Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL பொதிகையின் மைந்தன் - TamilNovel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
583
Reaction score
588
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited by a moderator:
பொதிகையின் மைந்தன்...

அத்தியாயம் 1:

மாலை மயங்கும் நேரம். கோடையின் சூரியன் தன் உக்கிரத்தை முழுவதும் காட்டும் சித்திரை மாதம். ஆனாலும் செண்பகப் பொழில் பெயருக்கேற்ப எழில் சூழ்ந்து குளிர்ந்து காணப்பட்டது. ஊரில் எல்லையில் பொதிகை மலை ஓங்கி உயர்ந்து நான் மிகவும் பழைமையானவன் என்று சொல்லி பெருமிதத்தோடு நின்று கொண்டிருந்தது. பகல் முடிந்து இரவின் ஆதிக்கம் தொடங்கப் போவதன் அறிகுறியாக பறவைகள் மரங்களில் ஒடுங்கின. வண்டுகள் மற்றும் இரவு நேர விலங்குகளின் குரல்கள் மெல்ல ஒலிக்க ஆரம்பித்தன. சித்திர நதி அருவியாகப் பெருகி விழும் இடத்தில் சற்றே ஒதுங்கினாற் போல நின்று கொண்டு இயற்கைக் காட்சிகளை ரசித்துக்கொண்டிருந்தான் தித்தன். கட்டிளம் காளை. முகத்திலும் மார்பிலும் வீரத் தழும்புகள். ஆனால் இப்போது முகத்தில் எரிச்சல், கோபம் என எல்லாம் கலந்து காணப்பட்டது. தித்தன் இரவு நேரக் காவலன். அவனது முன்னோர்கள் பாண்டிய மன்னர்களின் கீழே படைத்தலைவர்களாகவும், தளபதிகளாகவும் பணி செய்தனர். அவர்கள் ஈட்டிய புகழ் இன்னமும் மங்காமல் இருக்கிறது. ஆனால் அத்தகைய முன்னோர்களின் வழி வந்தவன் வெறும் இரவு நேரக் காவலன்.

குளிர்ந்த அருவி நீரை கைகளால் அள்ளித் தன் தலையில் தெளித்துக்கொண்டான் தித்தன். மனதின் நெருப்பு ஆறுமா அத்தனை எளிதில்? நேரம் ஆக ஆக இருள் பரவத்தொடங்கியது. அந்த அடர்ந்த காட்டின் பல விதமான ஒலிகள் எதுவும் அவனை அச்சம் கொள்ளச் செய்யவில்லை. மனதில் பல விதமான எண்ணங்கள் தோன்ற குற்றால நாதர் கோயிலை நோக்கினான். விளக்கு ஏற்றப்பட்டதன் அடையாளத்தையே காணோம். நாற்புறத்திலும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

"சே! நாடு ஏன் இப்படி ஆகி விட்டது? மக்கள் அனைவரும் பயத்திலும் அச்சத்திலுமே இருக்க வேண்டியதாகி விட்டதே? மதுரையில் பாண்டிய மன்னர்கள் செங்கோலோச்சிய போது செண்பகப் பொழில் எவ்வளவு உயர்வாக இருந்ததாக பாட்டன் மும்மாடன் எப்போதும் கூறுகிறார். ஆனால் இப்போது மதுரைப் பாண்டியர்களுக்கு மதுரையை தக்க வைத்துக்கொள்வதற்கே பெரும் போர் செய்ய வேண்டியிருக்கிறது. அதிலும் கூட சில சமயம் தோற்றும் போய் விட்டார்களாம். செய்திகள் காதில் படுகின்றன. சோழர்களும், சேரர்களும் இதே நிலையில் தான் உள்ளனர். அவரவர் தலை நகரங்கள் மட்டுமே எல்லை என ஆகி விட்ட அவலம். அதனால் பிற இடங்களில் எப்போதும் கொள்ளையர்களின் அட்டகாசம். பகலிலேயே பெண்கள் தனியாக எங்கும் செல்ல முடியாத நிலை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு கூட பெண்கள் கல்விச்சாலைகளில் கற்றார்களாம், போர்ப்பயிற்சி செய்தார்களாம். ஆனால் இப்போது அவர்கள் தங்களின் கற்புக்கு பயந்து வெளியில் வருவதே இல்லை. பாவம்! கல்யாணி. அவளுக்கு கல்வி கற்பதிலும், கவிதை புனைவதிலும் எத்தனை ஆர்வம்? ஆனாலும் அவளால் எதிலும் ஈடுபட முடியவில்லை. காலம் அப்படி இருக்கிறது எனச் சொல்லி அவளை எனக்குத் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். பாவம்! முதலிரவில் எத்தனை ஆர்வமாகக் கேட்டாள், உங்களுக்கு தமிழ்க்கவிதையில் ஆர்வம் உண்டா என? நான் விழித்ததும் அவள் முகமே மாறி விட்டது. நான் ஒரு காவலன், வாள் பயிற்சி ஈட்டிப் பயிற்சி செய்தவன். என்னிடம் கவிதைச் சுவையை எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆனாலும் மகிழ்ச்சியோடிருக்க முயன்றாள் பாவம்! அவளுக்கு யாப்பிலக்கணம் கற்க வேண்டுமாம். எப்படியாவது ஏற்பாடு செய்ய வேண்டும்" என சிந்தித்தபடி நின்றிருந்தான்.

சற்று தொலைவில் அவனது யாரோ தீவட்டியை ஏந்தி வருவது தெரிந்தது. சட்டென தயாரானான். வருபவர் கொள்ளையர்களில் ஒருவனாகவும் இருக்கலாமே?

"நான் தான் தித்தா! ஈட்டியை எறிந்து விடாதே" என்று குரல் கொடுத்துக்கொண்டே வந்தான் தித்தனின் நண்பன் வேலன்.

"வா! எங்கே இன்னமும் காணவில்லையே எனப் பார்த்தேன். கொள்ளையர்கள் குறித்து ஏதாவது தகவல் கிடைத்ததா?" என்றான் தித்தன்.

"சென்ற முறை அவர்கள் செண்பகப் பொழிலில் நுழையும் முன்னரே நீயும் நானும் சேர்ந்து தாக்கியதில் பலரும் படுகாயம் அடைந்து விட்டனர். அதில் இருவர் இறந்தே போய் விட்டனர் எனக் கேள்விப்பட்டேன். ஆகையால் இன்னும் இரு மாதங்களுக்கு கொள்ளையர் தாக்குதல் இருக்காது. "

"நல்லது! ஆனாலும் நாம் அலட்சியமாக இருக்க வேண்டாம். கொல்லம் வழியாகக் கூட சில கொள்ளையர்கள் வரலாம். ஆகையால் எச்சரிக்கையோடு இருப்போம்" .

"நீ சொல்வதும் சரி தான். ஆனால் இப்போது கேரளத்தில் மழை துவங்கி விட்டதாம். ஆகையால் அங்கிருந்து வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு தான்."

நண்பனின் பேச்சைக் கேட்டதும் சற்றே ஆசுவாசப்பட்டவனாக கையில் இருந்த ஈட்டியை கீழே வைத்து விட்டு பாறை ஒன்றின் மீது அமர்ந்து கொண்டான் தித்தன். அவனைத் தொடர்ந்து வேலனும் மற்றொரு பாறையில் அமர்ந்து கொண்டான்.

"எப்போதும் பதற்றத்துடனே இருக்கிறாயே? அது ஏன் நண்பா?" என்றான் வேலன்.

நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டான் தித்தன்.

"உனக்குப் பதற்றமில்லையா வேலா? நம் நாடும் ஊரும் இப்படி இருக்கிறதே என உனக்குப் பதற்றமில்லையா? நம் வீட்டுப் பெண்கள் பயமின்றி நடமாட வேண்டும், அவர்கள் விருப்பப்படி கல்வி கற்கவும் வேண்டும் என உனக்கு ஆசையில்லையா?"

"இல்லாமல் என்ன தித்தா? என் தங்கை! அறிவில் மிகவும் சிறந்தவள். கணக்குக் கற்க வேண்டும் என விரும்புகிறாள். பக்கத்து ஊரில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இருக்கிறார். ஆனால் அவளை அங்கே தங்க வைக்கவோ, தினமும் அவளை அங்கே அனுப்பவோ இயலவில்லையே? எந்த நேரத்தில் கொள்ளையர்கள் அல்லது கெடு மதி படைத்த கூட்டத்தார் பெண்களைக் கவர்ந்து செல்வார்கள் என்று நினைத்தால் பயமாக அல்லவா இருக்கிறது?"

"இப்படிப் பேசுவது நன்றாகவா இருக்கிறது? நாம் ஆண் மக்கள்! பெண்களைக் காப்பாற்ற இயலாமல்ம் வீட்டுக்குள் பூட்டி வைக்கிறோமே என வெட்கித்தலை குனிகிறேன் நான். ஹூம்! மீண்டும் எப்போது மதுரையில் பாண்டியர்கள் ஆட்சி நிலையாக மலருமோ தெரியவில்லை!"

சற்று நேரம் உரையாடல் இன்றிக் கழிந்தது.

"உன் மனைவிக்கு இப்போது பேறு காலம் அல்லவா?" என்றான் வேலன்.

"ஆம்! தன் அன்னையின் வீட்டில் இருக்கிறாள் அவள். எப்போது பிரசவம் ஆகுமென்று தெரியவில்லை."

"ஆண் குழந்தையாகப் பிறக்கும். கவலை வேண்டாம்"

"இதில் நான் கவலைப்பட்டு ஆகப் போவதென்ன? ஆணோ? பெண்ணோ? எதிர்காலம் நன்றாக இருந்தால் போதும்."

மீண்டும் மௌனம் சூழ்ந்தது அந்த இடத்தை.

"வேலா! பேசாமல் நான் மதுரைக்குச் சென்று விடலாமா என யோசிக்கிறேன். நேராக மன்னரின் படையிலேயே இடம் பெறலாம் அல்லவா? இரவுப்பொழுதில் இப்படி கொள்ளையர்களை விரட்டும் அவலம் இல்லையே?"

நகைத்தான் வேலன்.

"உனக்கு இன்னமும் மதுரையின் நிலை தெரியவில்லையே எனத்தான் ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது போர் அறங்கள் எதுவும் கடைப்பிடிக்க படுவதில்லை. வடக்கிலிருந்து வரும் பெரும் படையினர் இரவில் கூடத் தாக்குதல் நடத்துகிறார்களாம். அது போன்ற கோழைகளோடு மோதுவதற்கு, கொள்ளையர்களோடு மோதுவது நல்லது எனத் தோன்றுகிறது."

"அப்படியா? இரவில் கூடவா தாக்குதல்? உனக்கு எப்படித் தெரியும்?"

"என் ஒன்று விட்ட சகோதரன் மதுரை காலாட்படையில் இருக்கிறான். அவன் ஒரு வாரம் முன்பு தான் மதுரையை விட்டு வந்து செண்பகப் பொழிலில் வாழத்தொடங்கினான். அவன் சொன்ன செய்திகள் தான் இவை."

"அப்படியானால்? இனி நம் வருங்காலம்?"

"கடவுள் விட்ட வழி! வேறு என்ன சொல்வது?"

"இல்லை! நிச்சயம் கடவுள் நமக்கு நல்லது தான் செய்வார். இப்படியே விட எனக்கு மனதில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை"

நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது இருளில் யாரோ நடந்து செல்லும் ஒலி கேட்டது. சட்டென சுதாரித்து வேலை குறி பார்த்தான் தித்தன். மீண்டும் வேறு புறமிருந்து சத்தம் கேட்க அங்கு திரும்பினான் வேலன்.

"யாராக இருக்கும்? இந்த இருளிலும் தடையில்லாமல் நடப்பது போலல்லவா இருக்கிறது?" என்றான் தித்தன்.

"எனக்கும் அப்படித்தான் தோன்றியது. வேலெறிந்து பார்ப்போமா?"

"வேண்டாம் எனத் தோன்றுகிறது வேலா! இந்த மலை பல சித்தர்களும் முனிவர்களும் வாழும் இடம் என பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இன்று முழு நிலவு வேறு. யாரேனும் சித்த புருஷர்கள் அருவியில் நீராட வந்திருக்கலாம். "

மீண்டும் நகைத்தான் வேலன்.

"சித்த புருஷர்கள், முனிவர்கள் வாழ்ந்த மண்ணா இது? இந்த நிலைமைக்கு ஆட்பட்டு விட்டது? எல்லாமே பொய்யோ எனத் தோன்றுகிறது" என்றான் வேலன்.

"அல்ல அப்பனே! எதுவுமே போய்யல்ல! அதுவும் உண்மை என்றால் இதுவும் உண்மை தானே?"

குரல் கேட்டுத் துள்ளி எழுந்தனர் இரு நண்பர்களும்.

"யார் பேசியது? முன்னால் வாருங்கள்! நாங்கள் உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம்" என்றான் வேலன் சத்தமாக.

"அதை நானல்லவா சொல்ல வேண்டும்? எங்கோ பார்க்கிறீர்களே? என்ன இன்னமுமா தெரியவில்லை?" மீண்டும் குரல் ஒலிக்க சுற்று உற்றும் பார்த்தனர். அருவிக்கரையில் தாடியும் மீசையும் புனைந்த ஒருவர் நீராடிக்கொண்டிருப்பது போலப் பட்டது.

"வேலா! அதோ பார்! அருவியில் வயதான மனிதர் ஒருவர் நிற்பது போலத் தோன்றுகிறது. அவர் தான் பேசியிருப்பாரோ?" என்றான் தித்தன்.

"இருக்கலாம் தித்தா! அவரைப் பார்த்தால் சிறந்த ஞானி போலத் தோன்றுகிறது. இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறார்?"

"தெரியவில்லை! போய்க் கேட்போம்"

இரு நண்பர்களும் நிலவின் வெளிச்சத்தில் அருவி நோக்கி முன்னேறினார்கள். சற்றே குட்டையான பருத்த உருவமும் கொண்ட ஒருவர் தனது கையில் இருந்த பாத்திரத்தில் நீர் முகந்து கொண்டிருந்தார்.

"வாருங்கள் நண்பர்களே! நான் நீராடி முடித்து விட்டேன். அதோ அங்கே போய்ப் பேசலாமா?" என்றார் அந்த மனிதர்.

"ஐயா! உங்களைப் பார்த்தால் மிகவும் சாதுவான மனியதர் போலத்தெரிகிறது. இந்தக் காட்டில் கொடுமையான விலங்குகள் நடமாட்டம் உள்ளது. அது மட்டுமல்ல கொள்ளையர்களும் கூட வரலாம். ஆகையால் நீங்கள் இப்போதே உங்கள் வீட்டுக்குச் சென்று விடுங்கள்" என்றான் வேலன்.

"வன விலங்குகள் என்னை ஒன்றும் செய்ய மாட்டா! கொள்ளையர்கள்! என்னிடம் என்ன இருக்கிறது கொள்ளையடித்துக்கொண்டு போவதற்கு" என்றார் அந்த மனிதர். பேசியபடி நடக்க அவர் பின்னால் தித்தனும் வேலனும் அவர்களை அறியாமல் நடந்தனர்.

அவர்கள் நடக்க நடக்க அழகான சமவெளி போல தெரிந்தது ஒரு இடத்தில். முழு நிலவின் வெளிச்சத்தில் அந்தத் தரையில் இருந்த புற்கள் அழகாகக் காட்சியளித்தன. அதன் நடுவே சிறு குடில் போல அமைக்கப்பட்டிருந்தது. அதனுள் அவர்களை அழைத்துச் சென்றார் அந்த குட்டையான மனிதர்.

"வாருங்கள் இளைஞர்களே! உள்ளே வந்து அமருங்கள்" என்றார் அந்தப் பெரியவர்.

"என்ன ஐயா இது? நாங்கள் தினமும் இங்கே வருகிறோம்? ஆனால் உங்கள் குடிலைக் கண்டதே இல்லையே?" என்றான் தித்தன்.

"இன்று தான் நான் வந்தேன்."

"எப்படித் தனியாக குடிலை சில மணி நேரங்களுக்குள் நிர்மாணித்தீர்கள்?"

"இது என்ன பெரிய வேலையா? சில கம்புகளை நட்டு மேலே கூடாரத் துணி போர்த்தினால் ஆயிற்று. அமருங்கள்! உங்களுக்கு உணவளிக்க என்னிடம் எதுவுமே இல்லையே?" என்றார் அந்த மனிதர்.

"பரவாயில்லை ஐயா!" என்றான் வேலன்.

"ஐயா! இந்த இரவு நேரத்தில் அருவியில் குளிர்ந்த நீரில் நீராடியிருக்கிறீர்களே? சூடாக ஏதாவது உணவு எடுத்துக்கொள்ளுங்களேன்! இல்லையென்றால் குளிர் காய்ச்சல் வரலாம்." என்றான் தித்தன்.

"உன் அக்கறைக்கு நன்றி அப்பா! என்னிடம் சில கிழங்குகள் உள்ளன. ஆனால் நெருப்பு...." என்றார் அவர்.

"கவலை வேண்டாம் ஐயா" என்று அவரிடம் சொல்லி விட்டு வேகமாகச் செயல்பட்டான் தித்தன். நன்கு காய்ந்த குச்சிகளை எடுத்து வந்து குவித்தான். தன் மடியிலிருந்த சிக்கி முக்கிக் கல்லைத் தேய்த்து நெருப்பு உண்டாக்கினான். அந்த நெருப்பில் கங்குகள் உருவாக அவற்றைத் தனது ஈட்டியால் சற்றே தள்ளினான். அவை இப்போது கண கணவென எரிந்தன. அந்த மனிதர் குடிலுக்குள் சென்று பனங்கிழங்குகளையும், வள்ளிக்கிழங்குகளையும் எடுத்து வந்தார். அவற்றைக் கங்கில் போட கிழங்குகள் வேகும் மணம் சூழ்ந்தது அந்த இடத்தை. சிறிது நேரத்தில் வெந்த கிழங்குகளையும் சூடான வெந்நீரையும் அம்மனிதருக்குக் கொடுத்தான் தித்தன்.

"அருமையாக இருக்கிறதப்பா! பசித்த வயிற்றுக்கு நல்ல உணவு" என்று சுவைத்து உண்டார் அந்தப் பெரியவர்.

"ஐயா! தாங்கள் யார்? இந்த வனப்பகுதியில் பயமின்றி இருக்கிறீர்களே? உங்களது சொந்த ஊர், உறவினர், குடும்பம்...." என இழுத்தான் வேலன்.

"நான் ஒரு தமிழ்ப்புலவனப்பா! என்னைக் குறுமுனி என்றும் சொல்வார்கள். சிறிது வானியலும் தெரியும். தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதுமே என் ஊர் தான். தமிழ் பேசுபவர்கள் அனைவருமே என் உறவினர் தான்." என்றார்.

"ஐயா! நீங்கள் தமிழ்ப் புலவரா? அப்படியானால் இங்கிருந்து நீங்கள் செல்லவே கூடாது. என் மனைவி தமிழ் கற்க விரும்புகிறாள். அவளுக்கு எங்கள் வீட்டிலேயே தங்கி கல்வி கற்பிக்க வேண்டும். தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றான் தித்தன் அவசரமாக.

"அது என்னால் இயலாது. ஆனால் உனக்கு வழி காட்ட என்னால் முடியும்."

"உம்...! யாரைக் கேட்டாலும் இதே பதில். நாடு இருக்கும் நிலையில், நாட்டில் வாழ்வதை விட காட்டிலேயே காலம் கழிக்கலாம் என முடிவு செய்து விட்டீர்கள்? அப்படித்தானே?" என்றான் தித்தன்.

"அப்படி அல்ல! விரைவில் செண்பகப் பொழிலுக்கு நல்ல நேரம் வரப்போகிறது. ஆனாலும் அதுவும் நிலையானதல்ல. எப்படியும் வரும் ஐநூறு ஆண்டுகள் நம் நாட்டுக்கு மிகவும் சோதனையான காலம் தான். அதன் பிறகு படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். " என்றார் குறுமுனி.

"ஐயா! நல்ல வார்த்தை சொன்னீன்ர்கள்! செண்பகப் பொழில் முன் போல மாறுமா? பெண்கள் அச்சமின்றி நடமாட இயலுமா? அது போதும் ஐயா! அது போதும்" என்றான் தித்தன்.

"ஆம்! செண்பகப் பொழில் மிகவும் புகழ் வாய்ந்த நகரமாக விளங்கும். இதன் பெயரே மாறி விடும். இதன் வரலாற்றில் நீ நிலையாக இடம் பிடிப்பாய்" என்றார்.

"நானா? சாதாரண இரவுக் காவலன் நான். நானா வரலாற்றில் இடம் பிடிக்கப் போகிறேன்?"

"ஆம்! நீயே தான் தித்தா! செண்பகப் பொழிலின் வளர்ச்சிக்கு நீயும் உன் நண்பனும் மிகச் சிறந்த தொண்டாற்றப் போகிறீர்கள். செண்பகப் பொழிலில் என் மாணவன் ஒருவன் இருக்கிறான். அவனைச் சந்தித்துக் கேளுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என அவன் சொல்வான்" என்றார்.

"உங்கள் மாணவரா? அவர் பெயர் என்ன? எங்கே வசிக்கிறார்? சொல்லுங்கள் ஐயா! நாங்கள் உடனே சென்று அவரைப் பார்க்கிறோம்." என்றான் வேலன் துடிப்பாக.

"எல்லாவற்றையும் நானே சொல்லி விட்டால் எப்படி? உங்கள் செயலும் வேண்டும் அல்லவா? என் மாணவன் பெயர் விந்தன். அவனைக் கண்டு பிடித்து நான் சொன்னேன் என்று சொல்லுங்கள். உங்களுக்கு உதவுவான்." என்றார்.

"சரி! அப்படியே செய்கிறோம். நான் பிறந்தது முதல் செண்பகப் பொழிலில் தான் இருக்கிறேன். ஆனால் விந்தன் என்ற பெயரில் ஒருவரும் இருப்பதாகத் தெரியவில்லையே?" என்றான் வேலன்.

"இருக்கிறான்! இருக்கிறான்!! தேடிப்பிடியுங்கள் அவனை! இப்போது நான் ஓய்வெடுக்கும் நேரம் நெருங்கி விட்டது. ஆகையால் நீங்கள் செல்லலாம்" என்றார் அந்த மனிதர்.

அவரை வணங்கி விட்டு மேலும் சில நாழிகைகள் காவல் புரிந்து விட்டு விடி வெள்ளி முளைக்கும் நேரம் செண்பகப் பொழிலை அடைந்தார்கள் நண்பர்கள் இருவரும். வீட்டின் கதவைத் திறந்து படுத்து சூரியன் மேலே வரும் வரை நன்றாக உறங்கினான் தித்தன். அதிகாலை கதவை யாரோ தட்ட விழித்துக்கொண்டான்.

"ஐயா! உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இன்று அதிகாலை நாலரை மணிக்கு. தாயும் சேயும் நலம்! இதனை உங்கள் மனைவி வீட்டார் சொல்லி அனுப்பினார்கள்." என்று சொன்னான் ஒரு ஆள். அவனுக்கு கையில் இருந்த பொன்னில் மூன்றை எடுத்துக்கொடுத்து விட்டு மகிழ்ச்சியோடு நீராட ஓடினான் தித்தன்.
 
Interesting start.. Focusing on Women empowerment.. suspense already started...
Waiting for the action from THITHAN and his friend... Also from those Lead Female Characters...
 
Interesting start.. Focusing on Women empowerment.. suspense already started...
Waiting for the action from THITHAN and his friend... Also from those Lead Female Characters...
Thank you!
 
அத்தியாயம் 2:

தித்தனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அழகான ஆரோக்கியமான ஆண் குழந்தை. மனைவி கல்யாணி சோர்ந்து காணப்பட்டாள்.

"அத்தான்! எப்படி இருக்கிறான் நம் மகன்?"

"அவனுக்கென்ன கல்யாணி! அழகும் ஆரோக்கியமுமாக இருக்கிறான். நீ தான் சோர்ந்து காணப்படுகிறாய்."

"ஆம் அத்தான்! குழந்தை பிரண்டு விட்டதால் சற்றே பிரச்சனை ஏற்பட்டது. இறைவன் அருளால் தாதி வெள்ளையம்மாள் வந்து எப்படியோ என்னையும் காப்பாற்றிக் குழந்தையையும் காப்பாற்றி விட்டாள்."

"மிகவும் நன்று! அவளுக்கு ஏதேனும் பரிசு அளிக்கிறேன்."

கல்யாணியின் தாய் வந்தாள். மருமகனும் மகளும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு சற்றே ஒதுங்கி நின்றாள்.

"என்னிடம் என்ன வெட்கம் அத்தை? நான் உங்கள் மகன் போல அல்லவா?" என்றான் தித்தன்.

"உண்மை தான்! ஆனாலும் சம்பிரதாயம் என்ற ஒன்று இருகிறதல்லவா?"

"சரி உங்கள் விருப்பம்!"

"வந்து..வந்து...இப்போது கல்யாணியை குளிக்க வைத்து குழந்தையையும் குளிக்க வைக்க வேன்டும். ஆகையால் நீங்கள்....தவறாக எண்ணக் கூடாது"

"அதற்கென்ன? நான் வெளியில் இருக்கிறேன். இல்லையென்றால் மாலை வந்து பார்க்கிறேன். அருகில் தானே எங்கள் வீடும். கல்யாணி எப்போது வீட்டுக்கு வருவாள்?" என்றான் ஆர்வமாக.

" இப்போது தான் பிரசவம் ஆகியிருக்கிறது. உடல் நலம் தேற வேண்டிய நேரம் இது. பச்சை உடம்பு! எப்படியும் நான்கு மாதங்களாவது ஆகும். உங்களுக்குக் குழந்தையைப் பார்க்க வேண்டுமானால் எந்நேரமும் வரலாம். ஆனால்..."

"புரிகிறது அத்தை! கல்யாணி! நான் சென்று வரவா கண்ணே!" என விடை பெற்று வெளியில் வந்தான். தெருவில் காற்று அடித்து புழுதியைக் கிளப்பிக்கொண்டிருந்தது. அந்தப் புழுதியில் எதிரே யாரோ நடந்து வந்தார்கள்.

"ஐயா! இங்கே கல்யாணி என்பவரின் வீடு எங்கே இருக்கிறது?" என்றான் அந்தத் தலைப்பாகை அணிந்த ஆள்.

"இது தான் கல்யாணியின் வீடு. அவள் என் மனைவி தான். நீங்கள் யார் ஐயா?" என்றான் தித்தன்.

"மிகவும் நல்லதாகப் போய் விட்டது. நான் வந்ததே உங்களைத் தேடித்தான்." என்றான் அந்த ஆள்.

"என்னையா? என்னைத் தேடி வர வேண்டுமானால் மேட்டுத்தெருவில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு அல்லவா வர வேண்டும்? இங்கு ஏன் வந்தீர்?"

"ஐயா! உங்களைத் தேடி நீங்கள் சொன்ன மேட்டுத்தெருவுக்குத்தான் போனேன். நீங்கள் உங்கள் குழந்தையைக் காண இங்கே வந்திருக்கிறீர்கள் எனச் சொன்னதால் வந்தேன்."

"சரி! யார் நீங்கள்? என்னைத் தேடி வந்த காரணம் என்ன?"

"ஐயா! என் பெயர் சிவநேசன். என் குரு விந்தையன் தான் என்னை அனுப்பி உங்களை அழைத்து வரச் சொன்னார்"

"என்ன? விந்தையனா? அவருக்கு எப்படி என்னைத் தெரியும்?"

"ஐயா! என் குரு பெரிய ஞானி! முக்காலமும் உணர்ந்தவர். அவருக்கு எப்படி உங்களைத் தெரியும்? உங்களை ஏன் அழைத்து வரச் சொன்னார் போன்ற விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. தயவு செய்து வருகிறீர்களா?"

தயங்கினான் தித்தன்.

"இவர் யாரோ என்னவோ? இவர் சொல்லும் விந்தையன் எப்படிப்பட்டவரோ? இது ஏன் கொள்ளையர்களின் சதியாக இருக்கக் கூடாது? தனியாக அழைத்துப் போய் ஏதாவது சதி வேலையில் ஈடுபடும் எண்ணம் இருந்தால் நான் எச்சரிக்கையாக இருப்பது நல்லதல்லவா?" என யோசித்தான்.

"என்ன யோசிக்கிறீர்கள் ஐயா? கிளம்புங்கள்"

"வருவதில் தயக்கமில்லை. ஆனால் என் நண்பன் வேலனும் வரலாமா?"

"தாராளமாக வரலாம்."

"ஐயா! ஏற்கனவே எனக்கொரு பணி இருக்கிறது. அது விந்தன் என்பவரைத் தேடி அலைவது. அதனைச் செய்யச் சொல்லி குள்ளமான ஒரு நபர் கூறினார். அவரைத் தேடி சந்தித்து விட்டு பிறகு வருகிறோமே?" என்றான்.

கடகடவெனச் சிரித்தான் சிவநேசன்.

"உங்களை என்னவென்று சொல்ல? தேடிய மூலிகை காலில் தென்பட்டது என்பார்களே? அது போல நீங்கள் தேடும் நபர் வேறு யாரும் அல்ல. என் குருவே தான். நீங்கள் சொன்னது அவரது இயற்பெயர். மரியாதை கருதி ஐயன் சேர்த்தோம். இப்போது அவர் அனைவருக்கும் விந்தையன் ஆகி விட்டார்" என்றான்.

சொல்லத்தெரியாத ஏதோ ஒரு உணர்ச்சி தோன்றியது தித்தனுக்கு. நாமாகத் தேட வேண்டிய அவசியமே இன்றி அவரே என்னை அழைக்கிறார் என்றால் நிச்சயம் அவர் தெய்வாம்சம் பொருந்தியவராகத்தான் இருக்க வேண்டும். வேலனையும் அழைத்துச் சென்று பார்த்தால் என்ன?" என எண்ணினான்.

"போகலாமா?" என்றான் சிவநேசன்.

"போகும் வழியில் என் நண்பனையும் அழைத்துச் செல்லலம்" எனக் கூறி நடந்தான் தித்தன். முன்னால் சென்றான் சிவநேசன். வேலனும் இணைந்து கொள்ள மூவரும் கடுமையான அந்த வெயிலையும் அதனைத் தணிக்கும் குளிர் காற்றையும் அனுபவித்தபடி நடந்தனர். கிட்டத்தட்ட ஊரில் எல்லை வந்து விட்டது.

"எங்கே உங்கள் குருவின் வீடு?" என்றான் வேலன்.

"குருவின் வீடு எனச் சொல்ல முடியாது. ஆசிரமம் என்று வேண்டுமானால் சொல்லலாம். மக்களின் தொந்தரவு அதிகம் இருக்கக் கூடாது என ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழ்கிறார் குரு நாதர்" என்றான் சிவநேசன்.

சற்று தூரம் ஒற்றையடிப்பாதையில் நடந்தார்கள். சிற்றாறு ஐந்து கிளைகளாப் பிரிந்து விழும் அழகான இடம். அதற்கு முன்னே பக்கவாட்டில் கதவு ஒன்று இருந்தது. அதனைத் திறந்து கொண்டு சென்றான் சிவநேசன். உள்ளே மிகவும் குளுமையாக மரங்கள் நிறைந்து காணப்பட்டது. ஆங்காங்கே சிறு ஓலை வேயப்பட்ட குடில்கள். அகவும் மயில். குயிலோசை என அந்த இடமே அழகின் இலக்கணமாக விளங்கியது. மூன்று படிகள் ஏறி கதவே இல்லாத அந்த வட்டமான கூடத்தின் ஓரத்தில் நின்றான் சிவநேசன்.

"ஐயா! நீங்கள் சொன்னது போல தித்தனை அழைத்து வந்திருக்கிறேன். உடன் அவரது நண்பன் வேலனும் இருக்கிறார்" என்றான் சிவநேசன் மரியாதையாக.

"சரி! அவர்களை அழைத்து வா" என்ற கம்பீரமான ஆனால் மென்மையான குரல் கேட்டது. கண் சாடை காட்ட தித்தனும், வேலனும் உள்ளே சென்றார்கள். அந்த வட்டமான கூடத்தின் நடுவே சற்றே உயரமாகப் போடப்பட்டிருந்த பலகையில் அமர்ந்திருந்தார் விந்தையன். தாடி, மீசை புருவம் என எல்லாமே நரைத்திருந்தது. ஆனாலும் முகத்திலோ கரங்களிலோ சுருக்கமே இல்லை. முதுகு கூட வளையாமல் நிமிர்ந்து அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் தன்னையும் அறியாமல் வணங்கினார்கள் இரு நண்பர்களும்.

"நலமே விளைக" என வாழ்த்தினார் விந்தையன். அமரச் சொல்லி கை காட்டினார். அவருக்கு எதிரே போடப்பட்டிருந்த இரு பலகைகளில் அமர்ந்து கொண்டனர்.

"உங்களோடு பேசச் சொல்லி எனக்கு கனவு மூலம் குரு உத்தரவு வந்தது. நீங்கள் யார்? உங்களது பணி என்ன? எல்லாம் விசாரித்து விட்டேன். ஆனால் என்னை எதற்கு நீங்கள் தெடுகிறீர்கள் எனப் புரியவில்லை. குருவின் கட்டளை என்பதால் உங்களை அழைத்து வரச் செய்தேன்." என்றார் விந்தையன்.

"ஐயா! எங்களுக்கு உங்களையே இப்போது தான் தெரியும். உங்களது குருவைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் நேற்று இரவு ஒரு சம்பவம் நடந்தது. அதில் குள்ளமான ஒரு நபர் உங்களை வந்து பார்க்கும்படி சொன்னார். நாங்களே உங்களை எங்கே தேடுவது எனத் தயங்கிய போது நீங்களே அழைத்து விட்டீர்கள்" என்றான் தித்தன் பணிவாக.

"என்ன? என்ன? என்னைப் பார்க்க வரச் சொல்லி குள்ளமான ஒருவர் கூறினாரா? அதுவும் முழு நிலவு நாளிலா? சற்றே விவரமாகச் சொல்லுங்களேன்" என்றார் விந்தையன். அவரது குரலில் பரபரப்பு இருந்தது.

"ஐயா! என் பெயர் தித்தன். இரவு நேரக் காவலன்" என ஆரம்பித்து எல்லாவற்றையும் கூறினான் தித்தன். இடை இடையே வேலனும் சில விட்டுப் போன விவரங்களைக் கூறி வந்தான். அவர்கள் பேசப் பேச விந்தையன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். கண்களைத் துடைத்துக்கொண்டார். தித்தன் பேசி முடித்ததும் எழுந்து வந்தார். பெரியவர் எழுந்ததைத் தொடர்ந்து தித்தனும் வேலனும் எழுந்து நின்றனர். இருவரையும் அணைத்துக்கொண்டார் விந்தையன்.

"நீங்கள் இருவரும் என்ன பேறு பெற்றீர்களோ தெரியவில்லை! குருவின் தரிசனம் கிடைத்திருக்கிறதே" என்றார்.

சிவநேசன் அவரை ஆசுவாசப்படுத்தி குடிக்க நீர் கொடுத்தான்.

"ஐயா! எங்களுக்குப் புரியவில்லை. நாங்கள் சந்தித்ததவர் தான் உங்கள் குருவா?" என்றான் தித்தன்.

"இளைஞர்களே! அவர் சாதாரண மனிதரில்லை. அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த என் 13ஆம் தலைமுறை குரு, தமிழ் காத்த அண்ணல் அகத்தியர் தான் அவர்." என்றார். பேசப் பேசவே குரல் கம்மியது.

விந்தையனின் பேச்சின் தாக்கம் தெரிய அப்படியே அமர்ந்திருந்தார்கள் இளைஞர்கள்.

"நாம் பார்த்தது அகத்திய முனிவரா? அவரா அத்தனை எளிமையாக இருந்தார்? என்ன அன்பான பேச்சு? எவ்வளவு அக்கறை நிறைந்த வார்த்தைகள்? என் மகன் பிறந்த நேரம் எனக்கு மிகப்பெரிய முனிவரின் தரிசனம் கிடத்தது" என எண்ணிக்கொண்டிருந்தான் தித்தன்.

"தித்தா! நீ உண்மையிலேயே கொடுத்து வைத்தவன். எனக்குக் கூட நிஜத்தில் தரிசனம் தராத குருநாதர் உங்களுக்கு தரிசனம் தந்தது மட்டுமல்ல என்னை வந்து காணவும் அறிவுறுத்தி இருக்கிறார் என்றால், உங்களது நல்லூழ் எவ்வளவோ" என்றார்.

சற்று நேரம் அமைதி நிலவியது.

"தித்தா! நீ ஏதாவது கேள்வி எழுப்பினாயா குருவிடம்?" என்றார் விந்தையன்.

"ஆம் ஐயனே! செண்பகப் பொழிலின் எதிர்காலம் எப்படி இருக்கும் எனக் கவலைப்பட்டேன். அதோடு பெண்களும் தெருவில் நடமாட வேண்டும், அவர்களுக்கு விருப்பமானதைச் செய்ய வேண்டும் என சொன்னேன். அப்போது தான் குரு நாதர் உங்களை வந்து காணும் படி கட்டளையிட்டார்." என்றான்.

தாடியை நீவிக்கொண்டு யோசித்தார் விந்தையன்.

"அப்படியா? மேலும் விவரங்கள் சொல்ல முடியுமா?"

"ஐயா! மதுரையில் எப்போது பாண்டியர்கள் மீண்டும் நிலையான ஆட்சி செய்வார்கள் எனவும் கேட்டோம்" என்றான் வேலன்.

பளிச்சென மலர்ந்தது விந்தையனின் முகம்.

"அப்படிச் சொல்லுங்கள்! ஒரு வாரத்திற்கு முன்பு தான் மதுரை பட்டத்தரசி அங்கையற்கண்ணி தேவியாருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகச் செய்தி வந்தது. அதன் சாதகத்தை எப்போது கணிப்பது என யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் குருவின் அருள்வாக்கு வந்தது" என்றார்.

"ஐயனே! மதுரை எங்கோ இருக்கிறது. அங்கு குழந்தை பிறந்த செய்தி உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்றான் வேலன்.

மெல்ல நகைத்தார் விந்தையன்.

"அங்கே என் மாணவர்களில் ஒருவனான கொடுங்கண்ணன் இருக்கிறான். அவன் அரசனுக்கு முக்கியமான அமைச்சன். சாதகம் கணிக்க அவன் தான் செய்தி அனுப்பி வைத்தான்." என்றார்.

தித்தனும் வேலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

எங்கோ தென்னகத்தின் ஓரத்தில் இருக்கும் செண்பகப் பொழிலில் இருந்து கொண்டு மதுரை அரசர் வரை ஆள் வைத்திருக்கிறாரே இந்த மகான்" என எண்ணிக் கொண்டனர் இருவரும். ஆனால் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை.

"சிவநேசா! அந்தச் சுவடிக்கட்டுகளை எடுத்து வா" என்றார் அந்த மகான்.

சிவநேசன் அரையடி உயரம் இருந்த இரு சுவடிக்கட்டுகளை எடுத்து வந்து முன்னால் பணிவோடு வைத்தான்.

"தித்தா! வேலா! இதில் இரு சுவடிக்கட்டுக்கள் இருக்கின்றன. பொதுவாக அரச குலத்தில் குழந்தை பிறக்கும் போது பொதுப்பலன் பார்க்க ஒரு கட்டும், அந்தக் குழந்தையின் எதிர்காலம் குறித்துப் பார்க்க இன்னொரு கட்டும் பயன் படும். இப்போது உங்கள் முதல் கேள்விக்கு வருகிறேன். தித்தா நீ சொல், குருவிடம் என்ன கேட்டாய்?"

"மதுரையில் மீண்டும் எப்போது நிலையான ஆட்சி அமையும் எனக் கேட்டேன் ஐயனே! தவறானால் மன்னியுங்கள்" என்றான் தித்தன் பணிவாக.

"இல்லை இல்லை! தவறொன்றுமில்லையப்பா! இந்த பிரபஞ்சத்தில் எந்த விஷயமுமே காரணமின்றி நடப்பதில்லை. அனைத்துமே கண்ணுக்குத் தெரியாத நூலால் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால் கவலை கொள்ளத் தேவையில்லை. சரி குழந்தையின் பிறந்த நேரத்தை வைத்து பொதுப்பலன் பார்க்கிறேன்" என்றார்.

முதலில் இருந்த சுவடிக்கடை எடுத்து பயபக்தியோடு பிரித்து ஒவ்வொரு ஏடாகத் தள்ளிக்கொண்டே வந்தார். சில ஏடுகளே மிஞ்சியிருந்த நிலையில் ஒரு ஏட்டைக் கையில் எடுத்துப் படித்தார். படிக்கப் படிக்க அவர் முகம் சுருங்கியது.

"என்ன இது? பலன் இப்படி வந்திருக்கிறதே?" என்றார். தாடியை வருடியபடி எதிரில் அமர்ந்திருந்த இரு இளைஞர்களையும் ஏறிட்டார்.

"ஐயனே! என்ன பலன்? நாங்களும் தெரிந்து கொள்ளலாமா?" என்றான் வேலன் பணிவாக.

தலையை ஆட்டிவயர் மேலும் ஒரு முறை கையிலிருந்த ஏட்டைப் படித்தார். மீண்டும் ஒரு முறை பிறந்த நாழிகையையும் ஏட்டில் இருந்த கணக்கையும் ஒப்பு நோக்கினார். முகம் ஏமாற்றத்தைத்தான் பிரதிபலித்தது.

"நல்ல செய்தி வரும் என எதிர்பார்த்தேன். அதுவும் குரு அகத்திய மாமுனியே உங்களுக்குக் காட்சியளித்ததால் நிச்சயம் நல்ல பலன் தான் இருக்கும் என இறுமாந்தேன். என் இறுமாப்புக்கு சரியான அடி." என்றார்.

"ஐயா! ஏடு சொல்லும் செய்தி என்ன?"

"ஹூம்" என நீண்ட பெருமூச்சொன்றை உதிர்த்து விட்டுப் பேசினார்.

"என்னவென்று சொல்வது? இளவசரன் சடையவர்மன் பிறந்த நேரத்தைக் கொண்டு பொதுப்பலன் பார்த்தால் நல்ல பலனே இல்லையப்பா. குழந்தை பிறந்த ஒரு மாதத்துக்குள் மதுரையை விட்டு வெளியேற வேண்டிய நிலை வரலாம். அதுவும் நிரந்தரமாக என்றல்லவா பலன் இருக்கிறது?" என்றார் கவலையுடன்.

கேட்டுக்கொண்டிருந்த தித்தனுக்கு தலையில் அடித்தது போல இருந்தது.

அப்படியானால்..மீண்டும் மதுரையில் பாண்டியர் ஆட்சி மலரவே மலராதா? செண்பகப் பொழிலில் மட்டுமல்லாமல் நெல்லையிலும், இன்னும் பிற இடங்களிலும் மக்கள் அச்சமின்றி வாழவே முடியாதா? என எண்ணி ஏங்கினான். ஏமாற்றத்தில் ஆழ்ந்திருந்த அவன் மனதில் சிறு நம்பிக்கை ஒளி தோன்றியது.

"ஐயா! நான் குரு நாதரிடம் இரு கேள்விகள் கேட்டேன். அதில் முதல் கேள்விக்கான பதில் கிடைத்து விட்டது. ஆனால் இரண்டாவது கேள்விக்கான பதில் கிடைக்க வில்லையே? ஒரு வேளை அந்தக் கேள்விக்கு நற்பலன் இருக்கலாம் அல்லவா?" என்றான் சற்றே உற்சாகமாக. அப்போது செம்பொத்து எனப்படும் பறவை அந்த ஆசிரமத்தில் மாமரத்தில் வந்து அமர்ந்தது. அதனைக் கண்ட விந்தையன் மகிழ்ச்சி பொங்கக் கூவினார்.

"நீ சொல்வது சரி தான் தித்தா! உன் இரண்டாவது கேள்வி என்ன? சீக்கிரம் சொல்" என்றார்.

"செண்பகப் பொழில் எப்போது உலகமே போற்றும் நகரமாக மாறும்? என்பதே என் இரண்டாவது கேள்வி. இதற்குக் கூட முனிவர் பிரான் கூடிய விரைவில் அது நடக்கும், அதுவும் செண்பகப் பொழிலின் பெயரே மாறி வரலாற்றில் நிலையாக இருக்கும் என்றாரே?" என்றான்.

மகிழ்ச்சியே உருவாக இரண்டாவது சுவடிக்கட்டிலிருந்து சுவடிகளைத் தேடினார் விந்தையன். பாதியில் அவர் தேடிய சுவடி அகப்பட வாசித்தார். வாசிக்க வாசிக்க அவரது முகம் மகிழ்ச்சியால் பூரித்தது. அவரையே பார்த்தபடி இரு நண்பர்களும் காத்திருந்தனர்.
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom