Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL சிவதாசன் எனும் நான் - Tamil Novel

Status
Not open for further replies.
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்- 20

மாறனும் விக்ரமனும், ருத்ராதேவியையும் யாழையும் சந்தித்துவிட்டு, விருப்பத்துக்குரியவளைப் பார்த்த சந்தோசமும், பிரிந்து வந்த துக்கமும் கலந்த மனநிலையோடு கானகத்திலிருந்து வெளியே வந்தனர்.

அங்கே, நண்பர்களிருவரும் கானகத்திற்குச் செல்லும் முன் விட்டுச் சென்ற அவர்களின் குதிரைகள் மிகவும் கவலையுடனும், சோர்வுடனும் நின்றபடி கானகத்தையே பார்த்துக் கொண்டிருந்தன...

குதிரைகளைக் கண்டு கவலையுற்ற மாறன், "இவைகளை மறந்து களித்து இருந்துவிட்டோமே நண்பா!" என்று விக்ரகமனிடம் கூற,

விக்கிரமன் குதிரையின் அருகில் சென்று, "என்னடா இப்படி இருக்கிறீர்கள்? எங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் குறிப்பு மூலமாகத் தெரியப்படுத்துகிறோம் என்று கூறிவிட்டுத் தானே சென்றோம்?" என்று கேட்டான்.

"எந்தக் குறிப்பும் வரவில்லை என்பதே, இவர்கள் சோகமாக நிற்பதற்கான காரணம் போலிருக்கே! அதோடு இவர்கள் சாப்பிடவுமில்லை போலிருக்கிறது நண்பா' என்று மாறன் கூற,

"ஏன்டா? இவ்வளவு புல்வெளிகள் இருக்கின்றன சாப்பிட்டு இருக்க வேண்டியதுதானே? என்று கேட்டவன், அருகில் இருந்த இலை தழைகளைப் பறித்துத் தங்களது குதிரைகள் முன் போட்டுவிட்டு, அவை சாப்பிட்டதும், இரு நண்பர்களும் குதிரைகளில் ஏறிப் பறந்தனர்.

மாறன் தன் அரண்மனைக்கு வந்ததும், பணியாளை அனுப்பித் தூதுவனை வரழைத்தான்.
"வணங்குகிறேன் இளவரசே!" என்று இடைவரை குனிந்து வணங்கினான் தூதுவன்.

"தொண்டைமண்டல பெருங்கிள்ளி பாண்டியரிடம் சென்று, நான் காஞ்சியை நோக்கிப் படை எடுக்கச் சம்மதிக்கிறேன் என்று இந்த ஓலையில் எழுதி இருக்கிறேன் இதைக் கொண்டு போய்க் கொடுத்து, அவருடைய ஆசீர்வாதத்தையும் கோரினேன் என்று கூறு." என்றான்.

"உத்தரவு இளவரசே!" என்று கூறி ஓலையை வாங்கிக்கொண்டு சென்றான் அந்தத் தூதுவன்.

பிறகு மதுரையில் உள்ள சிறந்த கட்டிடக் கலைஞரை வரவழைத்தான்.

"சிவகங்கைச்சீமை செல்லும் ராஜபாட்டையிலிருந்து வலது புறம் விலகிச் சென்றால் வரும், மாதவபுரத்திற்கு அடுத்து ஓர் அடர்ந்த வனம் இருக்கிறது. அந்த வனத்தின் நடுவில், வைகைக் கரை ஓரமாக எழில்மிகு வசந்தமண்டபம் கட்ட விரும்புகிறேன். நாளை நீங்கள் சென்று அந்தக் கானகத்தைப் பார்த்து வாருங்கள்" என்று கூறினான்.

"அந்தக் கானகம் மிகவும் இருளடைந்த தாயிற்றே இளவரசே! மேலும் அங்கு மனிதர்கள் நடமாடுவது கிடையாது அப்படியிருக்க அந்தக் கானகத்தில் ஏன் வசந்த மண்டபம் கட்ட வேண்டும்? தாங்கள் மிகச்சிறந்த ரசிகன். தாங்கள் விரும்பினால் வேறொரு நல்ல இடத்தைத் தேர்வு செய்யலாமே." என்று மிகவும் பணிவுடன் தன் எண்ணத்தைக் கட்டிடக்கலைஞர் கூறினான்.

அப்பொழுது அங்கே வந்த வேதநாயகிதேவி, "அந்தக் கானகத்தில் மிகப்பெரிய, அரிய பொக்கிஷம் ஒன்று மறைந்திருக்கிறது... அதெல்லாம் நம் கண்களுக்குப் புலப்படாது. எனவே வேறு எந்த ஓர் ஐயமும் இல்லாமல் தாங்கள் சென்று, அந்த இடத்தில் மிகவும் அழகான ஒரு வசந்த மண்டபத்தைக் கட்ட ஏற்பாடு செய்யுங்கள்!" என்று ஆணையிட்டார்.
வேதநாயகிதேவியார் என்ன சொல்கிறார் என்பது சரிவரப் புரியாவிட்டாலும், அவருடைய ஆணையை நிறைவேற்றும் பொருட்டு, "உத்தரவு மகாராணி!" என்று கூறி இடைவரை குனிந்து வணக்கம் சொல்லிவிட்டுக் கட்டிடக்கலைஞர் சென்றுவிட்டார்.

"என்ன அம்மா இவர்?!! அந்த இடத்தைப் பற்றி நான் முழுதாக விவரிக்கவில்லை... வசந்த மண்டபம் கட்டுவதற்கான எந்த ஒரு திட்டங்களும் கூறவில்லை... அவர் இஷ்டத்திற்கு, 'உத்தரவு மகாராணி!' என்று கூறி விட்டுப் போய் விட்டார்? என்று மாறன் தன் அன்னையிடம் கேட்டான்.

"இவர் மிகச் சிறந்த கட்டிடக் கலைஞர்! நம் தேசத்தில் பல குடைவரைக் கோயில்கள், ஆடலரங்குகள், உல்லாசக் கூடங்கள் போன்ற அழகிய கட்டிடங்கள் கட்டித் தந்தவர்... இவருடைய மூதாதையர் காஞ்சி மன்னர்களின் கீழ் பணிபுரிந்து கற்றளிகள் கட்டியவர்கள் என்று கூறுவார்கள்... இப்பொழுது காஞ்சிபுரம் சோழர்கள்வசம் ஆனதனால் இங்கே குடி பெயர்ந்திருக்கின்றனர்... இவர்களுக்கு நீ இடத்தைக் காட்டத் தேவையில்லை… வசந்த மண்டபத்திற்குத் தேவையான எந்தத் திட்டங்களும் தரத் தேவை இல்லை... அவர்களே அவ்விடத்திற்குச் சென்று இடத்திற்கேற்ப, மிக அழகான இரண்டு வரைபடத்தைக் கொண்டுவந்து காட்டுவார்கள்… வரைபடங்கள் நம் கற்பனையை மீறிய எழிலோடு இருக்கும்… இரண்டு வரைபடத்தில் எதைத் தேர்ந்தெடுப்பது? என்பது மிகவும் குழப்பமாக இருக்கும்… அதில் உனக்குப் பிடித்திருப்பதைக் கூறு. அவ்வளவுதான்!" என்று வேதநாயகிதேவியார் தன் மகனின் கன்னத்தில் வாஞ்சையுடன் தனது வலது கரத்தால் வருடியபடி கூறினார்.

"அம்மா தங்களிடம் முக்கியமான ஒரு விஷயம் கூற விழைகிறேன்... இன்று என்னைப் பெருங்கிள்ளிப் பாண்டியர் அழைத்து, காஞ்சியை நோக்கிப் படையெடுத்து, காஞ்சியை ஆளும் விஜயகந்த கோபாலன் என்ற சோழனுடன் போரிட்டு வெற்றிவாகை சூடி வா என்று கூறினார். அவ்வாறு படையெடுத்துச் சென்று நான் வெற்றி கண்டால், காஞ்சியை ஆளும் உரிமையை எனக்குத் தருவதாகக் கூறினார்." என்றான்.

"விஜயகந்த கோபாலன்!" என்று ஒரு முறை மிகவும் மென்மையாக உச்சரித்த வேதநாயகிதேவியார், சிறிது நேரம் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தார்.

பிறகு தன் மகனின் நீண்ட கரிய இமைகளால் சூழந்த ஒளிவீசும் கண்களைக் கூர்ந்து பார்த்தவாறு, "உன்னால்முடியும் குமாரா! விஜயகந்த கோபாலன் பெரிய வீரர்தான்! மிகச்சிறப்பாகப் படை நடத்தக்கூடிய திறமையும் மிக்கவர். இருப்பினும் எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. என் மகனால் அவரை வெல்ல முடியும் என்று. இது உனக்கு மிகப்பெரிய சவாலாகக் கூட இருக்கலாம்! அவரை வென்று, நீ வெற்றி ஈட்டி வந்தால் பெருங்கிள்ளிப் பாண்டியர் கூடத் தேவையில்லை, உன் தந்தையாரே உனக்குக் காஞ்சியை அரசாளும் உரிமையை மிகுந்த பெருமிதத்துடன் தருவார்..." என்று வெற்றி பெற ஊக்கப்படுத்தினார் வேதநாயகித் தேவியார்.

"நன்றி அம்மா! எங்கே காஞ்சியை நோக்கிப் போர் புரிய வேண்டாம்! என்று நீங்கள் தயங்குவீர்களோ என்று யோசித்தேன்." என்று மாறன் இளநகையுடன் கூற.

தன் மகனின் அழகிய வதனத்திற்கு எழிலூட்டும் அகன்ற நெற்றியில் விழுந்த சுருண்ட முடியைக் கோதிவிட்டவாறு, "ஒவ்வொரு இளவரசிக்கும், தான் பட்டத்தரசியாக வேண்டும் என்று கனவு இருப்பதுபோல், ஒவ்வொரு இளைய ராணிக்கும் தன் மகன் அரசாள வேண்டும்… தான் ஒரு ராஜமாதா ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும் குமாரா!" என்று புன்னகை தவழக் கூறினார்.

வேதநாயகிதேவியாரின் கண்களில் தெரிந்த ஏக்கம், மாறனின் இளம் இதயத்தைத் தாக்க, அச்சிறு வலியைப் பொறுக்கமாட்டாமல்,

"நிச்சயம் உங்கள் மகன், உங்கள் ஆசையை நிறைவேற்றுவான் அம்மா! எனக்கு ஆசி கூறி வழி அனுப்புங்கள். போருக்குத் தேவையானவற்றை ஆயத்தம் செய்ய வேண்டும்." என்று கூறி, தன் தாயின் பாதங்களில் பணிந்தான்.

தன் பாதங்களில் பணிந்த மாறனைத் தொட்டு தூக்கி, தன்னை விட உயரமான அவனை நிமிர்ந்து பெருமை பொங்க பார்த்து, "என்றும் வெற்றி உனதாகட்டும் மகனே! சென்று, வென்று வா! எதிர்காலக் காஞ்சியின் மன்னனை ஆவலுடன் வரவேற்க காத்திருக்கிறாள் இந்தத் தாய்" என்று மனமார தன் மகனை ஆசிர்வதித்து, நெற்றியில் இதழ் பதித்தாள்.

அடுத்த நாளே விக்ரமனும் மாறனும் சேர்ந்து போருக்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தனர்.

"இந்தப் போரை நான் மட்டும் நடத்துகிறேனே விக்கிரமா?" என்று மாறன் கேட்க,

"எப்போதிருந்து நீ வேறு, நான் வேறு என்று ஆனோம்? இந்த வெற்றியை நீ இளவரசி ருத்ராதேவிக்குப் பரிசளிக்கிறாய் என்றால், நான் என் சகோதரி ருத்ராதேவிக்குப் பரிசளிப்பதாக இருந்துவிட்டுப் போகட்டுமே!" என்று கூறினான் விக்ரமன்.

தன் நண்பனின் அன்பில் உள்ளம் பூரிக்க, ஓடிச்சென்று விக்ரமனைக் கட்டியணைத்தான் மாறன்.

"நண்பா! என்றுமே நீ வேறு, நான் வேறு அல்ல. ஓருயிர் ஈருடல் ஆவோம்… என் உடல் மரித்தே போனாலும், உனக்குள் உயிர்த்திருப்பேன்" என்று மாறன் நெகிழ,

"ஏன் இப்படியொரு வார்த்தையைக் கூறுகிறாய்? என்றுமே என் உயிர் உனக்குள்தான் சஞ்சரிக்கிறது... நாம் ஆத்மார்த்தமான நண்பர்கள் மாறா..‌. …" என்று எதிர்காலத்தில் நடக்கப்போவது அறியாமல் நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துத் தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

அடுத்து ஒரு தூதுவனை வரவழைத்து, "காஞ்சிக்குச் சென்று, நெல்லைச் சோழன் விஜயகந்த கோபாலரைச் சந்தித்து, மதுரை பேரரசர் குலசேகரப் பாண்டியனின் தவப்புதல்வன் மாறன்பூபதி, காஞ்சி தேசத்தை நோக்கிப் படை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறு!" என்று கூறி ஓலையைத் தூதுவனிடம் கொடுத்து அனுப்பினான்.

இரு தினங்களிலேயே, நெல்லைச் சோழன் விஜயகந்த கோபாலனும் போருக்குத் தானும் தயாராவதாகத் தூதுவரிடம் கூறி அனுப்பினான்.

பிறகு தம்மிடமுள்ள பாண்டிய நாட்டுப் படைகளுடன், நெல்லை சிற்றரசரின் அருந்தவப் புதல்வனும் தனது நண்பனுமான விக்ரமனின் சேனைகளையும் சேர்த்துக்கொண்டு, தங்களது நட்புறவு அரசர்களிடமும் தேவையான படைபலங்களைப் பெற்றுப் போருக்கான நல்ல நாளைக் குறித்தனர்.

மாறன் காஞ்சியை நோக்கிப் படை நடத்திச் செல்லும் நாள் அறிந்ததும், பெருங்கிள்ளிப் பாண்டியரும் தன்னுடைய நால்வகைப் படைகளையும் அனுப்பி வைத்ததோடு, மாறன் வெற்றி பெற மனமார வாழ்த்தினார்.

அதை அறிந்த பட்டத்தரசியும், பட்டத்தரசியின் புதல்வரான இளவரசர் சுந்தரனும் அதிர்ச்சி அடைந்தனர்.

"சுந்தரா இது நமக்கு நல்ல செய்தி அல்ல. உன் மாமனே, மாறனை நம்பி, அவருடைய பெரும் சேனைகளை அனுப்பி வைக்கிறார் என்றால், என் தமையனார் பெருங்கிள்ளி பாண்டியருக்கும், மாறன் மேல் தனிப்பட்ட பிரியமும், நம்பிக்கையும் இருக்கிறது என்று அர்த்தம். ஏற்கனவே உன் தந்தையார், மதுரை பேரரசர் குலசேகரப் பாண்டியருக்கு, மாறன் மீது மாறாத அன்பும், நம்பிக்கையும் உண்டு என்பதை மறந்து விடாதே! இது உன் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. நீ உன் முரட்டுத்தனங்களையும், சல்லாபங்களையும் சற்று ஒதுக்கிவிட்டு, பொறுப்பாகவும் இந்த நாட்டுக்குரிய அரசனை போல் கனிவாகவும், பெரியோர்களிடம் மரியாதையாகவும் நடந்துகொண்டால் நல்லது!" என்று அறிவுறுத்தினார்.

பதிலேதும் உரைக்காமல் தனது அரண்மனையை நோக்கி நடந்த சுந்தரனின் கவனமோ வேறொரு யோசனைக்குச் சென்றது. மாறன் வெற்றி பெறக் கூடாது என்று எண்ணினான். அதற்காக எதையும் செய்யத் தயாரானான்.

அரண்மனை மேல்மாடத்தில் குறுக்கும் நொடுக்குமாக நீண்ட நேரம் உலாத்தியவன், பெருங்கிள்ளிப் பாண்டியரை வசைபாடினான். பிறகு
ஒரு முடிவுக்கு வந்து,

தன்னுடன் நட்புறவு கொண்ட சில நாடுகளின் சேனைகளையும், தன் தாய் வழி நாட்டின் சேனைகளையும் திரட்டினான்.

நேராகத் தென்காஞ்சிக்குச் சென்று, விஜயகந்த கோபாலனைச் சந்தித்து நட்பு பாராட்டி, அவரிடம், தான் அழைத்து வந்த சேனைகளை ஒப்படைத்து, விஜயகந்த கோபாலன் வெற்றிபெற ஆவன செய்வதாக உறுதியளித்துத் திரும்பினான்.

இதைக் கேள்விப்பட்ட பெருங்கிள்ளி பாண்டியர் வெகுண்டெழுந்தார். மதுரைக்கு ஒரு தூதுவனை அனுப்பிப் பட்டத்தரசியிடம் கொடுக்குமாறு ஓர் ஓலையைக் கொடுத்தனுப்பினார்.

அதில் "சுந்தரன் செய்வது மகா மூடத்தனம்... காஞ்சியை ஆளும் நெல்லைச் சோழன் விஜயகந்த கோபாலனை வென்று தென்காஞ்சியைப் பாண்டிய தேசத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற தீராத அவா, உனது கணவரும் பாண்டிய சக்ரவர்த்தியுமான குலசேகரபாண்டியருக்கு உண்டு என்பதை மறவாதே! அதை மனதில் கொண்டே நான் மாறனை காஞ்சியை நோக்கிப் படை நடத்தச் சொன்னேன். அவன் வெற்றி பெற நிறைய வாய்ப்பிருக்கிறது… அவன் வெற்றி நம் தேசத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும்… நானே மாறனுடன் சேர்ந்து போர் புரியத்தான் ஆவல் கொண்டிருந்தேன். ஆனால் மதுரை பேரரசர் நாட்டில் இல்லாத இச்சமயம் நானும் போர் நடத்தி வெளியே சென்று விட்டால், வேறு அந்நியர் மூலமாகப் பாண்டிய பேரரசிற்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற ஐயத்தினால் மட்டுமே என்னுடைய படைகளை மட்டும் மாறனுடன் அனுப்பி வைக்கிறேன். இவ்வேளையில் வருங்காலத்தில் பாண்டிய பேரரசை ஆளப்போகும் சுந்தரன் செய்யும் செயல் நம் தேசத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. காஞ்சி மன்னனை எதிர்த்துத் தம்பி படை எடுத்துச் செல்லும்பொழுது, மாறனின் தமயனே காஞ்சி மன்னனுக்குச் சேனைகளைக் கொடுத்து உதவுகிறான் என்பது எதை உணர்த்துகிறது? இது அருகில் உள்ள நம் பகைநாடுகளுக்குத் தெரிந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். அரசர் இல்லாத இவ்வேளையில் பட்டத்தரசியாக நீ இருந்து, உன் மகனை வழிநடத்துவது இத்தேசத்திற்கும் உனக்கும் நல்லது! பாண்டிய தேசத்தின் கௌரவமா? தங்கையா? எது பெரிதென்று கேட்டால், என் தேசமே பெரிதென்று முடிவெடுப்பேன் என்பதையும் சுந்தரனிடம் கூறு." என்று அந்த ஓலையில் எழுதி இருந்தது.

அவ்வோலையில் எழுதியிருந்த எழுத்துக்களின் வடிவமே பெருங்கிள்ளி பாண்டியரின் மிதமிஞ்சிய கோபத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.

அந்த ஓலையைப் படித்த பட்டத்தரசியாருக்கு, 'சுந்தரன் ஏன் இந்த மாதிரி நடந்து கொள்கிறான்?' என்ற அதிர்ச்சியும்,

'பெருங்கிள்ளிப் பாண்டியரின் நன்மதிப்பை தன் மகன் பெறவில்லையே?' என்ற கவலையும் ஒருங்கே இணைந்து மனதை வாட்டியது.

உடனே ஒரு பணியாளைத் தன் மகனிடம் அனுப்பி, நெல்லைச் சோழராம் விஜயகந்த கோபாலனுக்குச் சேனை கொடுத்து உதவி செய்வதை நிறுத்துமாறு பணித்தார்.

ஆனால் பட்டத்தரசியாரின் கூற்றை, சுந்தரன் சிறிதும் ஏற்கவில்லை…

இதை அறிந்த பட்டத்தரசி, தனது தாய் வழி நாட்டிற்குத் தூதனுப்பி, "விஜயகந்தச் சோழனுக்கு எதிராகச் சேனைகளை அனுப்ப வேண்டாம்!" என்று ஓலை அனுப்பினார்.
ஆனால் அதற்கு முன்பே சேனைகள் காஞ்சியை நோக்கிச் சென்றுவிட்டதாக அங்கிருந்து மறு ஓலை வந்து சேர்ந்தது.

செய்வதறியாது திகைத்த பட்டத்தரசி நேரடியாகச் சுந்தரனிடம் சென்று, "இந்த நோக்கத்தை நிறுத்து குமாரா… உன் செயல்கள், எம் தமையனாராம் பெருங்கிள்ளிப் பாண்டியருக்கு மட்டுமல்ல, உன் தந்தைக்குமே மிகுந்த வருத்தத்தை அளிக்கும். இவர்கள் இருவரையும் நீ பகைத்துக் கொள்வது உன்னுடைய எதிர்காலத்தைப் பாதிக்கும்!" என்று எடுத்துரைத்தார்.

எவ்வளவோ மன்றாடியும் சுந்தரனின் செவிகளில் பட்டத்தரசி கூறியது எதுவும் விழவில்லை…

"மாறன் தோல்வியைத்தான் தழுவுவான்… விஜயகந்த கோபாலரை அறியாதவராத் தாங்கள்? வீரத்திற்கே வீரத்தைக் கற்றுத்தரும் தீரராகிய என் தந்தையே நெல்லைச் சோழர் மீது போர் தொடுக்கக் காலநேரம் பார்க்கும்பொழுது, மாறனால் காஞ்சியைக் கைப்பற்றுவது இயலாத காரியமே… அவன் காஞ்சி மன்னனிடம் தோற்று அவமானத்தைப் பரிசாகக் கொண்டு வரட்டும். அதன் பிறகு இந்தப் பெருங்கிள்ளி பாண்டியரும் தந்தையாரும் அவனுக்கு எவ்வாறு ஆதரவு அளிப்பார்கள் என்று பார்க்கிறேன்!" என்று ஏளனமாகச் சிரித்தான்.

"நீ சொல்வதுபோல் நடந்தால் சந்தோஷம்… ஆனால் மாறன் வெற்றி பெறுவான் என்கிறாரே என் தமையனார்."

"அவர் உங்களுக்குத் தமையனாரா? அல்லது அந்த…"

"நிறுத்து குமாரா… தயைகூர்ந்து தரமற்ற வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம். ஆயிரம் இருந்தாலும் பெருங்கிள்ளிப் பாண்டியர் எனது மதிப்பிற்குரிய தமையனார்… அதோடு இத்தேசத்திற்காகப் பெரிதும் பாடுபடுபவர் என்பதை மறவாதே!"
"நீங்கள் சொல்வது உண்மையென்றால், பெருங்கிள்ளி பாண்டியர், வருங்காலத்தில் இந்தத் தேசத்தை ஆளப்போகும் எனக்கல்லவா ஆதரவாக இருக்க வேண்டும்."

"அதற்குத்தான் நான் அடிக்கடி கூறினேன். நீ பெரியோரை மதித்து நட, பெருங்கிள்ளி பாண்டியர் மற்றும் உன் தந்தையின் நன்மதிப்பைப் பெறு என்று ஆனால் நீ எப்பொழுது என் மொழிகளுக்குச் செவிமடுத்தாய்?"

"இவ்வேளையில் இந்தத் தர்க்கம் முக்கியமா? அல்லது மாறனின் தோல்வி முக்கியமா?" என்று தன் அன்னையைப் பார்த்துக் கேட்டான் சுந்தரன்.

"நான் ஒரு சாதாரணத் தாயாகவும், இத்தேசத்தின் பட்டத்தரசியாகவும் விரும்புவது, என் வயிற்றில் பிறந்த என் மகனே, வருங்காலத்தில் இப்பாண்டிய தேசத்தை ஆள வேண்டும் என்பது தானடா!"

"அப்படி என்றால் தாங்கள் சற்று ஓய்வு கொள்ளுங்கள்…என்றுமே மாறனால் விஜயகந்த சோழனை தோற்கடிக்க இயலாது. தோல்வியில் துவண்டு வருவான். அது ஒன்று போதும்… வருங்கால அரசரின், அதாவது என்னுடைய நட்பு நாட்டின் மீது போர்தொடுத்தது தேச துரோகம் என்று கூறி, மாறனையும் அவன் தாயையும் தேசாந்திரம் அனுப்பி விடுகிறேன்" என்று கொக்கரித்த தன் மைந்தனின் கொடூர முகத்தைப் பார்க்க சக்தியற்று தனது அரண்மனைக்குத் திரும்பினார்.

குறித்த நன்நாளில் காஞ்சியை நோக்கி படையெடுத்தான் மாறன்…

விசயமறிந்த பாண்டியநாட்டின் மக்கள், வழியெங்கும் மலர் தூவி, ஆரத்தி எடுத்து, மாறனை வாழ்த்தி வழியனுப்பினர்

இப்போரில் மாறன் வென்றால் மதுரையின் அடுத்தப் பேரரசர் இவரே! என்று உள்ளம் பூரித்தனர்.
ஜெய கோஷங்கள் முழங்க மதுரைக் கோட்டையில் கொலுவிருக்கும் கொற்கையை வணங்கி வெற்றி கிட்ட அந்தத்தாயின் ஆசி பெற்றுக் குதிரையில் ஏறினான் மாறன்.

தன்னைத் தன் தாய் அழைப்பதுபோல் உள்ளுணர்வு கூற, அரண்மனையின் மேல் மாடத்தைத் திரும்பிப் பார்த்தான்… அங்கே வேதநாயகிதேவியார், மீன் கொடியை அசைத்து வெற்றி எனும் திருமகளுடன் வா என்று வாழ்த்தி வழியனுப்பினார்.

ஆனால் மாறனை அழைத்தது அந்தத் தாயல்ல,

"நில் மகனே! மதுரை மண்ணின் மைந்தனே… வீரத்திருவுருவே கோட்டை வாயிலைக் காத்து நிற்கும் கொற்கை கூறுகிறேன்… நில்!" என்று வீரம் தெறிக்கும் விழிகளில் நீர் வடிய நின்றுகொண்டிருந்தாள் கொற்கை.

ஜெய கோஷங்களாலோ, மக்களின் வாழ்தொலியாலோ அல்லது விதி செய்த சதியோ தெரியவில்லை. கொற்கையின் குரல் மாறனின் செவிகளைத் தீண்டவே இல்லை…

மாறன் பூபதியாகிய மாறனின் சேனைகள் ஆர்ப்பரிக்கும் கடலாய் காஞ்சியை நோக்கிச் சென்றன...

யானைப்படைகள் கடந்து சென்ற பாதைகள் எல்லாம் பள்ளமாக மாறின…

குதிரைகளின் கனைப்பில் சுற்றுவட்டாரத்தில் இருந்த நகரங்கள அதிர்ந்தது…

ஒருகாத தூரம்வரை சேனைகள் வாழ்த்தொலி முழங்கியவாறு சென்றனர்.

படைநடத்திச் சென்ற மாறன்பூபதியையும், விக்ரமனையும் கண்ட சூரிய பகவான், 'தன்னை நோக்கித்தான் படைநடத்தி வருகிறார்களோ?' என்று ஐயுற்று ஏழுகுதிரைகள் பூட்டிய தனது தேரில் ஓடி மேகத்தினுள் மறைந்தார்.
மாறனின் படைகள் காஞ்சிமாநகரின் எல்லையைத் தொடும்போதே, விஜயகந்த சோழன் தனது சேனைகளுடன் எதிர்கொண்டான்.

அடுத்தநொடியே அவ்விடத்தில் இரத்த ஆறு ஓடியது…

மாறன் தலைமை சேனாதிபதியுடனும் விக்ரமன், காஞ்சி நகரத் தளபதியுடனும், பெருங்கிள்ளிப் பாண்யரின் சேனாதிபதி காஞ்சியின் யானைப்படைத் தலைவனோடும் நேருக்குநேர் போர் புரிந்தனர்.

மாறனின் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளைத் தடுப்பதற்கே தலைமை சேனாதிபதிக்கு திண்டாட்டமானது… அவரால் மாறனை நோக்கி ஓர் அம்புகூட எய்ய முடியவில்லை…

மாறனின் அம்புகள் அருவியாகக் கொட்டியது… வெகு விரைவிலேயே சேனாதிபதி, தளபதி, நால்வகைப் படைத்தளபதிகளை வீழ்த்திவிட்டு, மாறனும், விக்ரமனும், பெருங்கிள்ளிப் பாண்டியரின் சேனாதிபதியும் விஜயகந்த கோபாலரை நோக்கி நகர, குதிரைப்படைத்தலைவர் பெருங்கிள்ளிப் பாண்டியரின் சேனாதிபதியை மறித்துப் போரிட்டார்… அவர்கள் தனியாகப் பிரிந்து சென்றனர். விக்ரமனை சுந்தரனின் தாய்வழி நாட்டின் தளபதி மறித்துப் போரிட, மாறன் மறித்து வந்த சேனைகளை வீழ்த்தி விஜயகந்த கோபாலரை நோக்கி விரைவாக முன்னேறினான்.

மாறனின் படை மிக எளிதாகக் காஞ்சிப் படையை வீழ்த்தி முன்னேறியது…

இருதரப்புக் காலாட்படை வீரர்களும் போர்க்களத்தில் ஒன்றோடொன்று மோதியதைப் பார்தவர்களுக்கு வெறிகொண்ட காளைகள் மூர்க்கத்தனமாக மோதிக்கொண்டதைப் போலிருந்தது.

மறுபுறம் யானைப்படைகள் மோதிக்கொண்டதில் பூகம்பமே வந்துவிட்டதாக எண்ணி மருண்டு ஓடின குதிரைகள்…

குதிரைகள் தறிகெட்டு ஓடியதில் காலாட்படை வீரர்கள் அடிபட்டு வீழுந்தனர்.

இரு தரப்பிலுமே யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியாததாக அன்றை நாளின் மாலை போர் முடிந்தது…

இருதரப்பிலுமே சேதங்கள் அதிகமாக இருந்தது.

இந்தச் செய்தியை ஒற்றர்மூலம் அறிந்த சுந்தரனோ மிகவும் மகிழ்தான்.

பட்டத்தரசியார், "இரு தரப்பிலும் வெற்றி யாருக்குச் சொந்தம் என்று தெரியவில்லை என்றுதானே செய்தி வந்திருக்கிறது? இதில் நீ குதூகலிக்க என்ன இருக்கிறது?" என்று கேட்டார்.

இன்னும் முக்கியமான நிகழ்வு நடைபெறவில்லை அம்மா! விஜயகந்த கோபாலரை மாறனால் இன்னும் நெருங்க முடியவில்லை… அவரிடம் நேருக்குநேர் போர்புரிந்து உயிர் தப்புவது மிகவும் கடினம். ஒரே அம்பில் எழுவரை சாய்க்க வல்லவர் நொல்லைச் சோழன்… அவரது வேலுக்கும் வாளுக்கும் பதில் கூற மாறனால் ஒருபோதும் முடியாது. பெருங்கிள்ளிப் பாண்டியரின் சேனைத்தலைவராலேயே நெல்லைச் சோழனை நெருங்க முடியவில்லையாம்…" என்று கெக்கலி கொட்டிச் சிரித்தான் சுந்தரன்.

அதையே வேறுவிதமாகக் கூறினார் பெருங்கிள்ளிப் பாண்டியர் தன் மனைவியிடம், "மாறனும் விஜயகந்த கோபாலனும் இன்னும் நேருநேர் போர் புரியவில்லை அது நடக்கும்போது இந்த உலகம் அறியும், மாறன் எப்படிப்பட்ட வீரன் என்று." என்று கூற,

"எல்லோரும் விஜயகந்த கோபாலர் தான் வெற்றி பெறுவார் என்கிறார்களே?" என்று பெருங்கிள்ளிப் பாண்டியரின் மகாராணி கேட்டார்.

'நான் அறிவேன்! நிச்சயமாக மாறன்தான் வெற்றி பெறுவான் என்று கூறினார்.

அடுத்த நாள் காலையில் போர் ஆரம்பித்தது... மீண்டும் மாறனுடன் காஞ்சியின் தலைமை சேனாதிபதி மோதினார்.

"மாறா! அவரை விட்டால், மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருப்பார்... அவருக்கு ஓர் அம்பைப் பரிசளித்து விட்டு, உன் இலக்கை நோக்கிப் போ!" என்று விக்ரமன் காஞ்சித் தளபதியுடன் போரிட்டுக் கொண்டே கூறினான்.

அதேவேளையில் விக்ரமனும் காஞ்சித் தளபதியை வாளால் வதம் செய்துவிட்டு, விஜயகந்த கோபாலரை நோக்கி முன்னேறினான்.

விக்ரமனை மற்றொரு சேனாதிபதி வந்து மறித்து அவனுடன் போரிட,

மாறன் விஜயகந்த கோபாலரை நோக்கி முன்னேறினான்.

மாறனுக்கும் விஜயகந்த கோபாலருக்கும் இடையே பலத்த போர் நடைபெற்றது.

இருவர் வாளும் உரசுகையில் மின்னல் வெட்டியது…

மிக நுண்ணிய இடைவெளியில் இருவரின் தலையும் அடுத்தவர் வாளுக்கு இரையாகாமல் தப்பின.

வாள் போரால் மாறனை வெல்ல முடியாது என்று அறிந்து கொண்ட விஜயகந்த கோபாலன், அவனது கதையை எடுத்தான்…
இருவர் கதைகளும் மோதுகையில், ஆலயமணி அடிக்கும்பொழுது, மணிக்குள் தலையை விட்டதுபோல் அருகிருந்தவர் செவிப்பறை கிழிந்தது.

மீண்டும் போர் வலுத்தது… ஒவ்வொரு முறையும் விஜயகந்த கோபாலரின் கதை வீச்சை மிக எளிதாக மாறன் தன் கதையால் தடுத்தான்…

வெகுநேரமாகியும் மாறன் உடலை விஜயகந்த கோபாலனின் கதையால் தீண்ட முடியவில்லை…

சற்றே சோர்வடைந்தது விஜயகந்த கோபாலனின் உடல், ஆனால் மாறனோ சற்றும் வேகம்குறையாமல் போரிட்டுக் கொண்டிருக்க,

'இன்னும் சிறிதுநேரத்தில் நாம் தோற்றுவிடுவோம்' என்று விஜயகந்த கோபாலர் நினைத்த கணத்தில் எங்கிருந்தோ வந்த ஈட்டி மாறனின் மார்பில் பாய, அப்படியே மல்லாந்து விழுந்தான்.

வார்த்தைகளின் எண்ணிக்கை-2043.

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-21

பறவைகளின் இனிய கானத்துடன், தேகமெங்கும் ஊசிபோல் குத்தும் குளிராக இல்லாமல், இதமான குளிரை வழங்கிய அற்புதமான காலை நேரம்.

பெரும்பாலான பணிப்பெண்கள் அரண்மனைக்குச் சென்றிருந்தனர்.

படுக்கையில் புரண்டு படுத்த சமீதா, தூக்கம் சற்றுக் கலைந்து, கண்களை முழுதாகத் திறக்க முடியாமல் சற்றே சுருக்கியபடி மெல்ல திறந்து பார்த்தாள்.

அறையினுள் மெல்ல மெல்லத் தன் கதிர்களை அனுப்பிய கதிரோனையும், பணிக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களையும் பார்த்தவள், பதறியடித்து எழுந்து,

"விடிந்துவிட்டது போலிருக்கிறதே? யாரேனும் என்னைத் துயில் எழுப்பிவிட்டிருக்கக் கூடாதா?" என்று பொதுவாக அனைவரையும் பார்த்துக் கேட்டாள்.

"பெரிய மகாராணி! இவர்களைத் துயில் எழுப்புவதற்கு ஓர் ஆள் தேவைப்படுகிறது." என்று ஒருத்தி சிரிக்க,

"தினமும் நீதானே அந்தக் சூரியனையே எழுப்பிவிட்டு, அதிகாலையில் எழுவாய்? இன்று என்னாயிற்று? உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டதா?" என்று மற்றொருத்தி பணிக்கு வேகமாகப் புறப்பட்டுக்கொண்டே கேட்டாள்.

"உடல்நலத்தில் பிரச்சனை இருக்காது… இரவில் அனைவரும் உறங்கியபிறகு வெளியே சென்று உலாத்துவதில்தான் பிரச்சனை இருக்கக்கூடும்." என்று வேறு யாருக்கும் கேட்காத அளவிற்கு கிசுகிசுப்பான குரல் வந்தது.

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த சமீதாவிற்குப் பெரும் குழப்பமே மிஞ்சியது.

ஏனெனில் குரல் வந்த திசையில் இருந்தவர்கள் பணிக்குப் புறப்படும் அவசரத்தில்தான் இருந்தனர்… ஒருவர்கூட, அவ்வளவு ஏன்? எந்த ஒரு பெண்ணின் கண்கள் கூடத் தன்னை நோக்கி இருக்கவில்லை என்பதை உணர்ந்த சமீதா,

'யார் கூறியிருப்பார்கள்? எனது பிரமையாக இருக்குமோ? சேச்சே! என் செவிகளில் அவள் குரல் நன்கு ஒலித்ததே?!!' என்று நினைத்தவாறு மீண்டும் நிதானமாக அனைத்து பணிப்பெண்களையும் ஒவ்வொருவராகக் கூர்ந்து கவனித்தாள்.

"தாமதமாக எழுந்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாயே? விரைவில் புறப்பட்டு அரண்மனைக்கு வா!" என்று கூறிவிட்டுச் சென்றார், அரிசியாரின் பணிப்பெண்களின் நிர்வாகி.

மீண்டும் ஒரு முறை பணிப்பெண்களைப் பார்த்துவிட்டு, "யாரோ என் நடவடிக்கைகளைக் கவனித்திருக்கிறார்கள். இனி மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்." என்ற முடிவுக்கு வந்து, குளியல் அறை நோக்கிச் சென்றாள் சமீதா.

அரண்மனைக்குள் சமீதா நுழையும்போதே,

"சமீதா! சீக்கிரம் வா! சுல்தானுக்கு உடல்நிலை சரியில்லை. அரண்மனை வைத்தியர் பரிசோதித்து மருந்து கொடுத்தும் இன்னும் குணமாகவில்லை… மகாராணியார் உன்னைத்தான் தேடுகிறார். ஓடு! ஓடு!" என்று பணிப்பெண்களில் ஒருத்தி சமீதாவை விரட்ட,

"சுல்தானுக்கு என்ன செய்கிறது?" என்று அந்தப் பணிப்பெண்ணிடம் சமீதா கேட்டாள்.

"தொடர்ந்து அரை நாழிகையாக விக்கல் எடுத்து அவதிப்படுகிறாராம். அரண்மனை வைத்தியர் நிறைய மருந்துகளைத் தயாரித்துக் கொடுத்துப் பார்த்திருக்கிறார். விக்கல் மட்டும் நிற்கவே இல்லையாம். நீதான் பெரிய வைத்தியக்காரி ஆயிற்றே? உன்னிடம் ஏதாவது சிறந்த மருந்து இருக்கும் என்றுதான் மகாராணியார் உன்னைத் தேடினார். இன்று பார்த்து நீ தாமதமாக வந்து கொண்டிருக்கிறாய்." என்ற பணிப்பெண் சமீதாவையே குறைகூறியபடி வந்தாள்.

'விக்கல் எடுப்பதற்கு வைத்தியமா?!! என்று யோசித்த சமீதா,

"இதற்கெல்லாமா வைத்தியம் பார்ப்பார்கள்?" என்று அப்பணிப்பெண்ணிடம் கேட்கப் போனவள்,

சுல்தானை நேரில் சந்திக்கவும், அவருக்கு மருந்து கொடுக்கவும் இதுவே தக்க தருணம். இதை நாம் கெடுத்துக் கொள்ள வேண்டாம். இதற்காகத்தானே இத்தனை போராட்டம்!' என்று நினைத்து,

"விரைவாக ஒரு மருந்து கலந்து வருகிறேன். ஆனால் நான் மருந்து கொடுத்தபிறகு, இன்னுமொரு முக்கியமான வாக்கியம் சுல்தானிடம் சொல்ல வேண்டும். அந்த வாக்கியத்தைச் சொல்லாவிட்டால் நான் கொடுக்கும் மருந்து பலன் அளிக்காது. ஆனால் அதைச் சொல்லும்போது, சுல்தானின் காவலர்களால் எனக்கு எதுவும் பிரச்சினை ஆகிவிடக் கூடாது." என்று கூறினாள்

சமீதா கூறுவது ஒன்றுமே புரியாவிட்டாலும், "நீ எது கூறுவதாக இருந்தாலும் மகாராணியிடம் கூறு!" என்றாள் பணிப்பெண்.

அரண்மனையில் தனக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டகத்தில், யாரும் அறியா வண்ணம் மறைத்து வைத்திருந்த, சீலன் கொடுத்துவிட்ட குளிகையை எடுத்துப் பார்த்தாள்.
ஒரு தேசத்தையே காக்கப்போகும் அந்தக் குளிகை மிகவும் எளிமையாக, சமர்த்தாக அவள் கையில் இருந்தது.

"சொக்கநாதா! மீனாட்சி! என்று மீனாட்சி சுந்தரேஸ்வரரை மனப்பூர்வமாக நினைத்தபடி,

"இன்று நான் செய்யும் இக்காரியம் வெற்றியடைய அருள் புரியுங்கள்!" என்று வேண்டினாள்.

பிறகு, அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்த சிறிய குவளையில், தண்ணீர் எடுத்து, அதில் சீலன் கொடுத்தனுப்பிய குளிகை மருந்தை ஒரு சொட்டு ஊற்றி, கலந்து எடுத்துக் கொண்டு, மகாராணியிடம் சென்றாள்.

"வணங்குகிறேன் மகாராணி! மருந்து தயாராக இருக்கிறது. உங்கள் தோழிகளில் யார் மூலமாக இந்த மருந்தைக் கொடுத்து விட வேண்டும்? என்று தாங்கள் கட்டளையிட்டால், அவ்விதமே செய்கிறேன்" என்று பணிவுடன் கேட்டாள்.

"இதற்கு எதற்கு மற்றோரு ஆள்? நீயே சென்று சுகாதாரத்துறை அமைச்சரைப் பார்! அவர் சொல்வதைப் போலச் செய்." என்று மகாராணி கூறினார்.

"மன்னிக்க வேண்டும் மகாராணி! இந்த மருந்தைக் கொடுக்கும்பொழுது, மருந்து கொடுபாபவளான நான், ஒரு வாக்கியத்தை உச்சரிக்க வேண்டும். அதைச் சொன்னால்தான் நான் கொடுக்கும் இந்த மருந்து சரியாக வேலை செய்யும்." என்று மகாராணியின் அழகிய வதனத்தைப் பார்த்தாள் சமீதா.

"அப்படியென்றால் மருந்தை நீதானே கொடுக்க வேண்டும்? மற்றவர்களால் எப்படி முடியும்?" என்று மகாராணி கேட்டார்.

"நான் புதிதாகப் பணிக்குச் சேர்ந்தவள், நான் அந்த வாக்கியத்தைக் கூறுவதால் சுல்தானின் பணியாளர்கள் யாருக்காவது கோபம் வந்து விட்டால்? என்ன செய்வதென்று அச்சமாக இருக்கிறது மகாராணி." என்று சமீதா கேட்டாள்.

"அடுத்தவருக்குக் கோபம் வரும்படி அப்படி என்ன வாக்கியம் கூற போகிறாய்? மகாராணியின் ஏவலை மறுக்கும் அளவு துணிவு வந்துவிட்டதா?" என்று மகாராணியின் தோழி சமீதாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி அதட்ட,

"இவளை ஏன் கடிந்து கொள்கிறாய்? அவள், அவளுடைய பயத்தைக் கூறுகிறாள். சுல்தானை, முதன்முதலாக நேருக்கு நேராகச் சந்திப்பதில் பயம் இருக்கத்தானே செய்யும்? அதோடு, அந்த வாக்கியம் என்னவென்று கூறாமல் இவள் தவிர்க்கும் பொழுதே, தெரியவில்லையா? அதை மருந்து கொடுக்கும்போது மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமென்று" என்று தன் தோழியிடம் மகாராணி புன்னகையுடன் கூறிவிட்டு,

"நீ முதலில் மருந்தைப் போய்க்கொடு. பிறகு நீ என்ன வாக்கியம் சொல்லவேண்டுமோ அதையும் சொல். சுல்தானுக்கு விக்கல் நின்று விட்டால் உன் மீது யாருக்கு? எதற்குக் கோபம் வரப்போகிறது?" என்று மகாராணி கேட்டார்.

மகாராணியிடம் கெஞ்சுவது போல் "தயைகூர்ந்து, இந்த எளியவளின் அறியாமையை மன்னித்து, வேறு யாரையேனும் அனுப்ப உத்தரவிடுங்கள்… நான் இங்குப் புதியவள், சுல்தானிடம் பணிபுரியும் இங்கிதம் அறியாதவள், நான் செய்யும் குற்றம் குறைகளைத் தாங்கள் மன்னித்து ஏற்றுக்கொள்கிறீர்கள்… ஆனால்” என்ற சமீதாவிடம்,

"இல்லை! நீ தான் செல்ல வேண்டும். மருந்து மட்டும் கொடுப்பதற்கு என்றால் கூட யாரிடமாவது கொடுத்து விடலாம். நீ ஏதோ வாக்கியம் சொல்ல வேண்டும் என்று கூறுகிறாய். அதை, மருந்து கொண்டு செல்லும் பெண், தவறாகக் கூறி விட்டால்? அவளுக்கு மட்டுமல்ல உனக்கும் தண்டனை கிடைக்கும். நீயே போ! என்று கட்டளையிட்டார் மகாராணி.

"உத்தரவு மகாராணி!" என்ற சமீதா இடைவரை குனிந்து வணங்கி விடைபெற்றாள்.

சமீதாவுடன் செல்வதற்காக மகாராணி, தனது அந்தரங்கத் தோழி யாஸ்மின்னை அழைத்து,

"சமீதாவை சுல்தானின் அறைக்காவலரிடம் அறிமுகப் படுத்திவிட்டு வா!" என்று உத்தரவு பிறப்பித்தார்.

மகாராணியின் அறையை விட்டு வெளியேறிய சமீதாவிற்கு மனம் முழுவதும், தான் எண்ணி வந்த காரியம் கைகூடப் போவதை நினைத்து, சந்தோசம் ஏற்பட்டது.

மனிதில் உள்ள உவகை, தன்னுடன் நடந்து வரும் யாஸ்மின்னுக்குத் தெரியாத வண்ணம் மறைத்துக்கொண்டு, மிகவும் அமைதியாகச் சுல்தானின் அரண்மனையை நோக்கிச் சென்றாள்.

இரண்டு காவலர்கள், சமீதாவையும் யாஸ்மின்னையும் விசாரித்து, அழைத்துக் கொண்டு சுல்தான் அறை வாயிலில் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

அறைக் காவலரிடம் யாஸ்மின், "இவள்தான் மகாராணி அனுப்பி வைத்த பணிப்பெண் சமீதா!" என்று கூற,

அறைப் பாதுகாவர்கள், சமீதாவிடம் அவளைப் பற்றி விசாரித்து, அழைத்துச் சென்று சுல்தானின் எதிரில் நிற்கச் சொல்லிவிட்டு,

"அஸ்ஸலாமு அலைக்கும்! சுல்தான் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்... இந்தப் பெண்தான் மகாராணியார், தாங்கள் நலம்பெற வேண்டி அனுப்பி வைத்த வைத்தியம் பார்ப்பவள்!" என்று கூறி வணங்கினார்.

ஏற்கனவே சமீதாவை வைத்தியருக்குத் தெரியுமாதலால்,

"வா மா!" என்று முகம் மலர வரவேற்றார்.

வைத்தியரைப் பார்த்து இன்முகத்துடன் வணங்கிவிட்டு, சுல்தானை நிமிர்ந்து பார்த்தாள் சமீதா.

வெளீறிய சந்தனக்கலரில், மிகவும் உயரமான தேகமும், கட்டுமஸ்தான உடல்வாகுமாக அமர்ந்திருந்த சுல்தானுக்கு விக்கல் எடுத்துக்கொண்டிருந்தது.

சுல்தானைப் பார்த்ததும் சமீதாவின் கண்களுக்குள், அவளுடைய தோழியின் கடைசி நேரப் போராட்டம் காட்சியாக விரிந்தது…

உடன், அந்தக்காட்சி மறைந்து, கோட்டை வாசலில் தான் பார்த்த பயங்கரக் காட்சியும் ஞாபகத்திற்கு வர, சமீதாவிற்கு அடி வயிற்றில் எழுந்த உஷ்ணம், கண்கள்வரை சென்று கண்கள் தீப்பிழம்பானது…

அதை உணர்ந்ததும், யாரும் தன் மனநிலையைக் கவனித்து விடக் கூடாது என்று சட்டென்று இறுக கண்ணை மூடினாள்.

"அதைக் கவனித்த, அவளருகில் இருந்த வைத்தியர் "என்னம்மா? என்ன ஆச்சு?" என்று ஏதேனும் தவறாகிவிட்டதோ? என்று பதறியபடிக் கேட்டார்.

மெல்ல கண் விழித்த சமீதா,
"நான் மருந்து கொடுக்கும்போது, கடவுளை வணங்கி விட்டுக் கொடுப்பது வழக்கம் அதைத்தான் செய்தேன்." என்று பணிவாகப் பதிலளித்தாள்.

பிறகு, தான் கொண்டுவந்த மருந்தைச் சுல்தானின் அருகில் நின்றுகொண்டிருந்த அமைச்சரிடம் கொடுத்து,

"இதுவே சுல்தான் அவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட மருந்து" என்றாள்.

அமைச்சர் அதை வாங்கி, முகர்ந்து பார்த்து, அதில் வித்தியாசமான எந்த ஒரு வாசனையும் வராததை உறுதி செய்தபிறகு, சமீதா கொண்டுவந்த மருந்தில் சிறிது எடுத்து, சுல்தான் உட்கொள்ளும் எதையும், நல்லதா அல்லது ஏதேனும் விஷம் கலந்ததா? என்று பரிசோதிப்பதற்கு என்று இருக்கும் காவலாளிக்கு கொடுத்தார்.

அதை வாங்கிப் பருகிய காவலாளிக்கு உடல்நலம் கெடாததைக் கண்டு, மருந்தில் எந்த வித தீய விசமும் இல்லை என்பதையும் உறுதிசெய்தபிறகு, சுல்தானிடம் கொடுத்தார்.

சுல்தான் மருந்து குடித்து முடிக்கும் வரை கண்கள் தரையை நோக்கியபடி காத்திருந்தாள் சமீதா.

மருந்து குடித்த கால் நாழிகை கழித்து, திடீரென்று "பாம்பு! பாம்பு! பாம்பு!" என்று சமீதா பயந்து அலற,

சுல்தான் சட்டென்று எழுந்து படுக்கையிலிருந்து இறங்கி,

"எங்கே? எங்கே? காவலாளிகளே பாம்பு எங்கே இருக்கிறது பாருங்கள்!" என்று கட்டளை இட்டார்.

பணியாட்கள் எல்லோரும், திமு திமுவென ஓடிவந்து, சிலர் சுல்தானின் படுக்கை விரிப்பை உருவி உதறினர். சிலர் படுக்கைக்குக் கீழே தேடினர். சிலர் அறையில் அந்த அறையில் இருந்த அனைத்துப் பொருளிலும் மேலே, கீழே என்று தேடினர். ஒரு நிமிடத்தில் அந்த அறையைக் களவர பூமியாக்கினர்.

எல்லோரும் அரண்டு தேடிக் கொண்டிருக்கையில் சமிதா மட்டும் அமைதியாக இருப்பதைக் கண்ட அமைச்சர்,

"என்ன இது நாடகம்? என்ன செய்கிறாய் என்று தெரிந்துதான் செய்கிறாயா? என்று கோபமாகக் கேட்டார்.

"மன்னித்து விடுங்கள் அமைச்சரே! நான் செய்த வேலை தான்… பாம்பு வந்ததாகப் பொய்யுரைத்தேன்... ஆனால் சற்று சுல்தான் அவர்களைப் பாருங்கள். அவருக்கு விக்கல் நின்று விட்டது. அதற்காகவே இவ்வாறு செய்தேன்… தவறிழைத்திருப்பின் மன்னியுங்கள்" என்று கூறினாள்.

பாம்பைத் தேடியவர்கள் அனைவரும் அப்படி அப்படியே நின்று சுல்தானைக் கவனிக்க, சுல்தானுக்குச் சுத்தமாக விக்கல் நின்று இருந்தது.

சுல்தானுக்கு மிகவும் ஆச்சரியம்! அவ்வளவு நேரம் விக்கல் எடுத்ததில் தொண்டை, நெஞ்சு எல்லாம் சற்றே எரிச்சலாக இருக்கவே, தொண்டையை மிருதுவாகத் தடவிக்கொடுத்தபடி சமீதாவை ஆச்சரியமாகப் பார்த்தார்…

'இவ்வளவு நேரம் போராடி எத்தனையோ வைத்தியம் பார்த்தும் நிற்காத விக்கல், இச்சிறு பெண் கொடுத்த மருந்தில் நின்றுவிட்டதே?!!' என்று எண்ணினார்.

எல்லோருக்கும் பயங்கர ஆச்சரியம் "எப்படி விக்கல் நின்றது? இது எப்படி நடந்தது?" என்று கேட்டனர்.
"இந்த மருந்தைக் கொடுத்து, பாம்பு என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் சரியாகிவிடும்" என்று வாய்க்கு வந்ததை உளறினாள் சமீதா.

விக்கலை நிறுத்தியதால் சந்தோஷமடைந்த சுல்தான் அருகில் இருந்த ஒரு பொன் முடிப்பை எடுத்துச் சமீதாவிடம் கொடுத்தார்.

பரிசைப் பணிவுடன் வாங்கிக் கொண்டு, "உத்தரவு!" என்று கூறி வணங்கிவிட்டு, அறை வாசலை நோக்கி நடந்தாள்.

அப்பொழுது "இனி என் ஆரோக்கியம் சம்பந்தமான வைத்தியங்களுக்கு இந்தப் பெண்ணிடம் மருந்து வாங்கி வாருங்கள் வைத்தியரே!" என்று வைத்தியரிடம் சுல்தான் கூறுவதைக் கேட்ட சமீதாவின் நெஞ்சம் ஆனந்தக் கூத்தாடியது.

சுல்தானின் அறையிலிருந்து, 'நாட்களை எண்ணிக்கொள்ளுங்கள் சுல்தான் அவர்களே' என்றவள், மனதிற்குள் தான் செய்த காரியத்திற்குப் பாராட்டியபடி வெளியேறினாள் சமீதா.

சமீதா மகாராணியின் அரண்மனைக்குச் செல்வதற்குள், சுல்தானுக்கு விக்கல் நின்ற விஷயம் மகாராணியை எட்டியிருந்தது‌.

சமீதா தனது அறைக்குள் வந்ததைப் பார்த்ததும் மகாராணி தன்னை மறந்து ஓடிச்சென்று, சமீதாவிடம்,

"சுல்தானுக்குச் சரியாகி விட்டதாமே? விக்கல் நின்று விட்டதாமே? உன் கைகளில் வித்தை இருக்கிறதடி!" என்று கூறி சமீதாவின் உள்ளங்கையை எடுத்துப் பார்த்தார்.

"என் கையில் என்ன இருக்கிறது மகாராணி! சுல்தானின் உபாதையைத் தணித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். எல்லாப் புகழும் இறைவனுக்கே!" என்று பணிவுடன் கூறிவிட்டு,

பணிப்பெண்ணுக்கான வேலை செய்யச் சென்றவளை கையைப் பிடித்து நிறுத்தினார் மகாராணி.

"இனி நீ எனக்குப் பணிப்பெண் அல்ல. என் தோழிகளில் ஒருத்தி ஆவாய்!" என்று முகம் மலர மிகவும் சந்தோசமாக மகாராணி கூறினார்.

ஆனந்தம் மனதில் கூத்தாட, "மகாராணி!" என்று தன் கண்கள் இரண்டையும் அகல விரித்து மகாராணியைப் பார்த்தாள் சமீதா.

"இவ்வளவு பெரிய முட்டைக் கண்ணை வைத்துக்கொண்டு, அதை விரித்து என்னைப் பார்க்காதே! பயந்து விடப் போகிறேன்!" என்று பகடி பேசிய மகாராணி,

"உண்மையில், உன்னால் சுல்தானை வதைத்த விக்கலை நிறுத்த முடியுமோ? முடியாதோ? என்று ஒரு சிறு ஐயம் இருந்தது சமீதா. கவலையும் கூட... ஆனால் விக்கல் நின்று விட்டது என்று அறிந்தவுடன் நான் பட்ட ஆனந்தத்திற்கு எல்லையே கிடையாது... அதற்கு ஈடாக உன்னிடம் எனக்குக் கொடுப்பதற்கு என் அன்பைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதனாலேயே இன்று முதல் நீ என் தோழி!" என்று கூறி சிரித்தார்.

மகாராணியின் உள்ளார்ந்த அன்பைக் கண்ட சமீதாவிற்கு ஒரு நிமிடம் மனம் திக்கென்று வலித்தது.

'என்னை இந்த அளவு நம்பி, என்மீது இவ்வளவு அன்பை போடுகிறார்களே ஆனால் நான் எதற்காக வந்திருக்கிறேன் என்று அறிந்தால்?!! இவரிடம் இப்போது இருக்கும் சந்தோஷம் மட்டுமல்ல என் உயிரும் இருக்காது.' என்று சற்றே மனம் கலங்கிய சமீதாவின் நெஞ்சிற்குள்,

அவளுடைய தோழியின் இறுதிப் நேர போராட்டமும், மதுரை கோட்டை வாசலில் பார்த்த கொடூர காட்சியும், வசந்த மண்டபத்தில் எரியூட்டப்பட்ட சிதையும் மனக்கண்முன் விரிந்தது.

தவறு இழைப்பதால், வெட்கிக் குனிந்த தலையைச் சட்டென்று நிமிர்த்திய சமீதா, கண்கள் கலங்க மகாராணியின் விரிந்த மான் போன்ற அழகிய கண்களைப் பார்த்தவாறு,

"என்னை மன்னித்துவிடுங்கள் மகாராணி! நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கு நான் அருகதையற்றவள். கடவுள்மீது ஆணையாக நான் இங்கே உங்களுக்குத் துரோகம் செய்ய வரவில்லை மகாராணி! ஆனால், என் நாட்டிற்காக, என் தோழியை வதைத்தவர்களைப் பழிவாங்க வந்திருக்கிறேன். என் வரை நான் செய்வது சரியானாலும், என்னை மன்னித்து விடுங்கள்!" என்று மனதுக்குள் கூறியபடியே, நிஜமாகவே மகாராணியைப் பலமுறை இடைவரை குனிந்து வணங்கி நிமிர்ந்தாள் சமீதா.

அதன் பிறகு, சுல்தானுக்காக உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இடம்வரை செல்வதற்குச் சமீதாவிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

சுல்தானுக்கு, தான் தயாரிக்கும் கசாயத்திலோ, மற்ற மருந்துகளிலோ, தான் கொண்டுவந்த குளிகையை சமீதா கலப்பதில்லை.

சுல்தானுங்காக உணவு தயாரிக்கும் இடம்வரை செல்லும் அனுமதி இருந்ததால் சுல்தானுக்குத் தினம் கொடுக்கும் ஆரோக்கிய பானங்களில் யாரும் அறியா வண்ணம் குளிகையைக் கலந்தாள் சமீதா.
சரியாக ஒரு மண்டலம் ஆன நிலையில் சுல்தானின் உடலெங்கும் உஷ்ணக் கொப்பலங்கள் புறப்பட ஆரம்பித்தது.

அதேவேளையில், கோட்டையை முற்றுகையிட்ட பாண்டிய சிற்றரசர்களை, சமாளிக்க முடியாமல் மாலிக்காபூர் தில்லி வந்து சேர்ந்தார்.

வார்த்தைகளின் எண்ணிக்கை-1523.

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 
Last edited:
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-22

விஜயகந்த கோபாலர், மாறனிடம் தோற்கும் நிலையில் இருக்கும்பொழுது எங்கிருந்தோ வந்த ஈட்டி மாறனின் மார்பில் பாய்ந்தது.

மாறன் மல்லாந்து விழப்போனதைப் பார்த்த வீரர்கள் ஓடிவந்து தாங்கினர்.

மாறன் மீது ஈட்டி பாய்ந்ததைக் கண்ட விக்ரமன், தன்னை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தவனை ஒரே சீவில் தலையைத் துண்டித்து, தூர வீசிவிட்டு, ஓடிவந்து மாறனைத் தாங்கி, அவனுடைய நாடித்துடிப்பைப் பரிசோதிக்க, உயிர் இருந்தது.

மாறனைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு வைத்தியர் இருந்த படைவீட்டை நோக்கி விக்ரமன் ஓடினான்.

அப்பொழுது மீண்டும் ஓர் ஈட்டி மாறனை நோக்கியே வர,

சட்டென்று கைகளில் பிடித்தான் மாறன்.

ஓடிக் கொண்டிருந்த விக்ரமன் அதிர்ச்சியுடன் நிற்க, விக்ரமனின் தோளில் இருந்தபடியே மாறன் தலையை மட்டும் தூக்கியவாறு,

"வலது புறம் திரும்பு நண்பாஆஆ!" என்று கூறியபடி ஈட்டியை ஏறிவதற்குத் தயாராக, விக்ரமன் வலப்புறம் திரும்பும்போதே ஈட்டியைக் குறிபார்த்து எறிந்தான் மாறன்.

மாறனின் ஈட்டி பாய்ந்த இடத்தை விக்ரமனும் பார்க்க, அங்கே ஒருவன் கீழே சரிந்து விழுவது தெரிந்தது.

அதைப் பார்த்த படியே மாறன், விக்ரமன் தோளிலிருந்து குதித்து நின்றான்.
மாறனின் புஜத்தில் நான்கு குத்து குத்திய விக்ரமன்,

"உனக்குத்தான் ஒன்றும் ஆகவில்லையே மாறா! பிறகு ஏன் இவ்வாறு நடித்தாய்? நான் எவ்வளவு பயந்து விட்டேன் தெரியுமா?" என்று கேட்க,

"விழுந்தது உண்மைதான் நண்பா! அந்த ஈட்டி வந்து மோதிய வேகத்தில் விழுந்து விட்டேன். ஆனால் என்மீது சிறு காயம் கூடப் படவில்லை. ஆனால் யாரோ மறைந்திருந்து, எங்கிருந்தோ என்மீது எறிந்திருக்கிறான் என்ற எண்ணம் தோன்றியதால், அவன் யாரென்று தெரிந்து கொள்வதற்காக மயங்கியதுபோல் நடித்தேன். நீயும் வாகாக என்னைத் தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு ஓடினாயா? நிச்சயம் மீண்டும் அவன் என்மீது ஈட்டி எறிவான் என்று நம்பினேன். அதே போல அவனும் எறிய, முடிந்தது அவன் கதை. வா! யார் என்று போய்ப் பார்ப்போம்." என்று விக்ரமனின் கையைப் பிடித்துக்கொண்டு ஓடியபொழுது, அவர்களின் பின்னால் படைவீரர்கள் ஆர்ப்பரிக்கும் சத்தம் கேட்டது.

இருவருமே திரும்பிப் பார்க்க, அங்கே விஜயகந்த கோபாலரைப் படை வீரர்கள் சுற்றி வளைத்து நின்றனர்.

"நம் வீரர்கள் விஜயகந்த கோபாலரை, சுற்றி வளைத்து விட்டார்கள்." என்று சிரித்த மாறனிடம், விக்ரமன்,

"நீ அவரை வென்றுவிட்டாய்… எஞ்சிய பணியை வீரர்கள் திறம்பட முடித்து விட்டார்கள்." என்று விக்ரமன் சிரிக்க,

"இருந்தாலும், சற்றுமுன் நம் கவனம், ஈட்டி எய்தவன் மேல் திரும்பியது. அதேவேளை நம் சேனைகள் கவனம் மாறாமல் இருந்து, வந்த காரியத்தை முடித்ததற்குப் பாராட்டத்தான் வேண்டும்." என்று வேகமாக நடந்தபடி மாறன் கூறினான்.

இருவரும் சேர்ந்து மாறனிடம் ஈட்டிக் குத்துப்பட்டவணைப் பார்க்க, அவன் மதுரை பட்டத்தரசியின் மகன் சுந்தரனின் தாயாதி உறவினன் என்பது புரிந்தது.

"மாறா! இவன் இளவரசர் சுந்தரனின் உறவினன் தானே?" என்று விக்ரமன் சிறிது ஐயத்துடன் கேட்க,

"ஆமாம்! அவனேதான்."

உடனே, சுந்தரன் சொல்லித்தான் அவனுடைய தாயாதி, மாறனை மறைந்திருந்து தாக்கியிருக்கிறான் என்பது நண்பர்களுக்கு மிகத் தெளிவாகவே புரிந்தது.

"சுந்தரன் ஏன் வரவர இவ்வளவு தூரம் மோசமாக நடந்து கொள்கிறான்?" என்று வருத்தப்பட்ட விக்ரமன், "சரி வா மாறா, நாம், நம் வெற்றியைக் கொண்டாடுவோம்." என்று கூறியபடி, படைவீரர்கள் இருந்த கூட்டத்தை நோக்கிச் சென்றான்.

மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது… வீதியெங்கும் மாவிலைகளாலும், தென்னங்குறுத்தோலைகளாலும், தோரணம் கட்டி, வீதி முழுவதும் பல வகைக் கோலங்களால் அலங்கரித்து, அகில், சந்தனம், குங்குலிகம் போன்ற நறுமணப் பொருட்கள் கொண்டு இட்ட புகை, வீதியெங்கும் மணம் கமழ்ந்தது. எட்டுதிசையிலும் இன்னிசை முழங்கியது… மகளிரும் ஆடவரும் முருகனைப் பேணித் தழூஉப் பிணைந்து குரவை ஆடினர், ஆட்டமும் பாட்டுமாகத் தெருவெங்கும் விழா நடந்தது.

காண்பன யாவும் உள்ளத்துக்கு உவகையூட்ட, ஏற்கனவே வெற்றி தந்த களிப்பும் சேர்ந்து மக்கள் புடைசூழ ஊர்வலமாகக் கோட்டை வாசலுக்கு வந்தனர்.

மாறனும், விக்ரமனும், பெருங்கிள்ளிப் பாண்டியரின் சேனாதிபதியும் அவரவர் குதிரைகளில் வெற்றிப் பெருமிதத்துடன் வீற்றிருக்க, அவர்களுக்குப் பின்னால் நால்வகைப் படைகளும் ஆரவாரம் செய்தபடி ஆடிக்கொண்டிருந்தனர்.
பெருங்கிள்ளிப் பாண்டியர் உட்பட்ட சிற்றரசர்களில் சிலரும், கோட்டை வாயிலுக்கு வந்து, மாறனையும், விக்ரமனையும், பெருங்கிள்ளி பாண்டியரின் சேனாதிபதியையும் வரவேற்றனர்.

"இது என்ன நண்பா இனிய ஆச்சரியம்! பெரிய மனிதர்கள் எல்லாம் கோட்டை வாசலுக்கே வந்து நம்மை வரவேற்கிறார்கள்!" என்று விக்ரமனைப் பார்த்து மாறன் கேட்டான்.

மேளதாளத்துடன் மாறன் மற்றும் விக்கிரமன், பெருங்கிள்ளிப் பாண்டியரின் சேனாதிபதி மூவரையும் நெருங்கிய பெருங்கிள்ளிப் பாண்டியர் மற்றும் சிற்றரசர்கள், மூவர் தோள்களிலும் மாலை அணிவித்துப் பன்னீர் தெளித்து வரவேற்றனர்.

"என்ன மாமா நான் வெற்றி அடைவேன் என்று எதிர்பார்க்கவில்லையா? இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுக்கிறார்களே?" என்று மாறன் சிரித்தபடி கேட்க,

பெருங்கிள்ளிப் பாண்டியர் அவனது கேள்விக்குப் பதில் ஏதும் கூறாமல், "மூவரும் தங்களது குதிரையிலிருந்து இறங்கி, அதோ அங்கே நிற்கும் தேரில் ஏறி, பவனி வருமாறு மக்கள் விரும்புகிறார்கள்!" என்று கூறினார்.

"தேரிலா? ஏன் மாமா? நாங்கள் அரண்மனைக்கு வேகமாக வரக் கூடாது என்று யாரேனும் விரும்புகிறார்களா?" மாறன் மீண்டும் பெருங்கிள்ளிப் பாண்டியரிடம் பகடி பேச,

"காஞ்சி விஜயகந்த கோபாலனை வென்ற மாவீரனைப் போலவா இருக்கிறது உன் பேச்சு? இன்னும் சிறுபிள்ளைத்தனம் உன்னை விட்டுப் போகவில்லை இளவரசே!" என்று அவரும் சிரித்தபடி முன்னால் இருக்கும் குதிரையில் ஏறி அரண்மனையை நோக்கிச் சென்றார்.

"இள...வரசே...வா?!! என்ன ஆச்சு நண்பா நம் பெருங்கிள்ளிப்பாண்டியருக்கு? வழக்கமாகக் குமாரா, மாறா என்று தானே அழைப்பார்?" என்று ஆச்சரியத்தில் மலர்ந்த முகத்துடன் மாறன் தன் நண்பன் விக்ரமனைப் பார்க்க,

அவனோ மிகவும் தீவிரமான முகபாவத்துடன், மக்கள் கூட்டத்திற்குள் கண்களை அலைய விட்டுக்கொண்டிருந்தான்.

"நண்பா யாரைத் தேடுகிறாய்?" என்று கேட்டபடியே ஒரே தாவலில் தன் தேரிலிருந்து விக்கிரமன் தேருக்குத் தாவிக் குதித்தான் மாறன்.

அப்பொழுதும் மாறனை திரும்பிப் பார்க்காமல் கூட்டத்திற்குள்ளேயே பார்த்துக்கொண்டிருந்தான் விக்கிரமன்.

விக்ரமன் யாழைத் தேடுகிறான் என்பதை யூகித்து, "அவர்களெல்லாம் செண்பகப்பொழில் தேசத்தில் இருப்பார்கள் நண்பா!" என்று மாறன் விக்ரமனை கிண்டலாகப் பார்த்தான்.

"இல்லை மாறா! இங்கே தான் இருக்கிறார்கள். நான் யாழைப் பார்த்தேன்." என்றான் குதூகலமாக.

"யாழையா?" என்று கேட்டுவிட்டு கூட்டத்திற்குள் பார்வையை ஒட்டிய மாறன்,

"எனக்கு அப்படி யாரையும் தெரியவில்லையே நண்பா! யாழ் மட்டும் தான் வந்திருக்கிறாளா? அல்லது செண்பகப்பொழில் இளவரசியும் வந்திருக்கிறாரா?" என்று மாறன் கேட்டான்.

"அதுதான் தெரியவில்லை... ஆனால் யாழை நான் நன்றாகப் பார்த்தேன்."

"உண்மையிலேயே யாழைத்தான் பார்த்தாயா இல்லை... உன் கண்களுக்கு எல்லாப் பெண்களும் யாழ் போல் தெரிகிறார்களா?"
"உன் விளையாட்டை நிறுத்து மாறா... நிஜமாகவே நான் அவளைப் பார்த்தேன்." என்று விக்கிரமன் கூற,

'இவனுக்கு முத்தி விட்டது!' என்ற முடிவுக்கு வந்த மாறன், கேலிக்கைகளில் கவனம் செலுத்தினான்.

ஊருக்குள் தேர் செல்லவும் மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிழந்தது.

ஒருபுறம், புது வண்ணப் பட்டாடைகள் உடுத்தி, பூக்களாலும் ஆபரணங்களாலும் தங்களை அலங்காரம் செய்திருந்த மக்கள், மனமார வாழ்த்தொலிகள் கூறியபடி நறுமணம் கமழும் பூக்களை மூவர் மீதும் வாரி வாரி இறைத்தனர்.

மறுபுறம் மூவரையும் நிறுத்திவைத்து மங்கள ஆரத்தி எடுத்தனர். தங்கம், வெள்ளி, தாமிரத்தால் ஆன தாம்பாளத் தட்டில், தண்ணீரில் மஞ்சள் அரைத்துச் சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலந்த சிவப்பு நிற நீரை எடுத்து, அதற்கு இரு பக்கங்களிலும் வெற்றிலை வைத்து அதன் மேல் தீச்சுடர் எழுப்பி மூன்று முறை சுற்றி திருஷ்டி கழித்தனர்.

சில ஆண்களும், பெண்களும் பன்னீர் தெளித்தபடியே தேருடன் ஓடிவந்தனர்.

"ஆஹா என் தந்தை குலசேகரபாண்டியர் ஈழம் வரை சென்று, வெற்றிவாகை சூட்டி வரும்பொழுது கூட இவ்வளவு வரவேற்பு கொடுப்பார்களா என்பது தெரியவில்லையே நண்பா? இந்த வரவேற்பை, நம் மக்களுக்கு நம் மீது கொண்ட அன்பு என்று எடுத்துக் கொள்வதா? அல்லது இவர்கள் எப்படி வென்றார்கள்? என்ற ஆச்சரியம் என்று எடுத்துக் கொள்வதா?" என்று மாறன் சுற்றிலும் நிகழ்ந்த நிகழ்வை ரசித்தபடி கூறினான்.

அப்பொழுது மாறனை மேலும் கீழும் பார்த்த விக்கிரமன், "என்ன மாறா உனக்கு இந்தச் சூழ்நிலை மிகவும் பிடித்துப் போய்விட்டது போலவே?" என்று கேட்டான்.

"ஆமாம்தானே நண்பா! வெற்றி வாகை சூடி வரும்போது இப்படியொரு வரவேற்பு கொடுத்தால் எந்த வீரனுக்குத்தான் உவகை இருக்காது?" என்று மாறன் திருப்பிக் கேட்டான்.

"ஆனால், இந்தப் போருக்கான காரணகர்த்தாவை மறந்துவிட்டாயா மாறா?" என்று மாறனின் விழிகளைப் பார்த்து விக்ரமன் கேட்டான்.

விக்கிரமனைத் திரும்பிப் பார்த்த மாறன், "செண்பகப்பொழில் இளவரசியைக் கூறுகிறாயா?" என்று கேட்டதும்,

மக்கள் கூட்டத்தினுள் பார்வையை ஓடவிட்டபடியே, "நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன். நீ செண்பகப்பொழில் இளவரசியைத் தேடவில்லையே" என்று கேட்க,

"நண்பா! இளவரசி, செண்பகப்பொழில் தேசத்தில் இருப்பார். இங்கே தேடினால் எப்படிக் கிடைப்பார்?" என்ற மாறனிடம்

"நீ இளவரசியின் ஆசைக்காக இவ்வளவு பெரிய போரில், தலைசிறந்த வீரனை வீழ்த்தி, வெற்றியீட்டி வரும்பொழுது, உன்னைக் காண வேண்டும் என்ற ஆவல் அவருக்கு இருக்காதா? எப்படியேனும் இந்நேரம் மதுரை மாநகருக்கு வந்து உனக்காகக் காத்திருக்க மாட்டார்களா? நான் யாழைப் பார்த்தேன் மாறா! அப்படி என்றால் செண்பகப்பொழில் இளவரசியும் வந்துதானே இருக்க வேண்டும்."

"நீ யாழை மட்டும்தானே பார்த்ததாகக் கூறினாய்?"

"ஆமாம்! அவர்கள் இருவரும் யாரும் அறியாவண்ணம் வந்திருக்கிறார்கள். யாழும், கண்களைத் தவிர மற்ற பாகங்களை ஆடையால் மூடி இருந்தாள்."
"பிறகு எப்படி அவள் தான் யாழ் என்று நீ நினைக்கிறாய்?"

"கண்களைப் பார்த்தால் தெரியாதா?"

"ம்ம்ம் பயங்கரமான காதல்தான்! ஆனால் இது கற்பனையோ என்று தோன்றுகிறது. இப்பொழுது உனது வெற்றிக்கான அற்புதமான நிகழ்வைக் கூட நீ ரசிக்கவில்லை என்றும் தெரிகிறது. மக்களின் இந்த ஆரவாரமும், சந்தோஷமும், வாழ்தோடு கூடிய வரவேற்பும்தானே நமக்கு அவர்கள் அளிக்கும் ஆசீர்வாதம்! போருக்குச் சென்றால் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று ஊக்கம் அளிப்பதும் இந்த நிகழ்வுதான் நண்பா!" என்று மாறன் கூற,

"எனக்கு இதில் எல்லாம் பெரிய நாட்டம் இல்லை மாறா! அருமையான பெண்ணைப் பார்த்து, உயிருக்குயிராய் உளமார காதலித்து, அவளையே திருமணம் செய்து கொண்டோமா, நிம்மதியாக நமக்கு உட்பட்ட தேசத்தை, சந்தோஷமாக ஆண்டோம்மா என்று இல்லாமல், தேசம் பிடிக்கச் செல்வதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது!" என்று விக்ரமன் கூறினான்.

"அப்படியா? ஐயகோ! பாண்டிய தேசம் ஒரு சிறந்த வீரனை இழந்துவிடுமே!... ஆனால், என்னுடன் இருமுறை விருப்பப்பட்டுதானே போருக்கு வந்தாய்?" என்று மாறன் கேட்க,

"அது... நண்பனுடன், நண்பனுக்காக, நம் தேசத்திற்காக வந்தேன்!" என்றான் விக்ரமன்.

"பெரும்பாலான மன்னர்கள் தேசத்தின் நன்மைக்காகத்தான் நண்பா போர் செய்கின்றனர்... சரி! அதைவிடு! நான் என்ன கூறினேன்? நீ என்ன கூறுகிறாய்? அவர்கள் இருவரும் இங்கே இல்லை என்கிறேன்…"

"இல்லை மாறா! அவர்கள் இருவருமே இங்கே இருப்பதாகத்தான் என் ஆழ்மனம் கூறுகிறது…" என்று எங்கோ வெறித்துப் பார்த்தவாறு விக்ரமன் பேசினான்.

"ஆழ்மனமா? பெரிய யோகி ஆகிவிட்டாயா? கண்ணுக்குப் புலப்படாத மனிதர்களின் இருப்பை எல்லாம் ஆழ்மனம் கூறுகிறதே?!! என்று மாறன், விக்ரமனை கிண்டல் செய்தான்.

மிகவும் சந்தோசமாக, குதுகலமாக இருந்த மாறனைப் பார்த்த விக்கிரமனுக்கு, அவன் சந்தோஷத்தில் பங்கு கொள்ளாமல், தான், அவனைத் தனித்து விட்டுவிட்டோமோ? என்று தோன்ற, மாறனுடன் சேர்ந்து விக்ரமனும், வரவேற்பையும் வாழ்த்தொலிகளையும், மக்களின் ஆரவாரத்தையும் ரசிக்க ஆரம்பித்தான்.

நகரின் மையப்பகுதிவரை மக்கள் தந்த வரவேற்பை ரசித்துக் கொண்டிருந்த மாறனுக்கு, தேர் ஆடி அசைந்து நகர்வது சற்று எரிச்சலூட்டியது.

"நண்பா! நாம் நாளைக்குள் அரண்மனையை அடைந்து விடுவோமா? இதற்குப் பொடிநடையாக நடந்தே வந்திருக்கலாம்… இந்நேரம் அரண்மனைக்குச் சென்றிருப்போம்!" என்று மாறன் சலித்ததும்,

"அரசிளங்குமாரருக்கு அரண்மனை செல்வதில் இத்துனை ஆர்வமா? அல்லது…"

"விக்ரமனுக்கு என்னாகிவிட்டது? ஏன் திடீரென்று குரலை மாற்றி, கரகரப்பான குரலில் பேசுகிறான்!' என்று விக்ரமனைப் பார்த்ததும், விக்ரமன் தன் கண்களால் அவர்களுடைய தேருக்கு அருகில் வரும் குதிரையைக் காட்டினான்.

என்ன அதிசயம் நண்பர்களின் தேரை ஒட்டி வந்து கொண்டிருந்த குதிரையில் அமர்ந்திருந்ததவர் செண்பகப்பொழில் மன்னர்!
"இவருக்கு நாம் வெற்றிகண்டதில் ஆனந்தமா? மூன்றே நாட்களில் உலகமே மாறி விட்டதே நண்பா!" என்று மாறன், விக்ரமனை நெருங்கிக் கிசுகிசுத்தான்.

ஒரு வழியாகத் தேர் அரண்மனையிருக்கும் வீதியில் திரும்பியது.

வீதியின் இரு மருங்கிலும் இருந்த மண்டபங்களில் எல்லாம் உணவுகள் தயாராகிக் கொண்டிருக்கும் வாசம் மூக்கைத் துளைத்தது.

அரண்மனை வீதி முழுவதும் பந்தல் போடப்பட்டிருந்தது. மாவிலைத் தோரணம், வேப்பிலைத் தோரணம் என்று தோரணங்கள் தொங்க விடப்பட்டு கொண்டிருக்கிறேன் பலவகைப் பூக்களும் திரைச்சீலையாகத் தொங்கவிடப்பட்டிருந்தன.

"நண்பா இங்கே வரவேற்பு தானே நடக்கிறது? சுற்றிலும் நடப்பவைகளைப் பார்த்தால், வேறு ஏதோ தோன்றுகிறதே! என்று மாறன் கேட்க,

விக்கிரமன் முகத்தில் ஒரு விதமான அதிர்ச்சி இருந்தது.

"ஏன் நண்பா இப்படி ஆகிவிட்டா?ய் எதைப்பார்த்து தொலைத்தாய்?" என்று மாறன் கேட்க,

"சுற்றிலும் இருக்கும் நிகழ்வுகளைப் பார் மாறா! இவையெல்லாம் நமது வெற்றிக்கான வரவேற்பு போல் தெரியவில்லை... திருமண ஏற்பாடுபோல் தெரிகிறது!"

"அரண்மனையில் திருமண ஏற்பாடா யாருக்கு?"

"எனக்கும் அதுதான் சந்தேகம்! திருமணம், சுந்தரனுக்கா அல்லது உனக்கா என்று."

எனக்கா? திருமணமா? எனக்கு என்ன அவசரம்? மூத்தவன் சுந்தரன் இருக்க எனக்கு எப்படித் திருமண ஏற்பாடு நடக்கும் நண்பா?" என்று மாறன் கேட்டதும்,

"இன்னும் ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது மாறா நமக்கு. அரண்மனையின் வாயிலைப் பார்!" என்று விக்ரமன் அரண்மனை வாயிலை வெறித்துக் பார்த்தவாறே கூறினான்.

அரண்மனையின் வாயிலில் சந்தனமும் பூக்களும் சேர்த்து பின்னிய மாலையைக் கையில் ஏந்தி, மாறனைக் கண்குளிர, அகம் குளிர பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார் மதுரை பேரரசர் குலசேகரபாண்டியன்!

"தந்தையா? என் தந்தையா? ஈழத்திலிருந்து வந்துவிட்டாரா அவர்? நமக்கு முன் வந்து, நம்மையே வரவேற்கிறாரா? ஒருவேளை... இந்நிகழ்வெல்லாம் என் தந்தைக்காகப் போடப்பட்ட அலங்காரங்களோ?" என்று மாறன் கேட்க,

"எனக்கு அப்படித் தோன்றவில்லை." என்றான் விக்கிரமன் சற்று கடினக்குரலில்.

"மீண்டும் குரல் மாறிவிட்டதே? நீதானே நண்பா பேசியது? இல்லை, மீண்டும் செண்பகப்பொழில் மன்னர் பேசி விட்டாரா? என்று சிரித்துக்கொண்டே மாறன் கேட்க,

அரண்மனை வாயிலைத் தேர் நெருங்கியதும், மன்னரும், பட்டத்தரசியும், மாறனின் தாயாரும் பெருங்கிள்ளி பாண்டியரும், அவரது மகாராணியும் மற்றும் முக்கிய தேச அரசர்களும், அமைச்சர்களும் சூழ வந்து, மாறனின் கழுத்தில் மாலையிட்டு வரவேற்றனர்.

மாறன் கழுத்தில் மாலையிட்டதுமே மங்கல இசை அரண்மனைக்குள் இருந்து கேட்டது... முதன்முறையாக மாறனின் புருவங்கள் முடிச்சிட விக்ரமனை பார்த்தான்.

விக்ரமன் முகத்தில் எந்த ஒரு பாவமும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தான்.

'விக்ரமா என்ன நடக்கிறது இங்கே?" என்று மாறன் விக்ரமனை உலுக்க,

தன்னுணர்வு பெற்ற விக்ரமன், மாறனை பார்த்துவிட்டு, அரண்மனை வீதியில் இருந்த மக்களுக்குள் பார்வையை ஓட விட்டான்.

"நான் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"

'நான் யாழைப் பார்த்தது நிஜம்தான் மாறா! ஆனால் அவள் முகத்தை மூடி யாருக்கும் தெரியாதபடி வந்திருந்தாள். அதற்கான காரணம் எனக்கு இப்பொழுது விளங்குகிறது. அவளை நான் பார்க்க வேண்டும். அவளிடம் நான் பேச வேண்டும். இங்கு என்ன நடக்கிறது என்று நான் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்." என்று விக்ரமன் படபடப்பாகப் பேசினான்.

அதற்குள் பணிப்பெண்கள் ஓடிவந்து மாறனை மட்டும் தனியாக அழைத்துக் கொண்டு கலகலவென்று பேசிச் சிரித்தபடி நடத்திச் செல்ல, சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு, அதன் இருபுறமும் பணிப்பெண்கள் பூக்களுடன் நின்றுகொண்டிருந்தனர். மாறன் நடக்க, நடக்க அவன் பாதங்களில் பூக்களைச் சொறிந்தபடி இருந்தனர். மாறனுக்கோ இப்பொழுது முகத்தில் மகிழ்ச்சி இல்லை. ஓரளவு என்ன நடக்கிறது என்று யூகித்தான் மாறன்.

'எப்படி இது? எப்படி நடந்தது? மூத்தமகன் சுந்தரன் இருக்க, எனக்கு எப்படித் திருமண ஏற்பாடு நடக்க முடியும்?' என்று நினைத்த மாறன், தன் தாயைத் தேடினான்.

கண் எட்டும் தூரம்வரை வேதநாயகிதேவியாரைக் காணவில்லை. தனக்குப் பின்னால் திரும்பி விக்கிரமனைத் தேட, விக்ரமனையும் காணவில்லை.

மாறனை அழைத்துச் சென்று ஒரு பெரிய கூடத்தில் அலங்காரம் செய்யப்பட்ட ரத்தின இருக்கையில் அமரவைத்துச் சென்றுவிட்டனர் பணிப்பெண்கள்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த பணியாளர்கள் மாறனை, குளியலறைக்குள் சென்று நீராடி வருமாறு கூறிவிட்டு, அவனுக்கான உடையை எடுத்து வைத்துக் காத்திருந்தனர்…

"எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. நான் நீண்ட நேரம் நீராட விரும்புகிறேன். நீங்கள் இரண்டு நாழிகைள் கழித்து வாருங்கள்." என்று உத்தரவு பிறப்பிக்க,

பணியாளர்கள் இடைவரை குனிந்து "உத்தரவு இளவரசே!" என்று கூறிச் சென்றனர்.

பணியாளர்களிடம், `இயல்புக்கு மீறி மரியாதை கூடுதலாகத் தெரிகிறதோ?` என்று தோன்றாமல் இருக்கவில்லை மாறனுக்கு.

பணியாளர்கள் சென்ற சிறிது நேரத்தில் விக்ரமன் வந்தான்.

"விக்ரமா! யாழைப் பார்த்தாயா? என்று பதட்டமாக மாறன் கேட்க,

மாறன் கண்களைப் பார்த்த விக்ரமனின் கண்களில் வலி மிகுதியாகத் தெரிந்தது.

"என்ன விக்கிரமா? யாழைப் பார்த்தாயா? அவள் என்ன சொன்னாள்?" என்று படபடவென்று கேட்டதும்,

"இல்லை! அவள் இந்தப் பகுதியிலேயே இல்லை! நானும் மூன்று வீதிகள் சுற்றி வந்து விட்டேன். அவளைக் காணவில்லை. தவறு நடக்கிறது மாறா. என்று மிகவும் வருந்திய குரலில் விக்ரமன் கூறினான்.
"என் தாயாரை அழைத்து வா! நான் அவரிடம்,செண்பகப்பொழில் இளவரசி பற்றிக் கூறுகிறேன்." என்று மாறன் விக்ரமனை விரைவாகச் செல்லும்படி கூறினான்..

"அரசர்களுக்கெல்லாம், காதலை விட ஆட்சிதான் பெரிது மாறா! வெளியிலிருந்து பார்ப்பதற்கு நம்முடைய ரூபம் பிரமாண்டமாகத் தெரியும். ஆனால் நாம் ஆசைப்படும் எதையும் அடைவதற்கு முன், ஆயிரம் தடைகள் இருக்கும். சாதாரண குடியானவனுக்குக் கிடைக்கும் சந்தோஷங்கள் கூடப் பல நேரங்களில் அரசர்களுக்குக் கிடைப்பதில்லை. பெரும்பாலான அரச திருமணங்கள் ஆட்சி ரீதியாகவே அமையும். உனக்கும் இப்பொழுது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. என்று கூறிய விக்ரமன், மாறன் அருகிலேயே சோர்வாக அமர்ந்தான்.

"சிறுது நேரத்திற்கு முன் எவ்வளவு சந்தோசமாக வந்தோம் விக்கிரமா?" என்ற மாறனின் கண்கள் கலங்கியது.

பதிலேதும் கூறாமல், சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த விக்ரமனின் கண்களும், முகமும் சிவந்து காணப்பட்டது.

"விக்ரமா எனக்கு ஓர் உதவி செய்! உடனே ஏதேனும் ஓரு குதிரையை எடுத்துக் கொண்டு, செண்பகப்பொழில் சென்று, இளவரசியை சந்தித்து வா!" என்று கூறிய மாறனை பார்த்த விக்ரமன்,

"சந்தித்து?"

"அவள் மனநிலையை அறிந்து வா!"

"அறிந்து?"

"என்ன விக்ரமா இப்படிப் பேசுகிறாய்?"

"வேறு எப்படிப் பேச வேண்டும் மாறா? இனி நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. வேண்டுமானால் இப்பொழுது உன்னைத் திருமணம் செய்யவிருக்கும் இளவரசியை யாரென்று வேண்டுமென்றால் பார்த்து வருகிறேன்." என்றான் விக்ரமன்.

"வேண்டாம்! நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை! என் மனதுக்கு இனியவள் செண்பகப்பொழில் இளவரசி ருத்ராதேவி! அவளைத் தவிர வேறு யாரும் என் இதயத்தில் இடம் பிடிக்க முடியாது. அவளுக்காகத் தானே நான் காஞ்சிவரை சென்று போரிட்டு, வென்று வந்தேன்" என்று கூறிய மாறனைக் கூர்ந்து பார்த்த விக்ரமனின் கண்கள், நடக்காத ஒரு விஷயத்திற்காக ஏன் இந்தப் பாடுபடுகிறாய் என்பது போல் என்று கூறியது.

விக்ரமன் பதிலேதும் கூறாமல் அமைதியாகத் தன்னைப் பார்ப்பதைக் கண்டு, "நல்லது! நானே இப்போது வந்திருக்கும் இளவரசியை நேரில் சந்தித்து, என் மனதில் உள்ள விஷயத்தைக் கூறுகிறேன்." என்று மாறன் எழ,

அவன் கையைப் பிடித்துத் தடுத்த விக்ரமன், "வேண்டாம் மாறா! இங்கு என்ன நடந்திருக்கிறது என்று எதுவும் நமக்குப் புரியவில்லை. முதலில் உன் அன்னையையும், தந்தையையும் சந்தித்து, என்ன நடந்தது என்ற விபரத்தைக் கேள். எந்தத் தேசத்து அரசியை, எந்த அரசாட்சி காரணங்களுக்காக இவ்வளவு அவசரமாக மணம் பேசினார்கள் என்று தெரியவில்லை. அதை முதலில் தெரிந்து கொள். பிறகு, அந்த இளவரசியை, சந்தித்துப் பேசு. இளவரசர்களுக்குத்தான் பத்து நாள் விழாவாகத் திருமணம் நடைபெறுமே. முதலில் அன்னையும், தந்தையும் பார்த்துப் பேசு." என்று விக்ரமன் நிதானமாகக் கூறினான்.

"எனக்கு எதையும் தெரிந்து கொள்ள அவசியமில்லை! நாட்டுக்காக என் காதலை நான் துறக்கத் தயாராக இல்லை! சற்றுமுன் நீ கூறினாயே அதுதான் நான் விக்ரமா! எனக்கும் தேசம் தேவையில்லை. என் மனதுக்கு இனியவளுடன் சந்தோஷமாக, நிம்மதியாக, எங்கேனும் வனத்தில் கூட என்னால் வாழ்ந்துவிட முடியும்!" என்று கூறிய மாறன், வேக வேகமாக அந்தக் கூடத்தைக் கடந்து செல்ல,

'வனத்தில் வாழ மாறன் தயாராக இருக்கலாம். ஆனால் செண்பகப்பொழில் இளவரசி ருத்ராதேவி அதற்குச் சம்மதிப்பாரா?' என்று நினைத்தபடி மாறனைப் பின் தொடர்ந்தான் விக்ரமன்.


வார்த்தைகளின் எண்ணிக்கை-2007

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-23

மாலிக்காபூரால் பாண்டியர் படையை எதிர்த்துத் தாக்குப்பிடிக்க முடியவில்லை…

ஒருபுறம் பெரியவருடன் சிற்றரசர்கள் சேர்ந்து நேரடியாகப் போர்புரிய, மற்றொருபுறம் சீலன் மறைந்திருந்து கரந்தடிப் போர் புரியவும் தாக்கு பிடிக்க முடியாமல் மாலிக்காபூர் மதுரைக் கோட்டைக்குள் சென்று கதவை மூடினான்.

உடனே மாலிக்காபூர் அமைச்சரவையைக் கூட்டினான். முக்கியமான அமைச்சர்கள் மற்றும் சேனாதிபதிகள் அவையில் நிறைந்திருக்க மாலிக்காபூர் பேச ஆரம்பித்தான்.


"பாண்டிய தேசத்தைக் கைப்பற்றி நம் அரசாட்சியைத் தென் நாட்டில் நிலை நிறுத்துவோம் என்று நம்பி வந்தோம். ஆனால் ஆரம்பத்திலிருந்தே நாம், சரிவுகளைச் சந்தித்து வருகிறோம். நம்மை இந்த நாட்டிற்குப் போர் தொடுப்பதற்கு அழைத்து வந்தவனே, அரண்மனைக் கருவூலத்தையும், கோயில் பொக்கிஷத்தையும் திருடிக் கொண்டு ஓடிவிட்டான். அவனைப் பிடித்து எவ்வளவு சித்திரவதை செய்தும் பொக்கிஷம் எங்கே இருக்கிறது என்று அவன் கூறவே இல்லை. முடிவில் அவனைக் கொல்வதைத் தவிர வேறு வழி இல்லாமல் அவனையும் கொன்று களைந்தோம். அதன்பிறகும் நம்மால் மதுரையை நிம்மதியாக ஆள முடியவில்லை. பாண்டியர்களால் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. நமது படைபலம் போதவில்லையா? அல்லது என்ன தவறு செய்கிறோம்? என்பதை நாம் யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நம்மைப் பாண்டிய தேசத்தை ஆள விடமாட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது... பிரச்சனை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள் போலிருக்கிறது... அதனால் மதுரையில் ஒரு கவர்னரை நியமித்து விட்டு, நான் சுல்தானை நேரில் சென்று சந்திக்க உள்ளேன். அவரிடம் கேட்டு, மேலும் படைவீரர்களை அனுப்பி வைக்கிறேன். அடுத்துச் செய்ய வேண்டியவை என்ன என்பதைப் பற்றியும் நம் சுல்தானிடம் ஆலோசித்துத் தகவல் அனுப்புகிறேன்." என்று முடித்துவிட்டுச் சபையில் உள்ளோரை பார்த்தான்.

"இவ்வளவு தூரம் படை நடத்தி வந்து, நாட்டைக் கைப்பற்றிய நீங்கள் மதுரையை ஆளாமல், கவர்னரை நியமித்துச் செல்வது எங்களுக்கு மிகவும் வருத்தத்திற்குரியதாக இருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்வதும் சரிதான். பாண்டியர்கள் நம்மை நிம்மதியாக மதுரையை ஆள விடமாட்டார்கள். சுல்தானிடம் சென்று தகுந்த ஆலோசனை பெற்று தகவல் அனுப்புங்கள்." என்று கூறி முடித்ததும்,

சேனாதிபதி எழுந்து, "அப்படியென்றால் நாம் இங்குப் படை நடத்தி வந்து, மதுரையைக் கைப்பறியது வீண் தானா? சுல்தானுக்குப் பரிசாக என்ன கொண்டுபோய்ச் சேர்க்க போகிறோம் தோல்வியையா?" என்று கொந்தளித்தான்.

"இல்லை! என்னால் எந்தப் பரிசும் இல்லாமல் சுல்தானைப் பார்க்க இயலாது. அதோடு நம்மை ஏமாற்றியவர்களையும் விட்டுவிட மனமில்லை. பொக்கிஷங்களைத் தானே எடுத்துக் கொண்டு ஓடினார்கள். அவர்களின் கோவில் இங்கே தானே இருக்கிறது. மதுரை சொக்கநாதர் கோயிலைத் தீயிட்டுக் கொளுத்துங்கள். இங்குள்ள மக்களை மதம் மாற்றுங்கள்... மறுப்பவர்களைப் படுகொலை செய்யுங்கள்... அவர்களுடைய உடைமைகளைப் பறித்துவிடுங்கள்." என்று ஆணையிட்டு ராமேஸ்வரம் நோக்கிப் பயணமானான்.

வழியில் கண்ணில்படும் கோயில்களை எல்லாம் சூறையாடினான். கோயில்களை இடித்தும் போட்டான். அங்குள்ள மக்களின் உடைமைகளையும் பறித்தபடி சென்றான்.

சிதம்பரம் கோயிலைச் சூறையாடியதோடு, ஸ்ரீரங்கம் கோயிலைச் சூறையாடினான். மாலிக்காபூர் வருவதை அறிந்து ஸ்ரீரங்கம் கோயிலின் உற்சவர் சிலையைத் தீக்ஷிதர்கள் எடுத்துக்கொண்டு தலைமறைவாயினர்.
இராமேசுவரம் சென்று அங்குள்ள கோயிலைச் சூறையாடியும், மக்களைப் படுகொலை செய்தும், அவர்கள் உடைமைகளைக் கவர்ந்தும் பெருஞ்சேதம் விளைத்தான். அங்கு ஒரு மசூதி கட்டினான்.

பாண்டியரை அடக்கி அடிமை கொள்ளாமலேயே மாலிக்காபூர், தென்னிந்தியப் படையெடுப்பின்போது கைப்பற்றிய 512 யானைகள், 5000 குதிரைகள் ஆகியவற்றுடனும், 500 மணங்கு எடையுள்ள தங்க அணிகலன்கள், விலை மதிப்பற்ற வைரங்கள், முத்து, மாணிக்கம், மரகதம் ஆகியவற்றுடனும் தில்லி திரும்பினான்.

மாலிக்காபூர் மதுரை கோட்டையிலலிருந்து வெளியேறி விட்டான் என்பதை அறிந்த சீலன், சேனைகளை அவரவர் நாட்டிற்கு அனுப்பிவிட்டு கொல்லிமலைக்குத் திரும்பினான்.

அரப்பளீஸ்வரர் ஆலயத்தின் முன் குதிரையிலிருந்து இறங்கிய சீலன் ஆலயத்திற்குள் சென்றான். அங்கிருந்த அரப்பளீஸ்வரரிடம் மண்டியிட்டுக் கண்ணீர் வழிய நன்றி கூறினான்.

"எனக்குத் துணையிருந்து, அக்கொடிய பகைவனை மதுரையிலிருந்து ஓடவிட்டதற்கு மிக்க நன்றி… ஒரு வழியும் தோன்றாமல் உன்னை மட்டுமே நம்பி இங்கு வந்தேன்... திக்கற்ற நிலையில் உன்னைச் சரணடைந்தேன்... நல்லருள் புரிந்து, பகையை அழித்து என் தேசத்தைக் காப்பாற்றினாய்… அதேபோல் நிலாவிற்கும் துணையிருந்து சென்ற காரியம் சித்தியடைய அருள்புரியுங்கள்... எப்பொழுதுமே உன் அருள் நீங்காமல் எனக்குக் கிடைக்க அருள்புரியுங்கள்…" என்று மனமுருக வேண்டிவிட்டு சிவனடியாரைத் தேடினான்.

"ஐயனே! எங்கு இருக்கிறீர்கள்? திக்கற்று தவித்த எனக்கு வழிகாட்டிய தாங்கள், இன்று எனக்குத் தரிசனம் தராமல் இருப்பதன் காரணம் அறியேன்… அடியேன் ஏதும் தவறிழைத்து விட்டேனா?" என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே,
"வாழ்த்துக்கள் சீலா!" என்ற தெய்வீகக் குரல், கருவரையில் எதிரொலிக்க, சிவனடியார் சீலன்முன் தோன்றினார்

"ஐயனுக்கு என் பணிவான வணக்கங்கள்…" என்று வணங்கிய சீலன், சிவனடியாரின் பாதங்களை நோக்கிக் குனிய,

சட்டென்று விலகி நின்றவர், "என்மீது உனக்கிருக்கும் மரியாதையை நான் நன்கு அறிவேன். ஆனால் ஆண்டவன் சன்னதியில் சாதாரண மனிதப்பிறவியான என் பாதங்களைப் பணிவது தகாது சீலா!" என்று கண்களில் கருணை வழியப் பேசியவர், "அடுத்து என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறாய்?" என்று கேட்டார்.

"பகைவனிடமிருந்து மதுரையைக் கைப்பற்றி விட்டோம்."

"கவர்னரை நியமித்து விட்டுத் தானே சென்றிருக்கிறான்? முழுமையாக வெளியேறவில்லையே?" என்ற சிவனடியாரிடம்,

"ஆமாம் ஐயனே! தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை! அடுத்து தில்லிக்கு சென்று, நிலா சென்ற காரியத்திற்குத் துணைநிற்கப் போகலாம் என்றிருக்கிறேன். தாங்கள் ஆசி வழங்கினால் இப்பொழுதே புறப்படுவேன்."

"சென்று, ஈசனின் அருளால் பகையை முற்றிலும் அழித்துவிட்டு, வெற்றியுடன் தாயகம் திரும்பு மகனே! பகையில் மீதம் வைக்கக் கூடாது என்பார்கள்... அங்கே பகை அழிந்தால்தான் இங்கு மதுரை பாண்டியர்வசம் கிடைக்கும். உன் அன்னையையும் விடுவிக்க முடியும்… வெற்றித் திருமகள் உன்னை என்றும் பற்றியிருக்கட்டும் சென்று, வென்று வா!" என்று ஆசீர்வாதம் செய்தார்.

மீண்டும் அரப்பளீஸ்வரரை வணங்கி ஆசிபெற்று கோயிலை விட்டு வெளியே வந்தான்.
இந்திரனும் சீலனைப் பார்த்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வாலால் செல்லமாகச் சீலனின் நெஞ்சில் தட்டியது.

இந்திரன் போன்ற மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட குதிரைகள் பெண்களின் அழகிய கூந்தல் போல் மயிர் அடர்ந்து இருக்கும் தன் வாலால் மனிதனின் நெஞ்சில் செல்லமாகத் தட்டுவது மகிழ்ச்சியையும், பின்புறம் தட்டினால் கோபத்தையும் குறிப்பதை அறிந்திருந்ததால்,

"பரவாயில்லையே ஒரு வழியாக என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொண்டாய் போலிருக்கிறது?" என்று சீலன் சிரித்ததும்,

'இவன் இப்படிச் சிரித்து எத்தனை நாளாகிறது' என்று நினைத்த இந்திரன், "பாதிக் கிணறுதான் தாண்டியிருக்கிறோம். புறப்படு!" என்றது.

"வா! மீனாட்சி அம்மனையும், சுந்தரேஸ்வரரையும் வணங்கி ஆசி பெற்றுச் செல்வோம்!" என்று கூறி மதுரையை நோக்கி விரைந்தான்.

மதுரைக்குள் நுழையும்போதே மக்களின் ஓலங்கள் கேட்டது.

"என்னவாயிற்று இந்திரா? ஏன் நகரமே வெறிச்சோடிக் கிடக்கிறது? வீடுகள் ஏன் பூட்டப்பட்டு இருக்கிறது? பூட்டப்பட்ட வீடுகளில் மக்களின் அழுகுரல் கேட்பதேன்?" என்று வேகத்தைக் குறைத்து வீதிகளில் பார்வையிட்டவாறு சீலன் கேட்க,

"நானும் உன்னுடன்தானே இருக்கிறேன்? எனக்கெப்படித் தெரியும்? என்னிடம் கேட்பதை விடுத்து கீழே இறங்கிப் போய்க் கேள்!" என்று தன் முதுகை உலுக்கி சீலனை கீழே இறங்கச் செய்தது.

சீலன், இந்திரனிலிருந்து இறங்கி, அருகில் இருந்த வீட்டின் கதைவைத் தட்டினான்.

யாரோ கதவைத்தட்டும் ஓசைகேட்டதும், விளக்கின் திரியை உள்ளிழுத்து, தீபத்தைக் குளிரவைத்தனர். கதவைத்திறக்கவும் இல்லை... வீடே இருள் சூழ்ந்து அமைதியாக இருந்தது.

"கதவைத் தட்டினால், திறப்பதற்கே பயப்படுகிறார்களா? ஏன்?" என்று யோசித்தான்.

'நாம் சென்றபிறகு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டதா?' என்று அஞ்சியவன், இந்திரனின் மீதேறி,

"அருகில் உள்ள அரண்மனைக் காவலன் இல்லத்திற்குச் செல்!" என்று கூற, ஒரே தாவலில் அரண்மனைக் காவலன் வீட்டின் முன் இந்திரன் நின்றது.

"அரண்மனைப் பாதுகாவலரே நான்தான் வந்திருக்கிறேன். கதவைத் திறவுங்கள்!" என்று குரல் கொடுத்துக்கொண்டே விக்ரமன் கதவைத் தட்டவும், சாளரம் வழியாக வந்திருப்பது யாரென்று அறிந்த பிறகே கதவு திறக்கப்பட, புருவங்களைச் சுழித்தவாறு திண்ணையில் அமர்ந்த சீலனை வணங்கினான் அரண்மனைக் காவலன்.

"இளவரசருக்கு என் வணக்கங்கள்… தயைகூர்ந்து என் இல்லத்தினுள் வந்து உரையாடுமாறு வேண்டுகிறேன்!" என்று காவலன் கூறுவதற்குள் பலமுறை வீதியைக் கலக்கத்துடன் பார்ப்பதைப் பார்த்த சீலனுக்கு,

'தான் பிறந்து வளர்ந்த ஊரில், தன்னுடைய இல்லத்தின் வெளியே அமைந்திருக்கும் திண்ணையில் நின்று பேசுவதற்குக்கூட அஞ்சும் அளவிற்கா என் தேசம் இருக்கிறது?' என்று வருந்தியவன்,
"இரவு வேளையில் ஒரு குடியானவன் இல்லத்திற்குள் எவ்விதம் வருவேன்? வா! மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று பேசலாம்." என்று கூறிவிட்டு சீலன் திரும்ப,

"தங்களுக்கு ஊரின் நிலவரம் தெரியாதா இளவரசே? போர் முடிந்து சிற்றரசர்கள் சென்றபிறகு, மீனாட்சிஅம்மன் கோயில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது… மதம்மாறச்சொல்லி துன்புறுத்துகின்றனர். மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன." என்று மதுரை மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை அரண்மனை பாதுகாவலன் விவரிக்க, கோபத்தில் சீலனின் கை முஷ்டி இறுகியது.

"மதம் மாறுபவர்கள் மாறட்டும்... மதம் மாற விருப்பமில்லாதவர்கள் நகரத்தை விட்டு வெளியேறி, சில திங்களுக்கு அருகில் உள்ள கிராமங்களில் குடியேருங்கள்."

"திடீரென்று சொந்த ஊரையும் வீட்டையும் விட்டுவிட்டு, தெரியாத கிராமங்களில் குடியேறினால் தங்குவதற்கு இடத்திற்கும், வேலைக்கும் என்ன செய்வார்கள் மக்கள்?" என்று அரண்மனை பாதுகாவலன் மக்களின் மீதுள்ள அக்கறையில் கவலையுடன் வினவினான்.

"இதோ! எனது முத்திரை மோதிரம்! இதை எடுத்துக்கொண்டு அந்தந்த கிராமத்தின் தலைவரைச் சந்தித்தால், நீங்கள் தங்கிக்கொள்ள இடத்தையும், உழைத்து உண்ண வழியும் செய்து தருவார்கள்." என்ற சீலன் தனது விரலில் இருந்த முத்திரை மோதிரத்தை எடுத்து அரண்மனைப் பாதுகாவலரிடம் கொடுத்தான்.

அதை வாங்கிக்கொண்டு இடைவரை குனிந்து, "நன்றி இளவரசே!" என்ற பாதுகாவலனிடம்,

"இந்தத் துன்பம் எல்லாம் இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே! நமக்கான விடியல் வரும்வரை கொஞ்சம் பொறுத்திருங்கள். இந்தக் கொடுமைக்கெல்லாம் முடிவுகட்டத்தான் புறப்பட்டிருக்கிறேன்… நான் திரும்பி வரும்பொழுது நம்முடைய தேசம் நமக்கான தான் இருக்கும். போய் வருகிறேன்!' என்றவன், இந்நிலையில் மீனாட்சிஅம்மன் கோயிலைக் காணும் சக்தியற்று,

"வென்று வருகிறேன் தாயே! எனக்கு ஆசிகூறி வழியனுப்புங்கள்!" என்று வீதியில் நின்று கோயில் கோபுரத்தைப் பார்த்தபடி வணங்கிவிட்டு, இந்திரனின் மீதேறிப் புயலாய் பறந்தான்.

சீலனின் குதிரை முன்னோக்கிச் செல்ல, நகரங்களைக் கடந்து வயல்களும் காடுகளும் பின்னோக்கிச் சென்றது. சீலனின் நினைவுகளைப் போல்.


"எனக்கும் தேசம் தேவையில்லை. என் மனதுக்கு இனியவளுடன் சந்தோஷமாக, நிம்மதியாக, எங்கேனும் வனத்தில் கூட என்னால் வாழ்ந்துவிட முடியும்!" என்று கூறிய மாறன், வேக வேகமாக அந்தக் கூடத்தைக் கடந்து செல்ல,

'வனத்தில் வாழ மாறன் தயாராக இருக்கலாம். ஆனால் செண்பகப்பொழில் இளவரசி ருத்ராதேவி அதற்குச் சம்மதிப்பாரா?' என்று நினைத்தபடி மாறனைப் பின் தொடர்ந்த விக்ரமன், என்று அழைக்கப்படும் பாண்டிய தேசத்தின் நெல்லைச் சிற்றரரசின் இளவரசன் ஸ்ரீல ஸ்ரீ விக்ரம சீலன்…

"மறா! நில்! புதிய இளவரசியை நான் சந்தித்து வருகிறேன்…" என்று மாறனின் கைகளைப் பற்றவே...

"நீ சந்தித்து என்ன பயன்? ஆரம்பத்திலேயே உண்மையை உரைப்பது நல்லது விக்ரமா!"

"முதலில் உன் அன்னையிடம் பேசு மாறா! அவர்முலமாகக்கூட விசயத்தைத் தெரியப் படுத்தலாம்."

"என் அம்மாவிற்கு நான் ஓர் இளவரசியை விரும்புவதை அரசல் புரசலாகத் தெரியப்படுத்தியிருக்கிறேன் விக்ரமா… அந்த இளவரசியின் கனவை நிறைவேற்றும் பொருட்டே காஞ்சியை நோக்கிப் படைசெலுத்தியது என்பதையும் நன்கு அறிவார்கள்."

"அது தெரிந்ததால்தான் உன் அன்னையைச் சந்திக்கச் சொல்கிறேன்… என்னமாதிரியான இக்கட்டான நிலையில் அவர்கள் உனது திருமணத்தை ஏற்றார்களென்று தெரிய வேண்டாமா?"

"இருக்கலாம்… அதற்காக மனதில் ஒருத்திக்கு இடம் கொடுத்துவிட்டு அருகில் இன்னொரு பெண்ணுக்கு எப்படி இடமளிக்க முடியும்? என்னவளை துயரில் தள்ளி நான் மகிழ்ந்திருப்பதற்கா இத்தனை பாடுபட்டேன்." என்று மாறனும் விக்ரம சீலனும் வாதாடிக்கொண்டிருக்கும்பொழுது அங்கு வந்த வேதநாயகிதேவியார்.

"குமாரா நீங்கள் இருவரும் ஓடிப்பிடித்து விளையாட இது தகுந்த நேரமில்லை... நீ இன்னும் நீராடவில்லையா குமாரா?"

"அம்மா நான் உங்களிடம் பேச வேண்டும்."

"தாராளமாகப் பேசலாம் குமாரா… ஆனால் இப்பொழுது நீ நீராடி முடித்தபிறகு விக்ரமனை அழைத்துக்கொண்டு, வனத்தில் வசந்த மண்டபம் கட்டச்சொன்னாயே அது செவ்வனே முடிந்தது… எனது மைந்தனின் வெற்றிக்கு இந்தத்தாயின் எளிய பரிசு."

வசந்தமண்டபம் தயார் நிலையில் இருக்கிறதா? என்ற மாறனின் மனக்கண் முன்னால் அந்த வனத்தில் ருத்ராதேவியுடன் கழித்த நாள் நினைவிலாட,

'எவ்வளவு கனவுகளுடன் அந்த மண்டபம் கட்ட எண்ணியிருந்தேன்... இப்போது அந்த மண்டபம் உருவானதில் எனக்கு எவ்வித மகிழ்ச்சியும் வரவில்லையே?' என்று நினைத்தபடி தன் அன்னையைப் பார்த்தான்.
மாறனின் கண்களில் இருந்த வலியைப் பார்த்த விகரமன், மாறனின் எண்ணம் புரிந்து, மாறன் ஏதேனும் கூறி விடுவானோ என்று அஞ்சி, ஏதேனும் கூறி விடுவானோ என்று அஞ்சி

"உடனே புறப்படுகிறோம் மகாராணி!" என்று கூறிவிட்டு அவன் கைகளைப் பிடித்து மாறனுக்கான கூடத்தை நோக்கி ஓடினான்.

வனத்தின் எல்லையில் கால் வைத்ததுமே, நின்றுவிட்டான் மாறன்… "திரும்பிவிடுவோம் விக்ரமா!"

"மகாராணி கேட்டால் என்ன சொல்வாய் மாறா?"

"அந்த வசந்தமண்டபம் எனக்கு நினைவு மண்டபம் விக்ரமா!!"

"என்ன உளறுகிறாய்!" என்று விகாரமனா பதற,

தான் கூறிய வார்த்தையின் பொருள் புரிந்த மாறன் சிரித்துவிட்டான்.

"நண்பா! நான் கூறிய அர்த்தம் வேறு… என் காதல் நினைவுகளுக்காக எழுப்பிய மண்டபம் என்றேன்."

"சரி இப்படியே சிரித்துக் கொண்டே வா… மூன்றே நாளில் என்ன செய்துவைத்திருக்கிறார்கள் என்று பார்த்து வருவோம்!" என்று விக்ரமன் சொன்னதும் மீண்டும் முகம் வாடியது மாறனுக்கு…

"மாறா! வா! உனது அன்னை ஆசைப்பட்டு உனக்காகக் கொடுத்த பரிசைப் பார்ப்பதாக நினைத்து வா… மற்றதை பிறகு பார்க்கலாம்" என்று ஏதேதோ சமாதானம் கூறி, வனத்திற்குள் செல்வதற்காகச் சைந்தவனான குதிரையிலிருந்து விக்ரமன் இறங்க,

"ஏன் இறங்குகிறாய்? இவர்களையும் அழைத்துச் செல்வோம்…"

"சைந்தவனால் இந்த வனத்துள் பிரவேசிப்பது கடினம் மாறா!"

"இன்னுமா சைந்தவனைப் பழக்கப்படுத்தாமல் இருக்கிறாய் விக்ரமா?"

"அதற்கு எங்கே நேரம் கிடைத்தது உனக்கு?"

"இரவுபகல் பாராமல் பழக்கப்படுத்தினேன்" என்று சிரித்தவன், "எல்லாமே ருத்ராவிற்காகச் செய்தது." என்று கண்கலங்கினான் மாறன்.

"இப்பொழுது எப்படிப் போகலாம் என்று கூறு."

"சத்திகனுடன் நான் முன்னால் செல்கிறேன்… சைந்தவன் கெட்டிக்காரன் சரியாகக் கவனித்துப் பின்தொடர்ந்து வந்துவிடுவான்." என்று கூறி மாறன் சத்திகனுடன் முன் செல்ல, சைந்தவன் சற்றுத் தாமதித்தாலும் கவனமாகச் சென்றான்.

கானகத்திலிருந்து வெளியே வந்ததுமே வசந்தமண்டபம் எழிலுற வீற்றிருந்தது தெரிந்தது.

மண்டத்தைப் பல வண்ண திரைச்சீலையாலும், மலர்களாலும் அலங்கரித்திருந்தது தூரத்திலிருந்து பார்த்தபோதே தெரிந்தது.

சிறது நேரம் அப்படியே அசையாமல் நின்ற மாறனை முந்திச் சென்றான் விக்ரமசீலன்.
"எனக்கு ஆர்வம் அதிகம் மாறா! நான் செல்கிறேன் வா!" என்று கூறிவிட்டு, சைந்தவனுடன் வசந்த மண்டபத்தை நோக்கி விரைந்தான் விக்ரமசீலன்.

மண்டபம் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளால் மனதைக் கொள்ளை கொள்வதாக இருந்தது… ஒவ்வொரு தூணிலும் காதலுக்காக வாழ்ந்தவர்களின் சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக உண்மையான மனித உருவம் போன்றே வடிவமைத்திருந்தனர். அதில் பெரும் பங்கு வகித்தது ராதா கிருஷ்ணன் சிற்பங்களும், சீதாராமன் சிற்பங்களுமே…

மண்டபத்தின் அழகான வடிவமைப்பைக் கண்ட விக்ரம சீலன் அசந்து பார்க்கையில் அவன் பின்னால் ஒரு பெண்ணின் குரல் விக்ரமசீலனின் ரசிக மனத்திற்கு இடையூறாக, சற்று சலித்தபடி திரும்பிப் பார்க்க,

ஒரு பணிப்பெண் நின்றிருந்தாள்… அவளது உடையலங்காரமே அவள் அரண்மனை பணியாள் என்பது புரிய,

"யார் பெண்ணெ நீ? இந்த அடர்ந்த வனத்தில் தனியாக இங்கே நின்று கொண்டிருக்கிறாய்?" என்று விக்ரம சீலன் ஆச்சரியமாகக் கேட்க,

"இந்தக் கேள்வியை நான் தான் உங்களிடம் கேட்க வேண்டும். யார் நீங்கள்? இங்கே ஓர் அரசிளங்குமரி, தனது வருங்கால மணவாளனுக்காகக் காத்திருக்கிறார். நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?" என்று அதிகாரத்தோரணையில் கேட்க,

அப்பொழுதுதான் மண்டபத்தின் பக்கவாட்டில் இளவரசிகள் ஏறி வரும் பல்லக்குகள் இருப்பதைக் கண்டான்.

ஓரளவு விபரத்தைக் கணித்தவனுக்கு மனம் `திக்` என்று தூக்கிப்போட, விரைந்து மண்டபத்திற்கு வெளியே வந்து மாறன் எங்கே இருக்கிறான் என்று பார்த்தான்.
மாறன் சத்திகனோடு மெதுவாக மண்டபத்தைப் பார்த்தவாறே, மண்டபத்தை நோக்கி வந்துகொண்டிருந்தான்.

'அடக்கடவுளே! இங்கே அந்தப் புது இளவரசியை அழைத்து வந்து இங்கே இருக்க வைத்திருக்கிறார்கள்… மாறனையும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்… இருவரும் சந்திக்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். என்ன செய்யப் போகிறேன்? அவன் ருத்ராவின் நினைவில் வருகிறான். ஏதாவது விபரீதமாகப் பேசிவிட்டால் என்ன செய்வது?" என்று மாறனைப் பார்த்தவரே யோசித்துக் கொண்டிருந்தால் விக்ரமன்.

மீண்டும் மண்டபத்தினுள் சென்று, "இந்த மண்டபம் பாண்டிய குமாரன் மாறன் பூபதிக்காகக் கட்டப்பட்டது. நீங்கள் யார் இங்கே எப்படி வந்தீர்கள்?" என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பெண், "அந்த இளவரசரைத் திருமணம் செய்து கொள்ளப்போகும் இளவரசி இங்குதான் இருக்கிறார். இருவரையும் ஒருவரையொருவர் சந்தித்துக் கலந்து பேசுவதற்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்." என்று கூற விக்ரமனுக்குத் தலை சுற்றியது.

அதற்குள் மாறன் சத்திகனுடன் மண்டபத்தின் வாயிலுக்கு வந்த சப்தம் நன்றாகக் கேட்டது.

வார்த்தைகளின் எண்ணிக்கை-1634

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-24

வசந்த மண்டபத்தில் ஓர் இளவரசியை வரவழைத்து, மாறனையும் வரவழைத்து, சந்திக்க ஏற்பாடு செய்திருக்க, ருத்ராதேவியின் நினைவுகளைச் சுமந்து வந்த மாறன் மண்டப வாயிலை அடைந்தான்.

தவறாக எதுவும் நடந்துவிடக் கூடாதே என்ற பரிதவிப்பில் விக்ரமன் மாறனை நோக்கிச் சென்றான்.

விரைந்து வந்து தன் எதிரில் நின்று திருதிருவென விழிக்கும் விக்ரமனைப் பார்த்துப் புருவங்களைச் சுருக்கிய மாறன்,

"என்னவாயிற்று விக்ரமா? மண்டபத்தைக் காண நீ வந்த வேகம் என்ன? இப்போது நிற்கும் கோலம் என்ன?" என்று லேசாக இதழ் பிரித்துச் சிரித்தான்.

“முதலில் மண்டபத்தைச் சுற்றி பார்ப்போம் மாறா!” என்று மாறனை அழைத்துக் கொண்டு மண்டபத்தைச் சுற்றப் போனவனுக்கு, மண்டபத்தின் பக்கவாட்டில் இளவரசியின் பல்லக்குகள் நிற்பது ஞாபகத்திற்கு வர,

"வேண்டாம் மாறா! நாம் மண்டபத்திற்கு உள்ளேயே சுற்றிப்பார்ப்போம்." என்று கூறியபடி மண்டபத்திற்குள் காலை வைத்தான்.

"இவனுக்கு என்ன ஆயிற்று இதுவரை நன்றாகத்தானே இருந்தான்?" என்று மீண்டும் ஆச்சரியமாக விக்ரமனைப் பார்த்தான் மாறன்.

பிறகு மண்டபத்தின் அழகைக் கண்டு தன்னை மறந்து ரசித்துக்கொண்டிருந்தான்.

ஆனால் விக்ரமனோ? பணிப்பெண் எப்பொழுது வெளியே வருவாள் என்று காத்திருந்தான்.

"ஒவ்வொரு தூணிலும் காதலைச் சொன்னவர்களுக்கு என் காதல் புரியவில்லையே விக்ரமா!" என்று மாறன் வருந்த,

'உள்ளே இருக்கும் இளவரசிக்கு, இவன் பேச்சுகள் கேட்காமல் இருக்கவேண்டுமே?' என்று கவலையில் ஆழ்ந்தான் விக்ரமன்.

"அது புரியாமலா உங்கள் திருமணத்தை நிச்சயம் செய்தார்கள்?" என்று கூறியபடி விக்ரமன் எதிர்பார்த்த பணிப்பெண் வந்து நின்றாள்.

"யாரம்மா நீ?" என்று மாறன் கேட்டதும்,

"என்னைப் பற்றிச் சொல்ல எதுவுமில்லை இளவரசே! ஆனால் இத்திரைச்சீலைக்குப் பின்னே, உங்களுக்காகக் காத்திருக்கும் எங்கள் இளவரசி பற்றி வேண்டுமானால் சொல்கிறேன்." என்றவளைப் பார்த்து,

"ஒரு வினாவிற்கு இவ்வளவு பெரிய பதிலா?" என்று விக்ரமனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது‌.

"என்ன விக்ரமா இது? உன் வித்தியாசமான நடவடிக்கைக்கு இதுதான் காரணமா?" என்று கேட்டதும்,

"எனக்கும் இங்கு வரும் வரை தெரியாது மாறா!"

"இப்பொழுது தெரிந்து விட்டது இல்லையா? என் பின்னால் வா!" என்று கூறிவிட்டு வேகமாக மண்டபத்தை விட்டு மாறன் வெளியேற,
"அப்படி என்றால் என்னை இங்கேயே விட்டுச் செல்லப் போகிறீர்களா?” என்ற இனிய கானம் போன்ற குரல் கேட்டு நின்றான்.

'இது யாருடைய குரல்?' நினைத்தவாறு விக்ரமனும்,

'இது என் உயிர்வரை கலந்த குரல் ஆயிற்றே?' என்று மாறனும் திரும்பிப் பார்க்க அங்கே எழிலரசியாக ருத்ராதேவி நின்றுகொண்டிருந்தாள்.

மாறனுக்கு, தான் இருக்கும் இடம், பொருள், ஏவல் என்ன, காவல் கூட மறந்து ஓடிச்சென்று ருத்ராதேவியின் எதிரில் போய் நின்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

"ருத்ரா நீயா? நான் எதிர்பார்க்கவில்லை. நீ இங்கே எனக்காகக் காத்திருப்பாய் என்று. வா உடனே இங்கிருந்து நாம் எங்காவது சென்று விடுவோம்."

"ஏன்? நாம் எங்காவது செல்ல வேண்டும்"

"எனக்கு அரண்மனையில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது."

"உங்களுக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லையா?" என்று ருத்ராதேவி கேட்க,

"என்ன கூறுகிறாய்? என் மனம் முழுவதும் நீ இருக்கும்போது எனக்கு எப்படி அந்தத் திருமணத்தில் விருப்பம் இருக்க முடியும்?" என்றான் மாறன்.

"உறுதியாகச் சொல்கிறீர்களா? திருமணத்தில் விருப்பம் இல்லையா?" என்று மீண்டும் கேட்டாள்.

"நிச்சயமாகச் சொல்கிறேன் எனக்கு அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை.
அப்படி என்றால் நம் காதல் எவ்வாறு கைகூடும்?" என்று கேட்டாள்.

"நாம் சேர்ந்து வாழ என்ன தடை இப்போது? நீ என்னுடன் புறப்பட்டு வந்தால் எங்காவது சென்று திருமணம் செய்து கொள்வோம்." என்றான் மாறன்.

"ஏன் எங்காவது சென்று திருமணம் செய்துகொள்ள வேண்டும்? உங்கள் அரண்மனைக்குச் சென்றால்… நம் இல்லத்துப் பெரியோர்களே, நம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விடுவார்களே?" என்ற ருத்ராதேவி சிரிக்க,

புரியாமல் ஒரு நிமிஷம் பார்த்தவன், விசயம் புரிந்ததும், "என்ன சொல்கிறாய்?

"அங்கு நடக்கும் திருமண ஏற்பாடுகள் உங்களுக்கும் எனக்கும் தான்" என்றவளின் வதனம் சிவக்க கண்ட மாறன்,

"எப்படி?"

"உங்களது தாயார்… மதுரைப் பேரரசரின் மனம் கவர்ந்த மகாராணி." என்றதும்,

சற்று நேரத்திற்கு முன் தன் தாயிடம், தான் நடந்து கொண்ட விதம், வெட்கித் தலைகுனிய வைக்க 'என்னை ஆசையாகப் பார்க்க வந்த என் தாயாரிடம் முகம் கொடுத்துக் கூட நான் பேசவில்லை.' என்று வருத்தப்பட்டான்.

"என்ன ஆயிற்று? தங்களின் அழகிய வதனம் சற்றே சுணங்குகிறதே?" என்று மாறனின் முகத்தில் கண் பதித்தவாறே ருத்ராதேவி கேட்டாள்.

மாறன், சற்றுமுன் தன் தாயைச் சந்தித்தபொழுது, அவனது வெற்றியைப் பெரிதும் விரும்பிய அன்னையிடம், தன்னுடைய வெற்றியின் களிப்பைப் பகிர்ந்து கொள்ளாமல், திருமண ஏற்பாடுபற்றிய தவறான புரிதலால், அவரிடம் கோப்ப்ப்ட்டு வந்த விபரங்களைக் கூற,

"கவலை கொள்ள வேண்டாம்… மாகாராணியார் தங்களின் வருத்ததிற்கான காரணத்தைப் புரிந்திருப்பார்… நான் கணிப்பது சரியென்றால் நீங்கள் சென்று உங்கள் அன்னையைச சந்திக்கும்பொழுது அவர் சிரித்துக்கொண்டே வரவேற்பார்." என்று கூற,

"ருத்ராதேவியார் தனது குடும்ப அங்கத்தினரை அரவணைப்பதிலும் சிறந்தவர் போலவே மாறா?" என்று விக்ரமன் தன் தோள்களைச் சற்றே குலுக்கியவாறு கூற,

"பின்னே தங்களைப் போல் இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா? என்று இதுவரை நமக்கு யாழ் என்றும், நிலா என்றும், சமீதா என்றும், அறிமுகமாகியிருந்த யாழ்நிலா, மண்டபத்தின் உள்ளே வந்தவாறு கூறினாள்.

"வந்தனம் தேவி! தாங்களின் நகர்வலம் செவ்வனே நிறைவடைந்ததா?" என்று விக்ரமசீலன், யாழ்நிலாவைப் பரிகசித்தான்.

"தாங்கள் யார்? பெரிய அரசரின் தவப்புதல்வர். நெல்லைச் சீமையின் ஒரே வாரிசு... இளவரசர் விக்ரமசீலன்... அரண்மனையில் இருக்கும் ஏகப்பட்ட குதிரைகளில் தங்களின் செல்லக் குதிரையில் ஏறி வனத்திற்குள் விரைந்து வர முடியும்... நானோ தளபதியின் மகள்! நான் வனத்திற்குள் நடந்து தானே வர வேண்டும்!"

"தேவியாருக்கு ஏன் இவ்வளவு சலிப்போ?" என்று கண்களில் குறும்பு தெறிக்க விக்ரமசீலன் கேட்டதும்,

"இருக்காதா பின்னே? அதிகாலையில் சேனைகள் புடைசூழ பாண்டிய தேசத்தின் எல்லையில் இரண்டு இளவரசர்களும், ஒரு சேனாதிபதியும் கால்பதித்த கணத்திலிருந்து இந்த நிமிடம்வரை ஒரு பெண், கால் வலிக்கப் பின்தொடர்வது கூட அறியாமல் 'சிவனே!' என்று தன் வழியில் போகிறவரைப் பார்த்தால் கொஞ்சம் சலிப்பாகத் தான் இருக்கும்" என்றாள்.

"இன்னும் இருவரும் சேர்ந்து வாழும் வாழ்வே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் சலிப்பா?' என்றும் மாறனும் யாழை கிண்டல் செய்ய,

"இளவரசி!" என்று ருத்ரா தேவியைப் பார்த்தாள் யாழ்நிலா.

ருத்ரா தேவியோ மாறனின் அழகு முகத்தைத் தவிர இவ்வுலகில் எனக்குப் பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் எதுவும் இல்லை! என்பது போல் தன்நிலை மறந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதைக் கண்ட யாழ்நிலா, "எனக்கென்று வாய்த்தவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டுமா?" என்று கூறிக்கொண்டே மண்டபத்தின் உட்புறம் செல்ல,

"தேவியின் பாதங்களில் உள்ள வலியைவிட மனதினுள் வலி அதிகம் இருப்பதைத் தங்களின் பேச்சு எனக்கு நன்கு புரிய வைக்கிறது" என்று கூறியவாறே, விக்கிரமனும் யாழைப் பின்தொடர்ந்தான்.

திரைச்சிலை மறைவுக்குப் பின் சென்றதும், விக்கிரமனின் கரத்தைப் பிடித்து வேகமாகத் தன்னருகில் இழுத்து மறைவாக நின்றவளிடம், “எனது வெற்றிக்காக்வா இத்தகைய பரிசு? சரி சரி யாரும் வரும் முன் கொடுத்துவிடு” என்று கூறி யாழ்நிலாவின் இதழ் ஒற்றி எடுக்கப் போகும் ஆவல் தூண்ட, தனது கண்னத்தைக் காட்டி நின்றான்.

யாழ்நிலாவின் இதழ்கள் தனது கன்னத்தைத் தீண்டாததை உணர்ந்த விக்ரமசீலன், யாழ்நிலா நாணம் கொண்டிருக்கிறாள் என்றெண்ணி, யாழ்நிலாவைப் பார்க்க, யாழ்நிலாவின் வதனத்திலோ நாணத்திற்குப் பதிலாக எள்ளும், கொள்ளும் வெடித்தது.
`இந்த இனிய சூழ்நிலைக்கு ஏற்ற முகப்பாவம் இதில்லையே` என்று எண்ணியவன், “என்ன ஆயிற்று?” என்று சற்றே இறங்கிய குரலில் கேட்டான்.

"தங்களுக்குக் கொஞ்சமாவது ஏதாவது இருக்கிறதா? அவர்கள் இருவரும் தனித்துப் பேச வேண்டும் என்றுதானே இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது? கூடவே கரடிபோல் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்களே? அதைப் பார்த்ததும் தான் எனக்கு "சொக்கா"! என்று தோன்றியது. அதனால்தான் சற்று உங்களுடன் விளையாடி என் பின்னால் வரவழைத்தேன்." என்று யாழ்நிலா கூற,

"தேவியாரின் மனதிற்குள் என்மேல் எவ்வளவு மரியாதை? எத்தனை வர்ணனை மொழிகள்?" என்று விக்ரமன் விளையாட்டான வருத்தத்துடன் கூறினான்.

"சரி! சரி! பேசாதீர்கள்! அங்கே என்ன நடக்கிறது என்று கவனிப்போம்." என்று கூறி யாழ் சட்டென்று திரும்பி, திருச்சீலையில் இருக்கும் இடைவெளி வலியாக, மாறனையும், ருத்ராதேவியையும் பார்த்தாள்.

"அடிப்பாவி! உனக்குக் கொஞ்சமாவது இங்கிதம் இருக்கிறதா? அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்!"

"அப்படி என்றால் நாம் இருவரும் சன்னியாசியாகப் போகிறவர்களா?" என்று சின்ன முறைப்புடன் அவள் கேட்க,

"நான் எங்கே அப்படிச் சொன்னேன்?"
"பின்னே! நீங்கள் சொன்னதன் பொருள் என்ன?"

"அவர்கள் இருவரும் திருமணம் ஆகப் போகிறார்கள். அவர்களை மறைந்து நின்று பார்ப்பது தவறு! என்கிறேன்.” என்றான் `இங்குதான் எதற்கும் வழியில்லை... அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே!` என்ற முணுமுணுப்போடு.
"அது எனக்குத் தெரியாதா? ஆனால் இதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. விருப்பம் இருந்தால், நின்று பாருங்கள்! இல்லையேல் அப்படி ஓர் ஓரத்தில் அமர்ந்து 'மீனாட்சி... சொக்கா!" என்று உங்கள் ராமாயணத்தை ஆரம்பியுங்கள்!" என்று கூறிவிட்டு மாறனையும் ருத்ராதேவியையும் கவனித்தாள்.

அருகில் யாரும் இல்லையென்றதும் கண்களில் காதல் பொங்க, ருத்ராதேவியை மாறன் நெருங்கிநான். மாறனின் நெஞ்சில் தனது ஆட்காட்டி விரலை வைத்துத் தள்ளி நிறுத்தியவாறு.

"யாழ்! என் தமையனாரையும் அழைத்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறு!" என்று திரும்பிப் பார்க்காமலே ருத்ராதேவி கட்டளையிட்டாள்.

"எப்படி தேவி?" என்று மாறன் ஆச்சிரியமாகக் கேட்க,

"உனக்குத்தான் என் தங்கை அருகில் நின்றால் உலகமே மறந்துவிடுமே?" என்றபடி திரைக்குப் பின்னாலிருந்து யாழ்நிலாவுடன் விக்ரமனும் வெளிவந்தான்.

"இம்மொழிகள் எம்செவிக்கும், இதயத்திற்கும் இனிமை சேர்த்தாலும், வருங்காலத் தென்காஞ்சி மன்னவர், என்னவர், எச்சூழ்நிலையிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுகிறேன்." என்று ஏதோ நெருடலாக மனதில் உறுத்த சற்று தீவிர பாவனையில் ருத்ராதேவி கூறினாள்.

"தேவியார் அருகிருக்க எனக்கென்ன வந்துவிடப் போகி..‌." என்று மாறன் கூறும்போதே, வெண்பிஞ்சு விரல்கள் மாறனின் இதழ்களை மூட,

தன்மீது ருத்ராவிற்கு இருக்கும் காதலை உணர்ந்தவன் மனமெல்லாம் விகசிக்க, அருகில் இருப்பவர்களைக் கண்டுகொள்ளாமல் ருத்ராதேவியை மென்மையாக அணைத்தான்.

"இன்று வெகுதோலைவு நடந்து வந்ததைப் பற்றி வினவுகிறீர்களா? விக்ரமசீலன் அண்ணாவைப் பார்க்கச் செல்லும்போது குதிரை சவாரி சரிபட்டு வராதாம்… அதோடு அவளுக்கென்று இங்கே குதிரையும் கொண்டுவரவில்லை." என்று கூற,

"என்னிடம் இந்திரன் என்று ஒரு குதிரை இருக்கிறது! உன் தோழிக்கு ஏற்றப் புரவி அவன்... பயங்கரமான வாய், பயங்கரச் சேட்டை... இருவருக்கும் நன்றாக ஒத்துப்போகும் என்று மாறன் சொல்லிச் சிரிக்க,

"இது அவளுக்கு உதவிபோல் தெரியவில்லையே? உபத்திரவம் போலல்லவா இருக்கிறது." என்று கேட்டுவிட்டு ருத்ராதேவியும் அவனுடன் இணைந்து சிரித்தாள்.

"இதை உதவி என்று ஏன் கொள்ள வேண்டும்? பரிசு என்றும் கூறலாமே!" என்றான் மாறன்.

வசந்த மண்டபத்திலிருந்து ருத்ராதேவி, யாழ், மற்றும் தோழிகளுடன் பல்லக்குகள் மதுரையை நோக்கிப் புறப்பட்டது.

மாறனும், விக்ரமசீலனும் மட்டும் மண்டபத்தில் அமர்ந்திருந்தனர்.

"எனக்கு இந்த மண்டபத்தை விட்டு வர மனமே இல்லை விக்ரமா! என் உயிரே இங்கு தான் அடங்கி இருக்கிறது." என்று கூறியதும் விக்ரமனுக்கு மீண்டும் ஒருவிதமான எதிர்மறை தாக்கம் உண்டானது.

"சரி வா நாமும் புறப்படுவோம்... அரண்மனையில் உன்னையும் தேடுவார்கள்... என்று கூறி தன் நண்பனை அந்த மண்டபத்திலிருந்து வெளியே அழைத்து வந்தான்.

அடுத்தடுத்து வந்த நாட்களில் மதுரையில் கோலாகலமான திருமண ஏற்பாடுகள் நடந்தது.
கங்கம், கவுடம், கடாரம், காசிபம், கொங்கம், குதிரம், கோசலம், மாளுவம், அருமனம், சோனகம், சீனம் வந்தி, திருநடம், ஈழம், கலிங்கம், தெலிங்கம், பெபனம், தண்டகம், பண்டரம் முதலிய நாடுகளிலிருந்து அரசர்களும் இளவரசர்களும் வந்தவண்ணம் இருந்தனர்.

மதுரையில் மற்றும் மதுரைமைச் சுற்றியுள்ள மண்டபங்கள், கோயில்கள், சத்திரங்களிலெல்லாம் நாள்முழுவதும் வந்தோரை வரவேற்று உணவு பரிமாறிக்கொண்டே இருந்தனர்.

மனிதன் மட்டுமல்ல மதுரைவாழ் எவ்வுயிரினமும் பசியால் வாடக்கூடாதென்று, வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகள், பறவைகளுக்குக்கூட அரண்மனையிலிருந்து அவற்றுகான உணவு அனுப்பப்பட்டது.

அரண்மனையின் வடக்குதிசை வாயிலில் ஆண், பெண், மற்றும் குழந்தைகளுக்கான உடைகள், அணிமணிகள் கொடுத்துக்கொண்டே இருந்தனர்…

பாண்டிய தேசமே மன்னனையும் மணமக்களையும் மனமாற வாழ்த்தியபோது இரு உள்ளங்கள் மட்டும் நெருப்பிலிட்ட சருகுபோல் பற்றி எரிந்து கொண்டிருந்தன…

"மாறன் அப்படி என்ன சாதித்து விட்டான் என்று இவ்வளவு ஆட்டமுமு பாட்டமுமாக நடக்கிறது? இந்த உலகையே வென்று விட்டு வந்து விட்டானா என்ன?" என்று சுந்தரன் எரிமலையாய் தகிக்க,

"விஜயகந்த கோபாலரை மாறனால் வெற்றி கொள்ள முடியாது என்று நீயே கூறினாய்... அப்படிப்பட்ட ஒருவனை வீழ்த்தி, வெற்றி கொண்டு வந்ததில் அவர்களுக்குக் களிப்பு…" என்று பட்டத்தரசியாரும் முணுமுணுத்தார்.

"தாங்கள் அவ்வளவு புத்திசாலி இல்லை அம்மா! வேதநாயகிதேவியார் கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தினார்கள் பாருங்கள்... காஞ்சியை ஜெயித்துவிட்டான் என்று தந்தை புலங்காகிதம் அடைந்த சரியான சந்தர்ப்பத்தில், தன் மகனுக்கு ஒரு சிற்றரசரின் மகளையே மணம் செய்து வைத்துவிட்டார்... ஊரெல்லாம் கோலாகலமாக இருக்கிறது. என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அம்மா!" என்று சுந்தரன் வருத்தப்படுவதைப் பார்க்கமுடியாத பட்டத்தரசியார்,

"அடுத்த முகூர்த்தத்திலேயே உனக்கு நான் இதைவிடப் பிரமாதமாக, பிரமாண்டமாக, நமக்கு இணையான சக்கரவர்த்தியின் மகளை உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்." என்று கூற,

"அது மட்டும் போதாது, மாறனை பாண்டிய தேசத்தை விட்டுத் தேசாந்திரம் அனுப்ப வேண்டும்!" என்று சுந்தரன் கூறினான்.

"இப்படித்தான் நீ ஆரம்பத்திலிருந்து கூறுகிறாய்! ஆனால் நீ சொல்லும் போதெல்லாம், மாறன் மென்மேலும் பெரிதாக வளர்கிறேனே தவிர, எந்த வகையிலும் அவன் குறைந்துவிடவில்லை… இரண்டு அல்லது மூன்று ஊர்கள் மட்டும் அடங்கும் குறுநிலத்தை ஆளும் உரிமைக்கோரி வந்தவனிடம், காஞ்சியின் அரியணையைத் தூக்கிக் கொடுத்தது யார்? நீதானே? காஞ்சியைக் கைப்பாற்றாமலிருந்தால் செண்பகப்பொழில் அரசர் தன் அருந்தவப் புதல்வியை மணம்முடித்துத்தரச் சம்மதிப்பாரா?" என்று பொரிந்து தள்ளிவிட்டு, பட்டத்தரசியார் வருத்தத்துடன் சுந்தரன் அறையிலிருந்து வெளியேறினார்.

எதேச்சையாகச் சுந்தரனிடம் பேசுவதற்காக வந்த பெருங்கிள்ளிப் பாண்டியர் பட்டத்தரசியும், சுந்தரனும் பேசிய உரையாடலைக் கேட்க நேர்ந்தது. அறையை விட்டு வருத்தமுடன் சென்ற பட்டத்தரசியை அழைப்பதற்காகக் கையை நீட்டியவர் கரம் அப்படியே அந்தரத்தில் நின்றது.

பிறகு சுந்தரனைப் போய்ப் பார்த்தவர், "புத்தாடை அணியவில்லையா குமாரா?... வா நமக்கு நிறையப் பணிகள் இருக்கின்றன…" என்று சிரித்த முகத்துடன் இயல்பாக அழைத்தவரை எரித்து விடுவதைப் போல் பார்த்தவன், விடுவிடுவென அங்கிருந்து நகர முற்பட்டான்.

"நில்! சுந்தரா! உன்னுடன் பேசுவதற்காக நான் வந்திருக்கும்பொழுது, நீ வெளியேறுவது முறையான செயலன்று."

"அரண்மனையின் முதல் வாரிசு நான் இருக்கையில் இளையவனுக்குத் திருமணம் செய்வது மட்டும் முறையான செயலா?"

"மாறன் பெற்ற வெற்றிக்கு அவன் விரும்பியதை கொடுக்கும் வைபவமே இது… உனக்கு அது மனவருத்தத்தைத் தருமாயின், இவ்வைபவத்தைத் திருமண உறுதி செய்யும் வைபவமாக மாற்றிவிடுகிறோம்… உன் திருமணத்தை முடித்துவிட்டு…" என்று அவர் கூறி முடுக்கும் முன,

"மாமா! தேவையற்ற பாசாங்கு வார்த்தைகள் என்னிடம் உதவாது." என்று இடைமறித்தான்.

"நான் பாசாங்கு செய்கிறேன் என்கிறாயா?"

"இல்லையா? உங்களுக்கு உண்மையிலேயே என்மீது பாசம் இருந்தால், வருங்காலப் பாண்டியப் பேரரசனாகிய என்னுடைய நட்பு நாடான காஞ்சியை நோக்கிப் படைநடத்தியது தேசதுரோகம் என்று மாறனை தேசாந்திரம் அனுப்புங்கள்… அப்பொழுது நம்புகிறேன் நீங்கள் சொல்ல வந்தது சத்திய வார்த்தைகள் என்று.”

"மாறனையா தேசாந்திரம் அனுப்பச் சொல்கிறாய்? அவன் உனது இளைய சகோதரன். வருங்காலப் பாண்டியப் பேரரசனான உனக்கு, இவனைப் போல் ஒரு சிற்றரசன் இருப்பது மற்றொரு கை போன்றது. உனக்காகவும் இந்தத் தேசத்திற்காகவும் பல வெற்றிகளை ஈட்டித் தரக்கூடியவன்... பாண்டிய தேசத்தை விரிவாக்க உனக்குப் பெரும் துணையாக இருக்கப் போகிறவன்... இவனைப் போன்ற வீரனையும் நம்பிக்கைக்குரியவர்களையும் இணைத்துக் கொள்வதுதான் வருங்காலப் பாண்டிய பேரரசுக்கு மிகவும் நல்லது!" என்று கூறினார்.

"உங்களுக்கு நல்லது என்று கூறுங்கள். எனக்கு ஒன்றும் இவனுடைய உதவி தேவையில்லை." என்று இளக்காரமாகப் பதில் கூறினான் சுந்தரன்.

"சரி அவ்வாறே வைத்துக் கொண்டாலும், நான் இந்தத் தேசத்திற்காகப் பாடுபடுபவன். நான் நம்பும் ஒருவனை நீ ஏன் ஏற்கக் கூடாது?" என்று பெருங்கிள்ளி பாண்டியர் வினவ,

"நீங்களும் எனது தந்தையாரும் அவனை, என்னைவிட உயர்ந்தவன் என்பது போல் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது தான் எனக்குப் பிடிக்கவில்லை." என்றான் சுந்தரன்.

"உன்னைவிட உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று நாங்கள் யாரையும் நினைப்பதில்லை சுந்தரா! இந்த நாட்டிற்காக யார் உழைக்கிறான்? நாட்டின் மீது விசுவாசம் உள்ளவன் யார்? யார் வீரன்? யார் விவேகி? யார் இருந்தால் இந்தப் பாண்டிய நாடு சுபிட்சம் அடையும்? என்பதை மட்டுமே நாங்கள் இருவரும் பார்க்கிறோம்."

"அப்படி என்றால் இந்தப் தகுதி எல்லாம் என்னிடம் இல்லை என்று கூறுகிறீர்களா?'

"நான் எங்கே அப்படிக் கூறினேன்? இந்தத் தகுதியுள்ள ஒருவரை நீ அரவணைத்துக்கொள்! என்று கூறுகிறேன்"

"ஏன் இவனை விட்டால் வேறு சிறந்த வீரன் பாண்டிய தேசத்தில் இல்லையா?'

"வீரர்கள் எண்ணிலடங்காதவர்கள் இருக்கிறார்கள்... ஆனால் நாட்டின் மீது விசுவாசமும், அதேசமயம் நாட்டு பேரரசின் மீது அக்கறையும் இருக்க வேண்டும். 'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என்று ஒரு சொல்வழக்கே உள்ளது. அது உனக்குத் தெரியாதா? ஆயிரம் பேர் இருந்தாலும் தம்பிக்கு இணையாகுமா?"

"அவனை என் தம்பி என்று திரும்பத் திரும்பக் கூறாதீர்கள்." என்று முகத்தில் அடித்தாற்போல் கூறி, சட்டென்று அந்த அறையை விட்டு வெளியேறினான் சுந்தரன்.

அந்த வார இறுதியில் மாறன்பூபதிக்கும், ருத்ரநங்கை தேவிக்கும் அரசர்கள், அமைச்சர்கள், அறிஞர்கள், புலவர்கள் மற்றும் மக்கள் முன்னிலையில் திருமணம் இனிதே நடந்தேறியது.

மாறன்பூபதி தன் மனதுக்கினியவளின் சங்குக்கழுத்தில் மங்கல நாண் பூட்டினான்.

அடுத்து வந்த ஒரு நன்னாளில் காஞ்சியின் சிற்றரசனாக மாறன்பூபதிக்கு, கங்கம், கவுடம், கடாரம், காசிபம், கொங்கம், குதிரம், கோசலம், மாளுவம், அருமனம், சோனகம், சீனம் வந்தி, திருநடம், ஈழம், கலிங்கம், தெலிங்கம், பெபனம், தண்டகம், பண்டரம் முதலிய தேசத்தை ஆண்ட மன்னர்கள், பலதேச அறிஞர்கள், புலவர்கள் வாழ்த்தப் பட்டாபிஷேகம் நடந்தது.

திருமண விழாவைவிடப் பட்டாபிஷேக விழா மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றது.

பெருங்கிள்ளி பாண்டியர் செங்கோல் எடுத்து மாறனின் கைகளில் கொடுத்து.
“நினைத்ததைச் சாதித்தவன் நீ… ஒரு தேசத்தை ஆள்வதென்பது சாதாரண் காரியமல்ல. இத்தேசத்தை வென்றதைவிட, இத்தேசத்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து, நன்முறையில் ஆட்சிசெய்தாய் என்பதே உனக்கும், எங்களுக்கும் பெருமை தரும்… நீடுழி வாழ்வாய்!” என்று வாழ்த்தினார்.

மதுரை பேரரசர் குலசேகரப் பாண்டியரே தனது திருக்கரங்களால் மணிமகுடத்தை எடுத்து, மாறனுக்குச் சூட்டினார்.

“நமது புகழ் ஒங்கச் செய்வாய் குமாரா!” என்று கூறி, ஆரத்தழுவி வாழ்த்தினார்.

பாண்டியப் பேரரசின் குலகுரு மாறன்பூபதியையும், அவனருகில் பட்டத்தரசியாக வீற்றிருந்த ருத்ராநங்காதேவியையும் மலர்கள் மற்றும் மங்கல பொருட்கள் தூவி ஆசிர்வாதம் செய்துவிட்டு வாழ்த்துரை கூறினார்.

"இன்று முதல் தென் காஞ்சியின் சிற்றரசராகப் பட்டமேற்கும், குலசேகரபாண்டியரின் மாட்சிமையைப் பெருக்கவந்த மாறன்பூபதிக்கு, நம் குல வழக்கப்படி பாண்டிய அரச நாமகரணம் சூட்ட வேண்டும். அதன்படி நம் காஞ்சியின் மன்னனாம் மாறன்பூபதிக்கு 'வீரபாண்டியன்' என்ற நாமகரணம் சூட்டப்படுகிறது. இன்று முதல் இவர் 'வீரபாண்டியன்' என்றே அறியப்படுவார். காஞ்சியை வென்ற வீரபாண்டியர் மேலும் பல கீர்த்திகள் பெற்று வாழ வாழ்த்துகிறேன்." என்று குலகுரு வாழ்த்தியதும்...

மக்கள், அறிஞர்கள், அமைச்சர்கள், பல தேச மன்னர்கள் அனைவரும் எழுந்து முழங்கிய 'வீரபாண்டியன் வாழ்க!' அவன் நல்லாட்சி ஓங்குக' என்ற வாழ்த்தொலி விண்ணை எட்டியது.

வாழ்த்தொலிகளிலும், ஆசீர்வதமாகப் பொழுந்த பூமழையிலும் நனைந்த வீரபாண்டியன், தனதருகில் கம்பீரமாக விற்றிருந்த ருத்ரநங்காதேவியைப் பார்த்தான்.
கண்கள் பனிக்க மக்களைப் பார்த்தவள், கண்மூடி இறைவனுக்கு நன்றி கூறினாள்.
அதைப் புரிந்துகொண்ட வீரபாண்டியன், “அருகில் இருக்கும் என்னையும் பார்க்கலாம்.” என்று கூற,

வீரபாண்டியனைத்திரும்பிப் பார்க்காமலேயே, “இங்கே வீற்றிருப்பவர் இம்மக்களுக்குச் சொந்தமான வீரபாண்டியர். நான் அவர் ஆட்சி மேலோங்கத் துணையிருக்கும் பட்டத்தரசி… மற்றபடி என் காதல் முழுவதும் என் இதய மன்னவன் மாறனுக்கே சொந்தம்.” என்று இதழ்கூடப் பிரியாமல் பேசியவளைக் காதலுடன் நோக்கினான்.

வாழ்துவோர்களும், ஆசிவழங்குவோரும் சென்று விரபாண்டியனை வாழ்த்தியபிறகு விக்ரமசீலனும், யாழ்நிலாவும் அரியணை அருகே சென்று தங்களுடைய சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

வீரபாண்டியனின் நல்லாட்சியில் மக்களும், காஞ்சி தேசமும் வளம் பெற்று விளங்கியது.

வார்த்தைகளின் எண்ணிக்கை -2107

சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom