Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கபிலனின் நிலா - அகிலன் மு

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 13



இரவு உணவுக்குப்பின் கபிலன் தன்னுடன் பேசியபடி அன்று தங்கிய மாப்ளயுடன் வீட்டின் மொட்டைமாடிக்குச் சென்றான்.


தான் கைலிக்குள் ஒளித்துக்கொண்டுவந்த துணிப்பையை எடுத்தான். உள்ளே இரண்டு பீர் பாட்டில்கள். பாட்டிலின் வெளியே தெரிந்த நீர்த்துளிகளில் பீரின் குளிர்த்தன்மையை அறிய முடிந்தது.



“என்ன மச்சான். எப்டிடா?”



“அதான் சாப்டுறதுக்கு முன்னாடி வாழப்பழம் வாங்கிட்டு வந்துரேனு வெளிய போனனே”



“அடப்பாவி. நீ வொயின்ஷாப் பக்கம் போகமாட்டியே. இன்னைக்கு எப்டி வாங்குன?”



“உன்னைய நைட் தங்கச்சொல்லி நீ ஓகே சொன்னவுடனே, நம்ம ஏரியா மக்கள்ட ஃப்ரெண்ட் மூலமா சொல்லி வாங்கி ஃப்ரிட்ஜ்ல வைக்கச் சொன்னேன். அவுங்க வீட்டுக்குப்போய்தான் வாங்கிட்டு வந்தேன்.”



“அதான பாத்தேன். மச்சான் எங்க தேறிட்டியோனு நினச்சேன்.”



“அதலாம் கஷ்டம் மாப்ள. சில நேரம் ஜாலிய டேஸ்ட்ப் பண்ணிப்போம்னு யோசிச்சிருக்கேன். ஆனா சரக்குக்கடைப்பக்கம் போறதுக்கே பயம். அப்பாக்கு தெரிஞ்சா செத்தேன்.”



“அப்ப வாழ்க்கைல இது வரைக்கும் ஒரு ஷிப்கூட சரக்கடிச்சதில்லையா, மச்சான்?. அப்ப இன்னைக்கு டேஸ்ட் பண்ணிப்பாரு”.



“இல்ல மாப்ள. இதக்கொண்டு வந்ததே பெரிய ரிஸ்க். பக்கு பக்குனு அடிச்சிக்கிது மனசு. எல்லாரும் தூங்குறநால, ஒரு தைரியத்துல அதுவும் உனக்காகச் செய்யனும்னு செஞ்சேன்”



“அப்ப நீ அடுத்து ஊருக்கு வரும்போது நம்ம அடிக்கலாம், உன்னோட ஃபர்ஸ்ட் பீர. என்ன சொல்ற”



கபிலனிடம் சொன்ன மாப்ள, தன் பல்லால் லாகவமாக பீர் பாட்டிலைத் திறந்து ஒரே மடக்கில் கால் பாட்டிலைக் காலி செய்து கொண்டிருந்தான்.



“அடிக்கலாம் மாப்ள. ஆனா அது என் ஃபர்ஸ்ட் பீரா இருக்காது. ரெண்டாவது பீர்.”



சொல்லிவிட்டு இரண்டு தோள்பட்டையை உயர்த்தி நாக்கைக் கடித்தான் கபிலன். கபிலன் சொன்னதைக்கேட்டு பட்டென்று குடிப்பதை நிப்பாட்டி, குழப்பமாய்ப் பார்த்தான் மாப்ள.



“என்ன மச்சான் சொல்ற”



“அதான் ஒரு பெரிய மேட்டர் சொல்றேனு சொன்னனே”



“ஓ... நீ மொத பீர் குடிச்சதுதான் பெரிய மேட்டரா. இத சொல்றதுக்குதான் என்னைய நைட் இருக்கச்சொல்லி ரெண்டு பீர் வாங்கிக் கொடுத்தியா. ஏன் மச்சான்… இவ்ளோ சப்ப மேட்டருக்கா அப்டி பில்டப் குடுத்த...”.



“சொல்றத முழுசா கேட்டுட்டு அப்புறம் சொல்லு, மாப்ள”



“சரி சொல்லு”. மாப்ள பாட்டிலில் மீதம் இருந்த பீரை குடிக்க ஆரம்பித்தான்.



“இந்த பார்த்திபன், நந்தினிகூட உட்காராத, நடக்காத, பேசாதன்னு… என்னையும், அமுதன், மாறன் எல்லாத்தையும் எதிரி மாதிரி பாக்க ஆரம்பிச்சுட்டான்னு சொன்னேன்ல”



“ஆமா...”



“அத அப்டியே பல மாசம் நடந்துச்சு. இடையிலே எப்பவும் நந்தினியே ‘அவன் அப்டிதான் சொல்லுவான் நீ எப்பவும்போல இருன்னு’ சொல்லிட்ருப்பா. நானும் உன்ட சொன்ன மாதிரி, அவ பார்த்திபன லவ் பண்ணதுக்குப்புறம்தான் ரொம்ப க்ளோஸா சுத்துனோம். அவ பார்ர்திபன பாக்கப்போனாக்கூட என்ட சொல்லிட்டுப்போவா. ஆனா நாங்க எங்க போனாலும், ‘அவன்ட ஏன் சொல்லனும்னு கேட்பா’”.



“சரி…”



மாப்ள முதல் பீரை முக்கால் பாட்டில் காலி செய்திருந்தான். கபிலன் பெரிய பீடிகையுடன் சொல்ல ஆரம்பித்த ஃபிளாஸ்பேக்கினால், மாப்ள குடிக்கிற வேகம் குறைந்திருந்தது.



“நான் அடிக்கடி நந்தினி வீட்டுக்குப்போவேன். அது அவுங்க வீட்டுல, எங்க வீட்டுல எல்லாருக்கும் தெரியும். உன்ட்டகூட அப்பப்ப சொல்லிருக்கேன். நீ பேர மறந்துட்ட”



“நான் மறந்துட்டனா. நீ வெண்ணிலாவப் பத்திதான என்ட அதிகாம சொல்லிருக்க. அப்ப எனக்குத் தெரியாம நெறைய மேட்டர் நடந்திருக்கு. ம்ம்ம்…”



“இல்ல மாப்ள”



“சரி. நீ மேட்டர சொல்லிமுடி, மச்சான். இருக்கா, இல்லையானு நான் சொல்றேன்…”



“டே.. இது ஒன்னுதான் நான் சொல்லாம இருந்த பெரிய விசயம்”



“சரி, சொல்லு. அடிக்கடி நீ நந்தினி வீட்டுக்குப்போவ. அப்புறம் என்னாச்சு?”



கேட்டுவிட்டு முதல் பீர் பாடிலைக் காலி செய்த மாப்ள, அடுத்த பீரை முன்புபோலவே பல்லால் கடித்துத் திறந்தான்.



“அப்ப ஒருநாள். நந்தினியோட அப்பா, அம்மா ஊருக்குப் போயிருந்தாங்க.”

.



2005 நாகர்கோவில் காலனி



நந்தினியும், கபிலனும் வழக்கம்போல் அன்று கல்லூரிமுடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அமுதனும், மாறனும் அவரவர் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.



“கபிலா, அம்மா அப்பா ஊருக்குப்போயிருக்காங்க. ரெண்டு நாளாகும் வர. நீ நாளைக்கு ஃபுல்லா எங்க வீட்ல இருக்குற மாதிரி ப்ளான் பண்ணிக்க. நாளைக்கு ல்ஞ்ச், டின்னர் நான் ஸ்பெஷலா செய்யப்போறேன் நம்ம ரெண்டுபேருக்குமட்டும். வீக்எண்ட் ஸ்பெஷல்”



வீட்டினருகே விடை பெற்றுச்செல்லும்போது நந்தினி பார்த்திபனிடம் சொன்னாள்.



“ஏற்கனவே உன் லவ்வர் என்மேல செம கடுப்புல இருக்கான். இப்ப அவன விட்டுட்டு என்ன கூப்டா உன்மேலயும் கடுப்பாகப்போறான்.”



“பார்த்திக்கு நான் செய்றத செஞ்சிட்டுதான் இருக்கேன். அவன லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கப்புறம் நீதான் அவனால ரொம்ப பிரச்சனைய ஃபேஸ் பணற. எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கிற. உனக்கு அவனவிட பெருசா ஒன்னு குடுக்கனும். அதான் நான் பார்த்திபனும் ஊருக்குப்போன டைம்மா பார்த்து, எங்க வீட்லயும் யாருமில்லைன்றனால உனக்கு ஸ்பெஷல் லஞ்ச், டின்னர்.”



“ஓ பார்த்திபனும் ஊருக்குப்போய்ட்டானா. ஏதோ என்னய வச்சு டெஸ்ட் பண்ணனும்னு முடிவோட இருக்கபோல. சரி வந்துபாக்குறேன் அதையும். பை டி”.



இயல்பாகச்சிரித்துக்கொண்டே விடைபெற்றான் கபிலன். ஆனால், நந்தினி ஒரு தீவிர சிந்தனையில் வீட்டிற்குச்சென்றாள். இவ்வளவு அழுத்தமாக பிளானுடன் நந்தினி கபிலனை இதுவரை வீட்டிற்குவந்து இருக்கச் சொன்னதில்லை. கபிலன் நந்தினி வீட்டிற்குச் செல்வதும், உணவு அருந்துவதும் அதுவரை இயல்பாக நடந்த ஒன்று.

.



மறுநாள் காலை உணவுக்குப்பின், நண்பர்கள் வீட்டிற்குச்சென்றுவிட்டு இரவு உணவுக்குப்பின் வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு வெளியில் சென்றான், கபிலன்.



நண்பர்களுடன் வழக்கமாகச் சந்திக்கும் டீக்கடையில் அரட்டையடித்துவிட்டு, மதிய உணவு நேரம் நந்தினி வீட்டிற்குச்சென்றான்.

.



நந்தினி வீடு



காலிங் பெல்லை அழுத்தினால், எப்போதும் கலகலப்பாக ஓடி வந்து கதவைத் திறப்பாள், நந்தினி.



“இன்னைக்கு அப்டி என்ன ஸ்பெஷல் வச்சிருக்கா, நந்து?!”. யோசித்துகொண்டே காலிங்பெல்லை அழுத்தினான், கபிலன்.



ஒருமுறை, இருமுறை, சிறிது இடைவெளிவிட்டு மூன்றாம் முறை காலிங்பெல்லை அழுத்தினான்.



“வெளியில் எங்கும் சென்றுவிட்டாளா?”. யோசித்துக்கொண்டே “நந்தூ…” சத்தமாகக் கூப்பிடவும், வீட்டின் உட்கதவு திறக்கவும் சரியாக இருந்தது.



தன் வீக்எண்ட் ட்ரேட் மார்க் முழங்கால் தெரியும் அரைப்பாவாடை, சாம்பல் நிறத்தில் அணிந்திருந்தாள். மேலே அடர்நீல கைவைக்காத பனியன். புதிதாய்ப் பார்ப்பவன் கிறங்கிப்போவான், அவள் உடையிலும், ஒப்பனையில்லாத அந்த அழகிலும்கூட. ஆனால், கபிலனுக்கு அது பழக்கப்பட்ட ஒன்று.



“என்னடி, இவ்ளோ நேரம் என்ன பண்ண”



“உள்ள வா”



கதவைத்திறந்த நந்தினி, கபிலன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் வீட்டினுள் சென்று, மூவர் அமரரும் சோபாவில் ஒரமாய், இரண்டு கால்களையும் ஒரு பக்கமாய் மடித்துக்கொண்டு அமர்ந்தாள். கபிலனும் பின்னாலேயே சென்று எதிரில் உள்ள ஒருவர் அமரும் சோபாவில் அமர்ந்தான்.



“என்னடி ஆச்சு. ட்ரீட்னு சொல்லி ஒரு கட்டு கட்டலாம், ஜாலியா பேசிட்ருக்கலாம்னு வந்தா இப்டி உக்காந்திருக்க. உன்னைய நம்பி நைட் சாப்டுதான் வருவேன்னு வீட்ல சொல்லிருக்கேன். உடம்புக்கு எதும் சரியில்லயா”



“மனசு சரியில்ல”



“என்ன பிரச்சனை இப்போ. நேத்து ஈவ்னிங் நல்லாதான பேசிட்டுப்போன”



“ஏன், இத பக்கத்துல உக்காந்து கேக்க மாட்டியா?”. நந்தினி முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கபிலனைத் திருப்பிக்கேட்டாள்.



“சரி, ஏன் உக்கார மாட்டனா”. சொல்லிகொண்டே எழுந்துவந்து நந்தினி அருகே அமர்ந்தான்”



“சொல்லு, என்ன ஆச்சு ஓவர் நைட்ல”



“இது ஒன்னும் ஓவர் நைட்ல ஆகல. ஒரு வருஷமா நடந்துகிட்டுதான் இருக்கு”



“ஒரு வருஷமாவா. அப்புறம் ஏன் என்ட இவ்ளோநாளா சொல்லல?”. கபிலன் உரிமையுடன் கேட்டான்.



“மடில படுத்துக்கவா”. கபிலன் கேள்விக்குப்பதில் சொல்லாமல் கெஞ்சலாகக் கேட்டாள்.



“மடில படுத்தாதான் சொல்லுவியா. சரி வா படுத்துக்கோ. யார் வேண்டாம்னா”



நந்தினி அளவுகடந்த மகிழ்ச்சியிலும், ஆழ்ந்த கவலையிலும் இருந்தால் இப்படி கபிலன் மடியில் படுத்துக்கொள்வது வழக்கம்.



கபிலன் மடியில் தலைசாய்த்து இரண்டு கால்களையும் மடித்துக்கொண்டு, தன் இருகைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு சுருண்டுபடுத்தாள், நந்தினி.



“என்னாச்சு நந்து. எதுனாலும் சொல்லு. என்ன பண்ணா சரியாகும்னு நான் சொல்றேன். அப்புறம் நாம ரெண்டு பேரும் சேர்ந்தே லஞ்ச் ரெடி பண்ணலாம்”



“ல்ஞ்ச்லாம் ரெடி பண்ணிட்டேன்”. கொஞ்சம் உடைந்த குரலில் சொன்னாள் நந்தினி. கபிலன் உருகிப்போனான்.

.



சோழப்பேரரசு. பழுவூர் அரண்மனை



பழுவூர் இளையராணி நந்தினி தன் கணவர் பெரியபழுவேட்டரையரை தஞ்சாவூர் அனுப்பிவிட்டு வல்லவன் வந்தியத்தேவனை விருந்திற்கு அழைத்திருந்தாள். மகிழ்வுடனும், மனதிற்குள், ‘தன்னையேன் இளையராணி அழைத்தார்கள்’ என்ற கேள்வியுடனும் அரண்மனை சென்றிருந்த வந்தியத்தேவன், பழுவூர்ராணி நந்தினி அலங்காரமற்ற முகத்துடனும், ஆனால் அதே மின்னும் பொலிவுடனும், ஆசனத்தில் அமர்ந்திருந்ததைக்கண்டு குழப்பமடைந்தான்.



சுற்றிலும் அரண்மனை பணியாளர்களோ, இளையராணியின் பணிப்பெண்களோ இல்லை.

அந்த விசாலமான அறையில் பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டு, அதன் முடிவில் இருந்த தங்கமுலாம்பூசப்பட்ட ஆசனத்தில் ஒரு ஓரமாய் இளையராணி நந்தினி தலைகவிழ்த்தி அமர்ந்திருந்தாள்.




“இளையராணி தங்கள் அரண்மனைக்கே என்னை விருந்துக்கு அழைத்ததில் மகிழ்ச்சி. ஆனால் தங்கள் முகத்தில் ஏதோ கவலை தோய்ந்திருக்கிறதே!?. நான் ஏதும் உங்களின் மனக்குழப்பத்திற்கு காரணமாயிருந்தால், தயை செய்து மன்னிக்கவேண்டும், இளையராணி!”



“இல்லை, வல்லவரே!. என் நட்பினால் என் கணவரின்பால் நீங்கள் அனுபவிக்கும் கடுமையான சூழலுக்கு நான்தான் உங்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும். அதற்கு சிறு பரிகாரம் காணவே என் கணவரை தஞ்சைக்கு அனுப்பிவிட்டு, உங்களுக்கு விருந்தளிக்க அழைத்தேன்”



“தங்களின் ஆத்மார்த்தமான அன்பும், அதனால் விளைந்த நட்புமே எனக்கு ஆயுளுக்கும் பெரும் விருந்துதான் இளையராணி. உணவு விருந்தில் அதைவிட சிறப்பை நான் பெறப்போவதில்லை”



“நான் தங்களுக்கு உணவு விருந்தளிக்க அழைக்கவில்லை. வந்தியத்தேவருக்கு என்னையே விருந்தாக அளிக்க அழைத்தேன்”



“இளையராணி… என்ன இது என் நட்பின்மீது ஐயப்பட்டு எனைச்சோதிக்கிறீர்களா?. தங்கள் அழகையும், இளமையையும் எல்லோரும் சிலாகிப்பதும், ரசிப்பதும் இயற்கையே. தங்கள் மீது கொண்ட நட்பினால், நான் சற்று அதிகமாக அதைப்பற்றி பேசியிருக்கலாம். அது தவறு எனில் மன்னியுங்கள்!. நான் தங்களின் காதலுக்குத் தகுதியில்லாதவன்”



கபிலன் பதறினான். நந்தினி நிதானமாய்க் காதல் பார்வையை வல்லவன் மீது அழுத்தமாய்ப் பதித்துக்கொண்டிருந்தாள். இளையராணி நந்தினிக்கு குறிக்கோள் வல்லவன் தன்னைவிட்டு விலகி குந்தவையின் பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்பது. அதனால் வெவ்வேறு முயற்சிக்குப்பின், தன்னையே கொடுத்து வல்லவனை தன்னுள் வீழ்த்த சதி செய்தாள்.



நந்தினி வசீகரப்புன்னைகையுடனும், காதலில் சிவந்த கண்களுடனும், ஆசனத்தில் இருந்து எழுந்து வல்லவனை நோக்கி நடந்தாள். நந்தினியின் அழகிலும், நடையிலும்; வெண்மதியும், மயிலும், அன்னமும், அசைந்துவரும் தேரும் வல்லவன் கண்முன் நிழலாடின.



கபிலன் சரீரம் தடுமாறியது. ஆனால் மனம் தடம்மாறவில்லை. அவன் மெதுவாக பின்னோக்கி நகர்ந்தான்.



“நந்தினி, தாங்கள் பழுவூர் சிற்றரசர் பழுவேட்டரையரின் துணைவியார்”



“மணம்முடித்தது அவரை. என்மனம் நாடுவது வல்லவரை”



“இளையராணி… இது தவறு”



தன்னை வெகுஅருகில் அணுகிய இளையராணி நந்தினியின் தோள்களைபற்றி நிறுத்திய வந்தியத்தேவன், பதற்றத்தில் உரக்கச்சொன்னான்.

.




நாகர்கோவில் நந்தினி வீடு



“இதுலென்ன தப்பு. நான் பார்த்திபனக் காதலிக்கிறேன். ஆனா அது நானா தேடிப்போனதில்ல. நீதான் போக வச்ச”



நந்தினி அழுத்தமாகவும், சிறிது கோபமாகவும் கபிலனிடம் சொன்னாள். நந்தினியின் தோள்களைப் பிடித்து தடுத்திருந்த கபிலன் அவளை உலுக்கினான்.



“என்னடி உளர்ற. தெளிவாதான் இருக்கியா?”



“தெளிவாதான் சொல்றேன். நானா விரும்பி இந்த காதல் நடக்கல. பார்த்திபன் செஞ்ச பிளான். உன்னால நான் அதுல மாட்டிக்கிட்டேன்”



கபிலன் அதிர்ந்தான்.



நாம் கபிலனைத் தொடர்வோம்-13
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 14



“நீ பார்த்திபன தேடிப்போனதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் சின்ன வயசுல இருந்து இதுவரைக்கும் உன்ட சொல்லாம, கேக்காம எதாவது செஞ்சிருக்கேனா? நான் நிலாவ லவ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து அவட்ட லவ்வ ப்ரோபோஸ் பண்ணப்போகும்போதும்கூட உன்ட சொல்லிட்டுதான செஞ்சேன். ஆனா நீ, திடீர்னு ஒரு நாள் என்டகூட சொல்லாம பார்த்திபன்கூட ட்ரைவ்போய்ட்டு, அவன ல்வ் பண்றேன்னு வந்து சொன்ன. இப்ப, ‘நீயா விரும்பி செய்யல, பார்த்திபன் பிளானுங்ற’. அப்டி என்ன பண்ணேன்டி நான்?”



கபிலன் கொஞ்சம் கோபமாகவே கேட்டான் நந்தினியிடம்.



“ஆங்.. இப்ப சொன்னேல... நீ நிலாவ லவ் பண்ண ஆரம்பிச்சது, அவள பாத்தது. ரசிச்சது, தேடுனது, ல்வ பண்றேனு சொல்லாதவளுக்காக மூனு வருஷம் காத்திருப்பேன்னு நீ சொல்றது. அதுக்கப்புறமும் நான் இருந்தாலும் இல்லாட்டியும் அவளயே தேடிட்ருக்கது, இதத்தான்.. இதத்தான்டா சொன்னேன்.”



“என்ன.. இன்னைக்குதான் புதுசா பழகுன மாதிரி கேக்குற”



“புதுசா பழகல. புதுசா புரிஞ்சிருக்கேன். அதுவும் நான்கூடவே இருந்தும், நாம எல்லாம்பேசியும், பார்த்திபன் என்ட சொல்லித்தான் என்னையவிட நிலாதான் உனக்கு முக்கியம்னு தெரிஞ்சிக்கிட்டேன்”



“ஓஹோ… அவரு சொல்லித்தான் நீங்க என்னைய புரிஞ்சிக்கிட்டீங்கெளா”



“இல்லேங்றியா?”



“இவ்ளோ நாள் கழிச்சும் விளக்கமா சொன்னாதான் உனக்கு புரியுமா?”



“அப்போ நாந்தான் முக்கியம்னு ப்ரூவ் பண்ணு.”



“எப்டி”



“கட்டிப்பிடிச்சுக்கோ என்னை”



“என்னடி சின்னப்புள்ளதனமா பேசிட்டிருக்க”



“செய்ய முடியுமா, முடியாதா?” கோவம் மறைந்து கொஞ்சல் தொனித்தது நந்தினியின் குரலில்.



“ம்ஹும்.. சரி வா”. அன்போடு அழைத்தான், பரிவாக அணைத்தான்.



கபிலன் மார்பில் சாய்ந்த நந்தினியின் கண்கள் கலங்கி அவன் சட்டையை நனைத்தது. கபிலன் உருகிப்போனான்.



“பார்த்திபன் உன்னைய நல்லா குழப்பிருக்கான். அவனும் நம்ம ஃப்ரெண்ட்தானனும், நீ லவ் பண்றன்றதுக்காகவும்தான் இதுவரைக்கும் விட்டேன். இனி அவன ஒதுக்கி வைக்கவேண்டியதுதான்.”



“எனக்காக ஒன்னும் நீ அவன்ட அட்ஜெஸ்ட் பண்ணிக்க வேணாம். நீ நிலாவையே தேடிட்ருந்த. பார்த்திபன் என்னையே தேடி வந்தான். அதான் அவன லவ் பண்றேனு சொன்னேன். அதுவேற, நம்ம ஃப்ரெண்ட்ஷிப் வேற”



“என்னமோ சொல்ற.. கேட்டுக்குறேன். பார்த்திபன் உன்னைய நல்லா குழப்பியிருக்கான்னுமட்டும் தெரியுது”.



கபிலன் அவளுக்காக பரிந்துபேசினான். ஆனால் நந்தினி மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். தான் நினைத்தபடி கபிலனுக்கும், பார்த்திபனுக்கும் விரிசலை ஏற்படித்தியதை நினைத்து அவளுக்கு மகிழ்ச்சி.



“சரி, சாப்டலாமா?”



“டே.. எனக்கு இன்னொரு ஆசை.”



“என்ன”



“ஃப்ரிட்ஜ்ல சில்லுனு பியரும், ரெட் வொயினும் இருக்கு. அப்பா வாங்கி வச்சிருக்கார். டேஸ்ட் பண்ணலாமா”



“அடிப்பாவி. பியர்லாம் குடிப்பியா”. கபிலன் சிறிதாய் பதட்டப்பட்டான்.



“டே.. உன்ட சொல்லாம செய்வேனா. எனக்குத் தெரியும் நீயும் இதுவரைக்கும் வொயின்ஷாப் பக்கமே போயிருக்கமாட்டனு. அதான் ரெண்டுபேரும் ஃபர்ஸ்ட்டைம்மா சேர்ந்து பண்ணலாம்னு கேட்டேன். ப்ளீஸ்ஸ்ஸ்டா”



நந்தினி கொஞ்சலில் அவனுக்கும் செய்துபாக்கலாமென்று தோன்றியது.



“டீ இன்னைக்கு என்னைய மட்டையாக்கி உங்க வீட்டுலயும், எங்க வீட்லயும் சேத்தே மாட்டிவிடப்போறன்னு நினக்கிறேன்.”



கபிலனுக்கு பரபரப்பும், கொஞ்சம் பயமும் தொற்றிக்கொண்டது.



“அம்மா அப்பா வர ரெண்டுநாள் ஆகும். நீ அப்டியே மட்டையானாலும், நல்லாத் தூங்கி எந்திருச்சுட்டு நாளைக்குக்கூட வீட்டுக்குப்போலாம்”, என்றாள் நந்தினி. கபிலன் சரியென்றான்.



நந்தினி இரண்டு பியர் பாட்டில்களை ஃபிரிட்ஜ்ஜிலிருந்து எடுத்துவந்தாள். வெளியே வீட்டுக்கதவை அடைத்து உட்புறமாகத் தாழ்ப்பாள்போட்டுவிட்டு வந்தான் கபிலன். கூல்ட்ரிங்க் ஓபனரை வைத்து பியர் பாட்டிலைத் திறந்தான். நுரை பொங்கி வழிந்தது.



இருவரும் ஆளுக்கொரு ஸிப் அடித்தனர்.



“என்னடி இப்டி கசக்குது. இத எப்டி பாட்டில் பாட்டிலா குடிக்கிறாங்கெ?”. கல்லூரியில் படிக்கும் பள்ளிக்குழந்தைபோல கேட்டான், நந்தினியிடம். அவன் வளர்ப்பு அப்படி.



“ஃப்ர்ஷ்ட் அப்டிதாண்டா இருக்கும். ரெண்டு மூனு ஸிப் அடிச்சேனா செம்மையா இருக்கும்”



“டீ… ஃபர்ஷ்ட் டைம்னு சொல்லிட்டு ரெகுலர் குடிகாரி மாதிரில பேசுற”



“இல்லடா… அப்பா சொல்லுவாரு. அதத்தான் சொன்னேன். வொயின் மிக்ஸ் பண்ணா டேஸ்ட்டா இருக்கும்னு சொல்வார். பண்ணலாமா”



“அதான் ஆரம்பிச்சாச்சுல. அதையும் குடிச்சுப் பாத்துருவோம். எடுத்துட்டு வா”



பேசிக்கொண்டே வொயினையும் கலந்து அடுத்தடுத்த ஸிப்படித்ததில் நான்கு பாட்டில்கள் பியரையும், ஒரு ஃபுல் பாட்டில் வொயினையும் காலி செய்தனர் இருவரும்.

முதன்முதலில் குடித்ததால் தலைக்கேறியது போதை. நிதானம் இழந்த கபிலன், தான் படுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, நேராக பெட்ரூம் சென்று முகட்டைப் பார்த்து கை, காலை விரித்துப்படுத்தான். அவன் பின்னாலேயே சென்ற நந்தினி சிறிது தெளிவாக இருந்தாள். மெதுவாக கபிலன் அருகில் படுத்துக்கொண்டு அவனையே ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். இருவரும் செய்வதறியாமல் உறங்கிப்போயினர்.

.

2005 நவம்பர் தீபாவளி



புத்தாடை அணிந்து, பட்டாசு கொளுத்தி, ஸ்வீட் பலகாரம் வீட்டுக்கு வீடு பரிமாறிக் கூடிக்களித்திருந்தனர். கபிலன், அமுதன் இருவரும், மதிய உணவுக்காக மாறன் வீட்டிற்கு வந்திருந்தனர். நந்தினியும், பார்த்திபனும் தீபாவளிக்கு அவரவர் சொந்த ஊருக்குப்போயிருந்தனர். மாறன் வற்புறுத்திச் சொல்லியதால் அரைமனதுடன் வெண்ணிலாவையும், மேகலை மதிய உணவுக்கு அழைத்திருந்தாள்.



மாறன் வீட்டில் மதிய உணவு தயாராகிக்கொண்டிருந்தது. நண்பர்கள் மூவரும் வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருமுறையும் பந்தைப்போடும்போதும், அடிக்கும்போதும், பிடிக்கும்போதும் கபிலனின் கண்கள் தெருமுனையையே நோட்டமிட்டுக்கொண்டிருந்தன. மனம் நிலாவைச் சுற்றிக்கொண்டிருந்தது. ஒருமுறை மாறன் அடித்தபந்தை விரட்டிப்பிடிக்கத் தெருமுனை நோக்கி வேகமாக ஓடினான் கபிலன்.



விரட்டியபந்தை பிடிக்கக்குனியவும், அந்த பந்து தெருமுனையில் திரும்பிய நிலாவின் கால்களுக்குள் புகுந்து, புதுச்சேலைக்குள் மறையவும் சரியாக இருந்தது. பதட்டமாக கபிலன் கையைப்பின்னால் எடுத்து நிமிர, நிலா அதே பதட்டத்துடன் காலைப்பின்னால் நகர்த்தி பந்தை எடுக்க அவசரமாக கீழே குனிய, இருவரும் நெற்றிக்கு நெற்றிக்கு மோதிக்கொண்டனர். கபிலனுக்கும், நிலாவுக்கும் அதிர்ந்தது, தலையல்ல, இதயம்!.

அங்கே பந்து மட்டுமல்ல, இருவர் மனமும் முதன்முறையாக எல்லைக்கோட்டைக் கடந்தது.



“சாரி/சாரி”



“வலிக்குதா/வலிக்குதா”



இருவரும் ஒரே கணத்தில் அடுத்தவரைப் பார்த்துக்கேட்டனர். சிலிர்ப்பாகச் சிரித்துக்கொண்டனர்.



“நான்... பந்த.. எடுத்துட்டு வர்றேன். நீ… போ”. கபிலன் அவளைவிட்டு நகர மனமில்லாமலும், அங்கே நிற்க தடுமாறியும் குழம்பிய மனநிலையில் சொன்னான்.



“இல்ல.., நீங்க எடுத்துட்டு வாங்க. நான் வெய்ட் பண்றேன்”. கன்னம்சிவப்பதை அறியாமல் புன்னைகையுடன் சொன்னாள், நிலா!



கபிலன் காதல் சொல்லி ஒருவருட முடிவைத்தொட்டுக் கொண்டிருந்த தருணத்தில், நிலாவின் மனம் அவன்மேல் காதலைத்தொடங்கியிருந்தது. அதை அவள் வெளிக்காட்டவில்லையென்றாலும், அவள் கடந்த பதினொரு மாதங்களில் முதல்முறையாக, கபிலனிடம் நின்று பேசியது அதுதான் முதல்முறை. கபிலன் தான்காண்பது கனவுபோல களிப்புத்திகைப்பில் நின்றான்.



“கபிலன். கபிலன்…”



சில விநாடி இடைவெளிக்குப்பின், “கூப்டியா”



“கபிலன்.. நீங்கெ பந்த எடுத்துட்டு வாங்க நான் வெய்ட் பண்றேன்னு சொன்னேன்”



“ஓ… சரி”



அரைமயக்கத்தில் பதில்சொல்லிவிட்டு பந்தை எடுக்கச்சென்றான். அவன் மனநிலை புரிந்தவளாக புன்னகைக்தாள், நிலா!



“இவன் எங்கடா பந்தை எடுக்கப்போனானா, செய்யப்போனானா”



“அதான”



கிண்டலடித்த அமுதனும் மாறனும் கபிலன் ஓடிய திசையில் பார்த்து, சட்டென்று ஆச்சர்யத்தில் ஒருவரையொருவர் திரும்பிப்பார்த்துக்கொண்டனர். அங்கே தூரத்தில் கபிலனும், நிலாவும் சேர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தனர். அருகில் வந்தவுடன்,



“நீ போ நிலா. நான் விளையாடிட்டு வர்றேன்”



“ம்ம்…”



கபிலன் சொன்னதற்கு தலையாட்டியவள், மாறனையும், அமுதனையும் பார்த்துப் புன்னகைத்துவிட்டு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தாள்.



“யப்பா.. ‘இந்த பூனையும் பால் குடிக்குமானு’ நினச்சா, இது பால்பண்ணையையே குடிக்கும்போலயேடா”



கிண்டலாக சிரித்துக்கொண்டே அமுதன் சொன்னான். மாறனும் சிரித்தான்.



“டேய்ய்ய்… ப்ளீஸ்டா.. இப்பதாண்டா ஒரு வருஷத்துல ஃபர்ஷ்ட் டைம்மா பேசிருக்கா. ஆரம்பத்துலேயே கவுத்திறாதீங்கெடா.” அழாத குறையாகக் கெஞ்சினான், கபிலன்.



“சரி சரி. இப்பயாவது பேசுனாளே. எங்களுக்கும் சந்தோஷம் டா”. மாறன் கபிலனை ஆசுவாசப்படுத்தினான்.



“சரி வா, பந்தபோடு”



“இல்லடா, காத்து இறங்குன மாதிரி இருக்கு. வேற பால வச்சு விளையாடலாம்”. அமுதன் கேட்டதற்கு கபிலன் பந்தைகொடுக்காமல், தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டான்.



“டே.. பந்துக்கு இனி நீ பாலாபிஷேகம் பண்ணாலும் பண்ணுவடா. காத்து இறங்குச்சா…உனக்கா... பந்துக்கா..” அமுதன் கபிலனைக் கிண்டலடிக்க,



“இருங்கடா தண்ணி குடிச்சிட்டு வந்துர்றேன்” அமுதன் சொன்னதைக் காதிலேயே வாங்காமல் வீட்டுக்குள் ஓடினான், கபிலன்.



“டே… இவன் என்னக்காவது வீட்டுக்கு வெளிய விளையாடுறப்போ, இவன்போய் தண்ணி எடுத்துட்டு வந்திருக்கானாடா. உன்னையதானடா வேல வாங்காவான்”



அமுதன் சிரித்துக்கொண்டே மாறனைப் பார்த்து கேட்டான்.



“விட்றா, எத்தனை மாசமா மண்ட காஞ்சுபோய் திரிஞ்சான். ஃப்ரியா விட்றா. பய என்ஜாய் பண்ணட்டும்”. மாறன் கபிலனுக்குப் பரிந்துபேசினான்.



“சரி, வா நம்மளும் உள்ள போவோம். என்ன செய்றாங்கெனு பாப்போம்”



அமுதன் மாறனிடம் சொல்லிக்கொண்டே உள்ளே போனான். உள்ளே டைனிங் டேபிள் அருகே நின்றிருந்த கபிலன், கையில் தண்ணீர் சொம்பை வைத்துக்கொண்டு, அருகே சமையலறையில் மேகலையிடம் பேசிக்கொண்டிருந்தான். ஆனால் அவன் கண் மேகலையுடனும், அவள் அம்மாவுடனும் சமையலுக்கு உதவிக்கொண்டிருந்த நிலாவின்மேலேயே இருந்தது.



“தண்ணி குடிச்சிட்டியாப்பா”, உள்ளே நுழைந்தவுடன் கபிலனை வாரினான், அமுதன்.



“சும்மா இர்றேண்டா”



அமுதனுக்குமட்டும் கேட்கும்படி சன்னமான குரலில் கையை குவித்துச் சொன்னான், கபிலன். அமுதன் மாறனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான்.



“அப்ப பந்தகுடு” வேண்டுமென்றே சத்தமாகச் சொன்னான், அமுதன்.



கபிலன் “ஏண்டா இப்டி ஓட்ற” என்பதுபோல சைகையிலேயே அமுதனைப் பேசாமல் இருக்கச் சொன்னான். மாறனும், அமுதனும் ஒருவரையெருவர் பார்த்து மீண்டும் சிரித்துக்கொண்டனர்.



“எங்ககூட விளையாடமா வந்தேல. இர்றா உன்னையை இன்னைக்கு” சிரித்தபடி தலையை ஆட்டி நக்கலடித்தான், அமுதன்.



அந்த இடத்தைவிட்டு நகர மனமில்லாமலும், அமுதன் வாயை அடைக்க முடியாமலும், கபிலன் திணறினான்.



“என்ன பந்து. வெளியதான விளையாடிட்டிருந்தீங்கெ” மேகலை கேட்டாள்.



கபிலன் பதில்சொல்லாமல் முழித்தான்.



“ஒன்னுமில்லடி, நீ வேலய பாரு. இவன் சும்மா அவன ஓட்டிட்ருக்கான்” கபிலன் நிலமையை பார்த்து மாறன் மேகலையிடம் பதில்சொல்லிவிட்டு, “விட்றா அவன” என்று அமுதனிடம்

கிசுகிசுத்தான்.



“என்ன ஒன்னுமில்ல. பர்ஷ்ட் பாலப்போட்டவன், அடுத்த பாலப்போடச்சொன்னா காத்து இல்லனு, பாக்கெட்ல வச்சுக்கிட்டான். அதுக்கெடையில ஓடிப்போய் ஒருதடவதான் பால எடுத்துட்டுவந்தான். அதுக்குள்ள என்னாச்சுனு தெரியல இவனுக்கு. அதோட விளையாடாம உள்ள வந்துட்டான்”



வகையாக ஓட்டிய அமுதன் கபிலனை பார்த்து “நீ பேசாம அங்க கவனி” என்று சைகையில் நிலாவின் முகமாற்றத்தைக் கவனிக்கச் சொன்னான்.



கபிலன் நிலாவைப்பார்த்தான். நிலா இவர்களைப் பார்க்காமல், எதிர்புறம் அடுப்பின்பக்கம் திரும்பி குனிந்து நின்றுகொண்டிருந்தாள்.



“என்னடா.. ஒன்னும் புரியலயே” என நிலாவின் எண்ணம் புரியாமல் அமுதனைப் பார்த்து சைகையில் கேட்டான்.



“நீ நிலாவுக்கு எதிர்த்தாப்ல இருக்குற பெரிய கண்ணாடியப் பாருடா” என கிசுகிசுத்தான், அமுதன்.



அப்போதுதான் கபிலன் கவனித்தான். எதிரே கண்னாடியில் தன் முகபாவனை தெரிவதை அறியாத நிலா, பந்தைப்பற்றி சொன்னதைக்கேட்டு விசயம் புரிந்தவளாக புன்னைகையுடன்

உருளைக்கிழங்கை அடுப்பில் கொதித்த தண்ணீரில்போடாமல், கையில்வைத்து உருட்டிக்கொண்டே நின்றாள்.



“எப்டி…” என்று அமுதன் கபிலனைப் பார்த்து சைகை செய்தான். அதுவரை அமுதன் கிண்டலடித்துக்கொண்டிருந்ததை ரசிக்காமல் இருந்த கபிலன், அமுதன் செய்ததன் காரணம் புரிந்து “சூப்பர்றா” என சைகை செய்து சிரித்தான்.



இப்பப்பாருங்க என மாறனிடமும், கபிலனிடமும் சைகை செய்துவிட்டு. கபிலன் நிலாவைப் பார்த்துகொண்டே, மேகலையிடம்,



“மேகா, அவன் பாலத்தர மாட்டான். நீ அங்க சும்மா எதாவது உருளக்கிழங்க வச்சிருந்தா குடு. நாங்க கேட்ச் பிடிச்சாவது விளையாடுறோம்”



அமுதன் சொன்னதைக்கேட்டு பட்டென்று தன்னிலை உணர்ந்த நிலா, படக்கென்று உருளைக்கிழங்கை எடுத்து கொதிக்கும் நீரில் போட்டாள்.



“வேற காய் எதும் ரெடி பண்ணனுமாமா” வெண்ணிலா, மேகலையின் அம்மாவிடம் அவசரமாய்க்கேட்டாள்.



“இல்லமா. நீ போய் உக்காரு நான் ரெடியான உடனே சொல்றேன்.” அம்மா பதில் சொன்னார்.



நிலா சமையலறையிலிருந்து திரும்பி வீட்டின் ஹாலுக்கு வர, வழியில் நின்றுகொண்டிருந்த கபிலனைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுச் சென்றாள்.



கபிலன் நிலைகொள்ளாமல் தவித்தான்.

.

நாம் கபிலனைத் தொடர்வோம்-14
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 15
மேகலையின் வீட்டுச் சமையலறையில் இருந்து ஹாலுக்குள் வந்து அமர்ந்த நிலா, அங்கே இருந்த குமுதம் பத்திரிக்கையை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்.

கபிலன், மாறனிடம் கண்ணைக்காட்டி, நிலாவிடம் பேச்சுக்கொடுக்கச் சொன்னான்.
"என்ன வெண்ணிலா எப்டி இருக்க", மாறன் சம்பிரதாயமாய் பேச்சை ஆரம்பித்துவைத்தான்.

"நல்லா இருக்கேன். உங்களுக்கு எப்டிப்போகுது லைஃப்?"

"நமக்கென்ன நல்லாப்போகுது,.."

"ஆனா.. இவன் படுத்துற பாட்டுல டெய்லி எங்கபாடு திண்டாட்டம்தான்"
மாறன் முடிப்பதற்குள், அமுதன் இடையில் புகுந்து கபிலனை இழுத்துவிட்டான்.

'இவன் நோண்டாம இருக்க மாட்டானே. ஆனா அவன் நமக்காகத்தான பேசுவான். பேசட்டும்'. கபிலன் மைண்ட் வாய்ஸில் தன்னைத்தானே சாமாதானம் செய்துகொண்டான்.

"ஓ அப்டியா"

நிலாவிற்கு பாதி விசயம் புரிந்தது. இருந்தும் வெளிக்காட்டாமலும், பேச்சை வளர்க்காமலும் இருந்தாள்.

"என்ன நிலா, இவனால எங்கபாடு திண்டாட்டம்னு சொல்றேன், என்னனு கேட்கமாட்டியா?"
அமுதன் நிலாவை விடுவதாயில்லை.

"உங்க ஃப்ரெண்ட்ஸ்குள்ள நீங்க என்னனாலும் பேசிப்பீங்கெ, செஞ்சுப்பீங்கெ. அத எப்டி நான் கேக்குறது?"
ஓரக்கண்ணால் கபிலனைப் பார்த்தபடியே அமுதனுக்கு பதில் சொன்னாள், நிலா.

"என்ன நிலா, எங்க ஃப்ரெண்ட்ஸ், உங்க ஃப்ரெண்ட்ஸனு பிரிச்சுப் பேசுற. நாமெலாம் எப்பவோ ஒரே டீம் ஆயாச்சு" மாறன் தன் பங்குக்கு கொளுத்திப்போட்டான்.

நிலா கபிலனைப் மீண்டும் ஓரக்கண்ணால் பார்த்தாள். கபிலன் அமுதனையும், மாறனையும், நிலாவையும் மாறி மாறிப்பார்த்தான்.

"சரி, சொல்லுங்க என்ன ஆச்சு". நிலாவுக்கும் ஒரு வருடம் கடந்தும் அதே மனநிலையில் கபிலன் இருக்கிறானா எனத்தெரிந்துகொள்ள ஆசை.

"என்ன தம்பி, சொல்லிறவா.." சைகையால் சிறியதாய்ச் சிரித்துக்கொண்டே கேட்டான், அமுதன்.

"எனக்காக செய்றேனு, மொத்தமா ஊத்தி மூடிறாதடா… பாத்து செய்டா". கபிலனும் மைண்ட்வாய்ஸோடு, அழுகாத குறையாக அமுதனுக்கு பதில் சொன்னான், சைகையில்.

இவர்களின் அசைவுகளை நிலா கண்டும் காணாததுபோல் மீண்டும் குமுதத்திற்குள் கண்ணைப் புதைத்தாள். ஆனால், மனம் கபிலனைப் பற்றி அமுதன் சொல்லப் போகும் விசயத்தை ஆவலோடு எதிர்நோக்கியிருந்தது.

"அத ஏன் கேக்குற, நிலா, இவன் லாஸ்ட் ஒன் இயரா, லாஸ்ட்"

நிலா 'டக்'கென்று நிமிர்ந்து அமுதனைப் பார்த்தாள்.

மாறனும், கபிலனும் அமுதனையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

"இல்ல நான் என்ன சொல்ல வந்தேன்னா, இவன் எதையோ, இல்லைனா யாரையோ நினைச்சு டெய்லி எங்கட்ட புலம்புறான்". ஒரு வருஷம் ஆகப்போகுது... இன்னும் கொஞ்சம்கூட குறைஞ்சபாடில்ல. ஆனா என்ன, யாரு..னு சொல்ல மாட்டேங்றான்"
அமுதன் ஒன்றும்தெரியாததுபோல, தெளிவாக நிலாவுக்கு விசயத்தைக் கடத்தினான்.

அமுதன் சொல்லிவிட்டு, அனைவரின் ரியாக்ஸனையும் பார்த்தான்.

கபிலன் உதட்டைப் பிதுக்கி, புருவத்தை உயர்த்தி ‘சூப்பர்’ என்பதுபோல் தலையசைத்தான். நிம்மதியில் பெருமூச்சுவிட்டான். மாறன் நக்கலாய்ச் சிரித்தான். நிலா உள்ளூர குதூகலித்தாள்.

“இப்ப அது யாரு… என்ன...னு நான் கேக்கனுமா, அமுதன்?”

“நீ கேட்டா ஒரு வேள சொன்னாலும் சொல்வான். என்ன தம்பி, சொல்வேல?”. அமுதன் நிலாவிடம் பதில் சொல்லிவிட்டு, கபிலனைப் பார்த்தான்.

“ஏண்டா… திரும்ப திரும்ப என்னையே...கோர்த்து விடுற. நீயா எதாவது சொல்றா”. கபிலன் மீண்டும் மைண்ட் வாய்ஸில் சொல்லிக்கொண்டே, இரண்டு உள்ளங்கைகளையும் மேல்நோக்கித் திருப்பி, கைவிரல்களை எல்லாம் விரித்துக் காட்டினான்.

“உங்கட்டயே சொல்லாதப்போ ஏண்ட எப்டி சொல்வாங்க”. நிலாவிடம் ஆர்வமும், கேள்வியும் சேர்ந்து வந்தது.

“என்னடா, ‘உன்னையதான் நினைச்சு ஒரு வருஷமா புலம்பிட்டிருக்கேன்’னு நீயே நிலாட்ட சொல்றியா, இல்ல நான் சொல்லவா”. பட்டென போட்டு உடைத்தான் அமுதன்.

படாரென கையிலிருந்த குமுதத்தை கீழே வைத்துவிட்டு தடதடவென மீண்டும் சமையலறைக்குள் அவசரமாய் ஓடினாள், நிலா. அந்த அவசரத்திலும் கபிலனை ஒருமுறை கண்பார்த்துப் புன்னகைக்கத் தவறவில்லை.

“என்னடா பட்டுனு சொல்ட”. கபிலன் திகைப்பிலிருந்து மீளாமல் இருக்கையில், மாறன் அமுதனைப் பார்த்துக்கேட்டான்.

நிலா விட்டுச்சென்ற குமுதத்தை கையில் எடுத்துக்கொண்டு சோஃபாவில் அமர்ந்த அமுதன், “டே… லவ் ஸ்டோரினா இந்த குமுதத்துல வர்ற ஒருபக்க கதை மாதிரி இருக்கனும். கதைல ட்விஸ்ட் இருக்கலாம் ஆனா, முடிவு உடனே தெரிஞ்சிரனும். அதவிட்டுட்டு, இவரு ல்வ்வ சொல்லிட்டு, மூனு வருஷம் கழிச்சு வர்றேனு சொல்லி, அதுக்கு அவ பாக்கலாம்னு சொல்வாளாம். அப்புறம் போம்போதும், வரும்போதும், இவன் பாப்பானாம், அவ கீழ குனிஞ்சிட்டே போவாளாம். அத நினைச்சி இவன் நைட்பூராம் கவிதை எழுதி அடுத்த நாள் நம்மட்ட காமிச்சு நம்மள கொண்டெடுப்பானாம். எத்த்த்தனை நாளைக்கி இதயே பாத்துட்ருக்கது. அதான் எப்படா ரெண்டு பேரும் ஒன்னா மாட்டுவாங்கென்னு பாத்தேன். செஞ்சுட்டேன்”

மாறனுக்குப் பதில் சொல்லிச் சிரித்த அமுதன், கபிலனைப் பார்த்தான். கபிலன் மெய்மறந்து நின்றுகொண்டிருந்தான். அவன் கண் முழுதும் சமயலறைக்குள் சென்ற நிலாவையே தேடிக்கொண்டிருந்தது.
.
சோழநாடு. கடம்பூர் அரண்மனை.

கடம்பூர் இளவரசன் கந்தமாறன், தன் நண்பர்களான வல்லவன் வந்தியத்தேவனையும், சேந்தன்அமுதனையும், தன் சகோதரி இளவரசி மணிமேகலையின்மூலம் வல்லவனுக்காக குந்தவையையும், அன்றைய தீபத்திருநாள் விருந்திற்காக அரண்மனைக்கு அழைத்திருந்தான். மதியஉணவு தயாராகிக்கொண்டிருந்த இடைவெளியில், அந்தப்புரம் நுழைந்தனர் நண்பர்கள் மூவரும். குந்தவையின் காதல்மொழி கேட்க ஒரு வருடமாய்த் தவமிருந்துகொண்டிருந்தான் வல்லவன்.
மறுமொழிகேட்க வருடம்பல காத்திருக்கவும் சம்மதமெனச் சொல்லிவிட்டாலும், வரும்போகும் கணங்களெல்லாம் வாட்டிகொண்டிருந்தன வல்லவனை, குந்தவையின் நினைவால்!.


நண்பனின் மனக்குறையறிந்த சேந்தன்அமுதன் சமயம்பார்த்து அன்று குந்தவையிடம் வல்லவன் மனக்காதல்மயக்கத்தை வெளிப்படுத்திவிட்டான். வெட்கிப்போன குந்தவை, வல்லவன் கண்பார்ர்க்க நாணிப்போய், அந்தப்புர நந்தவனத்திற்குள் சென்றுவிட்டாள். காதல் மயக்கத்திலிருந்த வல்லவன், அன்று முதல்முறையாய் மனத்துணிவுடன் குந்தவையைத் தொடர்ந்து சென்றான். நண்பனின் மனமறிந்து கந்தமாறனும், சேந்தன்அமுதனும் மறுபக்கமாய் கடந்துசென்று அங்கு நடப்பதைக் கவனிக்க ஆயத்தமாயினர்.

நந்தவனத்தில் மலர்ச்செடிகளோடு குந்தவையும் பூத்துநின்றாள். வல்லவன் கனிந்திருந்தான். மனம் கவிபாடியது.

எதிர்நோக்கி சென்றேன்.
மின்னலிடும் நேரத்தில்
மின்சாரம் பாய்ந்ததுபோல்,
என்கால்கள் நடுங்கின!
உடலைவிட்டுப் பெயர்ந்து
தன்உரிய இடம் சேர்ந்திடவே
துடித்த இதயமும்
தாவித்தாவித் தவித்துப்போனது!,
எதிரே நின்ற
என் கன்னியினால்!


அவள்
சிரம் தாழ்த்தித்கொண்டாள் -
நான்
சிந்தை இழக்கக்கூடாதென்று!
புவியில் ஊரித்திரிவன
புண்ணியம் செய்தவை!?
ஆம்,
அவைகள்தானே
அதிகமாய்க் காண்கின்றன,
அழகி உன்முகத்தை!


இன்று,
தனிந்திருந்த தனலை
தகிக்கவிட்டு,
தள்ளி நின்று குளிர்காய்கிறாய்!?
என்று,
என்செவி குளிர
உன் செங்கனிவாய்
திறக்கப்போகிறாய்?
.


நாகர்கோவில் மாறன்-மேகலை வீடு

“இவன் தொடர்கதை நாயகந்தாண்டா. அவளும் சொல்லமாட்டா. இவனும் கேட்க மாட்டான். நாம கேக்குறதையும் முழுசா செய்ய விடமாட்டான். இன்னும் எத்தனை வருஷத்துக்குத்தான் நம்மள கவிதை சொல்லியே காலிபண்ணப்போறானோ” அமுதன் தலையிலடித்துகொண்டான். மாறனும், அமுதனும் பலமாகச் சிரித்தனர்.

அவ்வளவு நேரம்பேசியும் அமுதன் சொன்னதற்கு செவிசாய்க்காமல், நிலா சென்றபாதையில் கண்வைத்திருந்த கபிலன், அவர்கள் சிரித்தவுடன், அவர்களைப் பார்த்துச் சொன்னான்,

“சுப்பர்றா, அமுதா. சரியா போட்டுவிட்ட. எனக்கென்னமோ நியூ இயர்க்குள்ள நிலா எண்ட ல்வ அக்செப்ட் பண்றேனு சொல்லுவானு நினைக்கிறேன்”

“நடந்தா நீ மட்டுமில்ல நாங்களும் தப்பிச்சோம்”. மாறன் சட்டெனெ பதில் சொன்னான், அதே சிரிப்புடன்.

அங்கே சமையலறையில் எள்ளும், கடுகும் தாளித்தனர். நடப்பதை கவனித்துக்கொண்டிருந்த மேகலை பொரிந்துகொண்டிருந்தாள்.
.
நாம் கபிலனைத் தொடர்வோம்-15
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 16



மேகா வீட்டில் தீபாவளி மதிய உணவை மேகாவின் அம்மா பரிமாற நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். சாப்பிடும் நேரம் முழுதும் நிலா எப்போதும் இல்லாதவழக்கமாய் அளவுக்கு அதிகமாகவே கபிலனைப் பார்ப்பதும், அவன் அவளைப் பார்க்கும்போது பார்வையை மாற்றுவதுமாய் இருந்தாள். மாறனும், அமுதனும் மாற்றி மாற்றி கபிலனையும், நிலாவையும் பார்த்து நக்கலாய்ச் சிரித்துக்கொண்டே இருந்தனர். இத்தனை பார்வை பரிமாற்றமும் அங்கே இருந்த மேகலையின் கண்ணைக் கவனிக்கத் தவறியது. மேகலை, நிலாவின் கபிலன் மீதான ஒவ்வொரு பார்வைக்கும் கனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தாள். நிலா கபிலனின் காதலை ஏற்கமாட்டாள் என நம்பிக்கொண்டிருந்தவள், அன்றைய நிலாவின் நடவடிக்கையால் நம்பிக்கையிழந்திருந்தாள். அது கோபமாக மாறியிருந்தது. இருந்தும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க விரும்பாமல், இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்து நிலாவை கவனிக்க முடிவுசெய்தாள், மேகலை.

.

அந்த தீபாவளியிலிருந்து நாட்கள் ரம்மியாமாய்க் கடப்பதுபோலிருந்தது கபிலனுக்கு. அதன்பின் ஒவ்வொரு முறையும் நிலாவை அவன் கடந்து செல்லும் தருணங்களில் அவள் உதட்டில் மலர்ந்த மெல்லிய புன்னகையும், கவிழ்ந்த பார்வையில் சிறியதாய்க் கனிந்திருந்த காதலையொத்த கண்சிமிட்டலும் கபிலனைப் பரவசப்படுத்தின. என்று கனியும் எனக்காத்திருந்தவனுக்கு, பழம் நழுவிப்பாலில் விழும் நாளையெண்ணி ஏக்கமாயிற்று.

.

2006 புத்தாண்டு நள்ளிரவு



காலனி முழுதும் சுற்றித்திரிந்து காண்போருக்கெல்லாம் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட கபிலன், நண்பர்களுடன் சேர்ந்து பிள்ளையார் கோவிலுக்குச் சென்றான். அங்கே நிலா வருவாள் என்ற நம்பிக்கையுடன்.

கோவிலில் பிள்ளையாருக்கு மலரினாலும், பட்டாடையாலும் சிறப்பான அலங்காரம் செய்திருந்தனர். காலனி மக்கள் குடும்பமாகவும், நண்பர்கள் கூடியும் கோவிலுக்கு வந்து சென்றுகொண்டிருந்தனர். கபிலன் சாமி கும்பிட்டுவிட்டு கோவில் படிக்கட்டில் நண்பர்கள் அமுதன் மற்றும் மாறனுடன் நிலைகொள்ளாமல் அமர்ந்திருந்தான். பணிரெண்டு மணி கடந்து அரைமணி நேரம் ஆகியும் நிலாவைக் காணவில்லை.



"மாறா, மேகா எங்கடா போனா? இந்த நந்துவையும் காணோம்.. நியூ இயரும் அதுவுமா எங்கடா போச்சுங்க"



"டே.. நீ என் தங்கச்சிய தேடுறியா, இல்ல நிலா எங்க இருக்கானு தெரிஞ்சுக்க கேக்குறியா?" மாறன் கொக்கி போட்நள்ளிரவு





"உனக்கு தெரிஞ்சுக்கிட்டே ஏண்டா கேக்குற!" கபிலன் சலித்துக்கொண்டான்.



"வருவாங்கெடா.. எங்க போகப்போறாங்கெ. அப்டியே வந்தாலும் இத்தனைநாள் செய்யாதத எதும் செய்யப்போறியா… இதுக்கெதுக்கு இவ்ளோ அலம்பல். வீட்டுக்குப்போனா சீக்கிரம் தூங்கவாவது செய்யலாம்", அமுதன் கபிலனைக் குடைந்தான்.



"டேய் இருங்கடா.. பாத்த உடனே போயிடலாம். ப்ளீஸ்."



"சரி.. புத்தாண்டு ஆரம்பமே அமர்க்களமா இருக்கு. இருக்கமாட்டோம்னு சொன்னா விடவா போற.. பாத்துட்டே போவோம்", சொல்லிய அமுதன் மாறனைப் பார்த்து, " வேற வழி…" என்பதுபோல் சைகை செய்தான்.



மேலும் ஒரு மணிநேரம் கடந்தது. நிலாவும் மற்ற தோழிகளும் வரவில்லை. கோவிலில் இருந்த கடைசி சிலரும் சென்றிருந்தனர். பூசாரி கோவிலை மூட ஆயத்தமானார்.



கபிலன் மனம் தொய்வடைந்தது. தீபாவளிநாள் முதல் நிலாவின் செயலில் இருந்த மாற்றத்தைப் பார்த்து, மூன்று வருடம் காத்திருக்க அவசியம் இருக்காது என நம்பியிருந்தான். ஆனால் புத்தாண்டு விடியும்முன்னரே அவன் நம்பிக்கை தகர்ந்திருந்தது.



"என்னடா .. இப்பவாவது போலாமா", அமுதன் கேட்டதற்கு அமைதியாய் தலையாட்டிவிட்டு எழுந்து கோவில் வாசலுக்குச் சென்றான், கபிலன்.



"டேய்.. அவன் ரொம்ப அப்செட்டா இருக்கான். இப்ப ரொம்ப ஓட்டாத அவன" மாறன், அமுதனிடம் கேட்டுக்கொண்டான்.



கபிலன் பின்னால் இருவரும் நடந்தனர். கபிலன் அருகே சென்று அமுதன் அவனைத் தேற்ற முயன்றான்.



"சரி வாடா.. இப்ப ஒன்னும் பெருசா விட்டுப்போகல. நிலா வந்திருந்தா, மேக்ஸிமம் உன்னை பார்த்து சிரிச்சிரிப்பா. இல்ல நீதான் என்ன செஞ்சிருப்ப?, ஒரு 'ஹேப்பி நியூ இயர்' சொல்லிருப்ப, அவளும் 'ஸேம் டு யூ' ன்றுப்பா. இத நாளைக்கி காலைல பார்த்தே சொல்லிக்கலாம். இதுக்குலாம் பீலாகாத, தம்பி". அடக்கி வாசிக்க நினைத்தாலும் அமுதனின் நக்கல் குறையவில்லை.



"நீ சொல்றதென்னமோ கரெக்டா". கபிலன் ஆமோதித்தான்.



"சரிவாங்கடா, நம்ம டீ கடைக்குப்போய் நியூ இயர் டீ போடலாம்"



மாறன் சொல்ல கபிலனும், அமுதனும் உடனே சரியென்றனர். கடைக்குச் செல்லும் வழியில் அந்த நள்ளிரவிலும் அவன் கண்கள் நிலாவைத் தேடியது. அவளைக் காணாமல் சோர்ந்து போனான் கபிலன்.



கல்லூரி டீக்கடை சென்று சேர்ந்தனர் மூவரும். உத்வேகமில்லாமல், டீக்கடையின் கடைசி பெஞ்சில் போய் அமர்ந்தான், கபிலன். அமுதன் அவனருகில் அமர்ந்தான். மாறன் மூவருக்கும் டீ ஆர்டர் பண்ணப்போனான்.

கபிலன் தன் இடதுகையை டேபிளில் மடக்கி, தன் முகத்தை அந்தக்கைமேல் வைத்து ஒரு மூளையை வெறித்தபடி இருந்தான்.



சிறிது நேரத்தில் டீ ஆர்டர் செய்யப்போன மாறன் திரும்பி வந்தான்.



அமுதனைப் பார்த்து கண்சிமிட்டிவிட்டு, மூளையை வெறித்தபடி இருந்த கபிலனைப் பார்த்து, "டீ மட்டும்போதுமா, இல்ல நியூ இயர் ஸ்பெஷலா வேறெதும் வேணுமாடா"



"ப்ச்.." என்ற கபிலன் பெரிதாய் பதில் சொல்லவில்லை.



மாறன் அவனுடைய கையை முதுகுக்குப்பின்னால் கட்டியிருந்ததை, அமுதன் கவனித்தான்.



"என்னடா அது" அமுதன் மாறனிடம் சைகை செய்தான்.



"கொஞ்சம் வெய்ட்", மாறன் கண்ணாலயே பதில் சொன்னான்.



"சரிடா, நான் அப்போ நிலாட்ட போய், கபிலனுக்கு உன்ட பேச இஸ்டமில்லையாம்னு சொல்லிரவா", மாறன் சத்தமாக கபிலனிடம் சொல்ல.. தடாலென எழுந்தான் கபிலன்.



"ஏய்.. விளாடாதடா. என்னடா அது கையில"



கபிலன் மாறனிடம் சொல்லிக்கொண்டே, அவன் பின்னால் கட்டியிருந்த கையை இழுத்தான். மாறன் கையில் ஒரு கவர்.



பரபரப்புடன் அதை வாங்கி உள்ளே திறந்தான், கபிலன். அமுதனும் ஆர்வமுடன் பார்த்தான். மாறன் கபிலனைப் பார்த்து மகிழ்ச்சியாக சிரித்தான்.



கபிலன் திறந்த கவரில் ஒரு நியூ இயர் க்ரீட்டிங் கார்ட் இருந்தது. திறந்தான். உள்ளே…



"மூன்று வருடம் காத்திருப்பதாய்ச் சொல்லியது ஏன்? என்னால் இனி மூன்று நாட்கள்கூட காத்திருக்க முடியாது. நாளையே சந்திக்கலாமா?"



இனி உன்-நிலா நான்!?.



"யாஹுஉஉஉஊஊ" க்ரீட்டிங் கார்டைப் வாசித்தவுடன், பெருமகிழ்ச்சியில், உச்சஸ்தாதியில் கத்திக்கொண்டே, குதித்து டேபிளின்மேல் அமர்ந்தான், கபிலன்.



டீ கடைக்காரர் உட்பட அந்த நள்ளிரவு கடையிலிருந்த எல்லோர் கண்ணும் கபிலன்மேல் இருந்தது.



"தம்பி... நல்ல நியூஸ். அதுக்காக டீ கடைகாரர்க்கெல்லாம் புதுடேபிள் வாங்கிக்கொடுக்க முடியாது. கீழ இறங்குறியா?" அமுதன் கபிலனை நிதானப்படுத்த முயன்றான்.



"ஓ.. சாரி.. சாரி.. சாரிடா" அமுதன், மாறனைப் பார்த்துச் சொன்ன, கபிலன் டேபிளிலிருந்து இறங்கி வேகமாக டீக்கடையைவிட்டு வெளியில் ஓடினான்.



"சாரின்னே" போகிறவேகத்தில் டீ கடைக்கரரிடம் மன்னிப்புகேட்டான்.



"யே…. ஹேப்பி நியூ இயர்ர்ர்ர்ர்ர்ர்ர்" டீ கடைக்குவெளியில்போனவன் நடுரோட்டில் நின்று இரண்டு கைகளையும் உயர்த்தி அந்தக் காலனி முழுதும் எதிரொலிக்கும் அளவுக்குக் கத்தினான்.



'சர்'ரென வெளியூர் செல்லும் கார் ஒன்று கபிலனைவிலக்கிச் சென்றது.



"ஏலே...அவனப் புடுறா. அந்த க்ரீட்டிங் கார்ட்லயே அவளுக்கு கருமாதி லெட்டர் அனுப்புற மாதிரி ஆகப்போகுது" அமுதன் மாறனிடம் சொன்னான்.



"விடுறா.. பன்னெண்டு மாசமா இதுக்குத்தான தவியா தவிச்சான். கொஞ்ச நேரம் ஆடட்டும்", மாறன் கபிலனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னான்.



"அண்ணே, இன்னைக்கு நைட் புல்லா கடை இருக்கும்ல?. எப்டியும் நாங்க தூங்க மாட்டோம். டீ எக்ஸ்ட்ரா போடுங்க", அமுதன் கடைக்காரரிடம் முதல் டீ குடிக்குமுன்பே அடுத்த செட் டீ ஆர்டர் செய்தான்.



சிறிது நேரத்தில் திரும்பிவந்த கபிலன், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி, "டே.. வாங்கடா.. டீ சாப்டலாம்" என வெளியில் வந்து நின்ற அமுதனையும், மாறனையும் உள்ளே வரச்சொல்லிவிட்டு கடைக்குள் சென்றான்.



இருவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே மீண்டும் கடைக்குள் சென்றனர்.



"யார்றா க்ரீட்டிங் கார்ட் குடுத்தா?"



"நாம எப்டியும் இங்க வருவோம்னு தெரிஞ்சுக்கிட்டு, ஈவ்னிங்கே இங்கவந்து கடைக்காரர்ட குடுத்து குடுக்க சொல்லிருக்கா, நிலா"



"இது சர்ப்ரைஸா இருக்கட்டும்னுதான் அவ நாம கோவில்ல இருக்கும்போது வேணும்னே வரலனு நினைக்கிறேன்"



"ம்ம்.. இருக்கலாம்.."



மூவரும் டீயைக் குடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தனர். அப்படியே பேச்சு கடந்த ஒருவருடமாய் நடந்ததை அசைபோட்டது.



புத்தாண்டு விடிந்தது.

.

நாம் கபிலனைத் தொடர்வோம்-16
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 17

புத்தாண்டிற்கு மறுநாள். வெண்ணிலாவின் தோழியின் வீட்டில் நிலாவைச் சந்திப்பதற்காகச் சென்றுகொண்டிருந்தான் கபிலன். அந்த காலனியில் காலை வெளிச்சத்தில் தன்னை யாரும் பார்க்கிறார்களா என அவ்வப்போது போவோர் வருவோரைக் கவனமாய்க் கண்காணித்துகொண்டே சென்றான்.



நிலாவின் தோழியின் வீட்டை நெருங்க நெருங்க கபிலனுக்கு இதயத்துடிப்பு எகிறியது. கை, கால்களில் மின்சாரம் பாய்வதுபோல் ஒரு உணர்வு. ‘இன்றைக்கு எப்படி இருப்பாள், என்ன சொல்லப்போகிறாள். நான் என்ன செய்யவேண்டும்’, என கபிலன் மனம் தவித்தது. தோழியின் வீட்டை அடைந்தான்.



வாசல் கதவில் இருந்த ‘காலிங் பெல்’லை அழுத்தினான், கபிலன். வீட்டு வாசலை ஆவலுடன் பார்த்தான். அங்கே நிலா இல்லை. அவளின் தோழி எட்டிப்பார்த்தாள்.



“உள்ள வாங்க, கபிலன்”



“ம்ம்”



சிறிது தயக்கத்துடன் தோழியின் வீட்டிற்குள் நுழைந்தான். கபிலன் வீட்டினுள் சுற்றி பார்வையைச் செலுத்தினான். வீட்டினுள் நிலாவின் தோழியைத்தவிர எவரும் இல்லை.



“உட்காருங்க கபிலன். நிலா இப்ப வந்திருவா”



“தேங்ஸ். வீட்டுல அப்பா, அம்மா இல்லையா?”



“ஊருக்குப்போயிருக்காங்க ரெண்டுநாள் ஆகும் வர”



“ஓ, சரி”



கபிலனுக்கு ஒருவகையில் நிம்மதி. நிலாவிடம் வேண்டுமளவு பேச நேரமிருக்கும் என நினைத்துக்கொண்டான்.



“நான் இப்ப வந்திர்றேன்”



கபிலனிடம் சொல்லிவிட்டு நிலாவின் தோழி வீட்டினுள் சென்றாள். கபிலன் அருகிலிருந்த ‘ஆனந்த விகடன்’ புத்தகத்தை எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தான். கண்கள் வாசித்தது. அவன் மனத்தில் ஒன்றும் பதியவில்லை. மனம் முழுதும் நிலா நிறைந்திருந்தாள்.



சில நிமிடங்கள் கரைந்தது. நிலா உள்ளே வந்தாள். அவனுக்கு அருகிலிருந்த சேரில் அமர்ந்தாள்.



புத்தகத்தில் கண்ணை வைத்திருந்த கபிலன் நிமிர்ந்து பார்த்தான். அவள் தலையைக் கவிழ்த்துகொண்டாள். அவள் உதட்டில் புன்னகை தவழ்ந்தது. கபிலன் பூரித்தான்.



“ஒன் இயர்ல, நீ இப்டி என் பக்கத்துல வந்து தனியா பேசுறதுக்காக உட்காந்திருப்பனு நான் நெனச்சுக்கூட பாக்கல, நிலா!”



“நானும் நீங்க ஒன் இயருக்கு எண்ட பேசாம இருப்பீங்கன்னு நினைக்கவே இல்ல. மூனு வருசத்துக்கு வந்து பேசமாட்டேன்னு சொன்னப்போ, நான் அப்டிலாம் எப்டி இருக்கமுடியும்னு நினச்சேன். ஆனா நீங்க இருந்து காண்பிச்சுட்டீங்க. அப்போ நீங்க சொன்னது எல்லாம் நல்லா யோசிச்சுதான் சொல்லிருப்பீங்கனு நம்பிக்கை வந்துச்சு. அதான்…”. நிலா கன்னம் சிவந்தாள்.



“அதான்?, கபிலன் குறும்பாகச் சிரித்தான்.



“அதான் சொன்னனே…”



“என்ன சொன்ன?” குறும்புப் புன்னகையும் பார்வையும் கலக்கக் கேட்டான்.



“க்ரீட்டிங் கார்ட்ல”



“க்ரீட்டிங் கார்ட்ல என்ன, ‘நாளைக்குப் பாக்கலாமா’னு இருந்துச்சு. வேற ஒன்னும் சொல்லவேயில்லையே?!.



“நீங்க வேணும்னே தெரியாத மாதிரி கேக்குறீங்கெ”, நிலா அதிகமாய் வெட்கப்பட்டாள்.



“ஏன், நான் உண்ட ஃபர்ஸ்ட் டே சொல்லலையா. ஒன் இயர் வெயிட்பண்ணி இப்பதான நீ பேசுற. சொல்லேன்..”



நான் என்ன நினைகிறேன்னு சொல்லிட்டனே. “இனி உன்-நிலா நான்!?”னு



“இன்னமும் கேள்வியாதான் இருக்கா?”



“ஸ்ஸ்ஸ்… ஷப்பா... வடிவேலு பரவாயில்ல இதுக்கு”, நிலா கபிலனை வாரினாள்.



“அப்ப நீ சொல்லமாட்ட”, கபிலன் விடவில்லை.



“அய்யோ சாமி. உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ எதையும் நல்லா யோசிச்சு செய்றவன். நீ என்ன விட்டுக்குடுக்க மாட்டனு நம்புறேன். அதனால, ஐ.. லவ்.. யூ.., போதுமா”?, நிலா படபடவெனக் மனதைத் திறந்து கொட்டினாள்.



“என்னடி கேப்ல, ‘நீ’, ‘உன்ன..’ன்ற”



“என்ன...டி” யா?



“ஆமா.. நீ ‘டா’ன்னா நான் ‘டி’னுதான் சொல்வேன்”



“அப்ப சரிடா..”, சொல்லிவிட்டு வெட்கச்சிரிப்புச் சிரித்தாள், நிலா. கபிலன் மனம் காதலால் பொங்கியது.



“ஹ்ம்ம்… எப்படா பேசுவானு ஒரு வருஷமா உக்காந்திருந்தீங்கல்ல… இனிமே எப்படா வாய மூடுவானு யோசிப்பீங்க”. வீட்டினுள் இருந்து இரண்டு கிளாஸ் லைம் ஜூஸுடன் வந்த நிலாவின் தோழி, கபிலன்-நிலா பேச்சை இடைமறித்தாள்.



“பேசட்டும் ஒரு வருஷமா கேக்கனும் இருந்ததெல்லாம், இன்னைக்கே கேக்குறேன்”, கபிலன் சொல்லில், நிலாவின் மேலிருந்த ஆசையும், காதலும் தெரிந்தது.



“யே… ஜூஸ் குடுத்துட்டேலடி. நீ உள்ள போ”



“ம்ம்.. சரிங்க மேடம். கபிலன் சாரிங்க. உங்க நெலமய நெனச்சாதான்.. ஹ்ஹ்ம்ம்”,

சிரித்துக்கொண்டே நிலா-கபிலனுக்குப் பதில் சொல்லிவிட்டு ரூமிற்குள் திரும்பச்சென்றாள், நிலாவின் தோழி.



“என்ன நீ, இப்டி வெரட்டுற உன் ஃப்ரெண்ட. பாவம் நமக்கு எவ்ளோ ஹெல்ப் பன்றாங்க”



“அவ ஒன்னும் நினைக்க மாட்ட, நாங்க ரெண்டுபேரும் அப்டிதான் பேசிப்போம்… என்ன நீ கேப்ல அவளுக்கு லைன் அடிக்கிறியா”, கபிலனிடம் கொஞ்சம் சீரியஸாகச் சொன்னாள் நிலா.



“அடிப்பாவி.. நீ வாயாடினு தெரியும்… இவ்வ்வ்ளோ… வாயாடினு தெரியாமப் போச்சு”



“இப்ப தெரிஞ்சுக்கிட்டேல. இனிமே என்னத்தவிர எவட்டயாவது கொஞ்சிட்டிருந்த, மவனே அவ்ளோதான்”. சின்ன சிரிப்புடன் சொன்ன நிலாவின் குரலில் அவளின் பொஸஷிவ்னெஸ் தூக்கலாய்த் தெரிந்தது.



“ம்ம்… சூப்பர்...நல்லா பேசுற”.. கபிலன் அவளின் காதலால் மகிழ்ந்தாலும், நிலாவின் பொஸஷிவ்னெஸயும், அதில் தெறித்த பிடிவாதத்தையும் பார்த்து சிறிதாய் சஞ்சலப்பட்டான்.



“சரி.. நீ கவிதையெல்லாம் நல்லா எழுதுவியாமே. என்னய பத்திலாம் எழுதிருக்கியா?. ஒரு கவிதை சொல்லேன் கேக்குறேன்.”



“அதன்ன கதையா… கவிதை.. ஃபீல் பண்ணி வரனும். இப்டி இன்ஸ்டெண்ட் காஃபி மாதிரி வராது.”



“சும்மா பந்தா பண்ணாத.. ஆசையாதான் கேக்குறேன். என்னைய பார்த்து ஃபீல் பண்ணியே சொல்லு. கொஞ்லாய்க் கேட்ட நிலாவைப் பார்த்துச் சொக்கிப்போனான் கபிலன்.



நிலாவின் கண்களையே நிலையாகப் பார்த்தான். கபிலனின் காதல் பார்வையில் அவள் நிலைகொள்ளாமல் தவித்தாள்.



“அற்புதமானவளை

அருகில் கண்டேன்!

ஈராறு மாதங்கள்

இமைக்கொட்டாது

இளைத்திருந்ததற்கு,

இமைப்பொழுதில் இன்பம் கிட்டியது-

இன்பவல்லி, அவளின்

வார்த்தைகண்டு!

எங்ஙனமோ இந்த ஆண்டு?

என்றே நான் ஐயுற்றிருக்க,

அங்ஙனமே அவள்தோன்றி

அழகாகப்பொழிந்து சென்றாள்,

‘இனி நான் உன்-நிலா’என்று!.

இனி எப்போதும்,

ஆனந்தமே என்-நிலா!




கவிதை சொன்ன கபிலனும், அதைக்கிரகித்த நிலாவும் மௌனமாய்க் கரைந்துகொண்டிருந்தனர் ஒருவர் மற்றொருவருக்குள். அவர்களின் கண்களில் காதல் கரைபுரண்டு ஓடியது. உதடுகள் ஏனோ துடித்தன. பல வினாடிகள் அந்த காதல்மௌனத்தில் இறந்துகொண்டிருந்தன. கபிலனின் வலதுகையும், நிலாவின் இடதுகையும் ஒன்றையொன்று நெருங்கின.



“ம்க்க்கும்ம்ம்…”



நிலாவின் தோழி மீண்டும் ஹாலுக்குள் வந்தாள். சடாரென இருவர் கையும் பின்வாங்கியது. இருவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர்.



“சாரி டி. ஒரு சூப்பர் ரொமாண்டிக் ஸீன கெடுத்துட்டனோ”



நமட்டுச் சிரிப்புச் சிரித்தபடி அருகில் வந்து ஜூஸ் கிளாஸை எடுத்துச்சென்றாள்.

நிலா அவளை செல்லமாய் முறைத்தாள். கபிலன் சற்று நெளிந்தான்.



“கவிதை சூப்பர் கபிலா”



“உன்னைய நினச்சா அப்டியே கொட்டுது”



“சரி.. சரி.. நம்புறேன். இதென்ன பச்சை, மஞ்சள்னு கலர் கலரா சர்ட் போட்டுட்டு அலையுற. அழகா மைல்ட் கலர், டார்க் கலர்ஸ் சர்ட் போடமாட்டியா உனக்கு நல்லா இருக்கும்”



“ம்ம்.. அப்புறம்?!”



“அப்புறம்ம்ம்… இந்த கையில என்ன செகப்புக்கயிறு, ரவுடி மாதிரி. கழட்டு”



“ஹ்ம்ம்.. நீயே கழட்டி எடு”, கபிலன் நிலாவைப் பார்த்து குறும்பாய்ச் சிரித்தான்.



“ம்ம்… அப்டியா..கழட்டிட்டாபோச்சு”



நிலா சிரத்தையாக அங்கே டேபிளில் இருந்த சிறிய கத்தியை எடுத்து, கவனமாய் கபிலன் கையைத் தொடாமல், அவன் வலதுகை மணிக்கட்டில் இருந்த கயிறை மேலே தூக்கி அறுத்தாள்.



நிலா அவன் கையில் கட்டிய கயிறை முழுதுமாய் கழட்டி அருலிருந்த குப்பைக்கூடையில் போட்டாள். தான் மறைத்துக் கொண்டுவந்த வெள்ளிக்காப்பினை அதே கையில் மாட்டிவிட்டாள். கபிலன் கண்களைப் பார்த்து, “எப்டி இருக்கு” எனக்கேட்பதுபோல் தன் அழகிய புருவங்களை உயர்த்திப் புன்னகைத்தாள். கபிலனும் இடதுகையால் அந்த வெள்ளிக்காப்பினைப் பிடித்துத்திருகி, வலதுகையை முறுக்கி ஏற்றிவிட்டு, “ம்ம்ம், சூப்பர்” என்பதுபோல் தன் புருவத்தை உயர்த்தி நிலாவைப் பார்த்தான்.



அவள் தன்னை ஒவ்வொரு அங்குலமாய் கவனிப்பதில் சிலாகித்த கபிலன். நிலா தீவிரமாய் அவளுடைய ஆசையைத் தன்னுள் திணிப்பதைக் கவனித்தான்.



“வேறெதும் செக் லிஸ்ட் இருக்கா, மேடம்!”



“அவ்ளோதான், சார்!. ஆசையா நான் செய்றதெல்லாம், உனக்கு லிஸ்ட்போட்டு செக் பண்ற மாதிரி இருக்கா?. இதுக்கு நான் உனக்கு கிஃப்ட் பண்ணாமயே இருந்திருக்கலாம்”. நிலா சிணுங்கினாள்.



“நீ ஆசையா செய்றேனுதான், சொல்றதெல்லாம் கேட்டுட்டு இருக்கேன். இருந்தாலும் முதல் நாளே இவ்ளோ சேஞ் சொல்றியே, இனியும் போகப்போக என்னென்னலாம் சொல்வியோனு யோசிக்கிறேன்”



“பிடிக்கலேனா சொல்லதான் செய்வேன்”



“எனக்கும் நீ சொல்றது பிடிக்கலேனா, நீ சொல்றேன்றதுக்காகல்லாம் செய்யமாட்டேன்”



“ம்ம்ம்.. பாக்கலாம்.”



“சரி.. ஒரு வருஷம் கழிச்சு இன்னைக்குதான் என் கண்ணப்பாத்து பேசிருக்க. இன்னைக்கே சண்டை போடவேண்டாம். கொஞ்ச நாள் கழிச்சுப் போடலாம்.”



கபிலன் சொன்னதைக்கேட்டு நிலா அமைதியானாள். சில வினாடிகள் மௌனமாய் இருந்தாள்.



“நீ எவ்ளோ கஷ்டப்பட்டு, நான் பேசுவேன்னு ஒரு வருஷமா வெயிட் பண்ணிட்டிருந்தப்பனு எனக்குப் புரியுது, கபிலா. நான்லாம் உன்ன மாதிரி பேசாம இருந்திருக்க முடியாது. அதுனால சண்டைலாம் போடமாட்டேன் உண்ட. ஆனா நீ செய்றது எதும் பிடிக்கலேனா, உடனே பிடிக்கலேனு சொல்லிடுவேன். நீ அத சண்டைபோடுறேனு நினக்காத”



“ம்ம்.. சரி”



முதல்நாள் சந்திப்பிலேயே தங்கள் மனம் திறந்து பேசி தங்களுக்குள் புரிதலை அதிகப்படித்தினர் கபிலனும், நிலாவும். அந்த நாள் முழுவதும் அவர்களின் அதிகப்படியான காதல் பகிர்தலில் மூழ்கித்திளைத்தனர். மாலையில் இருவரும் நிலாவின் தோழியின் வீட்டிலிருந்து வெளியே வந்தனர். அந்திசாயும் நீலக்கருவண்ணத்தில் அந்தக் காலனி ரம்மியமாய் காட்சி தந்தது. மக்கள் நடமாட்டம் குறைந்திருந்த அந்தத் தெருவில் இறங்கினர், கபிலனும் நிலாவும்.



“அப்புறம் எப்ப பாக்கலாம்”. நிலா ஆசையாக் கேட்டாள்.



“இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு”. கபிலன் சிரத்தையாக பதில் சொன்னான்.



“எவ்ளோ சீரியஸா கேக்குறேன். உனக்கு நக்கலா இருக்கா”



“இல்ல.. நானும் சீரியஷாதான் சொல்றேன். உண்ட முதல்நாள் லவ் ப்ரோபோஸ் பண்ணப்ப என்ன சொன்னனோ, அதயேதான் இப்பவும் சொல்றேன்”. கபிலன் புன்னகைத்தான்.



“சரி.. பாக்கலாம் என்ன பண்றேனு. இப்ப கிளம்புறேன், டா டா”. நிலா கையசைத்தபடி கிளம்பினாள்.



கபிலன் திரும்பிவர மனமின்றி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் தூரத்தில் புள்ளியாய் தேயும்வரை.

.



“என்னடா, தீபாவளில இருந்து ரொம்ப பிஸியாயிட்டபோல. நான் ஒருத்தி இருக்கேனு நெனப்பிருக்கா?”.



நிலா சென்றதைப் பார்த்துக்கொண்டிருந்த கபிலன் முன்பு திடுமென்று ஸ்கூட்டியில் வந்து நின்றாள், நந்தினி!. அவளுடன் மேகலையும் வந்திருந்தாள். சில நாட்கள் இடைவெளிவிட்டு அன்றுதான் கபிலனைப் பார்த்தாள், நந்தினி.



“ஏன் கேட்கமாட்ட. ஃபர்ஷ்டு, நீ நியூ இயர் அன்னைக்கு எங்கடிபோன? எண்ட சொல்லிட்டுபோனியா?”, நந்தினியிடம் பதிலுக்குக் கேட்டவன், நந்துவின் பின்னால் உட்கார்ந்திருந்த மேகலையைப் பார்த்துச் சம்பிரதாயமாகச் சிரித்தான்.



“உனக்குதான் தெரியும்லடா. பார்த்திபன்தான் சொல்லாம என்னைய கூட்டிட்டுப்போய்ட்டான்.



கபிலனுக்கு பார்த்திபன்மேல் இருந்த கோபக்கணல் அணையாமல் பார்த்துக்கொண்டாள், நந்தினி. மேகலை நிலா சென்ற திசையையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

.

நாம் கபிலனைத் தொடர்வோம்-17
 

Latest posts

New Threads

Top Bottom