Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
கொல்வதெல்லாம் உண்மை
அத்தியாயம் 25
அருண் அடித்து பிடித்து இரவு பணியில் இருந்த மருத்துவரை அழைத்து வந்த போது சோமசேகர் வினோத் படுத்திருந்த படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரது உடல் வலியால் துடித்து கொண்டிருந்தது. நிலமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட டாக்டர் உடனே அவசர பிரிவு நர்ஸ்களை வரவழைத்தார். "ஆமாம் இவர் ஏன் டாக்டர்களின் கோட்டை போட்டிருக்கிறார்?"
"அதை பிறகு சொல்கிறேன் டாக்டர் " என்றான் அருண்ICU வில் சோமசேகர் அனுமதிக்கப்பட்ட பின்பு வெளியே அருணும் வினோத்தும் நடந்து கொண்டிருந்தனர்.வினோக் இன்னும் மம்மி வேடத்திலிருந்து வெளியே வராமல் இருந்தான்.
"முதலில் அந்த பேண்டேஜ்களை கழற்றி எறி வினோத். உன்னை பார்த்தால் பிணவறையிலிருந்து எழுந்து வந்த பிணம் போல் இருக்கிறாய்"
"ஏன் பேச மாட்டீர்கள் ? அந்த நீதிபதி டாக்டர் என்று சொல்லி கொண்டு என் அறைக்குள் வரும் முன்பாகவே நீங்கள் அவரை பிடித்திருக்கலாம். நீங்கள் யாரோ ஒரு நர்சை சைட்டடிக்க போய் விட்டீர்கள் போலிருக்கிறது" என்றபடி பேண்டேஜ் துணிகளை கழற்றினான் வினோத்.
"அபாண்டமாக என் மீது பழிபோடாதே வினோத்.நம்பைக்கிற்கு தீ வைத்து என் கவனத்தை திசை திருப்பி விட்டார் சோமசேகர் "
"என்னது? என்னுடைய பைக் எரிந்து விட்டதா? இன்னும் தவணைத் தொகையை முழுதாக கட்டி முடிக்கவில்லையே பாஸ்?"
"அப்படியானால் இன்சூரன்ஸ் காலாவதியாகி இருக்காது. நாம் பணத்தை க்ளைம் பண்ணி கொள்ளலாம். இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது"
" ஆனால் ஒரு நீதிபதி கொலைகாரனாக இருப்பார் என்பதை நாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை தானே?"
"ஆமாம். நாம் அப்படி ஒரு கோணத்தில் யோசிக்கவே இல்லை." என்றான் அருண்.
வினோத்தின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து எதுவோ சத்தத்துடன் கீழே விழுந்தது.
"என்ன அது?"
"அது சோமசேகர் கொண்டு வந்த கத்தி. படுக்கையில் அவரை படுக்க வைக்கும் போது குத்தி கிழித்து விடக் கூடாது என்று எடுத்து என் பேண்ட் பாக்கெட்டில் போட்டு வைத்தேன்" என்ற வினோத் அந்த புதிய கத்தியை அருணிடம் கொடுத்தான்.
அதை தடவி பார்த்த அருண் " இந்த கத்தி ரொம்பவும் புதிதாக இருக்கிறது. அனேகமாக நேற்று தான் செய்திருப்பார் போலிருக்கிறது. நாளை காலை நீ சோமசேகரின் வீட்டிற்கு போகிறாய். அங்கே நமக்கு வேறு ஏதாவது ஆதாரம் கிடைக்கிறதா என்று தேடி பார்க்க வேண்டும்"
"அது தானே பார்த்தேன். என்னடா இன்னும் வேலை சொல்லவில்லையே என்று "
"கவலைப்படாதே! இந்த வழக்கில் இது தான் உனக்கு கடைசி வேலை"
அது சரி. இவர் ஏன் தேவராஜை கொலை செய்ததை ஒப்பு கொள்ள மறுக்கிறார்?"
"அதுதான் எனக்கும் புரியவில்லை. அவர் கொலை செய்யாவிட்டால் வேறு யார் செய்திருக்க முடியும்? வயதானதால் ஏற்பட்ட ஞாபக பிசகு என்று நான் நினைக்கிறேன்"
"இப்போது பிரான்சிஸ் அன்பரசு கொலைகாரன் யார் என்று கேட்டால் யாரை சொல்வீர்கள்?"
"இப்போதைக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்ய மாட்டேன் கொலைகாரனை சட்டத்திடம் தான் ஒப்படைப்பேன்."
வெளியே மெல்ல விடிந்து கொண்டிருந்தது.
ICU விலிருந்து வெளியே வந்த டாக்டர் கண்ணாடியை கழற்றியதும் வினோத் "ஆள் காலி போல " என்றான்.
"ஹீ இஸ்நோ மோர் .அவருடைய விதி முடிந்து விட்டது" என்றார் டாக்டர் .
"இட்ஸ் ஓகே டாக்டர் .போஸ்ட் மார்டம் பண்ணிட்டு பாடியை இங்கேயே வையுங்கள்" என்ற அருண் "வா ! அவருடைய வீட்டிற்கு போய் அமெரிக்கா மகளுக்கு தகவல் சொல்லலாம்" என்றான்.
" வீட்டு சாவி?" என்றான் வினோத்.
"டாக்டர் அவரிடம் சாவி எதாவது?"
"ஒரு கொத்து சாவி கிடைத்தது. இருங்கள் எடுத்து வருகிறேன்"
டாக்டர் கொடுத்த சாவியை வாங்கி கொண்டு இருவரும் ஒரு ஆட்டோவை பிடித்தனர்.
அருணுக்கு அவருடைய வீடு நன்றாக தெரியும் என்பதால் ஆட்டோவை விரட்டினான்.
ேசாமசேகர் வீட்டிற்கு முன்பாக நின்ற ஆட்டோவிற்கு பணம் கொடுத்து அனுப்பிய அருண் வீட்டை நெருங்கிய போது அவனது போன் அடித்தது.
"ஹலோ! அருண் ஸ்பீக்கிங் ."
"நான்பிரான்சிஸ் அன்பரசு பேசுகிறேன். கொலைகாரனை பிடித்து விட்டீர்களா?"
"அவசரப்படாதீர்கள். நான் ஒரு அவசர வேலையில் இருக்கிறேன். கிட்டத்தட்ட அவனை நெருங்கி விட்டேன். பிறகு அழைக்கிறேன்"
" உனது போனுக்காக காத்திருக்கிறேன்"
மறுமுனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அருண் வீட்டு கதவை திறந்தான். இருவரும் உள்ளே நுழைந்தனர். மேசையில் கிடந்த டைரியில் அவரது மகளின் அமெரிக்க தொலைபேசி எண்கள் கிடைத்தன.
அருண் அந்த எண்ணிற்கு அழைத்தான்.
"ஹலோ. யார் பேசுவது?" என்றது பெண் குரல்.
"நீங்கள் அனிதா தானே? சோமசேகரின் மகள்?"
"ஆமாம்"
"நான் எதிர் வீட்டிலிருந்து பேசுகிறேன். உங்கள் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. மயக்கமாகி கீழே விழுந்து விட்டார். உடனடியாக இங்கே கிளம்பி வர முடியுமா?"
"நோ பார்மாலிட்டிஸ், என்னிடம்பொய் சொல்லாதீர்கள். என்அப்பாவுக்கு என்னவானது?" அவளது தைரியம் அருணுக்கு பிடித்திருந்தது. அவன் உண்மையை உடைத்து சொல்லி விட முடிவெடுத்தான்.
"அவர் நேற்று இரவு இறந்து விட்டார். உடனே கிளம்பி வாருங்கள்"
" உடனே வருகிறேன்" மறுமுனையில் வெடித்து கிளம்பிய விசும்பலுடன் போன் வைக்கப்பட்டது.
"வெளிநாட்டு வாழ்க்கைக்கு கொடுக்கும் விலை " என்றான் வினோத்.
இருவரும் வீட்டை சல்லடை போட்டு சலிக்கத் தொடங்கினர்.ஓன்றும் கிடைக்காமல் ஏமாந்து போய் வீட்டை சுற்றி வரும் போது தான் அந்த செட்டை பார்த்தார்கள். வீட்டின் பின்புறமாக இருந்த ஒரு கைவிடப் பட்டமெக்கானிக் செட் அது. இருவரும் அதற்குள் நுழைந்தனர். புழுதியும் ஒட்டடையும் நிறைந்த அந்த செட்டில் சமீபமாக சிலவேலைகள் நடந்த தடயங்கள் புதிதாக காணக் கிடைத்தன. கடைசல் மெசினின் கீழ் சிதறி கிடந்த இரும்பு துகள்களை பார்த்தான் வினோத்.
" நேற்று தான் இந்த கத்தியை செய்திருப்பார் போலிருக்கிறது. வேறு ஏதாவது கிடைக்கிறதா பார்? என்றான் அருண்.
சிறிது நேர தேடலுக்கு பிறகு பழைய டேபிளின் பிராயரில் அந்த நோட் புக் கிடைத்தது. அதில் கொலை செய்யப்பட்டவர்களின் போட்டோவை ஒட்டி குறுக்கே சிவப்பு மார்க்கால் பெருக்கல் குறி போட்டிருந்தார் சோமசேகர். அதை புரட்டி பார்த்த அருண் "என்னடா இதில் அந்த தேவராஜின் போட்டோவே இல்லையே?"
"எனக்கும் அது தான் புரியவில்லை?"
"தேவராஜை சோமசேகர் கொலை செய்யவில்லையென்றால் வேறு யார் செய்திருப்பார்கள்?" என்றான் வினோத் குழப்பத்துடன் ..
"எனக்கு இப்போது தான் திரை விலகுகிறது.தேவராஜை கொன்றது சோமசேகர் இல்லை"
"வேறு யார் ?"
"ஒரு புத்திசாலி" என்றான் அருண் தீர்க்கமாக . வினோத் ஓன்றும் புரியாமல் திகைத்து நின்றான்.