Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சுடும் நிலவு!!! சுடாத சூரியன்!!!

Messages
15
Reaction score
6
Points
3
5 💕...

கிழக்கே உதித்த ஆதவன் தன் கதிர்களால் மக்களை ரட்சிக்கத் தொடங்கிய காலை நேரம்.


திருமண மஹால் முழுதும் நிரம்பி இருந்த பேச்சுக் குரல்களும், சிரிப்பு சத்தமும், மேள, நாதஸ்வர ஓசையும் அங்கிருந்த எல்லோர் மனதிலும் இதம் பரப்பி இருந்தது.


மனையின் நடுவே அக்கினி குண்டமும்,அதன் ஒரு பக்கம் மணமக்கள் அமர ஜமுக்காலம் விரித்திருக்க மற்றொரு பக்கம் அய்யர் அமர்ந்து "மஞ்சள் எடுத்து வாங்கோ, ஒரு டம்ளரில் தண்ணீர் தாங்கோ "


என தாரணி, வைஷுவிடம் தேவையானதை எடுத்துவர சொல்லிக் கொண்டிருந்தார்.


மணப்பெண்ணை அழைத்து அவளின் நாத்தி முறைப் பெண்களிடம் இருந்து அரிசி, தேங்காய், வெற்றிலை பாக்கை முந்தானையில் வாங்கிக்க சொல்லிய ப்ரோஹிதர் ;


தாராணியை நிச்சயப் பட்டுப் புடவையை தாம்பளத்தில் வைத்து சவிதாவிடம் குடுக்க சொன்னார்.


அதை அவள் வாங்கியவுடன் மணமகள் அறைக்கு அழைத்து சென்றனர் தாரணியும், வைஷ்ணவியும்.


அடுத்ததாக மனைக்கு வந்த மதிநந்தன் தன் பெற்றோருக்கு பாத பூஜை செய்தான். பின்பு அவனின் தாய்மாமன் மதி கையில் காப்பு அணிவித்து, முஹூர்த்த ஆடையை அவனிடம் குடுத்தார்.


அதை மாற்றி வரும்படி அவனை அனுப்பிய ப்ரோஹிதர் சவிதா மேடைக்கு வந்ததும் அவள் பெற்றோருக்கு பாத பூஜை செய்வித்து, காப்பு கட்ட தாய் மாமனை அழைத்தார்.


அய்யர், "பொண்ணோட தாய் மாமா வாங்கோ "என்றதும் தனது மீசையை முறுக்கிவிட்டு மனைக்கு வந்தார் முத்தரசியின் அண்ணனும், ஹரியின் தந்தையுமான ரத்தினவேல்.


தன் தங்கை மகள் கையில் அவர் காப்பு அணிவித்து, முஹூர்த்த பட்டுப் புடவை இருந்த தாம்பளத்தை குடுத்தார்.


அதை வாங்கிக்கொண்டு தன் நாத்திகளின் (தாரு, வைஷு) கைகளை பிடித்து அவர்கள் பின்னோடு சென்றாள்.


பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீர அழகுடன் விஷாலின் கைபிடித்து மேடையை அடைந்தான் விழா நாயகன் மதிநந்தன்.


அவன் கையில் பூ செண்டை கொடுத்து மனையில் அமரவைக்க அய்யர் மந்திரங்களை கூறத் தொடங்கினார்.


மணமகள் அறையில்....


அரக்கு நிறத்து சேலை அதற்கு பொருத்தமாய் ஆரி ஒர்க் செய்திருந்த அதே வண்ண சட்டை, கழுத்தில் ஆன்ட்டிக் வகையை சேர்ந்த ஆரம், நெக்லஸ்... காதில் குடை ஜிமிக்கி... கைக்கு தங்க வளையல்கள்.... இன்னும் நெற்றிசுட்டி, ஒட்டியாணம், வங்கி என தலை முதல் கால் வரை நகைகளை இழைத்து தங்க சிலையென பார்ப்போர் வியக்கும் வகையில் நின்றிருந்தாள் சவிதா.


தம் கைகளால் அவள் முகத்தை சுற்றி அதை நெற்றியில் வைத்து சுடக்கெடுத்து திருஷ்டி கழித்தாள் வைஷ்ணவி.


"சவிதா .. ரொம்ப அழகா இருக்க..ஒரு திரிஷ்டி பொட்டு மட்டும் வச்சுடுவோம்."என தாரணி கண்மையை எடுத்து அவளின் ஒரு கன்னத்தில் சிறு புள்ளியை வைத்தாள்.


தன் நாத்திகளின் செய்கையில் அவள் சிரிக்க அந்நேரம் சுந்தரம் உள்ளே வந்தார்.


தந்தைகளுக்கு மகள்கள் என்றாலே தனி பிரியம் தானே. அவர்கள் என்றுமே தம் மடி தவழும் சிறுபிள்ளைகளாய் எண்ணிக் கொண்டிருக்கும் தந்தை மார்களுக்கு மகவுகளின் திருமண கோலமே அவர்கள் வளர்ந்து விட்டதை உணர்த்தும்.


இங்கேயும் கண்கள் கலங்க தம் மகளின் திருமண கோலத்தை கண்டு கழித்தவர்.."என் மகள் தான் எவ்வளவு வளர்ந்து விட்டாள்."என எண்ணி சவிதாவை உச்சி முகர்ந்தார் சுந்தரம்.


"இன்றுதான் இவளை டவலில் சுற்றிய பூக் குவியலென டாக்டர் தம் கைகளில் தந்தது போல் இருக்க.. இதோ இன்னும் சிறிது நேரத்தில் அவள் இன்னோரு வீட்டு மருமகள்.."என மனதுள் நினைத்திருக்க அதை கலைத்தது


ப்ரோஹிதரின் "பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ "என்ற வாக்கியம்.


வைஷுவும், தாருவும் ஆளுக்கு ஒரு பக்கமாய் சவியின் இரு கைகளையும் பிடித்து அவளை மனைக்கு அழைத்து வந்தனர்.


அன்னமென நடந்து வந்த தன் ஜின்னுக் குட்டியை கண்கொட்டாமல் பார்த்தான் மதிநந்தன்.


சவிதா அவனின் வலப்பக்கம் வந்து அமர தன் கழுத்தை அவள் புறம் திருப்பி அவளின் அழகை அவன் ரசித்துக் கொண்டிருக்க; அதில் "மச்சான்! நேரா உட்காரு எல்லாரும் உன்ன பாத்து தான் சிரிச்சிட்டு இருக்காங்க" என்றான் விஷால்.


"தாலி கட்ட முன்னயே பையன் விழுந்துட்டானே... ஏ..
மகா இனி உன் பையன் உன்னலாம் கண்டுக்க மாட்டான் டி... அவன் ஞாபகத்துல பொண்டாட்டி மட்டும் தான் இருப்பா போலயே..."என மதியின் சொந்தக்கார பாட்டி மகாலட்சுமியிடம் கூற


"அதுக்கென்ன சித்தி.. என் பையன் மருமக கூட சந்தோஷமா இருந்தா போதும்."என்ற மகாலட்சுமியின் பதிலில் பெண்ணை பெற்றவர்கள் திருப்தியானார்கள்.


ஏனெனில் எந்த ஒரு தாயும் தன் மகன் தனக்கே முன்னுரிமை குடுக்க வேண்டும் என எண்ணுவாள்.
பெரும்பாலும் மாமியார், மருமகள் சண்டை வர காரணமும் இதுவாகத்தான் இருக்கும்.


அப்பாட்டியின் கேலியும் மதியின் மனதில் இனி சவிதாவிற்கே முதல் இடம் என்பதாய் இருந்தும் இலகுவாய் அதை ஏற்றுக்கொண்டு சவிதா எங்கள் வீட்டு பெண் என உணர்த்திய மகாவின் பதிலில் இனி தன் மகள் பற்றிய கவலை இல்லை.


நம்மை போலவே அவளை இவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நிம்மதி சுந்தரம், முத்தரசியின் மனதில் பிறந்தது.


மதியின் தன்னை மறந்த செய்கையில் சுற்றி இருந்த உறவுகளின் கிண்டல் சவியின் மனதில் கோபத்தைத் தூண்டியது.


மதியை நோக்கி அனல் கக்கும் பார்வையை வீசினாள். அதில் இத்துனை நேரம் மனதில் பரவி இருந்த இதம் மறைய தனது காதல் பார்வையை மாற்றி நேராக அமர்ந்து கொண்டான்.


"அய்யயோ... நம்ம கண்ணகி கண்ணாலயே எரிச்சுருவா...இனி அடக்க ஒடுக்கமா இருக்க வேண்டிதான்...இவுங்க குதுகலத்துல என் வாழ்கைல கும்மி அடிச்சிடுவாங்க போலயே "என மனதுள் புலம்பியவன் நல்ல பிள்ளையாய் முகத்தை வைத்துக் கொள்ள


அதே நேரம் "கெட்டிமேளம்... கெட்டிமேளம் "என்ற அய்யர் மஞ்சள் கயிற்றில் பொன் சரடு கோர்த்த மாங்கல்யத்தை மதிநந்தன் கையில் தர.. அதை தன் மனங் கவர்ந்தவளின் மணிக் கழுத்தில் பூட்டினான்.


தலை தாழ்த்தி இருந்த சவிதாவின் மனதில்


இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டது சரியா? ஆதி, என்ன மன்னிச்சுரு இதைத் தடுக்க நான் முயற்சி செஞ்சும் நடந்துடுச்சு. உனக்கு நான் துரோகம் செய்ய நினைக்கல. எவ்ளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த பந்தத்துல இருந்து வெளிய வந்துடுவேன்."என்பன ஓடிக் கொண்டிருக்க


அவளின் தலையை நிமிர்த்தி நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து விட்டான் புது மாப்பிள்ளை.


தனக்கு நேர் எதிரே நின்றிருந்த தந்தையின் கண்களில் ஆனந்த கண்ணீரும் ,இதழில் தவழ்ந்த புன்னகையும் சவிதாவின் மனக்கிலேசத்தை போக்கி சிறிது தெளிய வைத்தது.


அவளின் ஒரு மனம் "என் அப்பாவின் நிம்மதிக்காவும், சந்தோஷத்திற்காகவும் எதையும் செய்யலாம்"என எண்ண


இன்னோரு மனமோ அதற்கு நேர் எதிராய் "இது தவறு.. ஆதிக்கு செய்யும் துரோகம்."என வாதிட்டது.


அவளின் மன போராட்டங்கள் எதையும் அறியாமல் தான் முதன் முதலில் பார்த்து காதல் வயப்பட்ட பெண்ணையே மணந்து கொண்ட மகிழ்ச்சியில் திளைத்திருந்தான் சவியின் மதி.


-தொடரும்.
 
Messages
15
Reaction score
6
Points
3
6 💕...

மணமக்களின் வலது கையை பட்டுத்துணியால் தாரணி கட்ட அவர்கள் அக்னியை மூன்று முறை சுற்றி வந்தார்கள்.

வைஷ்ணவி புது மன தம்பதியருக்கு பாலும், பழமும் ஊட்ட, இருப்பக்க உறவினர்களும் மொய் எழுதி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மதிய உணவுக்கான பந்தி தொடங்க மணமக்களுக்கு பரிசை கொடுத்த பெரியவர்கள் சாப்பிட சென்றிட... இளவட்டங்கள் மதி, சவியை கேலி செய்து சிரித்திருந்தனர்.

பெற்றோர் முதல் அங்கிருந்த உறவினர்கள் வரை அனைவரோடும் புகைப் படம் எடுத்து முடித்திருக்க... மணமக்களை தனியே போட்டோஸ் எடுக்க சொன்னாள் தாரணி.

இருவரின் அந்யோன்யத்தை அதிகரிக்கும் வகையில் நெருக்கமான போஸ்களில் நிற்க சொன்னார் புகைப்படக்காரர்.

அதை தவிற்கும் வகையில் "அண்ணி பசிக்கிது.. சாபிட்டு வந்து போட்டோஸ் எடுத்துக்கலாமா?"என பாவமாய் தாரணியிடம் சவிதா கேட்க

"ஹான்... வாங்க சாப்பிட போலாம்"
என்றவள் இருவரையும் அழைத்துக் கொண்டு டைனிங் ஹாலுக்கு வந்தாள்.

மதி, சவி அருகருகே அமர.. சவிதாவின் மறுபுறம் வைஷ்ணவி, வியா அமர்ந்திருக்க... மதியின் மறுபுறம் தாரணி, விஷால் அமர்ந்திருந்தனர்.

நேத்ரனும், ஹரியும் பந்தியில் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

இலை போட்டு இனிப்பு வகைகளில் இருந்து சாதம், குழம்பு, பச்சடி, கூட்டு, பொரியல் வரை பரிமாறிட... அனைவரும் சாப்பிடத் தொடங்கினர்.

அதேநேரம் மணமக்கள் சாப்பிடுவதை வீடியோ எடுத்திருந்த பையன் "மாப்பிளை அண்ணா அக்காவுக்கு ஊட்டிவிடுங்க "என்க

மறுவார்த்தை இன்றி தன் இலையில் இருந்த இனிப்பை சவியின் வாய்க்கு அருகில் கொண்டு சென்றான் மதி.

இக்காட்சியை படம்பிடிக்க தனது கேமராவை தயாராய் வைத்திருந்தான் மற்றொரு புகைப்படக்காரன்.

கண் இமைக்கும் நொடியில் தன் வாய்க்கு அருகில் வந்த மதியின் கையை கண்டு அதிர்ந்தவள் வேண்டாம் என்னும் விதமாய் அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

எங்கே அதெல்லாம் கவனிக்கும் மனநிலையில் அவன் இல்லையே...

"மாப்பிள்ள நீட்டிட்டு இருக்காருல வாங்கிக்கோ பாப்பா "என்ற தந்தையின் குரலில் அத்திசை நோக்க

பாயாச தூக்கு வாளியை தன் கைகளில் வைத்திருந்தவர் கண்களில் மாப்பிள்ளை ஊட்டி தன் மகள் சாப்பிடுவதை பார்க்கும் ஆவல் இருந்தது.

தந்தை கூறிய பின் தவிர்க்க முடியாது வாயை திறந்து அவன் குடுத்த இனிப்பை வாங்கிக் கொண்டாள்.

"ஏன் வைஷு.. மாப்பிள்ளை பொண்ணுக்கு ஊட்டியாச்சு... இப்போ பொண்ணு மாப்பிள்ளைக்கு ஊட்டனும்ல..!" என தாரணி சவிதாவின் அண்ணியான வைஷ்ணவியிடம் கேட்க

"ஹான் தாரு... நானும் இதேதான் சொல்ல வந்தேன்.சவி, மதி அண்ணாக்கு ஊட்டிவிடு மா" என்றாள் வைஷ்ணவி.

ஒரே வயதொத்த தாருவும், வைஷுவும் வா, போ என கூப்பிட்டு பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருங்கி பழகி விட்டனர்.

அண்ணியின் கூற்றில் சங்கட முற்றவள் அமைதி காக்கவே அங்கிருந்தோர் வற்புறுத்தலில் வேறு வழியின்றி சிறிதளவு உணவை எடுத்து மதிக்கு ஊட்டினாள்.

அவள் தந்ததை வாங்கிக் கொண்டவன் தன் பற்களால் அவளின் விரலினை கடித்தான்.

அதில் படெக்கென விரலை அவன் வாயிலிருந்து உறுவியவள் அவனை வெறுப்பாய் பார்த்தாள்.

அதை காணாத மதி இத்துணை நேரம் நடந்த நிகழ்வின் தாக்கத்தில் சுற்றுப்புறம் மறந்திருந்தான்.

அவன் எச்சில் பட்ட கையால் சாப்பிட விரும்பாதவள் இலையை மூடிவிட்டு எழுந்தாள்.

"என்னாச்சு சவி.." வைஷு பதட்டமாய் கேட்க

"தல வலிக்குது அண்ணி. இதுக்கு மேல சாப்பிட்டா வோமிட் வந்துடும் "

சவிதா தலை வலி வந்தால் எதுவும் சாப்பிட மாட்டாள். அவளுக்கு உடனே வோமிட் வந்திடும். தலைவலி சரியான பின்பே விரும்புவதை உண்பாள். இதை அறிந்திருந்த வைஷ்ணவி "ஓகே பாப்பா..
ரூம்ல போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு "என்றாள்.

மேலும் மதிய உணவு முடிந்ததும் சவிதா தனது புகுந்த வீடு இருக்கும் ஊரான சென்னைக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் வழியில் வோமிட் வந்துவிட்டால் சிரமம் என அவளை வைஷு கட்டாயப் படுத்தவில்லை.

கையை கழுவிய சவிதா வேகமாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்து மணமகள் அறைக்கு வந்து விட்டாள்.

திருமணத்தில் அவளின் விருப்பமின்மையை அறிந்தும் இன்று மதி நடந்து கொண்டது அவன் மேல் இருந்த மதிப்பை குறைத்தது.

அவளின் எண்ணங்கள் தரி கெட்டு ஓடி பழைய நிகழ்வுகளை ஞாபக படுத்த அதன் தாக்கத்தில் அவள் கண்கள் கண்ணீரைப் பொழிந்தது.

தன் மகள் அறையில் தனியாய் அமர்ந்திருப்பதை கண்ட முத்தரசி "பாப்பா... சவி, சாப்பிட்டியா டீ... ஏன் தனியா உட்காந்துருக்க? மாப்பிள்ளை எங்க?" என கேள்விகளை அடுக்க

அத்துணை நேரம் இருந்த மன பாரத்தில் தாயை கட்டிக்கொண்டு அவள் கதறிட முத்தரிசியோ பயந்து விட்டார்.

"பாப்பா.. என்ன மா.. எதுக்கு அழற "
அன்னை நடுக்கமாய் வினவினர்.

சவிதாவை தேடி அவ்வறைக்கு வந்த வைஷ்ணவியும் , தாரணியும் இக்காட்சியை கண்டு பதறினர்.

"அத்த.. என்னாச்சு "வைஷு கேட்க

"தெரியல வைஷு.. நான் வந்ததுல இருந்து அழுதுட்டு தான் இருக்கா "

"அம்மா.. அப்பாவ விட்டுட்டு வரோமேனு அழறியா?" தாரணி தவிப்பாய் கேட்க

அக்கேள்வியில் இன்னும் சிறிது நேரத்தில் நாம் சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்ற நிதர்சனம் அவளுக்கு புரிய...

தரணியின் கேள்விக்கு அவளது தலை ஆமெனும் விதமாய் ஆடியது.

அதேநேரம் சுந்தரம், ஹரி, வியா, நேத்ரன் அவ்வறைக்கு வந்திட... அவர்களை கண்ட சவிக்கு கண்கள் கரித்து கொண்டு வந்தது.

"தாரு.. நேரமாயிட்டது இப்போ கிளம்புனாதான் மதுரைல பிலைட்ட புடிக்க முடியும்." விஷால் அவசர படுத்த

தன் பிறந்த வீட்டு உறவுகளிடம் இருந்து கண்ணீருடன் விடை பெற்றாள் சவிதா.

தந்தையின் மார்பில் சாய்ந்தவள், அன்னையின் கழுத்தில் கையை போட்டு தன்னுடன் இருக்கிக் கொண்டாள்.

அண்ணனின் தோளில் சாய்ந்து அண்ணியின் கையைத் தன் கன்னத்தில் வைத்துக்கொண்டாள்.

வர்மனை தூக்கி சுற்றியவள் அவனுக்கு ஒரு முத்தம் குடுத்து இறக்கி விட்டாள்.

தன் இரு கைகளால் ஹரி,வியா இருவரையும் அணைத்தவள் "போய்ட்டு வரேன் " என தொண்டை அடைக்க கூறி ஒரு தலை அசைப்புடன் மண்டப வாயிலுக்கு சென்றாள்.

இந்த பாசப் போராட்டத்தைக் கண்டு மதியின் குடும்பம் வருத்தப் பட

"கவலைபடாதீங்க. சவிதா எனக்கு ஒரு தங்கச்சி போல தான்.. என் அம்மா, அப்பாக்கு அவளும் ஒரு பொண்ணு மாதிரி.. என் அண்ணா அவனோட உயிரா அவளைப் பாத்துப்பான். " தாரு அவர்களுக்கு ஆறுதல் அளித்தாள்.

"ஆமா சித்தப்பா... உங்களுக்கு நம்பிக்கை வர அத்தாட்சியா நா இருக்கேன் பாருங்க. நான் வாக்கப்பட்டு வந்த நாளில் இருந்து என்னய இவுங்க எல்லாரும் கண் கலங்காம தான் பாத்துக்குறாங்க" விஷால் சிரிக்காமல் முகத்தை பாவமாய் வைத்து கொண்டு சொல்ல..

அதை கேட்டு தாரு அவனை செல்லமாய் முறைக்க மற்ற அனைவரும் சிரித்து விட்டனர்.

சவிதாவின் குடும்பத்தாரை சிரிக்கவைத்து அவர்களிடம் இருந்து விடைபெற்றார்கள் மதி வீட்டார்.

பொன்னமராவதியில் இருந்து மதுரை வரை காரிலும் மதுரையிலிருந்து சென்னை வரை பிலைட்டிலும் பயணம் செய்தனர்.

கார் ஏரியதிலிருந்தே மதியை தவிர்த்த சவிதா தாரணியின் அருகிலே அமர்ந்து கொண்டாள்.

வீட்டாரை பிரிந்து வந்த வருத்தத்தில் இருந்தவளை யாரும் தொந்தரவு செய்யவில்லை.

மதி தன் அறைக்கு பால் சொம்புடன் வந்தவளின் கைப்பிடிக்க அதைக் கோவமாய் தட்டி விட்ட சவிதா "நானும் காலேல இருந்து பாக்குறேன். தாலி கட்டிட்டா ஓவரா அட்வாண்டேஜ் எடுத்துப்பிங்களா? நம்ம செஞ்சு கிட்ட ஒப்பந்தம் மறந்திடுச்சா... ஒரு வருஷம் மட்டும் தான் உங்களோட வாழ்க்கைல நா இருப்பேன்.. அதுவும் ஒரு ரூம்மெட்டா மட்டும் தான்.
இதுக்கு மேல என்ன நெருங்க முயற்சி செஞ்சிங்க அசிங்கமாயிடும்"

சவிதாவின் ஆவேசப் பேச்சில் அதிர்ந்து நின்றான் மதிநந்தன்.

-தொடரும்.
 
Messages
15
Reaction score
6
Points
3
7 💕...

தன் பணிகளை முடித்துக் கொண்டு மேற்கில் மறைந்தான் ஆதவன்.

சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய வைத்தியநாதன் குடும்பத்தாரை அழைத்து செல்ல மதிநந்தனின் பிஏ ஆகாஷ் காருடன் காத்திருந்தான்.

அறுவரும் அதில் ஏறிக்கொள்ள கார் மஹாலட்சுமி பவனம் நோக்கி விரைந்து சென்றது.

பெரிய இரும்பு கதவுகளை செக்யூரிட்டி திறந்திட முற்றத்தின் வாசலில் வந்து நின்றது சிற்றுந்து.

அதனில் இருந்து வேகமாய் இறங்கிய மஹா " வேதா... சீக்கிரமா ஆரத்தி தட்ட எடுத்துட்டு வா "என அவ்வீட்டின் வேலைக்காரியான வேதாவுக்கு குரல் கொடுத்தார்.

வேதா 35 வயது பெண்மணி. கடந்த ஐந்து ஆண்டுகளாக இவ்வீட்டில் வேலை செய்பவர். அவுட்ஹவுஸ்சில் தங்கியிருக்கும் வேதாவுக்கு குடும்பம் என சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. வைத்தியநாதன் குடும்பத்தை பொருத்தவரை வேதா அவர்கள் வீட்டுப் பெண் போல தான். அவள் மேல் அத்துணை நம்பிக்கை, பிரியம் வைத்திருந்தனர்.

தாங்கள் வற்புறுத்தி அழைத்தும் திருமணத்திற்கு வர மறுத்த வேதா "இரண்டு நாட்களுக்கு வீட்டை பூட்டிப் போடவேண்டாம். நான் இங்கிருந்து பார்த்துக் கொள்கிறேன் "என்று கூறி இங்கேயே இருந்து விட்டாள்.

மஹா விளித்த வேதா ஆரத்தி தட்டுடன் வந்திட தன் அண்ணன், நாத்திக்கு ஆலம் சுற்றி வரவேற்றாள் தாரணி.

சவிதா, வலது கால் வைத்து மதியுடன் வீட்டினுள் செல்ல அவளை தொடர்ந்து அனைவரும் நுழைந்தனர்.

பயணம் ஒத்துக் கொள்ளாமல் சித்து அழவே

"தாரா... தம்பிய ரூமுக்கு கூட்டிட்டு போய் பசியாத்தி தூங்க வை "என விஷால் குழந்தையை அவள் கையில் கொடுக்க

அவனை வாங்கிக் கொண்டு தன் அறைக்கு சென்றாள்.

மதி அவனது அறைக்கு ஓய்வெடுக்க சென்றிட, சவியை அழைத்து சென்ற மஹா பூஜை அறையில் விளக்கேற்ற வைத்து; பின் சிறிது நேரம் விருந்தினர் அறையில் ஓய்வெடுக்க சொன்னார்.

பயண அலுப்புத் தீர குளித்தவள் அவ் விருந்தினர் அரையில் போடப்பட்டிருந்த கட்டிலில் அமர்ந்தாள்.

இரண்டு நாட்களாய் தேடாமல் இருந்த கைபேசியை ஹாண்ட்பாகில் இருந்து எடுத்து "Reached home safely"என வாட்ஸப் பேமிலி குரூப்பில் பதிவிட்டாள்.

சிறிது நேரம் இன்ஸ்டா பீட் பார்த்தும், வாட்சப் ஸ்டேட்டஸ் பார்த்தும் நேரத்தை நெட்டித் தள்ளியவள் அறை கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்தாள்.

"குளிச்சிட்டியா சவி.. டிபன் எடுத்துட்டு வந்துருக்கேன்.. சாப்பிடு " என்ற தாரணி தட்டை அவளிடம் கொடுத்தாள்.

மூன்று மொறு மொறுப்பான தோசையும், தொட்டுக்க சுட சுட சாம்பாரும், தேங்காய் சட்னியும் அடக்கிய தட்டை கண்ட சவிதாவின் கண்கள் கடிகாரத்தை நோக்கியது.

அதில் பெரிய முள் பனிரெண்டுலும் சின்ன முள் எட்டிலும் இருக்க.. "இவ்வளவு சீக்கிரமா டின்னரா "எனும் கேள்வி தாங்கிய முகத்தை கண்ட தாரு

"மாங்கல்ய விரதம்னு காலேலயும் நீ சாப்பிடல... தலை வலியால மதியமும் சாப்பிடல அதனால தான் சீக்கிரமா டின்னர் எடுத்துட்டு வந்தேன். "

கரிசனையாய் சொன்னவள்

"வேதா அக்கா பிரப்பரேஷன் சூப்பரா இருக்கும். ஆரதுக்குள்ள சாப்பிட்டிடு "

"சரி" என சவிதா தலை அசைத்ததும்.

தாரணி தான் கையோடு கொண்டு வந்த பையில் இருந்த காட்டன் புடவை, அதற்கு மேட்சான நகைகளை வெளியில் எடுத்து அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளில் வைத்தாள்.

"புடவ கட்டுறதுக்கு ஹெல்ப் வேணுமா.. "

தாரணி கேட்க

"இல்ல அண்ணி நானே கட்டிருவேன்."

"நீ சாப்ட்டு புடவை கட்டிட்டு இரு. நான் வந்து அலங்காரம் செஞ்சு விடுறேன்."

அறையை விட்டு வெளியேறினாள் தாரணி.

அங்கிருந்த புடவை, நகைகளை கண்டதும் சவியின் மனதில் ஒரு பதட்டம் வந்தது.

காலையில் அத்துனை உறவினர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் சமயமே தன்னிடம் உரிமை காட்டிய மதிநந்தன் இன்றிரவு தான் தனியே அவனிடம் அகப்பட்டால் என்னவாகும்? என சிந்தித்து குழம்பினாள்.

"என்னவாகினும் இன்று அவனை தனியே எதிர் கொண்டு தான் ஆக வேண்டும். தைரியமாய் இரு மனமே. வருவதை பார்க்கலாம்" என கதவை பூட்டிவிட்டு புடவை மாற்றி, நகைகளை அணிந்து கொண்டாள்.

தலைக்கு குளித்திருந்ததால் இடுப்பை தாண்டி அடர்த்தியாய் இருந்த தன் நீள கூந்தலை விரித்து விட்டிருந்தாள்.

கதவை திறந்து வைத்து விட்டு தட்டை எடுத்து தோசையை உண்ணத் தொடங்க தாரணி வந்து விட்டாள்.

அவளைக் கண்டதும் சவிதா வேக வேகமாய் சாப்பிட

"ஏய்.. சவி.. மெதுவா சாப்பிடு.. ஒன்பதரைக்கு தான் ரூமுக்கு அனுப்ப சொல்லிருக்காங்க."

நமட்டு சிரிப்புடன் தாரு கூற புரை ஏறியது சவிதாவிற்கு.

"உன்னோட ஹேர் சூப்பரா இருக்கு டா... நானும் லாங் ஹேர் வச்சுக்கணும்னு அம்மாக்கு ஆச.. ஆனா எனக்கு ஷார்ட் ஹேர் தான் கம்போர்ட்டபிளா இருக்கும் "

கழுத்துக்கு சிறிது கீழே இருந்த தனது முடியை கையால் வாரியவாரு தாரணி கூறினாள்.

இதழ் பிரித்து சிரித்தவள்

"அம்மாவோட பராமரிப்புல இருந்ததால இப்டி இருக்கு அண்ணி. எனக்கும் இத கவனிச்சு நீளமா வளக்க இன்ரெஸ்ட் இல்ல. சோ சீக்ரமே டேமேஜ் ஆனாலும் ஆயிடும் "
என கை கழுவ அறையின் மூலையில் இருந்த வாஷிபேசினுக்கு நகர்ந்தாள்.

அடுத்தடுத்த வேலைகள் துரிதமாய் நடந்தன.

சவிதா டேபிள்ளில் கழட்டி வைத்திருந்த திருமண நகைகளை எடுத்து பத்திர படுத்திய தாரணி அவளின் தலை வாரி இரண்டு முழப் பூவை சூடிவிட்டாள்.

அதேநேரம் அங்கே வந்த மஹா சவிக்கு த்ரிஷ்டி எடுக்க அவர் காலில் விழுந்து பணிந்தாள் சிறியவள்.

"இங்க பாரு டா நீ எதுக்கும் கவலை பட கூடாது. எனக்கு தாரணி போலத்தான் நீயும். இது உன் வீடு சரியா. எதுவானாலும் அத்தை கிட்ட நீ தயங்காம கேட்கலாம் "

மஹா உணர்ச்சி வசப்பட

"சரிங்கத்தை" சவிதா தலை ஆட்டினாள்.

மஹா நகர்ந்ததும் சவி கையில் ஒரு பால் சொம்பை கொடுத்து முதல் தளத்தில் நடுநாயகமாய் இருக்கும் தன் அண்ணனின் அறைக்கு அவளை அழைத்துச் சென்ற தாரணி

"All the best சவி" என வாழ்த்தி அறை வாயிலில் அவளை விட்டுச் சென்றாள்.

நீண்ட பெருமூச்சை இழுத்து விட்ட சவிதா அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டு திரும்ப

மல்லிகை, ரோஜா பூக்களால் அலங்கரித்து இருந்த மர கட்டிலில் டிஷர்ட், ட்ராக் அணிந்து அமர்ந்திருந்தான் மதிநந்தன்.

அவன் உடையை கண்டதும் " காலா காலமா பொம்பளைங்க மட்டும் தான் எந்த விசேஷமா இருந்தாலும் புடவ, நக,பூ னு ஷோகேஸ் பொம்ம மாதிரி வரணும்."

"ஆனா இந்த ஆம்பளங்களுக்கு அப்பிடி எந்த கஷ்டமும் இல்ல. இதோ ஒரு டிஷர்ட், பேண்ட் அவ்ளோதான் சிம்பிள்.."

"என்னையும் நைட்டி இல்ல நைட் டிரஸ் போட்டுட்டு வர சொல்லிருக்கலாமே இவுங்க.."

"ஒரு டிரஸ்லயே இத்தன வேற்றுமை.."

என மனதில் நொந்தவள் பால் சொம்பை மூடியிருந்த டம்ளர் தன் கையிலிருந்து சரிவதை அறியவில்லை.

வந்ததிலிருந்து தன்னியே குறு குறுவென பார்த்த சவிதாவின் கவனம் இங்கில்லை என அறிந்த மதி அவள் கையில் இருந்து நழுவிய டம்ளரை பிடித்தான்.

அதில் அவனது கை அவள் கையையும் சேர்த்து பிடித்திட தன்ணுணர்வு பெற்றவள்.

அவன் கை பட்டதும் தன் மனதில் அவன் மேல் இருந்த கோவம் பொங்க அவள் கையை உதறினாள்.

சொம்பு கீழே விழுந்து உருள அதிலிருந்த பால் தரையில் ஓடியது.

"நானும் காலேல இருந்து பாக்குறேன். தாலி கட்டிட்டா ஓவரா அட்வாண்டேஜ் எடுத்துப்பிங்களா? நம்ம செஞ்சுகிட்ட ஒப்பந்தம் மறந்திடுச்சா... ஒரு வருஷம் மட்டும் தான் உங்களோட வாழ்க்கைல நா இருப்பேன்.. அதுவும் ஒரு ரூமேட்டா மட்டும் தான்.இதுக்கு மேல என்ன நெருங்க முயற்சி செஞ்சிங்க அசிங்கமாயிடும்"

ஆவேசமாய் சவிதா கத்த... அரண்டு நின்றான் அவளின் மணாளன்.

அவனை ஏற,இறங்க முறைத்து விட்டு கட்டிலில் ஒரு ஓரமாய் படுத்துவிட்டாள்.

ஐந்து நிமிடமாய் அதே இடத்தில் நின்ற மதி பால் கொட்டிய இடத்தை சுத்தம் செய்திட்டு கட்டிலுக்கு வலப்பக்கம் இருந்த சோபாவில் அமர்ந்தான்.

அவன் நினைவில் சவிதாவை பெண் பார்க்க சென்ற நாள் நிழலாடியது.

-தொடரும்.
 
Messages
15
Reaction score
6
Points
3
8 💕...

இரண்டு மாதங்களுக்கு முன்பு...




"மஹா... மஹா..மணி 9தாச்சு பொண்ணு வீட்ல காத்துட்டு இருப்பாங்க."



"மாப்பிள்ளைக்கும், மதிக்கும் ஒரு போன் பண்ணி ஹோட்டல் ரிசப்ஷனுக்கு வர சொல்லு மா" என வைத்தியநாதன் படபடக்க



"அப்பா.. அண்ணாவும், விஷுவும் ரெடி ஆயிட்டு இருக்காங்க. இன்னும் 15 மினிட்ஸ்ல வந்துடுவாங்க."



என்ற தாரணி கையில் சித்துவுடன் தனது தாய், தந்தையர் அறையில் நுழைந்தாள்.



"தாரு...பூ, பழம், தாம்பளம் எடுத்து வச்சாச்சுல. எல்லாம் இருக்கானு ஒரு தடவ சரி பாத்துடு."



மஹா, தாரு தேவையானவற்றை எடுத்து வைக்க வைத்தியனாதனின் போன் அலறிற்று.



"ஹெலோ சுந்தரம். இதோ கிளம்பிட்டோம் டா... ஆமா ஹோட்டல் ஆனந்தால தான் இருக்கோம். வர வழில டிபன் முடிச்சுட்டு டானு 10க்கு அங்க இருப்போம்."



பெண்ணின் தந்தையும், தனது பால்ய சிநேகிதனுமான சுந்தரத்திடம் பேசிவிட்டு போனை அனைத்தார் மதியின் தந்தை.



"மஹா மா.. மஹா மா.."



மஹாவின் பெயரை ஏலம் விட்டவாரே வந்தான் விஷ்வா.



"ஹான் மாப்பிள்ள... இப்போ அக்கா எப்டி இருக்கா.. அம்மா, அப்பா போன் பண்ணாங்களா?"



திருமணம் முடிந்து அமெரிக்காவில் செட்டில் ஆன விஸ்வாவின் அக்காவை பற்றி அவனின் மாமனார் கேட்க...



"அக்காக்கு தேர்ட் ட்ரெய்மஸ்டர்ல பிட்ஸ் வந்ததால டெலிவரி வரைக்கும் கேர்புல்லா பாத்துக்க சொல்லிருக்காங்க மாமா.. அதுனால அம்மாவும், அப்பாவும் பாப்பா பொறந்தப்புறம் தான் இந்தியா வருவாங்க. "



7 மாத கருவை சுமந்திருந்தவளுக்கு ஒரு வாரம் முன்பு பிட்ஸ் வந்துவிட... அதை அறிந்த விஷ்வாவின் பெற்றோர் அவளைக் காண அமெரிக்கா சென்றிருந்தனர்.



"பயப்படாத விஷ்வா அக்கா நல்ல படியா பிள்ளைய பெத்தெடுப்பா.."



மஹா விஸ்வாவிற்கு ஆறுதல் அளித்தார்.



தனது ஆசை மச்சினன் மதிக்கு பெண் பார்க்கப் போகும் சமயம் தான் அக்காவை பற்றி கூறியவற்றால் மற்ற மூவரின் முகமும் கவலையை பூசிக் கொண்டிருக்க கண்ட விஷ்வா



அதை நீக்க எண்ணி...



"ஹா.. பூ.. பழம்.. தாம்பளத்தட்டு.. இதெல்லாம் பாத்தா... நம்ம பொண்ணு பாக்க போற மாதிரி தெரிலயே.. இன்னிக்கே நிச்சயம் செஞ்சுக்க ரெடி ஆகுற மாதிரில இருக்கு."



விஷ்வா கிண்டலடிக்க..



"அதானே நீங்க எடுத்து வச்சுருக்க ஐட்டம்ஸ்லா பாத்தா விஷ்வா சொல்ற மாதிரி தான இருக்கு மா."



மதி அதிர்ச்சியாய் வினவியவாரு அறைக்குள் வந்தான்.



அவன் குரலில் அறையில் இருந்த அனைவரும் கதவின் அருகில் நின்றிருந்த மதி புறம் திரும்பினர்.



"ஆமா.. இன்னிக்கு பொண்ணு பாத்துட்டு பூ வச்சு பேசி முடிக்க போறோம். அதுக்கு தான் இது எல்லாம் எடுத்து வச்சிருக்கோம்."



மஹா கூற.. மதி பதறினான்.



"மா.. என்ன மா.. பொண்ணு தானே பாக்க போறோம்னு சொன்னிங்க."



"பொண்ணு பாக்கறதுக்கு மட்டுமே எல்லா வேலையவும் விட்டுட்டு, மொத நாள் முழுசா பிராயணம் பண்ணி, ராத்திரி இந்த ஊர்ல ரூம் எடுத்து தங்கி, இப்ப கார் புக் பண்ணி போவோமா என்ன?"



"இவ்ளோ தூரம் வந்தாச்சு... அப்டியே பூ வச்சுட்டு,கல்யாணத்துக்கு நாள் குறிச்சுட வேண்டியது தான் "



வைத்தியனாதன் கூலாய் மொழிய... கடுப்பானான் மதிநந்தன்.



"பா.. ஏன் பா.. இவ்ளோ அவசர படுற.. மொதல எனக்கு பொண்ண புடிக்கணும், பொண்ணுக்கு என்னைய புடிக்கணும்.
மத்ததெல்லாம் அடுத்து பேசிக்கலாம் பா.."



"இங்க பாரு பா.. பொண்ணு வீட்ல எல்லாருக்கும் சம்மதம் தானாம். அதுனால நீ டென்ஷன் ஆகாம இரு.. மிச்சத்த நான் பாத்துக்கிறேன்."



"மா.. இவருகிட்ட நீயாச்சும் சொல்லு மா.. எல்லாரோட முடியவையும் இவரே எடுத்திட்டு இருக்காரு. நான் பொண்ணு கிட்ட பேசிட்டு தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவேன்."



மஹாவை துணைக்கு அழைத்தான் அவரின் புதல்வன்.



"நம்ம தாரு,விஷ்வாவ மாதிரி நீயும் யாரையாச்சும் விரும்பி இருந்தா உங்க அப்பாட்ட பேசி அவளையே கட்டி வச்சிருப்பேன். நீ தான் அப்டி ஏதும் பண்ணலயே மதி.. அதுனால பெரியவங்க எங்க போக்குல விட்டுடு.. நாங்க எது பண்ணாலும் உங்க நல்லதுக்கு தானேப் பா.."



மஹா ஏக்கமாய் வினவினார்.



மஹா கூறிய "நீயும் விரும்பி இருந்தால்" மதியின் மனதில் ஒரு அழகான நங்கையின் முகத்தை நினைவு படுத்த தன் கண்களை மூடி அதை விரட்டியவன் பேச வாய் திறக்க..



மேலும் அவன் பேச வாய்ப்பளிக்காத அவனின் குடும்பத்தார் பைகளை எடுத்து கொண்டு ஹோட்டல் வாயிலில் நின்ற வாடகை காரில் ஏறினர்.



பெருமூச்சரிந்த மதியும் அவர்கள் பின்னோடு சென்று காரில் ஏறினான்.



சென்னையில் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் தொழிலில் கொடி கட்டி பறக்கும் வைத்தியநாதனுக்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியே பூர்வீகம்.



அவரது 12வயதில் உடல் உபாதையால் தாய் இறந்திட... அன்னை இல்லாப் பிள்ளையை வளர்க்க தனது அண்ணன் குடும்பத்துடன் இருந்திட முடிவு செய்து அவரை அழைத்துக் கொண்டு சென்னை வந்திட்டார் வைத்தியனாதனின் தந்தை.



இவ்வூருக்கும், அவருக்கும் இருந்த தொடர்பு அன்றோடு முடிந்தது.



ஒரு வாரதுக்கு முன் தனது தந்தையின் நிலத்தை விற்க பொன்னமராவதி வந்த வைத்தியநாதன் தனது எதிர்த்த வீட்டு சினேகிதனான சுந்தரத்தைக் கண்டார்.



சுந்தரமும் இவரை தம் வீட்டிற்கு அழைத்து அன்னமிட்டு, பழைய கதைகளை பேசிச் சிரித்திருக்க.. அங்கே சுந்தரத்தின் மகள் சவிதாவைக் கண்ட வைத்தியநாதனுக்கு ஒரு திடீர் எண்ணம் தோன்றிட



அதன் பொருட்டு "உன் மகளை என் மகனுக்கு தருவாயா?"



என வெளிப்படையாய் கேட்டிட ஒரு நிமிடம் அதிர்ந்த சுந்தரம் மறுநிமிடமே சம்மதமாய் தலை ஆட்டிட பெண் பார்க்கும் நாள் குறித்திட்டு சென்னைக்கு கிளம்பினார் வைத்தியனாதன்.




தனது அறையில் புடவை கட்டி தயாராய் இருந்த சவிக்கு பூ வைத்து விட்டாள் வைஷ்ணவி.



"ஏன் சவி.. நேத்து கல்யாணமே வேண்டாம்னு அழுது அடம் புடிச்சுட்டு இருந்த.. இன்னிக்கு நீட்டா ரெடி ஆகி நிக்கிற... உன்னய புரிஞ்சுக்கவே முடில போ.."



வைஷு அச்சரியமாய் கேட்க



"எப்பவும் என்னோட விருப்பத்தக் கேட்டு முடிவு செய்ற அப்பா.. இந்த கல்யாணத்துல பிடிவாதமா இருக்காங்க அண்ணி "



சவிதா அணிய நகைகளை எடுத்துக்கொண்டு அவளின் அறைக்குள் முத்தரசி நுழைந்தார்.



"ஆமா சவி .. மாமாவோட முடிவுல எனக்கும் பயங்கர ஷாக் தான். என் பொண்ணுக்கு மாப்பிள்ளை இப்டி வரணும்னு பெரிய லிஸ்ட்டே வச்சிருந்த மாமா அவுங்க பிரண்ட் கேட்டதும் அவரு பையனுக்கு உன்னய கல்யாணம் பண்ண சமாதிச்சது, நீ வேண்டான்னு சொன்னப்போ உன்னய கன்வின்ஸ் பண்ணது எல்லாமே சர்பிரைசிங்கா இருக்கு."



வைஷு வியக்க...



"வைத்தி அண்ணன் உன் மாமாவோட கிளோஸ் பிரிண்ட். அதோட அவுங்கள பத்தி என்கிட்ட நிறைய பேசுவாங்க. அவர ஒரு தடவ பாத்திடணும்னு உன் மாமாக்கு ரொம்ப ஆசை.அவுங்களே சவிதாவ பெண் கேட்டதும் இவுங்களுக்கு ரொம்ப சந்தோஷம் அதான் உடனே பொண்ணு பாக்க வர சொல்லிட்டாங்க."



முத்தரசி விளக்க...
மூவரும் ஹாலிற்கு வந்தனர்.



"என்னவோ அத்தை.. என்னதான் மாமாக்கு பிரிண்ட்னாலும் முன்ன பின்னத் தெரியாத பையனுக்கு விசாரிக்காம நம்ம பொண்ணுக் குடுக்கிறது உறுத்தலா தான் இருக்கு."



இதை கேட்ட நேத்ரன்



"அட வைஷு... நீ MN groups கேள்வி பட்டுருக்கியா?"



"ஓஹ்... MN builders, MN softwares, MN college of engineering and technology, MN hospitals " MN groupsனா தெரியாதவங்க இருப்பாங்களா. "



"ஹான்.. அந்த MN வேற யாரும் இல்ல நம்ம சவி குட்டிய பொண்ணு பாக்க வர மாப்பிள்ளை Mathi Nandhan தான். இன்னோரு விஷயம் அப்பா இந்த சம்மந்தத்த பத்தி சொன்னதுமே சென்னைல இருக்க என் பிரிண்ட் கிட்ட சொல்லி அவுங்க குடும்பத்தை பத்தி நல்லா விசாரிச்சுட்டேன். அதுனால நம்ம குட்டிய தாராளமா அந்த பையனுக்கு கட்டி குடுக்கலாம்."



நேத்ரன் கூறியது கேட்டு மலர்ந்து சிரித்தாள் வைஷ்ணவி.



அதேநேரம் கார் ஹார்ன் ஒலி கேட்க அதை தொடர்ந்து "அவுங்க வந்துட்டாங்க அரசி" என்ற சுந்தரத்தின் குரலில் சவிதா அவளின் அறைக்கு செல்ல.. மற்றவர்கள் வாயிலுக்கு சென்றனர்.



திருமணம் பற்றி எவ்வித எதிர் பார்ப்பும் இல்லாத மதியும், ஒரு கூட்டுக்குள் வாழ விரும்பாத சவிதாவும் அவரவர் தந்தையின் ஆசைக் கிணங்க இன்று சந்திக்க உள்ளனர்.



தன் தந்தை ஆசை படி திருமணம் நடக்கட்டும் என மதியும், இதை என்ன செய்து தடுத்து நிறுத்துவது என சவியும் சிந்தித்திருக்க "வைஷு, சவிதாவ அழச்சிட்டு வா "



என்ற மாமனாரின் சொல்லுக்கு சவிதாவின் கைபிடித்து கூடத்துக்கு அழைத்து வந்தாள் வைஷ்ணவி.



வந்து நின்றவளின் முகம் பார்த்த மதியின் மனம் இனிமையாய் அதிர்ந்தது.



- தொடரும்.
 
Messages
15
Reaction score
6
Points
3
9 💕...

வைத்தியநாதன் குடும்பத்தினரை வரவேற்று அமர வைத்தனர் சவிதா வீட்டார்.



மூன்று நபர் அமரும் சோபாவில் சுந்தரம், வைத்தியநாதன், மஹா அமர்ந்திருக்க... சுந்தரத்தின் வலப்பக்கம் இருந்த இரட்டை சோபாவில் நேத்ரன், மதி அமர... மஹாவின் இடப்பக்கம் இருந்த இரட்டை சோபாவில் தாரு, விஷ்வா அமர்ந்திருந்தனர்.



முத்தரசியும், வைஷ்ணவியும் வந்தவர்களுக்கு இனிப்பு, காரம், காபி கொடுத்து உபசரித்தனர்.



"சுந்தர்... இதுதான் என்னோட மனைவி மஹாலட்சுமி...இது என்னோட மூத்த மகன் மதிநந்தன் சாப்ட்வேர் கம்பெனி வச்சிருக்கான்... அப்டியே நம்மளோட மத்த பிசினஸ்சயும் பாத்துக்கிறான். இவனுக்கு தான் உன் பொண்ணு சவியப் பாக்க வந்துருக்கோம்."



"இது என் பொண்ணு தாரணி காலேஜ் லெக்சரரா இருக்கா.. அது அவளோட வீட்டுக்காரர் விஷ்வா மதியோட பிசினஸ் பார்ட்னர். அப்புறம் இது எங்க வீட்டு குட்டி இளவரசன் சித்தார்த்..இவரு எங்க வீட்டுக்கு வந்து நாலு மாசம் ஆகுது."



என தன் வீட்டினரை அறிமுகம் செய்து வைத்தார் வைத்தியநாதன்.



"இது முத்தரசி என் வீட்டுக்காரி...என் மூத்த பையன் நேத்ரன்.. அவன் வெயிப் வைஷ்ணவி.. ரெண்டு பேரும் கவர்ண்மென்ட் ஸ்கூல் டீச்சர்ஸ்."



அதேநேரம் அங்கு ஓடிவந்த வர்மனை கண்ட சுந்தரம் "இது என்னோட பேரன் ரவிவர்மன் "



என தன் குடுபத்தினரைப் பற்றி கூறி முடித்தார்.



"சவி விளாட வர மாத்திக்கா மா..அவள வத சொல்லு.."
(சவி விளையாட வர மாட்டிக்கா மா.. அவள வர சொல்லு)



வர்மன் வைஷுவிடம் சிணுங்க...



"வர்மா.. அத்த கொஞ்ச நேரம் கழிச்சு விளையாட வருவா.வா! அப்பாவும், நீயும் போய் சாக்லேட் வாங்கிட்டு வரலாம் "



நேத்ரன் அவனை சமாதானம் செய்து வெளியே அழைத்து சென்றான்.



தாருவும், வைஷுவும் தத்தமது பிள்ளைகளின் குறும்புகளை கூறிக் கொண்டிருக்க...



முத்தரசி மஹாவிற்கு வீட்டை சுற்றி காட்டினார்.



வீட்டு தலைவர்கள் இருவரும் தங்கள் பால்ய காலத்தில் லயித்திருக்க...



சித்துவை கையில் வைத்திருந்த விஷ்வா அவர்களை சிரிப்புடன் பார்த்திருந்தான்.



வீட்டாரை தவிர வேறு யாரிடமும் இத்தனை நெருக்கம் காட்டாத தந்தை. இன்று பெண்ணின் அப்பாவிடம் பாசத்துடன் அளவளாவது கண்டு வியந்தான் மதிநந்தன்.



"தோட்டம் ரொம்ப நல்லா இருக்கு.. யாரு பராமரிக்கிறா?"



மஹா முத்தாரசியிடம் கேட்டவள் தன் கணவன் அருகில் அமர்ந்தாள்.



"என் பொண்ணு சவிதா தான். அவளுக்கு செடி வைக்கிறது, அத நிதமும் கவனிக்கிறது ரொம்ப புடிச்ச வேலை."



மஹாவின் கேள்விக்கு சுந்தரம் பெருமையாய் பதில் கூறினார்.



"சவிதாவ பாத்துடலாமா?"



வைத்தியநாதன் கேள்வியாய் சுந்தரத்தை பார்க்க



"வைஷு, சவிய அழைச்சிட்டு வா மா"



சுந்தரத்தின் வாய் மொழிக் கிணங்க தன் நாத்தியை கைபிடித்து கூடத்துக்கு அழைத்து வந்தாள் வைஷ்ணவி.



சவிதா நிமிர்ந்து அங்கிருந்தவர்களை பார்த்து நமஸ்கரித்தாள்.
அவளை கண்ட வைத்தியநாதன் வீட்டார் திருப்தியாய் புன்னகைக்க..மதியின் மனம் இனிமையாய் அதிர்ந்தது.



நான்கு மாதத்திற்கு முன் வீதி வீதியாய் தேடிய முகம் இன்று விதி வாசத்தால் தன் கண் முன் நிற்கிறது.



பெங்களூரில் இம்முகத்தை கண்டதும் காதலில் விழுந்தவன் இவளை அறிந்திட தேடி அலைந்தான். ஆனால் பலன் என்னவோ பூஜியம் தான்.



இன்று இதே பெண்ணை தன் தந்தை தனக்காக பார்த்திருப்பது தற்செயலாய் நடந்ததா? இல்லை இறைவன் போட்ட முடிச்சா?



அவன் மனம் பெங்களூரில் நடந்த சில சம்பவங்களை நினைவு படுத்த அவனை அறியாமல் சிரித்தான்.



"மதி.. பொண்ணுகிட்ட பேசணும்னு சொன்னியே.. போ.. பேசிட்டு வா"



மஹாவின் கூற்றில் சுந்தரம் கண்காட்ட..தோட்டத்தை நோக்கி சவிதா நடக்க.. அவளை பின் தொடர்ந்தான் மதிநந்தன்.



மர நிழலில் ஒருவர் முகம் பார்த்து மற்றவர் நிற்க..



"ஹான்.. நான் உங்கள பெங்களூர்ல..."



மதி தொடங்க...



"எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல"



சவிதா முடித்தாள்.



மதியின் கண்கள் விரிய...



"பொண்ண புடிக்கலைனு சொல்லிடுங்க "



துடுக்காய் மொழிந்தாள்.



"ஆனா.. ஏன்?"



"அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு நீங்க பொண்ண புடிக்கலைனு மட்டும் சொல்லிடுங்க "



அவளின் எடுத்தெரிந்த பேச்சில் கோபம் துளிர்விட



"ஓஹ்.. என்னால சொல்ல முடியாது. நீயே பையன் புடிக்கலைனு சொல்லிடு.. ."



சட்டென ஒருமைக்கு தாவியவன் அவ்விடத்தை விட்டு நகர



"நான் நேத்து முழுக்க சாப்பிடாம பட்டினி இருந்து பாத்துட்டேன். ஆனாலும் அப்பா கேட்கல. இதுக்கு மேல அவுங்கள எதிர்த்து ஏதும் பண்ண முடியாது."



அவள் குரலின் சுருதி இறங்கி இருக்க.. மதி அதே இடத்தில் நின்றான்.



"பட்டினி கிடந்து கல்யாணத்த நிறுத்துற அளவுக்கு உனக்கு என்ன வெறுப்பு?"



"நான் ஒருத்தர காதலிக்கிறேன்."



மதியின் தலையில் இடி இறங்கியது போல் இருக்க



"அத உன்னோட அப்பாகிட்ட சொல்லிருக்கலாமே. வீணா நாங்க சென்னைல இருந்து வந்துருக்க மாட்டோமே."



அவனுக்கு தொண்டை அடைத்தது.



"இல்ல.. நான் விரும்பிய பையன் என்ன ஏமாத்திட்டான். என்ன விட அழகாவும், பணக்காரியாவும் இருக்கும் பொண்ண தேடி போய்ட்டான்."



மதியின் கண்கள் மின்ன..



"நல்லவேள காதலிக்கும் போதே தெரிஞ்சுதே. அவன விட்டுத் தள்ளு உன் லைப்ப ஹாப்பியா வாழு."



"அவன் தான் பொய்யே தவிர என் காதல் உண்மைதான். அவன் மேல வச்ச காதல நான் இன்னும் மறக்கல. அதுனால எனக்கு இந்த கல்யாணம்கிற கமிட்மென்ட் வேண்டாம். ப்ளஸ் இத நிறுத்திடுங்க."



"சரி. நான் வேண்டாம்னு சொன்னாலும். உனக்கு இன்னோரு மாப்பிள்ளை பாக்க தான செய்வாங்க."



"ஆமா... நான் இன்னும் ஒரு வருஷத்துல GRE எக்ஸாம் கிளியர் பண்ணிட்டு ஸ்காலர்ஷிப்ல MS பண்ண யூஎஸ் போய்டுவேன்.அதுவர இந்த மேரேஜ் ப்ரோபோசல்ஸ்ச ஸ்டாப் பண்ணிட்டா போதும்."



சவிதா திடமாய் கூற



"MS? யுஜி என்ன கோர்ஸ் பண்ண?"



"B. Tech Information technology "



மதி வியந்தான்.



"ஓஹ்...



சவிதா தொடர்ந்தாள்.



"அதுனால.. இந்த கல்யாணம் வேண்டான்னு சொல்லிடுங்க சார். "



"சாரி. என்னாலயும் அப்டி சொல்ல முடியாது."



அவள் அதிர



"உன் அப்பா மட்டும் இல்ல என்னோட அப்பாவும் நம்ம கல்யாணத்த ரொம்ப எதிர்பாக்குறாங்க. நான் உன்னய வேண்டானு சொன்னேனா அதுக்கான காரணத்தை சொல்லணும். உன்னோட எக்ஸ் லவ் பத்தி சொல்லி இந்த ப்ரோபோசலை நிறுத்தட்டா?."



"அய்யயோ வேண்டாம் சார். என் வீட்ல இந்த லவ் எல்லாம் புடிக்காது. நான் அத நம்பி ஒருத்தன் கிட்ட ஏமாந்தது தெரிஞ்சா இவுங்க யாரும் தாங்க மாட்டாங்க."



சவிதா பதற அவன் யோசித்தான்.



"அப்போனா இதுக்கு ஒரே ஒரு வழி மட்டும் தான் இருக்கு."



"என்னது சார்."



"நீ என்னைய கல்யாணம் பண்ணிக்கிறது "



அவளின் ஆர்வம் சட்டென்று வடிய



"லுசா சார் நீங்க...இந்த கல்யாணத்த நிறுத்த ஐடியா கேட்டா கேனத்தனமா உளறிட்டு இருக்கீங்க."



சவிதா பொறிய "அப்ப நீயே நல்ல ஐடியாவா கொடு "மதி பின்வாங்கினான்.



"சவிதா வீட்டில் அவளை படிக்க வெளிநாடு அனுப்ப விரும்பவில்லை. சீக்கிரமே திருமணம் முடிக்க அவள் அப்பா முடிவு செய்துவிட்டார். இவனை வேண்டாமென கூறினால் வேறொரு சம்மந்தத்தை அழைத்து வருவார்கள். என்ன செய்யலாம் "என பலவாறு யோசித்தவள்.



"சரி நீங்க சொல்றப் போல நான் உங்கள கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும் ஒரு வருஷம் மட்டும் தான் உங்க கூட இருப்பேன்.அதுவும் ஒரு ரூமேட் மாதிரி தான்.GRE ரிசல்ட் வந்ததும். நீங்க எனக்கு டிவோர்ஸ் குடித்துரணும். "



"என்ன பொண்ணு இவ!..ஆயிரம் காலத்து பயிரான கல்யாணம் இவளுக்கு விளையாட்டா போயிடுச்சா?"



சவிதாவின் முடிவில் அதிர்ந்து விழித்தான் மதி.



அவன் மனதுள் ஜோசியர் சொன்ன விஷயங்களும், தாய், தந்தையரின் முகமும் தோன்ற என்ன முடிவெடுப்பது என புரியாமல் நின்றான்.



- தொடரும்.
 

Latest posts

New Threads

Top Bottom