Aathirai
Active member
- Messages
- 79
- Reaction score
- 149
- Points
- 33
அத்தியாயம் 3
அழகேசன் மனது கேளாமல் அப்படியே கால் போன போக்கில் ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாய் வந்தார். அதோ அங்கே, ரங்கராஜன்-கோகிலாவின் இல்லம் இருந்தது. அதைப் பார்த்தவர் கால்கள் நேராக அவர்களது இல்லத்தை நோக்கி பயணித்தது.
சிறிய அளவிலான கொட்டகை போன்ற வீடு, முன்னால் ஒரு மரம். வீட்டைச் சுற்றிலும் வேலிகள், பின்னால் சுற்றியும் வயல் வெளிகள். சிறிது தூரம் சென்றால் இருக்கும் வாய்க்கால், பெரிய அரசமரம். அதன் அடியில் இருக்கும் பிள்ளையார். என்று அவர்கள் வீடு இருக்கும் இடம் ஏதோ சொர்க்கத்தில் இருந்து இறங்கி வந்தாற்போல் இருக்கும் ஒரு அழகான அம்சம்.
வீட்டிற்குள்ளே, ஆடு, மாடு, கோழிகள், வைக்கோல் புல். தண்ணீர் பிடித்து வைக்கும் தொட்டி. அதனின் சாணம் விழுந்து கிடக்கும் இடம் என்று கிராமத்து வாசனை வீசும். அதே போல், அவர்களின் வீடு பனைக்கீற்றில் வேயப்பட்ட உறுதியான மேற்கூரை. அவர்களே சொந்தமாக அமைத்துக்கொண்டது. அதே போல், வீட்டிற்க்கு இருபுறமும் வருபவர்களுக்கும், அவர்கள் அமர்வதற்க்கும் வசதியான, ஷோஃபாவை விட மேலான திண்ணைகள் இருந்தன.
அழகேசன் அவை அனைத்தையும் நோட்டமிட்டவாறு அவர்களின் வேலி போன்ற மரக்குச்சிகளால் ஆன, கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார். “க்க்குக்கு க்க்குக்க்..” என்று கோழிகளின் சத்தம், “ம்மே.. ம்மே..” என்ற ஆடுகளின் சத்தம், “ம்மா.. ம்மா..” என்ற மாடுகளின் சத்தம் அனைத்தும் அவர் வந்திருக்கிறார் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் விதமாகக் கேட்டன.
அந்த நடமாடும் உயிருள்ள ஜீவராசிகள் தான், அவர்களுக்கு காலிங்க் பெல் போன்றவை. சத்தம் கேட்டு, “ஏண்டா பசங்களா, எல்லாரும் ஒரே நேரமா சத்தம் போடுறீங்க.?” என்று கேட்டபடி வெளியே வந்தாள் அந்தச் சின்னப்பெண்.
அழகேசன் வருவதைப் பார்த்ததும் புன்னகைத்தவள், “வணக்கம் ஐயா.. வாங்க..” என்று அவரை மரியாதையாக அழைத்தவள், “அம்மா, சீக்கிரம் வாங்க. யார் வந்திருக்கா பாருங்க.” என்று தன் பெற்றோருக்கு குரல் கொடுத்தபடியே உள்ளே ஓடினாள்.
அவளது சத்தம் மட்டுமில்லாமல், ஆடு, மாடு, கோழிகளின் சத்தமும் கேட்டதால் வெளியே வந்தனர் ரங்கராஜனும், கோகிலாவும். பார்த்தவர்கள், “ஐயா.. வாங்க, வாங்க உட்காருங்க..” என்றபடி அருகே இருந்த திண்ணையை தனது துண்டால் தூசி தட்டியபடி அமரச் சொன்னார் ரங்கராஜன்.
“என்னங்கய்யா. இவ்ளோ தூரம்.?” என்று கோகிலா கேட்டுக்கொண்டிருக்கும் போதே, ஓடி வந்த சின்னப்பெண், “இந்தாங்கய்யா.. குடிங்க..” என்று சொம்பில் பானையில் ஊற்றிய நீரை பருகக் கொடுத்தாள். அவர் குடித்ததும் வாங்கியவள், உள்ளே சென்று விட்டாள்.
சில்லென்று இருந்த அந்த நீரைக் குடித்தவர் உள்ளம் நெகிழ்ந்தார். “இந்த சின்ன வயசிலயே எவ்ளோ மரியாதை கொடுக்கணும்னு தெரிஞ்சு வைச்சிருக்க பொண்ணு, உங்க வளர்ப்புலயே எவ்ளோ உண்மைகள். ஆனா, இன்னைக்கு நடந்த பஞ்சாயத்துல உங்கள பொய் சொல்றதா சொல்லி அநியாயத்துக்கு பேசிட்டாங்க. எனக்கு மனசு கேட்கல ரங்கா. அதான் அப்படியே கால் போன போக்கில நடந்து வந்துட்டிருந்தேன். உங்க வீட்டப் பார்த்ததும் அப்படியே கொஞ்ச நேரம் காத்தாட உட்கார்ந்து பேசிட்டுப் போலாம்னு வந்தேன்.” என்றார் அழகேசன்.
“அதுக்கென்னங்கய்யா.? நீங்க எப்ப வேணும்னாலும், தாராளமா வந்துட்டுப் போங்க. உங்கள மாதிரி பெரிய மனுஷங்க காலடி பட்டாத்தான் எங்களுக்கு சந்தோஷம். அதுவும் நீங்க பள்ளிக்கூட வாத்தியார். எல்லாருக்கும் குரு, தெய்வம் மாதிரி எங்களுக்கு. நீங்க வரதுக்கு நாங்க தான் புண்ணியம் பண்ணிருக்கணும்.” என்று அவரை புகழ்ந்து கொண்டிருந்தார் ரங்கராஜன்.
“ரங்கா, நீ வெள்ளந்தியான மனுஷன். அதனால தான், எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், அதை வெளிப்படுத்திக்காம வந்தவங்கள மரியாதையா நடத்தணும்னு நினைக்கிற. ஆனா, உனக்குப் போய் எப்படி இந்த மாதிரி அநியாயம் பண்ண அவங்களுக்குத் தோணுச்சு.? இன்னுமே என்னால இன்னைக்கு நடந்த சம்பவத்த ஜீரணிச்சுக்க முடியல. அவ்ளோ மனவேதனை. எப்படியெல்லாம் அநியாயம் நடக்குது.? உண்மை என்னன்னு தெரிஞ்சும், என்னால எதுவுமே பண்ண முடியலன்னு நினைக்கும் போதுதான் ரொம்ப வேதனையா இருக்கு.” என்று தன் மனவேதனையை அவர்களிடம் சொன்னார் அழகேசன்.
“நீங்க என்னய்யா பண்ணுவீங்க.? உங்களால முடிஞ்ச அளவுக்கு நீங்க எங்களுக்கு சாதகமா சொன்னீங்க. ஆனா, அவங்க அத ஏத்துக்கலன்னா அதுக்கு நீங்க பொறுப்பாக முடியும்ங்கலா.?” என்று சொன்னார் ரங்கா.
“அவனுங்க என் பேச்சை மதிச்சாத்தானே. நான் அந்தப் பஞ்சாயத்துல இருக்கறதே ஏதோ ஒரு பேருக்கு தான், என்கிட்ட கலந்துக்கறது கூட அப்படித்தான். கடைசில பாரு, அவனுங்க என்ன பேசி முடிவெடுக்கறாங்களோ, அதுதான் முடிவு. அவனுங்க என் பேச்சை எங்க மதிக்கறாங்க.? ஹூம்ம்..” என்று சலித்துக்கொண்டே சொன்னார் அழகேசன்.
“அய்யா. அவங்க உங்களையே இப்படிப் பண்றாங்களே, அப்போ, நாங்கெல்லாம் எம்மாத்திரம்.? அதனால தான், இன்னைக்குப் பஞ்சாயத்துல காசில்லா தூசியா எங்களத் தட்டிவிட்டுட்டு போயிட்டாங்க. எங்கள மாதிரி அடித்தட்டு மக்கள எப்பவுமே கேவலமா தான் பார்க்கறாங்க. அதனால தான, ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு இடத்துல எங்கள இருக்கச் சொல்லிட்டாங்க. பொம்பளப் புள்ளைய தனியா வைச்சிட்டு ஒவ்வொரு நாளும் என்ன நடக்குமோ, ஏது நடக்குமோன்னு பயந்துட்டு வாழற வாழ்க்கை எங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதெல்லாம் அவங்களுக்கு எங்க புரியப் போகுது. இருந்ததையும் எல்லாம் கொடுத்தாச்சு. இனி, எங்களுக்குன்னு இருக்கறது இந்த கொட்டகை வீடும், ஆடு, மாடு, கோழிங்க தான்.” என்று கோகிலா குரல் தழுதழுக்க சொன்னாள்.
“நீ ஏம்மா அப்படி நினைக்கிற.? உனக்கு எதுவும் இல்லாம போனாலும், நீங்க வைரம் மாதிரி பெத்திருக்கீங்களே உங்க பொண்ணு அவ உங்களுக்கு என்னைக்கும் ஆதரவா இருப்பா. ரொம்ப புத்திசாலி பொண்ணு, தைரியமான பொண்ணு. இன்னைக்கு நீங்க இப்படி இருக்கலாம். ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல அவ வளர்ந்து பெரியவ ஆகும் போது, உங்களுக்கு எல்லா விதத்துலயும் இவ உதவியா இருப்பா. அதுக்காகத்தானே, அவ்ளோ போராட்டங்களுக்கு இடையில தமிழினிக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கறேன்.” என்று அவளை நினைத்து பெருமிதமாகச் சொன்னார் அழகேசன்.
ஆம் அந்தச் சின்னப்பெண் தமிழினி. ரங்கராஜன் – கோகிலாவின் ஒரே தவப்புதல்வி. தைரியமானவள், திறமையானவள், விவேகமானவள், துறுதுறுப்பானவள், படிப்பில் கெட்டிக்காரி. ஒருமுறை சொல்லிக்கொடுத்தாள் அனைத்தையும் மனதில் ஆழமாய் பதிய வைத்துக்கொள்ளும் புத்திசாலி. கோதுமையும், பாலும் கலந்த நிறத்தில் இருக்கும் அழகு குட்டிப் பெண். இவள் நிஜமாலுமே அவர்களின் பெண் தானா.? என்று நிறைய பேர் சந்தேகமாகக் கூட கேட்டதுண்டு. ஆனால், அவள் இவர்களின் பெண்ணாகப் பிறந்தது தான் அவள் செய்த பாவமாக நினைத்து, அவளை அனைவரும் ஒதுக்கியே வைத்தனர். அதை நினைத்து தான் கோகிலாவும் அவரிடம் சொன்னாள்.
“ஆனா, அது ஊர்ல இருக்கற நிறைய பேருக்கு கண்ணுக்கு உறுத்தலா தானுங்களே இருக்கு. அத நினைக்கும் போதுதான் ரொம்ப சங்கடமா இருக்குங்க. எந்தப் பசங்களுமே அவள விளையாட்டுக்குக் கூட சேர்த்துக்க மாட்டிங்கறாங்கன்னு அவ வந்து சொல்லும் போது, எங்க நிலைமைய நினைச்சு எப்படி வருத்தப்படறதுன்னே தெரியாதுங்க ஐயா.” என்றாள் கோகிலா.
“ப்ச்ச்.. வேற பசங்கள விடு கோகிலா. அமுதன் எப்பவும் தமிழினி கூட தானே இருக்கான். அவன் எப்பவும் அவளப் பத்தி மட்டுமே தான் பேசிட்டிருப்பான். தமிழினின்னா அவ்ளோ புடிக்கும் என் பையனுக்கு. சொல்லப்போனா, அவன் இன்னைக்கு உயிரோட இருக்கறதுக்குக் காரணமே தமிழினி தானே.?” என்றார் அழகேசன்.
ஆம், தமிழினி இல்லை என்றால் அமுதன் இல்லை. அழகேசன் தனது ஆறு வயது சிறுவனான அமுதனை பள்ளியில் சேர்த்து விட்டிருந்தார். அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அவனுக்கு ஏதாவது புதியதாய் சமைத்துக்கொடுக்க நினைத்தார்.
மண்ணென்னை அடுப்பில் தணல் எரிந்து கொண்டிருக்க, அதில் அவர் வைத்த கறிக்குழம்பு நிஜமாலுமே பசியில் இருப்போரை சுண்டி இழுக்கும் விதமாக இருந்தது. ஏற்கனவே பசியில் இருந்த ஆறு வயது அமுதன் எப்பொழுது அப்பா, கறிக்குழம்பை இட்லிக்கு தொட்டுக்கக் கொடுப்பார் என்று பேராவலில் காத்துக்கொண்டிருந்தான்.
அந்த சமயம் பார்த்து ஒருவர் வந்து, “பஞ்சாயத்து அவசரமா திடீர்னு கூடியிருக்குங்கய்யா. மாணிக்கம் அண்ண உங்கள உடனே கூட்டிட்டு வரச் சொன்னார்..” என்று சொல்லிவிட்டுப் போக, அவருக்கு பிடிபடவில்லை.
“எதற்க்கு திடீரென்று பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கிறார்கள்.? என்னவாக இருக்குமென்று தெரியவில்லையே.” என்று யோசித்துக்கொண்டே இருந்தவர், அடுப்பில் குழம்பு வெந்து கொண்டிருப்பதை மறந்து, அமுதனை சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லி பக்கத்து வீட்டு அம்மையாரிடம், “கொஞ்சம் பார்த்துகோங்க..” என்று சொல்லி அவர் பொறுப்பில் விட்டுவிட்டு அவசரமாய்ச் சென்றார் அழகேசன்.
அந்த அம்மையாரோ, வீட்டில் அவருடைய கணவர் எங்கே திட்டுவாரோ என்று நினைத்து, அவனிடம் ஒரே நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்று அவரும் சொல்லிவிட்டு வெளியே கதவைச் சாத்தி விட்டு சென்று விட, அமுதனுக்கோ பசியைப் பொறுக்க முடியவில்லை. அப்பா சென்றுவிட்டார், பக்கத்து வீட்டு அத்தையும் சென்று விட்டார். இனி யார் தனக்கு குழம்பை எடுத்து ஊற்றுவார் என்று நினைத்தவன், அதன் பக்கமாக சென்றான்.
அருகே இருந்த கரண்டியை எடுத்து அதன் உள்ளே வைத்தவன், குழம்பு கொதித்துக் கொண்டிந்ததால் அதன் சூடு பொறுக்காமல் அந்தக் கரண்டியை குழம்பு சட்டிக்குள்ளே போட்டு விட்டான். எப்படியாவது அதை எடுக்க வேண்டும் என்று நினைத்தவன், அருகே இருந்த ஒரு கட்டையை எடுத்து அதை எடுக்க முயன்றான். கட்டை இடறி குழம்பு ஒரு பக்கமாய் அனைத்தும் கொட்டி விட்டது.
அவனுக்கு அதை எப்படி சுத்தம் செய்வது என்று தெரியவில்லை. அப்பா வந்தால் எங்கே அடித்து விடுவாரோ என்று நினைத்தவன், தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்யலாம் என்று நினைத்து தண்ணீருக்கும், மண்ணென்ணைக்கும் வித்தியாசம் தெரியாமல் அதை ஊற்றி சுத்தம் செய்ய முயல, மண்ணென்ணை இருந்த கேன் முழுதும் கொட்டிவிட்டது. அங்கே அடுப்பில் கொழுந்து விட்டு தணல் எரிந்துகொண்டிருக்க, ஒரு வித வாடை அடிக்கிறதே என்று, சுத்தம் செய்யும் துணியை வைத்து அதை அவன் துடைக்க முயலும் போது அருகில் இருந்த அடுப்பு கவிழ்ந்து விழுந்து அந்த இடம் முழுவதும் பரவியிருந்த மண்ணென்ணையில் தீப்பற்றியது. ஒரே நேரத்தில் அந்த அறை முழுக்க தீ எளிதில் பற்றிக்கொண்டது.
நெருப்பு சுடுவதை உணர்ந்த அமுதன் அலற ஆரம்பித்தான். கத்தினான். அந்த நேரம் பார்த்து தமிழினி அந்தப் பக்கமாய் வர, அவள் கதவைத் திறந்து கொண்டு உள்ளே தைரியமாக நுழைந்தாள்.
உள்ளே அவன் இருக்கும் இடம் அனைத்தும் தீப்பற்றியிருந்தது. சாக்குப்பை எங்கேனும் உள்ளதா என்று தேடியவள் நல்லவேளையாக அங்கே ஒரு பெட்டியின் மேல் போர்த்தி வைக்கப்பட்டிருந்த சாக்குப்பையை எடுத்துக்கொண்டு ஓடிச் சென்று அந்த நெருப்பின் வீரியத்திலும் தைரியமாக அவனை அந்த சாக்குப்பையால் சுற்றி, இழுத்தபடி வெளியே கூட்டிக்கொண்டு வந்து விட்டாள் தமிழினி. அதற்க்குள் அமுதனின் கூச்சல் சத்தம் பெரிதாகக் கேட்க, அக்கம், பக்கத்தினர் அனைவரும் கூடிவிட்டனர்.
நல்லவேளையாக சிறிய தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தான் அமுதன். காப்பாற்ற சென்ற தமிழினிக்கு சிறிய தீப்புண்கள் ஆனது. ஆனால், அவனின் அலறல் தான் அவளால் கேட்க முடியவில்லை.
அங்கிருந்தவர்கள், அமுதனை உடனடியாக வைத்தியரிடம் அழைத்துச் சென்றனர். தமிழினியைப் பார்த்தவர்கள் அவளுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்ததைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க,
“ஏண்டா ராமா, என்ன செய்யறது இப்போ.? இந்தப் புள்ளைய கூட்டிட்டு போலாமா.? பின்னாடி ஏதும் பிரச்சினை வந்துடாதே.?” என்றார் ஒருவர்.
“யோவ்.. அந்தப் புள்ள உயிர, இந்தப் புள்ள தாண்டா காப்பத்திருக்கு. பாவம், காயம் ஆயிருக்கு பாரு. எரியும் இல்ல. நம்ம புள்ளையா இருந்தா விடுவோமா.? எந்த்ப் பிரச்சினையா இருந்தாலும் அப்பறம் பாத்துக்கலாம். மொதல்ல வைத்தியர் கிட்ட கூட்டிட்டுப் போகலாம்..” என்று சொன்னபடி அவளையும் கூடவே கூட்டிக்கொண்டு சென்றனர்.
மறுபுறம், வீட்டில் பற்றியிருந்த தீயை அணைக்க சிலர் தங்களால் முயன்றவரை தண்ணீரை ஊற்றி அணைத்தபடி இருந்தனர். அதற்க்குள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அங்கே இருந்த ஒருவர், ஓடிச் சென்று பஞ்சாயத்துக்காகக் கூடியிருந்தவர்களிடம் உடனே தகவலைச் சொன்னார்.
அழகேசன், அழுதுகொண்டே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடினார் வைத்தியர் வீட்டிற்க்கு.
“என்றா சொல்ற.? நிசமாலுமே தீப்பத்திக்கிச்சா.? பையனுக்கு எதுவும் இல்லையே.?” என்று மாணிக்கம் கேட்க,
“தெரியலைங்க அய்யா. ஆனா, நம்ம ரங்கனோட பொண்ணு தான் வாத்தியார் பையனக் காப்பத்தியிருக்குங்க.” என்று சொன்னார்.
“என்னது, ரங்கனோட பொண்ணா.? அதுக்கு என்றா வயசிருக்கும்.? அந்தப் புள்ள எப்படிப் போய் காப்பாத்திச்சு.? எப்படி அங்க போச்சு.?” என்று மாணிக்கம் குழம்பிக்கொண்டிருக்க,
“ஏங்க தலைவரே, நீங்க ஆராய்ச்சி பண்றதுக்குள்ள அங்க என்ன நடக்குமோன்னு தெரியல.? பஞ்சாயத்த இப்போதைக்கு ஒத்தி வைச்சுடுங்க.” என்று சாத்தப்பன் சொல்ல, பெரியசாமி அதை ஆமோதித்தார்.
“சரி பா. நாஞ் சொறது என்னன்னா, இப்போதைக்கு அவசரமா பஞ்சாயத்த அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கறேன். நம்ம வாத்தியார் பையனுக்கு என்னாச்சுன்னு ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடுவோம். சரிதான.?” என்று மாணிக்கம் சொல்ல, ஒட்டுமொத்த பஞ்சாயத்தும் வைத்தியர் வீட்டுக்கு விரைந்தது.
(தொடரும்...)
வார்த்தைகளின் எண்ணிக்கை : 1256
உங்கள் விமர்சனங்களை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள் தோழமைகளே...
தமிழுக்கு அமுதென்று பேர் - Comments
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
Last edited by a moderator: