Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கபிலனின் நிலா - அகிலன் மு

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 18



பார்த்திபன் வற்புறுத்தியதால்தான், தான் கபிலனிடம் சொல்லாமல்போனதாக நிலா சொன்னதைக்கேட்டு, பார்த்திபன்மேலிருந்த பிடிப்பு கபிலனுக்கு விலகிக்கொண்டேபோனது. ஆனால் அவன் பார்த்திபனுடன்கொண்ட பால்ய நட்பினால், அவனிடம் கோபம்கொள்ளாமலும், வெறுப்பு அடையாமலும், எந்த சூழலிலும் பார்த்திபனை நேரடியாக கேள்விகேக்காமலும் இருந்தான். கபிலனின் இந்த இயல்பை நன்கு தெரிந்திருந்த நந்தினி அவன்மீது அன்பைக்காட்டி தன்னைவிட எவரிடமும் நெருங்கவிடாமல் வைத்திருந்தாள். கபிலன் அதை உணரமால் தன் அன்பால் அவனைக் கட்டியிருந்தாள்.



அன்று கபிலனும் நிலாவும் முதல்முறையாக தனியே சந்தித்துவிட்டு நிலாவின் தோழியின் வீட்டைவிட்டு வரும்போது நந்தினி கலக்கமடைந்தாள். தன் ஒரே கடைசி வாய்ப்பான மேகலையை மீண்டும் தன் சுயநலத்துக்காக உபயோகிக்க நினைத்தாள்.



“நான் பார்த்திபனோட உண்ட சொல்லாமப்போனது தப்புதான் கபிலா”



“பரவாயில்ல, நீ சொல்லிருந்தாலும் நான் அத தடுத்திருக்கமாட்டேன். நீங்க லவ் பண்றீங்கெ. இதுல ஒன்னுமில்ல. இனிமே சொல்லிட்டே போ. நான் அட்லீஸ்ட் உன்ன தேடாமயாவது இருப்பேன்.”



“இனி எங்க என்னத் தேடப்போற. அதான் நிலா உன்னத்தேடி வந்துட்டாளே.”



“நந்து, என்ன நீயும் மத்தவங்க மாதிரி பேசுற. நான் நிலாட்ட ஒரு வருஷத்துக்கு முன்னாடி என்ன சொன்னனோ அதான் இப்பவும் சொன்னேன். நான் படிச்சு முடிச்சு வேலையில செட்டில் ஆனப்புறம், நிலாவோட அப்பாட்ட நேரடியா போய் நாங்க லவ் பண்ற விசயத்த சொல்லி கன்வின்ஸ்பண்ணி அவள கல்யாணம் பண்ணிப்பேன். அதுக்கு முன்னாடி அவகூட சுத்துறதுக்கு ட்ரை பண்ணமாட்டேன்.”



“நீ செட்டில் ஆகுற வரைக்கும் நிலா வீட்டுல வெயிட் பண்ணலேனா?”



“அத நிலாதான் சமாளிக்கனும்னு ஏற்கனவே சொல்லிருக்கேன். நான் வேலைபாக்குறவரைக்கும் எதுவும் பேச முடியாது. ஏன்னா எங்க வீட்டுலயே அது பிரச்சனை”



கபிலன் சொன்னதைக்கேட்ட நந்தினி, மேகலையைப் பார்த்து சிறியதாய்ப் புன்னைகைத்தாள். அவளும் அர்த்தம் புரிந்ததாகப் பதிலுக்கு புன்முறுவலுடன் நந்தினியைப் பார்த்தாள். கபிலனின் இந்த முடிவை வைத்தே நிலாவைப் பிரித்துவிடலாம் எனவும், தான் சொல்வதைக் கேட்கும் மேகலையை கபிலனுடன் சேர்த்துவிடலாம் எனவும் நந்தினி நம்பினாள்.



“ஓகே டா. நல்ல முடிவுதான். நான் எதும் ஹெல்ப் பண்ணனும்னா சொல்லு”



“உண்ட சொல்லாம நான் எந்த ஸ்டெப்பும் எடுக்கப்போறதில்ல, நந்து”



“சரிடா, நாங்க கிளம்புறோம்”



நந்தினியும், மேகலையும் டூ வீலரில் கிளம்பினர். கபிலன் தன் வீட்டிற்குச் சென்றான்.

.



சில நாட்கள் கபிலன்-நிலா கண்ணோடு கண்ணான காதலும், அவர்கள்மேல் மணிமேகலை, நந்தினியின் கண்காணிப்பும் தொடர்ந்தது.



அந்த திங்கள்கிழமை கல்லூரி சென்றுகொண்டிருந்தனர் நந்தினியும், கபிலனும்.



“கபிலா, வர சனிக்கெழம, ஒரு டின்னர் வீட்டுல ப்ளான்பண்ணிருக்கேன். அப்பா, அம்மா ஊருக்குப்போறாங்க. நீ வந்திரு. முடிஞ்சா நான் நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்டுறேன். நீயா யார்ட்டயும் சொல்லாத.”



“ஓகே டீ. வந்துருவோம்”



“நிலாவையும் கூப்டவா?”



“இல்ல வேணாம்”



கபிலன் பதிலை எதிர்பார்த்தே, அந்த கேள்வியைக் கேட்டாள், நந்து. உள்ளுக்குள் தான் நினைத்ததுபோல் நடப்பதால் புன்னகைத்தாள். அவள் இந்தமுறை மாறன் முன்னிலையில், மேகலையின் கபிலன்மீதான காதலைச் சொல்லி, செண்டிமெண்டாக கபிலனை மடக்கலாம் என்று திட்டம்போட்டாள். பார்த்திபன் முன்னரெ வரும் சனிக்கிழமை ஒரு குடும்ப விழாவுக்குச் செல்வதாக நந்தினியிடம் சொல்லியிருந்தான். அதை மனதில் வைத்து மேகலை, மாறன் மற்றும் கபிலனை மட்டும் தன் வீட்டில் சந்திக்கவைக்க திட்டமிட்டாள், நந்தினி

.



சோழ ராஜ்ஜியம் - பழுவூர் அரண்மனை



தான் நீண்டநாளாக திட்டமிட்டிருந்த கடம்பூர் இளவரசி மணிமேகலை, வந்தியத்தேவன் சந்திப்பை ஏற்படுத்தவேண்டும். மணிமேகலையின் சகோதரன் இளவரசன் கந்தமாறன் முன்னிலையில், மணிமேகலையை வந்தியத்தேவனிடம் காதலைச்சொல்ல வைக்கவேண்டும். கந்தமாறனை சகோதரியின்மேலான பாசத்தையும், வந்தியத்தேவன்மீதான நட்பையும்வைத்து, தன் சகோதரியை ஏற்றுகொள்ளச் செய்யவேண்டும் என தீர்மானித்தாள். அந்த நாளும் வந்தது.



கந்தமாறனும், மணிமேகலையும் பழுவூர் அரண்மனைக்கு வந்துசேர்ந்தனர். தன் கணவர் பெரியபழுவேட்டரையரை வேறுகாரணம் சொல்லி தஞ்சாவூருக்கு அனுப்பியிருந்தாள், நந்தினி. வந்தியத்தேவன் வருகைக்காக காத்திருந்தனர் அனைவரும்.



இளையராணி நந்தினியின் ஆணையின்பேரில் அன்று விருந்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்தன. அரண்மனை சேவியர்களும், பணியாட்களும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்.



தனக்காக அந்தப்புரத்தில் உதவிசெய்யவேண்டுமெனச் சொல்லி மணிமேகலையை அழைத்துச்சென்றாள் இளையராணி நந்தினி. கந்தமாறனை அரண்மனை நந்தவனத்தில் உலாவிக்களிக்க பரிந்துரைத்தாள். கந்தமாறனும் நந்தவனம் சென்றான்.



மணிமேகலையும், இளையராணி நந்தினியும் அரண்மனை அந்தப்புரம் வந்தடைந்தனர்.



"மணிமேகலை, உன் மீது எனக்கு அளவுகடந்த அன்பு இருக்கிறது. உனக்காக நீ விரும்பும் அனைத்தையும் செய்துகொடுக்கவேண்டுமன என் மனம் தவிக்கிறது. உன்னை என் சகோதரிபோல் பாவிக்கிறேன்"



"அக்கா, ஏன் இந்த விளக்கம். எனக்கு அறியாததை தாங்கள் எதுவும் சொல்லவில்லையே!"



"மகிழ்ச்சி, மணிமேகலை!. நான், நீ அறிவாய் எனத்தெரிந்தும் மீண்டும் எடுத்துரைக்கக் காரணம் இருக்கிறது."



"எதுவாயினும் சொல்லுங்கள் இளையராணி"



"மணிமேகலை, இன்று அனைத்து தினங்களிலும் கிடைக்காத அறியவாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்தினால், உனக்கு உன் ஆசைக்காதலன் கிடைப்பார்."



"நான் என்ன செய்யவேண்டும், இளையராணி?"



“நான் சொல்வதுபோல் கேள்”, எனச்செய்ய வேண்டியவற்றைச் சொன்னாள், இளையராணி நந்தினி. இருவரும் மாறன் அறியாவண்ணம், அவன் உலாவித்திரிந்த நந்தவனப் பகுதிக்கு எதிர்ப்புற நுழைவு வாயில் அருகில் சென்று அமர்ந்தனர். அது அந்தப்புர நுழைவுவாயிலின் அருகில் இருந்ததால், கந்தமாறன் அங்கே உடனே வர சாத்தியம் குறைவு.



அரண்மனை வாயிற்காப்போனிடம் சொல்லி, வந்தியத்தேவன் வந்தவுடன் அவர்கள் இருந்த இடத்திற்கு நேரிடையாக அழைத்துவர ஆணை பிறப்பித்திருந்தாள், நந்தினி. வல்லவன் வந்தியத்தேவன் வந்துசேர்ந்தான்.



“வாருங்கள், வல்லவரே. உங்களுடைய எதிர்பார்ப்பில்லாத நட்பிற்காக நான் செய்யவேண்டிய கடமையாக இன்று இதைச்செய்கிறேன். உங்களுக்காக இருமுறை தன்னுயிரை இழக்கத்துணிந்த மணிமேகலை, இங்கே காத்திருக்கிறாள். அவள்கூற விரும்புவதை செவிமடுத்துக்கேளுங்கள்”



“இளையராணி, தாங்கள் விரும்புவதற்காகவும், என் தோழனின் சகோதரி என்பதாலும், எத்துணைமுறையேனும் நான் எதையும் செவிமடுத்துக் கேட்க சித்தமாயிருக்கிறேன்.”



“இளவரசி மணிமேகலை, தங்களுக்கு என்னால் என்ன பணிசெய்யவேண்டும். சொல்லுங்கள் முடிந்ததைச் செய்கிறேன்”



வல்லவன் இருவருக்கும் ஆறுதலாகவும், பணிவுடனும் மறுமொழியுரைத்தான். மணிமேகலை தூரத்தில் தன் சகோதரன் கந்தமாறன் வருகிறானா என்பதை உறுதிசெய்துகொண்டாள்.



“வல்லவரே, தங்களுக்காக இருமுறை என்னுயிரை துறக்கத் துணிந்ததை, நான் பெருமிதமாகப் பார்க்கவில்லை. என் பாக்கியமாகக் கருதுகிறேன். நீங்கள் என் சகோதரனிடம் நட்புகொண்டு அரண்மனை வந்துசென்ற தொடக்க காலம்முதல் என்மேல் உங்கள் காதல்பார்வை வீசிக்கொண்டே இருந்தீர்கள்”



“இளவரசி…”, பதறிய வல்லவன், மணிமேகலையை இடைமறித்து மறுப்புசொல்ல எத்தனித்தான்.



“சற்று பொறுத்திருங்கள் வல்லவரே.”



நந்தினி வல்லவனைக் குறுக்கிட்டு, மணிமேகலையைத் தொடர்ந்து பேச வைத்தாள். மணிமேகலை தொடர்ந்தாள்.



“தாங்கள் குந்தவையின்பால் காதல்வயப்பட்டீர்கள் எனச்சொன்ன நாட்களுக்கு முன்னர்வரை, என்பால்கொண்ட தங்களின் காதல்பார்வையில் மாற்றமே இல்லை. அதற்குப்பின்பும் குந்தவை உங்களுக்கு எந்த உத்தரவாதமும் தராத நிலையில், என்னுடன் இதற்குமுன்னர் சந்திப்பில்கூட, தங்களுக்காக நான் காத்திருக்கிறேன் அல்லது உயிரை மாய்க்கிறேன் என்று சொன்னபோது, என் தலைகோதிவிட்டு தேற்றினீர்கள். என்னுடன் இருப்பதாக வாக்களித்தீர்கள். இப்போது குந்தவை தங்களைக் காதலிப்பதாகச் சொல்ல, ‘நான் சொல்வதெல்லாம் கற்பனை’, எனச் சொல்லப்பார்க்கிறீர்கள். தங்களுக்காக இருமுறை உயிரை மாய்க்கமுயன்ற என்னை இனி தங்கள் வாளேலேயே வெட்டிச்சாய்த்துவிடுங்கள். தங்கள் பாதத்தில் என் சிரமும், கரமும் பணித்து, என் குருதியால் குளிர்வித்து உயிரைப் போக்கிக்கொள்கிறேன்”.



மணிமேகலை வல்லவனிடம் சொல்லிக்கொண்டே அவனுடைய இடுப்புக்கச்சையிலிருந்த போர்வாளை சடாரென உருவ முயன்றாள். வல்லவன் பதறிப்போய் தடுத்தான். மணிமேகலையின் வலதுகரத்தில் வாளின்கூர்பக்கம் கிழித்து குருதி பொங்கியது.



வல்லவன் பதறினான்.



மணிமேகலையின் உரையாடலை, அருகிலிருந்த அரசமரத்தின் பின்புறம் மறைந்திருந்து செவிமடுத்துக்கொண்டிருந்த கந்தமாறனுக்கு சகோதரியின்பால்கொண்ட பாசம் கண்ணை மறைத்தது. தன் சகோதரியின் குருதிபொங்கிய கரங்களையும், நீர்வழியும் கண்களையும் காண அவன் புத்தி சிதைந்தது.



“வந்தியத்தேவா….” என உரக்கக்கத்திக்கொண்டே மரத்தின்பின்னிருந்து வெளிப்பட்டான், கந்தமாறன்.



சூழலின் விபரீதத்தை உணர்ந்த வல்லவன், நண்பனின் கோபக்குரலில் செய்வதறியாது நின்றான்.



இளையராணி நந்தினியும், மணிமேகலையும் தங்களுக்குள் பார்த்து மற்றவர் அறியாவண்னம் சிரித்துக்கொண்டனர்.

.




நாகர்கோவில் நந்தினி வீடு



தன் தங்கையின் கையில்கொட்டிய இரத்தத்தில் தன்னை மறந்த மாறன், அருகிலிருந்த அறையிலிருந்து வெளிவந்து, கபிலனின் சட்டையை சட்டைக்காலருடன் சேர்த்துப்பிடித்து உலுக்கினான்.



கபிலனுக்கு என்ன சொல்வதெனப் புரியாமல் நின்றான்.



“என்னடா.. என் தங்கச்சிய இப்டி ஏமாத்திட்டியே. உனக்கும் நிலாக்கும் சப்போர்ட்பண்ணி என் தங்கச்சிட்ட பேசிருக்கேண்டா. ஆனா நீ.. அவள தற்கொலைக்கு தூண்டுற அளவுக்கு, அவ மனச இப்டி கெடுத்துவச்சுருக்கியேடா. இதுல அவ உயிருபோயிருந்தா, நான் என்ன செய்வேன், எங்க அப்பா அம்மாக்கு என்ன பதில் சொல்வேன். சே.. இப்டி பண்ணிட்டியேடா”



“மாறா இங்க என்ன நடக்குதுனு எனக்குப் புரியல. நான் சொல்லாததெல்லாம் சொன்னாதா உன் தங்கச்சி சொல்றா”



“கபிலா, அவ ஏன் பொய் சொல்லனும். அதும் அவ அண்ணன் முன்னாடி. இந்த மாதிரி லவ் மேட்டர்லாம் மேகலை அவ அண்ணன் இருக்கும்போது பேசி நான் பார்த்ததே இல்ல. உனக்குத் தெரியாம நீ இதெல்லாம் செஞ்சிருக்கியா?!”



ஒன்றும் தெரியாதவள்போல கபிலனுக்கு சந்தேகத்தை போக்குவதுபோலப் பேசி, மேகலைக்கு ஆதரவாகவும், மாறனின் சந்தேகமனதை மேலும் தூண்டுவதுபோலவும் பேசினாள், நந்தினி.



“நந்து... நீயும் என்ன புரியாமப் பேசிட்டிருக்க”



“டேய்.. எல்லாத்தையும் விடு. நான் கேக்குறதுக்குமட்டும் பதில் சொல்லு.”



மாறன் கேட்க கபிலன் மாறனையே பார்த்தான்.



“என் தங்கச்சி உன்ன லவ் பண்றேனு உண்ட முன்னாடியே சொல்லிருக்காளா?”



“ம்ம்.. ஆனா…”



“அவ உன் முன்னாடியே தற்கொலை பண்ண ட்ரை பண்ணாளா”



“அது.. வந்து…”



“தெரியுதுடா.. நீ பதில் சொல்லாம நிக்கிறதுலேயே தெரியுது”



“சாரி நந்து நாங்க கிளம்புறோம். மேகா வா போலாம்”



“மாறா… டேய்ய்…”



“தயவு செஞ்சு எதும்பேசாத. இத்தன வருச பழக்கத்துக்காக இதோட நான் ஒன்னும்பேசாமபோறேன்”.



கபிலன் தன்னிலை விளக்கமளிக்க முடியாமல் திகைக்க, மாறன் தன் தங்கையை அழைத்துக்கொண்டு உடனே வெளியேறினான்.



கபிலன் மாறன் செல்வதையே பார்க்க, அவன் பின்னால் நின்ற நந்தினி, மெலிதாய்ப் புன்னகைத்தாள்.



மாறனுடன் சென்ற மேகலை தான் நினைத்தது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருக்க, முழுதாய் கபிலனின் தொடர்பை இழந்துவிட்டோமோ எனக்கலங்கினாள்.

.



கபிலன் வீட்டு மொட்டைமாடி



“அன்னைக்குப்போன மாறன், அதுக்கப்புறம் என் முகத்தபார்த்து பேசவே இல்ல மாப்ள. நானும் அத்தனை வருஷம் குடும்பத்தோட பழகியிருக்கோமே, ஒரு பிடிக்காத விசயத்துக்காக விட்றக்கூடாதுனு, அவன் வீட்டுக்கு போய்ட்டு வந்துட்டுதான் இருக்கேன். ஆனா மாறன் என்ட இப்பவும் முகங்குடுத்து பேசறதேயில்ல.”



“ம்ம்.. பரவாயில்ல மச்சான். ஃப்ரெண்டுக்காக் அவன் தங்கச்சி செஞ்சதையும் பொறுத்துக்கிட்டு, அவனையும் விட்டுக்கொடுக்காம இருக்க. ஒரு நாள் அவன் உன்ன புரிஞ்சிப்பான். நீ செய்றத செஞ்சிட்டே இரு”



“சரி மாப்ள, தூங்கு. காலையில நீ வெள்ளன ஊருக்குப் போகனும்ல”



“ஆமா மச்சான். தூங்கலாம். பீர்பாட்டில்களைக் காலிசெய்த அரை மயக்கத்தில் மாப்ள தூங்கிப்போனான்.



கபிலன் மாப்ளயுடன் அதுவரை நடந்ததைச் சொல்லி முடித்தான்.

.



நிலாவும், கபிலனும் நண்பர்கள் வீட்டு தொலைபேசியிலும், அவ்வப்போது கல்லூரி இடைவேளையிலும் பார்த்துப்பேசி காதல் வளர்த்தனர். தான் நிலாவை வெளியில் சந்திப்பதில்லை என்பதில் உறுதியாய் இருந்தான். நாட்கள் உருண்டோடியது.



அன்று நந்தினி கண்ணீர் மல்க கபிலனின் முன் வந்து நின்றாள்.

.

நாம் கபிலனைத் தொடர்வோம்-18
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 19



“என்ன நந்து.. என்ன ஆச்சு.. ஏண்டி அழற?”, தன் முன் கண்ணீருடன் வந்துநின்ற நந்தினியைப் பார்த்து குழப்பமும் சிறிது பதற்றமும் சேரக்கேட்டான், கபிலன்.



“.. .. ..”



நந்தினிக்குப் பேச்சே வரவில்லை. பேசமுயன்றாள், முடியவில்லை. விசும்பிக்கொண்டே இருந்தாள்.



“நந்து.. என்ன இது… சின்னபுள்ள மாதிரி. இப்டிலாம் நீ எப்பவும் அழமாட்டேல.. இப்ப என்னாச்சு உனக்கு.. சொன்னாதான தெரியும்?”



“சாரிடா, கபிலா. ஏதோ உனக்கும், நமக்குள்ள இருக்க ரிலேஷன்ஷிப்புக்கும் நல்லதுன்னு நெனச்சு நான் செஞ்ச பல காரியத்துனால, நீ பட்ட கஷ்டமோ என்னமோ தெரியல, இன்னைக்கு நான் இதெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கு”



“என்ன செஞ்ச நீ? என்ன அனுபவிக்கிற?. சஸ்பென்ஸ் வைக்காம சொல்றியா..”, நந்தினியை சரிப்படுத்த, கபிலன் கொஞ்சம் கண்டிப்புக்காட்டினான் குரலில்.



நேத்து திடீர்னு பார்த்திபன் எண்ட, "அவனுக்கும் எனக்கும் செட் ஆகாது. நான் அவனவிட என்ன சொன்னாலும் உன்கூடதான் போயிருவேன்னு.. அப்டி இப்டினு ஏதேதொ சொல்லிட்டுப் போயிடாண்டா…"



"எதாவது கோவத்துல சொல்லிருப்பான். நீ திரும்ப பேசு.. சரியாயிடுவான்"



"இல்லடா.. நேத்து ஃபுல்லா நிறைய தடவ பேச ட்ரை பண்ணேன். அவன் பேச்சு வேற மாதிரி இருக்கு. அவனே இனி வந்து பேசுனாலும் நான் பேசுறாப்ல இல்ல. இருந்தாலும் ஒரு ஏமாற்றம் மனசுல.. அதான் தாங்க முடியாம உன் முன்னாடி அழுதுட்டேன். பார்த்திபன்மேட்டர இதோட நாம மறந்துடலாம்"



"ஹ்ஹ்ம்ம்ம்… நான் முதல் நாள் சொன்னப்போ நீ கேக்கல. இப்பவந்து நீயே வேணாங்ற. நீ ஓகேனா எனக்கு ஓகேதான்."



"அவன் என்னய வேணாம்னு சொன்னப்பறம், நான் ஏன் அவன் நெனச்சு கவலப்படனும். ஆனா அவன் அப்டியே சும்மா விடனுமானு யோசிக்கிறேன்"



"புடிக்கலேனா நாம பேசாம இருந்துரனும். இல்லேனா பேசி பிரச்சனைய சரி பண்ணனும். அதவிட்டுட்டு இத என்ன கொலவெறி", மென்மையாக கண்டித்த கபிலன், சிறிதாய்ச் சிரித்தான்.



"கொல வெறிதான்டா"



"டீ.. என்ன இது.. நான் எதோ வெளயாட்டுக்குச் சொன்னா நீ ரொம்ப சீரியஸா அதப்பத்தி பேசிட்ருக்க". கபிலன் நந்தினியை எச்சரிக்கும் தொணியில் கேட்டான்.



"நான் கல்யாணம்பண்ணி இந்த ஊரவிட்டு போறதுக்குள்ள அவனுக்கு மறக்கமுடியாதமாறி ஏதாவது செய்யனும்”. நந்தினி பொங்கினாள்.

.



சோழப்பேரரசின் பழுவூர் அரண்மனை



தான் இத்தனை ஆண்டுகளாக செய்துவந்த சதியில் இறுதிவரை வந்தியத்தேவன் பிடிபடாதுபோனதும், பெரியபழுவேட்டரையரை திருமணம் செய்து சோழப்பேரரசில் தன்னை இணைத்துக்கொண்டதன் பலன்கிட்டாமல்போனதும், இளையராணி நந்தினிக்கு பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியிருந்தது. அந்த சமயத்தில் பெரியபழுவேட்டரையர் நந்தினியின் சதிவேலைகளை அறிந்தார். தன் திட்டங்களை தன் கணவர் பெரிய பழுவேட்டரையர் அறிந்துகொண்டார் எனவும், அதன்பால் அவர் தன்னை தண்டனைக்குள்ளாக்கவோ அல்லது ராஜாங்க உரிமைகளின்றி தள்ளிவைக்கவோ திட்டமிடலாமென இளையராணி நந்தினி ஐயுற்றாள். ஆதலின் தான் முந்திக்கொண்டு தனக்குச்சாதகமான திட்டத்தை நடத்திமுடிக்க தன்னுடைய நம்பிக்கையுடைய பாண்டியநாட்டின் ஆபத்துதவிகளுடன் கலந்தாலோசித்தாள். திட்டம் தயாரானது.



மறுநாள் இளையராணிக்கும், பெரியமழுவேட்டரையருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. தன்னையும், சோழப்பேரரசையும் அழித்தொழிக்க முயல்வதாக, பெரியபழுவேட்டரையர், இளையராணி நந்தினியின்மேல் குற்றம் சுமத்தினார்.



இளையராணி நந்தினி அதனை அமைதியாகவும், கண்ணீருடனும் மறுத்தார்.



தன்னைவிட வல்லவன் வந்தியத்தேவனிடம் அதிகம் நெருக்கம் காட்டுவதாக, பெரியபழுவேட்டரையர் வெகுண்டெழுந்தார். இளையராணி நந்தினி பதிலேதும் உரைக்காமல், உறைந்துபோய் நின்றாள்.



மறுநாள் மர்மநபர்களால் பெரியபழுவேட்டரையர் கடுமையாகத் தாக்கப்பட்டார். தன்னை நந்தினிதான் பலிதீர்ப்பதாக பெரியபழுவேட்டரையர் எண்ணினார், கலங்கினார், மயங்கினார். இளையராணி நந்தினி பதறிப்பணிந்து பெரியபழுவேட்டரையர் மயங்கிக்கிடந்த இடம்தேடி ஒடி, வேண்டியபணிவிடை செய்தாள். எனினும் தன்மேல் பலிஎண்ணம் ஏற்பட்டதற்காய் வருந்தி விலகிச்செல்வதாக உரைத்து, வல்லவனையும் நிரந்தரமாய் விலகிச்செல்ல முடிவெடுத்தாள்.

.



நாகர்கோவில் காலனி



"கல்யாணமா? ஊரவிட்டுபோற பிளானா?. என்ன நந்து புது புது குண்டா போடுற?!"



"ஆமாடா.. ஏற்கனவே அம்மா சொன்ன விசயம்தான். நாந்தான் அதுக்குப்பிடிகுடுக்காம இருந்துட்டேன். உனக்கு தெரியும்ல என் மாமா பையன் லண்டன்ல வொர்க்பண்ணிட்டு இருக்கான். நெக்ஸ்ட் வீக் வரானாம். நான் நேத்து பார்த்திபன் பிரச்சனைல அப்செட்டா இருந்தத பார்த்துட்டு அம்மா என் மாமா பையனோட நிச்சயம் பண்ணிரலாம்னு சொன்னாங்க. அவன் மூனு வாரம் இருப்பானாம். அதுக்குள்ள கல்யாணத்த முடிச்சு லண்டன்போற ஏற்பாடு பண்ணனும்னு அம்மா சொன்னாங்க. எனக்கும் அதான் சரினு படுது”



“ம்ம்… அசால்டா சொல்ற. ஹ்ம்ம்.. எப்டினாலும் காலேஜ் முடிஞ்சா எல்லாரும் வேலைக்காக பிரிஞ்சு போயிருவோம். இன்னும் எவ்ளோ நாள்தான் இப்டி சுத்திட்டிருக்கப்போறோம். ப்ச்.. அத யோசிச்சா நீ சொல்றதும் சரிதான். ஒவ்வொருத்தரா செட்டில் ஆவோம்…”



“தேங்க்ஸ்டா.. நீ சந்தோஷமா நான் சொல்றத புரிஞ்சிக்கிட்டாபோதும். எனக்குவேற யாரபத்தியும் கவலையில்லை”. நந்தினி கபிலனைத் தேற்றினாள். தான் முடிவுசெய்ததில் உறுதிகாட்டினாள்.

.



மறுவாரம் வெள்ளிக்கிழமை நந்தினி நிச்சயமும், அதனைத்தொடர்ந்து அடுத்தவாரம் திருமணமும் நடந்தேறியது. மூன்றாவதுவாரம் நந்தினி தன்கணவருடன் லண்டன் புறப்பட்டாள். முதலில் குறுகியகாலமும், பின்னர் நெடுங்காலம் தங்குவதாகவும் திட்டம். கபிலன் நந்தினியின் பிரிவினால் கலக்கமுற்றான். எப்படியும் நடக்கும் நிகழ்வுதான் எனினும், சட்டென குறுகிய காலத்தில் நடந்துமுடிந்ததால், கபிலன் நந்தினியின் பிரிவை உட்கிரகிக்க முடியாமல் திணறினான்.



அன்று இரவு அமுதனின் வீட்டில் தங்கினான். நந்தினியின் திடீர் பிரிவுக்குழப்பத்தில் ஆழ்ந்திருந்தவன் அமுதனிடமும் சரியாகப் பேசாமல் தரையில் கோரைப்பாயை விரித்து, தன் கையையே தலையனையாக்கி விட்டத்தைவெறித்தபடி படுத்திருந்தான்.



தேடிப் பார்க்கிறேன்

தன்மீது

சேற்றை வீசினால்,

என் கரங்களைக்

கழுவியவளை!




தேடிப் பார்க்கிறேன்...

நான்

மறந்துவிடுவதாய்

சொல்கையில்,

மறைத்துவிடுகிறாய்

என்றவளை!




நூற்றுக்கு நூறு

எனை அறிந்தவள்

என்றெண்ணியதை,

கூற்றுக்கு கூறு

அரிந்துகொண்டிருப்பவளே!,

திருப்பிக்கொடு!.

என் தோழியை

கொஞ்சம் திருத்திக் கொடு!!

நெஞ்சம் நிறைத்துக் கொடு!!!”




தொலைபேசி மணி அடித்தது. அந்த அறையில் கபிலனும், அமுதனும் மட்டும் இருந்தனர். அமுதன் ரிசீவரை எடுத்து “ஹெலோ” என்றான். மறுமுனையில் வெண்ணிலா!.



“கபிலா உனக்குதாண்டா ஃபோன்”



“.. ..”



“டேய்.. நிலா ஃபோன்ல இருக்காடா. எதோ உண்ட அவசரமாப் பேசனுங்றா. எதோ சீரியஸ் விசயம்போல”.



நந்தினியின் திடீர் பிரிவில் கவிதைவடித்து தன் பிரிவைத் துயரைத் தொடைத்துக்கொண்டிருந்தவன், அமுதனின் உலுக்கும் குரலில் தன்னிலை உணர்ந்து எழுந்து தொலைபேசி ரிசீவரை அமுதனிடமிருந்து வாங்கினான்.



“ஹெலோ.. நிலா?”



“கபிலா.. மேட்டர் கொஞ்சம் சீரியஸ். உன்னாலதான் சரிபண்ண முடியும்”



“சொல்லு, என்ன விசயம்”



“எங்க வீட்டுல மாப்ள பாக்குறாங்க. நாளைக்கு ஒருத்தர் என்ன பொண்ணு பாக்க வர்றார்”



“சரி… இதெலாம் எதிர் பார்த்ததுதான”



“நீ எங்கப்பாட்ட சொல்லி இத நிறுத்த சொல்லு”



“ஏன் நீயே சொல்லலாமே அத..”



“நானே எப்டி அப்பாட்ட சொல்றது. நீதான நம்ம லவ் மேட்டர அப்பாட்ட, சொல்றேன்ன?”



“நான் வேலைக்கி போனபின்னாடி, உங்கப்பாட்ட பேசுறேனு சொன்னேன். இப்டி நாளைக்கே பேசுனு சொன்னா எத சொல்லி கன்வின்ஸ் பண்றது. நீதான உங்கப்பாட்ட இந்த நேரத்துல பேசனும். அப்டிதான நாம பேசி வச்சிருந்தோம்”



“அப்ப நீ எங்கப்பாட்ட பேசமாட்ட”



“இப்ப பேசுற நெலையில நான் இல்லேன்னு சொல்றேன்”



“அப்ப நாளைக்கு எவனாவது வந்து சரின்னு சொல்லி, எனக்கு கல்யாணம் பண்ண எங்கப்பா பிளான் பண்ணா உனக்கு பரவாயில்லையா?”. நிலா பொரிந்தாள்.



“அப்போ நீ உங்கப்பா சொல்றவன கல்யாணம் பண்ண ரெடியா?”



வாக்குவாதம் நீடித்தது. நிலா அனைத்து பொறுப்பையும் கபிலன்மீது போட்டாள். கபிலன் நிலாவின் செய்கையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானாலும், நிதானமாய் பதில் சொல்லிக்கொண்டிருந்தான். அமுதன் செய்வதறியாது பார்த்துக்கொண்டிருந்தான்.



அப்போது நிலாவின் அந்த வார்த்தை, கபிலனை இதுவரை நினைக்காத, சொல்லாத வார்த்தையைச் சொல்ல வைத்தது.



நாம் கபிலனைத் தொடர்வோம்-19
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 20



திடீரென வீட்டில் மாப்பிள்ளை பார்க்க திட்டமிட்டதால் ஏற்பட்ட மனக்குழப்பத்தில் தன் குமுறலை கபிலன் மீதான குறையாக மாற்றிக் கொண்டிருந்தாள், நிலா. நீடித்த வாக்குவாதத்தில் கபிலன் தான் கனவு கண்ட நிலா சிறிது சிறிதாய் கரைந்துகொண்டிருப்பதை உணர்ந்தான்.



நீண்ட எண்ணப்பகிரலுக்குப்பின் நிலா சொன்னாள்.



“அப்போ நம்ம வீட்டுல பெரியவுங்க நம்மநாள கஷ்டப்படுறதவிட, நாமளே பிரிஞ்சிரலாம்.”



“நல்லா யோசிச்சுதான் பேசுறியா?”. அத்தனை நீண்ட வாக்குவாதத்திற்குப்பிறகும் கபிலன் அவசரகதியில் நிலா சொல்லுவதை ஏற்றுக்கொள்ளவேண்டாம் என நினைத்தான்.



“ஆமா, நீ எங்கப்பாட்டா வந்து இன்னைக்கே பேசுறதாயிருந்தா பேசு. இல்லேனா என்ன நடக்குமோ நடக்கட்டும்”. நிலா இறுதியாகச் சொன்னாள்.



“உன்னால உங்கப்பாட்ட என்னைய லவ் பண்ற விசயத்த சொல்லி, உங்க வீட்டுல மாப்பிள்ளை பாக்குற விசயத்த நிப்பாட்ட முடியலேனா, உன் இஷ்டம்போல செய்”. கபிலனும் பதிலுக்கு உறுதியாகச் சொன்னான்.



ஃபோன்லைன் துண்டிக்கப்பட்டது.



“என்னடா சொல்றா?” அமுதன் அக்கறையுடன் கேட்டான்.



“அவள பொண்ணு பாக்க வாராங்கலாம். அதனால இன்னைக்கே நாங்க லவ்பண்ற விசயத்த நான் அவுங்கப்பாட்ட சொல்லி, பொண்ணுபாக்க வர்றத நிப்பாட்டனுமாம்.”



“அதுக்கேண்டா உனக்கு ஃபோன் பண்றா. அவளே அவஙகப்பாட்ட சொல்லலாம்ல”



“நானும் அததான் சொன்னேன்”



“மத்த வீட்டுலமாரி இல்லாம, வெண்ணிலாவும் அவஙப்பாவும் ஃப்ரெண்ட்ஸ் மாதிரிலடா இருப்பாங்க”



“ம்ம்…”



“சரி விடு. ஏதோ டென்ஸன்ல பேசிருப்பா. நீ டென்ஸன் ஆகாம இரு”



“நானும் அப்டிதான் நினைக்கிறேன். ஆனா அவ ஏதோ பிளானோட இருக்குற மாதிரி தெரியுதுடா”



“அவ என்னை நம்பல. அதனால சேஃபா அவுஙப்பா சொல்றவன கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகலாம்னு நினைக்கிறாபோல”



“டே.. சும்மா உளறாத. அப்டிலாம் எதும் நடக்காது”



“ஹ்ஹ்ம்ம்ம்.. பாப்போம்”.



கபிலன் உறுதியாக இருந்தாலும், தான் பார்த்து பார்த்து, உறுகி உறுகி வளர்த்த காதலும், நிலாவின் மீதான நம்பிக்கையும் கலைந்துபோனதாய் நினைத்தான். ஆனால் அமுதன் அவனுக்கு ஆறுதலாகவும், கபிலன்-நிலா காதலின்மீது நம்பிக்கை தொடரும்படியும் பேசினான்.



"மனங்களை

திறந்து,

குணங்களை

இரந்து,

மாற்றங்களை

மூடமுயற்சி!.

நிறைவுற்றது -

நிறைவில்லாமல்"




நிலாவுடனான கசப்பான உரையாடலை அன்றைய இரவு அசைபோட்டபடி தூங்கிப்போனான் கபிலன். அந்த இரவுத்தூக்கம் மட்டுமல்ல, அதன்பிறகு வந்த நாட்களும் அவனுக்கு இறுக்கத்திலேயே கடந்துபோனது. நெருங்கிய தோழியும், உருகிய காதலியும் விலகிப்போனதால் இறுகிப்போன மனத்துடன் திரிந்தான். அவனுக்கு ஒரே துணை எப்போதும் நேர்மறையாகப் பேசும் அமுதனும், ஆறுதலாகப் பேசும் மாறனும். இவர்களுடன் கல்லூரி இறுதியாண்டை முடித்தான்.



வேலைதேடும் படலம் ஆரம்பித்தது. நிலா தொடர்ந்து மவுனமாகவே இருந்தாள். கபிலன் வேலை நிமித்தம் வெளியூர் செல்ல ஆயத்தமானான்.

.



அமுதன் வீடு



மறுநாள் கபிலன் வேலைக்காக மும்பை செல்ல ஆயத்தமாயிருந்தான். மாறனுடன் அமுதன் வீட்டில் கூடியிருந்தனர்.



"நிலாட்ட பேசலாமாடா" மாறன் கேட்டான்.



"அன்னைக்கு அவ்ளோ நேரம் பேசுனும்டா. இவண்ட கேளு (அமுதனைக் கைகாட்டினான்).”



மாறன் அமுதனைப் பார்த்தான்.



"ரெண்டு பேரும் அவனவன் சூழ்நிலைக்கு கரெக்டா பேசுறாங்கெ. அவதான் பிடிவாதம் பிடிக்கிறானா. இவனாவது அவ சொல்ற மாதிரி அவ அப்பாட்ட பேசாலாம்". அமுதன் தன் எண்ணத்தைச் சொல்லிவிட்டு கபிலனைப் பார்த்தான்.



"அவ பேசறதப் பாத்தா என்மேல நம்பிக்கையில்லாத மாதிரி தெரியுது. ஏண்டா.. 'எனக்கு எஙப்பாதான் எல்லாம்.. அவரு ஃப்ரெண்டு மாதிரி. இன்னைக்குகூட என்னை உப்புமூட்டை தூக்கிட்டு நடப்பாரு' அப்டி இப்டினு பெரும பேசுறவ, 'அப்பா நான் கபிலன லவ் பன்றேன்' சொல்லி மாப்பிள்ளை பாகுறததானடா நிப்பாட்ட சொல்றேன். உங்களுக்கு தெரியாததில்ல, இப்ப நான் மேட்டர் ஓப்பன் பண்ணி எங்க அப்பாக்கு விசயம் தெரிஞ்சா என்ன சொல்லி அவர கன்வின்ஸ் பண்ணுவேன்?. இன்னும் வேலைக்கே போல. எங்கப்பா அம்மாக்கு செய்றத செய்யல. இத நான் சரி பண்ண முடியம்னு நினைக்கிறீங்கெளா".



கபிலனின் கேள்விக்கு மாறனும் அமுதனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளத்தான் முடிந்தது. கபிலன் குடும்ப சூழலும், அவன் அப்பாவின் குணமும் தெரிந்திருந்ததால், அப்பொழுது சரியான சூழலில்லை என்பதை ஒப்புக்கொண்டனர்.



கபிலனே மீண்டும் சொன்னான்.



"டே.. நான் நிலாவ விட்டுட்டு யாரையும் கல்யாணம் பண்ணப்போறதில்ல. அதேசமயம் நான் இன்னைக்கு நிலமைக்கு எங்கப்பாட்ட பேசுனா எங்க லவ் மேட்சர் இன்னைக்கோட சங்கூதிரவேண்டியதுதான். நிலா அவுங்க வீட்டுக்குள்ள இருக்குற பிர்ச்சனைய சமாளிச்சு எனக்காக இருந்தான்னா, நான் ஒரு வருஷம் வேலை முடிஞ்சு லீவ்ல வர்றப்போ, அவுங்கப்பாட்ட பேசி முடிப்பேன். இல்லேனா நான் என் போக்குல போயிருவேன்.”



“சரி விடு. நீ வேலைக்குப்போ. இந்த ஒரு வருஷத்துல என்ன நடக்குதுனு பாக்கலாம். நாங்க இங்கதான இருக்கோம். நிலா கேட்டானா பேசிக்கிறோம்.” அமுதன் சொல்ல, மாறன் ஆமோதித்தான்.



“சரிடா அவ பேசுனதா பாத்தா, இனியும் அவ வந்தாலும், இந்த விசயத்துல என்னையதான் எதும் செய்ய சொல்லுவா. அவ ஒன்னும் செய்யமாட்டா. நான் இந்த ஒரு வருஷதுக்குள்ள எதும் செய்ற நெலமைல இருப்பனானு தெரியல. அதனால உங்களுக்கு பெருசா செய்ய ஒன்னும் இருக்காது.”



“சரிடா காலைல நானும், அமுதனும் ரெடியாயிருப்போம். ஸ்டேஷன் போலாம்”, மாறன் அடுத்தநாள் கபிலனை வழியனுப்ப பிளான் சொன்னான். நண்பர்கள் ஒத்துக்கொண்டனர்.



மறுநாள் கபிலனை சென்னை செல்லும் ரயிலில் வழியனுப்பினர். சென்னயிலிருந்து மும்பை செல்லும் ரயிலைப்பிடித்து சென்றடந்தான். கபிலன் தன் புது அலுவலக வேலையில் மும்முரமாயிருந்தான். அவ்வப்போது தொலைபேசியில் அமுதனிடம் பேசுவான். நிலாவைப்பற்றி விசாரிப்பான். மூன்று மாதங்கள் ஒடியது.

.



அன்று மேகமூட்டமாயிருந்த ஒரு மழைநேர மாலை நேரம். அமுதன் வீட்டின் பெரிய வாசற்கதவைத் திறந்தாள் நிலா!. எப்போதும் நேர்த்தியாக உடையணிந்து வெளியில்வரும் நிலா, அன்று ஏனோ சாதாரணமாய், கழுத்திலும், கையிலும் ஃப்ரில்வைத்த வெள்ளை நிற அரைக்கை சட்டையும், சிறிது சிறிதாய்ப் பூப்போட்ட இளஞ்சிவப்பு நிற முழுப்பாவாடையும் அணிந்து, ஒற்றைச்சடையை அழுத்தமில்லாமல் பின்னியிருந்தாள்.



சில மாதங்கள் எதுவும் பேசாதவள் அன்று வந்தும், அமுதன் எந்த கேள்வியும் கேட்காமல் அவளை வரவேற்று வீட்டினுள் அமர வைத்துப் பேசினான்.



“சொல்லு வெண்ணிலா எப்டி இருக்க? என்ன விசயமா வந்த. கபிலன்ட எதும் சொல்லனுமா?”, அவள் எண்ணத்தை அறிந்தவனாய், நேரடியாக விசயத்துக்கு வந்தான், அமுதன்.



தரையைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தவள் சட்டென்று நிமிர்ந்தாள்.



“கபிலன் எண்ட பேசுவானா?!”



“ஏன் பேசமாட்டான்”



“இல்ல.. நாந்தான் இனி எங்களுக்குள்ள எதுமில்ல, பிரிஞ்சிருவோம்னு சொல்லிட்டேன்ல. அதுக்கப்புறம் அவன் எண்டபேசல. கோவமா இருப்பான். அதான் கேட்டேன்.”



“நீ சொன்னதுல அவன் அப்செட்தான். கோவம் இருக்கும் கண்டிப்பா. ஆனா நீ பேசுனா உண்ட பேசாம இருக்க மாட்டான். அதுக்குமேல நீ என்ன விசயத்த, எப்டி பேசப்போறன்றதுலதான் இருக்கு, அதுக்கப்புறம் உண்ட எந்த மூட்ல பேசுவான்னு.”



“கண்டிப்பா பேசுவானா?. நான் வேனாம்னு சொன்னதுக்கபுறம் இவ்ளோ நாள்ல என்னபத்தி அவன் உங்ககிட்ட கேட்டிருக்கானா?”. ஏக்கமும், எதிர்பார்ப்பும் கலந்திருந்தது நிலாவின் கேள்வியில்.



“அவன் எங்ககிட்ட பேசம்போதெல்லாம் கேக்குற முதல் கேள்வியே உன்னைய நாங்க பார்த்தமா, நீ எப்டி இருக்கனுதான்”



அமுதன் சொல்லச்சொல்ல நிலாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. சிறிது நேரம் அடக்கமுடியாமல் அழுதாள். அவள் மனம் நிலையாகட்டுமென அமுதனும் அமைதியாய் இருந்தான். சிறிது நேரத்திற்குப்பின் நிலா அழுகையை நிறுத்தினாள்.



“என்ன விசயம் பேசனும்? நீ எண்ட சொல்லமுடியலேனா பரவாயில்ல, அவண்டயே சொல்லு. நான் ஃபோன் நம்பர் தர்றேன்.” அமுதன் நிலா போக்கிலேயே பேசினான்.



“இல்ல.. நீங்க ரெண்டுபேரும் எவ்ளோ க்ளொஸ்னு எனக்குத் தெரியும். அதான்.. உங்கட்டசொல்ல வந்தேன்…” . நிலா சிறிதாய் தடுமாறினாள். பேச்சில் தயக்கம் தெரிந்தது.



“சரி சொல்லு. என்ன விசயம்”



“என்னைய நாளைக்கு நிச்சயம் பண்ண மாப்பிள்ளை வீட்டுக்காறங்க வர்றாங்க”. சொல்லியவள் கண்களில் மீண்டும் கண்ணீர் வந்தது.



“நாளைக்கா? என்ன சொல்ற நிலா?!”



“ஆமா, நாளைக்குதான். எனக்கு என்ன செய்றதுனு தெரியல. கபிலன் எங்கப்பாட்ட பேசுனா இத நிறுத்திரலாம்னு தோனுது”



“நாளைக்கு நிச்சயம்ங்ற. எப்டி நைட்டுக்குள்ள பேசி இத சரி பண்ணுவ”



“கபிலன் நினச்சா முடியும்”, நிலாவின் குரலில் நம்பிக்கையைவிட பிடிவாதம் தொனித்தது அதிகமாய்.



“சரி நீ பேசு. நான் அவண்ட ஃபோன் பண்ணி இன்னைக்குப் பேசுவனு சொல்லிர்றேன்”



“தேங்க்ஸ்.” அமுதனிடம் கபிலன் ஃபோன் நம்பரை வாங்கிக்கொண்டு சிறு நேரத்தில் கபிலனிடம் பேசப்போவதாகச் சொல்லிவிட்டு உடனே கிளம்பிச் சென்றாள்.



அமுதன் கபிலனை அழைத்து விசயத்தைச் சொன்னான்.கபிலன் நிலாவிடம் பேசுவதாக உறுதியளித்தான். அடுத்த ஒரு மணிநேரத்தில் கபிலனுக்கு ஃபோன் வந்தது. ரிசீவரை எடுத்தான் கபிலன். மறுமுனையில் பெண்குரல் கேட்டது.



“நான் கபிலன் பேசுறேன். நீ..ங்க?”



“நான்.. மேகலை பேசுறேன்”



கபிலன் அதிர்ந்தான்.

.



நாம் கபிலனைத் தொடர்வோம்-20
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 21



“நிலா பேசுவானுதான சொன்னான். மேகா எப்டி இப்போ.. இவ்ளோ நாள் கழிச்சு?!.. கபிலன் சில மணித்துளிகள் மவுனமாய்ச் சிந்தித்தான்.



“ஹலோ.. ஹலோ… என்ன நான் யார்னு மறந்துட்டீங்களா”?



"அதில்ல மேகா.. எப்டி இருக்க..? என்ன.. திடீர்னு..? மாறன் இருக்கானா?". கபிலன் சற்று தடுமாறினான்.



"ஏன்.. நான் பேசகூடாதா உங்ககிட்ட. அண்ணே இருந்தாதான் பேசுவீங்கெளா?". மேகலை உரிமையுடன் கேட்டாள்.



"அப்டிலாம் இல்ல மேகா. ரொம்ப நாளாச்சே.. நாம பேசி அதான் என்னனு கேட்டேன்"



"நான் சொன்னேன்ல.. எப்பவும் உங்கமேல இருக்குற என்னோட காதல் குறையாது, மறையாதுன்னு. மூனு மாசம்தான் வெயிட் பண்ணுவேன். நிலா உங்க காதல ஏத்துக்கலேன்னா, என்னபத்தி யோசிப்பீங்கன்னு சொன்னேன்ல.. இப்ப நிலாவே உங்க காதல வேணாம்னு போய்ட்டால்ல.. இப்பவாச்சும் உங்களயே நினச்சிட்டிருக்குற என்ன ஏத்துப்பீங்கெலா.. நிலா மாதிரி கண்டிஷன்லாம் போடாம நீங்க என்ன சொல்றீங்கெலோ.. எப்ப சொல்றீங்கெலோ.. அப்ப நான் என்ன செய்யனுமோ அத செய்றேன்". மேகா பட படவென மனதைத் திறந்து கொட்டினாள்.



"மேகா.. நீ கடைசியா நாம பேசுனப்போ, என்னப்பத்தி புரிஞ்சிக்கிட்டுதான் அமைதியா போறனு நினச்சேன். ஆனா.. இவ்ளோ நாள் கழிச்சு இன்னும் நீ என்ன புரிஞ்சுக்காம பேசுற"



"புரிஞ்சநாளதான் பேசுறேன் கபிலா. இப்ப நீங்களும் நிலாவும் பிரிஞ்சிட்டீங்க.. அவ வேற கல்யாணம் பண்ணிக்கப்போறா. இப்ப நான் உங்ககிட்ட, என் லவ்வ ஏத்துக்கோங்கனு கேக்குறதுல என்ன தப்பு?", மேகா பிடிவாதம் காட்டினாள்.



"மேகா… நீ சொல்றது தப்பு. நானும் நிலாவும் பிரிஞ்சிருக்கலாம். ஆனா அவமேல நான் வச்சிருக்குற காதல் என்னக்கும் மறையாது. அவளும் ஏதோ சமாளிக்கமுடியாத சூழல்ல இருக்குறானு நெனைக்கிறேன். அவ வேற கல்யாணம்லாம் பண்ணமாட்டா". கபிலன் தன் காதலின் ஆழத்தைக் காட்டினான்.



"போதுமா நிலா?. நான் சொன்னப்போ நம்பல. இப்ப நீயே எல்லாத்தையும் கேட்டேல. இனியாவது கபிலன புரிஞ்சு நடந்துக்கோ"



"நிலாவா…?!", மேகா ஃபோனைவிட்டு விலகி வேறு திசையில் பேசியதைக்கேட்டு கபிலன் குழம்பினான்.



மேகா கபிலனிடம் பேசுவதை அதுவரை கேட்டுக்கொண்டிருந்த நிலா, கபிலனின் பதிலில் பூரித்துப்போனாள்.



"ஆமா, கபிலன். நிலாதான் என்கூட இருக்கா. சாரி. நான் நம்ம கடைசியா மீட்பண்ணப்போ, நாம பேசுனதுல இருந்தே உங்கள நல்லா புரிஞ்சிக்கிட்டேன். இப்ப நான் பேசுனெதெல்லாம் உங்க மனச நிலாவும் நல்லா புரிஞ்சிக்கனுங்குறதுக்காகதான். நிலாட்ட பேசுங".



கபிலனுக்கு ஒருவகையில் நிம்மதி. மேகாவினால் மீண்டும் ஒரு மனக்கஷ்டம் வருமோவென்று பேசஇயலாமல் தயங்கினான். இது எல்லாம் நிலாவுக்காக என நினைத்தபோது நிம்மதிப் பெருமூச்சுவிட்டான். ஆனால் அது அடுத்த சில நிமிடங்களில் காணாமல்போகுமென்று அவன் நினைக்கவில்லை.



"ஹ..ஹலோ..". நிலா தயக்குத்துடன் ஆரம்பித்தாள்.



"சொல்லு நிலா, எப்டி இருக்க?"



"சாரி, கபிலா. நாந்தான் உன்ன சரியா புரிஞ்சுக்காம ஏதேதோ பேசி நாம பிரிஞ்சிரலாம்னு சொல்லிட்டேன். ஆனா என்னால நிம்மதியா இருக்க முடியல"



"அதான் இப்ப பேசிட்டோம்ல எல்லாம் சரியாயிடும். சொல்லு உங்க வீட்டுல சொல்லி சமாளிச்சிட்டியா?"



"அதுக்குத்தான் உனக்கு ஃபோன் பண்ணவந்தேன். நாளைக்கு என்னைய நிச்சயம் பண்ண மாப்ள வீட்டுக்காரங்க வர்றாங்க".



"என்ன சொல்ற நிலா…". கபிலன் அதிர்ந்தான்.



"ஆமா, கபிலா. நீ நினச்சாதான் இத நிறுத்த முடியும்."



"நானா..? என்ன நிலா.. இன்னும் நீ சொல்றதயே சொல்லிட்டிருக்க. நான் இப்ப ஒரு ஃபோன்கால் செஞ்சா எல்லாம் சரியாயிடுமா? நீ எண்ட பேசுற நேரத்துக்கு உங்கப்பாட்டா விசயத்த சொல்லிருக்கலாம்ல. நாளைக்கு நிச்சயம்ங்ற? இதென்ன இன்னைக்குதான் முடிவு பண்ணாங்களா?"



"அப்ப நீ சொல்றததான் சொல்லிட்ருப்ப? எங்கப்பாட்ட பேசமாட்ட, அப்டிதான?". கபிலன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தனக்குள் இருந்த கேள்வியையே மீண்டும் கேட்டாள், நிலா"



அவர்களுக்கிடையே வாக்குவாதம் மீண்டும் கடைசியாக பேசியே தொனியிலேயே சென்றது. மீண்டும் ஒருவரையொருவர் கேள்வி கேட்டு பதிலே இல்லாமல் அந்த உரையாடலை முடித்தனர். மேகா தலையில் அடித்துக்கொண்டாள். கபிலன் சற்று எரிச்சலும், அதிக மன அழுத்தத்திலும் ஃபோனை வைத்துவிட்டு அருகிலேயே நின்றிருந்தான். நிலா மீண்டும் பேசுவாள் என நினைத்தான். ஆனால் நிலா மன இறுக்கத்துடன் மேகாவிடம் சொல்லாமலேயே அந்த இடத்தைவிட்டு சென்றிருந்தாள்.

.



கபிலன் மும்பை சென்று ஒரு வருடம் கழிந்திருந்தது. ஆண்டு விடுமுறை ஒரு வாரம் எடுத்துக்கொண்டு ஊர் திரும்பினான். நாகர்கோவில் ரயில் நிலையம் சுறுசுறுப்பாக இருந்தது. ரயிலில் இருந்து இறங்கியோர் முகங்களில் ஊர் வந்துசேர்ந்த உற்சாகம். ரயிலுக்காக காத்திருந்தவர்களிடம் வெளியூர் செல்லும் பரபரப்பு. பிளாட்பார சுமை தூக்குவோரிடம் கூலிவேலைக்கான வழக்கமான எதிர்பார்ப்பு.



இவை எவையும் ரயில் நிலையத்தில் கபிலனின் வருகைக்காக காத்திருந்த அமுதனையும், மாறனையும் சலனப்படுத்தவில்லை. சென்னை ரயில் வந்துசேர்ந்தது. கம்பார்ட்மெண்ட் அருகே சென்று கபிலனை வரவேற்றனர் இருவரும். கபிலன் உற்சாகமாகச் சிரித்தான். பதிலுக்கு இருவரும் சிறிதாய் சிரித்துவிட்டு தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். கபிலன் அதைக்கவனித்தான். ஏதோ புரிந்தவனாய் மெலிதாய்ப் புன்னகைத்தான்.



ஆட்டோவில் ஏறி மூவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். ரயில்நிலைய பரபரப்பு அடங்கி ஊர்செல்லும் சாலையை அடைந்தது ஆட்டோ. மாறனும், அமுதனும் செய்வதறியாது கைகளைப் பிசைந்துகொண்டிருந்தனர்.



"என்னடா ஊர்ல எல்லாரும் சௌக்கியமா?". கபிலன் பேச்சுக்கொடுத்தான்.

சில நிமிடங்கள் இருவரும் கபிலனிடம் எதுவும் பதில் பேசவில்லை.



"என்னங்கடா.. நானும் வந்ததிலயிருந்து பாத்துட்ருக்கேன், மூஞ்சிய பாத்தே பேச மாட்டேங்றேங்கெ. என்னடா ஆச்சு. ஊர்ல எதும் பிரச்சனையா?"



"இல்லடா… உன்..ட.. எப்டி சொல்றதுனு யோசிச்சிட்ருக்கோம்". மாறன் தயக்கமாய்ச் சொல்லிவிட்டு, அமுதனைப் பார்த்தான்.



"டே .. எதிர்பார்த்தது…”



"என்ன நிலா கல்யாணம் பண்ணிக்கிட்டாளா!"



அமுதன் ஆரம்பிக்க, இடைமறித்த கபிலன் அமைதியாய் கேட்டான்.



மாறனும், அமுதனும் அமைதியாய் இருந்தனர்.



"அட.. இதுக்குத்தான் இவ்ளோ யோசிச்சீங்கெளா. இதான் அன்னக்கே நடக்கும்னு தெரியுமேடா..", கபிலன் தன் மனவலியை வெளியே காட்டாமல், பதட்டமில்லாமல் சொன்னான்.



"என்னடா.. நீ எப்டி இத சாமளிப்பனு ரொம்ப பயந்துட்டிருந்தோம்டா”. வழக்கத்துக்கு மாறாய் அமுதன் சீரியஸாகப் பேசினான்.



“டேய்.. என்னைக்கு அவ பிரச்சனைய என் பிரச்சனையா காட்டி, அவளயே சமாதானப்படுத்திக்கிட்டாளோ, என்னைக்கு ஒரு விசயத்த பேசிச்சமாளிக்காம, நாந்தான் காரணம்னு சொல்லி, நாம பிரிஞ்சிரலாம்னு சொன்னாலோ, அன்னைக்கே எனக்கு மனசு விட்டுப்போச்சுடா. ஆனா, அவளா ஃபீல்பண்ணி வந்தா எந்த கேள்வியும் கேக்காம எப்பவும்போல அவகூட இருக்கனும்னு நெனச்சுதானிருந்தேன். அது நடக்கலேனா பெரிய அதிர்ச்சி ஒன்னுமில்ல. சரி நிலாவ கடைசியா எப்ப பார்த்தீங்கெ. கல்யாணத்துக்கு நீங்கெ போனீங்கெலா?”



“எங்க வீட்டுக்கு வந்து அழுதுட்டுப்போனால, அன்னைக்குதான் நாங்க அவள கடைசியா பார்த்தோம்டா” - அமுதன்.



“அவ கல்யாணத்துக்கு யாரையும் கூப்டல. மேகாட்டகூட சொல்லலடா. அவ ஊரவிட்டுப்போய்ட்டானு தெரியும், எங்க, எப்போனு தெரியலடா”- மாறன்.



“சரிடா, இத்தோட இந்த விசயத்த விட்ருங்க. இனி இதப்பத்தி பேசாதீங்கெடா”.



“ம்ம்…”.



இருவரும் கபிலன் சொல்லை ஆமோதித்தனர். கபிலன் ஆட்டோவின் தார்ப்பாயில் தலையைச் சாய்த்தான்.

.



சோழராஜ்ஜியம் - தஞ்சாவூர்



வல்லவன் வந்தியத்தேவன் தன் செழுமையான கருப்புக்குதிரையில் தஞ்சாவூர் அரண்மனை செல்லும் ராஜபாட்டையில் நிதானமாக சென்றுகொண்டிருந்தான்.

வழிநெடுகிலும் செழித்து வளர்ந்த மரங்களின் பசுமை, வல்லவனுக்கு காய்ந்த சருகுகளாய்க் காட்சி தந்தது. குடிமக்களின் குன்றாத மகிழ்வும், அதன்வெளிப்பாடான குதூகல உரையாடல்களும், சிரிப்பொலியும் வல்லவனுக்கு மயான அமைதியாய்ப்பட்டது.




வல்லவனின் குதிரை ராஜபாட்டையில் முன்னேறிவைக்கும் ஒவ்வொரு கால்குழம்படிக்கும், அவனைவிட்டு அந்த பூலோகமே பின்னோக்கி ஓடிஒதுங்குவதாய்ப் பார்த்தான். அதில் தொலைவில் பழையூர் இளையராணி நந்தினியும், அதற்குப்பின் கடம்பூர் இளவரசி மணிமேகலையும், அதைத்தொடர்ந்து பழையாறை அரசி குந்தவையும் பின்னோக்கி விலகிப்போய்க்கொண்டிருந்தனர்.



வல்லவன் உறைந்துபோய் குதிரையின்மீது சரிந்துபடுத்தான்.

.




நாகர்கோவில் காலனி



“டே.. டேய்ய்..” ஆட்டோவின் பக்கவாட்டில் தலைசாய்த்து நன்கு தூங்கிப்போன கபிலனை, உலுக்கி எழுப்பினான் அமுதன்.



“வீடு வந்துருச்சுடா, எந்திரி”.



கண்விழித்து சுயநினைவு வந்தவனாய் எழுந்தான், கபிலன். ஆட்டோ கபிலன் வீட்டு வாசலில் நின்றது. கபிலனின் அப்பா நின்றுகொண்டிருந்தார்.



“அப்பா, இப்டிலாம் வாசல்ல நின்னு நம்மல கூப்டுறதுக்கு நிக்கமாட்டாரே?!”. கபிலன் யோசித்துக்கொண்டே ஆட்டோவிலிருந்து இறங்கினான்.



அப்பாவை நோக்கி தயக்கத்துடன் நடந்தான். அப்பா கையை கவனித்தான். அதிலொரு புகைப்படம் இருந்தது...



நாம் கபிலனைத் தொடர்வோம்-21
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 22



வாசலில் நின்றிருந்த அப்பாவின் கையிலிருந்த புகைப்படம் கபிலன் மனதைக் கலவரப்படுத்தியது.



"அது நிலாவோடா ஃபோட்டோவா?? நான் எதுவும் அப்டி வீட்ல வைக்கலயே! எல்லாம் முடிஞ்சுபோன சமயத்துல லவ்மேட்டர் தெரிஞ்சிருச்சோ.."



கபிலன் மனதில் பல கேள்விகள்.. தயக்கத்துடன் வீட்டு வாசலை நோக்கி நடந்தான். அவன் அப்பா அவனை தீர்க்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.



வீட்டு வாசலை அடைந்தவுடன் கபிலனை ஏறயிறங்க பார்த்தார் அவன் அப்பா.



“என்னப்பா வேலையெல்லாம் பரவாயில்லையா”



“ம்.. ஒன்னும் பிரச்சனையில்லப்பா”



எதையோ கேட்பார் என பதைபதைப்புடன் வீட்டுவாசலை அடைந்த கபிலனிடம் நிதானமாக விசாரித்தார், அப்பா.



“சரி, போய் குளிச்சிட்டு சாப்டு”



“சரிப்பா”



“ஈவ்னிங் பாக்கலாம்டா”. பின்னால் ஆட்டோவினருகில் நின்றுகொண்டிருந்த அமுதன், மாறனைப் பார்த்துச் சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றான்.



“யே.. இங்க வாங்கப்பா”



விடைபெற்றுச் செல்லத்திரும்பிய நண்பர்களை நிறுத்தினார், கபிலனின் அப்பா!

தயங்கிய மாறனும் அமுதனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே கபிலனின் அப்பாவிடம் சென்றனர்.



“இந்த பொண்ணு எப்டிப்பா இருக்கா?. உங்களுக்கு பிடிச்சிருக்கா?. கபிலனுக்குப் பாத்திருக்கோம்”.



கையிலிருந்த பெண்ணின் புகைப்படத்தை மாறனிடமும், அமுதனிடமும் காட்டினார், கபிலனின் அப்பா. மீண்டும் தங்களுக்குள் பார்த்துக்கொண்ட நண்பர்கள், பதில் சொல்ல தயங்கினர்.



“இல்லப்பா.. கபிலன்ட…”, அமுதன் சொல்லிமுடிக்கத் தயங்கினான்.



“எல்லாம் முழுசா தெரியாட்டினாலும், காலனிக்குள்ள நடந்தது எங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்லப்பா.. ம்.. இனியும் லேட் பண்ணவேண்டாம்னு பாக்குறோம். அவன்வேற அடிக்கடி சோழப்பரம்பரையிலருந்து வந்தமாதிரி பேசுறான். இப்ப அவன் இருக்குற மனநிலை எனக்குப் புரியுது. உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். எப்டியும் உங்கட்ட பேசாம அவனால ஒரு முடிவுக்கு வரமுடியாது. அதான் உங்கட்ட சொல்லிட்டேன். இன்னைக்கு சாய்ந்தரம் பாக்கும்போது பேசி முடிவு பண்ணுங்கப்பா.”



“சரிப்பா”.



இருவரும் ஒருங்கே தலையாட்டினர். கபிலனின் அப்பா மிகக்கண்டிப்பானவர் எனத்தெரியும். ஆனால் இவ்வளவு பக்குவமாக கபிலன் விசயத்தை கையாள்வார் என அன்றுதான் நண்பர்கள் பார்த்தனர். தங்கள் வீடு திரும்பினர்.

.



அன்று மாலை - காலனி கல்லூரி டீக்கடை



“எப்டிறா.. உடனே கல்யாணம்லாம் சரிப்படுமா டா”



கபிலன் நண்பர்களுடன் தன் மனக்குழப்பத்தை கொட்டினான்.



“கரெக்டுதாண்டா. கஷ்டந்தான். யோசிச்சு முடிவுபண்ணலாம்”. மாறன் கபிலன் மனநிலைக்கு ஏற்றவாறு நினைத்தான். கபிலன் அமுதனைப் பார்த்தான்.



“என்ன கரெக்டு? .. என்ன கஷ்டம்?. டே.. நீ என்ன நிலா அவ கல்யாணாம் பண்ணிக்காம இருப்பா.. உன்னையத்தேடி வருவானு நினைக்கிறியா?”



“இல்ல..”



“அப்புறம் என்ன.. உனக்கு கல்யாணம் சரிப்படுமா, இல்லயாண்ட்டு… உனக்கு மட்டுமில்ல, உங்கப்பா அம்மாவுக்கு, உன்னால எங்களுக்குனு எல்லாருக்கும் நிம்மதியா இருக்கனும்னா, நீ உங்க வீட்டுலபாக்குற பொண்ணக் கல்யாணம் பண்ணிகிட்டு செட்டில் ஆறதுதான் பெஸ்ட். உங்கப்பா பாத்து வச்சிருக்குற பொண்ணு நல்லா இருக்கா. உனக்கு ஓகேனா கல்யாணத்துக்கு உங்கவீட்டுல ஓகே சொல்லு. இல்லேனா வேறபொண்ண சீக்கிரம் பாக்க சொல்லு”. அமுதன் தெளிவாகச் சொன்னான்.



“டே அவன் சொல்றதும் சரிதாண்டா”, மாறன் அமுதன் சொன்னதை ஆமோதித்து கபிலனைப் பார்த்தான்.



கபிலன் டீ கடைக்காரர் கொடுத்த டீயை வாங்கிக் கொஞ்சம் கொஞ்சமாய் உறிஞ்சிக்கொண்டிருந்தான்.



அமுதன் சொன்னது சரியெனப்பட்டாலும் உடனே அப்பா சொன்ன பெண்ணிற்கு சம்மதம் சொல்ல மனம் வரவில்லை. ஆழ்ந்த அமைதியில் இருந்தான். கடந்த மூன்று வருடம் நிலாவின் நினைவாக அவன் பயணித்த நெடிய வாழ்க்கை ஒரு குறும்படமாக விரைந்து ஓடியது மனதினுள். இன்னொரு டீயை வாங்கிக்குடித்தான். அமுதனும், மாறனும் கபிலன் பேசட்டும் எனக்காத்திருந்தனர்.



பலமணித்துளிகள் கடந்தது. கபிலன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் மௌனம் கலைத்தான்.



“சரிடா.. அவளே என்னைய வேணாம்னுட்டு சொல்லாமக்கூட ஊர விட்டுப்போய்ட்டால. அவ கல்யாணப் பண்ணப்போ நான் பண்ணாம ஏன் இருக்கனும். நானும் பண்ணிக்கிறேன்.”



“இத, ரெண்டு டீ, நாலு பஜ்ஜிய காலிபண்ணாமயே சொல்லிருக்கலாமே”, அமுதன் சொல்ல, மூவரும் சிரித்தனர்.



“சரிடா.. நான் அப்பா காமிச்ச பொண்ணோட ஃபோட்டோவ சரியா பாக்கல. நீங்க நல்ல பாத்தீங்கெல்ல.. உங்களுக்கு ஓகேதான?.. நான் வீட்டுக்குப்போய் திரும்ப நிதானமாப் பாக்குறேன். எல்லாம் ஓகேனா சரின்னு சொல்லிர்றேன்.



“சரிடா போய் அந்த வேலையப் பாரு”. அப்டியே டீ, பஜ்ஜிக்கு பில்ல கட்டிரு. மாறன் சிரித்தான்.



நண்பர்கள் மூவரும் வீடு திரும்பினர்.

.



சோழநாட்டின் காஞ்சிபுரம்



விழாக்கோலம் பூண்டிருந்தது காஞ்சிபுரம். ராஜபாட்டையில் ஒவ்வொரு அடிக்கும் குழைதள்ளிய வாழைக்கன்றுகளும், அந்த வாழைக்கன்றுகளைப் பிணைக்கும்படி தென்னையோலைத் தோரணங்களும் ராஜபாட்டையின் இருமருங்கிலும் பசுமைவேலியை ஏற்படுத்தியிருந்தன. பாட்டையின் குறுக்கே மாவிலைத்தோரணங்கள். அந்த மாவிலையிடையே மல்லிகைப்பூங்கொத்துகள். சிறு தெருக்கள்தொட்டு, சிகரமாய் நிற்கும் காஞ்சி அரண்மனைவரை அலங்காரமும், மக்களின் அதீத அன்பும் அந்த ராஜபாட்டையில் குதிரையில் ஊர்வலமாய்ச் சென்றுகொண்டிருந்த வல்லவன் வந்தியத்தேவனை பிரமிக்க வைத்தது.



சிற்றரசர்களும், காஞ்சி மக்களும் வாழ்த்தொலி எழுப்ப, வல்லவன் குதிரை அரண்மனை வாயிலை அடைந்தது. இளையபிராட்டி குந்தவையின் தந்தையும் சோழப்பேரரசின் சக்கரவர்த்தியுமான சுந்தரச்சோழர் தன் மனைவி மற்றும் இளவரசர்களுடன் வாயிலில் வல்லவனை வரவேற்று மாலையிட்டார். விண்வெளி பிளக்க தஞ்சாவூர் மேளங்கள் முழங்கின. குதிரைப் படைகளின் குழம்பொலி தாழமிட்டன. தேவரடியார்ப் பெண்டிரின் நடனம் கலைகட்டியது. யானைப் படைகள் மணமகன் வரவேற்புப் பதாகைகளையேந்தி வரிசைகட்டி நின்றன. வேதங்கள் முழங்க, அரசகுல மக்கள் வாழ்த்த, தஞ்சை மக்கள் போற்ற, வல்லவர் வந்தியத்தேவர் இளையபிராட்டி குந்தவையின் கழுத்தில் மாலையிட்டு மங்கலநாணிட்டார்.

.




நாகர்கோவில் கபிலன் வீடு - அன்று மாலை



“நான் முடிவு பண்டேன்ன்ன்.. நீதான் என் வொய்ஃப்.. நீ இல்லேனா வேற கல்யாணமே பண்ணமாட்டேன்..” ..”யப்பா ...என்னா டயலாக்… எங்க தம்பி அந்த மானஸ்தன காணோம்”.



கபிலனுக்கும், பெற்றோர் நிச்சயித்த பெண்ணான சங்கவைக்கும் திருமணம் முடிந்த அன்று மாலை. கபிலனின் அப்பாவும் கடினப்பேர்வழியுமானவரின் மென்மையான வழிகாட்டுதலிலும், இப்போது நகைக்கும் அதே நண்பர்களின் அறிவுறுத்தலுக்கும் உட்பட்டு, தன் காதலியின் தன்னிச்சையான முடிவால் பாதிக்கப்பட்டு, அந்நியப்பெண்ணின் திருமணத்திற்கு சம்மதித்த கபிலனைச் சுற்றி வளைத்து நண்பர்கள் கேலிசெய்துகொண்டிருந்தனர். அமுதன் அதைத்தொடங்கி வைத்தான்.



“பேசுங்கடா… இன்னைக்கு பொழுது போகனும்ல..பேசுங்க.” கபிலன் நண்பர்களை அடக்க முயலவில்லை.



“டேய்.. நாம சொன்னதத்தான அவன் செஞ்சான். அதுவும் நிலா இவனோட விருப்பம், முடிவு எதும் கேக்காம, கல்யாணம் பண்ணிட்டு ஊரவிட்டுப் போனப்பின்னாடிதான இவன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான். ஜாலியா பேசுறதுக்கு வேற டாபிக் புடிடாடா அமுதா!.



“சரி.சரி.. சும்மா கொஞ்சம் ஓட்டலாம்னு சொன்னேன். நீ சொன்னது சரிதான் மாறா. நாம விட்றுந்தா, நிலா மக கல்யாணத்துக்கு இவன் போய் மாலை போட்டு வந்திருப்பான், பேச்சுலரா”. அமுதன் மாறன் கருத்தை ஆமோதித்தான்.



நேரம் இரவு பத்துமணியை நெருங்கிக்கொண்டிருந்தது.



“கபிலன் தூங்கட்டும்பா.. நேரமாச்சுல்ல… காலையில உங்க அரட்டைய கண்டினுயூ பண்ணுங்க”.



அமுதனின் அம்மா வந்து நண்பர்கள் அரட்டையைக் கலைத்தார். அமுதன், மாறன் மற்றும் நண்பர்கள் கபிலனைப் பார்த்து நக்கலாய்ச் சிரித்துக்கொண்டே விடைபெற்றனர்.



கபிலன் தயக்கமும், ஒருவித பரபரப்பிலும் உறங்கும் அறைக்குச் சென்றான். கதவைத் திறந்த புது மனைவியைப் பார்த்தான்.



அவன் புது மனைவி சங்கவை பட்டுப்புடவையுடுத்தி, தலைகொள்ளாத மல்லிகைப்பூச்சரம் அணிந்து புதிதாய் வாங்கிய மரக்கட்டிலில் அமர்ந்திருந்தாள், கண்களில் நீர் சொரிய.



கபிலனுக்கு சிறிய அதிர்ச்சி.

.

நாம் கபிலனைத் தொடர்வோம்-22
 

Latest posts

New Threads

Top Bottom