Aathirai
Active member
- Messages
- 79
- Reaction score
- 149
- Points
- 33
அத்தியாயம் 21
மாரியின் திருமணத்தைப் பற்றி உடனே டெலிபோன் பூத்துக்கு சென்று போன் செய்து அழகேசனுக்கும், விசாலாட்சிக்கும் தகவல் சொன்னார் அவர்களின் தந்தை. அப்போது தான் ஊர் சென்று சேர்ந்த அழகேசன் மிகவும் சந்தோஷப்பட்டார். அவர்கள் பெண் பார்க்க வரும் போது திரும்பவும் வருவதாகச் சொன்னார்.
ஆனால், விசாலாட்சியோ அத்தனை ஒன்றும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. “ம்ம்.. சரி வர முயற்சி பண்றேன்.” என்று மட்டும் சொல்லி வைத்து விட்டாள்.
அடுத்த இரண்டு நாட்களில் சாமிநாதனின் குடும்பம் முறைப்படி பெண் பார்க்க அவர்கள் வீட்டுக்கு வந்தனர். சொன்னபடியே அழகேசன் திரும்பவும் வந்தார். விசாலாட்சி தெரிந்ததுதான், அவள் வரவேயில்லை. வருவாள் என்று கமலம் கடைசி வரை நம்பினார். ஆனால், அவள் ஏமாற்றிவிட்டாள் என்று புலம்பினார்.
அகழகேசனும், அவரது தந்தையும் தான் சமாதானப்படுத்தினர். சாமிநாதனின் பக்கம் அவனது குடும்பமும், அவனது அத்தை குடும்பமும் வந்திருந்தது. மாரியை அலங்காரத்தில் பார்த்த போது, கருவறைக்குள் இருக்கும் சாமி போலத் தெரிந்தாள்.
கையெடுத்துக் கும்பிடத் தோன்றும். பார்த்ததுமே, சாமிநாதன் ஏன் அவளை விரும்பினான் என்று அனைவருமே கண்டுபிடித்து விட்டனர். சிறிய வயதில் பார்த்த அவனது அம்மாவைப் போலவே இருந்தாள் மாரி.
அவர்கள் மறுப்பே சொல்ல முடியாத அளவுக்கு அவளைத் தேர்வு செய்து விட்டான் சாமிநாதன்.
“அய்யா.. எங்களுக்கு பொண்ண ரொம்பப் புடிச்சிருக்கு. எங்க பையன் முதல்லயே எல்லாத்தையும் சொல்லிட்டான். எங்க குலதெய்வமே திரும்பக் கிடைச்ச மாதிரி உங்க பேத்தி இருக்கா. என் பையனுக்கும் சரி, எங்களுக்கும் சரி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்ல. உங்க பேத்திக்கு நீங்க என்ன செய்யணும்னு விருப்பப்படறீங்களோ அதை செஞ்சா போதும். எப்படி இருந்தாலும், அவங்க ரெண்டு பேரும் தான் அவங்க வாழ்க்கைய வாழப்போறாங்க. இதுல எங்களுக்கு எந்தத் தேவையும் இல்ல. சட்டுபுட்டுன்னு நல்ல நாள் பார்த்து நிச்சயத்தையும், கல்யாணத்தையும் வைச்சுக்கலாம்.” என்று தன் மனதில் உள்ளவற்றை உள்ளபடியே பேசினார் சாமிநாதனின் தந்தை.
“ரொம்ப நல்லது பா. உங்கள மாதிரி குடும்பத்துக்கு எங்க பேத்தி வாக்கப்பட்டுப் போறான்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவளுக்கு அம்மா, அப்பா கிடையாது. எங்க அண்ணனோட மக வயித்துப் பேத்தி தான் மாரி. அவள எங்க பொறுப்புல விட்டுட்டு தான் எங்க அண்ணன் பொண்ணு செத்துப்போனா. அப்போலிருந்து இவ எங்க கூட தான் இருக்கா. அவளுக்கு சொந்தமா மூணு ஏக்கர் நிலம் இருக்கு. அதையும் அவ தான் பாத்துக்கறா. தம்பியும் இந்த ஊர்ல தான் நிலங்களைப் பாத்துக்கறதா சொன்னாரு. எங்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்ல. அவளுக்கு என்ன செய்யணுமோ அதைக் குறைவில்லாம செஞ்சுடுவோம். அவ வாழ்க்கை நல்லா இருந்தா போதும்.” என்று சற்று கண் கலங்கியபடியே பேசினார் தாத்தா.
“அப்பாக்கு மாரி மேல ரொம்பப் பாசம் அதிகம். அவருக்கு அவளைப் பிரிஞ்சு இருக்கறது கொஞ்சம் கஷ்டம். அதுக்குத் தகுந்த மாதிரி இந்த ஊர்லயே மாப்பிள்ளை இருக்கற மாதிரி அமைஞ்சது ரொம்ப சந்தோஷம் எங்களுக்கு.” என்று பேசினார் அழகேசன்.
“சரிங்க நல்ல நாள் பார்த்து நிச்சயத்தைக் குறிச்சிடுவோம். அப்பறம் கல்யாணத்துக்கும் நாள் பார்த்துடுவோம்.” என்று கமலம் பாட்டி சொன்னார்.
“கமலம் அந்தப் பஞ்சாங்கத்த எடுத்துட்டு வா. நாள் பார்த்துடலாம்.” என்று அவர் சொல்ல, கமலம் பஞ்சாங்கத்தை எடுத்து வந்தார்.
சிறிது நேரம் பஞ்சாங்கத்தைப் புரட்டிய தாத்தா, தமிழ் மாசம் வைகாசி 1, ஆங்கில மாதம் மே 15 நாள் நல்லா இருக்கு. நல்ல முகூர்த்த நாள். அன்னைக்கு நிச்சயத்தை வைச்சுக்குவோம். அப்பறம், கல்யாணத்தை ரொம்ப நாள் தள்ளிப் போட வேண்டாம்னு பார்க்கறேன். அதனால, வைகாசி கடைசில முகூர்த்த நாள்னு பார்த்தா வைகாசி 30, 31 அதாவது ஜூன் மாசம் 14, 15-ம் தேதி நாள் நல்லா இருக்கு. முந்தைய நாள் மாப்பிள்ளை அழைப்பு, மத்த சடங்கு எல்லாம் வைச்சுக்கலாம். அடுத்த நாள் அதிகாலை 6 லிருந்து 7.30 வரைக்கும் முகூர்த்த நேரம் இருக்கு.” என்று சொல்ல,
“சரிங்கய்யா. நீங்க சொன்ன தேதிலயே நிச்சயத்தையும், கல்யாணத்தையும் வைச்சுக்கலாம். அதுக்கான ஏற்பாடுகளை நாங்க நாளைல இருந்தே ஆரம்பிச்சிடுறோம். நீங்களும் பார்த்து பண்ணிடுங்க.” என்று தெளிவாகவே பேசினார் சாமிநாதனின் அப்பா.
“சரிங்க.. அப்படியே பண்ணிக்குவோம்.” என்றார் அழகேசனும், தாத்தாவும். அதே போல், நிச்சயதார்த்தத்தை சாமிநாதன் ஊரிலும், திருமணத்தை இங்கேயும் நடத்தத் திட்டமிட்டனர்.
செல்லும் போது, சாமிநாதன் ஒருமுறை மாரியைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினான். அவள் உள்ளே இருந்த்தால் வெளியே வரவில்லை. அப்போது, தமிழினி தான் அதைத் தெரிந்து கொண்டு, உள்ளே ஓடிச் சென்று மாரியின் காதில் ஓதினாள்.
உடனே, மாரியும் எழுந்து முன்னே வாசலுக்கு வந்தாள். அப்போது தான் அவனுக்குக் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. மாரியும், அவன் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு, கண்களினாலேயே விடை கொடுத்தாள். அவனும் சிரித்துக்கொண்டே சென்றான்.
அதன் பிறகு, நாட்கள் வேகமாக நகர்ந்தன. மாரியும், சாமியும் தினமும் ஒருமுறையாவது சந்தித்துக்கொண்டனர். நிறைய விஷயங்களைப் பேசினர். அவர்கள் பேசும் விஷயங்களில் பாதி, வயல், வரப்பு, விளைச்சல் என்று விவசாயத்தைப் பற்றியே அதிகமாக இருந்தது.
அவள் செல்லும் போது, அமுதனையும், தமிழினியையும் அழைத்துக்கொண்டே செல்வாள். சாமியின் கராத்தே பள்ளிக்குச் சென்று இப்போது இருவரும் சேர்ந்தே கராத்தே கற்றனர். அதே போல், வயலுக்குச் சென்று விவசாயத்தைப் பற்றியும், அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடு பற்றியும், மேலும் சில தெரியாத விஷயங்களையும் கற்றுக்கொடுத்தனர்.
இப்படியாக நாட்கள் செல்ல, அதற்க்குள் நிச்சயதார்த்த நாள் வந்து விட்டது. சாமிநாதனின் ஊரில் நிச்சயதார்த்தத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அவர்கள் செய்து விட்டனர். இவர்கள் முக்கியமான சொந்த பந்தங்களைக் கூட்டிக் கொண்டு ஒரு வேனைப் பிடித்துச் சென்றனர். அதற்க்குக் கூட விசாலாட்சி வரவில்லை. ஆனால், நிச்சயம் நல்லபடியாகவே நடந்தது.
அதற்க்குள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதைத் தெரிந்து கொண்டு அழகேசன் அமுதனையும், தமிழினியையும் அழைத்துக்கொண்டு போக வந்தார்.
“டேய்.. பசங்களா. உங்கள என்கூடவே வைச்சுக்கணும் போல இருக்கு. பேசாம என்கூடயே இருந்துடுங்களே. இப்போ ஊருக்குப் போய்த்தான் ஆகணுமா.?” என்று மாரி கேட்க,
அழகேசனோ, சிரித்துக்கொண்டே அவளிடம், “மாரி, அவங்க ரெண்டு பேரும் படிக்கிற பசங்க. அவங்களுக்கு நாளைக்குத் தேர்வு முடிவு வேற வரப்போகுது. அதனால தான் கூட்டிட்டுப் போறேன். அதுவும் இல்லாம, அடுத்து அவங்க மேல படிக்கிற பள்ளிக்கூடத்துக்குப் போகணும். அவங்களை அதுல சேர்க்கணும். இன்னும் நிறைய இருக்கு. உனக்குத் தெரியாததா.? நீ படிச்சவதானே.? உன்னோட கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு லீவு போட்டுட்டு மூணு பேரும் வந்துடறோம். போதுமா.?” என்றார்.
“ஆமா அக்கா. உங்க கல்யாணத்துக்கு கண்டிப்பா வரோம். எங்களுக்கும் உங்களைப் பிரிய மனசில்ல. ஆனா, என்ன பண்றது.? எனக்கும் எங்க அம்மா, அப்பாவைப் பார்க்கணும். இவ்ளோ நாள் நான் அவங்களைப் பிரிஞ்சு இருந்ததே அதிகம்.” என்றாள் தமிழினி.
“மாரி கா. உங்க தம்பி இனிமேல் லீவு விட்டாப் போதும் இங்க ஓடி வந்திடுவேன். சரியா.? நீங்க ஒண்ணும் வருத்தப்படாதீங்க.” என்று அமுதனும் ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான்.
“சரி பசங்களா.. கல்யாணத்துக்கு வந்துடுங்க. நான் உங்களைத்தான் எதிர்பார்த்துட்டே இருப்பேன்.” என்று அவர்களைக் கட்டிக்கொண்டு பிரியா விடைக்கொடுத்து அனுப்பினாள். மூவரும் ஊர் வந்து சேர்ந்தனர்.
அடுத்த நாள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. தமிழினி அவள் பள்ளியிலேயே முதல் மதிப்பெண்ணாக 500-க்கு 482 மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள். அதே போல், அவள் கோவை மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்திருந்தாள்.
அமுதன் பள்ளியில் இரண்டாம் இடம், 500-க்கு 475 மதிப்பெண்கள் வாங்கியிருந்தான். இருவரும் கணக்குப் பாடத்திலும், சமூக அறிவியல் பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.
பள்ளியின் சார்பில் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதே போல், அன்றே அவர்களை அழைத்துச் சென்று பொள்ளாச்சியில் உள்ள சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கையில் கலந்து கொண்டு, அவர்களுக்கு விருப்பமான குரூப்பைத் தேர்வு செய்ய வைத்தார் அழகேசன்.
தமிழினி அறிவியல் பாடத்தையும், அமுதன் வரலாறு பாடத்தையும் தேர்வு செய்து அதற்க்கு விண்ணப்பித்தனர். அவர்களுக்கு அது கிடைத்தும் விட்டது.
அவர்கள் ஊரில் இருந்து பஸ்ஸில் பயணம் செய்துதான் வர வேண்டும். பொள்ளாச்சி வரை வந்து, பிறகு டவுன் பஸ்ஸில் பள்ளிக்குச் செல்லும் பேருந்தில் ஏறிச் செல்ல வேண்டும். வேறு வழியில்லை. நல்ல பள்ளியில் சேர்ந்து படித்துதான் ஆக வேண்டும் என்று அங்கேயே படிக்க சம்மதம் தெரிவித்தனர்.
தமிழினிக்கு அரசு செலவு என்பதால் அவளுக்கு பள்ளிக்கூட பேகைத் தவிர எந்த ஒரு செலவும் இல்லை. இருவரும் சேர்ந்தே பள்ளிக்கு முதல் நாள் ஒன்றாய் வந்தனர்.
ஒருவித எதிர்பார்ப்போடுதான் பள்ளிக்கு வந்தனர். தங்கள் ஊரில் படித்த பள்ளிக்கூடத்தை விட இது கொஞ்சம் பெரியதாகவே இருந்தது. அதே போல் இதில் அமுதனுக்குப் பிடித்த விஷயமாக கராத்தே கற்றுக்கொள்ளும் ஒரு வழியும் இருந்தது.
மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் இந்தப் பள்ளியும் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதே தனிச்சிறப்பு. அதனால், தான் கராத்தே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இங்கு தனக்காகவே அமைந்ததை நினைத்து சந்தோஷப்பட்டான்.
முதல் நாள் அறிமுகத்தோடு அனைவருக்கும் இனிதே முடிந்தது. நிறைய பேர் தன்னுடைய மதிப்பெண்ணை வைத்தே தன்னை எடை போட்டதை தமிழினி உணர்ந்தாள். அதற்க்காகவே சிலர் பேச நினைத்ததையும் தெரிந்து கொண்டாள்.
ஆனால், அவள் எதிர்பார்ப்பதோ, தன் குணத்தைப் பார்த்து தன்னிடம் உண்மையாகப் பழக நினைப்பவர்களைத்தான். இனிமேல் தான் போகப் போகத் தெரியும் என்று விட்டுவிட்டாள்.
அமுதனும், அதே போல் தான். தமிழினி கூட இல்லாமல் வகுப்பறை கூட ஏதோ போல் தோன்றியது. சில மாணவர்கள் அவனிடம் நன்றாகவே பேசினர். அதிலும் அவன் அருகில் அமர்ந்திருந்த பாண்டிராஜன் ஓரளவு நன்றாகவே பேசினான்.
“வணக்கம். நீங்க நல்ல மார்க் எடுத்துட்டு ஏன் இந்த குரூப் எடுத்தீங்க.? இன்னும் வேற நல்ல குரூப்பே கிடைச்சிருக்குமே.?” என்றான்.
“இல்ல, நான் வக்கீல்க்கு படிக்கணும்னு ஆசைப்படறேன். அதனால தான் இந்த குரூப் எடுத்தேன்.” என்று அவனுக்கு விளக்கம் கொடுத்தான் அமுதன்.
“ஓஓ.. நீங்க அவ்வளவு திறமையான பேச்சாளரோ.? அந்த மாதிரி படிப்பெல்லாம் ரொம்ப அரிதா தானே படிப்பாங்க. கேஸெல்லாம் கிடைக்கிறது ரொம்ப அசாதாரணமாச்சே.” என்றான்.
“படிப்பு படிக்கறது மட்டும் நம்ம கடமை இல்ல. அதுக்கப்பறம் நிறைய முயற்சியும், பயிற்சியும் பண்ணனும். அதுக்கான பலன் அதுலதான் தெரியும். எதுலயும் எடுத்ததுமே லாபம் வரணும்னு பார்க்கக் கூடாது.” என்று அமுதன் சொல்ல,
ஆஹா.. இவன் என்ன இத்தனை அருமையாய் பேசுகிறான். தத்துவங்களைப் பொழிகிறான். தான் தெரியாமல் சொல்லிவிட்டோமோ என்று யோசித்துக்கொண்டிருந்தான் அவன்.
“நான் ஏதோ தெரியாம பேசிட்டேன். மன்னிச்சிடுங்க. இனிமேல் அப்படி சொல்ல மாட்டேன்.” என்றான் பாண்டி.
“அய்யோ.. நீங்க வேற அப்படியெல்லாம் இல்ல. எனக்கு சொல்லணும்னு தோணுச்சு. அதனால தான் சொன்னேன்.” என்றான் அமுதன்.
அதோடு அவர்களின் இனிய நட்பு ஆரம்பமானது. பள்ளிக்கூடம் முடிந்து வெளியே வந்ததும் அமுதனும், தமிழினியும் சேர்ந்து கொண்டனர். அதுவரை அமுதனோடு வந்த பாண்டி, தமிழினியை யாரென்று கேள்விக்குறியோடு பார்த்தான்.
அதே போல், தமிழினியோடு வந்த சில மாணவிகளும் அதே போல் தான் அமுதனையும் பார்த்தனர்.
“அமுதன்.. இது யாரு.? உங்க ஆளா.?” என்று அவனைப் பிடித்து குசுகுசுவென காதில் ஓத, அவனோ முறைத்தபடி,
“இது என்னோட ஃப்ரெண்ட் தமிழினி. தமிழு.. இந்தப் பையன் பேரு பாண்டிராஜன். என்னோட கிளாஸ் தான். கொஞ்சம் நல்லாவே பேசறாங்க. உன்னை என்னோட ஆளான்னு கேக்கறாங்க.” என்று அவளிடம் சொல்ல,
“ஹூம்ம். எல்லாருக்கும் நம்மைப் பார்த்தா அப்படித்தான் கேட்கத் தோணுதுன்னு நினைக்கிறேன். இதே கேள்விய காலைலயே இதோ, என்னோட கிளாஸ் பொண்ணுக கேட்டுட்டாங்க.” என்றாள் தமிழினியும்.
அவர்கள் இருவரும் அப்படிச் சொல்ல, அவர்களுக்கோ ஒரு மாதிரி ஆனது. இருவரும் சேர்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, அனைவரும் அப்படித்தான் யோசித்தனர். ஆனால், அப்படி இல்லை என்று பாண்டியிடமும், தமிழினியின் வகுப்பு மாணவிகளிடமும் தங்களது சிறு வயது முதலான நட்பை விவரித்தனர் இருவரும்.
“அப்பா, நிஜமாலுமே உங்க ரெண்டு பேரோட நட்பு ரொம்ப ஆச்சர்யப்பட வைக்குது. என்னை மன்னிச்சிடுங்க. அது தெரியாம நான் பாட்டுக்கு அப்படிக் கேட்டுட்டேன்.” என்றான் பாண்டி.
“ஏய்.. சாரி தமிழ். நாங்களும் அப்படித்தான் நினைச்சு உன்கிட்ட கேட்டோம். இப்போ தான் தெரியுது நீங்க எவ்வளவு நல்ல நண்பர்கள்ன்னு.” என்று அந்த மாணவிகளில் ஒருத்தியும் சொன்னாள்.
“பரவால்ல.. இருக்கட்டும். இதுமாதிரி நிறைய பேர் எங்க ஊருலயே பேசிருக்காங்க. இதெல்லாம் ரொம்ப சாதாரணம். நாங்க இந்த மாதிரி பேசற பேச்சையெல்லாம் காதுலயே போட்டுக்கறது இல்ல.” என்றாள் தமிழினி.
“ஆமாங்க.. நாங்க ரெண்டு பேரும் அதையெல்லாம் நினைச்சா இவ்ளோ வருஷம் நட்பா இருந்திருக்க முடியாது. அதை புரிஞ்சுக்கறவங்க புரிஞ்சுக்குவாங்க. இல்லன்னா, அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்னு விட்டுடுவோம். அவ்ளோதான்.” என்று எளிமையாகச் சொன்னான் அமுதன்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள், அதன் பிறகு ஒவ்வொருவராய் விடை பெற்றனர். அதன் பிறகு தான் அமுதன், தமிழினியிடம் சொன்னான்.
“தமிழு நீ முன்னாடி ஸ்கூல் கேட் கிட்ட வெயிட் பண்ணு. நான் இங்க கராத்தே கத்துக்குடுக்குற மாஸ்டரப் போய் பார்த்துட்டு வந்துடறேன்.” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
சரி என்று சொன்னவள், அவன் சொன்னதைப் போல் பள்ளியின் கேட்டிற்க்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட முக்கால்வாசி மாணவர்கள் அனைவரும் போய்விட்டனர்.
கேட்டிற்க்கு அருகில் நிற்கும் வாட்ச்மேனோ டீ குடிக்கச் சென்று விட்டார். தமிழினி சுற்றும், முற்றும் வேடிக்கை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். அப்போது, அவளை அறியாமல் அவள் கண்கள் அதைப் பார்த்து விட்டன.
அவளுக்கு நன்கு பரிட்சயமான முகம் ஒன்று எதிர்த் திசையில் தன்னைப் பார்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தாள். ஏனோ தெரியவில்லை, அவளுக்கு உள்ளுக்குள் சிறிது நடுக்கம் உண்டானது. அங்கே, குமரேசன் அவளை அசைவின்றி பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான்.
(தொடரும்...)
வார்த்தைகளின் எண்ணிக்கை : 1373
உங்களின் விமர்சனங்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் லிங்கில் தரவும்...
தமிழுக்கு அமுதென்று பேர் - Comments
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...