங்கே நின்று என்ன உபயோகம்? இருட்டில் ஒன்றும் தெரியவில்லையே?" என்றேன்.



இப்படிச் சொல்லி வாய் மூடுவதற்குள்ளே பளிச்சென்று ஒரு பெரிய மின்வெட்டுத் தோன்றிச் சுற்றிலும் சூழ்ந்திருந்த காரிருளை அகற்றிக் குன்றுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. அவ்விதம் மின்னிய நேரத்தில் பொய்மான் குகைக்குள்ளே நெளிந்து நெளிந்து ஒரு பளபளப்பான கயிறு சென்றதையும், குகைக்குள்ளிருந்து கிறீச் சென்று சத்தமிட்டுக்கொண்டு ஒரு சிறிய பிராணி வெளிப்பட்டு ஓடிவந்ததையும் பார்த்தோம். பாம்புக்குப் பயந்து அந்தக் குகைக்குள்ளிருந்த மான் வெளியே ஓடி வந்ததாகவே தோன்றியது. அடுத்த நிமிஷம் மறுபடியும் நாற்புறமும் அந்தகாரம் சூழ்ந்து கொண்டது. கரிய பாறை மட்டும் பயங்கரமாக நின்றது.



மின்னலில் கண்ட காட்சி என்னைச் சிறிது அரட்டிவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். "சரி போகலாமே இருட்டில் இங்கே என்னத்தைப் பார்க்கிறது?" என்றேன்.



வண்டி நகரத் தொடங்கியது. சாலையில் வலப்புறத்தில் இருந்த குடிசைகளில் இருட்டும் நிச்சப்தமும் குடி கொண்டிருப்பதைக் கவனித்தேன். "இந்தக் குடிசைகளையே பார்க்க முடியவில்லையே! அரை மைல் தூரத்திலுள்ள செங்கோடக் கவுண்டரின் குடிசை எங்கே தெரியப் போகிறது? மழை இல்லாமல் நிலவு நாளாக இருந்தால் குன்றின் மேல் ஏறிப் பார்த்திருக்கலாம்" என்று நான் சொல்லிக்கொண்டிடேயிருக்கையில், மோட்டார் திடீரென்று ஒரு திரும்புத் திரும்பி வளைந்து சாலையோரத்து மரத்தில் மோதிக் கொள்ளப் போய் மறுபடியும் வேகமாக வளைந்து திரும்பி நடுச்சாலைக்கு வந்தது.



அந்த மழையிலும் குளிரிலுங்கூட எனக்கு உடம்பு வியர்த்துவிட்டது. "என்ன? என்ன?" என்று பக்கத்திலுள்ள மோட்டார் சாரதியின் காது செவிடுபடும்படி கத்தினேன்.



"ஒன்றுமில்லை, ஸார்! பதறாதீங்க! ஒரு நாய் குறுக்கே ஓடியது. அதன்மேலே வண்டி ஏறாமலிருப்பதற்காக வளைத்துத் திருப்பினேன்" என்றார் மோட்டார் டிரைவர்.



இதைக் கேட்டதும் எனக்கு வந்த கோபத்துக்கு அளவேயில்லை.



"என்ன அப்பா, நீ! ஒரு நாயைக் காப்பாறுவதற்காக மனிதர்களைக் கொன்றுவிடுவதற்குப் பார்த்தாயே? அழகாயிருக்கிறது!" என்றேன்.



"அது எப்படி, ஸார்! நாயும் உயிருள்ள ஜீவன் தானே? மனிதனுடைய உயிரைக்காட்டிலும் நாயின் உயிர் எந்த விதத்தில் மட்டம்?" என்றார் டிரைவர்.



இதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.



கார் போய்க்கொண்டே இருந்தது.



மழைத் தூற்றல் போட்டுக்கொண்டேயிருந்தது.



சேலம் ஜங்ஷன் நெருங்கிக் கொண்டேயிருந்தது.



கதையின் முடிவைத் தெரிந்துகொள்ள என் ஆவல் வளர்ந்து கொண்டேயிருந்தது.



"கொஞ்சம் நான் அஜாக்கிரதையாயிருந்திருந்தால் அந்த நாய் செத்துப் போயிருக்கும்! ஒரு மயிரிழையில் அது தப்பியது" என்றார் டிரைவர்.



"இன்னும் கொஞ்சம் மோட்டாரை வளைத்திருந்தால் நாமே பைஸலாகியிருப்போம்!" என்று சொன்னேன்.



"அதெல்லாம் இல்லை, ஸார்! மனித உயிர் ரொம்ப கெட்டி! அவ்வளவு இலகுவாகச் சாவு வந்து விடாது!"



"அப்படியே சாவு வந்தாலும் கதையின் முடிவைத் தெரிந்துகொண்ட பிறகு வந்தால் எனக்குக் கவலையில்லை!" என்றேன்.



"அதற்கென்ன, சொல்கிறேன். கதை கொஞ்சந்தான் பாக்கி இருக்கிறது!" என்றார் டிரைவர்.



பணத்தைக் காணோமே என்று கவலைப்பட்ட செம்பவளவல்லிக்குப் போலீஸ்காரர் சின்னமுத்துக் கவுண்டர் ஆறுதல் கூற முயன்றார்.



"செங்கோடன் இப்படிப்பட்ட இக்கட்டான நிலைமையில் இருக்கும்போது கேவலம் பணத்தைப் பற்றி நீ கவலைப்படுகிறாயே? பணம் கிடக்கட்டும், தள்ளு!" என்று சொன்னார்.



இது செம்பவளவல்லியின் காதில் கொஞ்சமும் ஏறவில்லை.



"நீங்கள் தான் போலீஸ்காரர் ஆச்சே! பணத்தைக் கண்டுபிடித்துக் கொடுங்கள். இல்லாவிட்டால், கோர்ட்டில் வந்து நடந்தது நடந்தபடியே சொல்லிவிடுவேன்!" என்றாள்.



"சொன்னால் செங்கோடனுக்குப் பதில் நீ கொலை கேஸில் அகப்பட்டுக்கொள்வாய். அவ்வளவுதானே? அதில் என்ன பிரயோஜனம்?"



"நான் ஏன் மாட்டிக்கொள்கிறேன்? கதவிடுக்கில் மறைந்து நின்று கடப்பாரையினால் மண்டையில் ஓங்கிப் போட்டவர் அல்லவா அகப்பட்டுக்கொள்ள வேண்டும்? உங்களை நான் பார்க்கவில்லை என்று நினைத்தீர்களா?" என்றாள் செம்பா.



போலீஸ்காரர் திடுக்கிட்டுப் போனார். ஏனெனில் செம்பா சொன்னது உண்மையேயாகும். போலீஸ்காரர் அன்று மாலை பங்காருவுக்கும் எஸ்ராஜுக்கும் முன்னதாகவே கேணிக்கரைக்கு வந்துவிட்டார். அந்தப் போக்கிரிகள் குடிசைக்குள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தார். அரைகுறையாக அச்சடித்த கள்ள நோட்டுகளை ஃபிலிம்களுடன் சேர்த்துக் கொளுத்தியதைப் பார்த்தார். உள்ளே அச்சமயம் நுழையலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, செங்கோடன்-பங்கஜா இவர்களின் பேச்சுக் குரல் கேட்டது. பிறகு எஸ்ராஜ் விளக்கை அணைத்துவிட்டு வெளியேறினான். அதுதான் குடிசைக்குள்ளே நுழைந்து பங்காருவைக் கையும் களவும் கள்ள நோட்டுமாகப் பிடிக்கத் தக்க சமயம் என்று நினைத்து உள்ளே பிரவேசித்தார். ஆனால் தம் பின்னோடு இன்னும் யாரோ ஒருவர் வரும் சத்தம் கேட்டுக் கதவின் இடுக்கில் ஒளிந்து கொண்டார்.



வருவது ஒரு பெண் என்று அறிந்ததும் அவருக்கு ஒரே வியப்பாகிவிட்டது. அவள் யார், எதற்காக அங்கே வருகிறாள் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டது.



வந்தவள் உள்ளே வந்து அவசரமாகச் செப்புத் தவலையை எடுத்தாள். பங்காரு திரும்பிப் பார்த்து அவளுடைய சேலைத் தலைப்பைப் பற்றினான். கத்தியை எடுத்துக் குத்துவதற்கு ஓங்கினான்-இவை யாவும் கண் மூடித் திறக்கும் நேரத்தில் நடந்து விட்டன. போலீஸ்காரருடைய புத்தி பிரமாதமான அவசரத்தில் வேலை செய்தது. பங்காருவுக்குப் பின்னால் கிடந்த கடப்பாரையைச் சட்டென்று எடுத்து அவன் பின் தலையில் ஓங்கிப் போட்டார். பங்காரு, "ஐயோ!" என்று கத்திக் கொண்டு தரையில் விழுந்தான். அவன் இருட்டில் பார்த்தது ஒரு பெண்பிள்ளையைத்தான். அந்தப் பெண் குமாரி பங்கஜாவாக இருக்கவேண்டும் என்று தவறாகத் தீர்மானித்துக் கொண்டான். அவளே தன் தலையில் அடித்தவள் என்று எண்ணிக் கொண்டு தரையில் விழுந்தான். ஆகையினாலேயே பின்னால் அவன் குமாரி பங்கஜாவின் மேல் குற்றம் சாட்டினான்.



செம்பா கையில் தவலையை எடுத்துக்கொண்டு பங்காருவின் பிடியை உதறிக்கொண்டு கிளம்பியபோது, கதவின் இடுக்கில் ஓர் உருவம் கடப்பாரையை ஓங்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்துவிட்டாள். அப்படி நின்றவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய போலீஸ் உடை மட்டும் அவளுடைய மனத்தில் பதிந்திருந்தது. அவசரத்திலும் பீதியிலும் அப்போது அதைப்பற்றி யோசிக்க முடியவில்லை. பின்னால் யோசித்துப் பார்த்து, பார்த்து இப்படி இப்படி நடந்திருக்கவேண்டும் என்பதை ஒருவாறு ஊகித்துக் கொண்டாள்.



தாம் கதவருகில் நின்றதைச் செம்பா பார்த்தாளா இல்லையா என்பதைப் பற்றிப் போலீஸ்காரருக்குக் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. அது இப்போது தெளிந்து விட்டது.



"ஐயா! பணத்தைக் கொண்டு வந்து கொடுத்து விடுங்கள்" என்றாள் மறுபடியும் செம்பா.



"பணமா? நான் எங்கே போக?"



"நீங்கள்தான் பணத்தை எடுத்திருக்க வேண்டும்!"



"என்னைத் திருடன் என்றா சொல்லுகிறாய்?"



"நான் சொல்லவில்லை. நீங்களேதான் ஒப்புக்கொண்டீர்களே!"



"அது எப்போது?"



"அன்றைக்கு அவரிடம் நீங்கள் போலீஸ்காரன் வேஷத்திலே கூட 'திருடன் வருவான்' என்று சொல்லவில்லையா? அதை நான் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன்."



"செம்பா! நீ பலே கெட்டிக்காரி. இவ்வளவு சாமர்த்தியசாலியாயிருந்துகொண்டு அந்த அசட்டுச் செங்கோடனைப் போய்க் கலியாணம் செய்துகொள்ளப் போகிறாயே, அதை நினைத்தால்தான் வருத்தமாயிருக்கிறது!"



"சிலரைப் போல புத்திசாலிகளாயிருப்பதைக் காட்டிலும் அவரைப்போல் அசடாயிருப்பதே மேல்!"



"அது உன் தலை எழுத்து! எப்படியாவது போ! செங்கோடன் சீக்கிரம் திரும்பிவருவான். உன் கலியாணத்தன்று பணமும் சீதனமாகக் கிடைக்கும்!" என்றார் போலீஸ்காரர்.
 
Top Bottom