Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL ஒழுகும் நிலவு வழியும் இரவு - Tamil Novel

Status
Not open for further replies.
ஒழுகும் நிலவு 17

இருள்மதி இரவு
மூளி‌ பொழுது
வெட்ட வெளி
தனியா உள்ளம்
தகையா உறவு
வசமாய் மொழி
பிணமாய் நீ
எழுச்சியாய் நான்!!!


செழியன் செய்த தவறை நினைத்து நினைத்து தவித்துவிட்டான். அமரா அவனைச் சமாதானம் செய்ய முடியாது தவித்தாள். ஒருவகையில் அவள்தான் இந்தத் தவறுக்கு மூலகாரணம்.

"அமரா.. ரொம்பப் பெரிய தப்புப் பண்ணிட்டேன். இப்போ‌ அந்தப் பொண்ணும் உயிரோட இருக்க முடியாது. சத்யனையும் கொன்னுட்டேன்" என்று துடித்தவனைக் கட்டிக் கொண்டாள்.

கோகிலம் இடிந்து போய் அமர்ந்தவர்தான். அவர் கணவனை எதிர்த்து ஒரு அடி எடுத்து வைத்தாலே அது தவறாக முடிகிறது. ஏதோ ஒனு மாற்றம் வரும் என்று அவர் நினைத்தார். ஆனால் இப்பொழுது எல்லாம் தலைகீழாகப் போனது.

"செழியன், சத்யன் கொடியோட புருஷனா?" என்று அமரா கேள்வி ஒன்றைக் கேட்க, அடுத்து நிகழவிருக்கும் அனர்த்தம் விழி முன் தோன்றி அவர்களை அச்சுருத்தியது.

"செழியன், கொடிய காப்பாத்தணும்" என்று யோசனை செய்தவள், அடுத்த நொடி, கணமான பொருளை எடுத்து கதவை உடைக்க ஆரம்பித்தாள்.

சிலையாய் நின்ற செழியனுக்கு உயிர் வந்தது. அவளிடம் இருந்து பொருளை வாங்கி, கதவை உடைத்தான். மூவருமே அவசரமாகக் கிளம்பி சென்றனர். அவர்கள் நினைத்தது போல் பஞ்சாயத்துக் கூடியிருந்தது.

செழியனின் நண்பன் நடுவில் நின்று கொண்டிருந்தான். தேவர் பிள்ளை அவர் நினைத்தது போல் பேசிக்கொண்டிருந்தார்.

அந்தப் பெண்ணைச் சுடுகாட்டில் வைத்து எரித்து முடித்தாயிற்று. நினைத்ததைச் செய்ய வேண்டும் என்ற ஆணவத்தோடு, இந்த ஒரு விடயத்தில் விட்டுக்கொடுத்தால் அவரின் கொடி கீழிறங்கிவிடும் என்ற எண்ணம். காலம் காலமாக மனிதர்களின் மனதில் விதைத்த ஒரு விடயத்தை இப்படி மாற்ற முற்பட்டால், அவரின் மேல் உள்ள மரியாதை பயம் என்னாவது. மக்கள் ஒரு அடக்குமுறையுடன் வாழ்ந்தால்தான் அவருக்குப் பதவியும் பரிவட்டமும். அதனால் சத்யனின் விடயம் வெளியில் சொல்வதற்கு முன்னே அனைத்தும் நிகழ்த்தியாயிற்று.

இப்பொழுது என்ன நடந்தது என்று பஞ்சாயத்து. இனி என்ன நடக்க வேண்டும் என்று முடிவு செய்தாயிற்று. அவர் இயக்கும் நாடகத்தில் சிலர் சுயநினைவுடன் நடிக்கின்றனர். பலர் சுயநினைவு இன்றி நடிக்கின்றனர்.

செழியன் அங்கு வந்ததும் அவருக்குக் கோவம் வந்தது. அவனுடைய நண்பனை அடிக்கும்படி உத்தரவிட்டார். அவன் பயப்படக் கூடும் என்று எதிர்பார்த்தார். ஆனால் செழியன் அவருக்கு ஒரு படி மேல் சென்று கத்தினான்.

"யார் என்ன சொன்னாலும் நம்புவீர்களா? இப்போ சொல்றேன் என்ன நடந்தச்சுன்னு" என்று அவன் ஆரம்பிக்க, தேவர் பிள்ளை கத்தினார்.

"செழியா, நீ வீட்டுக்கு போ. ராசாவையே எதிர்த்து பேச உனக்கு யார் உரிமை கொடுத்தா?" என்று அவரும் குரலை உயர்த்த, அங்கிருந்த மக்கள் விசித்திரமாய்ப் பார்த்தனர்.

இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நிகழந்ததில்லை. அதனால் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர். சத்யனின் உடல் அங்குதான் கிடத்தப்பட்டிருந்தது. அருகில் கொடி அமர்ந்திருந்தாள். அவள் துளி கூட அழவில்லை. ஆனால் விழியில் விரக்தி வழிந்து கொண்டிருந்தது.

தேவர் பிள்ளையின் கண்ணசைவில் நான்கு நபர்கள் செழியனை அடிக்க வர, அங்கிருந்த கையாட்கள் வர,‌ அதை எதிர்பார்த்தவன்‌ போல், அருகில் இருந்த அரிவாள் எடுத்து தேவர் பிள்ளையின் கழுத்தில் வைத்தான்.

அதைக் கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர்.

"இனி யாராவது ஒரு வார்த்தை பேசுனாலும் இவர் தலை இருக்காது" என்று அவன் கூற, ஊரே பதைபதைத்தது. ஆனால் தேவர் பிள்ளை மட்டும் சிறிதும் அச்சமின்றி நின்றிருந்தார்.

அவனுடைய பலகீனம் எது என்று அவர் அறிவாரே. அவனைப் பார்த்து அவர் சிரிக்க, அவன் ஏளனமாக நகைத்தான் அவரைப் பார்த்து.

"நீயெல்லாம் மனுச ஜென்மத்தில சேர்த்தியே கிடையாது. நீ போனா எங்க அம்மாவும் சாகணும். அதனால உன்னைப் பயமுறுத்த இப்படிச் செய்றேன்னு நினைச்சா, உன்னைவிட முட்டாள் வேற யாரும் இல்லை" என்றான் பூடகமாக.

விரிந்திருந்த உடத்தில் இருந்த புன்னகை இடம் தெரியாமல் அழிந்து போயிருந்தது.

"இங்க பாரு... யாரோ ஒரு பொண்ணு. அவ சாகக் கூடாதுனு நினைச்ச நான், எங்க அம்மாவை அந்த நிலைக்கு விடுவேனா? நீ செத்தா எங்க அம்மாவுக்குக் காரியம் செய்ய மாட்டேன். அவுங்களுக்கு விடுதலை கிடைச்சிருச்சுன்னு கொண்டாடுவேன்" என்று அவன் கூற, அவர் சற்று திடுகிட்டுதான் போனார்.

மகன் என்றும் பாராமல் அவர் மனதில் வஞ்சம் குடியேற, சமயம் பார்த்துக் காத்திருந்தார் அவர். அவனை வெட்டி சாய்த்திடவும் இனி தயக்கம் இல்லை. அவரின் குடும்ப மரியாதை, கட்டளைகள் என்று அனைத்தையும் துறந்தவன் இனி இருந்தால் என்ன? இல்லையென்றால் என்ன?

மரியாதை அதிகாரத்திலும் ஆணவத்திலும் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். எனக்கு‌ நீ மரியாதை கொடு என்று சொல்வது மரியாதை இல்லை. அப்படிக் கிடைக்கும் மரியாதை மரியாதையே‌ இல்லை என்று இவருக்கு எப்பொழுது விளங்கப் போகிறதோ?

"இனி வாங்கடா... பாத்துறலாம்... இனி புருஷன் செத்துட்டானு பொண்டாட்டியை பிணமேடை ஏற்றும் கீழ்த்தரமான செயல் இந்த ஊரில் நடக்கக் கூடாது. இதைத் தடுக்க இடையில் யார் வந்தாலும் அவுங்க உயிரையும் எடுப்பேன்" என்று சூளுரைத்தான் அவன்.

ஆண்கள் அனைவரின் எதிர்ப்புக் குரல்களும் அதிர்ந்து ஒலித்தது. அதில் பெண்களின் ஆதரவு குரல்கள் தேய்ந்து கரைந்து போனது. இந்தக் குரல் அவர்களுக்குப் புதிதல்ல. எங்கோ கேட்ட சாயல் அந்தக் குரலில் வழிந்தது. அனுதினமும் அவர்களுக்குள் ஒலித்து அடங்கிய குரலாயிற்றே. அதனால் முற்றிலுமாக அடையாளம் தெரியாமல் போகும் வாய்ப்பு இல்லை.

அதன் பிறகு செழியன் நடந்த ஒவ்வொன்றையும் விளக்கினான். அனைவரும் விக்கித்துப் போய் நின்றனர்.

அவனின் குரல் எழுச்சிக் குரலாய் இருக்கும் என்று அவன் நினைக்க, அதற்கு நேர்மாறாக, ஒருவரும் குரல் எழுப்பவில்லை. குரல் எழுப்ப வேண்டியது பெண்கள். ஆனால் எப்படி எழுப்புவார்கள். கணவன் இல்லையேல் இந்த உலகில் வாழ அருகதையற்று போய்விடுவோம் என்று போதனையில் பிறந்து வளர்ந்தவர்கள். இவ்வளவு ஏன். இந்த நினைவை சுமந்து வாழ்கிறார்கள் என்று தெரிந்தாலே அவர்கள் பத்தினி பெண்களின் பட்டியலில் இருந்து நீக்கப் படுவர். அப்படி ஒரு அவப்பெயருடன் வாழ்வது பெரும் பாவத்திற்குச் சமம் என்று அரும்பெரும் நற்போதனைகள் வேறு. இனி வாய் திறக்கக் கூடுமா. பெண்கள் கவரி மான் போன்றவர்கள். மயிர் இழந்தால் உயிர் துறக்க வேண்டும். இப்படி மனதில் அழுத்தி அழுத்தி, கனத்து போன மனம் கடப்பதெல்லாம் கணமான பொழுதுகள் மட்டுமே. பிறக்கும் பொழுது‌ அன்னையும் தந்தையும் முடிவாகிறது. திருமணச்‌ சடங்காய் ஒருத்தியின் கழுத்தில் ஏறுவதற்குப் பெயர் தாலி அல்ல. தூக்கு கயிறு.

அங்கு எழுச்சிக் குரல்கள் ஒலிக்காதது தேவர் பிள்ளைக்கு அனுகூலம்தான். நூற்றாண்டுகளாய் ஏற்றி வைத்த கருத்துக்களை, இவனின் சில வார்த்தைகள் மாற்றிவிடுமா என்ன?

"இந்த ஊரே மங்களத்துக்குப் பெயர் போன ஊர். அப்படி மூளியெல்லாம் இந்த ஊரில் வாழ வைக்க முடியாது. இந்தச் சட்டத்தை யெல்லாம் மாத்தக் கூடாது. அப்புறம் தெய்வக் குத்தமாயிரும்" என்று கூட்டத்தில் இருந்து சில குரல்கள்.

செழியனின்‌ ஆத்திரம் பலமடங்காகியிருந்தது.

அவனின் வார்த்தைகளில் அங்கிருந்த இரு பெண்கள் எழுச்சி பெற்றது உண்மை. ஒன்று அமரா. மற்றொன்று கொடி. கணவன் இறந்துவிட்டான் என்று அலங்கோலமாக இருந்தாள். அவளுக்கு இன்னும் சடங்குகள் நிறைவேற்றப் படவில்லை. வேகமாக எழுந்தாள். அவளின் வீடு அங்கு அருகில் தான் இருந்தது. வீட்டிற்குள் சென்று கதவடைத்தவள், சற்று நேரத்தில் வெளியில் வந்தாள்.

அதற்குள் அங்குக் கூடியிருந்த கூட்டத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டது. அவள் ஏதேனும் தவறான முடிவு எடுத்துவிடுவாளோ என்றே அவள் பின் ஓடினர் சிலர். அவள்‌ வீட்டு ஆட்கள். விசித்திரமாய் இல்லை. இன்னும் சற்று நேரத்தில் சுடுகாடு அனுப்பி வைக்கத் திட்டம் இருக்கிறது அவர்களிடத்தில். ஆனாலும் அவள் தற்கொலை செய்துவிடக் கூடாது. அவளைச் சுடுகாடு அனுப்பி வைப்பதிலும் முறைமைக் கடைப்பிடிக்க வேண்டுமாம்.

அவள்‌ கதவடைத்ததும், அவளுடைய பெற்றோர் கதவைத் தட்ட, சிறிது இடைவெளிக்குப் பின் கதவு திறக்கப் பட்டது. வெளியில் நின்றவர்கள் முகத்தில் அதிர்ச்சி. ஏனெனில் அவள் முழு அலங்காரத்துடன் சர்வ லட்சணமும் பொருந்திய ஏந்திழையாக வந்து நின்றாள். அரக்கு வண்ணப் பட்டில், முடி முதல் அடி வரை நகைகள். அவளிடம் இருந்த அனைத்தையும் அணிந்திருந்தாள். கழுத்தில் இருந்த தாலியைக் கழட்டி வைத்துவிட்டாள் போல. முகம் முழுக்க மஞ்சளும், நெற்றி நிறையக் குங்குமமும் என்று வந்து நின்றாள். அவள் அழுததன் அடையாளமாக மஞ்சள் திட்டுத்திட்டாய் உலக வரைபடம் போல் முகத்தில் காட்சியளித்தது.

அவளின் இந்த அவதாரத்தைக் கண்ட அவளின் பெற்றோர்கள் ஆடிப் போய்விட்டனர்.

"அடி பாவி... இப்படி ஒரு காரியம் பண்ணிட்டியே. இனி ஊரு உன்னைய ஒழுக்கம் கெட்டவன்னு பேசும். ஐயோ.. உன்னைப் பெத்து நான் இதெல்லாம் கேக்கணும்னு இருக்கே" என்று அழுதார் அவளின் அன்னை.

அவளின் தந்தை ஒருபடி மேலே சென்று அவளை அடிக்கக் கை ஓங்கினார்.

"அவரின் கையைப் பிடித்தவள், என்னைக்கு என்னை அந்தக் கேடுகெட்டவனுக்குக் கல்யாணம் செஞ்சு கொடுத்தீங்களோ, அன்னைக்கே நான் உங்க மகள் இல்லை. இப்போ அவனும் உயிரோடு இல்லை. அதனால நான் அவன் பொண்டாட்டியும் இல்லை. என்னை அடிக்க இங்கு யாருக்கும் உரிமை இல்லை" என்றவள், தன்‌ குழந்தையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டாள்.

"புள்ளையாடி பெத்து வச்சிருக்க" என்று அவளின் அன்னைக்கு அடி விழ, அவள் "இதுக்கு மேல் அம்மாவை அடிச்சா, நானும் என் புள்ளையும் சேர்ந்து செத்துப் போவோம்" என்றதும் ஓங்கிய கைகள் கீழிறங்கியது.

"படு பாவி பச்சைப் புள்ளைய என்ன வார்த்தை சொல்றா... நீ எனக்குப் புள்ளையா இருக்கவும் தகுதியில்லை. அவனுக்கு மனைவியா இருக்கவும் தகுதியில்லை. இந்தப் புள்ளைக்கு அம்மாவா இருக்கவும் தகுதியில்லை" என்றார்.

"இதுக்குப் பதில் நாக்கப் புடுங்குற மாதிரி என்னால சொல்ல முடியும். ஆனா உனக்கு மட்டும் இல்லை. உன்னோட ஆண் ஜென்மங்களுக்கு மொத்தமா ஒரு தடவை சொல்லிடுறேன்" என்று வேகமாக நடந்தாள்.

அவளிடம் இருந்து பிள்ளையைப் பறிக்க முற்பட, அவள் அவர்களை முறைத்தாள்.

"என் பக்கத்தில் வந்தா நான் சொன்னதைச் செஞ்சுடுவேன்" என்றவள்‌ வேக வேகமாகத் திடல் நோக்கி நடந்தாள்.

அங்கு இவளைப் பார்த்த அனைவரும் அதிர்ந்து நின்றனர். செழியனின் கைகள் தளர்ந்து விட்டது. அமரா வாய்ப் பிளந்து நின்றிருந்தாள். ஒரு சிலர் அவளைத் தாக்க முற்பட, செழியன் அவனின்‌ அரிவாளை அழுத்திப் பிடித்தான்.

அவர்களைவிட அதிகமாகக் கர்ஜித்தான். அமரா அவள் அருகில் சென்று நின்றாள்.

"என்ன உன்‌ மக இப்படிச் செஞ்சுட்டா?"
"ஊர்ல ஆளுக்காளு அவுகளுக்குப் புடிச்ச மாதிரி வாழ்ந்தா ஊர் கட்டுப்பாடு எதுக்கு?" என்று பலதரப்பட்ட வினாக்கள்.

அங்கு ஒரே சலசலப்பு.

"நிறுத்துங்க எல்லாரும். உங்க எல்லாருக்கும் பதில் சொல்றேன். எனக்குப் புருஷனா வாய்ச்சவன் என்னைப் பொண்டாட்டியாவே நடத்தல. அவனுக்காக நான் எதுக்குச் சாகணும்" என்று அவள் கேள்வி கேட்க, செழியன் அவளை மெச்சும்‌ பார்வைப் பார்த்தான்.

அதுவரை அவனுக்கு‌ அவளைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், மனதின் ஓரம் வலித்தது. அவளின் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டோமே என்று. ஆனால் இப்பொழுது கொடி கூறுவதை வைத்துப் பார்த்தால், அவளுக்கு அவன் மோட்சம் அல்லவா அளித்திருக்கிறான்.

"இத்தனை நாள் நான் சிறைக்குள் அடைப்பட்டுக் கிடந்தேன். இன்னைக்கு நான் சுதந்திர பறவையா மாறிட்டேன். அந்த ஆகாயம் முழுக்கப் பறக்கப் போறேன். என்னை யாரும் தடுக்க முடியாது" என்று கூறி, அவள் இடுப்பில் சொருகி வைத்திருந்த தாலிக் கயிறை எடுத்து தனது தந்தையிடம்‌ கொடுத்தாள்.

"இவனை எரிக்கும் போது சேர்த்து எரிச்சிருங்க. அப்பறம் இன்னொரு கேள்வி கேட்டீங்களே? பச்சப் புள்ளைய படுத்தி எடுக்குறியேன்னு. எனக்கு உங்கிட்ட வளரட்டும்னு விட்டுட்டு போக மனசில்லை. ஆண் குழந்தை வேறு. நாளைக்கு இவன் செத்தா என்னை மாதிரி இன்னொருத்தி இந்தச் சமூகத்துக்கு வேண்டாம். அதனால நான் செத்தா அவனும் என் கூடவே சாகட்டும். பெண் குழந்தையா இருந்திருந்தாலும் இதே பதில் தான். ஒருவன் இறந்துவிட்டான் என்பதற்காக அவள் உயிரைத் தாரை வார்க்கப் போறீங்க. அப்போ ரொம்ப வலிக்கும் அவளுக்கு, இப்போ எனக்கு வலிக்கிற மாதிரி. அதனால அப்படிப் பிள்ளைகள் இந்தச் சமுதாயத்துக்கு வேண்டாம்" என்றாள் தெளிவாக.

அவள் அலங்காரத்துடன் வந்ததே அங்குள்ளவர்களுக்கு விலகாத அதிர்ச்சியாய் இருக்க, அவள் இப்படி ஒரு கூற்றை முன் வைத்தாள். அனைவரும் நிலைகுலைந்து போயினர். இருவர் மனதிற்குள் சபாஷ் போட்டனர். அது யாரென்று விளக்க வேண்டிய அவசியமில்லை. கோகிலம் மட்டும் மனதிற்குள் ஆயிரம் முறை மரித்துப் போய்விட்டார். இதற்குத் தன் கணவனின் பதிலடி என்னவாக இருக்கும் என்று நினைத்து நினைத்து வெதும்பியவர் அவர் ஒருவர் மட்டுமே.

அமரா அவள் அருகில் வந்து அவள் கைககளை ஆதூரமாகப் பற்றினாள்.

ஊர் முழுக்க வேடிக்கை மட்டுமே பார்த்தது. இப்படி ஒரு சூழ்நிலை வந்து கையாண்டிருந்தால் அல்லவா அடுத்து என்ன செய்வது என்று தெரியும். சாகத் தயார். என்னையும் என் பிள்ளையையும் சேர்த்துக் கொன்றுவிடுங்கள் என்று கூறுகிறாள். இல்லையேல் அவளே கொன்றுவிடுவாளாமே.

ஆச்சர்யம் தான். இப்படி ஒரு அன்னை உரைப்பது. அவளுக்கும் அது கடினமாகவே இருந்தது. லட்சம்‌ முறை செத்துப் பிழைத்தாள். ஆனால் அடுத்தத் தலைமுறையேனும் பிழையில்லாமல் வாழ வேண்டுமே. ஒருவன் பேரெழுச்சியின் விதை ஒன்றை‌ விதைத்துவிட்டான். அதில் வளரும் விருட்சத்தை இவள் பார்க்க முடியவில்லை என்றாலும், அவளின் பிள்ளை அனுபவிக்கட்டுமே.

"அமரா.. கொடியை‌ வீட்டுக்கு கூட்டிட்டு போ. அவளுக்கு வேற எங்கையும் பாதுகாப்புக் கிடையாது" என்று‌ கட்டளையிட்டான் செழியன்.

"அப்படியெல்லாம் அனுப்ப முடியாது. புருஷன் பொணமா இருக்கப்போ, அவ சீவி சிங்காரிச்சுட்டு இருக்கது நல்லாயில்லை‌ சொல்லிட்டேன்" என்று‌ கொடியின் மாமியார் கூற, "கொன்னுடுவேன்... உங்களையில்ல.. உங்கள் கணவரை. ஏற்கனவே ‌ஒரு கொலை செய்தவனுக்கு இது ஒன்றும் பெரிய‌ காரியமில்லை. அதனால் அமைதியா போறது நல்லது. உங்க குடும்பம் இருந்த இடம் தெரியாம‌ போகணும்னா அடுத்த வார்த்தை வரலாம். இல்லை அப்படியும் கொடியை பிணமேடை ஏத்தணும்னா கொடி சொன்ன மாதிரி, அவள் பிள்ளையையும் சேர்த்து ஏத்திருவேன்" என்று மிரட்டினான்.

"ஆமா... நீ எதுக்கு அவளுக்கு இப்படி வரிஞ்சு கட்டிக்கிட்டு வர. அவ என்ன உனக்குப் பொண்டாட்டியா? இல்லை அவ புள்ளைக்கு நீ தகப்பனா?" என்றே நாக்கில் நரம்பில்லாமல் அவர் பேச, கொடியின் அன்னை அழுது கரைந்தார்.

"இந்தப் பேச்சை கேட்க வேண்டாம் என்று தானே தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன்" என்று அவர் அழ, "தம்பி, முதலில் எங்களைக் கொன்னு கொல்லி வச்சிட்டு அப்புறம் கூட்டிட்டு போங்க" என்று தடுத்தார் கொடியின் தந்தை.

"அது எனக்கொன்னும் பிரச்சினை இல்லை. பெத்த மக செத்தாலும் பரவாயில்லைன்னு நினைக்கிற நீங்க உயிரோட இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. உங்க மருமகனோட நீங்களும் தாராளமா சுடுகாடு போகலாம்" என்றான் கேலியுடன்.

அவனுக்கும் கொடிக்கும் தவறான உறவு இருக்கிறது என்று அனைவரும் பேச, "என் புருஷனை கேள்வி கேக்க எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு. எல்லாரும் இவனை அடக்கம் பண்ணிட்டு வீட்டுக்கு கிளம்பி போற வழியைப் பாருங்க. இனி இந்த ஊரில் இந்தச் சடங்கு நடத்துக் கூடாது. இது புது ராஜாவோட கட்டளை" என்று அமரா கூற, தேவர் பிள்ளையின்‌ கோவம் அதிகரித்தது. அவர் அடிபட்ட பாம்பாய் வஞ்சத்தை‌ நஞ்சாய்க் கொண்டிருந்தார். அவர் உயிருடன் இருக்கும் பொழுதே அவரின் மகன் ராஜா. அவர் மூளை அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிரமாகச் சிந்தித்தது. இன்றைய பொழுது அவர் வசமாய் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு அமைதியாய் இருந்தார்.

நிலவு ஒழுகும்...





 
பொழில்

நிசியின் வனப்பு
மேகக் கூட்டம்
மின்னல் வெட்டு
இரவின் கோரம்
உயிரின் ஓலம்
அலங்கோலமாய் நான்
தவித்த நீ!!!




அனிச்சமும் நளனும் அந்த உலத்திலே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அனிச்சம் கொஞ்சம் சமைக்கவும் பழகிக் கொண்டாள். நளனின் செல்லமான சீண்டல்களும் தீண்டல்களும் அவளை மகிழ்ச்சி வானில் சிறகில்லாமல் பறக்க வைத்தது. தென்னந் தோப்பில் பொழுதைக் கழிப்பதும் ஆற்றுப் படுகையில் கால் நனைப்பதும் அவர்களுக்குப் பிடித்தமான ஒன்று.

தென்னை மரத்தை‌ அண்ணாந்து பார்த்து வியந்தனர். அதில் லாவகமாய் ஏறி இளநீர் பறிக்கும் மனிதர்களைக் கண்டு அயர்ந்து நின்றனர். அந்த இளநீர் சுவைக்கு அனிச்சம் அடிமை.

அவர்கள் இருவரையும் ராணி பார்க்க வந்தார். புதுமணத் தம்பதிகளுக்குப் பரசுகள் வழங்கி ஆசி வழங்கினார்.

அனிச்சம் ராணியை‌ பல விதமான ஆரவத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மங்கையைப் பற்றிக் கூறுகிறேன் என்று கூறியிருக்கிறாளே. அவள் மொழியக் கூடுமோ‌ என்ற பார்வைதான் அது. அது ராணியின் விழிகளுக்குப் புலப்படாமல் இல்லை.

அவர்கள் இருவரையும் மங்கையைப் புதைத்த இடத்திற்கு அழைத்துச் சென்றாள் ராணி.

"உன் பெயர் என்னம்மா?"

"அனிச்சம்" என்றாள் அவள். நளன் பார்வையாளராய் மாறிப் போயிருந்தான்.

"அனிச்சம் என்பது ஒரு வகையான மலர். அறிவாயா நீ. மோப்பக் குழையும் அனிச்சம் என்று ஒரு பாடல் கூட இருக்கிறது. முகர்ந்து பார்த்தாலே வாடிவிடும் மலர்தான் அனிச்சம். மிகவும் மென்மையான மலர். நீயும் பார்க்க அப்படித்தான் தெரிகிறாய். ஆனால் அந்த மென்மையையும் மீறி ஒரு அழுத்தம் இருக்கிறது உன்னிடம்" என்றதும், ராணியை விளங்கியும் விளங்காமலும் பார்த்தனர் இருவரும்.

ராணியின் உதடுகள் அவளிடம் உரையாட, கைகள் அனிச்சை செயலாய், அங்கு விளக்கேற்றி, கொய்து வந்த மலர்களைத் தூவியது.

"இப்பொழுது சொல்.. யாரம்மா நீ?"

"நான் அனிச்சம்.." என்று அவள்‌ கூறியதும் மெல்லிய மூரல் ஒன்று தோன்றியது ராணியின் அதரங்களில்.

"அனிச்சம் உன்னுடைய பெயர். அவ்வளவே. அதற்கும்‌ மேல் நீ யார்."

அவள் என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள். நளனும் சமாளிக்க முடியாமல் திணறினான். அவர்கள் உலகத்தில் ஆதிபகவனிடம் பொய்யுரைக்க முடியாது. ஆனால் இங்கு வந்ததும் பொன்னியே அவர்களைப் பற்றிய ஒரு காரணம் கற்பித்துக் கொள்ள, அதையே வழிமொழிந்தனர் இருவரும். ஆதிபகவன் போல் இங்கு யாரும் உண்மைகளைக் கண்டு பிடிக்கும் இயந்திரம் கிடையாது என்று நன்றாக விளங்கியது. அதனால் ‌அதையே பின்பற்றினர். ஆனால் இன்று ராணியிடம் இருந்து தப்ப முடியாது போல. அவரின் குறுக்கு விசாரணை அனைத்தும் அவர்களிடத்தில் உண்மைகளைப் பெற்றுவிடும் திசையிலேயே இருந்தது. ஒன்று மட்டும் விளங்கியது. இப்படி மனிதர்கள் இருந்ததால் மட்டுமே ஆதிபகவனை உருவாக்க சிந்தித்திருக்கின்றனர். புனைந்த பொய்யினைக் கடை விரிக்கும் வித்தை மனித மரபில் இருக்கிறது போல.

"அனிச்சம், உனக்கு மங்கையைப் பற்றித் தெரிய வேண்டும். சரிதானே" நாச்சியார்.

ஆம் என்று தலையசைத்தாள் அவள்.

"இதுவரை யாருக்கும் தெரியாத உண்மைகளை நான் உனக்கு உரைப்பதால் எனக்கு என்ன ஆதாயம்?" என்றார் மிகச் சாமர்த்தியமாக.

அவளால் பதில் கூற முடியவில்லை.

"இதுவரை அமிழ்ந்து போன, யாரும் அறியாத உண்மையினை உனக்கு உரைக்க வேண்டும் என்றால் நீ யாரென்று நான் அறிய வேண்டாமா? அவள் நம்பி என்னிடம் கூறிய ரகசியத்தை நான் பெயரளவில் மட்டுமே தெரிந்த உன்னிடம் கடைப் பரப்புவது எவ்விதத்தில் நியாயம்?"

"எங்கள் மேல் நம்பிக்கை இல்லையா? அந்தத் தகவலை வைத்து நாங்கள் என்ன செய்துவிட முடியும்" நளன்.

"உங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தால், உனக்கு அப்படி ஒரு வாக்கு அளித்திருக்க மாட்டேன். அது வெறும் தகவல் இல்லை என்னைப்‌ பொறுத்தவரை. மங்கை என்னும் வீரமகளைச் செதுக்கிய உளி. மேலும் இந்த உலகத்தில் விலைமதிப்பற்றது தகவலே. சமயங்களுக்கு ஏற்ற தகவல்கள் நம் வெற்றி தோல்விகளைத் தீர்மாணிக்கும். என் வெற்றி அதற்கு ஒரு சான்று. மங்கையால் கிடைக்கப்‌ பெற்ற வெற்றியை அறிவீர்கள் என்று நம்புகிறேன். அது முற்றிலும் அவளின் புத்திக்கூர்மை மற்றும் தவறான தகவல் பரிமாற்றத்தில் கிடைத்தது. இன்னும் என் வாழ்வினில் சில வீரமகள்கள் இருக்கிறார்கள். உடையாள், குயிலி என்று. இவர்கள் அனைவரும் இல்லையென்றால் என்னுடைய இலக்குகள் இலக்குகளாய் இருந்திருக்கும் காலம் முழுக்க" என்று நீண்ட விளக்கவுரை ஒன்றை வைத்தார் வேலு நாச்சியார்.

"எங்களுங்கு சொல்றதுல எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் உங்களால்‌ புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை" என்றான் நளன்.

"உருது, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழிகள் புலமை உடையவள்‌ நான். வளரி, வல் வித்தை, வாள் வீச்சு என்று பல கலைகள் அறிந்தவள். அதுமட்டுமல்லாமல் பல நூல்களும் பயின்றிருக்கிறேன். அதனால் பாதகமில்லை. கூறலாம். விளங்கிக் கொள்ள முயற்சிக்கிறேன்."

"நாங்கள் பொய் கூறுகிறோம் என்று நீங்கள் நினைக்கவும் வாய்ப்பிருக்கிறது" நளன்.

"நீங்கள் பொய்யுரைக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றியிருந்தால், நான் உங்களிடம் வினவ மாட்டேன். ஒற்று வைத்து அறிந்திருப்பேன். இதுவரை நீங்கள் இருவரும் பொய்யுரைத்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பொன்னி அவளாய் ஒரு காரணம் கற்பிதம் செய்து உரைத்ததை ஏற்றிருக்கிறீர்கள். அவளே அறியாமல் பொன்னி உரைத்த பொய்யை ஆதரித்திருக்கிறீர்கள்" என்றாள் சரியாகக் கணித்து.

சிறிது நேர அமைதி.

"நாங்கள் இருவரும் ‌வேறொரு பிரபஞ்சத்தைச் சேர்ந்தவர்கள்" என்றதும் சற்று ராணி அதிர்ந்தது போல் இருந்தது. ஆனால் நம்பாமல் பார்க்கவில்லை‌.

பிரபஞ்சம் பற்றிப் பல நூல்களில் படித்திருக்கிறாரே. ஆனாலும் அது இத்தகையதா என்று வியந்து பார்த்தார் இருவரையும்.

அதன் பிறகு நடந்த அனைத்தையும் உரைத்தனர் ராணியிடம். அவர்களின் உலகம் இருக்கும் நிலை முதற்கொண்டு அனைத்தையும் கூறிமுடித்தனர்.

சிறிது நேரம் நிசப்தமாய் இருந்தது அந்த இடம். நம்ப முடியாத தகவல்களை நம்பும் நிலையில் இருந்தாள் ராணி. அவர்களின் உலகம் எப்படி இருக்கிறது என்று கேட்டறிந்த பின்னர், அவரின் நெஞ்சு பதறிவிட்டது. இந்த உலகம் ஒருநாள் அப்படி மாறக்கூடுமோ. இவர்கள் கூறுவதை வைத்துப் பார்த்தால், இன்னும் இரண்டாயிரம் வருடங்கள். அவ்வளவுதானா மனிதனின் ஆட்டம் அடங்கிவிடுமா? இனப் போராட்டம், மனப் போராட்டம் என்று அனைத்தும் ஒரு புள்ளியில் மறைந்துவிடவா இப்படி அடித்துக் கொள்கிறோம் என்று பலவாறு பல எண்ணங்கள் ராணியை ஆட்கொண்டது.

சரியென்று அவர்களிடம் கூறியவர், அடுத்து மங்கையைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.

பத்து வருடம் முன்பு சீமை முத்துவடுகத்தேவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. மங்கை பரதம் கற்றவள். அவளின் கணவன் நாடகக் கலைஞன். ஊர் ஊராகச் சென்று நாடகம் போடுவார்கள் இருவரும்.

அருகில் இருக்கும் ஊர்களில் எல்லாம் சென்று சுதேசி நாடகங்கள் போடப்பட்டது. நடனத்தில் ஒன்பான் சுவைகளைக் கொண்டு ஆடுவாள். பாவம், ராகம், தாளம் அனைத்தும் நாட்டியம் ஆடும் அவள் ஆட்டத்தில். இவையெல்லாம் அனைத்து நடனக் கலைஞர்களும் செய்யலாம். சுதந்திர போராட்டத்தைக் கூட அவள் நாட்டிய பாவத்தில் அழகாய்க் கொண்டு வந்தாள்‌. அவள் ஆடும் பொழுது அனைவருக்கும் சுதந்திர வேட்கை பிரவாகம் உடைத்துவிடும்.

அப்படித்தான் அன்றும் ஒரு நாடகம். ஆங்கிலேயனின் உடையில் சிலர் நடிக்க, அவர்களைக் கவண் கற்களும், வளரியும்‌ கொண்டு வெல்வது போல் நாடகம் அமைந்தது. அதில் முத்து வடுகத்தேவராய் வேலனும், வேலு நாச்சியாய் மங்கையும் நடித்தனர். ஆட்டத்தில் ஒரு போரையே நிகழ்த்தி விட்டனர். வழக்கமாகச் சுதேசி நாடகங்கள் அனைத்தும், ஆங்கிலேயன் அடித்துத் துவைத்தாலும் மண்ணிற்காகப் போராட வேண்டும் என்ற சித்தரிப்பாக இருக்கும். பலர் நாட்டிற்காக உயிர் துறப்பது போலவும், வீரம் விளைந்த மண் என்ற கண்ணோட்டத்திலே இருக்கும்.

ஆனால் இவர்கள் சற்று வித்யாசமான பாணியில் நாடகத்தை இயற்றினர்.

"வந்தோரை வாழ வைக்கும் பூமியாம் இந்தத் தமிழர் திருநாடு. கொட்டிக் கிடக்கும் வளங்களைக் கள்வன் அறியும் படி வைத்தது எங்கள் பிழைதான். ஆனால் பஞ்சம் பிழைக்க வந்தவன் எமை வீழ்த்தி, வாழ நினைத்தால், அதற்கு இம்மண்ணில் கிஞ்சித்தும் இடமில்லை. இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவாயோ. வஞ்சத்தால் மாண்டு போவோம் என்று எண்ணிய அற்ப பதரே. சிந்திய உதிரம் உரமாய் மாறிவிட்டது. இது அறுவடை செய்யும் காலம்‌. இனி வியர்வைத் துளிகள் மட்டுமே சிந்துவோம். அதுவும் என் தாய்நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமே‌. இனி இங்கு ஒரு உயிர் மாள வேண்டுமாயின், அது வெள்ளையனுக்கு இறுதி முடிவை எழுதிவிட்டே சரிய வேண்டும்" என்று வீரமுழக்கம் முழங்கியது.

ஒரு பக்கம் தமிழ் வீரர்கள். மற்றொரு பக்கம் ஆங்கிலேய வீரர்கள் போல் வேடம் தரித்தவர்கள்.‌ துப்பாக்கிகள் ஏந்தியிருந்தாலும் வளரி ஆயுதம்‌ கொண்டு தாக்குவது போல்.

வளரிகளின் விளிம்புகள் பட்டையாகக் கூராக இருக்கும். அவர்கள் உபயோகித்தது அட்டையில் செய்த வளரியாய் இருந்தாலும், அவர்கள் முகத்தில் வெளிக் கொணர்ந்த உணர்வு, அது உண்மை வளரி போலே ஒரு தோற்றப்‌பிழை. பார்ப்பவரின் விழிகளில் அல்ல. இல்லாத ஒன்றை காட்சிப்படுத்துவது தோற்ற மயக்கம் எனலாம்‌.

பொதுவாக ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூடச் செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும். ஆக வளரியை வைத்து கொலை செய்யவும் முடியும். எதிரியைத் தேக்கவும் முடியும். எந்த உத்தியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

மேடையில் நிகழ்ந்த போரில் ஆங்காலேயர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். நடனத்திலே போரின் காட்சியைத் தத்ரூபமாகக் கொண்டு வந்தனர் வேலனும் மங்கையும். சீமையின் எல்லைக்குள் ஆங்கிலேயனின் கால்த்தடம் கூடப் பதிக்க இயலாது என்று வீரவசனம் பேசி நன்றியுரை நவின்றனர்.

எட்டுத்திக்கும் மக்களின் கைத்தட்டல் ஒலி காதைப் பிளக்க, அது வெள்ளையனின் காதையும் பிளந்திருக்க வேண்டும். கொதித்தெழுந்தனர்‌ ஆங்கிலேய தளபதிகள். சீமையைக் கட்டுக்குள் அடக்கப் பல நாட்களாகவே திட்டம் இருக்கிறது. ஆனால் முடியவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த எழுச்சி நாடகம் அவர்களின் பயத்தைக் குறைத்துவிடுமே. துப்பாக்கிக் கண்டு குருவியாய் சிதறி ஓடும் மக்கள் இருக்கும் வரைதான் அவன் அதிகாரக் கொடிப் பறக்கும்.

அதனால் மங்கையையும் வேலனையும் கொள்ளும் படி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது.
ஒருநாள் நாடகம் முடிந்து வீடு திரும்பும் பொழுது, அவள் சிதைக்கப்பட்டாள்.

கொல்ல வந்த வீரர்கள் அவர்கள் இருவரையும் தாக்கி, வீழ்த்தினர். நிராதரவாக இருந்தனர் மங்கையும் அவள் கணவனும். கத்த முடியாத அளவு கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது. அவளைக் கொல்லும் முன் அவளின் கற்பைக் களவாடும் எண்ணமும் அவர்களுக்கு வந்தது.

உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமைக் கூட அவளுக்கு வழங்கப்படவில்லை.‌ அங்கு நடந்த கோர நிகழ்வினைக் கண்டு தாங்க இயலாத வெட்ட வெளியோ மேக்கூட்டங்களை ஒன்றாகக் கூட்டி, மத்தளம் வாசித்தது. அவளின் துகில் உருவப்பட, வானமே இருண்டு அவளுக்குத் துகிலாய் மாறிப்போனது. கண்ணன் திரௌபதைக்குத் துகில் அளித்தான். சபை அதிர்ச்சியுற்று நின்றது. ஆனால் இவர்கள் இதிகாசங்கள் அறியாதவர்கள் ஆயிற்றே. வானம் பொத்துக் கொண்டு ஊத்த, திடிரென இருட்டிய பொழுதில் சற்று திணறினர் ஆங்கிலேயர்கள். அலங்கோலமாய் இருந்தவளை இழுத்துக் கொண்டு வேலன் ஓட, அவர்களும் பின் துறத்தினர். ஒரு கட்டத்துக்கு மேல் அவளுக்குத் தெரிந்துவிட்டது. இனி தப்ப இயலாது என்று. மயங்கி சரியப் போனாள். அவளைத் தூக்கிக் கொண்டு அவனால் ஓட இயலவில்லை. தன்னைக் கொன்றுவிடும்படி மன்றாடினாள் மங்கை. வேலன்‌ மடிந்தால் இருவரும் மடிந்து போக வேண்டும். உன்னை நிச்சயம் காப்பாற்றுவேன் என்று அவனால் முடிந்தவரை அவளைத் தூக்கி சுமந்தான்.

அதிகமாகப் பெய்த மழை மண்ணை அரித்துக் கொண்டு ஓட, அவனால் அதற்கு மேல் மல்லுக்கட்ட முடியவில்லை. அவர்கள் இருவரும் சுற்றி‌ வளைக்கப்பட்டனர்.

மங்கை பாதி மயங்கிய நிலையில் பாதகர்களால் சிதைக்கப்பட்டாள். மூச்சின்றி மண்ணோடு மண்ணாகக் கிடந்தாள். மங்கை இறந்துவிட்டாள் என்று அவளை‌ அந்த இடத்திலே விட்டுச் சென்றுவிட்டனர். வேலனின் கையில் மூன்று தோட்டாக்கள். நெஞ்சை குறிப்பார்த்தது கையில் இருந்தது.

மழை‌ பெய்து ஓய்ந்திருந்தது. மங்கையும்தான். அவளின் அலறலில் அந்த இடமே மௌனமாய் இருந்தது. ஆகாயத்தேவன் அரிவாள் நுனியாய் மின்னல் வெட்டுக்களை அனுப்பிவிட்டான். வாயு தேவன் சுழன்றடித்துச் சுருட்டிச் செல்லப் பார்த்தான். ஆனால் பலனில்லை. அவள் உருவமும் உள்ளமும் சிதைக்கப்பட்டது‌. இப்பொழுது அவளைப் போல் அங்கிருந்த அனைத்தும் மௌனமாய் இருந்தது.

அங்கிருந்த மரமும், மழையும், வானமும், மண்ணும் அவளின் மரண வேதனையை உணர்திருக்கும் போல. மெல்லிய காற்றைத் தூதனுப்பியது‌. அவளை வருடிச் செல்லும்படி. இன்னொரு ஆணின் கோரச் செயலுக்கு, வருடிக் கொடுக்கிறான் வாயு தேவன்.

இயற்கையின் பிரதாபங்களுக்கு உயிர் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் போல் தோன்றியிருக்க வேண்டும்.

வலுக்கட்டாயமாக மெல்லிய காற்று அவள் சுவாசக்குழாய்க்கு வலிக்காதவாறு உள் நுழைந்தது. அவளைத் தொட்டால் மடிந்து போவாளோ என்று மூச்சுக் குழாயின் உட்புறச் சுவரும் உணரா வண்ணம் சென்றிருக்க வேண்டும். என்ன ஆச்சரியம். உள் சென்ற காற்றை ஏற்றுக் கொண்டாள் மங்கை. அவள் இன்னும் ஆற்ற வேண்டிய கடமைகள் இருக்க வேண்டும். உள் சென்ற காற்றின் உபயத்தால் மயிரிழையில் துடித்துக் கொண்டிருந்தது இதயம். மெல்லிய முனகல் ஒலி தோன்றியது. அந்த ஒலி அங்கு இளைபாறியிருக்கும் தென்றலிடம் கசிய, மீண்டும் கொஞ்சம் வேகமெடுத்து பறந்து சென்றது. அந்த வழியே சென்று கொண்டிருந்த நாச்சியாரின் செவியில், தூதனாகச் செய்தியுரைத்துச் சென்றது.

முனகல் ஒலி நாச்சியாரின் மனதில் கிலியைத் தோற்றுவிக்க, ஒலி வந்த திசையில் தன்னுடைய‌ தேரை செலுத்தினாள் அவள்.

வெட்ட வெளியில் சிறிதும் அரவமின்றி இரு உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்த சம்பவம் அவளை உலுக்கி, உள்ளுக்குள்‌ இருந்த உயிருக்கு வலிக்கச் செய்தது. அதுவும் மங்கையிருக்கும் நிலை கண்டு பதறித் துடித்தாள்.

அவளுடைய கழிவிரக்கம் இவர்களைக் காத்தருளாது என்று மூளை உச்சந்தலையில் அடித்துக் கூற, வேகமாகச் சென்று இருவரையும் தேரில் ஏற்றினாள். பின் தேர் வேகமெடுத்துச் சென்றது. மங்கையின் உடலை தனது சேலை கொண்டு மறைத்தாள்.

அரண்மனைக்குள் சென்றதும் ரகசிய வழியில் அவர்களை அழைத்துச் சென்றாள். சேடிப் பெண்ணை அழைத்து மருத்துவச்சியை அழைத்து வருமாறு கட்டளையிட்டாள்.

மருத்துவரின் கைங்கரியத்தாலும், அவளின் சேவையாலும் இருவரும் பிழைத்தனர். முதலில் கண் விழித்தது வேலன்தான். நாச்சியாரின் எந்தக் கேள்விக்கும் அவனால் பதில் கூற முடியவில்லை. அவனின் பார்வை ஓரிடத்தில் நிலைக்குத்தி இருந்தது.

மங்கையை விட இவன் மனம் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்தாள் நாச்சியார்.

"வேலன், உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்யக் கடமை பட்டிருக்கிறேன்" என்று நாச்சியாரின் மொழி மட்டும் அவனின் செவிப்பறைக் கிழித்து உள்ளே சென்றது போல.

"ராணி... எனக்கு ஒரு வரம் அருள வேண்டும்" என்று வாய்த் திறந்தான்.

"என்ன வேண்டுமானாலும் கேள். தர சித்தமாய் இருக்கிறேன்."

"மங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வீர்களா?" என்று அவன் வினவியதும் திடுக்கிட்டாள் ராணி.

"வீரனே! இது அபத்தமாக இருக்கிறது."

"இன்னொரு முறை என்னை வீரன் என்று விளிக்காதீர்கள். வீரன் என்ற சொல் என்னைப் பார்த்து பரிகசிக்கிறது" என்று அவன் கதறி அழ, அவனின் நிலையை நன்கு உணர்ந்து கொண்டாள் ராணி.

"உன் மனைவிக்கு நடந்தது கொடூரமாய் இருப்பினும், உன்னளவு அவளைத் தேற்ற யாராவும் முடியாது. கற்பிழந்தவள் மனைவியாய் வாழ தகுதியற்றவள் என்று எண்ணுகிறாயா?" என்றாள் நாச்சியார் சற்று சீற்றத்துடனே.

"இல்லை... இல்லை... அவள் மனைவியாய் இருக்கத் தகுதி இழக்கவில்லை. நான்தான் அவளுக்குக் கணவனாய் இருக்கும் தகுதி இழந்துவிட்டேன். அந்த அரக்கர்களிடம் இருந்து அவளைக் காப்பாற்ற முடியவில்லை. என்னைக் கொன்றுவிடுங்கள் என்று மன்றாடினாள். அதையும் நான் செய்யவில்லை. இந்தப் பிறவியில் அவள் என்னை மன்னிப்பாளா என்று தெரியவில்லை. அவளுடைய முகம் காண தகுதி இழந்துவிட்டேன் நான்" என்று கதறி அழுதான் அவன்.

"வேலன், உன்னுடைய உணர்வுகள் எனக்குப் புரிகிறது. இருந்தாலும் நீ அவளுக்கு அருகில் இருப்பதுதான் அவளுக்குப் பலம்" என்று அவனுக்குப் புரிய வைத்திட முனைந்தாள் வேலு நாச்சியார்.

"இல்லை ராணி.. அவளின் பலவீனம் நான். என்னைக் கண்டால் அவளை மாய்த்துக் கொள்வாள் மங்கை. அவள் வீரமங்கையாக இருக்க, தங்களுடன் இருக்க வேண்டும்."

"அவளுக்கு என்னாலான உதவிகள் நிச்சயம் கிடைக்கும். ஆனால் அவளை நிராகரித்து, அவளுக்குப் பெரும் தண்டனை வழங்கிவிடாதே. ஒரு பெண்ணாய் அவள் உள்ளம் எவ்வளவு பாடுபடும் என்று என்னால் மட்டுமே உணர முடியும்."

"இல்லை ராணி... உங்களால் மங்கையின் மனதை மட்டுமே உணர முடியும். நான் படும் வேதனையை உங்களால் உணர முடியாது" என்று அவன் கூற, வேலு நாச்சியார் திடுக்கிட்டார்.

ஒருவைகயில் அவன் கூறுவது மெய்தானே. அவனின் உணர்வுகள் அவளுக்கு விளங்காமல் போகலாம். ஆனால் இப்படி விரக்தியுடன் இருப்பவனை எங்கனம் தனியே செல்ல அனுமதிப்பது. தவறான முடிவுகள் ஏதேனும் எடுத்துவிட்டால் என்ன செய்வது.

ராணியின் முகத்தில் தோன்றிய ஐயப்பாடைக் கண்டவன் அவளுக்கு மேலும் விளக்கிக் கூறினான்.

"வேள்வித்தீ வளர்த்து, அவளைப் பாதுகாப்பேன் என்று வாக்களித்திருக்கிறேன். அதை நிறைவேற்றாமல் போன என் உள்ளம் வெட்டுப்பட்ட உறுப்பாய்த் துடிதுடிக்கிறது. அவளை இப்பொழுது சந்திக்கும் மனோபலம் என்னிடம் இல்லை. நீங்கள் என்னைக் கோழை என்று விளித்தாலும் சரி. ஆனால் என்னால் அவளின் விழிகள் பார்த்து இனி உரையாட இயலாது. என்னை ஏன் காப்பாற்றவில்லை என்று நிச்சயம் வினவ மாட்டாள். என்னை ஏன் கொல்லவில்லை என்று அவள் கேட்கும் விறாவிற்கு நிச்சயம் என்னிடம் விடையில்லை. நான் கோழைத்தனமாக நிராகரிக்கும் ஒரு வினாவிற்கு, காலம் பதில் கூறட்டும். உங்களின் அரவணைப்பு அவளை இரும்பு மனுசியாக மாற்றட்டும்" என்று மன்றாடினான்.

உண்மையில் மருகிவிட்டான் வேலன். அவளை வாழ வைக்க அவன் வாழலாம். ஆனால் இருவரும் வாழ்வார்களா என்பதுதான் கேள்வியே. அது வேள்வியில் நடப்பது போல் அல்லவா? இருவரும் ஒன்றாய் இருந்து மடிந்து போக வேண்டாம். அவள் ராணியின் பாதுகாப்பில் இருக்கட்டும். என்றாவது ஒருநாள் அவளுக்கு அவனை மன்னிக்க முடியும் என்று தோன்றினால், வரட்டும் அவள் என்று நினைத்தான் அவன்.

மங்கையைப் பொறுத்தளவு அவளைக் காப்பாற்றுவது, தன் கணவனுக்குக் கடினமான காரியம். ஆனால் கொன்று விடுவது எளிதாயிற்றே. அதனால் அவள் அப்படிக் கட்டளைப் பிறப்பித்தது. ஆனால் இரண்டும் அவனுக்குக் கடினமாய் இருந்தது விதியின் சதி போல.

அவனின் உள்ளமும் ராணிக்குப் புரிந்தது இப்பொழுது. ஆண்களின் இதயம் கரடுமுரடானதுதான். எல்லா நேரங்களிலும் வலிக்க வைத்து விட முடியாது. ஆனால் அப்படி ஒரு அடி விழுந்தால் மொத்தமாகக் கோழைகளாகிவிடுவர். வேலனுக்கும் அதுதான் நடந்திருக்கிறது. மங்கையைக் கூடத் தேற்றிவிடலாம் போல. இவனைத் தேற்றுவது பெரும் காரியமாக இருக்கிறது. ஒருவேளை மங்கை எழுந்துதான் இவனின் மனதிற்கு இதம்‌ அளிக்க வேண்டும் போல என்று நினைத்தாள் ராணி வேலு நாச்சியார்.

"சரி... நீ கேட்ட வரம் உனக்கு அளிக்கிறேன். இன்றிலிருந்து மங்கை எனது பொறுப்பு" என்று ராணி வாக்களிக்கவும் அவன் நெகிழ்ந்துவிட்டான். விழிகள் கண்ணீர் விருந்து வைத்தது‌.

"ஆனால் நீ எனக்கு ஒரு வரம் அளிக்க வேண்டும்" என்று ராணி கூற, அவன் சற்றே திடுக்கிட்டான்.

"என்னிடம் கட்டளையிடுங்கள் ராணி. நிறைவேற்றி வைக்கச் சித்தமாய் இருக்கிறேன். மங்கையுடன் என்னைச் சேர்க்க நினைக்க வேண்டாம். அதைத் தவிற என்ன வேண்டுமானாலும் கட்டளையிடுங்கள். தாங்கள் ஆற்றப் போகும் காரியத்திற்குப் பிரதி உபகாரமாக, என் உயிரை வேண்டுமானாலும் கொடுப்பேன்" என்றான் உணர்ச்சி மிகுதியில்.

"உன் உயிர் உன்னிடமே இருக்க வேண்டும். பத்திரமாய்" என்று ராணி கூற, அவற் புரியாமல் பார்த்தான்.

"நீ நினைப்பது போல் மங்கை என்றாவது ஒருநாள்‌ உன்னைத் தேடி வந்தால், நீ உயிருடன் இருக்க வேண்டும். அதனால் உன் உயிரைப் பாதுகாப்பேன் என்று வாக்களித்திடு எனக்கு" என்று ராணி கூற, "நிச்சயம் இதைச் செய்வேன். அவளைப் பழைய மங்கையாய்க் காணாமல் கண் மூடினால், ஏழேழு பிறவிக்கும் நிம்மதி இழந்து தவிப்பேன் நான். நாராய் கிழிந்து கிடக்கும் என் மங்கையை, எனக்குத் திருப்பி அளித்திடுங்கள் தாயே" என்று கூறி ராணியிடம் இருந்து விடைபெற்றுச் சென்றான்.

நிலவு ஒழுகும்...


 
ஒழுகும் நிலவு 19

வேலன் சென்ற சில நாழிகை கழித்து மங்கை கண் விழித்தாள். சுற்றமும் நினைவில் இல்லை. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை.ஆயிரம் முறை மங்கையை உலுக்கிவிட்டாள் குயிலி. ஆம் அவள்தான் மங்கையைப் பார்த்துக் கொண்டாள்.

குயிலியின் அறையிலேயே அவளைத் தங்க வைத்தனர். அவளைப் பற்றிய உண்மையை யாரிடமும் கூறவில்லை. மறைத்து வைத்திருந்தனர்.

மங்கைக்கு அவளையே நினைவு இருக்கிறதா என்றும் கண்டறிய முடியவில்லை. வைத்தியர்கள் நோவு அவள் உடலில் இல்லை என்று கூறிவிட்டனர். மனதைப்‌ பூட்டி வைத்திருப்பவளை என்ன செய்ய முடியும். அவள் மனம் திறந்தால் உள்ளிருக்கும் காயங்களுக்கு மறுந்து கொடுக்கலாம். ஆனால் திறக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பவளை என்ன செய்வது.

வேலு நாச்சியார் வளரி பயிற்சி மேற்கொண்டிருந்தார். குயிலி அருகில் இருந்தாள்.

"குயிலி, மங்கையின் நிலையில் ஏதேனும் முன்னேற்றம்‌ இருக்கிறதா?" என்று ஒரு வளரியை எடுத்து இலக்கைக் குறிப் பார்த்தாள் வேலு நாச்சி.

"இல்லை..ராணி.. பிடிக் கொடுக்க மறுக்கிறாள். என்ன செய்வதென்று தெரியவில்லை" என்றாள் வருத்தத்துடன்.

"அவளை இங்கு அழைத்து வந்து அமர வை" என்று நாச்சியார் கூற, குயிலி அவளை அழைத்து வந்து அமர வைத்தாள். நூல் பொம்மையாய் குயிலி கூறியதைச் செய்தாள் மங்கை. பதில் கூறமாட்டாள். ஊட்டினால் உணவு உண்ண மட்டுமே வாய்த் திறப்பாள். மற்றபடி நில் என்றால் நிற்பதும், அமர் என்றால் அமர்ந்து கொள்வது மட்டுமே தெரியும். அதிர்ச்சியில் மூளை மரணித்துவிட்டது போல.

வேலு நாச்சியார் வளரியை எடுத்து குறிபார்த்து எய்தார். ஆயுதம் குறிதவறாமல் இலக்கை‌ அடைந்தது. மங்கையின் இதயம் ஒரு துடிப்பு அதிகமாய்த் துடித்தது‌. பின் ஓய்வு பெற்றது போல. அவளிடம் ஒரு வினையும் இல்லை‌. பின் நாச்சியையும்‌ வளரியையும் மாறி மாறி பார்த்தாள். நாச்சியார் பயிற்சியைத் தொடர்ந்தாள். நேரம் செல்ல செல்ல அவளின் இதயத்துடிப்பு எகிறி குதிக்கத் தொடிங்கியது. கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. கைகால்கள் வெடவெடத்தது. அமர முடியவில்லை. கலங்கிய உருவங்கள் தோன்றி மறைந்தது. பின் கோர்வையாக நிகழ்வுகள். மேடை நாடகம் முதல் அவள் உணர்விழந்தவரை. நெஞ்சம் படபடத்தது. எழுந்துகொண்டாள். நேரே நாச்சியாரிடம் சென்றவள், அவள் கைகளில் இருந்த வளரியை வாங்கினாள். இலக்கை நோக்கி எரிந்தாள். அது தவறாமல் இலக்கை நோக்கி சென்றது. அவள் மடிந்து கீழே அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

நாடகதிற்காகக் கொஞ்சம் வளரி பழகியிருந்தாள்‌. அதனால் குறித் தவறாமல் இலக்கை நோக்கி செலுத்த முடிந்தது.

அவள் அழுவதைக் கண்ட குயிலி‌ அருகில் வந்து தூக்க முற்பட, வேலு நாச்சியாரின் விழிகள் தடுத்துவிட்டது. முன்னே எடுத்து வைத்த கால்களைப் பின்னே வைத்தாள் குயிலி.

வெட்ட வெளியில் வானை வெறித்துப் பார்த்தவள், பெரும் சப்தத்துடன் கத்தினாள். அவளின் உள்ளக் கிடங்குகள் வானோக்கி பறந்து சென்றதோ. சிறிது நேரத்தில் விசும்பல் ஒலி மட்டுமே. அவ்வளவு தான் அழ முடியுமோ என்னவோ.

இப்பொழுது மூவரும் அமர்ந்திருந்தனர். மங்கையைத் தோள் சாய்த்திருந்தாள் ராணி.

"உண்மையில் உனக்கு நினைவுகள் திரும்பியது வருத்தமே. உன்னை வதைக்கும் நினைவுகள் உனக்கு வேண்டாம் என்றாலும், புன்னை கீறி மருத்துவம் பார்க்கவில்லையெனில் அது சீழ் பட்டு அழுகிவிடும். உன் மனதில் இருப்பவைகளைக் கொட்டிவிடு" என்று கூற, " ராணி ஏன் இப்படி ஒரு பாதகச் செயல் புரிந்தீர்கள். ஏன் என்னைக் காப்பாற்றினீர்கள்? ஐயோ..‌என்னால் வேதனை தாங்க முடியவில்லையே" என்று‌ கதறி அழுதாள் அவள்.

பதிலேதும் கூறாமல் இருவரும் அவளின் கதறலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கொஞ்சம் மனவலியைப் பங்கு போட்டுக் கொள்ள முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால் இங்கு முடியவில்லையே. வலிக்க வலிக்க, அவள் மட்டுமே அனுபவிக்க வேண்டியதாக இருக்கிறதே.

அழுது கொண்டிருந்தவள், அழுகையை நிறுத்திவிட்டு, "ராணி... என் கணவர் எங்கே? அவரைக் கொன்றுவிட்டார்களா? ஐயோ... நான் மட்டும் இப்படி அலங்கோலமாக வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன். சிதை மூட்டிங்கள். நான் அவருடன் சென்றுவிடுகிறேன்" என்று கதறி அழுதாள் அவள்.

அவளை ஒரு உலுக்கு உலுக்கினாள் வேலு நாச்சியார்.

"மங்கை.. உன் கணவன் உயிருடன் இருக்கிறான். மனம் வருந்தாதே" நாச்சியார்.

அதைக் கேட்டதும் அவள் முகத்தில் பிரகாசம் வந்தது‌.

"அவரை ஒருமுறை பார்க்க வேண்டும்" என்றாள் கெஞ்சுதலாக.

"ஒருமுறை பார்த்துவிட்டு உயிர் துறக்கப் போகிறாயா? உன் கணவன் கூறியது சரிதான். சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறான்" என்று நாச்சி கூறியதும், அவள் வேதனையுடன் பார்த்தாள்.

"என்னை விட்டு சென்றுவிட்டாரா?"

"இல்லை... உனக்காகக் காத்திருக்கிறான்" என்றதும் விளங்காமல் பார்த்தாள் மங்கை.

"உன்னை எனது பொறுப்பில் விட்டுச் சென்றிருக்கிறான் சிறிது காலம்" என்றதும் அழுதாள் அவள்.

"தவறாக என்ன‌ வேண்டாம்" என்று வேலு நாச்சி முடிப்பதற்குள், "என் வினாவிற்கு விடையில்லை அவரிடம். என் முகம் காண முடியாது குற்றவுணர்வில் தவிக்கிறார். விளக்கங்கள் தேவையில்லை ராணி" என்று கூறியவள், எழுந்து நின்றாள்.

"என்னை இழிநிலைக்குத் தள்ளியவனுக்கு அறுதியொன்று எழுதுவேன். அவனுடைய அழிவிற்கு என்னைக் கொண்டு முன்னுரை எழுதிவிட்டான். முடிவுரை நீங்கள் எழுதுங்கள். உங்களுக்கு உறுதுணையாக நிச்சயம் இருப்பேன். உயிரையும் தருவேன்" என்று மண்ணிற்குத் தன் உலர்ந்து போன இழல்களால் இதழொற்றல் வைத்தாள்.

வேலு நாச்சியாரும் குயிலியும் மகிழ்ந்தனர். இந்த மாற்றம் போதும்
அவளை முழுதாய் மாற்றி வேலனிடம் ஒப்படைக்க வேண்டும். அவன் மனதை இவள் ஒருத்தியால் மட்டுமே செப்பனிட முடியும் என்று நினைத்தனர்.

அதன் பிறகு குயிலியிடம் போர்ப் பயிற்சி பெற்றாள் மங்கை. வளரி எரிவது, வில் வித்தை இன்னும் பிற வித்தைகளிலும் கற்றுத் தேர்ந்தாள்.

வேலு நாச்சியாரே ஆச்சரியம் கொள்ளும் வகையில் இருந்தது அவளின் பயிற்சியும் தேர்ச்சியும். அவள் மனதின் அழுத்தங்கள் அனைத்தும் ஆற்றலாய் உரு பெருகிறது. அவள் நன்றாக மனம் தேறிவிட்டாள் என்று வேலு நாச்சியாருக்கு நன்கு விளங்கியது.

ஒருநாள் ராணியிடம் உரையாட வேண்டும் என்று வந்திருந்தாள் மங்கை. அவள் கணவனைத் தேடி செல்ல வேண்டும் என்று நினைக்கிறாள் என்றுதான் ராணி நினைத்திருந்தாள். ஆனால் அவள் வேண்டியதோ வேறொரு வரம்.

"சொல் மங்கை... உன் கணவனிடம் செல்கிறாயா? ஏற்பாடு செய்யவா?" என்று வினவ, வேண்டாம் என்று இடவலமாகத் தலையசைத்தாள்.

ராணி அவளைச் சிந்தனையுடன் பார்க்க, "எனக்கு உடையாள் காளிப் பிரிவில் சேர வேண்டும்" என்றாள் மங்கை.

"சேரலாம் மங்கை. உனக்குத் தளபதியாகும் தகுதியே இருக்கிறது. ஆனால் அதற்கு முன் உன் கணவனைச் சென்று பார்த்து வா."

"இல்லை. என் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு அனைந்துவிட்டதாக எண்ணிவிடாதீர்கள். அது இன்னும் இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. அனலை அனைக்கும் வழியறியாது திகைத்து நிற்கிறேன். எனக்கு மோட்சமளியுங்கள்" என்று அவள் வினவ, விக்கித்துப் போய் நிற்பது ராணியின் முறையாயிற்று.

எப்படித் தனது கணிப்புத் தவறிப் போனது என்று சிந்தனை மட்டுமே செய்ய முடிந்தது. மங்கை கேட்பதாய் இல்லை. பிடிவாதமாய் ராணியின் மனதைக் கரைத்து உடையாள் காளிப் படைப் பிரிவில் தளபதியாகச் சேர்ந்துவிட்டாள்.

அதன் பின் ஆங்கிலேயனின் வாரிசு இழப்புக் கொள்கை சட்டத்தின் கீழ் சீமையும் வந்தது. ஆண் வாரிசு இல்லாத சீமையினைக் கைப்பற்ற நாவாபுடன் கைக்கோர்த்தனர். முத்துவடுகத்தேவரை வஞ்சகத்தால் கொன்றனர். வேலு நாச்சியாரின் ஒரே மகள் வெள்ளச்சி நாச்சியாரை பாதுக்காத்து, திப்பு சுல்தானுடன் கைக்கோர்த்து நாட்டை மீட்பதற்கு எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. இடையில் எத்தனையோ முறை நாச்சியார் மங்கையிடம் கேட்டும், அவள் மறுத்துவிட்டாள். வேலனும் அவளைத் தேடி வரவில்லை. ஆங்கிலேயரின் அடக்குமுறையில் சீமை தத்தளித்தது. வேலு நாச்சியார் மறைந்திருந்து படைத் திரட்டும்படி ஆயிற்று. படைத் திரட்டி போர்த்திட்டங்கள் முடிவாயிற்று. அப்பொழுது மங்கை நாச்சியாரிடம் வந்தாள்.

"நான் என் கணவனைச் சென்று பார்த்து வருகிறேன்" என்று அவள் கூற, மகழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்.

"இன்னும் சில காலத்தில் கோட்டை நம் வசம் இருக்கும் ராணி. என் மகள் பிறக்கும் பொழுது சீமை சுதந்திர நாடாய் இருக்கும். அவளுக்கு வேலு நாச்சியார் என்றே பெயரிடப் போகிறேன். விரைவில் திரும்புவேன். போர் தேதி குறித்தவுடன் செய்தி அனுப்பிடுங்கள்" என்று கூறிவிட்டு சென்றாள்.

வேலனை சென்று சந்தித்திதாள். இருவருக்கும் சில கணங்கள் பேச்சு வரவில்லை. பூரண அமைதி நிலவியது. ஒன்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்பொழுது அழகோடு வீரமும் சேர்ந்து கொண்டதில், அவளின் தோற்றமே மாறியிருந்தது. அவனின் மனைவி மங்கையா என்று ஐயம் ஏற்பட்டது அவனுக்கு.

"வந்துவிட்டேன். நீங்கள் நினைத்படி. என் மேல் இறைத்திருந்த சேற்றைச் சுத்தம் செய்ய இத்தனை ஆண்டுகள் ஆயிற்று. என்னை ஏற்றுக் கொள்வீர்களா?" என்றாள்‌ கம்பீரமாக.

அபிநயம் பிடிக்கும் அலங்கார ராணியா இவள். இல்லை. அவள் இல்லை இவள். மறுபிறப்பு எடுத்து வந்திருக்கிறாள்.

அவனின் சிந்தனைகள் சென்ற திசையை நன்கு புரிந்து கொண்டாள் மங்கை.

"ஆம்.. நான் மறுபிறவிதான் எடுத்து வந்திருக்கிறேன். என்னை ஏற்றுக் கொள்வீரா?" என்று மங்கை மீண்டும் வினவ, வேலன் பதறித் தவித்துவிட்டான்.

"என்ன வார்த்தை உரைத்துவிட்டாய் மங்கை. உன்னை ஏற்றுக் கொள்ளும் தகுதி எனக்கிருக்கிறதா என்று வினவி என்னை உயிருடன் கொன்றுவிடாதே. என்னை மன்னிப்பாயா?" என்று அவன் வினவ, அவனிடம் தஞ்சம் புகுந்தாள் அவள். இப்பொழுதெல்லாம் பரதம் ஆடுவதில்லை. அவனும் நாடகத்தில் ஆடுவதை நிறுத்தியிருந்தான். கிடைக்கும் தொழிலைச் செய்து பிழைப்பை ஓட்டினான்.

"நாம் இருவரும் சேர்ந்து நாட்டியம் ஆட வேண்டும். சுதந்திரம் கிடைத்த பின்னர். அதற்கு ஒத்திகை பார்த்திடலாம்" என்றாள் மங்கை. அவளுக்கு நன்றாகத் தெரியும். நாடகமும் நாட்டியமும் வேலனின் உயிர் மூச்சு என்று. அதைத் துறந்து துறவு வாழ்க்கை வாழுகின்றான். அவளால் அவன் இழந்து அனைத்தும் இனி கிடைக்கப்‌ பெற வேண்டும் என்று எண்ணம்‌ கொண்டாள் மங்கை.

அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். அவர்கள் இல்லறத்தின் நல்லறமாக மங்கை கருவுற்றாள்.

போர் தேதி முடிவானது. மங்கை கருவுற்றிருப்பதால், போருக்கு வரக்கூடாது என்று வலியுறுத்திக் கூறிவிட்டார் ராணி.

ஆனால் மங்கை கேட்கவில்லை. களத்திற்கு வரவில்லை. ஆனால் தன்னுடைய படைப் பரிவிற்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று வந்துவிட்டாள்.

அதன் பிறகு அனைத்தும் துரிதமாக நடந்தேறியது. கோட்டை நாச்சியாரின் வசமானது. அதை நளனும் அனிச்சமும் நன்கு அறிவார்களே. அனைத்து கதையையும் கூறி முடித்திருந்தாள் வேலு நாச்சியார்.

அங்குப் பொருளற்ற அமைதி ஒன்று நிலவியது. அனிச்சத்தின் விழிகளில் நீர் கோர்த்திருந்தது.

அவளைச் சமாதானம் செய்யச் சில மணித்தியாளங்கள் பிடித்தது.

"அனிச்சம்... மங்கையின் மறைவின் பின்புலம் அறிந்துவிட்டாயா? வேலன் ஏன் அவளைக் கொன்றான் என்ற காரணம் அறிந்து கொண்டாயா" என்று ராணி வினவ, அனிச்சம் திடுக்கிட்டாள். நளனும் ஆச்சரியம் பொங்க பார்த்தான்.

"எனக்கு எப்படித் தெரியும் என்று எண்ண வேண்டாம். மங்கை இறந்த அன்று அவளை மட்டுமே நினைத்து அழுதாய். வேலனின் பிணத்தைக் காணும் பொழுது உன் விழிகளில் மெல்லிய வெறுப்புப் படர்ந்திருந்தது" என்று ராணி கூற, இருவரும் திகைத்தனர்.

"உங்களை எங்க உலகத்துக்குக் கூட்டிட்டுப் போகலாம்னு தோணுது" என்று நளன் கூற, "என்னால் இங்கு ஆக வேண்டிய காரியங்களும், நான் ஆற்ற வேண்டிய காரியங்களும் நிறைய இருக்கிறது" என்று ராணி சிரித்துக் கொண்டே உரையாடினார்.

இருவரும் ராணியிடம் இருந்து விடைப் பெற்றனர்.

"நீங்கள் இருவரும் எப்பொழுது உங்கள் உலகம் திரும்பி செல்வீர்கள் என்று தெரியவில்லை. அதனால் இங்கு இருக்கும் வரை உங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய நான் கடமை பட்டிருக்கிறேன். மங்கையின் மகளாய் இந்த உலகத்தில் புறக்கணிக்கப்பட்ட உயிர் வேறு உலகத்தில் ஜனித்து வாழ்வதே பெரும் பாக்கியம். அதிலும் குற்றவுணர்வில் தவித்த எனக்கு உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. நீ பல்லாண்டு வாழ வேண்டும். என்ன வேண்டும் உங்கள் இருவருக்கும்" என்று ராணி வினவ, "விவசாயம் பயில வேண்டும்" என்று ஒன்றாகக் கூறினர் இருவரும்.

"எங்கள் பூமிக்கு சென்ற பின்னர் ஒரு பயிரையேனும் விளைய வைத்துவிட வேண்டும். முடிந்தால் காடுகள் செய்ய வேண்டும்" என்று விளக்கம் அளித்தான் நளன்.

"காடுகள் செய்ய வேண்டும். பொருளற்ற வாக்கியம். ஆனால் உண்மையில் காடுகள் செய்வதும், மரங்கள் சமைப்பதும் மனிதனின் தலையாயப் பணியாய் இருக்கப் போவதை நினைத்து மனம் வேதனையுறுகிறது. மனித இனம் எந்த இலக்கை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது" நாச்சியார்.

"உண்மைதான். இந்த உலகத்திற்கு வந்ததும், இதன் செழுமையில் சற்றே திணறிப் போய்விட்டோம்" நளன்.

வீடு செல்லும் வழியெல்லாம் அனிச்சத்தின் சிந்தனை கவனத்தில் இல்லை. வேலனின் செயலுக்குப் பின் இப்படி ஒரு கொடூரமான காரணம் இருக்கிறதா? என்று தீவிர சிந்தனை அவளுள்.


"அனி, என்ன ஆச்சு? மங்கையம்மா ஞாபகமா?"

"வேலனோட ஞாபகமும் சேர்த்து."

"ம்ம்ம் நான் சொன்னது உண்மை. வேலன் அப்படி ஒரு காரியம் செய்ய வலுவான காரணம் வேணும்னு சொன்னேனே. நினைவிருக்கா?"

"நல்லாவே‌ இருக்கு. இப்படியெல்லாம் கஷ்டங்கள் இருக்கா நளன். நம்ம உலகம் மட்டுமே கொடூரமாகக் காட்சியளிக்கிறது. ஆனால் அந்த உலகத்தில் வாழ்வதைத் தவிற வேறு சவால்கள் இல்லை. ஆனால் இங்கு வாழ்வதே சவாலாய் இருக்கிறதே" என்று வருத்தப்பட்டாள்.

"விடு அனி... ஒவ்வொரு விஷயத்துக்குப் பின்னாடியும் நமக்குத் தெரியாத ஒரு கோணம் இருக்கும். பல நாள் அதை நாம் புரிந்து கொள்வது கிடையாது. ஆனால் ஒரு விஷயம் நல்லாப் புரியிது. மங்கை, வேலன் ரெண்டு பேரையும் பார்க்கும் போது காதலோட அர்த்தம் விளங்குது" என்று நளன்‌ கூற, அதை ஆமோதித்தாள் அனிச்சம்.

சற்றுத் தெளிந்திருந்த மனம் மீண்டும் முருங்கை மரம் ஏறிற்று. அனிச்சம் அவளுக்குள் உழன்றாள். மீண்டும் ஒரு போராட்டமா என்றிருந்தது நளனுக்கு.

அவனும் அவளை உற்சாகப்படுத்த என்னவெல்லாமோ செய்துவிட்டான். ஒன்றும் பலனளிக்கவில்லை. மறுநாளில் இருந்து அவர்களுக்கு விவசாயம் பயிற்றுவிக்கப்பட்டது. வளரி எரிதலும் வில் வித்தையும் கூடப் பயின்றனர். சில நாட்கள் அரண்மனையில் தங்கினர். மங்கை வாழ்ந்த இடம்‌ ஆதலால், கொஞ்சம் உற்சாகமாக இருந்தாள் அனிச்சம்.

நிலா முற்றத்தில் இருவரும் அமர்ந்து வானைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மங்கையும் வேலனும் ஒரு நட்சத்திரமாய் மாறியிருக்க வேண்டும். இரு நட்சத்திரங்கள் மிணுக்கிக் கொண்டிருந்தது. இவர்கள் இருவரையும் பார்த்து நகைப்பது போல் தோன்றியது இருவருக்கும்.

"அனி... இப்போ சந்தோஷமா இருக்கியா?"

"தெரியல" என்றவளை திருப்பி, "எப்போ எனக்காக வாழப் போற" என்றான்.

"நிம்மதியா இருக்கேன். நிம்மதியா இருக்கதும் சந்தோஷமா இருக்கதும் ஒன்னுனா நான் சந்தோசமா இருக்கேன்" என்றாள்.

நளனின் உதடுகள் மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தது.

ஆம் அவள் நிம்மதியாக உணர்ந்தாள் இப்பொழுது. அதுதானே முற்றிலுமாக இல்லாமல் இருந்தது. மனதின் உவகை வேறு. அமைதி வேறு. அவள் மனம் வேண்டியது உவகை அல்ல. அமைதி. அந்த அமைதி இப்பொழுது குடிபுகுந்திருந்தது.

"நீ சந்தோஷமா இருக்கியா?" என்றாள் அனிச்சம்.

"இல்லை" என்றான் அவன். சிந்தனையாகப் பார்த்தவளின் நெற்றியில் முட்டினான்‌.

"நிம்மதியா இருக்க நீ சந்தோஷமா இருந்தா நானும் சந்தோஷமா இருப்பேன்."

"ஆற்றங்கரைக்குப் போகலாமா?"

"ஓ... அங்க போனா‌ சந்தோஷமா இருப்பியா என்ன?"

"ம்ம்ம்... வாய்ப்பிருக்கு. எனக்குச் சில்லினு உள்ள தண்ணீல கால் நனைக்கணும் போல இருக்கு."

இரவரும் அற்றங்கரையில் பௌர்ணமி நிலவில் அமர்ந்திருந்தனர். நிலவின் ஒளியில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் ஓடியது ஆற்று வெள்ளம்.

இரவின் தனிமையில், அன்பினைத் திரளாய்த் தொடுத்து மாலை மாற்றிக் கொண்டனர் இருவரும். நீரின் குளுமையில் இனிமைப்‌ படர்ந்தது இருவருக்கும். படித்துறையின் அருகில் இருந்த கொன்றை மரத்தில் இருந்து பூக்கள் உதிர்ந்திருந்தது. இரவில் ஜொலித்து வெளிச்சம் பரப்பியது மலர்கள்.

அனிச்சம் தலையில் சூடியிருந்த முல்லையின் மனம் நளனை வேறு உலகத்திற்கு இட்டுச் சென்றது. அவளின் கழுத்து வளைவில் அவன்‌ முகம் புதைத்திட, அவள் சிலிர்த்தெழுந்தாள். கூதிரின் ஊதை ஊசியாய் உடலைத் துளைத்தது. வெட்கம் தாளாமல் விலக நினைத்தவளின் செய்கையோ வேறு விதமாக இருந்தது. குளிரில் நடுக்கம்‌ ஏற்படாமல் இருக்க மீண்டும் அவனுக்குள்ளே புதைந்தாள் அனிச்சம். நிசப்தமாய்‌ ஒரு நேசம். அதில் மூச்சுக் காற்று ஒன்றாய் இணைந்து இசைந்தது.

புதியதொரு உலகத்தில் புதிய மனிதர்களுடன் புதிதாய் ஒரு சகாப்தம் படைத்தனர் இருவரும்.

ஆற்றங்கரை
நீர் ஓட்டம்
இரவின்‌ குளுமை
தவித்த தனிமை
அழைத்த இனிமை
அழகாய் நீ
ஏங்கும் நான்

நிலவு ஒழுகும்...
 
Last edited:
ஒழுகும் நிலவு 20

புடவி

மூங்கல் காடு
முகிழா மலர்கள்
வலித்த கால்கள்
களைத்த திரேகம்
துடித்த இதயம்
சீரில்லா சுவாசம்
தனாயாய் நான்
துணையாய் நெருப்பு!!!

அமரா கொடியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள். கோகிலம் வீட்டிற்குக் கிளம்ப, அவரின் பார்வை முழுக்க முழுக்க அவர் கணவனின் மேல்தான் இருந்தது. அவரின் இந்த அமைதிக்குப் பின் நிகழப்போகும் பூகம்பம் அவர் மட்டுமே அறிவார்.

கொடியை வீட்டிற்கு அழைத்துச் சென்று அமர வைத்தாள் அமரா. இருவரும் வெகு தூரம் நடந்து வந்ததால் சற்றே இறைத்தது. அமராவும் நிறைமாதமாதலால் சற்றுநேரம் இருவருமே அமர்ந்தனர். சிறிது நேர அமைதி. இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. கொடியின் குழந்தை சிணுங்க ஆரம்பித்தது. அது மற்ற இருவரையும் நினைவுலகுக்குக் கொணர்ந்தது.

கொடி சுற்றி சுற்றி பார்த்தாள்.

"குழந்தைக்குப் பால் கொடுக்கனுமா" அமரா.

ஆம் என்று தலையசைத்தாள் கொடி.

"என்னோட வாங்க" என்று கொடியை அழைத்துக் கொண்டு அவளது அறைக்குச் சென்றாள். அங்கு அவளை அமர வைத்து பால் கொடுக்குமாறு கூறிவிட்டு, அமரா வெளியில் வந்தாள் அடுக்களைக்குச் சென்று சுடச்சுட பனங்கல்கண்டு பால் எடுத்து வந்தாள் கொடிக்கு.

கொடி குழந்தையைத் தோளில் போட்டு தூங்க வைத்தாள். குழந்தை தூங்கியது. கீழே ஒரு விரிப்பை விரித்து அதில் குழந்தையை வாங்கிப் போட்டாள் அமரா.

சிறிது நேரத்தில் செழியனும் வந்திருந்தான். அமரா அவனைக் கொடி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் வந்தாள். கொடி கண்களை மூடி சுவரில் சாய்ந்து இருந்தாள். அவளது முகம் முழுக்க அயர்ச்சி. வாழ்க்கையோடு போராடியதற்கான சாயல் அது. இதுவரை வெளியில் தெரிந்ததில்லை. ஆனால் இந்த ஒருநாள் போராட்டத்தில் அனைத்தும் வெளி வந்துவிட்டது போல‌. ஆனால் ஒர் ஓரமாகத் தெளிவும் பிறந்திருந்தது.

"கொடி" என்று அமரா அழைக்க, செழியனை கண்ட கொடி எழுந்து வெளியில் செல்ல முனைந்தாள்.

"கொடி, இரு அவசரப்படாதே உட்காரு. உங்கூடதான் பேசணும்" செழியன்.

அவள் பதிலேதும் கூறவில்லை. அமைதியாக அமர்ந்தாள்.

"ஏன் எங்க கிட்ட சொல்லல" என்று கேட்டான் செழியன். எதை என்று அவளும் வினவவில்லை. எதை என்று அவனும் சொல்லவில்லை. பொதுப்படையான வினாதான். ஆனால் கொடிக்கு அவன் எதைக் கேட்கிறான் என்று நன்றாகவே விளங்கியது.

"முன்னாடியே சொல்லி என்ன ஆகப் போகுது. உங்களால் என்ன செஞ்சிருக்க முடியும். இல்லை இப்ப தான் உங்களால் என்ன செய்ய முடியும்" என்றள் விரக்தியுடன்.

"எனக்குத் தெரியல கொடி. ஆனா நீ இப்படிக் கஷ்டப்படுறதுக்கு நானும் ஒரு காரணம். அதுக்காக நீ என்கிட்ட என்ன உதவி கேட்டாலும் நான் செய்றேன்" என்றான்.

அவள் பதில் ஏதும் கூறாமல் சுவரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியும் இனி இங்கு என்ன நிகழப்போகிறது என்று. நேற்று வாழவேண்டும் என்று தப்பிச் சென்ற பெண்ணைப் பிடித்து வந்து எரித்துவிட்டனர். அதேபோல் இவளுக்கும் நிகழாது என்று என்ன நிச்சயம். இன்று எழுச்சியுடன் பேசிவிட்டாள். ஆனால் அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் அவள் தப்பிச் செல்ல இயலுமா என்ன? மனோபலம் வந்துவிட்டது. ஆனால் 10 பேரை எதிர்க்கும் உடல் பலம் அவளிடம் இருக்கிறதா? ஐயமின்றி இல்லை என்று திட்டவட்டமாகவே உரைக்க முடியும்.

எப்படியும் சாகப் போவது உறுதி. அதற்கு முன் அவள் மனதில் இருந்ததைக் கொட்டிவிட்டாள். நிம்மதியாக நித்திரைக் கொள்ளலாம் என்று இப்பொழுது தோன்றியது. பேசும் பொழுது என்ன தோன்றியது, எப்படிப் பேசினாள் என்று கேட்டால் அவளிடம் பதிலில்லை.

"அமரா.... எனக்கு ஒரு உதவி செய்யணும். செய்வீங்களா?" கொடி

"நிச்சயம்..."

"எனக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னோட பிள்ளையை வளர்க்க முடியுமா.." என்றதும் சிறிது நேர அமைதி. ஒரு திடுக்கிடலுடன் கொடியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அமரா.

அதைத் தவறாகப் புரிந்து கொண்ட கொடி மேலும் தொடர்ந்தாள்.

"நீங்க ராசா வீட்டுப் பிள்ளையாய் வளர்க்க வேண்டாம். இந்த ஊர்லே உங்க ரெண்டு பேரைத் தவிற வேற யார் மேலையும் எனக்கு நம்பிக்கை இல்லை. அதுதான் உங்ககிட்ட கேக்குறேன். உங்க பார்வையில் வளர்ந்தா போதும்" என்று அவள் விளக்கம் அளிக்க, அமராவும் செழியனும் பதறி விட்டனர்.

"கொடி, என்னைக் குற்றவுணர்வில் தள்ளாத... உனக்கு எதுவும் ஆகாது. ஆகவும் விடமாட்டேன்" செழியன்.

"ஆமா... உங்க பிள்ளையை நீங்கதான் வளர்க்கணும்" அமரா.

"எத்தனை நாள் செழியன். எந்தக் காரணத்துக்காக நீங்க என்னை வேண்டாம்னு முடிவு செஞ்சீங்களோ, அதே காரணம் இப்போ திரும்பி வந்திருக்கு" என்று கொடி கூற, மற்ற இருவரும் அமைதியாய் இருந்தனர்.

செழியனின் விழிகளில் வலி விரவியிருந்தது.

"கொடி, எனக்கு இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. ஆனா நிச்சயம் உன்னைச் சாக விடமாட்டேன், நான் உயிரோட இருக்கும் வரை" என்று கூறிவிட்டு எழுந்து கொண்டான். கடைசி வாக்கியம் அமராவையும் அச்சுருத்தியது. அவள் முகத்தில் தோன்றிய வலியை கொடி நன்கு உணர்ந்து கொண்டாள்.

"பஞ்சாயத்தில என்ன ஆச்சு?" அமரா.

"ரெண்டு பிரிவா சண்டை போட ஆரம்பிச்சுட்டாங்க. கொஞ்ச நாள் இதைச் சமாளிச்சுதான் ஆகணும்" என்று கூறியவன் அதற்கு மேல் நிற்காமல் சென்றுவிட்டான்.

அன்று இரவு தேவர் பிள்ளை வீட்டிற்கு வரவில்லை. அவர் நிச்சயம் ஏதேனும் திட்டம் தீட்டக் கூடும் என்று நினைத்திருந்தான்.

இரவு உணவை எடுத்துக் கொடுத்து, கொடிக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்தாள் அமரா.

அவளை விசித்திரமாகப் பார்த்திருந்தாள் கொடி. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்றுதான்.

"கொடி நீங்க படுத்துக் தூங்குங்க. ஏதாவது வேணும்னா கேளுங்க. நான் இங்கதான் படுக்கப் போறேன்" என்றவளை விசித்திரமாகப் பார்த்தாள் கொடி.

"ஏன் இப்படிக் கஷ்டப்படுறீங்க? எத்தனை நாள் படுக்க முடியும்?"

"கஷ்டம் இல்லை கொடி. இஷ்டப்பட்டுதான் செய்றேன். இந்தப் பிரச்சினைக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும் வரை இங்கதான்" என்று அவள் கூற, "உங்களைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கு. நியாயமா உங்களுக்குதான் என்னைப் பிடிக்கக் கூடாது" என்றாள் கொடி.


"மனுஷனோட வாழ்நாள் குறைவுதான் கொடி. அதுவும் நமக்கு விதிக்கப்பட்ட விதி முடியிறதுக்கு முன்னாடியே சதி வந்து நம்ம உயிரைப் பரிச்சிட்டு போகுது. இதுல இந்தப் போட்டி பொறாமையை வச்சிக்கிட்டு என்ன செய்யப்போறோம்."

"உங்களைப் பார்த்தா எனக்குக் கொஞ்சம் பொறாமை வருது" என்றுதும் விரிப்பு விரித்துக் கொண்டிருந்த அமரா நிமிர்ந்து பார்த்தாள்.

"செழியனைத் தவறவிட்ட பொறாமையா?" என்றதும் இதழின் இடுக்கில் இணுக்களவு தோன்றியது புன்னகை.

"இல்லை... நிச்சயமா இல்லை. உங்க அளவுக்கு அவரை யாரும் விரும்ப முடியாது" என்றாள் கொடி.

"எப்படிச் சொல்றீங்க?"

"இங்க புருஷன் செத்தா பொண்டாட்டி சாக வேண்டாம்னு பெரிய போராட்டமே நடக்குது. இங்க இருக்கவுங்க எல்லாம் ஒரு கட்டாயத்தில் சாக நினைக்கலாம். ஆனால் செழியனுக்கு ஏதாவதுன்னா நீங்க இந்த உலகத்தை வெறுப்பீங்களோன்னு தோணுது" என்று கொடி கூறவும், அவள் சிரித்துக் கொண்டாள்.

"செழியனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதில் மாற்றம் இல்லைதான். ஆனால் அவர் இல்லைனா நிச்சயம் சாகணும்னு நினைக்க மாட்டேன். அவரும் அதை விரும்ப மாட்டாரு. அவர் வாழ ஆசைப்பட்ட உலகத்தை உருவாக்க முயற்சி செய்வேன். அதில் வாழ்ந்து பார்த்துட்டுதான் போக நினைப்பேன்" என்றாள்.

"நீங்க இந்த நூற்றாண்டில் பிறக்க வேண்டிய பெண்ணே இல்லை" கொடி.

"நீங்களும்தான்... படபடன்னு காலைல நீங்க கேட்ட கேள்வில நான் அசந்து போயிட்டேன். எனக்கு இவ்ளோ தைரியம் இருக்கான்னு தெரியல" அமரா.

"பெண்ணா பிறந்தது ஒரு சாபம் போல."

"அப்படிலாம் இல்லை. நாம அதை வரமா மாத்திக்கலை" என்று வயிற்றில் இருக்கும் பிள்ளையைத் தடவிக் கொடுத்தாள்.

"உங்களையும் செழியனையும் பார்க்க அழகா இருக்கு. சுத்திப் போடுங்க" என்றாள் கொடி. சிரித்துக் கொண்டாள் அமரா.

அதிகம் பேசவில்லைதான்.
அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு நட்பு உருவாகியது.

செழியின் அடுத்தக் கட்டமாக என்ன செய்வது என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

பஞ்சாயத்தில் பெண்கள் அனைவரையும் தூண்டிவிட்டு வந்திருந்தான். அவன் கூறிய வார்த்தைகளை மீண்டும் அசைப் போட்டுப் பார்த்தான்.

"உங்க எல்லாரையும் காப்பாத்த யாராவது வருணும்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? அப்படி வந்தாலும் ஆண் இனத்தில் இருந்துதான் வரணுமா?" என்று வினா எழுப்ப, அந்த இடமே அமைதியாக இருந்தது சில நிமிடங்கள்.

ஆண்கள்‌ அனைவரும் துள்ளிக் குதித்தனர். கூட்டத்தைக் கலைக்குமாறு. அவர்களுக்குப் பயம். பெண்களைத் தூண்டிவிட்டு அமைதியைக் கெடுத்துவிடுவானோ செழியன் என்று.

"யாராவது பேசுனா அப்பறம் என்ன நடக்கும்ணே தெரியாது. ராத்திரியோட ராத்திரியா இந்த ஊர் மொத்தமும் கொளுத்திடுவேன்" என்று கூறினான். அனைவரும் தேவர் பிள்ளையைப் பார்த்தனர்.

"எல்லாத்தையும் ஒரு நாள்ல உன்னோட பேச்சால மாத்திடலாம்னு நினைக்காத செழியா. அது முடியாது." என்று அவர் கூற, "ஒரு நாள்ல மாத்த முடியாது. ஆனா கொஞ்சம் கொஞ்சமா மாத்துவேன்" என்றான் செழியன் அழுத்தமாக.

அங்கிருந்த பெண்களின் மனதில் சிறிது மாற்றத்தை‌ அவன் விதைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் அதை வளர விடக்கூடாது என்று நினைத்தார் தேவர் பிள்ளை.

"கொடிக்கு நாளைக்குச் சடங்கு நடக்கும். முடிஞ்சா தடுத்துப் பாரு" என்று சவால் விட்டார் தேவர் பிள்ளை. அந்தக் குரலில் அங்கிருந்த பெண்கள் அனைவருக்கும் ஈரக்குலை நடுங்கியது என்னவோ உண்மைதான். கொஞ்சம் துளிர்த்திருந்த நம்பிக்கை வெதும்பிப் போனது.

"பாக்கலாம்... நீங்களா? இல்லை நானானு..." என்று உரைத்தவன், அங்கிருந்தவர்களைத் திரும்பிப் பார்த்து, "எப்பவும் உங்களைக் காப்பாத்த யாராவது வர மாட்டாங்க. நீங்க ஒன்னு சேரணும். நம்மள நாமதான் காப்பத்திக்கணும். என்னால தனியா இதைச் செய்ய முடியாது" என்று கூறிச் சென்றவனைப் பல விழிகள் ஏக்கத்துடன் பார்த்திருந்தது.

அவனுக்கு என்ன வந்தது. ராஜா வீட்டு பிள்ளையாய் சொகுசாக வாழ்ந்துவிட்டுப் போகாமல், இப்படி அவர்களுக்காகப் போராட வேண்டும் என்ற தலையெழுத்தா என்ன? இது பலரின் மனதில் சிந்தனையாய் வலம் வந்தது. உண்மையில் செழியன் ராஜாவாக வந்தால், அந்த ஊர் செழிப்படையும். இப்பொழுது மூளிகள் ஊரில் இல்லாமல் இருப்பதால் செழுமையின் சின்னமாக இருக்கிறது என்ற பேருரு கொண்ட பொய்யின் பின் உண்மை மறைந்து மக்கிப் போய்க் கிடக்கின்றது. மங்கலத்தின் மருவுரு பெண்கள், மகாலட்சுமி பெண்கள் என்று புனிதமும் பெருமையும் புகுத்தி, சதைப் பிண்டமாய் நடத்தப்படுகின்றனர்.

அதன்பிறகு அங்கிருந்த ஆண்களின் அதிகாரத் தோரணையில் கூட்டம் கலைந்தது. அவர்கள் மூளை அல்ல. முடக்கியிருந்த சிந்தனைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தது செழியனால்.

அவன் மனதிலும் கொஞ்சம் பயம் இருந்தது. அதனால் பஞ்சாயத்தில் என்ன நிகழ்ந்தென்று முழுவதுமாக உரைக்கவில்லை அமராவிடம். அதனால் அமராவை கொடியுடன் உறங்க வைத்துவிட்டு, வெளியில் காவலுக்கு இருந்தான். தேவர் பிள்ளையின் சவால் உயிருடன் உலா வரும் பொழுது, அவன் நிம்மதியாய் இருக்க முடியாதே.

அவரைக் கொல்லும் அளவு அவனுக்கு ஆத்திரம் இருந்தது. ஆனால் அவன் கொன்றுவிட்டால் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடுமா என்ன? அவருக்குப் பின் ஒரு பெரிய கூட்டம் இருக்கிறதே. அதை எதிர்க்க இவனுக்கு ஒரு கூட்டம் வேண்டுமே. அதற்குதான் பெண்களைத் தூண்டிவிட்டு வந்தது. அவர்களின் முகத்தில் சிந்தனை ரேகைப் படியவும் அவனுக்கு நிம்மதி. இந்த ஒரு நிகழ்வால், தீர்வு கண்டு விட முடியாதுதான். இழப்புகள் இருக்காது என்றும் கூற முடியாது. ஆனால் இழப்புகள் இரண்டு பக்கமும் இருக்கட்டும். அப்பொழுது தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

கோகிலம் செழியனின் அருகில் வந்து அமர்ந்தார். அவர் எப்பொழுது வேண்டுமானாலும் வெடித்து அழத் தயாராய் இருந்தார். இந்தப் போராட்டத்தில் தன் மகனை இழுந்து விடுவாரோ‌ என்ற பயம்தான்.

அது அவனுக்கு நன்றாகவே விளங்கியது. அவரின் மடியில் படுத்துக் கொண்டான்.

"அம்மா.... உங்களோட வலி எனக்குப் புரியிது. ஆனா இந்த மாற்றமெல்லாம் இங்க நடக்கணும். அப்பாவுக்குப் பிறகு பாத்துக்கலாம்னு இருக்க முடியாது. அதுவரை நடக்குற அநியாயங்களை நான் வேடிக்கை பார்த்துட்டு, நாளைக்கு எப்படித் தட்டிக் கேக்க முடியும். நீங்க கவலைப் படாதீங்க. நான் மட்டும் நல்லா வாழ்ந்தா போதுமா? என்னோட சந்தோஷம் இந்த ஊர் நல்லா இருக்கதுலதான் இருக்கு. அமரா என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டா. நீ செத்தா நானும் சாகணுமானு. வேண்டாம் மா... எனக்குத் தலையில் ஆணி வச்சு அடிச்ச மாதிரி இருந்துச்சு. அதான் என்ன ஆனாலும் உடனே ஒரு முடிவு வரணும்னு முடிவு பண்ணிட்டேன். ஆண் வர்கத்தைச் சேர்ந்ததாலே எனக்கு இது ஒரு பெரிய பிரச்சினையா தெரியல போல. அது எவ்வளவு பெரிய தப்பு" என்று கோகிலத்தின் மனதில் உதித்த கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறினான்.

அவர் அமைதியாகவே இருந்தார்.

"அம்மா.... நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கணும். நான் இல்லைனாலும்" என்று அவன் கூற, பதறி விட்டார்.

"வளர்த்த புள்ளையைக் காலனுக்குக் காவு கொடுத்துட்டு இருக்கேன். இனி நீயும் என்னை விட்டுப் போனா நான் உயிரோட இருந்து என்ன பயன். என்னையும் கூட்டிட்டு போயிடு" என்று அவர் அழ, "அம்மா.. நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன். இனி இந்த ஊர்ல நீ இல்லாம நான் மட்டும் வாழ்ந்து என்ன செய்யப் போறேங்கிற பேச்சே இருக்கக் கூடாது. இந்த அதிகாரம், ஆணவம், பாழாய்ப் போன பழக்கம் எல்லாம் என் தலைமுறையோடு போகட்டும். என் பிள்ளை இந்த மாதிரி சூழலில் வளர கூடாது" என்றான் அவன்.

மகனின் மனம் நன்றாகவே புரிந்தது. ஆனால் பெற்ற மனமாயிற்றே. அவன் பிள்ளைக்கு நல்ல சமூகம் வேண்டுமென்று அவன் நினைக்கிறான். அதற்குப் போராடுகிறான். ஆனால் தன் பிள்ளைக்கு அப்படி ஒரு சமூகம் கிடைக்காமல் போய்விட்டதே. அவனைப் போல் ஒரு தந்தை அவனுக்குக் கொடுத்து வைக்கவில்லை. அமராவைப் போல் தாயும் இல்லையே. மாற்றம் என்பது எப்பொழுதும் ஆண் இனத்திடமே தொடங்க வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இல்லையேல் பெண்களால் ஏற்படும் மாற்றத்திற்குப் புரட்சி என்று பெயரிட்டு அழைத்திருக்க வேண்டாம். முன்னது சமூக மாற்றம். அவ்வளவே. பின்னது சமூகப் புரட்சி. கோகிலம் தலைமுடி கோதினார் தன் மகனுக்கு. அதில் அவன் நன்றாக உறங்கினான்.

அவரின் மனக்கதவுகளும் திறந்துவிட்டது. கொஞ்சமே விசாலமான சிந்தனைகள் உள் நுழையட்டும் அங்குள்ள பெண்களின் மனதில்.

அறைக்குள் கொடியும் அமராவும் உறங்கிக் கொண்டிருந்தனர். நிசப்தம் நிறைந்திருந்த அறையில், நிம்மதி மூச்சுக் காற்றுக் கலந்திருந்தது. வெகு காலம் கழித்து நிம்மதியாக உறங்குகிறாள்.

திடீரென வீட்டிற்குள் சில ஆட்கள் புகுந்தனர். தூக்கத்தில் இருந்து விழித்த செழியனுக்கு ஒன்றும் புரியவில்லை. கொடியின் அறைக் கதவு உடைக்கப்பட்டது‌. செழியனின் தலையில் அடித்துக் காயம் ஏற்படுத்தினர். கொடி தப்பி ஓட முயற்சி செய்தாள். அமரா குழந்தையைப் பாதுக்காக்க வேண்டியதாயிற்று. இல்லையென்றாலும் அவளால் என்ன செய்துவிட முடியும் நிறைமாத கருவை சுமந்து கொண்டு.

கோகிலமும் தாக்கப்பட்டிருந்தார். கொடியைத் துரத்திப் பிடிக்க முயற்சித்தனர். செழியின் தலையில் அடிப்பட்டதைப் பொருட்படுத்தாமல் எழுந்து ஓடினான்.

கொஞ்சம் விடியும் வேளை‌. இருளை தின்னத் தொடிங்கியிருந்தது பகல். கொடியின் கால்கள் வேகமாக ஓடியது. மூச்சிறைக்க ஓடிவிட்டாள். பிழைக்க முடியாது என்று தெரிந்திருந்தும் எப்படியாவது தப்பிப் பிழைத்தால் நன்றாக இருக்கும் என்ற மனதின் தீரா ஆசையால் ஓடிக்கொண்டிருந்தாள். அவளின் ஓட்டத்திற்கும் முடிவு வந்தது. அரசி இறந்த மரத்திடம் அடைக்கலம் வேண்டி நின்றிருந்தாள். கொஞ்சம் மூச்சை உள்ளே இழுத்தால்தான் இனி அடுத்த அடி எடுத்து வைக்க முடியும் என்று தோன்றியதால் நிறுத்தப்பட்ட ஓட்டம். ஆனால் அதுவே அவளுக்கு இறுதி முடிவும் எழுதியது. அவளைச்‌ சுற்றி வளைத்தனர்.

மரத்தில் பிடித்துக் கட்டி வைத்தனர். அவள் மேல் மண்ணெண்ணெய் ஊற்றப் பட்டது. காப்பாற்ற வந்த செழியனை பிடித்தனர். அவன் திமிறினான்.

"இது மட்டும் நடந்தா இந்த ஊரையே மொத்தமா கொளுத்திருவேன்‌" என்று கத்தியவனை‌ சட்டை செய்ய அங்கு யாருமில்லை.

************

அனிச்சத்தைக் காண வேலு நாச்சியார் அவளின்‌ பகுதிக்கு வர, அது வெறிச்சோடி இருந்தது.

அவருக்குப் புரிந்துவிட்டது. அவர்கள் இருவரும் அவர்களது உலகிற்குச் சென்றுவிட்டனர் என்று. அனிச்சத்துடன் சில காலம் இருந்தது அவருக்கு இதமாக இருந்தது. மங்கையின் இழப்பை கொஞ்சம் ஈடு செய்திருக்க வேண்டும்.

ஆம்.. அவர் நினைத்தது போல் நளனும் அனிச்சமும் வேறு ஒரு உலகத்திற்குப் பயணத்தைத் தொடர்ந்தனர். மீண்டும் ஒரு பயணம்.

ஏகாந்தமாய்த் தங்கள் பொழுதினை ஆற்றங்கரையில் கழித்துக் கொண்டிருக்க, திடீரென ஏதோ ஒரு மின்னல் வெட்டு அவர்கள் இருவரையும் தாக்கியது. அதன் பின் ஒரு உந்து சக்தி புயலின் மையத்திற்கு அவர்கள் இருவரையும் இழுக்க, அதன் வேகத்தில் அவர்களும் சுழன்றார்கள். ஒளியின் வேகத்தை விடப் பலமடங்கு வேகத்தில் பயணித்தது. அவளும் நளனும் அதே வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர். பொழிலின் மரம், மாடு, மலை, மடு என்று காற்றாய் இருவரும் ஒரு சுற்று சுற்றினர். பின் ஏவுகணைப் போல் வெகு தூரம் பயணம் செய்தனர். சூரிய குடும்பத்தையும்‌ கடந்த பயணம். அண்டத்தின் எல்லையை அடைந்தாயிற்று.

பொழிலுக்கும் அவர்களுக்கும் உண்டான மாய உறவு அறுந்து விழுந்தது. கருங்குழிக்குள் காற்றாய் இருவரும் பயணித்தனர். வேகம். வேகம். வேகம். முன்பொருமுறை அவர்கள் உணர்ந்த அதே வேகம். ஆழ்துளைக்குள் அதிர்வில்லாமல் ஒரு பயணம். எடையிழந்து ஒளியாய் ஒரு பயணம். புத்துணர்வை புத்தியல்பாய் உள்ளே புகட்டி, உருட்டி பிரட்டியது அந்தப் பயணம். மற்றொரு இணைப் பிரபஞ்சத்தின் வாயிலின் அருகே கொண்டு சென்றது. பனுவலுக்கு(நூல்) நூன்முகம் திறவுகோலாய் இருப்பது போல் மற்றொரு அண்டத்தின் நுழைவாயிலுக்கு வந்தனர் கடவுச்சொல்லின்றி. நெறுக்கி, குறுக்கி, இறுக்கியிருந்த அலைக்கற்றைகள் சற்றே தளர்ந்தது போல் இருந்தது. பால்வெளி அண்டத்தின் மற்றொரு சூரிய குடும்பம். மற்றொரு அண்டத்தின் மற்றொரு சூரிய குடும்பத்திற்கு வந்து சேர்ந்தனர். கீழே தூக்கி எரியப்பட்டனர் புடவியின் தரையில்.

தங்களின் உலகத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம்‌ என்றுதான் நினைத்திருந்தனர். ஆனால் புடவியில் நடந்தேறப் போகும் சம்பவமே அவர்களை இங்கு அழைத்து வந்தது.

பொழுது நன்றாகப் புளர்ந்திருந்தது. தலையில் வழிந்த உதிரத்துடன் கொடியைப் பார்த்துக் கதறிக் கொண்டிருந்த செழியனைக் கண்டு இருவரும் அதிர்ந்தனர். அமராவும் அங்கு ஓடி வந்திருந்தாள். அங்கு அடுத்து நடந்த சம்பவத்தைக் கண்டு, மூன்று உயிர்கள் உயிரோடு உறைந்துவிட்டது.

நிலவு ஒழுகும்...



 
ஒழுகும் நிலவு 21

நெடுந் தூரம்
நீண்ட பயணம்
எரிந்த தேகம்
பிரிவாய் நீ
மரணமாய் நான்!!!

கொடியை எரிக்க தீக்குச்சிப் பற்ற வைக்கப்பட, செழியன் சப்தமாக அலறிக்கொண்டு திமிறினான். அவனைப் பிடித்திருந்தவர்கள் தூக்கியெறியப் பட்டார்கள். செழியன் செல்வதற்கு முன் கொடியின் உடலை நெருப்பு சூழ்ந்திருந்தது. தேவர் பிள்ளையை இடித்துத் தள்ளிவிட்டு சென்றான் செழியன். அங்கிருந்த மண்ணெண்ணையால் அவன் மேலும் தீப்பிடித்தது. அதைக் கண்ட அமரா மயங்கி விழுந்தாள். ஊர் மக்கள் அனைவரும் கூடியிருந்தனர். நடந்த நிகழ்வுகளை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு தீக்குச்சியின் மரணத்தில், இரண்டு உயிர்கள் கருகிக் கொண்டிருந்தது.

என்ன நினைத்து செழியன் இதை செய்தான் என்று தெரியவில்லை. ஒருவேளை ‌தன்னோடு இந்த பழக்கமும் எரிந்து சாம்பலாகட்டும் என்று நினைத்தானோ என்னவோ? அமைதியாய் ஒரு அழிவு அரங்கேறியது. அதற்கு அனைவரும் சாட்சிகளாயினர். அந்த மரத்தின் பட்டைகள் பற்றிக் கொண்டு எரிந்தது. எவ்வளவோ முற்பட்டும் தீயினை அணைக்க முடியவில்லை‌.

நேற்றுவரை தங்களுக்காக போராட இருந்த உயிர் இன்று இல்லை. இறுதியில் அவன் சொன்னதை செய்துவிட்டான். அவன் உயிருடன் இருக்கும் வரை கொடியை எதுவும் செய்ய முடியாது என்று கூறினான். இன்று கொடியுடன் அவனும் விடைப்பெற்று சென்றுவிட்டான். பல பெண்கள் கதறி அழுதனர். நெருப்பை அணைக்க முற்பட, முடியவில்லை. பசித்த தீ நாக்குகளுக்கு இன்னும் வேண்டும் போல் இருந்தது. மொத்த மரமும் பற்றி எரிந்தது. கொடியின் கனவு நினைவானது. இறுதியில் இறக்கும் தருவாயில் சேர முடியாத காதலனுடன் சேர்ந்துவிட்டாள். மரத்தில் இருந்து தீக்கனல் பூவாய் பொழிந்தது. அனைவரும் தூரத்தில் சென்றுவிட்டனர். தேவர் பிள்ளை அங்கு விழுந்துகிடந்தார். சற்று நேரம் கழித்துதான் அவரின் மேல் கவனம் சென்றது. அவரது‌ கைகால்கள் தீயின் கோரப் பசிக்கு இறையாகியிருந்தது.

அவரை மட்டும் இழுத்து வந்தனர். அமரா மயங்கிய நிலையில் தான் இருந்தாள்.

தேவர் பிள்ளைக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது. அமராவை பெண்கள் அனைவரும் பாதுகாத்தனர். அவள்‌ மயக்கம் தெளிந்ததா இல்லை தெளியவிவ்லையா என்று தெரியல்லை. கோகிலம் இடிந்து அமர்ந்தவர்தான்.

செழியன் இப்படி ஒரு காரியம் புரிவான் என்று யாரும் நினைக்கவில்லை. அங்கிருந்த அனைவருமே எதுவும் புரியாத மனநிலையில் இருந்தனர். கொடியின் நிலைக் கண்டு கதறி அழுதாள் மலர்.

செழியனையும் கொடியையும்‌ வாழையிலையில் வைத்திருந்தனர். முழுவதுமாக கருத்துப் போன தேகம். கரிக் கட்டையாக விரைத்துப் போயிருந்தது.

செழியனைத் தொட்டுப் பார்த்தாள் அமரா. கைகளில் கரி மட்டுமே அப்பியது‌. வெடித்து அழ ஆரம்பித்தாள். இப்படி ஒரு முடிவுரை அவள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அவனிடம் ஒருமுறை பேச வேண்டும் என்று அழுதவளை அங்கு யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை. கோகிலம் எழுந்து சென்று அவளை சமாதானம் செய்ய முனைந்தார். ஆனால் அவராலும் முடியவில்லை. அவரையே யாரேனும் சமாதானம் செய்ய வேண்டும். அவர் கணவனின் மேல் கோபம் கோபமாக வந்தது. கைகாலோடு அவரும் செத்துத் தொலைந்திருக்கலாம் என்று எண்ணினார். பிள்ளைகளின் உயிரைவிட, இந்த கௌரவம் என்னதான் முதன்மையோ தெரியவில்லை.

நடந்த அனைத்தையும் கண்ட நளனும்‌ அனிச்சமும் சிலையாய் சமைந்தனர். நளன் உருவில் செழியனும், அனிச்சத்தின் உருவில் அமராவும் இருந்தது அவர்களை சிந்தனை செய்யவிடாமல் தடுத்தது.

ஊர் முழுக்க அங்கு கூடியிருந்தனர். அடுத்த காரியம் செய்ய வேண்டுமே. பெண்கள் அனைவரும் ஒன்றாய் இருந்து அமராவை பாதுகாப்பது என்று முடிவு செய்தனர். தங்களுக்காக உயிரை இழந்தவன் செழியன். அவனின் மனைவியைப் பாதுக்காக்கவில்லையெனில், அவர்களுக்கு மன்னிப்பே கிடைக்காது என்று நினைத்தனர். அமராவுக்கு கைம்பெண் சடங்குகள் எதுவும் செய்யப்படவில்லை. பெண்கள் அனைவரும் ஒன்று‌கூடி செய்ய விடவில்லை. அதற்கு‌ ஆண்கள் அனைவரும் துள்ளிக் குதித்தனர்.

சில நாட்களாகக் கேட்கும் மரண ஓலம் ஊரையே சுடுகாடாய் மாற்றிவிட்டது.

************

நளனும் அனிச்சமும் எரிந்திருந்த மரத்தின் அடியில் அமர்ந்திருந்தனர்.
கோர சம்பவம் நிகழ்ந்து சில மணி நேரம் கடந்திருந்தது. இது என்ன சங்கிலத் தொடராக, அடுத்தடுத்த நிகழ்வுகள். மங்கை, வேலனைத் தொடர்ந்து இங்கு ஒருவனா? அதுவும் நளனின் உருவில்‌.

"அனி.." என்று‌ மூன்று முறை அழைத்துவிட்டான் நளன். அவள் நினைவுக்கு திரும்பவில்லை.

அவளைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கினான்.

"அனி.. என்ன ஆச்சு?"

"நளன்... என்னால தாங்கவே முடியல."

"எல்லாத்தையும் ஏத்துக்கோ. அந்த உலகத்தில் உன்னோட பிறப்பு நிராகரிக்கப்பட்ட மாதிரி இங்க நான் இப்படி சாகணும்னு விதி இருக்கு.‌ இதுக்கும் காரணம் இருக்கும்."

"ஆனா ஏன்.. நம்ம உலகத்தைத் தவிற எல்லா உலகமும் கொடூரமா இருக்கு."

அவன் பதிலேதும் கூறவில்லை.

"உன்னை மாதிரியே ஒருத்தன் சாவதைப் பார்த்ததும் எப்படி இருந்துச்சு தெரியுமா" என்றாள் அவள். அவள் அந்த நிகழ்வின் போது பலமுறை நளன் தன்னுடன் இருக்கிறானா என்று சரி பார்த்துக் கொண்டாள்.

"ஒரு விஷயத்தை கவனிச்சியா?"

"இந்த உலகத்தில் பெண்கள் அடக்கப்பட்டிருகாங்க. அந்த உலகத்தில் பெண்கள் ஆள்கிறார்கள்."

உண்மைதான். அங்கு பார்த்த பெண்கள் பேச்சில் வீரம்‌ கலந்திருக்கும். ஆனால் இங்குள்ள பெண்களின் முகத்தில் துளியும் வீரம் இல்லை. உணர்வுகளே இல்லை எனலாம். வழித்துத் துடைக்கப்பட்டிருந்தது.

சிறிது நேரத்தில் மலர் மட்டும் அந்த மரத்தை‌ நோக்கி வந்தாள். அவளுக்கு கொடி சொன்ன கனவு ஞாபகம் வந்தது. கடைசியில் அவளுக்கே இப்படி நடந்து விட்டதே என்று கதறி அழுது கொண்டிருந்தாள்.

"கொடி... கொடி... எங்க இருக்கடி.. வா.. எங்கூட வந்து பேசு... இப்படி அநியாயமா போய்ட்டியே.. இந்த ஊர்ல ஒரு ஆம்பளையும் வாழ தகுதி இல்லாதவன். ஒரு பொண்ணை உயிரோட கொளுத்தி, அதுல சுகம் காணுறவன் மனிசனா இருக்க வாய்ப்பே இல்லை. ஏண்டி இப்படி நடந்துச்சு... ஐயோ‌... என்னால இதைத் தாங்கவே முடியலை" என்று கதறி அழுதாள்.

மலர் குலுங்கி குலுங்கி அழ, மரத்தின் பின்புறம் இருந்த இருவரும் எழுந்து வந்தனர். மலர் அவர்களைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.

செழியனின் உருவம். ஆனால் உடைகள் எல்லாம் சற்று வேறு மாதிரி இருந்தது. முதலில் செழியனின் ஆவியாக இருக்குமோ என்றுதான் எண்ணினாள். மனதில் திகிலுடன் நளனைப் பார்த்தாள். அமராவைப் போல் அங்கு ஒருத்தி இருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள். இது எப்படி சாத்தியம் என்று‌. உண்மையில் ‌பயந்துவிட்டாள். ஒருவேளை அமராவும் இறந்திருப்பாளோ என்று.

அவள் பயந்து ஓடப்‌ பார்க்க, இருவரும் அவளிடம் விளக்க முற்பட்டனர்.

"உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் நாங்க செய்றோம்" என்று வாக்களித்து அவளை அமர வைத்தனர்.

அதன்பிறகு அவளுக்கு அவர்களைப் பற்றிய விபரங்கள் கூறினர். அவள் நம்பியது போல் தெரியவில்லை. அவளால் நம்ப முடியவில்லை. அவளுக்கு விளங்கவும் இல்லை. ஆனால் அவர்கள் உதவி செய்வதாக கூறியது அவளைத் தேக்கமடைய வைத்தது. கொடியின் குழந்தை‌ பாதுகாப்பாக வளர வேண்டுமே. செழியன் இறந்துவிட்டான். இனி அமராவின் நிலை என்னவென்று தெரியவில்லை. அதனால் இவர்களிடம்‌ உதவி கேட்கலாம் என்று நினைத்தாள் மலர். கொடியின் ஆசையாவது நிறைவேற வேண்டும் என்று நினைத்தாள்.

அதன்பிறகு அங்கு நடந்த அனைத்தையும் விளக்கினாள். கொடியின் கனவில் தொடங்கி செழியனின் இறப்புவரை அவளுக்கு தெரிந்த அனைத்தையும் கூறி முடித்தாள்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டனர் இருவரும்.

அப்பப்பா.. என்ன ஒரு விசித்திரமான விதி. அங்கு ஆங்கிலேயர்கள் நாட்டைப் பிடித்துக் கொண்டு கொடுமைப் படுத்தினால் இங்கு, இது என்ன இப்படி ஒரு நடைமுறை. பெண் என்றால் இளப்பமா? ஆண் இறந்தால் பெண் வாழ தகுதியற்றவளாக போகிறாளா? இன்னும் எத்தனை எத்தனை உருப்படாத திட்டத்தைத் தூக்கி சுமக்கிறார்கள். அங்கு ராணியின் கம்பீரம்‌ என்ன. மங்கையின் கம்பீரம் என்ன? குயிலியின் வீரம் என்ன? மங்கையும் எதிர்த்து போராட முடியாமல் உயிரைவிட்டவள். கணவன்தான் கொன்றான்.‌ ஆனால் அவள் மரணத்திற்கு பின் மீப்பெரு காரணங்கள் பல இருக்கிறதே. மரணத்திலும் கம்பீரம், வீரம், நாட்டுப்பற்று என்று காரணங்கள் அடுக்கிக் கொண்டே போகலாமே.

ஆனால் இங்கு பெண்களின் நிலை இழிநிலையாக அல்லவா இருக்கிறது. ஆணுடன் போரிட்டு வென்று நாட்டை ஆளும் பெண் ஒரு உலகில். வீட்டில் கூட வாய்த் திறக்காமல் விட்டில் பூச்சியாய் வாழும் பெண்கள் ஒரு உலகில். அங்கு அடிமைத்தனத்தை தகர்த்தெறிந்தனர். இங்கு அடிமைத்தனத்தால் முடக்கி வைக்கப்பட்டனர்.

அமராவையும் செழியனையும் நினைத்து பெருமிதம் இருவருக்கும். தேவர் பிள்ளைப் போல் மனிதர்களும் இருக்கிறார்களா? என்று எண்ணி எண்ணி மறுக மட்டுமே முடிந்தது.

"மலர், அப்போ அமராவை கொன்னுடுவாங்களா?" என்றாள் அனிச்சம். அவள் குரலில் பயம் அப்பியிருந்தது.

"நிச்சயம்... ஆனா அவளைக் காப்பாத்த நாங்க முயற்சி செஞ்சிட்டு இருக்கோம். ஆனா பலிக்குமான்னு தெரியலை" மலர்.

"கொடியோட குழந்தை‌ வேற அமராகிட்ட இருக்கு. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை" என்றாள் வருத்தத்துடன்.

"நளன், அமராவை நாம கூட்டிட்டு போகலாம்" என்றாள் அனிச்சம் அறிவிப்பாக.

"எங்க?"

"நம்ம உலகத்துக்கு."

"அது எப்படி சாத்தியம்?"

"நாம இங்க வந்தது சாத்தியப்பட்ட மாதிரி."

"அனி.. அவசரப்படாத" என்று அவளைக் கண்டித்தவன், மலரிடம் திரும்பி, "மலர், அமராவை ஒருமுறைப் பார்க்கணும். ஏற்பாடு செய்ய முடியுமா?" என்றான்.

அவள் யோசனையுடன் அவர்களைப் பார்த்தாள். இன்னும் இவர்களைப் பார்த்ததையே நம்ப முடியவில்லை. மூளை யோசிப்பதையே நிறுத்தியிருந்தது அவளுக்கு.

"ஒரு தடவை பார்க்க ஏற்பாடு செய். அமராவை நிச்சயம் காப்பாத்திக் கொடுக்குறோம். கொடியோட குழந்தையும் சேர்த்து" நளன்.

அவள் சரியென்று தலையாட்டி வைத்தாள். அதன்பிறகு அவர்கள் இருவரும் தங்க பாழடைந்த ஒரு சிறிய வீட்டை சுத்தம் செய்து கொடுத்தாள். அது மூங்கில் காடுகளுக்கு நடுவில் இருந்தது. யாரும் புழங்காத இடம்.

அங்கு ஊருக்குள் சென்று பார்த்தால், அனைத்தும் கைக்கு மீறி சென்றிருந்தது. பெண்கள் அனைவரும் ஆண்களை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தனர். அமராவைப் பற்றிய பேச்சுதான். செழியன்‌ இறந்துவிட்டான். இனி அமராவை என்ன‌ செய்வது என்றுதான் சண்டை.

இப்படியே‌ சங்கிலித் தொடராக சாவு வருகிறது. ஏதோ தெய்வ குத்தம் என்று கூறினர் ஒரு கூட்டம். இப்படியே பலி கொடுக்கக்கூடாது என்று பெண்கள் கூறிட, முதலில் அந்த பெண்ணைத் தப்பிக்க வைத்ததால்தான் அனைத்தும் நிகழ்ந்தது. அதை செய்ததால் செழியனுக்கு இந்த நிலை என்று ஏதேதோ காரணங்களைக் கூறினர்.

மலர் கோகிலத்திடம் ஏதோ காரணம் கூறி அமராவை அழைத்துச் செல்வதாகக் கூற, அவரும் அனுப்பி வைத்தார். அவளுடைய மருமகள் உயிருடன் இருந்தால் போதும். அமராவிற்கு என்ன நடக்கிறது என்று கூட தெரியவில்லை. அவள் நினைவுடன் இல்லை. மலர் கொடியின் குழந்தையையும்‌ தூக்கிக் கொண்டு, நளன்‌ இருக்கும் இடத்திற்கு வந்தாள். இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் அனைத்தும் நடந்தேறியது.

அங்கு வந்ததும் நளனைக் கண்ட அமரா, ஆனந்த மிகுதியில் அழத் தொடங்கினாள்.

"செழியன்... " என்று அருகில் சென்று அணைக்கப் போனவளின் கால்கள் அடுத்த அடி எடுத்து வைக்காமல் இருந்தது. அவர்கள் இருவருக்கும் இரண்டடி இடைவெளி மட்டுமே இருந்தது.

"யார் நீ? என்னோட செழியன் மாதிரி இருக்க" என்று அவன் சட்டையைப் பிடித்து அவனைக் கீழே தள்ளினாள்.

அமராவின்‌ முகத்தில் தோன்றியிருந்த மகழ்ச்சி ரேகையைப் பார்த்த அனிச்சம், சில கணங்கள் நளன் செழியனாகவே இருக்கட்டும் என்று நினைத்தாள். அவள் அருகில் வந்து நளனை அணுகும் வேளையில் அவளின் மனமும் தடதடத்தது. ஆனால் அமரா கண்டு கொண்டாளே. அவள் எந்தளவு செழியனை விரும்பியிருக்க வேண்டும்.

அவளைக் காணும்‌ பொழுது செழியனின் விழிகளில் தோன்றும் மென்மை‌ இல்லையே இவனிடம். அவளை அன்னியமாக பார்க்கும் பார்வை செழியனுடையாதாக நிச்சயம் இருக்க முடியாது என்று நினைத்தாள் அமரா.

அதன்பிறகு அவளை அமர வைத்து மொத்த‌ கதையையும் விளக்கினர். அது முழுக்க அவள் செவியில் நுழைந்ததா என்று தெரியவில்லை.‌ அவள் நல்ல நிலையில் இருந்திருந்தால் ஆயிரம் கேள்வி கேட்டு துளைத்தெடுத்திருப்பாள். ஆனால் அவர்கள் உதவ முனைகிறார்கள் என்று மட்டும் நன்றாக விளங்கிக் கொண்டாள்.

அதன்பிறகு அங்கு ஒரு வாரம் தங்கியிருந்தாள் அமரா. ஊர் முழுக்க அவளைக் காணவில்லை‌ என்று தேடினர். கோகிலம் அரசியை அனுப்பி வைத்தது போல் அனுப்பி வைத்திருப்பார் என்று நினைத்தார் தேவர் பிள்ளை. அவருக்கும் அது நல்லது என்று தோன்றியது. கோகிலம் சென்று அமராவைப் பார்க்கவில்லை. மலரிடம் ஒப்படைத்ததுதான். ஒருவேளை சென்று பார்த்தால், அவரை நூல் பிடித்து அவளைக் கண்டு பிடித்துவிடுவார்களோ என்ற பயம்தான். மலர் அவ்வப்போது வந்து தகவல் சொல்லிவிட்டு செல்வாள். மலரின் கணவனும் அவளுக்கு உறுதுணையாக இருந்தான். அவன் செழியனின் கட்சி. தேவர் பிள்ளை கண் விழித்ததில் இருந்து பதில் கூறவில்லை என்று ஊர் மக்களுக்கு சிறிது கோபம்தான். அவரின் குடும்ப வாரிசைக் காக்க, இப்படியெல்லாம் நாடகம் ஆடுகிறாரோ என்றும் பேசிக்கொண்டனர். உண்மையில் அவருக்கு இதில் சம்மதம் இல்லை என்றாலும், அமராவின் குழந்தை‌ நன்றாக பிறக்க வேண்டும் என்று நினைத்தார். செழியனின் சாவு அவரை சற்று அசைத்துப் பார்த்தது. மகன் மேல் உள்ள அன்பா என்று தெரியவில்லை. ஆனால் கட்டிக்காத்த ராஜ்ஜியத்தை ஆள பிள்ளை இல்லாமல் போனானே. அவரின் குடும்பம் அவரோடு மண்ணில் புதைந்துவிடக் கூடாது என்ற எண்ணமாகக் கூட இருக்காலம். இரண்டாம் காரணம் உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் அரசியைக் கொன்ற பொழுது ஏற்படாத வெற்று உணர்வு இப்பொழுது தோன்றுகிறதே. அவரும் அமைதியாக இருந்ததுதான் அதிசயம். உடலும் ஒத்துழைக்கவில்லை. கைகால்கள் இழந்து நடைப் பிணமாக இருந்தார்.

நிலவு ஒழுகும்...
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom