உயிரான உறவைத் தேடி..!
உறவின் தேடல் -01
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ
பேச்செல்லாம் தாலாட்டு போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
அவள் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே
இந்தத் தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதே
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ
- என்று அலைபேசியில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலை ஒரு வரி விடாமல் கேட்டவனது இதயம் இருமடங்கு வேகமாகத் துடித்து அடங்கியது. அந்தப் பாடலின் வரிகளுக்கு ஏற்ப தன் வாழ்வும் திசைமாறிப் போனதேனோ? இந்தப் பாடலில் வருவது போல் இந்தத் தனிமையும் தன்னைக் கொல்லாமல் கொல்வதேனோ? என்று எண்ணியவனின் எண்ணங்கள் யாவும் அவளே! ... அவள் ஒருவள் மட்டுமே. அவளுக்காக எதையும் செய்யும் இதயம் கொண்டவன் அவளுக்காக அவளையே விட்டுக் கொடுத்துவிட்டு இப்போது தனிமையில் அவளை நினைத்து உருகிக் கொண்டிருக்கிறான்.
யார் இவன்? அவள் யார்? இவனது இந்நிலைக்குக் காரணமென்ன தெரிந்துகொள்ளப் பயணியுங்கள் உயிரான உயிரைத் தேடி.....
நியூயார்க் நகரம்..
இரவு மணி 11..00
ஆங்காங்கே பார்ட்டி நடப்பதற்காக மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தாலும் ஊரில் ஒரு மயான அமைதி தென்பட்டது. அந்த அமைதி, அந்த நகரத்தின் மத்தியில் இருக்கும் ஒரு பிளாட்டின் மொட்டை மாடியில் இருந்து ரசித்துக் கொண்டு இருப்பவனுக்கு இல்லையோ, என்னவோ! அவனது நெஞ்சம் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தது. அவனது பெரும்பாலான தனிமையை இந்த மொட்டைமாடி தான் களவாடிக்கொண்டது. மீண்டும் எனக்கான பரீட்சை ஆரம்பமா? அல்லது ஏற்கனவே எழுதிய தேர்வின் முடிவா? அந்த ஊருக்கு நான் மீண்டும் செல்வதா? அதுவும் அவளைப் பார்க்கக் கூடாதென்ற என் முடிவை மாற்றிக் கொண்டு போகணுமா? அவளுக்காக அவளையே தள்ளி வைத்து விட்டு மீண்டும் அங்கே நான் செல்வதா? அவள் வாழ்விற்காக எல்லாத்தையும் இழந்துவிட்டு அநாதையாக வந்த நான் மீண்டும் அவளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் அந்த ஊருக்கு செல்ல வேண்டுமா? என்று எண்ணியவனுக்கு எவ்வளவு முயன்றும் தன் விழிகளில் இருந்து கண்ணீர் வருவதை அடக்க முடியவில்லை..
ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் கதறியவன் தான் அழும் சத்தம் வெளியே வராதவாறு, கையால் வாயைப் பொத்திக் கொண்டு அழுதான். அழுதழுது ஓய்ந்து போனவன் கைப்பிடி சுவரில் சாய்ந்து அமர்ந்து விட்டான். விழிகளை மூடினாலும் அவள் முகமே! விழிகளைத் திறந்தாலும் அவள் முகமே! கடந்துசென்ற இத்தனை வருடங்களில் ஒரு நொடி கூட அவளை அவன் மறந்தது கிடையாது ஆனால் அவள்? என் பெயரையாவது நினைவில் வைத்திருப்பாளா?
எண்ணங்களிலிருந்து மட்டுமல்ல அவள் வாழ்வில் இருந்தும் என்னை முற்றிலுமாகத் தூக்கி எறிந்து விட்டவளுக்காக மீண்டும் தான் அங்குச் செல்ல வேண்டுமா? உடைக்கப்பட்ட இதயம் மீண்டும் ஒட்டப்படுமா? அல்லது உடைந்து போனதும் உருத்தெரியாமல் அழிந்து போகுமா?
என்ன முடிவெடுப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் முடிவு எடுத்தாக வேண்டிய கட்டாயம் அவனிடத்தில்.. அவன் முடிவை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றத்தின் பிடியில் சிக்கி உறக்கத்தில் இருக்கும் அவன் பெற்றோர்கள். ஒரு ஊரே தன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழ்நிலை. அடுத்து என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.
எவ்வளவு சிந்தித்தும் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்தவன் தன்னை அறியாமல் அமர்ந்த நிலையிலேயே உறங்கிவிட்டான். காலையில் பறவைகளின் ரீங்காரத்தையும் மீறி பாட்டுச் சத்தம் செவியைத் துளைக்க உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான் அவன்..
‘யாருடா அது காலையிலையே இப்படிப் பாட்டைச் சத்தமா வச்சு டென்ஷனை ஏத்துறது’ என்று நினைத்தவாறு விழிகளை முழுதாகத் திறந்து எழுந்து நின்றவன், கைகளைக் குவித்துச் சூரியனுக்கு வணக்கம் வைத்து விட்டு உடலை இடது வலதுமாகத் திருப்பி நெட்டி முறித்தான். பின்பு கீழே இறங்கி செல்லலாம் என்று நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தவன் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான்..
சற்று முன்பு வரை அவன் மட்டுமே இங்கு உறங்கி இருப்பதாக எண்ணியிருந்தான். ஆனால் தன் அருகில் படுத்திருந்த நபரை கண்டு அதிர்ந்தவன் மறுநிமிடமே இதழில் புன்னகை தேக்கியவாறு, “அம்முகுட்டி நீங்க எப்ப செல்லம் இங்க வந்து தூங்குனீங்க?” என்று கேட்டவாறு நான்கு வயதே நிரம்பிய பெண் குழந்தையைத் தூக்கி தன் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தவாறே கீழே இறங்கி சென்றான். குழந்தையோ இன்னும் வாகாக அவன் தோளில் சாய்ந்து உறக்கத்தை தொடர்ந்தது. அவன் அறையில் தூங்கிய குழந்தை நடு இரவில் தந்தையைத் தேடி அழவும்,அவனது தாய் தான் குழந்தையைக் கொண்டு வந்து மேலே விட்டு விட்டு சென்றிருந்தார்.
அவன் கீழே இறங்கி வருகையில் ஹாலில் அவனது தாய் தந்தையர் அமர்ந்திருக்க, குழந்தையுடன் தனது அறைக்குள் நுழைந்தவன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பிள்ளையையும் விழிக்க வைத்து சுத்தப்படுத்தி வேறு உடை மாற்றி விட்டு தூக்கி கொண்டு வெளியே வந்தான். அவன் முகத்தினை எதிர்பார்ப்புடன் பார்த்தார் தந்தை. அதைக் கவனமுடன் தவிர்த்தவன் கிச்சனுக்குள் நுழைந்து ரெடிமேடாக இருக்கும் காப்பிப் பவுடரை பாலில் கலந்தான். பிள்ளைக்குப் பாலும், தனக்குக் காபியும் எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தான்..
தன் தந்தை கண் ஜாடையால் தாயிடம் ஏதோ சொல்வது அவனுக்கும் புரிந்தது. இருந்தும் அவர்கள் வாயிலிருந்தே எதுவா இருந்தாலும் வரட்டும் என்று பொறுமை காத்தான்.முழு செய்தியும் அவனது செவியை வந்தடையவில்லை. ஆனால் அரசல் புரசலாக அவர்கள் இங்கு வந்திருப்பதற்கான நோக்கம் அவனுக்கும் தெரியும். அவர்கள் மேம்போக்காக விஷயத்தைப் போட்டு உடைத்து விட்டார்களே தவிர முழுமையாக எதையும் சொல்லாதது போலவே அவனுக்குத் தோன்றியது. அதனால் தான் அமைதி காத்தான்.
பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட அவனது தாய் அஞ்சலை,
“கண்ணு.. உங்கிட்ட கொஞ்சம் பேசோணும்?” என்றிட.
சடாரென்று நிமிர்ந்து தன் தாயை பார்த்தவன், “இந்த மாதிரி நீங்க கூப்பிடறதுக்கு அஞ்சு வருஷம் ஆகிடுச்சுங்க அம்மா. இம்புட்டு நாளா தெரியலையோ நான் உங்க கண்ணுன்னு. நீங்க பெத்த மகன்னு? இப்பதான் கண்ணுக்கு தெரிஞ்சனாக்கும்?” என்று கேட்டவன் தாயின் வாடிய முகத்தைக் கண்டு தாங்க மாட்டாதவனாய் முயன்று தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டான்.
பின்பு தன் மடியில் அமர்ந்திருந்த குழந்தையிடம், “அம்முகுட்டி நீங்க போய் உங்களோட ரூம்ல விளையாடுவீங்களாம். அப்பா, தாத்தா பாட்டிக்கிட்ட எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டு அப்புறம் வந்து கூப்பிட்டுக்குவனாம் சரியா!”என்று கொஞ்சலாய் சொல்ல.
குழந்தையும் அவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, “ஓகே டாடி..” என்று சொல்லி விட்டு அதற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த விளையாட்டு அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியது.
மறுநிமிடம் விருட்டென்று எழுந்து நின்றவன், “நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு எனக்கு முழுசா தெரியாது. ஆனா என்னை உங்களோட கூப்பிடாதீங்க, என்னால மறுபடியும் அந்த ஊருக்கு வர முடியாது. நான் இன்னும் பழசை மறக்கலை. மறுபடியும் அந்த ஊருக்கு வர்ற அளவுக்கு என்னோட உடம்புலையும், மனசுலையும் தெம்பு இல்லை” என்று இறுக்கமான முகபாவனைகளோடு சொன்னான்.
“சின்னப் புள்ளைய வச்சுக்கிட்டு இப்படியே வாழ்க்கை முழுக்கத் தனியாளாவே இருக்குறதுன்னு முடிவு பண்ணிட்டியாடே?’ என்று கடுமையான குரலில் கேட்ட தன் தந்தை சிவசுப்ரமணியத்தைக் கண்டு கடுப்பானான் அவன்
“எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டே ஏன் என்னைய வற்புறுத்துறீங்க. எந்த மூஞ்சியை வெச்சுக்கிட்டு என்னைய அங்க கூப்பிடுறீங்க? நான் செத்தாலும் சாவனே தவிர அந்த வீட்டுக்கு மட்டும் இல்ல, அந்த ஊருக்குமே என்னால வர முடியாது. வர முடியாதுன்னா முடியாதுதான் தேவையில்லாம என்ன கூப்பிடாதீங்க? அப்புறம் நான் பேசுற விதமே வேறையா இருக்கும்”
“என்னமோ உனக்குக் கல்யாணம் பண்ணி வெக்கிறதுக்குக் கூப்பிடுற மாதிரி எடுத்தெறிஞ்சு பேசாதடே தேவேஷ்வர்? எங்களோட சூழ்நிலை சரியில்லை, அந்த ஒரு காரணத்துக்காகத் தான் இதுவரைக்கும் வராத வீட்டுக்கு, எங்களைக் கூப்பிடாத, உன்னோட வீட்டுக்கு நாங்களா மானங்கெட்டு போய் வந்துருக்கோம்.”
“நான் ஒன்னும் உங்களை வாங்கன்னு வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கலை”
“நாங்களும் உன்னோட வீட்ல உட்காந்து விருந்து சாப்ட வரலைடே. ஒரு அப்பாவா உன்னை அங்க வாடேன்னு சொல்றது என் கடமை. ஒரு மகனா அப்பனோட சொல்லைக் காப்பாத்த வேண்டியது உன்னோட கடமை, அதை நீ கண்டிப்பா நிறைவேத்தித்தேன் ஆகோணும்”
“நீங்க என்ன சொன்னாலும் சரி இப்ப என்னால ஊருக்கு வர முடியாது. நீங்க ரெண்டு நாள் இங்க இருந்துட்டு போறதுனாலும் போலாம், இல்ல இப்பவே கிளம்புறதா இருந்தாலும் கிளம்பலாம்” என்று தேவேஷ்வர் சொல்லி முடிக்கும் முன்பே அவனது தாய் அஞ்சலை நெஞ்சை பிடித்துக்கொண்டு இருக்கையில் சாய்ந்து விட ஓடிச்சென்று தன் தாயை தாங்கினான்.
பதற்றத்தோடு, “என்னாச்சுங்கம்மா? என்ன பண்ணுது?” என்று கேட்டவாறே அவரைச் சாய்த்து படுக்க வைத்து விட்டு பரபரவென்று அவரைப் பரிசோதிக்க ஆரம்பித்தான்.
தன் அறையில் எப்போதும் அவசரத்திற்கு உதவும் என்று வைத்திருந்த மருத்துவ உபகரணக் கிட்டை எடுத்துக் கொண்டு வந்து தன் தாயின் பிபி-யை பரிசோதித்தான். ரத்த அழுத்தத்தின் காரணமாகத் தான் அவர் மயங்கி சரிந்திருக்கிறார் என்பதை உணர்ந்து அவருக்கு முதல் உதவி செய்து, குடிப்பதற்குச் சற்று சூடாக இனிப்புச் சுவையுடன் கூடிய பழச்சாற்றைக் கொடுத்து அவருக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதற்குப் பிறகே தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
பின்னர்த் தன் கோபதாபங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கேட்க முடிவு செய்தவனாய்,
“சொல்லுங்கப்பா எதுக்காக என்னைய ஊருக்கு கூப்பிடுறீங்க? நேத்து நீங்க என்ன சொன்னீங்கங்குறதை என்னால கவனிக்க முடியல. அங்கே ஏதோ பிரச்சனை அப்படின்னு சொன்ன மாதிரிதான் தெரிஞ்சுது. சப்போஸ் நம்ம நிலத்தை எதையாவது விக்கிறதுக்காகத்தேன் என்னைய வர சொல்றீங்களா?” என்று கேட்டான்.
‘இல்லை' என்று சொல்ல வந்த தன் மனைவியைச் சொல்லாதே என்பது போல் விழிகளால் சைகை செய்து தடுத்து நிறுத்திய சிவசுப்ரமணியம், “இங்க பாரு தேவேஷ்வர் நாங்க உன்னைய கட்டாயப்படுத்தல. ஆனா நாங்க வந்த விடயத்தைச் சொல்லிடுறோம். எதுக்காக நீ ஊரை ஒரு விட்டு வந்தேன்னு முழுசா எங்களுக்குத் தெரியாதுடே. ஆனா நடக்க இருந்த பெரிய வீட்டு நல்ல நிகழ்ச்சியை நிறுத்திட்டு வந்துட்டேன்னு மட்டும் தான் எங்களுக்குத் தெரியும்டே. அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு, என்ன ஆச்சுன்னு உனக்குத் தெரியாது. அதே போல நீ எங்க போனன்னு எங்களாலையும் கண்டு பிடிக்க முடியலைடே. ஏன் உன்னைக் கண்டுபிடிக்கிறதுக்கே எங்களுக்குக் கிட்டத்தட்ட அஞ்சு வருஷமாகிடுச்சு. இதுக்கு மேலையும் எல்லாத்தையும் மறைச்சு வச்சு, எல்லாருக்கும் கஷ்டத்தைக் குடுக்காத தேவ் ஊரை விட்டு வந்த, இங்கையே கல்யாணம் பண்ணுன, குழந்தை இருக்கு இதெல்லாம் வேற விடயம். உன் புள்ளை பொறந்ததைக் கூட நீ மறைச்சுட்ட அந்தளவுக்கு நாங்க உனக்கு வேண்டாதவங்களா போயிட்டமாடே. சரிவிடு அதெல்லாம் முடிஞ்சு போனது. ஆனா இப்ப நாங்க கேட்குறது ஒன்னே ஒன்னுதேன். எங்கம்மா, அதான் உங்க அப்பத்தா அங்க சாகக் கெடக்கா. கடைசியா என் பேரன் முகத்தைப் பாக்கோணும், அவனைக் கூட்டியாந்து காட்டுங்கன்னு சொல்லி இழுத்துக்கிட்டு கிடக்கா. அதை ஒரே ஒரு தடவை வந்து பார்த்துட்டு வந்துருடே? அதுக்கப்புறம் நாங்க யாரும் உன்னைய தொந்தரவு பண்ண மாட்டோம். அதுக்கப்புறம் மத்ததை எல்லாம் நாங்களே பாத்துக்கிடுறோம், நீ பாட்டுக்கு உன் பிள்ளையோட மறுபடியும் இங்கையே வந்துடுடே அதை நாங்க தடுக்க மாட்டோம்” என்று சொன்னவர் மனைவியிடம் சைகையால் எதுவும் சொல்லாதே என்று சொன்னார்.
அஞ்சலையோ குழப்பத்துடனே தன் கணவரைப் பார்த்து வைத்தார். தந்தை சொன்னதை வைத்து பார்க்கும் போது தன்னைத் தூக்கி வளர்த்து, தன்னிடம் மிகவும் அன்பாக இருக்கும் அப்பத்தா உடம்பு முடியாம கெடக்குறாங்க என்ற செய்தியே அவனை வருத்தியது. அவன் அங்கிருந்து வந்து விட்டாலும் அங்கு நடப்பவற்றை ஒன்றைக் கூட அவன் தெரிந்து கொள்ள இதுவரை முயன்றது கிடையாது. முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் முடிந்து விட்டதென்று எண்ணி முடியுரை எழுதியதற்குப் பிறகு, அதற்கு ஏன் மீண்டும் முன்னுரை எழுத ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணியதால், அவன் இதுவரை அந்த ஊரைப் பற்றிச் சிந்தித்தது கிடையாது.
ஆனால் கடந்து சென்ற இந்த ஐந்து வருடங்களில் அங்கே என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்று நினைத்தவனுக்கு முதலில் வந்து நின்றது அவனவளின் நினைவு தான்.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தவன் சிறிது நேரத்திற்குப் பிறகு, ”உங்களுக்காக இல்லை. என்னை ஆசையா எடுத்து வளர்த்த, என் மேல பாசமா இருக்க என்னோட அப்பத்தாவுக்காக வர்றேன். ஆனா வந்து பார்த்துட்டு அடுத்த நிமிஷமே கிளம்பிடுவேன், என்னை அங்க இருக்கணும்னு யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது சொல்லிட்டேன். பாப்பாவ பாத்துக்குங்க, அவ எந்த இடைஞ்சலும் பண்ணமாட்டா. கொஞ்ச நேரத்துல பாப்பாவை பாத்துக்குறவங்க வருவாங்க, அதுக்கப்புறம் அவங்க அவளைப் பார்த்துக்குவாங்க, நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க ஈவினிங் வந்து இதைப் பத்தி பேசலாம்” என்று சொல்லிவிட்டு அவனது நிறுவனத்திற்குக் கிளம்பினான்..
மகன் கிளம்பிய சிறிது நேரத்திலேயே பேத்தி இருந்த அறைக்குள் நுழைந்தனர் பெரியவர்கள் இருவரும். அங்கே தன் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் அம்முக்குட்டி என்று தேவேஷ்வரால் அழைக்கப்பட்ட சுடர்மதி. குழந்தையை நெருங்கிய சிவசுப்ரமணியம்,
“பாப்புக்குட்டி தாத்தாக்கிட்ட வாங்க” என்று கை நீட்டி ஆசையாக அழைத்தார்.
குழந்தையோ நேற்று முதன்முதலாகத் தங்கள் வீட்டிற்கு வந்தவர்களை முதலில் மிரட்சியாகப் பார்த்தது. பின்பு தந்தை சொன்னதும் அவர்களிடம் பேசியது. ஆனால் வெளியில் சென்று விட்டு வரும்போது தன் தந்தை வாங்கி வருவதுபோல் தனக்குத் தின்பண்டங்களோ, பொம்மைகளோ வாங்கி வராமல் வெறும் கையோடு வந்த அவர்கள் இருவரையும் முறைத்த குழந்தை தன் மழலை குரலில்,
“நீங்க எனக்கு எதுவுமே வாங்கிட்டு வரல தான பேசாதீங்க போங்க” என்று சொன்னவாறு அவர்களுக்கு முதுகு காண்பித்து அமர்ந்து கொண்டது.
குழந்தையின் பாவனையில் தங்களையும் மீறி இருவரும் வாய்விட்டு சிரித்தனர் வெகு நாளைக்குப் பிறகு..
”சரிடா தங்கம். சாயங்காலம் கடைக்குப் போயி உனக்கு வேண்டியதை வாங்குவோம் சரியா! இப்ப பாட்டிக்கிட்ட வாங்கடி என் பட்டுத்தங்கக் குட்டி” என்று சொல்லியவாறு குழந்தையைத் தூக்கி கொஞ்சினார் அஞ்சலை.
பிறந்ததிலிருந்து தன் தாயைப் பார்த்திடாத அக்குழந்தை தன்னைத் தூக்கி கொஞ்சிய அஞ்சலையின் கழுத்தோடு தன் கரங்களைக் கோர்த்துக் கொண்டு அவரது கன்னத்தில் தன் கன்னத்தை வைத்து இழைந்து, “நீங்க இங்கையே இருப்பீங்களா பாட்டி? இப்படித் தினமும் என்னைத் தூக்கி கொஞ்சுவீங்களா? நான் அம்மாவை பார்த்ததே இல்லை, எனக்கு அம்மாவே இல்லை. அப்பா தான் எனக்கு எல்லாமே செய்வாங்க. அப்பா சோ ஸ்வீட் தெரியுமா!. அந்தக் கரண், வினித், ஜோன் , சுஷ்மிக்கு எல்லாம் அம்மா இருக்காங்க. அம்மா தான் சோறு ஊட்டுவாங்க. எனக்கு ஏன் பாட்டி அம்மா இல்லை” என்று தனக்கு ஏன் அம்மா இல்லை என்ற கேள்வியோடு தன் ஏக்கத்தையும் விதைத்துக் கேட்டாள் தனக்குத் தெரிந்த விதத்தில்..
‘சரிடா குட்டி அம்மா இல்லனா என்ன, உனக்குச் சீக்கிரமே புது அம்மா வருவாங்க சரியா!’ என்று சொல்ல துடித்த தன் நாவைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார் அஞ்சலை. எங்கே குழந்தையிடம் தான் அதைச் சொன்னால், குழந்தையின் மூலம் தன் மகனின் காதுக்கு அந்தத் தகவல் சென்று விடுமோ? அப்படிச் சென்றால் மீண்டும் அவனை மலையிறக்க பெரும் பாடுபட வேண்டி இருக்குமோ? என்பதாலையே அவர் அந்த வார்த்தைகளைத் தனக்குள்ளேயே விழுங்கிக் கொண்டார்..
ஆனால் பிள்ளையை சமாதானப்படுத்தும் வகையில்,
“சீக்கிரமே நாமெல்லாம் ஒன்னா இருக்கலாம்டா” என்று சொன்னார் அஞ்சலை. குழந்தையும் அதைக் கேட்டு தலை சாய்த்து அழகாக புன்னகைத்தது.
இவர்கள் இருவரும் குழந்தையாய் மாறி அம்முக்குட்டியுடன் விளையாடி கொண்டிருக்கும் போது சிவசுப்பிரமணியனின் அலைபேசி இசைத்தது. அழைப்பை ஏற்றுக் காதல் பொருத்தினார். அந்தப்பக்கம் என்ன செய்தி சொல்லப்பட்டதோ கோபத்தில் கொதிக்க ஆரம்பித்து விட்டார்.
“என்னடே சொல்றீங்க நெஜமாவா? அம்புட்டு அவசர அவசரமா அவிங்க அப்புடி பண்றதுக்கு என்னடே அவசியம் வந்துச்சு. ஒருவேளை நாங்க ஊருக்கு வந்த விஷயம் அவங்களுக்குத் தெரிஞ்சுடுச்சா என்னடே?” என்று கேட்க, மீண்டும் அந்தப் பக்கம் ஏதோ சொல்லப்பட்டது.
“ஓகோ அந்தப் பயலுக நல்லது நடக்க விடக்கூடாதுன்னு நினைக்கிறாய்ங்களோ? இந்தச் சிவசுப்ரமணியம் உசுரோட இருக்க வரை அவிங்க நினைக்கறது நடக்காதுடோய். நான் சொல்றதைச் செய். நாளை பொழுது சாயறதுக்குள்ள என்ற மகனோட நான் நம்ம ஊருக்கு வந்தர்றேன். அதுக்குள்ள அவிங்க எதுவும் பண்ணாம பார்த்துக்கிடு. நம்ம ஆளுங்களை எல்லாம் கூட்டிட்டுபோ. தேவைப்பட்டா சின்னவனையும் கூடக் கூட்டிக்கிடு சரியா! சூதானமா பண்ணுங்கடே இதுனால யாருக்கும் எந்தக் கெட்டப்பேரும் வரக்கூடாது அதையும் பார்த்துக்கிடு. நாங்க வார வரைக்கும் அதை அப்படியே ஒத்திப் போட வேண்டியது உன் னோட பொறுப்பு. இல்லையின்னா ஊருக்கு வந்து தோலை உரிச்சு போடுவென் பார்த்துக்க ” என்று கோவத்தோடு சொல்லிவிட்டு அலைபேசியைக் கீழே வைத்தவர்,
“இவிக சொன்னா கேட்க மாட்டானுவ அஞ்சலை. நாம எப்படியாவது நம்ம மவனை ஊருக்கு கூட்டிட்டுப் போனா தான் அம்புட்டும் சரிப்பட்டு வரும். இதுப்பத்தி நான் அவங்கிட்ட பேசுறேன் நீ பாப்பாவுக்குச் சோறு ஊட்டு” என்று சொன்னவாறு வெளியே வந்தார்.
சிவசுப்பிரமணியம்.
பெற்ற மகனைப் பிரிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது.இந்த ஐந்து வருடத்தில் எத்தனை நிகழ்வுகளை அவர் கடந்திருப்பார். எத்தனை அவமானங்கள், ஏச்சு பேச்சுகளைச் சந்தித்திருப்பார். அனைத்தையும் தூசு போல் தட்டி விட்டு சென்றவருக்குத் தற்போது நிகழும் நிகழ்வையும், இனி நிகழப் போகும் நிகழ்வையும் எண்ணி நெஞ்சு பதறியது. தான் மறைத்த விடயங்கள் மகனுக்குத் தெரிந்து விடுமோ? என்ற அச்சமே அவரைத் தவிப்புக்கு உள்ளாக்கியிருந்தது.
நேசத்திற்காக
உயிரைக் கொடுப்பது
ஒருவித காதலென்றால்..!
நேசித்தவளுக்காகத் தன் நேசத்தையே விட்டு
கொடுப்பதும் ஒரு வித
காதல் தான்...
- தேடல் தொடரும்.....
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
www.sahaptham.com