1
“கோடி வைரஸிலே
கொடிய வைரஸ்
எந்த வைரஸ்??
டட்டடட்டா...
கொத்துக் கொத்தாய்
கொல்லும் அந்த
சீன வைரஸ்...
டட்டடட்டா...
கூண்டோடு குடும்பங்களை
குதறும ப்பா
கொல்லி வைரஸ்...
ஆஆஆஆ... ஆஆஆஆ..
ஏஎஸ் வைரஸ்...
ஏஎஸ் வைரஸ் பரவிவருதே கேளய்யா...
கண்வழியா பரவுமே பாரைய்யா... ஐயா...
ஏஎஸ் வைரஸ் பரவிவருதே கேளய்யா...
கண்வழியா பரவுமே பாரைய்யா...” என்னும் பாடலை மக்களின் விழிப்புணர்வுக்காகப் பிரபல இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், நடன இயக்குநர் கொண்ட குழுவொன்று தயார்செய்து கொண்டிருக்க, செய்திவழி இதுகுறித்த விழிப்புணர்வை பரப்பும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.
07 : 59 : 50
07 : 59 : 51
07 : 59 : 52
07 : 59 : 53
07 : 59 : 54
07 : 59 : 55
07 : 59 : 56
07 : 59 : 57
07 : 59 : 58
07 : 59 : 59 என விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள் ஊர்திக்கான கவுன்டவுன் போல அந்தக் கருந்திரையில் மஞ்சள் நிற எழுத்துகள் தென்பட்டால் பிள்ளைகளில் பாதிபேருக்கு எரிச்சலில் காதுவழி புகையே வந்துவிடும். ஏனென்றால் அது காலையில் காடு சென்று, மாலையில் வீடு திரும்பி, மண்ணைப் பொன்னாக்கும் ஒவ்வொரு ஆண்மகனும் தங்களை ஆசுவாசப்படுத்தியவாறே அன்றைய நாளின் நிகழ்வுகளை அசைபோடும் வண்ணமாக ஒளிபரப்பப்படும் எட்டுமணி செய்தியை பார்க்கும் நேரம். தங்களின் சுதந்திரம் பறிபோய்விட்டதாகப் பிள்ளைகளும், தொடர் பார்க்கும் குடும்பத் தலைவிகளும் மூக்கைச் சீந்திக்கொண்டிருக்கையில், ஐயாக்கள் மட்டும் நாட்டு நடப்புகளைச் சிந்தைக்குள் செலுத்திக் கொண்டிருப்பர்.
அத்தகைய புகழ்வாய்ந்த கவுன்டவுன் முடிந்த அடுத்த நொடியே, “திடுதிடுதிடு.. டேன்டட்டடேன்... டின்ன்...” என்னும் ஓசையுடன் உலகம் சுழல்வது போன்றதொரு காட்சி விரிந்து மறைய, “ஒளியிலே.... தெரிவது தேவதையா??” என்னும் பாடலை முணுமுணுக்குமளவிற்கு இரண்டு பெண்கள் செய்தி வாசிப்பாளராகக் காட்டப்பட்டனர்.
அம்மா வயதுள்ளவர்கள், அக்கா வயதுள்ளவர்கள் வாசிப்பாளராக இருந்த காலம் மலையேறிப் போய், இப்போது செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஆர்மி, ஃபேன் பேஜ், வ்லாக் என்னுமளவிற்கு நாகரீகம் அப்டேட் ஆகிவிட்டது. நாம் ஏன் அதை விமர்சித்துக் கொண்டு? ஏஎஸ் வைரஸின் தாக்கம் உச்சத்தை அடைகையில் அனைவருமே விமர்சித்துக் கொள்ளட்டும்.
“முக்கியச் செய்திகள்...
இந்தியா முழுவதும் ஏஎஸ் வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது...
உலக அளவில் ஏஎஸ் வைரஸ் தொற்றில் இந்தியா முதலிடம்...
முதல் அலையின் கோரதாண்டவமே இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில் சீனாவைப் பகைத்துக் கொண்டதால் இரண்டாம் அலை வெகுவிரைவாக, அதிதீவிரமாகப் பரவும் என மனநல மருத்துவர்கள் தகவல்...
தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் இன்று பிரதமர் அனைத்து முதலமைச்சர்களுடன் ஆலோசனை... அனைத்துக் கட்சி கூட்டத்தினருக்கும் கடிதம்வழி தகவல் அனுப்பப்பட்டிருப்பதாகச் செய்தி....” எனத் தலைப்புச் செய்திகள் வாசித்து முடிந்ததும் விரிவான செய்திகள் வேளை வந்தது.
“வணக்கம்... ருமினி செய்திகள்... வாசிப்பவர் - அனிதா சம்பத்... நாடுமுழுவதும் ஏஎஸ் வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் போதிய முன்னேற்பாடுகள் செய்துகொள்ள வேண்டுமெனப் பிரதமர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று நமது தேசமே மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது... மக்கள் அனைவரும் ஒத்துழைத்து ஒற்றுமை காத்தால் மட்டுமே நோயின் பிடியிலிருந்து வெளிவர முடியும். அவரவரது நலனை அவரவர் தான் பேணிக் காக்க முடியும். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் வைரஸ் தாக்கத்திற்கு மூலதனமான கண்ணாடிப் பேழைகளை விட்டு வெகுதூரம் விலகியிருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...” (இந்தியில் இருந்ததை வாசகர்களுக்காகத் தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறேன்) எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
எனவே, பிரதமரின் அறிவுரையை ஏற்று நடக்குமாறு அனைத்துகட்சி கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது. குடும்பங்களைச் சீரழிக்கும் இந்தக் கொடிய வைரஸை நாட்டை விட்டு விரட்டும்வரை ஓயமாட்டோம், இந்த விஷயத்தில் பிரதமருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என அனைத்து எதிர்கட்சிகளும் தெரிவித்திருக்கின்றன.
நாமக்கல்லில் ஏஎஸ் வைரஸால் தாக்கப்பட்ட மனைவி போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளாததால், அவரது கண்ணாடிப் பேழையைக் கிணற்றுக்குள் வீசியிருக்கிறார் கணவர். அதைக் கண்டு ஆத்திரமடைந்த மனைவி; அரிவாள் மனையால் கணவரைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அருகே ஏஎஸ் வைரஸின் பிடியில் முழுவதும் ஆட்கொள்ளப்பட்ட மாணவி ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டின் மேற்கூரைக்குத் தீவைத்த சம்பவம் அக்கம்பக்கத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் ஏஎஸ் வைரஸ் தாக்கிய கணவன், மனைவி இருவரும் நோயின் உக்கிரத்தால் ஒருவரையொருவர் காயப்படுத்தி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிராதரவாக நின்ற மூன்று வயது மகனும், இரண்டு வயது மகளும் நெல்லை ஜங்ஷனில் இருந்த சரணாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்...” எனக் காணுமிடமெங்கும், கேட்குமிடமெங்கும் ஏஎஸ் வைரஸின் கோரதாண்டவத்தால் ஏற்பட்ட கொடிய விளைவுகளே வியாபித்திருக்க, நடுத்தர மக்களனைவரும் அச்சத்தின் பிடியில் ஆட்பட்டிருந்தனர்.
“இந்த டிவியை முதல்ல ஆஃப் பண்ணி போட்டாலே பாதிப் பிரச்சனை குறைஞ்சிடும்.. அங்கே அப்படி நடந்துது, இங்கே இத்தனை பேரு செத்துப் போயிட்டான்னு செய்தியைப் போட்டு மக்களைக் கதிகலங்க வச்சிடறான்... அவனவன் என்ன சூழ்நிலையில இருக்கிறான்னு அவனுகளுக்குப் புரியமாட்டிக்குது.. ச்ச்சும்மா.. என்னத்தையாவது போட்டுக்கிட்டு... மனுஷன் நிம்மதியா வெளியே போயிட்டு வர முடியுதா?? இவன்பாட்டுக்கு அது பரவுது, இது பரவுது... அங்கே போவாத, இங்கே போவாத... அதைத் தூர போடு, இதைத் தூர போடுன்னு என்னத்தையாவது சொல்லிட்டு கிடந்துக்கிடுதான்... இங்க நம்ம பாடுதானே திண்டாட்டமா இருக்குது... அப்பப்போ போலீஸ்காரன் வேற வந்து வந்து செக் பண்ணிட்டுப் போறான்... நிம்மதியா ஒருவாய் கஞ்சி குடிக்க முடியுதா? கதவைப் பூட்டக்கூடாது, ஜன்னலைப் பூட்டக்கூடாதுன்னு ரூல்சு வேற...” என அங்கலாய்த்தவாறே, அடுத்தச் சேனலை மாற்றினார் தேசத்தின் சராசரிக் குடிமகனான ராமநாதன். குடிமகன் தான் ‘குடி’மகனல்ல. ‘குடி’மகன்கள் பலர் பின்னால் இடம்பெறுவர்!!
உழைப்பின் அடையாளமாகத் திகழும் வியர்வைத்துளிகள்; குளித்தாலும் அவரைப் பிரியாது நெற்றிமீது காதலில் இழைந்து துவள, தோளில் போட்டிருந்த ஆரஞ்சு நிறத்தில் வெள்ளை கட்டம்போட்ட துண்டால் துடைத்தவாறே தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.
அவர் மாற்றிய தொலைக்காட்சி சேனலில் பிரபல மனநல மருத்துவரின் பேட்டி அப்போதுதான் தொடங்கியிருந்தது. மருத்துவரை பற்றிய அறிமுகத்தைத் தொகுப்பாளர் அளித்துக்கொண்டிருக்க, தனது பிள்ளைகளைச் சத்தமிட்டு அழைத்தார் அவர்.
“ஏலேய்... எல்லாரும் வந்து இதப் பாருங்க.. இவரு என்ன சொல்லுதாருன்னு கேட்டு வையிங்க.. நம்மள நம்மளே பாதுகாத்துக்கிட்டா தான் உண்டு...” எனத் தந்தையின் கனத்தக் குரலில் செவிசாய்த்துப் பிள்ளைகள் அனைவரும் தந்தை அமர்ந்திருந்த நாற்காலியைச் சுற்றி குழுமினர். விருப்பமில்லாவிட்டாலும் கால்களைக் கைகளால் அணைத்தவாறே அமர்ந்திருந்து அந்த நிகழ்ச்சியை ஆர்வமாகக் கவனிப்பது ‘தந்தைசொல் மிக்க மந்திரமில்லை...’ என்னும் மொழிக்காக அல்ல. அவரிடம் திட்டு, அடி வாங்கிவிடக் கூடாது என்பதற்காகத் தான். ‘பிள்ளைகளை அடிக்கக் கூடாது...’ எனச் சர்க்கார் சட்டமியற்றினால் என்ன?? இன்றளவும் அடிக்கும் பெற்றோரும், அடிக்கு அஞ்சும் பிள்ளைகளும் இருக்கவே செய்கிறார்கள்.
அனைவரின் வருகையையும் அட்டென்டன்ஸ் போட்டுவிட்டு தொடங்கும் ஆசிரியரைப் போல, தனது பிள்ளைகளின் வருகையைக் குறித்துக் கொண்டார் ராமநாதன். சொல்லிவைத்தாற்போல அவர்கள் வந்ததுமே மருத்துவர் பேசவேண்டிய முறை வந்துவிட்டது.
“வணக்கம் டாக்டர்... இன்னைக்கு ஏஎஸ் வைரஸின் தாக்கம் நாடு முழுக்கத் தலைவிரிச்சு ஆடுது... பெரிய பெரிய மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்களால் கூட இதுக்கான தீர்வைக் கண்டுபிடிக்க முடியல... இதுபத்தின உங்களோட கருத்து என்ன? நோயோட வீரியத்தைக் குறைக்கிறதுக்கு உங்ககிட்டே எதாவது ஐடியா இருக்குதா?” எனத் தொகுப்பாளர் கேட்க, தொண்டையைச் செருமிக் கொண்டு பேசத் தொடங்கினார் மருத்துவர் மனோஜ் கார்த்திகேயன்.
மனோஜ் : வணக்கம்... அதாவது நாடு முழுவதும் பரவியிருக்குது, கொடிய விளைவுகளை ஏற்படுத்துது எல்லாமே தினம்தினம் செய்திகள்ல கேட்டுட்டு வர்ற விஷயங்கள்தான். இதுக்குத் தீர்வு என்பது இப்போ வரைக்கும் கண்டுபிடிக்கலை.. கண்டுபிடிப்போமா இல்லையா, நோயைக் கட்டுப்படுத்த முடியுமா இல்லையா இதுவே முதல்ல தெரியலை... ஆனா நோய் பரவலைக் குறைக்கிறது ஒரு எளிய வழியை என்னால சொல்ல முடியும். பொதுவா சொல்லுவாங்க இல்லையா, ‘திருடனாகப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ன்னு.. அதேதான் இங்கேயும்.. தனக்கு இருக்கிற இந்த நோயின் பிடியிலிருந்து மீளணும் அப்படின்னு அந்த நோயாளி மனதளவுல தயாராகணும்.. அப்புறமா அந்தக் கண்ணாடிப் பேழையை விட்டு தூரமா வந்து சோஷியல் டிஸ்டான்சிங் கீப் அப் பண்ணனும்.. இதெல்லாம் பண்ணினாலே 75 சதவீதம் நோயைக் குறைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்குது..
தொகுப்பாளர் : இவ்ளோ பாதிப்பை ஏற்படுத்தி, அரசுகளையே ஆட்டம் காண வைக்கிற இந்த வைரஸ் எங்கே எப்படித் தோன்றிச்சு, நம்ம உடம்புக்குள்ள போய் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துதுதுன்னு சொல்ல முடியுமா டாக்டர்??
மனோஜ் : கண்டிப்பா... கண்டிப்பா.. நோய் எங்கே இருந்து உருவாச்சுது அப்படின்னு நம்மால அவ்ளோ எக்ஸாக்டா சொல்லிட முடியாது... ஏன்னா மனுஷன் தோன்றினதுல இருந்தே இந்த வைரஸ் இருந்திருக்குது.. வீரியமே இல்லாம இருந்த அந்தக் கண்ணுக்குத் தெரியாத பொருள் இப்போ பூதாகரமா மாறிநிக்குது... இப்போ தோன்றிய நாகரீகம், நம்மோட வாழ்க்கை முறை இப்படிப் பல காரணிகள் அதோட அசுர வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்... கண்ணுக்கே தெரியாத அந்த வைரஸ் நமக்குள்ள புகுந்து, பலுகிப் பெருகுறதுக்கு அந்தக் கண்ணாடிப் பேழை ஒரு ஊர்தியா (Vector) இருக்குது.. கண்ணாடிப் பேழை வழியா ஒருத்தர் மத்தவங்க எல்லாரையும் பார்க்கிறப்போ அந்த வைரஸ் நம்ம கண்ணுக்குள்ள நுழைஞ்சிடுது.. சிலருக்கு அவங்க சூழ்நிலைகள் வாழ்க்கை முறைகள் காரணமா உடலில் உருவாகுற ஆன்டிபாடிகளால அழிக்கப்பட்டுடுது... பலருக்கு சரியான ஆன்டிபாடிகள் உருவாகுறது இல்ல... கிராப்ட் (Grapht) மாதிரி அவங்க உடல் அதை ஏத்துக்குது... கண்ணுல வந்து உக்கார்ந்த அந்த வைரஸ் அப்புறமா மூளைக்கு ட்ராவல் ஆகுது.. அங்கே மெடுல்லா, அந்த லிக்விட் எல்லாத்தையும் தாண்டி ஹைப்போதலாமஸ் பகுதியை அடையுறப்போ உடம்போட ஒட்டுமொத்த கண்ட்ரோலையும் தன்வசப்படுத்திக்கிட்டு, நம்ம பாடி பார்ட்சை சர்வாதிகாரம் பண்ண ஆரம்பிக்கும்... அதோட ஆட்சியால உடம்புக்கு குளுகுளுன்னு இருக்கும்.. நாமளும் அதில் சிலாகித்துப் போறப்போ தான் சுத்தி இருக்கிறவங்களுக்கு நம்மோட மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்... அதாவது இந்த நோய் வெளியே தெரியிற காலம் ஆளுக்கு ஆள் மாறுபடும்.. சிலருக்கு மூணு மாதத்திலேயே தெரிஞ்சிடும்.. சிலருக்கு ஆறு மாதம், ஒரு வருஷம்கூட ஆகலாம்.... ஆனா ஒன்ஸ் உங்களுக்கு வந்துடுச்சுன்னா கட்டாயமா சோசியல்லி இன்ஆக்டிவா ஆகிடணும்.. கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் கடைபிடிச்சிட்டா நம்ம லைஃப் சேஃப்.. இல்லைன்னா சிவியராகி, கிரிட்டிக்கல் கன்டிஷனுக்கு இழுத்துட்டுப் போயிடும்... நம்மை மட்டுமில்லாம எல்லாரையும் அஃபெக்ட் பண்ணிடும்...
இந்தியாவுக்குள்ள இது எப்படி வந்துச்சுதுன்னு பார்த்தா இங்கேயே இருந்துச்சு ஆனா சீனாவுல இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டிருக்குது... எப்பவுமே கண்ணுக்குக் குளிர்ச்சியான பொருள்களை ஈசியா அட்ராக்ட் பண்ணுமில்லையா?? அந்த மாதிரி ஒருத்தர் தொட்டு, ஒருத்தர் தொட்டு எல்லா ஆல் ஓவர் இந்தியாவுக்கும் பரவி இன்னைக்கு இந்த நிலைமையில வந்து நிக்கறோம்... என மனோஜ் பேசிக்கொண்டிருக்கும் போதே தொலைக்காட்சியில் கேபிள் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.
“ச்சே.. நல்ல நேரத்துல கேபிளை உருவிட்டான் விளங்காமப் போறவன்.. இப்பதான் மெட்டிஒலி (ரீடெலிகாஸ்ட்) பார்க்கலாம்ன்னு நெனச்சேன்.. அது அவனுக்குப் பொறுக்கல...” என ராமநாதனின் மனைவி நொடித்துக் கொள்ள, “ச்சே... இந்த மொக்க நியூஸ் பார்த்ததுக்கு நாலு புதுப்பாட்டாவது பார்த்திருக்கலாம்...” எனத் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர் குழந்தைகள்.
சடிதியாக மின்சாரமும் அணைக்கப்பட, சுற்றிலும் இருளானது. மூன்றுசக்கர வாகனத்தில் ஒலிபெருக்கியை மாட்டியவாறே, ஒருவர் அறிவிப்புச் செய்துகொண்டு வந்தார்.
“அன்பார்ந்த ஆனைகுட்டியூர்வாழ் மக்களே... இதன்மூலம் உங்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால் அரிசின் ஆணைப்படி, இனி நமது கிராமத்தில் கேபிள் டிவி நெட்ஒர்க் செயல்படாது... வீட்டிலேயே அடைந்து கிடைப்பதால் மக்களுக்கு மனநோய் வந்துவிடக் கூடாது என்பதற்காக வாரத்திற்கு மூன்றுமுறை பஞ்சாயத்துச் சார்பில் பள்ளித்திடலில் “ஒளியும் ஒலியும்” என்ற பெயரில் பழைய, புதிய பாடல்கள் ஒளிபரப்பப்படும்... இரவில் ஆறுமணி நேரமும் பகலில் இரண்டுமணி நேரமும் என மொத்தம் எட்டுமணி நேரம் மட்டுமே மின்சாரச் சப்ளை இருக்கும்... வீட்டுச் செலவுகளுக்காகத் பணமின்றித் திண்டாடுவோர் அந்தக் கண்ணாடிப் பேழையைக் கொண்டு வந்து பஞ்சாயத்தில் ஒப்படைத்துவிட்டு அதற்கேற்ற பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அந்தப் பேழை உங்கள் வீட்டுப் பேழையாகத் தான் இருக்க வேண்டுமென அவசியமில்லை. பக்கத்து வீட்டிலோ, எதிர்வீட்டிலோ திருடப்பட்டதாகக் கூட இருக்கலாம்... நமக்குப் பேழைதான் முக்கியம்! மேலும் இப்போது இந்த வாகனத்தைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளின் வாகனம் வந்துகொண்டிருக்கிறது. டோர் டெலிவரி போல வீட்டிற்கே வந்து “ஏஎஸ் தொற்று” இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்...” என அறிவிக்கப்பட, ஒருவரையொருவர் திகிலுடன் பார்த்துக் கொண்டனர்.