Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL மாயாஜாலக்கதை - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

appusiva

New member
Vannangal Writer
Messages
8
Reaction score
1
Points
3
BK32 மாயாஜாலக்கதை

அதிகாலை கடல்காற்று இவ்வளவு ஆனந்தமாய் இருக்குமென்று இப்போதுதான் தெரிகிறது. இதுவரை இவ்வளவு சீக்கிரமாய் நான் இங்கே வந்ததில்லை. பெரும்பாலும் சாயந்திரவேலைகளில் அப்பாவுக்கு நேரம் இருந்தால் கூட்டி வருவார். தனியாக அனுப்பியதில்லை. நான் எட்டாவது படிக்கும் பெரியவானாகிவிட்டேனென்று அவருக்கு தோணுவதேயில்லை. இன்னமும் நான் குழந்தைதான் அவருக்கு.

இன்று எழுந்ததே அம்மாவுக்கு ஆச்சரியம்தான்.

“என்ன ரகு… ஆறுமணிக்கெல்லாம் படுக்கை விட்ருச்சா….” என்று ஆச்சரியப்பட்டார்.

எட்டு மணிக்கு முன் எழாதவன் நான். ஆனால் இன்று அதிகாலை நான்கு மணியில் இருந்து நான் விழித்துக்கொண்டிருப்பது அவருக்கு தெரியாது.

“ ஷகீல் போய் பாக்கணும்மா… நேத்து டியூசன் போகல ல்ல… அவங்கிட்ட போய் என்ன நடத்திருக்காங்க.. ஹோம்வொர்க் என்னன்னு கேட்டுட்டு, கொஞ்சம் விளையாடிட்டு வரேன்.”

“சரிதான் .. இரு மழை வருதா எட்டிபாக்கறேன்…” என்று கிண்டல் செய்தார். நான் கண்டுகொள்ளவில்லை. சில விஷயங்களை இவர்களிடம் பேசமுடியாது. இன்று பல் விளக்கிவிட்டு பாலும் பிஸ்கட்டும் சாப்பிட, அதையும் ஆச்சரியமாக பார்த்தார் அம்மா. நல்ல விஷயங்கள் நம்பமுடியாதுதான். ஆனால் அழகாகவும் இருக்கிறது. அவசர அவசரமாக கிளம்பினேன்.

“இந்த செவப்பு டிஷர்ட் உனக்கு பிடிக்காதேடா…?” என்று அம்மா கேட்டபோதுதான் கவனித்தேன். அதே இரண்டு பாக்கட் வைத்த டிஷர்ட்… ஜீன்ஸ் துணியிலான டிராயர். இது எப்படி அதிசயமாக அமைந்தது என்பதும் ஆச்சரியமாயிருந்தது.

ஷகீல் அகமதுவை பார்க்க நான் போகவில்லை. நிஜத்தில் கடற்கரைக்கு போவதுதான் திட்டம். ஏன், என்ன என்றெல்லாம் சரியாக தெரியவில்லை. அங்கே போகவேண்டும் என்று காலைமுதல் மனம் முழுக்க தூண்டுதல்.

கடற்கரை என்றவுடன் நீங்கள் சென்னை மெரீனா போல் நினைத்துக்கொள்ள வேண்டாம். எங்கள் ஊர், சென்னைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான ஒரு கிராமம். பெயரளவில்தான் கிராமம். உண்மையில் சென்னையில் கிடைக்கும் அனைத்தும் இங்கே கிடைக்கும். கொஞ்சம் அதிக காசு கொடுக்கவேண்டும். கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக சைக்கிளை அழுத்தினேன். ஒரு நான்கு கிலோமீட்டர் தூரத்தில் கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பு வந்துவிடும். அதனுள் நுழைந்து இடப்பக்க தெருவில் சென்றால் ஷகீலின் வீடு. வெளியே ரோடு தாண்டி, சற்று உள்ளடங்கிய பள்ளமான இடத்தில் ஜோசப் இருக்கிறான். ஆனால் நான் யாரையும் பார்க்கவில்லை. நேரே குடியிருப்பின் அகன்ற சாலையில் ஆனந்தமாக சைக்கிளை செலுத்தினேன். கொஞ்சம் போனதும் கடலை மறித்து கட்டப்பட்டிருந்த காம்பவுண்ட் வந்தது. முன்பொருமுறை சுனாமி வந்தபோது கட்டியதாக அப்பா சொல்லியிருக்கிறார். அந்த காம்பவுண்ட் அருகில் சைக்கிளை நிறுத்தினேன். சுவரை ஒட்டி மேலே ஏற படி இருந்தது. ஏறி அந்த பக்கம் இறங்க, ஆளில்லாத முழு சுதந்திரமான கடற்கரை. சுவருக்கு அந்தப்பக்கம் கேட்கும் அவ்வளவு இரைச்சலும் இங்கே சுத்தமாக அடங்கி, கடலின் ஆழமான, ஒருவித கர்ஜனை போன்ற சத்தம் மட்டும் கேட்டது. மற்ற நாளாயிருந்தால் தனியாக இருக்க பயந்திருப்பேன். இன்று ஏதோ மனதில் சுத்தமாக பயம் போய், ஒருவித வீரமான, தைரியமான உணர்வு பரவியிருந்ததை என்னால் உணரமுடிந்தது.

அமைதியாக மணலில் அமர்ந்தேன்.

நீலப்பெருங்கடலின் தூரம் வரை பார்வை சென்றது. வெறும் தண்ணீர். பூமியின் முக்கால் பங்கு தண்ணீராம். உலக உயிரெல்லாம் தண்ணீரில் தோன்றிதான் பின் நிலத்துக்கு வந்ததாம். அப்படியானால் இந்த கடல் எங்கள் அனைவருக்கும் தாய் என்று தோன்றியது. மனிதர்கள்தான் எல்லை போட்டு, ஒரு அடையாளத்துக்கு பெயர் குடுத்திருப்பார்கள் போல. உண்மையில் கடலுக்கு தனிப்பெயர் என்பதே தேவையில்லைதானே.

உலகம் முழுதும் இருக்கும் தண்ணீர் எல்லாம் ஒரே கடல்தான். இங்கே இறங்கி உலகின் எந்த மூலைக்கும் நான் போகமுடியும். இந்த கடலில்தான் எவ்வளவு உயிர்கள்?.. கண்ணுக்கு தெரியாத சின்ன பூச்சி முதல், உலகின் மிகப்பெரும் உயிரான நீலத்திமிங்கலம் வரை அனைத்தும் அடங்கி ஒன்றுமே தெரியாத மாதிரி அமைதியாக இருப்பது பெருமையாக இருந்தது. என் மனதிலும் பலசமயம் பல்வேறு ஆசைகள், கோபங்கள், எல்லாம் வந்ததுண்டு. ஆனால் இன்று காலைமுதல் மனம், இந்த கடல்போல மிகப்பெரும் சக்தி பெற்று, இதுபோலவே ஆழ்ந்த அமைதியை பெற்றார்போல் உள்ளது. என் வயதுக்கு மீறி நான் சிந்திப்பதையும் என்னால் உணரமுடிந்தது. இதெல்லாம் அம்மாவிடமோ, அப்பாவிடமோ சொல்ல முடியாது. பையனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பயந்துவிடுவார்கள்.

வந்து அரைமணி நேரம் ஆகியிருக்கும். எதை எதிர்பார்த்து வந்தேன் என்பது ஞாபகம் வரவில்லை. ஷகீலும், ஜோசப்பும், ரம்யாவும் அவர்களுடன் பிரகதியும் கண்ணுக்குள் வந்தார்கள். அவர்களும் இதே மனநிலையில் இருப்பார்கள் என தோன்றியது.

இன்னொரு உருவம் மனதின் ஓரத்தில் வந்துவந்து போனது. அது தோன்றும்தோறும் ஒருமாதிரியான சந்தோஷமான உணர்வு ஏற்பட்டது. மனம்விட்டு சிரிக்கவேண்டும் போல் இருந்தது.

கண்களை மூடி மௌனமாக இருந்தேன். கைகள் மணலை மெதுவாக கோதி, அள்ளிக்கொண்டிருந்தது. அடி மணலின் ஈரம், கைகளை தடவி கொடுப்பதாய் உணர்ந்தேன்.

காற்றில் அழகான சுகந்த வாசம் கலந்திருந்தது. சிறுபறவைகளின் கீச்சுக்குரல்கள் காதுகளில் வருடியது. இதெல்லாம் மீறி கடலின் மௌனத்தின் சத்தம் என் உள்மனம் வரை ஊடுருவியது. எவ்வளவு நேரமோ தெரியவில்லை.

ஒரு சிறு அதிர்வு ஏற்பட்டதாய் தோன்றியது. கண்களை விழிக்கவா, வேண்டாமா என மனம் தத்தளிக்க, மெதுவாக கண்ணை திறக்க, அந்த ஒளியைக்கண்டேன். கடலின் நடுவே ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டதாய் தோன்றியது. அது வண்ணகலவையாக இருந்தது. உலகின் அத்தனை வண்ணங்களையும் அள்ளிகொட்டி, கலக்கியதாய், ஒரு வெள்ளை சார்ட்டில் இருக்கும் வண்ணமனைத்தும்… ஒரு குழந்தை கொட்டி கைகளால் தேய்த்துவிட்டார்போல். அதன் மையத்தில் அந்த பிரகாசமான ஒளி தோன்றியது. அது கண்ணை கூசச்செய்தது. இரு கைகளாலும் கண்ணை மறைத்து… விரலினிடையே சிறு திறப்பு கொடுத்து பார்த்தேன். அந்த ஒளி மென்மையாக பரவி, அந்த வண்ணங்களை தன்னுள் இழுத்துக்கொண்டது.

உண்மையில் அந்த பிரகாசம் வளர்ந்து பெரிதாக ஆகிவருவது தெரிந்தது. சற்றும் பயம் வரவில்லை. துணிந்து கைகளை எடுத்துவிட்டு அதை உற்று கவனித்தேன். ஆனாலும் விழியை மறைத்த ஒளியின் வெண்மையில் ஏதும் தெரியவில்லை. திடீரென்று ஒரு வினாடி அந்த இருள் தோன்றி மறைந்தது.



அத்தியாயம் ஒன்று...
தொடரும்
தங்கள் கருத்துகளை பதியவும் நண்பர்களே


 
Last edited:

appusiva

New member
Vannangal Writer
Messages
8
Reaction score
1
Points
3
BK32 மாயாஜாலக்கதை
அத்தியாயம் 2

“என்னடா இது அதிசயம்…?” என்றான் ஜோசப்.

“டேய் நீ எப்ப வந்த….?” என்றேன்.

“லூசா நீ…. நாம எல்லாம் ஒண்ணாதானே வந்தோம். புதுசா கேக்கற…”

என்று அவன் சொன்னபோதுதான் கவனித்தேன். ஆமாம். என்னைச்சுற்றி அவர்கள் நான்கு பேரும் இருந்தார்கள். அனைவர் கண்ணிலும் தெரிந்த ஆச்சரிய கேள்விகள் என் கண்ணிலும் எதிரொலித்திருக்கும். அந்த இருள் ஒரு வினாடிதான் இருந்தது. சட்டென்று சூழல் முன்போலவே மாறிப்போனது. ஆள் அரவமில்லா கடற்கரையில் நாங்கள் மட்டும். ஏதும் பேசாமல் ஒருமாதிரியான பிரமையில் இருக்க, அந்த சத்தம் கேட்டது. யாரோ நடந்து வரும் சத்தம். சுற்றி பார்க்க யாருமே இல்லை. ஆனால், மணலில் கால் அழுந்த நடந்து வரும் சத்தம் தெளிவாக கேட்க, பிரகதி அழ ஆரம்பித்தாள். அவளை வெறிக்க பார்த்த முகமது ஷகீல் திடீரென்று கத்தினான்.

“ டேய்… அங்க பாருடா….”

அவன் கைநீட்டிய இடத்தில் அந்த காலடிகள் தெரிந்தது. எங்கள் கண்முன்னால் பதிந்து நடந்து வந்து கொண்டிருந்த காலடிகள். அது கடலில் இருந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. பயம் தொண்டையை அடைக்க பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தோம். நாங்கள் அழ, அந்த அடிச்சுவடு தயங்கி நின்றது போல் இருந்தது. கொஞ்ச நேரம்தான்.. அந்த குரல் கேட்டது. அடித்தொண்டையில் இருந்து மனதுக்குள் ஊடுருவும் குரல்.

“பயப்படாதே….”

“வந்து… பயமில்லை… ஆத்தா துணையிருக்கா….” என்று அரற்ற ஆரம்பித்தாள் ரம்யா.

அந்த குரல் சிரித்தது போல் இருந்தது. ஜோசப் மயங்கி படுத்தேவிட்டான். ஷகீல் ரம்யாவின் கைகளை பிடித்துக்கொண்டான்.

“நான் உங்களைப்போலதான் பிள்ளைகளா, பயப்படாதீங்க…..”
கொஞ்சம் தைரியம் வர,

” நீ என்ன இரும்புக்கை மாயாவியா…. கரண்ட் தொட்டா மாயமா மறைஞ்சு வருவியா…?” என்றேன்.

“ அதெல்லாமில்லை. உங்களுக்கு என்னை பாக்கணுமா….”

“ ஆமா…”

“ சரி கொஞ்சம் கண்ணை மூடி திறங்க….”
நாங்கள் கண்களை மூடினோம். சில நொடிகள்தான், பக்கத்தில் யாரோ அமரும் உணர்வு ஏற்பட்டது. லேசான பயத்துடன் கண்களை திறந்தேன். அவர் இருந்தார். உண்மையில் அவன் என்றும் சொல்லலாம். என் சித்தப்பாவின் மகனான மோகனை ஒத்திருந்தது அவர் உருவம். மோகன் போலவே கட்டம் போட்ட சட்டையும், ஜீன்சும். நான் தயக்கமாய் அவரை தொட முயல, அவர் வலுக்கட்டாயமாக என் கரங்களை பற்றி குலுக்கினார். கைகளின் குளிர்ச்சி என்னை மயங்க வைத்தது.

“நீங்க யாரு….? சாமியா… இல்ல…?”

“ தோ… அவனையும் எழுப்புங்க…. அவனுக்கு அப்புறம் தனியா சொல்லணும்….” என்று ஜோசப்பை கைகாட்ட, நான் ஜோசப்பை எழுப்பினேன். பரபரத்து எழுந்தவன்,

“பரமபிதாவே… எங்களை காப்பாற்றும்….” என்று கத்தியபடியே என்னை கட்டிக்கொண்டான். பின்னர் அவரை கவனித்தவன், யாரென்பது போல் என்னை பார்த்தான்.

“தெரிஞ்சவர்தான்….”

“ஓ… அங்கிள்…. இங்க இப்ப ஒரு பேய் மாதிரி ஒண்ணு வந்து……”

நான் அவனை பேசாதே என்று அடக்கினேன். ஷகீல் வைத்தகண் வாங்காமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். பிரகதியும், ரம்யாவும் நெருக்கி உட்கார்ந்து மனதில் ஏதோ மந்திரங்களை உச்சரிப்பது தெரிந்தது.

“உன் பேரென்ன… நீங்க வரிசையா சொல்லுங்க….” என்றார் அவர்.

“நான் ரகுராமன். எட்டாவது படிக்கறேன். இது என்ஃப்ரெண்ட்ஸ்… இவன் பேரு….” கையமர்த்தி நிறுத்தியவர் ஷகீல் பக்கம் கை காட்டினார்.

ஷகீல் தயங்கி தயங்கி பேசினான். அவன் கைகளில் லேசான நடுக்கம் தெரிந்தது.

“என் பேர் ஷகீல் அகமது… நானும் எட்டாவதுதான்”

“நான் ரம்யா , இவ பிரகதீஸ்வரி எல்லாரும் ஒரே கிளாஸ்தான்… இங்க விளையாட வந்தோம்.”

“ ஏன் அந்த பாப்பா பேசாதா….” என்றார் மோகன். அவரை மோகன் என்றே நினைக்க ஆரம்பித்து விட்டேன்.

“வந்து நான் ….. பிரகதி…. நாங்க நேத்துகூட சாமி கும்பிட்டோம். அம்மா செஞ்சுவச்ச இனிப்பு போண்டாவை சாமி கும்பிடறதுக்கு முன்ன சாப்பிட்டது தப்புதான்… எங்களை மன்னிச்சுடுங்க….” என்று அழ ஆரம்பித்தாள்.

அவளை பார்த்து சிரித்த அவர், “நீங்கதான் சாமி… நீங்க சாப்பிட்டா சாமியும் சாப்பிடும் “என்று சொல்ல அவளின் அழுகை அடங்கி முகம் பிரகாசமானது. எல்லாவற்றையும் கேள்வியாய் பார்த்துக்கொண்டிருந்த ஜோசப் அடுத்து பேசினான்.

“ தாத்தா, நான் வந்து ஜோசப் பெர்னாண்டஸ்… நான் கொஞ்சம் தூங்கிட்டேன் போல… நீங்க யாரு….?” என்றான்.

எங்களை பார்த்து அவர் சிரித்த சிரிப்பில் அவ்வளவு அழகு.
“குழந்தைகளா… நானும் உங்களைப்போலதான். கொஞ்சம் விளையாட வந்தேன். உங்களை பார்த்து ஆசையா வந்து உட்கார்ந்துட்டேன். என்ன விளையாடலாம்?”

நாங்கள் திருதிருவென்று விழிக்க, அவர் தொடர்ந்தார்.

“சரி இன்னிக்கு போய் ரெஸ்ட் எடுங்க, இந்த வாரம் முழுக்க உங்ககூடதான் இருப்பேன். ஜாலியா விளையாடலாம். என்ன சரியா….” என்று கேட்க சரியென்று தலையாட்டிவிட்டு விட்டால் போதுமென்று ஓடினோம். ஜோசப் மட்டும் என்கூடவே கைகோர்த்து வந்தான். அந்த கடற்கரையை தாண்டி, மெயின் ரோடு அருகில் இருந்த பார்க்கில் வந்து அப்பாடாவென்று உட்கார்ந்து மூச்சு வாங்கினோம். ஜோசப் என்னை பார்த்து,

“ ஏண்டா, அந்த தாத்தாகூட கொஞ்சம் விளையாடிட்டு வந்திருக்கலாமில்ல…” என்றான்.

“டேய் …என்னடா, அவரை பார்த்து தாத்தான்ற… எங்க மோகன் அண்ணன் வயசுதான் இருக்கும் போல…”

“லூஸா நீ… அவர் முடியெல்லாம் நரைச்சு, காதெல்லம் தொங்குது. அவர் போட்ருக்க ட்ரெஸ்கூட எங்க சின்ன தாத்தா போட்ட வெள்ளை ஜிப்பா… எப்படியும் ஒரு எண்பது வயசிருக்கும்” என்று அவன் சொல்ல எனக்கு திகீரென்றது.

பிரகதியும், மற்றவர்களும் எங்கெங்கோ சுற்றி எங்களை வந்தடைந்தார்கள்.

“யேய் பிரகதி… அவர் பார்க்க எப்படி இருந்தார்….”

“அவர் நம்ம மேத்ஸ் சார் போல் அழகா இருந்தார். அவர் போலவே குழந்தைங்ககிட்ட அழகா பேசினார்”

“ உங்களுக்கு ஏதோ ஆயிடுச்சு.. அது எங்க தயிர்கார பாட்டிதான். அதை போய் ஆளுன்றீங்க. அங்கேயே எனக்கு ஒரு குழப்பம்தான். ஆனா என்னால சரியா பேச முடியலை…” என்றான் ஷகீல்.

எங்கள் அனைவரையும் கைகாட்டி அடக்கினாள் ரம்யா, அவள் எப்போது அப்படிதான். ஏதாவது ஒரு பிரச்சினை என்றாள் அவள்தான் இறுதி முடிவெடுப்பாள். பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.

“ ஒரு முக்கியமான விஷயம். வந்தது ஒரு ஒளி மாதிரி இருந்து பேசிச்சு. உருவம் தெரியலை. கண்மூடி திறக்க ஒரு உருவமா வந்தது. அது நமக்கு ரொம்ப பிடிச்சவங்க உருவம். அப்ப நாம நினைக்கிறாபோல அது வருது.. அதனால தான் இந்த குழப்பம்..”

“ அப்படியா… உனக்கு என்ன மாதிரி தெரிஞ்சது…? என்றாள் பிரகதி.

“சிரிக்ககூடாது…”

“சொல்லு…”

“அது டிவில வர டோரா….”

டபக்கென்று சிரித்துவிட்டோம். ஜோசப் மட்டும் திகிலாய் பார்த்தான்.

“நாளை வரச்சொல்லிருக்கு. போலாமா… வேணாமா… “ என்றேன் நான்.

“கண்டிப்பா போறோம்… ஆனா நமக்கு பொதுவா பிடிச்ச உருவம் நினைக்கணும். அப்பதான் ஒரேபோல பேச முடியும்..”

“ சரி…இப்ப எல்லாரும் போலாம்… வீட்ல, ஸ்கூல்ல எதுவும் சொல்லக்கூடாது… சரியா…”

“ ஓகே….” என்றார்கள் அனைவரும். ஜோசப் என் காதில் மெதுவாக, “ நிஜமாவே பேயாடா? “ என்றான்.

தொடரும்...
 

appusiva

New member
Vannangal Writer
Messages
8
Reaction score
1
Points
3

3....


நேற்று நடந்தது குழப்பமாகவே இருந்தது. நேற்று அதிகாலை பீச்சுக்கு போனேன். ஆனால் வீடு திரும்ப இரவாகியிருந்தது. போய் சாப்பிட்டு நன்றாக போர்த்து படுத்துக்கொண்டேன். ஒரு முழு நாளா அங்கே இருந்தோம் என்று தடுமாற்றம் ஏற்பட்டது. நான் தனியாக இருந்த போது பயம் இருந்தாலும், ஐந்து பேர் சேர, கொஞ்சம் தைரியம் வந்தது.

வகுப்பறையில் தனித்தனியாக இருந்தாலும் எங்கள் மனம் ஒரேபோல் சிந்தித்தது. திரும்பிதிரும்பி பார்த்து கள்ளச்சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தோம். பள்ளி எப்போது முடியும் என்று காத்திருந்து , அவசர அவசரமாக கிளம்பினோம்.


சாயந்திரம் அதே இடத்தில் நாங்கள் குழுமினோம். பிரகதி எங்கள் கைகளில் ஒரு கறுப்பு நிற கயிறை கட்டினாள். சாமி படத்துக்கு முன் வைத்து எடுத்ததாம். ஷகீல் மட்டும் அதை வாங்கி பாக்கட்டில் வைத்துக்கொண்டான். அவர்கள் வீட்டில் பார்த்தால் திட்டுவார்கள். அனைவரும் கடலை பார்த்தபடி உட்கார்ந்திருந்தோம். ஏதும் வெளிச்சம் வரும் அறிகுறிகூட இல்லை.

“என்ன உருவம் நினைச்சீங்க…?” என்றான் ஷகீல்.

“வந்து…. நான் நம்ம கிளாஸ்ல இருந்து போனவருஷம் உடம்பு சரியில்லாம இறந்துட்டானே.. ஜீவா, அவனை நினைச்சேன்” என்றாள் பிரகதி.

“நானும்தான் “ என்றான் ஜோசப்.

உண்மையில் என் மனதிலும் அவன் உருவம்தான் தோன்றியது. அவன் ரொம்ப நல்ல பையன். சாது. அதிகம் பேசமாட்டான். ஆனால் படிப்பில் வெகு சுட்டி. ஏதோ இதயத்தில் பிரச்சினை என்றும் மிக செலவாகும் என்றும் பேச்சு இருந்தது. கடைசிநாள் வரை வகுப்புக்கு வந்துகொண்டிருந்தான். படித்து டாக்டர் ஆகி இதுபோல இருப்பவர்களுக்கு இலவச ஆஸ்பிடல் கட்டுவேனென்று அடிக்கடி சொல்லுவான். ஆஸ்பிடலில் மிகவும் செலவாகியிருக்கும் போல. அவர்கள் கொஞ்சம் கஷ்டப்படும் குடும்பம்தான். முடிந்தவரை அவன் அப்பா முயற்சித்தார். மயக்கம் தெளியாமலேயே இறந்துவிட்டான். இன்று சொல்லிவைத்தார்போல் அவன் ஞாபகம் எங்கள் எல்லோருக்குமே வந்தது அதிசயமாக இருந்தது.

“சரி… எல்லாரும் அவனையே நினைச்சாச்சு.. வருமா பாக்கலாம்..” என்றான் ஷகீல்.

“எனக்கு இது எல்லாமே நம்ம கற்பனையோன்னு தோணுது. ஏதாவது படம் பாத்தோமா நேத்து. அது பாத்து கற்பனை பன்ணிட்டோமான்னு நினைக்கிறேன்..” என்றேன் நான்.

“நானும் அப்படிதான் நினைக்கிறேன் “ என்று எங்கள் பின்புறம் இருந்து குரல் கேட்க, திடுக்கிட்டு திரும்பினோம். அதிர்ந்து போனோம்.

அங்கே ஜீவா இருந்தான். போனவருஷம் பார்த்த அதே ஜீவா. அதிர்ச்சியில் பிரமித்து இருக்க, பிரகதி ஜீவாவின் கால்களில் விழுந்து வணங்கினாள்.

“ சாமி… உங்களை தப்பா நினைச்சிட்டோம்… மன்னிச்சு எங்களுக்கு நல்ல படிப்பு குடுங்க….” என்றாள் அவள். ஜீவா வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தான்.

“உங்களுக்கு எல்லாம் ஏதாவது கம்பேர் பண்ணியே பழக்கமாச்சு… இல்லியா…” என்றான் ஜீவா.

நாங்கள் திருதிருவென்று முழிக்க,

“ஒரு விஷயம் பார்த்தா அதை ஏற்கனவே நம்ம மனதில் பதிச்சு வச்சிருக்கிற ஏதாவது ஒரு சம்பவமோ இல்லைனா, கற்பனையோ அதுகூட சம்மந்தபடுத்தி பாக்கறது. நேத்து உங்களை சந்திக்க கொஞ்சம் ஆர்ப்பாட்டமா வந்திட்டேன். உடனே இது உங்க கற்பனையில் இப்படிதான் இருக்கும்னு முடிவு பண்ணிடறீங்க…” என்று சிரித்தபடியே ஜீவா சொல்ல,

“அப்ப நீ…. வந்து… நீங்க யாரு….” என்று மெதுவாக கேட்டான் ஜோசப்.

“அது ரகசியம்… ரகசியம்கூட சரியான வார்த்தை இல்லை. குழம்பிடுவீங்க. நான் உங்களைபோல் ஒரு ஜீவன்தான்… அதான் ஜீவா வா வந்திட்டேன்…” என்று ஏதோ பெரிய நகைச்சுவை சொன்னது போல சிரித்தான் ஜீவா. நாங்கள் சிரிக்காமல் இருக்க, கொஞ்சம் ஓவராக போனதாய் சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

“எங்களை ஏன் சந்திக்கணும்.. ஏதாவது எங்களுக்கு முக்கியத்துவம் இருக்கா….?”என்றேன் நான். எனக்கு அவன் ஜீவாவாக இருக்க கொஞ்சம் தைரியம் வந்திருந்தது.


“அதெல்லாம் அப்புறம் சொல்றேன். முதலில் உங்களுக்கு கொஞ்சம் தைரியம், நம்பிக்கை வரணும். என்னோட பழக உங்களுக்கு மனசில இருக்கிற பயம் போகணும். அதுதான் என் முதல் வேலை . உங்க ஆசை ஏதாவது இருந்தா சொல்லுங்க” என்றான் ஜீவா. அவன் முகத்தில் அந்த மர்மபுன்னகை அப்படியே பதிந்து இருக்கும் போல. அது எங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுத்தது.

“நாங்க ஒண்ணும் பயப்படலை. திடீர்னு ஒரு … பே…..ய்… மாதிரி வந்தா நீயும்தான் பயப்படுவ….” என்றான் ஷகீல். அவன் கைகளில் நேற்றைய தினம் இருந்த பயத்தின் மெல்லிய நடுக்கம் இன்னும் குறையாமல் இருப்பதை ஓரக்கண்ணால் பார்த்து ஜீவா மெல்லிய சிரிப்புடன் தொடர்ந்தான்.

“ ஹாஹா….. தெரியுது ஷகீல் பையா… நீ ரொம்ப தைரியசாலிதான். நேத்துபிரகதி கையை எவ்வளவு பயமா பிடிச்சிருந்தன்னு பாத்தேனே… இப்பயும் உன் பாக்கட்டில் அவ கொடுத்த கறுப்பு கயிறை யாருக்கும் தெரியாம தொட்டு தொட்டு பாத்துக்கறியே… ஹாஹா…..” என்று சிரித்தான். கறுப்பு கயிறு கொடுத்தது இவனுக்கு எப்படி தெரியும் என்று வியப்பு ஏற்பட்டாலும், இவனின் சக்தி எங்களை மீறியது என்பது எனக்கு புரிந்தது. அவன் மேலும் தொடர்ந்தான்.

“ நான் ஏற்கனவே சொன்னதுதான். ஒரு குழந்தை என்னை பார்த்தால், அது நான் வந்த விதத்தை ரசிக்கும், என்னோட விளையாடும். சிரிக்கும். அதுக்கு பயம் கிடையாது. புதிய விஷயங்களை ஆர்வமாக பார்க்கும். ஆனா நீங்க கொஞ்சம் வளர்ந்துட்டீங்க. உங்க மனசில் சில விஷயங்கள் பதிச்சிட்டீங்க. அதை ஒப்பிட்டு என்னை அளக்க நினைக்கறீங்க. அது இல்லாமல் புதுசா உங்களால யோசிக்க முடியல. அதில்லாம இன்னும் பெரிய ஆளா ஆகிட்டா, இன்னும் பல விஷயங்கள் உங்களுக்கு பதியும். இன்னும் வேலை, குடும்பம்னு மாற உங்களுக்கு புதிதாக எதையும் கற்றுக்கொள்ள, யோசிக்கவே முடியாது. உங்க மனசு அது தாண்டி போக முடியாது. இப்ப கொஞ்சம் குழந்தைத்தனம் மீதி இருப்பதால்தான் என்னை மறுபடி சந்திக்கணும்னு வந்திருக்கீங்க. இதுவே உங்க அப்பாக்கள் முன்னால் வந்திருந்தா இன்னேரம், கோயில் மசூதி, சர்ச்னு போய் நடுக்கமா வேண்டிட்டிருப்பாங்க….”

“அது தப்பா….” என்றான் ஜோசப்.

“தப்பில்ல… மனிதருக்கு ஏதாவது ஒரு நம்பிக்கை தேவைப்படுது. சில பயங்களை, எதிர்பார்ப்பை கொண்டுபோய் கொட்டிட்டு, நிம்மதியா இருக்க அது உதவியா இருக்கு. அதுக்கு ஒவ்வொருவரும் ஒரு வழி வச்சிக்கறாங்க..... ம்..ம்… நீங்களே பாருங்க… பிரகதி கொடுத்த ஒரு கறுப்பு கயிறு இல்லன்னா இன்னும் உங்களுக்கு பயம் வந்திருக்கும்.”

“நான் காலைல ஏசுவை நினைச்சுட்டுதான் வந்தேன். எனக்கு கயிறு தேவையில்லை…இதோ ஷகீலும் அவங்க சாமிட்ட ப்ரே பன்ணிட்டுதான் வந்திருக்கான்…” என்றான் ஜோசப்.

“ஆமா… நானும்தான் “ என்றேன் நான்.

“எல்லாம் சரி…. இதுல யாருக்கு பவர் அதிகம்? “ என்றான் ஜீவா.

“ வந்து… எல்லாருமே பவர்தான்… சிலதுக்கு ஜீசஸ் சக்தி தருவார். சில நேரம், எங்க அம்மன் பாதுகாக்கும். அவங்கவங்க எப்பப்ப வரணுமோ அப்ப வருவாங்க.” என்றாள் ரம்யா.

“ ஆனா, அவங்க உங்க கூடயேதான் இருக்காங்கன்னு உங்களுக்கு தோணலையா… அப்பப்ப வர அவங்க என்ன ஜாப்லயா இருக்காங்க?” என்று ஜீவா கேட்க, அவன் கேட்ட தொனியை கண்டு நாங்கள் சிரித்துவிட்டோம்.

“ இதான்… இந்த சிரிப்பின் காலம்தான் உங்களை பார்க்க சரியான நேரம். அதான் வந்தேன். பெரியவங்களாயிட்டா, இந்த சிரிப்பும் போயிடும். இன்னேரம், எங்க சாமிதான் பெரிசுன்னு ஆரம்பிச்சிருப்பீங்க. உண்மையில் அந்த சக்தி என்பது எங்கயும் இல்லை. உங்க மனசுதான். உலகையே படைத்த சாமின்னு சொல்வீங்க. சில சாமிகள் சில எல்லைகளையே தாண்டறது இல்லை. பிரபஞ்சம் வரை ஒரே நாள்ல படைச்சார்னு பேசுவீங்க. ஆனா பக்கத்து நாட்ல இருக்கற மனிதனை சாமி எதிரியா பாக்க சொல்லுதுனு பேசுவாங்க. வேடிக்கையா இல்ல?”

“எங்களுக்கு புரியலை…. “ என்றேன் நான்.

“ சொன்னதை மனசில் வச்சிக்கோ. கொஞ்ச நாள் ஆனா புரியும். எது உண்மைன்னு. எல்லா சக்தியும் உங்க மனசுதான். அது உருவாக்கறதுதான் அத்தனை சாமியும், பூதங்களும். ஒரு குழந்தைக்கு, மிருகங்களுக்கு, பறவைகளுக்கு மீனுக்கு, உன் கையில் இருக்கற பேனாவுக்கு இந்த பயமோ, நம்பிக்கையோ தேவைப்படறதில்ல. அது வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு அனுபவிக்கிறாங்க. இது புரிய கொஞ்சம் நாளாகணும்."

“ குழப்பமாதான் இருக்கு. இப்ப நாங்க என்ன செய்யறது…” என்றாள் ரம்யா.

“குழப்பத்தை தூக்கி சின்னதா ஒரு குழிதோண்டி இப்போதைக்கு புதைச்சு வைங்க. அது ஒரு பக்கம் கிடக்கட்டும். இந்த நிமிடம், என்ன ஆசைன்னு சொல்லுங்க. அவ்ளோதான்.” என்றான் ஜீவா.

“எனக்கு பசிக்குது… ஏதாவது சாப்பிட்டே பேசலாமே….” என்றான் ஜோசப். அவன் பசி தாங்கமாட்டான். எப்போதும் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பான்.

“ ஆமா, நம்ம ஐயங்கார் பேக்கரில கேக் சாப்பிடலாமா… “ என்றாள் ரம்யா.

“எனக்கு சூடா ஸமோசா…” என்றான் ஷகீல்.

“ ஆனா நான் காசு எடுத்து வரலையே “ என்றாள் பிரகதி. பெரும்பாலும் அவள்தான் அதிகமாக வங்கிதருவாள். அவளின் பாக்கட் மணி தினமும் இருபது ரூபாயாவது இருக்கும். இன்று ஜீவா வேறு இருக்க, அவன் எவ்வளவு சாப்பிடுவானோ என்ற பயமும் அவளுக்கு வந்துவிட்டது.

“சரி… முதலில் சாப்பிட போலாம்… எழுந்திருங்க…. “ என்று ஜீவா எழுந்தான். அவன் உட்கார்ந்திருந்த இடத்தில் மணலில் தடமே இல்லை என்பதை நான் கவனித்தேன். மனதில் அடங்கி இருந்த பயத்தை, இப்போது தோன்றிய ஆர்வம் அடக்கிவிட்டதையும் கவனித்தேன். ஜீவா சொன்னதுபோல், புதியதை கவனித்து ரசிக்க ஆரம்பித்துவிட்டேன் என்று தோன்றியது. நாங்கள் அனைவரும் எழ, எங்களை கைகளை கோர்த்துக்கொள்ளச்சொன்னான். கண்களை மூடச்சொன்னான். அடுத்த நொடி என்ன நிகழ்ந்தது என்று எனக்கு சொல்லத்தெரியவில்லை. அது ஒரு பரவச நிலை போல் இருந்தது. கண்களை திறக்க முடியவில்லை. ஏதோ பறப்பதுபோல் இருந்தது. ஒரு சில விநாடிகள்தான். மெதுவாக கண்களை திறக்க, நாங்கள் ஐயங்கார் பேக்கரியின் உள்ளே இருந்தோம்.

***********

ஐயங்கார் பேக்கரி என்பது எங்களுக்கு கனவுப்பிரதேசம். என் அப்பா ஒரு நகராட்சி ஊழியர். ஜோசப்பின் அப்பா ஒரு ஏஜென்சியில் கணக்கு எழுதுவார். ரம்யாவின் அம்மாவும், அப்பாவும் கிழங்குமில்லில் வேலைக்கு போகிறார்கள். அடிக்கடி, சீவிய வரவள்ளிக்கிழங்கோ, அல்லது வேகவைத்தோ, அவள் கொண்டுவருவாள். நசூரின் தந்தைக்கு சின்ன மளிகை கடை உள்ளது. சிலநேரம் அவன் கடையில் இருந்து பிஸ்கட்டுகள் அல்லது சின்ன சின்ன மிட்டாய்களை அப்பாவிடம் கேட்டு எடுத்து வருவான். பிரகதிதான் கொஞ்சம் வசதி. அவளின் அப்பா மின்சாரத்துறையில் லைன்மேனாக இருப்பவர், ஆனாலும் அவர்களின் பூர்வீக வீடுகளின் வாடகை மூலம் நல்ல வருமானம் உண்டு. எங்களின் பெரும்பாலான தீனி செலவுகளைஅவள்தான் பார்த்துக்கொள்வாள். அவரவர் வீட்டில் இருந்துதான் ஸ்னாக்ஸ் எடுத்து வருவோம். தினப்படி கிடைக்கும் பாக்கட் மணியை செலவு செய்யாமல் எடுத்து வைத்து, வார இறுதி நாளிலோ அல்லது லீவிலோ இந்த பேக்கரிக்கு வருவோம். ஏதாவது குறிப்பிட்ட இனிப்பு கார வகை, ஒரு ஜூஸ், அல்லது ஐஸ்க்ரீம் உடன் அன்றைய பொழுது கழியும். அடுத்த வாரம் என்ன வாங்கலாம் என்று திட்டமிடுவோம். கண்கள் அங்கு அழகாக அடுக்கியிருக்கும் இனிப்புகளை அளந்து வைக்கும். சிலவற்றை விலை கேட்க, மயக்கம் வரும். முந்திரி கேக் வாங்கித்தின்ன வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஒரு தடவை ஊரில் இருந்து வந்திருந்த ஒரு அண்ணா வாங்கிவந்திருந்தார். என் பங்காக கொஞ்சமாக தான் கிடைத்தது. ஆனால் அது நூறுகிராமே ஐம்பது ரூபாயோ என்னவோ. அது போல அவரவர்க்கும் சின்னசின்ன ஆசைகள். பெரியனாகி இதுபோல் ஒரு பேக்கரி திறந்து முழுதும் நாம் சாப்பிடவே வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஜோசப் சொல்லுவான்.

“ஜீவா… இது என்ன மாயம்… எப்படி கண்மூடி கண் திறக்க இங்க வந்தோம்…? “ என்றாள் ரம்யா.

“ எனக்கு கொஞ்சம் மாயாஜாலமும் தெரியுமில்ல…” என்று கண்ணை சிமிட்டினான் ஜீவா. அதை கேட்டதும் ஜோசப் துள்ளிக்குதிக்க ஆரம்பித்தான். சரியான டான்ஸ். குதித்து குதித்து ஆடினான். அவனால் அதை நிறுத்தவே முடியவில்லை. எங்களுக்கு வெட்கமாக போய்விட்டது.

“ டேய்… நிறுத்துடா…. எல்லாரும் பாக்க போறங்க….” என்றேன்.

“ ஆடட்டும் விடு… யாரும் பாக்கலை” என்றான் ஜீவா. அப்போதுதான் கவனித்தேன். அங்கே நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள், இனிப்புகளை வாங்கிக்கொண்டிருந்தவர்கள் அத்துடன் கடைக்கார ஊழியர்கள் என்று யாருமே எங்களை கவனிக்கவில்லை. அவரவர் அவர்களது வேலையில் கவனமாக இருந்தார்கள். நாங்கள் யார் கண்ணிலும் படாமல் மறைந்து இருப்பது புரிந்தது. நம்பமுடியாமல் ஜீவாவை பார்க்க, அவன் எப்போதும் போல அந்த மர்மபுன்னகையை வீசினான்.

யாரும் கவனிக்கவில்லை என்றவுடன், ஜோசப்புக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. நேராக லட்டு இருக்கும் இடத்துக்கு போனான். ஒரு நான்கைந்து லட்டுகளை எடுத்துக்கொண்டு அருகில் காலியாக இருந்த சேரில் உட்கார்ந்து அவன் பாட்டுக்கு சாப்பிட ஆரம்பித்தான். திடீரென்று என்ன தோன்றியதோ ஜீவாவை பார்த்து அனுமதி கேட்பதுபோல பார்வையால் கேட்க, ஜீவா தன் கையால் சைகை காட்ட, ஜோசப் திருப்தியாக வாய் நிறைய திணித்துக்கொண்டான். நான் நேராக முந்திரி கேக் இருந்த இடத்துக்கு ஓடினேன். அழகழகாய் அடுக்கி வைத்திருந்தது. அதிலிருந்து அப்படியே அள்ளி அங்கே நின்றபடியே சாப்பிட ஆரம்பித்தேன். ஷகீல் அந்தப்பக்கம் சென்று சமோசாவில் ஆரம்பித்தான். அது அவனுக்கு ரொம்ப பிடிக்கும். ரம்யா ஐஸ்க்ரீம் இருந்த குளிர்பெட்டியை திறந்தாள். கலர்கலராக இருந்த ஐஸ் குச்சிகள், சில கேக் வகை ஐஸ்க்ரீம்கள், அப்புறம் ப்ளாக் ஃபாரஸ்ட் ஒரு டப்பா எல்லாம் எடுத்து அருகில் இருந்த ஒரு ட்ரேயில் அடுக்கி அள்ளிவந்தாள். அதை ஒரு டேபிளில் வைத்துவிட்டு மறுபடி ஓடினாள். என்னவென்று நான் பார்க்க, என்னை அருகில் கூப்பிட்டு காட்டினாள். அந்த குளிர்சாதன பெட்டியில் ஒரு பாதி நிறைய சாக்லேட்டுகள். வகைவகையாக, விதவித வடிவில். சிலது மிகவும் விலை அதிகம். நாங்கள் இருவரும் சேர்ந்து இன்னமும் அள்ளிக்கொண்டு அந்த டேபிளில் ஒதுங்கினோம். பாதி தின்றவுடன் அதை அப்படியே விட்டுவிட்டு அலமாரியில் அடுக்கி இருந்த ஜிலேபி, மைசூர்பா பக்கம் திரும்பினோம். ஜோசப் இன்னொரு பக்கம் லட்டை பாதியிலேயே விட்டுவிட்டு வட இந்திய இனிப்புகளான மில்க் ஸ்வீட்களை அள்ளிக்கொண்டிருந்தான்.

பிரகதியை காணாததை நான்தான் கண்டுபிடித்தேன். ரம்யாவிடம் கேட்க, அவளும் நானும் எழுந்து பிரகதியை தேடினோம். அவள் ஜீவாவின் பின்புறம் நின்று எங்கள் எல்லோரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

நாங்கள் கைகாட்டி கூப்பிட, அவள் வரவில்லை. நான் எழுந்து சென்றேன்.

“ஏன்பா… வா… வந்து ஜாலியா சாப்டு….”

“போடா… இவ்வளவு பேர் இருக்காங்க… கூச்சமா இருக்கு.”

“ அட…. இப்ப பாரு….” என்ற நான் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஒரு அண்ணாவின் முன் தட்டில் இருந்த ஒரு பப்ஸை எடுத்து வந்தேன். அந்த அண்ணா வுக்கு இது எதுவுமே தெரியவில்லை. அதை பிரகதி இன்னும் ஆச்சரியமாக பார்த்தாளே தவிர வரவில்லை. நான் செய்ததை பார்த்து, ஜோசப்புக்கு இன்னும் ஜாலியாகிவிட்டது. அங்கே அலமாரியில் இருந்த ஒரு பெரிய கேக்கை எடுத்து கவுண்ட்டரின் நடுவில் இருந்த ஒரு ஊழியரின் தலைமேல் கவிழ்த்தான். அது க்ரீம் கேக் வேறு. அந்த ஊழியரின் முகமெல்லம் வழிந்தது. உடையெல்லாம் கேக்கின் சிதறல்கள். அவர் அதை சட்டை செய்யாமல் நடந்து ஓடி… வியாபாரத்தை கவனிக்க எங்களுக்கு ஒரே வேடிக்கையாக இருந்தது.

“ஏன்… ஜோசப்…. பாவம்பா….” என்றான் ஷகீல்.

“போடா… போனவாரம் நான் வந்தப்ப இந்தாள் என்னை திட்டிட்டான். அதான் பழிக்குப்பழி… வஞ்சத்துக்கு வஞ்சம்….” என்று சொல்லியபடி, தூரத்தில் இருந்து கேக்குகளை குறிவைத்து அவரை பார்த்து எறிந்து கொண்டிருந்தான்.

ஜீவா பிரகதியை பார்த்தான். பின் தன் கையை லேசாக ஆட்டினான். என்ன ஆச்சரியம். அந்த பேக்கரியில் இருந்த அத்தனை பேரும் காணோம். நான் ஓடிப்போய் தெருவில் எட்டிப்பார்த்தேன். அங்கேயும் அவர்கள் இல்லை. அத்துடன் தெருவில் எந்த மனிதரோ, போக்குவரத்தோ இல்லை. உள்ளே வந்து பார்க்க அசந்து போனேன். இதுவரை அமைதியாக இருந்த பிரகதி, ஆவேசம் வந்தவள் போல அத்தனை வகைகளையும் வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தாள். நாங்கள் அவளைச்சுற்றி உட்கார்ந்து அவள் சாப்பிடும் அழகை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஓரளவு ஆசை அடங்கியதும். மீதமுள்ள இனிப்புகளை ஒருவர்மீது ஒருவர் எறிந்து விளையாட ஆரம்பித்தோம். ஐஸ்க்ரீம்கள் எங்கள் மேல் வழிந்து ஓடியது. பாதுஷாக்கள் பந்துகளாக பறந்தன. டிவியில் பார்த்ததுபோல் சின்ன சின்ன சாக்லேட்டுளை கீழே கொட்டி அள்ளி வீசிக்கொண்டிருந்தோம். அந்த பேக்கரியே ஏதோ பூகம்பம் வந்து. சூறாவளியில் மாட்டிய இடம் போல் இருந்தது.

“டேய், ஜீவாவை சாப்பிட சொல்லவேயில்லையே. அவனும் நம்மளைப்போலதானே” என்றான் ஷகீல்.

“ஆமால்ல…. அடடா…ஜீவா…. நீ சாப்பிடலையா…” என்றான் ஜோசப்.

எங்கள் அருகில் வந்து அமர்ந்த ஜீவா, “ நீங்க சாப்பிட்டது நான் சாப்பிட்ட மாதிரி” என்றான்.

“அதெப்படி…” என்றான் ஜோசப்.

“உணர்ந்துக்கறதுதான். நீ லட்டு சாப்பிட்ட… ஆசையா ஒண்ணுதான். அதுக்கப்புறம், அந்த மில்க் ஸ்வீட்ஸ் எடுத்து ஆரம்பிச்ச… ஒண்ணு ரெண்டுதான் சாப்பிட்ட. அது உனக்கு திகட்ட ஆரம்பிச்சிட்டது..”

“ ஆமாப்பா. அது கலர்கலரா இருக்கே தவிர எல்லாம் ஒரே மாவு… ஒரே இனிப்பு… முடியல…” என்றான் ஜோசப்.

“இவங்க ஐஸ்க்ரீம், ஆரம்பத்தில் முழுசா ஒண்ணு ரசிச்சு காலி பண்ணினாங்க. அதுக்கப்புறம் இருக்கற வகைகளை எல்லாம் எடுத்து விளையாட ஆரம்பிச்சுட்டாங்க. பெரும்பாலும் சாப்பிட்டது கம்மிதான். வீண் செய்ததுதான் அதிகம்” என்று ஜீவா சொல்ல எங்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. எங்கள் முகம் மாறியதை கண்ட ஜீவா,

“ அது தப்பில்ல. இயற்கை அதுதான், உங்களுக்கு தேவைக்கு கிடைக்காதப்ப கொஞ்சமா கிடைச்சாகூட போதும்னு ஒரு வேகம் இருக்கும். ஒரு முந்திரி கேக் கிடைச்சா கூட ரசிச்சு சாப்பிட தோணும், அதுவே நெறைய குடுத்தா அது மேல ஒரு அலட்சியம் வந்துடும்”
என்னை பார்த்தே சொன்னது போலிருந்தது. தின்றது போக மீதம் வைத்து நான் ஒரு சீட்டுகட்டு மாளிகை போல அடுக்கி விளையாடியிருந்தேன்.

“இது பரவாயில்லை. பெரியவர் ஆனதும், வாழ்வதற்காக பணம் சேர்க்க ஓடுவார்கள். தேவைக்கு கிடைக்க, சிக்கனமாய் குடும்பம் நடத்துவார்கள். ஒரு சிலர் பாத்தீங்கன்னா தேவைக்கு அதிகமா சேர்த்து அதுக்கப்புறம் அதை வைத்து என்ன பண்றதுன்னு தெரியாம இப்படிதான் நிறைய வேஸ்ட் செய்வார்கள். அவர்களும் சாப்பிடாமல், சாப்பிட முடியாமல் இருந்தாலும் மத்தவங்களுக்கு குடுக்கவும் மனசு வராது. ஆனா இந்த வயசில் உங்களுக்கு அதிகமா இருக்கறதை மத்தவங்களுக்கு குடுக்க தோணும். அதான் இந்த சிறு வயதின் அழகு.”

“ அது சரி, நாங்க போனதும் இந்த பேக்கரி இப்படி பன்ணிருக்கமே, கடைக்காரருக்கு நஷ்டம்தானே. இப்பதான் எங்களுக்கு நிஜமாவே கஷ்டமா இருக்கு…” என்றாள் பிரகதி.

“அது நீங்க கவலைப்பட வேண்டாம். நான் பாத்துக்கறேன்” என்று எப்போதும்போல் கண்ணடித்தான் ஜீவா.

“அவனுக்குதான் மாயாஜாலம் தெரியுமில்ல… கண்ணு ராஜா… அது எப்படி மாயமா இங்க வந்தோம்.. அது சொல்லேன்….” என்றான் ஜோசப்.

“ஹா… ஹா… மாயாஜாலம்னு எதுவுமே இல்ல ஜோ…. வந்து… உங்களுக்கு அறிவியல் பாடம் இருக்கா…?” என்று கேட்டான் ஜீவா.
“இருக்கு…இருக்கு…” என்றோம் கோரசாக. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜோசப் சென்று ஒரு தட்டு நிறைய உருளைக்கிழங்கு சிப்ஸும், சில குளிர்பான பாட்டில்களும் கொண்டு வந்தான். அந்த டேபிளில் அவற்றை அடுக்க, ஒரு பெரிய மீட்டிங் நடக்கும் சூழல் தெரிந்தது.

“ம்ம்… அதில் க்வாண்டம் மெக்கானிக்ஸ்னு ஒரு பாடம் வருதா…”

“அப்படியா… அது கேட்டதேயில்லையே….” என்று நான் சொல்ல, “ இந்த பேர்ல எங்க அண்ணன் ஒரு புக் வச்சிருக்கான்” என்றான் ஷகீல்.

“ஒகே… அப்ப அது பெரியவங்க படிக்கற பாடம்தான். நிஜம்தான். இப்ப உங்களால புரிஞ்சுக்க முடியாதுதான். புரியறமாதிரி சொல்றேன். இப்ப நாம் சக்தின்னு ஒண்ணு சொல்றோமில்லையா… அது முழுசா இல்லன்னா என்ன ஆகும்?”

“சோர்ந்து போவோம்… கொஞ்சம் சிப்ஸ் சாப்ட்டா தெம்பாவோம்” என்றான் ஜோசப். அவனை செல்லமாய் முறைப்பது போல் பார்த்த ஜீவா தொடர்ந்தான், “ சரிவிடு… சக்தின்னா எல்லா இடத்திலயும் இருக்கு. சக்தியே இல்லாம ஒரு இடம் இருக்கும். அதை ஸீரோ ன்னு வச்சுக்கலாம். அதுக்கு கீழ ஏதாவது இருக்கான்னா…. இருக்கு. அதை நெகடிவ் சக்தின்னு சொல்வாங்க. அதை பயன்படுத்தி, காலம் இடம் எல்லாத்தையும் சுருங்க வைக்கலாம். அதான் இங்க நடந்தது. அது பயன்படுத்தினேன். ஒரு நொடியில இங்க வந்தாச்சு. இதுபோல எங்க வேணா போகலாம்”

“ஹை, அது எப்படின்னு எங்களுக்கும் சொல்லிக்குடேன்….” என்றள் ரம்யா.

“இல்லபா, அது சொல்லித்தந்து வரதில்ல.. அது மனிதருக்கு இப்போதைக்கு எட்டாத விஷயம்தான். சொல்லப்போனா இப்படி இருக்கலாம்னு க்வாண்டம் மெக்கானிக்ஸ்ல கற்பிதமா படிக்கற அளவில்தான் இருக்கு. ஆனா நிஜம்ங்கிறதை மாற்ற முடியாது இல்லையா. இந்த பூமி , பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் இருந்ததை நெகடிவ் சக்தின்னு சொல்லலாம். “

“ இதைதான் சினிமால, பழைய கதைகளிலே மறைஞ்சு வரமாதிரி காட்டறாங்களா…” என்றேன் நான்.
“அதெல்லாம் மனிதனின் ஜாலியான கற்பனை, சரிவிடு… இப்ப அடுத்து எங்க போலாம்…?” என்றான் ஜீவா.

“ரொம்ப நேரமாச்சு… அம்மா தேடும்.. வீட்டுக்கு போகணும். நாலை வரோம்” என்றோம்.

ஜீவா எழுந்தான். கையை மெதுவாக ஆட்டினான். சட்டென்று அந்த சூழல் மறைந்து பீச்சில் இருந்தோம். மிக நேரம் ஆனதால் ஆளாளுக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்தோம். நாளை ஜீவாவிடம் சொல்லி பறப்பதுபோல் ஏதாவது மந்திரம் சொல்லவேண்டும் என்று தோன்றியது. நான் செல்லும் வழியில் ஐயங்கார் பேக்கரியை பயமாய் எட்டிப்பார்த்தேன். ஆனால் மனம் முழுக்க ஆச்சரியம் ஏற்பட்டது. நாங்கள் வந்த சுவடே இல்லாமல் அது முழு சுத்தமாக இருந்தது. அப்படியானால் இதெல்லாம் வெறும் பிரமையா என்று தோன்றியது. ஆனால் வாயில் இன்னும் மறையாத தித்திப்பு அது பொய்யில்லை என்று காட்டியது. அந்த முந்திரி கேக் இருந்த இடத்தில் நான் எடுத்து சாப்பிட்ட ஒரு பீஸ் குறைந்திருப்பதை கண்டேன்.

மௌனப்புன்னகையுடன் வீட்டுக்கு வர,

“என்னடா… போனதும் வந்திட்ட… விளையாட உன் ஃப்ரெண்ட்ஸ் வரலியா…?” என்று அம்மா கேட்க, என் கையில் இருந்த எலெக்ட்ரிக் வாட்சை பார்த்தேன். பிரமிப்பில் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். நான் வீட்டில் இருந்து சென்று நிற்காமல் திரும்பி வரும் அதே இருபது நிமிடங்கள்தான் ஆகியிருந்தது.

மாயாஜாலம் தொடரும்…
 

appusiva

New member
Vannangal Writer
Messages
8
Reaction score
1
Points
3
அத்தியாயம் 4

மறுநாள் பிரகதி பள்ளிக்கு வரவில்லை. ஏதோ லீவு. நாங்கள் நால்வரும் இடைவே நேரத்தில் பேசிக்கொண்டிருந்தோம். நேற்றைய நிகழ்வின் காலம், அந்த ஜீவா உண்மையில் யார் என்றெல்லாம் எங்கள் பேச்சு இருந்தது. அவன் கண்டிப்பாக சாமிதானென்றும் அல்லது சாமியின் தூதனாய் இருக்கலாம் என்றும் ரம்யா சொன்னாள். சாமிக்கு உருவம் கிடையாது என்று ஷகீல் அதை மறுத்தான். அவன் ஏதாவது வேறு கிரகத்தில் இருந்து வந்த ஏலியனாக இருக்கவேண்டும் என்பது அவனின் வாதம். இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்க, எதிரில் பிரகாஷின் கோஷ்டி வந்தது. அவனின் குழுவில் எப்போதும் ஒரு ஐந்தாறு பேர் இருப்பார்கள். பிரகாஷ் நிறைய காசு கொண்டு வருவான். எப்போதும் அந்த குரூப்பின் தீனி செலவுகள் அவனுடையது. அதனால் அவனைச்சுற்றி எப்போதும் அவர்கள் ஒட்டிக்கொண்டே இருப்பார்கள். நாங்கள் எப்போதும் அவனிடம் ஒட்டுவதில்லை, ஆதலால் எங்கள் மேல் அவனுக்கு ஒரு பகை உண்டு.

“இங்க பாருடா… ஜால்ரா கோஷ்டி…” என்று நக்கல் செய்தான் பிரகாஷ்.

“ஆமாடா… பத்து ரூபா வச்சுகிட்டு பந்தா பண்ற கும்பல்டா இவங்க… “ என்றான் செந்தில். அவன் பிரகாஷின் செம ஜால்ரா. எனக்கு சுறுசுறுவென்று கோபம் வந்தது. ஆனால் உருவத்தில் அவர்கள் சற்று பெரியவர்கள், பின் பெஞ்சில் உட்காரும் அளவுக்கு பலசாலிகள். அதனால் கொஞ்சம் தயக்கம் வந்தது. ஆனால் ரம்யா சட்டென்று கத்தினாள்.

“அதுகூட உன்கிட்ட இல்லியே…. நீயே இவன்ட்டதானே பிச்சை எடுக்கற….” என்றாள்.

நாங்கள் சிரித்துவிட செந்திலுக்கு சரியான கோபம் வந்துவிட்டது. நாங்கள் சும்மாயிருக்க ரம்யா பேசியது, அதில்லாமல் அவன் காசுக்காக ஜால்ரா போடுவதை சொல்லிக்காட்டியது என்று அவனின் கோபம் உச்சத்துக்கு சென்றுவிட்டது. வேகமாய் வந்து ரம்யாவை அடிக்க கை ஓங்கினான். நான் கொஞ்சம் பயந்துபோனேன். ஆனால் ரம்யா கொஞ்சமும் பயப்படவில்லை. செந்திலின் கையை பிடித்து சட்டென்று முறுக்கினாள். அவன் திமிற முயற்சித்து முடியாமல் முகத்தை வீரமாக வைத்துக்கொண்டு தைரியமாக இருப்பதைபோல் காட்ட முயற்சித்தான். ஆனால் வலி பொறுக்க முடியாமல் அழ ஆரம்பித்தான். “ டேய் பிரகாஷ்… காப்பாத்துடா…” என்று அவன் கத்த பிரகாஷும் அவன் நண்பர்களும் ஓடி வந்தார்கள். நானும், ஷகீலும் அவர்களை தடுக்க முயல, என் கைகள் அவன் மேல் படும்முன்னே தூரப்போய் விழுந்தார்கள். என்ன நடந்தது என்று நாங்கள் குழம்பி போய் இருக்க, அவர்கள் எங்களை பார்த்து பயந்து ஓடினார்கள், செந்திலும் தன் கையை தேய்த்துக்கொண்டே அழுதபடி ஓடினான். நாங்கள் ரம்யாவை கொஞ்சம் பயத்துடனே பார்த்தோம்.

“என்ன ரம்யா, இவ்வளவு கோபம்… நீ இப்படியெல்லாம் நடந்துக்கமாட்டியே…”

என்றான் ஷகீல். அவள் திருதிருவென்று விழித்தபடி,

“ எனக்கும் அதான் தெரியல, நான் ஏதுமே சொல்லலை, ஆனா என்னை மீறி வார்த்தை விழுது… அவன் கையை எப்படி பிடிச்சேன், என்ன பண்ணினேன்னே தெரியலை. ஆனா ஏதோ சக்தி வந்தது போல இருக்குடா…” என்றாள்.

“உண்மைதான் ரகு, நீயும் நானும்கூட ஏதும் பண்ணலை, ஆனா சினிமால வர மாதிரி அவனுங்க எங்க போய் விழுந்தானுங்க பாரு….. எப்படி இதெல்லாம்….”

“ஒரே விடைதான்…. ஜீவா இங்கயும் வந்துட்டான்…” என்றான் ஜோசப்.

“வெரிகுட் ஜோ… சரியா சொல்லிட்ட “ என்று ஜீவாவின் குரல் கேட்டது. நாங்கள் சுற்றிமுற்றியும் பார்க்க, பக்கத்தில் இருந்த மரத்தில் இருந்து குதித்தான் ஜீவா. குதித்தான் என்பது கொஞ்சம் அதிகம். அவன் மயிலிறகு மென்மையாய் பறந்து கீழே இறங்குவது போல அழகாக இறங்கி வந்தான்.

“எப்படி ஜீவா… இங்க வந்த….” என்று ஆச்சரியமாய் கேட்டேன்.

“ஏன் வரக்கூடாதா…..?”

“இல்ல, நீ பீச்சிலதானே இருப்ப…..”

“அட நண்பர்களா…நீங்க என்னை முதல்ல பாத்தது பீச்சில. ஆனா நான் ரொம்ப நாளா இங்க கூடவேதான் இருக்கேன். அது உங்களுக்கு தெரிய அன்னிக்கு ஆச்சு..” என்று சொல்ல, நாங்கள் பிரமிப்பாய் பார்த்தோம்.

“அட்டா… பெல் அடிச்சு இவ்ளோ நேரமாச்சு. போச்சு…. இங்கிலீஷ் மிஸ் வந்திருப்பாங்க… செமயா மாட்டபோறோம்… அப்புறம் பாக்கறோம் ஜீவா… “ என்று சொல்லியபடி ரம்யா ஓட, அவளை பின்தொடர்ந்து நாங்களும் ஓடினோம். ஜீவாவும் எங்கள் பின்னாடியே ஓடிவர… அவனை தடுக்கும் நேரம்கூட இல்லாமல் ஓடினோம். அந்த மிஸ்ஸின் கண்டிப்பு அப்படி. வகுப்பை நெருங்கி, உள்ளே போக எங்களுக்கு ஆச்சரியம் காத்துக்கிடந்தது. மிஸ் வகுப்புக்குள் வந்துவிட்டார். என் இடத்தில் நான் இருந்தேன். ஷகீலும் ரம்யாவும் ஜோசப்பும் கூட. ஆனால் நாங்கள் ஜீவா உடன் வாசலில் இருந்தோம். ஜீவாவை பார்க்க, அவன் சிரித்தபடி உள்ளே போகச்சொன்னான்.

நாங்கள் போனதும், உள்ளிருந்த எங்கள் பிரதி எங்களுடன் இரண்டற கலந்து உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி நிலை பெற்றது. பின்னால் திரும்பி பார்க்க ஜோசப் இன்னமும் அவனின் பிரதியில் புகாமல் அந்த பிரகாஷை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். பிரகாஷோ முன் பெஞ்சில் இருந்த என்னை முறைத்துக்கொண்டிருந்தான். நான் பார்க்க, ‘வெளிய வாடி… உன்னை கவனிச்சுக்கிறேன்’ என்பதுபோல் கைகாட்டினான்.

சட்டென்று அவன் தலையில் படாரென்று ஒரு கொட்டு வைத்துவிட்டு ஜோசப் அவன் உடலில் புகுந்துகொள்ள, பிரகாஷ் “ஆத்தாடி” என்று தலையில் கைவத்து கத்தினான். திரும்பிய மிஸ், அவனை பார்த்து “என்னாடா…. ஆரம்பிச்சுட்டியா…” என்று கேட்க, “யாரோ கொட்டிட்டாங்க மிஸ்.. “ என்றான் பிரகாஷ்.

“ம்ம்… எல்லாரும் கவனிச்சுட்டு இருக்காங்க .. உன்னை பேய் வந்து கொட்டிட்டு போயிருக்கும்போல” என்று சொல்ல வகுப்பில் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

இதெல்லாம் வாசலில் நின்று கவனித்துக்கொண்டிருந்த ஜீவா, சிரித்தபடி உள்ளே வந்து மிஸ்ஸின் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான். எங்களுக்கு பயமாய் போய்விட்டது. ஆனால் அவன் எங்களை தவிர யார் கண்களுக்கும் தெரியவில்லை என்பதை அப்போதுதான் கவனித்தோம்.

வகுப்பு முடிந்து நாங்கள் வெளியே வரும் முன்னே பிரகாஷ் கும்பல் ஓடிவிட்டது. பயம் வந்திருக்கும் போல. ஜீவாவுடன் நாங்கள் வெளி மைதானத்தில் குழுமினோம். இன்று எங்கே போகலாமென்று பேசிக்கொண்டிருந்தோம்.

“எங்க போலாம்னு முடிவு பண்ணீட்டீங்களா….” என்றான் ஜீவா.

“ வந்து… ஏதாவது புக் ஷாப் போலாமா… நெறைய காமிக்ஸ் புக் வேணும். படிக்கணும். விலையெல்லாம் பாத்தா அதிகமா இருக்குன்னு எங்கப்பா வாங்கிதர மாட்டேன்றார்.” என்றான் ஷகீல்.

“ஆமாமா… எனக்கும் அதான் ஆசை “ என்றேன் நான்.

“எனக்கு படம் வரையற ஏதாவது ஆர்டிஸ்ட்டுகிட்ட போய் கத்துக்கணும்னு ஆசை” என்றாள் ரம்யா.

ஜோசப் மட்டும் ஏதும் சொல்லவில்லை. “எங்க வேணா போங்க, சாப்பிட ஏதாவது ரெடி பண்ணி குடுத்திடுங்க….” என்றான் அவன். அவன் பசி தாங்க மாட்டான்.

“ சரி … போலாம். அது முடிஞ்சதும் உங்களுக்கு ஒரு சின்ன வேலை இருக்கு… செய்றீங்களா “ என்றான் ஜீவா.

“நீதான் எல்லாமே செய்றியே… அப்புறம் ஏன் எங்க உதவி” என்றேன் நான்.

“ அதுவும் சரிதான். ஆனால் நானே எல்லாமே செய்துவிடக்கூடாது. நீங்களும் கத்துக்கணுமில்ல.” என்று அவன் சொல்ல, அவன் மாயாஜாலம்தான் கற்றுக்கொடுக்கப்போகிறான் என்று எங்களுக்குத்தோன்றியது. அந்த எண்ணமே மனதுக்குள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அவன் கூட்டிச்சென்றது ஒரு லைப்ரரி போலவே இல்லை. அது ஒரு பார்க் போல இருந்தது. அங்கே யாருமே இல்லை. ஒரு வெட்டவெளி மைதானம். கீழே எல்லாம் வெறும் புல்தரை. அங்கங்கே சின்னச்சின்ன பூக்களுடன் செடிகள். அலமாரிகள் அழகழகாக மரத்தால் செய்யப்பட்டு வண்ணப்பூச்சின்றி இயற்கை அழகுடன் இருந்தது. அவற்றில் முழுக்க காமிக்ஸ் புத்தகங்கள். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், ப்ரெஞ்ச் என உலகில் உள்ள அத்தனை காமிக்ஸ் புத்தகங்களும் அங்கே இருந்தன. எங்களின் மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்ல முடியவில்லை. ஆனால் இதையெல்லாம் கொஞ்ச நேரத்தில் படிக்க முடியாதே என்று ஆதங்கம் ஏற்பட்டது. நானும் ஷகீலும், தமிழ் காமிக்ஸ் இருந்த அலமாரியை நெருங்கினோம். வரிசையாக எடுத்துப்பார்க்க, அதை பார்த்தவுடன் அதன் கதை, படங்கள் அனைத்தும் ஏற்கனவே படித்த ஞாபகம் ஏற்பட்டது. இத்தனைக்கும் அதை இன்றுதான் முதல் தடவை பார்க்கிறேன். ஷகீல் அஹமது பார்க்க அவனும் என்னை பார்த்து விழித்தான்.

“ என்னடா …. எல்லாமே படிச்ச போல இருக்கு…?”

“அதானே… இரு அந்த ஆங்கில வரிசையை பார்ப்போம்…” என்று அடுத்த அலமாரியை நெருங்கினோம். பக்கத்தில் போகும்போதே அதில் அடுக்கி இருக்கும் வரிசை, கதைகள் முழுக்க ஞாபகம் வந்தது. சோர்ந்துபோய் அப்படியே உட்கார்ந்தோம். எங்கள் அருகில் வந்து அமர்ந்தான் ஜீவா.

“என்ன ஜீவா இது.. எல்லாமே படிச்ச மாதிரி இருக்கு…”

“நீதானே நினைச்ச… இதெல்லாம் கொஞ்ச நேரத்தில படிக்க முடியாதேன்னு. அதான் அத்தனையும் உங்களுக்குள் கொண்டுபோயிட்டேன். இனி வரும் புத்தகங்கள் மட்டும்தான் பாக்கி இருக்கு….”

“அட … அதுகூட உன்னால கொண்டு வர முடியுமா….”

“முடியும்… ஆனா வேணாம். உங்க வாசிப்பு இன்பத்தை தடை பண்றமாதிரி ஆகிடும். இப்போதைக்கு எல்லா காமிக்ஸும் படிச்ச திருப்தி இருக்கில்ல. அது போதுமில்ல..?”

“அதுவும் சரிதான்… நீ சொல்றதுதான் கரெக்ட். எல்லாமே கையில் இருந்தால், அப்புறம் வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லாம ஆகிடும்தான்.”

“அட… பாரேன்… நீ இப்ப பெரியவங்க மாதிரி தத்துவமெல்லாம் பேச ஆரம்பிச்சுட்ட…”

“இயற்கைதானே ஜீவா அது?” என்றேன் நான்.

“ம்… வந்து… எது இயற்கை….” என்றான் ஜீவா.

“இயற்கைனா … அதுவா இருக்கறது எல்லாமே இயற்கைதான். உலகில், கடல், மலை, மரம்….. அப்புறம் பறவைகள் இதுபோல இருப்பதெல்லாம் இயற்கை.” என்றான் ஷகீல்.

“சாப்பிடுவதும் இயற்கை…” என்றான் ஜோசப். அவன் கையில் அந்த பெரிய பிஸ்கட் பாக்கட் இருந்தது. ஜீவா உபயம்.

“அப்ப செயற்கைன்னா….? “

“இந்த பிஸ்கட் பாக்கட், ப்ளாஸ்டிக் பொருட்கள், மக்காத பொருட்கள் நம்ம பில்டிங் இதெல்லாம் செயற்கை.” என்றேன் நான்.

“அதெப்படி… ஒரு பறவை அது தங்கிக்க சின்னசின்ன குச்சிகளை வச்சு கூடு கட்டினா இயற்கை, அதுவே நீங்க கட்டினா செயற்கையா…”

“அது அப்படிதான்… தப்பா…” என்றேன் நான். எனக்கு கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது.

“உண்மையில் செயற்கைன்னு எதுவுமேயில்லை. இந்த உலகில் இருக்கும் அனைத்தும் இயற்கைதான். பூமி தோன்றியதில் இருந்து இங்கே உயிர்னு தோன்ற ஆரம்பிச்சது. அதில் வாழ உயிர்கள் அவைகளுக்கேத்த மாதிரி இங்க இருக்கும் எல்லா பொருட்களையும் பயன்படுத்த ஆரம்பிச்சுதுங்க. மனிதனும் பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்தான். நல்லா கவனிங்க, அவன் கண்டுபிடிக்க பயன்படுத்திய அனைத்து பொருட்களும் இந்த பூமியில் இருந்து எடுத்ததுதான். அதை மிக்ஸ் பண்ணிதான் பல விஷயங்களை செய்யறான். ப்ளாஸ்டிக் உள்பட. அப்ப அது அனைத்தும் இங்க இருந்து எடுத்த இயற்கை பொருள்தானே. எனக்கு என்ன தோணுதுன்னா மனிதன் செய்யற பொருட்கள் தவிர மத்ததை இயற்கைன்னு வச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன். சரியா….?” என்றான் ஜீவா.

“அப்படிதான் தோணுது” என்றான் ஜோசப்.

“ஆனா… மனிதன் யூஸ் பண்ற பொருட்களால்தானே சுற்றுச்சூழல் பாதிக்குது. பெட்ரோல் அதிகமா பயன்படுத்தறோம். அதனால ஒரே புகை. ப்ளாஸ்டிக் பொருட்கள் மக்கறதேயில்லை. அதுவும் செயற்கைனு வச்சிருக்கோம். இன்னும், புதுபுது கண்டுபிடிப்புகளால் பலவிதத்தில் பாதிப்பு… இந்த பாதிப்பு செய்யறது எல்லாமே செயற்கைன்னு வச்சாதான்… கொஞ்சம் விழிப்புணர்வு வரும்.” என்றேன் நான். எனக்கு சரியாக பேசுவதாகவே தோன்றியது.

“பூமிக்கு உயிர் இருக்கா….?” என்று திடீரென்று கேட்டான் ஜீவா. ஒரு நிமிடம் எங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“ அது வந்து … பிறந்து வளர்ந்து வாழ்ந்து அப்புறம் இறந்துபோனாதான் உயிர் இருக்குன்னு அர்த்தம்..” என்றேன் நான்.

“நடுநடுவில பசிக்கணும்… சாப்பிடணும்… அதில்லாம நோய் வரும்… சரி பண்ணனும்… ஓடியாடி விளையாடணும்… ம்..ம்…மரமெல்லாம் ஓடறதில்ல… அதனால ஓடாததும் சிலது இந்த உயிர் லிஸ்ட்ல சேத்துக்கலாம்.….” என்றான் ஜோசப்.

“ ஆனா பாரேன். ..ஒண்ணுமேயில்லாத சூனிய வெளியில், வெளிச்சம், இடம் எதுவுமே இல்லாத இடத்தில் திடீர்னு ஒரு சின்ன தீக்குச்சி வெளிச்சம் போல, அதைவிட சின்னதா ஒரு பொட்டு வெளிச்சம் வருது. அது அப்படியே வெடிச்சு பரவுது… எவ்வளவு வேகமான்னா … வந்து அப்பதான் ஓளியும் பிறந்துச்சா… அதோட வேகத்தில பரவுது. அடக்கி இருந்த வெற்றுவெளியில் இடம் உருவாகுது. எல்லாம் ஒரு புகைபோல திரண்டு வருது. இறுக்கமா இருந்த புகைப்படலம் கொஞ்சம் கொஞ்சமா இடம் கிடைக்க… பரவுது. சின்ன சின்ன பொட்டலமா சேர்ந்து பரவி இன்னும் போய்ட்டே இருக்கு. இந்து சின்ன புகைப்படலம் என்னன்னு தெரியுதா…?”

“ஏதோ பட்டாசு வெடிச்சு புகை மண்டலம் பரவற மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டேன்.”என்றேன் நான்.

“ அதெல்லாம் மேகமா…” என்றான் ஷகீல்.

“இல்லை. அதான் நட்சத்திரங்கள்…” என்ற ஜோசப் தொடர்ந்து சொன்னான்..” இதை நான் டிஸ்கவரி சேனலில் பாத்துருக்கேன்..”

“ஓரளவு ஜோ.. சொல்றது சரிதான். அதெல்லாம் நட்சத்திர கூட்டங்கள். அதில் ஈர்ப்பு விசை இருக்கும் மையத்தை சுற்றி ஒரு சங்கு சக்கர வடிவமா சேர்ந்து ஒரு கூட்டமா உருவாகுது. அதுக்கு பக்கமா இருக்கறதெல்லாம் ஒண்ணா சேர்ந்து ஒரு குடும்பமாகுது…இதுபோல பலகோடி நட்சத்திர குடும்பங்கள்… நல்லா பாருங்க… இதில் ஒரு நட்சத்திர குடும்பத்துக்கு நாம வரலாம். அதில் எண்ணமுடியாத கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்… அதில் ஒரு துளியூண்டு தூசி போல ஒண்ணு… அதான் நம்ம சூரியன்..”

ஆவென்று வாய் பிளந்தோம். சூரியனே தூசி என்றால், நாமெல்லாம் என்று தோன்றியது எங்களுக்கு. ஜீவா தொடர்ந்தான்.

“ அது அதோட புகை மண்டலங்களை சுத்தி சுத்த விடுது. அந்த துகளெல்லாம் சின்ன சின்ன குழுவா சேர்ந்து குளிர்ந்து சின்ன சின்ன பந்து வடிவமா மாறுது. அதெல்லாம் தாயான சூரியனை சுத்திவருதுங்க. இதெல்லாம் நடந்து பலகோடி வருஷங்களை கடந்து இதே புராசஸ் இங்கயும் நடக்குது. சின்ன சின்ன கண்ணுக்குத்தெரியாத உயிர்கள் கடலில் உருவாகி , மெதுவாக நிலத்தில் நடந்து… அது கோடிக்கணக்கான ஜீவராசிகளா மாறி அதில் ஒரு சின்னூண்டு பகுதியா மனிதன்னு ஒருத்தன் உருவாகி…நெனைச்சுபாரு…. கணக்கிலேயே வைக்காத ஒரு சின்ன பொருள், இந்த பூமியை அழிக்க முடியுமா…?”

“பூமி சும்மாவா இருக்கு.? உயிர்னு சொன்னியே ஜீவா…” என்றேன் நான்.

“ஆமா, அதுவும் ஒருநாள் பிறந்தது… இப்ப வாழுது… இன்னும் பலகோடி வருஷங்கள் போய் அது சூரியனோட இணைஞ்சு அழிஞ்சுடும், அதாவது செத்துடும். நீங்க பயப்படாதீங்க. அது நடக்கறப்போ இப்ப இருக்கிற மனித இனம் அப்படீங்கறதே இருக்காது. நடுவில் வரக்கூடிய உயிர்னு சொல்லக்கூடிய நாமெல்லாம் வாழ்றதுக்காக சில மாறுதல்களை செய்யறோம். கண்டுபிடிப்புகள் செய்து பயன்படுத்தறோம். இது இந்த பூமியை பாதிக்குதுன்னு நாமே பேசிக்கறோம். ஆனா கொஞ்சம் யோசிச்சீங்கன்னா அது பூமியில் வாழக்கூடிய உயிரினங்களைதான் பாதிக்கும்னு தெரியும். ஓஸோன் படலத்தில் ஓட்டைன்னா அதனால இந்த உயிரினங்களுக்குதான் பாதிப்பு. நீங்க செய்யற ஒவ்வொரு பாதிப்பும், செயல்களும் தன்னிச்சையா செய்யறது இல்லை. அது இந்த பூமியொட, பிரபஞ்சத்தோட செயல்களின் கூட்டு முயற்சிதான். இன்னும் சொல்லப்போனா இந்த பிரபஞ்சத்தின் கூட்டு இயக்கத்தின் செயல்பாடுகளின் சிறுதுளிதான் மனிதனின் செயல்கள். எதுவும் இந்த அகன்ற பிரபஞ்சத்துக்கு தெரியாம நடக்காது. அதை தெரிஞ்சுக்காம ஏதோ மனிதர்கள் எல்லாம் ஜெயிச்சமாதிரி, ஏதோ இயற்கையை மாத்தின மாதிரி பேசிக்கிட்டிருக்காங்க. நீ அசைஞ்சா இந்த பிரபஞ்சத்தின் ஒரு சின்ன அசைவுதான் அது.”

கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிண்டான் ஜீவா.

அவனும் மூச்சுவிடுகிறான் என்பதே எங்களுக்கு அதிசயமாகத்தான் இருந்தது. ஆனால் ஜீவாதானே இவன்?

“ அதான் சொல்றேன். இதெல்லாம் சயின்ஸ்தான். சயின்ஸ்னா ஏதோ பாடம் மட்டுமில்லை. தமிழில் அழகா சொல்லியிருக்காங்க, அறிவு இயல். நான் கொஞ்சம் உங்களுக்கு புரிய கொஞ்சம் எளிதா சொல்லிருக்கேன். ஆனா விஷயம் ஒண்ணுதான். கொஞ்சம் வேடிக்கையா சொன்னா, இந்த பூமியும் ஒரு உயிர்னு புரிஞ்சுகிட்டா, நாமெல்லாம் அதன் மீது ஒட்டி வாழும் சிறு கிருமிகள். பாக்டீரியாக்கள். நாம் பயணம் செய்ய, இந்த பூமிமேல சுத்திலும் ரோடு போடறோம். அது பாட்டுக்கு இயல்பா இருக்கு. மூச்சு விட்டுகிட்டு. இந்த ரோடெல்லாம் சேர்ந்து அதை ஒரு நூலால் கட்டினமாதிரி அதுக்கு லேசா திணறுது. அதோட நல்ல கனமா எல்லா இடத்திலயும் காங்க்ரீட் கட்டிடங்கள். சில நேரம் உடம்பை குலுக்கி இந்த பூமி சரி செய்துக்குது. பூகம்பம் போல. மனிதனோ அல்லது வேறெதாவது உயினமோ கணக்கு மீறி வளரும்போது அதை சரி செய்ய, சமன்படுத்த வெவ்வேறு நோய்கள், சில போர்கள் அப்படி இப்படின்னு அது ஏதாவது செய்து சமப்படுத்திக்குது. பூமிக்கு தெரியாம எதுவும் இல்லை. அது இயல்பா இருக்கணும்னா, நாமதான் நம்ம பாதுகாப்பை சரி பண்ணிக்கணும். கண்ட குப்பைகள்னு சொல்றதை நிறுத்தணும்னு உங்களுக்கு தோணறது கூட அந்த பூமியின் எண்ணம்தான். பூமி தன்னால சிந்திக்காது. உங்கமூலம்தான் ‘பாத்துக்கோப்பா…’ன்னு சொல்லும். புரிஞ்சா பிஸ்தா…” என்றான் ஜீவா.

“கொஞ்சம் பயமா இருக்கு…” என்ற ஷகீல்..” அப்ப இப்ப நாம ஒரு உயிரை மிதிச்சுக்கிட்டுதான் இருக்கோமா… அதுக்கு வலிச்சா நம்மை அடிக்குமா…” என்றான்.

“ஹா..ஹா… அதெல்லாமில்ல. நீயெல்லாம் சேர்ந்துதான் பூமி. அது தனியா இல்லை. உன்னை நீ நல்லபடியா பாத்துகிட்டா… பூமியை பாத்துகிட்டமாதிரி…அவ்ளோதான். எல்லாமே இயற்கைதான். அதான் சொன்னேன்.” என்றான் ஜீவா.

கொஞ்ச நேரம் எல்லோரும் அமைதியாக இருந்தோம். ரம்யாவின் ஞாபகம் வந்தது அவளை எட்டிப்பார்த்தோம். அவள் அந்த பார்க்கின் ஒரு மூலையில் தனியாக உட்கார்ந்து ஏதோ வரைந்து கொண்டிருந்தாள். அங்கே சென்றோம். அவள் ஒரு பெரிய சார்ட்டை வைத்து வரைந்து கொண்டிருந்தாள். அந்த சார்ட் கிட்டத்தட்ட ஒரு பத்தடிக்கு பத்தடி இருந்தது. அவ்வளவு பெரிய சார்ட் இதுவரை நான் பார்த்தது இல்லை. அதில் ஒரு பெரிய பூமியை வரைந்திருந்தாள். அதில் அதை சுற்றி ரோடுகளால் கட்டப்பட்டதைபோல் இருந்தது. அந்த பூமிக்கு கண் மூக்கு வாய், வரைந்து ஒரு மனித முகம் போல் இருந்தது.

“என்ன ரம்யா இது…?” என்றான் ஷகீல்.

“இங்க இப்ப ஒருத்தர் வரைஞ்சிட்டு இருந்தார்டா.. எனக்கு சொல்லிக்குடுக்க சொன்னேன். எனக்குதான் வாட்டர்கலர் வரைய வராதே.. ஆனா ஆசை. அவர் சொல்லிக்குடுத்து போனார். இதுபார் … இதான் பூமி. அது தன்னை பத்திரமா பாத்துக்கோங்கன்னு நம்மை பாத்து சொல்றமாதிரி வரைய தோணுச்சி. ஏதோ திடீர்னு தோண இதுபோல வரஞ்சேன்… நல்லாருக்கா?” என்றாள் ரம்யா.

நாங்கள் ஜீவாவை பார்க்க, அவன் எப்போதும் போல அந்த கள்ளப்புன்னகையை வீசினான்.

மாயாஜாலம் தொடரும்…
 

appusiva

New member
Vannangal Writer
Messages
8
Reaction score
1
Points
3
BK32 மாயாஜாலக்கதை


அத்தியாயம்‌ 5



ஜீவா கொடுத்த முகமூடியை பார்த்தோம். இன்று காலையிலேயே வந்துவிட்டான். பிரகதியும் எங்களுடன் சேர்ந்துகொண்டாள். நேற்று நாங்கள் பேசியது எல்லாம் ஏதோ டெலிபதிபோல அவளுக்கும் தெரிந்திருந்தது. இன்று காலை எட்டு மணிக்கெல்லாம் கூடிவிட்டோம். ஒன்பது மணிக்குதான் பள்ளி ஆரம்பம். இன்று ஸ்பெஷல் க்ளாஸ் இருப்பதாக சொல்லி சீக்கிரம் வந்துவிட்டோம். அவன் ஏதோ வேலை செய்துதர வேண்டும் என்று சொல்லியிருக்கிறன். அது என்னவாக இருக்கும் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஜீவா வந்தான்.

இன்று அவன் வந்தது பிரகதியின் பென்சில்பாக்ஸில் இருந்து. பேசிக்கொண்டிருக்கும்போது பிரகதி தான் வாங்கிய புது ரப்பர் அட்டாச் பென்சிலை காட்ட அந்த பென்சில் பாக்ஸை திறக்க அதில் சின்ன மனிதன் போல தோன்றும் ஒரு எரேஸர் இருந்தது. அவளே அதை கவனிக்கவில்லை. ஜோசப்தான் பார்த்தான். ஆச்சரியமாய் அதை வெளியே எடுக்க, அது சின்னபையன் ஏதோ யோசித்து உட்கார்ந்திருப்பது போல இருந்தது. இதுபோல ஒரு பிரபலமான கிரேக்க சிற்பத்தை நான் எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது. அதை நாங்கள் ஆச்சரியமாக பார்க்க, திடீரென்று அது எழுந்து நிற்க எங்களுக்கு முதலில் படபடவென்று வந்து விட்டது. ஆனால் இந்த சில நாட்களில் ஏராளமான மாயவித்தைகளை ஜீவா செய்து காட்டியிருந்ததால், உடனடியாக இயல்பு நிலைக்கு வந்துவிட்டோம்.

“என்ன ஜீவா இது… இது எப்படி சாத்தியம்…? “ என்றேன் நான்.

“மனம் நினைத்தால் எல்லாமே சாத்தியம்தான் ரகு…” என்ற ஜீவா என் கைவிரல்களை பற்றி ஏறி என் உள்ளங்கையில் அமர்ந்துகொண்டான். அது மிக வேடிக்கையாக இருந்தது. அவன் சில பொருட்களை எங்களிடம் கொடுக்க, அதை வாங்கிய ஷகீல் தன் கையில் வைத்து கண்களை இடுக்கிக்கொண்டு அது என்னவென்று பார்க்க, அந்த பொருள்கள் கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்து முழு உருவத்தை காட்டியது. அது சூப்பர் ஹீரோக்கள் போடும் முகமூடிகள். நேற்றைய தினம் நாங்கள் படித்த, எங்களுக்கு விருப்பமான ஹீரோக்களின் முகமூடிகளை போன்று தோற்றமளித்தது அது. வெறும் முன்புறம் மட்டும்.

“ஹை… பேட்மேன்கூட இருக்கு…. இது எதுக்கு ஜீவா…” என்றாள் ரம்யா.

“முதலில் நான் கொஞ்சம் பெரிதாகிவிடுகிறேன் “ என்ற ஜீவாவை நான் கீழே வைக்க, அவன் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி.. இயல்பு நிலைக்கு வந்து ஒரு ஒளிபோல் வெளிச்சம் ஒரு தடவை தோன்றி மின்னி மறைந்தது.

“நேத்து சில தகவல்கள் காதில் விழுந்தது. அதை சரி செய்ய உங்கள் உதவி வேண்டும்” என்றான் ஜீவா.

“ சொல்லுபா… எல்லாமே நீயே செய்யற… எங்களால் முடிஞ்சதை நாங்க செய்யறோம்.” என்றான் ஜோசப்.

“ சிட்டியில ஒரு பாங்க் கொள்ளை நடக்கபோகுது. அதை நீங்க தடுக்கப்போறீங்க. அதில்லாமல் ஒரு பெரியவரையும் காப்பாத்த போறீங்க… ஆனா நீங்க சின்னபசங்கன்றதால இந்த முகமூடிகள் உங்களுக்கு. பிடிச்சதை செலக்ட் பன்ணுங்க. விபரம் சொறேன் “ என்றான் ஜீவா.

“அய்யோ …. பாங்க் கொள்ளையா… பேசாம போலீஸ்ல சொல்லிடலாம். அதான் சரி” என்றான் ஜோசப்.

“அது சரியா வராது. அவங்க நம்ப மாட்டாங்க. ஏன்னா அவங்க மூளைல வேற விஷயங்கள்தான் கால சூழ்நிலைகளால நிறஞ்சிருக்கு. இது சொன்னா அவங்களுக்கு வேடிக்கையா இருக்கும். “

“இன்னொரு விஷயம் என்ன… அந்த பெரியவரும் இந்த பாங்கில இருக்காரா…?” என்றான் ஜோசப்.

“அது தொடர்ந்து சொல்றேன்… முதலில் இதை செலக்ட் பண்ணுங்க.”

“எனக்கு பேட்மேன்” என்று முந்திக்கொண்டாள் ரம்யா. நான் ஸ்பைடர் எடுத்தேன். இதான் முகத்தை முழுசாக மூடிக்கொள்ளும். எதுக்கு வம்பு, என்று தோன்றியது. அதில்லாமல் கொஞ்சம் கூச்சம் வேறு எனக்கு. வேதாளர் போன்று இருந்ததை ஜோசப் எடுத்தான். அயர்ன் மேன் மாஸ்க் ஷகீலுக்கு போயிற்று. இன்னொன்று சிரிப்பது போல் இருந்தது. சிறு முறுக்குமீசை. வெண்டேடா என்று ஜீவா சொன்னான். அதை பிரகதி எடுத்துக்கொண்டாள். அதை நாங்கள் முகத்தின் அருகில் கொண்டுசெல்ல அது சட்டென்று எங்கள் முகத்தில் காந்தம்போல ஒட்டிக்கொண்டது.

ஜீவா தன் கையை அசைக்க ஒரு சிறு பொம்மை தோன்றியது. முதலில் பார்க்க, அது அழகான விமானம் போல தோன்றியது. கொஞ்சம் உற்றுபார்த்தால், பழைய சினிமாக்களில் திறந்த அமைப்பில் கார் இருக்குமே, அது போல நான்கைந்து சீட்கள் கொண்ட ஒரு அமைப்பாய் இருந்தது அது. அதே சமயம் விமானம் போல இரு சின்ன இறக்கைகளும் பின்புறம் ஒரு வால் போன்றும் இருந்தது. ஜீவா திரும்ப கைகாட்டினான். இப்போது ஒரு மோட்டார் சைக்கிள் போல ஒரு பொம்மை தோன்றியது. அதன் சக்கரங்கள் மிகப்பெரிதாக, கிட்டத்தட்ட பேட்மேன் படத்தில் வருமே, அதுபோல இருந்தது. நாங்கள் ஜீவாவை பார்க்க, அவன் “ இது ஓகேவா…” என்றான்.

நாங்கள் தலையாட்ட, அவனின் கையசைப்பில் அந்த பொம்மைகள் அழகாக பெரிதாக ஆனது. ஒரு இரண்டடி உயரமும், ஆறடி நீளமும் ஆக அது பார்க்க இப்போதும் பொம்மை போலத்தான் இருந்தது.

“இது எங்களுக்கு ஓட்டத்தெரியாதே… எப்படி ஓட்ட…?” என்றான் ஜோசப்.

“நீங்கள் நினைச்ச இடத்துக்கு இது உங்களை இது அழைத்துபோகும். பூமியின் ஈர்ப்பு விசையோடு இது தொடர்புகொண்டிருக்கும். அதே சமயம் ஒரு எதிர்ப்பு விசை இதற்குள் உண்டு. அதனால் ஸ்டார்ட் செய்தவுடன், பூமியின் பரப்பில் இருந்து ஒரு நான்கடி உயரத்தில் இது எப்போதும் நிலையாக இருக்கும். ஏதாவது ஸ்பீட் பிரேக், அல்லது உயரமான கட்டிடங்களில் கூட இது அதன் பரப்பில் இருந்து இதே உயரத்தை மெய்ன்டெய்ன் பண்ணும். அதிக உயரம் போக போக அதன் எதிர்ப்பு விசை அதற்கேற்ப தகவமைத்துக்கொள்ளும். முன்புறம் ஒரு சென்ஸார் உண்டு. அது எதிரில் வரும் பொருளுக்கேற்ப விலகிச்செல்லும்.”

“செம கண்டுபிடிப்பா இருக்கே…. இது நீ கண்டுபிடிச்சதா ஜீவா…. ?” என்றேன் நான்.

“இது என் மனம் கண்டுபிடிச்சது… அதாவது உங்க மனம்” என்று சிரித்தான் ஜீவா. எங்களுக்கு கொஞ்சம் புரியவில்லை. சிலசமயம் இப்படித்தான் புரியாத வகையில் பேசுகிறான் இவன்.

“அது ஓகே… கொள்ளை எங்க நடக்கப்போகுது…. உனக்கெப்படி தெரியும்… நாங்க சின்னபசங்க… என்ன பண்ணமுடியும்…?” என்றான் ஜோசப்.

“ மனசுதான் சின்னபசங்க….. உங்க அறிவு நல்லா தெளிவா பெரியவங்க அளவுக்கு சிந்திக்குது. அதனால இதை சமாளிக்கறது அங்க சூழ்நிலை பொறுத்து நீங்களே முடிவெடுப்பீங்க. அதில்லாம நானும் கூட இருப்பேன்” என்று அவன் சொல்ல, எங்களுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. அவன் மேலும் தொடர்ந்தான், “ எப்படி தெரியும்னு கேட்டீங்க இல்ல, என் மூளை சில நெகட்டிவ் எண்ணங்களை, பேச்சுகளை ஒலி அலைகளா மாறி கொஞ்சம் ஃபில்டர் செய்து எனக்கு தெரியவைக்கும். நேத்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தது, இப்படி காற்றில் பரவி என்னை வந்து சேர்ந்துச்சு…” என்றான் ஜீவா.

“ சுத்தமா புரியல…” என்றேன் நான். நண்பர்களும் விழித்தார்கள்.

“ அது வந்து… நீ போன வருஷம் உங்க டீச்சர்கிட்ட பாராட்டு வாங்கினயே ஞாபகம் இருக்கா….?”

“இருக்கு…”

“அதெப்படினு யோசிச்சயா… அவங்க சொல்லி ஒரு வருஷம் ஆச்சு. அதே பேச்சு, குரல், பின்ணணியில் வந்த சத்தம் முதற்கொண்டு உன் மூளை பதிச்சு வச்சிருக்கு. உண்மையில் ஒரு மனிதர் பேசிமுடித்தவுடன், அந்த பேச்சு காற்றில் பரவி அடுத்தவரை அடையுது. அது கேட்பவருடன் முடிஞ்சுடுதுன்னு நினைக்கிறோம். ஆனா அது எல்லோரும் கேட்க வேண்டி இந்த பூமியில் சுத்திட்டுதான் இருக்கும். என்ன ஒரே கஷ்டம்னா, அது பரவ பரவ புகை பரவுவது போல பல்வேறு திசைகளில் விலகி எங்கேங்கோ இருக்கும். அதை அதன் பேச்சு நடந்த காலத்தில் மையமா வச்சு ஆழ்ந்து யோசிக்க, அது காந்தம் போல திரும்ப வந்து ஒண்ணு சேர்ந்து நமக்கு மறுபடி தெரிய வைக்கும். நீங்க எப்பயும் உங்களை பாதிச்ச, அதாவது சந்தோஷமோ, துன்பமோ, சிலதை மட்டும் திரும்ப திரும்ப யோசிச்சு, கேட்கறீங்க. எனக்கு பொதுவா எல்லாமே தேவை. தேவைப்படும் நேரத்தில் அந்த இடத்தில் இருந்து அந்த சத்தங்களை மறுபடி வரவச்சு கேட்கறேன். அதுபோல, நேத்து அவங்க பேசினது உள் உணர்வில் அலாரம் கொடுக்க, கண்மூடி யோசிக்க, அவங்க பேசினது எனக்கு வந்து சேர்ந்துடுச்சு…” என்றான் ஜீவா.

“அப்ப, உலகில் நடக்கும் எல்லா பேச்சுக்களையும் இதுபோல கேட்கமுடியுமா….”

“முடியும்… ஆனா உங்களுக்கு பைத்தியம்னு சொல்லிடுவாங்க. ஏன்னா, எல்லாம் சேர்ந்து குழப்பி, உங்களை சிந்திக்கவிடாம செய்திடும். அதனாலதான் குறிப்பிட்ட விஷயங்கள் மட்டும் உங்களை வந்தடையறமாதிரி இயல்பா இருக்கு. இதை மனசால உணர்வதும் கஷ்டம். மிகப்பெரிய ஞானிகள் நாம் எதுவும் சொல்லாமலே நாம் பேசினதை, நடந்ததை சொல்றது இப்படிதான்.
நீங்க இதெல்லாம் முயற்சிக்க வேண்டியதில்லை. உங்களுக்கு உதவதான் இயற்கை, டிவி, இண்டர்நெட் னு படைச்சு வச்சிருக்கு. அதுமூலமா உங்களுக்கு தேவையான செய்திகள், முக்கிய சம்பவங்கள்னு நீங்க ஈசியா, கஷ்டப்படாம தெரிஞ்சுக்கலாம். அதுக்கு உங்களுக்கு தேவை தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம்தான்.”

“ஆமா… அன்னிக்கு எங்க வீட்டுக்கு வந்த ஒரு ஜோஸியர்கூட… எங்களுக்கு என்ன நடக்கப்போகுது… என்னென்ன செய்யணும்னு அழகா சொன்னார். தலையில ஏதோ கட்டு போட்டு வந்திருந்தார். ஏதோ அடிபட்டதுபோல.. ஆனாலும் அது பெரிசா நினைக்காம வந்து எங்களுக்கு உதவிசெய்ய எல்லாம் சொன்னார். செம அறிவுதான் இல்ல…” என்றாள் பிரகதி. அதைக்கேட்ட ஜீவா மெல்ல சிரித்தபடி எங்களை கண்களை மூடச்சொன்னான்.

நாங்கள் கண்களை மூட, ஒரு இருள் போல ஏற்பட்டது. அதன்பின் ஏதோ சுருள்சுருளாக ஒரு வளையத்தில் புகுந்து போவதுபோல் இருந்தது. சட்டென்று வெளிச்சம் பரவ ஏதோ ஒரு வீட்டுக்குள் இருந்ததை போல் இருந்தது. சுவர்களில் நிறைய சாமி படங்கள். சில பூஜை பொருட்கள். ஒரு நபர் உட்கார்ந்து யாரிடமோ செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார்.

“இதுதான் அந்த ஜோசியக்காரர். செம அறிவு தெரியுமா… எங்க வீட்ல எத்தனை பேர், எத்தனை ஆண் பெண் முதகொண்டு சொன்னார்..” என்றாள் பிரகதி.

எப்போதும் போல நாங்கள் அவர் கண்ணில் படவில்லை. எப்போதும் போல ஜோசப் அவரை சுற்றி ஏதாவது விளையாட முடியுமாவென ஆராய்ந்துகொண்டிருக்கு, அவனை இழுத்து என்னருகில் உட்கார வைத்தேன்.

“ ஆமாப்பா… அந்த லைன்மேன் வீடுதான். ஆமா…. என்னது ஒரு பொண்ணு மட்டுமா… அதோட லைன்மேன், அவங்க சம்சாரமா… சரிசரி… கூப்ட்டாங்க… போய் ஏதாவது சொல்லிவரேன். பணம் தேறுமில்ல… ஓ… கொஞ்சம் வசதிதானா… சரி சரி… கவனிச்சுக்கறேன் விடு… ஆமாயா… கொஞ்சம் டல்தான்… அதான் ஒரு பட்டன் தட்டினா… தேதி மட்டும் குடுத்தா ஜாதகமே பிரிண்ட் ஆகி வந்திடுது… இதுபோல ஏதாவது தேத்தினாதானே… வேற வேலை ஏதாவது தேடணும்பா… கொஞ்ச நாள் ஆகட்டும்னு இருக்கேன்…. நல்ல நேரமா… அட போய்யா…. பணம் வந்திட்டா எல்லாம் நல்ல நேரம்தான்… சரி சரி …வச்சிடுறேன்…..”

பிரகதி…. என்னை பார்க்க… நான் அவளிடம் அங்கே இருந்த காலண்டரை காட்டினேன். அது அந்த ஜோஸியர் அவர்கள் வீட்டுக்கு வந்த முதல் நாளை காட்டியது. பிரகதி அந்த ஜோஸியரை முறைக்க, ஜோசப் அந்த ஜோஸியரின் உச்சந்தலையில் நங்கென்று ஒரு கொட்டு கொட்டினான். சரியான அடி. அவர் தலையை பிடித்துக்கொண்டு அலற, ஜீவா எங்களை இழுத்துக்கொண்டு இன்றைய தினத்தில் வந்து சேர்ந்தான்.

மாயாஜாலம் தொடரும்…

 

appusiva

New member
Vannangal Writer
Messages
8
Reaction score
1
Points
3
BK32 மாயாஜாலக்கதை

அத்தியாயம் 6

அது ஒரு அற்புதமான வாகனம். அதில் ஏறி அமரும்போதே ஜாலியாக இருந்தது. சிறு பிள்ளைகளுக்கு வாங்கிய பொம்மை காரில் ஏறுவதுபோல் இருந்தது.

நான் பைலட் போல அமர்ந்துகொண்டேன். ஆனால் எனக்கு வேலையே இல்லை. என் அருகில் வெண்டேடா பிரகதி அமர்ந்தாள். பின் சீட்டில் வேதாளரும், அயர்ன் மேனும். ரம்யா அவளுக்கு ஏற்றமாதிரி அந்த மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டாள்.

“ம்… வாகனமே கிளம்பு… “என்றேன் நான். ஆனால் அது கிளம்பவில்லை. நான் விழிக்க,

“ அதுக்கு ஏதாவது பேர் வைங்கபா… கோவிச்சுக்குது…” என்று சிரித்தான் ஜீவா. நாங்கள் அனைவரும் காதுகளுக்குள் பேசி, “ கேலக்ஸி கார்டு.. சுருக்கமா ஜிசி… “ என்றோம். அதற்கு அந்த வாகனம் சந்தோஷமாய் தலையாட்டியது போல் இருந்தது. ரம்யாவின் பைக்கிற்கு அவள் “கருஞ்சிறுத்தை” என்று வைத்துக்கொண்டாள்.

சீறிக்கிளம்பியது அந்த ஜிசி. முதலில் பயம் வந்தாலும், போகப்போக அதன் பயண அழகை ரசிக்க ஆரம்பித்தோம். தரையில் இருந்து இரண்டடி உயரத்தில், கொஞ்சமும் குலுங்காத எதிலும் மோதாத பாதுகாப்பான பயணம் எவ்வளவு அழகானது இல்லையா. நான் அதை இன்னும் உயரத்திற்கு எடுத்துச்சென்றேன்.

உண்மையில் மனதில் நான் நினைத்த உயரத்துக்கு அது எழுந்தது. ஆனாலும் சும்மாவேணும் அந்த கவை போன்ற ஸ்டேரியங்கை பிடித்து நான் ஓட்டுவது போல பாசாங்கு செய்துகொண்டே வந்தேன். என்னை ஒரு மாதிரியான கிண்டலாக பிரகதி பார்ப்பதை அவளின் முகமூடி மறைத்தது. மிக உயரத்தில் இருந்து பார்க்க, கீழே மலைகளும் மரங்களும் சிறுசிறு துளிகளாக தெரிந்தன. பூச்சிபோல மனிதர்களும், பொம்மை போன்ற வாகனங்களும் எங்களுக்கு மிக வேடிக்கையாக இருந்தது. இன்னும் முழு பரிணாமமும் தெரிய, இந்த பூமியின் எல்லைவரை கண்ணில் பட, இவ்வளவு பெரிய கோளில், இந்த சிறு மனிதரின் அதிகார தோரணைகள் சிந்தனையில் வந்து சிரிப்பு காட்டியது.

திடீரென்று ஜிசி வேகமெடுத்தது. நாங்கள் செல்லும் வேகத்திலேயே ரம்யாவின் சிறுத்தையும் சீறிவந்துகொண்டிருந்தது. அப்போதுதான் கவனித்தேன். சூப்பர் ஹீரோக்களின் முகமூடி மட்டும் இல்லாமல் அந்த உடுப்புகளையும் நாங்கள் தரித்திருந்தோம். ரம்யாவுக்கு அந்த பேட்மேன் உடை அவ்வளவு அழகாக இருந்தது. பக்கத்தில் பிருந்தா ஒரு கோட் போலவும், பின்புறம் தொங்கும் ஒரு துணியும் இருந்தது. பின்னால் இருந்தவர்களை திரும்பி பார்க்க, ஷகீலின் அயர்ன் மேன் உடை செமையாக இருந்தது. ஜோசப்புக்கு மட்டும் அவன் தொந்தி, வேதாளரின் உடுப்பை தாண்டி கொஞ்சம் தெரிந்தது சிரிப்பாக இருந்தது. ரம்யா அவளது பைக்கை, லாவகமாக ஓட்டி வந்தாள். சிலநேரங்களில் எங்கள் ஜிசி முன்னால் வந்து சிறு குட்டிக்கரணங்களை போட்டு ஓட்டி காட்டினாள். இந்த வாகனங்களின் உற்சாக வேகம் எங்களையும் தொற்றிக்கொண்டது. ஜீவா எதுவும் இல்லாமல் அந்தரத்தில் எங்களுடன் பறந்து வந்து கொண்டிருந்தான். ஆனால் காற்றின் எதிர்விளைவோ, அல்லது அவன் பறந்து வரும் சுவடோ எதுவும் இல்லாமல் அவன் எங்கள் நிழல் போல சலனமில்லாமலும், இணைபிரியாமலும் ஒரு அமைதி சொரூபமாய் எங்களுடன் பயணித்தான்.

நகரத்தின் நடுவே வந்து ஒரு நிமிடம் எங்கள் வாகனங்கள் நிலைகொண்டது. சாலையில் செல்வோர் எல்லாம் எங்களை கைகாட்டி ஆச்சரியமாய் பேசிக்கொண்டனர். நான் கேள்வியாய் ஜீவாவை பார்க்க,

“முகமூடி இல்லாமல் இயல்பாய் இருந்தவரை உங்களை யாரும் கவனிக்கவில்லை. இப்போது உண்மை முகம் மறைத்து முகமூடி போட்டாச்சு. இனி மற்றவர்கள் உங்களை கவனித்தே ஆகவேண்டும். இதுவே உலக நியதி “ என்று தத்துவமாய் ஏதோ பேசினான். மற்றவர் எங்களை கவனிப்பது எங்களுக்கு பிடித்திருந்தது. இவ்வளவு அழகாக பயணிப்பதும், சாகஸங்கள் செய்வதும் மற்றவர் கவனிக்காமல் இருப்பதில் பயனில்லை என்று ஏதோ தோன்றியது. ஒருவேலை மற்றவரால் கவனிக்கப்படவே உலகின் அனைத்து சாகஸங்களும் நடைபெறுகிறதோவென தோன்றியது. அல்லது கவனிக்கப்படுவதால் சிலது நடக்கும் போலிருக்கிறது.


நிலைகொண்ட ஜிசியும், சிறுத்தையும் சடாரென்று கீழே இறங்கியது, ஆனால் வேகம் குறையாமல் அந்த நகரின் நடுவில் இருந்த பாங்க்கை நோக்கிச்சென்றது. அந்த சில நொடிகளில் கொஞ்ச நேரம் முன்பு அங்கே நடந்த நிகழ்வுகள் எங்கள் முன் தோன்றியது.

எப்போதும் போல வங்கி திறந்து அதன் ஊழியர்கள் சீட்டில் அமர்கிறார்கள். மேனேஜர் கணக்காளரை கூப்பிடுகிறார். உள்ளே பெட்டக அறையை திறக்கிறார்கள். அன்றைய வரவு செலவுக்கு பணக்கட்டுக்களை எடுத்து ஒரு தாளில் குறித்துக்கொண்டு வெளியே வருகிறார்கள். அந்த பெட்டக அறையில் அடகு வாங்கிய நகைகள் சிறு சிறு பொட்டலங்களாக போட்டு ஒரு அலமாரி நிறைய அடுக்கியிருந்தது. வெளியே வந்து அவர்கள் சீட்களில் அமர, பாதுகாப்பாளர் கதவை திறந்து விடுகிறார். காத்திருந்ததை போல சிலர் உள்ளே நுழைகிறார்கள். வந்தவர்களில் ஒரு நால்வரின் உருவத்தை எங்களுக்கு அடையாளம் காடுவதுபோல ஒரு சிவப்புநிற ஒளி அவர்கள்மீது படர்ந்தது. கிட்டத்தட்ட ஃப்ளோரசண்ட் போல. அது தவிர ஒரு பெண்மணி அவரின் நான்கு வயது குழந்தையுடனும், ஒரு எழுபது வயது நபரும் இருந்தார். டோக்கன் தந்தார் பாதுகாவலர். பின்னர் அவர் வாசலுக்கு நெருங்க, திடீரென்று அந்த சிவப்பில் ஒருவன் அவர் பின்புறம் சென்று ஒரு துப்பாக்கியை வைத்து மிரட்டுகிறான். பாதுகாவலர் தன் நீண்ட குழல் துப்பாக்கியை வைத்துவிட்டு கையை தூக்குகிறார், அப்படியே நடந்துசென்று கதவை உள்புறமாக மூடுகிறார்கள். மேனேஜர் மற்றும் அனைவர் முகத்திலும் பீதி படர்ந்தது. அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். சிவப்பில் மற்ற மூன்று பேரில் ஒருவன் மேனேஜர் உடன் பெட்டக அறையை நோக்கி போகிறான். மற்ற இருவரும் துப்பாக்கிமுனையில், மற்ற ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் நிறுத்தி வைத்துள்ளார்கள். வெளியே சிலர், இன்று சற்று தாமதமாகதான் பாங்க் திறப்பார்களாம் என்று பேசிக்கொண்டார்கள். இது அத்தனையும் ஒரு சில விநாடிகளில் எங்கள் முன் தோன்றி மறைந்தது.

ஜிசி படுவேகமாக அந்த வங்கியின் கதவை உடைத்து உள்ளே சென்றது. ஒரு நிமிடம் அசந்துபோன அந்த வில்லன்கள் என்ன நடந்தது என்று குழம்பி எங்களை வெறித்துப்பார்த்தனர்.

அவர்களின் துப்பாக்கி எங்களை நோக்கி இருந்தது. ஜிசியில் இருந்து நாங்கள் கீழே குதித்தோம். எங்கள் உருவத்தை பார்த்து அவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

“ இத பாருடா… குள்ள மனுஷங்க…..” என்று சிரித்தான் ஒருவன்.

“தம்பிகளா …

விளையாட இது இடமில்லை… வெளிய போங்க… “ என்றான் அடுத்தவன்.

ஆனால் பாதுகாவலரின் பின்னால் இருந்து வந்த மூன்றாமவன், “ டேய்… இது விளையாட்டில்ல, கதவை உடைச்சு உள்ளே இந்த வண்டி சேதாரமில்லாம வந்திருக்கு. இவங்க பாத்தா குள்ளனுங்க மாதிரி தெரியல… ஏதோ ரோபோ போல இருக்கு. புதுவிதமான செக்யூரிட்டி சிஸ்டம் போல….. அடிச்சு தூக்கிட்டு சீக்கிரம் வேலையை முடிங்க….” என்றான்.

அந்த மற்றவர்க்கும் பயம் பிடித்துக்கொள்ள, அவர்கள் எங்களை நோக்கி துப்பாக்கியை தூக்கினார்கள். நாங்கள் கொஞ்சம் பயந்து ஜீவாவை பார்க்க, அவனோ, அந்த மேனேஜரின் சீட்டில் ஜம்மென்று உட்கார்ந்து எங்களை பார்த்து கிண்டலாக கண்ணடித்தான். இவனுக்கு இதே வேலையாக போய்விட்டது. எங்கே போனாலும் தலைமையின் நாற்காலியில் இடம் பிடித்துக்கொள்வது. ‘அவர்கள் எல்லாம் ஒன்றுமில்லை, புகுந்து விளையாடுங்க’ என்பதுபோல கை காட்டினான். எங்களுக்கு தைரியம் வந்துவிட்டது. பயமில்லாவிட்டால் அனைத்தும் விளையாட்டாய் தெரியும் போல.

முதலாமானவன் தன் துப்பாக்கியை காட்டி மிரட்டினான். பிரகதி துணிந்து அவன் முன்நகர, அவன் சுட்டே விட்டான். பிரகதி தன் முதுகில் இருந்த துணியை சட்டென்று முன்னால் கொண்டுவந்து ஒரு திரை போல மறைக்க, அவன் சுட்ட குண்டு அந்த திரையில் பட்டு தெறித்தது. அத்துடன் பிரகதி ஒரு தாவுதாவி அவன் தாவாங்கட்டையில் படுமாறு ஒரு உதை விட்டாள். ஒரு பத்தடி தூரத்துக்கு எகிறி விழுந்தான் அவன். கீழே விழுந்தவன் எழுந்து உட்கார்ந்து அழுகுரலில், “ டேய் புல்லட் புரூஃப்டா… “ என்றான். இரண்டாம் சிவப்பு மண்டையன் கவனமாக பிரகதியின் கழுத்தை குறிவைத்தான். அங்கே முகமூடிக்கும், உடைக்கும் சிறு இடைவெளி இருந்தது. உடனே நான் என் கைகளை நீட்ட, அது ஒரு நூல் வலையை உருவாக்கி சுவற்றில் ஒட்டியது. அதை பிடித்தபடி நான் ஒரு துள்ளலாய் தாவ, அவன் சற்று தடுமாறி என்னை பார்க்க, ஒரு சுற்று சுற்றி அவன் முதுகில் வந்து உதைத்தேன். தடுமாறி கொஞ்சம் முன்னால் நகர்ந்தவன், திரும்பி என்னை குறி பார்த்தான். அயர்ன் மேன் ஷகீல் பறந்து வந்து அவன் காலில் மோதினான். அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான் அவன். பாதுகாவலரின் பின்புறம் நின்ற அந்த நபர், அவரை தலையில் தாக்கி கீழே விழச்செய்துவிட்டு எங்களை நோக்கி ஓடிவந்தான். அவன் முன் ஆஜானுபாகுவாய் நிற்பதாய் வந்து நின்றான் ஜோசப். அவன் மனதில் நிஜமாகவே வேதாளமாயாத்மா என்று நினைப்பு வந்துவிட்டது. ஆனால் அவன் உயரத்துக்கும் தொந்திக்கும் அது முழுதாக செட்டாகவில்லை.

மூன்றாம் நபர் துப்பாக்கியை ஜோசப்பை நோக்கி நீட்டி சுட, டுமீலென்ற சத்தம் மட்டும் கேட்டது. ஆனால் துப்பாக்கியிலிருந்து ஒரு பலூன் உதயமாகி ஊதப்பட்டு அதை விட்டு விலகி பறக்க ஆரம்பித்தது. நம்பமுடியாமல் அந்த நபர் திரும்ப திரும்ப சுட , ஒவ்வொரு தடவையும் வண்ண வண்ண பலூன்களாக வந்து அந்த அறை முழுதும் பலூன் மயமாக சுற்றி வந்தது. ஜோசப் வெகு ஸ்டைலாக தன் இடுப்பில் இருந்த இரு துப்பாக்கிகளையும் எடுத்தான். அந்த நபரை நோக்கி குறிவைக்க, அவன் நடப்பது எதுவும் புரியாமல் திருதிருவென்று முழித்து தன் கைகளை தூக்கினான். ஆனாலும் ஜோசப் சுடும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. எங்கள் டீமிலேயே அவனுக்குதான் உடையுடன் துப்பாக்கியும் இருந்தது.

ஜோசப் சுட, அவன் துப்பாக்கியில் இருந்து பச்சைநிற திரவம் போல் அந்த மூன்றாம் நபர் மேல் பீய்ச்சி அடித்தது. அது அவன் மேல் பட்டதும் கொழகொழவென்று மாறி ஒரு விதமான பசை போல் அவனை பிடித்துக்கொண்டது. அவன் கைகளையும் முகத்தையும் அந்த பசையால் தேய்த்துவிட்டுக்கொண்டான்.
“ எனக்கு மட்டும் இதுவா … அவனுங்கலாம் நல்லாதானே இருக்கானுங்க…” என்று கதற ஆரம்பித்தான் அவன்.

இந்த விளையாட்டு பிடித்துவிட்டதால், ஜோசப் திரும்பி மற்ற இருவர் மேலும் அந்த துப்பாக்கியை பிரயோகித்தான். இப்போது பச்சை சிவப்பாகவும், நீலமாகவும் மாறிமாறி வந்து அவர்களை மூழ்கடித்தது. மூன்றாம் நபரை பார்த்து…

” இப்ப ஓகே வா..” என்றான் ஜோசப்.

அவனும் முகமெல்லாம் சிரித்தபடி “ஓகே” என்றான். கீழே பசையின் பிடியில் மாடி தத்தளித்த இருவரும் அவனை பார்த்து முறைத்தார்கள்.

இந்த களேபரங்கள் ஏதும் தெரியாமல் உள்ளே இருந்து அந்த ஹெட் வில்லன், மேனேஜரை இழுத்தபடி வெளியே வந்தான். “ என்னாங்கடா… ஒரே சத்தம்… ஒழுங்கா வேலையை முடிக்க தெரியலியா…” என்றபடி வந்தவன், அங்கே அவர்கள் கிடந்த கோலத்தை பார்த்து அசந்துபோய் நின்றான். சற்றும் தாமதியாமல் மேனேஜரை பிடித்துக்கொண்டு அவர் தலையில் துப்பாக்கியை வைத்து,

“யாரா இருந்தாலும், விலகிடுங்க… இல்லினா இந்த மேனேஜர் க்ளோஸ்…” என்றான்.

நான் வலையை பிடித்து தொங்கியபடி எகிற, அவன் சுதாரித்து சுவரோரமாய் ஒதுங்கினான். பிரகதி முன்னால் நகர அவன் மிரட்டியவாறு மேனேஜரின் தலையில் அழுத்தமாக துப்பாக்கியை வைத்தான். ஜோசப் சுடுவானென்று எதிர்பார்த்து திரும்பினால், அவனும் ஷகீலும் பலூன்களை பொறுக்கி, வங்கியில் வந்திருந்த அந்த குழந்தைக்கு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த குழந்தையின் அம்மா பயம் தெளியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“டேய்… ஜோசப்… சுடுடா இவனை…” என்று கத்தினேன் நான்.

“அட போடா… அந்த மூஞ்சூறை நீயே பாத்துக்க…. இந்த குழந்தையோட விளையாடறது செம ஜாலியா இருக்கு “ என்று சொல்லிவிட்டு மீண்டும் விளையாட்டை தொடர ஆரம்பித்தான் அவன். இதை கேட்டதும் அந்த வில்லனுக்கு சரியான கோபமும் ஆங்காரமும் வந்து விட்டது.

” என்னாங்கடா… என்ன பாத்து மூஞ்சூறுன்னு அந்த குள்ளையன் சொல்றான்… இங்க நாலஞ்சு அரை டிக்கெட்டுங்க சேர்ந்து மிரட்டுது… என்னா விளையாடறீங்களா… எனக்கு பணமே வேணாம்… இந்தாளை சுட்டுட்டு… உங்களையும் க்ளோஸ் பண்ணிட்டு போயிட்டே இருக்கேன் பாரு” என்று ஆங்காரமாய் கத்தியபடி, மேனேஜரை சுட எத்தனிக்க,

அவனின் பின்புற சுவர் டமாலென்று பிளந்தது. ஆக்ரோஷமாய் சுவரின் பிளவில் இருந்து வந்தாள் ரம்யா. அவளின் திடீர் பிரவேசம் கண்டு அவன் சற்று நிலைகுலைந்தாலும், சுதாரித்து ரம்யாவை பார்த்து துப்பாக்கியை நீட்டினான்.

ரம்யா அசராமல் தன் கையை நீட்டி ஏதோ எறிய, அது ஒரு வட்ட வடிவ வில்லை போல் இருந்தது. அது சரசரவென்று சுற்றியபடி வந்து அந்த வில்லனின் கையில் மோதி அவனின் துப்பாக்கி எகிறி விழுந்தது. மின்னல் வேகம் அது. கண்சிமிட்டும் நேரத்தில் நடப்பது போல் ரம்யாவின் செயல்பாடு இருந்தது. அதே நேரம் ஜோசப் தன் துப்பாக்கியை தூக்கிப்போட, ரம்யா லாவகமாக அதை கேட்ச் பிடித்து, அந்த நபரை பார்த்து சுட்டாள்.

கீழே வண்ண பசைவெளியில் புரண்டு கொண்டிருந்த ஒருத்தன் இன்னொருவனிடம் சொன்னான், “ வாய் குடுத்து மாட்டிகிட்டான் பாரு…”

ரம்யா சுட்டதும் ஒரு புகை மண்டலமாக வந்தது. அது அந்த நபரை சுற்றி கட்டியணைப்பது போல் சுழன்றது. அவனால் நகர முடியவில்லை. அப்படியே நின்றான். வாய் மட்டும் அலறிக்கொண்டு இருந்தது. “இப்படிதான் நாங்களும் மாட்டிக்கிட்டு சத்தம் போட்டுட்டு இருந்தோம்… “ என்றான் அந்த முதல் நபர்.

“ஏதோ புதுசு புதுசா செக்யூரிட்டி வச்சிருக்கானுங்கன்னு கண்டோமாடா…. எல்லாமே போச்சு… இந்த பசைவேற சாவற வரை நம்மை விடாது போல… “ என்று அரற்றினான் இன்னொருத்தன்.

ஏதோ கட்டி தூக்கி வருவதுபோல் ஒரு சக்தி அவர்களை ஒரே இடத்தில் கொண்டுவந்து போட்டது. வெளியே கதவு முழுதாக உடைக்கப்பட்டு போலீஸ் படை உள்ளே நுழைந்தது. அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களை ஆச்சரியப்பட வைத்தது. கூடவே பிரஸ் ரிப்போட்டர்ஸ் எங்களை சூழ்ந்தார்கள்.

“ நீங்களாம் யாரு?....”

“எப்படி கொள்ளை நடக்கப்போவுதுன்னு தெரிஞ்சது…?”

“இந்த கருவிகள் எல்லாம் எப்படி செஞ்சீங்க….?”

“உங்க உயரமே இவ்வளவுதானா….?”

“ஏன் சூப்பர் ஹீரோ போல முகமூடி போட்ருக்கீங்க….?”

கேள்வி கணைகள் தொடர, நாங்கள் அனைவரும் ஒன்றாக குழுமினோம். நாங்கள் பேச வாய் திறக்க, எங்களை மீறி அந்த பதில்கள் ஜீவாவின் குரலில் எங்கள் வாய் மூலம் பேச ஆரம்பித்தது.

“ நண்பர்களே… நாங்கள் இந்த பிரபஞ்ச காவலர்கள்… இப்போதைக்கு ட்ரையல் பார்ப்பதற்காக இந்த கேஸை எடுத்துக்கொண்டோம். எங்கெங்கே அநியாயம் நடக்கிறதோ அங்கெல்லாம் எங்கள் டீம் களமிறங்கும். உங்கள் யாருக்காவது கெடுதல் நடக்கும் என்றால் வாய்விட்டு நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து சொல்லுங்கள். அதை நாங்கள் வந்து சரிசெய்து விடுவோம். மற்றபடி சில ரகசியங்களை சொல்ல இப்போது எங்களுக்கு அனுமதி இல்லை. வணக்கம்.”

என்று சொல்லி முடித்தவுடன் எங்கள் ஜிசி அருகில் வந்து நின்றது. அதன் மீது நாங்கள் அமர்ந்தவுடன் அழகாக வட்டமிட்டு சர்ரென்று பறந்தது அது. அனைவரும் ஆச்சரியமாய் கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நாங்கள் மறுபடி ஏதோ கரிய சுருளில் மாட்டியது போல் இருந்தது. கண் திறக்க நான் வீட்டில் டிவி முன் இருந்தேன்.

“இவ்ளோ நேரமாடா தூங்குவ… “ என்றார் அப்பா.

“வந்து …. நான் நல்லா தூங்கிட்டேனா… கனவா….” என்று உளறினேன் நான்.

“யே… இங்க வந்து பாரேன் … நியூஸ்ல வர அந்த உருவம் இவன் அளவுதான் இருக்கு… என்னா போடு போட்ருக்காங்கன்னு….”என்று கத்தினார் அப்பா.

நானும் நியூஸை பார்க்க, அதில் பாங்க் கொள்ளை பற்றி சொல்லிகொண்டிருந்தார்கள். அதில் நாங்கள் பேசியது ஒளிபரப்பாகியது. நாங்கள் ஜிசியில் பறந்து போகும் வரை காட்டினார்கள். அந்த குழந்தையுடன் இருந்த அம்மா , ஏதோ தெய்வம் போல ஐந்து பேர் வந்து அதிசயம் செய்ததாக சொன்னார்கள். அந்த திருடர்களை காட்ட, அவர்கள் ‘அய்யொ அடிக்காதே… இனி திருட….அடிக்காதே… மாட்டோம்…’என்று கத்திக்கொண்டிருந்தார்கள்.

அவர்களை பின்ணணியில் ஜீவா அவர்கள் தலையில் விடாமல் அடித்துக்கொண்டிருந்தான்.

“யாரும் அடிக்காமலே கத்தறானுங்க பாருங்க “ என்றார் அம்மா. ஜீவாவின் உருவம் எனக்கு மட்டுதான் தெரிகிறது என்பது புரிந்தது. அந்த பெரியவரிடம் மைக்கை நீட்டினார்கள். அவருக்கு கண் சரியாக தெரியாது போல. காதும் சுமாராக தான் கேட்கும் போல் தெரிகிறது. அவரிடம் சத்தமாக பேசினார்கள்.

“ அய்யா … என்ன … என்…ன நடந்ததுன்னு…. நீங்க… சொல்லுங்க….. கேட்குது… சொல்லுங்க….”

“ வந்து… பாங்க் சர்வீஸே சரியில்லை… நான் வந்து எவ்ளோ நேரமாகுது. இங்க பாருங்க… எல்லாரும் பலூன் விட்டு விளையாடிட்டு இருக்காங்க… ஏதோ தண்ணி துப்பாக்கி வச்சு விளையாடறாங்க… என்னாவோ பாங்க்… போங்க… கேட்க நாதியில்ல…” என்றார் அவர்.

மாயாஜாலம் தொடரும்….
 

appusiva

New member
Vannangal Writer
Messages
8
Reaction score
1
Points
3
BK32 மாயாஜாலக்கதை
அத்தியாயம் 7

“ நீ பாத்தது நாம போனது. அங்க பிபிஸில காட்டினாங்க பாரு. லண்டன்ல இதுபோலவே ஒரு சம்பவம். அதில் ஒரு குழந்தைங்க வேன் ஆக்ஸிடெண்ட் ஆக இருந்தது. நாமதான் போய் காப்பாத்திருக்கோம். அந்த டிரைவர் செல்ஃபோன் பேசிட்டே வண்டி ஓட்டிட்டிருந்திருக்கான்.” என்றாள் ரம்யா.

“ ஒண்ணு ரெண்டில்ல…. உலகம் பூரா ஒரே நேரத்தில பல இடங்களில் இது போல கெட்ட சம்பவங்களை ஐவர் குழு வந்து காப்பாத்திருக்கு. ஒரே ட்ரெண்டிங் இதான் இன்னிக்கு.” என்றான் ஷகீல்.

“ அப்ப, ஜீவா நம்மை போல உலகம் பூரா குழுக்களை ஏற்படுத்திருக்கான்னு சொல்றியா…?” என்றேன் நான்.

நாங்கள் பள்ளி ஆரம்பிக்கும் முன் கூடியிருந்தோம். இப்போதெல்லாம் ஜீவாவின் வருகை பற்றி கவலை வருவதில்லை. அவன் வந்தால் நடக்கும் சம்பவங்கள் எங்கள் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லையாதலால், கால குழப்பங்கள் எங்களை விட்டு போயிருந்தது.

“எல்லாமே நீங்கதான் “ என்ற குரல் கேட்டு திரும்பினோம். ஜீவா பனிபோல் தோன்றி எங்கள் முன் முழு உருவமாய் மாறினான்.

“வா.. ஜீவா…. அதெப்படி, எங்களுக்கே தெரியாமல் எல்லா இடங்களிலும் நாங்க இருந்தோம். வேற குரூப்தானே. உண்மையை சொல்லு. நாங்க ஏதும் கோவிச்சுக்க மாட்டோம்.” என்றேன் நான்.

“ நிஜமாவே நீங்கதான்பா… ஒரு நல்லவர் இருக்கார். அவர் சில தத்துவங்களை சொல்றார்னு வச்சுக்குவோம். யாராவது நல்லவர் பெயர் ரெண்டு சொல்லுங்க…? “ என்று கேட்டான் ஜீவா.

“ காந்தி…. புத்தர்… ஏசு… அல்லா….சிவன்… பிள்ளையார்… இட்லிகடை பாட்டி….மேத்ஸ் சார்…எங்க அம்மா” என்று நாங்கள் சொன்னோம்.

“ அடேயப்பா…. குழந்தையில் எல்லாரும் நல்லவரே… இப்ப உங்க வயசில் மேல சொன்னவங்கலாம் நல்லவங்கனு படுது. இன்னும் வயசாக, இந்த லிஸ்ட் இன்னும் சுருங்கி போகுது… நல்லவர் லிஸ்ட் குறையுது பாரேன்… சரி அது அப்புறம் பாத்துக்கலாம். இந்த நபர்கள் எல்லாம் உலகில் எல்லோரும் நல்லா இருக்கணும்னு சொல்றாங்க இல்லையா…”

“ஆமாம்…”

“ ஆனா இவங்களை நீங்க பாத்தது கூட கிடையாது. உண்மையோ, கற்பனையோ… நல்ல விஷயங்களை இவர்கள் மற்றவர் எண்ணம் மூலமா உலகத்துக்கு பரப்பறாங்க. அது போலதான் நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைச்சீங்க.. உங்க எண்ணங்களை உருவமாக்கி உலகம் பூரா உலவ விட்டாச்சு.. அவ்ளோதான்..” என்றான் ஜீவா.

“அப்போ லண்டன், நியூயார்க், ஜப்பான் எல்லாம் நாங்க போய் வந்தாச்சா….” என்று ஆச்சரியமாக கேட்டால் ரம்யா.

“ஆச்சு…”

“ஆனா அது எதையும் நாங்க அனுபவப்படவேயில்லையே…” என்றேன் ஆதங்கமாய் நான்.

“எல்லாத்தையும் அனுபவப்படுறது பெரிய விஷயமில்ல. சொல்லப்போனா தேவையேயில்ல. சுகமோ துக்கமோ எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே அனுபவிக்கலாம். உன் காமிக்ஸ் ஆசை என்னாச்சு…”

“அது… கொஞ்சம் குறஞ்சுபோச்சு… புதுசு வந்தாதான்…” நான்.

“ஜோ… உன் லட்டு ஆசை….?”

“இப்போதைக்கு இல்லை….” ஜோசப்.

“அவ்ளோதான் விஷயம். தெரியறவரைதான் ஆர்வமெல்லாம். ஆனா இப்படிதான் இருக்கும்னு நம்மால உணர முடிஞ்சா… புத்தர் சொன்னது போல…..ஓகே… அவ்ளோதான் விடு..ன்னு ஆகிடும். நிலாவுக்கு போகணும்னு ஆசைபடாதவங்க கிடையாது. வெள்ளையா, பால்போல… ஆனா போய் வந்தா தெரியும். ஒரே கல்லும் மண்ணும்…மலையும் பள்ளமும்… வேற ஒண்ணுமில்ல”

ஏதோ புரிந்தார் போலிருந்தது. அது பற்றி நாங்கள் அதிகம் பேசவில்லை. ஆனால் நாங்கள் சில சமயம் மாயமாய் மறைந்திருப்பதும், ஜீவா எப்போதும் மாயமாய் இருப்பதும் எங்களுக்கு தீராத ஆச்சரியத்தை கொடுத்தது. அதை கேட்க வேண்டும் என்று நான் நினைக்க, என்னை பார்த்தவுடன் அதை கண்டுபிடித்த ஜீவா அவனாகவே சொல்ல ஆரம்பித்தான்.

“ அது வேறொன்ணுமில்ல ரகு, ஆப்டிகல் இல்யூஷன்னு ஒரு டெக்னிக்தான் அது. அதாவது எனக்கு பின்னால் இருக்கிற பிம்பம்களை படம் பிடிச்சு என்மேல் முன்புறமாய் பிரதிபலிக்கச் செய்யறதுன்னு வச்சுக்கோ. இப்ப நான் இருப்பேன். ஆனா பார்ப்பவர் கண்ணுக்கு நான் தெரிய மாட்டேன். இது ஒரு எளிமையான விஷயம். ஆனா இதை இயல்பா செய்ய சில விஷயங்கள் கத்துக்கணும். அதில்லாம நம்ம உடம்பு , அதிலுள்ள மூலக்கூறுகளை ஒரு நீரோட்டம் போல எங்கும் நுழைய செய்யவைக்க முடியும். இது நாம் காணும் திடப்பொருட்களுக்கு பொருந்தும்னு ஆராய்ச்சி போய்ட்டிருக்கு. அதே சமயம், நம் எண்ணங்களுக்கும் இது போல திட உருவம் குடுக்க முடியும், உன் எண்ணங்களை அந்தமாதிரி திட உருவாய் மாற்றி அதன் முழு உருவத்தை என் மூளை பகுத்து, இந்த மாதிரிதான் நீ நினைக்கறன்னு எனக்கு சொல்லிடுது..” என்றான் ஜீவா.

அவன் சொன்ன விஷயங்கள் நம்பமுடியாததாக இருந்தாலும் அவன் சொல்லும் முறையில் ஆர்வமாய் அழகாய் சொல்லுவது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

“அடுத்து நாங்க என்ன செய்ய…?” என்றான் ஷகீல். நேற்றைய சாகசம் அவனுக்கு மிகவும் பிடித்திருப்பதை அவனின் ஆர்வம் சொல்லியது.

“சொல்றேன்… ஒரு சின்ன விஷயம்தான்… வடக்கே ஒரு பெரியவரை காப்பாற்றணும், அதுக்கு அப்புறம் நம்ம மெகா ப்ரொஜக்ட்..” என்றான் ஜீவா.

“ அந்த பெரியவருக்கு என்ன பிரச்சினை? “ என்று கேட்டான் ஜோசப்.

“அவர் ஒரு முஸ்லிம் பெரியவர்… உணவுக்காக மாடுகளை வளர்த்து வித்திட்டிருக்கார்… அதனால அவரை கொல்லப்போறாங்க…” என்றான் ஜீவா.

“அய்ய… இதுக்கெல்லாமா கொல்லுவாங்க…. “ என்றான் ஜோசப். அவன் வீட்டில் மாட்டுக்கறி சாப்பிடுவதை அவ்வளவு ரசித்து சொல்லுவான். எனக்கு பழக்கம் இல்லையென்றாலும் அவனின் பேச்சை கேட்க, ஒரு நாள் போய் சாப்பிடவேண்டும் என்று தோன்றும்.

“ பின்ன பசுவை கொல்றது பாவமில்லையா… அவங்க செய்யறது சரிதானே… அதில்லாம, அது பால் எல்லாம் குடுக்குது…” என்றாள் பிரகதி.

“ அதுவா குடுக்குது…. நாமதான் கன்னுக்குட்டிக்கு குடுக்கவேண்டிய பாலை கறந்துக்கறோம்..” என்றாள் ரம்யா.

“ உங்க வீட்ல என்ன சாப்பிடுவீங்க…?” என்றான் ஜீவா.

“ம்…ம்… மீன் சாப்பிடுவோம்… சில நேரம் மட்டன்… ஆனா சிக்கன் சாப்பிட மாட்டோம்… உவ்வே… அது புழு பூச்சியெல்லாம் சாப்பிடும்….” என்றாள் பிரகதி.

“அட… மீன்கூட தான் சின்ன சின்ன பூச்சி, புழுக்களை சாப்பிடும். அது தப்பில்லையா…” என்றான் ஷகீல்.

“நல்லா புரிஞ்சுக்கோங்க… மனிதனின் சாப்பாடு என்பது இயற்கை. ஆரம்ப காலத்தில் எல்லா மனிதருமே விலங்குகளை வேட்டையாடி… பச்சையா, ஆமா பச்சையா சாப்பிட்ட ஒரு விலங்கினம்தான். நாளாக அவன் அதை சமைச்சு சாப்பிட ஆரம்பித்தான். மனித இனம் வெவ்வேறு இடங்களுக்கு பரவ ஆரம்பிக்க, போற இடத்தில் கிடைப்பது அவனின் உணவாச்சு. பயிர் பண்ண ஆரம்பிச்சதும் தாவர உணவையும் எடுத்துக்கிட்டான். வேட்டையாட முடியாதவர்கள் அமைதியான விலங்குகளை பழக்கி அதன் பாலை உணவா எடுத்துகிட்டாங்க. அங்கே மாட்டை கொன்றால் பால் தட்டுப்பாடு ஆகிடும்னு அதை கொல்வது பாவம்னு வச்சுக்கிட்டாங்க. இன்னும் பன்றி, சில நாடுகளில் பாம்பு, நாய் கூட உணவுக்காக எடுத்துக்கிறாங்க. அவரவர் தேவைதான் உணவை தீர்மானிக்கணும். சில உயிர்கள் அழிவில் இருப்பதால் அதை காப்பாற்ற உங்க ஆளுங்களே வேட்டையாட தடை சொல்லிருப்பாங்க. அதை விட்டு மற்றது எதுவும் தவறில்லை. நமக்கு பிடிக்காது என்ற ஒரே காரணத்தால் அடுத்தவர் உணவை குறை சொல்றதோ, அதை சாப்பிடும் உரிமையை தட்டிப்பறிக்கறதோ சரியா சொல்லுங்க…? என்றான் ஜீவா.

“ ஆனா உயிருள்ள ஒரு ஜீவனை கொன்று சாப்பிடறது தப்பாதான் எனக்கு படுது “ என்றால் ரம்யா. அவள் முழு சைவம்.

“அப்ப நீ உயிரில்லாததுதான் சாப்பிடறியா…. நீ சாப்பிடற காய் கனி, பருப்பு எதுக்கும் உயிர் இல்லையா…?”

“வந்து அது…அதுக்கு வலிக்காது…”

“அப்படி நீ நினைக்கற… உண்மையில் அனைத்துக்கும் அனைத்து உணர்வுகளும் உண்டு. உயிரில்லாத எந்த பொருளையும் நீங்க சாப்பிட முடியாது. நீங்க செய்யறது எல்லாம் நம்மை போல நகரும் உயிர்களுக்கு மட்டும் உயிருண்டு… மத்ததுக்கு உயிர் இல்லை வலிக்காதுன்னு நினைக்கறதுதான். ஒன்று இன்னொன்றை சார்ந்து… சாப்பிட்டே ஆக வேண்டும். இது மாறிப்போனா… இயற்கை சமனிலையே மாறிப்போகும். நினைச்சுபாருங்க. உலகம் முழுசும், மாடு…ஆடு…பன்றிகளை கொல்லாம விட்டா என்னாகும்னு… “

“ஆமால்ல… எங்க வீட்ல கூட பன்றிகறி சாப்பிடறது பாவம்னு சொல்லிருக்காங்க. நான் சாப்பிடலைன்ன என்ன… அது சாப்பிடறவங்களை இனி தப்பா நினைக்க மாட்டேன்..” என்றான் ஷகீல்.

அனைவரும் புரிந்த திருப்தியில் தலையாட்ட, எங்கள் அருகில் ஜிசி வந்து நின்றது. இப்போது அது ஆறு சீட்களுடன் கொஞ்சம் பெரிதாக இருந்தது. நாங்கள் முகமூடியை மாட்டிக்கொண்டு கிளம்ப,
நகரத்தில் இருந்தவர்கள்

” இதோ… பூமியின் காவலர்கள் கிளம்பிட்டாங்க…”…” நான் அவர்களை பார்த்துட்டேன்”….”அதிசயம் ஏதோ அநியாயத்தை தடுக்க வந்துட்டாங்க…” என்றெல்லாம் குரல் எழுப்பினர்.
“இது கொஞ்சம் ஓவராயில்ல… நாம அப்படி எதுவும் கஷ்டப்பட்டு செய்யலை… ஆனா இவ்வளவு பேர் எங்களுக்கு …” என்றாள் பிரகதி.

“ தீர்வு எப்பவும் எளிதுதான் பிரகதி… ஆனா அதை கண்டறியதான் மக்கள் இவ்வளவு கஷ்டப்படறாங்க… இல்லினா அதை தேட விரும்பறதில்ல…. கடவுள்கிட்ட ஒப்படைச்சிட்டேன்னு சொல்லிட்டு… தீர்வை சந்திக்க பயப்பறாங்க” என்றான் ஜீவா.

ஜிசி இன்று மிக உயரமாக எழுந்தது. மலைத்தொடர்களின் வரிசையை ஆவலுடன் பாத்துக்கொண்டு சென்றோம். ஒருசில இடங்களில் மிகத்தாழ பறக்க, அங்கு வாழும் மிருகங்களை அருகில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறு பூச்சிகள், புற்கள், அதை தின்னும் மான் , ஆடுகள், காட்டெருமை… அதை வேட்டையாடும் புலி சிறுத்தை… அதையும் கபளீகரம் செய்யும் முதலை போன்று ஒரு சங்கிலியை பார்த்தோம். இது உலக இயற்கை, இவற்றின் சிந்தனை உயிர்வாழ்… அதற்கு சாப்பிடு என்பதாய் இருந்தது. மனிதன் மட்டும்தான் இவற்றை மீறி சாப்பிடவே உயிர் வாழகிறானோ என்று தோன்றியது. கேட்டால் அதுவும் இயற்கைதான் என்பான் ஜீவா.

அதன்பின் நகரங்கள், ஆறுகள், பாலைவனங்கள் என்று நாங்கள் பிரயாணித்துக் கொண்டிருந்தோம். ஆனால் பயண களைப்பே எங்களுக்குத் தோன்றவில்லை. காலத்தின் குமிழியில் நாங்கள் பயணம் செய்கிறோம் என்றும், அதனால் காலமும் இடமும் மிக குறுகி நாங்கள் பயணிப்பது குறைவாகவும், ஆனால் உணர்வது அதிகமாகவும் இருக்கும் என்று ஒருதடவை ஜீவா சொன்னது நினைவில் வந்தது. நிஜம்தான். என் கடிகாரத்தின்படி, கிளம்பி வெறும் இரண்டு நிமிடங்கள் கூட ஆகவில்லை. ஆனால் பல்லாயிரம் மைல் பயணித்த அனுபவம் கிடைத்தது.

சடாரென்று கீழிறங்கியது விமானம். அது ஒரு குறுகிய தெரு. “உங்கள் முகமூடியை கழட்டுங்கள்” என்றான் ஜீவா. கழட்ட, நாங்களும் மாய உருவத்தை அடைந்தோம். ஜிசியும் எங்களை இறக்கிவிட்டு ஒரு சுற்றுசுற்றி வானில் ஏறி மறைந்தது. நாங்கள் அந்த தெருவில் நுழைந்தோம். அங்கே தலைபாகை கட்டியபடி ஒரு கும்பல் இருந்தது. அவர்களில் சிலர் தாடி மீசையுமாக இருந்தார்கள். பெரும்பாலோர் கைகளில் ஈட்டி, கோடாரி போன்ற ஆயுதங்கள் இருந்தது. ஒரு சில பெரிய மனிதர்கள் போல கைகளில் வாள் வைத்திருந்தார்கள். அவர்களின் சாப்பாட்டு நேரம் போல. நாங்கள் அவர்களின் அருகில் அமர்ந்தோம். அவர்கள் பேசியது எங்களுக்கு புரியவில்லை. ஆனால் அவர்கள் பேசப்பேச அதன் மொழிபெயர்ப்பு போல எங்களுக்கு தமிழில் அழகாக கேட்டது.

“இன்னிக்கு அந்த கிழவன்தானா… “

“ஆமா… அந்த பாய் கிழவன், எவ்வளவு சொல்லியும் மாடு வளர்த்து கறிக்கு விற்பதை நிறுத்தலை. இன்னிக்கு அவனை தண்டிச்சு… உலகத்துக்கு கோமாதான்னா என்னன்னு காட்டப்போறோம்”

“ஆனா அவன் இப்ப மாடு வெட்டறதில்லையே… ஆடுதான் வெட்டறான். வளர்த்த மாட்டை இந்த வாரம் வித்துட்டு காசாக்கிடறேன்னு சொன்னதா……”

“வித்தாலும் அது இன்னொருத்தர் கறிக்குதானே வாங்கறார். இப்ப இல்லன்னா என்ன… இதுவரை அவர் செய்தது தவறுன்னு நினைக்கட்டுமே…”

“தலைவரே… நீங்களே உங்க மாடு பால் கறக்கறது நின்னுடுச்சுன்னு, கோயில்ல கொண்டுபோய் விட்டுட்டீங்க… அது சாப்ட ஏதுமில்லாம ஒட்டிபோய் கிடக்கு…”

“யார்ரா இவன்… நான் கோயில்ல போய்தானே விட்டேன்… கொல்லலையே… அதுவும் இதுவும் ஒண்ணா….”

அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க, அவர்கள் முன் தட்டு கொண்டு வந்துவைக்கப்பட்டது. அதில் சுட்ட ரொட்டி வைத்தார்கள். அது ஒரு முறம் போல் அவ்வளவு பெரிதாக இருந்தது. அதன் பின் அதன் அருகில் குழம்பு கிண்ணம் போல் ஒன்று வைத்தார்கள். ஒரு சிலர் ஆட்டுகறி… சிலருக்கு சிக்கன் வறுவல். இன்னும் சிலருக்கு பொறித்த முழு கோழி. அதுதவிர காடை, கௌதாரி நண்டு மீன்… சரியான சாப்பாடுதான் போல.

அதில் ஒருவன் ஆசையாக அந்த பொறித்த கோழியை எடுத்து கடிக்கப்போக, ஜீவா வேலையை காட்டினான். அந்த கோழி உயிருள்ளதாய் மாறியது.

“கொக்கரக்கோ….. அடேய்… நான் முருகப்பெருமானின் கொடியில் இருக்கும் புனிதமான பறவைடா… என்னை தின்னு பாவத்தை சேக்கறியே …கொக்…கொ…க்…..” என்று கத்த, அவன் அலறியடித்தபடி அதை கீழே போட்டான்.

“என்னடா… லூசு… முழு கோழிய கீழ போட்டுட்ட… என்று ஒருவன் கேட்க, போட்டவன் கீழே பார்த்தான். அது பொறித்த கோழியாக இருந்தது. இன்னொருவன் ஆட்டுக்கறியை எடுத்து வாயில் போட, “மே…….மே…. ஒரு தீவுகூட்டத்துக்கே நான் சாமிடா….. என்னையா சாப்பிடற….இரு உன் வயித்தைக்கிழிக்கறேன்..” என்று கத்தியது. இன்னும் மீன், நண்டு அனைத்தும் அவரவர் எடுக்கும்போது கத்த ஆரம்பிக்க, அங்கே ஒரே களேபரம் ஆனது. குழம்பு கொண்டு வந்த பெண்மணி அவர்களின் ஆட்டத்தை பார்த்து அரண்டுபோய் , “ தாயே… காளியாத்தா… இது என்ன விளையாட்டு “ என்று வேண்ட ஆரம்பித்தாள்.

ஜீவா பெண் குரலில் பேச ஆரம்பித்தான். கணீரென்று எதிரொலிக்கும் வகையில் அவன் குரல் இருந்தது.

“ அம்மணி, மற்றும் மனிதர்களே… நீங்கள் சாப்பிடும் பொருளில் உங்கள் பெயர் உள்ளது. அதை யாராவது தட்டிப்பறித்தால் பெரும்பாவம். இதை சாப்பிடு என்று உங்கள் தட்டில் வேண்டாததை வைப்பதை விட, உனக்கு பிடித்ததை சாப்பிடு…எனக்கு பிடித்ததை நான் சாப்பிடுகிறேன் என்று சொன்னால்தான், கடவுளான எனக்கு நிம்மதி. உலகையே படைத்த எனக்கு அனைத்து மனிதரும் என்ன சாப்பிட வேண்டும் என்று சொல்ல தெரியாதா… நான்தான் அனைத்தும் அளித்தேன். அதை தடுக்க நீங்கள் யார். நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு பொருளும் யாராவது ஒருவருக்கு புனிதமானதாக இருந்தால் மனிதன் எதைதான் சாப்பிடுவான். புரிந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால், முழு பஞ்சம் வந்து மனிதனை மனிதனே சாப்பிடும் நிலைதான் ஏற்படும்.” என்று முழங்க அவர்கள் அப்படியே மண்டியிட்டுஅமர்ந்து வணங்கினார்கள்.

ஜோசப்க்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஜீவாவின் பெண்குரல் அவனுக்கு சிரிப்பு மூட்டியது. அதில்லாமல் அவர்கள் சாப்பிடாமல் போனால் ஒரு வெட்டு வெட்டலாம் என்றும் அவன் காத்திருந்தான்.

அவர்களின் தலைவன் அவசரமாக எழுந்தான். “ தாயே எங்களை மன்னிச்சிடு.. தெரியாம …யோசிக்காம தப்பு பண்ணிட்டோம். அங்க அந்த பாயை கொல்ல ஆளுங்க போயிட்டாங்க… இதோ நாங்க அவரை காப்பாத்த போறோம்… உதவு காளீ…” என்று கத்தியவாறு வெளியே ஓடினான்.

அவனை தொடர்ந்து அந்த கும்பலும் வெளியேறி ஓடியது. நாங்கள் திரும்பி பார்க்க அந்த பெண்மணி ஏதோ பார்த்து மயங்கி விழுந்தார். என்னவென்று பார்க்க ஜோசப் அமர்ந்து அந்த விருந்தை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டிருந்தான்.

கறியும், ரொட்டியும் ஆளில்லாமல் திடீர் திடீரென்று மாயமாவதை பார்த்தால் மயங்கி விழ மாட்டார்களா என்ன. நாங்கள் அவனை கிளப்பி முகமூடி மாட்ட, ஜிசி வந்து அருகில் நின்றது. அதில் ஏறி கிளம்பினோம். அது அந்த தெருவைத்தாண்டி , ஊரைத்தாண்டி சென்றது. தூரத்தில் மண் ரோட்டில் அந்த முதியவர் தெரிந்தார்.

அவர் கிட்டத்தட்ட அறுபது வயதை தாண்டியிருப்பார். அவர் உடன் வயதான மாடு ஒன்று இருந்தது. அவரின் முன் கொஞ்ச தூரத்தில் இன்னொரு தலைப்பாகை கோஷ்டி இருந்தது. அது கையில் கத்தி, கோடாரி எல்லாம் வைத்துக்கொண்டு காத்திருக்க, அந்த முதியவர் செய்வதறியாது திகைத்து நின்றுகொண்டிருந்தார்.

“ யோவ் பாய்… இன்னிக்கு உனக்கு எங்க கைலதான் சாவு… எங்க லட்சுமியை கொல்ல கூட்டிப்போற இல்ல… முடிஞ்சது உன் கதை…” என்று அந்த தலைமை தலைப்பாகை கத்த,

“ தம்பிங்களா… சத்தியமா இதை விக்கதான் போறேன். இது ஒண்ணுதான் என் சொத்து. இது வித்துதான் என் வீட்டுக்கு இந்த மாச செலவுக்கும், கடனுக்கும் சரி செய்யணும். தயவு செய்து உதவுங்கப்பா… உங்களையெல்லாம் சின்ன வயசில இருந்து பாத்துட்டு வரேன். உங்க அப்பா அம்மா கூட எல்லாம் தாயா புள்ளையா பழகிருக்கோம்…” என்று கெஞ்சிக்கொண்டிருந்தார் அவர்.

மிகவும் பாவமாக இருந்தது. ஆனால் கும்பல் மனோபாவம் சேர்ந்துகொண்ட அந்த கும்பலிடம் அவரின் கெஞ்சலின் வீரியம் எடுபடவேயில்லை. அவன் அவரை வெட்ட பாய்ந்து வந்தான். அவன் சரியாக கோடாரியை தூக்கவும், எங்கள் ஜிசி அவனுக்கு நேராக நிற்கவும் சரியாக இருந்தது.

நான் என் கையை நீட்ட, ஸ்பைடர் மேன் வலை நீண்டு அந்த நபரை அப்படியே தூக்கியது. தூக்கிய கோடாரியுடன் அவன் திருதிருவென்று விழிக்க, நான் என் கையை சுழட்டினேன். அந்த நபர் அப்படியே பறந்து ஒரு மரத்தின் கிளையில் மாட்டிக்கொண்டான்.

“டேய் …கிழவன் நம்மை அடிக்க ஆள் வச்சிருக்காண்டா.. வெட்டுங்கடா அவனை” என்று கத்தியவாறு அந்த கும்பல் பாய்ந்தது. டிவி நியூஸ் எதுவும் பார்க்க மாட்டார்கள் போல. பார்த்திருந்தால் கேலக்ஸி கார்டு வின் அட்டகாசம் புரிந்திருக்கும். அதனால் என்ன, செய்முறை வகுப்பே எடுத்துவிடலாம் என்று நாங்கள் ஜிசி யில் இருந்து குதித்தோம். ஜோசப் அந்த கும்பலின் முன்னே சென்று தன் துப்பாக்கியால் சுட, அது புழுதிப்புயலை வாரி அவர்கள் மேல் இறைத்தது.

ஷகீல் பறந்து பறந்து அவர்கள் மேல் மோதி சாய்த்தான். எப்படியும் ஒரு இருபது பேராவது இருக்கும். ரம்யா தன் கையில் இருந்து சிறுசிறு வில்லைகளாக காற்றில் வீசி வூடுகட்டினாள். பிரகதியின் வேகமான தாக்குதல் ஒரு மாயாஜால வித்தை போல இருந்தது. ஒரு போராட்ட களமாகவே அந்த இடம் காட்சியளிக்க, புழுதி அடங்கி பார்த்தால், அவர்கள் அனைவரும் மூலைகொருவராய் சிதறிக்கிடந்தார்கள்.

தூரத்தே அந்த முதல் கோஷ்டி ஓடிவர அந்த முதியவர் பயந்து, மயங்கி விழுந்தார். வந்தவர்களில் அந்த தலைவன் அவரை தூக்கி தன் மடிமேல் வைத்து குடிக்க தண்ணீர் தந்தார். எழுந்த முதியவர் விழிக்க,

” மன்னிச்சுடுங்க தாத்தா… ஏதோ கேட்பார் பேச்சு கேட்டுட்டோம். இனிமே நீங்க கறி வெட்ட, விற்க நாங்க எப்பயும் தடையா இருக்க மாட்டோம்..” என்று சொன்னவன், தன் பக்கத்தில் இருந்தவனை கூப்பிட்டு, அந்த முதியவரையும், மாட்டையும் பத்திரமாக வீடு வரை சென்று விட்டு வரச்சொன்னார்.

“தலைவரே…இதோ இவங்கதான் நம்ம பசங்ககிட்ட இருந்து , பாயை காப்பாத்தினவங்க..” என்று அந்த கோழி நபர் தலைவனிடம் சொல்ல, “அட… இது ஜிசி டீம்தானே… இவங்களை பத்தி நெறய படிச்சிருக்கேன்…. ஆனா இவங்க காளியோட ஆளுங்கனு இப்பதான் தெரியுது…” என்று சொல்லியபடி வணங்கினார்.

“அய்யா… தலைவரே…நாங்க காளி, அல்லா, ஏசு எல்லாரும் சேர்ந்து அனுப்பின நண்பர்கள்தான். அவங்கலாம் அப்பப்ப வெவ்வெறு வழியில் வந்து உங்களுக்கு நல்லது சொன்ன ஒரே சாமிதான். அதனால பேதம் பார்க்காம நல்லபடியா இருங்க. இவ்வளவு சக்தியோட இருக்கற நம்மளை காப்பாத்தறதா இவனுங்க அடிச்சிக்கறாங்களேன்னு சாமிங்க எல்லாம் புலம்புதுங்க” என்று அவர்கள் மொழியில் ஷகீல் குரலில் ஜீவா பேசினான்.

நாங்கள் கிளம்ப, “ நாளை இதுவும் நியூஸ்ல வந்து இன்னும் நாம பெரிய ஆளாயிடுவோம்… இல்ல…” என்றான் ஜோசப்.

மாயாஜாலம் தொடரும்….


 

appusiva

New member
Vannangal Writer
Messages
8
Reaction score
1
Points
3
BK32 மாயாஜாலக்கதை
அத்தியாயம் 8

“திடீர்னு மனிதர்களெல்லாம் சின்னதா மாறிட்டா என்ன நடக்கும்?” என்றான் ஜீவா.
“ஒரு பாதுஷா வச்சு ஒரு மாசம் சாப்பிடலாம் “ என்றான் ஜோசப். அவனை முறைத்த ஜீவா, “ ஒருதடவை சரி… அதுக்கப்புறம் புதுசா செய்யறது சின்னதா ஒரு கை அளவுதானே இருக்கும்” என்றான்.
“புரியலையே “ என்றேன் நான்.
கடந்த வாரம் அந்த முதியவரை காப்பாற்றியபின் இதுபோல பல இடங்களுக்கு எங்கள் டீம் போய் வந்தது. நாங்கள் ஓர் இடத்திற்கு சென்று வந்தால் பலநூறு இடங்களில் ஒரே நேரத்தில் நாங்கள் சாகசம் செய்ததாக எங்களின் புகழ் பரவியிருந்தது. உலகம் முழுதும். அதெல்லாம் எங்களின் பிரதிகள்தான் என்றான் ஜீவா. ஜிசி பனியன்கள், டிவி நிகழ்ச்சிகள் விவாதங்கள் என்று பட்டையை கிளப்பிக்கொண்டிருக்க, நாங்கள் எங்கள் முகமூடியை கழற்றி உண்மை முகத்தை காட்டும் ஆர்வமே வரவில்லை. புகழ் வெளிச்சம் செயல்பாடுகளுக்கு ஊறு என்பான் ஜீவா.
“அது ஒரு ஜாலி அனுபவம்தானே “ என்றால் ரம்யா.
“முதலில் ஜாலிதான். ஆனால் ஒரு ஈ, எறும்பு கூட உங்களை தாக்கும். மனிதர் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் மறுபடி சின்னதாக செய்யவேண்டும். எங்காவது காகம் பார்த்தால் உங்களை கொத்தி தூக்கிப்போய்விடும். மத்ததெல்லாம் யோசிங்க…” என்று ஜீவா சொல்ல, கொஞ்சம் பயமாகதான் இருந்தது.
“ஏன் ஜீவா … எங்களை அதுபோல மாத்திவிடு… எப்படி இருக்கும்ன்னு பார்க்கிறோம்.” என்றான் ஷகீல்.
“அந்த விபரீதம் நடக்காம இருக்க, கண்டிப்பா நீங்க மாறிதான் ஆகணும்… மாத்திடலாம்” என்று ஜீவா பூடகமாக சொல்ல,
“புரியறமாதிரி சொல்லுபா….” என்றோம் நாங்கள்.
“நான் உங்களை சந்திச்சதுக்கு முக்கியமான விஷயம் இது. ஒரு ஆள் இருக்கான். அவன் தன்னை விஞ்ஞானின்னு சொல்லிக்கறான். அதை சொல்வதற்கு அருகதை இல்லை. உண்மையான விஞ்ஞானின்னா நல்லதுக்கு யோசிக்கணும். அவன் எண்ணம் வேற. அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கான். சில தேவையில்லாத ஆலோசனைகள் குடுத்து மக்களுக்கு கெடுதல் செய்திட்டு இருக்கான். இப்போதைக்கு அவன் செய்யறது நல்லது போல எல்லாருக்கும் தெரியுது. ஆனா அவ்வளவும் விஷ திட்டங்கள். நாளடைவில் அதன் உண்மை சொரூபம் தெரியும். அதை பார்க்கும் அளவுக்கு அவனுக்கு பொறுமை இல்லை. அவனுக்கு பதவி வெறி வந்திடுச்சு. வெறின்னா கொஞ்சம் இல்லை. இந்த உலகையே தன் ஆட்சிக்கு கொண்டுவர எண்ணம். அவன் திட்டங்களை முடிக்கணும்.
“அட…யாரது… சொல்லேன். நாங்களும் தெரிஞ்சுக்கறோம்” என்று ஆவலாய் கேட்டோம்.
“ரங்கராஜன் பற்றி கேள்விபட்ருக்கீங்களா… சயின்டிஸ்ட் ” என்றான் ஜீவா.
“ம்….ம்…… ஆமா படிச்சிருக்கேன். உயிரியல் துறையில் பெரிய ஆராய்ச்சியாளர். அவர் கண்டுபிடிச்ச பல விஷயங்கள், விவசாயதுறையிலும், உயிரியல் துறையிலும் பயன்படுத்தறாங்க. அவரா?” என்றேன் நான்.
“அடுத்த வாரம் ஏதோ பெரிய கண்டுபிடிப்பை வெளியிட போறாராம். எங்கப்பாகூட ரொம்ப பரபரப்பா பேசிட்டிருந்தார்.” என்றாள் பிரகதி.
“அவர் இல்ல… அவன். அவனுக்கு மரியாதை இல்லை. மனம் பூரா கெட்ட எண்ணம். மனிதரை உயிரா நினைக்காம, ஒரு ஆராய்ச்சி பொருளா நினைக்கறவன்.”
“இலக்கணபடி அவன் என்றால் ஒருமை, அவர்கள் என்றால் பன்மை. இதில் மரியாதை குறைவு எங்கருந்து வருது…?” என்றான் ஜோசப்.
“ஆமாமா…இப்ப இந்த இலக்கண ஆராய்ச்சி ரொம்ப முக்கியம்…. அட நான் சொல்ல வந்த விஷயத்தை கேளு ஜோ.. அவன் கண்டுபிடிச்ச புது விஷயம்தான் இப்ப பிரச்சினை. அவன் கண்டுபிடிச்ச ஒரு திரவம், சாப்பிட்டா மனிதரின் உடல் செல்கள் சுருங்கி அப்படியே சின்னதா ஆகிடும். உன் உடல் ஒரு கையளவு ஆகிடும். அதை கிட்டத்தட்ட கண்டுபிடிச்சு முடிச்சிட்டான். அதை நாட்டு மக்கள் அனைவருக்கும் தரப்போறான். இங்க மட்டும் இல்லை. உலகம் முழுக்க ஒரே நாள்” என்றான் ஜீவா.
“அதெப்படி” என்றாள் ரம்யா.
“உலகில் நோய்கள் பரவிட்டு வருது. ஒன்ணு போனா ஒன்ணுன்னு தொடர்ந்து ஏதாவது வந்துட்டே இருக்கு. இவன் கண்டுபிடிச்ச புது மருந்து, உடல் செல்களில் பரவி, எந்த கிருமிங்கக் கிட்ட இருந்தும் உடல் பாதிக்காம இருக்க வழி செய்யுது. அதை ஆராய்ச்சியாளர்களும் டெஸ்ட் பண்ணி பாத்துட்டாங்க. அதை அவன் தந்தா உலகமே அவன்கிட்ட நன்றிகடன் படவேண்டி வரும். வரும் வருஷம் அவனுக்கு நோபல் பரிசுகூட குடுக்கலாம். ஆனா அவன் மனசு அதோட நிக்கலை. அதில் யாரும் கண்டுபிடிக்காத மாதிரி கொஞ்சம் வேலை பண்ணிருக்கான். சின்ன அளவு ஒரே ஒரு மாறுதல். உங்க உடல் செல் முழுக்க கிருமிகளுக்கு எதிர்ப்பை காட்டிட்டு அதே சமயம் செல்லோட உருவத்தை அப்படியே உருக்குலைச்சு சின்னதா மாத்திடும். விரல் சைசுக்கு மாறிடுவீங்க. இந்த மருந்து அடுத்த வாரம் உலகம் முழுக்க ஒரே நாளில் எல்லாருக்கும் போடபோறாங்க. நமக்கு இதான் டைம். அவன் சதியை முடிக்கணும்.” என்றான் ஜீவா.
எங்களுக்கு ஏதோ விறுவிறுப்பான ஆங்கில படம் பார்ப்பது போல் இருந்தது.
“நாம என்ன பண்ணமுடியும் ஜீவா… நீ நல்ல மந்திரக்காரன். நீயே அதை முறியடிக்க ஈசியா வேலை பண்ணலாமே.” என்று என் சந்தேகத்தை சொன்னேன் நான்.
“ஒரு விஷயம் புரிஞ்சுக்க ரகு.. நான் முழுமைக்கும் உங்ககூட இருக்கமுடியாது. இனி வரும் காலத்தில் நீங்கதான் எல்லாம் செய்யப்போறீங்க. அதான் உங்களை வச்சு இதை செய்ய இருக்கேன். அதில்லாம அவன் உண்மையில் முழு ஞானிதான். கொஞ்சம் இந்த வெறி மட்டும் இல்லைன்னா நான் செய்வதில் பாதியாவது அவனால் செய்யமுடியும். அவனுக்கு பிரபஞ்ச இயல்பின் கணக்கீடுகள் ஓரளவு தெரிஞ்சிருக்கு. இந்த விஷயங்கள் தெரிஞ்சவங்க மனசில் முழுசா ஆசைகள் அற்று போயிடும். அவர்கள் எல்லாத்தையும் விட்டுட்டு அமைதியா ஆகிடுவாங்க. துறவிகள்னு சொல்வோம். அவங்க அதுக்கு மேல தெரிஞ்சுக்க எதுவுமில்ல. யாரோடவும் பேசகூட மாட்டாங்க… அவர்களை சந்திக்கும் மனிதருக்கு, விலங்குகள் தாவரங்கள் அனைத்துக்கும் மன அளவில் ஒரு நிம்மதி வரும். அது அவர்களின் மனசக்தியின் ஒரு வீச்சுதான். அதில் ஒரு சிலர் கொஞ்சம் தெரிஞ்சவுடன், போதும் மனிதர் நல்லா இருக்க இதெல்லாம் சொல்லலாம்னு வராங்க. அது ஒரு சேவை மாதிரி செய்யறாங்க. ஒரு சிலர் ஏதும் சொல்லாம, எதுவும் மாற்றமுடியாது… எல்லாமே மேத்தமேடிக்ஸ்தான்னு போயிடறாங்க. இவன் போல ஒரு சிலர் எல்லாம் தெரிஞ்சுகிட்டு அதே சமயம் உலகை ஆள வெறிகொண்டு கிளம்பிடுறாங்க” என்றான் ஜீவா.
“ஆமா…நெறைய துறவிகளை நாங்களும் பாத்திருக்கோம். அவங்க முகம் முழுசும் தேஜஸ் வழியும். நமக்கு அவங்களை பார்க்க மனசு லேசாகும்” என்றால் பிரகதி.
“எது… இந்த டிவிலலாம் வந்து பிரசங்கம் பண்றாங்களே… அவங்களா… அவ்வளவும் பொய்…” என்றான் ஷகீல்.
“ எங்க பாதிரிதான் ஓரளவு ஞானமா வந்து சொல்லுவார். அவ்வளவு அழகு. மனம் பூரா நிம்மதி இருக்கும்.” என்றான் ஜோசப்.
எங்கள் எல்லோரையும் கைகாட்டி நிறுத்தினான் ஜீவா.
“ஒண்ணு புரிஞ்சிக்கங்க… நான் தமிழ்ல துறவிகள்னு சொன்னவுடனே இந்த குறிப்பிட்ட மதம்னு நினைக்கிறதை நிறுத்துங்க. நீங்க டிவி ல, நேர்ல பாக்கற பல துறவிகள்னு சொல்ற மனிதர்கள் முழுக்க ஜோடனை. வெறும் மேல்பூச்சுதான் துறவியின் அடையாளம்னு காட்டறது. அவர்கள் தனியா இருக்கறப்ப பார்த்தா தெரியும். சாதாரண மனிதர்களைவிட ஆசை அதிகம். அவர்கள் சம்பாதிக்க ஒரு வழி இது. அதெல்லாம் கணக்கிலேயே வச்சுக்காதீங்க. ஏற்கனவே சொன்ன மாதிரி உங்க மனசு ஏற்கனவே கேள்வி பட்டதோட ஒப்பிட்டு பாக்குது. அது இல்லை விஷயம். இந்த பிரபஞ்சம் தோன்றினப்ப இது எதுவுமே இல்லை. இத்தனை கோடி வருஷம் கழிச்சு இப்ப வந்து ஒரு நாலாயிரம் வருஷத்துக்குள்ள இவ்வளவு கதைகள். இன்னும் நாலாயிரம் வருஷம் போனா இன்னும் நூறு மதங்கள் வந்திடும். நான் சொல்றது அனைத்தும் தாண்டி. அவர்களுக்கு மதம் கிடையாது. உண்மை ஒண்ணே ஒண்ணுதான். அதுக்கு நியாயம் தர்மம், நல்லது கெட்டது எதுவும் கிடையாது. நான் இங்க இருக்கேன். அதனால மனிதருக்கு நல்லது செய்யறதா செய்திட்டு இருக்கேன். அதே நான் ரங்கராஜன் கூட இருந்தால், அவன் செய்யறதை செய்திட்டு இருப்பேன். அவனுக்கு அவன் செய்யறதுதான் நியாயம். ஆனா இந்த பிரபஞ்ச சக்திக்கு இது ஏதும் கிடையாது. அது எல்லாமே ஒண்ணுதான். நீ சின்னதா மாறினா என்ன, இல்லாம போனா என்ன. அது பாட்டுக்கு போயிட்டே இருக்கும். புரியறமாதி சொன்னா… இங்க துப்பாக்கி எடுத்து சுட்டா கொலை. அதுவே எல்லையில் பார்டர்ல ஒரு ராணுவ வீரன் எதிரியை பார்த்து சுட்டா பாராட்டு. ஒரே செயல், இடத்துக்கு ஏத்த மாதிரி நாமதான் பிரிச்சிக்கறோம். நான் சொன்ன, கொஞ்சம் ஞானம் தெரிஞ்சவங்க வந்து இது மாதிரி சுடாதீங்கபா… சகோதரரா இருங்கனு அட்வைஸ் பண்ணுவாங்க. முழு ஞானிகள் அப்படியே பாத்துட்டு எதுவும் சொல்லாம போயிடுவாங்க. அவர்களுக்கு இந்த உடல் ஒரு சிறு இளைப்பாறும் கூடுதான். அவர்களின் மனம் இந்த அகன்ற பால்வெளி, அதையும் தாண்டி இந்த பிரபஞ்சம்.”
“அய்ய… அப்ப முழு ஞானி ஆகறது வேஸ்ட்… எதுவும் சொல்லாம இருக்கறது என்னா ஒரு நல்ல எண்ணம்” என்றான் ஷகீல்.
“இந்த பெருவெடிப்புக்கு முன்ன என்ன இருந்ததுன்னு உங்களால சொல்ல முடியுமா… இல்லைன்னா இந்த கருந்துளைன்னு சொல்றாங்களே…பட்டாணி அளவுதான் இருக்கும்…சுத்திலும் நட்சத்திரங்களையும் , ஒளியை கூட இழுத்துக்கும்னு… அதுக்கு உள்ள என்ன இருக்கும்னு தெரியுமா… அதுதான் அவர்களின் கடைசி சிந்தனை. அதுக்குதான் அவங்க இருக்காங்க. இல்லைனா கூடுவிட்டு போயிடுவாங்க. எல்லா உயிர்களிடமும் இந்த தேடல் உண்டு. நீங்க மனிதரா இருக்க, மனித துறவிகள்தான் பெரியவங்களா வச்சிருக்கீங்க.” என்றான் ஜீவா.
“ இப்ப அவரை எங்க தேடறது… நாட்டில் இல்லை, ஏதோ அந்தமான் தீவுக்கு போயிருக்கிறதா சொன்னாங்களே…” என்றாள் பிரகதி.
“ ஆமா… அந்தமான் தீவுன்னு சொல்லிருக்காங்க. ஆனா, இந்திய பெருங்கடலில் அந்தமான் தீவுக்கு பக்கமா ஒரு இடம் இருக்கு. அது விமான பயணத்தின்போதுகூட தெரியாது. அரசாங்கம் ரகசியமா அந்த இடத்தில் அவருக்கு ஒரு ஆய்வுகூடம் அமைச்சு தந்திருக்காங்க. அங்கதான் அரசு பணத்தில் இப்படி ஒரு விபரீத ஆராய்ச்சி செய்திட்டிருக்கான்…”
“அட கடவுளே…” என்றாள் ரம்யா.
“கடவுளுக்கு இதை கவனிக்கறதா வேலை. நாமதான் கவனிக்கணும்… வாங்க போலாம். நேரம் குறைவு நமக்கு” என்று எங்களை கிளப்பினான் ஜீவா.
“ஜீவா, அதுக்குமுன்ன கொஞ்சம் ஜாலி டூர் போல ஏதாவது போலாமே… இவ்ளோ சக்தி இருக்கு உனக்கு, எங்காவது கூட்டிப்போவேன்” என்றாள் பிருந்தா.
“எவ்ளோ முக்கியமான விஷயம் ஜீவா சொல்லிருக்கான், நீயென்ன… இப்ப டூர் அது இதுன்னு ஆரம்பிக்கற. அதா நம்ம வேலை” என்றான் ஷகீல். அதை சொல்லும்போது அவன் முகம் பெரிய மனுஷ தோரணையில் இருந்தது. உடனே பிருந்தாவின் முகம் சின்னதாக மாறிவிட்டது. அதை கவனித்த ஜீவா சொன்னான்,
“சரி… இந்த ப்ரொஜக்டை கொஞ்சம் தள்ளி வைப்போம். உடனே எங்காவது போலாம்.” என்றான்.
“அப்ப அந்த சயிண்டிஸ்ட்?... அவர் அதுக்குள்ள அவர் வேலையை காட்டிட்டாருன்னா?” என்றேன் நான்.
“காலம் நம் கையில்… கொஞ்சம் காலத்தின் முன்னே போயிடலாம். சரியா இன்னும் ஒரு நிமிஷம் கழிச்சு இங்க திரும்ப வந்திடலாம்” என்றான் ஜீவா. அவனால் எல்லாம் முடியும் போல.
“எங்கே போலாம்?” என்றான் ஜோசப். நாங்கள் திருதிருவென்று விழித்தோம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். நாங்கள் விழிப்பதை சிரித்தபடி ஜீவா கவனித்துக்கொண்டிருந்தான். எங்களுக்கு வெட்கமாக போய்விட்டது. அவனை விட்டு விலகி நாங்கள் எங்களுக்குள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டோம்.
“ஜீவா இல்லை… இப்ப சொல்லுங்க… எந்த இடம்?” என்றேன் நான்.
“ஏதாவது வெளிநாடு… பிரமிட், தாஜ்மஹால் இப்படி” என்றான் ஜோ.
“அடேய்… தாஜ்மஹால் நம்ம ஊருடா…” என்று சிரித்தேன் நான்.
“அதுபோல உலக அதிசயம்னு சொன்னேன்… அது தப்பா” என்று உர்றென்று முகத்தை வைத்துக்கொண்டான் ஜோ. அது அவனுக்கு அழகாகவும் இருந்தது.
“அதெல்லாம் டிவில …நெட்ல பாத்துக்கலாம். ஏதாவது யாரும் போகாத இடமா போலாம்” என்றாள் ரம்யா. அவளுக்கு அட்வெஞ்சர் மிகவும் பிடிக்கும். கொஞ்சம் யோசித்தோம். எதுவும் பிடிபடவில்லை. ஷகீல் எழுந்தான். முடிவெடுப்பதை போன்ற தோரணையில் சொன்னான்.
“பேசாம நல்ல இடமா கூட்டிப்போன்னு ஜீவாகிட்டயே சொல்லிடலாம்” என்றான். நாங்கள் சிரித்தாலும், அவன் சொன்னது சரியென்றே பட்டது. அதே சமயம் எங்கும் நீக்கமற ஜீவா நிறைந்திருப்பதை மறந்து நாங்கள் தனியே வந்து ரகசியம் பேசுவதை நினைத்து வேடிக்கையாகவும் இருந்தது. என் எண்ணம் ரம்யாவின் மனதிலும் ஓடுவதை அவள் முகத்தை வைத்து கண்டுகொண்டேன். இருவரும் பேசாமலேயே சிரித்துக்கொண்டோம். ஜோ திரும்பி “ஜீவா” என்றான். ஜீவா எங்கள் அருகில் வந்தான்.
“சொல்லுங்க… எங்கே…?”
“நீயே சொல்லிருப்பா… எங்களுக்கு தெரில…” என்றான் ஜோ.
எப்போதும் போல மர்மப்புன்னகை புரிந்த ஜீவா… “சரி… அப்படியே ஆகட்டும் நண்பர்களே” என்றான்.
******************
பேசியது ஏதோ கனவில் நடந்தது போல் இருந்தது. நாங்கள் ஜிசியில் பயணித்துக் கொண்டிருந்தோம். எங்கே என்று ஜீவா சொல்லவும் இல்லை. நாங்கள் கேட்கவும் இல்லை. எங்கே போகிறோம் என்று தெரியாமல் ஏதோ ஒரு இடத்துக்கு போவதுகூட அழகுதான். நான் பெரியவனானதும் நிறைய பணம் சம்பாதித்துக்கொண்டு, ஏதாவது கண்ணில் படும் பஸ்ஸில் ஏறி, அல்லது ரயிலில் ஏறி…. எங்காவது போகவேண்டும். அல்லது நல்லதாக ஒரு பெரிய பைக் வாங்கிக்கொண்டு அதில் போய்க்கொண்டே இருக்க வேண்டும். ‘பொலிவியன் டைரி’ என்றோ ஏதோ ஒரு புத்தகம், அப்பா படித்துக் கொண்டிருந்ததை பார்த்திருக்கிறேன். அதில் வரும் ஒரு நபர், லேசான தாடி வைத்துக்கொண்டு ஒரு பெரிய பைக்கில் சில நாடுகளையே சுற்றிவந்தாராம். அதுபோல போகவேண்டும். அப்போது நண்பர்கள் என்ன செய்வார்கள் என்று தோன்றியது. ஜீவாவும் அப்போதும் எங்களோடு இருப்பானா என்று திடீரென்று தோன்றியது. அப்படி இருந்தால், இதே உருவத்தில் இருப்பானா அல்லது அவனுக்கும் வயதாகிவிடுமா என்ற கேள்வி எழுந்தது. நான் நிமிர்ந்து அவனைப் பார்த்தேன். ஜீவா என்னை கவனிக்காமல் எங்கேயோ பராக்கு பார்ப்பது போல் இருந்தான். நான் சந்தேகமாய் அவனையே பார்க்க, ஒரு நொடி என் புறம் அவன் பார்வை திரும்பியது. நான் அவனை கவனிப்பதை அவன் அறிந்திருந்தான் போல. பார்க்காதது போல் இருந்திருக்கிறான். மெல்லிய புன்னகை அவன் முகத்தில் அரும்பியது. சிரித்துக்கொண்டோம். மனம் ஒருமித்தால், பேசக்கூட தேவையிருக்காது போலிருக்கிறது.
நகரங்களின் கட்டிடங்களை தாண்டி பறந்துகொண்டிருந்தோம். கண்ணுக்கு குளிர்ச்சியான மரங்கள் கண்ணில் பட்டன. காடுகள் என்றேன் ஜோவிடம். சிறு சிறு மரங்களைத் தாண்டி, அடர்ந்த காடுகளை பார்த்தோம். மிக அழகாக இருந்தது. மனிதனின் கால் படாத சுத்தம். காற்று மிக தூய்மையாகவும், குளிர்ச்சியாகவும் முகத்தில் மோதியது. ஒரு காலத்தில் உலகம் முழுவதும் இதுபோலத்தான் இருந்திருக்கும் என்ற நினைவே ஒரு சோகத்தை கொடுத்தது. என் போன்றே சிந்தித்தவனாக ஷகீல் என் அருகில் நகர்ந்து அமர்ந்தான். அவன் கைகள் என் கரத்தைப் பற்றியது. ஜோ, வைத்த கண் வாங்காமல் அந்த அடந்த காடுகளின் பிரமிப்பில் இருந்தான். ரம்யாவும், பிருந்தாவும் ஜீவாவுக்கு நன்றி சொல்வதுபோல பார்த்தார்கள். எங்களின் சந்தோஷத்தை தனக்குள் கடத்திக்கொண்ட ஜீவா என்னைப்பார்த்துச் சொன்னான்.
“மாற்றம் ஒன்றே மாறாதது ரகு”

மாயாஜாலக்கதை தொடரும்…
 
Status
Not open for further replies.
Top Bottom