Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

அத்தியாயம் 40​


கயலும் ரேச்சலும் காவல் நிலையம் அடைந்த போது மணி பத்தரையை நெருங்கி இருந்தது, அங்கு இரண்டு காவலர்கள் மட்டுமே இருந்தனர். அதில் ஒருத்தர் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி கொண்டிருந்தார். கயல் சென்று விழித்து கொண்டிருந்த காவலரிடம் விஷயத்தை கூற, அவர் இந்நேரத்திற்கு மருத்துவமனை எல்லாம் சென்று விசாரிக்க முடியாதும்மா. இப்போது இங்கு உயர் அதிகாரியும் இல்லை. நீ புகார் கொடுத்து விட்டு போனால் நாளை காலையில் விசாரிக்கிறோம் என்று கூறவே கயலுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என்ன சார்? ஒரு குழந்தையை கடத்திக் கொண்டு போயிருக்கிறார்கள் என்று சொல்கிறோம். நீங்கள் என்னவென்றால் நாளை விசாரிப்பதாக சொல்கிறீர்கள். அதுவரைக்கும் அந்த குழந்தைக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று கூற, என்னால் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாதும்மா. நாளைக்கு தான் உயர் அதிகாரி வருவார், நீ நாளை வந்து பார். இப்பொது இங்கிருந்து கிளம்புங்கள் என்று கூறி அவர் தன் வேலையை பார்க்க தொடங்கினார். ரேச்சலும் டாக்டர் நாம் நாளை வரலாம். இனிமேலே இங்கு இருப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கூறவும் கயலும் சரி ரேச்சல் நீயும் குழந்தையும் இன்று இரவு என் வீட்டில் தங்கி விடுங்கள். நாளை காலை நாம் காவல் நிலையம் செல்லலாம் என்று கூற, ரேச்சலும் சம்மதிக்கவே அனைவரும் கயலின் வீட்டிற்கு சென்றனர்.


ஒரு குழந்தையுடன் காரை ஓட்டிய அந்த இருவரில் ஒருவன் "என்னடா இன்னொரு குழந்தையை கண்டு பிடிக்கவே முடியவில்லை. அந்த நர்ஸ் எங்கு கொண்டு போனாள் என்றே தெரியவில்லை. இருட்டில் அவள் முகம் கூட சரியாக பார்க்கவில்லை. அந்த தொலைந்து போன குழந்தை எங்கேன்னு கேட்டா என்னடா பதில் சொல்லறது? நடந்ததை சொல்லவேண்டியது தான். நாம் என்ன அந்த நர்ஸ் குழந்தையை தூக்கி கொண்டு போகும் என்று எதிர்பார்த்தோமா? எல்லாம் ஐயா பாத்துப்பார் என அவன் தைரியம் கூறினான். கார் ஓ.ம்.ஆர் சாலையில் சென்று அங்கிருக்கும் ஒரு பெரிய பங்களா முன் நின்றது. கார் சத்தத்தை கேட்டு உள்ளிருந்து ஒருவன் வர, அவன் இவர்களிடம் என்னடா ஆச்சு? ஏன் இவ்வளவு நேரம்? ஐயா உங்களுக்காக தான் காத்திட்டு இருக்கார் என்று சொல்ல , மூவரும் உள்ளே விரைந்தனர். அங்கு அந்த மருத்துவரின் பெண்ணை வாயில் துணி அடைத்து ஒரு புறமாக கட்டி போட்டிருந்தனர். அந்த சிறுமிக்கு சுமார் பத்து வயது இருக்கும். பயத்தில் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது. உடல் நடு நடுங்க மிகவும் பயந்து காணப்பட்டாள். அங்கு ஒரு சோபாவில் ஒய்யாரமாக உமர் அலி உட்கார்ந்திருந்தார். அவருடைய இரு பக்கமும் இருவர் நின்று இருந்தனர். இவர்கள் உள்ளே நுழைந்ததும் கையில் இருக்கும் ஒரு குழந்தையை பார்த்து, என்னடா ஒரு குழந்தை மட்டும் இருக்கு, இன்னொரு குழந்தை எங்கே என்று கேட்க, அது வந்து ஐயா என்று முதலில் இழுத்து பின் நடந்ததை கூறினான், அதைக் கேட்ட உமர் அலிக்கு கோபம் பொங்கியது. ஏன்டா? ஒருத்தனும் ஒரு வேலையை கொடுத்தா ஒழுங்காக செய்யமாட்டீங்களாடா! தடி பசங்களா! உங்களை எல்லாம் வச்சிக்கிட்டு நான் மேய்ப்பதற்கு பதிலா ஆடு மாடுகளை மேச்சா கூட அதுகள் எனக்கு பலன் கொடுத்திருக்கும். முட்டாள் ! அந்த நர்ஸ் போயி காவல் அதிகாரியிடம் சொன்னா நான் மறுபடியும் கம்பி என்ன வேண்டியதுதான் என்று கூறி அந்த மருத்துவமனைக்கு போன் செய்து அங்கிருப்பவரிடம் சிலதை செய்யுமாறு கூறி போனை வைத்தார். அந்த இரு அடியாட்களும் தலை குனித்துக் கொண்டு மௌனமாக நின்று இருந்தனர். இந்த குழந்தையை சாகடிக்க வேண்டாம். அப்புறம் எங்க குடும்பத்திற்கு அந்த பழி வந்து விடும். ஏதாவது அனாதை ஆசிரமத்தில் யாரும் பார்க்காத போது இந்த குழந்தையை போட்டிட்டு வந்துருங்க. இதையாவது ஒழுங்காக செய்வீங்களா? என்று கேட்க, அவர்கள் இருவரும் சரி ஐயா என்று தலையாடினார்கள். இந்த பொண்ணையும் அவர்கள் வீட்டில் விட்டுருங்க. இந்த பொண்ணும் அவங்க அம்மாவும் நாளைக்கே ஊரு விட்டு கிளம்பிடனும்னு அந்த பொண்ணுகிட்ட சொல்லி விடுங்க என்று கட்டளை பிறப்பித்தார்.எனக்கு நாளைக்கு காலையிலேயே ஊருக்கு திரும்பணும். அதுக்குள்ளே இந்த வேலையை முடிச்சிட்டு வாங்க என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார். துர்கா மயக்கம் தெளிந்தவுடன் தன் அருகில் பார்த்தாள். குழந்தையை காணவில்லை. எங்கே என் குழந்தைகள்? ஒரு வேளை சுத்தப்படுத்த எடுத்துக் கொண்டு போயிருப்பார்களோ? என்று எண்ணியவளாக கண்களை சுழற்றினாள். அவள் அருகில் பார்வதி நின்று கொண்டிருந்தாள். அவளிடம் துர்கா, "எங்கே என் குழந்தைகள்?" என மெல்லிய குரலில் கேட்க, பார்வதிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. கடவுளே! இந்த பெண்ணிற்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? நான் பதில் சொன்னால் இவளால் தாங்கி கொள்ள முடியுமா?என மனதிற்குள் கலங்கியவளாக, துர்கா இப்ப எப்படி இருக்கும்மா? என்று வினவ துர்கா பரவாயில்லை அண்ணி என்று சோர்வாக சொன்னாள். நீ ரொம்ப களைப்பா இருக்கே! அப்படியே கண் மூடி கொஞ்ச நேரம் தூங்கு என சொல்ல, துர்கா மீண்டும் என் குழந்தைகள் எங்கே என்று கேட்டாள். பார்வதியால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. அவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் கொட்டியது. அதைக் பார்த்த துர்கா என்ன அண்ணி??என்ன ஆச்சு? என் குழந்தைகள் எங்கே ? என்று மீண்டும் பதறியவளாக அண்ணியின் முகத்தை பார்க்க, அப்போது அங்கே செவிலியர் வந்தார். என்ன துர்கா மயக்கம் தெளிந்திடுச்சா? என்று இப்போ எப்படி இருக்கு? என்று நாடியை தொட்டு பார்த்துக் கேட்க, கண்களில் பயம் தெரிய துர்கா அவளிடம் என் குழந்தைகளை குளிப்பாட்ட எடுத்து கொண்டு போய் இருக்கீங்களா? என்று பாவமாய் கேட்டாள். அந்த செவிலியருக்கு தன்னுடைய பணியில் இது போல் அனுபவம் இருந்ததால் அவள் துர்காவிடம் உடனே பதில் கூறாமல். "நீ ஒன்றும் கவலைப்படாதே! எல்லாம் சரியாகிவிடும் என்று கூற, துர்காவிற்கு ஒன்றுமே புரியாமல், நான் ஒன்று கேட்டால் நீங்க வேற ஒன்னு சொல்றீங்களே! என்று அப்பாவியாய் சொல்ல, அந்த செவிலியர் உன் குழந்தைகள் பிறந்தவுடனே இறந்து போய்டுச்சும்மா! என்று சொன்னது தான் தாமதம் துர்கா இல்லை நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்! என் குழந்தைகளை என்னிடம் தந்து விடுங்கள் என்று கத்திக் கொண்டே மூர்ச்சையானாள்.

சுஹேல் சென்னை விமான நிலையம் வந்து இறங்கியதும் அவனுக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. இன்னும் சில மணி நேரத்தில் துர்காவை பார்க்க போகிறோம் என்ற எண்ணமே அவனுக்குள் சந்தோஷத்தை ஏற்படுத்தியது . செக்கிங் முடிந்து தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து டாக்ஸி ஒன்றை பிடித்து தன்னுடைய மாமா வீட்டிற்கு வந்தான். கதவை தட்டியதும் அனீஸ் தான் வந்து கதவை திறந்தாள். ஏனோ அவள் முகத்தில் புன்னகை சிறிதும் இல்லை. அவளை பார்த்து சுஹேல். "ஏ வாலு, இப்போதான் தூங்கி எழுந்தியா?" நான் உன் தூக்கத்தை கலைச்சிட்டேனோ? என்று அவன் கிண்டல் அடிக்க, அதெல்லாம் ஒன்னும் இல்லை சுஹேல், உள்ளே வா! குளிச்சிட்டு வா! நான் டிபன் ரெடி பன்றேன் என்று மெல்லிய குரலில் கூற, என்ன அனீஸ்! உனக்கு திருமணம் முடிவான பிறகு ரொம்ப அமைதி ஆயிட்டியா? நான் பார்த்த அனீஸ் வேறு, இப்போ பார்க்கிற அனீஸ் வேற மாதிரி இருக்கே! என்று கூறி கலகலவென சிரித்தான். அனீஸ் எந்த பதிலும் கூறாமல் மௌனமாக தன் வேலையை பார்க்கலானாள். சுஹேல் மாமி எங்கே போய் இருக்காங்க? என்று வினவ, அதற்கு மேல் அனீஸால் பதில் பேசாமல் இருக்க முடியவில்லை. துர்காவிற்கு பிரசவம் ஆயிடுச்சி, அதனாலே உம்மா அங்கே தான் இருக்காங்க என்று கூற, சுஹேல் முகத்தில் பளிச்சென மின்னல் தோன்றியது. என்ன குழந்தை பிறந்திடுச்சா! இதை தானே முதலில் சொல்லணும். லூசு! என்ன குழந்தைகள் அனீஸ்? துர்கா எப்படி இருக்கா? என கேள்வி மேல் கேள்வி கேட்க, அனீஸால் அழுகையை அடக்க முடியவில்லை. அவள் அவனை பார்த்து கண்ணீர் சிந்தியபடி குழந்தைகள் இறந்து போய்விட்டனவாம் சுஹேல் என்று கூறி அழுதாள்.அவளால் தன் தோழியின் துன்பத்தை தாங்கி கொள்ள முடியவில்லை. சுஹேலால் நம்பவே முடியவில்லை. என்னது குழந்தைகள் இறந்து விட்டனவா! போன மாதம் துர்காவை பரிசோதித்த மருத்துவர் குழந்தைகள் நன்றாக இருக்கிறது என்று சொன்னதாக துர்கா கூறினாளே! என்னாச்சு? என்று இருக்கமான முகத்துடன் வினவ, தெரியல சுஹேல். குழந்தைகள் பிறந்தவுடன் அழும் சத்தம் கூட கேட்டது என்று சொன்னார்கள். பிறகு எதனால் இறந்தது என்று தெரியவில்லை என்று அவள் சொல்லிக்கொண்டே இருக்கும்போதே என்ன மருத்துவமனை என்று பேரும் முகவரியும் கேட்டுக் கொண்டே கிளம்ப, அனீஸ் இப்ப தானே வந்தே, பிரெஷ் பண்ணிட்டு சாப்பிட்டு போ என்று கூற, எனக்கு பசி இல்லை அனீஸ், நான் உடனே துர்காவை பார்க்கணும், அவ பாவம் மனசு உடைஞ்சு போயிருப்பா என்று கூறிக்கொண்டே அவசரமாக கிளம்பினான். இவனுக்குதான் துர்கா மீது எவ்வளவு பாசம் என்று எண்ணிக்கொண்டே அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் அனீஸ்.
 
அத்தியாயம் 41​


மறுநாள் கயலும் ரேச்சலும் குழந்தையை எடுத்துக் கொண்டு மீண்டும் காவல் நிலையம் சென்றனர். நல்ல வேலையாக காலையிலேயே உயரதிகாரி அங்கே இருந்தார். அவரிடம் கயலும் ரேச்சலும் நடந்ததை கூறி புகார் கொடுக்க, ஏம்மா நீங்க ஏன் நேற்று இரவு வந்து புகார் கொடுக்கல? என்று அவர் கேட்டது தான் தாமதம் உடனே கயல் அங்கு நேற்று இருந்த காவலரை பார்த்துக் கொண்டே நேற்றே நாங்க வந்தோம் சார், உங்க ஆட்கள் தான் நீங்கள் இல்லை என்று இன்று வரச் சொன்னார்கள் என்று கூறியதும் அந்த அதிகாரிக்கு கோபம் வர, அவர் அந்த காவலாளியை அழைத்து ஏன்யா நேற்றே இவர்கள் வந்திருக்கிறார்கள், நீ ஏன்யா என்கிட்ட சொல்லல? எந்த நடவடிக்கையும் எடுக்கல, என்று கேட்க, ஐயா, நீங்க அப்பதான் வீட்டிற்கு கிளம்பினீங்க, மணியும் பத்தரைக்கு மேல் ஆகிடிச்சு! அந்த நேரத்தில் மருத்துவமனைக்கு எப்படி போய் விசாரிக்கிறது என்று தான் காலையில் வரச் சொன்னேன் என்று கூற, அந்த உயர் அதிகாரி அவர்களிடம் நேத்து ஒரு பெரிய கேஸுக்கு நிறைய பேர் போக வேண்டியதா போச்சு. அதான் காவல் நிலையத்தில் ஆளில்லை. தவிர அந்த நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றால் அங்கு இருக்கும் நோயாளிகளுக்கும் தொந்தரவாக இருக்கும். அதனாலே தான் அப்படி சொல்லியிருப்பார். சரி இப்ப வாங்க நாம் போலாம் என்று கூற அனைவரும் அந்த மருத்துவமனையை நோக்கி சென்றனர். கயலும் மற்ற அனைவரும் அந்த மருத்துவமனையை அடைந்து வரவேற்பாளரிடம் நேற்று உங்கள் மருத்துவமனையில் குழந்தைகள் காணாமல் போயிருக்கா? என்று கேட்க அந்த பெண் அப்படியெல்லாம் இல்லை சார் என்று கூற, உங்க ரெஜிஸ்டரை காட்டுங்க என்று அந்த உயர் அதிகாரி கேட்க அவள் அந்த ரெஜிஸ்டரை அவரிடம் காண்பித்தாள் அதில் மூன்று பிரசவம் ஆகியதற்கான பதிவுகள் இருந்தன. உங்க தலைமை மருத்துவரை பார்க்கணும் என்று சொல்ல, அந்த பெண் நேரா போய் இடது புறம் திரும்புங்கள், அங்கே இருக்கு அவருடைய அறை என்று கை காட்ட, அனைவரும் அங்கு விரைந்தனர். அங்கே சென்றதும் வெற்றிமாறன் எம்.பி.பி.எஸ்.எம்.டி என்ற போர்டு மாட்டிய அறையில் அனைவரும் செல்ல, அங்கே எழுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று, டாக்டர் உங்கள் மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. அதை யார் செய்தது? என்ன விவரம் என்று கேட்க வந்தோம் என்று அந்த காவல் அதிகாரி கூறிக் கொண்டு இருக்கும்போதே ரேச்சல் முன்வந்து டாக்டர் நேற்று கௌசல்யா டாக்டர் பார்த்த பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தன. அதை அவர்கள் கடத்த முற்பட்டபோது ஒன்றை நான் தூக்கி கொண்டு வந்துவிட்டேன். இன்னொரு குழந்தையை காரில் கடத்தி கொண்டு போய் விட்ட்டார்கள். நான்சென்ஸ்! என்ன உளறுகிறாய்? குழந்தை கடத்தலா? இன்ஸ்பெக்டர், இந்த மருத்துவமனை ஆரம்பித்து நாற்பது வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரை எந்த கெட்ட பெயரும் எங்கள் மருத்துவமனை மீது இல்லை. இந்த ரேச்சல் பெண் இங்கு சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது. எங்கள் மருத்துவமனைக்கு கெட்ட பெயர் வரவேண்டும் என்பதற்காக யாருடைய தூண்டுதலினால் இவள் இப்படி பேசுகிறாள் என்று தெரியவில்லை என்று டாக்டர் வெற்றிமாறன் கோபமாக கூறவும், அந்த காவல் உயர் அதிகாரி, அவள் கையில் ஆதாரமாக உங்கள் மருத்துவமனையில் இருந்து பிறந்த குழந்தை இருக்கிறது என்று கூற, அந்த குழந்தை இங்கு தான் பிறந்தது என்பதற்கு என்ன சான்று இருக்கிறது. அவள் வேறு எங்கிருந்தாவது எடுத்துக் கொண்டு வந்திருக்கலாமே! அதை நீங்கள் அந்த பெண்ணிடம் நன்றாக விசாரியுங்கள். அதை விடுத்து இங்கு வந்து விசாரிக்கிறீர்கள். எங்கள் மருத்துவமனையில் பிரசவமான பெண்களிடம் இருந்து குழந்தையை காணோம் என்று புகார் வந்திருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்? அதற்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்று டாக்டர் வெற்றி மாறன் கூற, உடனே அந்த காவல் அதிகாரி நேற்று உங்கள் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்கள் பெற்றோர் பற்றிய விவரங்கள் வேண்டும் என்று கூற, வெற்றிமாறன் உடனே போன் செய்து அந்த விவரங்களை கொண்டு வருமாறு கட்டளையிட, பத்து
நிமிடத்தில் விவரங்கள் அனைத்தும் அவர் மேஜை மேல் இருந்தது. அதில் சாமர்த்தியமாக துர்காவின் பெயர் மற்றும் விவரங்கள் மறைக்கப்பட்டிருந்தது. அந்த காவல் அதிகாரி அதை பார்த்து இந்த லிஸ்டில் உள்ளவர்களை நான் விசாரிக்க வேண்டும். மற்றும் இங்கு மகப்பேறு பார்க்கும் மருத்துவர்களையும் நான் விசாரிக்க வேண்டும் என்று கூற, அனைவரும் வரவழைக்கப்பட்டனர். அந்த உயர் காவல் அதிகாரி டாக்டர் கௌசல்யா எங்கே என்று கேட்க, அதற்கு ஒருவர் அவர் நேற்றே இரண்டு மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று விட்டார் என்று கூற அந்த கௌசல்யா டாக்டரின் முகவரியை கொடுங்கள், அவர்களுடைய சொந்த ஊர் எது என்று கேட்க, தெரியவில்லை என்ற பதிலே அனைவரிடத்திலும் இருந்து வந்தது. அந்த காவல் அதிகாரி கௌசல்யாவின் முகவரியை வாங்கி கொண்டார். அனைத்து விசாரணையும் முடிந்து எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் அனைவரும் வெளியே வந்தனர். அந்த உயர் காவல் அதிகாரி கயலை நோக்கி, பாரும்மா நீ கொடுத்த புகாரின் பேரில் தான் இங்கு விசாரிக்க வந்தேன். வந்த இடத்தில நமக்கு எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறுகிறார்கள். நான் அந்த மருத்துவர் கௌசல்யா வீட்டிற்கு ஆள் அனுப்பி விசாரிக்க சொல்கிறேன். நீங்கள் இந்த குழந்தையை எங்கள் பெண் காவலரிடம் கொடுத்து விடுங்கள். அவர்கள் எங்கள் பாதுகாப்பில் இருக்கும் ஆஸ்ரமத்தில் சேர்த்து விடுவார் என்று கூற, கயல், சார் உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நீங்கள் இந்த குழந்தையின் பெற்றோரை கண்டு பிடிக்கும் வரை நானே இந்த குழந்தையை வளர்கிறேன். நான் வேண்டுமென்றால் உங்களுக்கு இக்குழந்தையின் உரிமையாளர் வந்தால் அவர்களிடம் குழந்தையை ஒப்படைப்பேன் என்று எழுதி கொடுத்துவிடுகிறேன் என்று கூற அந்த காவல் அதிகாரி கயலை ஒரு முறை பார்த்து விட்டு சரி என்று தலையாட்டினார். கயலுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. குழந்தை இல்லையே என்ற தன் குறையை தீர்க்க வந்த பொக்கிஷம் இந்த குழந்தை என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள்.

சுஹேல் மருத்துவமனை வந்ததும் நேரே துர்காவிடம் தான் சென்றான். அவள் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு அங்கிருக்கும் சுவரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள், சுஹேல் அவளருகில் சென்று துர்கா என்று அழைக்க, அவளிடம் எந்த வித அசைவும் இல்லை. அவளை உலுக்கி துர்கா, துர்கா என்றதும் தான் அவள் இவனை பார்த்தாள். பதில் எதுவும் பேசவில்லை. கண்களில் மட்டும் கண்ணீர் வந்து கொண்டு இருந்தது. துர்கா உன்னை பார்த்தால் எனக்கு பயமாக உள்ளது. இப்படி எதுவுமே பேசாமல் இருந்தால் எப்படிம்மா? நன்றாக கதறி அழுது விடு துர்கா, அப்போதுதான் உன் மனபாரம் கொஞ்சமாவது குறையும் என்று கூற, துர்கா அதற்கும் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்து கண்ணீர் வடித்து கொண்டிருந்தாள். அவன் அவளை கட்டிப் பிடித்து உனக்கு என்னதான் ஆச்சு துர்கா! என்னிடத்தில் ஏதாவது பேசு துர்கா! நம் குழந்தைகளை விட நீதான் எனக்கு முக்கியம் துர்கா என்று அவன் கூறியதை கூட அவளால் உணர முடியவில்லை. அப்போது அங்கு ஒரு மருத்துவர் வர சுஹேல் அவரிடத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு குழந்தைகளை பற்றி விசாரித்தான், அந்த மருத்துவர் அவனிடம் துர்காவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் தற்போது தன் மகளுக்கு உடம்பு சரியில்லை என்று அவர்கள் ஊருக்கு இரண்டு மாதம் விடுப்பு போட்டு விட்டு சென்றதாக கூறினார். சுஹேல் அவரிடம் மருத்துவ அறிக்கையை தர முடியுமா என்று கேட்க, அவர் அவனிடத்தில் ஒரு கோப்பு ஒன்றை கொடுத்தார். அதை அவன் திறந்து படித்த போது அதில் இரண்டு குழந்தைகளும் பிரசவத்தில் வந்த சிக்கலின் காரணமாக இறந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர். அவனின் உள்மனது இதில் ஏதோ பொய் இருக்கிறது என்று சொல்லி கொண்டிருந்தது.

காரில் கடத்திய அந்த இன்னொரு குழந்தையை உமரின் அடியாட்கள் மலர்வனம் என்ற ஆஸ்ரமத்தில் போட்டு விட்டனர். அந்த ஆஸ்ரமத்தை நடத்துபவர் விசாலாக்ஷி அம்மையார். அவருடைய தந்தை அந்த கால சுதந்திர போராட்ட தியாகி. அவர் நிறைய போராட்டத்தில் ஈடுபட்டு தன் வாழ்நாளில் பாதியை சிறையிலேயே கழித்தவர். விசாலாக்ஷி அம்மையார் சிறு வயதிலேயே தாயும் இறந்து விட்டதால் தன் தந்தையை பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக திருமணமே செய்துக் கொள்ளாமல் இருந்து விட்டார். தான் வாழந்த தன்னுனடய பரம்பரை வீட்டையும் மலர்வனம் ஆஸ்ரமாக மாற்றி அதில் தற்போது பதினைந்து குழந்தைகளை வளர்த்து வருகிறார், அன்பே உருவான அந்த அம்மையாருக்கு அங்கு இருக்கும் வசதி படைத்தவர்கள் அவருக்கு இந்த ஆஸ்ரமத்தை நடத்த உதவி செய்து வருகிறார்கள். அன்று காலையில் அவர் கதவை திறந்ததும் பூக்குவியல் போன்ற அந்த குழந்தையை பார்த்ததும் அவர் கண்களில் கண்ணீர் பொங்கியது, பிறந்த இரண்டு மூன்று நாட்கள் ஆகிய இந்த சின்ன தளிரை எப்படி இங்கு விட மனது வந்தது என்று நினைத்துக் கொண்டு அதனை வாரி தன்னோடு அனைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
 
அத்தியாயம் 42​


ஒரு மாதம் கடந்து விட்டது. துர்காவின் ஒரு குழந்தை கயலிடமும் மற்றொன்று மலர்வனம் ஆஸ்ரமத்திலும் வளர்ந்துக்கொண்டிருந்தது. கயல் அந்த காவலர் அதிகாரிக்கு போன் செய்து அவளிடம் இருக்கும் குழந்தையின் பெற்றோர் பற்றிய விவரம் கேட்க, அவர் நான் அந்த மருத்துவர் கௌசல்யா வீட்டிற்கு ஆள் அனுப்பி விசாரித்து விட்டேன்ம்மா, அவர்கள் இரண்டு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு சென்றது போல் தெரியவில்லை. வீட்டையே காலி செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அவர்களும் அவர் பெண்ணும் எங்கே சென்றார்கள் என்பதே யாருக்கும் தெரியவில்லை. ஆறு மாதம் முன்பு தான் அவருடைய கணவர் விபத்தில் இறந்து விட்டதாக கூறுகிறார்கள். நான் அந்த மருத்துவரின் புகைப்படத்தை மருத்துவமனையில் வேறு ஆள் மூலம் வாங்கி விட்டேன். அந்த புகைப்படத்தை எல்லா காவல் நிலையத்திற்கும் அனுப்பி தேட சொல்லி இருக்கிறேன் கண்டிப்பாக விரைவில் கண்டு பிடித்து விடலாம் என்று கூறி போனை வைத்தார். கயல் மனதிற்குள் இந்த குழந்தையின் பெற்றோர் யார் என்று தெரியாமல் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். இந்த அழகு தேவதையை நான் எப்படி திரும்ப கொடுப்பேன்! இவள் என் வாழ்வில் வந்த பிறகு தானே என் வாழ்விற்கே அர்த்தம் கிடைத்திருக்கிறது என்று நினைக்க, மற்றொரு மனமோ, கயல், வேறு ஒருவருக்கு சொந்தமானதை நீ அனுபவிப்பது பெரும் தவறு தானே! பாவம் அக்குழந்தையின் பெற்றோர் எப்படி தவித்துக் கொண்டு இருக்கிறார்களோ, என்ன வேதனை அனுபவித்து கொண்டிருக்கிறார்களோ என்று அறிவுரைத்தது.

இந்த ஒரு மாதத்தில் துர்கா கொஞ்சம் தேறியிருந்தாள். ஆனால் முன்பு போல் அவளால் சுறுசுறுப்பாய் இருக்க முடியவில்லை. அவளிடத்தில் சிரிப்பே காணாமல் போய் விட்டது. பெயருக்கு சாப்பிடுகிறோம் என்று சாப்பிட்டு உடல் மெலிந்து, முகம் கறுத்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தாள். அடிக்கடி திடீரென்று தூக்கத்தில் எழுந்து உட்கார்ந்து கொண்டு என் குழந்தைகள் என்னை அழைக்கிறது என்று ஓ வென்று அழுவாள். அப்போதெல்லாம் சுஹேல் தான் அவளை அணைத்து அமைதிப்படுத்துவான். அவனுக்கு துர்காவை காண காண மனம் வேதனையில் துடித்தது. தென்றல் காற்று போல் சுகமாக போய் கொண்டிருந்த எங்கள் வாழ்க்கை சுனாமி வந்தது போல் இப்படிஆகிவிட்டதே என்று மனம் வெதும்பினான். இருந்தாலும் துர்காவை இத்துன்பத்தில் இருந்து வெளிக் கொணர வேண்டும் என்று தன் துக்கத்தை மறைத்து அவளுக்கு ஆறுதல் கூறி தேற்றினான்.

அன்று துர்காவை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றான். துர்காவை பரிசோதித்த அந்த மருத்துவர் துர்காவை வெளியில் அமரச் சொல்லிவிட்டு சுஹேலிடம் பேச தொடங்கினார். கதவு சரியாக மூடாததால் உள்ளே பேசுவதை துர்காவும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். அந்த மருத்துவர் துர்காவிற்கு உடலும் மனமும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். மேலும் அவளுடைய கர்ப்பப்பை பலவீனமாக இருப்பதால் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது குழந்தை பெற்று கொள்ளாமல் இருப்பது நல்லது என்றும் அதன் பிறகும் அவளை பரிசோதித்துத்தான் சொல்ல முடியும் என்று கூறினார். அதனை கேட்ட சுஹேலுக்கு உலகமே இருண்டது போன்ற பிரம்மை ஏற்பட்டது. அல்லாவே! நாங்கள் யாருக்கும் எந்த வித கெடுதலும் மனதால் கூட நினைத்தது இல்லையே! எங்களுக்கு ஏன் இத்தகைய சோதனையை கொடுத்தாய் என்று மனதிற்குள் மருகி கொண்டான். வெளியில் அமர்ந்து இதை கேட்டு கொண்டிருந்த துர்காவிற்கோ தலையில் இடி இறங்கியதை போன்ற உணர்வு ஏற்பட்டது. கடவுளே! என்னால் இந்த குடும்பத்திற்கு வாரிசு தர முடியாதா? என்ன கொடுமை! என் மீது அளவு கடந்து அன்பு வைத்திருக்கும் என் கணவருக்கு நான் தரும் தண்டனையா இது ! என்று இடிந்து போனாள். கூடாது! இதை இப்படியே விட்டு விட கூடாது. இந்த குடும்பத்திற்கு கண்டிப்பாக வாரிசு வேண்டும். என்னால் இக்குடும்பத்திற்கு வாரிசு இல்லாமல் போகக் கூடாது என்று நினைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தாள்.

வெளியில் வந்த சுஹேல் துர்காவிடம், டாக்டர் உன்னை நன்றாக சாப்பிட்டு ஓய்வெடுக்க சொன்னார். நீ பார்க்க ரொம்ப பலகீனமாய் இருக்கிறாய் அல்லவா! அதனால் தான் என்னை கூப்பிட்டு உன்னை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். வா! போகலாம் துர்கா என்று மனதினுள் துக்கத்தை மறைத்துக் கொண்டு வெளியில் மிக சாதரணமாக அவளை அழைத்துக் கொண்டு செல்ல, துர்காவின் மனம் வேதனையில் துடித்தது. இவன் மனிதனா! அல்லது மனித வடிவில் தெய்வமா! என்று கூட நினைத்தாள். தன்னிடம் கோபத்தை அல்லது ஒரு ஆதங்கத்தை பேச்சால் கூட காட்டாத இவனுக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று யோசித்தவளுக்கு அவளுக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. இவனை எப்படியாவது மறுமணத்திற்கு சம்மதிக்க வைக்கவேண்டும். அதன் மூலம் இந்த குடும்பத்திற்கு வாரிசு வரவேண்டும். இதை நான் செய்து முடித்தால் தான் என் மனம் கொஞ்சமாவது நிம்மதி அடையும். அவனை இன்னொரு பெண்ணுடன் காண சக்தி எனக்கில்லை என்றாலும் என் சுஹேலுக்காக, அவனின் நல் வாழ்க்கைக்காக கண்டிப்பாக இதை நான் செய்ய தான் வேண்டும். பிறகு நான் அவனை விட்டு நிரந்தரமாக விலகி விட வேண்டும். அவன் நன்றாக வாழ்ந்தாலே எனக்கு போதும். அவன் என் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பிற்கும் பாசத்திற்கும் என்னுடைய சிறு காணிக்கை தான் இது என்று மனதினுள் நினைத்துக் கொண்டே அவனுடன் சென்றாள்.

இப்போதெல்லாம் துர்கா யாரிடமும் சரியாக பேசுவதில்லை. சிட்டுக்குருவியாய் அந்த வீட்டையே வளம் வந்தவள் இப்போது தன்னுடைய அறையே கதி என்று அங்கேயே இருந்தாள். ஜெரினாயுடனேயே அத்தை அத்தை என்று அவளையே சுற்றிக் கொண்டு வந்தவள் இன்று அவளிடம் பேசுவது கூட இல்லை. அவள் சுஹேலிடம் பேசுவதை கூட தவிர்த்தாள். அப்போது தான் தன் மீது அனைவருக்கும் வெறுப்பு வரும் என்று எண்ணியே அப்படி செய்தாள். முன்பெல்லாம் சுஹேல் இரவு வர தாமதம் ஆனாலும் அவள் கண் விழித்திருந்து அவனுக்கு சாப்பாடு போட்டு விட்டு தான் தூங்க போவாள். ஆனால் இப்போது அவள் அவனை கண்டு கொள்வதே இல்லை. அவன் வரவுக்காக காத்திராமல் சீக்கிரமாகவே தூங்க சென்று விடுகிறாள். அதுபோல் அவன் மருத்துவமனைக்கு சென்ற பிறகு தான் எழுகிறாள். அவனிடம் பேசுவதை தவிர்ப்பதற்காகவே அப்படி செய்தாள். அவளின் நடவடிக்கைகளை சுஹேல் கவனித்து கொண்டு தான் இருந்தான். ஏன் இவள் இப்படி மாறிப்போனாள்? உம்மாவிடம் எவ்வளவு பிரியமாக இருப்பாள்! அவர்களிடம் கூட இப்போது பேசுவதில்லையே! ஏன் என்னை கூட தவிர்க்கிறாளே! நடுவில் கொஞ்சம் நன்றாகத்தானே இருந்தாள். மீண்டும் இவளுக்கு என்னவாயிற்று? என்று குழம்பி போனான்.

ஒரு மாதம் இப்படியே கடந்து போனது. பொறுத்து பொறுத்து பார்த்த சுஹேல், ஒரு நாள் அவளிடம் சென்று பேசினான். என்னாச்சு துர்கா உனக்கு? நீ இப்படியே யாரிடமும் பேசாமல் இந்த அறையிலேயே அடைப்பட்டு இருந்தால் உனக்கு பைத்தியம் தான் பிடிக்கும். நாம் நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தால் நம் வாழ்க்கையை எப்போதுதான் வாழ்வது? இன்றைக்கு நான் மருத்துவமனைக்கு விடுப்பு எடுத்துள்ளேன். வா! நாம் எங்காவது வெளியில் போய் வரலாம்! உனக்கும் வெளிக்காற்றை சுவாசித்தால் மனது சற்று ஆறுதலாக இருக்கும் என்று கூற, நான் எங்கும் வரவில்லை சுஹேல், நீங்கள் வேண்டுமானால் சென்று வாருங்கள் என்று கூற, நான் உனக்காக தான் அழைக்கிறேன் துர்கா, வீட்டில் சிறைப்பட்டு இருப்பதை விட வெளியில் வந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று தான் கூப்பிடுகிறேன் என்று அவன் மீண்டும் வற்புறுத்தினான், நான் தான் வரவில்லை என்று சொல்லிவிட்டேனே திரும்ப திரும்ப என்னை அழைத்தால் நான் என்ன செய்வது, வேண்டுமென்றால் இன்னொரு திருமணம் செய்து கொள்ளுங்கள். அந்த பெண்ணை உங்கள் விருப்பப்படி எல்ல இடத்திற்கும் அழைத்து செல்லுங்கள், எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை என்று கூற, சுஹேலுக்கு கோபத்தில் கண்கள் சிவந்தது. என்ன துர்கா! உனக்கு நிஜமாகவே பைத்தியம் பிடித்து விட்டதா ! இதற்கு யாராவது மறுமணம் செய்வார்களா? நானும் உன்னை கவனித்து கொண்டுதான் இருக்கிறேன். நீ முன்பு போல் இல்லை துர்கா. என்னதான் உன் பிரச்சனை? குழந்தைகள் இறந்து விட்டது வேதனைக்குரிய விஷயம் தான். நான் இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக எப்போதும் அதை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் தற்போதைய வாழ்க்கையை தொலைத்து விடுவோம். நமக்கு மறுபடியும் குழந்தை பிறக்காமலா போய்விடும் ! நீ அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டு உன்னையும் வருத்தி, மற்றவர்களையும் துன்பப்படுத்துகிறாய் என்று கூறவும், துர்கா வேண்டும்மென்றெ சுஹேலை வம்புக்கு இழுத்தாள். ஆமாம். நான் இருப்பதே உங்களுக்கு தொந்தரவாக இருக்கிறதா? நான் என்ன உங்களை துன்பப்படுத்தினேன்? என்று கேட்க, அல்லாவே! போதும்மா போதும் ! நீ எங்கும் வெளியில் வரவேண்டாம். இங்கேயே இரு, நான் போகிறேன் என்று அவன் கோபித்துக் கொண்டு போகவும் துர்காவிற்கு அழுகை பொத்திக் கொண்டு வந்தது. என்னை மன்னித்து விடுங்கள் சுஹேல்! உங்களை வேறு திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று தான் நான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறேன் என்று மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.

சுஹேலுக்கு வாழ்க்கையே கசந்து போனது.என்னவாயிற்று இவளுக்கு? அவள் முகத்தில் எப்போதும் புன்சிரிப்பும் நாணமும் குடிகொண்டிருக்குமே! இப்போது அது எங்கே போயிற்று? என்னிடம் அதிர்ந்து கூட பேசமாட்டாளே! இப்போது என்னிடம் சண்டை போடுகிறாள். அந்த துர்காவா இவள்? என்னதான் குழந்தைகள் இறந்த துக்கம் இருந்தாலும் என் மீது அன்பு இல்லாமல் போய் விடுமா என்ன! ஒரு வேளை நான் அவளை சரியாக கவனித்து கொள்ளவில்லை என்று நினைக்கிறாளோ? அந்த கோபத்தில் தான் இப்படியெல்லாம் நடந்துக் கொள்கிறாளோ! என்று பலவாறு எண்ணி குழம்பினான்.
 
அத்தியாயம் 43​


நாட்கள் நகர்ந்தன. இப்போதெல்லாம் துர்கா சண்டை போடுவதெற்காகவே சுஹேலிடம் பேசினாள். ஜரீனாவிடம் பேசுவதே இல்லை. அவளே முன்வந்து பேசினாலும் ஓரிரு வார்த்தையில் முடித்துக் கொண்டாள். இடையிடையே அவனை இன்னொரு திருமணம் புரியுமாறு வலியுறுத்தினாள். முன்பெல்லாம் துர்காவை காணவேண்டும் என்று ஆசையாய் வரும் சுஹேல் இப்போதெல்லாம் ஏன்டா வீட்டிற்கு வருகிறோம் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. துர்காவின் மறுமணம் நச்சரிப்பை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவன் நிறைய நாட்கள் வீட்டிற்கு வருவதையே தவிர்த்தான். துர்காவிடமும் எவ்வளவோ சொல்லி பார்த்து மன்றாடி விட்டான். நாம் இருவருக்கும் இன்னும் வயசாகவில்லை. கண்டிப்பாக நமக்கு குழந்தை பிறக்கும். நம்பிக்கையாய் இரு, என்று கூறியும் துர்கா சமாதானம் அடையவில்லை. இந்த விஷயம் ஜரீனா மற்றும் உசைன் காதிற்கு கூட எட்டியது. ஜரீனா உசைனிடம் நீங்களாவது போய் உங்கள் மருமகளுக்கு எடுத்து சொல்ல கூடாதா? என்பதற்கு, "இது அவர்கள் வாழ்க்கை ஜரீனா" இரண்டு பேரும் சின்ன பிள்ளைகள் இல்லை எடுத்து சொல்வதற்கு! அவர்களே தான் பேசி முடிவு செய்ய வேண்டும்.இவர்களுக்கு நடுவில் நான் போனால் அது நன்றாக இராது என்று கூறி தன்னால் பேச முடியாது என்பதை நாசுக்காக தெரிவித்தார். ஜரீனாவுக்கு தான் மனது அடித்து கொண்டது. ஓரே பிள்ளையின் வாழ்க்கை சந்தோஷமாக இல்லையே என்று மனம் வெதும்பினாள். இந்த பெண்ணுக்கு என்னவாயிற்று? நான் அவளை மருமகளாக ஏற்காதபோது கூட என்னையே சுற்றி சுற்றி வந்தாள். ஆனால் இன்று நான் அவளை மகளாக பார்க்கும்போது என்னிடத்தில் பேச கூட யோசிக்கிறாளே! எவ்வளவு அமைதியான பெண் துர்கா. ஏன் இப்படி மாறிப்போனாள்? இந்த வீட்டில் என்று தான் பழைய சந்தோஷம் திரும்பி வருமோ தெரியவில்லையே ! என்று மனதிற்குள் வருந்தினாள்.


துர்காவின் குழந்தைகளுக்கு இரண்டு மாதம் முடிந்து விட்டது. மூன்றாம் மாதம் தொடங்கிவிட்டன. கயல் அந்த குட்டி தேவதையின் சிரிப்பிலும் அதன் செய்கைகளிலும் தன்னையே மறந்து போனாள். அந்த குடும்பமே அந்த இளம் தளிரின் அழகில் மயங்கி கிடந்தது. சாம்சன் அந்த குழந்தைக்கு வித விதமான ஆடைகளையும் பொம்மைகளையும் வாங்கி குவித்தான். கயல் மருத்துவமனைக்கு செல்வதால் ரெபேக்காவே அந்த குழந்தையை பார்த்துக் கொண்டாள். அந்த சின்ன குட்டியும் அவளிடம் நன்றாக ஒட்டிக்கொண்டது. கயல் மருத்துவமனைக்கு போகுவதற்கு முன் காலையில் கொஞ்ச நேரமும் அதேபோல் மாலையில் திரும்பி வந்ததும் கொஞ்ச நேரம் அதனுடன் விளையாடி விட்டு தான் மறுவேலை பார்ப்பாள். அனைவரின் செல்லமாகவே அந்த குட்டி தேவதை அந்த வீட்டில் இருந்தாள்.

அன்று துர்கா சீக்கிரமாகவே எழுந்து விட்டாள். தன் வேலைகளை எல்லாம் விரைவாக முடித்துக் கொண்டு சரியாக சுஹேல் எழும் வேளையில் தன்னுடைய துணிமணிகளை பெட்டியில் அடுக்கி கொண்டிருந்தாள். சிறிது நேரத்திலேயே எழுந்து வந்த சுஹேல் துர்கா என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்? ஏன் துணிமணிகளை பெட்டியில் அடுக்கி கொண்டியிருக்கிறாய்? என்று கேட்க, நான் என் அண்ணன் வீட்டிற்கு செல்வதாக இருக்கிறேன். தீடீரென்று அங்கே ஏன் செல்கிறாய்? பயணச்சீட்டு பதிவு செய்து விட்டாயா? என்னிடத்தில் ஒன்றுமே சொல்லவில்லை. சரி! இப்போதாவது வெளியில் செல்லும் எண்ணம் வந்ததே! நீ தனியாக செல்லாதே! நானும் உன்கூட வருகிறேன். நீ உன் விருப்பம் போல் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் உன் அண்ணன் வீட்டில் இருந்து விட்டு வா! உனக்கும் ஒரு மாறுதலாய் இருக்கும் என்று சொல்லிக் கொண்டே போனவனை பார்த்து, நான் போனால் மறுபடியும் இங்கு வருவதாக இல்லை. அங்கேயே ஏதாவது வேலையை தேடிக் கொண்டு இருக்கலாம் என்றிருக்கிறேன் என்றதும், என்ன துர்கா! நீ அங்கேயே தங்கும் அளவிற்கு இங்கு என்ன நடந்துவிட்டது! வீணாக நீயே உன் வாழ்க்கையை அழித்து கொள்ளாதே! இது நல்லதற்கல்ல! என்று கூறவும் என் பேச்சுக்கு இங்கு மதிப்பில்லை எனும்போது நான் ஏன் இங்கு இருக்க வேண்டும்? துர்கா, நீ என் மீது கொண்ட காதல் அவ்வளவுதானா! என்னால் உன்னை தவிர வேறு எந்த பெண்ணையும் மனைவியாக நினைக்கவே அருவெறுப்பாக இருக்கிறது. ஏன் நீ என் காதலை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய்? நீ இல்லையென்றால் நான் இல்லை துர்கா! என்று கூற, துர்காவின் மனம் அவன் மேல் இரக்கம் கொள்ளத்தான் செய்தது. ஆனாலும் நான் அவன் நன்மைக்காக தான் இவ்வாறெல்லாம் செய்கிறேன். அவன் நன்றாக வாழவேண்டும் என்று எண்ணியவளாக தன் மனதை கல்லாக்கி கொண்டு என் மீது அன்பு, காதல் இருந்தால் நான் சொல்வதை கேட்டு இருப்பீர்கள். எல்லாம் வெறும் நடிப்பு தானே என்று பட்டென்று கேட்டு விட்டாள். அன்று இரண்டாவது முறையாக அவன் கண்கள் சிவந்ததை அவளால் காண முடிந்தது. அவனுக்கு கோபம் தலைக்கேறியது. என்ன! நான் காட்டும் அன்பெல்லாம் உனக்கு நடிப்பாக தெரிகிறதா? நீ மிகவும் மாறிவிட்டாய் துர்கா! என்னுடைய துர்காவே இல்லை நீ ! என்று கூறியவன் சரி ! இன்னும் இரண்டு நாள் பொறுத்திரு. நான் என் பதிலை சொல்கிறேன் அதுவரையாவது என்னை தொல்லை செய்யாதே! என கூறி அங்கிருந்து அகன்றான். துர்காவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அவள் அப்படி பேசியதை அவளாலேயே தாங்கி கொள்ள முடியவில்லை. மெத்தையின் மீது குப்புற படுத்து தான் அழும் சத்தம் கேட்காதவாறு தலையணையை இறுக்கமாக வாயின் அருகே கொண்டு சென்று கதறி அழுதாள்.

சுஹேல் தனிமையில் வெகுநேரம் யோசித்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தான். இது தான் சரியென்று தோன்ற தான் முன்பு வேலை செய்த சென்னை மருத்துவமனைக்கு போன் செய்து விஷயத்தை கூறி முன்பதிவு செய்துக் கொண்டான். அப்படியே சென்னை செல்லுவதற்க்கான பயண சீட்டையும் பதிவு செய்தான். அன்று இரவு துர்காவிடம் சென்று துர்கா, நான் நாளை சென்னை செல்கிறேன். வருவதற்க்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும். நான் திரும்பி வரும்போது நீ கேட்கும் கேள்விக்கெல்லாம் விடை தெரியும். நான் உன் மீது அன்பு வைத்ததெல்லாம் நடிப்பு இல்லை என்பதை நீ உணர்வாய் என்று சொல்லிவிட்டு சென்றான். துர்காவிற்கு எதுவும் விளங்கவில்லை. இவன் என்ன பேசுகிறான் என்றே தெரியவில்லையே, நான் கேட்டுக்கொண்டபடி மறுமணத்திற்கு சம்மதித்து விட்டானா! அதைத்தான் நான் திரும்பி வரும்போது தெரியும் என்று கூறுகிறானோ! என்று நினைத்து மகிழ்ந்தாள். ஆனால் அவளுடைய இதயத்தின் ஓரத்தில் இவன் இனிமேல் நமக்கு சொந்தம் இல்லை என்று எண்ணிக் கொண்டு துடிதுடித்து கொண்டிருந்தது.

சுஹேல் சென்னை சென்றதும் தான் முன்பு வேலை செய்த மருத்துவமனையை அடைந்தான். அங்கு தான் முன்பதிவு செய்து வைத்து இருக்கும் மருத்துவரை சென்று பார்த்தான். அவரும் அவனிடத்தில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டதாகவும் மறுநாள் ஒன்பது மணிக்கு தயாராய் இருக்கும்படி சொன்னார். சுஹேல் தன் மாமா வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனை அருகிலேயே தங்கும் விடுதியில் அறை எடுத்து அன்று இரவு தங்கினான். மறு நாள் எழுந்து வழக்கம் போல் தன் காலை கடமைகளை முடித்து விட்டு மருத்துவமனைக்கு சென்றான்.


அவன் சீக்கிரமாகவே வந்தபடியால் தான் முன்பு வேலை செய்த அறையில் போய் அமர்ந்துக் கொண்டு துர்கா தன்னிடம் பேசியதை எல்லாம் நினைத்து பார்த்தான். அவள் ஏன் திடீரென்று மாறிப்போனாள். ஒரு வேளை அவள் மீது வெறுப்பு வர வேண்டும், அப்போதுதான் நான் மறுமணம் செய்து கொள்வேன் என்று நினைத்து தன்னிடம் இப்படி பேசுகிறாளோ? என்று முதன் முறையாக அவனுக்குள் சந்தேகம் வந்தது. அப்போது கதவு தட்டும் ஓசை கேட்கவே நினைவு கலைந்து, உள்ளே வாருங்கள்! என்று கூற, கயல் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். இவள் ஏன் இந்த நேரத்தில் இங்கு வருகிறாள்? இவளை எப்படி சமாளித்து இங்கு இருந்து விரைவாக அனுப்புவது? என்று எண்ணிக் கொண்டு அவளை பார்த்து வா கயல்! என்ன ஆச்சரியம்! இங்கே நீ எப்படி? என்னுடைய தோழியை பார்க்க வந்தேன் சுஹேல். அப்படியே நீங்கள் இங்கு இருப்பதை பார்த்தேனா? உங்களிடம் பேசிவிட்டு செல்லலாம் என்று வந்தேன். எப்படி இருக்கிறீர்கள் சுஹேல்? துர்கா எப்படி இருக்கிறாள்? அனைத்தையும் கேள்விப்பட்டேன் சுஹேல். கேட்கவே வருத்தமாக இருந்தது. நான் வந்து அவளை பார்க்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். வேலை பளு காரணமாக வர முடியவில்லை. சரி! துர்காவிற்கு எந்த மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டது? சுஹேல் அந்த மருத்துவமனையின் பெயரை சொல்லவும், கயல் அதிர்ந்து என்ன அந்த மருத்துவமனையா? அங்கு தான் சுஹேல் இரண்டு மாதத்திற்கு முன் குழந்தைகளை கடத்துகிறார்கள் என்று கேள்விப்பட்டு நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் எப்படியோ அதை சாமர்த்தியமாக சமாளித்து விட்டார்கள். அங்கிருந்து கடத்தப்பட்ட குழந்தைகளில் ஒன்று என்னிடம் தான் வளர்கிறது என்று கூற சுஹேலுக்கு பளீரென்று மூளையில் மின்னல் பளிச்சிட்டது. அது என்ன தேதி, நாள் என்று கூறமுடியுமா கயல்? கயல் சொன்னதும், அன்றுதான் துர்காவிற்கும் அதே மருத்துவமனையில் பிரசவம் ஆனது கயல் என்று கூற, என்ன! அன்றைக்கு நாங்கள் அந்த மருத்துவமனையில் விசாரிக்கும் போது துர்காவை பற்றிய விவரம் பதிவேட்டிலே இல்லையே! அன்றைக்கு மூன்று பிரசவம் தான் ஆகி இருக்கிறது என்று அவர்கள் பதிவேட்டை காட்டினார்கள். நானும் பார்த்தேன் சுஹேல். குட்டு வெளிப்பட்டு விடும் என்று எப்படியோ துர்காவின் பெயரை நீக்கியுள்ளார்கள். ஆக கடத்தப்பட்டது உங்கள் குழந்தைகளா? என்று அவள் கேட்கவும், அப்போது ஒரு செவிலியர் வந்து டாக்டர் நீங்கள் தான் கயலா?உங்களுக்கு போன் வந்திருக்கிறது என்று அழைக்க, இங்கே எனக்கு போன் வந்திருக்கிறதா? நான் இங்கே இருப்பது யாருக்கு எப்படி தெரியும்? என்று நினத்தவளாக, இங்கேயே இருங்க சுஹேல். நான் போன் பேசி விட்டு வந்து விடுகிறேன் என்று கூறி அவசரமாக போன் இருக்கும் இடம் நோக்கி சென்றாள் கயல்.
 
அத்தியாயம் 44​



அவள் சென்றதும் அவன் பார்க்க இருந்த மருத்துவர் அங்கே வந்தார். சுஹேல், அறுவை சிகிச்சைக்கு எல்லாம் தயாராக இருக்கிறது. என்னுடன் வருகிறீர்களா? என்று கேட்க, சுஹேல், டாக்டர் எனக்காக ஒரு மணி நேரம் இதை தள்ளி வைக்க முடியுமா? என்று கேட்க, அந்த மருத்துவர் சற்று யோசித்து விட்டு சரி சுஹேல், ஆனால் விரைவாக வந்து விடுங்கள். நேரம் அதிகமானால் இன்றைக்கு செய்ய முடியாமல் போய்விடும். எனக்கும் வேறு பல வேலைகள் இருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்றார். சுஹேலுக்கு யோசிக்க யோசிக்க மண்டை சூடானது. அப்படியென்றால் எங்கள் குழந்தைகள் இறக்கவில்லையா? கடத்தப்பட்டா இருக்கிறார்கள்? யார் கடத்தி இருப்பார்கள்? ஒரு வேளை மறுபடியும் இது உமர் அலி வேலை தானோ? எப்படி கண்டுபிடிப்பது? என்று எண்ணியவனாக பதட்டதுடன் அமர்ந்திருக்க, அப்போது கதவை திறந்து கொண்டு கயல் அவசர அவசரமாக உள்ளே வந்தாள். சுஹேல், என்னுடன் வாருங்கள்! காவல் நிலையம் செல்ல வேண்டும் என அழைக்க, சுஹேல் என்ன விஷயம் என்று புரியாமல் விழிக்க, கயல் என்னோடு வாருங்கள்! நான் காரில் போகும்போது விளக்கமாக அனைத்தையும் சொல்கிறேன் என அவனை அழைத்து கொண்டு தன் காரினுள் ஏறினாள். மருத்துவமனையில் இருக்கும்போதே ரேச்சலுக்கும் போன் செய்து அவளையும் காவல் நிலையத்திற்கு வரச் சொன்னாள். போகும் போதே கயல் அன்று நடந்ததை எல்லாம் விவரிக்க, சுஹேல் அதனை கவனமாக கேட்டு கொண்டு வந்தான். பின் அந்த காவல் அதிகாரி தான் இப்போது என்னிடம் பேசினார். டாக்டர் கவுசல்யாவை கண்டுபிடித்து விட்டார்களாம். அவள் காவல் நிலையத்தில் தான் இருக்கிறாளாம். அந்த டாக்டரை விசாரித்தால் அவள் ஏன் குழந்தையை கடத்தினாள் என்ற உண்மை தெரிந்திவிடும் சுஹேல் என்று கூற, அவனுக்கு அதிர்ச்சியில் ஒன்றுமே பேச தோன்றவில்லை.அஅவன் குழந்தைகள் உயிரோடு இருக்கிறார்கள் என்ற எண்ணமே அவனை பரவசப்படுத்தியது. ஆனால் ஒன்று கயலிடம் உள்ளது, இன்னொரு குழந்தையை என்ன செய்திருப்பார்கள் என்ற சிந்தனை தோன்ற அவனைஒரு குழந்தை கிடைத்த மகிழ்சியை அனுபவிக்கவிடாமல் செய்தது. அவன் கயலிடம் ரொம்ப நன்றி கயல், நீ எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறாய். நான் உன்னை இன்னைக்கு பார்க்கலனா என் வாழ்க்கை என்ன ஆகிருக்கும் என்றே தெரியவில்லை. துர்கா குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்று என்னை மறுமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்கிறாள். என்னால் எப்படி துர்காவை விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும்? மனதில் துர்காவை வைத்துக் கொண்டு வேறு பெண்ணுடன் எப்படி வாழ முடியும்? இதை சொன்னால் அவள் என்னை புரிந்து கொள்ளவில்லை. உன்னிடம் சொல்வதற்கு கொஞ்சம் சங்கடமாக தான் இருக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன். இவள் எங்கே எனக்கு பெண் பார்த்து கட்டி வைத்து விடுவாளோ என்று பயந்து கொண்டு தான் நான் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்து சென்னை வந்தேன். இன்னைக்கு பண்ணிக்கொள்ளலாம் என்று தான் இருந்தேன். நீ என்னை பார்க்க வந்திருக்காவிட்டால் இன்னேரம் நான் அறுவை சிகிச்சைக்கு சென்று இருப்பேன் என்று கூறியதை கயல் வாய் பிளந்து கேட்டு கொண்டிருந்தாள். சுஹேல், நீங்கள் துர்காவின் மீது வைத்திருக்கும் அன்பும் துர்கா உங்கள் மீது வைத்திருக்கும் அன்பும் என்னை வியப்படைய செய்கிறது. நீங்கள் குழந்தையுடன் வாழவேண்டும் என்று தன் வாழ்க்கையை விட்டு கொடுக்கும் துர்காவும், அவளை தவிர வேறு எந்த பெண்ணுடனும் வாழக்கூடாது என்று குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை வரை சென்றதும் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டது. உங்கள் இருவரையும் பார்த்தால் எனக்கு பொறாமையாக கூட இருக்கிறது. உங்கள் இருவரின் தூய்மையான காதலுக்காகத்தான் இறைவன் உங்களிடமிருந்து பறித்ததை மீண்டும் உங்களிடம் ஒப்படைக்க நினைக்கிறான் போலும் என்று கயல் கூறிக்கொண்டே இருக்கையிலேயே காவல் நிலையம் வந்தடைந்தனர். அங்கு அவர்களுக்கு முன்பாகவே ரேச்சலும் வந்துவிட்டு இருந்தாள். சுஹேல் நேரே அந்த உயர் காவல் அதிகாரியிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பின் டாக்டர் கௌசல்யாவிடம் சென்றான். அவள் இவர்களை கண்டதும் தலையை குனிந்து கொண்டாள். அவன், என்ன டாக்டர் நாமெல்லாம் ஒரே புனிதமான இந்த மருத்துவ தொழிலை செய்கிறோம். நம்மை நம்பி தானே பொதுமக்கள் அவர்களை நம்மிடம் ஒப்படைகின்றனர். நம்மை தெய்வத்திற்கு சமமாக கருதுகின்றனர். அப்படி இருக்கும்போது நீங்கள் இப்படி செய்யலாமா? என்று கேட்டவுடன் கௌசல்யாவின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க! நான் பணத்திற்காக இந்த காரியத்தை செய்யவில்லை. என் பெண்ணை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நான் அவ்வாறு செய்யாவிடில் என் பெண்ணை கொன்று விடுவேன் என்று மிரட்டினார்கள். ஆறு மாதம் முன்பு தான் விபத்தில் என் கணவரை இழந்தேன், என் வாழ்க்கைக்கு ஆதாரமே என் பொண்ணுதான். அவளுக்கு ஆபத்து என்னும் போது என்னால் இந்த கொடுமையை செய்யாமல் இருக்க முடியவில்லை என அவள் கூறியதை கேட்ட அனைவரின் நெஞ்சங்களும் நெகிழ்ந்தன.

கயல் அவளிடம் சென்று வருத்தப்படாதீர்கள். உங்கள் நிலமையில் யார் இருந்தாலும் இதை தான் செய்திருப்பர். பின்னர் அந்த காவல் அதிகாரி கௌசல்யா டாக்டரிடம், அந்த கார் சுமார் எத்தனை மணிக்கு அங்கிருந்து கிளம்பியது? காரின் நிறம், மாடல் பற்றி ஏதாவது தெரியுமா? அந்த காரின்நம்பரை பாத்தீங்களா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க அனைத்திற்கும் அவள் பதில் கூறிக் கொண்டே வந்தாள். அந்த கார் அங்கிருந்து கிளம்பும்போது சுமார் பத்து மணி இருக்கும் சார், சிவப்பு நிற மாருதி கார் தான் அது. அதனுள் இருக்கும் நபரை என்னால் பார்க்க முடியவில்லை. நம்பர் பிளேட்டையும் மறைத்திருந்தார்கள் என்று கூற உடனே அவர் அந்த கார் அதிஷ்டவசமாக ஏதாவது சுங்க சாவடி வழியாக சென்றிருந்தால் அங்கிருக்கும் புகைப்பட கருவி மூலம் எளிதாக அந்த காரை கண்டுபிடித்துவிடலாம் என்று கூறிக் கொண்டே தன் உதவி காவலரிடம் அந்த மருத்துவமனைக்கு அருகில் ஏதாவது சுங்க சாவடி இருக்கிறதா என்று பார்க்க சொல்லிவிட்டு இந்த கேள்விகளை எல்லாம் நான் முன்பே ரேச்சலிடம் கேட்டேன். அவள் சற்று தொலைவில் இருந்ததாலும், பதட்டத்தில் இருந்ததாலும் எதையுமே கவனிக்க வில்லை என்று கூறிவிட்டாள். சற்று நேரத்திற்கெல்லாம் உதவி காவலர்கள் அந்த காரின் அடையாளத்தை வைத்து அது மருத்துவமனையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்க சாவடியை கடந்தது என்பதை கண்டுபிடித்து விட்டார்கள். உடனே அந்த உயர் காவல் அதிகாரி சுஹேலிடம் நீங்கள் எல்லாம் இங்கேயே இருங்கள். நான் சென்று அந்த காரின் உள்ளவர்கள் அங்கிருக்கும் புகைப்பட கருவியில் பதிவாகி உள்ளார்களா என பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறி தன்னுடன் இன்னொரு காவலரையும் அழைத்து சென்றார்.

நேரம் செல்ல செல்ல சுஹேலுக்கு ஒரே பதட்டமாக இருந்தது, அல்லாவே! என் இன்னொரு குழந்தையையும் உயிரோடு என்னிடத்தில் சேர்த்துவிடு என மனமுருக பிராத்தனை செய்து கொண்டான். ஒரு மணி நேரம் கழித்து அந்த அதிகாரி காவல் நிலையம் வந்தார். அவர் சுஹேலிடம் உங்களுடைய அதிர்ஷ்டம் ஒருவனுடைய புகைப்படம் பதிவாகி உள்ளது. அநேகமாக அவன் பழைய கைதியின் பட்டியலில் இருப்பான் என்று தோன்றுகிறது. நான் பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று தன் உதவியாளரைஅழைத்து தான் கொண்டு வந்த படத்தை காட்டி அதனை பழைய கைதிகளுடன் ஒத்து போகிறதா என்று பார்க்க சொன்னார். சில மணி துளிகள் சென்ற பிறகு அவர் ஒரு புத்தகத்தை எடுத்து வந்து அந்த உயர் அதிகாரியிடம் காட்டி சார்! நீங்கள் கொண்டு வந்த புகைப்படம் இங்கிருக்கும் ஒரு படத்தோடு ஒத்து போகிறது என்று கூறவும் அனைவரின் கண்களும் ஆவலாய் அவர்களின் புறம் திரும்பின. அவனின் பெயர் ராபர்ட் என்றும் கூடவே அவனுடைய முகவரியும் அதில் இருந்தன. அந்த அதிகாரி அதை பார்த்தவுடன் அவன் இந்த முகவரியில் இருந்தால் கொத்தாக அவனை பிடித்து உங்களின் முன் நிறுத்துகிறேன் என்று கூறி கொண்டு தன்னுடன் நான்கைந்து காவலர்களையும் அழைத்துக் கொண்டு அந்த முகவரியை நோக்கி சென்றார்.
 

New Threads

Top Bottom