8
ஒருகட்டத்தில் அனைத்தையும் அறிந்து தேர்ந்தவள் முதன்முதலாக முகத்தைக் காட்டாமல் குரலை மட்டும் பதிவு செய்து, பதிவேற்றம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ‘குயில்’ சேவைக்குள் நுழைந்தாள்.
தனக்கு மிகப் பிடித்த “தூதுவளை இலை அரைச்சு...” என்னும் பாடலின் இசையைத் தேர்வு செய்தவள்; தன்னால் இயன்ற அளவு வீட்டில் அதிக எதிரொலிப்பு இல்லாத அறையில் இன்று பதிவு செய்ய முயன்றாள்.
குட்டி குட்டியாகத் தீப்பெட்டி சைஸில் நான்கு அறைகளைக் கொண்ட ஒரு சிறிய வீடுதான் அது. அனைத்தும் பொருட்களால் நிரம்பி வழியும். அந்தக் குறுகிய வீட்டிற்குள் நின்று எத்தனை பிரயத்தனப்பட்டுக் குரலை பதிவு செய்ய முயன்றாலும் அது ஒரு வித எதிரொலிகள் கலந்த அந்த ஓசையாகவே பதிவாகும். முதன்முறை தனது பொருளாதாரப் பின்னடைவைக் குறித்து அவளுக்கு ஆதங்கம் பிறந்தது.
“இந்த ஒண்டுக் குடித்தனத்தில் இருந்துட்டு ஒரு வேலை கூட நிம்மதியா செய்ய முடியல... முதல்ல இந்த வீட்டை மாத்திட்டு வேறு எங்கேயாவது போகணும்...” என அலுத்துக் கொண்டே கொல்லைப்புறம் நோக்கி விரைந்தாள்.
கொல்லைப்புறத்தில் எப்போதும் அமர்ந்து பாத்திரம் துலக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டவள்; சுற்றிலும் எவரேனும் தன்னைப் பார்க்கின்றனரா என உறுதி செய்து கொண்ட பின்னரே அந்தக் குறிப்பிட்ட இசையை ஒலிக்க விட்டு தனது குரலை அதனோடு இயைந்து ஒலிக்கும் வகையில் பாடலானாள்.
“தூதுவளை இலை அரைச்சு...
தொண்டையில தான் நனைச்சு...
மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா..
தூங்கா மணிவிளக்க...
தூண்டி விட்டு எறிய வச்சு...
உன் முகத்தைப் பார்க்க போறேன் நாள் கணக்கா..
அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்...
அந்த ரம்பையும் ஊர்வசியும்
மாமனுக்குத் தொண்டுகள் செய்திடணும்...
நான் காத்தாகி ஊத்தாகி
மாமன தழுவி கட்டிக்கணும்...” எனப் பல்லவி, சரணத்தை மட்டும் பாடி முடித்தபின் அந்தச் செயலிலேயே சரணாகதி அடைந்து விடலாம் போலிருந்தது அவளுக்கு.
பதிவு செய்த குரலை ஒலிக்க விட்டு பார்க்க, அவளுக்குப் பெருமை தாங்கவில்லை. “சத்யா உனக்குள்ளே ஒரு ஸ்ரேயா கோஷல் ஒளிஞ்சிட்டு இருந்திருக்கிறா... நீதான் இத்தனை நாளா கவனிக்காம இருந்திருக்கிற...” இருக்கிறதா எனத் தனக்குத் தானே பெருமிதம் கொண்டது அவள் பாராட்டை அறியா மனம்.
குறிப்பிட்ட பாடலை முழுவதுமாகக் கேட்டுப்பார்க்க, அதன் பின்புறம் காற்றடிக்கும் ஓசையும் பக்கத்து வீடுகளில் “அடியே கவிதா... வெளியே வாடி...” போன்றதான ஓசையும், தொலைக்காட்சி தொடரின் ஒலிக்கும் “சந்திரலேகா.... சந்திரலேகா...” என்னும் பாடலின் ஓசையும் கேட்க, அவளுக்கு எரிச்சலாக வந்தது.
“இது என்ன... எனக்குன்னு வந்து சேருதுங்க பாரு..” என எரிச்சலுடன் குறிப்பிட்ட ஆடியோவை டெலிட் செய்து விட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்து சத்தங்கள் எதுவும் கேட்காத வகையில் அறையின் அமைப்பை மாற்றி, பொருட்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பாடலை தொடர்ந்தாள்.
மீண்டும் அதே “தூதுவளை இலை அரைச்சு...” பாடலை பாடி பதிவு செய்தவள் ஒருவாறாகப் பல ஃபில்டர்கள் செட்டிங்குகள் என மாற்றி, தனது குரலை சீரமைத்து பாடலை நிறைவு செய்து விட்டாள்.
இப்போது அந்த “தூதுவளை இலை அரைச்சு...” பாடல் சரணம் மற்றும் பல்லவியுடன் தயாராக இருந்தது. இதைப் பதிவேற்றலாமா வேண்டாமா எனத் தனக்குள் யோசித்தவள் “வேண்டாம்.. யாராவது நம்மள சுத்தி இருக்கிறவங்க கேட்டுட்டா தப்பாயிடும்.. நம்ம குரல் இங்கே இருக்கிற எல்லாருக்குமே தெரியும்... ஒருவேளை இந்தக் குரலை நான் தான் பாடினேன் தெரிஞ்சா எல்லாரும் என்ன நினைப்பாங்க??” எனத் தனக்குள் சிந்தித்து, தவறியும் அதை எவரிடமும் காட்டாமல் பதிவேற்றாமல் அப்படியே தனக்குள் சேமித்து வைத்துக்கொண்டாள்.
மறுநாள் அனைவரும் இல்லாத நேரத்தில் தனக்கு நேரம் போகவில்லை என்பதனால் அடுத்ததாக “தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ??” பாடலையும் பாடி பதிவு செய்து வைத்துக்கொண்டாள். அடுத்தடுத்த நாட்களில் “முத்து நகையே... முழு நிலவே...” என்ற பாடல், “மயங்கினேன் சொல்ல தயங்கினேன்...” என அவளுக்கும் அவள் கணவனுக்கும் பிடித்த அனைத்து பாடல்களையும் பாடி பதிவு செய்து வைத்துக் கொண்டாள்.
அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் பிரபு வேலைக்குச் செல்லவில்லை. மதிய உணவு முடித்து விட்டு சற்று ஓய்வெடுக்கலாம் என அந்த வீட்டில் இருந்த ஒரே ஒரு கட்டிலில் படுத்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் பொருட்டு இளைப்பாறிக் கொண்டிருந்தான்.
எத்தனை முயன்றும் தூக்கம் வராமல் போகவே மனதை வருடும் மெல்லிசை பாடல்களைச் சில தினங்களுக்கு முன் மெமரி கார்டில் பதிந்து வைத்திருந்ததை நினைவுகூர்ந்தவன், “புது ஃபோன்ல கேமரா, ஸ்பீக்கர்லாம் எப்படி இருக்குதுன்னு பாக்கவே இல்லையே...” என்பதற்காக, “சத்யா அந்தப் புது ஃபோனை எடுத்துட்டு வாமா...” என்க, “இதோ வரேன் மாமா...” என எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள் சத்யா.
“கொஞ்சம் இந்த மெமரி கார்டை உள்ளே போடும்மா... தூக்கம் வரமாட்டேங்குது, இந்தப் பாட்டைக் கேட்டா நல்லா இருக்கும் போல இருக்குது...” எனக் கூற, “சரிங்க மாமா...” என்றவள்; பாடலை ஒலிக்க விட்டுவிட்டு தனது வேலைகளைத் தொடர சென்று விட்டாள்.
ஒவ்வொரு பாடலாக ஒலித்துக் கொண்டிருக்க, இடையில் பதிவுசெய்து வைத்திருந்த அவளது சொந்த குரலாலான பாடலும் ஒலித்துவிட்டது. உள்ளறையில் வேலையாக இருந்த சத்யா இதைக்கேட்டு விடவும், “அச்சச்சோ... இது எப்படி இடையில கலந்தது?? மாமாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாரே...” எனப் பதறியடித்துக் கொண்டு வெளியே வர, அவனோ கண்களை மூடி பாடலில் சிலாகித்தவாறு படுத்திருந்தான்.
“என்ன.. மாமா எதுவும் சொல்ல மாட்டிக்கிறார்? ஒருவேளை உண்மையாவே நம்ம குரல் நல்லாத்தான் இருக்குதா? இத்தனை நாள் பழகியும் அவர் என்னோட குரலைக் கண்டு பிடிக்கலையா?? இவரே கண்டுபிடிக்கலைன்னா வேற யாரும் அவ்ளோ ஈஸியா கண்டுபிடிச்சிட மாட்டாங்க.. நான் நல்லாத்தான் பாடுறேன்... இனியும் இந்த மாதிரி பாடி அப்டேட் பண்ணனும்...” என நினைத்துக் கொண்டு, “யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க.. அப்பைட்யே கண்டுபிடிச்சாலும் அவங்க கண்டுபிடிக்கிறதுக்குள்ள நான் என் திறமையால மடமடனு வளர்ந்து பெரிய ஆளாகிடுவேன்... அப்புறம் அவங்க எல்லாரும் என்னைக் குறை சொல்ல முடியாது.. அண்டிக் கொள்ளத்தான் வந்தாகணும்...” எனத் தனக்குத் தானே சுய ஊக்குவிப்பு, சுய தேறுதல் செய்து கொண்டாள்.
இவ்வாறாகத் தனக்குத தானே சமாதானம் கூறிக் கொண்டாலும் உண்மையில் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் ஒவ்வொரு ரியாலிட்டி பாடல் போட்டிக்கு பின்னாடியும் பல அரசியல், பலரின் தலையீடுகள் இருக்கிறது என்பது அவளுக்குத் தெரியும். ஒவ்வொரு உரையாடல்கள். ஒவ்வொருவரின் ஒவ்வொரு அசைவும் காரணத்துடன் காட்டப்பட்டவை என்பது அவளுக்குத் தெரியும்.
சென்ற வாரம்தான் அனைவருக்கும் பிடித்த, நன்றாகப் பாடக்கூடிய ஒரு போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படாமல் ஓட்டு எண்ணிக்கையில் சுமாராகப் பாடிய போட்டியாளருக்கு அந்த நிகழ்ச்சியின் டைட்டிலும் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடும் சென்று சேர்ந்திருந்தது.
அதுபோன்ற பாடல் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து தனது திறமையை உலகுக்கு நிரூபிப்பது சற்றே கடினம் எனத் தெளிந்தாள்.
பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டது போலாகும் என்னும் கூற்றுக்கு ஏற்ப, கிணற்றுத் தவளையான சத்யாவின் வீட்டிற்குள் நுழைந்து ஒரு ஓரமாக அமர்ந்திருந்த ஏ.எஸ் வைரஸின் தாக்கத்தால் ஏதேனும் ஒன்றை செய்து வேகமாக முன்னேறி விட வேண்டும், தன்னை நிரூபித்து விட வேண்டும் என்னும் ஆசை கனன்று கொண்டிருந்தது.
அதன் முதற்படியாகத் தான் பாடிய பாடலை அந்தச் செயலியில் பதிவேற்றினாள். அந்தப் பாடலை பதிவேற்றி முடித்த அடுத்த ஐந்து நிமிடத்திலேயே எவரேனும் பார்த்திருப்பர், எனது குரலை எனது திறமையை அங்கீகரித்து விட மாட்டாரா என்ற ஏக்கம் பிறந்தது சத்யாவிற்கு.
இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை அதைத் திறந்து பார்த்து, அவளது பாடலைக் கேட்டவர்களின் அவர்களின் எண்ணிக்கையைச் செக் செய்யலானாள். ஒருகட்டத்தில் யாரும் கேட்கப்போவதில்லை என்னும் முடிவுக்கு வந்தவள்; அலைபேசியை அணைத்து, ஒரு பக்கமாக வைத்து விட்டு அன்றாட வேலைகளில் மூழ்கிப் போனாள்.
மறுநாள் காலையில் கணவரும் பிள்ளைகளும் தத்தமது வேலைகளுக்கும் பள்ளிகளுக்கும் கிளம்பிச் சென்று விட, எதேச்சையாக அலைபேசியில் குறிப்பிட்ட ‘குயில்’ செயலியைத் திறந்து பார்த்தவளுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி!!
ஒரே பாட்டில் பெரிய ஆளாவதற்கு இது என்ன சூரிய வம்சம் திரைப்படமா?? இல்லை நீ ஒரு பணக்காரி, இத்தனை நாள் உன்னை ஏழையாக வைத்து உன் மனத்திட்பத்தைப் பரிசோதித்தோம் எனக் கூறி ஃப்ளாஷ்பேக் அவிழ்ப்பதற்கு இது என்ன தொலைகாட்சி தொடரா??
எதார்த்தமான இவ்வாழ்வில் முன்னர்க் குறிப்பிட்டது போல மளமள முன்னேற்றம் இல்லாவிடினும் பூச்சியமாவது படிக்கட்டில் நின்று கொண்டிருப்பவர்களுக்கு முதல் படிக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் அதுவும் ஒருவகை முன்னேற்றம் தானே!! வாழ்க்கையில் முன்னேற்றம் என வரையறுக்கப்படுவதும் இதுவன்றோ!!
அவளது முதல் குரலை முப்பது பேர் பார்வையிட்டு, பதின்மூன்று பேர் கேட்டிருந்தனர் எனச் செயலியின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. அதிலும் ஒருவர், “நல்லா இருக்குது வாய்ஸ்...” எனப் பதிலுரை கருத்திட்டிருக்க, வானுக்கும் பூமிக்கும் குதிக்கத் தொடங்கி விட்டாள் சத்யா.
“இந்த மாமா நான் சமைச்சதைக் கூட நல்லா இருக்குதுன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டாரு... 13 பேர் என்னோட குரலை கேட்டு இருக்காங்க... அப்படின்னா என்னோட குரல்ல ஏதோ ஒன்னு இருக்குது, அது அவங்களுக்குப் பிடிச்சிருக்குது அப்படித்தானே அர்த்தம்!!” எனத் தனக்குத்தானே ஏதேதோ முடிவுகளை வகுத்துக் கொண்டவள்; அவரது கருத்திற்கு நன்றி தெரிவித்துப் பதிலைப் பதிவிட்டாள்.
“ஹையோ... எனக்குக் கையும் ஓடலை, காலும் ஓடலை ரொம்பச் சந்தோஷமா இருக்குது... என் குரலையும் நல்லா இருக்குதுன்னு ஒருத்தங்க சொல்லிட்டாங்களே...” எனத் தனக்குத் தானே பெருமிதத்துடன் வீட்டை முழுவதும் வலம் வந்தாள் சத்யா.
அங்கே ரோஜா வீட்டில்..
அர்ஜுன் தன் மனைவிக்கு அவளது திறமையை வெளிக்கொணரும் வகையில் அதற்கு ஏற்ற ஒரு சமூக வலைத்தளக் கணக்கைத் தொடங்கியிருந்தான்.
தொடங்கி ஒரே நாளில் லட்சம் பேர் பார்த்து விடுவர், தான் ஒரே நாளில் ஒபாமா ஆகிவிடலாம் எனும் கனவு கண்டு கொண்டிருந்த அவனுக்குப் பெரிய சறுக்கலாகிப் போனது.
பெரிய அளவில் வரவேற்பு என எதுவும் இல்லை என்றதும், தன் நண்பர்களிடம் இது குறித்து ஆலோசித்தவன்; தன் மனைவியின் திறமைகளை எவ்வாறு உலகறியச் செய்யலாம் என யோசித்தான்.
தன் கணவன் தனக்காக எடுக்கும் பிரயத்தனங்களில் அவனது அன்பு வெளிப்பட, உச்சி குளிர்ந்து போனாலும் தன் பொருட்டு அவன் கஷ்டப்படுவதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை மென்மையான மலரொன்றின் நாமம் கொண்ட பெண்ணவளின் மனதால்.
ஆகவே அவனிடம் வந்தவள்; “விடுங்க அர்ஜுன் சார்.. விடுங்க எனக்கு இந்த உலக அளவில் ஃபேமஸ் ஆகணும், அப்படியெல்லாம் எந்த ஆசையும் இல்லை... எனக்கு நீங்க தான் உலகம்... உங்களை நல்லா பாத்துக்கணும், அது மட்டும் தான் என்னோட மனசுல இருக்குது... எனக்கும் ஒரு காலத்தில் பெரிய அளவில் ஆசைகள், கனவுகள் இருந்ததுதான் பெரிய ஹீரோயின் ஆகணும், மாடல் ஆகணும்ன்னு... ஆனா இப்போ அதெல்லாம் மலையேறிப் போச்சுது... எனக்காக எல்லாத்தையும் பாத்து பாத்து செய்யறதுக்கு நீங்க இருக்கீங்க, நீங்க தான் என்னோட பெரிய சொத்து... நீங்க தான் என் வாழ்வில் கிடைத்த பெரிய வரம்... உங்களுக்குச் சேவை செய்வதுதான் என்னோட வாழ்வின் மிகப்பெரும் லட்சியமே..” எனக் கூற, அதை மறுத்து உரைத்தான் அர்ஜுன்.
“இங்கே பாரு ரோஜா... கல்யாணம், புருஷன், குடும்பம் இதெல்லாம் ஒரு பொண்ணுக்கு முக்கியம் தான்... ஆனா அதையும் தாண்டி அவளுக்குன்னு ஒரு ஐடென்ட்டியை இந்தச் சொசைட்டியில உருவாக்கணும்... வெறுமனே இந்தச் சமைக்கிறது, துவைக்கிறதுன்னு உன்னோட திறமையும் முடிந்து போகிற கூடாது... இது மட்டுமே உன்னுடைய அடையாளம்ன்னு யாரும் உன்னைக் குறைச்சு எடை போட கூடாது... அதனாலதான் உனக்கு இன்னும் ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கோன்னு சொல்றேன்... இங்க பாரு ரோஜா... குடும்பம், புருஷன் அப்படிங்கிற குறுகிய வட்டத்துக்குள்ள உன்னோட உலகம் சுருங்கிடக் கூடாது... நீ சிறகை விரிச்சு உயர உயர பறக்கக் கூடிய பீனிக்ஸ் பறவை... அதை முதல்ல புரிஞ்சுக்கோ..” என அர்ஜுன் தன் மனைவியை உத்வேகப்படுத்தும் நோக்கில் பேச, அவளுக்கோ பெருமை தாளவில்லை.
எத்தனையோ பெண்கள் வேலைக்குச் சென்றாலும் “வீட்டிலேயே இருந்துவிடு, உலகத்தை அறிந்து கொள்ளாத, குடும்பத்தை மட்டுமே பிரதான உறவாக, உலகமாகக் கருதிக் கொண்டு அவர்களுக்குச் சேவை செய்வதொன்றையே தலையாயக் கடமையெனக் கருதி இங்கே முடங்கிக் கொள்...” என அறிவுறுத்தும் கணவன் கிடைத்திருக்க, தனக்கு மட்டும் இத்தனை பொறுப்பான, நலனில் அக்கறை கொண்டுள்ள கணவன் கிடைத்ததை எண்ணி சிலாகித்துப் போனாள்.
“சரி அர்ஜுன் சார்... நான் நாளையில் இருந்து ட்ரை பண்றேன்... என்னால முடிஞ்ச அளவுக்குக் கடமையைச் செய்வோம், பலனை எதிர்பார்க்க வேண்டாம்.. எனக்குத் தெரிந்த நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன் அப்படிங்கிற திருப்தியே எனக்குப் போதும்.. அதைப் பார்க்காதவங்க மிஸ் பண்ணிட்டாங்க அப்படின்னு நினைச்சிக்கிறேன் என்றாள் ரோஜா.
அவள் நெற்றியில் முத்தமிட்டவன்; அவளுக்கு ஒரு வலையொளி கணக்கையும் தொடங்கிக் கொடுத்துவிட்டு, “உன் இஷ்டம் போல என்ன வேணா செய் ரோஜா... உன் மனசு சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்... உன் இஷ்டப்படி பாடுறது, ஆடுறது, வரையுறது, தீட்டுறதுன்னு என்ன தோணுதோ அதைப் பண்ணு...” என உரிமையைக் கொடுத்துவிட, அவள் மனதில் இன்னும் உயர்ந்து போனாள் அர்ஜுன்.
தனக்குத் தெரிந்தவற்றை அவள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேயிருக்கத் தொடங்கினாள்.