Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL மண்வாசம் - Tamil novels

Status
Not open for further replies.
அத்தியாயம் -5

அரக்கு நிறப்புடவையில் அங்காலபரமேஸ்வரி போல் ஜொலித்துக் கொண்டிருந்தாள் கயல். ஆனால் துளியளவும் முகத்தில் சிரிப்பு இல்லை. அவளுடைய நிச்சயதார்த்தம் நடைப்பெற இன்னும் சில நிமிடங்களே.

எழிலோ தனக்கு இனி ஒரு நல்ல வாழ்க்கை அமையப்போகிறது என்று எண்ணி இறக்கை கட்டி பறந்தான் மனதளவில். பெண்ணுக்கு செய்யுற கடமை பாரம் குறைந்துவிட்டது என எண்ணி நெகிழ்ந்தாள் லட்சுமி. தாம்பூலம் மாற்றிக்கொள்ள எத்தனிக்கும் போது

"நிறுத்துங்க" என்று கம்பீரமான குரல் ஒன்று வந்தது. எல்லோருடைய பார்வையும் வாசலை நோக்கி இருந்தது....

ரத்தினவேல் பாண்டியன் கம்பீரமாய் நின்றிருந்தான். அவன் முகத்தில் பயம் எதுவும் இல்லை அவனுடைய பார்வையில் ஒரு தெளிவு இருந்தது. அவன் என்ன சொல்ல போகிறான் என்று அனைவரும் கவனித்தனர்.

"டாக்டர் தம்பி என்ன ஆச்சு ஏன் நிச்சயம் நிறுத்தனும் " என்று கூட்டத்தில் ஒருவர் கேட்டவுடன் அருகில் அடியெடுத்து வைத்தான்

"மன்னிக்கவும், நான் கயலை உயிருக்கு உயிராய் காதலிக்கிறேன். எனக்கு கயல்னா உசுரு. அவளை நான் விட்டுக்கொடுக்க விரும்பல. இந்த நிச்சயம் நடந்தால் நீங்க எல்லாம் சந்தோஷமாக தான் இருப்பீங்க ஆனால் கயலுக்கு அப்படி இல்லை. கயலுக்கு என்னை பிடிக்கும். எனக்கு அவளை பிடிக்கும் ஆனால் காதலை சொல்லிக்கிட்டதே இல்லை. அந்த காதலை இப்போது சபைல சொல்ல வேண்டிய கட்டாயம் அதான் இங்கே சொல்றேன்" என்று அவன் சொல்லியவாறு கயல் இருக்கும் திசையை நோக்கினான்.

அவளது முகம் பதற்றத்தில் வியர்த்துக்கொண்டிருந்தது.
"என்னடி இதெல்லாம் " என்று உறவினர்கள் கூச்சலிட ஆரம்பிக்கவும் அவள் மயங்கி சரிந்தாள். உடனே ஓடிச்சென்று ஒரு கரம் அவளை பற்றியது வேறு யாருமில்லை பாண்டியன் தான்.

அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தான். அவள் கண் திறந்ததும் அவனது முகத்தை நேருக்கு நேராக கண்டாள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த உறவினர்கள் சிலர் இடத்தை காலி செய்தனர். எழிலோ முறைத்தபடி தன் பெற்றோரை அழைத்துக்கொண்டு நகர்ந்தான்.

"தம்பி இது உங்களுக்கு நல்லாருக்கா ஏன் இப்படி இவள் வாழ்க்கையை கெடுக்குறீங்க இது தான் படிச்சவன் லட்சணம் போலருக்கு" என்று லட்சுமி கடிந்துக்கொண்டாள்.

"அய்யோ மா அப்படி எல்லாம் இல்லை. சொல்லப்போனால் கயலுக்கு இந்த நிச்சயத்துல சம்மதம் இல்லை. உங்களுக்காக தான் ஒத்துக்கிட்டா. ஆனால் அவள் மனசுல எழில் இல்லை" என்றான் தீர்க்கமாக.

"அப்படி னா சரி இனி எனக்கு இவள் தேவையே இல்லை. இந்தாடி நடையை கட்டு இந்த டாக்டர் தம்பியோடவே எங்கே போறியோ போ" என்று அவனிருக்கும் திசையை நோக்கி வழியை காண்பிக்க கயலுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

"மா ப்ளீஸ் மா தப்பா எடுத்துக்காத எனக்கு எழில் மாமாவை கட்டிக்க விருப்பம் இல்லை நான் மிஸ்டர் பாண்டியனை விரும்புறேன். ஆனால் அதுக்காக இப்படி போ என்று அனுப்பி வைத்தால் என்ன அர்த்தம்" என்று கெஞ்சிய குரலில் தாயிடம் மன்றாடினாள்.

"அதெல்லாம் தெரியாது இனி நீ இந்த வீட்ல இருக்கக்கூடாது கிளம்பு" என்று பிடிவாதமாக அவள் துணிமணிகளை பையில் திணித்து.

"இந்த என்னென்ன தேவையோ எடுத்துட்டு கிளம்பு சனியன் ஒழிஞ்சிது நினைச்சிக்கிறேன்" என்று தள்ளி விடவும் பாண்டியன் அவளை தாங்கவும் சரியாக இருந்தது.

"கயல் நீ வா நம்ம போலாம்" என்று அவளை அழைத்துக்கொண்டு அவன் தங்கியிருக்கும் வீட்டுக்குள் அழைத்து சென்றான்.

"கயல் நீ லட்சுமி பொண்ணா என்ன சாதிக்கனும் ஆசைப்பட்டியோ அதை மிஸஸ் ரத்தினவேல் பாண்டியனா நீ சாதிக்கலாம் உனக்கு நான் துணை நிற்பேன்" என்று அவள் கரங்களை பற்றியவாறு கூற அவனை கட்டியணைத்தப்படி அழுது தீர்த்தாள்.

"சாரி கயல் இந்த சந்தர்ப்பத்தில் காதலை பற்றி பேசலனா எப்பவும் பேசமுடியாது அதான் சபைல எல்லார் முன்பும் சொன்னேன். உனக்கு இது அவமானம் தான் எனக்கு புரியுது ஆனால்.... எனக்கு நீ கிடைக்கமாட்ட கயல். நிச்சயம் நடந்தாலே இன்னொருவர் பொண்டாட்டி தானே? அதான் தாம்பூலம் மாத்துறதுக்கு முன்னாடி தடுத்து நிறுத்தனும் வந்தேன்" என்றதும்.

"நீங்க வராமல் இருந்தால் தான் தப்பு பாண்டியன். சரி அதெல்லாம் இருக்கட்டும் இப்ப என்ன செய்ய போறோம் அடுத்து" என்று தன்னம்பிக்கையுடன் அவள் கேட்பதை பார்த்து அவனுக்கு சந்தோஷம் வந்தது.

"கயல் நீ தப்பா எடுக்கலைனா உன் நெற்றியில் ஒரே ஒரு முத்தம் தரட்டுமா டா" என்று அவன் கேட்டதும் தலையை மட்டும் அசைத்தாள். அவளுடைய நெற்றியில் அவனுடைய முதல் முத்தம் பரிசளித்தான்.

"கயல் இங்கே பாரு இந்த கிராமத்தில் ரொம்ப நாள் நீயும் நானுமாக கல்யாணம் ஆகாமல் ஒன்றாக இருக்க முடியாது. அது நாகரிகமும் இல்லை. அதனால் உடனே நம்ம சென்னைக்கு போய் என் பேரண்ட்ஸ் கிட்ட பேசி கல்யாணம் முடிச்சிட்டு அதுகப்புறம் இங்கே வரலாம் சரியா" என்றதும் அதற்கும் தலையசைத்தாள்.

"ஏன் கயல் எதுவும் பேசமாட்டியா" என்றதும்...

அவள் கண்களிலிருந்து வெள்ளாற்று போல் கண்ணீர் வழிந்தது. அவள் கண்ணீரை துடைத்தவனாய் ஆறுதல் சொல்லி அவளை சாப்பிடவைத்தான்.

சென்னை செல்ல டிக்கெட் போடப்பட்டது. இவன் கயலுடன் வருகிறான் என்ற செய்தி அவன் வீட்டில் அவன் சொல்லவில்லை ஆனால் ராதாவிற்கு மட்டும் சொல்லிவைத்தான். ராதாவோ பயத்தில் வீட்டில் எதுவும் சொல்லவில்லை.

சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர் இருவரும். தான் எடுத்தது சரியான முடிவுதான் என்று பாண்டியன் தனக்கு தானே சொல்லிக்கொண்டான்.
இரண்டாதார திருமணத்திலிருந்து அவளை காப்பாற்றிய திருப்தி ஒரு பக்கம் இன்னொரு பக்கம் தன் தேவதை தனக்கு திரும்ப கிடைத்துவிட்டாள் என்ற சந்தோஷம் ஒருபக்கம்.

ஆனால் இப்படியொரு சந்தர்ப்பத்திலா என் காதலை கயலிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது. முன்பே சொல்லியிருந்தால் அவள் முகத்தில் தெரியும் வெட்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்திருக்கலாமோ என்று தோன்றியது.

இப்படியே நினைத்துக்கொண்டு ஜன்னலோரம் சாய்ந்தான் அவன் தோளில் அவளும் சாய்ந்தாள்.
'நான் நினைச்சு கூட பார்க்கல மிஸ்டர் பாண்டியன். நீங்க மட்டும் வரமால் இருந்திருந்தால் அங்கே எனக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிருக்கும். கூடவே என் வாழ்க்கையும் தான்' என்று நினைத்தவாறு அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். இவ்வளவு அருகாமையில் அவனுடைய முகத்தை பார்க்கும் பாக்யம் அவளுக்கு கிட்டியதை நினைத்து பூரித்து போனாள்.

'கோயம்பேடு வந்தாச்சு' என்று நடத்துனர் சொன்னவுடன் கண்விழித்து "என்ன கயல் அவ்வளவு சீக்கிரம் வந்துடுச்சா" என்று கேட்டவாறு தனது பெட்டியை மேலிருந்து இறக்கி தூக்கிக்கொண்டு அவளை அழைத்துக்கொண்டு இறங்கினான்.

இது தான் கயலுக்கு முதன் முறை சென்னை வந்தது. அதுவும் கோயம்பேட்டின் கூட்ட நெரிசலும், சென்னை வெயிலின் தாக்கமும் அவளை ஏதோ செய்தது.

"கயல் என்ன முகமெல்லாம் வாடியிருக்கு. எதாவது சாப்பிடுறீயா" என்று அவன் கேட்டதும் உடனே சரியென்று தலையசைத்தாள்.

எதிரே தெரியும் ஹோட்டலின் வாயலில் நுழைந்து ஒரு டேபிளில் அமர்ந்தனர்...

"என்ன சாப்பிடுறீங்க" வெயிட்டர் கேட்டதும். மெனுவை பார்த்து சொன்னவுடனே வெயிட்டர் சென்று ஐந்து நிமிடம் கழித்து கொண்டு வந்தான்.

"கயல் சாப்பிடு" என்று பார்வையால் காண்பித்தான்.

இருவரும் சாப்பிட்டு பிறகு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தப்படி எழுந்தனர். அடுத்து நேரே வீடு தான். ஆட்டோவை பிடித்து வீடு வந்து இறங்கினான்.

"ஏங்க உங்கள் அப்பா அம்மா ஏத்துப்பாங்களா" என்று பதற்றத்துடன் கயல் கேட்க...

"பொறு என்ன நடக்கிறது பார்ப்போம்" என்று உள்ளே இருவரும் நுழைந்தனர்.

"டேய் பாண்டியா யார் இந்த பொண்ணு. ஆமாம் சொல்லாமல் கொள்ளாமல் வந்துருக்க என்ன ஆச்சு" என்று தந்தை காபியை பருகியவாறு கேட்க.....

"அப்பா, அது வந்து..." என்று என்ன சொல்லி எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாது தடுமாறினான்.

"அட நீங்க வேற புள்ளைய கேள்வி கேட்டுட்டு. அவனே களைச்சு போய் வந்துருக்கான். அந்த பொண்ணு அவன் தோழி தான் என்கிட்ட முன்பே சொல்லியிருக்கான்" என்று உளர ஆரம்பிக்க ரத்தினவேல் பாண்டியனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

"இந்த அம்மா, என்ன சொல்றாங்க. கயலை நான் அறிமுகம் படுத்துனதே இல்லையே. " என்று யோசித்தான்.

"மிஸ்டர் பாண்டியன் இது என்ன புது ட்விஸ்ட்" என்று விழித்தப்படி கேட்டாள் கயல்.

"ஆமாம் ஆமாம்....இருக்கிற பிரச்சனைல ஆபத்பாந்தவனா இருக்காங்களே இவங்க. ஆனால் இப்போதைக்கு இப்படியே இருக்கட்டும் அதான் நல்லது அடுத்து என்ன செய்யப்போறோம்னு எனக்கு ஒன்னும் புரியல. புதுசா என்ன கதை ஓட்டுறாங்கனே புரியல" என்றான் நம் கதாநாயகன்.

"எது எப்படியோ பாண்டியன் சுமுகமாக வீட்டுக்குள் நுழைஞ்சாச்சு அது போதும்" என்றாள் கயல்.

"அம்மாடி உன் பேரு மறந்துட்டேன் என்ன உன் பேரு"என்றார் பாண்டியனின் தாய் சிவகாமி.

"என் பேரு கயல்" என்றாள். ஆமாம் நீயும் என் பையனும் ஒன்னா மெடிக்கல் படிச்சவங்க தானே. இப்ப நீ எங்கே ப்ராக்டிஸ் பண்ற என்றதும்.

"அய்யோ...நான் படிச்சிட்டு ப்ராக்டிஸ் பண்ணல...வீட்லயே இருந்துட்டேன்" என்றாள் சற்றும் தயங்காமல் சூழ்நிலைக்கு ஏற்றபடி.

"ஓ...அது சரி...ஆமாம் நீ சென்னைல தானே இருக்க. இது என்னமா பெட்டி படுக்கையோட வந்துருக்க" என்றார் புரியாமல்.

"அது நான் சொல்றேன் மா,அவளுக்கு கட்டாய கல்யாணம் முறைமாமன் கூட பண்ண முயற்சி பண்றாங்க அதான் பயந்துட்டு வந்துட்டா. கொஞ்ச நாள் இங்கே தான் தங்கப்போறாள். நான் உங்கள் கிட்ட பேசி விட்டுட்டு போலாமேனு வந்தேன்" என்றதும்.

"அப்படியா அப்டினா சரி" என்று அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார் சிவகாமி.

'அச்சோ இந்த அம்மா வந்த விஷயத்தை சொல்ல விடமா பண்ணிடுச்சு. கயலை போய் என்கூட படிச்சவள்னு சொல்றாங்க. காலக்கொடுமை. புதுசா ஒரு ட்ராக்ல போதே நம்ம கதை.' என்று யோசிக்கவும் ராதா அங்கே வரவும் சரியாக இருந்தது.

"டேய் அண்ணா, அம்மா, உன்கூட படிச்ச விமலாவை தான் நினைச்சு பேசிட்டு இருக்கு. நீயும் விமலாவும் ப்ரெண்ட்ஸ் தானே. கிட்டத்தட்ட அந்த பொண்ணு கயல் மாதிரி இருக்கும்ல அதான் கன்பூஷன் ஆயிட்டாங்க போல..." என்று சொல்லி சிரித்து வைத்தாள்.

"ஓ அப்படியா விஷயம். அது சரி. ஆமாம் நீ எதுவும் வீட்ல சொல்லலை தானே " என்று தங்கையிடம் சந்தேகமாய் கேட்க.

"அடியாத்தி...எனக்கு இதான் வேலை பாரு. இதையெல்லாம் பேசுற அளவு நான் ஒன்னும் பெரியமனுஷி இல்லை. உன் விஷயத்தை நீ தான் பேசி சரிபண்ணிக்கனும். சரி சரி நான் ஒரு இன்டர்வியூ போகணும் டைம் ஆகுது பை" என்று விடைப்பெற்றாள் ராதா.

தொடரும்.
 
அத்தியாயம் -6
🌸🌸🌸🌸🌸🌸

அவள் நடந்து சென்ற வரப்பு எல்லாம் வெறிச்சோடியது. கயலின் வீட்டில் எந்நேரமும் கண்ணீர் துளிகளே மிஞ்சியது.
"ஏண்டி லட்சுமி உன் பொண்ணு இப்படி பண்ணுவானு நினைச்சுக்கூட பார்க்கல. இவளுக்கு எப்படி டி காதல் எல்லாம்" என்று புலம்பினார் லட்சுமியின் தாயார்.

"மா,அதாம்மா எனக்கும் புரியல. நான் அவளை அவ்வளவு நம்புனனே மா." என்றாள் லட்சுமி .

"ஆனால் புடிஞ்சதும் புடிச்சா நல்லா புளியங்கொம்பா பார்த்து தான் உன் மவ புடிச்சிருக்கா" என்றாள் பக்கத்து வீட்டு அக்கா...

"அக்கா நீங்க வேற கடுப்பேத்தாதிங்க போங்க அங்கிட்டு" என்று வெதும்பினாள் லட்சுமி.

"அடியேய் லட்சுமி உன் பொண்ணு ஏதோ தரம் கெட்டு போனவனை காதலிச்சிருந்தா நீ வேதனை படுறதுல ஒரு நியாயம் தர்மம் இருக்கு. ஆனால் அவள் அந்த டாக்டர் தம்பியை தானே காதலிச்சா. சரி கல்யாணம் பண்ணிட்டு போட்டோம். இப்படி ஒரு வாழ்க்கை என் பொண்ணுக்கு அமையாதானு நானே காத்துட்டு இருக்கேன். நீ என்னடானா இப்படி கண்ணை கசக்கிட்டு உக்காந்து இருக்கவ. அட போய் வேலையை பாரு" என்று தன்னுடைய தோரணையில் அவளுக்கு அறிவுரை கூற...அவளை வெறுத்து நோக்கியவள்.

"ஆமாம்ல..எந்த வகையிலும் எழிலை விட அந்த பாண்டியன் குறைஞ்சவன் இல்லையே. நல்ல பையன் மட்டுமின்றி டாக்டர் அப்டிங்கிற அந்தஸ்து வேறு. நல்ல வாழ்க்கையை தான் அவள் தேடியிருக்காளோ..." என்று தனக்குள் கூறிக்கொண்டு எழுந்து தன் வேலையை கவனிக்க துவங்கினாள்.

"ஆத்தா லட்சுமி இங்க வாத்தா " என்று அழைத்தார் அவளுடைய தந்தையார்.

"என்னப்பா கூப்டிங்களா" என்க.

"இதோ இந்த வீட்டு பத்திரம். இதை பத்திரமாக வச்சிக்க. எனக்கு அப்றம் இந்த வீடு தோப்பு எல்லாம் உனக்குனு எழுதி வச்சிட்டேன். நான் கண்ணை மூடிட்டா நீ அநாதை ஆயிடுவ. நீ என்ன பண்றதுன்னு தவிக்ககூடாது பாரு அதான் இப்பவே தெளிவு படுத்திட்டேன்" என்றதும் லட்சுமியின் கண்கள் கலங்கியது.

"ஏன் பா இப்படி எல்லாம் பேசுறீங்க. நீங்க இன்னும் ரொம்ப வருஷம் வாழணும். எனக்குனு இருக்கிற ஆண் துணை நீங்க தானே பா. இப்படியெல்லாம் சொல்லாதிங்க பா." என்று கண்கலங்கியதும்.

"அம்மாடி அப்பா உன்கூட தான் இருக்கேன். இருந்தாலும் எனக்கும் வயசாகுதுல...எம்புட்டு நாளைக்கு இன்னும் நான் இருப்பேன் சொல்லு. உன் அம்மாவுக்கும் வயசாகுது. ஒருவேளை உங்கள் அம்மாவுக்கு முன்னாடி நான் போயிட்டா, அவளை நல்லபடியா பார்த்துக்கோ மா. " என்று உணர்வுபூர்வமாக பேசியதும் லட்சுமிக்கு என்னவோ போல் இருந்தது.

"உன் புருஷன் போனப்பிறகு உனக்கு இன்னொரு கல்யாணத்தை பண்ணி வச்சிருந்தா இந்நேரம் இந்த கவலை எனக்கிருந்துருக்காது" என்று அவர் புலம்பியதும் அவளுடைய திருமண வாழ்க்கை மின்னல் போல் நினைவுகளாய் வந்து சென்றது.

ஆம் 'குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள்' அதே குடிதான் லட்சுமியின் வாழ்க்கையையும் கெடுத்தது. எங்கோ யாரிடமோ வாங்கி பருகிய கள்ளச்சாராயம் அவன் உயிரை பறித்துக்கொண்டது. அவன் சாதாரண கட்டிடத்தொழிலாளி தான் இருப்பினும் லட்சுமியின் கைத்தொழில் உதவியது. குடும்பத்தை சமாளிக்க பணம் என்னவோ இருந்தது என்றாலும் அவனிடம் இருந்த குடிபோதை பழக்கம் மட்டும் போகவேயில்லை...

கயல்விழிக்கு இரண்டு வயது இருக்கும் போது தான் அந்த கோரச்சம்பவம். அதற்கு பிறகு வேறு வழித்தெரியாமல் பெற்றோர் வீட்டில் தஞ்சம் அடைந்தாள். எவ்வளவோ வற்புறுத்தி பார்த்தாலும் இரண்டாவது திருமணத்திற்கு மனம் இடம்தரவில்லை. அது கணவன் மீதிருந்த காதலா அல்லது வருபவன் கயல்விழியை சேர்த்து ஏற்றுக்கொள்வானா என்ற சந்தேகமா என்றெல்லாம் தெரியாது. ஆனால் பிடிவாதமாக திருமணம் வேண்டாம் என்றாள்.

அதற்கு பிறகு கணவன் வீட்டிற்கும் அவளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. சரி தனது நாத்தனார் மகன் எழிலுக்கு நம்ம கயலை திருமணம் செய்து வைத்து மீண்டும் உறவை ஒட்டவைப்போம் என்று பார்த்தால் அதற்கும் வழியில்லாது போயிற்று.

கடைசி வரை கணவன் சார்ந்த உறவுகள் தனக்கு இல்லை என்றாயிற்று. தற்போது லட்சுமிக்கு 40 வயது தான். இன்னும் எவ்வளவோ வாழ்க்கையில் பார்க்க வேண்டியது இருக்கிறதே. ஆனால் எல்லாம் முடிந்தது போல் அல்லவா இருக்கிறது அவள் வாழ்க்கை.

திருமணம் ஆகும்போது இருபதே வயது தான் அவளுக்கு. தற்போது கயலுக்கு 19. இந்த விஷயத்தில் மகள் தன்னை முந்திக்கொண்டு சீக்கிரம் வாழ்க்கையை தேடிக்கொண்டாள். ஆனால் அவள் தேடிக்கொண்டது ஒன்றும் குடிக்காரபயன் இல்லையே. நல்லா மிடுக்காக இருக்கும் டாக்டரை தானே...என்று நினைக்கும்போது மனம் தெளிவுற்றது.

"அப்பா, நான் தெச்சு வச்ச ப்ளவுஸை கொடுத்துட்டு வந்துடுறேன்" என்று குரல் தந்துவிட்டு வெளியே வந்தாள்...

வயக்காட்டு பக்கம் நடந்து வந்துக்கொண்டிருக்க அங்கு ராணுவ உடையில் நல்ல நேர்க்கொண்ட பார்வையுடன் ஒருவர் நடந்து வந்ததை கவனித்தாள்.

'இது யார்.. எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே' என்று யோசிக்க அப்போது தான் சட்டென்று நினைவுக்கு வந்தது இவன் தன்னுடன் பள்ளியில் படித்த முருகேசன் என்று...

"முருகேஷா....." என்றழைத்தாள்

"லட்சுமி"...

"நான்... நானே தான். நீ இம்புட்டு நாள் ராணுவத்திலா இருந்த?"என்க..

"ஆமாம் இன்னுமும் ஒருவருஷம் சர்வீஸ் இருக்கு அதை முடிச்சிட்டு ஊருக்கே வந்திடுவேன். இப்போ லீவுல வந்துருக்கேன்" என்றான் எதார்த்தமாக.

"ஓ...சரி சரி உனக்கு எத்தனை பசங்க" என்றதும் மௌனமானான்.

"என்ன முருகேஷா அமைதியா ஆயிட்டா நான் எதாவது தப்பா கேட்டுட்டேனா" என்றதும்..

"நான் கல்யாணமே பண்ணிக்கல லட்சுமி. பொண்டாட்டி புள்ளைங்கன்னு யாரும் கிடையாது. தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுத்து அவள் புள்ளையும் குட்டியுமா சந்தோஷமா இருக்காள். ஆனால் நான் தான் இப்படியே காலத்தை ஓட்டிட்டேன்" என்று அவன் சொல்லும்போதே கலங்கிப்போனான்.

"சரி இப்போ இங்கே இந்த ஊர்ல யாரு இருக்கா உனக்கு" என்றதும்.

"என் வீடு மட்டும் தான் லட்சுமி இருக்கு. அப்பா அம்மா கூட இறந்துட்டாங்க" என்றதும் இந்த முறை லட்சுமியிற்கு கண்கள் கலங்கியது.

"லட்சுமி ஆமாம் உங்கள் வீட்டுக்காரு எங்கே வேலை பாக்குறாரு" என்றதும்.

"என் நெத்தியில் இருக்கும் விபூதி பொட்டை பார்த்துமா இந்த கேள்வி" என்று விரக்தியாக கூற..

ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனான் முருகேஷ்.

"லட்சுமி.... அப்படினா உங்கள் வீட்டுக்காரர் இறந்துட்டாரா" என்றதும் ஆம் என்று தலையை அசைத்தாள்.

"உனக்கு எத்தனை பசங்க" என்றதும்.

"ஒரே பொண்ணு. பெயர் கயல்விழி" என்றதும்....

"ஓ...சரி சரி...லட்சுமி நேரம் ஆகுது நீ கிளம்பு நானும் கிளம்புறேன். நம்ப ஊர் ஜனங்கள் இப்படி நீயும் நானுமா நின்று இம்புட்டு நேரம் பேசுறத பார்த்தால் தப்பா நினைப்பாங்க" என்று அனுப்பி வைத்தான்.

லட்சுமி நடந்து வரும்போது பயிர்கள் எல்லாம் அவளை உரசிக்கொண்டிருந்தது. அந்த தீண்டலில் தெளிந்தவள் ஏதோ சிந்தனையிலிருந்து வெளியே வந்தாள். இவளோ 40 வயதில் விதவைக்கோலம். முருகேஷனோ 40 வயதிலேயே ஒண்டிக்கட்டை. கடவுள் விதித்த சாபமா இது. என்று நினைத்துக்கொண்டு வந்தாள்.

"அக்கா இந்தாங்க உங்கள் ப்ளவுஸ்" என்றதும்.

"பரவாயில்லை சொன்ன நேரத்துக்கு தச்சு எடுத்துட்டு வந்துட்ட. திறமைசாலி லட்சுமி நீ" என்றதும் ஒரு நமட்டு சிரிப்புடன் விடைப்பெற்று சென்றாள்.

வரும்போது பஸ்ஸ்டாண்டு வழியில் நடந்து வந்துக்கொண்டிருக்க சென்னையிலிருந்து வரும் பேருந்தை கவனித்தாள்.

'என் மகள் ஒருவேலை வந்துருப்பாலோ' என்று தோன்றியது அவளுக்கு வந்து அங்கும் இங்கும் தேடிப்பார்த்தாள்.

'ப்ச்ச் அவசரப்பட்டு அவளை திட்டி அனுப்பிட்டேன். என்னமோ தெரியல காலைல இருந்து அவள் நினைப்பாவே இருக்கிறது' என்று நொந்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

வீட்டில் ஆவிப்பறக்க அவளுடைய தாய் காப்பி எடுத்துக்கொண்டு லட்சுமி முன்பு நீட்டி "எடுத்துக்க டி" என்றதும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அப்போதைக்கு அந்த காபி உதவியாக இருந்தது.

"அம்மா..உன் மடியில கொஞ்சம் நேரம் படுத்துக்கவா" என்று கேட்டதும்.

"அட இது என்ன கேள்வி வா மா" என்று அரவணைத்தாள் அந்த வயதான தாய்.

தாயின் அரவணைப்பில் மனசு சற்று லேசானது போல் இருந்தது.
"இந்தா மா நம்ம தோப்பு இளநீர் குடிக்கிறியா" என்று தந்தை எடுத்து வர...

"இல்லைங்க இப்பதானே அவள் காபி குடிச்சா விடுங்கள்" என்று மனைவி கூறியதும் சரியென்று மூலையில் வைத்துவிட்டு அமர்ந்தார்.

இரவு நேரம் வந்தது...

துணிகளை தைத்து தைத்து உடல் அசதியில் உறங்கிப்போனாள். மழைப்பொழியும் அறிகுறியாக மண்வாசம் வீசத்துவங்கியது...லேசாக காற்றும் வீசியது.. சில்லென ஜன்னல் வழியே வந்த காற்று அவள் முகத்தில் உரச சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

மண்வாசத்தை நுகர்ந்தவாறே "ப்பா...மழைவரப்போகுது போலருக்கு"என்று சொல்லிக்கொண்டு அங்குமிங்கும் பார்த்தாள். மணி 9.50 தான். தன்னுடைய மகள் இவ்வளவு சீக்கிரம் உறங்கமாட்டாள் என்று நன்றாக தெரியும் அவளுக்கு.

உடனே தன் கைப்பேசியை எடுத்து அவளுக்கு அழைப்பு விடுத்தாள். முதல் அழைப்பிலேயே கயல் போனை எடுத்துவிட்டாள்.

"அம்மா....என்ன ஆச்சரியம் கால் பண்ணியிருக்க. அம்புட்டு கோவத்துல தானே இருந்த. கோபம் எல்லாம் சரிஞ்சு போச்சா...." என்றவுடன் பதிலுக்கு சிரிப்பு மட்டுமே பரிசளித்தாள் லட்சுமி.

"ம்மா....சிரிக்கிறியா...அப்படினா உண்மைலயே கோபம் எல்லாம் போயிடுச்சு போலருக்கு" என்றதும்.

"ஆமாம் போயிடுச்சு அதுக்கு என்ன இப்ப...சரி சரி இப்ப நீ எங்கே தங்கியிருக்க" என்றாள் அக்கறையாக

"இங்கே டாக்டர் பாண்டியன் வீட்டில் தான் மா. ஆனால் இன்னும் எங்கள் விஷயம் எதுவும் தெரியாது அதான் இப்ப பிரச்சனையே. இதை எப்படி அவங்க கிட்ட சொல்லி புரியவைக்க போறோம் தெரியல..." என்றாள் பாவமாக

"சரி டா மா இதை பற்றி நான் சென்னை வந்து அவங்க கிட்ட பேசிக்கிறேன். இது எல்லாம் பெரியவர்கள் பேச வேண்டிய விஷயம். நான் அவசரப்பட்டு உன்னை அங்கு அனுப்புனது தப்பு. சரி இதை நானே சரி பண்றேன். ஓகேவா" என்றதும் கயலுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

போனை வைத்தவுடன் பாண்டியனிடம் விஷயத்தை சொல்ல...

"என்னது லட்சுமி மா இங்கே வராங்களா. அப்போ சரி இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைச்ச மாதிரி தான்" என்றவன்...

"சரி ரொம்ப நேரமா மொட்டை மாடியில் நின்று பேசிட்டு இருக்கோம். வா கீழே போலாம்" என்றதும் அவனுடன் இறங்கி கீழே வந்தாள்.

"கயல்...நீங்க என்கூட தூங்குங்க வாங்க" என்று ராதா அவளை அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

இன்னொரு அறையில் பாண்டியனும் அவனுடைய பெற்றோரும் உறங்கினர்.
அன்றைய இரவு எல்லோருக்கும் மனநிறைவு என்று சொன்னால் அது மிகையாகாது.

தொடரும்.
 
அத்தியாயம் -7
🌻🌻🌻🌻🌻🌻🌻

கிராமம் என்றாலே சேவல் கூவும் சத்தம் தான் அவர்களுக்கு அலாரம். பொழுது விடிந்துவிட்டது என்று உணர்த்தியது. எழுந்து வாசலில் கோலம் போட்டுவிட்டு உள்ளே நுழைந்து அரக்கபரக்க காபி போட்டு குடித்துவிட்டு...

"மா, நான் சென்னைக்கு போய் கயல்விழி கல்யாணத்தை பேசி முடிச்சிட்டு வரேன்" என்று தன் தாயிடம் சொன்னவுடனே நினைவுக்கு வந்தது. இதெல்லாம் சுமங்கலிகள் முன்னே நின்று பேசவேண்டிய விஷயம் ஆச்சே. வாழப்போற என் பொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்கனும் என்று நினைத்தவள்...

"மா நீங்களும் அப்பாவும் என்கூட வாங்க சென்னை போய் பேசிட்டு வருவோம் நீங்க வயசுல மூத்தவங்க அதுமட்டுமின்றி சுமங்கலி அதான்" என்றதும்.

"சரி மா வரோம் நாங்களும்" என்று அனைவரும் தயாராகி ரயிலில் புறப்பட்டனர். வயதானவர்களுக்கு பேருந்து பயணம் சரியில்லை என்பதால் ரயிலில் பயணம் செய்தனர்.

தனது சிறுவயது நியாபகங்களை நினைவூட்டியபடி "மா உங்களுக்கு நியாபகம் இருக்கா?மதுரையில் இருக்கும் சித்தி ஊருக்கு ரயிலில் அழைச்சிட்டு போவிங்கள..." என்று கூறி மகிழ்ந்தாள்.

"ஆமாம்டி அதெல்லாம் ஒருகாலம். உன் சித்தி பொண்ணு கூப்டுக்கிட்டே இருக்கா..வாங்க வாங்கன்னு எங்கே வரது. ஒரேவாட்டி கயல் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்குறப்ப பார்த்துப்போம்" என்றதும்.

"உன் வாய் முஹுர்த்தம் பளிக்கும்" என்று சிரித்து வைத்தாள் லட்சுமி. ரயிலில் தனது பெற்றோரோடு சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தாள். எதிரே இருந்த நடுத்தர வயது பெண்மணி அவளிடம்.

"ஏன்மா, உனக்கு கணவன் இல்லையோ இறந்துட்டாரா. உன்னை பார்த்தால் ரொம்ப ஒன்னும் வயசு இல்லை." என்று வெடுக்கென்று கேட்டு வைக்க...லட்சுமியும் நடந்ததை எல்லாம் கூறிவிட்டாள் .

"ஏன்மா வயசான உன் அப்பா அம்மா எத்தனை நாளைக்கு சொல்லு. அப்றம் உனக்குனு துணை யாரு இருக்கா" என்றதும்.

"அதான் என் மகள் இருக்காளே" என்றதும்.

"அட அவள் கல்யாணம் ஆகி போறவள் . அதுகப்புறம் நீ எப்படி தனியா துணை இல்லாமல் இருப்ப. இப்பக்கூட கெட்டுப்போகல நீ யாரையாவது கல்யாணம் பண்ணிக்க. பொண்ணு பெரியமனுஷியா இருக்காளே என்று வெட்கப்படாத. இது உன் வாழ்க்கை பிரச்சனை. இங்கே பாரு 60,வயசுல கூட தனக்கு ஒரு துணை வேணும்னா கல்யாணம் பண்ணிக்கிறாங்க. அப்படி இருக்கிறப்ப நீ பண்ணிக்கிறதுல என்ன தப்பு" என்றதும்...லட்சுமியால் எதுவும் பேசமுடியவில்லை.

அவளுடைய பெற்றோர் ஒரு கணம் யோசித்தனர்.
"என்னங்க அந்த பொம்பள சொல்றது சரிதானே" என்று கிசுகிசுத்தார் லட்சுமியின் தாய் தன் கணவரிடம்.

"உண்மை தான். ஆனால் இப்ப எப்படி இவளுக்கு கல்யாணம் பண்ண முடியும். நேரம் கூடி வந்தால் ஒருவேளை தன்னால நடக்கும் போலருக்கு" என்றார்.

"அட ஆமாங்க. இந்த கிழகட்ட வயசுல கூட உங்களை விட்டு நானும். என்னை விட்டு நீங்களும் இருக்கமுடியாது தானே? ஆனால் நம்ம பொண்ணை பத்தி நம்ம யோசிக்கவேயில்லை பாருங்க. இந்த 40 வயசுல இப்படி ஒரு நிலமை அவளுக்கு. ஆனால் ஒன்னு இந்த பொம்பள வாய் முஹுர்த்தம் பளித்து என் பொண்ணுக்கு ஒரு துணை கிடைக்கனும்" என்க...

"சரிதான். எல்லாம் நல்லதே நடக்கும் நீ கவலைபடாத" என்றதும்...

லட்சுமி இவர்கள் கிசுகிசுத்ததை கவனித்துவிட்டு
"மா அங்கே என்ன தனியா ஏதோ பேசுறீங்க" என்றதும்.

"அதெல்லாம் உனக்கு எதுக்கு நீ ஜன்னலில் வேடிக்கை பாரு" என்றதும் முகத்தை சுளித்தாள்.

சென்னை வந்து இறங்கினர் மூவரும் நேரே ஆட்டோ பிடித்து கையில் பூ பழம் எல்லாம் வாங்கிக்கொண்டு சென்றனர்.

"நாங்கள் உள்ளே வரலாமா" என்று வாசலில் நின்றபடி லட்சுமி குரல் கொடுத்ததும். பாண்டியனின் தாய் சிவகாமி..

"வாங்க ,ஆமாம் நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா'' என்றதும்.

"நாங்க கயலோட குடும்பத்தினர். அது வந்து" என்று கயலின் தாத்தா ஆரம்பிக்க...

"ஆமாம் ஏதோ கட்டாய கல்யாணம் அதனால தப்பிச்சு இங்கே வந்ததாக சொன்னாலே கயல்...இப்ப அவளைத்தேடி நீங்க இங்கே" என்று குழம்பியபடி கேட்க...

"கயல் இங்கே வந்தது தங்கினது எல்லாம் ஒரு காரணமாகத்தான் அவளோட மாமன் எழிலோட இருந்த நிச்சயதார்த்தம் தடுத்து நிறுத்தி உங்கள் மகன் தான் அவளை இங்கே அழைச்சிட்டு வந்தாரு. இரண்டு பேரும் விரும்புறாங்க. அதனால இரண்டு பேரையும் பெரியவர்கள் நாமலே சேர்த்து வச்சிடலாம்னு தோன்றுது" என்று லட்சுமி சொன்னவுடனே சிவகாமியிற்கு தலையே சுற்றுவது போல் இருந்தது...

"டேய் பாண்டியன் என்ன இதெல்லாம். உண்மையா" என்றதும்...

"ம்ம்ம்"என்க...

"அடப்பாவி இதுவா விஷயம். என்ன தைரியம் டா உனக்கு இதெல்லாம் செய்ய...உன்னை மெடிக்கல் கேம்புக்கு அனுப்புனதுக்கு நீ சரியா பாடம் கற்பிச்சிட்ட...கிராதகா.. அநியாயம் டா இதெல்லாம்." என்று புலம்பி திட்டித்தீர்த்தாள்.

அப்பாவின் பங்குக்கு அவரும் திட்டித்தீர்த்தார். அதற்கு பிறகு சிலநேரம் மௌனம் நிலவியது.

"இதை பற்றி என் பெரிய பையன் கிட்ட பேசிட்டு சொல்றேன்ங்க. இப்போதைக்கு உங்கள் மகளை அழைச்சிட்டு நீங்க கிளம்புங்க ப்ளீஸ்" என்றார் சிவகாமி.

"சரி நல்ல முடிவாக சொல்லுங்கள். நான் கயலை அழைச்சிட்டு போறேன்" என்று லட்சுமி அவளை அழைத்துக்கொண்டு வயதான பெற்றோருடன் வீட்டை விட்டு வெளியே வந்தாள்...

"நம்ம இன்னைக்கு ஒரு நைட் எங்கயாவது ரூம் எடுத்து தங்கிட்டு நாளை காலையில் ஊருக்கு போவோம்" என்று ஹோட்டலினுள் நுழைந்தாள்.

"மா..." என்று அழைத்த மகளை நிமிர்ந்து என்ன என்பது போல் புருவத்தை உயர்த்த...

"ஐலவ்யூ மாம்" என்றாள் கயல்...

அதை கேட்டு நகைத்துவிட்டு அறையின் கதவை திறந்து அனைவரும் உள்ளே நுழைந்தனர்.

"ஏண்டி லட்சுமி சுத்தம் மரியாதை தெரியாத குடும்பமாக இருக்கும் போலருக்கு. இப்படி பச்சை தண்ணீர் கூட தராமல் வெளியே அனுப்பிட்டாங்க" என்று தாய் சொன்னதும்.

"இல்லை மா. அவங்க அந்த மனநிலையில் இல்லை. இப்போதைக்கு விஷயம் அவங்க காதுக்கு போட்டாச்சு. அதுபோதும்" என்று திருப்தி அடைந்தாள்.

கயலுக்கு அவனிடமிருந்து அழைப்பு வந்தது.
"மிஸ்டர் பாண்டியன் இப்ப எதுக்கு கால் பண்ணிங்க" என்று கேட்க

"சாரி சொல்லத்தான் கால் பண்ணேன். உங்கள் அம்மா கிட்ட போன் கொடு" என்றதும்.

"மா,பாண்டியன் பேசணுமா" என்று போனை திணித்தாள்.

"தம்பி சொல்லுங்கள் என்ன விஷயம்" என்று லட்சுமி கேட்க...

"மா, என்னை மன்னிச்சிருங்க. அம்மா இப்படி பிடிப்பில்லாமல் பேசுவாங்கனு நினைச்சு கூட பார்க்கல. பாவம் அவ்வளவு தூரத்தில் இருந்து வந்துட்டு இப்படி எதுவுமே சாப்பிடாம கூட அனுப்புனது நினைச்சா வருத்தமா இருக்கு." என்றான் தழுத்தப்படி.

"அட...விடுப்பா அதெல்லாம் ஒன்னுமில்லை எல்லா தாய்க்கும் வர வேதனை தான். அன்னைக்கு நானும் இப்படி தானே கழுத்தை பிடிச்சு என் பொண்ணை வெளியே அனுப்பினேன். அதெல்லாம் ஒரு கோபம் பா, எனக்கு கோபம் தனிந்த மாதிரி உங்கள் அம்மா கோபமும் தனியும்" என்றார் லட்சுமி பெருந்தன்மையோடு.
....
நேரம் கடந்துக்கொண்டே போனது...சென்னை வந்தது வந்துட்டோம் ஒரு எட்டு சுத்தி பார்த்துருவோம் என்று தோன்றியது லட்சுமிக்கு.. அதுமட்டுமின்றி தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள அது உதவியாக இருக்கும் என்று தோன்றியது.

"கயலு சென்னை வந்தது வந்துட்டோம் மெரினா மட்டும் பார்த்துட்டு வந்துருவோம் வா டி" என்றழைக்க...

"ம்ம்ம் சரி மா எனக்கும் மனசு ஒருமாதிரி இருக்கிறது. கொஞ்சம் வெளியே போனால் நல்லாதான் இருக்கும்" என்றபடி ஒரு ஆட்டோவை பிடித்து நால்வரும் மெரினா சென்றனர்.

கடற்கரை வருவது இதுவே முதல்முறை கயலுக்கு. கடல் அலைகளை வெறித்து நோக்கியபடி அமர்ந்திருந்தவளை அவளின் தாய் தண்ணீரில் கால்களை நனைக்க அழைத்து போனாள்.

"மா,எவ்வளவு நல்லாருக்குல.." என்று கூறி மகிழ்ந்தாள் கயல்.

"கவலைபடாத இதே இடத்துக்கு உன் புருஷனோட கைகோர்த்து நிற்ப கூடிய சீக்கிரம்" என்றதும்.

"இல்லை.... இல்லை மா கொஞ்ச நாளைக்கு இந்த காதல் கல்யாணம் இதெல்லாம் எதுவுமே வேணாம். நான் படிக்கணும். கண்டிப்பாக படிக்க போறேன்." என்று மனதில் சில கலக்கத்தோடு சொன்னவளை ஏறிட்டு பார்த்துவிட்டு அவள் கைகளை அழுத்தி பிடித்துக்கொண்டாள்.

நாட்கள் கடந்தது.

மண்வளம் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள கல்லூரி குழுவுடன் சென்றிருந்தாள் கயல்விழி. அப்போது வீட்டில் தைத்துக்கொண்டிருந்த லட்சுமியிடம்..

"லட்சுமி ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டல" என்றார் அவளுடைய தாய்..

"என்னம்மா, ஏதோ புதுசா கேக்குற மாதிரி இருக்கு. சொல்லுங்கள் நான் ஏன் உங்களை தப்பா எடுத்துக்கபோறேன்" என்றாள் லட்சுமி.

"அந்த முருகேஷ் பற்றி என்ன நினைக்கிற" என்று வெடுக்கென்று கேட்டுவிட லட்சுமியின் உதடுகள் வார்த்தைகளை கொட்ட தயங்கியது.

"சொல்லு உன்னை தான் கேக்குறேன்" என்று தாய் சொன்னதும்.

"அவருக்கென்னமா நல்லவரு, வேலை பாக்குறாரு ராணுவத்தில். இருக்க ஒரு வீடு இருக்கு. வேற என்ன சொல்றதுக்கு இருக்கிறது" என்று சொன்னதும்...

"ஆனால் அவருக்கு துணை இல்லையே அதை நீ கவனிச்சியா" என்று தாய் கேட்க..

"மா, அதுக்கு நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்" என்றதும்.

"நீயும் எம்புட்டு நாளைக்கு இப்படியே தையல் மிஷினோடவும் இந்த கிழக்கட்டைங்களோடும் வாழ்க்கையை ஓட்டுவ , உனக்குன்னு ஒரு பிடிப்பு வேண்டாமா? அது வந்து உனக்குனு ஒரு துணை வேணும் லட்சுமி. உனக்கு இருக்கிறது ஒரே ஒரு பொம்பள புள்ள அவளை கரை சேர்த்துட்டா அதுகப்புறம் உனக்கு துணையா யாரு இருப்பாங்க சொல்லு? வயசு 40 தானே. நீ இன்னொரு துணை தேடிக்கிறதுல தப்பில்லையே" என்று சொல்லவும் அவளுக்கு கோபம் தலைக்கேறியது.

"மா இதெல்லாம் பண்றதா இருந்தா அப்போவே பண்ணிருக்கனும். பொண்ணுக்கே கல்யாண வயசு வந்தப்றம் இதெல்லாம் நல்லாவா இருக்கும்." என்று கண்ணீர் வடித்தவளை ஆசுவாசப்படுத்தி விட்டு

"சரி எங்களுக்காக வேண்டாம். அந்த முருகேஷ் நிலையை யோசித்து பாரேன். தன்னோட இளமை காலத்தில் கல்யாணம் காட்சின்னு எதுவும் இல்லாமல். இப்ப 40 வயசுல சோறு வடிச்சு போடக்கூட ஆளில்லாமல் தன்னத்தனியா இருக்கான். இங்கே பாரு, இதை நீ சராசரி திருமணம் வாழ்க்கையா நினைக்காமல் இது கடைசி காலத்தில் ஒரு பேச்சு துணைக்காவது அவனோட நீ சேர்ந்து வாழணும்னு நினைச்சு பாரு டி. இப்படியே இருந்தால் உனக்கு கடைசி காலத்தில் பேச்சு துணைக்கு கூட ஆளில்லாமல் போய்டும் டி." என்று உருக்கமாக தாயின் உணர்வுகள் வெளிப்பட்டவுடன் மௌனமானாள் லட்சுமி.

மௌனம் சம்மதமோ?
 
அத்தியாயம் -8

💐💐💐💐💐💐
லட்சுமியின் எண்ணங்கள் மூளையில் ஒரு ஓரமாய் ரங்கராட்டினம் ஆடிக்கொண்டிருந்தது. முருகேஷை திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற யோசனை. சட்டென்று அவள் தோள்பட்டையை யாரோ பற்றுவதை உணர்ந்து திரும்பி பார்த்தாள் அங்கு கயல்விழி புன்னகையித்தபடி..

"மா இங்கே தான் இருக்கியா எங்கடா காணோம்னு தேடிட்டு இருந்தேன்" என்றதும்.

"சரி வா உக்காரு, ஆமாம் உன்னோட படிப்பு எப்படி போகுது" என்று எதார்த்தமாக வினவினாள்.

"ம்ம்ம் காலையில் கூட மண்வளம் ஆராய்ச்சி எல்லாம் கற்று கொடுத்தாங்க. எந்த மண்ணுல எந்த பயிர் விளையும். மண்ணோட ஈரப்பதம் எப்படி இருக்கு, அதோட தன்மை எப்படி இதெல்லாம் சொல்லி தந்தாங்க. நல்லாதான் போகுது படிப்பு. ஆமாம் அதெல்லாம் இருக்கட்டும் நீங்க எதையோ யோசிச்ச மாதிரி தெரியுது. என்ன ஆச்சு ? எதாவது பிரச்சனையா?" என்று கேட்டதும் தன் மகளிடம் இதை பற்றி பேசலாமே என்று தோன்றியது.

"கயலு, அம்மாக்கு ஒன்னு தோன்றுது அது சரியா தவறா தெரியல. அதான் உன்கிட்ட கேக்கலாம்னு" என்று ஆரம்பித்ததும் அவள் என்ன சொல்ல எத்தனிக்கிறாள் என்பதை கூர்ந்து கவனிக்க துவங்கினாள் கயல்.

"வீட்டில் தாத்தா பாட்டி இரண்டு பேரும், எனக்கும் முருகேஷ்க்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்காங்க. இதுல பெருசா எனக்கு விருப்பம் இல்லைனாலும் அவங்க சொல்ற காரணம் நியாயமானுதுனு தோன்றுது. நீ என்ன நினைக்கிற கயலு"?என்று விட்டென்று கேட்டுவிடவும் அவளால் பதில் கூற இயலவில்லை...

சற்று நேரம் மௌனமானாள் கயல்விழி. அவள் என்ன சொல்ல போகிறாள் என்று அவளையே வெறுத்து நோக்கினாள் லட்சுமி.

"கயல் எதாவது சொல்லு ஏன் அமைதியாக இருக்க" என்றதும்.

"மா.....இதுல நான் சொல்ல என்னம்மா இருக்கிறது. உனக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம் தா மா. உன்னை சுமங்கலியா பார்க்கணும்னு எனக்கும் ஆசைதான். இங்கபாரு அதுக்காக உடனே எல்லாம் முருகேஷ் சாரை அப்பானு எல்லாம் கூப்பிட முடியாது. நான் அவரை அப்பாவா ஏத்துக்க கொஞ்சநாள் ஆகும்." என்று சொல்லிவிட்டு எழுந்தவளை பிடித்து நிறுத்தினாள் தாய் லட்சுமி.

"அப்போ உனக்கு இதுனால என்மேல கோபம் எதுவும் இல்லைல" என்று கேட்டதும்.

"ம்ம்ம் பாண்டியன் எனக்கு வேணும்னு ஆசைப்படுறது எப்படி நியாயமான விஷயமோ அப்படித்தான் முருகேஷ் சார் உன் வாழ்க்கையில் வருவதும். இதுல நான் ஏன் கோச்சிக்கப்போறேன்" என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.

மகளிடம் பகிர்ந்தப்பின் தான் சற்று ஆசுவாசமாய் இருந்தது லட்சுமிக்கு. அப்படியே நாட்கள் நகர அந்த வெள்ளி முஹுர்த்தம் அன்று அவள் சங்குகழுத்தில் தாலி ஏறியது...

மகளின் விதவைக்கோலம் போய்விட்டது என்ற ஆனந்தத்தில் லட்சுமியின் பெற்றோரின் முகம் மலர்ந்தது.
"மா இப்போ உங்களுக்கு சந்தோஷமா" என்றாள் லட்சுமி

"ரொம்ப சந்தோஷம் லட்சுமி" என்றபடி ஆசிர்வதித்தனர் பெற்றோர். திருமணம் முடிந்ததும் வழக்கம் போல் கணவன் வீட்டுக்கு சென்று விளக்கேற்றிவிட்டு வருவது நம்முடைய வழக்கம் எனவே அவ்வாறு லட்சுமி செய்தாள்.

ஆனால் முருகேஷ் லட்சுமி இருவரும் லட்சுமியின் வீட்டில் தான் வசிப்பதாக முடிவு எடுத்திருந்தனர். வயதான அப்பா அம்மா மற்றும் வயதுப்பெண் கயல்விழி விட்டு எல்லாம் தனியாக வர இயலாது என்று திட்டவட்டமாக கூறினாள் லட்சுமி.

"உனக்கு எது விருப்பமோ அப்படியே ஆகட்டும் லட்சுமி" என்றான் முருகேஷ்.

"முருகேஷ் சார் வாழ்த்துக்கள்" என்று கைகுலுக்கினாள் கயல்விழி.

"அதென்ன முருகேஷ் சார். வாய்நிறைய அப்பானு கூப்பிட மாட்டியோ" என்று புருவத்தை உயர்த்தினார் முருகேஷ்.

என்ன சொல்வதென்று தெரியாமல் விலகிப்போனாள் கயல்விழி. வந்த முதல்நாளே இப்படி நம்ப குடும்பத்தினருடன் ஒன்றிவிட்டாரே என்று பெருமிதம் அடைந்தாள் லட்சுமி.

நாட்கள் இப்படியே போய்க்கொண்டிருக்க அவன் பணியின் காரணமாக ஜம்முவிற்கு செல்ல வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. இன்னும் ஒருவருடம் தானே பிறகு திருவலங்காடனூரிற்கு வரத்தானே போகிறோம் என்று சமாதானம் செய்துக்கொண்டு தனது சீறுடையுடன் புறப்பட்டான்.

"என்னங்க, ப்ளீஸ் போகாதிங்க" என்று கண்ணீர் சிந்திய லட்சுமியை எதிர்நோக்கியவன்.

"லட்சுமி தைரியமா இருக்கணும். நான் போய் ஒருவருஷத்துல வந்திடுவேன். அப்றம் நீ நான் நம்ம கயல் எல்லாரும் இதே வீட்டில் சந்தோஷமாக இருக்கப்போறோம். ஏன் அழுகுற..." என்று சமாதானம் செய்துவிட்டு புறப்பட்டான்.

அவன் கிளம்பிய நாள் முதல் லட்சுமியால் எதார்த்தமாக இருக்க முடியவில்லை அவளுக்கொரு ஆறுதல் வேண்டுமென்று தோட்டத்தில் பூச்செடிகள் வைப்பது அதை எப்படி பராமரிப்பது என்று எல்லாம் கயல்விழி சொல்லிக்கொடுத்து அவளை செய்யச்சொன்னாள்...

"மா , தினமும் செம்பருத்தி செடிக்கு தண்ணீர் ஊத்திட்டே இருக்கனும் அப்பதான் நல்லா வளரும். ஆனால் அதுக்காக மண் கொஞ்சம் இழுத்துக்குற வரைக்கும் வெயிட் பண்ணனும். எப்பவும் ஈரமாவே இருக்கக்கூடாது" என்றாள் நம் நாயகி கயல்..

ஒரு சிறிய புன்னகையுடன் எதிர்கொண்ட லட்சுமி.
"இவ்வளவு விஷயம் இருக்கா டி சாதாரண செம்பருத்தி செடிக்கு கூட" என்று வியந்தாள்.

வாழ்க்கையும் இப்படித்தான் ல...எப்பவுமே கஷ்டம் இருந்தாலும் நல்லாருக்காது எப்பவும் சுகமே இருந்தாலும் நல்லாருக்காது. இரண்டு மாறுதலும் மாறி மாறி வந்தால் தானே அழகு. என்று நினைத்துக்கொண்டாள் லட்சுமி.

இதற்கிடையில் சென்னையில் இருக்கும் கதாநாயகன் ரத்தினவேல் பாண்டியன் திருவலங்காடனூர் வர நினைத்தான். எவ்வளவு தான் அவனுடைய அம்மா தடுத்தாலும் அவன் கேட்பதாக தெரியவில்லை. ஆனால் அவன் வருகை கயலுக்கு எதுவும் தெரியாது....

எதர்ச்சையாக அவன் க்ளீனிக் பக்கம் வந்தவளுக்கு ஆச்சரியம்.
'இவரு எப்ப வந்தாரு' என்று யோசித்தவாறு அவனருகே வந்தாள்.

"கயல் எத்தனை வாட்டி சொல்லிருக்கேன் பேஷண்ட் இருக்கிறப்ப இப்படி அநாகரிகமாக உள்ளே வராதனு" என்று அதட்டலாக சொல்லவே கலங்கிப்போய் வெளியே வந்துவிட்டாள்.

அவனோ அவளை அதட்டி விட்ட வருத்தத்தில் நோயாளிகளை கவனித்துவிட்டு வெளியே வந்து பார்த்தான் கயலோ அங்கிருக்கும் வேப்பமரத்தடியில் அமர்ந்து கண்ணை கசக்கிக்கொண்டே இருந்தாள்.

"ஏய்...சாரி டி கயல்"என்க..

"என்ன சாரி. நான் எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா பார்க்க. நீங்க என்னடானா இப்படி கத்திவிட்டிங்க" என்று பொய்யான கோபத்தை உமிழ்ந்துக்கொண்டிருந்தாள். அது வெறும் பொய்யான கோபம் என்று அவனுக்கு புரிந்து விட்டது என்றாலும் அவன் அதை காட்டிக்கொள்ளாமல் கெஞ்சினான்.

"கயலு...சாரி மா"

"அதெல்லாம் முடியாது"

"சரி நான் என்னதான் பண்ணணும்"

"ஒரே ஒரு முத்தம்"...

"அடிப்பாவி. இதுக்கு தான் கோபம் மாதிரி நடிச்சிட்டு இருந்தியா கிராதகி" என்று அவளை இருக அணைத்து கட்டிக்கொண்டான்.

நேரம் போனதே தெரியாமல் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பை பறிமாறியவாறு அமர்ந்திருந்தனர்.

"சரி நான் கிளம்புறேன்" என்றவளை பிடித்து நிறுத்தியவன்.

"ஆக்சுவலி ஐயம் ரியலி சாரி" என்றதும் புரியாமல் அவனை நோக்கினாள்.

"அதான். சென்னையில் எங்க அம்மா நடந்துக்கிட்டது. கல்யாணம் பேச்சு விட்டுப்போனது எல்லாத்துக்கும் தான்" என்றான்.

"ஹாஹா அட அதெல்லாம் விடுங்கள். இப்போ எதுவும் கெட்டுப்போகல. நான் வழக்கம் போல காலேஜ் போறேன் வரேன். சொல்லப்போனால் எங்கள் வீட்டில் நிறைய மாற்றம் வந்துருக்கு" என்றவளை எதிர்நோக்கியபடி...

"மாற்றம் என்ன மாற்றம் புரியலையே" என்றான் விழித்தப்படி.

"அது வந்து.... முருகேஷ் சார் உங்களுக்கு தெரியும்ல, அவரைத்தான் எங்கள் அம்மா கல்யாணம் பண்ணிருக்காங்க. எவ்வளவு நாள் தான் எங்கள் அம்மா தனிமையில் இருக்கமுடியும்னு எங்கள் தாத்தா பாட்டி தான் கல்யாணம் ஏற்பாடு பண்ணாங்க..." என்றதும் அவள் சொன்னதில் உள்ள நியாயத்தை புரிந்துக்கொண்டு....

"ம்ம்ம், சரி அப்ப நான் கிளம்புறேன்" என்று விடைப்பெற்று கொண்டு கிளம்பினான்.

திருவலங்காடனூர் சொல்லபாபோனால் ஒரு அமைதிப்பூங்கா தான் இதுவரை எந்த குற்றமும் தீங்கும் நடந்ததில்லை. காவல் அதிகாரிகள் வந்து தீர்த்து வைக்கும் அளவு எந்த பிரச்சனையும் நடந்ததில்லை. அங்கு எல்லாமே ஊர் தலைவர் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் எடுக்கும் முடிவு தான் இறுதி முடிவு.

அதனால் தான் என்னவோ மக்கள் அவ்வூரில் மனசாட்சிக்கும் கடவுளுக்கும் அதிகம் கட்டுபட்டனர். அன்று வழக்கம் போல் வசதியற்ற பெற்றோர் ஊர் தலைவரை தேடி வந்து...

"ஐயா நான் மொய் விருந்து வைக்கலாம் என்று இருக்கேன். ஊர் மக்கள் எல்லாரையும் அழைச்சு." என்று முறையிட்டவுடன்.

"உண்மை தான் நீயும் உன் பொண்ணு கல்யாணத்தை பண்ணணும்ல. கண்டிப்பாக உனக்கு உதவி தேவைப்படும் தான். சரி மொய் விருந்து நடத்து" என்று அனுமதி அளித்ததும்...

சந்தோஷத்தில் வீட்டுக்கு வந்தவன்....விவசாயத்தில் விளைந்த அரிசி பருப்பு எல்லாம் வியாபாரம் போக மீதி இருந்தவற்றை மொய் விருந்துக்கு சமைக்க எடுத்துக்கொண்டான்.

"என்னங்க இதுக்கு ஆளெல்லாம் வச்சு சமைக்க வேண்டாம். நானும் நீங்களுமே சேர்ந்து செஞ்சிடலாம். உதவிக்கு நம்ம பொண்ணு இருக்காளே போதும்" என்க...

"உண்மை தான். நாமளே பண்ணிடலாம். வா முதல்ல எல்லாரையும் அழைச்சிட்டு வந்திடலாம்" என்று அழைத்துக்கொண்டு வீடு வீடாக சென்று அனைவரையும் அழைத்தான்.

அவன் அழைத்தவாறே எல்லோரும் அன்றைய மதிய உணவிற்கு கலந்துக்கொண்டனர். பாவாடை தாவணியில் தன்னை அலங்கரித்துக்கொண்டு நம் கதாநாயகி கயல்விழி வந்திருந்தாள். அவள் விழிகள் எல்லாம் அவனைத்தேடியே இருந்தது.

'எங்கே பாண்டியனை காணோம்' என்று கயல் அங்குமிங்கும் பார்வையை உலாவவிட்டு கொண்டிருந்தாள் .

"ப்ச்ச் யாரை டி தேடிட்டு இருக்க..." லட்சுமி வினவினாள்.

"மா,பாண்டியன் சார் தான் மா, இன்னும் காணோம்னு தேடிட்டு இருக்கேன்" என்றவளை முறைத்தபடி.

"அசிங்கமா பண்ணாத ஒழுங்கா சாப்பிட்டு கிளம்புற வழியை பாரு. ஊர் ஜனமே வந்துருக்கு இங்கே இப்படி எல்லாம் உன் பார்வையை அலையவிட்டினா பாக்குறவங்க தப்பா நினைப்பாங்க." என்றதும்.

முகத்தை சுளித்துக்கொண்டு சாப்பிட அமர்ந்தாள். ஆனால் அவளுடைய சிந்தனை எல்லாம் பாணாடியன் மீது மட்டுமே இருந்தது.

'என்ன இவரு கண்டிப்பாக வருவேன்னு சொன்னாரு. ஆனால் காணோமே' என்று யோசித்தவாறு சாப்பிட்டுவிட்டு இலையின் அடியில் ரூபாயை வைத்துவிட்டு சரி கிளம்பலாம் என்று எத்தனிக்கும் போது...

"அடியேய் நீ வீட்டுக்கு போ. நான் நம்ம ராசாத்தி கிட்ட பேசிட்டு வரேன்" என்று லட்சுமி சொன்னதும். சரியென்று கிளம்பினாள்.

'இப்படி என்ன ஆச்சுன்னு யோசிக்கிறதுக்கு பேசாமல் அவரைப்போய் பார்த்துட்டு வந்தால் தான் என்ன' என்று தோன்றியது அவளுக்கு.

நேரே அவன் இருக்கும் டிஸ்பென்சரிக்கு சென்றாள். உள்ளே அவள் நுழைந்ததும் அங்கு நாற்காலியில் அமர்ந்து சாய்ந்துக்கொண்டு கண்களை மூடியிருந்தான்.

"பாண்டியன், பாண்டியன் " என்று குரல் கொடுத்தும் எழுந்திருக்கவில்லை....

'என்ன ஆச்சு இவருக்கு ' என்ற குழப்பத்துடன் அவனருகே நெருங்கினாள். அதேசமயம் வெளிபக்கம் கதவை படார் என்று யாரோ சாத்தியது போல் இருந்தது. திரும்பி பார்த்தால் யாரும் இல்லை....


தொடரும்.
 
அத்தியாயம் - 9
🌹🌹🌹🌹🌹🌹🌹

ரத்தினவேல் பாண்டியனை நெருங்கிய போது தான் புரிந்தது அவனுக்கு ஏதோ உடல்நலம் குன்றியிருக்கிறது சற்று அசதியில் நாற்காலியில் சாய்ந்திருக்கிறான் என்று.

"பாண்டியன், நான் கயல் வந்துருக்கேன்" என்று தட்டி எழுப்பிய அடுத்த நொடி அவன் எழுந்துவிட்டு ஆச்சரியத்துடன் பார்த்தான்.

"என்ன நீ , இங்கே வந்துருக்க. மொய் விருந்துக்கு போலயா?என்று ஆச்சரியத்துடன் கேட்க.

"அதெல்லாம் போய்ட்டு வரப்ப தான் உன்னை பார்த்துட்டு போலாமேனு வந்தேன்"என்று அணுசரனையோடு அவள் கூறியது ஒருபக்கம் இருந்தாலும் இப்படி யாருமே இல்லாத க்ளீனிக்கில் இவர்கள் இருவர் மட்டுமே உரையாடிக்கொண்டு இருப்பது ஏதோ மனதுக்குள் உறுத்தலாக இருந்தது.

"சரி கிளம்புவோம் வா" என்று எத்தனிக்கும் போது தான் கதவு வெளிப்பக்கமாக தாழிடபட்டது என்பதை புரிந்துக்கொண்டனர் இருவரும்...

"இது என்ன? யார் பண்ணிருப்பா"என்று வினவினான்.

"தெரியலையே நான் வரப்ப டம்முனு சத்தம் கேட்டுச்சு ஆனால் காத்துக்கு கதவு வேகமா சாத்திருக்கும்னு நினைச்சிட்டு. விட்டுட்டேன்" என்க பதற்றத்துடன் கதவை திறக்க முயன்றான் ஆனால் முடியாமல் போனது.

சற்று நேரத்தில் ஒரே மக்களின் கூச்சல் சத்தம் கேட்கத்துவங்கியது யாரோ பட்டென்று கதவை திறந்தும்விட்டனர்.
அச்சோ இப்படி உள்ளே மாட்டிக்கொண்டோம் என்ற வருத்தத்தில் அவள் தோள்சாய்ந்திருந்ததை பார்த்துவிட்டு தவறாக புரிந்துக்கொண்டு...

"என்ன அசிங்கம் இதெல்லாம்" என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆரம்பிக்க..

"அய்யோ நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னுமில்லை. அவள் எனக்கு என்ன ஆச்சு என்று பார்க்க வந்தாள். யாரோ வெளிப்பக்கமாக பூட்டியிருந்தாங்க திறக்க முடியாமல் நாங்க அவஸ்தை பட்டோம். அதுக்குள்ள நீங்க வந்து திறந்திங்க இவ்வளவு தான் நடந்துச்சு" என்றதும் ஊர் மக்கள் அதை காதில் வாங்கியபோதும் அவர்களை நம்ப தயாராக இல்லை...

உடனே ஊர் பஞ்சாயத்து கூடியது. பயத்துடன் நின்றிருந்தாள் கயல்விழி. நம்ம எதுவும் தவறு செய்யவில்லை என்ற தைரியத்தில் துணிச்சலான பார்வையுடன் ரத்தினவேல் பாண்டியன்.

"ஆனாலும் இந்த டாக்டர் தம்பி இப்படி பண்ணிருக்க கூடாதுபா" என்று கூட்டத்தில் ஒருவன் கூறியது காதில் விழுந்தது.

",தம்பி உன் தரப்புல நீ என்ன சொல்ல வர..."என்று பஞ்சாயத்து தலைவர் கேட்கவும் அமைதியாக நின்றான் ரத்தினவேல் பாண்டியன்.

"இப்படியே அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்?"என்று வினவினார் தலைவர்.

"எப்படியும் நான் சொல்றதை யாரும் புரிஞ்சிக்க போறது இல்லை அப்றம் நான் எதுக்கு சொல்லிக்கிட்டு" என்றதும்.

"அப்படி சொன்னால் எப்படி"

"சரிங்க நான் சொல்றதை அப்போவே புரிஞ்சிக்கிட்டு இருந்தா இந்த பஞ்சாயத்து தேவைப்பட்டுருக்காது. இப்ப முதல்ல நீங்க எதை வச்சு தப்பா புரிஞ்சிக்கிட்டிங்கனு தெரிஞ்சிக்லாமா"

"ஒரே அறையில் இரண்டு பேரும் கதவு தாழிட்டு உள்ளவே இருந்தா வேற என்ன தப்பு தானே பண்ணிருப்பிங்க" என்று பஞ்சாயத்து தலைவர் கூறியதை கேட்டவன்.

"சரிங்கய்யா நீங்க சொல்ற மாதிரியே வச்சுப்போம். அப்படியே தப்பு நடந்திருந்தாலும் அது எங்களோட தனிபட்ட விஷயம் இதுல பஞ்சாயத்து கூட என்ன இருக்கு"

"இந்த ஊருக்குன்னு ஒரு மானம் மரியாதை இருக்கு. அப்படியெல்லாம் விட்டுட முடியாது"

"சரி அப்படினா ஒன்று பண்ணுவோம். நான் அவள் கழுத்தில் தாலி கட்டிட்டா எல்லாம் சரியாகிடும் தானே?"

"அட இதானே வழக்கம் கற்பை யாரிடம் இழந்தாங்களோ அவங்களுக்கு கட்டிதருவது தானே நியாயம்"

"ரைட்டு அப்படினா நான் அவள் கழுத்தில் தாலி கட்டிடுறேன். எதாவது அபராதமும் இருக்கா" என்றவனை ஏறிட்டு பார்த்தாள் கயல். இது ஏனடா இல்லாத தவறை ஒப்புக்கொள்ள தயாராகுகிறாய் என்றாற்போல் அவனை பார்த்தாள்

"அபராதம் எல்லாம் கிடையாது. அவளை கட்டிக்கிட்டு இந்த ஊரை விட்டு தள்ளி இருக்கணும். இது தான் தண்டனை"....

பஞ்சாயத்து தீர்ப்பில் கயலுக்கு சிறிதளவும் உடன்பாடு இல்லை. தான் கற்பை இழந்தவள் போல் சித்தரிக்கப்பட்டதை அவளால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

"நான் தாலி கட்டிக்க மாட்டேன்" என்று பிடிவாதமாக இருந்தாள் கயல்.

"இது தான் நல்ல வாய்ப்பு ஏனடி நழுவ விடுகிறாய்" என்று பார்வையால் அவளிடம் உரைத்துக்கொண்டிருந்தான் ரத்தினவேல் பாண்டியன். ஒருவழியாக கயல் கழுத்தில் தாலி ஏறியது. ஊர் விட்டு தள்ளி இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் இருவரும் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு சிறிய டவுனில் வீடு பார்த்து எடுத்துக்கொண்டு தங்கத்துவங்கினர்.

நாட்கள் இப்படியே காணாமல் போனது. கல்லூரிக்கு மட்டும் சென்று வீடு வந்து சேர்வாள் கயல். ரத்தினவேல் பாண்டியனுக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் வேலையும் கிடைத்துவிட்டது.

எட்டிப்பிடித்தால் காய்கறி மார்க்கெட். வீட்டுக்கு அருகாமையில் ரயில்நிலையம். என்று சகலவசதிகளுடன் இருந்தது அவர்கள் தங்கியிருக்கும் வீடு. இவர்கள் இங்கு வந்த பின்பு லட்சுமியிடம் எந்தவித தொடர்பும் இல்லை கயலுக்கு. ஆனால் படிப்பு மீது ஒரு பிடிப்பு இருந்துக்கொண்டே இருந்தது.

திருவலங்காடனூரிற்கு செல்ல இயலவில்லை என்ற வருத்தமும் அவ்வப்போது வந்து சென்றது. காலையில் எழுந்து தன்னால் இயன்ற சிற்றுண்டி தயாரித்து விட்டு கல்லூரிக்குச் சென்று வருவாள். ஆனால் மாலை நேரத்தில் தனிமை வாட்டியது. எதையாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு இருந்துக்கொண்டு இருந்தது.

இதற்கிடையில் ஆடிமாதம் வந்தது. கணவன் மனைவி இருவரும் தனிதனித்தனியே இருக்கவேண்டும் என்பது ஐதீகம். ஆனால் அவளை அம்மா வீட்டிற்கு அழைத்து வந்து சம்பிரதாயம் செய்ய இயலவில்லை என்று லட்சுமிக்கு உருத்தலாகவே இருந்தது.

எனவே தன்னுடைய சித்தி மகள் (தங்கை முறை) மதுரையில் இருப்பதால் அவளுக்கு தகவல் அனுப்பி ஒருமாதம் ஆடி வரை கயலை தன்னுடன் வைத்துக்கொள்ளுமாறு கூறினாள் லட்சுமி.

"இவ்வளவு தானே நான் பார்த்துக்குறேன் " என்று சித்தி மகள் கூறிவிட்டு உடனே அவளை அழைத்து செல்ல ஏற்பாடும் செய்தார்.

"ஏண்டா அழகர்,உனக்கு இம்புட்டு நாள் அக்கா தங்கை இல்லைன்னு ரொம்ப வருத்தப்பட்டல இனி அந்த கவலை உனக்கில்லை. கயல் அக்கா இங்கே வரப்போறா" என்றதும் மகிழ்ச்சியில் துள்ளினான் அழகர்.

"அப்படியா மா எம்புட்டு நாள் இருக்கும் கயல் அக்கா" என்று வெகுளியாய் கேட்டான் ஆறாவது படிக்கும் அழகர் என்கிற அழகர்சாமி.

"ஒருமாசம் இங்கே தான் டா" என்றாள் அவனுடைய அம்மா.

"அப்படினா ஜாலிதான்" என்றான் அழகர் சிறித்துக்கொண்டு. அவனுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். இவ்வளவு நாள் உடன்பிறந்தவர்கள் இல்லை என்று வருந்தியவனுக்கு அவள் வருகைத்தருவது எல்லையற்ற மகிழ்ச்சி அளித்தது.

"அக்கா வந்தா மதுரை முழுக்க சுத்திக்காட்டனும்" என்று துள்ளி குதித்தான்.

கயலும் அவ்வாறே கிளம்பி தன் சித்தி வீட்டிற்கு வந்தாள். தன்னால் இயன்ற வரிசை தட்டுகளுடன் வரவேற்றாள் மகளை.

"சித்தி உன் வீடு சூப்பரா இருக்கு. நல்லா பளிங்கு மாதிரி டைல்ஸ் எல்லாம் போட்டு அட்டகாசமா இருக்கிறது" என்று வியந்தாள்.

"நீ சின்ன வயசுல ஒருவாட்டி வந்துருக்க இங்கே அதுகப்புறம் இங்கே வரவேயில்லை. சொல்லப்போனால் விவரம் தெரிஞ்சு இப்பதானே வர " என்றார் சித்தி.

சித்தி சித்தப்பா அழகர் என அனைவரிடமும் நன்றாக பழகினாலும் தன்னுடைய கல்லூரியையும் பாண்டியனையும் ரொம்பவே மிஸ் பண்ணாள் கயல்.

"அக்கா வரியா இன்னைக்கு மீனாட்சி அம்மன் கோவில் போலாம்" என்றழைத்தான் அழகர்.

"இல்லை அழகர் எனக்கு மனசு சரியில்லை நான் வரலை"

"அட என்னக்கா நீ. அப்றம் என்னதான் பண்ணப்போறே வீட்ல. சும்மா தானே இருக்க வாயேன் போலாம்" என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றான். என்னவோ தெரியவில்லை அந்த தூங்கா நகரமானது அவளை மெல்ல ஈர்த்தது.

கோவிலில் தரிசித்துவிட்டு வெளியே அழகருடன் வந்தவள்.

"அழகர் இங்கே ஜிகிர்தண்டா ரொம்ப பேமஸ் தானே வாடா வாங்கி சாப்பிடலாம்" என்றழைத்தாள்.

"அக்கா நல்ல வேலை நியாபகம் படுத்தினியே " என்று அவளை அழைத்துக்கொண்டு தனக்கும் அவளுக்கும் ஜிகிர்தண்டா வாங்கினான்.

"ஏன்கா....."

"என்ன அழகர்"?

"உனக்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லைன்னு என்னைக்காவது கவலை பட்டுருக்கியா"

"இல்லை டா, எனக்கு என் கிராமமும்,வீடும் படிப்புமே போதும்னு இருந்தது. நமக்குனு யாரும் இல்லையேனு ஏன் நினைக்கனும். எல்லாரும் இருக்கிறதே நமக்காக தான்னு நினைச்சிக்க வேண்டியது தான்" என்க...

"யக்கா ஆனாலும் நீ ரொம்பவே பாஸிட்டிவ் " என்று சிரித்து வைத்தான்.

"ஏண்டா அப்படினா நீ ஃபீல் பண்றியா யாரும் இல்லைனு" என்றதும்.

"ஆமாம் ஆனால் இப்ப அந்த ஃபீல் போயிடுச்சு"

"எப்படி"

"அதான் இப்ப நீ வந்துருக்க ல"

இருவரும் இப்படியே பேசிக்கொண்டு நடந்ததில் வீடு வந்து சேர்ந்தனர்.

"ஏய் கயலு உன் போன் அடிச்சிட்டே இருந்துச்சு. அனேகமாக உன் வீட்டுக்காரு தான் நினைக்கிறேன். எடுத்து பேசிடு"

தன் கைப்பேசியை கையில் எடுத்து அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

"ஹலோ மேடம் ரொம்ப பிஸி போலருக்கு"

"ஆமாங்க நான் அழகர்கூட மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்"

"ம்ம்ம் என்னமோ தெரியல நீ போனதுல இருந்து மனசுக்கு ஒருமாதிரி இருக்கு. எதுக்கு தான் இந்த சம்பிரதாயமோ " என்று சலித்துக்கொண்டான்.

"ஹாஹா ஆமாங்க ஆடிமாதம் கருவுற்றாள் சித்திரை மாசம் குழந்தை பிறக்கும் அதனால தான் இந்த சம்பிரதாயம்" என்க.

"அடிப்போடி பைத்தியம். அதெல்லாம் குழந்தை பெத்துக்க தினைக்கிறவங்களுக்கு. நம்ம தான் தள்ளி வச்சுருக்கோமே உன் படிப்பு முடியுற வரைக்கும்" என்றதும்.

"அதுசரி இதையெல்லாம் பெரியவங்க கிட்ட எப்படி சொல்றதாம். ஏதோ ஒருமாசம் தானே. இருந்துட்டு திருப்பி ஊருக்கு வந்திடப்போறேன் விடுங்கள்"

"எது எப்படியோ நீ அங்கே சந்தோஷமாக தானே இருக்கே" என்றதும்.

"அதற்கு ஒரு குறையும் இல்லை. உங்கள் நினைப்பு அடிக்கடி வந்தாலும் இங்கே அழகர் கூட இருக்கிறது அவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா" என்றதும்.

"எப்படியோ எனக்கொரு மச்சான் இருக்கானே "உட்சாகமாக கூறியதும் சிரித்து வைத்தவள்

"சரிங்க உங்கள் உடம்பை பார்த்துக்கோங்க நான் அப்றம் பேசுறேன் பை" என்று கைப்பேசியை அவள் வைக்கும் முன்பு...

"ஐ...மிஸ்...யூ கயல்" என்றான் உமிழ்ந்த குரலில்...அவன் உரைத்ததும்.

"நானும் தான்" என்று பட்டும்படாமல் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு அழகருடன் வரவேற்பு அறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்க துவங்கியவள்.

"சித்தி எதாவது ஹெல்ப் பண்ணணுமா" என்று சமையலறையில் இருக்கும் தனது சித்தியிற்கு குரல் கொடுக்க...

"வேண்டாம் வேண்டாம் டிவி பாரு அவன்கூட " என்று சொல்லியவாறு இரவு உணவை தயாரித்துக்கொண்டிருக்க...அழகருடைய தந்தை சட்டென்று உள்ளே நுழைய அவர் மதுஅருந்தியுள்ளதை தெரிந்துக்கொண்ட கயல்...

சங்கடத்துடன் "ச்சு என்ன சித்தப்பா இதெல்லாம்" என்று முகம் சுளிக்க. அவன் அளித்த பதிலில் திடுக்கிட்டுப்போனாள்.

"என்ன சித்தப்பா சொல்றீக"என்று புருவத்தை உயர்த்தியபடி கேட்க..

சமையலறையில் இருந்த அவரது மனைவியும் ஓடிவந்து "என்னங்க சொலீறீங்க " என்று கேள்விக்குறியாய் நிற்க...அழகருக்கு ஒன்றும் புரியவில்லை.

"அப்பா"....என்றான் பதற்றத்தில்.

தொடரும்.

கயலின் சித்தப்பாவிற்கு என்ன கவலை எதனால் மது அருந்தினார். பதில் அடுத்த அத்தியாயத்தில்.
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom