Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL ஒழுகும் நிலவு வழியும் இரவு - Tamil Novel

Status
Not open for further replies.
அத்தியாயம் - 7

பூமி வருடம் 4000

பல்‌ அண்டம்!
ஒளிர்ந்த இருள்!
இருண்ட மௌனம்!
பரிபூரணப் பயணம்!
விழிமூடி நீ!
கரம்‌கோர்க்க நான்!!!

அனிச்சத்தின் வீட்டில் ஆய்வு நடந்து கொண்டிருந்தது. தீரனின் உடலில் எந்த ஒரு தடயமும் இல்லை‌. கொலை செய்யப்பட்ட தடயமோ, இல்லை அடித்துத் துன்புறுத்திய தடயமோ இல்லை.

ஆய்வறிக்கையின் முடிவுகள் வந்தது‌. அவன் அனிச்சத்தின் வீட்டிற்கு வந்தவுடன், சிவப்பு ஏரி வெடித்துவிட்டது எனவும், நச்சுக் காற்றை சுவாசித்ததால் அவனுடைய உயிர் பிரிந்தது என்றும் கூறினர். ஆனால் அவன் அனிச்சத்தை ஏன் பார்க்க வர வேண்டும் என்பது கேள்விக் குறியாகவே இருந்தது. அதுவும் அந்த இடத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அரசு உத்தரவை மீறி ஏன் வர வேண்டும் என்றே தோன்றியது.

அனிச்சம் இப்பொழுது நளனுடன் இருந்தாள்‌. அவளின் மனம் மேலும் மருகித் தவித்தது. நளனுக்கோ சலிப்புத் தட்டியது. இது என்ன அடுத்தடுத்து சோதனைகள் என்று. 'அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய்' என்பது போல் சில மர்மம், அதற்குள் சில மர்மம் என்று முடிவிலியாய் சென்று கொண்டிருந்தது. பனிமலைத் தீவின் முடியா இரவுகளே முடிவுக்கு வந்துவிடும் போல. ஆனால் அறுதியொன்று எழுத முடியாமல் செல்கிறது இங்கு நிகழும் மர்மங்கள்.

பனிமலைத் தீவில் கிடைத்த எலும்புக்கூட்டின் ஆய்வு முடிவுகளும் வந்தது. அதிலும் ஒரு அதிர்ச்சிகரத் தகவல். அந்தத் தொல்லெச்சத்தின் காலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தயது என்றும், இறக்கும் தருவாயில் நாற்பது வயது இருந்திருக்கலாம் என்றும் கூற, மீண்டும் அதிர்ச்சி மட்டுமே நிலைத்திருந்தது. அதிர்ச்சி இரண்டாயிரம் வருடங்கள் பழமையிலும், அதன் வயதிலும் அல்ல. நாற்பது வயதில் குழந்தையுடன் இருந்ததுதான் அதிர்ச்சி.

நாற்பது வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள இயலுமா? இது எப்படி சாத்தியம்!!!. இந்த உலகைப் பொறுத்தவரை இருபத்தைந்து வயதிற்குள் பெற்றுவிட வேண்டும். அதன்பிறகு பிள்ளைப்பேறு என்பது கனவில் கூட நிகழாது. அதன் பிறகு அனுமதியும் இல்லை. நாற்பது வயதிலும் உடல் வலுவில் இரண்டு ஆண்களை ஒத்திருந்ததாக வேறு கூறப்பட்டது. பூமியின் வரலாற்றைத் தலைகீழாகத் திருப்பி இயம்ப வந்திருக்கிறாளா அவள்!!. இரண்டு நாட்களாக அந்தத் தொல்படிமம் பேசு பொருளாக மாறியிருந்தது. அதைப் பற்றி விவாதிக்கவே மனிதர்களுக்கு நேரம்‌ சரியாய் இருந்தது.

இதுமட்டுமின்றி அந்தப் பெண் எப்படி இறந்தார் என்ற ஆய்வின் முடிவுகளும் வர, அதுவும் அந்த மனிதர்களை ஒரு உலுக்கு உலுக்கியது. உச்சந்தலையில் ஒரு பெரிய ஆணி கொண்டு அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். கிடைத்த எலும்பின் தலைப்பகுதியில் ஒரு ஓட்டை. அதுவும் வட்டமாக. விபத்து போல் தெரியவில்லை. யாரோ ஆணி வைத்து அடித்தது போல் ஒரு நேர்த்தி.

இவை அனைத்தையும் கேட்ட அனிச்சத்திற்கு தலை கிறுகிறுத்தது. மீண்டும் நத்தை ஓட்டிற்குள் சுருண்டாள். பின், கனவில் தோன்றிய பிம்பத்தின் மறுவுருவமாய் அல்லவா இருக்கிறது. விடையறிய மூளையின் முடுக்குகளில்‌ எல்லாம் தேடிவிட்டாள். இடுக்குகளில் கூட எந்தத் தகவலையும் எடுக்க இயலவில்லை. விடையில்லா வினாவிற்கு விடைதேடி களைத்தது மூளை.

"அனி, நீ பழையபடி உள்ளுக்குள்ள சிந்திக்க வேண்டாம். எல்லாத்துக்கும் முடிவு இருக்கும்" என்றான் அவளுக்கு ஆறுதலாக.

"அதெப்படி நளன் என்னால அப்படி இருக்க முடியும்?. எனக்கு வந்த கனவு. இப்போ கிடைச்ச எலும்பு. ரெண்டுக்கும் பல தொடர்பு இருக்கே" என்றாள்‌ கவலையுடன்.

"கண்டுபிடிக்கலாம்.." என்றான்‌ அமைதியாக. அவனும்‌ அதைப் பற்றிய சிந்தனையில்தான் இருந்தான்.

"நளன்..‌ இதெல்லாம் நம்பற மாதிரியும் இல்லை. நம்ப முடியாமையும் இல்லை" என்றாள் யோசனையுடன்.

"ஏதோ ஒரு மர்மம் இருக்கு அனி. அது மட்டும் நல்லா தெரியுது."

"எனக்கு மனசு கிடந்து அடிச்சிக்குது. ஏன்னு சொல்லத்‌ தெரியல."

"எனக்கும் கூட அப்படித்தான் இருக்கு."

என்ன செய்வது என்று‌ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர் இருவரும்.

"இன்னொரு பழுப்பு நிறத்தில் கிடைத்த தொல்படிமம்‌ என்ன ஆச்சு?" அனி.

"ஆராய்ச்சிக்கூடத்தில் கொடுத்தாச்சு" நளன்.

"உயிர் இருக்கா?"

"தெரியல. இருக்க வாய்ப்புகள் இருக்கு."

இரவாகிவிட்டது. அனி வழமைபோல் நிலவுடன் ஐக்கியமாகிவிட்டாள்.

"அனி கிளம்பு... நாம அந்த தீரன் வீட்டிற்கு‌ போகலாம்" என்று அறிவிப்பாய் நளன்‌ கூற, ‌அவனை ஆச்சர்யம் பொங்கப் பார்த்தாள் அனிச்சம்.

"எதுக்கு நளன்? இப்போ அங்க போய் என்ன செய்யப் போறோம்?. ஏற்கனவே அரசோட பார்வையில் இருக்குமே அந்த வீடு."

"அதெல்லாம் இருக்கட்டும். நாம தனியா போய்ப் பார்க்கலாம். அதுவும் இல்லாம அங்க ஒரு துப்பும் கிடைக்கலையாம். அதனால பாதுகாப்பு இருக்க வாய்ப்பு இல்லை."

"இப்போவா? ராத்திரி போய் அங்க என்ன தேடப்போறோம்?"

"எனக்கு என்னமோ அங்க போனா ஏதாச்சும் துப்பு கிடைக்கும்னு தோணுது."

"அரசுக்கே கிடைக்காத துப்பு நமக்கு கிடைக்குமா?" என்றாள் கேள்வியாக.

"எனக்கு பதில் சொல்லத் தெரியல" என்றான் அவன்.

ஆனால் அவன் செல்ல வேண்டும் என்பதில் பிடிவாதமாய் இருந்தான். அவனைக் கண்டு அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. வழக்கமாய் அடம் பிடிப்பதெல்லாம் அவள் குணமாயிற்றே.

தீரனின் வீட்டிற்கு இருவரும் சென்றனர்.
அங்கு அரசின் காவல் இல்லை. எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. அதனால் அவன் ஏரியின் நச்சு வாயுவினால் இறந்துவிட்டான் என்று வழக்கு மூடப்பட்டது.

இருவரும் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே ஒரு தடயமும் கிடைக்கவில்லை. இருவரும் வீட்டைப் புரட்டிப் போட்டு தேடிவிட்டனர்.

இதில் மிகப்பெரிய இடர் என்னவென்றால், தேடுவதற்கும் இலக்கென்று ஒன்று வேண்டுமல்லவா. அவர்கள் என்ன தேடுகிறோம் என்று தெரியாமலே தேடினர். களைப்பு மட்டுமே மிஞ்சியது.

ஏமாற்றத்துடன், இருவரும் கிளம்பிவிடலாம் என்று முடிவு செய்தனர். அனிச்சம் குழப்பம் தாளாமல் அங்கிருந்த சுவர் மீது சாய, அதிலிருந்து ஒரு ஒலி, தண்டுவடத்தில் தைத்தது. பயந்து நளனின் அருகில் வந்து நின்றுவிட்டாள். இருவரின் முகத்திலும் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள். பயத்தில் தொண்டைக்குழி வறண்டுவிட்டது. உடலில் உள்ள நீர்ச்சத்து அனைத்தும், தோலில் உள்ள துளைகள் மூலம் வியர்வையாய் வழிந்துவிட்டது. மின்னல் வெட்டியது போல் ஒரு ஒலி. அதன்பின் பரிபூரண மௌனம். அவளுக்குத் தண்டுவடத்தில் சுருக்கென்று ஏதோ ஒன்று தைத்ததில் வலித்தது. நளன் அவளையும் அழைத்துக் கொண்டு அந்த சுவரின் அருகில் சென்றான். நடுக்கத்துடன் அதை மீண்டும் தொட்டுப் பார்க்க அவனுடைய கைகள் நீண்டது. அனிச்சை செயலாய் அனிச்சத்தின் கைகள் அதைத் தடுத்து நிறுத்தியது.

விழிகளில் தைரியம் தேக்கி அவளுக்கும் அதைக் கடத்தினான். அவன் விழிகளில் வந்த காரியம் முடித்தே திரும்ப வேண்டும் என்ற பிடிவாதம் குடி கொண்டிருந்தது.

அவன் கைகள் வைக்க, அந்த இடத்தில் ஒரு அதிர்வும் இல்லை. அதன்பின், சுவரின் ஒவ்வொரு பாகமாகத் தேடினர் இருவரும். எங்கோ ஓரிடத்தில் சிறுமேடு தென்பட அதை அழுத்தினான் நளன். அவ்வளவு எளிதாக அதை அழுத்த முடியவில்லை. சந்தேகமின்றி பார்த்தால் அந்தச் சுவர் ஒரு சுவர், அவ்வளவே. ஆனால் அவர்களுக்கு அங்கு ஏதோ இருப்பதுபோல் தென்பட, விடாமுயற்சியுடன் தேடினர். இறுதியில் வெற்றியும் கண்டனர். ஒரு புள்ளியை அழுத்த, அந்த இடத்திலிருந்து இழுப்பறை போல் ஒன்று வெளியே வந்து, அவர்கள் இருவரையும் கீழே தள்ளியது. அதன்பிறகு‌ சுவர் பக்கவாட்டில் சாய்ந்து சமதளம் ஒன்று உருவாகி, அதில் சில வினோதப் பொருட்கள் கடைப்பரப்பப்பட்டிருந்தது.

இருவரும் விசித்திரம் தாளாமல் அதைப் பார்த்தனர். சிறிது நேரத்தில் அழகாக ஒழுங்குடன் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட, அமைதி நிலவியது அங்கே.

நளன் வேகமாக எழுந்து சென்று அங்கிருந்த பொருட்களை ஆராய்ந்தான். அதில் கிடைத்த பதிலைக் கண்டு வாய்ப்பிளந்து நின்றான். அனிக்கு ஒன்றும் விளங்கவில்லை‌. அன்னையின் ஓவியம் போல் அங்கும் சில ஓவியங்கள். சில மாற்றங்களுடன். அதில் அவளுடைய‌ விழிகள் நிலைத்து நின்றது.

"நளன்... என்ன நடக்குது இங்க? எனக்கு ஒண்ணும் புரியல" என்றாள் அனிச்சம். அவனுக்கு ஏதோ விளங்கிவிட்டது என்று அவனின் முகபாவனை வைத்தே விளங்கிக்கொண்டாள்.

ஆனால் அவனும் அதை அவளுக்கு விளக்கக் கூடிய நிலையில் இல்லை என்றுதான் கூற வேண்டும். நளன் அங்கிருந்த பொருட்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

திடீரென ஏதோ ஒரு மின்னல் வெட்டு அவர்கள் இருவரையும் தாக்கியது. அதன் பின் ஒரு உந்துசக்தி, புயலின் மையத்திற்கு அவர்கள் இருவரையும் இழுக்க, அதன் வேகத்தில் அவர்களும் சுழன்றார்கள். நியூரான்களின் அதீத துள்ளலால் அனிச்சத்தின் எண்ணங்கள் பலவாறு அலைந்தது. ஒளியின் வேகத்தை விட பலமடங்கு வேகத்தில் பயணித்தது. அவளும் நளனும் அதே வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் பனிமலை, கரும்பாலைவன நிலப்பகுதி என்று காற்றாய் இருவரும் ஒரு சுற்று சுற்றினர். பின் ஏவுகணை போல் வெகு தூரம் பயணம் செய்தனர். சூரிய குடும்பத்தையும்‌ கடந்த பயணம். அண்டத்தின் எல்லையை அடைந்தாயிற்று.

பூமிக்கும் அவர்களுக்கும் உண்டான மாய உறவு அறுந்து விழுந்தது. கருங்குழிக்குள் காற்றாய் இருவரும் பயணித்தனர். வேகம். வேகம். வேகம். இதுவரை‌ அவர்கள் உணர்ந்திரா வேகம். ஆழ்துளைக்குள் அதிர்வில்லாமல் ஒரு பயணம். எடையிழந்து ஒளியாய் ஒரு பயணம். புத்துணர்வை புத்தியல்பாய் உள்ளே புகட்டி, உருட்டி பிரட்டியது அந்தப் பயணம். மற்றொரு இணைப் பிரபஞ்சத்தின் வாயிலின் அருகே கொண்டு சென்றது. பனுவலுக்கு(நூல்) நூன்முகம் திறவுகோலாய் இருப்பதுபோல் மற்றொரு அண்டத்தின் நுழைவாயிலுக்கு வந்தனர் கடவுச்சொல்லின்றி. நெருக்கி, குறுக்கி, இறுக்கியிருந்த அலைக்கற்றைகள் சற்றே தளர்ந்ததுபோல் இருந்தது. பால்வெளி அண்டத்தில் பல சூரிய குடும்பங்கள் போல‌. மற்றொரு அண்டத்தின் மற்றொரு சூரிய குடும்பத்திற்கு வந்து சேர்ந்தனர்.

குழப்பம் வராமல் இருக்க, நாற்பதாம் நூற்றாண்டு நிகழ்வது பூமியில். இப்பொழுது இவர்கள் வந்திருப்பது பொழில் என்னும் கோளிற்கு. பூமியின் மறு பெயர்கள் - புடவி, புவி, பொழில், அவனி.

அக்கினிப்பழமாய் கொழுந்து விட்டெரியும் சூரியனைக் காற்றாய் கடந்தனர். வேதி வினையால் வெய்யோன் உதிர்த்த வெந்தழலில் வெதும்பி போகவுமில்லை. சூரியனின் சுள்ளென்ற அனற்புயலில் சிக்கிச் சுழன்றதால் உருகவுமில்லை.

அந்த சூரியக் குடும்பத்தின் பிரத்தியேகக் கோள் பொழிலில்(பூமி பொருள்) வந்து கலந்தனர். சுடர்விட்டு தழலொழுகும் சூரியக்கதிர் உட்புக முடியா பச்சை வர்ணம் பூசிய காடுகளுக்குள் விரைவாய் ஒரு பயணம். விஷம் கக்கும் கொடிய உயிரினங்களையும், உயிர் காக்கும் அபூர்வ அமிழ்தங்களையும் ஓருங்கே கண்டு வியப்பின் உச்சியில் புதுவித உணர்வுடன் ஒரு பயணம். ஒருவழியாய்ப் பயணம் முடிவுக்கு வந்தது. கரடுமுரடான பயணம்தான். ஆனால் கிடைப்பதற்கரிய பயணம்.

பின் பிடரிமயிர் பிடித்திழுத்து வந்து மீண்டும் உயிரை உடலுக்குள் புகுத்திய உணர்வு. அதீத வேகத்தில் கீழே தள்ளப்பட்டனர் இருவரும். இலவம் பஞ்சின் மென்மையைக் கொண்டிருந்த புல்வெளியில் வீசப்பட்டனர். திடீரென துடிக்க ஆரம்பித்த இதயம், பிராணவாயுவை உடல்பாகங்களுக்குக் கடத்த முடியாமல் திண்டாடியது. மூச்சுக்காற்று உள்ளே இறங்கி நெஞ்சம் விம்மியது.

பரிசுத்த உயிர்வளி என்பதை அவர்கள் வாழ்நாளில் சுவாசித்தது இல்லை. அதைச் சுவாசிக்க முடியாமல் இருவரும் தவித்தனர். நளன் சற்று நேரத்தில் தன்னைச் சமன்படுத்திக்கொண்டான். அனிச்சம் இன்னும் மூச்சுத் திணரலால் அவதியுற்றாள். அவளுக்கு முதலுதவி செய்தான். அதுவரை அங்கு நிலவிய ஒன்றும் அவன் கண்ணிலும் கருத்திலும் பதியவில்லை.

அனிச்சம் சற்று நேரத்தில் காற்றில் உலாவும் உயிர்வளியை சுவாசிக்க பழகிக் கொண்டாள். மாலை மங்கத் தொடங்கியிருந்தது. சுந்தரமும், வனப்புமாய் இருந்த சுந்தரவனத்திற்குள் இருந்தனர் இருவரும். மாபெரும் விருட்சத்தின் அடியில்.

தன் கனவு உலகம் நினைவானதை நினைத்து நினைத்து பூரித்துப் போனாள் அனிச்சம். நளனின் உணர்வுகளை வார்த்தைகளால் வரிக்க முடியாது. அனிச்சத்தின் மனக்குழப்பத்திற்கு விடையாகவே இந்தப் பயணம் என்று நினைத்திருந்தான். ஒவ்வொரு இடமாய் ஓடியோடிச் சென்றாள். விழிகளை மூடி, உயிர்வளியை உள்ளிழுத்தாள். நுரையீரல் புத்துணர்ச்சியுடன் பெரிதாக விரிந்து சுருங்கியது. உள்ளுக்குள் ஒரு மோனநிலையை உணர்ந்தாள். இயற்கையின் வாசம் பிடித்தாள். மழைத் தூர ஆரம்பித்தது. மண்வாசனை மூக்கைத் துளைத்து மூளைக்குள்‌ சென்று மணியடித்தது. நரம்புகள் புடைத்தெழும்பியது. அவளின் உணர்வுகளைத் துல்லியமாக ரசித்துக் கொண்டிருந்தான் நளன்.

அப்பொழுது சில காலடித்தடங்கள். சருகுகள் மிதிபடும் சப்தம். ஏகாந்த பொழுதினை அனுஅனுவாய் ரசித்த அனிச்சத்தின் நெஞ்சின் ஓரம் தோன்றிய சுருக்கென்ற வலி. துடிதுடித்துப் போனாள் அவள். ஒரு பெண்ணின் வீல் என்ற குரல் அவளை நிலைகுலைய வைத்தது. அருகில் கேட்ட காலடி சப்தங்களால் மனதிற்குள் படபடத்தது.

அந்தகாரம் கொஞ்சம் கொஞ்சமாக கருமையை அரைத்துப் பூசியிருந்தது பகல் என்னும் சித்திரத்தில். தினமும் இருளில் பூக்கும் நட்சத்திரங்களையும், வெள்ளை மதியையும், இருண்மையின் கோரக் கரங்கள் கொஞ்சமும் ஈரமின்றி அள்ளிப் புசித்திருந்தது. இருளின் பேரொளியாய் காரிருள் மட்டுமே கசிந்திட, அவள் மூச்சிசைந்ததோ இல்லை அவளுக்கே தெரியாமல் மூச்சு கசிந்ததோ? நிலவற்ற வானமும், விண்மீன் தின்ற இரவும் அவளுக்குச் சாதகமான சூழ்நிலையாக இருப்பினும், அவளின் அதீத இதயத்துடிப்பு சர்வ நிச்சயமாக அவளுக்குப் பாதகம் விளைவிக்க காத்திருந்தது. எவ்வளவு முற்பட்டும் மூச்சை சீர்படுத்த முடியவில்லை. மூச்சடக்கி பழக்கமும் இல்லை. மூச்சடக்கும் நிலையில் அவளும் இல்லை. குனிந்து தன் பெருத்த வயிற்றைப் பார்த்தாள். நிறைமாத கருவைச் சுமந்து நிற்கிறாள். ஒரு விருட்சத்தின் மறைவில் நின்று கொண்டிருந்தாள். ஆளில்லா சாலையில், மூளிப் பொழுதினில் உயிர்‌ காக்க இறுதிக்கட்ட போராட்டம்.

இருளில் வரிவடிவமாக தெரிந்த அவளைக் கண்ட அனிச்சம் அருகில் செல்ல முயற்சிக்க, நளன் அவள் கைகளைப் பிடித்து இழுத்தான். அங்கு பலர் அவளைத் தேடி வந்தனர். அவர்களின்‌ காலடித் தடங்களால், மீண்டும் படபடப்புத் தோன்றியது அனிச்சத்தின் நெஞ்சில். நல்லெண்ணம் கொண்டே அனிச்சத்தை அருகில் செல்ல அனுமதிக்கவில்லை நளன். ஏதோ பெரும் தவறு நிகழப்போகிறது என்று மட்டும் அவன் உள்ளம் உரைத்துக்கொண்டே இருந்தது.

ஓடி வந்ததில் துவண்ட கால்களும், நடுங்கும் திரேகமும், நிசியின் வனப்பும் அடிவயிற்றில் சுருக்கென்று தைத்த வலியும் தாளாமல் வெடித்து அழக் காத்திருந்தது விழிகள். வலியைக் கட்டுக்குள் கொண்டு வர, அவளது‌ மணிக்கட்டை அழுந்தக் கடித்தாள்.

சிடுக்கி முடிந்த தருணத்திற்குச் சிகரம் வைத்தாற் போல் தடதடவென்று ஒலியெழுப்பிய காலடி ஓசைகளால் அவளின் சப்த நாடியும்‌ அடங்கி ஒடுங்கிப் போயிற்று.

சிறிது நேரத்தில் அவள்‌ உச்சந் தலையில் அருகில் இருந்த ஆண் பெரு ஆணியை வைத்து அடித்தான். மேகமூட்டங்கள் இருளை அப்பி பூசியிருக்க, என்ன நிகழ்ந்தது என்று பரிதவித்த அனிச்சத்தின் எண்ணங்களின் பிம்பமாய்‌ ஒரு மின்னல் கீற்று. அந்தப் பரிபூரண ஒளியில் தெரிந்த இருமுகங்களைக் கண்டு இவர்கள் இருவரின் முகமும் அதிர்ச்சியடைந்தது. மின்னல் ஒளி வெட்டி முடிக்க, அவன் அவளின் தலையில் ஆணியை இறக்கியிருந்தான். பாவை‌ சரிந்து கீழே விழுந்தாள் வயிற்றைப் பிடித்துக்கொண்டு. உயிர் துறக்கும்‌ தறுவாயில் மனதின் வலி முகத்தில் அப்பட்டமாய்‌ தெரிந்தது. அவள் உயிர்போகும்‌ வேளையிலும், ஏதோ பிள்ளையைக் காக்கும் ஆபத்பாந்தவன் போல வயிற்றை தடவித் தடவிக்‌ கொடுத்தாள். அடுத்தநொடி அவள் அருகில் துப்பாக்கியால் சுடப்பட்டு சரிந்தான் அவனும். இருவரையும் இழுத்துக் கொண்டு சென்றனர் அவர்களைத் தேடி வந்திருந்த விசித்திர மனிதர்கள். மீண்டும் மின்னல் கீற்று ஒன்று. சமைந்து நின்றிருந்த நளனையும் அனிச்சத்தையும் நினைவுலகுக்கு கொண்டு வந்தது.

அடுத்த அடி அனிச்சம் எடுத்து வைக்காமல் தடுத்திருந்தான் நளன். அதீத களைப்பில் இருவரும் மயங்கி விழுந்தனர். இதுவரை புசித்த நிகழ்வுகள் போதுமென்று இரவும் விலகி நின்று ஆதவனுக்கு வழிவிட்டது.
 
Last edited:
அத்தியாயம் - 8
பொழில் 17ஆம் நூற்றாண்டு

அந்தகாரம்!
அடர்ந்த வனம்!
நலுங்கிய இரவு!
நரியின் ஓலம்!
வேக நடை!
இரையும் நிசப்தம்!
இசைந்த மூச்சு!
கரையும் நேரம்!
இறுகிய தசைகள்!
நடுங்கும் திரேகம்!
மரணம் நீ!
துணையாய் நான்!!!

மறுநாள் காலை இருவரும் கண்விழிக்கும் பொழுது ஒரு வீட்டில் இருந்தனர். நளனுக்கு நன்றாக மயக்கம் தெளிந்திருந்தது. ஆனால் அனிச்சம் இன்னும் அரை மயக்கத்தில் இருந்தாள்.

அங்குள்ள மனிதர்கள், இயற்கை, இடம், பழக்கவழக்கம் என்று அனைத்தும் வித்தியாசமாக இருக்க, நளன் பார்வையாளராய் மாறிப்போனான். அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் அவன் திணற, அவர்களே ஒரு முடிவுக்கு வந்தனர். இவர்கள் இருவரும் வேறு ஊரிலிருந்து ஓடி வந்திருப்பது போல் ஒரு கதையை உருவாக்கி உலவ விட்டனர். நளனும் ஆம் என்று தலையாட்டி வைத்துவிட்டான். அவர்கள் அணிந்திருக்கும் உடையின் விசித்திரம் மேலும் வினா தோற்றுவிக்க, அதற்கும் வாய்க்கு வந்ததை உளறி வைத்தான் நளன்.

இரக்கம் நிறைந்த அந்த மக்களும் அவர்களுக்கு அடைக்கலம் தருவதாகவும், ராணியின் கையில் தாலி எடுத்துக் கொடுத்துத் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறினர். நளன் சிந்தனையில் அமர்ந்திருக்க, "தம்பி.. கவலை வேண்டாம். ராணியிடம் அடைக்கலம் பெற்றவர்கள் சோடை போனதாகச் சரித்திரம் இல்லை" என்று‌ நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் பகிர, நளனின் அதரம் மலர்ந்தது.

"நீங்கள் இருவரும் அங்கு எப்படி வந்தீர்கள்?" என்றார் அந்தப் பேரிளம்பெண். பெயர் பொன்னழகி.

சற்றே பருத்த உடல். முகம் நிறைய மஞ்சள். வட்டமாய் அரக்குப் பொட்டு. இடைவரைக் கூந்தல். அழகாய்ப் பின்னப்பட்டிருந்த சடை. அதில் மொட்டுக்களைத் தொகுத்த பூச்சரம் குடியேறியிருந்தது. அவள் தோளின் வளைவுகளில் அது வளைந்து நெளிந்து ஆட, அதில் ஒரு அழகு இருந்தது. அனைத்தும் நளனுக்குப் புதிது. ஆனால் பிடித்திருந்தது. அனிச்சம் பைத்தியம் போல் பிதற்றிக் கொண்டிருந்த உலகம் இவ்வளவு அழகா என்று எண்ணியெண்ணி மகிழும் பொழுதே, முந்தய இரவின் எச்சங்கள் நினைவில் வந்து அவனைத் திடுக்கிட வைத்தது. இதை எப்படி மறந்தான்?. அழகு அதிகமாய் இருக்கும் இடத்தில் கொடூரங்கள் நிறைந்திருக்குமோ?

"நேத்து அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு?" என்றான் நளன். அனிச்சம் விழிகளைத் திறக்காமல் காத்திருந்தாள். இந்த வினாவிற்கு விடை வேண்டுமே. அவளால் விழிகளைத் திறக்க முடியவில்லை. ஆனால் மூளை விழித்துக் கொண்டது.

"அந்தக் கொடூரம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்" என்று மறுத்தாள் அவள்.

"இல்ல.. பரவாயில்லை.. சொல்லுங்க.. எங்களால காப்பாத்த முடியலைன்னு வருத்தம் எங்களுக்கு" என்றான் உண்மையான வருத்தத்துடன்.

"மங்கை தற்கொலை செய்து கொண்டாள்."

"இல்லம்மா.. அவங்களைத் தலையில ஆணி வச்சு அடிச்சுக் கொன்னாங்க. நாங்க எங்க கண்ணால பார்த்தோம்" என்றான் நளன்.

"அதுவும் தற்கொலைதான்" என்று எழுந்து சென்றார் அவர். நளன் குழம்பிப் போனான்.

அனிச்சம் அநியாயம் நிகழ்ந்துவிட்டதாகவே எண்ணினாள். மனதின் மேல் பெரும் பாறை ஒன்றை ஏற்றி வைத்த உணர்வு. அதெப்படி மனசாட்சி இல்லாமல் ஒருத்தியைக் கொலை செய்ய முடியும்?. அதுவும் நிறைமாதமாய் இருப்பவளை. குழந்தைப்பேறு என்பது எவ்வளவு கடினமான ஒன்று!. அதை நினைத்தேனும் அவளை உயிருடன் விட்டிருக்கலாமே. அவளின் அழகிய‌ கனவு உலகம் இத்தனை கொடூரம் நிறைந்ததா? உயிர்வளி, பச்சை உயிரினம், இன்னும் பெயர் தெரியாத ஆயிரம் செழுமைகள் இல்லாமல் இருந்தாலும், அவர்களுடைய உலகில் இப்படியொரு கொடூரம் நிகழ வாய்ப்பில்லை. ஆனால் எல்லாம் இருந்தும் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?. இதைச் சாதாரணம் என்பதுபோல் கடந்து செல்கிறார்கள். எப்படி முடிகிறது இதெல்லாம்? என்று மருகித் தவித்தாள் அவள்.

"அதெப்படி அது தற்கொலை ஆகும்?" என்று தன் இமாலய சந்தேகத்தை முன்மொழிந்தான் நளன்.

"மங்கையின் மரணம் வெகு சாதாரண மரணம் என்று எண்ணிவிட்டீர்களா? அது வரலாற்று மரணம். இப்படி ஒரு பேறு கிடைக்காதா என்று நாங்கள் ஒவ்வொருவரும் ஏங்கித் தவிக்கும் மரணம். கொடுப்பினை வாய்த்தவள். ராணிக்கு உயிர் கொடுப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்று பொன்னழகி கூற, அதிலிருக்கும் பெருமை மற்றும் இன்னும் பிற உணர்வுகளின் பொருளை பிரித்தறிய முடியவில்லை மற்ற இருவரால். இறப்பு என்பது சாபமல்லவா? அது எப்படிக் கொடுப்பினையாகும்?. நளனின் முகத்தில் குழப்பம் படர்ந்திருக்க, பொன்னழகி மீண்டும் தொடர்ந்தாள்.

"உடல் ஆங்கிலேயனின் வசம் சென்றிருக்க வேண்டும். ஆனால் உடையாள் காளிப் படையினர் அவளின் சடலம் மீட்டுவிட்டனர். அவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தி இன்று இறுதி மரியாதை செலுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மங்கையின் உடலை மீட்க போரொன்று நிகழ்ந்திருக்கிறது அர்த்த சாமத்தில். ஆசையின் உருக்கொண்ட உயிரைப் படையலாய் அளித்து ராணியின் மனதிற்கு உகந்தவளாகிவிட்டாள் மங்கை. அந்த வீரமங்கை. அவள் பாக்யசாலி" பொன்னழகி.

**************

வெள்ளையனே வெளியேறு!
வெள்ளையனே வெளியேறு! என்ற வீரமுழக்கம் வீதியெங்கும் தடித்து ஒலிக்க, துப்பாக்கிச்சூடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தது. தோட்டாக்கள் மக்களைத் துளைக்க, மண்ணில் பிசுபிசுப்பு ஏறியது அங்கு சிந்திய உதிரத்தால். உயிர்துறந்த ஒவ்வொருவரும் இன்னல்களின் இரங்கல்களாய் இன்றி, எதிர்காலத்தின் உரங்களாய் மாறிப்போயினர். மக்களின் உதிரம், ரத்தத்திட்டுக்களாய் நாச்சியின் முகத்தில்.

சிதறி ஓடிய மக்கள் தோட்டாவைக் கண்டு அச்சம் கொண்டதால் அல்ல. நாளை சுதந்திரம் கிடைத்த பின்னர், சுந்தரப் பூமியில், சுகந்தக் காற்றைச் சுவாசித்த பின்னர் மாண்டு போக வேண்டும் என்ற வேட்கைக் கொண்டதால். ராணியை அரியணையில் ஏற்றி ஒருமுறை கண்டுகளித்துவிட்டால் போதும். மீளாத் துயரில் இருந்து மீட்சி பெற்றுவிட்டோம் என்று செவி குளிர கேட்டுவிட்டால் போதும். வேறு இனிப்பான செய்திகள் வேண்டுமா என்ன? இந்த உயிர் தன்னிறைவு பெற்று வேறு உலகில் உலாவச் சென்றிடுமே!

தன் மக்களைக்‌‌ குருவி சுடுவதுபோல்‌ சுட்ட வெள்ளையன் மேல் தீராக் கோபம் கொண்டிருந்தாள் வேலுநாச்சியார். என்றேனும் விடியல் வருமா இந்தச் சிவகங்கைச் சீமைக்கு என்று மருகித் தவித்தாள். ஆனாலும் வீரர்களின் வீரத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை. உயிரைக் கொடுத்தாவது, அவளின் கட்டளை நிறைவேற்ற எத்தனை வீரர்கள்!, வீரத்தாய்கள்!. குயிலி, உளையாள் என்று பெண்களின் பட்டியலும் அதிகம். சில வருடங்களுக்கு முன்பு தன்னைக் காட்டிக் கொடுக்காமல் தலை வெட்டுண்டு இறந்த உடையாள். தன்னுடைய உயிரைப் பல முறை காப்பாற்றியிருக்கும் குயிலி. அடுத்து இவர்களின் பட்டியலில் இந்தப் பெண் மங்கையும் சேர்ந்துவிட்டாள். ஏன் இப்படிச் செய்தாள் இவள்? என்று மருகித் தவித்திருந்தாள். சிலமணி நேரம் முன்பு சுவைத்த வெற்றிக்கனி கசந்தது இப்பொழுது.

ஆம்!! சிலமணி நேரம் முன்பே அவள் காளையார்மங்களத்தைக் கைப்பற்றியிருந்தாள். கொண்டாடப்படவேண்டிய வெற்றி. சில நாட்கள் முன்பே போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்திருந்தன. பன்னிரெண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் திப்புசுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஹைதர் அலிக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை என்று அவன் மகனான திப்புசுல்தான் நிரூபித்திருந்தான். அவள் பதுங்கியிருந்த காலம், அவளுக்கு அனைத்து விதத்திலும் உதவியாய் இருந்தவர் ஹைதர் அலி‌. பணபலம், படைபலம் என்று கொடுத்து உதவியிருந்தார். திப்புசுல்தானை வேற்றாளாய் அவள் எண்ணவில்லை. தமையன் போலவே பாவித்தாள். 1780ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்றுக் குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார். மற்ற படைகளைத் தலைமையேற்று வந்தனர் மருது சகோதரர்கள்.
முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த மல்லாரிராயன், முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரைக் கோச்சடையில் எதிர்த்து நின்றான். மல்லாரிராயன் ஒரு நயவஞ்சகன். தன் இனத்திற்கே மாபெரும் துரோகம் இழைத்தவன்.

ஒரு மணிநேரம்தான் வேலுநாச்சிக்குத் தேவைப்பட்டது. மல்லாரிராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார்கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான்.

உடையாள் காளிப்படைப் பிரிவினர் விவேகத்துடன் செயல்பட்டனர் அந்தப் போரில். குதிரைப்படையும், காலாட்படையும் திமிறிக்கொண்டு ஆங்கிலேயனின் படையை ஊடுருவியது. அதற்கு முழுமுதற் காரணம் உடையாள் காளிப்படை. பெண்கள் வாள் வீசுவதில் வல்லவர்களாக இருந்தாலும், அவர்களை வளரி வீசுவதற்கும், கவண் கல் வீசுவதற்கும் பயிற்சியளித்திருந்தனர். அவர்களின் வளரி மற்றும் கவண் கல் நன்றாகப் பதம் பார்த்தது ஆங்கிலேயர்களின் நெற்றியை. எத்தனை அடி தூரத்தில் இருந்தாலும் சிறிய கல் போதும். எதிரியை நிலைகுலைய வைக்க. மடியில்‌ கூரான கற்கள் பல கட்டிக்கொண்டு போர்க்களம் புகுந்த பெண்கள் படையினர்‌ வரலாற்றில் பேசப்பட வேண்டியவர்கள்தான். கவண் கற்கள் குறி தவறாமல், அவர்களின் தலையில் காயம் ஏற்படுத்த, அந்தச் சிறு இடைவெளியைப் பயன்படுத்திக் குதிரைப்படை ஊடுறுவி, அவர்களுக்குப் பெரும் சேதம் ஏற்படுத்தியது.

அங்கும் தமிழர்படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின.
வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன.

ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்துக் காத்துக்கொண்டிருந்தது. அதன் பிறகு போரை வழிநடத்துவதில் சற்றே தளர்வு ஏற்பட்டது.
தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலுநாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர், காளையார்கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தியிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தியிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
என்னதான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியாருக்கு இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை. அதற்கான ஆலோசனை சபைதான் இப்பொழுது கூடியிருந்தது.

அதில் விஜயதசமி அன்று உடையாள்‌ காளிப்படையினர் வேடமிட்டு கோட்டைக்குள் சென்று ஆங்கிலேயர்களை முறியடிக்கத் திட்டம் வகுத்தனர். அது ஒன்றுதான் வழி என்றும் முடிவு செய்யப்பட்டது. ஏனெனில் ஆங்கிலேயனை எதிர்க்க, வாளைத் தீட்டினால் போதாதே. புத்தியை அல்லவா தீட்ட வேண்டும். ஆங்கலத் தளபதியின் உதிரத்தைக் கோப்பையில் பரிமாற வேண்டும், வேட்கையில் தவித்திருக்கும் தம் மக்களுக்கு என்று சபதம் பூண்டவர், எப்படி கோட்டைக்குள் நுழைவது, அவர்கள் கோட்டைக்குள் கலவரம் உண்டுசெய்த பின்னர், மருது சகோதரர்கள் எப்படி கோட்டையைச் சுற்றியிருக்கும் துப்பாக்கிகளை எதிர்கொள்வது என்று பெரும் திட்டம் வகுத்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது குயிலி அவசரமாக உள்ளே ஓடி வந்தாள். அவளின் வேகம் வேலு நாச்சியைப் பதம்பார்த்துவிட்டது‌.

"குயிலி.. என்னவாயிற்று?"

"துயரச்செய்தி கொண்டு வந்திருக்கிறேன்" என்று குயிலி கூற, நாச்சியார் எழுந்து கொண்டார். அவள் கசங்கிய வதனம் ராணியை‌ அச்சுறுத்தியது.

"காலம் தாழ்த்தாமல் உரைத்திடு" என்றாள் கட்டளையாக.

"மங்கை இறந்துவிட்டாள்" என்று குயிலி கூற, நாச்சியார் எழுந்துவிட்டார்.

அவள்‌முன் மங்கையின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. ஈருயிராய் இன்னும் இருந்தாள் மங்கை. சிவகங்கை சீமையின் முதல் வீரக்கருவை சுமந்திருந்தாள். இந்த உலகைக் காணாத அந்தச் சிறு உயிர்‌ என்ன செய்தது?. அவளின் இந்நிலைக்குக் காரணம் ஆங்கிலேயர்தான் என்று வேலுநாச்சியார் நினைக்கவில்லை. மங்கையின் மரணத்திற்குப் பாதிப் பொறுப்பு அவளே ஏற்க வேண்டும். ஏனெனில் கோட்டையை ஆங்கிலேயனின் வசம் ஒப்புவித்து, மக்களை இந்த இழிநிலைக்கு ஆளாக்கியது அவளல்லவா?

அக்கினிப்பழமென அம்பகங்கள் ரத்தமெனச் சிவந்திருக்க, கருவிழிப்பாவை ஓரிடத்தில் நிலைத்திருந்தது. மங்கை மற்றும் அவள் கணவனின் சடலங்கள் மேல். அவளுக்குப் பெண் குழந்தைதான் பிறக்கும் என்றும், அவளுக்கு வேலுநாச்சியார் என்று பெயரிடுவேன் என்றும் கூறியிருந்தாளே!

செங்காந்தள் மலராய் மனம்‌ கொழுந்துவிட்டு எரிந்தது. மங்கையின் வதனம் நிம்மதியில் திளைத்திருந்தது. தலையில் பெரும் காயம் ஏற்பட்டு இறந்த வலியை அவள் வதனம் அறவே சுமக்கவில்லை. என்னைப் பாதுகாப்பது அப்படி ஒரு நிம்மதியைத் தருகிறதா எம்மக்களுக்கு. அப்படி நான் என்ன செய்தேன். இனி என்ன செய்வேன் என்று நம்புகிறார்கள்.

"குயிலி என்ன நடந்தது?" என்றாள் இறுகிப்போன குரலுடன்.

"விருப்பாச்சியில் பதுங்கியிருக்கும் தாங்கள் மீப்பெரு திட்டம் ஒன்றைத் தீட்டிவிட்டதாகத் தளபதி அப்ரஹாம் பாஞ்சார் அனுமானித்திருக்கிறார். அதன் பொருட்டு மல்லாரிராயனிடம் உளவுபார்க்க ஆள் ஒன்றை அனுப்பினார். அந்த‌ ஈனப்பிறவி‌ அனுப்பிய உளவாளி, தகவலறிய இங்கு உலவிக் கொண்டிருந்தான். அவனை நம்பவைத்துத் தவறான போர்த்திட்டங்களை அளித்துவிட்டாள் மங்கை. அவள் உடையாள் காளிப்படையின் முக்கியத் தலைவி என்பதால் அவனும் நம்பியிருக்கிறான். ஆனால் அவள் கூறியதற்கு நேர்மாறாக நீங்கள் காளையார்மங்களத்தைக் கைப்பற்றிவிட்டீர்கள். மல்லாரிராயனையும்‌ கொன்று விட்டீர்கள். அதன் பொருட்டு மங்கையைக் கொல்லத் திட்டமிட்டிருக்கின்றனர்‌ ஆங்கிலேயர். சூழ்ச்சி செய்து அவளை நம் படையிலிருந்து பிரித்துச் சென்று, ஓட ஓட விரட்டியிருக்கின்றனர். அப்பொழுது அவளுடன் அவள் கணவனும் அருகில் இருந்திருக்கிறான். அதனால் இருவரையும் கொல்லத் துணிந்துவிட்டனர். ஆனால் மங்கை அவர்களின் தோட்டாக்கள் துளைத்து உயிர்துறக்க விரும்பவில்லை...." என்று கூறிய குயிலியின் குரலில் சுருதியிறங்கியிருந்தது.

"அதனால்?" என்றாள் நடுங்கும் குரலுடன்.

"ஆங்கிலேயத் தோட்டாக்களுக்குத் தற்கொலை உத்தமம் என்று கருதி, அது முடியாமல் போக, அருகில் இருந்த ஆணியையும்‌ பெரும் கல்லையும் கணவனின் கையில் எடுத்துக் கொடுத்து, அவளைக் கொன்று விடுமாறு மன்றாடியிருக்கிறாள். அவளுடைய கணவன் அந்தக் காரியம் செய்து முடிக்கவும், அவனைத் தோட்டா துளைக்கவும் சரியாய் இருந்தது. மூன்று உன்னதமான உயிர்கள் சீமையைப் பிரிந்து சென்றது" என்று குயிலி மங்கையின் தியாக அறச்செயலைக் கூறிமுடித்தாள்.

சிறிது நேர அமைதி.

"அப்படி மொழியாதே குயிலி. அவர்கள் எங்கும் செல்லவில்லை. சீமையின் காற்றில் கலந்திருக்கின்றனர். காற்றில் சுதந்திர வேட்கை ஏற்றி நம்மைக் கிளர்ச்சியுடன் வைத்திருக்கின்றனர். மங்கை இப்படி ஒரு காரியம் புரிவாள் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. என்னைச் சுற்றி இருக்கும் வீரமங்கைகளுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை!!" என்று கண்ணீர் உகுத்தாள் வேலுநாச்சி.

மங்கையின் அருகில் சென்றவள், "என்னை ஏன்‌ இப்படி ஏமாற்றினாய் மங்கை. உன் குழந்தையைக் கையில் ஏந்தும் அருகதையற்றுப் போனேனோ?. இத்தனை உயிர்கள் இறந்தும் இன்னும் சுரணையற்றவளாய் இருக்கிறேனே! இதற்குப் பிரதி உபகாரம் என்ன செய்யப் போகிறேனோ" என்று தவித்தவளைத் தடுக்கும் பொருட்டு, "ராணி" என்று பல குரல்கள் ஒலித்தது சபையில்.

அதன்பின் வெறி‌ கொண்டவள்போல் எழுந்தவள், "இன்னும் இரண்டு தினங்கள். அனைத்திற்கும் முடிவு கட்டுகிறேன். விஜயதசமி அன்று கோட்டை உன் ரத்தத்தால் சுத்தம் செய்யப்படும். என் மண்ணில் விளைந்து கிடக்கும் வீரத்தின் மேல் ஆணை!!. எம்மைக் காக்க உயிர் துறந்த இந்தக் குழந்தையின் மீது ஆணை!!" என்று சூளுரைத்தாள்.

"குயிலி... முகத்தில் கீறல் செய்து சகல மரியாதைகளுடன் இவர்களை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய். வீரத்தின் சாயல் குழந்தைக்கும் இருக்க வேண்டும். அன்னையின் வீரத்தால் அந்தக் குழந்தையும் அதற்குத் தகுதி பெற்றுவிட்டது. வரும் விஜயதசமியன்று கோட்டை என்வசம் இல்லை என்றால் வேலுநாச்சியும் இல்லை. அவளும் அழிந்து மண்ணோடு மண்ணாகப் போகட்டும்" என்று சூளுரைத்தவளை யாராலும் தடுக்க இயலவில்லை.

"வரும் விஜயதசமியன்று கோட்டை நிச்சயம் உங்கள் வசம் இருக்கும். உங்களின் இந்தச் சூளுரை பொருளற்றுப்‌ போகட்டும்" என்றாள் குயிலி கணீர் என்ற குரலில்.

பொன்னழகியின் வீட்டில் அனிச்சம் கண்விழித்துவிட்டாள். எழுந்ததிலிருந்து அழுது கொண்டே இருந்தாள்.

அவளைத் தேற்றும்‌ வழியறியாது திகைத்து நின்றான் நளன்.

"எனக்குக் கடைசியா ஒரு தடவை பார்க்கணும்" என்றாள் மொட்டையாக.

"பொன்னழகி அக்கா கிட்ட சொல்லி ஏற்பாடு செய்றேன்" என்றான் நளன்.

***********

மங்கை என்னோட புனைவுப் பாத்திரம். மற்றபடி வேலுநாச்சியார் பற்றிக் கூறியிருக்கும் தகவல் எல்லாம் வரலாற்றுத் தகவல். கொஞ்சம் வரலாற்றைத்‌ தொட்டு வருவோமே தவிர, மற்றபடி மங்கையின் கதையைத்தான் இந்த நூற்றாண்டில் கூறப்போகிறேன். கவண் கல் பயன்படுத்தி ஆங்கிலேயரை எதிர்த்தனர் தமிழர்கள் என்ற குறிப்பு இருக்கிறது. இதை உடையாள் காளிப்படைப் பிரிவினர் பிரயோகம் செய்வதாக எழுதியது என் புனைவு மட்டுமே.

இணைப் பிரபஞ்சம் - இதை மையமாகக் கொண்டுதான் இந்தக் கதையைப் புனைந்திருக்கிறேன். மூன்று கதைகள் வரும்.

பூமி - நாற்பதாம் நூற்றாண்டு - நளன், அனிச்சம்.

பொழில் - பதினேழாம்‌ நூற்றாண்டு - மங்கை

புடவி - பதினெட்டாம் நூற்றாண்டு - கொடி, செழியன், அமரா(அடுத்து வரும் பதிவுல இந்த அமரா வருவா).

இந்த மூன்று உலகத்தை வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு குணாதிசயங்களோடு, வெவ்வேறு காட்சியமைப்புகளோடு கதைப் பயணிக்கும் இனி. கதை சொல்லலிலும் சிறுது வித்யாசம்‌ இருக்கிறது. ஓர் இணைப் பிரபஞ்சம் வைத்துக் கதை எழுதலாம். ஆனால் இங்கு இரண்டு இணைப் பிரபஞ்சம் எடுத்துக் கதைக் கூறியிருப்பதறக்குக் காரணம் இருக்கிறது. போகப் போகப் புரியம். தொடர்ந்து ஆரதவு அளியுங்கள்.
 
Last edited:
அத்தியாயம் - 9

கொட்டும் மேளம்!
அலங்காரப் பந்தல்!
பரப்பிய புதுமணல்!
பூட்டிய நாண்!
அணிந்த மெட்டி!
பிரிவாய் நான்!
பரிவாய் நீ!!!


செவிப்பறை கிழியுமளவு மத்தளம் கொட்டப்பட்டது. மங்கல நிகழ்வுகளின் பொழுது எதிர்மறை சொற்களோ, ஒருவரின் வயிற்றெரிச்சலோ, வன்மமோ வெளியில் கேட்காதவாறு இருக்கவே இந்த மங்கள வாத்தியங்களின் முழக்கம். அனைத்து ஒலியையும் தின்றுவிட்டு, எதிரொலியுடன் ஒலிக்கும் மத்தளம், எதிர்மறை எண்ணங்களையும் வழித்துத் துடைத்துப் புசித்து ஏப்பம் விட்டுவிடுமாம். அப்படித்தான் இந்தத் திருமணத்திலும் மங்கல வாத்தியங்களின் முழக்கம். மணமகளின் மனதையும் பெயர்த்தெடுத்து சென்றுவிட்டதோ? விண்ணதிர, மண்ணதிர முழக்கம் எதிரொலி‌ செய்தது. ஆனால் அவள் பூரண அமைதியுடன் விளங்கினாள். முகம் காண அப்படித்தான் இருந்தது.

பெரும்பந்தல். அதில் பெரிய வாழைமரங்கள். புது வெள்ளை மணல் எடுத்து வந்து பந்தலின் கீழ் பரப்பியிருந்தனர்.
நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தாள் கொடி. பார்ப்பனர்களில் சிறந்தவர்கள் பலர் மந்திரங்களால் புகழ்ந்து, மலர் மாலையை அணிந்திருந்த மணமகளுக்கும் மணமகனுக்கும் கையில் காப்புக் கயிறு கட்டினர். மணமகனின் திருக்கையால் ஏந்திழையின் கால்களைப் பற்றி அம்மி மிதித்து, வெண்சங்கு கழுத்தினில் திருநாண் பூட்டி, மங்கல மங்கையர் ஆசி பெற்று, மங்கல வீதி வலம் செய்தனர் மணமக்கள் இருவரும்.

கொடிக்குத் திருமணம் முடிந்திருந்தது. அவள் மரப்பாவையாய் வலம் வந்தாள். இறுதிவரை செழியனை எதிர்பார்த்தது மலர்தான். கொடியின் மனம் இரும்பு பெட்டகமாய் மாறிப்போனது. தலைக்கு மேல் வெள்ளம் சென்ற பின்னர் என்ன செய்வது‌?. இனி உயிர் பிழைத்தால் வாழலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் போல. அவள் மனம் என்ன நினைத்திருக்கிறது என்று அவளுக்கு மட்டுமே வெளிச்சம்.

தாலிக்கட்டு முடிந்து, அடுத்து பல சம்பிரதாயங்களும் செய்து முடித்தனர். மணமகன் சத்யன் என்னும் சத்யவேலன். அவசர மாப்பிள்ளை இவன். அவசரத்திற்கு வைத்த ரசமும் பல சமயங்களில் மணக்கும். இவன் பெயருக்கு ஏற்றாற் போல் சத்யசீலனா இல்லை பெயரைக் கெடுக்க வந்த பாவியா‌ என்று காலம்தான் உரைக்க வேண்டும். முன்னது‌ கொடியின் வாழ்வை சீர்படுத்தும். பின்னது அவளின் வாழ்வைக் குடித்துவிடும். கொடிக்கு வைக்கப்பட்ட விஷப்பரீட்சை. ஆனால் அவளின் பதில் மட்டுமே போதாது வெற்றி பெற.

பல நேரங்களில் இந்தச் சமுதாயம் இப்படித்தான், சிலரைப் பரிட்சித்துப் பார்த்துவிடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கைக் கவிதையை வெற்றுத் தாளில் செதுக்கி நிமிர்வதற்குள், சில கணங்களில் அது கசக்கி‌ எறியப்படுகிறது மற்றொருவரால். உரிமை என்ற தவறான புரிதலில். உண்மையில் அதற்கு உரிமை யாருக்கும் இல்லை. அடுத்தவரைப் பாதிக்காமல் வாழும் வரைதான் அது உன் வாழ்வு. எப்பொழுது அடுத்தவரின் நாட்குறிப்பில், நீ எழுத நினைக்கிறாயோ, அங்கே வரைமுறைகள் அறுத்தெறியப்படுகிறது என்று பொருள். என் உள்ளம் கவர்ந்தவரின் நாட்குறிப்பில் நான் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. உன் நினைவுகளைச் சுமந்து, அது உற்றவரால் எழுதப்பட்டிருக்க வேண்டும். அன்போ, அதிகாரமோ..? இரண்டுமே அத்துமீறி நுழைகிறதென்றால் அது தவறுதான்.

தாலிக்கட்டு முடிந்த பிறகு மலர், கொடியின் அருகிலேயே இருந்தாள். இனி செழியன் வந்தும் பயனில்லையே.

அங்கு அலங்கார மாளிகையில், அதற்குச் சற்றும்‌ பொருத்தமில்லாத பாழடைந்த அறையில் இருந்தான் செழியன். அரசியின் அறைதான். அவள் நினைவுகள் பலவும் சுமந்திருந்தது அந்த அறை. ஒவ்வொரு இணுக்கிலும் அவளின் நினைவுகளின் இளைப்பாறல். அவள் அந்த வீட்டில் எப்படி வாழ்ந்திருக்கக் கூடும் என்று விளக்கவல்லது அந்த அறை. அப்படிப் பாசமாய் வளர்த்த தங்கையைக் கொல்ல‌த் தயங்காதவர், கொடியை என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடுமே!. அவனின் இலக்கியக் காதலில் இலக்கணங்கள் பிழையாகி, பொருந்தாக் காதலாய் வலம்‌ வருகிறது. பொருந்தாது போனது தந்தையின் கோட்பாடுகளால். அன்னை கூறுவதிலும் நியாயம் இருக்கிறதே. எத்தனை தினங்கள் அவளைப் பாதுகாக்க முடியும். இங்கு போகிற போக்கில் வாழ்க்கை நடத்த முடியாதே. நான் வாழ இரண்டு திட்டங்கள் வகுத்தால், அதை முறியடிக்க நூறு திட்டங்கள் உருவாக்கப்படுகிறது.

ஒருவேளை கொடியை அவன் மணந்து கொண்டால் என்று நினைக்கும் பொழுதே, நிகழவிருக்கும் அனர்த்தங்கள் அனைத்தும் வரிசைகட்டி வந்து நின்றது. ஆராய்ந்து பார்த்ததில், எஞ்சியிருக்கப்போவது என்று எதுவுமில்லை. அதற்கு இந்தப் பிரிவு எவ்வளவோ மேல் என்றே தோன்றியது. புத்தி ஞானம் பெற, சோதனைகள் கடக்க வேண்டும் போல. காதலால் இணைய முடியாத இருவரும், பிரிதலில் இருந்த புரிதலை உணர்ந்து கொண்டனர் ஒன்றுபோல். ஒத்த மனதின் சிந்தனைகள் ஒன்று போல் இருப்பதில் தவறில்லையே.

தேவர் பிள்ளை வீட்டிற்கு வந்தார். நினைத்ததைச் சாதித்துவிட்ட, மமதை நிறைந்திருந்தது அவரது‌ முகத்தில்.

"கோகிலா.." என்று அழைத்தார்.

வரும் பொழுது குவளையில்‌ நீர் எடுத்துவந்தார்‌ அவர். அதை வாங்கி அருந்தியவர், "செங்கனூர் ராசா வீட்டுக்கு இன்னைக்கு, அந்தி சாயப் பொண்ணு பார்க்கப் போறோம்" என்றார் அறிவிப்பாக.

"அதுக்குள்ளையா? கொஞ்சம் அவசரப்படுறீக. செழியன் மனசும் கொஞ்சம் தயாராகட்டும்" என்று அவர் கூற, சீறும் பார்வையுடன், கைகளை உயர்த்தி நிறுத்து என்றார்.

"உங்கிட்ட எந்த விளக்கமும் கேக்கல. இது தகவல். போய் உன் புள்ளையைத் தயார் செய்" என்றார்.

கோகிலம் குழப்பத்தில் இருந்தார். இதை இப்பொழுது உடனே தன் மகனுக்குச் செய்வது நல்லதா என்று தன் நெஞ்சைக் குடைந்துவிட்டார். கொடியை இழந்த துக்கத்தில், வீட்டிற்கு வரும் பெண்ணை வருத்திவிட்டால் என்ன செய்வது?. தன் கணவனைப்‌ போல் தன் மகன் இல்லைதான். ஆனாலும், ஏமாற்றமும் ஏக்கமும் சுமந்த நெஞ்சம் நியாய அநியாயங்கள் பார்க்காதே. ஒருவேளை இவன் புரிந்து கொண்டாலும், மனைவியாய் வருபவள்‌ புரிந்து நடக்க வேண்டுமே. குழப்பத்தினூடே கால்கள் மேல் மச்சை நோக்கிச் சென்றது. அரசியின் அறை தவிர அந்தத் தளத்தில் இப்பொழுது வீட்டில் வேலை செய்பவர்கள் மட்டும்தான். அந்தத் தளம் பொதுவாக வீட்டில் உள்ளவர்கள் உபயோகிப்பது கிடையாது.

கோகிலம் மகனைத் தேடிச் சென்றார். அவன் இரண்டு நாட்களாக அரசியின் அறையில் தவமாய்க் கிடக்கின்றான். பொருளையெல்லாம் ஒழுங்குபடுத்தி வைத்திருந்தான். ஏன் செய்கிறான் என்று அவனுக்கும் தெரியவில்லை. மனதைத் திசைத் திருப்பவும் செய்யக்கூடும்.

கோகிலம் சென்று பார்க்கும் பொழுது அறை முழுக்க, ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. அது மிகவும் விசாலமான அறை. அவ்வளவு நேர்த்தியாக இருந்தது அறை. மகனின் மனதில் தெளிவு பிறந்துவிட்டது என்று அந்த அறை எடுத்துரைத்தது‌. மனதின் பிம்பமாய்‌ நம் செயல்கள் ஒலிக்கும் என்பது நியதி.

அவன் தெளிவு பெற்றுவிட்டான். இது என்ன பாத யாத்திரையா? முடியவில்லை என்றாலும் பல்லைக் கடித்துக் கொண்டு நடந்து செல்ல. வீரவசனங்களும் தத்துவங்களும் நம்‌வாழ்வை‌ காப்பாற்றும் கருவியா என்ன? சில காரியங்கள் சிந்திக்காமல் முடிவு செய்தாலும் கெட்டுப்போகாது. ஆனால் சிந்தனையில்லாமல் எடுக்கும் சில முடிவுகளின் முடிவு நன்மை பயப்பதில்லை. இது அவன் சிந்திக்க வேண்டிய தருணம். அதைச் செய்தும் விட்டான்.

கோகிலம்‌ மூலம் விஷயத்தை அறிந்தவன், எந்த உணர்வுமின்றி அவரைப் பார்த்தான். அவர் எதிர்பார்த்த எதுவும் அவன் விழிகளில் கசியவில்லை. ஆனால் இவை அனைத்தும் ‌அவன் எதிர்பார்த்ததுதான்.

நண்பகல் உணவு முடித்ததும் வண்டிகட்டி கிளம்பிவிட்டனர். தந்தையும் மகனும் பேசிக்கொள்ளவில்லை. செழியன் மனதில் ஒரு விடயத்தை மட்டும் உருட்டிக் கொண்டிருந்தான். இன்னும் சில ஆண்டுகளில், இந்த ஊர் மொத்தமும் மாற வேண்டும். மாற்ற வேண்டும். மூடத்தனங்கள் அனைத்தையும்‌ கொன்று, குழிவெட்டி புதைத்திட வேண்டும் என்று உருப்போட்டான். எப்படிச் செய்யப்போகிறான் என்று தெரியவில்லை. ஆனால் செய்து முடிப்பேன் என்ற உறுதி பிறந்திருந்தது.

பெண்ணின் வீட்டை அடைந்தனர். அரண்மனை கோலாகலமாக இருந்தது. அலங்காரம் சற்று அதிகம்தான். அந்த வீட்டின் ஒற்றை ராஜகுமாரியாம். வீடு முழுக்க வண்ண மலர்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஊரே திரண்டிருந்தது அவர்கள் வீட்டின் முன். அதிகார வர்க்கத்தின் வேசித்தனம் இது. பசப்பும் பகட்டும் வெளிப்பூச்சுகள். வெளியில் இருந்து பார்ப்பதற்கு அழகாகத் தோன்றலாம். ஏங்கவும் வைக்கலாம். ஆனால் அதுவே சிலருக்கு சாபமாகவும் அமையலாம். நம் செழியனைப்‌ போல்.

பெண் பார்க்கும் வைபோகமா இது? இல்லை. தந்தை பொய்யுரைத்திருக்கிறார். திருமணம் முன்னமே உறுதி செய்யப்பட்டுவிட்டது. இது மக்களின் முன் கண்துடைப்பு நாடகம்.

அனைவரும் விசாலமான கூடத்தில் அமர்ந்திருந்தனர். பெண்ணை அழைத்து வந்து கூடத்தில் அமர வைத்தார்கள். 'அமரா' என்று விளித்தார்கள். பெயருக்கேற்றாற்போல் அழகிதான் அவள். சில சம்பிரதாயங்கள் நிறைவேற்றப்பட்டுப் பெரும் செல்வம் கைமாற்றப்பட்டது. திருமண முகூர்த்தம் குறித்தனர். அனைத்தையும் ஒரு மூன்றாம் மனிதனைப்‌போல் பார்வையாளனாய் பார்த்துக் கொண்டிருந்தான் செழியன். அனைத்தும் முடித்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டனர் அனைவரும். திருமண வேலைகள் தங்குதடையின்றி நடந்தேறியது

சில நாட்கள் கடந்து சென்றிருக்கும். கொடியைப் பற்றி மலரிடம் விசாரித்தான் செழியன்.

"அண்ணே... நீங்க கடைசிவரை வராம‌ ஏமாத்திட்டீங்க. எதிர்பார்த்துட்டே இருந்தேன்" என்றாள் அவள்.

"கொடி எதிர்பார்த்தாளா?" என்றான் அவன் கேள்வியாக. அந்த வினாவில் ஒரு பதற்றமும் இருந்தது. விடை வேண்டி நிற்கும் நிர்பந்தமும் இருந்தது.

"அவ மனை ஏறி தலை குனிஞ்சு உக்காந்தவதான். நிமிர்ந்து கூடப் பார்க்கல" என்று மலர் கூற, சிறு நிம்மதி பரவியது செழியன் மனதில்.

அது முழுக்க முழுக்கச் சுயநலம் கலந்ததுதான். ஒன்று அவள் எதிர்பார்த்து ஏமார்ந்து போகவில்லை. மற்றொன்று அவள் வாழ்வின் அடுத்த அடிக்கு தயாராகிவிட்டாள் என்ற நிம்மதி.

"எனக்கு அவளை ஒரு தடவை நேர்ல பார்க்கணும். உன்னால கூட்டிட்டு வரமுடியுமா?" என்றான்.

"அது... அவ புருஷன் வீட்ல கேட்டு கூட்டிட்டு வரணும். ஆனா கண்டிப்பா கூட்டிட்டு வரேன். நாளைக்குச் சாயங்காலம் அம்மன் கோவில் வரோம். ஒதுக்குப்புறமா ஏதாவது இடத்தில நீங்க பேச ஏற்பாடு செய்றேன்" என்று கூறிவிட்டு சென்றாள்.

மறுநாள் மலர் கூறியது போல், கொடியை‌ அழைத்து வந்தாள்.

அந்த மாபெரும் விருட்சத்தின் முன் இருவரும் நின்றிருந்தனர். ஆதூரமாக அந்த மரத்தின் அருகில் சென்று, அங்கு திண்ணை போல் அமைக்கப்பட்டிருந்த திட்டில் அமர்ந்தாள்.

அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. அதே பழைய கொடிதான். கழுத்தில் ஏறியிருந்த தாலியும், நெற்றி வகிடில் சூடியிருந்த குங்குமமும் அவளைச் சற்று பெரிய பெண் போல் உருவகப்படுத்தியது. முகமும் விழியும் நிர்மலம் சுமந்திருந்தது. அதில் வினாவும் இல்லை. விடையும் இல்லை. எதிரிலிருப்பவர் கணித்துவிடா வண்ணம் கவனமாய் இருக்கிறாளா என்றும் ஆராய்ச்சி செய்துவிட்டான் செழியன். ஆனால் பதிலறிய முடியவில்லை.

அவனுக்கு எப்படி ஆரம்பிப்பது?. எங்கு ஆரம்பிப்பது? என்று விளங்கவில்லை. அமைதியாகவே இருந்தான்.

"சொல்லுங்க. என்ன பேசணும்?" என்றாள் பொறுமையாக. முன்பு‌ அவளிடம் இருந்த பயம், வெட்கம் எல்லாம் இப்பொழுது இல்லை. பேச்சிலும் முதிர்ச்சி இருக்கும் என்று வினாவின் தோரணை கூறியது. அவனுக்கு மனம் ரணமாய் வலித்தது. ஆனால் அவன் மனதை‌ நிலைப்படுத்த பலநாட்கள் பழகியிருக்கிறான். ஆனாலும் அவளைப் பார்த்ததும் தெளிவெல்லாம் மூட்டைக்குள் சென்று முடங்கியது போல் ஒரு பிரமை.

"எப்படி இருக்க கொடி?" என்றான் செழியன் அவனும் முகத்தில் எந்த உணர்வையும் தேக்காமல். உணர்வுகளை அடக்க முயற்சி செய்தான் என்றும் கூறலாம்.

"ம்ம்ம்... பார்த்தா எப்படித் தெரியுது?" என்று அவனின் வினாவிற்கு எதிர்வினாவாக அவள் இருந்தாள்.

"தெரியல. உண்மையாவே கணிக்க முடியல. அதான் கேக்குறேன்" என்றான்‌ அழுத்தமாக.

"நல்லா இருக்கேன்" என்றாள் அவள். குரலில் ஏதும்‌ வித்தியாசம் தோன்றுகிறதா என்று பார்த்தான். ஆனால் கண்டுகொள்ள முடியவில்லை.

"என்னை மன்னிச்சிரு... என்னால எதுவும் செய்ய முடியலைன்னு என்னோட இயலாமையை‌ எடுத்துச் சொல்ல இங்க வரல" என்றான்‌ மெதுவாக.

"இயலாமை உங்ககிட்ட மட்டும் இல்லை. எங்கிட்டயும்‌ இருக்கு. இந்தச் சமூகத்துக்கும் இருக்கு. பழையகதை பேசிப் பலன் எதுவும் இல்லை. அதனால அதெல்லாம் திரும்பிப் பார்த்து வருத்தப்பட அவசியம் இல்லை. அதுவுமில்லாமல் நாம பேசிப் பழகவேயில்லை. பழசை‌ விட்ரலாம். உங்களுக்குக் கல்யாணம்னு கேள்விப்பட்டேன். சந்தோஷமா இருங்க. நான் வரேன்" என்று‌ கிளம்பப் போனவளைத் தடுத்தான் அவன்.

"நீ‌ எப்படி இருக்கன்னு சொல்லவே இல்லையே" என்று விடாப்பிடியாக வினவ, அதில் ஒரு பிடிவாதம்‌ இருந்தது.

"அதுதான் நல்லாயிருக்கேன்னு சொன்னேனே" என்றாள் அவளும்‌ பிடிவாதமாக.

"அது‌ வெறும் வாய் வார்த்தையா இல்லாம இருந்தா நல்லாருக்கும்."

"எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. இது எப்பவும் ஞாபகம் இருக்கட்டும். நல்லா இருக்கியான்னு கேட்டீங்க. அதுக்குப் பதிலும் சொன்னேன். ஆனால் இதுக்கு மேல நீங்க என்னோட அந்தரங்கத்தைத் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்க உங்க வழில போகலாம்" என்று நிதானமாகக் கூறிவிட்டு திரும்பி நடந்தாள்.

அவளின் இந்த பதிலை எதில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. மனம்‌ சற்று கனத்துப் போனது. அவள் எங்கோ நன்றாக இருந்தால் போதும் என்று தோன்றியது. அவர்கள் இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான்.

ஏதோ தோன்ற மீண்டும் திரும்பியவன், "கொடி" என்று அழைத்தான்.

அவள் திரும்பிப்பார்க்க, "என்னைக்காவது ஏதாவது உதவி தேவைப்பட்டா தயங்காம எங்கிட்ட கேளு. மலருகிட்ட சொல்லி அனுப்பு. உதவி செய்றதுக்கு உன்னை நானோ, என்னை நீயோ தெரிஞ்சிருக்கணும்னு அவசியமில்லை" என்று‌ அவன் கூற, அவள் இதழ்கள் மென்னகை‌ பூத்தது.

புழங்காக் காதல் பிரிவின் பரிவில் அறிதுயில் கொண்டுவிட்டது.

அவனின் திருமண நாளும் நெருங்கி வந்தது. திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் செழுமை மட்டுமே. அமரா நவரத்தினங்களால் ஒளிர்ந்தாள். கறிவிருந்து ஊர் முழுக்க மணத்தது. குறைந்தது ஊரில் ஒருவாரம் யாரும் வடித்திருக்கமாட்டர். அவ்வளவு தடபுடல்.

திருமணத்திற்கு முதல்நாள் கோகிலம் செழியனிடம் தனித்து உரையாடினார். பல நாட்களாகப் பேச வேண்டும் என்று நினைத்ததுதான். ஆனால் அவருக்கு மகனிடம் பேசும்‌ தைரியமில்லை.

"செழியா... அம்மா ஒண்ணு சொல்லுவேன் கேப்பியா?" என்றார்.

"நான் நல்லாயிருக்கணும்னு நினைக்கிற ஒரே ஆள் நீ மட்டும்தான் மா. தாராளமா சொல்லு. என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்றேன்" என்றான்.

"கொடி உனக்குக் கிடைக்கலைங்கிறது பெரிய வருத்தம்தான். ஆனா அதை மனசுல வச்சுக்கிட்டு, அமராவ சங்கடப்படுத்திராதப்பா" கோகிலம்.

அவன் விரக்திச் சிரிப்பை உதிர்த்தபடி, அன்னையைப் பார்த்தான்.

"அம்மா.. நான் இதுக்கு பதில் சொல்லப்போறது‌ இல்லை. உனக்கு எந்த வாக்குறுதியும்‌ கொடுக்கப்போறதும் இல்லை. நான் உன்னோட வளர்ப்பு. அதனால உனக்கே தெரிஞ்சிருக்கணும். உன் மனசைக்‌ கேட்டுக்கோ உன் பையன் எப்படின்னு" என்று அவன் கூற, கோகிலத்தின் மனம் குளிர்ந்துவிட்டது.

இப்போது அவருக்கு முழுநம்பிக்கை பிறந்துவிட்டது. மகன் இனி நன்றாக வாழ்வான் என்று நினைத்தார்.

மறுநாள் கோலாகலமாகத் திருமணம் முடிந்தது. ஊரே திரண்டு வந்திருந்தது அரண்மனைக்கு. கொடியின் குடும்பத்தைத் தவிர. அனைவருக்கும் அழைப்பு இருந்தது. கொடியின் குடும்பமும் அதில் அடக்கம். ஆனால் ஒரு வித்தியாசம். அவர்கள் வராமல் இருக்கவே அவர்களுக்கு அழைப்பு விடுத்தது.

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து ஊரின் முன்னிலையில் அமராவைச் சரிபாதியாக ஏற்றுவிட்டான். இனி மனதிலும் ஏற்க வேண்டும். எப்படியும்
மாற்றம் நிகழும். இந்த உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது.

இரவு அறையில் அவளுக்காகக் காத்திருந்தான் செழியன். அவன் நினைத்ததைப் போல் அவள் இல்லை. அரண்மனையில் வளர்ந்த கூண்டுக்கிளியாக இருப்பாள் என்றுதான் எண்ணியிருந்தான். ஆனால் அவள் நடையில் ஒரு நிமிர்வு இருந்தது.

அறைக்குள் வந்தவள், கணவனிடம் பின்பற்ற வேண்டிய சம்பிரதாயங்கள் எல்லாம் செய்யவில்லை. இதுவரை அவளைப் பற்றி எதுவும் தெரியாதுதான். ஆனால் இந்தச் சில நிமிடங்களில் உணர்ந்து கொண்டான், அவள் மற்ற பெண்களிடம் இருந்து மாறுபட்டவள்‌ என்று. இந்த நிமிர்வை‌ சில தினங்களுக்கு முன் கொடியிடமும் கண்டிருந்தான். பெண்களுக்குப் பேச்சுரிமையே மறுக்கப்பட்டிருக்கும் காலத்தில், பார்வையில் உள்ள நிமிர்வு, அவர்களைச் சற்று தரம் பிரித்துக் காட்டியது செழியனுக்கு.

சிறிது நேர மௌனம். அவளே கலைத்தாள் அறையில் நிலவிய பேரமைதியை.

"யார் அந்தப் பெண்?" என்ற ஒற்றை வினா மூலம்.
 
Last edited:
அத்தியாயம் - 10

பொழில் பதினெட்டாம் நூற்றாண்டு.

பொழிந்த மழை!
மஞ்சள் வெயில்!
தோன்றிய வானவில்!
மண் வாசம்!
அலையாத் தென்றல்!
ஏகாந்தம் நான்!
பொழுது நீ!!!

பொன்னழகியிடம் கூறி, மங்கையைப் பார்க்க அவளை அழைத்துச் சென்றான் நளன். அவளும் ஏன் என்று வினவவில்லை.

காளையார்மங்களத்தில் அவர்களுக்கு ஈமச்சடங்கு செய்யத் திட்டமிட்டிருந்தனர்.
மங்கை மற்றும் அவளது கணவனுக்கு சகல அலங்காரங்களுடன், ஈமச்சடங்கு நிகழ அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. மங்கையின் தலையில் கீறல் செய்தனர். பின் அவள் கணவன் வேலன் தலையிலும் கீறல் செய்தனர். பிறந்த பிள்ளை இறந்தாலும், அதற்கு நெற்றியில் கீறல் செய்து அடக்கம் செய்வது தமிழர்களின் வழக்கம்.

மங்கையின் வயிற்றிலும் ஒரு கீறல் செய்யப்பட்டது. அனிச்சம் அழுது கொண்டே இருந்தாள். நளன் அங்கு நிகழ்பவைகளை ஆச்சரியம் பொங்கப் பார்த்தான். இது என்ன இவ்வளவு மரியாதை! என்று. அரச குடும்பத்தின் அங்கத்தினர் இறந்தால் எவ்வகை மரியாதைகள் வழங்கப்படுமோ, அவ்வகை மரியாதைகள். படைகள் அனைத்தும் அணிவகுத்து நின்று மலர்மாலை அணிவித்து மரியாதைகள்‌ செய்ய, அது ஒரு விழாவைப் போல் தோற்றமளித்தது. அனிச்சத்தின் மதியில் இவை எதுவும் பதியவில்லை. ஒருமுறை அவளுக்கு அருகில் செல்லும் அனுமதி வழங்கப்பட்டது. அவள் அருகில் சென்று மங்கையின் முகத்தை விழிகளில் நிரப்பிக் கொண்டாள். மங்கையின் வயிற்றைத் தடவிப் பார்த்தாள். வேலனையும் சென்று அருகில் பார்த்தாள்‌. தனக்கு இப்படி ஒரு அநியாயம் நிகழ்ந்திருக்க வேண்டாம் என்று லட்சம் முறை எண்ணிவிட்டது மனம். நளன்‌ அவளைக் கூட்டிச் சென்றான். மங்கையின் தலையில் இருந்த ஆணியை எடுத்தனர். பின் அவர்கள் இருவரையும் ஒரு பெருந்தாழியில் இட்டு புதைத்தனர். பொன்னும் பொருளும் கொட்டி பானையை நிரப்பி, பின் மண்ணைப் போட்டு மூடிவிட்டனர். அந்த இடத்தில் ஒரு நடுகல் ஒன்றை நட்டு வைத்தனர்.

ராணி வேலுநாச்சியார் அனிச்சத்தின் கதறலைக் கண்டு அருகில் அழைத்தார். நளன் அவளை அழைத்துச் சென்றான்.

"நேற்று சம்பவ இடத்தில் இவர்கள் இருவரும் இருந்திருக்கின்றனர். அவர்களால் காப்பாற்ற முடியவில்லை என்று அழுகிறாள் அந்தப் பெண்" என்று குயிலி கூற, அவளை அருகில் அழைத்து ஆதூரமாக தலைக் கோதினார்.

"கவலை வேண்டாம் பெண்ணே. என்னையும் இந்த மண்ணையும் காக்க, மங்கை உயிர் துறந்திருக்கிறாள். அவளுடைய கனவினை நிச்சயம் நிறைவேற்றுவேன். இப்பொழுதுதான் எனக்கு கடமைகளும் பொறுப்புகளும்‌ கூடுகிறது. மங்கை பேதையல்ல.‌ நாம் அழுது கரைய. வீரமங்கை அவள். அவள் மரணத்தை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டாள். அதற்குத் தக்க மரியாதை நாம் அளிக்க வேண்டும். வீரமுழக்கங்களும் விடுதலை செய்தியும் அவளின் ஆன்மாவை சாந்தியடைய வைக்கும்" என்று கம்பீரமாக உரைத்தாள். அவளுக்கும் அழுகை வந்தது. ஆனால்... அழுவது வீரச்செயலும் அல்ல. வீரனுக்கு அளிக்கும் உகந்த மரியாதையும் அல்ல.

அனிச்சத்தை அழைத்துக் கொண்டு நளன்‌ புறப்பட்டான். அவளுடன் தனித்து உரையாட வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது அவன் மனதில். அவனுக்கும் அங்கு நிகழ்பவை பிடிபடவில்லைதான். ஆனாலும் இங்கு பின்னிப் பிணைந்திருக்கும் உறவுகளின் உன்னதங்களை ஓரளவு மூளையை‌ ஏற்க வைத்துவிட்டான்.

முந்தய தினம் அவர்கள் இருவரும் நின்றிருந்த மரத்திற்கு அருகில் அழைத்துச்‌ சென்றான் நளன். ஏனோ அந்த இடமும் மரமும் அவனுக்கு நிரம்பவே பிடித்தது. காரணம் பிடிபடவில்லை.

"அனி... நீ இப்படி இருக்குறதால எதுவும் நடக்கப் போறது இல்லை" என்று அவளை மீட்க முற்பட்டான்.

"இனி வேற என்ன நடக்கணும்?. இங்க இருக்கவுங்க எல்லாம் மனிஷங்கதானா? எனக்கு சந்தேகமா இருக்கு" என்று தன் திருப்தியின்மையைக் கொட்டினாள் அனிச்சம்.

"அனி.. இவ்வளவு உணர்ச்சி வசப்படும் அளவுக்கு ஒண்ணும்‌ நடக்கல. இங்க உள்ளவங்களோட வாழ்க்கைமுறை வேறு. நாம உயிர்வளி செயற்கையா சுவாசிச்சு வாழறோம்னு சொன்னாலே இங்க உள்ள யாருக்கும் புரியாது" என்றான் அவளுக்கு புரிய வைத்திடும்‌ நோக்கோடு.

"அதுதான் என்னோட ஆதங்கமே நளன். நம்ம உலகத்தில் எதுவுமே இல்லை. ஆனா வாழ்க்கை நெறிமுறை இருக்கு. இங்க எல்லாமே இருக்கு. ஆனா நெறிமுறைகள் ‌இல்லை" என்று அவள் கூற, அவன் மெல்லிய நகையொன்றை உதிர்த்தான்.

"அனி... நீயா‌ இப்படி சொல்ற. நாம இந்த அண்டத்துக்கு விருந்தாளிகள். அவ்வளவு தான். இங்க வாழும் மனிதர்களைப் பற்றி விமர்சிக்க நமக்கு உரிமையிருக்குன்னு நினைக்கிறியா?"

"இருக்கு. நல்லாவே இருக்கு. கொல்லப்பட்டது என்னோட அம்மாவாச்சே!" என்றாள்‌ அவள்.

"ஒவ்வொரு உலகத்துக்கும் ஒரு நியதி இருக்கு. பிறப்பிலிருந்து நீ பின்பற்றிய ஒரு விஷயம் உனக்கு சரின்னு தோணும். எடுத்துக்காட்டா ஒரு விஷயம் சொல்றேன். நம்ம உலகத்தைப் பொறுத்தவரை ஆண் பெண் பேதம் இல்லை. ஒரு விஷயத்தை தவிர. குழந்தை பெற்றுக் கொள்வது. அது பெண்ணின் உடலமைப்பு அப்படி இருக்குங்கிற ஒரே காரணத்துக்காக நீ அதை ஏத்துக்குறதா நினைக்கிறியா? சின்ன வயசுலேந்து அது உனக்கு பழக்கப்பட்ட ஒரு விஷயம். வேற ஒரு உலகம் போறோம். அங்க ஆண்கள் குழந்தை பெத்துக்க முடியும்ங்கிற தொழில்நுட்பம்‌ இருந்தா உனக்கு என்ன தோணும்?. அது தப்புன்னு தோணாது. அதே மாதிரிதான்" என்று அவன் விளக்க, குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள் அனிச்சம்.

"அனி... மங்கையம்மாவுக்கு நடந்தது பெருங்கொடுமை. ஆனா அவுங்களோட இந்த தியாகத்துக்குப் பின்னாடி ஒரு இனம் வாழப்போகுதுன்னா உன்னால நம்ப முடியுதா?" என்றான் கேள்வியாக.

"இனம் என்ன பெரிய இனம்?. உலகத்தில் ஒரே இனம்தான் இருக்கு. அது மனித இனம்" என்றாள்‌ அவள் சற்றே சீற்றத்துடன்.

"ம்ம்ம்... நம்ம உலகத்தில் மனிதனைத்‌ தவிர வேறு உயிரோ இனமோ‌ இல்லாம இருக்கலாம். ஆனா இங்கேயும் அப்படியா? இங்க மரம்னு ஒரு இனம் இருக்கு. குதிரைன்னு ஒரு இனம் இருக்கு. நாய், பூனை இப்படி ஏகப்பட்ட இனங்கள். அதனால் மனிதனுக்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கு. நம்ம உலகத்தில் நம்ம வாழ்க்கை எதுக்காக வாழ்றோம். பாதி வாழ்க்கை ‌அடுத்த சந்ததி நம்மைவிட நல்லா வாழணும்னு வாழ்நாள் முழுக்க நாம செலவு செய்றோம். நம்மோட முன்னேற்றப்பாதைகள் முழுக்க முழுக்க அதை‌ நோக்கியே இருக்கும். யாரும் உயர்வு, தாழ்வு கிடையாது. ஆதிபகவன் தான் கடவுள். மக்கள் தொகை என்று சொல்லிக் கொள்ளும் அளவு தொகையே இல்லை. நாம வாழ்நாள் முழுக்க அடுத்த சந்ததிக்கு வாழறோம். இங்க அடுத்த சந்ததி வாழணும்ங்கிறதுக்காக உயிர் கொடுக்குறாங்க. பொன்னி அக்கா பேச்சுலேர்ந்து இதுதான் புரிஞ்சது எனக்கு. கொஞ்சம் மனசை சாந்தப்படுத்திக்கோ. இந்த அண்டத்தில் உன்னோட பிறப்பு நிராகரிக்கப்படணுங்கிறது விதி. அதை எப்படி உன்னால மாத்த முடியும். நம்ம ஆதிபகவனைவிட அந்த ராணிக்கு எவ்வளவு மரியாதை பார்த்தியா? நமக்கு ஆதிபகவனை நினைச்சா பயம் மட்டும்தான் இருக்கும். ஏன்னா அது இயந்திரம். ஆனா இந்த ராணி உயிரும் உணர்வும் உள்ளவங்க. தன்னோட இனத்தைப் பாதுகாக்க போராடுறாங்க. பொன்னி அக்கா, ராணின்னு சொல்லும் போதே, அதில் உள்ள மரியாதையும் அன்பும் வெளிப்படுது. இது ரொம்ப சாதாரணமா கிடைக்காது. மக்களோட மனசை சம்பாதிக்க, ராணி பல சோதனைகள் கடந்து வந்திருக்கணும்" என்று நீண்ட விளக்கவுரை வைத்தான்.

அவனால் முடிந்த அளவு விளக்கிவிட்டான். அவள் முகத்தில் சிறிது ‌தெளிவு பிறந்தது போல் இருந்தது.‌

சிறிது நேரம் அமைதியாகவே இருந்தாள். அவர்கள் அமர்ந்திருந்த மரத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தாள்.

"ஆனாலும் எங்க அம்மாவையும் அப்பாவையும் இப்படி ஒரு நிலையில் பார்த்திருக்க வேண்டாம்" என்றாள். அவளால் ஏற்கமுடியாது என்று விதவிதமான முறையில் விளக்கினாள்.

இது மனித மனம். நம் மனதிற்கு ஒரு விஷயத்தில் ஒப்புமை இல்லையென்றால், விதவிதமாய் பல காரணங்களைக் கடைபரப்பிவிடும். அதற்குப் பின் பல தாத்பரியங்கள் உருவாகிவிடும். நிலையில்லா மனதின் நிலைப்பாடு இதுவே.

"நீ சொன்ன‌ காதல் அவங்ககிட்ட இருக்கு" என்றான் அவன்.

"எந்தக் காதல்?" என்றாள் புரியாமல்.

"பனிமலைத் தீவில் எங்கிட்ட காதல்னா என்னன்னு கேட்டியே. அதுக்குச் சரியான பதில் இங்க கிடைச்சிருக்கு."

"மலையளவு காதல் இருந்தா, எப்படி தலையில் ஆணியடித்துக் கொல்ல முடியும்‌?."

"கொன்னுட்டு அவர் மட்டும் வாழ்ந்துட்டா இருக்கார்."

"இல்லைதான். ஆனாலும் அவர் கையால் கொல்லப்படணும்னு என்ன அவசியம்?."

"உங்க அம்மாவோட கடைசி‌ ஆசை" என்று அவன் கூற, அவனை ஆச்சரியம் பொங்கப் பார்த்தாள் அனிச்சம்.

"சில ஆசைகள் புறக்கணிக்கப்படுவதிலும் காதல் இருக்கு" என்று விதண்டாவாதம் செய்தாள் அவள்.

"அவங்களோட இந்த ஆசையை ஏன் நிறைவேத்தி வைக்கணும்னு உங்க அப்பா நினைச்சார்னு அவருக்கு மட்டும்தான் தெரியும்."

அவளால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. எப்படி? எப்படி? என்று மூளை குடைந்துவிட்டது.

"அதெப்படி.. எனக்கு விளங்காம இருக்க விஷயம் எல்லாம் உனக்கு மட்டும் விளங்குது?" என்று சிறு கேலி இழையோடிட.

"அந்த விஷயம் உன்னைச் சுத்தி நடக்குறதா நீ நினைக்கிற. அப்படிதான் நீ அணுகற.. நான் வட்டத்துக்கு வெளியில் இருந்து இந்த விஷயத்தைப் பார்க்கிறேன். இரண்டுக்கும் வேறு வேறு கோணம் இருக்கு" என்றான் தெளிவாக.

அவனது தெளிவும் உறுதியும் அனிச்சத்தை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. ஏனெனில் அவன் அவள் கூறிய கதைகளைக் கட்டுக்கதைகள் என்று தட்டியிருக்கிறானே. இப்பொழுது எங்கிருந்து இவ்வளவு புரிதல் வந்தது.

"அனி..‌ நான் ஒண்ணு சொல்லவா?"

"சொல்லு..."

"உன்னோட கற்பனை உலகம் இது. இங்க வாழ முயற்சி செய். நாம ஏன் இங்க வந்தோம்?. எப்படி வந்தோம்?. இன்னும் எத்தனை நாள் இருக்கப் போறோம்னு தெரியாது. அதனால எந்த ஆராய்ச்சியும் இல்லாம வாழலாமே. நான் சொல்றது கொஞ்சம் சிரமம்தான்.. இல்லைன்னு சொல்லல. ஆனா முயற்சி செய்யலாம். ஏனா இந்த உலக வாழ்க்கையை மதிப்பீடு செய்யவோ, விமர்சிக்கவோ நமக்கு உரிமையில்லை. அதுக்கான தகுதியும் இல்லை. ஏன்னா நாம வேற உகலத்தில் வேறு கோட்பாடுகளோடு பிறந்திருக்கோம். நடக்கறதை ஏத்துக்க முடியலைன்னா கூடப் பரவாயில்லை. புரிஞ்சுக்க முயற்சி செய்யலாம்" என்று அவனின் புரிதலை அவளுக்குக் கடத்த முனைந்தான்

இப்பொழுது ஓரளவு அவளுக்கு புரிந்தது. ஒன்றை மனதில் பதிய வைத்தாள். இந்த அண்டம் அனைத்திற்கும் ஒரு காரணம் வைத்திருக்கும். அந்த உலகில் அவள் பிறப்பதற்கு ஒரு காரணம் இருந்தால், இந்த உலகில் இவள் பிறப்பு நிராகரிக்கப்படவும் ஒரு காரணம் இருக்கிறது. உலகம் பிறக்கவும் ஒரு காரணம் இருக்க வேண்டும். அது நம் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட விஷயம். பால்வெளியில் பல நட்சத்திரக் கூட்டங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இப்படித்தான் சுழல வேண்டும் என்று யாரேனும் சொல்லிக் கொடுத்தார்களா என்ன? அச்சுப் பிறழாமல், கணம் தப்பாமல் தன் வேலையை கோடானுகோடி வருடங்கள் ஆற்றிவிட்டு மடிந்துவிடுகிறது.

வெட்டவெளியில் படுத்திருந்தான் நளன். அவன் நெஞ்சின் மீது அனிச்சம் படுத்திருந்தாள். இருவரும் பல்வேறு சிந்தனைகளில் உழன்றிருந்தனர்.

அண்டத்தின் நியதி நமக்குள் அடங்காது. அதை உணர்ந்து கொள்ள முயற்சித்தாலும் முடியாது‌. பல வர்ணக் கலவைகளைக் குழைத்து தீட்டிய ஓவியத்துள் தன்னை அகழ்ந்தெடுத்தது இருள். கண்ணாடி வில்லையாய் உப்பிய பெருவயிற்றுடன் இருள். ஆங்காங்கே ஒளிமுடிச்சுகளாய் நட்சத்திர தொகுப்புகள் சுருள் சுருளாய் சுழன்று கொண்டிருந்தது. நட்சத்திரக் கூட்டங்களில் ஒழுகிய ஒளியை விள்ளல்களாக விழுங்கிக்கொண்டிருந்து இருள். அதைச் சுற்றிலும் பேரமைதி இசைந்து கொண்டிருந்தது. பகலும் இல்லை. இரவுமில்லை. பொழுதுகளும் இல்லை. அதற்குத் தெரிந்ததெல்லாம் தொகுத்திருந்த இருளும், அதில் பகுத்திருந்த சிறு ஒளியும் மட்டுமே. காலம் அறியாமல், தேவை தெரியாமல், வரையறை வகுக்காமல், வரைமுறை இல்லாமல், சில சமயம் சுருளாக, சில சமயம் நீள்வட்டமாக இசைந்து இசைந்து களைத்துப் போனது. களைப்புகள் தீரவும், சலிப்புகள் களையவும், களிப்புகள் பிறக்கவும் பிண்டங்கள் பல பிடித்து வைத்தது பேரண்டம். உருண்டைகளாய் சுழன்ற பிண்டங்களில் உயிரோட்டம் தேடிக் களைத்த அண்டம், ஒற்றைப் பிண்டத்திற்குப் பண்டமாய் உயிரூட்ட பச்சை வர்ணம் தோன்றியது. அட இது சுவாரஸ்யமாக இருக்கிறதே என்று உயிருக்குள் கொஞ்சம் உணர்வமிழ்தம் ஊற்ற, பல படிநிலைகள் தாண்டி அவதரித்தான் மனிதன்.

இந்நிகழ்வை அண்டத்தின் சிறு தொகுப்புகளாய் சுழலும் சுருள் பால்வெளிகளும், நீள்வட்ட பால்வெளிகளும் பெருமூச்சிரைந்து பொறாமை‌ கொண்டனவாம்.

அதை உளவு பார்த்த மனிதனின் கூற்று இது. விசித்திரத்தில் விசித்திரம் இது‌!.

இரவு வழிந்து கொண்டிருந்தது. நிலவு ஒழுகிக் கொண்டிருந்தது. அனிச்சத்தின் கனவு உலகில் அவள் வசிக்கும் முதலாம் இரவு. எப்படி எப்படியோ‌ ஏகாந்தமாய் கழிந்திருக்க வேண்டியது, எப்படியோ கழிந்தது.

நளன் அவளை இருப்பிடம் அழைத்துச் சென்றான். பொன்னழகி இவர்கள் இருவரையும் பார்த்து பதறிவிட்டாள்.

"எங்கு சென்றிருந்தீர்கள் இருவரும்?. உங்களை ஆபத்துகள் சூழ்ந்துவிட்டதோ என்று பயந்துவிட்டேன்" என்று பதறினாள்.

அந்தப் பதற்றம் அவர்களுக்குப் புதிது. அதுவும் ஒரு மூன்றாம் நபரிடமிருந்து.

"எங்களுக்கு என்ன ஆபத்து வரப்போகுது?" நளன்.

"நாளைய பொழுதென்றால் இந்த வினாவை எழுப்பியிருக்க மாட்டேன். பதற்றம் கொண்டிருக்கவும் மாட்டேன். ஆனால் இன்றைய பொழுது ஆங்கிலேயனிடம் அல்லவா இருக்கிறது."

"அது நாளைக்கு எப்படி மாறும்?" அனிச்சம்.

"நிச்சயம் மாறிவிடும். நாளை ராணி கோட்டையைக் கைப்பற்றி விடுவார். எங்களுக்கு விடுதலை‌ கிடைத்துவிடும்" என்றாள் உறுதியுடன்.

அதில் கர்வம் தொனித்தது. வீரம் வழிந்தது. இந்த உணர்வெல்லாம் காணவே விசித்திரமாய் இருந்தது அவர்கள் இருவருக்கும்.

"நீங்கள் இருவரும் ‌ஓய்வெடுங்கள். நான் சிவகங்கை கோட்டைக்குப் புறப்படுகிறேன்" என்றாள் அறிவிப்பாக.

"இப்போ அங்க எதுக்கு?" நளன்.

"நாளை என் ராணியின் வெற்றியைக் கொண்டாட‌ வேண்டாமா? அதற்கு நான் கோட்டைக்குள் இருக்க வேண்டும்" என்றாள் அவள்.

"நாங்களும் உங்க கூட வரோம்" என்று ஒன்று போல் கூறினர் இருவரும்.

"தம்பி, கோட்டைக்குள் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. அந்தக் கொடுங்கோல் ஆங்கிலத் தளபதியின் கட்டளை. அதனால் உன்னை எப்படி அழைத்துச் செல்வேன்?" என்றாள் யோசனையாக.

"அக்கா.. நாங்க ரொம்ப தூரத்தில் இருந்து வரோம். வேறு தீவு. எங்க ஊர்ல இந்த விழாவெல்லாம் பார்த்தது கிடையாது. ஏதாவது செய்யுங்களேன்" என்று நளன்‌ கெஞ்ச, பொன்னி யோசிக்க ஆரம்பித்தாள்.

அவர்களின் கொச்சைத் தமிழ் ஏன் என்று பொன்னியே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டார். வெகு தொலைவில் இருக்கும் தீவிலிருந்து வந்திருப்பதால் கொச்சைத் தமிழ்‌ பேசுகின்றனர் என்று.

நளன் எப்படியாவது உள்ளே சென்று என்ன நிகழ்கிறது என்று பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தான். அனிச்சமும் அதே எண்ணத்தில்தான் இருந்தாள். அவளின் அன்னை இறந்ததற்குப்பின் இருக்கும் காரணங்களில் உள்ள நியாயம் அவளுக்குப் புரியவில்லை. ஒருவேளை அங்கு சென்றால் ஏதேனும் புலப்படுமோ என்று‌ எண்ணினாள்.

"சரி.. உங்கள் இருவரையும் அழைத்துச் செல்கிறேன்" என்று கூறியவர், இருவருக்கும் அவளைப்‌போல் அலங்காரம் செய்தாள். நளனுக்கும் புடவை ஒன்றை உடுத்தி, சௌரி முடி வைத்து பின்னல் பின்னி, பொட்டிட்டு, பூச்சூடி ஒரு பெண் போலவே அலங்காரம் செய்துவிட்டாள். மிகவும் கூர்ந்து கவனித்தாலொழிய, அடையாளம் காணமுடியாத அளவு ஒப்பனை.

அவர்கள் இருவருக்கும் அது புதிய அனுபவமாக இருந்தது. அனிச்சத்தை‌ இந்த அலங்காரத்தில் காணவே நளனுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது.

காளையார்மங்களத்திலிருந்து படைகள் அனைத்தும் சிவகங்கை நோக்கி புறப்பட்டது. ஆனால் வெள்ளைத் தளபதி பாஞ்சோர் திமிராய் இருந்தான். காளையார்மங்களம் கைவிட்டு சென்றிருந்தாலும், தனது படையை வேலுநாச்சி‌ அழித்திருந்தாலும், இங்கு அவளால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தான். இந்த சிறுபடை கோட்டைக்குள் எப்படி பிரவேசிக்க முடியும் என்ற திண்ணக்கம். அப்படியே உள் நுழைந்தாலும், தோட்டாக்களுக்குப் பலியாகப் போகின்றனர். அவன்தான் அடிக்கொரு துப்பாக்கி வீரனை நிறுத்தியிருந்தானே. எழுச்சியை உருவாக்கும் நாச்சியாரை வதைக்க, அவளின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேலை ஏற்பாடு செய்திருந்தான். காலைச் சுற்றியிருக்கும் நச்சுப்பாம்பாய் இருந்தவனை குயிலி வேல் சொருகிக் கொன்றுவிட்டாள். அடுத்தடுத்து நடந்த முயற்சிகளும் வீண். ஒன்றும் பலிக்கவில்லை. குயிலி பலிக்கவிடவில்லை. அதனால் இதை ஒரு அரிய சந்தர்ப்பமாகக் கருதினான். அவனுடைய மாபெரும் தவறு வேலுநாச்சியாரைக் குறைத்து மதிப்பீடு செய்ததுதான்.

குயிலி மற்றும் அவளது படையினர் கோட்டைக்குள் பிரவேசிக்க மாறுவேடங்களில் தயார் நிலையில் இருந்தனர். பழங்கள், பூக்கள் மற்றும் தின்பண்டங்கள் என கூடை கூடையாக இருந்தது. அதில் கவண் கற்களும் மறைத்து வைத்தனர். அவைகளுக்கு இடையில் ஆயுதங்கள் மறைக்கப்பட்டிருந்தன.

வெள்ளைமதி வெள்ளியை உருக்கி ஊற்றிக் கொண்டிருந்தாள். கோட்டை ஒரே கோலாகலமாக இருந்தது. நேர்த்தியான இடைவெளிவிட்டு ஏற்றிய தீபங்களாலும் தீப்பந்தங்களாலும் பிரகாசித்தது. ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பூஜை நிகழ்ந்ததன் அடையாளமாகக் கோவில் மணி ஓசை எழுப்பியது. வேலுநாச்சியார் மாறுவேடத்தில் உள்ளே நுழைந்தாள்.

கோட்டையின் உள்ளே இருந்த ராஜேஸ்வரி அம்மன் கோவில் கோலாகலமாக இருந்தது. கலைஞர்கள் கூத்துக் கட்டியிருந்தனர். ராவண வதை நாடகம் அரங்கேறிக்கொண்டிருந்தது. ஆயுதங்களின் ஆதாரமாய்த் திகழும் கோட்டை அணங்குகளின் அணிவகுப்பால் உயிர்‌ப்பெற்றது.

நிலாவுடன் போட்டிப்போட்டு ஒளிரும் விளக்குகள், வாசம் வீசும் மலர்கள், ஒலிக்கும் இசைவாத்தியங்கள், பொய்க்கால் குதிரை, கரகம், பரதம் என மிளிர்ந்த கோட்டையைக் கண்ட வேலுநாச்சியாரின் மனதில் வேதனை மண்டிக் கிடந்தது. தன் கணவனின் நினைவுகள் ‌அலையலையாய் வந்துபோனது. ஆங்கிலேயர்களுக்கு எதிராய் எழுச்சி‌ நாடகம் போட, தடை விதிக்கப்பட்டிருந்தது.

பெண்கள் விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு கோட்டைக்குள்‌ வந்தனர். நளன், பொன்னழகி மற்றும் அனிச்சம் மூவரும் கோட்டைக்குள் பிரவேசித்தனர்.
 
Last edited:
அத்தியாயம் - 11

புடவி

பொன்‌ மாலை!
கொன்றை நிறம்!
தீர்த்தக் கரை!
ஆம்பல் மலர்!
மென் காற்று!
நறும் பொழுது!
படித்துறை நீர்!
கால் நனைக்க நீ!
சிலிர்க்க நான்!!!


அமரா, யார் அந்தப் பெண் என்று வினவ, செழியன் திடுக்கிட்டான்.
அவளிடம் இருந்து இப்படி ஒரு வினாவை அவன் எதிர்பார்க்கவில்லை.

"கொடி" என்றான் ஒற்றை வார்த்தையில். அவளிடம் மறைக்க வேண்டும் என்று அவன் எண்ணவுமில்லை. இனி மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றுதான் தோன்றியது.

எப்படியும் நாளைக்கு அரசல் புரசலாக அவள் காதில் விழப்போகும் சங்கதிதான். அதனால் அவனே விளக்கம் கொடுத்துவிடலாம் என்ற முடிவுக்கும் வந்துவிட்டான்.

அவளை அரசியின் அறைக்கு அழைத்துச் சென்றான். அமராவுக்குக் குழப்பம் மட்டுமே மிஞ்சியது. அவன் நிச்சயம் வேறு பெண்ணைக் காதலித்திருக்கிறான் என்று அனுமானிக்க முடிந்த அவளால், அவனுடைய நேரடியான பதிலை ஏற்க முடியவில்லை. கொஞ்சம் திணறித்தான் போனாள். அதை‌ அவனும் நன்றாகவே உணர்ந்து கொண்டான். அவளின் திடுக்கிடல் கண்டே அவன்‌ அரசியின் அறைக்கு அழைத்துச் சென்றது. அவனுடைய கதையை‌ அவள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அரசியை முழுமையாகப் படிக்க வேண்டும். அவனுடைய கதையை மட்டும் கூறினால், நம்பும்படியாக இருக்க வேண்டும். முதலில் அவன்‌ கதை என்று எதைக் கூறுவான். கொடியை இழந்த பொழுது மனதின் ஓரம்‌ வலிக்கத்தான் செய்தது. ஆனால் இப்பொழுது அந்த வலியைவிட, அவளைப்‌ பற்றிய அக்கறையே அதிகம் இருந்தது. அவளின் இந்த‌ அவசர வாழ்விற்கு அவன்தான் காரணம் என்று‌ கருதினான்.

அரசியின் அறையில் இருவரும் நின்றிருந்தனர். இவ்வளவு நேரம் இருந்த தெளிவும் தைரியமும் அமராவிடம் இப்பொழுது இல்லை. அவன் பொய்யாய் மறுத்திருந்தால் கூட, அதில் நிம்மதி விரவியிருக்குமோ? இந்த மனம் வேறு என்னதான் எதிர்பார்க்கிறது?.

"அமரா, இவ்ளோ நேரம்‌ இருந்த தைரியம் இப்போ எங்க?" என்றான் செழியன்.

"தெரியல.." என்றாள் அவள் குழப்பத்தை முகத்தில் தேக்கி.

"நீ உன்னோட வாழ்க்கையை நினைச்சு பயப்படுறியா? நான் உன்னைப் புறக்கணிப்பேன். இல்லை கொடுமைப்படுத்துவேன். இப்படி ஏதாவது பயம் இருக்கா?" என்றான் செழியன்.

"இல்லை. ஆனா உங்களோட இந்த பதிலை ஏத்துக்க முடியலை. கொஞ்சம் வலிக்கிது" என்றாள் நேரிடையாக.

"இன்னைக்கு ஒருநாள் வலிக்கட்டும். எல்லாத்தையும்‌ கேட்டுடு" என்று கூறி, அரசியின்‌ கதையில் ஆரம்பித்து, கொடியின் திருமணம் வரை கூறி முடித்தான்.

அமரா‌வின் மனம் என்ன நினைக்கிறது என்று அவளுக்கே விளங்கவில்லை. கொடிக்காக இரங்கல் தெரிவிக்கும் நிலையில் மட்டுமே இருக்கும்பொழுது வேறு என்ன செய்ய முடியும்?. அதிகார வர்க்கத்தின்‌ அபூர்வ இடர்கள் இவை. அவனின் அணுகலும் பிடித்திருந்தது. இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் ஆண்களில் சற்றே வித்தியாசமானவன் இவன். அதிகாரத்தின் மறுவுருவங்கள் அவர்கள் என்ற பிம்பம் உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்தது.

"கொடியைப் பார்த்தீங்களா? அவங்க கல்யாணம் முடிஞ்சோடனே?" அமரா.

"பார்த்தேன்.."

"எப்படி இருக்காங்க?" என்றாள் ஆர்வமாக.

"தெரியல." அவனின் இந்தப் பதிலில் சற்றே ஏமாற்றம் அடைந்தாள்.

"தெரியலையா? நீங்க கேக்கலையா அவங்களை?"

"கேட்டேன். ஆனா பதில் தெரிஞ்சுக்கிற அளவு எனக்கு உரிமையில்லைன்னு சொல்லிட்டா. அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியல" என்று அவன் கூற, கொடி அவளின் மனதில் உயர்ந்து நின்றாள்.

அவள் நிதர்சனம் புரிந்து கொண்டாள் என்ற நிம்மதியா? தன் கணவனின் மேல் இனி தனக்கு மட்டுமே உரிமை என்ற எண்ணமா என்றெல்லாம் தெரியவில்லை. அமராவின் மனமும் அமைதியடைந்தது.

"நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி முடிச்சுட்டேன். நீ ஏதாவது சொல்லணுமா?"

"எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்."

"பரிதாபமா?"

"பரிதாபம் இருந்தா இப்போ ரொம்பப் பிடிச்சிருக்குன்னு சொல்லிருப்பேன். நான் பிடிக்கும்னு சொன்னேன்."

செழியன் பதிலேதும் கூறவில்லை.

"கொடி நல்ல பொண்ணு.." என்றாள் யோசனையுடன்.

"நீ கூட நல்ல பொண்ணுதான்."

"எப்படிச் சொல்றீங்க?.."

"இன்னொரு பெண்ணை, அதுவும் கணவன் விரும்பிய ஒருத்தியை நல்லவன்னு சொல்ல நிச்சயம் நல்ல மனசு வேணும்."

"அதுதான் விரும்பியன்னு கடந்த காலத்தில் சொல்லிட்டீங்களே. கடந்து போனதைப் பிடிச்சுத் தொங்குறதால பெருசா ஒரு சாதகமும் வராது."

"புத்திசாலிதான் நீ."

"உங்க மனசை இவ்வளவு பக்குவப்படுத்தியதுக்கு என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

"இது மாறவேண்டிய விஷயம். மாற்றம் கீழேயிருந்து வரப்போறதில்லை‌. மேலிருந்து மாற்றம் வரணும்னா நான் உயிரோட இருக்கணும். எனக்குப் பிறகு வரும் தலைமுறையில் இனக்கொடுமைகள் நடக்கக்கூடாதுன்னா நான் வாழ்ந்தாகணும்."

"தொலைநோக்குப் பார்வை. இது உங்க அப்பாவைப் பழிவாங்க ஒரு வழின்னும் சொல்லலாம். அவர் உயிரோட இருக்கவரைதான் அதிகாரம் செய்ய முடியும். அவர் போன அப்புறம், அவர் செய்யக்கூடாதுன்னு சொன்னதைச் செஞ்சு, அவரைப் பழி வாங்கிடலாம். இது ஒரு உத்தி" என்றாள் அவள்‌ தைரியமாக.

"இது சுயநலம்னு சொல்றியா?"

"பின்னே இதில் பொதுநலம் இருக்கா?"

அவன் பதிலேதும் கூறவில்லை. அவள் ஒரு புரியாத புதிராக இருந்தாள்.

"இது மட்டும்தான் மாத்த வேண்டிய விஷயமா? இந்த விஷயத்தில் நீங்க பாதிக்கப்பட்டதால மாத்த முயற்சி செய்றீங்க. இன்னும் வேற நிறைய விஷயம் இருக்கு. இப்போ உங்களுக்கும் கொடிக்கும் நடந்தது அநியாயம்தான். ஆனா அதுல வாழறதுக்கான வழி இருக்கு. அதை நீங்க ரெண்டு பேரும் தேடிட்டீங்க. அது கூட இல்லாம இன்னும் சில விஷயங்கள் ஊரில் நடக்குது. அதெல்லாம் உங்க கண்ணுல படலையே. அப்போ நீங்க சுயநலமா யோசிக்கறீங்கன்னு சொன்னதுல தப்பில்லைன்னு எனக்குத் தோணுது‌."

அவளின் கூற்றில் உண்மை இருக்குமோ? என்று சிந்திக்கத் தொடங்கினான் செழியன்.

இருவருமே விடியலை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். சிறு புரிதலும் வந்திருந்தது.

அருங்காலை‌ அழகாய்ப் புணர, அமரா புத்தம் புது மலராய் வலம் வந்தாள்.
கோகிலத்தின் மனதில் பயம் இல்லாமல் இல்லை. இரவு முழுக்க அவரும் உறங்கவில்லை. தன் மகனின் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்ற பரிதவிப்பு.

அமராவைப் பார்த்ததும் சிறிது நிம்மதி பிறந்தது. அமரா கோகிலத்துடன் நன்றாகவே பழகினாள். அதற்கு அரசியின் கதையும் ஒரு காரணம். பூஜையறை அழைத்துச் சென்று விளக்கேற்றச் சொன்னார். அவள் ஏற்றிவிட்டு வெளியே வரும்பொழுது அவர் விழிகள் குளம் கட்டியிருந்தது.

"என் வீட்டைவிட்டு‌ போன மகாலட்சுமி திரும்ப வந்த மாதிரி இருக்குமா. நீ என்னைக்கும் நல்லாயிருக்கணும்" என்றார் உணர்ச்சி மிகுதியில். அவர் விழிகளில் வழிந்த உவர்நீர் அரசியை இழந்த துக்கத்தினாலா இல்லை இனி மகனின் வாழ்வு நன்றாக இருக்கும் என்ற‌ எண்ணம் வந்ததாலா என்று தெரியவில்லை. ஒரு கலவையான உணர்வு அவரை ஆட்கொண்டது.

"அரசியோட ஞாபகம் வந்துருச்சா?" என்றாள் அமரா. மிகச் சாதாரணமாய், கோகிலத்துடன் வெகுநாள் பழகியது போல்.

கோகிலத்தின் முகம் ஆச்சரியத்தில் விரிந்தது. இது எப்படி இவளுக்குத் தெரியும்? என்று.

"அத்தை... ரொம்ப யோசிக்க வேண்டாம். அரசி பத்தி உங்க புள்ளதான் சொன்னாரு" என்றாள் அறிவிப்பாக.

இதைக் கேட்டதும் நம்ப முடியாமல் பார்த்தார் கோகிலம். தன் மகனிடம் அதற்குள் இவ்வளவு மாற்றமா? என்று.

"அரசிய பத்தி மட்டும் இல்ல. கொடியைப் பத்தி. உங்களைப் பத்தி. எல்லாம் எனக்குச் சொல்லிட்டாரு. உங்க புள்ளையோட வாழ்க்கையை நினைச்சு பயமா? அதான் அழறீங்களா?" அமரா.

"இல்ல.. இப்போ சுத்தமா இல்ல.. ஆனா என்னால நம்ப முடியல" என்றார் கோகிலம்.

"ஓ.. இன்னும் நம்பிக்கை வரல... சரி... இன்னும் கொஞ்ச நேரத்தில உங்க புள்ளை வந்து அமரான்னு கூப்பிடுவாரு. அப்போ நம்புவீங்களா?" என்றாள் குறும்புடன்.‌

அவள் கூறியது போல் சற்று நேரத்தில் கூடத்திற்கு வந்த செழியன், கைகளைத் தூக்கி நெட்டி முறித்தான். அமராவுடன் உரையாடியதில் மனம் தெளிவு பெற்றிருந்தது. மனக்கிடங்குகளை இறக்கி வைத்ததால் கூட, இந்தத் தெளிவு பிறந்திருக்கலாம்.

தேவர் பிள்ளை தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்.
தந்தையை ஏளனமாய்ப் பார்த்துவிட்டு, "அமரா..." என்று அழைத்தான். அவள் தேநீர் எடுத்து வந்தாள்.

"அமரா... நாம இன்னைக்கு வெளில போகணும். தயாரா இரு" என்று சற்று உரக்கக் கூறினான். அவள் சரியென்று கூறிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.

"துரை எங்க போறீக?" என்றார் தேவர் பிள்ளை.

"காரியம்‌ செய்ய" என்றான் நக்கலுடன்.

"யாருக்கு?" என்றார் அவரும் நக்கலுடன்.

"உங்களுக்கு...." என்று சிறிது இடைவெளி விட்டவன், "செய்யணும்னு ஆசைதான். நிச்சயம் ஒருநாள் செய்வேன்" என்று சீற்றத்துடன் கூறிவிட்டுச் சென்றான்.

நான் சொன்னது நடந்துவிட்டதா என்று கோகிலத்தைப் பார்த்து சாடையுரைத்தாள் அமரா. அதற்குச் சிரித்த கோகிலம், "அதுக்குள்ள முடிஞ்சுட்டியா?" என்றார் கேலியுடன்.

"இல்ல... இல்ல... ஆனா சீக்கிரம் முடிஞ்சிருவேன். அப்புறம் உங்களுக்குத் தான் கஷ்டம்" என்றாள் அவளும் கேலியுடன்.

"அப்படியெல்லாம் என் புள்ளய விடமாட்டேன்" என்றார் அவரும் கேலியுடன்.

"அப்படியா? எனக்காக நீங்க உங்க புள்ளைகிட்ட பேசுனீங்களாமே? அப்போ அது பொய்யா?" அமரா.

"என் வீட்டோட நிம்மதியை திருப்பிக் கொடுக்க, நான் கும்பிடுற சாமிதான் உன்னை இங்க அனுப்பி வெச்சுருக்கு" என்று திருஷ்டி கழித்தார் அவளுக்கு.

ஏனோ இழந்த அரசியை மீட்டெடுத்தது போல் ஒரு உணர்வு அவருக்கு. அரசியும் கோகிலமும் இப்படித்தான். எப்பொழுதும் எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். பொழுது போவதே தெரியாது. அவள் சென்றபின் தனிமையை எவ்வளவு உணர முடியுமோ அவ்வளவு உணர்ந்தார் கோகிலம்.

கோவிலுக்குக் கிளம்பி சென்றனர் செழியனும் அமராவும். கோவிலில் முதல் மரியாதை செழியனுக்கு அளிக்கப்பட்டது. ஏனோ அதில் அவனால் பெருமை கொள்ள இயலவில்லை.

இந்த மரியாதை அவனுக்காகக் கிடைக்கவில்லை. அவன் ராஜா வீட்டுப் பிள்ளை என்பதற்காகக் கிடைக்கிறது. அவன் ராஜா வீட்டில் பிறந்தது ஒரு எதார்த்தமான விஷயம். இதில் அவனுடைய பங்கு துளியும் இல்லை. பின் இந்த அற்பங்களுக்குப் பெருமைப்பட்டுக் கொள்வது உகந்த காரியமா என்ன? சாமி கும்பிட்டு முடித்ததும் கோவிலின் அருகில் இருந்த அல்லிக் குளத்தின் படித்துறையில் அமர்ந்திருந்தனர்.

நண்பகலின் தாக்கம்‌ கொஞ்சம் குறைந்திருந்தது. பொன்னுருக்கி பொழுதில் பூசியது போல் மஞ்சள் மாலை மலர்ந்திருந்தது.

அகன்ற நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி குளத்தில் மிதந்து கொண்டிருந்தது. மொட்டுக்கள் குவிந்திருந்தது. வெள்ளை நிற மலர்களையுடையது வெள்ளையல்லியெனவும் செந்நிற மலர்களையுடையது செவ்வல்லியெனவும் அழைக்கப்படும். ஆம்பல் மலர் என்ற பெயரும்‌ இதற்குண்டு.

இரவு விரியக் காத்திருந்த இதழ்களிலிருந்து நறுமணம் கசிந்து நறும்பொழுதை சித்திரமாகத் தீட்டியிருந்தது.

"என்ன ஆச்சு? ஏதோ தீவிர சிந்தனையில் இருக்க மாதிரி தோணுது?" என்று மௌனத்தின் மெல்லிய குரலாய் ஒலித்தாள் அமரா.

"இப்போ கோவிலில் எனக்குக் கொடுத்த மரியாதையை நினைச்சேன். இது எந்தளவு நியாயம்?" என்றான் செழியன்.

"இது சாதாரண விஷயம் தானே. இதில் என்ன இருக்கு?" என்றாள் மீண்டும்.

"இந்த மரியாதை நியாயமா எப்போ கிடைக்கணும். நம்மளோட செயல்களால நமக்குக் கிடைக்கணும். ஆதி காலத்தில் இருந்து நம்ம குடும்பம் ராஜ குடும்பமா இருந்திருக்கலாம். ஆனால் அப்போ ராஜாவா இருந்தவங்களுக்கு உள்ள தகுதி இப்போ உள்ள நமக்கு இருக்கா? எல்லாத்தையும்‌ நீர்த்து போகவிட்டுட்டோம். ஆனா இந்த மரியாதை மட்டும் வேணும். இதற்குப் பின்னணியில்தான் பல அடக்குமுறைகளும் தவறுகளும் நடக்குது" என்றான் வருத்தத்துடன்.

அவன் சிந்தனை செல்லும் திசையைப் பார்த்து சற்று திகைப்புதான் அமராவுக்கு.

"இதையெல்லாம் மாத்தி, நீங்க ராஜாவா இருங்க. ராஜாவா இருக்க, என்னென்ன குணநலன்கள் இருக்கணுமோ, அது அத்தனையும் உங்ககிட்ட இருக்கு. நேத்து நான் சொன்ன விஷயம் கூடத் தப்போன்னு தோணுது" அமரா.

"என்ன தப்பு?" செழியன்.

"நீங்க சுயநலமா யோசிக்கிறீங்கன்னு சொன்னேனே. அது தப்புன்னு தோணுது."

"நீ எப்படி இவ்வளவு தெளிவா இருக்க. உன்னோட சிந்தனைகளும் விரிவடைஞ்சு கிடக்கு. இப்படி ஒருத்தியை நான் பார்த்ததே இல்லை" என்றான் செழியன்.

"அப்போ உங்க கொடி. அவளை விடச் சிறந்தவளா நான்?" என்றாள் அமரா‌. விழிகளில் கொஞ்சம் ஆர்வம்‌ மின்னியது.

"இதுக்கு என்ன பதில் சொல்லணும்னு நினைக்கிற?" செழியன்.

"என்ன பதில் சொன்னா என் மனநிலை எப்படி இருக்கும்னு சொல்லவா?"

"ம்ம்ம்.. சொல்லு"

"ஆமான்னு சொன்னா வானத்துல பறப்பேன். இல்லைன்னு சொன்னா வருத்தப்படுவேன். கொஞ்சம் கோவம் கூட வர வாய்ப்பு இருக்கு" என்று அவள் கூற, மெல்லிய மூரல் ஒன்று‌ தோன்றியது அவன் முகத்தில்.

"நீங்க சிரிச்சா அழகா இருக்கீங்க" என்று அமரா கூறவும் அவன் இன்னும்‌ அதிகமாகச் சிரித்தான்.

"நீ வித்தியாசமான பொண்ணு."

"இல்ல நான் எதார்த்தமான பொண்ணுதான். ஒருவேளை உங்களுக்கு இப்பவும் கொடியை மட்டுமே பிடிச்சிருந்தா, நான் இப்படி இருக்க மாட்டேன். நான் இப்படி நடந்துக்கிறதால உங்களுக்கு என் மேல உள்ள மதிப்புக் கூடியிருக்கு. அதுவும் ஒரு காரணம். என்னோட வாழ்க்கையை நல்லா வாழ, நான் கையாளும் உத்தி இது. முதன்மை காரணம் முழுக்க முழக்க சுயநலம்தான்" என்றாள் அமரா.

அவன்‌ மலைத்து நின்றான்.

"இன்னும்‌ நீங்க பதில் சொல்லவே இல்லை" என்றாள்.

பேசிப்பேசியே அவனைக் கரைத்துவிட்டாள். இதுவும்‌ ஒரு உத்தியோ என்று அவளிடம்தான் வினவ வேண்டும்.

"நீ வேற. கொடி வேற" என்றான் செழியன்.

"இது பதில் கிடையாது. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு. ஆமாவா இல்லையா? இந்த ரெண்டு பதிலைத் தவிர நடுநிலையான பதில் எதையும் நான் ஏத்துக்க மாட்டேன்."

"நான் சொல்றது உண்மை. உங்க ரெண்டு‌ பேரையும் ஒப்பிட முடியாது. கொடிக்குப் பின்யோசனை அதிகம். உனக்கு முன்யோசனை அதிகம்" என்றான் அவன்.

"புரியல.."

"என்னை விரும்புவதால் வரும் பாதகங்களைக் கொடி யோசிச்சு பார்க்கல. ஆனா பிரச்சனை வந்த பிறகு யோசிச்சு சரியான முடிவு எடுத்துட்டா. நீ முன்யோசனைக்காரி. அதுக்கும் விளக்கம் வேணுமா?" என்றான்‌ ஓரப்பார்வையுடன். கொடியைப் பத்தி பேசும் பொழுது அவள் விழிகளைப் பார்த்து உரையாடுவது இல்லை.

"இதுக்கு வேற ஒரு கோணம் இருக்கு. உங்களைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டதால, இந்த வாழ்க்கை வேணும்னு நான் முன்ன யோசிக்கிறேன். எங்க உங்களோடு வாழ்க்கை சாத்தியப்படாதாங்கிற பயத்தில் கொடிக்கு முன் யோசனையில்லை. அதைப்‌பத்தி யோசிக்க பயந்திருக்கலாம். இல்ல யோசனையைத் தள்ளிப் போட்டிருக்காலம்" என்றாள் அமரா.

"எல்லாத்துக்கும் தனியா ஒரு பதில் வச்சிருக்க. கொடியைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?."

"கொடியைப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனால் உங்களை இழப்பதை யோசிச்சு பார்க்க முடியாது. அதையேதான் கொடியும் நினைச்சிருப்பா" என்றாள் அமரா பொறுமையாக.

பேச்சினூடே அவளின் நேசத்தை அவனுக்குக் கடத்திக் கொண்டிருந்தாள்‌.

"என்னை ஏன் அவ்வளவு பிடிக்கும் உனக்கு?. நான் அப்படி என்ன சிறப்பான மனிதன்?" என்றான்‌ கேள்வியாக. அப்படி என்னதான் காரணம் என்று தெரிந்து கொள்ள ஆர்வம்‌.

"மனசு, பிடிக்காம போறதுக்குதான் காரணம் தேடும். பிடிக்கிறதுக்கு எப்பவுமே காரணம் தேடாது" என்று அவள் கூற, அவனின் விழிகள் வேறு ஓரிடத்தில் நிலைக்குத்தி இருந்தது.

அமராவும் அவன் விழி சென்ற திசையில் பார்த்தாள்.

அங்கு இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.

"அந்த இரண்டு பெண்களில் யாரு கொடி?" என்று அவனின் சிந்தனையைக் கலைத்தாள் அமரா.

அவளை ஆச்சர்யமாகப் பார்க்கவில்லை செழியன். இந்த ஒரு நாளில் அவளைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்திருந்தான். அதாவது அவனைக் கணிப்பதில் அவள் தோற்பதில்லை என்று.

"ஆமா.. நேத்தே கேக்கணும்னு நினைச்சேன். மறந்துட்டேன். நான் ஒரு பெண்ணை விரும்புறேன்னு உனக்கு எப்படித் தெரியும்?" என்றான்.

"இதுக்கெல்லாம் தனியா போய்ப் படிக்கவா முடியும்?. கழுத்துல தாலி கட்டுனீங்களே ஒழிய, உங்க ஈடுபாடு முழுக்க முழுக்க அங்க இல்லை. அதுக்கு வேற ஒண்ணும் பெரிய காரணம் இருக்க முடியாது. கொஞ்சம் நிதானமா யோசிச்சாலே இந்தக் காரணம் விளங்கிடும்" அமரா.

"சரி.. சீக்கிரம் சொல்லுங்க. வலது பக்கம் நடந்து வர்றதுதான் கொடியா?" என்றாள்.

"உனக்கு என்ன மந்திரம் தெரியுமா?" என்றான் அவன்.

"இதுல மந்திரம் என்ன இருக்கு. கொடிக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. அங்க உள்ள ரெண்டு பேர்ல அந்தப் பொண்ணு கழுத்தில் தாலி இருக்கு. இத யோசிக்கக் கொஞ்சூண்டு மூளையிருந்தாப் போதும். எனக்கு என்ன மூளையே இல்லைன்னு நினைச்சீங்களா?" என்றுவிட்டு வேகமாகக் கொடியை நோக்கிச் சென்றாள்.

"அமரா!.. எங்க போற?.."என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

"உங்களோட மனைவின்னு அவகிட்ட பெருமைப்பட வேணாம். அதுக்குத்தான். அப்புறம் கொடியைப் பத்தி உனக்கு என்ன தெரியும்னு கேட்டீங்களே. தெரிஞ்சுக்கப் போறேன்" என்று‌ கையை உருவிக்கொண்டாள்.

இரண்டு எட்டு எடுத்து வைத்துவிட்டு திரும்ப வந்தாள்.

"நான் திரும்பி வர்ற வரைக்கும், நீங்க இங்கதான் இருக்கணும். எங்கள வந்து ஒட்டுக் கேட்கக்கூடாது. பேசிட்டு வந்து நானா ஏதாவது சொல்லணும்னு நினைச்சா சொல்லுவேன். இல்லை என்னைக் கேக்கக் கூடாது" என்று படபடவென்று கொட்டிவிட்டுச் சென்றாள்.

கொடி என்று இவள்‌ அழைத்துக் கொண்டு செல்லும்‌ பொழுதே மலர் கொடிக்கு, அமரா யாரென்று‌ கூறிவிட்டாள்.

ஏனோ அமராவை கொடிக்கு மிகவும் பிடித்தது. அமராவுக்குக் கொடியை செழியனின் வாயிலாக, முன்னமே தெரியுமே. நல்ல பெண் என்ற பிம்பம் வேறு. அமரா கொடியின் அருகில் நின்று கொண்டிருந்தாள். பொருளற்ற அமைதி‌யொன்று நிலவியது அங்கே.
 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom