Aathirai
Active member
- Messages
- 79
- Reaction score
- 149
- Points
- 33
அத்தியாயம் 11
இருவர் எண்ணங்களை இப்போது ஆராய்ந்தால், ஒரே மனரீதியில் இருந்தனர். தமிழினியும், அமுதனும் இருவரும் எப்பொழுதும் நண்பர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்பினாலும், இடையில் வருபவர்கள் ஏதேனும் செய்தால் என்ன செய்வது.? என்ற மனப்போராட்டத்தில் இருந்தனர்.
அதே வாய்க்கால் பக்கம் தோட்டத்தில் அமர்ந்து, இருவரும் நீண்ட நேரமாக எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தனர். ஆனால், அவர்களின் மனம் இப்போது அமைதியாக இல்லை. ஓயாமல் எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் நண்பர்களுக்கு, நெடுநேரமாக பேசாமல் இருப்பது பிடிக்காமல் போகவே, இருவரும் பேச ஆரம்பித்தனர்.
“ஏண்டா நண்பா, நாம கடைசி வரைக்கும் ஃப்ரெண்ட்ஸ் ஆ இருக்கவே முடியாதா.? நம்மள பிரிச்சிடுவாங்களா.?” என்றாள் தமிழினி.
“தெரியல தமிழு. எனக்கு மட்டும் என்ன தெரியும்.? நாம இப்போதான் ஸ்கூல் படிச்சிட்டிருக்கோம். இன்னும் மேல பதினொண்ணாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு படிக்கணும். அப்பறம் காலேஜெல்லாம் போக வேண்டி இருக்கு. அதுக்கும் அப்பறம் வேலைக்குப் போகணும். இத்தனையும் இருக்கு. அதுக்கப்பறம் தான, கல்யாணமெல்லாம் பண்ணுவாங்க.” என்றான் அமுதன்.
“டேய். எனக்கு என்ன தெரியும்னு சொல்லிட்டு, இப்போ கல்யாணம் வரைக்கும் போயிட்ட.? ஹூம்ம்.. திருட்டுப் பையன் டா நீ.” என்று அவன் தலையில் ஒரு குட்டு குட்டினாள்.
“ஸ்ஸ்ஸ்... ஆஆஆ.. வலிக்குது தமிழு. நீ அடிச்சாலும், என்ன பண்ணாலும் எனக்கு வலிக்குது.” என்று தலையைத் தேய்த்துக்கொண்டே சொன்னான் அமுதன்.
“ஹூம்ம்ம்.. ஒழுங்கா திண்ணா தான உடம்புல சத்து இருக்கும். என்ன தான் சாப்பிடறியோ.?” என்றான்.
“ம்ம்.. சரி, இனிமேல் நீ அடிச்சா வலி தாங்கிக்க வேண்டியாவது நான் கொஞ்சம் அதிகமா சாப்பிடறேன். சரியா.?” என்று முகத்தைப் பாவமாய் வைத்துக்கொண்டே சொன்ன அமுதனைப் பார்த்தவள் சிரித்தாள்.
“அப்பா, இவ்ளோ நேரம் அமைதியா இருந்தது நல்லாவே இல்ல. இப்போ பாரு, எவ்ளோ அழகா கலகலன்னு சிரிக்கற. இப்போதான் நல்லா இருக்கு.” என்று அவனும் சொல்லிக்கொண்டே சிரித்தான்.
நண்பர்கள் இருவரும் சிரித்தது அங்கிருந்த மரம், செடி கொடிகளுக்குப் பிடித்ததோ, என்னவோ அவைகளும் அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதாய் அனைத்தும் மெல்லிய தென்றல் காற்றை வீசின. அந்தக் குலுகுலு காற்றை ரசித்தவாறே இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
“இப்போ, நாம என்ன பண்ணுவோம் தமிழு.? எல்லாரும் சொல்ற மாதிரி நம்மள கல்யாணம் பண்ணிக்கறவங்க நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சிடுவாங்களா.? அப்போ நாம கடைசி வரைக்கும் நண்பர்களா இருக்கவே முடியாதா.?” என்று தமிழினி சொன்னதையே திருப்பி அவன் கேட்க,
“ஹூம்ம். இதைத்தானடா நானும் கேட்டேன். நமக்கு அதெல்லாம் எப்படிடா தெரியும்.? அதுக்கெல்லாம் நமக்கு இன்னும் வயசு இருக்கு டா. அதுக்குள்ள நாம அதைப்பத்தி முடிவு பண்ண முடியாதே.?” என்றாள்.
“ஏன் முடியாது தமிழு.? நாம ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் இதே மாதிரி இருக்கணும்னா, அதுக்கு நம்மளக் கல்யாணம் பண்ணிக்க போறவங்க சம்மதிச்சா தான முடியும்.?” என்று அமுதன் சொல்ல, அவள் ஆமோதிப்பதைப் போல் தலையாட்டினாள்.
“ஒரு வேளை சம்மதிக்கலன்னா என்ன பண்றது.? அதுக்குப் பேசாம நாம கல்யாணம் பண்ணிக்காமலே இருந்துட்டா என்ன.?” என்று அவன் சொன்னதும், ஒரு மாதிரியான யோசனையில் இருந்தாள் தமிழினி.
“ஏய்.. என்ன தமிழு யோசிக்கற.?” என்றான் அமுதன்.
“இல்லடா நண்பா. அது சரிவருமான்னு தெரியல. ஏன்னா, அதுக்கு நம்ம அப்பா, அம்மா ஒத்துக்கணுமே. அவங்க நிச்சயமா ஒத்துக்க மாட்டாங்க. எவ்வளவு தான் நாம ரெண்டு பேரும் நண்பர்களா இருந்தாலும், நமக்கு கடைசி வரைக்கும் துணையா வர ஒருத்தர் வேணும்டா.” என்றாள்.
“நீ என்ன தமிழு, இப்படிச் சொல்ற.?” என்றான்.
“ஆமாடா, நாம இப்போதைக்கு அப்படிப் பேசிக்கலாம். ஆனா, இன்னும் கொஞ்ச நாள் போனா நம்ம மனசு மாறும். அப்போ, வேற ஒரு முடிவு எடுப்போம். அதனால, இப்போதைக்கு நாம இதைப்பத்தி எந்த ஒரு முடிவும் பண்ணாம இருக்கறதுதான் சரி. நம்ம அய்யாகிட்ட சொல்லிப் பாரு. அவரும் இதையே தான் சொல்வாரு.” என்றாள்.
“ஹூம்ம். சரி, நீ சொன்ன மாதிரி, நம்ம மனசு மாறிக்கிட்டே தான் இருக்கும். நாம் இன்னும் கொஞ்சம் பெரிசானதும், முடிவு பண்ணிக்கலாம்.” என்று அவனும் அவளின் பேச்சுக்கு சம்மதம் தெரிவித்தான்.
“அமுதா, டேய்.. அமுதா.. எங்க இருக்கப்பா.?” என்று தூரத்தில் இருந்தவாறே, அழகேசனின் குரல் கேட்டது. அவரின் குரல் கேட்ட மாத்திரமே இருவரும் எழுந்து ஓடினர்.
“அப்பா, நாங்க இங்க இருக்கோம்..” என்று கைகளைக் காட்டியவாறே, ஓடினான் அமுதன், கூடவே தமிழினியும் ஓடினாள்.
ஒருவழியாக இவர்களே அவரிடம் சென்று விட்டனர்.
“உன்ன எங்கெல்லாம் தேடறது பா.?” என்றார் அழகேசன்.
“ஏம்பா.. என்னாச்சு.. எதுக்கு நீங்க தேடிட்டு வறீங்க.? நாங்க எப்பவும் இங்க தானப்பா இருப்போம்.?” என்றான் அமுதன் மூச்சு வாங்கியவாறே.
“அவசரத்துல ஞாபகம் இல்லப்பா. சரி விடு. முதல்ல வா. உடனே நாம ஊருக்குக் கிளம்பணும். கோலாகலம் பெரிய மனுஷி ஆயிட்டா. உங்க அத்தை இப்போதான் தகவல் சொன்னா, இப்போ போனா தான் சரியா இருக்கும். நான் தான் குடிசை கட்டணும். அதுக்குத்தான் ஓடி வந்தேன் உன்னக் கூட்டிட்டுப் போகணும்னு. தமிழ் மா. நாங்க அவசரமா ஊருக்குப் போறோம். உன்ன வீட்டுல விட்டுட்டுப் போறோம். சரியா.” என்றார்.
“பரவால்லைங்க அய்யா. நான் போய்க்கறேன். எனக்கு எதுவும் அவசரமில்ல. நீங்க ரெண்டு பேரும் பார்த்துப் போயிட்டு வாங்க.” என்று நிதானமாய்ச் சொன்னாள் தமிழினி.
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க, அமுதன் மட்டும் அமைதியாக இருந்தான். அவனுக்கு அத்தை வீட்டுக்கு போக வேண்டும் என்றதுமே, மனதில் பல எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன. சிறு வயதிலேயே அவனுக்கு அங்கே போக விருப்பம் இருக்காது. நடந்த அந்த சம்பவத்திற்க்குப் பிறகு அமுதன் அங்கே போகவே இல்லை. நிம்மதியாக இருந்தான்.
அவ்வப்போது விசாலாட்சி மட்டுமே அங்கே வந்து அவர்களைப் பார்த்து விட்டுச் செல்வாள். கூடவே, கோலாவும் வருவாள். வந்தால், அவன் அதிகமாகப் பேச மாட்டான். அவளோ, இவன் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருப்பான். அவர்கள் கிளம்பி விட்டால் போதும் என்று இருக்கும் அவனுக்கு.
அதனால் தான், இன்று கூட கிளம்புவதற்க்கு அவனுக்கு விருப்பமே இல்லை. ஆனால் வேறு வழியில்லாமல் இன்று போக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அமுதன்.
இவன் யோசித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தனர் தமிழினியும், அழகேசனும்.
“என்னாச்சு பா.?” என்றார் அழகேசன்.
“அப்பா, அங்க நானும் கட்டாயம் வரணுமா.?” என்றான் அமுதன் என்றான் பாவமாக.
அவனின் மனநிலையை உணர்ந்தவராய், “வேற வழியில்ல டா தம்பி. நீ வரலன்னா உங்க அத்தை என்னை வார்த்தைகளிலேயே கொன்னுடுவா. உனக்குத்தான் அவளப் பத்தி தெரியுமே.? அதுவும் இல்லாம, நான் தாய் மாமன்னால நிறைய சடங்குகள், சம்பிரதாயங்கள் பண்ணனும், முறைப்படி சீர் செய்யணும். அதனால, கட்டாயம் போய்த்தான் ஆகணும் அமுதா.” என்றார் அழகேசன்.
“சரிப்பா, போகலாம். வாங்க.. நான் போயிட்டு வரேன் தமிழு.” என்று வார்த்தைகளில் ஒரு உயிரே இல்லாமல் சொல்லிக்கொண்டு போகும் தன் நண்பனைப் பாவம் என நினைத்தாள் தமிழினி.
இருவரும் உடனே பேருந்தில் ஏறிவிட்டனர். இரண்டு மணி நேரப் பயணம். இவர்களுக்காகவே காத்திருந்ததைப் போல் உறவுக்காரர் ஒருவர், அவர்கள் ஊரின் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அவர்கள் வந்து இறங்கியதும், தனது பைக்கில் இருவரையும் அழைத்துச் சென்றார். வீடு அருகில், வர வர அமுதனுக்கு படபடப்பு அதிகமானது. பிடிக்காத ஊருக்கு வந்துவிட்டோம் என்று அவன் பேருந்திலிருந்து இறங்கும் போது நினைத்தபடியே வந்தான்.
அங்கே எல்லாம் தயாராய் இருந்தனர். கோலாவுக்கு நாட்டுக்கோழி முட்டையும், நல்லெண்ணையும் தரப்பட்டது. கஷ்டப்பட்டு அதைக் குட்டித்தாள் அவள். அதே போல், அவளை அவளின் அம்மா விசாலாட்சியின் வழி அத்தை முறைப் பெண் ஒருவர், தண்ணீர் ஊற்றி குளிக்க வைத்தார்.
அடுத்து சடங்குக்கான ஏற்பாடெல்லாம் செய்து கொண்டிருக்கும் போது இவர்களும் வந்து விட, குடிசை கட்டுவதற்க்கான நேரமும் வர, அழகேசன் முறைப்படி குடிசை கட்டினார்.
அழகேசனின் பெற்றோர்கள் முன்னரே வந்து அமர்ந்திருந்தனர். அதற்க்குள், கோலாவை பாவாடை தாவணி உடுத்திவிட்டு, நகைகள் இருந்தவற்றைப் போட்டு விட்டு, அவளுக்கு அலங்காரம் செய்து குடிசைக்குள் விட நேரம் பார்த்து அழைத்து வந்தனர்.
அழகேசன் குடிசை கட்டும் போதே, உறவுக்காரர் ஒருவர் சும்மா இருக்காமல், “ஏம்பா அமுதா நீயும் போய் அப்பாவோட குடிசை கட்டு, நீயும் முறைப்பையன் தான.?” என்று வம்பிழுக்க.
அழகேசனோ அவரை ஒரு பார்வை பார்த்தார். அதற்க்குள் நடேசன் வந்து, “ஏங்க, அதான் பெரியவர் தாய் மாமா குடிசை கட்டறார் இல்ல. அப்பறம் எதுக்கு சின்னப் பையனக் கட்ட சொல்லிட்டு.? இருக்கட்டும். நீங்க கொஞ்சம் சும்மா இருங்க.” என்று சொன்னதும் தான், “அப்பாடா... தப்பித்தேன்..” என்று நிம்மதியாக அமர்ந்தான் அமுதன்.
கோலாவைக் கூட்டி வந்து அவளை முறைப்படி பெரியவர்கள் காலில் விழச் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிய பிறகு குடிசைக்குள்ளே விட்டனர். அமுதன் அதைப் பார்த்துக்கொண்டிருந்தான். சாதாரணமாகப் பார்த்துக்கொண்டிருந்தவனிடம், வம்பிழுத்த உறவுக்காரர் சும்மா இருக்காமல்,
“ம்ம்.. கோலாகலம் எவ்ளோ அழகா இருக்கால்லா டா மாப்பிள்ளை பையா.? அவள என்ன அப்படிப் பார்த்துட்டிருக்க.? இப்போவே அப்படிப் பார்க்கற.? இன்னும் கல்யாண வயசு வந்தா எப்படிப் பார்ப்பியோ.?” என்று சொல்ல, அதைக் கேட்கப் பிடிக்காதவன் அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு விருட்டென்று எழுந்து அழகேசன் இருக்கும் இடம் தேடிப் போனான்.
அவர் குடிசை கட்டிய இடத்தில் இருக்க, அங்கே சென்று அவருடன் நின்று கொள்ள, “என்னாச்சு டா தம்பி. ஏன், இங்க வந்து நின்னுட்டிருக்க.?” என்றார்.
“இல்லப்பா, அந்த மாமா சும்மா சும்மா என்னை வம்பிழுத்துப் பேசிட்டே இருக்கார். அதனால அங்க இருக்க முடியாம இங்க வந்துட்டேன்.” என்று சொன்னான்.
அதற்க்குள் அவனைப் பார்த்த விசாலாட்சி, “டேய். அமுதா.. வந்துட்டியா. நான் இருந்த நிலையில உன்னைப் பார்க்கவே இல்ல. பாரு, உன் வருங்காலம் பெரிய மனுஷி ஆயிட்டா. சந்தோஷமா.?” என்று கேட்க, அவனுக்கோ ஒரு மாதிரி ஆனது. இதில் கோலா வேறு குடிசையில் அமர்ந்து கொண்டு அவனைப் பார்த்தபடி வெட்கச் சிரிப்பொன்றை உதிர்த்துக்கொண்டிருந்தாள்.
அழகேசனுக்கே சிறு பிள்ளைகளிடம் ஏன் தான் இப்படியெல்லாம் பேசி மனதைக் கெடுக்கிறார்களோ என்று எரிச்சலாக இருந்தது.
அங்கே தான் அவரின் தொல்லை தாங்க முடியாமல் எழுந்து இங்கே வந்தால், இங்கு அதற்க்கும் மேல் அல்லவா இருக்கிறது. ம்ஹூம்ம். பேசாமல் வெளியே சென்று விடலாம் என்று நினைத்து வெளியே சென்று நின்று கொண்டிருந்தான் அமுதன்.
அங்கே அதற்க்கும் மேல் பெரிய தொல்லையாக குமரேசன் நின்று கொண்டிருக்க, இப்போது அவனுக்கு ஏன் வெளியே வந்தோம் என்றும் ஆனது. குமரேசன் அவனை முறைத்தவாறே நின்று கொண்டிருந்தான்.
அதற்க்குள் நடேசன் வந்து குமரேசனிடம், “டேய்.. குமாரு போய் சாப்பாடு சொல்லிருந்தவங்க கிட்ட போய் சாப்பாடு வாங்கிட்டு வந்துடு. கூட யாரையாவது கூட்டிக்கிட்டுப் போ.” என்றார்.
அவர் சொன்னதுமே, குமரேசன் அமுதனைப் பார்த்தான். “இங்க வா அமுதா. போய் சாப்பாடு எடுத்துட்டு வந்துடலாம்.” என்று கூப்பிட, அவனோ முழித்தான். அவனுக்கு அவனிடம் கொஞ்சம் பயம் இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தவனை,
“என்ன யோசிச்சிட்டு இருக்க, வா.. போயிட்டு வரலாம்.” என்றான்.
அதற்க்குள் அழகேசன் வர, அவரிடம் சொல்லிவிட்டுச் சென்றான் அமுதன். ஒரு தயக்கம் அவனிடம் இருந்து கொண்டேதான் இருந்தது. வேறு வழியில்லாமல் அவனுடன் சென்றான் அமுதன்.
போகும் போதே அவன் பேச்சுக் கொடுத்தபடி வந்தான் அமுதனிடம், “அப்பறம் எப்படி இருக்க.? பத்தாவதா படிக்கற.?” என்று சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டிருந்தான்.
“ம்ம்.. ஆமா அண்ணா.” என்று ஒரே வார்த்தையில் முடித்தான் பேச்சை.
“ஓ.. நல்லா படிக்கிறியா.?” என்றான்.
“ம்ம்ம்..” என்றான் அமுதன்.
“ஏன். எங்கிட்ட பேச மாட்டியா.? இன்னும் சின்ன வயசுல நடந்ததையே நினைச்சிட்டு இருக்கியா.?” என்றான் குமரேசன்.
“இல்ல அண்ணா, அப்படியெல்லாம் எதுவும் இல்ல.” என்றான்.
அதற்க்குள் சாப்பாடு எடுக்கும் இடம் வந்து விட்டது. அவர்களிடம் ஒரு பெரிய டிபன் காரியரை வாங்கிக்கொண்டு கிளம்பினர்.
திரும்பவும் பேச்சை ஆரம்பித்தான் குமரேசன். “என்னை என்னன்னு கூப்பிட்ட.? அண்ணான்னு தான. முறைப்படி நான் உனக்கு மச்சான். இனிமேல் அப்படித்தான் கூப்பிடணும். நீ நாளைக்கு கோலாவக் கல்யாணம் பண்ணா, அப்படித்தான ஆகும்.” என்றான்.
அய்யய்யோ.. இவன் என்ன இப்பொழுதே இதைப்பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறான். என்னதான் செய்வது.? இங்கே வந்ததிலிருந்து ஒவ்வொருவரும் என்னை நோகடிக்கிறார்களே என்று இருந்தது அமுதனுக்கு.
அவன் எதுவும் பேசாமல் வருவதைக் கண்டு, “என்ன எதுவுமே பேசாம வர.? ஆமா, இன்னும் அந்தப் பொண்ணோட தான் சுத்திட்டு இருக்கியா.? அவள நினைச்சுட்டு நீ கோலாவ எங்கயாவது ஏமாத்தின.? நான் உன்னை என்ன பண்ணுவேன்னே தெரியாது.” என்று திடீரென மிரட்டலாகப் பேசினான்.
வீடு வந்துவிட இறங்கியவனை, “என்ன சொன்னதெல்லாம் மனசுல வைச்சுக்கோ. சரியா.?” என்றபடி ஆட்களைக் கூப்பிட்டு டிபன் கேரியரை எடுத்துக்கொண்டு போனான். அமுதனுக்கு பயமும், பதட்டமும் அதிகரித்தது.
(தொடரும்...)
வார்த்தைகளின் எண்ணிக்கை : 1267
உங்களின் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விமர்சனங்களை கீழே உள்ள
கமெண்ட்ஸ் லிங்கில் பதிவிடவும் தோழமைகளே...
https://www.sahaptham.com/community/threads/தமிழுக்கு-அமுதென்று-பேர்-comments.580/