அத்தியாயம் 8:
நால்வரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். ஏதோ சத்தம் கேட்க முதலில் கண் விழித்தவன் சிவநேசன் தான். அவனுக்கு யாரோ சிலர் தங்கள் மரத்தை நெருங்குவது போல சத்தம் கேட்டது. ஆனால் உறுதியாகவும் சொல்ல முடியவில்லை. கவனமாகக் கேட்டான். மீண்டும் சரசரவென சத்தம். இம்முறை தித்தனும் சட்டென விழித்துக்கொண்டான். வானத்தில் அரை நிலவு தன்னால் இயன்ற அளவு வெளிச்சத்தைக் கொடுத்தது. அந்த வெளிச்சத்தில் பார்க்க எதுவும் தென்படவில்லை. ஆனாலும் தித்தனும் உள்ளுணர்வு ஏதோ ஆபத்து நெருங்குகிறது எனச் சொன்னது. சட்டென நன்கு விழிப்புத் தட்ட எழுந்தான் தித்தன். இம்முறை நிச்சயமாகக் காலடி ஓசைகள் தான். வேலனும் அவனது கூட்டாளிகளும் திட்டமிட்டபடி தாக்க வந்து விட்டார்கள் போலும் என எண்ணினான். சிவநேசனைப் பார்க்க அவனது முகத்திலிருந்து எதையும் ஊகிக்க முடியவில்லை.
மரத்தைச் சுற்றி யாரோ நிற்பது போலத் தென்பட அதிர்ந்து போனான் தித்தன். அவன் தாக்குதலை எதிர்பார்த்தான் என்றாலும் இத்தனை விரைவாக அதிலும் காட்டில் எத்தனையோ இடங்கள் இருக்க மிகச் சரியாக இவர்கள் உறங்கும் இடத்தைத் தேடி வந்து சுற்றி நிற்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. சுதாரித்துக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் கண்ட காட்சி கண்களில் நெருப்பு வைத்தது போல இருந்தது. வெளியன் ஒரு சிறு குச்சியில் கங்கு உண்டாக்கி அதனை அடையாளமாகப் பிடித்துக்கொண்டிருந்தான். இதயம் ஒரு முறை அதிர்ந்து அடங்கியது தித்தனுக்கு. அதே நேரம் அந்தக் காட்சியை சிவநேசனும் கண்டி விட்டான். அவன் முகம் குழப்பம், ஆத்திரம் என எல்லாவற்றையும் பிரதிபலித்தது.
வெளியனா? முட்டாள் என நாங்கள் நினைத்த வெளியனா ஒற்றன்? அவனா எங்களைக் காட்டிக்கொடுத்தான்? ஏன்? குருகூரானும் ஒரு வேளை ஒற்றனோ? முட்டாள்கள் போல நடித்தார்களோ? என்ற ஐயம் தோன்ற தாழ்ந்த கிளையைப் பார்த்தான் தித்தன். எதுவுமே தெரியாமல் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் குருகூரான். அப்படியானால் வெளியன் மட்டும் தான் ஒற்றனா? இது தெரியாமல் அவனிடம் அசல் ஓலையைக் கொடுத்து ஏமாந்து விட்டாரே குருநாதர்? இப்போது என் முதல் கடமை அந்த அசல் ஓலையைக் காப்பாற்றுவது தான். சிவநேசனையும், குருகூரானையும் காப்பாற்றுவது பிறகு தான் என முடிவு செய்து கொண்டான்.
அந்த நேரத்திற்குள் கண்ணைக் கூசும் வெளிச்சம் வர கண்களை சற்றே மூடினான். திறக்கும் போது தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் வேலன், பிரம்ம நாயகி, அவளது தோழி முல்லை, மற்றும் வேலனுக்கும் தித்தனுக்கும் தோழனான தங்கமணி நின்றிருந்தனர். வேதனையால் இதயம் சுருங்கியது தித்தனுக்கு. போயும் போயும் என் நண்பர்களும் சகோதரிகளுமா இப்படி துரோகிகளாக மாற வேண்டும்? என எண்ணிக் கொண்டான். ஆனால் உள்ளம் வலுவாக ஆனது. என்ன ஆனாலும் சரி, அசல் ஓலை அவர்கள் கைக்குப் போகக் கூடாது. இதில் யார் உயிர் போனாலும் சரி. என தீர்மானித்துக்கொண்டான். இதற்குள் குருகூரானும் விழித்துக் கொண்டான்.
கீழே நின்றிருந்த வேலன் கட்டளையிட்டான்.
"முதலில் தித்தனைக் குறி வையுங்கள். அவனது கை கால்களைக் கட்டி ஓரமாகப் போடுங்கள். அதன் பிறகு நமது வேலை சுலபம்." என்று கத்தினான் வேலன். அவனது குரல் மிகுந்த பலத்தைக் கொடுக்க மரத்திலிருந்து குதித்து இறங்கினான் தித்தன்.
"அது அத்தனை சுலபமில்லை வேலா! நீங்கள் எத்தனை பேர் இருந்தாலும் என் வீரத்துக்கு ஈடு கொடுத்தே ஆக வேண்டும்."
"தித்தா! இவர்களோடு என்ன பேச்சு? தாக்கு! உன் கையில் ஈட்டி இருக்கிறதல்லவா? கொல் அவர்களை" என்று கத்தினான் சிவநேசன்.
அதற்குள் தங்கமணியும், முல்லையும் தித்தனைத் தாக்கத் தொடங்கினார்கள். முல்லைக்கு தங்கமணி பயிற்சி அளித்திருப்பான் போலும் மிகத் திறமையாகத் தாக்கினாள். அவர்களோடு இப்போது வேலனும், பிரம்ம நாயகியும் சேர்ந்து கொண்டார்கள். சிவநேசன் ஒரு பக்கம் தன்னால் இயன்ற அளவு தாக்கினான்.
"தித்தா! நீ வீரன் தான். ஆனால் நால்வருக்கு முன்னல் உன்னால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. நானும் குருகுருகூரானும் அசல் ஓலையோடு தப்பித்துப் போய் விடுகிறோம். நீ இவர்களை கவனித்துக்கொள். குருகூரா! ஓலையை என்னிடம் கொடு" எனக் கத்தினான்.
"வேலா! நீ தித்தனைக் கட்டிப் போடு! சிவநேசன் கையில் அசல் ஓலை போகாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். முல்லை நீ எனக்கு உதவு" என்று கத்தினான் வெளியன்.
"சீ! நீ ஒரு துரோகி! உன்னை நம்பி குருநாதர் ஓலையைக் கொடுத்தாரே? அவரது நம்பிக்கையை இப்படி நாசப்படுத்துகிறாயே?" என்றான் தித்தன். அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை.
எதுவுமே பேசாமல் அவன் மேல் பாய்ந்தான் வெளியன். மிகுந்த திறமையோடு தித்தனின் வாள் வீச்சுக்குத் தப்பித்தான். சிறு சிராய்ப்பு கூட அவனுக்கு ஏற்படவில்லை. அங்கே சிவநேசனும் மிகுந்த வீரத்தோடு போரிட்டான். ஆனால் அவனால் வெளியனின் வெறித்தனமான தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. குருகூரான் ஓடப்பார்த்தான். ஆனால் அவனை முல்லை கீழே விழ வைத்து கால்களையும் கைகளையும் கொடிகளால் கட்டிப் போட்டு விட்டாள்.
தித்தனும் வேலனும் சரிக்குசமமாகப் போராடிக் கொண்டிருந்தனர். நண்பன் என இருவருமே பார்க்கவில்லை. அப்போது எதிர்பாராத காரியத்தை பிரம்ம நாயகியும் முல்லையும் செய்தனர். தித்தனுக்குப் பின் புறமாகச் சென்று அவனது காலை இடறி விட்டாள் பிரம்ம நாயகி. தடேரென்ற சத்தத்தோடு கீழே விழுந்தவனை எழ முடியாமல் கைகளை இழுத்துக்கட்டினாள் முல்லை. அதற்கு உதவி செய்தான் வேலன். தன்னைக் கட்ட விடாமல் போராடினான் தித்தன். ஆனால் கீழே விழுந்த அதிர்ச்சி, அதோடு பெண்கள் பின்னால் இருந்து தாக்கியதன் அதிர்ச்சி என எல்லாம் சேர அவனது வலு குறையத் தொடங்கியது. இப்போது முல்லை அவனது கால்களையும் சேர்த்துக் கட்டி விட்டாள். சிவநேசன் பாவம்! தனியாகப் போராடிக் கொண்டிருந்தான். சட்டென குனிந்து வெளியனின் வாள் வீச்சுக்குத் தப்பித்தவன், நழுவி குருகூரானை நோக்கி ஓடினான். அவனது இடுப்புக் கச்சையில் அவசரமாகத் தேடினான். அவன் எதிர்பார்த்த ஓலை கிடைக்கவில்லை.
"என்ன தேடுகிறாய் நீ சிவநேசா? நீ தேடும் ஓலை எப்போதோ என்னிடம் வந்து விட்டது. உன் முயற்சிகள் பலன் தராது. மரியாதையாக சரணடைந்து விடு." என்றான் வேலன்.
"இரவில் தாக்கும் உன்னைப் போல கோழையிடமா என்னைச் சரணடையச் சொல்கிறாய். ஒரு நாளும் இல்லை. முடிந்தால் என்னைப் பிடியுங்கள்" என்று கத்தியபடி இருளில் தாறுமாறாக ஓடினான். அவனைத் தொடர்ந்து சென்றான் வெளியன். சற்று நேரத்தில் தண்ணீரில் தொபுகடீர் என யாரோ விழும் சத்தம் கேட்டது. மூச்சைப் பிடித்தபடி பார்த்திருந்தான் தித்தன். சில நிமிடங்களில் ஈர உடையோடு வெளியன் வந்தான்.
"பக்கத்தில் ஓடும் காட்டாற்றில் குதித்து விட்டான் கோழை! நானும் தொடர்ந்து செல்லப் பார்த்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. மன்னித்து விடு வேலா!" என்றான்.
"ஓ! இங்கே ஓடும் காட்டாற்றிலா குதித்தான்? மிகவும் நல்லதாகப் போய் விட்டது. சற்று தூரம் சென்றால் அங்கே முதலைகள் உண்டு. இன்றைய இரவு விருந்து அவைகளுக்கு சிவநேசன் தான். கவலை வேண்டாம்." என்றான் வேலன்.
கண்ணீரும் துக்கமும் போட்டி போட்டு வந்தன. "என் அருமை நண்பனே! நாட்டுக்காக நீ உன் உயிரையும் விட்டு விட்டாய்! ஆனால் நான் இப்படிக் கோழை போலக் கட்டுண்டு கிடக்கிறேன்." என எண்ணிக் கொண்டான். வேலன் நெருங்கி வந்தன். அவனைப் பார்க்கப் பிடிக்காமல் கண்களை மூடிக்கொண்டான்.
"என்னை மன்னித்து விடு நண்பா! உன்னை கட்டிப் போடும் நிலை உண்டாகி விட்டாதே?" என்றான் வேலன்.
கண்கள் நெருப்பைக் கக்க வெறித்து நோக்கினான் தித்தன்.
"உன் துரோகம் செய்த வாயால் என்னை நண்பன் என அழைக்காதே! ஏன் என்னை இன்னமும் உயிரோடு விட்டு வைத்திருக்கிறாய்? கொன்று விடுவது தானே? ஏனம்மா பிரம்ம நாயகி? நம் குலத்தில் பெண்க்ள் செய்யும் வேலையா இது? முல்லை உன்னையும் நான் என் தங்கை போல பாவித்தனே? அதற்கு நீ கொடுத்த பரிசா இது?" என்றான்.
அவனை நெருங்கி வந்தார்கள் முல்லையும் பிரம்ம நாயகியும்.
"எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள் அண்ணா! எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. உங்களைக் கட்டிப் ப்படுவது மிகவும் முக்கியமாகப்பட்டது எங்களுக்கு." என்றாள் முல்லை.
"உங்களைச் சொல்லி என்ன பயன்? ஏனப்பா வெளியா? ஒன்றுமே தெரியாதவன் போல இருந்து விந்தையன் ஆசிரமத்தில் புகுந்து உளவு வேலை செய்கிறாயே? நீ யாருக்காக வேலை செய்கிறாய்? உன்னைப் பற்றி குருநாதர் அறிந்தால் எவ்வளவு வேதனைப் படுவார்? ஏன் இந்த நம்பிக்கை துரோகம்?" என்றான் தித்தன்.
மௌனமாக நின்றான் வெளியன்.
"உண்மையான வீரன் நீ என்றால் என் கட்டுகளை அவிழ்த்து விடு வேலா! நீயும் நானும் நேருக்கு நேர் மோதுவோம். அப்போது பார்க்கலாம் உன் வீரத்தை. இப்படிக் கூட்டமாக சேர்ந்து தாக்க நீ என்ன குள்ள நரியா?" என்றான் தித்தன் கோபமாக.
"நீ எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்! ஆனால் உன் கட்டை அவிழ்த்து விட முடியாது. என்றான் வேலன்.
"வெளியா! உன்னை சாதாரண சமையற்காரன் என நம்பினேனே? என்னை உயிரோடு விடும் தவறைச் செய்யாதே! அப்படிச் செய்தால் உன் துரோகத்தைப் பற்றி குருநாதரிடம் சொல்லிவிடுவேன். உனக்கு அவரது சாபம் கிட்டும்." என்றான் ஆத்திரம் தலைக்கேற.
"குருநாதரிடம் என்னவென்று சொல்லுவாய்?" என்றான் வெளியன் அமைதியாக.
"நீ ஒரு குரு துரோகி என்று! உளவாளி என்று சொல்லுவேன்."
"நீ சொல்வதை அவர் நம்ப மாட்டார். ஏனெனில் நான் யாரென அவருக்கு ஏற்கனவே தெரியும்" என்றான் மீண்டும் அமைதியாக.
"என்ன? என்ன?"
"ஆம்! தித்தா! நான் உளவாளி என குருநாதருக்கு ஏற்கனவே தெரியும் என்றேன்." என்றான் மெல்லிய குரலில்.
விர்ரென தலை சுற்றியது தித்தனுக்கு. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என அவனுக்குப் புரியவில்லை. குருநாதருக்கு வெளியன் ஒரு உளவாளி எனத் தெரியும் என்பது உண்மையானால் அவர் ஏன் அசல் ஓலையை அவனிடம் கொடுத்தார்? குருநாதரே நாட்டுக்கு துரோகம் செய்வாரா? எல்லாம் தெரிந்திருந்தும் என்னையும் சிவநேசனையும் ஏன் அனுப்ப்ப வேண்டும்? எங்களைக் கொல்வதால் அவருக்கு என்ன லாபம்? ஐயோ! நான் யாருக்கு உண்மையாக இருக்க வேண்டும்? எதுவுமே புரியவில்லையே"
"அதிகம் யோசிக்க வேண்டாம் தித்தா! நீ எப்போதும் என் நண்பன் தான். ஆனால் சில உண்மைகளை நாங்கள் உன்னிடத்திருந்து மறைத்து விட்டோம். அவற்றைத் தெரிந்து கொண்ட பிறகு உனக்கு எல்லாம் தெளிவாக விளங்கி விடும்." என்றான் வேலன்.
"எனக்கு எல்லாம் தெரியும். நீயும் பிரம்ம நாயகியும் சேர ஒற்றர்கள். என் கையில் தான் அசல் ஓலை இருக்கிறதென எண்ணி என்னைத் தாக்க முயன்றீர்கள். உங்கள் சதிக்கு அப்பாவி சிவநேசன் பலியாகி விட்டான்." என்றான் தித்தன்.
"இவை மட்டுமே உண்மை அல்ல நண்பா! இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன நீ தெரிந்து கொள்ள. வெளியனை ஏன் குருநாதர் அனுப்பினார்? உன்னைக் கொல்லக் கூடிய எல்லா சந்தர்ப்பமும் எங்களுக்கு வாய்த்திருந்தும் நாங்கள் ஏன் உன்னைக் கொல்லாமல் கட்டிப் போட்டோம்? உனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, குருகூரானிடமிருந்து ஓலையைக் கைப்பற்றியாக வேண்டும் என ஏன் சிவநேசன் துடித்தான்? ஓலை கிடைக்காது என்றவுடன் ஏன் தப்பித்து ஓடினான்? சொல் தித்தா! இவற்றுக்கெல்லாம் உன்னால் விளக்கம் சொல்ல முடியுமா?" என்றான் வேலன்.
தலை சுழன்றது தித்தனுக்கு. ஒருவனுக்கு எத்தனை அதிர்ச்சிகள் தான் கொடுப்பது? இங்கே என்ன நடக்கிறது? அனைவரும் சேர்ந்து என்னைச் சுற்றி ஏதோ சிலந்தி வலை பின்னியிருக்கிறார்கள் போலவே?
"தித்தா! குருகூரான் கையில் இருப்பது அசல் ஓலை அல்ல! உன் கையில் இருப்பது தான் அசல் ஓலை" என்றான் வெளியன்.
அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் கத்தினான் தித்தன்.
"ஐயோ! என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவிலை. தயவு செய்து சொல்லுங்கள். நீங்கள் உளவாளிகளா? இல்லை குருநாதரே துரோகியா?" என்றான்.
"ஒரு நாளும் நம் குருநதரைப் பற்றி அப்படி நினைக்காதே தித்தா! அவரது அறிவாற்றல், திறமை எல்லாமே பாண்டிய நாட்டிற்குப் பயன்பட வேண்டும் என்ற தீர்மானமான முடிவோடு இருப்பவர் அவர். நாங்களும் துரோகிகள் அல்ல." என்றான் வெளியன்.
ஏதேதோ புரிவது போலத் தோன்றியது. அதே நேரம் மிகவும் குழப்பமாகவும் இருந்தது.
"நீ எங்களைத் தாக்க மாட்டாய் என உத்திரவாதம் கொடுத்தால் உன் கட்டை அவிழ்த்து விடுகிறேன். உன் கையில் இருக்கும் ஓலையைப் படி. பிறகு நீயே புரிந்து கொள்வாய்" என்றான் வேலன்.
வெளியன் கட்டுகளை அவிழ்த்து விட தன் இடுப்புக் கச்சையின் ரகசிய அறையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த ஓலை அடங்கிய மூங்கில் குழலை எடுத்தான். ஓலையை வெளியில் எடுக்கும் போதே இரு சுவடிகள் வந்தன. ஆச்சரியத்துடன் எடுத்தான். அதில் ஒன்றில் அன்புள்ள தித்தா, எனத் தொடங்கியது. பரபரப்புடன் அதை முதலில் எடுத்து வாசித்தான்.
"அன்புள்ள தித்தா,
இந்த ஓலையை நீ வாசிக்கிறாய் என்றால் வேலன், வெளியன், முல்லை மற்றும் பிரம்ம நாயகி ஆகிய நால்வரும் நான் கட்டளையிட்ட காரியத்தை நிறைவேற்றி விட்டார்கள் என்று அர்த்தம். நீ நினைப்பது போல வேலனோ, உன் தங்கை பிரம்ம நாயகியோ உளவாளிகளோ ஒற்றர்களோ அல்ல. அவர்கள் பாண்டிய நாட்டுக்காக உழைப்பவர்கள். இதை நம்புவது உனக்குக் கடினமாக இருக்கலாம். முழுமையாகப் புரிந்து கொள்ள வேலன், வெளியன் மற்றும் இரு பெண்களும் சொல்வதைக் கேள். உன் சந்தேகங்கள் விலகும்.
இப்படிக்கு,
விந்தையன்."
படித்து முடித்தவன் குழப்பம் மிகுந்த விழிகளோடு ஏறிட்டான்.
"படித்து விட்டாயா? இப்போதாவது எங்களை நம்புகிறாயா?" என்றான் வேலன்.
"நம்புகிறேன் வேலா! ஆனால் பல விஷயங்கள் புரிந்தும் புரியாமலும் இருக்கின்றன. அவற்றை விளக்குங்களேன்." என்றான் தித்தன்.
"ஐயாமாரே! இங்கே நான் ஒருவன் கட்டுண்டு கிடக்கிறேன். என்னை மறந்து விட்டு நீங்கள் பாட்டுக்க பேசிக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? வெளியா! நீயும் என்னை மறந்து விட்டாயா?" என்று குரல் எழுப்பினான் குருகூரான். வேகமாகச் சென்று அவனது கட்டையும் அவ்ழ்த்தான் வெளியன்.
"நண்பா! அமர்ந்து கொள்! எல்லாவற்றையும் விவரமாகச் சொல்கிறேன்." என்றான் வேலன்.
அனைவரும் வட்டமாக அமர்ந்தி கொண்டனர்.
"தித்தா! குருநாதர் ஆசிரமத்தில் வெறும் சமையல் செய்யும் வேலைக்காரனில்லை வெளியன். அவன் பாண்டிய மன்னரின் ஒற்றர்களில் ஒருவன். அதுவும் சாதாரண ஒற்றனல்ல. மிகவும் திறமை வாய்ந்தவன். அவன் தான் நமக்கு சேர ஒற்றர்களின் சதியைப் பற்றிக் கூறினான்." என்றான் வேலன். இப்போது வெளியன் தொடர்ந்தான்.
"உனது மகன் தான் துணைவன் என்றும் அவன் தான் இளவரசர் சடையவர்மருக்கு வருங்காலத்தில் உதவ இருக்கிறான் என்ற செய்தியும், இளவரசர் சடையவர்மர் பிறந்த நேரம் அவரால் அதிக நாட்கள் மதுரையில் இருக்க முடியாது என்ற செய்தியும் சேர ஒற்றர்களை சென்றடைந்தது. அது தான் சதியின் தொடக்கப் புள்ளி" என்றான் வெளியன்.
"எப்படி? அந்த விஷயங்கள் அவர்கள் வரை எப்படி எட்டியது?" என்றான் தித்தன்.
"புரியவில்லையா தித்தா? உன்னை நம்ப வைத்து ஏமாற்றிய சிவநேசன் தான் உண்மையிலேயே சேர ஒற்றன். அவன் மூலம் தான் இந்தச் செய்திகள் சேரர்களுக்குப் போயிற்று. அதை வெளியன் கண்டு பிடித்து விட்டான். சிவநேசன் ஒற்றன் என்பதை குருநாதரிடம் தெரிவித்தான். பிறகு தான் அவர் இரு தனிப்பட்ட திட்டாங்களைத் தீட்டினார். வேலன், தங்கமணி மற்றும் அவர்களது காதலிகளை தனியே அழைத்து ஒரு திட்டம், உன்னையும் சிவநேசனையும் அழைத்து வேறொரு திட்டம் எனப் பேசினார்." என்றான் வெளியன்.
"புரியவில்லையே?"
"உன் மகனின் பிறந்த நேரத்தை வாங்கி வருமாறு என்னை வெளியில் அனுப்பினார் நினைவிருக்கிறதா? அப்போது என்னை சந்தித்த வெளியன் சிவநேசனைப் பற்றியும் அவனது சதிக்கூட்டத்தைப் பற்றியும் எடுத்துரைத்தான். அதோடு பிரம்ம நாயகி, முல்லை இருவரின் உதவியையும் கேட்டான்."
"ஏன் பெண்கள்?"
"அவர்களால் ஊருக்குள் இலகுவாகச் செல்ல முடியும். அதோடு மறைந்து கொண்டலும் வெட்கம் எனத்தான் நினைப்பார்கள். அதனால் பல விஷயங்களை ஒற்றியலாம். அதற்காகத்தான் பெண்களைத் தேர்ந்தெடுத்தார் குருநாதர். அது சரியெனவே நிரூபணம் ஆகி விட்டது." என்றான் தங்கமணி.
"நீயும் சிவநேசனும் சென்ற பிறகு நாங்கள் அனைவரும் சென்று குருநாதரை ரகசியமாக சந்தித்தோம். அப்போது தான் சிவநேசனைத் தாக்கும் திட்டமும், உனக்கு என் மீது சந்தேகம் வரும் வண்ணம் செய்யும் திட்டமும் எழுந்தது. அதன்படியே எல்லாம் நடந்தது. உன்னை கொஞ்சம் கூட சந்தேகிக்கவில்லை சிவநேசன். நீங்கள் புறப்படும் நேரம், உண்மையான ஓலை குருகூரானிடம் கொடுக்கப்பட்ட விஷயம் என எல்லாவற்றையும் சிவநேசன் சேர உளவாளிக்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். அவனுக்கு வேலன் மீது கூட சந்தேகம் வரவில்லை. காரணம் பிரம்ம நாயகியின் நடிப்பு." என்றான் வெளியன்.
"ஆ! நடிப்பா? அப்படியானால் நான் உன்னைத் தொடர்ந்து வந்தது உனக்குத் தெரியுமா?"
"நன்றாகத் தெரியும் அண்ணா! குருநாதரின் திட்டமே அது தானே? அவர் எண்ணியபடியே நீங்கள் செய்தீர்கள். நீங்கள் பயணப்படும் போது இரண்டாம் நாள் இரவு உங்கள் உணவில் விஷம் கலந்து கொடுத்து உங்கள் அனைவரையும் கொன்று விட்டு ஓலைகளைக் கைப்பற்ற வேண்டும் என திட்டம் தீட்டியிருந்தான் சிவநேசன். அதை வெளியன் அறிந்து கொண்டான்." என்றான் வேலன்.
"எப்படி?"
"சேர உளவாளிகள் தங்களுக்குள் செய்தி தெரிவிக்க சங்கேத மொழியைப் பயன் படுத்துகிறார்கள். அதை நான் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்தேன். உதாரணமாக நீர் என்று சொல்ல வேண்டுமானால் நெருப்பு என்று எழுதுவார்கள். கொலை செய்ய வேண்டும் என்றால் வாழ வைக்க வேண்டும் என எழுதுவார்கள். ஒரு வேளை வேறு யாரேனும் படித்தால் கூட தவறான பொருள் தெரியாது. அதற்காக அந்த ஏற்பாடு. அப்படி ஒரு செய்தி காட்டுக்குள் இருந்த மரத்தில் எழுதி வைத்தான் சிவநேசன். அதை நான் படித்து அவர்களது சதி முழுவதையும் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் குருநாதர் இந்தத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். " என்றான் வெளியன்.
பேசவும் மறந்து அமர்ந்திருந்தான் தித்தன்.
"அவன் நினைத்தபடி இரண்டாம் நாள் இரவு அதாவது நாளை இரவு அவன் உங்கள் அனைவரையும் கொலை செய்யத் திட்டம் தீட்டியிருந்தான். பிறகு அவனது ஆட்களோடு சேர்ந்து அசல் ஓலையில் என்ன எழுதியிருக்கிறது எனப்படித்து அதற்கேற்றப் போல திட்டம் தீட்டுவது என எண்ணிக் கொண்டார்கள். ஆனால் பாவம். இன்றைய இரவு எங்களை அவன் எதிர்பாக்கவில்லை. வெளியனின் போர்த்திறமையைக் கண்டதும் அவன் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே?" என்றாள் பிரம்ம நாயகி.
ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தான். அவன் மனம் இன்னமும் முழுமையாக அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை. இத்தனை நாளும் நல்லவன் போல நடித்து நட்பு பாராட்டிய சிவநேசன் தன்னைக் கொல்லவும் துணிந்தான் என்ற செய்தி அதிர்ச்சியை அதிகரித்தது. அதோடு வெளியன் மட்டும் சேரர்களின் சதியை அறியாமல் போயிருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்பதும் அவனை துயரம் கொள்ளச் செய்தது. தான் ஏன் இப்படி இருந்தோம்? எந்த ஒரு கட்டத்திலும் தனக்கு ஏன் சிவநேசன் மீது சந்தேகமே வரவில்லை? ஏன் குருநாதர் வேலனைத் தேர்ந்தெடுத்தார்? என்னிடம் ஏன் உண்மையைச் சொல்லவில்லை? என பல சிந்தனைகளால் அவன் உள்ளம் புண்ணானது.
தித்தனின் அருகே வந்து அவனை அணைத்துக்கொண்டான் வேலன்.
"உன்னிடம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற ஆவலை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை தித்தா! ஆனால் அப்படிச் செய்தால் அந்த சிவநேசனால் உனக்கு ஆபத்து நேரலாம் என்று தன் நான் மௌனம் காத்தேன்." என்றான் வேலன்.
"ஆனால் வேலா! குருநாதர் என்னையும் உங்கள் திட்டத்தில் சேர்த்திருக்கலாமே? ஏன் அப்படிச் செய்யவில்லை? என் திறமை மேல் அவருக்கு நம்பிக்கை இல்லையா?" என்றான் மெல்ல.
"அப்படி இல்லை தித்தா" என ஒரே குரலில் சொன்னார்கள் வெளியனும் வேலனும்.
"எப்படி இல்லை?"
"உன் போர்த்திறமை மீதும், உன் அறிவின் மீதும் குருநாதருக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. ஆனால் உனது நடிப்புத் திறமையின் மீது தான் நம்பிக்கை இல்லை. அதுவும் கூட உன்னால் தான். உனக்கு இருக்கும் நாட்டு பற்றினால் சிவநேசனை நேருக்கு நேர் எதிர்க்கத் துணிந்து விடுவாய் என்று தான் உன்னிடம் சொல்லவில்லை. உன் வீரமும் நேர்மையும் தான் காரணமே தவிர வேறு எதுவும் இல்லை." என்றான் வேலன்.
"ஆம்! இவர்கள் சொல்வதும் உண்ணை தானே? குருநாதர் என்னிடம் சிவநேசன் உளவாளி என்ற உண்மையைக் கூறியிருந்தால் ஏதாவது ஒரு கட்டத்தில் நான் அவன் மேல் பாய்ந்தே இருப்பேன். ஆனால் வேலன் மிகத்திறமையாகக் கையாண்டு விட்டான். எப்படியோ! நான் வீரமும் நேர்மையும் நிறைந்தவன் என குருநாதர் புரிந்து கொண்டரே அதுவே போதும்" என எண்ணிக் கொண்டு புன்னகையோடு நண்பர்களை ஏறிட்டான் தித்தன்.
"இனி நமது அடுத்த திட்டம் என்ன?" என்றான்.
"வெளியன் பெண்களை அழைத்துக்கொண்டு மீண்டும் செண்பகப் பொழில் சென்று விடுவான். தங்கமணி, நீ, நான் மூவரும் மதுரை நோக்கிச் செல்லப் போகிறம். ஓலையை ஒப்படைப்பது மட்டும் நமது பணி அல்ல நண்பா! அங்கே கொடுங்கண்ணனாரை சந்தித்துப் பேசி மன்னரை சந்தித்து குருநாதர் அளித்த ஓலையை கொடுக்க வேண்டும். அவரும் மற்ற அமைச்சர்கள், பொதுமக்கள் என அனைவரும் செண்பகப் பொழிலை நோக்கி வர நாம் சம்மதிக்கச் செய்ய வேண்டும். அது மட்டும் அல்ல, இளவரசரௌச் சுற்றி ஏதோ சதி வலை பின்னப்பட்டொருக்கிறது எனத் தெர்கிறது. அது என்ன? அதை தீட்டியவர்கள் யார்? அதன் நோக்கம் என்ன? இவற்றையெல்லாம் அறிந்து நாம் அந்த சதியை முறியடிக்க வேண்டும். இது நான் சொல்லவது அல்ல. குருநாதர் இட்ட கட்டளை. அதை நிறைவேற்றும் வரை நமக்கு இருப்பிடம் மதுரை தான்." என்றான் தங்கமணி.
"அப்படியா? இத்தனை முக்கிடமான பணியில் என்னையும் ஈடுபத்தியிருக்கிறாரே குருநாதர் அவருக்கு என் நன்றிகள். ஆனால் நான் என் மனைவியிடம் ஒரு வாரத்தில் வந்து விடுவேன் எனச் சொன்னேனே?" என்றான் தித்தன்.
"அதற்கான ஏற்பாடுகளையும் குருநாதர் செய்து விட்டார். உனக்கு மதுரையில் வேலை கிடைத்து விட்டதாகவும் இனி நீ குடும்பத்தோடு அங்கே தான் வாழப் போவதாகவும் செய்தி பரப்பப்படும். பிரம்ம நாயகி, முல்லை இருவரின் துணையோடு கல்யாணியும் உன் மகனும் இன்னும் இரு மாதங்களில் மதுரை வந்து விடுவார்கள். ஆகையால் நீ கவலைப்பட வேண்டாம்." என்றான் வெளியன்.
திருப்தியான புன்னகை மலர்ந்தது தித்தனிடம்.
"என் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை மதுரை முடிவு செய்யட்டும். பல சதிகளையும், சூழ்ச்சிகளையும் நான் வென்றாக வேண்டும். ஆனால் நான் தனி ஆள் இல்லை. நல்லவேளையாக திறமை மிகுந்த தங்கமணி,வேலன் மற்றும் என் சகோதரிகள் எனக்குத் துணையாக இருக்கிறார்கள். மதுரை நகரம் வாழும் சொக்கேசா! பாண்டிய நாட்டைக் காப்பாறியருள வேண்டும்." என வேண்டிக் கொண்டான். கிழக்கு வானத்தில் தங்க நிற சூரியன் தக தகவென மேலே வந்து கொண்டிருந்தான்.