Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

Status
Not open for further replies.

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல் -13.2

கூடவே வாணியின் சொந்த வீட்டை வாங்கியிருந்தவர்கள் அவர்கள் உபயோகித்தவற்றை மொட்டை மாடியில் இருந்த ஒரு அறையில் போட்டு வைத்திருந்தனர். ஆதி விநாயகம் அவர்களது அலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவர்களுக்கு அழைத்து, அவற்றையெல்லாம் கொண்டு சென்று பள்ளியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஆசிரியரிடம் ஒப்படைக்க சொல்லி இருந்தார்.
இதையும் கூட தாங்கள் தான் செய்ததாக அவளது பள்ளி ஆசிரியர்கள் மீனாட்சியிடம் சொன்னார்கள்.‌ வேண்டாமென்று மறுத்தவளை வற்புறுத்தி வாங்க வைத்தார்கள். அதிலும் மீனாட்சி மறுக்க முடியாத அளவிற்கு அவர்களது செயல்கள் இருந்ததால் வாணியும் அனைத்தையும் வாங்கிக் கொண்டாள். மூன்று லெதர் பைகளும், அவளது கரடி பொம்மை, அவளுக்கு மிகவும் பிடித்த பிள்ளையார் சிலை, சில அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மூட்டை என‌ அனைத்தும் காரில் ஏற்றப்பட்டது. மீனாட்சியால் எதையும் மறுத்து பேச‌ முடியவில்லை.‌
காரில் வரும் போது மீனாட்சிக்கு ஒரு விஷயம்தான் உறுத்திக் கொண்டே இருந்தது. 'அனைவரிடமும் அவள் சாதாரணமாக பேசினாள், தங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே, ஏன்' என்ற கேள்வி அவரை உறுத்திக் கொண்டே இருக்க வரும் வழியில் டீ குடிப்பதற்காக வண்டியை நிறுத்தினான் அகில். அப்போது அந்த கேள்வியை வாணியிடம் கேட்டு வைத்தார் மீனாட்சி.
“ஏன்டி நான் தான் உன்னை கொடுமைப் படுத்துறேன்னு எல்லாரும் சொல்றாங்களே, அதை ஏன் நீ யார்கிட்டயும் சொல்லலை.‌ சொல்லியிருந்தா மறுபடியும் உன்னை எங்களோட அனுப்பி வச்சுருக்க மாட்டாங்கல்ல.”
“உங்களோட வராம நான் வேற எங்க மேடம் போறது. எனக்குத்தான் சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லையே. இந்த உலகத்துல தனியாளா கண்டிப்பா வாழமுடியாது. யாரையாவது சார்ந்து வாழ்ந்தா தான் பாதுகாப்பும் நிம்மதியும் கிடைக்கும். இப்ப வரைக்கும் எனக்கு பாதுகாப்பா நீங்க இருக்கீங்க,‌ தங்க இடம் குடுத்துருக்கீங்க அது வரைக்கும் எனக்கு போதும். பாதுகாப்பா இருக்கணும்னு சொல்லித்தானே எங்க அப்பா உங்கக்கிட்ட என்னை நம்பி விட்டுட்டு போனாரு, அதனால தான் என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும் நான் இங்கிருந்து போக மாட்டேன் மேடம்” என்று சொல்லி விட்டு அவள் அமைதியாகிவிட.‌ மீனாட்சிக்குத் தான் ஏதோ சுருக்கென்று உள்ளுக்குள் தைத்தது. அவளுக்கு நாம் கொடுமை செய்த போதும், அநீதி இழைத்த போதும், கேவலமாக நடத்திய போதுமே, அதை எல்லாம் மறந்து என்னை தியாகி‌ போல் நினைக்கிறாளே' என்று யோசித்தவருக்கு மனதுக்குள் ஏதோ இடறியது.‌ அவள் சொன்ன வார்த்தை அவரை சற்று அசைத்துப் பார்த்தது. அதன் பிறகு அவர் அவளிடம் எதுவும் கேட்கவில்லை அகில் வந்து காரை எடுத்ததும் இருவரும் அமைதியாகி விட்டனர்...
மீண்டும் ஒரு மணி நேரம் சென்றிருந்த நிலையில் மூவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.‌ முதலில் இறங்கிய மீனாட்சி விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட, தன் திங்ஸ் அனைத்தையும் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த வாணியை தடுத்து நிறுத்தினான் அகில்.
“நில்லு” என்றான் அதிகாரமாய்.
முதல் முறை அவனே அழைத்துப் பேசுகிறான் என்றதும் பதற்றத்துடன் அவன் புறம் திரும்பியவள் என்னவென்று நினைப்பது என புரியாமல்,“என்னங்க சார்” என்றே கேட்டிருந்தாள்.
“ஒஒ.. இப்ப மட்டும் சார், ஆனா அங்க மட்டும் வேற மாதிரி சொல்றது, என்ன நடிக்கிறியா.‌ ‌உன்னோட பிரண்ட்ஸ்கிட்ட நீ என்ன சொன்னன்னு நானும் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன்” என்றதும் வாணிக்கு பயத்தில் கிடுகிடுவென்று கை, கால்கள் ஆட ஆரம்பித்தது.
பயத்துடனே, “நான்...நான் தப்பா எதுவும் சொல்லலைங்களே சார்?” என்றாள்.‌ அடுத்த கணம் அவளை அடிப்பதற்கு கையை ஓங்கியவன் தாங்கள் வெளியே நிற்பதை உணர்ந்து கையை கீழே இறக்கி ஒரு உதறு உதறிக் கொண்டவனாய் அடங்காத கோபத்தோடு, “என்ன நடிக்கிறியா, சொல்லுடி நடிக்கிறியாங்குறேன். இங்கே நல்லவ மாதிரி சார் மோருங்க வேண்டியது. அங்க உன் பிரெண்ட்ஸ் கிட்ட, எங்களை கைக்காட்டி அவங்க என்னோட அத்தை, இவர் என்னோட அத்தான் அப்படின்னு சொல்ற‍, என்ன உறவுமுறையைச் சொல்லி மயக்கி கைக்குள்ள போட்டுக்கலாம்னு பாக்குறியா?” என்றதும் அவள் முகம் வெளிறியது...
கையில் இருந்தவற்றை கீழே வைத்தவள் அவன் முன்பு கைகூப்பிய நிலையில் நின்றவாறு,“மன்னிச்சிடுங்க சார், இல்லை இல்லை மன்னிச்சுடுங்க முதலாளி ஏதோ தெரியாத்தனமா சொல்லிட்டேன்.‌ அந்த இடத்துல நீங்க ரெண்டு பேரும் என்னோட முதலாளி, நான் உங்க வீட்ல வேலை செய்யிற வேலைக்காரின்னு சொன்னா நான் இங்க வேலைக்காரியா இருக்கேன்னு எல்லாருக்கும் தெரிஞ்சுடும், அப்புறம் மறுபடியும் அதை வெச்சு வேற ஏதாவது பிரச்சினை வந்தா என்ன பண்றதுன்னு தான், அப்படி சொல்லலைங்க முதலாளி இல்லேன்னா, இது மாதிரி சொந்த உறவுகள்னு சொல்லியிருக்க மாட்டேன். மன்னிச்சிடுங்க இனிமே எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சரி நான் இதையே சொல்லிடுறேன், தயவு செஞ்சு இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க..” என்றவள் தன் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் கீழே விழுவதைக் கூட பொருட்படுத்தாமல் இறக்கி வைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
அகிலோ அவள் பேசியதைக் கேட்டு சிறிதும் மனம் இளகவில்லை.‌ அலட்சியமாகக் தோளைக் குலுக்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டான். ஆனால் அவர்கள் பேசுவதை எதேச்சையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு ஜீவனின் விழிகளில் இருந்து கண்ணீர் நில்லாமல் வழிந்தோடியது.
‘பணம் இருந்தால் மனிதர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்களோ, சொந்தங்களுக்கு கூட மதிப்புக் கொடுக்க மாட்டாங்களா, எல்லாத்தையும் பணத்தோட அடிப்படையில தான் நிர்ணயம் செய்வாங்களா’என்று நினைத்த அந்த விழிகளுக்கு சொந்தக்காரரோ, “இந்த பொண்ணுக்கு என்ன தலையெழுத்தோ, இங்க வந்து கஷ்டப்படுது” என்று புலம்பிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தது. ஆனால் வாணியின் கஷ்டத்திற்கு விடிவு காலம் வரும், அதுவும் தன்னால் தான் வரும் என்பதை அந்த உருவம் நினைத்துக்கூட பார்த்திருக்காது.
அன்றைய நாள் அவ்வாறே கழிந்தது. மறுநாள் விடியலில் ஆதி விநாயகம், பூங்கோதை நாச்சியார் இருவருமே சேர்ந்து, “நாங்களே இவளை கல்லூரியில கொண்டு போயி சேர்த்துட்டு வந்துடுறோம். ஏன்னா வீணா உனக்கு அலைச்சல், இன்னைக்கும் நீ சிரமப்பட வேண்டாம்மா, இதை நாங்களே செஞ்சுடுறோம்” என்று சொன்னதும் மீனாட்சியும் தனக்கு அதிக வேலை இருப்பதால் சரியென்று சொல்லி விட்டார்..
முக்கியமான மீட்டிங் இருப்பதால் அகிலும் வரவில்லை என்று சொல்லி விட்டான்.‌ அன்று கல்லூரிக்கு தன் பைக்கில் செல்லாமல் காரை எடுத்தான் ஆதவ்.‌ முன்பக்கம் தாத்தா ஏறிக்கொள்ள பின்பக்கம் பூங்கோதை நாச்சியாரும் வாணியும் ஏறி அமர்ந்ததும் கார் கரூரை நோக்கி கிளம்பியது.
கொடுமுடியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கரூர்.‌ கரூரில் இருக்கும் கலைக்கல்லூரியில் தான் ஆதவ் படித்து கொண்டிருக்கிறான்.‌ ஏனோ மற்ற பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுத்து படிக்க அவனுக்கு விருப்பமில்லை. எப்படியும் படித்து முடித்ததும் தந்தையோ, அண்ணனோ பார்த்துக் கொண்டிருக்கும் தொழிலைத்தான் தலையில் கட்டப் போகிறார்கள் அதற்கு எதற்கு தேவையில்லாமல் பொறியியல் பட்டப்படிப்பை தேர்ந்தெடுத்து லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து படிக்க வேண்டும் என்பதாலேயே மேனேஜ்மென்ட் குரூப்பை தேர்வு செய்து படித்துக் கொண்டிருக்கிறான்..
ஒருவழியாக தன் கல்லூரி இருக்கும் ஏரியாவை நெருங்கியதும் ஆதவ் தன் தாத்தாவிடம்,“தாத்தா நான் காலேஜுக்கு லீவு போட்டா தான் ரிட்டன் உங்களோட வரமுடியும், என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்க..” என்றான்.
“நீ வரலன்னா வேற யாருடா காரை டிரைவ் பண்ணுவா, இந்த வயசுல என்னைக் கார் ஓட்ட சொல்றியா படவா ராஸ்கல்” என்று சொன்ன தன் தாத்தாவை திரும்பி பார்த்து முறைத்தான் ஆதவ்.
“அதுக்குதான் நான் சொன்ன காலையிலே லீவ் சொல்லிடுறேன்னு, நீங்க தான் எதுவுமே சொல்லலை. லீவ் எதுவும் சொல்லாம நான் பாட்டு காலேஜுக்கு வந்தும் கிளாஸ்கு போகலன்னா என்ன நினைப்பாங்க. அட்மிசன் போட்டு முடிச்சதும் மூணு பேரும், வேணும்னா பஸ் ஏறி வீட்டுக்கு போங்க, நான் காலேஜ் முடிச்சுட்டு கார்ல வந்துடுறேன்” என்றதும் வாணிக்கு சுறுசுறுவென்று கோபம் ஏறியது.
“பெரியய்யா அவரைக் காலேஜ் போக சொல்லுங்க, நாம திரும்பி கார்லையே வீட்டுக்கு போயிடலாம்.‌ நான் கார் ஓட்டுவேன், அவரோட உதவி ஒன்னும் நமக்கு தேவையில்லை. நானே கார் ஓட்டுறேன்” என்று வெடுக்கென்று சொன்னவள் தன் முகத்தை ஜன்னலோரம் திருப்பி வைத்துக் கொண்டாள்.
“என்னது, உனக்கு கார் ஓட்ட தெரியுமா.‌ இது ஒன்னும் பொம்மைக் கார் இல்லை, நெஜக் கார்” என்று ஆதவ் கிண்டல் குரலில் சொன்னதைக் கேட்டதற்கு பிறகும் பதில் கூட சொல்லாமல் அமைதியாக இருந்தாள் வாணி.
ஆதவும், ஆதி விநாயகரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் குசுகுசுவென்று தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டார்கள்.‌
“பாரு உங்க பெரியம்மா பண்ணி வச்ச வேலையால யார் கிட்டையும் அந்த பொண்ணு முன்ன மாதிரி பேசவே மாட்டேங்குது” என்று சொன்ன தன் தாத்தாவை முறைத்த ஆதவ்,‌ “உங்கக்கிட்டயாவது ரெண்டு வார்த்தை பேசுறா, என்கிட்ட சுத்தமா பேசவே மாட்டேங்குறா தாத்தா. ஏன் பேசமாட்டேங்குறன்னு கேட்டா, முதலாளி, தொழிலாளி, வேலைக்காரிங்குறா. ஆனா ஒன்னு, கூடிய சீக்கிரம் வீட்ல ஏதாவது பெரிய கலவரம் நடக்கும், அன்னைக்கு எல்லாரையும் இவ வச்சு செய்யப் போகிறா வேணா பாருங்க” என்று சொன்னவனுக்கு தெரியவில்லை அந்த பிரச்சினைக்கு முழுமுதற் காரணமாக தான் தான் இருக்கப் போகிறோம் என்று..


- தேடல் தொடரும்..

https://www.sahaptham.com/community/threads/உயிரான-உறவை-தேடி-comments.615/
 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல் -14.1

அவன் சொன்னதைக் கேட்டு முறைத்த ஆதி விநாயகம்,

“அப்படியெல்லாம் அந்த பொண்ணு பண்ணாதுடா, பார்க்க எவ்வளவு அமைதியா இருக்குது. உங்க பெரியம்மா பண்றதுக்கெல்லாம் எங்க தான் போய் இந்த விஷயம் முடியும்னு தெரியல. எல்லாருமே ஒரு கட்டம் வரைக்கும் தான் பொறுமையா இருப்பாங்க, அதுக்கு மேல தாங்க முடியாம அவங்களும் கோபப்பட தான் செய்வாங்க. கோபப்பட்டா அந்த பொண்ணு கோபப்பட்டுட்டு போகுது அந்த பொண்ணைக் கொடுமை பண்ண , தெரிஞ்சதுல்ல கோவப்பட்டா வாங்கிக்க சொல்லு உங்க பெரியம்மாவை” என்றவர் வாணியும் பூங்கோதை நாச்சியாரும் தங்களை கவனிப்பதை உணர்ந்து தள்ளி அமர்ந்து கொண்டார்.‌

ஆதவ்வும் பின்னால் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு வண்டியை வேகமாக செலுத்தினான்.‌ நல்லவேளையாக கையோடு கல்லூரிப் பையை எடுத்துக் கொண்டு வந்திருந்தது நல்லது என்று நினைத்தவன் கல்லூரி வந்ததும் உள்ளே காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு தன் கல்லூரி பையோடு இறங்கினான்.‌

மற்றவர்களிடம், “வாங்க ஆபீஸ் ரூம் எங்க இருக்குன்னு காட்டுறேன்” என்றவன் கவனமாக சாவியைத் தன் தாத்தாவின் கையில் கொடுத்து விட்டு முன்னே நடந்தான்.‌ அவன் பின்னே மற்ற மூவரும் நடந்து சென்றார்கள்.‌ அலுவலக கட்டிடத்தை கைகாட்டி, “அது தான் ஆபீஸ் ரூம், போங்க போயி நீங்களே எல்லாத்தையும் பார்த்துக்கோங்க தாத்தா, ஏன்னா உங்கக்கூட தான் புத்திசாலியான ஆட்கள் இருக்காங்களே” என்று சொன்னவன் தன் வகுப்பு இருந்த கட்டிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

செல்லும் அவனையே சில நிமிடங்கள் குறுகுறுவென்று பார்த்தாள் வாணி.‌‘நான் நார்மலா பேச மாட்டேங்கிறேன்னு இவ்வளவு கோவம் வருது.‌ஆனா பேசுனா நமக்குள்ள இருக்க நட்பைக் கொச்சைப்படுத்துறாங்க, நான் என்ன பண்ணட்டும். ஒருத்தவங்கக்கிட்ட சாதாரணமா பழகி கெட்ட பேர் வாங்கிக்கிறதுக்கு பதிலா, பேசாம இருந்து கெட்ட பேரு வாங்கிக்கலாம்..’ என்று நினைத்தவளாய் பெரியவர்களைப் பின் தொடர்ந்து சென்றாள்.

சிறிது தூரம் சென்ற ஆதவ்வோ திரும்பி அவர்களைப் பார்த்தான்.
அவர்கள் அந்த அலுவலக கட்டிடத்திற்குள் நுழைவதை மறைந்திருந்து பார்த்து விட்டு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன், ‘நாம ஹெல்ப் பண்றோம்னு சொன்னா மறுபடியும் அது இதுன்னு ஏதாவது பேசுவா தேவையா நமக்கு.‌ ஆனா ஒன்னு எங்க பெரியம்மா பண்றதுக்கு எல்லாம் நாங்க ஒரு நாளைக்கு நல்லா அனுப்பவிக்க போறோம்னு மட்டும் நல்லா தெரியுது. யாரா இருந்தாலும் சரி, அவங்களோட சுயமரியாதையோ, தன்மானத்தையோ சீண்டிப்பார்த்த இப்படித்தான் நடக்கும்.‌ நாங்க சும்மா எதார்த்தமா, ஜோவியலா பழகுறதுக்கே இப்படி பேசுறாங்களே, அது மாதிரி இருந்தா எல்லாம் உயிரோட விடமாட்டாங்க போல.‌ கருமம்டா யார் தான் இந்த கல்யாணத்தை கண்டுபிடிச்சாங்களோ?’ என்று எண்ணியவாறு தன் வகுப்பு இருந்த கட்டிடத்தை அடைந்தவன் படிகளில் ஏற ஆரம்பித்த போது கால் ஸ்லிப் ஆகி விழச் சென்றான். கீழே விழாமல் இருக்க சட்டென்று பிடிமானத்திற்காக அருகிலிருந்த கைப்பிடியை பிடிக்க கையை நீட்டினான். அதே நேரம் மேலிருந்து கீழே இறங்கி கொண்டிருந்த பெண்ணின் மீது அவன் கை தெரியாமல் எதேச்சையாக பட்டு விட, சட்டென்று கையை பின்னே இழுந்தவன், அதிர்வுடன் சுவர் ஓரம் சாய்ந்து படியிலேயே அமர்ந்து விட்டான்.

அவன் கைப்பட்ட பெண்ணோ அனல் விழிகளுடன் அவனை முறைத்து,“பார்த்து வர மாட்டீங்களா மிஸ்டர், உங்களுக்கு கண்ணு என்ன பின்னாலையா இருக்கு” என்று கேட்டவள் அதன் பிறகே அவன் தன் சீனியர் என்பது உரைக்க அதிர்வுடன், “சாரி சீனியர் வேணும்னே பேசலை, கை மேல படவும் கோவத்துல பேசிட்டேன் சீனியர் சாரி” என்று பதற்றத்துடன் சொன்னாள்.

அவனோ அப்போது தான் அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தவன், ‘ஓஓ நம்ம டிப்பார்ட்மெண்ட் ஜூனியர் பொண்ணா’ என்று மனதிற்குள் நினைத்தவனாய் வெளியே, “பரவால்ல பரவால்ல ஜூனியர் சாரி. லைட்டா ஸிலிப் ஆகவும் கைப்பிடியை பிடிக்க போனேன், நீங்க குறுக்க வரவும் கை மேல பட்ருச்சு வேணும்னு எதையும் பண்ணல சாரி” என்று சொல்லி விட்டு எழுந்தவன் வேக வேகமாக அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தான்.

ஆனால் அவன் அந்த படியின் மேல் ஏறி வளைவில் திரும்பி செல்லும் வரை, அவன் தலை மறையும் வரை நின்று பார்த்து இருந்த பெண்ணோ, “சீனியர்ஸ்லையே இவர் கொஞ்சம் நல்ல டைப் போல. மத்த சீனியர்ஸா இருந்தா இன்னேரம் காச் மூச்சுன்னு கத்தியிருப்பாங்க ஆனா நல்லவேளையா இவரு அப்படி எதுவும் பண்ணல, அது வரைக்கும் சந்தோஷம். சீனியர்ஸ்ஸா இருந்தா மட்டும் கெத்து வந்துரும் போல, தலையில கொம்பு முளைச்சிரும் போல” என்று இதழசைவில் சொல்லி விட்டு அவள் அங்கிருந்து நகர்ந்திட, வளைவில் திரும்பி நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதவ்வோ,
“வாய் மட்டும் எல்லா பொண்ணுங்களுக்கும் அதிகமோ. இந்த சின்ன விடயத்துக்கே கோபம் என்னம்மா வருது, ஆண்டவா என்ன இப்படி சண்டைக்கு வர்றா நல்லவேளையா நான் தப்பிச்சேன்” என்று புலம்பியவாறு தன் வகுப்பிற்கு வந்து சேர்ந்தான்..

அலுவலக கட்டடத்திற்குள் நுழைந்த மூவரும் நேராக சென்று கடைநிலை ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து சேர்க்கைக்கு என்னென்ன புரோசிஜர் என்பதை கேட்டு தெரிந்து கொண்டனர். அதுவும் இது தாமதமாக சேர்க்கப்படும் சேர்க்கை என்பதால் அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டனர்.‌ அவர்கள் இருவரையும் அருகில் இருக்கும் இருக்கையில் அமர வைத்த ஆதி விநாயகம் தாத்தா, “நீங்க ரெண்டு பேரும் இங்கையே இருங்க நான் போய் பேசிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு, அனுமதி பெற்று தாளாளர் அறைக்குள் நுழைந்தார்.

கிட்டத்தட்ட கால் மணி நேரத்திற்குப் பிறகு அந்த கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார் தாத்தா, அவரை பின்தொடர்ந்து தாளாளரும் வந்தார். அவர்களைக் கண்டதும் மரியாதை நிமித்தமாக பாட்டியும், வாணியும் எழுந்து நின்றார்கள்..

தாளாளரோ வாணியிடம்,
“கண்டிப்பா உங்களுக்கு சீட்டு இருக்கும்மா நீங்க தாராளமா படிக்கலாம்மா, ஆனா என்ன எடுத்து படிக்க விரும்புறீங்க?” என்று கேட்டார்..

இவளோ சிறிது நேர யோசனைக்குப் பிறகு, “நான் தாவரவியல் எடுத்த படிக்கணும்னு ஆசைப்படுறேன் ஐயா” என்று முகம் விகசிக்கச் சொன்னாள்.

அவரோ அதைக்கேட்டு புன்னகைத்தவாறு, “கண்டிப்பா நீங்க விருப்பப்பட்ட படிப்பையே படிக்கலாம் என்னோட வாங்க”, என்றவராய் மீண்டும் அவர்களை அலுவலக கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றவர் அதற்குண்டான பார்மாலிட்டீஸ் அனைத்தையும் தானே முன்னின்று செய்தார்.

அவர் அவ்வாறு செய்வதற்கு காரணம் ஆதிவிநாயகத்தின் மீது அவர் வைத்திருந்த மதிப்பு மட்டும் கிடையாது. மற்றவர்களுக்கு அவர் செய்யும் உதவியும் ஒரு காரணம்.
ஆதி விநாயகம் அடிமட்டத்திலிருந்து வந்ததாலோ என்னவோ யாராவது கோவில்களுக்கு நன்கொடை கேட்டாலோ, பள்ளி, கல்லூரிகளுக்கு உதவி கேட்டாலோ பாரபட்சம் பார்க்காமல் வாரி வழங்குவார். அதனாலேயே அவரை பெரும்பாலானோருக்கு தெரிந்து இருந்தது.

அதை மனதில் வைத்துக் கொண்டு தான், தானே முன்வந்து வாணியை கல்லூரியில் சேர்த்து விடுகிறேன் என்று சொன்னார் ஆதி விநாயகம். அவர் எதிர்பாராமல் செய்த உதவிகள் தான் இப்போது அவர்களுக்கு தக்க சமயத்தில் கை கொடுத்தது.

பார்மாலிட்டீஸ் அனைத்தையும் முடித்துக் கொண்டு அவளுக்கு உண்டான வகுப்பறையை பியூனிடம் காட்ட சொல்லி விட்டு , ஆதிவிநாயகத்திடம் விடை பெற்ற தாளாளர் தன்னுடைய வேலையை கவனிக்க தன் அறைக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு பெரியவர்கள் இருவரும் வீட்டிற்கு கிளம்ப முடிவு செய்ய அவளோ, “ஒரு நிமிஷம் இருங்க பெரியய்யா கிளாஸ் ரூம் எங்க இருக்குன்னு பார்த்துட்டு நானும் உங்களோடவே வந்துடுறேன். நாளையில இருந்து நான் இங்க ஜாயின் பண்ணிக்கிறேன்” என்றவள் அவர்கள் இருவரையும் ஒரு மரத்தடியில் அமர வைத்து விட்டு பியூனுடன் நடந்து சென்றாள். இவள் சேர்ந்திருக்கும் வகுப்பிற்கு மிக அருகில் நின்று வகுப்பை கைகாட்டிவிட்டு பியூன் சென்று விட ஒருமுறை வகுப்பு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை முழுதாக மனதில் பதிய வைத்துக் கொண்டு மீண்டும் பெரியோர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தாள் வாணி.

“பார்த்துட்டு வந்துட்டேன் வாங்கய்யா போலாம்” என்று சொன்னவாறு கவனமாக அவரிடமிருந்து கார் சாவியை வாங்கிக்கொண்டு கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு சென்றாள். இவ்வளவு நேரமும் அவர்கள் செய்யும் அனைத்தையும் முதல் வகுப்பிற்கு பர்மிஷன் போட்டு விட்டு பார்த்துக் கொண்டுதான் இருந்தான் ஆதவ். வகுப்பு வரைக்கும் சென்றவன் மனது கேளாமல் மீண்டும் திரும்பி வந்து இவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தான்.‌

ஆனாலும் முன்னே சென்று உதவ தோன்றவில்லை.‌ மீண்டும் அவள் ஏதேனும் காலையில் சொன்னது போல் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்றே மறைந்து நின்று அவர்களைப் பார்த்தவன், அவள் காரை இயக்கி, அந்த கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேறும் வரை நின்று பார்த்து விட்டு அதன் பிறகே தன் வகுப்பிற்கு வந்தவன், பேராசிரியரிடம் எக்ஸ்கியூஸ் கேட்ட பின்பு வகுப்பிற்குள் நுழைந்தான்...

கல்லூரியிலிருந்து காரை இயக்கிய வாணி லாவகமாகவும், அதே நேரம் சீரான வேகத்திலும் காரை ஓட்டி சென்றாள். அவள் லாவகமாக கார் ஓட்டுவதைக் கண்டு பூரித்துப் போன பெரியவர், “யாருமா உனக்கு கார் ஓட்ட கற்று கொடுத்தது?”என்று கேட்டார்.

பொங்கி வந்த அழுகையை கஷ்டப்பட்டு தொண்டைக்குள் விழுங்கிக் கொண்டவள்,
“அப்பாதான் கத்துக் கொடுத்தாரு பெரியய்யா” என்றாள்.

“உங்க அப்பாவும் நல்லவன் தான் ஆனா என்ன எங்களால அவனோட ஒட்டி உறவாட முடியல. அவன்கிட்ட நல்ல குணமும் இருக்குது தான் ஆனாலும் அவன் ஏன் கொஞ்ச நாளா அப்படி நடந்துகிட்டான்னு புரியல. எங்கக்கிட்டான்னு கூட பரவால்ல, சொந்த தங்கச்சிக்கிட்ட கூட அவன் ஏன் அந்த மாதிரி நடந்துகிட்டான்னு எங்களுக்கு இன்ன வரைக்குமே தெரியாதுமா” என்றார் ஒருவித தவிப்புடன்.

அவளோ, “பரவாயில்ல பெரியய்யா எல்லாருக்கும் நல்லவனா இருக்கணும்னா சில தில்லு முல்லு செய்யணும், பொய் சொல்லணும், மத்தவங்க முதுகுல குத்தணும், மத்தவங்களுக்கு துரோகம் பண்ணனும்னு எங்க அப்பாவுக்கு தெரியாம போயிடுச்சு. ஏதோ ஒரு விஷயம் உங்களுக்கு அவர் மேல கோபத்தையும், வெறுப்பையும் வர வெச்சுருக்கலாம். ஆனா இதுக்கு மேல அதை பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்லையே, அதான் அவரே உயிரோட இல்லையே பெரியய்யா” என்று வேதனையோடு சொன்னவள் ஒற்றை விரலால் விழி நீரை துடைத்துக் கொண்டு கார் ஓட்டுவதில் கவனத்தை செலுத்தினாள், அதன் பிறகு காரில் யாரும் பேசவே இல்லை.

சிறிது தூரம் கடந்ததும் கடைவீதியில் காரை நிறுத்தச் சொன்னார் ஆதி விநாயகம். அங்கே அவள் கல்லூரி செல்வதற்கு தேவையான அனைத்தையும் வாங்கினார் பாட்டி. அவள் வேண்டாம் என்று மறுக்க மறுக்க அனைத்தையும் வாங்கினார். 'உடைகள் எடுக்க வேண்டும்' என்றதற்கு,
“இல்ல பாட்டி நான் அப்பா வீட்டுல யூஸ் பண்ணுன திங்ஸ் எல்லாத்தையும் கொடுத்து விட்டுருக்காங்க, அதுலையே எனக்கு எல்லா விதமான உடைகளுமே இருக்குது. எனக்கு புதுசா எதையும் எடுக்க வேணாம்” என்றாள். பின்னர் அவளுக்கு தேவையான மற்ற இதர அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டு மூவருமே அமைதியாகவே வீடு வந்து சேர்ந்தார்கள்..
 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல் -14.2


கல்லூரி சென்று வந்த அசதியில் தன் அறையிலேயே இருந்து கொண்டாள் வாணி. மீதமிருந்த வீட்டு வேலைகளை பொன்னி பார்த்து விட்டதால் அவளுக்கு எந்த வேலையும் இல்லை. இரவு உணவையும் பொன்னியே சமைத்திட, தனக்கு தனியாக எதையோ சமைத்து உண்டாள் வாணி. அதன் பிறகு அந்த பெரிய வீட்டுப் பக்கமே அவள் செல்லவில்லை. ஆனால் கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்த ஆதவ்வோ விழியால் வாணியைத் தேடினான்.‘சரி அவ ரூம்ல இருப்பா போல அதான் ஆளைக்காணோம். சாதாரணமா அவக்கிட்ட பேசினா கூட மறுபடியும் ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சு தப்பா பேசுவாங்க அதனால அவளை விட்டு விலகி இருக்குறதே நமக்கு நல்லது’ என்று நினைத்தவன் அவள் இருக்கும் பக்கம் கூட தலையைத் திருப்பாது, இரவு உணவை உண்டு விட்டு தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.

முழுமையும் கருப்பாக இல்லாமல் ஆங்காங்கே பஞ்சை பொதித்து வைத்தாற் போல் புகை மூட்டமாக இருக்கும் அதிகாலைப் பொழுதில் எப்போதும் போல் விழிப்புத் தட்டியது வாணிக்கு. எழுந்து குளித்து முடித்து , பெரிய வீட்டுக்குள் நுழைந்து முன்புற வாசலுக்கு வர, அங்கே ஏற்கனவே வாசல் தெளித்துக் கூட்டிக் கொண்டிருந்தாள் பொன்னி..

அதைக்கண்டு அதிர்ந்தவள்,
“என்ன பொன்னி அக்கா நான் செய்ய வேண்டிய வேலையை நீங்க செய்யிறீங்க. அதிசயமா நீங்க வாசல் கூட்டிக்கிட்டு இருக்கீங்க, இது என்னோட வேலை தானே, ஏன் நீங்க செய்யிறீங்க?” என்று படபடப்புடன் கேட்டாள்.

“இதுக்கு மேல இதெல்லாத்தையும் நானே பார்க்கணும்னு பெரியம்மா சொல்லிட்டாங்க பாப்பா. நீ ஒழுங்கா படிக்க மட்டும் போவியாம்”

“ஆனா இந்த வேலை கூட செய்யாம நான் இந்த வீட்ல இருக்கறதுக்கு எனக்கு ஒரு மாதிரி இருக்கும் அக்கா, நான் என்ன பண்ணட்டும்?” என்றவள் குழப்பத்துடன் கேட்டாள்.

ஏற்கனவே வாசல் கூட்டி முடித்திருந்த பொன்னி கோலம் இட்டவாறே அவளை நிமிர்ந்து பார்த்து, “உனக்கு மாச மாசம் செலவுக்கு பணம் தருவாங்கல்ல அதுல சேர்த்து வெச்சு உன்னால முடிஞ்சதை வாடகை மாதிரி கொடுத்துடு” என்றார்.

“ஆனா அப்படி கொடுக்குறது சரியா வருமா அக்கா..?”

“அதெல்லாம் சரியா வரும். எந்த வீட்டுல இருந்தாலும் தன்மானத்தோடு இருக்கணும் கண்ணு. உன்னை இதுவரைக்கும் இந்த வீட்ல யாரும் மதிச்சு நான் பார்த்தது கிடையாது .ஏதோ ஆண்டவனா பார்த்து மனசு வச்சதால உனக்கு ஒரு விடிவு காலம் வந்துருக்குது. நல்லா படிச்சு வாழ்க்கையில் முன்னேறுற வழியைப் பாரு. நான் ஒன்னே ஒன்னு தான் சொல்லுவேன். இதுநாள் வரைக்கும் இந்த வீட்ல நீ அனுப்பவிச்ச கஷ்டத்தை பார்த்தவங்குற முறையில நான் சொல்றேன், நல்லா படிச்சு நல்ல வேலையில சேர்ந்ததும் இங்கிருந்து வெளிய போயிரு அதுதான் உனக்கு நல்லது. இல்லைன்னா, அதை என் வாயால சொல்ல கூடாது தான், ஆனாலும் சொல்றேன் அந்த மீனாட்சி அம்மா உன் வாழ்க்கையே நாசமாக்கிடுவாங்க நீ இங்கிருந்து போயிரு கண்ணு” என்று சொன்னவள் தான் சின்னதாக போட்டிருந்த கோலத்தை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து விட்டு தன் மற்ற வேலைகளை கவனிக்க உள்ளே செல்ல திரும்பிய அதேநேரம் பால் காரரும் வந்து சேர்ந்தார்.

சரி பாலையாவது வாங்கலாம் என்று நினைத்து அங்கிருந்து வாணி நகர்ந்த வேளையில்,
“உன்னை எந்த வேலையும் செய்ய விட வேணாம்னு சொல்லி இருக்காங்க, தள்ளி நின்னு கண்ணு” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று பாத்திரத்தோடு வந்த பொன்னி பாலை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள் அதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் பால்காரர் பரமசிவம்.

சற்று முன்பு நடந்த நிகழ்வை ஆச்சரியத்தோடு பார்த்தது மட்டுமின்றி அதை வாய் விட்டு கேட்டும் விட்டார். “என்னம்மா ஆச்சு அதிசயத்திலும் அதிசயமா நீ செய்ய வேண்டிய வேலை எல்லாத்தையும் பொன்னி செஞ்சுக்கிட்டு இருக்குது, அப்படி என்ன தான் ஆச்சு?” என்று வியப்போடு கேட்டார்.

அவளோ, “அதிசயம் எல்லாம் என் வாழ்க்கையில எப்போதாவது தான் நடக்கும் அண்ணா. இப்பவும் அப்படியொரு அதிசயம் தான் நடந்துருக்கு.‌ நான் படிச்ச ஸ்கூல்ல இருந்து ரெண்டு சாருங்க வீட்டுக்கு வந்து என்னைக் காலேஜ்ல சேர்க்குறதைப் பத்தி வீட்ல பேசுனாங்க. ஏதோ ஒரு காலேஜ்ல நான் படிக்கிறதுக்கு அப்பா ஏற்கனவே ஃபீஸ் கட்டி இருந்தாராம்.‌ அதை திரும்பவும் வாங்க தந்துடுறோம், இங்க இருக்க காலேஜ்ல இந்த பொண்ணை சேர்த்து படிக்க வைங்கன்னு கேட்டாங்க” என்றாள்.

“என்னம்மா சொல்ற ஆச்சரியமா இருக்கே.‌ இந்த வீட்டு அம்மா அதுக்கு ஒத்துக்கிச்சா என்ன?” என்று சந்தேகத்தோடு கேட்டார் பரமசிவம்.

“அவங்க சம்மதிக்காம என்ன பண்ணுவாங்க அந்த அளவுக்கு நான் படிச்ச ஸ்கூல்ல இருந்து வந்த சார் ரொம்ப கண்டிப்பா கேட்கவும் வேற வழியில்லாம ஒத்துக்கிட்டாங்க. அது மட்டுமில்லாம எல்லா செலவையும் அவங்களே பாத்துக்கிறேன்னு சொன்னாங்க. அப்பா கொடுத்த பணத்தை எப்படியாவது திரும்ப வாங்கி மாசாமாசம் அனுப்பி வைக்கிறேன்னு சொல்லி இருக்காங்க,‌ அதனால தான் இவங்களும் படிக்க வைக்க ஒத்துக்கிட்டாங்க அண்ணா. கரூர் கலைக் கல்லூரியில தான் சேர்ந்திருக்கேன்ணா. இன்னையில இருந்து காலேஜ் போகப் போறேன்” என்றாள் முகம் முழுதும் பூரிப்பான புன்னகையோடு.

அதைக் கேட்டு தானும் முகமலர்ந்தவர், “அப்படியாம்மா ரொம்ப சந்தோஷம். என் பொண்ணும் அங்க தான் படிக்கிறா” என்றார்.

“என்ன அண்ணா சொல்றிங்க, உங்க பொண்ணு அங்கையா படிக்கிறாங்க சூப்பர் அண்ணா. உங்க பொண்ணு பேர் என்ன, அவங்க என்ன படிக்கிறாங்க” என்று கேட்க,
“என் பொண்ணு அங்க ஏதோ இந்த தாவரங்களைப் பத்தி படிப்பாங்களாமே அதைப் படிக்கிற‌ குரூப்பை எடுத்துருக்குறதா சொன்னாம்மா!” என்றார்.

அவளோ அதைக் கேட்டு இன்னும் ஆனந்தம் அடைந்தாள்.
“நானும் அதுதான் படிக்கப் போறேன் அண்ணா. ஆமா, உங்க பொண்ணு பேரு என்ன?” என்று கேட்டாள்.

“அவ பேரு மலர்விழி, நாங்க மலர்னு கூப்பிடுவோம்” என்றார்.

“அப்ப இன்னைக்கு போய் உங்க பொண்ணை மீட் பண்ணி பிரண்டாகிக்கிறேன். நீங்க எப்படி இவ்வளவு ஸ்வீட்டா, இவ்வளவு நாள் என் மேல அக்கறையா இருந்தீங்களோ அதே போல உங்க பொண்ணு இருப்பாங்கன்னு நினைக்கிறேன், ரொம்ப சந்தோசம் அண்ணா” என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் வந்தவள் மதியத்திற்கு தேவையான உணவை சமைத்து அதையே காலை உணவாக சாப்பிட்டு விட்டு மதியத்துக்கும் டிபன் பாக்ஸில் போட்டு அடைத்தவள் கல்லூரி செல்ல தன்னிடம் இருக்கும் நல்ல சுடிதாரில் ஒன்றைப் போட்டு கொண்டு கிளம்பினாள்.

கல்லூரிக்கு கிளம்பியவளுக்கு கல்லூரிக்கு எப்படி செல்வது என்று தெரியவில்லை.‌ யோசனையோடு நின்றவள் பின் தன்னிடமிருந்த சேமிப்பில் இருந்து சிறிதளவு பணத்தை எடுத்து கொண்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தவள் கவனமாகக் கதவைத் தாழிட்டு பூட்டி விட்டு பெரிய வீட்டிற்குள் நுழைந்தாள்.‌

பெரியவர்கள் இருவரைத் தவிர மற்ற அனைவரும் காலை உணவை உண்டு கொண்டு இருந்தனர். பெரியவர்களின் முன்னால் சென்று நின்றவள், “பெரியய்யா, பெரியம்மா என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க. நான் முதல் நாள் காலேஜ் போறேன், படிச்சு பெரியாளா வரணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று சொல்லி அவர்கள் இருவரது காலிலும் விழ சோபாவில் அமர்ந்திருந்த இருவரும் எழுந்து ஆசீர்வாதம் செய்ததோடு கையில் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை வைத்து,‌“படிச்சு பெரியாளா வரணும்மா, பத்திரமா போயிட்டு வாம்மா” என்று சொல்லி ஆசீர்வாதம் செய்தனர்.

தயக்கத்துடனே அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டவள் அப்போது தான் சாப்பிட்டு விட்டு ஹாலுக்கு வந்த மீனாட்சியின் அருகில் சென்று நின்றாள். குனிந்து அவரின் பாதம் தொடாமல் நின்றவாறே அவரிடம், “போயிட்டு வரேன் அம்மா” என்றிட.

பதிலுக்கு அவரும், “ம்ம்.. போ போ” என்று சொன்னதோடு தன் வேலையை கவனிக்க சென்று விட்டார். அவர் அவ்வாறு உதாசீனப்படுத்துவது போல் பேசியது மனதைக் காயப்படுத்திய போதும் இது தெரிந்தது தானே, எப்போதும் நடப்பது தானே என்று எண்ணியவள் வாசலை நோக்கி நடக்க முயன்ற வேளையில் அவளைக் கடந்து கடகடவென்று தன் காரை நோக்கிச் சென்றான் அகில்..

உடனே அவன் பெயரை சொல்லி அழைத்த ஆதிவிநாயகம்,
“கரூர் பக்கம் தானே போற, அப்படியே இந்த பொண்ணை இறக்கி விட்டுட்டு போயேன்டா” என்றார்.

சற்றென்று தன் நடையை நிறுத்தியவன் திரும்பி தன் தாத்தாவை முறைத்தவாறு,
“இதெல்லாம் உங்களுக்கே அநியாயமா தெரியலையா தாத்தா. ஒரு வேலைக்காரியை நான் கொண்டு போயி இறக்கி விட்டுட்டுப் போகணுமா. அவ தான் நம்ம வீட்டுல வேலை செய்யறாளே தவிர, நான் ஒன்னும் அவங்க வீட்ல போய் வேலை செய்யல. விட்டா என்னை அவளுக்கு சம்பளம் இல்லாத டிரைவராக்கிடுவீங்க போல” என்று வெடுக்கென்று சொன்னவன் விறுவிறுவென்று அங்கிருந்து நகர்ந்து சென்றிருக்க, அதைக் கேட்ட வாணிக்கு தான் என்னவோ போலானது.

திரும்பி ஆதி விநாயகத்தை, ‘ஏன் பெரியய்யா.‌உங்கக்கிட்ட உதவி செய்ய சொல்லி கேட்டேனா?’ என்பது போல் பார்த்தவள் எதுவும் பேசாமல் அந்த வீட்டிலிருந்து வெளியேறினாள். காரில் அமர்ந்த அகிலோ காரை எடுக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தான். சிறிது நேரத்தில் அந்த காரை தாண்டி செல்ல முற்பட்ட வாணியை சொடுக்கிட்டு அழைத்தான்.

அவளோ நின்ற இடத்தில் இருந்தே திரும்பி பார்க்க,
“இங்க வா” என்றான் அதிகாரமாக.

அவளோ இரண்டு அடி எடுத்து வைத்து காரின் அருகே வந்து நிற்கையில், “நீ என்ன பெரிய மகாராணியா. ஒரு ஆள் கொண்டு போய் காலேஜ்ல விட்டுட்டு வரணுமோ. நேத்து ஒரு நாள் தான் அவங்களோட வெளிய போன அதுக்குள்ள இந்த அளவுக்கு அவங்களை பேச வச்சிருக்க. மை ஏதாவது தடவுனியா இல்ல,‌ ஏதாவது ஒரு மந்திரவாதிக்கிட்ட போய் மந்திரிச்சு ஏதாவது வாங்கிட்டு வந்து அவங்களை மயக்கிட்டியா?” என்று ஏக வசனத்தில் பேசியவன் அவள் அமைதியாக நிற்பதைப் பார்த்து விட்டு மேலும் தொடர்ந்தான்.

“ஆனா ஒன்னு இந்த சொத்தை அடையிறதுக்காகவும், சொகுசா வாழ்றதுக்காகவும் நீயெல்லாம் என்ன வேணாலும் பண்ணுவன்னு உன்னைப் பார்த்தாவே தெரியுது. ஆமா இதெல்லாம் உங்க அம்மா சொல்லிக்கொடுத்தாளா, இல்ல உங்க அப்பா சொல்லிக் கொடுத்தானா?” என்றான் மட்டு மரியாதை இன்றி.. அவள் மீதுள்ள கோபத்தில் தான் படித்தவன், நாகரீகமானவன், ஒரு கம்பெனியை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவன் என்பதையெல்லாம் மறந்து மிகவும் கீழ்த்தரமாக பேசினான்.

அவன் சொன்னதைக் கேட்டு வாணிக்கு அழுகையும் கோபமும் ஒரு சேர வந்தது. ஆனால் அவர்களை எதிர்த்துப் பேசும் இடத்தில் தான் இல்லை என்பதை உணர்ந்தவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர முயன்ற வேளையில், “ஏய் நில்லுடி நான் பாட்டுக்கு கேள்வி கேட்டுட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு போறியே, இதுக்கு என்ன அர்த்தம்.?”என்று கர்ஜித்தான்.

எதுவும் பேச வேண்டாம் என்றெண்ணி விலகிப்போனாலும், விலகிச் செல்ல விடாமல் வம்பு வளர்ப்பவனை நினைத்து இவளுக்கு இன்னும் கோபம் அதிகரித்தது. அந்த இடத்திலேயே நின்று அவனைத் திரும்பிப் பார்த்து, “உங்களுக்கு என்ன முதலாளி வேணும்?” என்றாள்.

“இந்த வார்த்தை, இந்த வார்த்தையைத் தான் எதிர்பார்த்தேன். இதே வார்த்தையை எந்த இடத்துலையும் நீ யூஸ் பண்ண கத்துக்க. நான் உனக்கு சம்பளம் கொடுக்குற முதலாளி அதையும் ஞாபகம் வச்சுக்க. இது நாள் வரைக்கும் நீ சும்மா இருக்கேன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன் இப்ப எங்க வீட்ல இருந்து நீ செய்யிற வேளைக்கு காசு தரங்க தானே , அதனால நாங்க சம்பளம் கொடுக்குற முதலாளி அதை மறந்துறாத, எப்பவுமே நியாபகம் வச்சுக்கிட்டு பேசக் கத்துக்கோ. பெரியவங்க அது சொன்னாங்க, இது சொன்னாங்கன்னு உன் மனசுல ஏதாவது நெனச்சிட்டு இருந்த, ஊர் முன்னாடி நிறுத்தி அசிங்கப்படுத்திருவேன்.

ஏன்னா எனக்கு உன்னை மட்டும் இல்ல, உன் குடும்பத்தைக் கண்டாலே ஆகாது சுயநலம் பிடிச்ச குடும்பம்” என்று சொன்னவாறு காரின் கண்ணாடியை ஏற்றி விட்டான். விழியில் இருந்து வெளி வரும் கண்ணீரை அவன் முன்பு காட்டக்கூடாது என்று நினைத்தவளாய் விடுவிடுவென்று மெயின் கேட்டை தாண்டி வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள் வாணி.

ஆதவ்வோ கல்லூரி செல்ல கிளம்பியவன் வாசலுக்கு வருகையில் தான் இந்த காட்சியை கண்டான். அதுவும் தன் அண்ணன் பேசிய வார்த்தைகளைக் கேட்டு அவனுக்கு காது கூசும் போது, ஒரு பெண்ணான அவள் எப்படி உணர்வால் என்று நினைத்தவனுக்கு அகிலின் மேல் கோபம் கோபமாக வந்தது.

‘தன் பெரியம்மா எப்படியோ, அதே போல் தன் அண்ணனும் இருக்கான். தன் பெரியம்மாவின் ஆண் வெர்ஷன் தன் அண்ணன் போல’ என்று நினைத்திருந்தவனுக்கு அது இப்போது முழுமையாக புரிந்தமையால் எதுவும் பேசாமல் தன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினான். ஆனால் வாணியை நினைத்து பாவமாக இருந்தது.

அவள் சென்று பேருந்து நிறுத்தத்தில் நின்ற இரண்டு நிமிடங்களிலேயே பேருந்து ஒன்று வந்தது. முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு வந்த பேருந்தில் அவள் ஏறிக் கொண்டாள்.‌ ஆனால் தொலைவில் அந்த பேருந்தை நோக்கி ஓடி வந்த ஒரு பெண்ணோ பேருந்தை தவற விட்டு விட்டாள்.

“சுத்தம் பஸ் போயிருச்சா?” என்று புலம்பியவாறு வேகமாக சாலையின் நடுப்பகுதியில் இருந்து சாலையைக் கடக்க முயன்ற வேளையில் அவளை இடிப்பது போல் கொண்டு வந்து காரை நிறுத்தினான் அவன்.

அவளோ கார் வந்ததைக் கவனிக்கவே இல்லை. பேருந்தைப் பிடித்து விடலாம் என்ற பரபரப்பில் ஓடி வந்ததால் சாலையில் வரும் வாகனத்தை கவனிக்காமலேயே சாலையைக் கடந்து பாதி தூரம் வந்துவிட்டாள்

தற்போது திடீரென்று தன்னை இடிக்க வந்த காரை கண்டு அதிர்ந்து நின்றவள் பயத்தில் கையில் இருந்த கல்லூரிப் பையை நழுவ விட்டாள். பின்னர் இடைவிடாது ஒலித்த ஹாரன் சத்தத்தில் தன்னிலை பெற்றவள் கீழே கிடந்த பையை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று நடந்து சென்று சாலையோரம் நின்று, அந்த கார் செல்ல வழிவிட்டாள். ஆனால் ஏற்கனவே கோபத்தில் வாணியை வாயிக்கு வந்ததெல்லாம் சொல்லி திட்டி விட்டு வந்த அகிலோ யாரோ ஒரு பெண் குறுக்கே வருவதைக் கண்டதும் கோபத்தோடு காரை நிறுத்தியவன், அதே கோபத்தோடு காரை விட்டு கீழே இறங்கி வந்தான்.


- தேடல் தொடரும்..


https://www.sahaptham.com/community/threads/உயிரான-உறவை-தேடி-comments.615/
 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல் -15


அப்பெண்ணோ தன் கல்லூரிப் பையை எடுத்துக்கொண்டு பயத்துடன் ஓரமாக சென்று நிற்க, அவனோ காரை விட்டு கீழே இறங்கி வெளியே வந்தவன் அந்த பெண்ணின் அருகே வந்து, “கொஞ்சம் கூட உங்களுக்கு அறிவுங்குறதே இருக்காதா,‌ கண்ணை பின்னால வச்சுக்கிட்டா நடக்குறீங்க.‌ ரோட் கிராஸ் பண்ணும் போது ரோட்டுல வண்டி வருதா இல்லையான்னு பார்க்க மாட்டீங்களா. நான் பிரேக் அடிச்சதால பரவாயில்ல, இல்லன்னா என்னாகுறது, நான் கவனிக்காம இருந்துருந்தா இன்னேரம் உங்களை அடிச்சு தூக்கி இருப்பேன், நீங்களும் ரத்த வெள்ளத்துல கெடந்துருப்பீங்க. உங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாதா, பொண்ணுங்களே இப்படி தானோ என்னவோ,‌ நீங்கல்லாம் என்ன மாதிரி ஜென்மங்களோ தெரியலை” என்று ஏகத்திற்கும் திட்டி தீர்த்தவன் அவள் முகத்தை கூட பார்க்காமல் வேகமாக அங்கிருந்து நகர முயன்றான்.

ஆனால் அதற்குள் கல்லொன்று அவன் தலையில் வந்து மோதியது. வலியுன் அவன் திரும்பிப் பார்க்க தன் கையில் ஒற்றை கல் ஒன்றை உருட்டியவாறு அவனை நெருங்கிய அந்தப் பெண்,
“என்ன சொன்ன, என்ன சொன்ன கண்ணை பின்னாடி வச்சுக்கிட்டு வர்றோம்மா, நாங்க கண்ண எங்கையோ வச்சுக்கிட்டு வர்றோம் அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம். ஆமா இதென்ன உங்க அப்பா வீட்டு ரோடா உங்க இஷ்டத்துக்கு வண்டி ஓட்டிட்டு வர்றதுக்கு.
நீங்க போட்டு குடுத்தீங்களா கவர்மெண்ட் தானே போட்டு குடுத்துச்சு. மொதல்ல ரோட்டுல வரும் போது மெதுவா வண்டி ஓட்டக் கத்துக்கங்க அதுக்கப்புறம் ரோட்டை எப்படி கிராஸ் பண்ணனும்னு எனக்கு வந்து கிளாஸ் எடுங்க. பொண்ணுங்கன்னா இப்படி தான், அப்படி தான்னு பேசுற நீங்க, நாங்க என்ன செய்யறோம், ஏது செய்யறோங்குறதை பாக்குறதுக்கு தான் பொறந்துருக்கீங்களோ?” என்றவள் தொலைவில் பேருந்து வருவதைக் கண்டு விட்டு பேருந்து நிறுத்தத்திலிருந்த நடை மேடையில் ஏறி நின்றாள்.

அதேநேரம் எதிர்ப்புறத்தில் இருந்து வந்த ஒரு பெண்,
“ஏய் என்னாச்சு மலர் எதுக்கு அவர்கிட்ட இப்படி சண்டை போடுற” என்று கேட்டிட,

“சண்டை போடாம என்ன பண்றது எல்லாம் ஆம்பளைங்கிற திமிருல பேசுறாங்க. இவங்களுக்கு எல்லாம் பொண்ணுங்கன்னா இளக்காரம் என்ன வேணா பேசலாம்னு நினைச்சிட்டு இருக்காங்க. பெரிய கார் வச்சுருக்காங்குற காரணத்துக்காக அவங்க எது சொன்னாலும் கேட்டுட்டு போக முடியுமா, அப்படி எல்லாம் என்னால கேட்டுட்டு போக முடியாது. அவர் ஒரு வார்த்தை விட்டாரு பதிலுக்கு நானும் பதில் வார்த்தைத் திருப்பிக் கொடுத்தேன் அவ்வளவு தான்” என்றவள் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்ற பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டாள். ஆனால் அவர் பேசியதிலிருந்து, அவள் அடித்தது வரை அனைத்தும் அகிலை அதிர்வுற செய்திருந்தது. ‘சரியான வாயாடியா, பஜாரியா இருப்பா போல, இப்படி பேசுறா’ என்று நினைத்தவனாய் காரை அலுவலகத்திற்கு கிளப்பினான் அகில் பிரசாத்..

பேருந்தில் அமர்ந்திருந்த மலருக்கோ இன்னும் ஆத்திரம் அடங்கிய பாடில்லை. ‘நானே பஸ்ஸை தவற விட்டுட்ட அதிர்ச்சியில ரோட்டுல அப்படியே நின்னுட்டேன். அதுவும் அதிர்ச்சியில தான் அப்படி நின்னனே தவிர வேணும்னே பண்ணலையே. அவன் என்னடான்னா என் மேல இடிக்கிற மாதிரி காரைக் கொண்டு வந்து நிறுத்துனது மட்டுமில்லாம சண்டைக்கு வேற வர்றான், சரியான சிடுமூஞ்சியா இருப்பானோ இவனுக்கெல்லாம் யார் தான் இவ்வளவு பெரிய கார் வாங்கி தந்தாங்கன்னு தெரியல. காலேஜ்கு கிளம்பும் போதே இப்படின்னா,‌ இன்னும் காலேஜ்ல என்னென்ன பிரச்சனைங்க வந்து சேருமோ தெரியலையே’ என்று நினைத்தவளாய் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த காட்சிகளைக் காண ஆரம்பித்தாள்.

மலருக்கு முன்பு சென்ற பேருந்தில் இருந்த வாணியோ முதல் முறை கல்லூரி பயணத்தை ஆர்வத்துடன் ரசித்தாள். அதிலும் புதுமுகங்கள், புது இடம், புது மனிதர்கள் என்னென்ன விஷயங்கள் புதுசாக கற்றுக்கொள்ள போகிறோமோ என்று நினைத்தவள் கவனமாக தன் நெஞ்சைத் தொட்டுக் கொண்டிருக்கும் தாலியின் மீது கைவைத்து மானசீகமாக அதை கட்டியவனிடம் பேசலானாள்.

‘இப்பவும் நீங்க யாரு என்னன்னு எனக்கு தெரியாது ஆனா உங்களுக்கு சரியாகியிருக்கணும், நீங்க நல்லா இருக்கணும்னு அதை மட்டும் தான் இவ்வளவு நாளா நான் கடவுள் கிட்ட வேண்டிகிட்டேன். நீங்க என்னோட வாழ்க்கையில வந்ததாலோ என்னவோ தெரியல கொஞ்சம் நல்ல விஷயமும் நடக்குது. இதே மாதிரி சீக்கிரமே உங்களை நான் பாக்கணும், இதை உங்கக்கிட்ட சொல்லணும், அதுக்கப்புறம் உங்களுக்கும் பிடிச்சிருந்தா உங்களோடவே என்னைக் கூட்டிட்டு போயிடணும்' என்று மனதில் நினைத்தவளாய் இந்நேரம் அவன் என்ன செய்து கொண்டிருப்பான் என்று யோசிக்கலானாள்.

அவளது எண்ணத்தின் நாயகனோ தன் அறையில். தன் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். முழுதாக காயம் சரியாகும் வரை வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று அவன் தாய் அன்பு கட்டளையிட்டிருந்ததால் தான் வேறு வழி இல்லாமல் படுக்கையில் படுத்திருக்கிறான்.

ஆனால் அவனுக்கும் கண் விழித்ததில் இருந்து வாணியின் நினைவு தான். ஆனால் என்ன செய்வது வெளியில் செல்ல முடியாத நிலையில் அவள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவள் என்பது பற்றி எல்லாம் எப்படி கண்டு பிடிப்பது என்று தெரியாமல் அடிக்கடி எதை எதையோ யோசிப்பான்.

தற்போதும் கூட முழுதாக காயம் ஆறியதற்குப் பிறகு கண்டிப்பாக அவள் யார் எந்த ஊர் என்பதை தேட வேண்டும், அதற்கு தன் தேடுதல் வேட்டையை முதலில் கோயிலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தவனாய் படுத்திருந்தவன் தன்னையறியாமல் உறங்கி விட்டான். ஆனால் யாரோ தன்னை நினைப்பது போலவும், தன்னை அழைப்பது போலவும் உணர்ந்தவன் திடுக்கிடலுடன் கண் விழித்து எழுந்தமர்ந்தவன் சுற்று முற்றும் விழிகளால் அலசி ஆராய்ந்தான். தான் இருப்பது தனது அறை என்பது புரிந்தது, ஆனால் தன்னை அழைத்தது யார் என்று யோசித்தவனுக்கு, ஒருவேளை அவள் அழைத்து இருப்பாளோ என்று தோன்ற, நிச்சயமாக அவரள் தான் என்னை நினைத்திருக்க வேண்டும் என்று எண்ணியவனுக்கு நெஞ்செல்லாம் காதலென்ற உணர்வு சாரல் மழையைப் போல் மெல்ல மெல்ல அவனுள் பொழியத் தொடங்கி இருந்தது.

அவன் மருத்துவமனையில் இருந்த வேளையில் அவனின் தந்தை சிவசுப்பிரமணியம் அதன் பிறகு தன் மகனை ஆபத்து நெருங்காதவாறு பார்த்துக் கொண்டார். யாரும் அறியாமல் தான் மட்டும் தனியே சென்று தன் மகனுக்கு பாதுகாப்பு வேண்டி காவல் நிலையத்தில் மனு கொடுத்ததோடு மட்டுமின்றி புகாரும் கொடுத்து விட்டு வந்தார். அதே போல் தன் இளைய மகனையும் பத்திரமாக கல்லூரி சென்று வரும்படி கூறியவர் துணைக்கு டிரைவரையும் மேலும் இருவரையும் அனுப்பி வைத்தார்.‌ நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது இதோ பல பரிசோதனைகளுக்குப் பிறகு வீட்டிலிருந்தவாறே தேவேஷ்வரை பார்த்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொன்னதைக் கேட்டு வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்கள். எப்போதும் தன் அறையில் தான் இருப்பான். அவனுக்கு தேவையானவற்றை அவனது தாய் அஞ்சலை முகம் சுளிக்காமல் செய்தார்.

மகனுக்காக தினமும் ஒரு வேளை விரதம் இருந்தார். தினமும் கோயிலுக்கு சென்று மகன் பெயரில் அபிஷேகம் செய்தவர், அந்த திருநீறை கொண்டு வந்து அவனது நெற்றியில் இடுபவர் சொட்டு சொட்டாக கண்ணீரை விட்டு விட்டு, தன் மகன் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து செல்வார்.‌ இதையெல்லாம் அறிந்த போதும் ஏனோ அனைவரையும் மீறி அவன் மனம் வாணிடம் தான் சென்று நின்றது.‌

அவள் யார், எந்த ஊராக இருப்பாள், பார்க்க அத்தனை அழகாக இருந்தாளே, அவள் பெயர் என்னவாக இருக்கும் என்று ஏதேதோ கற்பனையில் மிதந்தவன் நிச்சயம் அவளைத் தேட வேண்டுமென முடிவெடுத்தான். தன் கரத்தில் இருந்து நழுவி விழுந்த தாலியானது இன்னும் அவள் கழுத்தில் இருந்தால் ஒரு நொடி கூட யோசிக்காமல் அவளை தன்னுடன் அழைத்து வந்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

அவளைத் தேடிக்கொண்டு அவன் செல்வதற்கு தேவையில்லை, அவனது எதிர் வீட்டில் தான் அவள் இருக்கிறாள் என்பதை அவன் அறியும் நாளும் வெகு விரைவில் வர காத்திருந்தது. ஆனால் அதை அறிகையில் இருவரது உள்ளத்திலும் ஏற்படும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளைத் தாங்கிட இருவருக்கும் தைரியம் இருக்கிறதோ என்னவோ, அதை இறைவன் ஒருவனே அறிவான். இறைவனுக்கு விதியும் ஒத்துப் போவதால் தான் இப்படியெல்லாம் நிகழ்கிறதோ என்னவோ!

கல்லூரியின் முன்பு நின்ற பேருந்தில் இருந்து இறங்கிய வாணி தயக்கத்துடன் தான் கல்லூரிக்குள் நுழைந்தாள். அவள் அந்த வராண்டாவை கடந்து செல்வதற்குளாகவே மலர் வந்த பேருந்தும் கல்லூரியின் முன்பு நிற்க, பேருந்தில் இருந்து இறங்கி மலரும் கல்லூரிக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்தாள்.

தன் எதிரே செல்லும் ஒரு பெண்ணை ஆர்வத்துடன் கண்டாள் மலர். ஏனெனில் பெரும்பாலும் இக்காலத்தில் சுடிதார் அணியும் பெண்கள் துப்பட்டா அணிவது கிடையாது. ஆனால் அவள் முன்னே செல்லும் பெண்ணோ துப்பட்டா அணிந்திருந்ததோடு இருபுறமும் பின் செய்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்படத் தான் செய்தாள். ஒரு முறை தன் தோள்பட்டையைத் திரும்பிப் பார்த்தாள், கல்லூரி கிளம்பி வரும் அவசரத்தில் எப்போதும் துப்பட்டாவை பின் செய்தது கிடையாது என்பதை நினைவு கூர்ந்தாள். யோசனையோடு இந்த பொண்ணு யாரா இருக்கும் என்று நினைத்தவாறே வேக எட்டுக்களுடன் வாணியை நெருங்கினாள்.

ஆனால் அதற்குள்ளாகவே வாணியை இரு இளைஞர்கள் வழிமறித்து நின்றார்கள். அதைக்கண்ட அச்சத்துடன் ஓரடி பின்னால் எடுத்து வைத்த வாணி,“யார் நீங்க?” என்று கேட்டாள் சட்டென்று வரவழைத்த தைரியத்துடன்.‌

தான் புதிதாக படிக்க வந்திருக்கும் கல்லூரியில் தனித்து நடந்து செல்கையில் இரு ஆண்கள் வழி மறித்தால் எந்த ஒரு பெண்ணும் சற்று பயப்படுவாள், அது அவர்களது இயல்பு. இருந்தாலும் வாணி ஏதோ குருட்டு தைரியத்தில். 'யார் நீங்க?’ என்று கேட்டிருந்தாள். ஏனெனில் சுற்றிலும் இத்தனை பேர் இருக்கும் போது தன்னை யாரும் எதுவும் சொல்லி விட முடியாது, செய்து விட முடியாது என்ற எண்ணத்தில் தான் அவர்களிடம் பேசினாள்.

அந்த இரு இளைஞர்களும் அவளை மேலிருந்து கீழ் வரை ஆராயும் பார்வை பார்த்தவர்கள்,
“என்ன நியூ அட்மிஷனோ?” என்று கேட்டனர்.

வாணியும், “ஆமா நியூ அட்மிஷன் தான். நீங்க ரெண்டு பேரும் யாரு, எந்த டிபார்ட்மென்ட், எந்த கிளாஸ், எந்த இயர், எதுக்கு இப்படி எங்கிட்ட கேள்வி கேட்குறீங்க?” என்றாள் படபடவென்று..

அவளை கிண்டலாக பார்த்த இருவருளுள் ஒருவன், “நாங்க ரெண்டு பேரும் தேர்ட் இயர்.‌ உன்ன பார்த்தாலே தெரியுது நீ பர்ஸ்ட் இயர்னு. அப்ப உனக்கு நாங்க சீனியர், சீனியரைப் பார்த்தா இப்படி தான் பேசுவியா மரியாதை கொடுக்க மாட்டியா..” என்றிட,

இன்னொருவனோ, “ம்ம்.. இதுக்கு தண்டனை குடுத்தே ஆகணும். அதனால நீ என்ன பண்ற உன்னோட ரெண்டு காதுகளையும், இரண்டு கையால மாத்தி மாத்தி புடிச்சுக்கிட்டு, 20 தோப்புக்கரணம் போடு அதுக்கப்புறம் எங்க ரெண்டு பேருக்கும் குட் மார்னிங் சொல்லு பார்க்கலாம்” என்று சொன்னான்.

அவர்கள் இருவரையும் அதே கிண்டல் குறையாத பார்வை பார்த்தவள், “அப்படியெல்லாம் சொல்லவும் முடியாது, தோப்புக்கரணமும் போட முடியாது. வேணும்னா நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கு 100 தோப்பு கரணம் போட்டுட்டு எனக்கு குட் மார்னிங் சொல்லிட்டு போங்க. பர்ஸ்ட் இயரா இருந்தா நீங்க சொன்னதெல்லாம் செய்யணுமா என்ன, அப்படி எல்லாம் என்னால செய்ய முடியாது வழி விடுங்க” என்று சொல்லி விட்டு அவர்களை சுத்தி கொண்டு நடந்தாள் வாணி.

மலரோ அவள் பேசிய தோரணையைக் கேட்டு சிரித்து விட்டாள். பெரும்பாலும் இவர்கள் இருவர் தான் சீனியர் என்று கெத்தாக சுத்திக்கொண்டு அனைவரிடமும் வம்பு வளர்த்துக் கொண்டு இருப்பார்கள் இப்படிப்பட்டவர்களையே வாயடைத்துப் போக வைத்து விட்டாலே இந்த பெண் என்று நினைத்தவள் இன்னும் வேகமாக ஓடிச்சென்று வாணியின் முன்னே நின்றவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவாறு,
“ஹாய் என்னோட பெயர் மலர்விழி, உங்க பேர் என்ன, நீங்க எந்த ஊரு, எந்த டிபார்ட்மென்ட்?” என்று கேட்டாள்.

திடீரென ஒரு பெண் தன்முன்னே வந்து நின்றதும அதிர்ந்தாள் வாணி.‌ ஆனால் அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தன் பெயர் ‘மலர்விழி' என்றதும் சட்டென்று பரமசிவம் அண்ணா சொன்ன மலர்விழியாக இருக்குமோ என்று நினைத்தாள் வாணி.

பின்னர் அதை அறிந்து கொள்வதற்காக மலரிடம் பேச்சு கொடுத்தாள்.
“என்னோட பேர் மதுரவாணி உங்க பேர் மலர்விழின்னு தானே சொன்னீங்க உண்மையாவே நீங்க மலர்விழியா, நீங்க எந்த டிபார்ட்மென்ட், நீங்க கொளத்துப்பாளையமா?” என்று கேட்டாள் ஒருவித ஆர்வத்துடன்.‌

அவளது அந்த ஆர்வம் எதற்கென்று புரியாத மலரோ, “ஆமா என்னோட பெயர் மலர்விழி தான். நான் கொளத்துப்பாளையம் தான். நான் பாட்னி (தாவரவியல்) டிபார்ட்மெண்ட்” என்றாள்.

“சூப்பருங்க நானே உங்களைப் பாக்கணும், உங்ககிட்ட பேசணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.‌ நானும் கொளத்துபாளையம் தான். உங்க அப்பா பரமசிவத்தை எனக்கு நல்லா தெரியும்.‌ எங்க வீட்டுக்கும் அவரு தான் பால் ஊத்துவாரு..” என்றாள் பூரிப்போடு..

“அப்படியா.‌ எங்கப்பா முக்காவாசி ஏரியாவுக்கு பால் ஊத்துவாரு. அந்த ஊருல தான் நாங்களும் இருக்கோம், ஆனா உங்களை நான் பாத்ததே இல்லையே. அதே ஊருல இருக்க எனக்கு தெரியாம நீங்க எப்படி இந்த ஊர்லையே பொறந்து வளர்ந்து இருப்பீங்க. எனக்கு ஒன்னுமே புரியல, ஒருவேளை நீங்க வெளியூர்ல இருந்து இப்ப தான் இங்கே குடி வந்துருக்கீங்களா?” என்று கேட்டாள் மலர்.

”இல்லை இல்லை இல்லை..
இங்க இருக்க எங்க அத்தை வீட்டுக்கு..” என்று உண்மையைச் சொல்ல வந்தவள் சட்டென்று வார்த்தையை தனக்குள் விழுங்கிக்கொண்டு, “இங்க இருக்க தெரிஞ்சவங்க வீட்டுல பேயிங் கெஸ்ட் மாதிரி தங்கி இருக்கேன்” என்றாள்.

அவள் ஏதோ சொல்ல வந்து சொல்லாமல் மறைத்ததிலேயே ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட மலர் மேலும் அது பற்றி கேட்டு அவளை கஷ்டப் படுத்த வேண்டாம் என்று எண்ணி,
“பரவால்ல நீங்க சொல்ல நினைச்சதை தாராளமா சொல்லலாம்.‌ கட்டாயமா சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, தோணுனா சொல்லலாம். நாம இப்ப இங்கிருந்து போலாம், ஆமா நீங்க எந்த டிபார்ட்மென்ட்னு சொல்லவே இல்லையே?” என்று ஞாபகம் வந்தவளாக கேட்டாள்.

”நானும் அதே பாட்னி டிபார்ட்மென்ட் தான் வாங்க போலாம்” என்று சொன்னவாறு மலரின் கை விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டு நடந்தாள் வாணி.

அதை உணர்ந்து புன்னகைத்த மலர், “ஓகே இந்த நிமிஷத்துல இருந்து நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஓகேவா” என்றிட,

“கண்டிப்பா.. எனக்கு நெருங்கிய தோழிகள் இந்த ஊர்ல யாரும் இல்லை.‌ அதனால நீ தான் என்னோட பெஸ்ட் பிரெண்ட்” என்று தான் பிடித்திருந்த மலரின் கையில் அழுத்தம் கொடுத்து சொன்னாள் வாணி.‌ அந்த நிமிடத்தில் ஆரம்பித்த அவர்களது நட்பு இன்று வரை தொய்வில்லாமல் தொடர்கிறது.


இருவரும் ஒன்றாகவே வகுப்பில் வந்து அமர்ந்தவர்கள் அன்றைய வகுப்புகளை ஒருவித உற்சாகத்தோடே கழித்தனர். நியூ அட்மிஷன் என்பதால் அனைவருக்கும் அவளை அறிமுகப்படுத்தி வைத்தார் பேராசிரியர். அதன்பின் கடந்து சென்ற‌ வகுப்புளுக்கான குறிப்புகளை எடுப்பதிலேயே அவளுக்கு அன்றைய நாள் பொழுது கடந்து சென்றது. மதிய உணவு இடைவேளையில் அந்த கல்லூரியை வாணிக்கு சுற்றி காட்டினாள் மலர். கூடவே கேன்டீன் அழைத்துச் சென்று தங்கள் நட்பு ஆரம்பித்த இந்த தினத்தை கொண்டாடும் விதமாக சுட சுட சமோசாவும், டீயும் வாங்கி கொடுத்தாள் மலர்.

வெகு நாட்களுக்கு பிறகு சமோசாவை வாயிலிட்டு மெல்ல சுவைத்து விழுங்கினாள் வாணி. ஏனெனில் அந்த வீட்டில் பெரும்பாலும் அவளுக்கு இது போலான பலகாரங்கள் செய்ய வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை உண்பதற்கு வாய்ப்புகள் கிடைத்ததில்லை. வெளியில் சென்று வாங்கி சாப்பிடும் அளவிற்கு அவளது பொருளாதார நிலையும் சரியாக இல்லை என்பதால் வெகு நாட்களுக்கு பிறகு அனுபவித்து அந்த சிற்றுண்டி உணவை உண்டாள். அவளது முகத்தில் வந்து போன உணர்வுகளை ஒருவித நெகழ்வுடன் பார்த்துக்கொண்டு இருந்தாள் மலர். ஏதோ சொல்ல முடியாத துக்கம் ஒன்றை அவள் சுமந்து கொண்டிருப்பது போலவே மலருக்கு தோன்றியது.

இவளுக்கு தன் தந்தையை தெரிந்திருக்கிறது என்றால் நிச்சயம் தன் தந்தைக்கும் இவளைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் தெரிந்திருக்கும் அவரிடம் கேட்டு அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள் மலர்..

அதன் பின்பு வந்த வகுப்புகள் யாவும் சற்று கலகலப்புடன் சென்றன. கல்லூரி முடிந்ததும் இருவரும் பேசி சிரித்தவாறே வாயிலை நெருங்கும் தறுவாயில் தன் இருசக்கர வாகனத்தில் அவர்களைக் கடந்து சென்றான் ஆதவ்..
அவனைப் பார்த்தும் பார்க்காதது போல் மலருடன் பேசியவாறு பேருந்து நிற்கும் இடத்தில் வந்து நின்றாள் வாணி.

இருவரும் கலகலத்து பேசி கொண்டிருக்கும் போது காலையில் வாணியை வழிமறித்து பேசிய அந்த இருவரும் மீண்டும் அவள் அருகே வந்து நின்று, “ஏதோ இன்னைக்கு உனக்கு முதல் நாளுங்குறதால நீ சொன்னதை மறந்துட்டு மன்னிச்சு விடுறோம். ஆனா இன்னொரு தடவை இதே போல நடந்துக்கிட்ட மத்த சீனியர்ஸ்கிட்ட சொல்லி உன்னை ரேக்கிங் பண்ண சொல்லிடுவோம் ஞாபகம் வச்சுக்க” என்று மிரட்டும் தொனியில் சொல்ல,‌ அதேநேரம் தன் வண்டியின் ஹாரனை ஒலிக்க விட்ட ஆதவ் அவர்கள் தன் புறம் திரும்பியதும், “என்ன சீனியர்ஸ் ஏதோ சொன்ன மாதிரி கேட்டுச்சு. எதாவது சொன்னீங்களா?” என்று கேட்டான்.

ஏற்கனவே ஒரு பெண்ணிடம் வம்பு வளர்த்து அவனிடம் அடிவாங்கி இருந்ததால் இருவரும் சற்று பவ்வியத்துடன்,
“ஒண்ணும் இல்லை ஆதவ்” என்று சொல்லி விட்டு தங்கள் வண்டியில் ஏறி அங்கிருந்து பறந்து சென்று விட்டனர்.

- தேடல் தொடரும்..

 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல் -16

சீனியர்ஸ் இருவரும் ஆதவைப் பார்த்து பயந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடுவதைக் கண்டு அனைவரும் சிரித்தனர். அதிலும், “என்னாச்சு ஏன் அவங்க ரெண்டு பேரும் இவரை பார்த்து பயந்து ஓடுறாங்க” என்று எதுவும் அறியாதது போல் வாணி கேட்டு வைக்க,‌ மலரோ, “கொஞ்ச நாளைக்கு முன்னாடி இப்படி தான் பஸ்ட் இயர்ஸூக்கு அட்மிஷன் போட்டாங்க.‌ அட்மிஷன் முடிஞ்சதும் ஸ்டூடண்ட் வர ஆரம்பிச்சாங்க அப்ப இவங்க ரெண்டு பேரும் ராகிங் பண்ணிட்டு இருந்தாங்க. அதைப் பார்த்துட்டு அந்த சீனியர் தன்னை விட மூத்தவங்கன்னு கூட பாக்காம அடி வெளுத்துட்டாரு அதுல இருந்து யாரும் இங்க ராகிங் பண்றது கிடையாது. மறுபடியும் அவங்க உன்னை ராகிங் பண்றதை அவர் பார்த்துட்டாரு போல அதான் திட்டவும் ஓடிட்டாங்க. ஆனா ஒன்னு அந்த சீனியர் மாதிரி யாருமே இருக்க மாட்டாங்க, யாராவது ஹெல்ப் கேட்ட உடனே செய்யறது அவரு தான். அதே மாதிரி பொண்ணுங்க கிட்டயும் நல்லா பேசுவாரு பழகுவாரு, ஜெனியூன்னா நடந்துக்குவாரு. எனக்கு அவங்க ஃபேமிலி மெம்பர்ஸை அவ்வளவா தெரியாது.‌ இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்சது இவரை, அந்த பாட்டி அப்புறம் அந்த தாத்தா.‌ அவங்க மூணு பேரையும் ரொம்ப பிடிக்கும், மத்தவங்க எல்லாம் யார் கிட்டயும் அவ்ளோ க்ளோசா பேச மாட்டாங்க போல, நான் வேற யாரையும் நோட் பண்ணல.. கூடவே அம்மா அவங்க வீட்டுக்கு போறதில்ல, அதனால நானும் அந்த வீட்டுக்குள்ள வந்ததில்லை” என்றாள்..

‘மத்தவங்க எல்லாம் வெளியாளுங்கக்கிட்ட பேசுறது என்ன, நிமிர்ந்து பார்த்துட்டாலே அதிசயம் தான்’, என்று மனதில் நினைத்து கொண்டாள் வாணி.
ஆனால் இவர்களது உரையாடல்களை கேட்ட இரு ஜோடி காதுகள் அத்தகவல்களை பத்திரமாக நெஞ்சில் பதுக்கி வைத்துக் கொண்டது.

அதே நேரம் அவர்கள் செல்லும் பேருந்து வந்ததால் இருவரும் பேசுவதை விடுத்து பேருந்தில் ஏறி அமர்ந்தார்கள்.‌ உங்க வீடு எங்க இருக்கு, எந்த ஏரியா, எந்த சந்து என்பது முதற்கொண்டு அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டாள் மலர். ஆனால் வீட்டு என்னை மட்டும் வாணி தெரிவிக்கவில்லை.அவர்கள் இறங்கும் பேருந்து நிறுத்தம் வந்ததும் இருவரும் இறங்கி நடக்கத் துவங்கினார்கள்.

சரியாக அதேநேரம் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வர கிளம்பிக் கொண்டிருந்தான் அகில்.‌ அன்று நாள் முழுவதுமே அவனுக்கு சற்று எரிச்சலாகவே தான் இருந்தது. அதிலும் காலையில் பேசிய அந்த பெண்ணை மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் கன்னத்தில் நாலு அறை கொடுத்து தன் கோபத்தை தணித்துக் கொள்ள வேண்டும் என்று கூட எண்ணியிருந்தான்.

தான் அவளை அடித்தால், அதை அவள் திருப்பி செய்ய இரு நிமிடங்கள் கூட ஆகாது என்பதை அவன் உணர தவறியிருந்தான். தான் ஒரு வார்த்தை அவளை தவறாகப் பேசியதற்கே ஓராயிரம் வார்த்தைகள் அவள் தன்னை இழிவு படுத்தி விட்டாள், அப்படி இருக்கும் போது தான் அவளை அடிக்க கை நீட்டுகையிலேயே,‌ அவள் தன்னை அறைந்து இருப்பாள் என்பதை அவன் சற்றும் சிந்தித்துப் பார்க்கவில்லை. அந்தக் கோபத்தை அலுவலகத்தில் தன்னிடம் பணிபுரியும் மற்ற தொழிலாளர்களிடம் தான் காட்டினான்.

அதே எரிச்சலான மனநிலையோடே அனைத்து வேலைகளையும் செய்து முடித்தவன், ‘முதல்ல வீட்டுக்கு போயி ஸ்ட்ராங்கா காபி குடிக்கணும் அப்ப தான் தலைவலி விடும்', என்று நினைத்தவனாய் அவசர அவசரமாக வீட்டுக்கு கிளம்பினான். ‌அவன் வருவதற்குள்ளாகவே வாணி தன் அறைக்கு சென்று சேர்ந்திருக்க, பேருந்து நிலையத்திலிருந்து எதிர்ப்புற சாலையை கடந்து ஒரு சந்தில் நுழைந்து தன் வீட்டிற்கு செல்லும் சேரி நிறைந்த பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் மலர்.

வீட்டுக்கு வந்த வாணி பின்புறம் இருந்த கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து குளித்து முடித்து வேறு உடை அணிந்தவள் இரவு உணவுக்கு தேவையானவற்றை நறுக்கி,‌ இரவுணவை சமைக்க ஆரம்பித்தாள். சமைத்து முடித்ததும் அன்றைய எழுதும் பணிகள் அவளை உள்ளிழுத்துக் கொள்ள, இன்முகத்துடன் அவற்றைச் செய்ய ஆரம்பித்தாள்.‌ சிறிது நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

ஆதி விநாயகமும் பூங்கோதை நாச்சியாரும் கதவை தட்டிவிட்டு அவள் அறையின் வெளியே நின்று இருந்தார்கள்.‌ அவர்கள் இருவரையும் பார்த்ததும் தயக்கத்துடன் எழுந்து நின்றவள்,
“உள்ள வாங்க பெரியய்யா, பெரியம்மா” என்று அவர்களை உள்ளே அழைத்தாள்.

உள்ளே வந்தவர்கள் கையில் இருந்த பொருட்களை அவளிடம் கொடுத்து விட்டு கீழே அமர்ந்தவர்கள், “முதல் நாள் கல்லூரி எப்படி இருந்துச்சு?” என்று பொத்தாம் பொதுவாக பேச்சை ஆரம்பித்தனர்.‌ அதன்பிறகு மடை திறந்த வெள்ளம் போல் கல்லூரியில் நடந்தது தனக்கு கிடைத்த புது தோழியின் அறிமுகம் முதல், தன்னை ரேகிங் செய்த சீனியர்களுக்கு தான் கொடுத்த பதிலடி, அதன் பிறகு அந்த சீனியர்களை ஆதவ் ஓட ஓட விரட்டியது வரை அனைத்தையும் புட்டு புட்டு வைத்தவள் முகம் மலர இதழ் விரிய புன்னகைத்தாள்.

சொல்லப்போனால் இப்போதான் அவளது உண்மையான புன்னகையையே அவர்கள் பார்க்கிறார்கள். இருவருமே மெய்மறந்து அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க,‌ அவர்களை முன்னே அனுப்பி வைத்து விட்டு கதவுக்கு அந்தப் பக்கம் நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆதவுக்கு அவளது அந்த புன்சிரிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது.‌ ‘ஆண்டவா இதுக்கு மேலையாவது அவ சந்தோஷமா இருக்கணும்' என்று நினைத்தவனாய் அவ்விடத்தை விட்டு சென்று விட்டான்.‌ சிறிது நேரத்தில் தன்னிலைப் பெற்றவளாய் அமைதி காத்த வாணி, “நீங்க மட்டும் இந்த உதவியை செய்யாம இருந்திருந்தா கண்டிப்பா இதுக்கு மேல நான் படிச்சுருக்க மாட்டேன், நல்ல நட்பும் கிடைச்சுருக்காது, நல்ல காலேஜ்ல சீட்டும் கிடைச்சுருக்காது. வாழ்நாள் முழுக்க இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன் பெரியய்யா, பெரியம்மா,‌ ஆமா இது என்னது?” என்று அவர்கள் கொண்டு வந்த பொருட்களை சுட்டிக்காட்டி கேட்டாள்.

“நீ காலேஜ் போற இல்லையா, காலையில் சமைச்சு கொண்டு போற சாப்பாடு கெட்டுப்போகாம இருக்குறதுக்காக ஹாட் பாக்ஸ் மாதிரி சில்வர்ல வாங்கிட்டு வந்துருக்கோம். அப்புறம் வாட்டர் பாட்டில் ரெண்டும் வாங்கிட்டு வந்தோம், இதை வச்சுக்கம்மா வேணாம்னு சொல்லாத”

“இல்ல என்கிட்ட டிபன் பாக்ஸ் இருக்கு. இது வேணாமே” என்று சொல்லி அவள் மறுத்தாள்.‌ ஆனால் அவர்களோ பிடிவாதமாக அதை அவளிடம் கொடுத்து விட்டு, “நல்லா படிக்கணும் சரியா!” என்று சொல்லி விட்டு சென்று விட்டனர்.
அவர்களை நன்றியுடன் பார்த்தாள் வாணி.

இங்க வீட்டிற்கு வந்த மலர் தன் தந்தை பால் ஊற்ற சென்று விட்டதால் அமைதியாக தன் வேலையை கவனித்தவள் இரவு அவர் வீட்டுக்கு வந்ததும் அவள் முதலில் கேட்ட கேள்வி, “அப்பா மதுர வாணியை உங்களுக்கு எப்படி தெரியும், அவளுக்கு என்ன பிரச்சனை?” என்பது தான்.

வாணியை முதன் முதலாக சந்தித்ததிலிருந்து அவள் அங்கு அனுபவிக்கும் கஷ்டங்கள் வரை அனைத்தையும் தன் மகளிடம் தெரிவித்தார் பரமசிவம். அதிலும் சொந்த அண்ணன் மகளையே இப்படி வேலைக்காரியை விட மோசமாக நடத்தும் அந்த பெண்மணியை அறவே வெறுத்தவர், அதையும் சொன்னார்.

கண் கலங்க தன் தந்தையைப் பார்த்தவள், “செய்யாத தப்புக்கு இந்த பொண்ணு தண்டனை அனுபவிக்கிற மாதிரி இருக்குப்பா. அவங்க அப்பா தப்பே பண்ணி இருக்கட்டும் அதுக்காக இவளை தண்டிப்பது எந்த விதத்துல நியாயம்?” என்றிட.

“அதை நினைச்சா தான் எனக்கும் கவலையா இருக்குதும்மா. இன்னும் சொல்லப்போனா கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் அந்த பொண்ணைப் பத்தி எதுவும் தெரியாது. சொந்தக்காரங்க பொண்ணு போல, லீவுக்கு இங்க வந்து இருக்குன்னு நினைச்சேன். அதுக்கப்புறம் தான் எனக்கே விஷயம் தெரியும். இதுல கொடுமை என்ன தெரியுமா, அவங்களுக்கு விதவிதமா சமைச்சு வைக்கும் அந்த பொண்ணு, ஆனா அதை அந்த பாப்பா சாப்பிடக் கூடாதாம். தனக்கு குடுத்துருக்க ரூம்ல தானே சமைச்சு சாப்பிடணுமாம் இதெல்லாம் கொடுமை இல்லையா?” என்று ஆதங்கத்தோடு சொன்னார்.

அவர் சொன்னதைக் கேட்டு மலருக்கு கண்ணீரே வந்துவிட்டது. இன்று அவள் சமோசாவை அவ்வளவு உணர்வு பூர்வமாக சுவைத்து, ரசனையுடன் உண்டதற்கான காரணம் இப்போது அவளுக்கு புரிந்து போனது.

“இனிமே அவ என் பொறுப்புப்பா அவளை படிக்க வெச்சு நல்ல நிலைமைக்கு ஆளாக்கி அந்த வீட்டை விட்டு வெளியே கொண்டு வர வேண்டியது என் கடமை நீங்க கவலைப்படாதீங்க. என்ன ஆனாலும் அவளை விட்டு நான் விலகி போகமாட்டேன்.” என்றாள் உறுதியுடன்.

ஏதோ ஒரு விதத்தில் தன் மகளும் அந்த பெண்ணின் துயரத்தை துடைக்க உறுதுணையாக இருக்கப் போகிறாள் என்ற மகிழ்வில் சரி என்று தலையசைத்த பரமசிவத்திற்கு தெரியவில்லை இருவரது வாழ்வும் கூட இறுதிவரை ஒன்றாகத்தான் பிணைக்கப்பட்டிருக்கிறதென்று..

பின் மறுநாள் விடியலில் அவசர‌ அவசரமாக கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த தன் மகளின் கையில் இரண்டு நூறு ரூபாய் தாள்களை வைத்தார் பரமசிவம்.‌ எப்போதும் ஐம்பது ரூபாய் தரும் தந்தை இன்று இருநூறு ரூபாய் கொடுத்ததும் மகிழ்வுடன் நிமிர்ந்து அவரது முகத்தைப் பார்த்தவள், “நீங்க என்னோட அப்பாவா, சொல்லுங்க ப்ளீஸ் நீங்க என்னை பெத்தவர் தானா. இல்ல வேற்றுகிரகவாசி யாராவது என்னோட அப்பா உருவத்துல இங்க வந்துட்டாங்களா. நீங்க யாரு, எதுக்கு இப்படி எங்க அப்பாவோட உருவத்துல வந்துருக்கீங்க?” என்று அவள் சற்று சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டதும் பக்கென்று சிரித்து விட்டார் மலரின் தாய் ஆராயி.

மகள், மனைவி இருவரையும் முறைத்தவர், “என்ன என்னைப் பார்த்தா உங்களுக்கு அடையாளம் தெரியலையா?” என்று அவரும் சற்று குரலை மாற்றி கூற, அனைவரும் சிரித்து விட்டனர்.‌

பின்பு சிரிப்பை கைவிட்டவர், “இது உனக்கு மட்டும் இல்ல அந்த பொண்ணுக்கும் சேர்த்துதான். அந்த பொண்ணு சொன்னதை வச்சு பார்க்கும் போது மாச மாசம் ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகை பணம் மாதிரி தரும் போல. அந்த வீட்டுல வேலை செய்யும் பொன்னி இது மாதிரி செய்யின்னு சொன்னதும் அந்த பாப்பாவும் சரின்னு சொல்லுச்சு, அதனால அப்படித்தான் செய்ய போகுதுன்னு நினைக்கிறேன். முடிஞ்ச வரைக்கும் நம்ம கஷ்டம் நம்மளோடவே போகட்டும். ஆனா அந்த பொண்ணாவது கொஞ்சம் கஷ்டத்துல இருந்து வெளியே வரணும், அதுக்கு நாம நம்மளால முடிஞ்ச உதவியை செய்யலாம். கொஞ்சநாள் ரெண்டு பேரும் பஸ்ல போங்க அதுக்கப்புறம் நான் எதாவது டூவீலர் ஏற்பாடு செய்யிறேன்” என்றார் பரமசிவம்.

சரி என்று சொல்லிவிட்டு கல்லூரிப்பையை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினாள் மலர்.‌ அவர்களுக்கு சொந்தமாக வீடு இருக்கிறது, அதுவும் கூரை வீடு தான்.‌ வீட்டுக்கு பின்புறம் பட்டிபோல அமைத்து மாடுகளை வளர்த்து வருகின்றனர்.‌ அதில் தான் பாலை கறந்து தினமும் அனைத்து வீடுகளுக்கும் விநியோகம் செய்து கொண்டு வருகிறார் பரமசிவம். வீட்டு வேலை, இதர வேலைகளை செய்து முடித்துவிட்டு மாடுகளுக்கு தீவனம் போட்டு, தொட்டிகளில் அவை குடிக்க தண்ணீர் நிரப்பி வைத்து விட்டு அருகில் இருக்கும் வீடுகளுக்கு வீட்டு வேலை செய்ய சென்று விடுவார் ஆராயி.

வீட்டு வேலைகளை செய்து முடித்து விட்டு மீண்டும் மதியம் 12 மணிக்குள் வீட்டுக்கு வருபவர் மாடுகளுக்குத் தீவனம் வைத்து, தண்ணீர் காட்டி விட்டு சற்று ஓய்வெடுப்பார். பிறகு கட்டுத்தரையை கூட்டி சுத்தம் செய்து விட்டு, வீட்டு வேலைகளையும், தன் உடல் தூய்மையையும் கவனிப்பார், பிறகு அனைத்து மாடுகளிலிருந்தும் பாலை கறந்து கேனில் ஊற்றி தன் கணவனிடம் கொடுத்து அனுப்புவார்.

பரமசிவமும் அவ்வளவு நேரம் வேறு வேலைக்கு சென்று விட்டு 4 மணி போல் வீட்டிற்கு வருபவர் குளித்து முடித்து பால் கேனை வாங்கிக்கொண்டு பாலூத்த கிளம்பிவிடுவார், இதுதான் அவர்களது அன்றாட வாழ்க்கை நடைமுறைகள். ஒரே பெண் என்பதால் மலருக்கு சற்று செல்லம் அதிகம். அவளுக்கு தந்தையிடம் எந்த அளவிற்கு செல்லம் அதிகமோ, அதே அளவிற்கு தாயிடம் கண்டிப்பும் உண்டு..

எப்போதும் போல அவள் பேருந்து நிலையத்திற்கு வந்து நின்ற போது வாணி இன்னும் வராமல் இருப்பதை உணர்ந்து, ‘என்ன ஆச்சு ஏன் இன்னும் வாணி வரலை’ என்று நினைத்தவாறு அவள் தங்கியிருக்கும் வீடு இருந்த வீதியின் பக்கமே பார்வையை வைத்துக் கொண்டு நின்று இருந்தாள். அப்போது அவளைத் தாண்டி சென்றது அகிலின் கார்.

மலருக்கு அவனது காரையும், ஓட்டுநர் இருக்கையில் இருந்த அவனையும் அடையாளம் தெரிந்தது, இருந்தும் அவனை கண்டதும் வெடுக்கென்று முகத்தை திருப்பியவளாய் வாணியை எதிர்பார்த்து நின்றிருக்க, சரியாக தூரத்தில் அவர்கள் செல்லும் பேருந்து வந்தது.

‘ ஐயையோ! வாணி இன்னும் வரலை அதுக்குள்ள பஸ் வேற வருதே?’ என்று அவள் பதற்றத்துடன் நினைத்துக் கொண்டிருக்கும் போது ஓட்டமும் நடையுமாக ஓடிவந்து, சிறு புன்னகையுடன் மலரின் அருகில் நின்றாள் வாணி.

இதை கவனிக்காமல் சென்றிருந்தான் அகில். அவள் வெடுக்கென்று முகத்தை திருப்பியதும் இவனுக்கும் சுள்ளென்று கோபம் எழ, “ஆமா இவங்க பெரிய பேரழகி நாங்க இவளைப் பார்த்ததும் அப்படியே ரோசம் பொத்துகிட்டு வந்துருச்சு சரியான இராட்சசி, திமிர் பிடிச்சவ” என்று திட்டிக் கொண்டே காரை வேகமாக செலுத்தி அவன் அங்கிருந்து சென்றிருந்ததால் மலரின் அருகில் வந்து வாணி நின்றதை கவனிக்கவில்லை. அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பையும் அறிந்திருக்கவில்லை.

ஆனால் அவன் அதை அறிந்து கொள்கையில் அனைத்தும் கைமீறி சென்றிருக்கும்..

நேற்று போல் இல்லாமல் இன்று இருவரும் ஒன்றாகவே கல்லூரிக்கு சென்றனர். ஒன்றாக அமர்ந்து அன்றைய நாள் பொழுதை கடத்தினார்கள். அவ்வப்போது மலரிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தன் குறிப்பேடுகளில் கவனமாக அனைத்தையும் குறித்து வைத்துக் கொண்டாள் வாணி..

அதுவும் அவ்வபோது அவர்களுக்கு தெரியாமல் பெண்கள் இருவரையும் கண்காணித்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போல் தான் அவர்கள் பின்னே சுற்றிக் கொண்டிருந்தான் ஆதவ். அவனுக்கே தெரியாமல் அவனிடம் தன் மனதைப் பறி கொடுத்திருந்தாள் அந்த ஜூனியர் பெண். அதனால் ஆதவ்வைக் கண்காணிக்க ஆரம்பித்தாள்..

அதிலும் அவ்வப்போது ஆதவ்வின் செயல்கள் அந்த இரு பெண்களையும் சுற்றியே நகர்வதைக் கண்டவளுக்கு 'ஒரு வேளை பிளே பாயா இருப்பானோ?'௭ன சந்தேகம் வந்தது. ஆனால் அதையெல்லாம் நிவர்த்தி செய்யும் விதமாக அவன் மற்ற பெண்களிடம் கண்ணியத்துடன் பழகுவதோடு, தேவையின்றி பேசாததை கண்டறிந்தாள்.

ஆதவ் அவர்கள் இருவருக்கும் பாதுகாப்பு அரண் போல் செயல் படுவதை உணர்ந்தவளுக்கு அவர்கள் இருவரும் ஒன்று அவனுக்கு தெரிந்த பெண்களாக இருக்க வேண்டும் அல்லது ஒரே ஊரை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.‌ அப்படி இருக்கும் பட்சத்தில் தங்கள் ஊரை சேர்ந்த பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியவள் அதை உறுதி செய்யும் விதமாக தன் தோழிகள் இருவரை அனுப்பி அந்த பெண்கள் இருவரும் எந்த ஊர் என்ற டீடைல்லை விசாரித்து விட்டு வரச் சொன்னாள். விசாரித்ததில் அவர்கள் இருவரும் அவனது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது, அதனால் அந்த சந்தேகத்தை விடுத்து அவன் பின்னே சுற்ற ஆரம்பித்தாள், அன்று படியில் அவனிடம் தன் மனதைப் பறி கொடுத்த அவனது டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த ஜூனியர் மாணவி சுவாதீனா.

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. இதை ஏதும் அறியாத ஆதவ்வோ எப்போதும் போல் தான் உண்டு தன் படிப்புண்டு என‌ இருந்தவன் மூன்றாம் ஆண்டின் பாதியை எட்டி இருந்தான். மலர், வாணி இருவரும் தங்கள் முதல் வருட கல்லூரி வாழ்க்கையில் ஆறு மாதத்தினை நல்லபடியாக முடித்திருந்தனர். இந்த ஆறு மாத இடைவெளியில் தினம் கோவிலுக்கு செல்ல முயற்சித்தாள் வாணி. நேரமின்னை காரணமாக செல்ல முடியாததால் வாரம் இருமுறை எப்படியாவது கோயிலுக்கு சென்று விடுபவள் மானசீகமாக தன் கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிற்றை தந்தவனுக்காக வேண்டிக் கொள்வாள்..‌

அதேபோல் எப்போதாவது மலர் தாமதமாக கல்லூரிக்கு கிளம்பி வரும் போது எதிரில் அகிலைக் காண நேரிடும். ஆனால் அவன் முகத்தை திருப்பிக் கொண்டு செல்வதால், இவளும் எதுவும் பேசமாட்டாள், அவனை கவனிக்காதது போலவே சென்று விடுவாள். இப்படியே தான் இந்த ஆறு மாத காலமும் நகர்ந்து சென்றிருந்தது.


இங்கு தேவேஷ்வருக்கு சற்று உடல்நிலை சரியானதும் வெளியே செல்ல முற்பட்டவனை மீண்டும் வீட்டிற்குள் அடைத்து வைத்து எங்கும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.‌ கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் முடிந்த பின்பு அவன் உடல்நிலை சற்று சீரானது,‌ ஆனால் எங்கே அவனுக்கு மீண்டும் ஆபத்து வந்து விடுமோ என்று நினைத்து அவனை வெளியே அனுப்ப பயந்தார்கள். மேலும் பதினைந்து நாட்கள் கடந்த பிறகே வீட்டை விட்டு வெளியே வந்தான்.

அவன் முதலில் சென்றது கோயிலுக்கு தான். கடவுளை வணங்கி விட்டு அர்ச்சகரிடம் பேச்சு கொடுத்தவன் வாணியைப் பற்றி விசாரிக்க, அவரோ அவனை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தவர்,
“இங்க நிறைய பொண்ணுங்க வர்றாங்க நீங்க யாரை கேட்குறீங்கன்னு தெரியலையே தம்பி” என்று மழுப்பலாக பேசினார்.

இவனோ அன்று அவள் உடுத்தியிருந்த ஆடை அலங்காரங்கள் முதற்கொண்டு, அவளது பின்னலின் நீளம் வரை அனைத்தையும் சொல்ல அப்போதும் அவர் சொல்ல மறுத்தார். ‘இவர் எதுக்கு அந்த பொண்ண பத்தி கேக்குறாரு. வேணாம் நாம சொல்லாம இருக்குறது நல்லது, பாவம் மறுபடியும் அந்த பொண்ணுக்கு கஷ்டம் வராம இருக்கணும் அதுக்காகவாவது நாம சொல்லாம இருக்குறது நல்லது' என்று நினைத்தவர்,
“அப்படி எந்த பெண்ணையும் நேக்கு தெரியாது” என்று பதில் சொல்லி அனுப்பி வைத்து விட்டார்.

ஆனால் அதன் பிறகும் நாள் தவறாமல் கோயிலுக்கு வர ஆரம்பித்தான். ஆனால் அந்த வாரத்தில் மாதவிலக்கு ஏற்பட்டு இருந்ததால் வாணி கோவிலுக்கு வரவில்லை.‌ வாரம் முழுவதும் கோயிலுக்கு வந்து, அவளைத் தேடி நொந்துப் போனவன் ‘ஒருவேளை அந்த பொண்ணு இந்த ஊர் இல்லையோ’ என்று நினைத்து பெருமூச்சு விட்டவனாய் தளர்வோடு வீட்டிற்கு வந்தான்.

பின் தன் நண்பன் கார்த்திக்குக்கு அழைத்தவன் அவனது நலனையும், அவனது மனைவி கீதாவின் நலனையும் கேட்டு அறிந்து கொண்டான். தற்போது கீதா இரு மாத கருவை சுமந்து கொண்டு இருப்பதால் அவர்கள் அதைத் தெரிவித்தனர்.‌

மனமகிழ்வோடு அவர்கள் இருவருக்கும் வாழ்த்து சொன்ன தேவேஷ்வர்,“என்ன ஆனாலும் சரி இந்த ஊர் பக்கம் வந்துடாதீங்க.‌கீதாவோட ஃபேமிலி மெம்பர்ஸ் இன்னும் தீவிரமா உங்களை தேடிக்கிட்டு இருக்க மாதிரி தெரியுது, கண்டிப்பாக உங்களை தேடி கண்டு பிடிச்சே ஆகணுங்குற வெறியில இருக்காங்க, அதனால முடிஞ்சவரைக்கும் பத்திரமா இருங்க” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

மேலும் நண்பன் ஒருவனுக்கு அழைத்து சில விஷயங்களை பேசி முடித்துவிட்டு அழைப்பை துண்டித்தான்.‌ அன்று வாணியின் கழுத்தில் மாலை இடும் போது அருகிலிருந்த நண்பனுக்கு தான் அழைத்திருந்தான்.

அவனுக்கும் அப்பெண்ணின் நினைவு இருந்தாலும் சற்று தயக்கத்துடன் தேவேஷ்வரிடம் ஒரு கேள்வியை முன் வைத்தான். அந்த கேள்வி இன்னும் தேவேஷ்வரைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. ‘ஒருவேளை அந்த பொண்ணு அந்த தாலியை தூக்கி எறிஞ்சிட்டு போயிருந்தா என்ன பண்றது. இந்த ஆறு மாசத்துல அந்த பொண்ணுக்கு கல்யாணமாகியிருந்தா என்ன பண்றது?’ என்றெல்லாம் அவன் கேட்டு வைக்க தேவேஷ்வரின் மனமோ அப்படியும் நடந்திருக்குமோ என்றெண்ணி தவிக்க துவங்கியது.

அவனது மற்றொரு மனமோ ‘இல்ல அப்படியெல்லாம் இருக்காது‌. அன்னைக்கு தாலிய கழட்டி குடுன்னு கேட்டதற்கு திருப்பித் தர முடியாதுன்னு சொன்னாங்க, அப்படிப்பட்ட பெண் எப்படி அதை கழட்டி எறிஞ்சுட்டு போயிருக்க முடியும், எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணியிருக்க முடியும் கண்டிப்பாக அப்படியெல்லாம் நடந்துருக்காது, பார்ப்போம் தேடிப் பார்ப்போம் அவங்க எனக்குன்னு பொறந்தவங்களா இருந்தா என் தேடலோட விளைவா அவங்க கிடைப்பாங்க' என்று எண்ணியவன் மறுநாளில் இருந்து கோயிலுக்கு தினமும் சென்று கோயிலுக்கு வெளியே கடை வைத்திருப்பவர்களிடம் விசாரிக்கலாம் என்று எண்ணியிருக்க, அதற்கு முட்டுக் கட்டையாய் அவன் மறுநாள் காலையில் கிளம்பும் போது அவன் முன்னே வந்து நின்றார் சிவசுப்பிரமணியம்.

தந்தையை நிமிர்ந்து பார்த்தவன் எதுவும் பேசாமல் தலை குனிந்து கொள்ள, அவரும் சமையல் கட்டு பக்கம் திரும்பி, “இந்த அஞ்சலை வெளியவா” என்றழைத்தார்.

அவசர அவசரமாக அடுப்பு வேலையை விட்டு விட்டு வெளியே வந்தவர் தந்தை மகன் இருவரும் எதிரெதிரே முறுக்கிக் கொண்டு நின்றிருப்பதைக் கண்டு சட்டென்று நெஞ்சில் பரவிய அச்சத்துடன், “சொல்லுங்கங்க ” என்றார் கணவனிடம்.

“துரை எங்க கிளம்பிட்டாருன்னு கேளு” என்றார் தன் மனைவியிடம்.

அவனோ தயக்கத்துடன்,
“கோயிலுக்கு போறேம்மா” என்று சொன்னது தான் தாமதம் ஹாலில் இருந்த சோபாவை எட்டி உதைத்து தள்ளியவர், “கோயில்ல தினமும் உம்புள்ளைக்கு என்ன சோலின்னு கேளுலே. அங்கன சும்மா சாமி கும்பிட போனவியன் எதுக்காக அங்கிருக்கவுககிட்ட யாரையோ விசாரிக்கோணும்‌. தெனமும் கோயிலுக்கு போறியான் புள்ளை உருப்பட்டுருவியான்னு நான் கனா கண்டுக்கிட்டு இருந்தா உம்புள்ள என்ற மானத்தை வாங்கத்தேன் அங்கன போறான்னு இப்பத்தேன் தெரிய வருது.கோயிலு பூசாரித்தேன் சொல்லி அனுப்பியிருக்காரு, இவன் பண்ற கேடித்தனத்தை..” என்று உறுமினார்.

“ஏனுங்க யாரோ சொன்னாகன்னு நம்ம புள்ளைய ஏசுதீயலே, இது நல்லாவா இருக்கு”

“ஒருத்தன் சொன்னா வுட்டுறலாம், பத்து பேரு சொன்னா நான் என்ன நெனைக்கட்டும். உம்புள்ளைய மருவாதையா இருக்கச்சொல்லு இல்லன்னா நான் புள்ளைன்னு பாக்கமாட்டேன் அடி வெளுத்துப்புடுவென். உம்புள்ள‌ கோயிலுக்கெல்லாம் போக வேணாம் அதான் படிச்சு முடிச்சுட்டான்ல, நம்ம நெல்லு குடோனுக்கு போச்சொல்லு. அப்படியே வயக்காட்டையும் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வர சொல்லு. கூடவே சாயங்காலத்துக்குள்ள கரூர் டவுன் வரைக்கும் போயி தோட்டத்துக்கு தேவையான உரத்தையெல்லாம் நாம வழக்கமாக எடுக்கிற கடையில எடுத்துட்டு வரச் சொல்லு. விலாசம் அந்த டிவி பொட்டி மேல இருக்க நோட்டுல இருக்கு எடுத்துக்கிட்டு போய் வரச்சொல்லுலே. இதுக்கு மேலயாவது உம்புள்ளைய கொஞ்சம் சூதானமா இருக்கச்சொல்லு.‌ மத்தவியளுக்காக அதச்செய்யறேன், இதச்செய்யறேன்னு வயசு திமிருல ஆடிக்கிட்டு தேவையில்லாம எதையாவது இழுத்துக்கிட்டு வந்து நின்னான்னு வச்சுக்க, இதுக்கு மேல ஆம்பிள பிள்ளை, தோளுக்கு மேல வளந்தவியன்னு கூட பார்க்க மாட்டான் கட்டி வெச்சு தோலை உருச்சுப்புடுவெங்குறதை நெனப்புல வெச்சுக்கிட்டு கிளம்ப சொல்லு” என்று காட்டமாக சொல்லி விட்டு வெள்ளைத் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு நடையை கட்டினார்.

அவர் சொன்னதைக் கேட்டு ஸ்தம்பித்து விட்டான் தேவேஷ்வர். தந்தை சொல்லை மீறி சென்றாலும் பிரச்சனை போகாவிட்டாலும் தன் மனம் கவர்ந்தவளைக் கண்டுபிடிக்க முடியாது என்பதால் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றிருந்தான்..

- தேடல் தொடரும்..
 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல் -17

கணவர் சென்றபின் மகனின் அருகில் நெருங்கிய அஞ்சலை,
“அப்பாரு சொல்றபடி கேளு கண்ணா உனக்காக எவ்வளவு பெரிய காரியமெல்லாம் செஞ்சிருக்காரு தெரியுமா. அவுக பேச்சை கேட்கலன்னா உன்னை மறுக்கா மறுக்கா வஞ்சிக்கிட்டே இருப்பாங்க, வெளியே போவாத ராசா அப்பா சொல்ற வேலையை செஞசுடுலே. எதுக்காக நீ தெனமும் கோவிலுக்கு போறவென்,‌ அப்பாரு சொல்றது மாதிரி யாரையாவது தேடிக்கிட்டு இருக்கவனா‌‌,‌ அது பொண்ணா?” என்று கேட்டார்.

சட்டென்று அதிர்வுடன் தன் தாயை திரும்பிப் பார்த்தான் தேவேஷ்வர். தந்தை பேசும் போது 'பெண்' என்ற வார்த்தையை உபயோகபடுத்தவே இல்லை ஆனால் தாய் சொல்கிறாரே, ஒரு வேளை உண்மை தெரிந்திருக்குமோ என்ற பதைபதைப்பில், “அப்பாரு எங்கம்மா பொண்ணுன்னு சொன்னாரு, நீங்க பாட்டுக்கு எதையாவது உளறி வைக்காதீக” என்று மழுப்பலாக பதிலுரைத்து அவர் மனதில் இருப்பதை அறிந்து கொள்ள முயன்றான்.

“அவுக சொல்லித்தேன் தெரியோணுமாக்கும்.‌ தெரியாமத்தேன் கேட்குறேன் அவருக்குத்தேன் உன்னை பத்தி சொல்றதுக்கு ஆளுக இருப்பாகளா, எனக்கெல்லாம் தெரிந்தவுக இருக்க மாட்டாகளா, இல்ல அவுகதேன் உன்னிய பத்தி எங்கிட்ட சொல்லாம போயிடுவாகளா.‌ ஒரு வாரத்துக்கு முன்னுக்கவே தெரியும் உன்னோட நடவடிக்கை ஏதோ சரியில்லைன்னு.‌ பூசாரியில இருந்து, கோயிலை கூட்டி பெருக்குறவுக வரைக்கும் அம்புட்டு பேரும் சொல்றாவுக, ஒரு பொண்ணோட அடையாளத்தை சொல்லி விசாரிக்கிட்டு இருக்கவென்னு. அப்படி உனக்கு அந்த பொண்ணைப் புடிச்சிருந்தா நீ என்கிட்ட சொல்லி இருக்கலாமே ராசா, நீயே போய் தேட வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு, நான் பார்த்து கட்டி வெச்சுருக்கமாட்டேனா?” ஆதங்கத்தோடு கேட்டார்.

“அம்மா அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லம்மா அவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான் ஆனா எந்த ஊருன்னு தெரியல அவங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும், கூடவே அவங்களோட பொருள் ஒண்ணு என்கிட்ட இருக்குது அதை கொடுக்கணும் அதுக்காண்டி தான் தேடுனேன், நீ பாட்டுக்கு எதையாவது நினைச்சுக்கிட்டு இருக்காத சரியா. நான் அப்பாரு சொன்ன வேலையைச் செய்ய போறேன் இல்லைனா அதுக்கும் வந்து சாயந்திரம் திட்டுவாக” என்று சொல்லி விட்டு அவசர அவசரமாக தன் இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு விரைந்தான்.

மகன் மழுப்பலாய் பதில் உரைத்ததும், இப்போதும் பதற்றத்துடன் இங்கிருந்து தப்பித்து ஓடுவதையும் கண்டு, தான் நினைத்தது தான் உண்மை என்றுணர்ந்த அஞ்சலை,’அந்த பொண்ணு யாருன்னு தெரியல, தெரிஞ்சா அந்த பிள்ளையை நம்ம பையனுக்கு கட்டி வச்சுடணும். ஒரு பொண்ணுக்காக இம்புட்டு தூரம் மெனக்கெடுறான்னா கண்டிப்பா அந்த புள்ளையும் இவனை நல்லா பார்த்துக்கிடும். அந்த பிள்ளை மேல உசுர இருக்கவும் தானே இப்படி தேடி திறியிறியான், கண்டிப்பா அந்த புள்ளைய எம்மவனுக்கு நான் கட்டி வெப்பேன்' என்று நினைத்தவராய் தான் விட்டு விட்டு வந்த சமையல் வேலையை கவனிக்க சென்றார்.


தாயிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று வெளியே ஓடிவந்த தேவேஷ்வரும் அவசர அவசரமாகத் தன் பைக்கை ஸ்டார்ட் செய்து முதலில் தோட்டத்துக்கு சென்றவன், அங்கு வேலை ஆட்கள் எல்லாம் வேலை செய்வதை எட்ட நின்று பார்த்து விட்டு வயலில் கூட நுழையாது குடோனுக்கு சென்றுவிட்டான்.‌ குடோனில் இருந்து நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் ஒருமுறை மேற்பார்வை கண்டு விட்டு இரண்டு மணி ஆனபோது மீண்டும் வீட்டிற்கு வந்து மதிய உணவை உண்டு விட்டு கரூருக்கு கிளம்பினான். ஏனோ அவனது சிந்தனையில் வாணி தான் நிறைந்திருந்தாள். அவளை ஒரு முறையேனும் எங்காவது கண்டு விட மாட்டோமா என்று அவன் உள்ளம் தவிப்புடன் துடித்தது.

அலைந்து திரிந்து தோட்டத்திற்கு தேவையான உரங்கள் அனைத்தையும் வாங்கி ஆட்டோ ஒன்றை பிடித்து அதில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டு தன் இரு சக்கர வாகனத்தை அவன் உதைத்துக் கிளப்பிய போது மணி நான்கை தாண்டியிருந்தது. சலிப்புடன் மணிக்கட்டில் இருக்கும் கடிகாரத்தை ஒருமுறை குனிந்து பார்த்து விட்டு வண்டியை இயக்கியவன் மிதமான வேகத்தில் அங்கிருந்து நகர்ந்தான்.

சரியாக அந்த கலைக் கல்லூரியின் அருகே வந்தபோது அவனது மனதில் ஒரு எண்ணம் எழுந்தது.‌ ‘ஒருவேளை அவ காலேஜ் படிக்கிற பொண்ணா இருந்தா என்ன பண்றது?’ என்ற எண்ணம் எழுந்ததும் அவனது விழிகள் அந்த கல்லூரியின் முகப்பு வாயிலேயே நோட்டமிட்டது.‌ வாயிலைப் பார்த்து விட்டு அதன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தான். அந்த கல்லூரியை விட்டு சற்று தள்ளி எதிர்ப்புறம் இருந்த பேருந்து நிலையத்தை பார்த்தவனது விழிகள் அப்படியே நிலை குத்தி நின்றது.

நிச்சயம் தன் மனம் கவர்ந்தவளை அங்கு பார்ப்போம் என்று அவன் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.‌ விழியகலாது, இமைக்கொட்டாது அவளையே பார்த்தான்.

வாணியோ இதை அறியாமல் அருகிலிருந்த மலரிடம் எதையோ சொல்லி சிரித்தவாறு நின்றிருந்தாள். அதுவும் ஆகாய வண்ண நிறத்தில் உடை அணிந்து அவ்வப்போது வெண்பற்கள் தெரிய சிரித்து கண்களை சிமிட்டி கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தாள். அவளது பாவனையில் சத்தியமாக தன் மனதை பறிகொடுத்து விட்டான் தேவேஷ்வர். தன்னிலை மறந்து அவளையே பார்த்திருந்தவன் ஒரு உந்துதலில், அவள் முன்னால் தான் சென்று நின்றால் அவளது முக பாவனைகள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு அவர்கள் அருகில் சென்று தன் வண்டியை நிறுத்தினான்.

மலரிடம் எதையோ சொல்லி விட்டு பைக்குள் இருந்த சாக்லேட்டை தேடிக் கொண்டிருந்தாள் வாணி. அதே நேரத்தில் அவர்கள் அருகே வந்து நின்றான் தேவேஷ்வர்.‌ பேருந்து வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த மலர் அவனைக் கண்டதும் அகமும் முகமும் மலர,
“ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க?” என்றாள் ஒருவித குதூகலத்துடன்.

அவனும் அப்போது தான் மலரைப் பார்த்தவனாய்,
“ஓஓ இந்த காலேஜ்ல தான் படிக்கிறியா, நான் சூப்பரா இருக்கேன்டா நீ எப்படி இருக்குற?” என்று கேட்டான்.

“நான் நல்லா இருக்குறேன் அண்ணா நீங்க இப்ப எப்படி இருக்கீங்க, உங்க உடம்பு பரவாயில்லையா. காலேஜ் படிச்சு முடிச்சுட்டு வந்ததும் வராததுமா வம்பு வளர்த்து வச்சிருக்கீங்க. ஆனாலும் உங்களுக்கு செம தில்லு தான் அண்ணா ஒரு லவ் ஜோடி சேர்த்து வைக்க உங்க உயிரையே பணயம் வச்சிருக்கீங்களே நீங்க கிரேட் தான்” என்றாள் பூரிப்புடன்..

தேவேஷ்வருக்கோ அவள் பாராட்டியதில் தன்னையும் மறந்து வெட்கம் வர தலைகுனிந்து சிரித்தவன்,
“அப்படியெல்லாம் எதுவும் இல்லமா, நட்புக்காக எதையும் செய்யலாம் அவ்வளவுதான்” என்றான்.

அப்போதுதான் சாக்லெட்டை எடுத்துக் கொண்டு நிமிர்ந்த வாணி அந்த குரலை எங்கோ கேட்டது போலிருக்கிறதே என்றெண்ணி அவனிடம் பார்வையைத் திருப்பிவள் அவனைக் கண்டதும் இன்பமாக அதிர்ந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

அதிலும் அவளது விழிகளில் ஒரு நிமிடம் வந்துபோன மின்னல் ஒளியை கண்டு அவனது உள்ளம் குதூகலித்தது. அவளும் தன்னை மறக்கவில்லை என்ற உணர்வே அவனை மெய்மறக்கச் செய்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க அதை கண்ட மலர் தயக்கத்துடன்,
“இவளை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” என கேட்டாள்.

அதன் பிறகே தான் கேட்ட கேள்வி தவறு என்பது போல் மானசீகமாக தலையில் கொட்டிக் கொண்டவள், “எதிரெதிர் வீட்டுல இருக்கீங்க அப்படி இருக்கும் போது உங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியாம இருக்குமா” என்றாள்.

அப்போது தான் இருவருக்கும் எதிர் எதிர் வீட்டில் தாங்கள் இருக்கிறோம் என்பதே தெரிந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதி காத்தனர்.

“எனக்கு இவரை தெரியாது” என்றாள் வாணி மெல்லிய குரலில்.

அதே போல் அவனும் அவளையே குறுகுறுவென்று பார்த்தவாறு, “எனக்கும் இவங்களை தெரியாது மலர்,‌ இவங்க யாரு உன் பிரண்டா?” என்று கேட்டான்.

“ஆமாணா என்னோட பிரண்டு தான் பேர் மதுரவாணி, இப்ப இவ என்னோட பெஸ்ட் பிரென்ட்டாகிட்டா தெரியுமா!”

”சரிம்மா உங்களுக்கு பஸ் வந்துருச்சுன்னு நினைக்கிறேன் நாளைக்கு பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு அவன் அங்கிருந்து நகர,
‘நாளைக்கு ஏன் பார்க்க வேண்டும்?’ என்ற எண்ணம் மலரினுள்ளும் எழாமல் இல்லை. அதேநேரம் ‘தனக்காகத் தான் இப்படியொரு வார்த்தையை சொல்லி விட்டு செல்கிறானோ?’ என்ற கேள்வியோடு அவனையே பார்த்திருந்தாள் வாணி.

அவளது பார்வையின் பொருள் புரியாமல் குழம்பிய மலரோ,‌
“ஏய் உண்மைய சொல்லுடி தேவ் அண்ணாவ உனக்கு ஏற்கனவே தெரியுமா?” என்று கேட்டாள்.

சட்டென்று பதற்றமடைந்த வாணி,“ இல்லை.. இல்லை இல்லை அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஜஸ்ட் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சு அதான் பார்த்தனே தவிர வேற ஒன்னும் இல்லை” என்று மழுப்பலாக பதிலுரைத்தாள்.‌

ஆனால் அவளையே குறுகுறுவென்று பார்த்த மலர்,
“ம்ஹூம் நீ எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிறன்னு தெளிவா தெரியுது, ஆனா ஏன் மறைக்கிறன்னு தான் தெரியல. ஆனா கூடிய சீக்கிரம் அதையும் கண்டுபிடிச்சுருவேன்” என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.

‘அப்பாடா ஒரு வழியா தப்பிச்சோம்’ என்று தனக்குள்ளே சொல்லி கொண்டு நெஞ்சில் கை வைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட வாணியும் மலரின் பின்னே சென்றாள். ஆனால் பேருந்தில் ஏறுவதற்கு முன் மீண்டும் ஒருமுறை தங்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த தேவேஷ்வரை பார்த்து விட்டு அதன் பிறகு தான் படியேறினாள்.
மலரும் ஓரவிழியால் அதை கவனித்தாலும் எதுவும் தெரியாதது போல் இருந்து கொண்டாள்.

தன் இரு சக்கர வாகனத்தில் மிதமாக பயணித்த தேவேஷ்வருக்கு சிறகின்றி விண்ணில் பறப்பது போலிருந்தது. அவளைப் பார்த்து விட்ட மகிழ்விலும், அவளுக்கும் தன்னை ஞாபகம் இருக்கிறது என்ற உணர்வும் அவனை மகிழ்ச்சியான ஒரு உணர்வு குவியலுக்குள் தள்ளி இருந்தது.
அதிலும் தன்னைக் கண்டதும் அவள் முகத்தில் வந்து போன மின்னலும், மகிழ்வும் அவனை இன்னதென்று சொல்ல முடியாத ஒருவித பிரமிப்பில் ஆழ்த்தி இருந்தது.

இப்பொழுதே அவளிடம் தன் மனதில் இருப்பதை தெரிவித்து விடும் ஆவலும் அதிகரித்தது, பரபரப்பும் தொற்றிக்கொண்டது ஆனால் இருக்கும் இடம் சூழ்நிலை கருதி அமைதி காத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படியே அவளை கூட்டிக்கொண்டு எங்காவது சென்றுவிட வேண்டும் என்ற எண்ணமும் மனதில் எழுந்தது.‌ இருந்தும் அவள் எங்கிருக்கிறாள் என்று தெரிந்து விட்டதால், இனிமேலாவது அவளைப் பற்றிய விவரங்களை சேகரித்து அவளிடம் பழகிய பின்னர், அவள் மனதில் உள்ளதையும் அறிந்து கொண்ட பின்னர் தன் மனதில் உள்ளதை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மெதுவாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.‌

சற்று நேரத்தில் மலர் வாணி இருவரும் சென்ற பேருந்து அவனைக் கடக்க முயன்றது.‌ ஜன்னலின் ஓரம் அமர்ந்து இருந்த வாணியோ எட்டி எட்டி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். தற்போது அவனை முந்திச் செல்ல பேருந்து முயன்ற வேளையில் அவனை ஓர விழியால் பார்க்காமல் நேரடியாகவே பார்த்தாள் வாணி. அவனோ எதேச்சையாக நிமிர்ந்து அவள் இருந்த ஜன்னல் இருக்கையைப் பார்த்தவன் தன் பற்கள் தெரியும் அளவிற்கு புன்னகைத்து, “எப்படி இருக்க?” என்று கேட்டான் இதழ் அசைவில்..

அவன் அவ்வாறு கேட்டதும் ஒருவித உணர்வுக் குவியலுக்கு உட்பட்ட வாணி சட்டென்று முகத்தை மடியில் இருந்த கல்லூரி பையின் மீது புதைத்துக் கொண்டாள், ஆனால் சில நிமிடங்களில் ஓர விழியால் அவனைப் பார்த்தவள் எதுவும் பேசாமல் புன்னகைக்க முயன்றாள்.‌ ஆனால் அவள் முகமோ அவன் செய்த செயலால் அடுத்த நிமிடம் செக்கச்செவேலென்று சிவந்து போனது.

அவளிடமிருந்து பதில் வராது போக ஒருவித தவிப்புக்குள்ளான தேவேஷ்வர் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தியவன் அவளிருந்த இருக்கைக்கு நேராக வந்ததும் வேகத்தை சமநிலைப்படுத்தியவன் அவளிடம், “எப்படி இருக்குறன்னு கேட்டா பதில் சொல்ல மாட்டியா, என்னை ஞாபகம் இருக்குதா?” என்று மீண்டும் இதழ் அசைவில் கேட்டான்.

ஓர விழியால் அவனைப் பார்த்தவளோ அப்போதும் பதில் பேச முற்படவில்லை. ஆனால் அவளது கன்னங்கள் இரண்டும் செம்மையுற்றன.‌ அதைக் கண்டவன் ஒற்றைக் கண் சிமிட்டி இதழ் குவித்து முத்தமிடுவது போல் சைகை காண்பித்து விட, அதைக் கண்ட வாணி செங்கொழுந்தாக சிவந்து போனாள். இவற்றையெல்லாம் கண்டும் காணாமலும் அமர்ந்திருந்தாள் மலர்.

‘நிச்சயம் இருவருக்குள்ளும் ஏற்கனவே பழக்கம் இருக்கிறது' என்று அவளுக்கு தெளிவாகப் புரிந்து போனது. ஆனால் எப்படி என்றுதான் அவளால் கணிக்க முடியவில்லை.‌ கல்லூரி படிப்பை முடித்து விட்டு தேவேஷ்வர் இந்த ஊருக்கு வந்த அன்று தான் அவனுக்கு அடிபட்டு மருத்துவமனையில் இருந்தான். சொல்லப்போனால் அந்த நிகழ்வுக்கு பிறகு இப்போது தான் அவன் வெளியில் நடமாட ஆரம்பித்திருப்பதாக பக்கத்து வீட்டு அக்கா பேசிக் கொண்டதை அவள் காலையில் தான் கேட்டு விட்டு வந்தாள். அப்படி இருக்கும் போது இருவருக்குள்ளும் எப்படி பழக்கம் ஏற்பட்டு இருக்கும் என்ற வினாவிற்கான விடை தெரியாமல் குழம்பித் தவித்தாள்.

ஆனால் அவர்கள் இருவருக்கும் எந்த ஒரு குழப்பமும் இல்லை இருவரும் ஒருவரை ஒருவர் விழிகளால் ரசித்துக்கொண்டிருந்தார்கள். அதற்குள் பேருந்து அவனை கடந்து முன்னே சென்று விட்டதால் அவன் பின் தங்கிவிட்டான்.‌ ஆனால் இந்த நிகழ்வு அவனை ஒருவித பிரமிப்பில் ஆழ்த்தியது.‌ அவளிடம் தான் இப்படி பேசுவோம், நடந்து கொள்வோம் என்று அவன் கனவில் கூட நினைத்ததில்லை.‌ அவளை மீண்டும் சந்தித்ததே கனவு போல் இருக்க, இப்போது அவளிடம் தன்னை மீறி முத்தச் சைகை காட்டி விட்டதை எண்ணி தவித்துப் போனான்.

ஏதோ ஒன்று அவன் நெஞ்சை பிசைய மீண்டும் முன்னால் செல்ல முயன்றான். ஆனால் அதற்குள் பேருந்து அசுர வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டிருந்தது. இவனும் வேகமாக செல்லத்தான் முயன்றான் ஆனால் அவள் கூட மலர் இருப்பதால் தான் ஏதேனும் செய்யப் போய், அது அவளுக்கு தெரிந்து மீண்டும் ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்ததால் அவன் அப்பேருந்தை பின்தொடவில்லை. அதுவும் தனக்கு பிரச்சினைகள் வந்தால் கூட ஏதாவது செய்து விடலாம், அவளுக்கு வந்தால் என்ன செய்வது என்று எண்ணி தான் பின் தங்கினான்.

பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றதும் மலர்,வாணி இருவரும் இறங்கினார்கள்.‌ மலர் அங்கிருந்து செல்ல முயன்ற வேளையில் வாணி, “மலர் ஒரு நிமிஷம்” என்று அழைத்து தடுத்து நிறுத்தினாள்.

என்ன என்பது போல் திரும்பிப் பார்த்த மலரிடம், “நாளைக்கு நான் கோயிலுக்கு போகணும், அதனால நாளைக்கு நான் காலேஜ் வரலடி” என்றாள் நா தந்தியடிக்க, படபடப்பு கலந்த பயத்துடன்.‌

“அப்படியா.‌ எப்பவும் காலேஜ் வந்துட்டு அதுக்கப்புறம் தானே கோயிலுக்கு போவ, நாளைக்கு என்ன லீவு போட்டுட்டு கோயிலுக்கு போற, எதாவது விஷேஷமா?” என்றதும் ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்த வாணி சட்டென்று ஏதோ வாய்க்கு வந்ததைச் சொல்ல முடிவு செய்தவளாய், “இல்ல நாளைக்கு அம்மாவோட பொறந்தநாளு அதான்”, என்று மழுப்பலாக பதில் உரைத்தாள்.

“சரி சரி தாராளமா போ நான் வேணான்னு சொல்லலை. ஆமா அதை சொல்றதுக்கு ஏன் இப்படி பயப்படுற, நீ எதுக்கும் கவலைப்படக் கூடாது. அம்மா அப்பா எங்க இருந்தாலும் உன்னை பார்த்து பெருமைப்படுவாங்க, சந்தோஷப்படுவாங்க சரியா. ஆமா நீ மட்டும் தனியா போயிட்டு வந்துடுவியா இல்ல நானும் லீவு போட்டுட்டு கூட வரட்டுமா?”

“இல்ல.. இல்ல.. இல்ல.. இல்ல நீ லீவ் போட்டுட்டு எல்லாம் வர வேண்டாம் நாளைக்கு லேப் டெஸ்ட் இருக்குன்னு சொல்லி இருக்காங்க. நாளைக்கு ஏதாவது வொர்க் கொடுத்தா என்ன பண்றது, நானும் லீவ் போட்டுட்டேன் நீயும் லீவு போட்டா நமக்கு யாரு நோட்ஸ் தருவாங்க,‌ அதனால நீ காலேஜ் போடி நான் கோயிலுக்கு போறேன்.‌ ஈவினிங் நானே உங்க வீட்டுக்கு வந்து நோட்ஸ் வாங்கிக்கிறேன்” என்று சொல்லி விட்டு வேக வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள் வாணி.

செல்லும் அவளையே சில நிமிடங்கள் குறுகுறுவென்று பார்த்த மலர், “பொய் சொல்றடி. என்கிட்ட மொத மொத பொய் சொல்ற வாணி நீ, அதனால தான் இப்படி பயந்து நடுங்குகிற. எனக்கு என்னமோ எங்கேயோ நீ லாக் ஆகிட்டன்னு தான் தோணுது பார்ப்போம் விஷயம் வெளிய வராமலா போயிரும். உங்க ரெண்டு பேருக்குள்ளையும் ஏதோ சம்திங் சம்திங் ஓடுற மாதிரி இருக்குது, எத்தனை நாள் தான் என்கிட்ட இருந்து இதை மறைக்கிறிங்கன்னு நானும் பார்க்கிறேன்’ என்று நினைத்துக்கொண்டு இவளும் வீட்டிற்கு செல்ல திரும்பிய வேளையில் அவளை இடிப்பது போல் வந்து நின்றது அகிலனின் கார்.

அதிர்ச்சியில் ஒரு நிமிடம் அவளுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் போலிருந்தது. பயத்தில் வேகமாக துடித்த நெஞ்சை சமன்செய்யும் பொருட்டு வலது கையை இடது நெஞ்சின் ஓரம் வைத்து அழுத்தி விட்டு கொண்டவள் இரண்டடி தள்ளி நின்றவாறு காரையே வெறித்துப் பார்த்தாள், ஏனெனில் அது அகிலனின் கார்.

அதைக்கண்ட பின்னும் எதுவும் பேசத் தோன்றாமல் அங்கிருந்து அவள் நகர்ந்த வேளையில் காரில் இருந்து கீழே இறங்கி வந்த அகிலன், “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் எடுத்த எடுப்பிலேயே.

அவளோ அவனை முறைத்துப் பார்த்து விட்டு, “உங்கக்கிட்ட பேசணும்ணு எனக்கு எந்த அவசியமும் கிடையாது”, என்று சொல்லிவிட்டு இரண்டு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள் அவளது கையை பிடித்து இழுத்து சென்று காரினுள் தள்ளி கதவை லாக் செய்தவன் தானும் மறுபக்கம் ஏறி அமர்ந்து வண்டியை மீண்டும் கரூர் செல்லும் ரோட்டில் திருப்பி இருந்தான். அதற்குள் மழை வேற பெய்ய துவங்கியிருந்தது..

அவனது செயலில் உருவாகியிருந்த உச்சகட்ட கோபத்தோடு காருக்குள் தாறுமாறாகக் கிடந்த மலர் எழுந்து நன்றாக அமைந்தவாறு,
“மரியாதையா காரை நிறுத்தியிருங்க,‌ நான் வீட்டுக்கு போகணும் மழை வேற பெய்து”, என்றாள் படபடப்போடு.

“உன்கிட்ட நான் பேசணும்.‌ அஞ்சு நிமிஷம் தான், நான் பேச வேண்டியதை பேசி முடிச்சுடுறேன் அதுக்கப்புறம் நீ எங்கேயோ போ” என்றான் காரை வேகமாக ஓட்டிக்கொண்டு.

“மழை பெய்யுது நான் வீட்டுக்கு போகணும், இப்ப காரை நிறுத்துறீங்களா, இல்ல நான் கார்ல இருந்து கீழே குதிக்கட்டுமா?” என்றவள், சொன்னவாறே காரின் கதவை திறக்க முயல, அடுத்த கணம் அவளது கையிரண்டும் அகிலனின் ஒற்றைக் கையிக்குள் சிறைப்பட்டிருந்தது.

- தேடல் தொடரும்...
 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல் -18


அவன் கைகளுக்குள் சிறைபட்டு இருந்த தன் கரங்களை மீட்டுக்கொள்ள ரொம்பவே போராடினாள் மலர். ஆனால் அகிலனின் பிடி உடும்பு பிடியாக இருந்தது. சில நிமிடங்களில் பெருமூச்சு விட்டு தன்னை சமன் செய்து கொண்டவன் மெதுவாக அவளது கரங்களை விட்டுவிட்டு, “இங்க பாரு உன்கிட்ட பேசணும்னு தான் கூட்டிட்டு வந்தேன், வேற எந்த தப்பான நோக்கமும் கிடையாது. ப்ளீஸ் ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியா இரு என் மனசுல இருக்குறதை நான் சொல்லிட்டு போயிறேன், இல்லனா என்னால நிம்மதியா தூங்க கூட முடியாது” என்றான்.

அவன் சொன்னதை குழப்பத்துடன் பார்த்திருந்தாள் மலர். பின், “எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க நான் வீட்டுக்கு போகணும் டைம் ஆகுது, வீட்ல தேடுவாங்க” என்றாள் உண்மையான வருத்தத்துடன்.

மீண்டும் ஒரு முறை ஆழமாக மூச்சை இழுத்து வெளியிட்டவன்,
“நீ என்னை ஒரு நாலு மாசமா ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுற, என்னால தூங்க முடியல சாப்பிட முடியல. எப்ப பார்த்தாலும் உன் நினைப்பாவே இருக்கு, எங்க பார்த்தாலும் நீயே தான் தெரியிற, ஆபீஸ்ல வேலை செய்ய முடியல, கவனம் சிதறுது நான் என்ன பண்ணட்டும் பதில் சொல்லு” என்று கேட்டான்.

அவளோ இன்னும் குழப்பம் சுமந்த முகத்துடன் அவனை ஏறிட்டுப் பார்த்து,“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு சுத்தமா புரியல. நான் எதுக்கு உங்களை டிஸ்டர்ப் பண்ண போறேன், இன்னும் சொல்லப்போனா எப்பவாவது ரோட்ல உங்களை பார்ப்பேன் ஆனா அப்பவும் நான் அமைதியா கடந்து போயிருவனே தவிர உங்கக்கிட்ட பேசணும்னு முயற்சி பண்ணுனது கூட கிடையாது. அப்படி இருக்கும் போது நான் எப்படி உங்களை டிஸ்டர்ப் பண்ணியிருக்க முடியும்?” என்று கேட்டாள்.

அவன் என்ன சொல்ல வருகிறான் என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை. அவனிடம் பேச கூட முயற்சிக்காத தான் எப்படி அவனை தொந்தரவு செய்ய முடியும் என்று தான் நினைத்தாள். ஆனால் அவளைப் பற்றிய நினைவுகள் அவனை இம்சிக்கிறது என்றோ, பலநாள் இரவுகள் அவளை நினைத்து தூங்காமல் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு கிடந்திருக்கிறான் என்றோ, கண்ணை மூடினால் அவளைப் பற்றிய கனவுகளும், அவளுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளும் கண்முன்னே வந்து அவனது தூக்கத்தை எப்போதோ களவாடி சென்றிருந்தது என்றோ அவள் அறிந்திருக்கவில்லை, அவளுக்கு தெரியவுமில்லை. அப்படி ஒரு எண்ணம் அவன் மனதில் வந்து இருக்கும் என்று அவள் யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டாள்..

அவனோ அவள் கேள்வி கேட்ட விதத்தில் இதழ்களில் துளிர்க்கப் பார்த்த புன்னகையை கஷ்டப்பட்டு அடக்கியவன்,
“நீ என்கிட்ட நேர்ல பேசலை, என்னை தொந்தரவு பண்ணல ஆனா கனவுல டிஸ்டர்ப் பண்றியே நான் என்ன பண்ணட்டும். எனக்கு உன்ன பிடிச்சிருக்கு, ரொம்ப பிடிச்சிருக்கு ஐ திங்க் உன்னை லவ் பண்றேன்னு நினைக்கிறேன், அதனால தான் இப்படி எல்லாம் தோணுது”, என்றான் வெளிப்படையாக.

தனக்குத் தோன்றும் எண்ணத்தை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வெளிப்பூச்சு எதுவுமில்லாமல் இதுதான் விஷயம் இப்படி தான் எனக்கு நடக்கிறது, அதற்கு காரணம் நீதான், அதற்கு பதில் சொல் என்று கேட்டுவிட்டு அவன் அமைதியாகி விட்டான். ஆனால் மலரோ அவன் சொன்னதைக் கேட்டு உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.

இப்படி ஒரு கோணத்தில் அவன் பேசுவானென்று அவள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நட்பைத் தாண்டி ஒரு ஆணிடத்தில் காதல் என்ற ஒரு உணர்வு தனக்கும் தோன்றும், அதை தானும் வெளிப்படுத்துவோம் என்றெல்லாம் அவள் நினைத்து பார்த்தது கூட இல்லை. தனக்கு பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு போக வேண்டும் என்று தான் என்றோ ஒருநாள் தோழிகளுடன் பேசுகையில் சொல்லியிருக்கிறாள், அப்படித்தான் அவளும் நினைத்திருக்கிறாள், இது போல் காதலிக்க வேண்டும் என்று அவள் நினைத்தது கூட இல்லை என்றே சொல்லலாம்.

அப்படி இருக்கும் போது ஒருவன் உன்னை நேசிக்கிறேன், உன் நினைவுகள் என்னைத் துரத்துகிறது, துன்புறுத்துகிறது உன் நினைவாகவே உள்ளது, என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை, ஏன் இப்படி செய்தாய், இதற்கு ஒரு வழி சொல் என்று வெளிப்படையாக நேருக்கு நேராக கேட்கும் போது பெண்ணவளால் பதில் சொல்ல முடியவில்லை.

காருக்குள் பெரும் அமைதி நிலவியது. ஆனால் வெளியே மழையோ பெரும் சத்தத்தோடு பூமியை நனைத்துக் கொண்டிருந்தது. நிமிடங்கள் கரைய துவங்கின, அவளுக்கு வீட்டிற்கு செல்ல நேரம் ஆகிறது என்பதை உணர்ந்தவன் மெதுவாக அவள் கைகள் இரண்டையும் எடுத்து தன் இடது கைக்குள் வைத்து அதன் மீது தன் வலது கையை வைத்து பாதுகாப்பாக பிடித்துக் கொள்வது போல் வைத்துக் கொண்டவன், “நான் உன்கிட்ட உன்னோட விருப்பத்தை கேட்கல, உன்னை எனக்கு பிடிச்சிருக்கு அதனால தான் இப்படி எல்லாம் தோணுதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். நான் புரிஞ்சுகிட்டதை உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன் சொல்லிட்டேன்.

அதே மாதிரி உன் மேல கோவம் இருந்துச்சு தான், ஆனா அந்த கோவம் எப்ப காதலா மாறுச்சுன்னு கேட்டா எனக்கே தெரியலன்னு தான் சொல்லுவேன். அன்னைக்கு ஒரு பெரியவர் ரோட்டுல விழுந்து கிடந்தார்னு உன்னோட துப்பட்டாவை எடுத்து அவருடைய காயத்துக்குக் கட்டுப் போட்ட பாத்தியா அந்த நிமிஷத்துல மாறி இருக்கலாம்.‌ இல்லையா மழையில சின்ன புள்ள மாதிரி ஆட்டம் போட்டு நடு ரோட்டுல விளையாடிட்டு இருந்த பாத்தியா அந்த நிமிஷத்துல உன்னை எனக்கு பிடிச்சுருந்திருக்கலாம்.

அதுவும் இல்லையா வாய்காக்கரையில குளிக்கும் போது அழகா தெரிஞ்சுயே அதுகூட நீ எனக்குள்ள வர்றதுக்கு காரணமாக இருந்திருக்கலாம்” என்றான்.

அவளோ அதிர்ந்து போய் அவன் முகத்தை பார்க்க, “என்ன நானெல்லாம் வாய்க்கால் பக்கம் வரமாட்டேன்னு நினைச்சியா?” என்றதும் அவள் தலை இயல்பாகவே ஆமாம் என்று அசைந்தது.

“எப்பவும் வரமாட்டேன்,‌ எப்பவாது வருவேன் அப்படி வரும் போது தான் உன்னை பார்த்தேன். தப்பா பாக்கல எதேச்சையா பார்த்தேன். தப்புதான் ஆனாலும் அந்த நிமிஷம் நீ வேற ஒரு பொண்ணுன்னு எனக்கு தோனல எனக்கு உரிமையானவன்னு தான் தோணுச்சு.‌ இதுக்கெல்லாம் பேரு என்ன, என்ன அர்த்தம்னு அப்ப புரியல, ஆனா இப்ப புரிஞ்சிடுச்சு. அதான் அதை உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன் சொல்லிட்டேன், நீ எனக்கு பதில் சொல்லணும்னு அவசியமில்லை ஆனா உன்னைத் தவிர வேற யாரையும் என்னால கல்யாணாம் பண்ணிக்க முடியாது. நாங்க ஒன்னும் தொன்றுதொட்டு பணக்காரங்க கிடையாது, உழைப்பால அடித்தட்டுல இருந்து மேல்தட்டு வர்க்கத்தினரா உயர்ந்திருக்கோம், அதனால பொய் சொல்லணும்னு அவசியம் எனக்கு கிடையாது. அதே மாதிரி உன்னை ஏமாத்தணுங்குற எண்ணமும் எனக்கு கிடையாது என் மனசுல இருக்குறதை வெளிப்படையா சொல்லிட்டேன், அவ்வளவு தான் போலாம்” என்று சொன்னவன் அவள் பதிலை எதிர்பாராமல் வண்டியை திருப்பியவன் பேருந்து நிலையத்தின் முன்பு காரை நிறுத்தினான்.‌

தன் கல்லூரி பையோடு கீழே இறங்கியவள் அவனைத் திரும்பியும் பாராமல் விறுவிறுவென்று அந்த கொட்டும் மழையில் நடக்க ஆரம்பித்தாள். சரியாக அவர்கள் ஏரியாவிற்கு செல்லும் சந்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தவள் ஏதோ ஒரு உந்துதலில் பின்னால் திரும்பிப் பார்க்க, கார் கதவை திறந்து விட்டு அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் அகில். அந்த பார்வை அவளை ஏதோ செய்ய வேக வேகமாக அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள்.

அவள் காரிலிருந்து இறங்கி சென்ற பின்பும், அவள் தலை அங்கிருந்து மறைந்த பின்னும் அவள் சென்ற திசையை பார்த்திருந்தான் அகில். நிச்சயமாக தான் இப்படியெல்லாம் மாறிப்போவோம் என்று அவன் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டான். முதல்முறை காண்கையில் அவளிடம் பிடிக்காததெல்லாம், இப்போது அவனுக்கு பிடித்திருந்தது.‌ சிறிது நேரம் அப்படியே இருந்தவன் மழைத்துளி மேலே விழுந்த பின்புதான் சுயநினைவு பெற்றவனாய் காரின் கதவை இழுத்துச் சாத்தி விட்டு வீட்டிற்கு கிளம்பினான். மழை
அவனுக்கு பிடிக்காது, அதிலும் மழையில் நனைவது என்றால் அவனுக்கு சுத்தமாகப் பிடிக்காது.

ஆனால் ஏனோ இப்போது மழையில் நனைய வேண்டும் போலிருந்தது. காரை வீட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்தி விட்டு கீழே இறங்கியவன், காரை விட்டு சற்று தள்ளி நின்று கைகளிரண்டையும் அகலமாக விரித்தவன் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். மழைத்துளிகள் அவன் முகத்தில் முத்துமுத்தாய் பட்டுத் தெறித்தது. சில நொடிகளுக்குள்ளாகவே அவன் தேகம் முழுவதும் மழை நீரில் நனைந்திட, தன் மீது விழுந்து உருளும் மழையை ரசித்தான்.

பட்டு பட்டென்று தன் மீது விழுந்து தன் பாதமதில் சேகரமாகும் மழைத் தோழியுடன், தன் மனம் விரும்பும் பெண்ணையும் சேர்த்து ரசித்தான்.‌ இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து சிரித்தான்.‌ அவள் செய்கைகளும், படபடவென பேசிடும் தோரணையும், சடசடவென ஆர்ப்பரித்து பெய்யும் மழைநீரின் சத்தத்தையும் ஒன்றோடொன்று இணைத்து பார்த்து ரசித்தான். எவ்வளவு நேரம் தன்னை மறந்து மழையில் நின்றிருந்தானோ, “அண்ணா” என்ற புகழேந்தியின் குரலில் தன்னிலை பெற்றவன் அதன் பின்பு காரை திறந்து தன் உடமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

தொப்பலாக நனைந்து போய் உள்ளே நுழையும் அவனை அனைவரும் விசித்திரமாக தான் பார்த்தார்கள். ஏன் மழையின் காரணமாக தொப்பலாக நனைந்து வந்து உடை மாற்றியிருந்த ஆதவ்வும் கூட அண்ணனின் இந்த புதிய பரிமாற்றத்தை எண்ணி வியந்து போனான் என்று தான் சொல்ல வேண்டும். அனைவரும் தன்னை விசித்திரமாக பார்ப்பதைக் கூட பொருட்படுத்தாமல் அனைவரையும் பார்த்து சம்பந்தமே இல்லாமல் புன்னகைத்து வைத்தவன் விறுவிறுவென்று தன் அறைக்குச் சென்றான்.

அவன் மழையில் நனைந்து தொப்பலாக வந்ததே அனைவருக்கும் அதிர்ச்சி என்றால்! அவன் சிரித்தது வேறு அனைவருக்கும் இன்னும் பேரதிர்ச்சியைக் கொடுத்தது.
‘ஏதோ சரியில்ல சம்திங் ராங். பார்ப்போம் இவனோட இந்த மாற்றத்துக்கு காரணம் என்னன்னு தெரியாமலா போயிடும்’ என்று நினைத்த ஆதவ்வின் மனதில் வந்து போனது வாணியின் நினைவுகள் தான்.

‘வாணியும் இப்பதான் வீட்டுக்கு வந்த மாதிரி தெரிஞ்சுது, இவனும் இப்ப தான் வர்றான், அதுவும் ஹேப்பி மூடோட வர்றான். ஒருவேளை அவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் ஏதாவது இருக்குமோ?' என்று நினைத்தவனுக்கு அப்படி இருந்தால் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும் என்ற எண்ணமும் எழுந்தது.‌
அப்படி ஒரு வேளை வாணியின் மேல் தன் அண்ணனுக்கு விருப்பம் வந்து, அவர்கள் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தால் நிச்சயம் அவள் சந்தோஷமாக இருப்பாள் என்றும் எண்ணினான்.

ஏனெனில் அகில் எந்த அளவுக்கு பிடிவாதக்காரனோ அதே அளவிற்கு தன் உடமைகளை பாதுகாக்கத் தெரிந்தவன். அதேபோல் தனக்கு பிடிக்காததை அவன் ஒருபோதும் செய்யமாட்டான், அது அவனுக்கு அறவே பிடிக்காது. தனக்கு உடமைப்பட்டதை தன்னிடம் வைத்துக் கொள்ளும் குணம் உடையவன், எவருக்கும் விட்டுக்கொடுக்காதவன் அப்படி இருக்கும் போது தன் மனைவியை மட்டும் காயப்படுத்திடுவானா, அல்லது மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்திடுவானா என்ற எண்ணமும் தோன்ற அவசரமாக இறைவனிடம் வேண்டுதல் வைத்தான். 'நான் நினைத்தது போல் அவர்களிடையே எதாவது இருந்தால் நான் ரொம்ப சந்தோசமா இருப்பேன். கூடவே உனக்கு மொட்டை போட்டுக்குறேன் முருகா’ என்று வேண்டுதல் வைத்தான். ஆனால் தன்னையுமறியாமல் அவளுக்கு தீராத வேதனையை கொடுப்பதற்கு தானும் ஒரு காரணமாகப் போகின்றோம் என்பதை அவனே நினைத்துப் பார்த்திருக்க மாட்டான்..

சொன்னது போல் மறுநாள் கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு காலையிலேயே கோயிலுக்கு கிளம்பிட்டாள் வாணி. எப்போதும் சுடிதார் அணிபவள் இன்று தாவணி பாவாடை அணிந்து கொண்டு கோவிலுக்கு வந்தாள்.‌ சாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டு, கோவில் பிரகாரத்தை சுற்றி விட்டு ஒரு ஓரமாக அமர்ந்தாள்.‌

அவள் ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தாலும் அவளது விழிகள் அவனைத் தான் தேடிக்கொண்டிருந்தது. நிச்சயம் அவன் இங்கு வருவான் என்று அவள் உள்மனம் எடுத்துரைத்தது. வாயிலையே அவள் பார்த்தவாறு அமர்ந்திருக்க, அவளை உரசினார் போல் யாரோ அமரும் அரவம் உணர்ந்து சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவனை ஒட்டினாற்போல் அமர்ந்திருந்தான் தேவேஷ்வர். அவனை அவ்வளவு நெருக்கத்தில் கண்டதும் விதிர்விதிர்த்து போனவள் வாணி.

சட்டென்று அவள் எழ முயன்ற வேளையில், “என்ன பயமா இருக்கா?” என்று கேட்டான்.

“ இல்லை யாராவது பார்த்தா வீட்டுல சொல்லிடுவாங்க அதான்” என்றவள் மழுப்பலாக பதிலுரைக்க,

“சரி அப்ப ஆத்தங்கரையில மீட் பண்ணுவோமா?” என்றான்.

அவளோ, “இல்ல அது தூரமா இருக்கு. வேணும்னா வீட்டுக்குப் பக்கத்துல இருக்க அந்த அரச மரத்துக்கிட்ட மீட் பண்ணலாமா, எனக்கு உங்ககிட்ட சில விஷயங்களை கேட்டு தெரிஞ்சுக்கணும்” என்றாள் வரவழைத்த தைரியத்துடன்.

அவள் அருகில் அமர்ந்திருந்தவனோ தலையை சற்று முன்னே உடலை நீட்டி தலையை மட்டும் அவள் புறம் சரித்து குறுகுறுவென்று அவளைப் பார்த்தவன்,
“அப்ப இவ்வளவு நாளா நீயும் என்னை மறக்கல நினைச்சுக்கிட்டு தான் இருந்துருக்க இல்லையா?” என்றான் எதையோ அறிந்து கொள்ளும் ஆவலோடு.

சட்டென்று தலை குனிந்து கொண்ட வாணி, “ப்ளீஸ் இங்க எதுவும் பேச வேணாம் நம்மளை யாராவது பார்த்தா பிரச்சனையாயிடும். ஈவினிங் அஞ்சு மணிக்கு அங்க வந்துடுங்க, மறக்காம வந்துருங்க நிறைய விஷயம் நான் உங்கக்கிட்ட பேசணும்” என்று சொன்னவள் ஐயர் வரும் ஓசை கேட்டு சட்டென்று எழுந்து நின்றாள்.

பின் அவனை திரும்பியும் பாராமல் தடதடவென்று படிகளில் இறங்கி கோயிலை விட்டு வெளியேறினாள். செல்லும் அவளையே பார்த்து இருந்தவன்,
“இந்த தாவணி பாவாடையில நீ ரொம்ப அழகா இருக்குற அதை கண்டிப்பா நான் உங்கிட்ட ஈவ்னிங் சொல்லுவேன்” என்று சொன்னவனாய் எழுந்து நின்று, திரும்பி கடவுளை ஒருமுறை வணங்கி விட்டு வீட்டை நோக்கி நடையைக் கட்டினான்.

கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்த வாணியும் தடதடக்கும் தன் நெஞ்சை தண்ணீர் குடித்துச் சமன்படுத்தினாள். அவனது அருகாமையும் பேச்சும் ஒரு வித அவஸ்தையான உணர்வை தோற்றுவிக்க நெஞ்சில் குடி கொண்டிருந்த தாலியை வெளியில் எடுத்து கைகளால் பொத்திக் கொண்டவள் அப்படியே கட்டிலில் சாய்ந்து விட்டாள்.

அதே நேரம்,‌“என்னாச்சும்மா ஏன் காலேஜ்க்கு போகலை” என்று
பூங்கோதை நாச்சியாரின் குரல் கேட்டதும் சட்டென்று எழுந்து அமர்ந்தவள் தாலியை நெஞ்சுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

“சொல்லுங்க பெரியம்மா” என்றிட,

“ஏன்மா காலேஜ் போகலை உடம்புக்கு ஏதும் முடியலையா?”, என்றவாறு அவள் கழுத்து, நெற்றி என கை வைத்து பார்த்தார் அவர்.

“இல்ல பெரியம்மா என்னமோ வயித்த வலிக்கிற மாதிரி இருந்துச்சு அதனால தான் போகலை” என்று இரண்டாவது முறையாக பொய் சொன்னாள்.

“சரி சரி.. நீ காலேஜ் போகலைங்கவும் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன் வேற ஒன்னும் இல்ல, சரி நீ ரெஸ்ட் எடு” என்று சொல்லி விட்டு அவர் சென்றுவிட்டார்.‌ இவளும் நிம்மதி பெருமூச்சு விட்டாள். இப்போதெல்லாம் மீனாட்சியின் கண்ணில் பட வேண்டிய அவசியம் இல்லாததால் அவரிடம் திட்டு வாங்காமல் சற்று நிம்மதியாக இருக்கிறாள் என்று தான் சொல்லவேண்டும். மீனாட்சியும் தேவையில்லாமல் அவளை திட்டுவதில்லை. மாமனார்,மாமியார் அவளுக்கு சப்போர்ட் செய்வதால் எதையாவது பேசி தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் கெடுத்து வைக்ககூடாது என்று அமைதி காத்தார். ஆனால் தான் பழி வாங்க வேண்டும் என்று சொல்லி கூட்டி கொண்டு வந்தவள் நன்றாக வாழ்கிறாளே என்ற எண்ணம் மீனாட்சியை உறுத்திக் கொண்டே இருந்தது.‌ தக்க நேரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார் அவளை பழி வாங்குவதற்காக..

தேவேஷ்வரோ வீட்டுக்கு வந்தவன் மீண்டும் குடோனுக்கு சென்று ஒருமுறை நோட்டம் விட்டான். பின்னர் வயல்வெளியில் ஆட்கள் வேலை செய்வதை தள்ளி நின்று கண்காணித்தான். அவனது தந்தையும் வயலில் இறங்கி மற்றவர்களுடன் நாத்து நட்டு கொண்டிருப்பதை ஒருவித சுவாரஸ்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். தனக்கும் அந்த ஆசை இருந்தாலும் தன்னுடைய லட்சியமே வேறு என்பதால் அமைதி காத்தான்.‌ அவனுக்கு மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

ஆனால் ஒரு செல்போன் ஷோரூம் வைக்க வேண்டுமென்று ரொம்ப நாளாக ஆசை அதற்காகத்தான் அங்கேயும் இங்கேயும் நண்பர்களை நாயாக அலைய வைத்து லோனுக்கு அப்ளை செய்திருக்கிறான். தந்தையின் தலையீடின்றி தானே முன்னேறவேண்டும் என்ற சுய கௌரவம் அவனை தந்தையிடம் இது பற்றி பேச கூட அனுமதிக்கவில்லை. இப்போதும் அதுபற்றிய சிந்தனையுடன் தான் அமர்ந்திருந்தான். நேரமாவதை உணர்ந்து வீட்டுக்கு வந்தவன் மதிய உணவை உண்டு விட்டு குட்டி தூக்கம் போட்டான். பின்பு மூன்று மணி அளவில் எழுந்து குளித்து முடித்து விட்டு தன் அறையில் உடை மாற்றிக் கொண்டிருந்தவனின் விழிகள் எதேச்சையாக ஜன்னலை நாடியது. இங்கிருந்து பார்த்தால் அந்த மரம் தெரியுமா என்று எண்ணியவாறு ஜன்னலை திறந்தவனுக்கு காட்சியளித்தாள் அவன் தேவதை.‌.

தன்னையும் அறியாமல் அப்படியே நின்றவாறு அவளை ரசித்துப் பார்த்தான். அந்த மரத்தின் அடியில் இருந்த கல்லின் மேல் அமர்ந்திருந்தாள். ஐந்தாறு சிறுவர்கள் சற்று ஆழமான அந்த வாய்க்கால் தண்ணீரில் நீந்தியவாறும், ஒருவர் மீது ஒருவர் நீரினை அள்ளி வீசியடித்துக் கொண்டும், அங்கும் இங்கும் அலைபாய்ந்து மூழ்கியவாறும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வாணியோ கண் இமைக்காமல் அதையே பார்த்திருந்தாள்.

ஒரு சிறுவன் ஒருவன் திடீரென நீருக்குள் மூழ்கி போவதைக் கண்டு விட்டு வேகமாக அவர்களை நோக்கி ஓடினாள். தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்த சிறுவனின் தலை முடியை கொத்தாக பற்றி நீருக்குள் இருந்து வெளியே இழுத்து அவளை தூக்கினாள். பிறகு அவனை சுமந்தவாறு கரை ஏறியேறி வந்தாள். அதற்குள் மற்ற பிள்ளைகள் அனைவரும் பதறி விட்டார்கள். அச்சிறுவனை குப்புற படுக்க‌ வைத்தவள் அவசரமாக அவனது வயிற்றில் கைகளை வைத்து அழுத்தி அவன் குடித்திருந்த தண்ணீரை வெளியேற செய்தவள், கண் விழிக்க வைப்பதற்காக அவன் கன்னத்தில் தட்டினாள்.‌ கை கால்களை சூடு பறக்கத் தேய்த்து விட்டாள். அச்சிறுவனின் இதழோடு தன் இதழைப் பொருத்தி, சுவாசக் காற்றை உட்செலுத்தினாள். அதே போல் இருமுறை செய்தாள். சிறிது நேரத்தில் சிறுவன் கண் விழித்து, இருமியவாறு எழுந்த அமர்ந்ததும் ஆசுவாசமாக பெருமூச்சு விட்டவள், பிள்ளைகள் அனைவரையும் பார்த்து, “இங்க பாருங்க பெரியவங்க துணைக்கியில்லாம இப்படி சின்ன பசங்களா ஒன்னா சேர்ந்து வந்து தண்ணியில விளையாடாதீங்க. குளிக்கணும்னா படித்துறையில உட்கார்ந்து குளிங்க, இனிமே தரையில விளையாடுங்க, தண்ணியில விளையாடாதீங்க.” என்று எச்சரிக்கை செய்து அனைவரையும் அங்கிருந்து அனுப்பினாள். பிறகு ஈரமாக இருந்த தன் பாவாடையை முட்டி வரை தூக்கி இறுக்கமாக பிழிந்து உதறினாள்.

அக்காட்சிகளைக் கண்ட தேவேஷ்வர் நெக்குருகி போனான். இவ்வளவு வெள்ளை மனம் கொண்டவளா தான் நேசிக்கும் பெண் என்று நினைத்தவன் அடுத்த கணம் வீட்டில் இருந்து அவசரமாக கிளம்பி இருந்தான். நல்ல வேளையாக அவன் கிளம்புவதை யாரும் பார்க்கவில்லை. தடதடக்கும் இதயத்துடன் அவள் இருந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தான் அவன்.

அவளோ யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தன் தாவணியை உருவி பிழிந்து கொண்டிருக்கும் வேளையில் தான் அவள் அருகில் வந்து நின்றான் தேவேஷ்வர்.

அவனை அங்கு எதிர்பார்த்திராத வாணி பதற்றத்துடன் வேகமாக மரத்திற்கு அந்த பக்கம் சென்று நின்று தன் தாவணியை அணிந்தவள்,‌“சொல்லிட்டு வர மாட்டீங்களா?” என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள்.

“ஏன் நான் எதுக்கு சொல்லிட்டு வரணும்” என்றான் மறுபுறம் திரும்பி நின்று கொண்டு. அவள் அப்படி ஒரு நிலையில் இருப்பாள் என்று எதிர்பார்த்திடாத தேவேஷ்வருக்கு அவனையும் மீறி உடல் உதற ஆரம்பித்தது. தடதடக்கும் இதயத்தையும், உதறிக் கொண்டிருக்கும் கை, கால்களையும் சமன்செய்யும் பொருட்டு அகன்ற அந்த வாய்க்காலில் இறங்கி கை,கால், முகம் கழுவியவன், “ஏதோ பேசணும்னு சொல்லி வர சொன்னியே என்ன பேசணும்?” என்றான்.

இருவருமே தாங்கள் ஒருமையில் பேசிக் கொள்வதைக் கவனிக்கவில்லை. அடிக்கும் காற்றில் லேசாக உணர்ந்திருந்த உடையோடு அவன் முன்பு வந்து நின்றவள் தாவணியின் முனையை எடுத்து தன் தோளை சுற்றி போர்த்திக் கொண்டாள்.

அவனோ அவளை நிமிர்ந்து பார்க்காமல் முதுகைக் காண்பித்து நின்றிருந்தவன்,
“சொல்லு” என்றான்.

“இப்ப உங்க உடம்புக்கு பரவாயில்லையா?” என்று கேட்டாள்.

“பாருடா ஆறு மாசத்துக்கு முன்னாடி அடிபட்டு கிடந்தவனை இப்ப வந்து விசாரிக்கிற?”

“நீங்க யாரு, எந்த ஊருன்னு தெரியாம எப்படி என்னை விசாரிக்க சொல்றீங்க?” என்று அவள் குறைபட்டுக் கொள்ள,

“இல்லனா மட்டும் விசாரிச்சுருப்பியா, என் கூடவே வந்து துணைக்கு இருந்திருப்பியா?” என்று கேட்டான் ஒருவித எதிர்பார்ப்புடன். அவளது பதில்,
‘நான் பாக்காம வேற யாரு பார்ப்பாங்களாம்’ என்று வரவேண்டுமென அவன் உள்ளம் நினைத்தது.

அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதி காத்தாள் வாணி.‌ “எனக்கு எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லி தான் பழக்கம், மறைச்சு பேசி பழக்கம் கிடையாது. அதனால தான் சொல்றது உண்மைதான் பொய்யில்லை. அன்னைக்கு உங்களுக்கு அடிபட்டதும் விட்டுட்டு போக எனக்கு மனசு இல்ல ஆனா அந்த ஐயர் தான் என்னை இழுத்துட்டு போயிட்டாரு. அப்பவும் மறைஞ்சி நின்னு பார்த்தேன், அதுக்கப்புறம் அங்கிருந்து எல்லாரும் போகணும் கலவரம் பெருசாகுதுன்னு சொல்லி என்னை வெளிய இழுத்துக்கிட்டு வந்துட்டாரு இல்லன்னா நான் உங்க கூடவே வந்துருப்பேன். எந்த பிரச்சனை வந்தாலும் உங்களோடவே இருந்து அதை பேஸ் பண்ணியிருப்பேன். ஆமா நீங்க எதுக்கு இப்ப இப்படி கேள்வி கேட்குறீங்க, நான் பாக்காம வேற யாரு பார்ப்பா ஆயிரம் தான் இருந்தாலும்..“ என்று ஏதோ சொல்ல வந்தவள் சட்டென்று வார்த்தைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது போல் அமைதியானாள்.

அவள் சொல்ல வந்ததன் அர்த்தம் புரிபட சட்டென்று அவள் புறம் திரும்பியவன், நெருங்கி நின்று அவள் கரங்களை தன் கரங்களுக்குள் புதைத்து வைத்தவாறு, “கட்டுன பொண்டாட்டி பார்த்துக்காம வேற யாரு பார்த்துக்குவாங்கன்னு தானே சொல்ல வந்த” என்று குதூகலத்துடன் கேட்டான்.

அவளோ தலைகுனிந்து நின்றிருந்தாள், அவனை விலக்கவும் இல்லை, அவனை விட்டு விலகி நிற்கவும் இல்லை, அப்படியே சிலையென சமைந்து நின்றிருந்தாள்.

அவனும், “நீ சொல்லாட்டியும் அதோட அர்த்தம் எனக்கு புரிஞ்சுருச்சு. அன்னைக்கு என் கையிலிருந்து தவறி உன் கழுத்துல விழுந்த தாலியை நீ கழட்டி தூக்கி எறிஞ்சுருப்பியோன்னு யோசிச்சிக்கிட்டே வந்தேன்.இப்ப எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா!” என்று கேட்டவனது குரலே மகிழ்வாக ஒலித்தது.

அதற்கு அவள் பதில் பேசும் முன்பே யாரோ பேசும் குரல் கேட்டதும் சட்டென்று அவளை விட்டு விலகி நின்றவன் மரத்திற்கு அந்த பக்கம் எட்டிப் பார்த்தான் ஐந்து இளைஞர்கள் குளிப்பதற்காக வாய்க்காலை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். தன்னுடன் இவளைப் பார்த்தால் இவளைத்தான் யாராவது ஏதாவது சொல்வார்கள் என்று நினைத்தவன் சட்டென்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு மரத்தின் பின்னே ஒண்டினான். அவர்கள் முன்னேற முன்னேற இவனும் மரத்தை சுற்றி வர ஆரம்பித்தான்.

அவர்கள் வாய்க்கால் இருக்கும் பக்கம் சென்று வாய்க்காலில் இறங்கிய மறுகணம் மரத்துக்கு அந்தப்பக்கம், அவர்களுக்கு தெரியாமல் மறைவாக இருந்த இடத்தில் நின்றவன், “இதுக்கு மேல இங்கிருக்கிறது ஆபத்துன்னு நினைக்கிறேன், நீ வீட்டுக்குப் போ எதிர்த்த வீட்டில் தானே இருக்க எப்ப வேணாலும் பாத்துக்கலாம்.‌அதே மாதிரி இதுக்கு மேல நீ என் பொறுப்பு, எனக்கு உரிமையானவ, அதனால ஏதாவது பிரச்சனைனா நீ என்கிட்ட தான் வந்து சொல்லணும் சரியா.‌ ஆமா எதுத்த வீட்ல இருக்குறியே, நீ யாரு, உனக்கு அவங்க எந்த விதத்துல சொந்தம்” என்று கேட்டான்.

அதற்கு அவள் பதில் பேசும் முன்பே, “டேய் இங்கே வேற யாரோ பேசுற மாதிரி குரல் கேட்குதுடா” என்று அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் சொன்னதும் சுதாரித்தான் தேவேஷ்வர்.

“இல்லை இன்னொரு நாள் இதுக்கான பதிலைக் கேட்டுக்குறேன் நீ வீட்டுக்கு போ” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தான். ஆனால் அப்படி ஒரு நாள் தங்கள் வாழ்வில் இனி வராது என்பதை அவர்கள் இருவருமே அறிந்திருக்கவில்லை.

- தேடல் தொடரும்..
 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல் -19

அங்கிருந்து செல்லும் போது திரும்பி திரும்பி அவனைப் பார்த்துக் கொண்டே சென்றாள் வாணி. ஏனோ இப்பொழுது அவனிடம் தன் மனதில் இருப்பதை சொல்லாமல் சென்றால் மீண்டும் ஒரு வாய்ப்பு இதுபோல் அமையாதோ, தன் விருப்பத்தை சொல்ல முடியாமலே போய்விடுமோ என்ற பயம் அவள் நெஞ்சை கவ்வி இழுக்க, பாதி தூரம் சென்றவள் பின்னால் திரும்பி ஏக்கம் சுமந்த விழிகளுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனோ அதைக் கண்டு இன்னும் உருகித்தான் போனான்.‌ ‘கடவுளே இவனுங்க மட்டும் வராம இருந்திருந்தா இப்பவே இவளை என் கூட கூட்டிட்டு போற அளவுக்கு எல்லாத்தையும் பேசி முடிச்சுருந்துருப்பேனே' என்று மனதில் நினைத்து வருத்தப் பட்டான் தேவேஷ்வர்.

அவளோ பின்னால் திரும்பி அவனைப் பார்த்து ஏங்கியவள் அவன் பக்கம் ஓரடி எடுத்து வைக்கையில், ‘வராதே போ வீட்டுக்கு போ’, என்பது போல் சைகை செய்தான் தேவேஷ்வர். வேறு வழியில்லாமல் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு விட்டு அவளும் வீடு வந்து சேர்ந்தாள்.‌ ஆனால் இவர்கள் பேசியதை இரு விழிகள் பார்த்துக் கொண்டிருந்ததையோ, அவர்கள் இருவருக்கும் கிட்டத்தட்ட பிரிவை உண்டாக்கும் அளவிற்கு ஆத்திரத்தோடு அது அங்கிருந்து நகர்ந்ததையோ அவர்கள் கவனிக்கவில்லை.

நேராகத் தன் வீட்டிற்கு வந்தவள் தன் அறைக்குள் அடைந்து கொண்டாள் அவ்வளவு நேரம் அவனிடம் பேசியது அவளுக்கு ஏதோ ஒரு நம்பிக்கையையும், தனக்கென்று உறவாய் ஓர் உயிர் இவ்வுலகில் உள்ளது என்ற உணர்வையும் தோற்றுவிக்க கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தாள்.

தேவேஷ்வரோ ஒரு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன்,
“எனக்குன்னே எங்க இருந்து தான் வர்றானுங்களோ தெரியல. வந்தது தான் வந்தானுக ஒரு கால்மணி நேரம் கழிச்சு வந்திருக்க கூடாது” என்று புலம்பிக்கொண்டு அவனும் வீடு வந்து சேர்ந்தான். ஆனால் அவன் வீட்டுக்கு வரும் போது ரயில் என்ஜினுக்கு கரி அள்ளி போட்டது போல் புஸு புஸு வென்று மூச்சு விட்டுக்கொண்டு கோபத்தோடு அமர்ந்திருந்தார்.
சிவசுப்பிரமணியம்.

தந்தையின் அந்த நிலை தேவேஷ்வருக்கு நெஞ்சில் கிலியை பரப்பியது, இருந்தும் வரவழைத்து தைரியத்துடன் வீட்டிற்குள் நுழைந்தவன் தன் அறைக்கு செல்ல இரண்டு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டான், “எங்கலே போயிட்டு வர்றவியன்?” என்று கேட்டார் எடுத்த எடுப்பிலேயே.

எப்போதும் தாயை முன்னிறுத்தி தன்னிடம் பேசுவார் இன்று நேரடியாக பேசியது அவனுக்கு உறுத்தலைக் கொடுக்க,
“எங்கேயும் போயிட்டு வரலப்பா சும்மா அப்படியே காத்தாட” என்றவன் வார்த்தைகளை முழுதாக முடிக்கும் முன்பே இடை‌மறித்தது அவரது குரல்.

“உனக்கு ஏதாவது தேவைன்னா என்கிட்ட கேளு நான் வாங்கித் தருவேன், நீயா எதையாவது தேடிப்போயி மாட்டிக்கிட்டு கடைசில பிரச்சினைய இழுத்து வைக்காதலே. இப்ப தான் சிநேகிதப்பய விரும்பி தொலைச்சான்னு கல்யாணம் பண்ணி வச்சு கத்தி குத்து வாங்கிட்டு வந்து உசுரு பொழச்சுருக்க, மறுபடியும் அதே மாதிரி எதையும் செஞ்சு வைக்காதலே.‌ மறுபடியும் சொல்லுறேன் எதுத்த வீட்டுல இருக்குற பொண்ணு பின்னாடி சுத்துற மாதிரி ஏதாவது பண்ணிக்கிட்டு இருந்த, புள்ளை போனாலும் போயிட்டு போகுதுன்னு உன்னை உயிரோட எரிச்சுபுடுவேன்‌ ஞாபகம் வச்சுக்கிடு” என்றார் கண்டிப்பு குரலில்.

அவனோ தந்தைக்கு இது எப்படி தெரிந்தது என்ற குழப்பத்துடனும், கடவுளே எப்படியாவது இதை சமாளிச்சாகணுமே என்ற பயத்துடனும் வாய்க்கு வந்ததை உளற ஆரம்பித்தான். “என்னப்பா என்னென்னமோ சொல்லுறீங்க.‌ எனக்கு ஒன்னும் புரியலையே?” என்றான்.

“நீ என்ன தான் மறைக்கணும்னு நெனச்சாலும் அது உன்னால முடியாதுல. எதுத்த‌ வீட்டு ஆளுகளுக்கும், நமக்கும் என்னைக்கும் ஆகவே ஆகாது. அதுமட்டுமில்லாம பேசுனா கூட என்னன்னா என்னங்குறதோட நிறுத்திக்கிற அளவுக்குத்தேன் பேச்சு வார்த்தையே இருக்கும். அவுக எல்லாம் புதுசா பணக்காரனானவுக கொஞ்சம் திமிராத்தேன் இருக்காக.

‌அந்த வீட்ல அந்த பெரிய மனுஷக ரெண்டு பேரைத் தவிர அத்தனை பேரோட முகத்துலையும் சிரிப்புங்குறதை பார்க்கவே முடியாது. அப்படிப்பட்ட வீட்டுக்கு ஒரு புள்ள வந்துருக்கான்னா அவளும் அவுகளை மாதிரித்தானே இருப்பா.‌ அந்த புள்ளைக்கிட்ட வாய்க்காகரையில நீ பேசிட்டு இருந்ததை பார்த்துட்டு வந்து நம்ம மாரிமுத்துதேன் என்கிட்ட சொன்னான். இதுக்கு மேல இதுபோல ஏதாவது கேள்விப்பட்டேன் நீயும் உசுரோட இருக்க மாட்ட,‌ அந்த‌ புள்ளையும் உசுரோட இருக்காது ஞாபகம் வச்சுக்கோ” என்றார்.

‘அடக்கடவுளே அதுக்குள்ள பார்த்துட்டு வந்து பத்த வந்துட்டானுங்களா?’ என்று எண்ணி பெருமூச்சை விட்டவன் “அப்பா அது வேற விஷயம்பா. ஒரு பையன் ஆத்துல விழுந்துட்டான், அந்த பொண்ணு அவனுக்கு ஹெல்ப் பண்ணுனா, அப்ப நானும் எதேச்சையா அதை பார்த்தேன்,‌ அதான் அவங்க செயலை பாராட்டுறது போல இரண்டு வார்த்தை பேசுனேன் வேற எதுவும் இல்லை,‌ நீங்களா எதையாவது நெனைச்சுக்கிட்டு மனசை போட்டு குழப்பிக்காதீங்க. அது மட்டும் இல்லாம நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்னா அந்த பொண்ணு எப்படிப்பட்ட பொண்ணா இருக்கணும், அவங்க குடும்பம் எப்படிப்பட்ட குடும்பமா இருக்கணும்னு எனக்கு தெரியாதா. அப்படி எல்லாம் உங்களை, நான் கேவலமான குடும்பத்துக்கு சம்மந்தியாக விட்டுடுவேனா, நீங்களா எதையாவது நெனச்சுக்கிட்டு யாரோ ஏதோ சொன்னாங்கன்னா எம்மேல கோபப்படாதீங்க சரியா!” என்று சொன்னவன் விட்டால் போதும் என்று தன் அறைக்கு வந்து சேர்ந்தான்.

ஆனால் ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு அந்த மரத்தையே பார்த்திருந்தான். சற்று முன்பு இருவரும் ஒட்டி உரசி கிட்டத்தட்ட அணைத்தாற் போல் நின்றது நினைத்து சிலாகித்துப் போனான்.‌ அந்த மரம் அவனது காதலுக்கு நினைவுச் சின்னமாகிப் போனது. அதிலும் அவர்களிடமிருந்து அவளையும் தன்னையும் காப்பாற்றுகிறேன் என்று அவளை இழுத்து கொண்டு மரத்தின் பின்னே நிற்கையில்,‌ கிட்டத்தட்ட இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கி நின்ற இருந்த காட்சியும், தெரியாமல் அவளது தேகத்தில் பட்டும் படாமலும் உரசி சென்ற கைகளினால் உணர்ந்த ஸ்பரிசமும் மீண்டும் கண்முன் வந்து அவனை இம்சித்தது..

‘உன்கிட்ட சம்மதம் கேட்குறனோ இல்லையோ மொத என்னோட அப்பா அம்மாட்ட சம்மதம் கேட்டு அவங்களை சரிகட்டணும் போலையே. உன்னை கைபிடிக்கிறதுக்குள்ள எனக்கு என்னென்ன பிரச்சனையெல்லாம் வரப் போகுதோ தெரியல’ என்று நினைத்தவன் அடுத்து அவளை எங்கு சந்திக்கலாம், எப்படி பேசலாம் என்று முடிவெடுத்தான்.

ஆனால் மகனின் போக்கு சிவசுப்ரமணியத்துக்கு பிடிக்கவில்லை.‌ இவனை இப்படியே விட்டால் சரியாக வராது என்றெண்ணியவர் மறுநாளே அவனை மேற்படிப்பு படிப்பதற்காக வெளியூருக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்தார். அவன் ஒரேயடியாக அதை‌ மறுத்துப் பார்த்தான், ஆனாலும் அவர் பிடிவாதமாக நின்றார்.

இவனும், ‘நான் போகமுடியாது’ என்று சொல்லி அடம்பிடித்தான். அவனது பிடிவாதம் சிவசுப்பிரமணியத்தை இன்னும் அழுத்தமான முடிவெடுக்க வைத்தது.‌ அவனின் முன்பு மண்ணெண்ணெய் கேனோடு நின்றார்.‌

“இப்ப நீ படிக்க வெளியூருக்கு போகலைன்னா நான் இந்த நிமிஷமே கொளுத்திக்கிட்டு செத்துருவேன், என்ன சொல்லுற, போறியா?” என்றார்.

அப்போதும் அசையாமல் சிலையென நின்றிருந்தான். அதைக்கண்டவரின் ஆத்திரம் அதிகரிக்க, மடமடவென தன் மீது மண்ணெண்ணெய்யை ஊத்திக்கொண்டவர், தீக்குச்சியை உரசிட முயல, ஓடிச்சென்று அவரிடமிருந்து அதை பறித்து வீசியவன் வேறு வழியில்லாமல் படிக்க செல்ல ஒப்புக்கொண்டான். ஆனால்,
“அதான் வெளியூருக்கு போறேன்னு சொல்லிட்டன்ல, கடைசியா ஒரே ஒரு தடவை கோயிலுக்கு போய்ட்டு வர்றேன்”, என்று கேட்க, வேண்டா வெறுப்பாக தலையசைத்து வைத்தார் சிவசுப்பிரமணியம்.

பெரும் மனபாரத்துடன் கோயிலுக்கு வந்தவன், ‘கடவுளே அவளை எப்படியாவது பார்த்துடணும்' என்ற வேண்டுதலோடு கோயிலிலேயே காத்திருந்தான். இங்கு பேருந்துக்கு நேரமானதால் சிவசுப்ரமணியமே அவனைத்தேடி கோயிலுக்கு வந்து விட்டார். கோவில் தூணில் சாய்ந்து கண்மூடி அமர்ந்திருந்தவனைக் காண்கையில் அவருக்குமே உள்ளம் உருகியது தான்.

ஆனால் இப்போது தான் உயிர் பிழைத்து வந்து இருக்கிறான், மறுபடியும் அப்பெண்ணின் மூலமாக தேவையற்ற பிரச்சினைகளை கொண்டு வந்தால் என்ன செய்வது என்ற பயம் ஒரு பக்கம், பத்தாக்குறைக்கு அந்தப் பெண் அந்த வீட்டின் மருமகள் மீனாட்சியின் அண்ணன் மகள், கிட்டத்தட்ட அவ்வீட்டின் மருமகள் போன்றவள், ஒரு வேளை மீனாட்சிக்கு அப்பெண்ணை தன் மகனுக்கு கட்டி வைக்கும் எண்ணம் இருந்து, தன் மகன் அதற்கு குறுக்கே நின்றால் அவர்கள் ஏதாவது செய்துவிடுவார்களோ, அதனால் மீண்டும் தன் மகன் மரணப் படுக்கையில் விழுந்திடுவானோ என்ற பயமும் அவரை அரிக்கத் துவங்கியது.

அதனால் தான் அவசர அவசரமாகத் தன் சிறிய மகனின் உதவியோடு, வெளியூரில் பெரிய மகன் படிப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அனுப்பி வைக்க முடிவெடுத்தார். சரியாக ஐந்தறைக்கு வரும் பேருந்தில் தான் அவன் கிளம்புவதாக முடிவாகி இருந்தது. மணி இப்போதே ஐந்தைக் கடந்திருந்தது.‌ சிரமப்பட்டு மகனின் அருகில் சென்றவர்,
அவன் தோள்பட்டையில் கரம் பதித்து,‌“நேரமாகுது எழுந்திரிச்சு வாலே” என்றழைத்தார்.

அதன் பிறகு மறுப்பேதும் சொன்னால் தன் தந்தை இங்கேயே கத்தி மானத்தை வாங்கி விடுவார் என்று நினைத்தவன் திரும்பி கடவுளை ஏறிட்டுப் பார்த்தான்.‌ “தெரிஞ்சோ தெரியாமலோ எங்களை ஒரு பந்தத்துக்குள்ள நீ தான் இணைச்சு வெச்ச, எனக்கு அவள பாக்கணும், பார்த்தே ஆகணும். அவளை பார்க்காம போயிட்டா கண்டிப்பா என்னால நிம்மதியா இருக்க முடியாது, இப்ப எல்லாமே உன் கையில தான் இருக்கு’, என்று மனதில் வேண்டிக்கொண்டு தந்தையுடன் சென்றான்.

சரியாக கரூர் செல்வதற்கு பேருந்து நிலையத்தில் தேவேஷ்வர் நின்றிருக்க, அவனை வழி அனுப்பி வைப்பதற்காக ஒருபுறம் அவனது தாய், தந்தை நின்றிருக்க, மறுபுறம் அவனது தம்பியும், தங்கையும் நின்றிருந்தார்கள். அவனது பஸ் வருவதற்கு இன்னும் பத்து நிமிடங்களுக்கு மேலாக இருந்த வேளையில் தான் கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பி மலர்,வாணி இருவரும் அந்த பேருந்தில் இருந்து இறங்கினார்கள்.

இறங்கிய வாணியின் பார்வை எதேச்சையாக தேவேஷ்வர் நின்றிருந்த பக்கம் சென்றது. அவனைக் கண்டதும் மலர்ந்த அவளது முகம், அவன் கையிலிருந்த பை மற்றும் அவன் நின்றிருந்த தோரணையைக் கண்டு சுருங்கி வாடியது. எங்கோ வெளியூருக்கு கிளம்புவதை உறுதிசெய்வதைப் போல் அவன் முகம் வேதனையை பிரதிபலித்தது. அவனிடம் ஒரு வார்த்தை கூட பேச முடியாததை எண்ணி அவள் உள்ளம் தவித்தது.

ஆனால் மலர்க்கு அது போல் இல்லை நேராக அவன் அருகே சென்றவள்,“என்ன அண்ணா ஊருக்கு போறீங்களா?” என்று கேட்டாள்.

அவ்வளவு நேரமும் அவனின் பார்வை யார் இருக்கிறார்கள் என்பதை கூட பொருட்படுத்தாமல் வாணியைத்தான் மேய்ந்து கொண்டிருந்தது. மலரின் குரலில் அவள் பக்கம் பார்வையை பதித்தவன், “மேற்படிப்புக்காக வெளியூர் போறேன் சீக்கிரம் படிப்பை முடிச்சுட்டு வந்துடுவேன்மா. உடம்ப பாத்துக்கோ, தினமும் காலேஜ் போகணும் சரியா! நல்லா படிக்கணும், படிப்பு தான் நம்மை உயர்த்தி ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரும், அதனால நல்லா படிக்கணும் சரியா.லேசியா இருந்துக்கிட்டு படிப்பை மட்டும் விட்டுடாதீங்க.‌ அதே மாதிரி நான் போறது ஒன் இயர் கோர்ஸ் தான்.‌ எனக்கு புடிச்சதை தான் நான் படிக்க போறேன் அதேமாதிரி தான் நீங்களும் பிடிச்சதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாது. ஒன் இயர் முடிஞ்சதும் இங்க தான் வருவேன், உடம்ப பாத்துக்கோங்க நல்லா படிங்க. எதாவது ஒன்னுன்னா அப்பாக்கிட்ட நம்பர் வாங்கி எனக்கு போன் கூட பண்ணுங்க”, என்று சொன்னவன் வாணியை திரும்பிப் பார்த்து விழியசைவில் ‘போய் வரவா?’ என்று கேட்க,

அவளோ கண்களில் குளம் கட்டிய கண்ணீரோடு கண்களை சிமிட்டி, ‘போயிட்டு வாங்க’ என்பது போல் சைகை செய்தாள். அவளையும் அறியாமல் அவள் விழிகள் கண்ணீரை உதித்தது. அதற்குள் பேருந்து வரவும் அனைவரின் கவனமும் அதன் பக்கம் திரும்ப, வாணியை நேருக்கு நேராக பார்த்தவன்,
“போயிட்டு வரேன் உடம்பை பத்திரமா பாத்துக்கோ, யார் என்ன சொன்னாலும் சரி நல்லா படிக்கணும்.‌ உன்னை என்னைக்குமே நான் மறக்கமாட்டேன், எனக்காக காத்திரு கண்டிப்பா நான் வருவேன் சரியா!” என்று இதழசைவில் சொல்லி வைக்க, அது அவளது செவிகளுக்கு கேட்காவிட்டாலும் அவளால் அவன் சொன்னதை புரிந்து கொள்ள முடிந்தது.‌ சரியென தலையசைத்தாள்.

பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டான் தேவேஷ்வர். அவனது பெற்றோர்கள் பேருந்து அங்கிருந்து நகரும் வரை நின்றிருக்க தான் முடிவு செய்தார்கள் ஆனால் விக்கியோ வாங்க என்று தாய் தந்தையை அழைத்துக் கொண்டு சென்று விட்டான். தன் அண்ணனின் பார்வை இதுவரை எந்த பெண்ணின் மீதும் தவறாக பதிந்தது அவன் பார்த்ததில்லை. ஆனால் தற்போது ஒரு பெண்ணை அன்போடு பார்க்கிறான் என்றால் அண்ணனின் மனது என்ன என்பதை அவனுக்கு புரிந்து போனது. அவன் பெற்றோர்கள் அங்கிருந்து நகரும் வேளையில் பேருந்தும் அங்கிருந்து நகர்ந்தது.

எதைப் பற்றியும் யோசிக்காமல், மலரைப் பற்றி கூட யோசிக்காத தேவேஷ்வர், “மதுரா இங்க என்னை பாரும்மா, நீ இப்படி அழுதா என்னால எப்படி நிம்மதியா போக முடியும். கொஞ்சமாவது சிரிச்சுக்கிட்டே வழியனுப்பலாம்ல. உடம்ப பாத்துக்க, நேரத்துக்கு சாப்டு, நான் சீக்கிரம் வந்திடுறேன் சரியா, தைரியமா இருக்கணும் எதுக்கும் பயப்படக்கூடாது” என்று சொல்ல, அவள் தலை சரி என்பது போல அசைந்தது.
மலரோ அதிர்ச்சியுடன் அவர்கள் இருவரையும் பார்த்திருக்க, அதை உணர்ந்தவன் பேருந்து புறப்படுவதை கண்டு விட்டு,
“மலர் உன்கிட்ட நான் அடுத்த தடவ வரும்போது எங்களைப் பத்தி சொல்கிறேன், மதுரா கிட்ட எதையும் கேட்காத. இவ என் சொத்து, என் உசுரு அவளை பத்திரமா பார்த்துக்கமா” என்று சொல்ல மலரின் தலையும் சரி என்பது போல அசைந்தது.
பேருந்து அங்கிருந்து நகர்ந்து, கண்ணை விட்டு மறையும் வரை நின்றிருந்தவர்கள், அதன் பிறகே அங்கிருந்து சென்றார்கள்.

அதன்பிறகு மலர் வாணியிடம் எதுவும் கேட்கவில்லை. ‘அதான் தேவ் அண்ணாவே வந்து சொல்லுறேன்னு சொல்லியிருக்காரே அப்புறம் நாம எதுக்கு வாணியை கேட்கணும், அவருக்கிட்டையே கேட்டு தெரிஞ்சுக்குவோம்’ என்று நினைத்தவளாய் அதை அப்படியே விட்டு விட்டாள். அதன் பிறகு அவள் அதைப்பற்றி வாணியிடம் எதுவும் கேட்கவில்லை. வாணியும் சொல்ல முற்படவில்லை. அதேபோல் அனைவருக்கும் எந்தப் பிரச்சினையுமின்றி தான் மற்ற நாட்களெல்லாம் சென்றது.‌

செல்போன் கடை வைக்க வேண்டும் என்று விருப்பப்பட்டதால் அது தொடர்பான படிப்பை எடுத்துப் படித்தான் தேவேஷ்வர். அவனுக்கு அங்கிருக்கும் ஒவ்வொரு நாளும் எப்போடா ஊருக்கு போலாம் என்று தான் தோன்றியது. விடுமுறை வருகையில் எல்லாம் ஊருக்கு வருகிறேன் என்று சொன்னான். அப்போதெல்லாம் அவன் தந்தை வரவேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து விட்டார். அதை மீறி வந்தால் நான் கொளுத்திக் கொள்வேன் என்று அவர் மிரட்டியதால் வேறு வழியில்லாமல் பல்லை கடித்துக்கொண்டு நாட்களை ஓட்டினான்,‌‌ அவள் நினைவுகளால் தான் அவனது நாட்கள் அழகாக நகர்ந்தது. மேலும் ஆறுமாதம் கடகடவென ஓடிச்சென்றிருந்தது. ஆதவ்வோ இளங்கலை கல்லூரி படிப்பை முடித்து விட்டு அங்கேயே மேற்படிப்பை துவங்கினான்.‌ அதேபோல் மலர், வாணி இருவரும் தங்கள் முதல் வருட கல்லூரி படிப்பை நல்ல படியாக முடித்து இரண்டாம் வருடத்தில் கால் பதித்தனர்.

இப்போது வாணி கோயிலுக்கு செல்வாள், அவனுக்காக வேண்டிக்கொள்வாள்.‌ அவனது வருகையை வெகுவாக எதிர்பார்த்தாள். ஆனாலும் படிப்பிலும் கவனத்தை செலுத்தினாள்.

மலரும் கூட வாணியின் நிலையில் தான் இருந்தாள். மலரின் நினைவில் அகிலும் வந்து விட்டு செல்வான். அன்றைய நாளுக்கு பிறகு அவன் அவளை தொந்தரவு செய்யவில்லை. ஆனால் அவள் தான் அவன் வரும் வழியெல்லாம் அவனை எதிர்பார்க்கத் தொடங்கி இருந்தாள்.

பொதுவாகவே பெண்களுக்கு ஒருவர் தன்னை அழகாக இருக்கிறார் என்று சொல்லும் வரை தங்களது அழகு கண்ணிலும் தெரியாது கருத்திலும் படாது. ஆனால் ஒருவர் அழகாக இருக்கிறாய் என்று சொல்லிவிட்டால் ஓயாது கண்ணாடியில் தங்கள் முகத்தை பார்ப்பார்கள். தங்களை அழகுபடுத்திக் கொள்ள முயல்வார்கள். அதே போல் தான் உன்னை பிடித்திருக்கிறது என்று அவன் சொன்னதில் இருந்து அவன் மேல் ஒரு இனம் புரியாத உணர்வு தோன்றியிருக்க அவனை எதிர்பார்க்க ஆரம்பித்து இருந்தாள்.

வாணியை சாக்காக வைத்துக் கொண்டு அவர்கள் வீட்டின் முன்னால் நின்று எப்படியாவது அவனைப் பார்த்து விடுவாள். ஆனால் அதை அவன் அறியாமல், மறைந்திருந்து செய்தாள். அதன் பிறகு அகிலும் அவளை தொந்தரவு செய்யவில்லை.‌ பற்றாக்குறைக்கு அவனது கவனக்குறைவால் ஏற்பட்ட குளறுபடியால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுருக்க, அதை நிவர்த்தி செய்வதற்கும், ஈடு கட்டுவதற்கும் உழைப்பதிலேயே அவனது நாட்கள் யாவும் கடந்து சென்றன.

எல்லாம் நன்றாகத்தான் சென்றது மீனாட்சியின் ஒரு செயல் அனைவரது வாழ்வையும் புரட்டிப் போட காத்திருந்தது.
தேவேஷ்வர், வாணி இருவரும் தங்கள் நேசத்தை வார்த்தைகளால் பகிர்ந்து கொள்ளவில்லை. அதேபோல் அதில் தன் நேசத்தை சொன்னபோதும் மலரிடம் அவள் விருப்பத்தை கேட்கவில்லை மலரும் அவன் மீது உண்டான இருப்பதை உணர்ந்த போதும் அதை அவனிடம் சொல்லவில்லை..

அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று அவர்களது அந்தஸ்து, இரண்டாவது அவனது தாய் மீனாட்சி. தன்னைக் கண்டால் துரத்தும் அவர்கள் எப்படி தன்னை மருமகளாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணமும், சொந்த அண்ணன் மகளையே வேலைக்காரி போல் நடத்துபவர் தன்னை எப்படியெல்லாம் நடத்துவாறோ என்ற எண்ணமும் அவளை தள்ளி நிற்க வைத்தது. ஆனால் தொலைவில் நின்று அவனை ரசிப்பதையும், அவன் மீதான நேசத்தை அவள் ஒருபோதும் குறைத்துக் கொள்ளவில்லை. அதிலும் நைசாக அந்த வீட்டில் இருப்பவர்களைப் பற்றியும் வாணியிடம் கேட்டு தெரிந்து கொண்டாள். தாய் சொல்லை தட்டாத பிள்ளை, தன்னிடம் மட்டும் சிடுசிடுவென பேசுபவன், தன் குடும்பத்தாரிடம் அன்பு செலுத்துபவன், இரக்க குணம் கொண்டவன் என்றெல்லாம் அகிலைப் பற்றி சொல்லி இருக்கிறாள்.

அதுமட்டுமின்றி தன் அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உண்டான படிப்பு செலவுக்கும், திருமண செலவிற்கும் உண்டான பணத்தை முழுதாக கொடுத்து விடுவான். கூடவே அவர்கள் வயதாகி வேலை செய்ய முடியாத நிலையில் வேலையை விட்டு நிற்கும் போது அவர்களுக்கு மாதாந்திரமாக ஒரு தொகையை ஒதுக்கி அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்து இருப்பதையும் எப்படியோ பாட்டியின் மூலமாகவோ அல்லது ஆதவ்வின் மூலமாகவோ தெரிந்து வைத்திருந்தாள் வாணி. அதை பேச்சு வாக்கில் மலரிடம் சொல்லி விட, இன்னும் இன்னுமே அகிலை மலருக்கு பிடித்து போனது..
தாய்க்கு பிடிக்காததால் தான் வாணியை வெறுக்கிறான் என்பதையும் அவள் வெகு விரைவிலேயே உணர்ந்து கொண்டாள்.

மேலும் இரு மாதம் கடகடவென கடந்து சென்றிருந்தது. இரண்டாம் வருடம் என்பதால் விளையாட்டு தனத்தை விடுத்து படிப்பில் கவனத்தை பதித்தவாறு தான் பெண்கள் இருவரும் மீதமிருந்த நாட்களை கடந்தார்கள்.

சரியாக அன்று பெண்கள் இருவருக்கும் இன்டர்ணல் எக்ஸாம் நடந்தது. எக்ஸாமை முடித்து விட்டு சற்று தாமதமாகவே இருவரும் அவரவர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வாணியோ வீட்டிற்குள் நுழைந்த போது வீடு முழுக்க ஆட்கள் இருப்பதை கண்டு குழப்பமடைந்தாள். ஆனால் அவளால் கேள்வி கேட்க முடியவில்லை. வயிற்று வலி வேறு அவளை பாடாய் படுத்த தயக்கத்துடன் அவர்களை கடந்து செல்ல இருந்த நேரத்தில் அவள் அருகே வந்து நின்ற மீனாட்சி,
“எல்லாரும் பெண்ணை பார்த்துக்கோங்க இவ தான் என் மருமக பேரு மதுர வாணி” என்று அனைவருக்கும் அறிமுகப் படுத்த வாணியை அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

ஆனால் ஆதி விநாயகம் பூங்கோதை நாச்சியார்
சுந்தரேசன், கதிரேசன், ஆனந்தவள்ளி, புகழேந்தி , ஆதவ், வாணி அனைவரும் அதிர்ச்சியாகத்தான் பார்த்தனர்.‌ மீனாட்சி அதன் பிறகு சிறிது நேரம் கூட அவளை அங்கே நிற்க விடாமல் தன்னறைக்கு இழுத்து சென்றவர் தானே அவளுக்கு முகம் கழுவி விட்டு அவள் உடையை மாற்றச் சொல்லி ஒரு புடவை கொடுத்தார். அத்தையின் முகத்தை பார்த்தவாறே உடையை மாற்றிய வாணி எதுவும் பேசாமல் ஸ்டூலில் அமர, தானே அவளுக்கு தலை வாரி விட்டு பின்னலிட்ட மீனாட்சியும் எதுவும் பேசவில்லை.

ஏதோ பலி கொடுப்பதற்கு முன்பு ஆட்டை அலங்கரிப்பது போல் அலங்கரிக்கிறார்களே என்று மட்டும் நினைத்துக் கொண்டாள் வாணி. அலங்காரம் முடிந்ததும் அவளை கீழே அழைத்து வர, ஆதவ் கூட ஒரு நிமிடம் கண்ணை சிமிட்ட மறந்து வாணியைப் பார்த்திருந்தான். செய்து வைத்த கோயில் சிலை போல் அம்சமாக இருந்தாள் வாணி.

அவளை அழைத்து வந்து ஹாலில் இருந்த சோபாவில் அமர வைக்க, அதே நேரம் தன் அறையிலிருந்து தயாராகிக் கீழே இறங்கி வந்தான் அகில். அவன் முகத்தில் துளியும் சிரிப்பில்லை, இறுக்கமாகக் காணப்பட்டான்.‌ அவனும் சற்று இடைவெளி விட்டு வாணியின் அருகில் அமர ஐயர் லக்ன பத்திரிக்கையை வாசிக்க ஆரம்பித்தார். லக்ன பத்திரிகை வாசித்து முடித்ததும், இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று ஐயர் சொல்ல விதிர்விதிர்த்து நிமிர்ந்து பார்த்தாள் வாணி. அவள் கண்களிலில் தேங்கியிருந்த கண்ணீர் இப்ப விழவா அப்ப விழவா என்று தொடுத்துக் கொண்டிருந்தது. அதை அங்கிருந்த யாரும் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை.‌ அகிலோ இறுகிப்போன முக பாவனையில் இருந்தவன் சட்டென்று புன்னகை பூத்த முகத்திற்கு மாறினான். ஏனெனில் சில நிமிடங்களுக்கு முன்பு தான் அவன் அருகில் வந்து ஏதோ சொல்லிவிட்டுச் சென்றார் மீனாட்சி.

அவனோ எந்தவித தயக்கமுமின்றி வாணியின் விரலில் மோதிரத்தை போட்டு விட, கிட்டத்தட்ட உயிரற்ற ஜடம் போல் நின்றிருந்த வாணியின் கையைப் பற்றி மோதிரத்தை வைத்த மீனாட்சி, “ம்ம் போட்டு விடுமா” என்று சொல்லி வற்புறுத்த, ஆதி விநாயகம், பூங்கோதை நாச்சியார், ஆதவ் மூவரையும் இயலாமையோடு பார்த்தவாறு அவன் விரலில் மோதிரத்தை போட்டு விட்டாள் மதுர வாணி. நிச்சயம் முடிந்ததும் வந்திருந்த அனைவரும் உணவுண்டு விட்டு கிளம்பி சென்று விட்டனர். வாணியோ எதுவும் பேச முடியாமல், தொண்டையைக் கவ்வும் துக்கத்தில் அழக்கூட முடியாமல் விக்கித்து போய் நின்றிருந்தாள்.. ஆனால் அகிலோ புன்னகை மாறாத முகத்துடன் நின்றிருந்தான். குற்றவுணர்ச்சி தாளாமல் நொந்து கொண்டிருந்தான் ஆதவ்.

- தேடல் தொடரும்..
 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல் -20

வாணியோ அழக் கூட தோன்றாமல் விக்கித்துப் போய் கொழு பொம்மையென நின்றிருந்தாள். வந்திருந்த கூட்டம் கலைந்து சென்றதும் அவ்வளவு நேரம் புன்னகை முகத்தை சுமந்திருந்த, ‌ அகில் அதன் பிறகு ஒரு நிமிடம் கூட அங்கு நிற்காமல் தன் அறைக்கு வந்து சேர்ந்தவன் கதவை சாத்தி தாளிட்ட மறுகணம் போட்டிருந்த உடை அனைத்தையும் கழட்டி தூக்கி எறிந்து விட்டு கண்ணாடி முன் சென்று நின்றான். அதில் தெரியும் தன் முகத்தை பார்த்து அருவருத்தவனாய் காறி கண்ணாடியில் உமிழ்ந்தான்.

வாணியோ அதன்பிறகு யார் முகத்தையும் பார்க்காமல் தன் அறைக்கு வந்தவள் குமுறி குமுறி அழுதாள். கையிலிருந்த மோதிரம் அவளை நெருப்பில் நிற்க வைத்தது போல் கொதிக்க வைத்தது, அனலாய் சுட்டதென்றால் நெஞ்சை உரசிக்கொண்டு இருந்த பொன் தாலியோ அவளுக்கு உயிர் வதையைக் கொடுத்தது.‌ அடுத்து என்ன செய்வது என்று அவளால் சிந்திக்கக் கூட முடியவில்லை. அத்தனை பேர் முன்னால் இதில் விருப்பமில்லை என்று சொல்லக்கூட தனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவில்லையே என்று எண்ணி குமுறி குமுறி அழுதாள். அப்போது கதவு தட்டப்பட்டது, முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தாள். கதவுக்கு வெளியே திகுதிகுவென எரியும் நெஞ்சை சமன் படுத்த முடியாமல் கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தாள் மலர்.

அவளைக் கண்டதும் பொங்கி வந்த அழுகையோடு அவள் தோளில் சாய்ந்து விட்டாள் வாணி. அவளை உள்ளே இழுத்துக் கொண்டு வந்த மலர் தன் முகத்திலிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு முகத்தை சாதாரணமாக வைத்தவள்,
“என்ன ஆச்சுடி உனக்கு நிச்சயமாமே?” என்று கேட்டாள்.

“எனக்கே தெரியாம ஏற்பாடு பண்ணிட்டாங்கடி. அந்த அகிலுக்கும் எனக்கும் நிச்சயம் முடிஞ்சிருச்சு, என் சம்மதத்தை யாருமே கேக்கலடி” என்று குமுறியவளாய் தன் விரலை புதிதாக ஆக்கிரமித்திருக்கும் மோதிரத்தைக் காட்டினாள்.

அந்த மோதிரம் தான் வாங்கக்கூடிய மதிப்பு கொண்டது தான், ஆனால் அதை போட்டவனின் மதிப்பு தனக்கல்லவா தெரியும் என்று நினைத்தாள். ‘உன்னை நேசிக்கிறேன், உன்னை பிடிச்சிருக்கு என்று சொன்னானே அப்படியிருக்க இன்னொருத்தியை திருமணம் செய்ய எப்படி அவன் சம்மதம் தெரிவித்தான் என்று நினைத்து அவள் உள்ளம் குமுறியது. பதில் பேசாது அந்த மோதிரத்தையே வெறித்துப் பார்த்தவள், “அவங்க கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டதும் நீயும் சரின்னு சொல்லிட்டியா அப்ப தேவ் அண்ணாவோட நிலைமை” என்று கேட்க, அதற்கும் ஒரு மூச்சு அழுது முடித்தவளாய், “என்கிட்ட யாரும் எதுவும் கேட்கவே இல்லையே, நான் உள்ள வந்ததும் ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க டிரஸ் மாத்த சொன்னாங்க, என்ன ஏதுன்னு தெரியாம தான் நானும் மாத்துனேன். திடீர்னு எல்லார் முன்னாடியும் கொண்டு வந்து நிப்பாட்டி நான் என்னன்னு யோசிக்கிறதுக்கு முன்னாடியே, என்ன நடக்குதுன்னு நான் உணர்றதுக்கு முன்னாடியே நிச்சியத்தை முடிச்சுட்டாங்கடி” என்று சொல்லி அழுதாள்.

“அவங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்காங்க நீ ஒரு உயிருள்ள பொண்ணுடி ஜடம் கிடையாது. அவங்களோட இஷ்டத்துக்கு ஆட முடியாது, வாடி நான் என்னன்னு கேட்குறேன்” என்று சொல்லி வம்படியாக வாணி வேணாம் என்று சொல்லி மறுக்க மறுக்க அவளை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள் மலர்.

முதல்முறையாக அந்த வீட்டிற்குள் வருகிறாள். உள்ளே வரும் போதும் பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தான் வந்திருந்தாளே தவிர முன் வாசல் வழியாக வரவில்லை. வீட்டு ஹாலில் தான் அனைவரும் அமர்ந்து இருந்தார்கள், அகிலைத் தவிர அனைவரும் அங்குதான் இருந்தார்கள்.

அனைவரின் முன்பும் வாணியை நிறுத்தியவள், “இங்கிருக்குற உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா. அப்பா அம்மா இல்லாத பொண்ணுன்னா உங்க இஷ்டத்துக்கு நீங்க என்ன வேணாலும் செய்ய வைப்பீங்களா, அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையான்னு கூட கேட்காம நீங்க பாட்டுக்கு கல்யாணத்தை நடத்த முயற்சி பண்றது எந்த விதத்துல ஞாயம்” என்று கேட்டாள்.

“அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா இல்லையான்னு கேட்க வேண்டியது நாங்க தான் இல்லன்னு சொல்லல. அதே போல இது எங்க குடும்ப விஷயம், அவ எங்க வீட்டு பொண்ணு அதுவும் நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணே இதையெல்லாம் கேட்கல நீ ஏன் கேட்கணும். அவளுக்கு அறிவுரை சொல்றதுக்கோ இல்ல, எங்க குடும்ப விஷயத்துல தலையிடுறதுக்கோ உனக்கு என்ன உரிமை இருக்கு. ஆமா நீ யாரு முதல்ல யாரைக் கேட்டு வீட்டுக்குள்ள வந்த?” என்று கேட்டவாறு படியிலிருந்து இறங்கி வந்தான் அகில்.

அவன் குரலைக் கேட்டு ஒருவித எதிர்பார்ப்புடன் நிமிர்ந்து பார்த்த மலர் அவன் வார்த்தைகளை கேட்டு சுக்குநூறாக உடைந்து நொருங்கி விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.‌ மனம் முழுமையாக அழுதது ஆனால் கஷ்டப்பட்டு கண்களில் கண்ணீரை தேங்க விடாமல் தடுத்தவள்,‌ “நான் உங்களுக்கு யாரும் கிடையாது தான், இது உங்களோட குடும்ப விஷயம் தான் நான் இல்லைங்கலை. அதே போல அவ எனக்கு உறவு கிடையாது தான். ஆனா அவளுக்கும் எனக்கும் இருக்குற உறவு உங்களோட உறவை விட உசந்தது. அவ எனக்கு உயிர்த் தோழி. அவளோட வாழ்க்கையில அவளுக்கு பிடிக்காம நீங்க எந்த முடிவும் எடுக்க முடியாது. எனக்கு இந்த கல்யாணம் பிடிச்சிருக்குன்னு அவ ஒரு வார்த்தை சொன்னா போதும் நான் இதுக்கு மேல எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன். நானே கூட இருந்து மணப்பெண் தோழியா இருந்து அவளுக்கு எல்லாத்தையும் செய்யறேன், நீங்களே அவக்கிட்ட அவ விருப்பம் என்னன்னு கேளுங்க” என்றாள்.

“கேட்குறேன் ஆனா அதுக்கு முன்னாடி அவக்கிட்ட நான் இரண்டு நிமிஷம் பேசணும். நான் அவளை மிரட்டமாட்டேன், நீ என்னை நம்பலாம் உண்மையா, கடவுள் மேல ஆணையா நான் அவளை மிரட்ட மாட்டேன், இரண்டே நிமிஷம் பேசிட்டு வந்துடுறேன், அதுக்கப்புறம் வந்து அவளோட சம்மதத்தைக் கேட்குறேன்” என்றார்.

“சரி நான் இதுக்கு ஒத்துக்குறேன்” என்ற மலர் வாணியின் அருகில் நெருங்கி,
“அந்த அம்மா என்ன சொன்னாலும் சரி நீ உன் முடிவுல தெளிவா இரு. யாருக்கும் நீ பயப்படணும்னு அவசியம் கிடையாது. அதே மாதிரி தேவ் அண்ணாவ மனசுல வச்சுக்கிட்டு எதுவா இருந்தாலும் சொல்லு. அவரு உனக்காக என்ன வேணாலும் செய்வாரு. என் உசுரே அவ தான் அவளை பாத்துகோமான்னு சொல்லிட்டு போயிருக்காரு அதனால எதுவா இருந்தாலும் பார்த்து முடிவு பண்ணு” என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

தடதடக்கும் இதயத்துடனும் பயத்துடனும் தான் அருகில் இருந்த ஒரு அறைக்குள் நுழைந்தாள் வாணி. அவள் பின்னே நுழைந்த மீனாட்சி கதவை சாத்திவிட்டு அவள் அருகில் நெருங்கி நின்றவர், “இங்க பாரு உன்னை எனக்கு பிடிக்காது தான் ஆனா உன்னால என் பையனோட வாழ்க்கை நல்லா இருக்கணுங்குறத்துக்காக தான் இந்த கல்யாணத்த செய்யணும்னு நினைக்கிறேன்” என்றதும், அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தாள் வாணி.

“ஆமா என் பையனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு நெனச்சு. அவனோட ஜாதகத்தை ஜோசியர்கிட்ட எடுத்துட்டு போனேன். அப்ப அவரு சொன்னாரு உங்க பையனுக்கு முதல் பொண்டாட்டி நிலைக்காது, முதல் பொண்டாட்டி இறந்து போயிடுவாங்க. இந்த ஒரு வாரத்துல அவருக்கு கல்யாணம் நடந்தே ஆகணும் அப்படி நடந்தா தான் அவரோட உயிருக்கு ஆபத்தில்லாம இருக்கும், அவருக்கு இருக்குற கண்டம் நீங்கும் இல்லன்னா மிகப்பெரிய கண்டம் இருக்குதுன்னு சொன்னாரு. உங்க அப்பா எவ்வளவு தப்பு செஞ்சிருக்காரு. என் பங்கு சொத்தைக்கூட எனக்கு தரல. இதுவரைக்கும் எனக்குன்னு அவரு எந்த நல்லதும் செஞ்சது கிடையாது. அவரால நான் அதிகமா காயப்பட்டுருக்கேன் அதுக்கு பிராயச்சித்தமா நீ என் பையனை கல்யாணம் பண்ணிக்கோ. இன்னும் ஆறே மாசத்துல நீ செத்தா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, சப்போஸ் அப்படி நீ சாகலன்னா உனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுறேன் அதுக்கப்புறம் உனக்கு என்ன விருப்பமோ அதயே செஞ்சுக்கலாம். ஆனா அதுவரைக்கும் நீ இந்த வீட்ல என் மருமகளா இருந்து தான் ஆகணும். அப்படி இருக்க முடியாது, இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாதுன்னு நீ சொன்னா அதுக்கு மேல உன் விருப்பம். உங்க அப்பா செய்த தப்புக்கு அவரு மேல இருக்குற கரையை போக்குறதுக்கு இது உனக்கு ஒரு வாய்ப்பு அவ்வளவு தான். நீ மருமகளா வந்தாலும் உன்னைக் கஷ்டப்படுத்த மாட்டேன், நல்லா பாத்துக்குவேன்” என்று சொல்லி விட்டு அமைதி காத்தார்.

சட்டென்று தரையில் முழங்காலிட்டு அமர்ந்தவள் ஒரு மூச்சு அழுது முடித்தாள். பின்
எதை எதையோ யோசித்தாள். பின்பு அழுந்தத் துடைத்து முகத்துடன் எழுந்து நின்று,
“நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்” என்று தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

வெளியே வந்து அதையே தான் சொன்னாள். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து போயினர். ஆதவ்வோ,“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்குற, உனக்கு இவங்க எவ்வளவு கெடுதல் செஞ்சிருக்காங்க அதையெல்லாம் மறந்துட்டியா. அதுவும் என் அண்ணனுக்கு உன்னைக் கண்டாவே பிடிக்காது.‌ ஆனாலும் சிரிச்சுகிட்டே நிச்சியத்துக்கு சந்தோசமா வந்து நிக்கிறான். நீயும் கல்யாணத்துக்கு சரின்னு சொல்ற, நீங்க ரெண்டு பேரும் உங்க மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க?” என்றான் அடங்காத சினத்தோடு.

அதைக்கேட்ட மீனாட்சி,
“என்னடா இப்படி சொல்ற இந்த கல்யாணம் நடக்குறதுக்கு முழுமுதற் காரணமே நீ தானே”, என்றதும் அனைவரும் அதிர்ந்தனர்.

ஆதவ்வும், “என்ன சொல்றீங்க பெரியம்மா நான் எப்படி காரணமாவேன். ”

“நீதானே கண்ணா அகில் லவ் பண்றான்னு சொன்ன,‌ அதுவும் வாணியை லவ் பண்றான்னு உன் பிரண்டு கிட்ட நீ தானே சொல்லிக்கிட்டு இருந்த” என்றதும் அதிர்வோடு அனைவரையும் பார்த்தவன்,
“இல்ல தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க பெரியம்மா” என்றான் பதைபதைப்புடன்.

“இல்ல நீ சரியாதான் சொல்லிருக்க. என் பையன் கிட்ட நான் கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டதும் உடனே சரின்னு சொல்லிட்டான். அவளை பிடிக்காம இருந்துருந்தா எப்படி சரின்னு சொல்லி இருப்பான். அவளை பிடிச்சதால தானே சரின்னு சொல்லியிருக்கான்..”

அனைவரும் இப்போது அகிலைப் பார்க்க, அவனோ, “எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம்,‌ என்னை யாரும் வற்புறுத்தக் கிடையாது. அவங்கவங்க வேலையை பார்த்துட்டு போங்க” என்று சொல்லி விட்டு மீண்டும் தன் அறைக்குள் அடைந்தவன் தான் அதன் பிறகு வெளிய வரவே இல்லை.

ஏற்கனவே கல்லூரியில் இன்று வாணியோடு தன்னை இணைத்துப் பேசியதால் பசங்களுக்குள் பஞ்சாயத்து ஆகி விட்டது. கடைசியில் ஆமா அப்படி இருந்தா என்ன தப்பென்று ஆதவ் கேட்டு விட்டதால் மீண்டும் அனைவரும் வாணியை கிண்டல் செய்தனர். அதனால் ஏற்கனவே குற்றவுணர்ச்சியில் இருந்தவனுக்கு, இப்பது தன்னால் தான் அவளுக்கு இப்படி ஒரு நிலை? என்று நொந்து கொண்டவன், ஒரு வாரத்திற்கு முன்பு தனக்கும், அகிலுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை நினைத்துப் பார்த்தான்.

அன்று தன் நேசத்தை மலரிடம் சொன்னதற்குப் பிறகு மலரை அவன் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் அவள் கல்லூரியில் இருந்து வெளியே வரும் வரை காத்திருந்து தொலைவிலிருந்தே அவளைப் பார்த்து விட்டு தான் வீடு வந்து சேர்வான். அப்படி ஒரு நாள் பார்த்து விட்டு நகர்கையில் அவனது காரை ஆதவ் பார்த்து விட்டான். வேகமாக தன் வண்டியை நிறுத்திவிட்டு அண்ணனின் காரை நெருங்கியவன் கார் கண்ணாடியைத் தட்டினான். பெருமூச்சோடு கதவை திறந்தான் அகில்.

“என்னடா”, என்று கேட்டவனிடம்,

“நீ இங்க வெயிட் பண்ற ஆளே கிடையாது அண்ணா, என்ன ஆச்சு எங்க காலேஜ்ல ஏதாவது ஒரு பொண்ண லவ் பண்றியா, அவங்களை பாக்க தான் வெயிட் பண்றியா?”

“ஆமா லவ் பண்றேன் போதுமா!” என்றான்.‌ கையும் களவுமாக மாட்டிக் கொண்டதற்கு பிறகு மறைப்பதில் பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்து உண்மையை ஒப்புக் கொண்டான் அகில்.

“சரி அந்த பொண்ணு யாரு, நம்ம ஊரா?” என்று ஒருவித எதிர்பார்ப்புடன் கேட்டான். ஏனெனில் அவனுக்குத் தான் ஏற்கனவே ஒரு எண்ணம் இருந்ததே தன் அண்ணன் வாணியைத் தான் விரும்புகிறானோ என்று. தற்போது சந்தர்ப்பம் கிடைக்கவும் கேட்டுவிட்டான்.

அகிலும் மலரை மனதில் வைத்துக்கொண்டு, “ஆமா நம்ம ஊரு தான். அதுவும் உனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்”, என்று சொல்லி மௌனமாய் புன்னகைக்க,

“யாருணா அந்த பொண்ணு உன்னை வெட்கப்பட வச்சுட்டாங்க. சரி பொண்ணு பேரு என்னண்ணா?” என்று கேட்டதும் ஒரு நிமிடம் தயங்கியவன், ‌“பேரை மட்டும் கேட்காத ஆனா அவ இன்னைக்கு பிரவுன் கலர் சுடிதார் போட்டிருக்கா", என்று சொல்லி விட்டு தனக்கு வந்த அலைபேசி அழைப்பை ஏற்று பேசிக்கொண்டிருந்தான்.

அதே நேரம் சட்டென்று காரில் இருந்து கீழே இறங்கிய ஆதவ் வாணி அணிந்திருந்த உடையைப் பார்த்தான். அன்று இருவரது கெட்ட நேரமா என்னவோ மலர்,வாணி இருவரும் கிட்டத்தட்ட ஒரே நிறத்தில் தான் உடை அணிந்திருந்தார்கள்.

நிச்சயமாக மலரை அவன் நேசிப்பான் என்று ஆதவ்வுக்குத் தோன்றவே இல்லை. வாணியைத் தான் விரும்புகிறான் என்றெண்ணி மகிழ்ந்து போனான். அந்த சந்தோசத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் வீட்டிற்கு வந்ததும் அலைபேசி இணைப்பில் வந்த நண்பனிடம் இதை சொன்னதோடு மட்டுமின்றி,‌ “அப்பவே நெனைச்சேன் எங்க அண்ணனோட மாற்றத்துக்கு காரணம் வாணியா தான் இருப்பான்னு. என்னோட யூகம் சரியாகிடுச்சு, என் அண்ணன் வாணியை விரும்புறாரு கண்டிப்பா அவங்க லைஃப் நல்லா இருக்கும்” என்று உளறிக் கொட்ட அதை எதேச்சையாக மீனாட்சி கேட்டு விட்டார்.

அதைக் கேட்டு அவருக்கு ஆத்திரம் வந்தாலும் அதே நேரம் ஜாதகத்தில் இந்த குறைபாடு இருப்பதை அறிந்ததிலிருந்து அவர் மனம் கணக்கு போட்டது. அவளை திருமணம் செய்து அவள் இறந்து போனாலும் தனக்கு லாபம் தான், அவளை தனியாக வெட்டி விட்டாலும் அவள் கஷ்டப்படுவதை பார்ப்பதற்கும் தனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தோடு தான் இந்த நிச்சயத்திற்கு பிளான் போட்டார். அவரே ஆச்சரியப்பட்டது கஷ்டமே இல்லாமல் வாணி ஒத்துக் கொண்டது தான். கூடவே தன் தாய் கேட்டதுக்கு மறுப்பு சொல்லி பழக்கம் இல்லாததால் தான் அகிலும் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான். கூடவே மலர் எந்த பதிலும் சொல்லாததால் அவளை வற்புறுத்த மனமில்லாமலும் இந்த கல்யாணத்திற்கு சரியென தலையாட்டினான்.

ஒரே வாரத்தில் திருமணம் என்பதால் நிச்சயம் முடிந்த நான்காம் நாள் திருமணம் வைத்திருந்தார்கள். அவர்கள் வீடு திருமண அலங்காரத்தினால் ஜொலி ஜொலித்தது. தன் வாக்கு கொடுத்தபடி மணப்பெண் தோழி இடத்தில் இருந்து அனைத்தையும் செய்தால் மலர்.‌ வாணியுடனே இருந்தாள்,‌ ஆனால் பெரிதாக தோழிகள் இருவரும் முன்பு போல் பேசிக் கொள்ளவில்லை, அமைதி காத்தனர். வாணியின் திருமண செய்தி தேவேஷ்வரின் குடும்பத்தாருக்கும் தெரியவந்தது. சுப்பிரமணியத்துக்கு அப்போது தான் தான் நினைத்தது போல் நடக்கிறது என்றே தோன்றியது. எக்காரணத்தைக் கொண்டும் திருமணம் முடியும் வரை தன் மகனை இங்கே வர விடக் கூடாது என்று முடிவு செய்தார். அண்ணன் மீது இருக்கும் பாசத்தில் விக்கி ஏதேனும் குளறுபடி செய்து வைத்து விடுவானோ என்று நினைத்தவர் தூரத்து சொந்தத்தில் இருக்கும் ஏழு பசங்களை ஒன்றிணைத்து தன் இளைய மகனை அவர்களுடன் சுற்றுலா அனுப்பி வைத்து விட்டார். தந்தையின் இந்த மாற்றம் எதனால் என்று புரியாமலேயே நண்பர்களுடன் ஊர் சுற்றக் கிளம்பி விட்டான் விக்கி.

இதோ அதோவென்று மூன்று நாட்களும் ஓடிச் சென்று இருந்தது. மலர், வாணி இருவரும் அந்த ஒரு வாரமும் கல்லூரிக்கு விடுப்பு எடுத்து இருந்தார்கள். விடிந்தால் திருமணம் எனும் நிலையில் இரவு 11.30 மணிக்கு ஊர் வந்தடைந்தான் தேவேஷ்வர்.

ஏனோ மனதில் நெருடலாக இருக்கவும் தன்னவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு விட்டான். தன் அறையில் இருக்கும் மற்றொருவன் தந்தையின் தொடர்பில் இருக்கிறான், தன்னைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்கிறான் என்று தெரிந்ததால் தான் இவ்வளவு நாள் அமைதி காத்தான். தந்தைக்கு திடீரென்று உடம்பு சரியில்லை என்று அவன் உயிருக்கு கிளம்பிச் சென்றதை சாக்காக வைத்து இவனும் ஊருக்கு கிளம்பி வந்து விட்டான்.

ஊருக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தவன் வாணியின் வீட்டைப் பார்த்வாறே வீட்டிற்குள் நுழைந்த நேரத்தில் அவனைப் பார்த்து விட்டாள் மலர்.‌.‌ அவனும் மலரைக் கண்டவன் வேகமாக அவள் அருகில் நெருங்கி,
“எப்படிமா இருக்குற?” என்றதற்கு,

“நல்லா இருக்கேன் அண்ணா. நீங்க என்ன திடீர்னு வந்து நிக்கிறீங்க?” என்றாள் படபடப்புடன்.. இவருக்கு உண்மை தெரிந்தால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த விஷயம் தெரிந்தால் இன்னும் இவன் மனது என்ன கஷ்டப்படுமோ, தன்னைப் போல் அவனும் வருத்தப்படுவானோ என்று எண்ணி கலங்கினாள்.

“நான் வந்தது யாருக்கும் தெரியாது திடீர்னு வந்துட்டேன். உன்கிட்ட சொல்றதுக்கு என்னம்மா அவளை உயிரா நேசிக்கிறேன் அவள பாக்கணும் போல இருக்கவும் கிளம்பி வந்துட்டேன். ஆமா அவங்க வீட்ல என்ன விசேஷம்மா”

“அந்த வீட்டு பெரிய பையனுக்கு கல்யாணம் அண்ணா அதான் வீட்ல விசேஷமா இருக்கு” என்றாள்.

“கல்யாணம் பண்றாங்களாம்மா, பொண்ணு யாரும்மா, எந்த ஊரு?”, என்று கேட்டான் எதேச்சையாக.

“பொண்ணு ...பொண்ணு தெரிஞ்ச பொண்ணு தான் அண்ணா. சொந்தக்காரங்க பொண்ணுதான். சரி அண்ணா எனக்கு டைம் ஆகுது நான் கிளம்புறேன்” என்று சொல்லி விட்டு நகர பார்த்தவளை தடுத்து நிறுத்தியவன்,“ஆமா நீ எதுக்கு இந்த நேரத்துல இங்க வந்துருக்குற?” என்று கேட்க,அவளோ பதில் சொல்லாது முழித்தாள்.

அதே நேரம் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்த பரமசிவம் இவர்கள் இருவரையும் பார்த்து விட்டு,‌“அடடே! தேவேஷ்வர் தம்பியா, நல்லா இருக்கீங்களா?” என்று கேட்க,

“நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க அப்பா..?”

“நீங்க தான் தம்பி என்னை அப்பான்னு கூப்பிடுறீங்க, மத்தவங்க எல்லாம் எங்களோட பேச கூட யோசிப்பாங்க. ஒன்னும் இல்ல பாப்பாவோட சினேகித பிள்ளைக்கு விடிஞ்சா கல்யாணம். இது தான் மணப்பெண் தோழி, அதான் ஏதோ சடங்கு இருக்குன்னு சொல்லியிருந்தாங்க அதான் பாப்பா வந்துச்சு. இந்நேரம் சடங்கு முடிஞ்சுருக்கும்னு பாப்பாவை கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்” என்றார் அவர் வெள்ளந்தியாக.

மலர் மணமகளின் தோழி என்றதும் சுருக்கென்று நெஞ்சுக்குள் ஏதோ தைப்பது போல் உணர்ந்த தேவேஷ்வர்,‌“அப்படிங்களா அப்பா அது யாரு எனக்கு தெரியாம என் தங்கச்சிக்கு பிரண்டு, பேரு என்னங்க அப்பா”, என்று கேட்டான்.

‘ஐயோ! அப்பா எங்கே உண்மையை போட்டு உடைத்து விடுவாரே என்ற பயத்தில்,
“அதெல்லாம் காலைல நீங்க பாருங்க தெரியும். அப்பா எனக்கு தூக்கம் வருது வாங்க போகலாம்” என்று சொல்லி பரமசிவத்தை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றாள்.

ஆனால் அதற்குள் அவரோ,
“அட இருமா சொல்லிட்டு வந்தர்றேன் அது ஒண்ணுமில்ல தம்பி இந்த வீட்டில் ஒரு பொண்ணு வந்து இருந்துச்சுல்ல அந்த பொண்ணு தான் தம்பி கல்யாண பொண்ணு. அந்த பொண்ணுக்கு நடந்ததெல்லாம் சரி இல்லை தம்பி. அந்த பொண்ணை அவ்வளவு கொடுமைப் படுத்துனாங்க. இன்னும் சொல்லப்போனா படிக்கறதுக்கு கூட அவங்க செலவு பண்ணல. அவங்க அப்பா ஏற்கனவே கட்டி வெச்சுட்டுப் போன பணத்தை செலவு பண்றாங்க” என்று ஆரம்பித்து இதுவரை தனக்கு தெரிந்த அனைத்தையும் புட்டு புட்டு வைத்தார்.

அதைக் கேட்டவனுக்கு என்னவோ போலானது. தன்னவள் இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறாளா என்ற உணர்வே அவனைக் கொல்லாமல் கொன்றது. அதிலும் தன் மனம் கவர்ந்தவளுக்குத் தான் திருமணம் என்ற விஷயமே அவனை இன்னுமே அதிர்ச்சியில் நிற்க வைத்திருந்தது.

தான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி விட்டு அவர் மலரை அழைத்துக் கொண்டு செல்ல, மலரோ திரும்பி விழிகளில் வழியும் கண்ணீருடன் கைகூப்பி, “மன்னிச்சிடுங்க அண்ணா” என்று சொல்லி விட்டு நகர அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தான் தேவேஷ்வர்.

ஒரு சில நிமிடங்கள் தான் அப்படி நின்றான் அதன் பிறகு அவளிடம் இது பற்றி கேட்டே ஆக வேண்டும் என்ற உத்வேகத்துடன் தன் பையை தூக்கி வீட்டுக்குள் வீசி விட்டு பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து அவள் வீட்டின் பின்புறம் சென்றான். பரமசிவம் சொன்னதை வைத்து அவள் இருக்கும் அறை இதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்தவனாய் சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு கதவை தட்டினான். அவன் காம்பௌண்ட் சுவர் ஏறி குதித்ததை தன் அறையின் ஜன்னல் வழியாக பார்த்து விட்டான் அகில்.

அதைப் பார்த்தவனுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்ற வேக வேகமாக கீழே இறங்கி வந்தவன் சத்தமில்லாமல் உறங்குபவர்கள் தொல்லை செய்யாமல் போன் பேசுவது போல் பின்பக்கம் வந்தவன் மெதுவாக வாணி இருந்த அறையை நெருங்கினான்.

நாளைக்கு அகிலுக்கு மனைவியாகி அந்த வீட்டுக்குள் மருமகளாக வரப்போகின்ற காரணத்தினால் இன்று தன் அறையில் இருந்து கொள்கிறேன் என்று அவள் சொன்னதால் யாரும் அவளை வற்புறுத்தவில்லை. அலங்காரங்களைக் கலைத்திட தோன்றாமல் தன் அறையில் கட்டிலில் அமர்ந்து இருந்தாள் வாணி. கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென்று வழிந்தது.

தாளிடப்பட்ட இருந்த கதவை மெல்லத் தட்டினான் தேவேஷ்வர். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்து முகத்தை துடைத்துக் கொண்டு கதவை திறந்தாள். சத்தியமாக அங்க தேவேஷ்வர் நின்றிருப்பான் என்று அவள் எதிர் பார்த்திருக்கவில்லை. அவனோ அதிர்ந்து நின்றிருக்கும் அவளைப் பொருட்படுத்தாமல் அவளை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவன் கதவை ஒருக்களித்து சாத்தினானே தவிர அவசரத்தில் தாளிடவில்லை.

- தேடல் தொடரும்...
 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல்-21.1

அவனைக் கண்டு சற்று பயம் கூட வந்தது வாணிக்கு. இருந்தும் மௌனமாகவே நின்றிருந்தாள். அவளை நெருங்கிய தேவேஷ்வர் சற்றும் எதிர்பாராத விதமாக அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டவன் சிறிது நேரம் அப்படியே இருந்தான். பின்பு அவளை விலக்கி விட்டு அவள் முகத்தை நிமிர்த்தி தன் முகம் பார்க்க வைத்தவன்,
“சொல்லு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டியா அந்த அளவுக்கு வந்துருச்சா, என்ன மறந்துட்டியா, இல்ல என் கையால கிடைச்சத தூக்கி எறிஞ்சிட்டியா?” என்றான் ஆங்காரத்தோடு.

அதற்கும் அவள் மறுமொழி பேசாமல் அமைதியாக நின்றாள். ஆனால் அவன் கரம் தொட்டு அவள் கழுத்தில் விழுந்த மாங்கல்யம் இன்னும் அவள் நெஞ்சில் தான் அவன் நினைவுடன் மறைந்துக் கிடந்தது.

அவள் மௌனம் இன்னும் அவனை வெறியேற்ற,
“அதுதான் உனக்கும் எனக்கும் கிட்டத்தட்ட எல்லாமே முடிஞ்ச மாதிரி ஆயிடுச்சே இன்னும் எதுக்கு தேவை இல்லாம அவனை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற. வேணா இந்த கல்யாணத்தை நிறுத்திடு இல்லன்னா நான் நிறுத்துவேன்” என்றான் அதட்டலுடன்.

அதற்கு மேலும் அவளால் அமைதியாக இருக்க முடியாமல், தன் அப்பாவின் மேல் இருக்கும் களங்கத்தை துடைக்க தன் காதலை பணயம் வைக்க துணிந்தவள்,‌“இல்லை இந்த கல்யாணம் நடக்கணும். நான் விருப்பப்பட்டுத் தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன். உங்கக்கிட்ட வசதி இல்ல ஆனா அவங்கக்கிட்ட இருக்குது அது தான் நான் சம்மதிக்க காரணம் போதுமா!” என்றதும் அவளையே சில நிமிடங்கள் குறுகுறுவென்று பார்த்தான்.

பின், “உன் மனசுல நான் இல்லைங்குறதை என்னால நம்ப முடியல. உன்னை மீறி நான் எதுவும் பண்ண மாட்டேன். இனிமே இந்த ஊர் பக்கமே வரமாட்டேன், ஏன்னா உன்னை இன்னொருத்தன் பொண்டாட்டியா என்னால பார்க்க முடியாது” என்றவன் விறுவிறுவென்று அந்த அறையிலிருந்து வெளியேறி இருந்தான்.

அவன் சென்ற பின்பு குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள் வாணி. ஆனால் அவர்கள் பேசுவதைக் கேட்ட அகிலோ அதிர்ந்து போய் நின்றிருந்தவன் எதுவும் பேசாமல் தன் அறைக்கு வந்து சேர்ந்தான்..

தேவேஷ்வரோ தளர்வோடு தன் வீட்டிற்கு வந்தான். பேக்கை எடுத்துக் கொண்டு மீண்டும் ஊருக்கு செல்ல முயன்ற வேளையில் ஏதோ சத்தம் கேட்டு வெளியே வந்த அவனது தங்கை எழிலரசி அண்ணனைக் கண்டதும் அவனை நெருங்கியவள், “அண்ணா..” என்று ஏதோ சொல்ல வர அவளை திரும்பியும் பார்க்காமல் சென்றவன்,“இனி இந்த வீட்டு பக்கமும் வரமாட்டான், ஊரு பக்கமும் வரமாட்டேன் அதை மட்டும் எல்லார்கிட்டயும் சொல்லிரு, அதே மாதிரி அவளும் நல்லாருக்கட்டும்” என்றவன் எதிர் வீட்டின் புறம் திரும்பி ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் விறுவிறுவென்று நடந்தான்.‌

எழிலோ தன் அண்ணனின் பின்னாலேயே, “அண்ணா அண்ணா..” என்று கத்திக்கொண்டே ஓடி வந்தவள் மெயின் கேட்டைத் தாண்டும் வேளையில் கால் இடறி கீழே விழுந்தாள். அதில் அவளது நாக்கு வெளியே வந்ததால், பற்களால் நாக்கு கடிபட்டு துண்டாக கீழே விழுந்தது. தங்கையின் சத்தம் நின்ற போதும் திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென்று அங்கிருந்து நடந்து வந்தவன் கார் ஒன்றில் லிஃப்ட் கேட்டு கரூர் வந்து பஸ் ஏறி சென்னை வந்தவன் மீதமிருந்த படிப்பை முடித்து விட்டு நண்பன் ஒருவருடன் பழக்கமாகி லண்டன் வந்து சேர்ந்தான். அதன் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து இப்போது தான் ஊருக்கு திரும்பி வந்திருக்கிறான்.

அதைப்போல் மறுநாள் விடியலில் அனைத்தும் நல்லபடியாக நடந்தது.‌ மணமகளாய் அலங்கரிக்கப்பட்ட போதும் கூட வாணியின் முகத்தில் சிரிப்பில்லை. அகில் ஏற்கனவே மண மேடையில் அமர்ந்திருந்தான். வாணியையும் அழைத்து வந்து அமர வைத்தார்கள். ஐயர் மந்திரங்களை நிற்காமல் ஓதிக்கொண்டிருக்க மணப்பெண் தோழியாய் வாணியின் பின்னே நின்று இருந்தாள் மலர். அவளிடம் தான் அய்யர் தாலியை கொடுத்து அனைவரிடமும் ஆசிபெற்று வாங்கி வரச் சொன்னார். அவளும் அதே போல் ஆசி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தாள்.

தாலியைக் கையில் எடுத்த ஐயர் அதை அகிலின் கையில் கொடுக்க, அகிலோ தாலியை கையில் வாங்கியவன் சட்டென்று எழுந்து நின்றான். அவனது செய்கை அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுக்க அந்த மண்டபமே பரபரப்பானது. கரூரிலேயே சற்று பெரிய மண்டபத்தைத் தான் பிடித்திருந்தார்கள். கூட்டமும் ஒரு அளவுக்கு அதிகமாகத்தான் வந்திருந்தது. இவனது செய்கையால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அவனோ எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் கீழே அமர்ந்திருந்த வாணியை அழுத்தமாகப் பார்த்தவன் பின்பு எதைப்பற்றியும் யோசிக்காமல் அவள் பின்னே நின்று இந்த மலரின் கழுத்தில் தாலி கட்டி மூன்றுமுடிச்சு போட்டிருந்தான். அதை அங்கிருந்த எவரும் எதிர்பார்க்கவில்லை,‌ அதிர்வோடு பார்த்தார்கள். மலரோ அதிர்ச்சியில் அகல விரித்த விழிகளை இமைக்க கூட மறந்தவளாய் அவனைப் பார்த்திருந்தாள்.

சில நிமிடங்கள் கடந்த பிறகே நடந்த நிகழ்வை அனைவராலும் புரிந்து கொள்ள முடிந்தது.‌ நடந்த களேபரத்தை உணராமல் குனிந்து அமர்ந்திருந்த வாணி சலசலப்பை கண்டு விட்டு அமைதியாக நிமிர்ந்து பார்த்தாள். அகில் மலரின் கழுத்தில் தாலி கட்டுவதை பார்த்து விட்டு எதுவும் பேசாமல் எழுந்து நின்றாள். பின்பு கழுத்திலிருந்த மாலையைக் கழட்டி மலரின் கழுத்தில் போட்டவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து நின்றாள். ஆளாளுக்கு ஏதேதோ பேச, அனைவரையும் வாயை மூட வைக்கும் விதமாக, “எனக்கு இவளைப் பிடிக்காது. அதுவும் நடத்தக்கெட்ட இவளை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா. நேத்து ஒருத்தன் கூட குடும்பம் நடத்திட்டு இன்னைக்கு இன்னொருத்தன் கூட குடும்பம் நடத்த தயாரான இவளை யார் கல்யாணம் பண்ணிப்பா, அவளுக்கு இந்த பொண்ணு எவ்வளவோ பெட்டர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..”
என்றான்‌.

எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள் வாணி. அவன் பேசியதை வைத்தே அவளால் அவனது மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது. ஒன்று நேற்றைய தங்களது உரையாடல்களை அவன் கேட்டிருக்கிறான் அல்லது தன்னைப் பற்றி அவனுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்று அவளுக்கு புரிந்தது.

அவனது வார்த்தைகள் அனைவருக்கும் அவள் மீதான கோபத்தையும், அருவருப்பையும் தூண்ட அனைவரும் வாய்க்கு வந்தபடி அவளைப் பேசத் தொடங்கினார்கள். “அம்மா அப்பா இல்லைங்கவும் எப்படியெல்லாம் நடந்துக்குறா. என்ன பண்றது ஏற்கனவே ஒருத்தன் கூட ஜாலியாஇருந்திருப்பா போல, வசதியான ஒருத்தன் கெடைக்கவும், அவனைக் கழட்டி விட்டுட்டு பணத்துக்காக என்ன வேணாலும் செய்வா போல” என்று அனைவரும் வாய்க்கு வந்தபடி பேசினார்கள்.

மீனாட்சி கூட அவளை கேவலமாக திட்ட முனைந்தார். ஆனால் வாணியை அவ்வாறு அனைவரும் பேசுவது மலரை கஷ்டப்படுத்த, “எல்லாரும் ஒரு நிமிஷம் நிறுத்துறீங்களா, யாராவது ஏதாவது ஒரு விஷயத்தை சொன்னா அது உண்மையா பொய்யான்னு நீங்க யாரும் யோசிக்க மாட்டாங்க. என் தோழி எவ்வளவு சுத்தமானவ, நல்லவன்னு எனக்கு தெரியும். அவளை காயப்படுத்துறது யாரா இருந்தாலும் சரி அவங்க என்னோட வாழ்க்கைக்கு தேவையும் இல்லை,‌ என் வாழ்க்கையில அவங்க இருக்கணும்னு அவசியம் இல்ல.

என்ன எல்லாரும் சொத்து, பணம் பணம்னு பேசிட்டு இருக்கீங்க அவக்கிட்ட இல்லாத பணமா இவங்கக்கிட்ட இருக்குது” என்றாள்.‌

அதிர்ந்து பார்த்தாள் வாணி.‌ அவளிடம் திரும்பி,“என்ன அப்படி பார்க்குற கொஞ்ச நாளைக்கு முன்னாடி உனக்கு ஒரு லெட்டர் காலேஜ்கே வந்துச்சு இல்லையா. அதை முதல்ல நான் தான் பிரித்துப் படிச்சேன், அது உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது. அதுல உன்னோட சொத்து விவரம் முதற்கொண்டு எல்லாமே வக்கீல் சார் அனுப்பி வெச்சுருந்தார். அது மட்டும் இல்ல உங்க அப்பா உனக்கு ஒரு லெட்டரும் எழுதி அவர் கிட்ட எப்பவோ கொடுத்துருந்துக்காரு. அதை நான் தான் படிச்சேன், அதுல என்ன இருந்துச்சு தெரியுமா! இதோ நிக்கிறாங்களே உங்க அத்தையோட குடும்பம் அவங்க ஒரு காலத்துல ரொம்ப வறுமையில இருந்தப்ப அவங்களுக்கு நடேசன்கிற பேர்ல உதவி செஞ்சது உங்க அப்பாதான்.

அதே போல உங்க அத்தை பசங்க எல்லாம் படிப்பதற்கு உதவி செய்ததும், ஏதோ ஒரு ட்ரஸ்ட் கிடையாது உங்க அப்பாதான் உதவி செஞ்சிருக்காரு. இதையெல்லாம் அவரு யாருக்கும் தெரியாம பண்ணிருக்காரு. ஆதவ்வோட சொந்த பாட்டிக்கு உங்க அப்பா இங்க வர்றது பிடிக்காது. ஏன்னா உங்க அப்பா வேற கேஸ்ட் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட ஒரே காரணத்துக்காக இங்க வரக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க.

உன் தங்கச்சி நல்லா வாழணும்னா நீ இங்க வர கூடாதுன்னு சொல்லி இருக்காங்க, அது மட்டும் கிடையாது அவளுக்கு உண்டான மரியாதையும் கொடுக்க மாட்டேன், என் பொண்ண வச்சு குடும்பத்தை பிரிச்சுடுவேன்னு என்னென்னமோ சொல்லி இருக்காங்க. அதுக்காக தான் உங்க அப்பா இவங்க கிட்ட நல்லவிதமா பழகாம தன்னையே குற்றவாளியா, தன்னையே கேவலமா, கெட்டவனா காட்டிருந்துருக்காரு. அது மட்டும் கிடையாது தான் சம்பாதிக்கிற சொத்துல ஒரு பாதி தன் தங்கச்சிக்கு போகணும்னு உயில் எழுதி வெச்சுட்டு தான் இறந்து போயிருக்காரு.‌ அந்த சொத்து பத்திரமும் அதோட இருந்துச்சு.

அதுல ஒரு பாதி உங்க அத்தைக்கு போனதுக்கப்புறமும் மிச்சமிருக்கிற சொத்து எல்லாமே இப்ப இவங்க வச்சுருப்பதை விட இரண்டு மடங்கு அதிகம்னு எனக்கு நல்லா தெரிஞ்சுது. என்ன அப்படி பார்க்குற எல்லாம் தெரிஞ்சும் நான் அமைதியா இருக்க காரணம் என்ன தெரியுமா, நீ அமைதியா இருந்ததால தான். உன்னால மட்டும் எப்படி வாணி இப்படி இருக்க முடியுது. உன்னுடைய நட்பு கிடைச்சது எனக்கு ரொம்ப பெரிய
பாக்கியம்னு தோணுச்சு. நீயே இதையெல்லாம் பார்த்துட்டு அமைதியா இருக்கும் போது நான் என்ன பண்ண முடியும்னு நெனச்சு நானும் அமைதியா இருந்தேன். ஆனா இவ்வளவும் நீ செத்துக்காக பண்ணுனேன்னு இவங்க சொன்னதை என்னால தாங்கிக்க முடியல. இப்பவும் கூட இந்த கல்யாணத்துக்கு நீ ஏன் ஒத்துக்கிட்டேன்னு எனக்கு தெரியாது, ஆனா சொத்துக்காக மட்டும் நீ ஒத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும்.

அது மட்டும் கிடையாது எனக்கு எதுவும் வேணாம் இவங்ககிட்ட இருந்து கிடைக்கிற அன்பு மட்டும் போதும்னு நெனச்சு மறுநாளே அந்த வக்கீலை நீ போய் பார்த்த விஷயம் எனக்கு தெரியும். அதுக்காக நீ காலேஜ் மட்டம் போட்டுட்டு போனதும் எனக்கு தெரியும். கூடவே எல்லா சொத்தையும் உங்க அத்தை பேர்லையே நீ எழுதி வச்சதும் எனக்கு நல்லா தெரியும் வாணி. ஆனா இதெல்லாம் தெரிஞ்சும் நான் அமைதியா இருந்தேன். ஆனா இப்ப என்னால அமைதியா இருக்க முடியாது. ஏன்னா உம்மேல தப்பு கிடையாது. இப்ப யாராவது ஒரு வார்த்தை சொல்லுங்க பார்க்கலாம்” என்றாள். குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு அமைதியாக இருந்தது அந்த மண்டபமே.

அனைவரையும் ஒரு வெற்றுப் பார்வை பார்த்த வாணி,
“நான் சொத்துக்காக இந்த வீட்டுக்கு வரல. நீங்க என்னை எவ்வளவு கொடுமைப் படுத்துனாலும், டார்ச்சர் பண்ணுனாலும் எனக்கு சொந்தம் சொல்றதுக்கு நீங்க மட்டும் தான் இருந்தீங்க அதனால தான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு போனேன். ஆனா நீங்க என்னைப் பத்தி இந்த அளவுக்கு தப்பா கேவலமா யோசிச்சுருக்கீங்கன்னு எனக்கு இப்பதான் புரியுது. இதுக்கு மேல நான் இங்க இருக்க யாரையும் கஷ்டப்படுத்த மாட்டேன்,‌ அனாதையா தான் உங்க வீட்டுக்கு வந்தேன், இப்பவும் அநாதையாவே இங்கிருந்து போறேன்” என்று சொல்லி நகர முற்பட்டவளின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்திய மலர்,
“நான் இருக்குற வரைக்கும் நீ அநாதை கிடையாது. எங்க வீடு வசதியான வீடு இல்லை தான், ஆனால் கண்டிப்பா எங்க வீட்ல சந்தோசத்திற்கு பஞ்சமிருக்காது வா போலாம்” என்று சொல்லி விட்டு இரண்டடி நகர்ந்தவள், அகில் கட்டிய தாலியை ஒரு முறை குனிந்து பார்த்தாள்.

பின்பு அவன் புறம் திரும்பியவள்,
“தெரிஞ்சோ தெரியாமலோ என் கழுத்துல ஒரு தடவை தாலி ஏறிடுச்சு. அதைக் கழட்டி போட்டுட்டு போற அளவுக்கு நான் கலாச்சாரம் தெரியாத பொண்ணு கிடையாது.‌ அதனால இது என் கழுத்துலையே இருக்கட்டும். ஆனா இப்படிப்பட்ட வீட்டுல, குடும்பத்துல என்னால வாழ முடியாது” என்று சொல்லி விட்டு வாணியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு தன் வீடு வந்து சேர்ந்தாள் மலர்.

அதன் பிறகு இருவரும் எப்போதும் போலவே கல்லூரி சென்று வரத் தொடங்கி இருந்தார்கள். ஏற்கனவே இருந்த நட்பை விட இன்னும் அவர்களது நட்பு பலமடைந்து இருந்தது. பரமசிவமும் ஆராயிம் வாணியை தங்கள் பிள்ளை போல் தான் பார்த்தார்கள். எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது அடுத்த ஒரு வருடத்தில் இவர்கள் இருவரும் கல்லூரி படிப்பை முடித்த போது பரமசிவம் திடீரென்று சாலை விபத்து ஒன்றில் பலியாகி விட மொத்த பொறுப்பும் ஆராயியிடம் வந்தது. அவர் ஒருவரால் மட்டும் அனைத்தையும் பார்க்க முடியாது என்பதால் கல்லூரி படித்து முடித்த கையோடு பெண்கள் இருவரும் லோன் போட்டு இன்னும் அதிக அளவு மாடுகளை வாங்கி பால் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.

அடுத்த ஆறு மாதத்திலேயே தீராத வயிற்று வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆராயி. அவரை பரிசோதித்ததில் அவருக்கு இரண்டு சிறுநீரகமும் பழுதடைந்து விட்ட காரணத்தினால் முழுக்க முழுக்க ஹாஸ்பிடல் வாசம் இருந்தார். இவர்களின் பால் வியாபாரத்தில் சம்பாதிக்கும் பணமெல்லாம் ஆராயின் மருத்துவ செலவுக்கே சரியாகிவிட, அடுத்த நான்கு மாதத்தில் அவரும் தன் இன்னுயிரை நீத்துக் கொண்டார்.‌ அதன் பிறகு பெண்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து கொண்டனர். எவரையும் தங்களை அண்ட விடுவதில்லை. அன்றிலிருந்து இன்றுவரை தினமும் மன்னிப்பை வேண்டி அவர்களை வந்த பார்த்துக்கொண்டிருக்கிறார் மீனாட்சி. ஆனால் இருவரும் அவரைக் கண்டு கொள்வதில்லை. சொந்தத்தின் மீதிருந்த நம்பிக்கை அனைத்தும் போயிருந்த காரணத்தினால் மலர், வாணி அவர்களை நிமிர்ந்து கூட பார்ப்பதில்லை. வாணிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாமல் தானும் தன் வாழ்க்கையை வாழப் போவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கிறாள் மலர். .

தேவேஷ்வர் தன் வாழ்வில் நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்க அதே நேரம் விக்கியும் தன் மனைவியிடம் அனைத்தையும் சொல்லி முடித்திருந்தான். இவர்களைப் போல் மலர், வாணி இருவரும் தத்தமது இணைகளை பற்றியும் தாங்கள் வாழ்வில் கடந்து வந்தவற்றைப் பற்றியும் நினைத்துப் பார்த்தவாறு கண் மூடி படுத்துக் கிடந்தார்கள். அந்த இரவு அனைவருக்கும் ஓர் ஒருவித வலியை பரிசாக கொடுத்திருந்தது.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom