Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

Status
Not open for further replies.
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 15


அருண் ஆயாசத்துடன் ஆரம்பத்திலேயே கட்டையை கொடுக்கிறானே வினோத் என்று நினைத்தபடி "சரி. அந்த முதல் கட்டளையை விட்டு விடு. மீதம் உள்ளவை கொலையானவர்களுடன் பொருந்தி போகிறதா என்று பார்க்கலாம்" என்றான்.

"ஓகே.ஏதோ ஒரு விசயத்தை நீங்கள் குத்துமதிப்பாக குருட்டாம் போக்கில் கண்டு பிடித்திருக்கிறீர்கள். அதை தடுக்க எனக்கு மனமில்லை. மேலும் இப்போது நமக்கு வேறு எந்த வேலையும் இல்லை என்பதால் டைம் பாசிற்காகவாவது இதில் இறங்கி பார்க்கலாம்" என்றான் வினோத்.

"சரி. உனக்குத் தான் ஏதாவது வேலை வேண்டும் என்று நச்சரிப்பாயே? இப்போதைக்கு உனக்கு நான் தரும் வேலை இதுதான் என்று எடுத்து கொள்"

"சரி. வீணாக டென்சனாகாதீர்கள். ஐந்தாவது கட்டளையை படிக்கிறேன். உனது தாய், தந்தையை மதித்து நடப்பாயாக. அவர்களை கனம்பண்ணுவாயாக."

"இது அப்படியே செல்வராணிக்கு பொருந்தி போவதை கவனி. அதை விட்டு விட்டு அப்பா அம்மாவை பார்த்து கொள்ளாவிட்டால் யாராவது கொலை செய்வார்களா பாஸ் என்று குறுக்கே கட்டையை கொடுக்காதே!"

"ஒகே.நான் இனி எதிர்மறையாக எதையும் பேசவில்லை. அடுத்தது ஆறாவது கட்டளை.திட்டமிட்டுகொலை செய்யாதிருப்பாயாக."

"அந்த டேவிட் தன்னுடைய மகளை திட்டமிட்டு கொன்றிருக்கிறான். அதோடு இது பொருந்தி போகிறது."

"ஓகே. அடுத்தது ஏழாவது கட்டளை. தன் மனைவியை தவிர பிற பெண்களுடன் விபச்சாரம் செய்யாதிருப்பாயாக."

"வேறு ஒரு பணக்கார பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் தான் அவன் தன் மனைவியை கொல்லவே முடிவு செய்திருக்கிறான்."

"அடுத்தது எட்டாவது கட்டளை. களவு செய்யாது இருப்பாயாக. இது எனக்கே புரிந்து விட்டது..ஆபிஸ் பணத்தை கையாடல் செய்தது. நீங்களும் இதைத் தானே சொல்ல வருகிறீர்கள்?"

"அதேதான். இன்னும் இரண்டு கட்டளைகள் மீதம் இருக்கின்றன. அப்படியானால் நம்முடைய ஆண்ட்டி ஹீரோ இன்னும் இரண்டு கொலைகள் செய்ய போகிறான் என்று அர்த்தம்."

"அந்த இரண்டு கொலைகளுடன் அவன் தன் வெறியாட்டத்தை நிறுத்தி கொள்வான் என்றா நினைக்கிறீர்கள்?"

"எனக்கும் அது சரியாக தெரியவில்லை. ஆனால் ஒன்றிலிருந்து நான்கு வரையான கட்டளைகளுக்கு அவன் ஏன் எந்த கொலைகளும் செய்யவில்லை?"

"நல்ல பாயிண்ட் தான். ஆனால் விடைதான் நமக்கு தெரியவில்லை."

"இரு .ஒரு நிமிடம் இப்படி யோசிப்போம்."

" எப்படி?"

"கட்டளை ஐந்து, கட்டளை ஆறுக்கு .அதே குற்றங்களை செய்ததனித்தனி மனிதர்களை தேர்ந்தெடுத்து தண்டித்தவன். கட்டளை ஆறு ஏழு, எட்டுக்கு ஒரே ஒருவனை தேர்ந்தெடுத்து தண்டித்திருக்கிறான். அவன் மேலே சொன்ன கட்டளைகளில் உள்ள மூன்று பாவங்களை மொத்தமாக செய்திருக்கிறான்.என்னுடைய சந்தேகம் ஓன்று தான். இவர்கள் செய்த பாவங்கள் வெகு துல்லியமாக கொலைகாரனுக்கு எப்படி தெரிந்தது.? சாமுவேல் ரத்னகுமாரை பழிவாங்க வேண்டியது அந்த வட மாநில தொழிலாளியின் குடும்பம் தான். அவனோ இறந்து விட்டான். அந்த குடும்பமோ பிரான்சிஸ் அன்பரசு கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு சாட்சியத்தை மாற்றி சொல்லிவிட்டு சொந்த ஊருக்கே போய் விட்டார்கள்.செல்வராணியால் பாதிக்கப்பட்டது அவளுடைய பெற்றோர்கள் மட்டும் தான்.அவர்களும் இறந்து விட்டார்கள். இறந்து விட்டார்களா? இல்லை செல்வராணியே கொன்று விட்டாளா என்பது கேள்விக்குறிதான். டேவிட்டால் பாதிக்கப்பட்டது அவனுடைய முதல் மனைவி .அவளும் இப்போது மன நல விடுதியில் இருக்கிறாள். இவர்கள் யாரும் குற்றவாளி இல்லை என்றால் கொலைகாரன் யார்? அவனுடைய மோட்டிவ் என்ன?இவர்கள் செய்த குற்றமெல்லாம் அவனுக்கு எப்படி தெரிய வந்தது?"

"எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. சொல்லட்டுமா?"

"சொல் "

"எனக்கு பாதர் அடைக்கலராஜ் மீது சந்தேகமாக இருக்கிறது. அவரது முன் பெயர் ஜேம்ஸ் .அதிலிருக்கும் Jஎன்ற முதல் எழுத்தைத்தான் செல்வராணி சாகும் போது தரையில்எழுதியிருப்பாளோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. மேலும் அவரது வயது அறுபதிற்குள் இருக்கிறது. தடயவியல் அறிக்கை சொன்ன கொலையாளியின் வயதோடு கிட்டத்தட்ட ஒத்து போகிறது."

" என்ன சொல்கிறாய் வினோத் ? பாதர் தான் கொலைகாரன் என்கிறாயா?" என்றான் திகைப்புடன் அருண்.இப்படி ஒரு கோணத்தில் அருண் யோசித்துக் கூட பார்க்கவில்லை.

"எனக்கென்னவோ அப்படித்தான் தோன்றுகிறது. இறந்த மூன்று பேருமே இந்த பாதரிடம் பாவமன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். பாதரே நம்மிடம் மன்னிப்பு கேட்ட பிறகும் தொடர்ந்து தவறு செய்யும் இந்த அயோக்கியர்களை கொல்ல வேண்டும் என்று எனக்கு தோன்றியிருப்பதாக கூறியிருக்கிறார். அதை வைத்து தான் சொல்கிறேன். அவருக்கும் எனக்கும் என்ன பகை.? நான் அவர் மீது பழிபோட .மேலும் கடைசி வரை இறைவனுக்கு ஊழியம் செய்த ஒரு பாதிரியார் இறந்த பிறகு அவரது தலைமாட்டில் மறைத்து வைத்த அவர் எழுதிய புத்தகம் ஒன்றை கண்டுபிடித்தார்கள். அதில் முழுக்க முழுக்க கட வுள் என்பது ஒரு ஹம்பக் என்று சரியான தரவுகளோடு அவர் எழுதியிருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ந்து போனார்கள். " ஒரு பாதிரியாரின் மரண வாக்குமூலம் " என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகம் வெளிவந்து திருச்சபையை அதிர வைத்தது. மன்னித்து மன்னித்து மனம் வெறுத்து போன பாதிரியார் ஒரு கட்டத்தில் கடவுளின் சார்பாக தானே தண்டணை கொடுக்க களத்தில் இறங்கியிருக்கலாம். இது உளவியல் சார்ந்தது "

" என்னால் இதை கொஞ்சம் கூட நம்பமுடியவில்லை வினோத்.நீ சொன்னது போலவும் நடந்திருக்கலாம். பாதர் தான் கொலையாளி என்றால் நாம் அவரை எப்படி பிடிப்பது? இந்த விசயம் வெளியே தெரிந்தால் சமூக ஒற்றுமை என்னாவது?ஏற்கனவே சிறுபான்மையினர் மீது வெறுப்பு நிலவி வரும் சூழலில் இப்படி ஒரு விசயம் நடப்பது பெட்ரோலில் தீக்குச்சியை உரசிப் போடுவது போலத்தான். இந்த விசயத்தை நாம் கவனமாகத் தான் கையாள வேண்டும். இல்லையென்றால் நிலைமை சிக்கலாகி விடும்."

"அவரை நாம் கண்காணிக்க வேண்டியதுதான். நேற்று நாம் அவரை வயிற்று வலியிலிருந்து காப்பாற்றினோம். அதனால் உடம்பு சரியில்லாமல்ஓய்வில் இருந்திருப்பார்.அதனால் தான் நேற்று கொலை நடக்கவில்லை. ஆனால் இன்று கொலை நடக்கும் என்று நம்புகிறேன்."

"நீ சொல்வது உண்மையாக இருந்தால் இன்று இரவு நீ அவரை கண்காணிக்க போகலாம். அதற்கு முன்னால் அந்த சர்ச்சின் ப்ளு பிரிண்ட் எனக்கு வேண்டும்"

"அது எதற்கு பாஸ் உங்களுக்கு?" என்றான் வியப்புடன் வினோத்.

"ஓரு வேளை சர்ச்சின் கீழ் ஏதாவது ரகசிய வழி இருந்து பாதர் அந்த வழியாக வெளியே போய் கொலை செய்து விட்டு திரும்பவும் அதே வழியில் உள்ளே வந்து விட்டால் அது உனக்கு தெரியாது. நீ விடிய விடியகாத்திருந்து ஏமாந்து போவாய் " என்றான் அருண்.

"தெய்வமே ! நீங்கள் எங்கேயோ போய் விட்டீர்கள். எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீர்கள்?" என்றான் திகைப்புடன் வினோத்.

" கதையில் டுவிஸ்ட் வேணுமென்றால் எப்படி வேண்டுமானாலும் யோசிக்கலாம். எனக்கு அந்த சர்ச்சின் ப்ளு பிரிண்ட் வேண்டும். உடனே கொண்டு வா"

"இதோ கிளம்பி விட்டேன்." வினோத் அவசர அவசரமாக தனது பைக்கை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

அருண் யோசித்து கொண்டிருந்தான். அவனுக்கு பாதர் மீது லேசான சந்தேகம் எழுந்தது. பாதர் இல்லாமல் வேறு ஏதோ ஒன்று கொலையானவர்களுக்கு நடுவில் இருக்கிறது அது என்ன என்று மூளையை கசக்க ஆரம்பித்தான்.

பாவமன்னிப்பு கூண்டு. பாவமன்னிப்பு கூண்டு என்ற வாசகத்தை திரும்ப திரும்ப சொல்லி பார்த்து கொண்டான் அருண்.

ஓரு வேளை பாதர் பாவமன்னிப்பு தரும் நாட்களில் வேறு யாராவது பாவமன்னிப்பு கூண்டில் மைக்கை பொருத்தி பேசுவதை இருவரும் பேசுவதை வேறு இடத்திலிருந்து ஒட்டுகேட்கிறார்களோ என்று அவனுக்கு தோன்றியது. கொலைகாரன் தனக்கான இரையை இப்படி கூட தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று அவன் உள்மனம் கூறியது. ஏனோ அவனது மனக்கண்ணில் சர்ச் பணியாளன் அந்தோணிராஜ் அசோகன் தோன்றினான்.

புதிதாக மதம் மாறியவர்கள் அந்த மதத்தின் மீது மிகுந்த பிடிப்போடு இருப்பார்கள். காலம் காலமாக இருப்பவர்களை விட அதீதமான விஸ்வாசத்தை வெளிக்காட்டுவார்கள் என்பது உளவியல் விதி. அப்போது தான் மற்றவர்களுக்கு தன் மீது பரிபூரண நம்பிக்கை வரும் என்பது எழுதப்படாத விதி. ஒரு வேளை இந்த கொலைகளை செய்வது அந்தோணிராஜ் அசோகனாக இருப்பானோ என்று அருண் நினைக்க ஆரம்பித்தான். இன்று இரவு வினோத் பாதர் அடைக்கலராஜினை கண்காணிக்க போனதும், தான் அந்த அந்தோணிராஜ் அசோகனை கண்காணிக்க போக வேண்டும் என்று நினைத்து கொண்டான் அருண்..

வேறு இடத்தில் கைவிடப்பட்ட லேத் பட்டறைக்குள் அவன் நுழைந்தான். டிராயரில் இருந்த தனது நோட்புக்கை திறந்தவன் அதிலிருந்த புகைப்படத்தை வெறித்துப் பார்த்தான். "இன்று நீ?" என்றவன் சிகப்பு நிற மார்க்கரினால் புகைப்படத்தில் பெருக்கல் குறி போட்டான். அவனது உதடுகளில் கொடுரமான ஓரு புன்னகை தோன்றி மறைந்தது. அவன் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து அந்த கத்தியை எடுத்தான். அதை தொட்டு பார்த்தவன்" பொறு. இன்று இரவு உனக்கு வேலையிருக்கிறது" என்றான். பிறகு தனது பிரத்யேக கத்தியை தீட்ட தொடங்கினான். எழுந்த தீப்பொறிகளுக்கு நடுவே அவனது முகம் தகிக்க தொடங்கியது.
 
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 16


அன்று இரவு .நிலவுப் பெண் வானத்தில் ஏணி இல்லாமல் மேலே ஏறத் தொடங்கியிருந்தாள்.அவனை சுற்றி நட்சத்திர வாலிபர்கள் கண் சிமிட்டிசைட்டடிக்க தொடங்கியிருந்தனர். சர்ச்கேட்டை விட்டு அந்த அந்தோணிராஜ் அசோக் வாட்ச்மேனிடம் சொல்லிக் கொண்டு தன்னுடைய பைக்கில் கிளம்பினான். அவன் வெளியேறியதும் அதற்காகவே காத்திருந்தது போல்வாட்ச்மேன்கேட்டை இழுத்து பூட்டி விட்டு அருகில் இருந்த நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து ஹேட்போனை காதுக்கு கொடுத்து எப்.எம் மில் கசிந்த இளையராஜாவின்பாடல்களை கண்ணை மூடிக் கொண்டு ரசிக்கத் தொடங்கினான். " நமக்கு இவரை விட்டால் வேறு யார் துணை" என்று முணுமுணுத்தது அவனது உதடுகள்.

சர்ச் சிற்கு எதிரே இருந்த ரோட்டில் அந்த கார் நின்றிருந்தது..அருகே பைக்கை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி அதில் சாய்ந்திருந்த அருண் அந்தோனிராஜ் அசோக் கிளம்புவதை தற்செயலாக பார்ப்பது போல் பார்த்து கொண்டிருந்தான்.

அந்தோணிராஜ் அசோக் கிளம்புவதை பார்த்து கொண்டிருந்த அருண் தன் அருகில் கார் பானாட்டில் சாய்ந்து நின்றிருந்த வினோத்தை பார்த்து " பயல் கிளம்பி விட்டான். நான் அவனைப் பின் தொடர்ந்து போகிறேன். நீ இங்கே அடைக்கலராஜை கண்காணித்து கொண்டிரு. ஏதாவது அசம்பாவிதமாக நடந்தால் என்னை போனில் கூப்பிடு. நான் உடனே வந்து விடுவேன்"

" ஏதாவது பிரச்சனை என்றால் நீங்களும் எனக்கு போன் செய்யுங்கள் பாஸ்.எனக்கென்னவோ அவனைப் பார்த்தால் கொலைகாரனைப் போல் தோன்றவில்லை. வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு நபர்கள் பாவ மன்னிப்பு கேட்பதுண்டு. அதனால் பாவமன்னிப்பு கூண்டில் நிரந்தரமாகவே ஒரு மைக்இருக்க வேண்டும். நாம் பாவமன்னிப்பு கூண்டில் பரிசோதனை செய்து பார்த்தாலே போதும் "

"அது எளிது வினோத். அதை யார் அங்கே வைத்தது என்பது நமக்கு தெரியாதே? இப்போதைக்கு எனக்கு இவன் மீது சந்தேகமாக இருக்கிறது. என் சந்தேகத்தை தீர்த்து கொள்ள இவனைப் பின்தொடர்கிறேன். உன்னுடைய பாவமன்னிப்பு கூண்டில் மைக் இருக்கும் சந்தேகத்தை நாம் நாளைக்கு பார்த்து கொள்ளலாம்"

"அதுவும் சரிதான். நீங்கள் அவனை கவனியுங்கள் நான் இவரை கவனிக்கிறேன்."

அருண் அருகில் நின்ற பைக்கை எடுத்து கொண்டு அந்த அசோக்போன பாதையில் அவனைதேடிக் கொண்டு கிளம்பினான் . அருணிடம் அசோக்கின் முகவரி ஏற்கனவே இருந்தது.வினோத் சர்ச்சின் பின்புறம் இருந்த கோட்ட ர் சின்வாசலில் இருந்த மரத்தின் அடியில் காரை நிறுத்தினான். கதவை திறந்து கொண்டு கீழே இறங்கியவன் பாதரின் அறையை பார்த்தான். பாதரின் அறையில் இன்னமும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வினோத் மணி பார்த்தான்.மணி பத்து. செல்போனில் gana ஆப்பை ஆன் செய்தவன் ஹேட்போனின் ஒரு ஒயரை மட்டும் வலது காதில் சொருகிக் கொண்டான். ஏதாவது சத்தம் கேட்டால் உடனே காதில் விழ வேண்டும் என்பதற்காக இடது காதில் ஹேட்போனைமாட்டாமல் விட்டிருந்தான். மெல்லகசிய ஆரம்பித்த பாடலை லோ வால்யூமில் வைத்தபடி கேட்க ஆரம்பித்தான்.

அருண் அசோக்கை பின் தொடர்ந்து கொண்டிருந்தான். சந்து பொந்துகளில் பயணித்த அந்த அசோக் ஓட்டு வீடுகள் நிறைந்த ஒரு காம்பவுண்டின் அருகே வண்டியின் வேகத்தை குறைத்தான். தன் வீட்டு காம்பவுண்டிற்குள் பைக்கை நிறுத்திவிட்டு டிபன் பையை எடுத்து கொண்டு மாடிப்படி ஏறி மேலே போனான்.அருண் வண்டியில் நேராக போய் ஒரு யூ டர்ன் அடித்து திரும்பி வந்தான் அவனது வீட்டை கண்காணிக்க தோதான இடம் எது என்று அவன் கண்கள் தேடின. அவன் வீட்டிற்கு சற்று தள்ளியிருந்த மளிகை கடை அவன் கண்ணில் பட்டது.கடை பூட்டப்படுவதற்காக சற்று நேரம் அருண் காத்திருந்தான்..அருண் சற்று தள்ளியிருந்த பூட்டப்பட்ட மளிகை கடையின் அருகே பைக்கை நிறுத்திவிட்டு ஷட்டர் அருகே சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். கடைக்கு வெளியே சிதறி கிடந்த காய்கறி துணுக்குகளால் கவரப்பட்ட கொசுக்கள் அவனை ரீங்காரமிட தொடங்கின. காதில் சங்கீதம் பாடிய கொசுக்களை விரட்டியபடி கேட்டையே பார்த்து கொண்டிருந்தான் அருண்.அவனது கண் பார்வையில் அசோக்கின் வீட்டு கேட் இருந்தது. சற்று நேரத்தில் யாரோ வந்து அதை தாழிட்டு பூட்டினார்கள். அந்த காம்பவுண்ட் குடித்தனத்தில் எப்போதும் கடைசியாக வீட்டுக்கு வருவது அந்தோணிராஜ் அசோக் தான் என்று அருணுக்கு தோன்றியது.

வினோத் சில்வண்டுகளின் ரீங்கார சத்தத்தோடு பாட்டு கேட்டு கொண்டிருந்தான். பாதர் வீட்டு விளக்கு அணைந்தது. வினோத் சட்டென்று உசாராகி பாட்டை அணைத்தான். அவனது கண்கள் கோட்ட ர் சின்வாசலில் நிலைத்தன. ஏதாவது அசைவுகள் தெரிகிறதா என்று கூர்ந்து கவனித்தவன் மணியை பார்த்தான் மணி 11.

அதே நேரம் அவன் தன் பிரத்யேக கத்தியுடன் அந்த சாலையில் காத்திருந்தான்.நிலவொளியில் மின்னிய கத்தியை ஒரு முறை தொட்டு பார்த்து கொண்டவன் மெல்ல புன்னகைத்து கொண்டான். சாலையின் வளைவில் ஒரு கார் வருவது ஹேட்லைட்டின் வெளிச்சத்தில் தெரிந்தது. அவனது உடலில் திடிரென ஒரு விரைப்பு தோன்றியது. வருவது அவன்தான்.இவன் கத்தியை முதுகுக்கு பின்புறமாக மறைத்து வைத்து கொண்டு லிப்ட் கேட்டு கையை நீட்டினான். திடிரென ஒருவன் சாலையின் நடுவே நிற்பதைப் பார்த்த கார்காரன் வண்டியை நிறுத்தினான்.

"லிப்ட் ப்ளீஷ்" என்றான் இவன் தன் தொப்பியை கழற்றியபடி.

அவன் அவரது முகத்தை உற்றுப் பார்த்தான். அவனுக்கு அந்த முகம் ஞாபகம் வந்தது.
ஆனால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

" உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன். எங்கே என்று தான் நினைவுக்கு வரவில்லை"

"இன்னும் என்னை நினைவுக்கு வரவில்லையா?" என்றவன்" கீழே இறங்கு. பேசுவோம்"

"எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் அவசரமாகப் போக வேண்டும்"

"எனக்கு ஒரே ஒரு வேலைதான். உன்னை போட வேண்டும்" அவன் அவசர அவசரமாக பின்புறமாக ஓளித்து வைத்திருந்த தன் கத்தியை கழுத்தை நோக்கி பாய்ச்சினான்.

தன்னை நோக்கி வந்த கத்தியை பார்த்தவன் " ஏய் என்ன செய்கிறாய்? என்றபடி அவசர அவசரமாக கத்தியின் குறியிலிருந்து விலகினான். அவனது கத்தியின் நுனி கார் சன்னலில் மாட்டி உடைந்து சிக்கி கொண்டது. நுனி உடைந்த கத்தியைப் பார்த்தவன் "ச்சை" என்றபடி மறுபடியும் கத்தியை உருவிக்கொண்டு பாய்ந்தான். இந்த முறை அவனது குறிதப்பவில்லை. கார் ஓட்டியவனின் வலது மார்பில் கத்திகுத்து விழுந்தது. சளார் என்று ஒரு ரத்த குமிழ் அவனது உடம்பில் உருவானது. அடுத்த குத்திற்கு அவன் பாய்ந்த போது கார் டிரைவர் கனகச்சிதமாக கத்தியை பிடித்து கொண்டான். கத்தியிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது.இருவரும் தரையில் உருளத் தொடங்கினர். கார் டிரைவர் உசாரானான். அவனது கையில் கத்தியை பிடித்ததால் காயம் ஏற்பட்டிருந்தது. உயிர் பயத்தில் வலியை பொருட்படுத்தாமல்அவனது கையிலிருந்த கத்தியை பிடுங்கியவன் கீழே கிடந்தவனின்நெஞ்சை நோக்கி குத்தினான்.கீழே படுத்திருந்தவன் விலக முயன்றதில் அவனது தோள்பட்டையை கிழித்தது கத்தி. அவனது உடலில் ஓரு ரத்த நதி உருவானது. இருவரது உடலிலும் அட்ரீனல் சுரப்பி ஓவர் டைம் போட்டு வேலை செய்து கொண்டிருந்தது.

கத்திக்கு சொந்தக்காரன் சட்டென்று எழுந்தான். இருட்டில் அவனிடமிருந்து தப்பி ஓட ஆரம்பித்தான். கார் டிரைவரின் கையில் கத்தி இருந்தது. அவனும் நெஞ்சில் ரத்தம் வடிய வலியோடு துரத்தி வந்து கொண்டிருந்தான். முன்னால் ஓடிக்கொண்டிருந்தவனின் முகத்தில் வேதனை கோடுகள் விழ ஆரம்பித்தன. அவனது கைகள் அணிச்சை செயலாக அவனது வயிற்றை பிடித்து கொண்டன. அவனது உடல் முழுவதும் வலியால் நடுங்க ஆரம்பித்தது." இது வேறு நேரம் காலம் தெரியாமல் " என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன.

முன்னால் ஓடிக்கொண்டிருந்தவனின் வேகம் வலியால் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. அவனது வேகம் குறைவதை பார்த்த கார் டிரைவர் மூச்சை இறுகப் பிடித்து கொண்டு தன் வேகத்தை கூட்டினான். பின்னால் ஓடி வந்தவன் தன்னை பிடித்து விடுவான் என்று உணர்ந்ததும் கத்தி காரன் சட்டென்று ரோட்டில் படுத்து உருண்டான். பின்னால் வந்தவன் இதை சற்றும் எதிர்பார்க்காததால் திடிரென நிற்க முடியாமல் அவனை தாண்டி ஓடினான். அவன் சுதாரித்து கொண்டு திரும்பி தன்னை நோக்கி வருவதற்குள் இவன் கீழே கிடந்த கல் ஓன்றை எடுத்து அவனது முகத்தை நோக்கிவீசினான்.

பறந்து வந்த கல் அவனது நெற்றியை தாக்கியது. அவனது நெற்றியிலிருந்து ரத்தம் கொழகொழவென்று வழிய ஆரம்பித்தது. அவனது இடது கண் ஓரமாக வழிந்த ரத்தம் அவனது ஒரு கண்ணின் பார்வையை மறைத்தது. அவனது ஒரு கண் ரத்தத்தில் நனைய ஆரம்பித்தது.அவன் அதை துடைத்து கொண்டு நிமிர்ந்த போது அவன் இரவின் இருளில் காணாமல் போயிருந்தான். இவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டுமடங்கி விழுந்தான்.

அருண் தூங்கி வழிந்தபடி கடைக்கு முன்னால் உட்கார்ந்திருந்தான். கிழக்கே சூரியன் சிவப்பு பந்தாக எழுந்து கொண்டிருந்தான். இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்த கால் அவனது கண்கள் சிவந்திருந்தன. அருண் தன் கண்களை கர்சீப்பால் துடைத்து கொண்ட போது அவனது போன் அடித்தது. ஏற்கனவே நள்ளிரவில் இரண்டு பேரும் பரஸ்பரம் ஏதாவது விபரீதமாக நடந்த தா என்று போனில் விசாரித்து கொண்டிருந்தனர்.

"ஹலோ" என்றான் மறுமுனையில் வினோத்.

"என்னாச்சு வினோத் ?" என்றான் அருண்.

" உடனே இங்கே வாங்க பாஸ்.மேட்டர் ரொம்ப சீரியஸ் "

"என்னாச்சு வினோத். விளக்கமாக சொல் "

"பாதர் அடைக்கலராஜ் நைட் இறந்து விட்டார். நம்முடைய கணிப்பு தவறாகிவிட்டது. பாதர் கொலைகாரன் இல்லை என்று நினைக்கிறேன்."

" என்ன சொல்கிறாய் வினோத் ?"

அருணின் கைகள் நடுங்க தொடங்கின.​
 
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 17


அருண் தன்னுடைய பைக்கில் சர்ச்சுக்கு போய் சேர்ந்த போது கணிசமான கூட்டம் அந்த விடியற்காலை நேரத்தில் கூடத் தொடங்கியிருந்தது. "நல்லாயிருந்த பாதர் திடிர்னு நேற்று இரவு இறந்து விட்டாராம். நிலையில்லாத மனித வாழ்க்கையை பாருங்கள். யாருடைய விதி எப்போது முடியும் என்று யாருக்கும் தெரிவதில்லை என்பது தான் வாழ்க்கையின் விசித்திரம்" என்று யாரோ கூட்டத்தில் திடிர் சாக்ரடீஸாக மாறி தத்துவ மழையை பொழிந்து கொண்டிருந்தார்கள். அருண் தன் பைக்கை நிறுத்திவிட்டு வண்டிக்கு சைடு லாக் போட்டுவிட்டு சாவியை உருவிய போது யாரோ "பாஸ் நான் இங்கே இருக்கிறேன்" என்றார்கள். அருண் திரும்பி பார்த்த போது வினோத் ஒரு டீக்கடைக்கு வெளியே கையில் டீ டம்ளருடன் நின்றிருந்தான்.

அவனும் அருணைப் போலவே தூக்கம் கெட்டு கண்கள் சிகப்பாக நிறைய களைத்துப் போய் நின்றிருந்தான்.அருண் தன்னை நோக்கி வருவதை பார்த்த வினோத் "மாஸ்டர் இன்னொரு டீ" என்றான்.அருண் டீக்கடைக்கு வந்து சேர்வதற்கும் டீ தயாராவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

"முதலில் டீயை குடியுங்கள் பாஸ். பிறகு பேசலாம்" என்றான் வினோத்.

"இப்போது இதுதான் எனக்கு அமுதம்" என்ற அருண் அதை மிடறு மிடறாக குடிக்க ஆரம்பித்தான்.

இருவரும் முழுதாக டீயை குடித்துவிட்டு காசைக் கொடுத்து விட்டு காருக்கு வந்தனர்.

"என்னடா ஆச்சு பாதருக்கு ? திடிர்னு எப்படி இறந்து போனார்.? ஹார்ட் அட்டாக்கா?" என்றான் அருண்.

" தெரியவில்லை பாஸ்! காலையில் வாட்ச்மேன் தான் முதலில் பேப்பரை கொடுக்க பாதரின் அறைக்கு வந்தான். அதற்குப் பிறகு அவனது அலறல் சத்தம் கேட்டது. அதன் பிறகு தான் நான் உள்ளே போய் பார்த்தேன். பாதர் வாயில் ரத்தம் வழிந்திருந்தது. கடைசி நேரத்தில் மாத்திரை டப்பாவை எடுக்க முயற்சி செய்திருப்பார் போல. அறை முழுவதும் மாத்திரைகள் சிதறிக் கிடந்தன. பாவம் அவருடைய முயற்சி பயனளிக்கவில்லை. எனக்கு கொஞ்சம் கில்டியாக குற்றவுணர்வாக இருக்கிறது."

"எதற்காக அப்படி உணர்கிறாய்?"

"பா தர் உள்ளே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது அது தெரியாமல் நான் வெளியே நின்று பாட்டு கேட்டு கொண்டு இருந்திருக்கிறேன். அவரை காப்பாற்ற என்னால் முடிந்திருக்கும். ஆனால் என்னால் எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. கண்ணிருந்தும் குருடனாக வெளியே நின்றிருந்திருக்கிறேன்."

"உனக்கு வெளியே வேறு எந்த சத்தமும் கேட்கவில்லையா?"

"இல்லை பாஸ்.எனக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை. அப்படி ஏதாவது சத்தம் கேட்டிருந்தால் நான் கண்டிப்பாக உள்ளே போயிருந்திருப்பேன்"

"ஒருவேளை நீ ஏமாந்த ஏதாவது ஒரு தருணத்தில் நம் கொலைகாரன் உள்ளே நுழைந்து நம் ஃபாதரின் கதையை முடித்திருப்பானோ?"

" என் கண்களை பாருங்கள் - கண்ணில் விளக்கெண்ணை விட்டு கொண்டு காவலுக்கு நின்றிருக்கிறேன். நீங்கள் என்னடாவென்றால் இப்படி கேள்வி கேட்டு என் மனதை புண்படுத்துகிறீர்கள். அப்படியே அவன் எனக்கு தெரியாமல் உள்ளே நுழைந்து பாதரை தீர்த்து கட்டியிருந்தாலும் வெளியேறும் போது கண்டிப்பாக என் கண்ணில் மாட்டியிருப்பான்."

"நீ சொல்வது சரிதான். நீ வேலையில் அசட்டையாக இருப்பவன் இல்லைதான். நீஅசட்டையாக இருக்க வேண்டுமென்றால் அந்த கொலைகாரன் ஒரு பெண்ணாக வேடமிட்டு வந்திருக்க வேண்டும்"

"பெண்களை பார்த்தால் வழிபவன் இந்த வினோத் என்று வீண் அபாண்டத்தை என் மீது சுமத்துகிறீர்கள். இதையும் கேட்க வேண்டிய அவலநிலை எனக்கு. எல்லாம் என்னுடைய நேரம்.வேறு என்ன சொல்வது?"

"சரி சரி ஓவராக சீன் போடாதே!" என்று அருண் வினோத்திடம் சொல்லி கொண்டிருந்த போது ஒரு ஆம்புலன்ஸ் சைரன் ஓலியோடு சர்ச்சிற்குள் நுழைந்தது.
கேள்விக்குறியோடு வினோத்தை பார்த்தான் அருண்

"நான் தான் ஆம்புலன்சிற்கு போன் செய்தேன். உங்களுக்கு வந்த அதே கொலைகாரன் பா தரை கொன்றிருப்பானோ என்ற சந்தேகம் எனக்கும் வந்தது. அதனால் தான் ஆம்புலன்சிற்கு போன் செய்தேன். பிரேத பரிசோதனை அறிக்கையில் பாதரின் மரணத்திற்கான காரணம் தெரிந்துவிடும்."

"திருச்சபையை சேர்ந்தவர்கள் பிரேத பரிசோதனைக்கு சம்மதிக்க மாட்டார்களே?"

"அதனால் தான் அவர்கள் வரும் முன்பாக பாடியை தூக்க சொல்லி விட்டேன். ஆமாம் நீங்கள் போன விசயம் என்னவானது?"

"இரவு முழுவதும் கொசுக்கடி வாங்கியது தான் மிச்சம். நாம் சந்தேகித்த ஆசாமி இரவு முழுவதும் வீட்டை விட்டு வெளியேற வேயில்லை."

"நாம் என்று என்னை சேர்த்து கொள்ளாதீர்கள். நான் அவனை சந்தேகப்படவேயில்லை. நீங்கள் தான் சந்தேகப்பட்டீர்கள்"

"ஆமாம். நான் பாதரை சந்தேகப்பட்டேன். நீ அவரை சந்தேகிக்கவில்லை. நான் அந்த அந்தோணிராஜ் அசோகனை சந்தேகித்தேன். நீ அவனை சந்தேகிக்கவேயில்லை. இந்த கேஸ் ஏன் தான் இப்படி இழுபறியாக போகிறதோ தெரியவில்லை."

" இப்படியே போனால் அடுத்தது நான் உங்களையும் நீங்கள் என்னையும் சந்தேகிக்க வேண்டிய நிலமை வரப்போகிறது."

"கவலைப்படாதே! நம் இருவருக்கும் கொலை செய்யுமளவிற்கு தைரியம் கிடையாது. அதனால் அப்படி ஒரு நிலமை வராது."

"அடுத்தது நாம் என்ன செய்ய போகிறோம்?"

"நாம் செய்ய வேண்டிய வேலை ஒன்று இருக்கிறது."

"என்ன அது?"

" பாதர் கொலையாளி இல்லை என்றாகிவிட்டது. என்னுடைய சந்தேகம் அந்த பாவமன்னிப்பு கூண்டு. அதில் தான் நம் கொலைகாரன் மைக்ரோ மைக் எதையாவது பொருத்தி தூரத்திலிருந்து பாவமன்னிப்பு உரையாடல்களை கேட்கிறானோ என்று எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. அதை இப்போது நிவர்த்தி செய்து கொள்வோம்."

"சரி வாருங்கள். எவ்வளவோ செய்து விட்டோம். இதை செய்ய மாட்டோமா? வாருங்கள் சர்ச்சினுள் போய் நீங்கள் சொன்னது உண்மையா பொய்யா என்று தெரிந்து கொள்வோம்."

இருவரும் காரிலிருந்து நடந்து சர்ச்சினுள் நுழைந்தனர். அவர்களின் நல்ல நேரம் சர்ச்சில் யாருமே இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது தான். மொத்த கூட்டமும் பாதர் அடைக்கலராஜின் வீட்டில் குழுமியிருந்ததால் சர்ச் பக்கம் யாருடைய கவனமும் திரும்பவில்லை. இருவரும் இருண்டு கிடந்த சர்ச்சினுள் நுழைந்தனர்.ஓன்றிரண்டு மெழுகுவர்த்திகள் மேடையில் தங்கள் கடைசி மூச்சை விட முயற்சி செய்து கொண்டிருந்தன. காலி நாற்காலிகளின் அமைதி பயத்தை ஏற்படுத்தியது. இருவரும் இருள் கண்களுக்கு பழகும் வரை காத்திருந்தனர். ஓரளவு கண்கள் இருட்டுக்கு பழக்கமானதும் இருவரும் பாவமன்னிப்பு கூண்டை நோக்கி நடந்தனர்.

"நான் உள்ளே பார்க்கிறேன். நீ வெளியே பார். அப்படியே யாராவது வருகிறார்களா என்று பார்த்து கொள்" என்றான் அருண்.

"நீங்கள் உள்ளே பாருங்கள். வெளியே நான் பார்த்து கொள்கிறேன்" என்றான் வினோத். இருவரும் உள்ளேயும், வெளியேயும் அங்குலம் அங்குலமாக சல்லடை போட்டு சலிக்க ஆரம்பித்தனர்.

அரை மணி நேர தேடலுக்கு பிறகு எதுவும் கிடைக்காமல் அருண் வெளியே வந்தான்.

"உனக்கு ஏதாவது கிடைத்ததா வினோத் ?"

"இல்லை. எனக்கும் எதுவும் கிடைக்கவில்லை. இங்கே மைக் இருந்தாலும் அது ஆனாக ஒரு சென்சார் இருக்க வேண்டும்" என்றான் அருண்.

"சென்சாரா ?"

"ஆமாம். பாவமன்னிப்பு கூண்டிற்குள் யாராவது நுழைந்தால் மைக்கின் சுவிட்சை சென்சார் ஆன் செய்து விடும். அப்படி ஏதாவது சென்சார் கூண்டின் படிக்கட்டில் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன் . "

"சந்தேகமே வேண்டாம். கூண்டிற்கு செல்லும் மரப்படிகளை சோதித்து பார்த்து விடுங்கள்"

அருண் படிகளின் கீழ் இருந்த கேப்பில் தன் செல்போனின் டார்ச் லைட்டை ஆன் செய்து நுழைத்தான்.

"இப்போது படிகளுக்கு உள்ளே வெளிச்சம் இருக்கிறது. உன் செல்போனை இந்த இடைவெளி வழியாக விட்டு போட்டோ எடு. சென்சார் இருப்பது சிவப்பு விளக்கு எரிவதன் மூலம் தனியாக தெரியும் "

சில நிமிடங்கள் மென கெட்டபிறகு கிடைத்த செல்போன் போட்டோக்களில் சிவப்பு நிற புள்ளிகள் எதுவும் காணக் கிடைக்கவில்லை.

இருவரும் சோர்ந்து களைத்து போய் ஒருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்.

அதே நேரத்தில் அருணின் செல்போன் அடித்தது.

எதிர்முனையில் இருந்த ரஞ்சன் "அருண் உடனே நான் சொல்லும் இடத்திற்கு வாருங்கள். நமக்கு கொலைகாரனை அடையாளம் காட்ட ஒரு ஐ விட்னஸ் கிடைத்திருக்கிறான்" என்றார்.
 
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 18

ரஞ்சன் சொன்ன இடத்தை மனதில் குறித்து கொண்ட அருண் "கண்டிப்பாக பாதர் கொலையாளி இல்லை. கொலைகாரன் நேற்று இரவு இங்கு வரவேயில்லை. ஆனால் வேறு ஒரு இடத்தில் தன் கை வரிசையை காட்டியிருக்கிறான் அப்போது யாரோ கொலைகாரனை நேரில் பார்த்திருக்கிறார்கள். ரஞ்சன் இப்போது அங்கே தான் இருக்கிறார். வா போகலாம்" என்றான்.

"அதற்குள் நான் என் வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்று என் மீது குற்றம் சாட்டுவது நியாயமா நியாயமாரே?" என்றான் வினோத் பரதேசி படத்து ஹீரோவை போல்.

"தப்புதான். மன்னித்து விடு.வா!கிளம்பலாம்"

"போகலாம். ஆனால் எந்த வண்டியில் போவது?நம்மிடம் தான் இரண்டு வண்டிகள் உள்ளனவே ?"

"இரண்டிலுமே போகலாம்." என்ற அருணும் வினோத்தும் வெளியே வந்த போது அந்த அந்தோணிராஜ் அசோக் தனது பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வருவதைப் பார்த்தார்கள். இவர்களைப் பார்த்தவன் " கர்த்தருக்கு ஸ்தோத்திரம்." என்றான்.

அருண் அவனைப் பார்த்து புன்னகைத்தபடி "பாதரை பார்க்க வந்தோம்" என்றான்.

"அதற்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டுமே?" என்றான் அசோக்.

"அவர் வேறோருவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து விட்டார். அப்புறம் அசோக் உங்கள் வீட்டு சன்னலை இரவில் அடிக்கடி திறக்காதீர்கள்" என்றான் அருண்.

அவனது முகம் மாறியது.

" என்ன சொல்கிறீர்கள்?"

"புரியாதது போல் நடிக்காதீர்கள். பாதரை பாருங்கள்" என்ற அருண் வேகமாக நடந்தான்.

" அவன் வீடு மாடியில் இருப்பதாக சொன்னீர்கள். அவன் இரவில் சன்னலை ஏன் திறந்தான்?" என்றான் வினோத் புரியாமல் .

"ஒன்யூஸ் த்ரோ வான ஒரு பொருளை வெளியே எரிய "

"நைட்டு ஓன் பூ ஸ்த்ரோ வா? "என்று யோசித்த வினோத் அதன் அர்த்தம் பிடிபட்டதும் "கருமம். அதையும் பக்கத்துல போய் பார்த்திருக்கிரீர்கள்? கேவலம் "

"நைட் ஒரு உயிரை கொன்று வீசியிருக்கிறான். இதற்கெல்லாம் பாவமன்னிப்பு கேட்பானா என்று யோசிக்கிறேன்"

"நான் இனிமேல் எதுவும் கேட்க மாட்டேன். நீங்கள் வர வர ஆபாச குடோனாக மாறி விட்டீர்கள்"

" எல்லாம் சகவாசதோசம்"

அருண் பைக்கிலும் வினோத் காரிலுமாக ரஞ்சன் குறிப்பிட்ட இடத்திற்கு போய் சேர்ந்தார்கள். மர நிழலில் நின்றிருந்தார் ரஞ்சன். கூடியிருந்த சொற்ப கூட்டத்தை கட்டுப்படுத்தி கொண்டிருந்தார்கள் கான்ஸ்டபிள்கள். பாரன்சிக் ஆட்களில் சிலர் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தனர்.அருணுக்கு பிணத்தை சுற்றி வரையும் சாக்பீஸ் மார்க் இல்லாமல் இருந்தது வினோதமாக இருந்தது. ஆங்காங்கே ரத்தம் உறைந்து இயல்பு நிறத்தை தொலைத்து நிறம் மாறியிருந்தது.

ரஞ்சனை அணுகியவன் அவர் கையை குலுக்கியதும் அவர் " என்ன இரண்டு பேரும் பேய் அடித்தது போல் இருக்கிறீர்கள்?" என்றார்.

"இந்த கேஸ் விசயமாகத் தான் விடிய விடிய யோசித்து கொண்டிருக்கிறோம். சரியான தூக்கமே இல்லை." என்றான் வினோத்.

"ஆமாம். எங்கே பாடியை காணவில்லை. ?கொலைகாரன் கையோடு பாடியையும் கொண்டு போய்விட்டானா?" என்றான் அருண்.

"இல்லை. நேற்று இரவு அந்த கொலைகாரன் ஒருவனை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறான். துரதிர்ஷ்டவசமாக அவனது நோக்கம் நிறைவேறவில்லை. அவன் கொலை செய்ய நினைத்த நபர் கத்திகுத்து காயத்துடன் தப்பி விட்டான். இப்போது மயக்க நிலையில் ஆஸ்பிட்டலில் இருக்கிறான்"

"அது சரி. இது சாதாரண வழிப்பறியாக கூட இருக்கலாம். இதை வேறு யாராவது கூட செய்திருக்கலாம்.இந்த சம்பவம் நாம் தேடும் கொலைகாரன் சம்மந்தப்பட்டது என்று நாம் நம்ப எந்த ஆதாரமும் இல்லையே?" என்றான் அருண்.

"கையில் கூட நம்பர் போடாமலேயே போய் விட்டான். அதுதானே அவனது டிரேட் மார்க்ஸ்டைல்" என்றான் வினோத்.

"அப்படியென்றால் இது நாம் தேடும் கொலைகாரனின் கைவரிசை இல்லை என்கிறீர்களா?"

"அதை நிருபிக்க ஒரு வழி இருக்கிறது"

"என்ன அது?"

"இப்போது ஆஸ்பிட்டலில் மயக்கமாக கிடக்கிறானே? அவனது பெயரை சொல்லுங்கள். அவனது பெயர் கிறிஸ்தவ பெயராக இருக்கும் பட்சத்தில் இது நாம் இருக்கும் கே ஸ்தான்.

" அவனது பெயர் சைமன் "

"அப்படியென்றால் இது நம்முடைய கேஸ் தான்." என்றான் அருண்

பாரன்சிக் ஆட்கள் கீழே உறைந்து போய் கிடந்த ரத்த தாரைகளில் சில கெமிக்கல்களை விட்டு திரவமாக்கி சேகரித்து கொண்டிருந்தனர். கை ரேகைக்காக கார் கதவில் பவுடர் தடவிக் கொண்டு இருந்த பாரன்சிக் ஆட்களில் ஒருவன் கார் கண்ணாடி இடைவெளியில் சிக்கியிருந்த அந்த உடைந்த கத்தியின் துணியை கிளவுஸ் அணிந்த கைகளால் எடுத்தான். அதை எடுத்து பாலீதின் பை ஒன்றில் பத்திரப்படுத்தியவன் அதை எடுத்துக் கொண்டு ரஞ்சனிடம் வந்தான்.

"சார். இது கில்லர் பயன்படுத்திய கத்தியின் உடைந்த நுனி .இதைப் பார்த்தால் கடைகளில் கிடைக்கும் கத்தி போல் தெரியவில்லை. அவனே பிரத்யேகமாக தயாரித்தது போல் இருக்கிறது."

" இதை உடனே லேபிற்கு அனுப்புங்கள்" என்றார் ரஞ்சன்.

"ஓகே சார்" அவன் நகர்ந்தான்.

"கத்தி எங்கே சார்.? நன்றாக தேடிப் பார்க்க சொல்லுங்கள். போன முறையை போல் ஏதாவது புதரில் கிடக்க போகிறது " என்றான் அருண்

"எங்களை தவறாக நினைத்து கொள்ளாதீர்கள் சார்.நாங்கள் நிறைய களைத் திருக்கிறோம். எங்களுக்கு உடனடியாக தூக்கம் தேவைப்படுகிறது.வித்யுவர் பர்மிசன்"

"சரி கிளம்புங்கள். தெளிவான பிறகு பேசலாம்" என்றார் ரஞ்சன்

இருவரும் ஆளுக்கு ஒரு வண்டியில் வீட்டுக்கு வந்து படுக்கையில் விழுந்தனர். அருண் அயர்ந்து தூங்கி கொண்டிக்கும் போது முகமூடி அணிந்த ஒரு உருவம் கையில் கத்தியோடு அவன் மீது பாய்ந்தது. நடுவில் நான்கைந்து ஓட்டைகள் இருந்த ஓரத்தில் பற்கள் இருந்த அந்த கத்தி அருணன் நெஞ்சை நெருங்கிய போது அருண் திடுக்கிட்டுகண் விழித்தான். அவனது உடலில் வியர்வை நதி பாய்ந்து கொண்டிருந்தது. அட்ரீனல் ஓவர் டைம் பார்த்து கொண்டிருந்தது. "சை. எல்லாம் கனவா?" என்று எழுந்து கொண்டான் அருண். அருகில் வினோத் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான்.

அதே நேரம் அவன் தோள்பட்டையில் இருந்த கத்திகுத்து காயத்திற்கு மருந்து போட்டு கொண்டிருந்தான்.

" எப்படியோ அவன் தப்பி விட்டான்" அவனது உதடுகள் வெறியுடன் முணுமுணுத்தன.
 
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 19

அன்று மதியம் வரை இருவரும் அடித்து போட்டது போல் தூங்கி கொண்டிருந்தனர். மதியம் சற்று முன்னதாக விழித்து எழுந்து கொண்ட வினோத் ஸ்விக்கியில் மதிய சாப்பாட்டிற்கு ஆர்டர் செய்து விட்டு அருணை எழுப்பினான்.அருண் கண்களை கசக்கி கொண்டு எழுந்ததும் "சாப்பாடு ஆர்டர் பண்ணியிருக்கிறேன். வந்தால் வாங்கி வையுங்கள். நான் குளித்து விட்டு வருகிறேன்." என்றான்.

அருண் மவுனமாக தலையாட்டினான். சிறிது நேரத்தில் வந்து சேர்ந்த ஸ் விக்கி டெலிவரி பையனிடம் பணத்தை கொடுத்து பார்சலை வாங்கி டேபிளில் வைத்தான். வினோத் பாத்ரூமில் இருந்து வெளியே வந்து" போய் குளித்து விட்டு வாருங்கள். இருவரும் சேர்ந்தே சாப்பிடலாம்" என்றான்.அருண்குளித்து விட்டு வந்ததும் இருவரும் மவுனமாக சாப்பிட்டு முடித்தனர்.

"அடுத்தது என்ன பாஸ் செய்ய போகிறோம்?"

"அந்த சை மனைப் போய் பார்க்கலாமா?"

" அவன் தான் மயக்கமான நிலையில் இருக்கிறானே? அவன் மயக்கம் தெளிந்தால் தான் கொலைகாரன் யார் என்பது நமக்கு தெரிய வரும்."

" ஆனால் சைமனுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது பாஸ் எப்படியோ கொலைகாரனிடமிருந்து உயிரோடு தப்பி விட்டானே ?"

"ஆமாம். கொலைகாரனை அவனுக்கு அடையாளம் தெரிந்திருந்தால் அவன் கண் விழித்ததுமே கேஸ் முடிவுக்கு வந்து விடும்"

" ஒருவேளை கொலைகாரனை அவனுக்கு அடையாளம் தெரியாவிட்டால் நம் நிலமை திரிசங்கு சொர்க்கம் தான்."

"எனக்கு இரவு முழுவதும் கண் விழித்ததால் ஏற்பட்ட களைப்பு இன்னும் தீரவில்லை."

"எனக்கும் தான் பாஸ் எனக்கென்னவோ இந்த கேஸ் ஒரு மலையாள படத்தின் கதையை நினைவூட்டுகிறது."

"அப்படி என்ன படம் அது?"

"சிந்தாமணி கொலை கேஸ் என்று ஒரு மலையாளப் படம். அந்த படத்தின் கதை என்னவென்றால் குற்றம் செய்பவர்களை எல்லாம் வாதாடி வெளியே கொண்டு வருவான் வக்கீல் ஒருவன். அவன் தான் ஹீரோ.ஹீரோ என்பதை விட ஆண்டி ஹீரோ என்று அவனை சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். அப்படி திறமையாக தான் வாதாடி விடுதலை வாங்கி கொடுத்தவர்களையே சிறிது காலம் கழித்து அவனே தேடிப் பிடித்து கொலை செய்து விடுவான். அப்படி இந்த கேசில் வக்கீல் எவனாவது கிளம்பியிருக்கிறானா என்று தெரியவில்லை."

"நீ சொல்வது கூட யோசிக்க வேண்டிய விசயம்தான். கொலை செய்யப்பட்டவர்கள் அத்தனை பேருக்கும் ஒரே வக்கீல் வாதாடியிருந்தால் தான் நீ சொல்வது சாத்தியம்."

"இந்த கோணத்திலும் விசாரித்து பார்ப்போமே? சும்மா இருப்பதற்கு இப்படி ஏதாவது ஒரு வேலையை செய்து நம்மை நாமே பிசியாக வைத்துக் கொள்ள வேண்டியதுதான்."

"நம்மை இப்போது பிசியாக வைத்திருப்பது அந்த கொலைகாரன் தான். ஞாபகமிருக்கட்டும் "

'அதென்னவோ உண்மைதான். இந்த வக்கீல்களுக்கு ஒரு விசயம் சாதகமாக இருக்கிறது பாஸ்"

"என்ன அது?"

"ஒரு லாரி டிரைவர் விபத்தை ஏற்படுத்தி விட்டால் அவனது லைசன்ஸை கேன்ஸல் செய்து விட்டு அவனை சிறையில் அடைத்து விடுவார்கள். அதாவது எவனாக இருந்தாலும் அவனது தொழிலில் தவறு செய்தால் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும். ஆனால் இந்த வக்கீல்கள் சரியாக வாதாடாமல் சொதப்பி விட்டால் அவர்களின் கட்சி காரன் சிறைக்கு போய் விடுவான். இவர்கள் தப்பித்து கொள்வார்கள். என்ன மாதிரியானசெளரியமுள்ள தொழில் பாருங்க"

"அடப்பாவி.எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாய்?"

"பேப்பர்ரோஸ்ட் நிறைய சாப்பிட்டால் மூளைக்கு நல்லது பாஸ். நான் நிறைய சாப்பிடுவதால் என் மூளை இப்படியெல்லாம் யோசிக்கிறது."

" ஒகே .இனி நானும் பேப்பர் ரோஸ்ட்டே சாப்பிடுகிறேன் - உன்னைப்போல் எனக்கும் மூளை வளர்கிறதா என்று பார்ப்போம்"

பைக் சாவியை தாவி எடுத்த வினோத் "அதற்கு மண்டைக்குள் மூளை என்ற சாம்பல் நிற வஸ்து இருக்க வேண்டும் பாஸ்" என்றவன் அருண் டேபிள் மேல் இருந்தபேப்பர் வெயிட்டை எடுப்பதை பார்த்ததும் ஓடிப்போய் பைக்கில் ஏறி அதை ஸ்டார்ட் செய்தான்.

"நாட்டி பாய்" என்று சிரித்து கொண்டவன் அருண்.

அருண் எதையோ இலக்கின்றி யோசித்து கொண்டிருந்த போது அவனது செல்போன் குக்கூகுக் கூ என்று கூவியது.

போனை எடுத்து "ஹலோ" என்றான் அருண்.

மறுமுனையில் இருந்த போலீஸ் கமிசனர் ரஞ்சன்" என்ன அருண்.தூங்கி எழுந்து விட்டீர்களா?" என்றார்.

"இப்போது தான் குறித்து விட்டு சாப்பிட்டேன். சொல்லுங்கள். என்ன விசயம்?"

"கொலை நடந்த இடத்தில் இருந்த ரத்த தாரைகளின் ரிசல்ட் வந்திருக்கிறது. அங்கே இரண்டு பிளட் குருப் ரத்தம் கிடைத்திருக்கிறது. ஓன்று B + அது இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கும் சைமனுடையது. அவனது ரத்தத்தையும் சோதனை செய்து ஒப்பிட்டு பார்த்து விட்டோம். இன்னொரு இரத்தம் o குருப். அது கொலைகாரனுடையது என்று நினைக்கிறேன்."

"ஒ குரூப்பா? அது யுனிவர்சல் டோனர் ஆச்சே?"

"அப்படியென்றால்?"

" மற்ற எல்லா ரத்த வகையிலும் ஆண்டிஜென் என்ற ஒரு பொருள் இருக்கும் .B + இரத்தம் உள்ளவனுக்கு அதே குரூப் ரத்தம் தான் ஏற்ற வேண்டும். மாற்றி ஏற்றினால் ஆசாமி இறந்து விடுவான். ஆனால் o குருப் ரத்தத்தில் அந்த ஆண்டிஜென் இல்லாததால் அவர்கள் ரத்தத்தை வேறு எந்த குருப்புக்கும் ஏற்றலாம். அதைத்தான் யுனிவர்சல் டோனர் என்பார்கள்"

"புதிய விசயம் - நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை.சரி விசயத்திற்கு வருகிறேன். அந்த 0 குரூப் இரத்தவகை காரன் ஒரு புற்று நோயாளி அவனது ரத்தத்தை பரிசோதனை செய்ததில் அந்த நோயின் கூறுகளை கண்டுபிடித்திருக்கிறார்கள்"

அருணுக்கு கொலைகான் ஏன் இடைவெளி இல்லாமல் கொலை செய்கிறான் என்று புரிந்தது. தான் சாவதற்குள் தன் இரையை வேட்டையாட அவன் விரும்புகிறான் என்பது அவனுக்கு புரிந்தது.
 
Last edited by a moderator:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom