அத்தியாயம் 2:
தித்தனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அழகான ஆரோக்கியமான ஆண் குழந்தை. மனைவி கல்யாணி சோர்ந்து காணப்பட்டாள்.
"அத்தான்! எப்படி இருக்கிறான் நம் மகன்?"
"அவனுக்கென்ன கல்யாணி! அழகும் ஆரோக்கியமுமாக இருக்கிறான். நீ தான் சோர்ந்து காணப்படுகிறாய்."
"ஆம் அத்தான்! குழந்தை பிரண்டு விட்டதால் சற்றே பிரச்சனை ஏற்பட்டது. இறைவன் அருளால் தாதி வெள்ளையம்மாள் வந்து எப்படியோ என்னையும் காப்பாற்றிக் குழந்தையையும் காப்பாற்றி விட்டாள்."
"மிகவும் நன்று! அவளுக்கு ஏதேனும் பரிசு அளிக்கிறேன்."
கல்யாணியின் தாய் வந்தாள். மருமகனும் மகளும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு சற்றே ஒதுங்கி நின்றாள்.
"என்னிடம் என்ன வெட்கம் அத்தை? நான் உங்கள் மகன் போல அல்லவா?" என்றான் தித்தன்.
"உண்மை தான்! ஆனாலும் சம்பிரதாயம் என்ற ஒன்று இருகிறதல்லவா?"
"சரி உங்கள் விருப்பம்!"
"வந்து..வந்து...இப்போது கல்யாணியை குளிக்க வைத்து குழந்தையையும் குளிக்க வைக்க வேன்டும். ஆகையால் நீங்கள்....தவறாக எண்ணக் கூடாது"
"அதற்கென்ன? நான் வெளியில் இருக்கிறேன். இல்லையென்றால் மாலை வந்து பார்க்கிறேன். அருகில் தானே எங்கள் வீடும். கல்யாணி எப்போது வீட்டுக்கு வருவாள்?" என்றான் ஆர்வமாக.
" இப்போது தான் பிரசவம் ஆகியிருக்கிறது. உடல் நலம் தேற வேண்டிய நேரம் இது. பச்சை உடம்பு! எப்படியும் நான்கு மாதங்களாவது ஆகும். உங்களுக்குக் குழந்தையைப் பார்க்க வேண்டுமானால் எந்நேரமும் வரலாம். ஆனால்..."
"புரிகிறது அத்தை! கல்யாணி! நான் சென்று வரவா கண்ணே!" என விடை பெற்று வெளியில் வந்தான். தெருவில் காற்று அடித்து புழுதியைக் கிளப்பிக்கொண்டிருந்தது. அந்தப் புழுதியில் எதிரே யாரோ நடந்து வந்தார்கள்.
"ஐயா! இங்கே கல்யாணி என்பவரின் வீடு எங்கே இருக்கிறது?" என்றான் அந்தத் தலைப்பாகை அணிந்த ஆள்.
"இது தான் கல்யாணியின் வீடு. அவள் என் மனைவி தான். நீங்கள் யார் ஐயா?" என்றான் தித்தன்.
"மிகவும் நல்லதாகப் போய் விட்டது. நான் வந்ததே உங்களைத் தேடித்தான்." என்றான் அந்த ஆள்.
"என்னையா? என்னைத் தேடி வர வேண்டுமானால் மேட்டுத்தெருவில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு அல்லவா வர வேண்டும்? இங்கு ஏன் வந்தீர்?"
"ஐயா! உங்களைத் தேடி நீங்கள் சொன்ன மேட்டுத்தெருவுக்குத்தான் போனேன். நீங்கள் உங்கள் குழந்தையைக் காண இங்கே வந்திருக்கிறீர்கள் எனச் சொன்னதால் வந்தேன்."
"சரி! யார் நீங்கள்? என்னைத் தேடி வந்த காரணம் என்ன?"
"ஐயா! என் பெயர் சிவநேசன். என் குரு விந்தையன் தான் என்னை அனுப்பி உங்களை அழைத்து வரச் சொன்னார்"
"என்ன? விந்தையனா? அவருக்கு எப்படி என்னைத் தெரியும்?"
"ஐயா! என் குரு பெரிய ஞானி! முக்காலமும் உணர்ந்தவர். அவருக்கு எப்படி உங்களைத் தெரியும்? உங்களை ஏன் அழைத்து வரச் சொன்னார் போன்ற விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. தயவு செய்து வருகிறீர்களா?"
தயங்கினான் தித்தன்.
"இவர் யாரோ என்னவோ? இவர் சொல்லும் விந்தையன் எப்படிப்பட்டவரோ? இது ஏன் கொள்ளையர்களின் சதியாக இருக்கக் கூடாது? தனியாக அழைத்துப் போய் ஏதாவது சதி வேலையில் ஈடுபடும் எண்ணம் இருந்தால் நான் எச்சரிக்கையாக இருப்பது நல்லதல்லவா?" என யோசித்தான்.
"என்ன யோசிக்கிறீர்கள் ஐயா? கிளம்புங்கள்"
"வருவதில் தயக்கமில்லை. ஆனால் என் நண்பன் வேலனும் வரலாமா?"
"தாராளமாக வரலாம்."
"ஐயா! ஏற்கனவே எனக்கொரு பணி இருக்கிறது. அது விந்தன் என்பவரைத் தேடி அலைவது. அதனைச் செய்யச் சொல்லி குள்ளமான ஒரு நபர் கூறினார். அவரைத் தேடி சந்தித்து விட்டு பிறகு வருகிறோமே?" என்றான்.
கடகடவெனச் சிரித்தான் சிவநேசன்.
"உங்களை என்னவென்று சொல்ல? தேடிய மூலிகை காலில் தென்பட்டது என்பார்களே? அது போல நீங்கள் தேடும் நபர் வேறு யாரும் அல்ல. என் குருவே தான். நீங்கள் சொன்னது அவரது இயற்பெயர். மரியாதை கருதி ஐயன் சேர்த்தோம். இப்போது அவர் அனைவருக்கும் விந்தையன் ஆகி விட்டார்" என்றான்.
சொல்லத்தெரியாத ஏதோ ஒரு உணர்ச்சி தோன்றியது தித்தனுக்கு. நாமாகத் தேட வேண்டிய அவசியமே இன்றி அவரே என்னை அழைக்கிறார் என்றால் நிச்சயம் அவர் தெய்வாம்சம் பொருந்தியவராகத்தான் இருக்க வேண்டும். வேலனையும் அழைத்துச் சென்று பார்த்தால் என்ன?" என எண்ணினான்.
"போகலாமா?" என்றான் சிவநேசன்.
"போகும் வழியில் என் நண்பனையும் அழைத்துச் செல்லலம்" எனக் கூறி நடந்தான் தித்தன். முன்னால் சென்றான் சிவநேசன். வேலனும் இணைந்து கொள்ள மூவரும் கடுமையான அந்த வெயிலையும் அதனைத் தணிக்கும் குளிர் காற்றையும் அனுபவித்தபடி நடந்தனர். கிட்டத்தட்ட ஊரில் எல்லை வந்து விட்டது.
"எங்கே உங்கள் குருவின் வீடு?" என்றான் வேலன்.
"குருவின் வீடு எனச் சொல்ல முடியாது. ஆசிரமம் என்று வேண்டுமானால் சொல்லலாம். மக்களின் தொந்தரவு அதிகம் இருக்கக் கூடாது என ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழ்கிறார் குரு நாதர்" என்றான் சிவநேசன்.
சற்று தூரம் ஒற்றையடிப்பாதையில் நடந்தார்கள். சிற்றாறு ஐந்து கிளைகளாப் பிரிந்து விழும் அழகான இடம். அதற்கு முன்னே பக்கவாட்டில் கதவு ஒன்று இருந்தது. அதனைத் திறந்து கொண்டு சென்றான் சிவநேசன். உள்ளே மிகவும் குளுமையாக மரங்கள் நிறைந்து காணப்பட்டது. ஆங்காங்கே சிறு ஓலை வேயப்பட்ட குடில்கள். அகவும் மயில். குயிலோசை என அந்த இடமே அழகின் இலக்கணமாக விளங்கியது. மூன்று படிகள் ஏறி கதவே இல்லாத அந்த வட்டமான கூடத்தின் ஓரத்தில் நின்றான் சிவநேசன்.
"ஐயா! நீங்கள் சொன்னது போல தித்தனை அழைத்து வந்திருக்கிறேன். உடன் அவரது நண்பன் வேலனும் இருக்கிறார்" என்றான் சிவநேசன் மரியாதையாக.
"சரி! அவர்களை அழைத்து வா" என்ற கம்பீரமான ஆனால் மென்மையான குரல் கேட்டது. கண் சாடை காட்ட தித்தனும், வேலனும் உள்ளே சென்றார்கள். அந்த வட்டமான கூடத்தின் நடுவே சற்றே உயரமாகப் போடப்பட்டிருந்த பலகையில் அமர்ந்திருந்தார் விந்தையன். தாடி, மீசை புருவம் என எல்லாமே நரைத்திருந்தது. ஆனாலும் முகத்திலோ கரங்களிலோ சுருக்கமே இல்லை. முதுகு கூட வளையாமல் நிமிர்ந்து அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் தன்னையும் அறியாமல் வணங்கினார்கள் இரு நண்பர்களும்.
"நலமே விளைக" என வாழ்த்தினார் விந்தையன். அமரச் சொல்லி கை காட்டினார். அவருக்கு எதிரே போடப்பட்டிருந்த இரு பலகைகளில் அமர்ந்து கொண்டனர்.
"உங்களோடு பேசச் சொல்லி எனக்கு கனவு மூலம் குரு உத்தரவு வந்தது. நீங்கள் யார்? உங்களது பணி என்ன? எல்லாம் விசாரித்து விட்டேன். ஆனால் என்னை எதற்கு நீங்கள் தெடுகிறீர்கள் எனப் புரியவில்லை. குருவின் கட்டளை என்பதால் உங்களை அழைத்து வரச் செய்தேன்." என்றார் விந்தையன்.
"ஐயா! எங்களுக்கு உங்களையே இப்போது தான் தெரியும். உங்களது குருவைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் நேற்று இரவு ஒரு சம்பவம் நடந்தது. அதில் குள்ளமான ஒரு நபர் உங்களை வந்து பார்க்கும்படி சொன்னார். நாங்களே உங்களை எங்கே தேடுவது எனத் தயங்கிய போது நீங்களே அழைத்து விட்டீர்கள்" என்றான் தித்தன் பணிவாக.
"என்ன? என்ன? என்னைப் பார்க்க வரச் சொல்லி குள்ளமான ஒருவர் கூறினாரா? அதுவும் முழு நிலவு நாளிலா? சற்றே விவரமாகச் சொல்லுங்களேன்" என்றார் விந்தையன். அவரது குரலில் பரபரப்பு இருந்தது.
"ஐயா! என் பெயர் தித்தன். இரவு நேரக் காவலன்" என ஆரம்பித்து எல்லாவற்றையும் கூறினான் தித்தன். இடை இடையே வேலனும் சில விட்டுப் போன விவரங்களைக் கூறி வந்தான். அவர்கள் பேசப் பேச விந்தையன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். கண்களைத் துடைத்துக்கொண்டார். தித்தன் பேசி முடித்ததும் எழுந்து வந்தார். பெரியவர் எழுந்ததைத் தொடர்ந்து தித்தனும் வேலனும் எழுந்து நின்றனர். இருவரையும் அணைத்துக்கொண்டார் விந்தையன்.
"நீங்கள் இருவரும் என்ன பேறு பெற்றீர்களோ தெரியவில்லை! குருவின் தரிசனம் கிடைத்திருக்கிறதே" என்றார்.
சிவநேசன் அவரை ஆசுவாசப்படுத்தி குடிக்க நீர் கொடுத்தான்.
"ஐயா! எங்களுக்குப் புரியவில்லை. நாங்கள் சந்தித்ததவர் தான் உங்கள் குருவா?" என்றான் தித்தன்.
"இளைஞர்களே! அவர் சாதாரண மனிதரில்லை. அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த என் 13ஆம் தலைமுறை குரு, தமிழ் காத்த அண்ணல் அகத்தியர் தான் அவர்." என்றார். பேசப் பேசவே குரல் கம்மியது.
விந்தையனின் பேச்சின் தாக்கம் தெரிய அப்படியே அமர்ந்திருந்தார்கள் இளைஞர்கள்.
"நாம் பார்த்தது அகத்திய முனிவரா? அவரா அத்தனை எளிமையாக இருந்தார்? என்ன அன்பான பேச்சு? எவ்வளவு அக்கறை நிறைந்த வார்த்தைகள்? என் மகன் பிறந்த நேரம் எனக்கு மிகப்பெரிய முனிவரின் தரிசனம் கிடத்தது" என எண்ணிக்கொண்டிருந்தான் தித்தன்.
"தித்தா! நீ உண்மையிலேயே கொடுத்து வைத்தவன். எனக்குக் கூட நிஜத்தில் தரிசனம் தராத குருநாதர் உங்களுக்கு தரிசனம் தந்தது மட்டுமல்ல என்னை வந்து காணவும் அறிவுறுத்தி இருக்கிறார் என்றால், உங்களது நல்லூழ் எவ்வளவோ" என்றார்.
சற்று நேரம் அமைதி நிலவியது.
"தித்தா! நீ ஏதாவது கேள்வி எழுப்பினாயா குருவிடம்?" என்றார் விந்தையன்.
"ஆம் ஐயனே! செண்பகப் பொழிலின் எதிர்காலம் எப்படி இருக்கும் எனக் கவலைப்பட்டேன். அதோடு பெண்களும் தெருவில் நடமாட வேண்டும், அவர்களுக்கு விருப்பமானதைச் செய்ய வேண்டும் என சொன்னேன். அப்போது தான் குரு நாதர் உங்களை வந்து காணும் படி கட்டளையிட்டார்." என்றான்.
தாடியை நீவிக்கொண்டு யோசித்தார் விந்தையன்.
"அப்படியா? மேலும் விவரங்கள் சொல்ல முடியுமா?"
"ஐயா! மதுரையில் எப்போது பாண்டியர்கள் மீண்டும் நிலையான ஆட்சி செய்வார்கள் எனவும் கேட்டோம்" என்றான் வேலன்.
பளிச்சென மலர்ந்தது விந்தையனின் முகம்.
"அப்படிச் சொல்லுங்கள்! ஒரு வாரத்திற்கு முன்பு தான் மதுரை பட்டத்தரசி அங்கையற்கண்ணி தேவியாருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகச் செய்தி வந்தது. அதன் சாதகத்தை எப்போது கணிப்பது என யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் குருவின் அருள்வாக்கு வந்தது" என்றார்.
"ஐயனே! மதுரை எங்கோ இருக்கிறது. அங்கு குழந்தை பிறந்த செய்தி உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்றான் வேலன்.
மெல்ல நகைத்தார் விந்தையன்.
"அங்கே என் மாணவர்களில் ஒருவனான கொடுங்கண்ணன் இருக்கிறான். அவன் அரசனுக்கு முக்கியமான அமைச்சன். சாதகம் கணிக்க அவன் தான் செய்தி அனுப்பி வைத்தான்." என்றார்.
தித்தனும் வேலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
எங்கோ தென்னகத்தின் ஓரத்தில் இருக்கும் செண்பகப் பொழிலில் இருந்து கொண்டு மதுரை அரசர் வரை ஆள் வைத்திருக்கிறாரே இந்த மகான்" என எண்ணிக் கொண்டனர் இருவரும். ஆனால் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை.
"சிவநேசா! அந்தச் சுவடிக்கட்டுகளை எடுத்து வா" என்றார் அந்த மகான்.
சிவநேசன் அரையடி உயரம் இருந்த இரு சுவடிக்கட்டுகளை எடுத்து வந்து முன்னால் பணிவோடு வைத்தான்.
"தித்தா! வேலா! இதில் இரு சுவடிக்கட்டுக்கள் இருக்கின்றன. பொதுவாக அரச குலத்தில் குழந்தை பிறக்கும் போது பொதுப்பலன் பார்க்க ஒரு கட்டும், அந்தக் குழந்தையின் எதிர்காலம் குறித்துப் பார்க்க இன்னொரு கட்டும் பயன் படும். இப்போது உங்கள் முதல் கேள்விக்கு வருகிறேன். தித்தா நீ சொல், குருவிடம் என்ன கேட்டாய்?"
"மதுரையில் மீண்டும் எப்போது நிலையான ஆட்சி அமையும் எனக் கேட்டேன் ஐயனே! தவறானால் மன்னியுங்கள்" என்றான் தித்தன் பணிவாக.
"இல்லை இல்லை! தவறொன்றுமில்லையப்பா! இந்த பிரபஞ்சத்தில் எந்த விஷயமுமே காரணமின்றி நடப்பதில்லை. அனைத்துமே கண்ணுக்குத் தெரியாத நூலால் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால் கவலை கொள்ளத் தேவையில்லை. சரி குழந்தையின் பிறந்த நேரத்தை வைத்து பொதுப்பலன் பார்க்கிறேன்" என்றார்.
முதலில் இருந்த சுவடிக்கடை எடுத்து பயபக்தியோடு பிரித்து ஒவ்வொரு ஏடாகத் தள்ளிக்கொண்டே வந்தார். சில ஏடுகளே மிஞ்சியிருந்த நிலையில் ஒரு ஏட்டைக் கையில் எடுத்துப் படித்தார். படிக்கப் படிக்க அவர் முகம் சுருங்கியது.
"என்ன இது? பலன் இப்படி வந்திருக்கிறதே?" என்றார். தாடியை வருடியபடி எதிரில் அமர்ந்திருந்த இரு இளைஞர்களையும் ஏறிட்டார்.
"ஐயனே! என்ன பலன்? நாங்களும் தெரிந்து கொள்ளலாமா?" என்றான் வேலன் பணிவாக.
தலையை ஆட்டிவயர் மேலும் ஒரு முறை கையிலிருந்த ஏட்டைப் படித்தார். மீண்டும் ஒரு முறை பிறந்த நாழிகையையும் ஏட்டில் இருந்த கணக்கையும் ஒப்பு நோக்கினார். முகம் ஏமாற்றத்தைத்தான் பிரதிபலித்தது.
"நல்ல செய்தி வரும் என எதிர்பார்த்தேன். அதுவும் குரு அகத்திய மாமுனியே உங்களுக்குக் காட்சியளித்ததால் நிச்சயம் நல்ல பலன் தான் இருக்கும் என இறுமாந்தேன். என் இறுமாப்புக்கு சரியான அடி." என்றார்.
"ஐயா! ஏடு சொல்லும் செய்தி என்ன?"
"ஹூம்" என நீண்ட பெருமூச்சொன்றை உதிர்த்து விட்டுப் பேசினார்.
"என்னவென்று சொல்வது? இளவசரன் சடையவர்மன் பிறந்த நேரத்தைக் கொண்டு பொதுப்பலன் பார்த்தால் நல்ல பலனே இல்லையப்பா. குழந்தை பிறந்த ஒரு மாதத்துக்குள் மதுரையை விட்டு வெளியேற வேண்டிய நிலை வரலாம். அதுவும் நிரந்தரமாக என்றல்லவா பலன் இருக்கிறது?" என்றார் கவலையுடன்.
கேட்டுக்கொண்டிருந்த தித்தனுக்கு தலையில் அடித்தது போல இருந்தது.
அப்படியானால்..மீண்டும் மதுரையில் பாண்டியர் ஆட்சி மலரவே மலராதா? செண்பகப் பொழிலில் மட்டுமல்லாமல் நெல்லையிலும், இன்னும் பிற இடங்களிலும் மக்கள் அச்சமின்றி வாழவே முடியாதா? என எண்ணி ஏங்கினான். ஏமாற்றத்தில் ஆழ்ந்திருந்த அவன் மனதில் சிறு நம்பிக்கை ஒளி தோன்றியது.
"ஐயா! நான் குரு நாதரிடம் இரு கேள்விகள் கேட்டேன். அதில் முதல் கேள்விக்கான பதில் கிடைத்து விட்டது. ஆனால் இரண்டாவது கேள்விக்கான பதில் கிடைக்க வில்லையே? ஒரு வேளை அந்தக் கேள்விக்கு நற்பலன் இருக்கலாம் அல்லவா?" என்றான் சற்றே உற்சாகமாக. அப்போது செம்பொத்து எனப்படும் பறவை அந்த ஆசிரமத்தில் மாமரத்தில் வந்து அமர்ந்தது. அதனைக் கண்ட விந்தையன் மகிழ்ச்சி பொங்கக் கூவினார்.
"நீ சொல்வது சரி தான் தித்தா! உன் இரண்டாவது கேள்வி என்ன? சீக்கிரம் சொல்" என்றார்.
"செண்பகப் பொழில் எப்போது உலகமே போற்றும் நகரமாக மாறும்? என்பதே என் இரண்டாவது கேள்வி. இதற்குக் கூட முனிவர் பிரான் கூடிய விரைவில் அது நடக்கும், அதுவும் செண்பகப் பொழிலின் பெயரே மாறி வரலாற்றில் நிலையாக இருக்கும் என்றாரே?" என்றான்.
மகிழ்ச்சியே உருவாக இரண்டாவது சுவடிக்கட்டிலிருந்து சுவடிகளைத் தேடினார் விந்தையன். பாதியில் அவர் தேடிய சுவடி அகப்பட வாசித்தார். வாசிக்க வாசிக்க அவரது முகம் மகிழ்ச்சியால் பூரித்தது. அவரையே பார்த்தபடி இரு நண்பர்களும் காத்திருந்தனர்.