Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

அத்தியாயம் 26

ஒரு மணி நேரத்தில் வீட்டை அடைந்தவுடன் வீட்டின் வெளியிலேயே அவளுடைய தந்தை நின்றிருந்தார். அவளுடைய காலில் கட்டை பார்த்ததும், என்னம்மா ஆச்சு? பெரிய அடியா? என்று பரபரப்பாய் கேட்கவும், ஒண்ணுமில்லை அப்பா என்று கூறிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். அங்கு இவள் வரவை எதிர்பார்த்து அவளுடைய அண்ணனும் அண்ணியும் என்ன நடந்தது என்று கேட்க, அவள் அங்கு நடந்ததை முழுவதுமாக விவரித்தாள். கேட்டவர்கள் கண்களில் பயம் தெளிவாக தெரிந்தது. வாசுதேவன், நீ சாலையின் நடுவில் நடந்து போனியா? இல்லை அண்ணா, நடைமேடை ஓரமாகத்தான் நடந்து சென்றேன். அதனால் தான் கயல் என்னை வேகமாக பிடித்து இழுத்த போது நடைமேடையின் விளிம்பு பட்டு அடிப்பட்டது. லாரி ஓட்டுபவன் குடித்திருப்பான் என்று நினைக்கிறேன். சென்னையில் இப்போது ஒரே லாரி தொல்லைதான். போக்குவரத்து நெரிசல் ஆவது இவர்களால் தான் என்று லாரி ஓட்டுபவர்களை திட்ட தொடங்கினார். சரி விடுங்க! பத்திரமாக திரும்பி வந்துட்டா, அதுவே பெரிய விஷயம் என்று பார்வதி ஆறுதல் கூறினாள். நான் உனக்கு ஒரு நல்ல விஷயம் சொல்லலாம் என்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக கிளம்பினேன். அதற்குள் இந்த அசம்பாவிதம் நடந்திடுச்சி என்று வருத்தத்துடன் தமக்கையை பார்க்க, என்ன அண்ணா என்ன விஷயம் என்று ஆவலுடன் துர்கா கேட்டாள். உன்னை CA படிக்க வைக்க ஒரு நல்ல இன்ஸ்டிடியூடில் சேர்பதற்க்காக என் நண்பனிடம் விசாரித்தேன். அவன் மைலாப்பூரில் நல்ல இன்ஸ்டிடியூட் ஒன்று இருப்பதாக கூறினான். நீ CA நுழைவு தேர்வு தேர்ச்சி பெற்றவுடன் அதில் சேரலாம் என்றும் கூறினான். அவனும் அங்கு தான் படித்தானாம். CA தேர்வில் வெற்றி பெற அங்கு நல்ல பயிற்ச்சி அளிக்கிறார்களாம். இந்த விஷயத்தை சொல்லி உன்னை சந்தோஷப்படுத்தலாம் என்று அலுவலகத்தில் இருந்து சீக்கிரமாக கிளம்பினால் அதற்குள் உன் போன் வந்தது என்று சொல்லி முடிக்கவும், துர்காவிற்கு சந்தோஷமாக இருந்தது. ரொம்ப நன்றி அண்ணா என்று கூறி கொண்டு அவனை பார்த்து சிரித்தாள். இதுக்கெல்லாம் யாராவது நன்றி சொல்லுவார்களா? நீ நல்லா படித்து பெரிய தணிக்கையாளர் ஆன எனக்கு தானே பெருமை என்று அவன் அவளை உற்சாகப்படுத்தினான். அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் துர்கா தூங்க போனாள். அவளுக்கு தூக்கமே வரவில்லை, ஒரே சிந்தனையாக இருந்தது. எப்படியாவது அந்த இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து நன்றாக படிக்க வேண்டும். ஆனால் மைலாப்பூரில் இருந்து நாம் வேலை செய்யும் அலுவலகத்திற்கு வர தாமதம் ஆகும், என்ன சொல்லி சமாளிப்பது? மயிலாப்பூர் அருகிலேயே வேறு வேலை தான் தேட வேண்டும் அப்போதுதான் படிக்கவும் முடியும் வேலை செய்யவும் முடியும் என்று எண்ணியவளாக தூங்கி போனாள்.


சாம்சன் வீட்டில் அன்று ஒரே அமளி துமளியாக இருந்தது. அன்றைக்குத்தான் கயலை பொண்ணு கேட்டு அவள் வீட்டிற்கு செல்ல வேண்டும். அப்படியே நிச்சயமும் செய்திடலாம் என இரு வீட்டாரும் முடிவெடுக்க, ரெபேக்கா அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் துரிதமாய் செய்துக் கொண்டிருந்தாள். மாலை நான்கு மணி ஆனதும் சாம்சன் வேன் ஒன்றை வரவழைக்க, அதில் சாம்சன் அவனின் தங்கை, மற்றும் அவனின் பெற்றோர்கள், வேறு சில உறவினர்களும் ஏறி அமர்ந்தனர். நிச்சயத்துக்கு தேவையான பொருள்களும் ஏற்றி, கயலின் வீட்டை அடைந்தனர்.


கயலின் வீட்டில் கயலின் தம்பி ராகேஷ் இங்கும் அங்குமாக போய் கொண்டு அம்மா ஏவிய வேலைகளை எல்லாம் செய்துக் கொண்டிருந்தான். கயல் தன்னை எளிமையாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அவளின் முகம் முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தது. அவள் இவ்வளவு விரைவாக இந்த திருமணம் நிச்சயமாகும் என்று நினைக்கவில்லை. அவளின் தந்தையின் முகம் இறுக்கமாக இருப்பதைத் தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஓரே பெண்ணின் நிச்சயம் இன்னும் சில மணி நேரத்தில் நடை பெற போகிறது, இவர் ஏன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றாலும் பெண்ணுக்கு பிடித்திருக்கிறது என்பதற்காகவாவது கொஞ்சம் சிரித்த முகத்துடன் இருக்கலாம் என்று நினைக்கையிலேயே அவள் முகம் சுருங்கியது. வீட்டிலேயே நிச்சயம் செய்வதால் உறவினர்களை யாரும் அழைக்கவில்லை. திருமணத்திற்கு அழைத்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டார்கள். எனினும் வாஸந்தி மாப்பிள்ளை வீட்டிலிருந்து வருவோருக்கு சாப்பிட உணவுகளை தயாரித்துக் கொண்டிருந்தாள். எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் அமர்ந்திருந்தார் கமலநாதன்.

வண்டி சத்தம் கேட்டதும், ராகேஷ் ஓடி வந்து பார்த்து விட்டு உள்ளே சென்று அம்மா அவங்க எல்லோரும் வந்துட்டாங்க! என்று அறிவிக்க, சமையல் அறையில் இருந்து வெளியே வந்த வாஸந்தி வாங்க! வாங்க! என்று அழைத்தாள்,கமலநாதனும் வாங்க என்று அழைத்து விட்டு அமர வைத்தார். கமலநாதன், ஜேக்கப், சாம்சன் நாற்காலியில் அமர மற்ற அனைவரும் தரையில் விரிக்கப்பட்ட விரிப்பில் அமர்ந்தனர். ஜேக்கப் முதலில் பேச ஆரம்பித்தார். உங்க பெண்ணை எங்க எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. என் பிள்ளையையும் உங்களுக்கு போக போக பிடிக்கும். என் பிள்ளை உங்ககிட்ட இருந்து எந்த சீரும் வேணாம் என்கிறான். கயல் எங்க வீட்டிற்கு வந்த பிறகு அவள் எங்கள் வீட்டு பெண்ணல்லவா! அதனால் உங்கள் பெண்ணை மட்டும் அனுப்பினால் போதும் என்று முடித்தார். இதற்கு கமலநாதன் ஒன்றும் கூறாமல் இருக்கவே, வாஸந்தி பேச தொடங்கினாள். அதெப்படிங்க நாங்க எங்க பெண்ணை அப்படியே உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பது? எங்களால் முடிந்ததை அவளுக்கு செய்து தான் அனுப்புவோம் என்று கூற, உங்கள் பெண்ணுக்கு என்ன செய்ய வேண்டுமா அதை நீங்கள் தாராளமாக அவளுக்கு செய்யுங்கள். ஆனால் எங்கள் பிள்ளைக்கு எதுவும் வேண்டாம் என்று அவன் தெளிவாக சொல்லிவிட்டான். இது உங்கள் மீது கோபம் என்பது இல்லை. அவனுக்கு உண்மையாகவே வரதட்சணை, சீர் எல்லாம் பிடிக்காது என்று கூறியதும் வாஸந்தி, அதெப்படி மாப்பிள்ளைக்கு ஒன்றும் செய்யாமல் இருப்பது?, ஏதோ எங்களால் முடிந்த சீர் செய்யாமல் இருந்தால் நல்லாயிருக்குமா? என்று கேட்க, சாம்சன் இடைமறித்து, அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் அத்தை! உங்கள் பெண்ணே எனக்கு நீங்கள் கொடுக்கும் பெரிய சீர் தயவு செய்து இதற்கு மேல் ஒன்றும் வேண்டாம் எனக் கூறவே வாஸந்திக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது. பரவாயில்லை, பணத்திற்காக இந்த பிள்ளை நம் பெண்ணை காதலிக்கவில்லை, எனவே கயலை நன்றாக வைத்துக் கொள்வான் என்ற எண்ணம் தோன்றியது.


பின்னர் ஜேக்கப் பேச தொடங்கினார், முதலில் நீங்கள் உங்கள் முறைப்படி திருமணம் செய்யுங்கள். கயல் எங்கள் வீட்டிற்கு வந்த பிறகு நாங்கள் ஒரு சின்ன விருந்து வைத்து எங்கள் முறைப்படி திருமணம் செய்கிறோம். இதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபணை உண்டா? எனக் கேட்கவும், வாஸந்தி இல்லை என்று தலையாட்டினாள். பின் ஜேக்கப் நீங்கள் தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள், தங்கள் கணவர் எதுவுமே பேசவில்லையே என்று சட்டென்று கேட்டுவிட்டார். அதை கேட்டதும் கமலநாதர், நீங்கள் சொன்ன அனைத்துக்கும் சம்மதம் என்ற சுருக்கமாக முடித்துக் கொண்டார்.


சிறிது நேரத்தில் கயலை அவள் அம்மா அழைத்து வர, கயல் அங்கு வந்து அனைவரையும் நமஸ்கரித்தாள். அவளை பார்க்க தேவலோகத்து பெண்ணே அங்கு இறங்கி வந்தது போல் இருந்தது. சிவப்பு வண்ண மெலிதாக கரையிட்ட பட்டு புடவையும் அதற்கு தோதான அணிகலன்களும் அவளை தேவதை போல் காட்டியது. சாம்சனுக்கு பிரிட்ஜ்ஜில் வைத்த ஆப்பிள் போல் இருக்கிறாளே, இவளை அப்படியே கட்டி அணைத்தால் என்ன என்று மனதிற்குள் எழுந்த ஆசையை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான். பின் வாஸந்தி ஏற்பாடு பண்ண ஐயர் நித்சயதார்த்த பத்திரிகையை படித்தார், திருமண நாள் அடுத்த மாதத்தில் ஒரு முகூர்த்த நாளை சொல்ல, இருவரும் தட்டை மாற்றிக் கொண்டனர். பின் கேசரி, பஜ்ஜி, சொஜ்ஜி பரிமாறப்பட்டது. ஒரு வழியாக சாப்பிட்டு விட்டு கிளம்பினர்.

கமலநாதன் அவர்கள் கிளம்பி செல்லும் வரை எதுவும் பேசாமல் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இறுகிய பாறை போல் அமர்ந்திருந்தார். அவருக்கு தன் ஒரே பெண்ணுக்கு எப்படி எல்லாம் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற கனவு தவிடு பொடியாகிவிட்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனதிலே மருகிக் கொண்டிருந்தார்.


அப்பாவின் முகத்தை பார்க்க முடியாத கயல் அவரிடத்தில் வந்தார். என்னப்பா? இந்த கல்யாணம் உங்களுக்கு கொஞ்சம் கூட புடிக்கலயா? நீங்க இப்படி இருப்பது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு அப்பா, சாம்சன் ரொம்ப நல்லவர் அப்பா. கண்டிப்பாக அவர் வாழ்க்கையில் பெரிய நிலையை அடைவார் அப்பா. உங்களுக்கு இன்னும் என்மேல் கோபம் இருந்தால் சொல்லுங்க, நான் இந்த கல்யாணத்தை நிறுத்தி விடுகிறேன். எனக்கு நீங்கள் , அம்மா போதும் அப்பா. காலம் முழுதுவதும் உங்களுடனேயே இருந்து விடுகிறேன் என்று அவள் கண்ணீர் மல்க கூறியதை கேட்ட கமலநாதனுக்கு மனது கனத்தது, அவளிடத்தில் வந்து அவளை அரவணைத்து, அப்படி எல்லாம் சொல்லக்கூடாது குட்டி. நீ திருமணமாகி குழந்தைகளை பெற்று வாழ் வாங்கு வாழ வேண்டும்.அதை நங்கள் பார்த்து பூரிப்படையவேண்டும். நான் நினைத்த மாதிரி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியவில்லை என்ற ஆதங்கம் தான். வேறொன்றும் இல்லையம்மா, புதுப்பெண் அழலாமா? கண்ணை துடைத்துக் கொள் என்று அவள் முதுகை தட்டிக் கொடுக்க, கயல் தந்தையின் அரவணைப்பில் அக மகிழ்ந்தாள்.


சுஹேல் மறுநாள் துர்காவின் அலுவலகத்திற்கு போன் செய்தார். துர்கா போனை எடுத்தவுடன், என்ன துர்கா நேற்று தேர்வு எழுதிவிட்டு எனக்கு எப்படி எழுதினாய் என்று போன் செய்து சொல்ல சொன்னேனே? ஏன் போன் பண்ணவில்லை? சுஹேல், நான் உங்களுக்கு மாலை ஆறு மணிக்கு போன் செய்தேன், நீங்கள் ஆபரேஷன் தியேட்டரில் இருப்பதாக உங்கள் வரவேற்பாளர் சொன்னார். அதன் பிறகு எனக்கு வீட்டிற்கு செல்ல நேரமாகிவிட்டதால் திரும்ப உங்களுக்கு போன் பண்ண முடியவில்லை. உன்னுடைய தேர்வு நான்கு மணிக்கே முடிந்து இருக்குமே, ஆறு மணிவரை அங்கு என்ன செய்தாய் என சுஹேல் வினவ, நீங்கள் கயலை பார்க்கவில்லையா, அவள் உங்களிடத்தில் ஒன்னும் சொல்லலை? என துர்கா கேட்கவும், அவள் இன்னைக்கு மருத்துவமனைக்கு விடுப்பு எடுத்திருக்கிறாள்.அவளுக்கு இன்றைக்கு திருமணம் நிச்சயம் பண்ண போவதாக சொல்லிருந்தாள். ஆமாம், கயலை ஏன் கேட்கிறாய்? அவளுக்கும் நான் கேட்டதற்கும் என்ன சம்பந்தம்? நேற்று ஒரு லாரி என்னை மோத வந்த போது கயல்தான் என்னை காப்பாற்றினாள். இதை கேட்டதும் சுஹேல் உடனே அதிர்ந்து என்ன துர்கா? சாலையில் கவனம் தேவை இல்லையா? ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று நடந்தால் என்ன செய்வது? என கடிந்துக் கொள்ள, நான் நடைமேடை ஓரமாக தான் நடந்து சென்றேன். அவன் ஏன் ஓரமாக நடந்து சென்ற என்னை இடிக்க பார்த்தான் என்று தெரியவில்லை. லாரிக்காரனை பார்த்தாயா? அல்லது நம்பர் பிளேடையாவது கவனித்தாயா? என சுஹேல் வினவ, இல்லை சுஹேல், கயல் என்னை அவள் புறமாக இழுத்ததால் என்னால் எதுவும் பார்க்க முடியவில்லை. கயலும் என்னை காபாற்றும் அவசரத்தில் எதையுமே கவனிக்கவில்லை என்று கூறியவுடன், நல்ல வேளை அல்லா கிருபையால் தப்பித்தாய். இனிமேலாவது சாலையில் செல்லும்போது கவனமாக செல் துர்கா, இந்த லிட்டில் கேர்ள் இல்லையென்றால் இந்த சுஹேல் பாய் இல்லை என கூறியதை கேட்ட துர்கா புன்னகை புரிந்தாள் என் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் இவன், திருமணம் முடிந்த பின்பு இவன் மனம் கோணாமல் நடந்துக்க கொள்ள வேண்டும். அது ஒன்று தான் இவன் நம் மேல் வைத்த அன்புக்கு நாம் காட்டும் நன்றி என்று மனதில் நினைத்தவளாக, சரி சுஹேல்! கயலுக்கு என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் என கூற. அதெல்லாம் இருக்கட்டும், நீ எப்படி தேர்வு எழுதினாய் என்று சொல்லவேயில்லையே?முடிந்தளவுக்கு நன்றாக எழுதினேன். கண்டிப்பாக பாஸ் பண்ணிவிடுவேன் என சந்தோஷமாக கூற, வெரி குட் . இப்படியே எல்ல தேர்வையும் தன்னம்பிக்கையோடு எழுதினால் கண்டிப்பாக சீக்கிரமாக படிப்பை முடித்து விடலாம் என கூற துர்காவும் ஆமோதித்தாள். துர்கா போனை வைத்தவுடன் சுஹேலின் மனம் துர்கா சொன்னதையே அசைபோட்டது, சாலை ஓரம் போய்க்கொண்டிருந்த பெண்ணை ஏன் இடிக்க வந்தான்? இது தற்செயலாக நடந்ததா? அல்லது வேண்டுமென்றே இடிக்க வந்தானா? என பலவாறு சிந்தவாறே தன் வேலையை தொடர்ந்தான்.
 
Last edited by a moderator:
அத்தியாயம் 27



ரங்கனுக்கு ஒரே கடுப்பாக இருந்தது. இவனை அந்த பொண்ணு மேல லாரியை ஏத்திட்டு கொல்ல சொன்னா இப்படி வந்து நிக்கிறான் இந்த சுறா, என்று வருத்தப்பட்டான். ஏன்டா சுறா, நான் அந்த பொண்ணை கொல்ல சொன்னா தப்பிடிச்சி, யாரோ அந்த பெண்ணை காப்பாத்திட்டாங்க என்று கதை சொல்றே? நான் அந்த பெரிய மனுஷனுக்கு என்னடா பதில் சொல்லறது? கவலைப்படாதே அண்ணாத்தே! இன்னொரு தபா சான்ஸ் கொடு. அடிச்சி உடம்பு கூட அடையாளம் தெரியாதவாறு பண்ணிறேன். ஆமாண்டா! இன்னொரு தடவை அந்த பொண்ணே உன் முன்னாடி வந்து என்னை கொலை பண்ணிக்கோன்னு சொல்லும், போடா விவஸ்தை கெட்டவனே! இந்த மாதிரி எல்லாம் இன்னொரு தடவை பண்ணினா மாட்டிக்குவோம்! அப்புறம் நீயும் நானும் கம்பி தான் எண்ணனும். வேற தான் யோசிக்கணும் என அவன் வேறு எப்படி பண்ணலாம் என யோசிக்க தொடங்கினான்.அப்போது அவன் வீட்டில் தொலைபேசி அடித்தது. ஆம்! தன் தொழிலுக்காக அவன் தொலைபேசி வைத்திருந்தான். அப்போதுதானே தன்னிடம் வருபவரை அவன் தொடர்பு கொள்ள முடியும்.போனை எடுத்ததும் உமர் அலி தான் பேசினார். என்ன ரங்கா நான் சொன்ன வேலையை முடிச்சிட்டியா? என்று கேட்கவும், இல்ல ஐயா. இந்த தடவை மிஸ் ஆயிடுச்சி, அடுத்த தடவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிடுறேன், நீங்க ஒன்னும் கவலை படாதீங்க ஐயா, சீக்கிரமாக வேலையை முடிப்பா, இது என் பெண்ணோட வாழ்க்கை பிரச்சனை, சரியா! எனக் கேட்கவும், கண்டிப்பாக சீக்கிரம் பண்ணிறேன் ஐயா என்று கூறி போனை வைத்தான்.



சுஹேலுக்கு மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. துர்காவிற்கு எப்படி இந்த விபத்து நடந்திருக்கும்? பேசாமல் போலீசில் சொல்லலாமா! அவர்கள் என்ன வென்று ஆராய்வார்கள். ஆனால் இதில் துர்காவிற்கு எந்த வித பிரச்சனையும் வந்து விடக் கூடாது. அப்போதுதான் அவனுக்கு தன்னுடன் பள்ளியில் படித்த ரவியின் ஞாபகம் வந்தது. அவன் இப்போது மாற்றலாகி சென்னையில் தானே டி.ஸ்.பி யாக வேலை செய்கிறான். அவனிடத்தில் சொல்லி விசாரிக்க சொன்னால் என்ன என்ற சிந்தனை தோன்ற, ரவியின் எண்ணை ஆராய்ந்து அவனுக்கு போன் செய்தான். போன் பண்ணியதும் மறுமுனையில் ஹலோ யார் பேசறது? என்று குரல் வர, டி.ஸ்.பி. ரவி இருக்காறா நான் அவருடைய பள்ளி தோழன் சுஹேல் , அவரிடத்தில் கொஞ்சம் பேசணும் என்று கூற, அவர் ஒரு கேஸ் விஷயமாக வெளியே போயிருக்கிறார், அவர் வந்ததும் உங்களுக்கு போன் பண்ண சொல்றேன் என்று கூறி போனை வைத்தார். சுஹேலுக்கு ஏமாற்றமாக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் போன் செய்யலாம் என்று நினைத்து தன் வேலையில் மூழ்கலானான். மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்து போன் செய்ய, நல்லவேளை!ன் ரவியே போனை எடுத்தான். என்னடா சுஹேல் எப்படி இருக்கே? இப்பதான் என் நினைவு வந்ததா? என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லடா, உன்னை போல நானும் பிஸி தான் என்று புன்னகை செய்ய, என்னடா விஷயம் ? ரவி எனக்கு ஒரு உதவி செய்யணும், செய்ய முடியுமா என்று கேட்க, என்ன சுஹேல் இப்படி கேட்கறே! நாம பள்ளியில் எவ்வளவு நெருக்கமாக பழகினோம். செய்டா! சொன்னா செஞ்சிட்டு போறேன் என்று கூற, நாம நேர்ல பேசலாம் ரவி, போனில் விளக்கமாக சொல்ல முடியாது. நாளை என் மருத்துவமனையில் அருகில் இருக்கும் உணவு விடுதிக்கு வந்திடு, அங்கு பேசலாம் என்று கூறவும், சரிடா! நான் நாளை நான்கு மணிக்கு நீ சொன்ன இடத்திற்கு வந்திறேன், நாம பேசுவோம் என்று கூறி போனை வைத்தான். சுஹேலுக்கு இப்போதுதான் சற்று நிம்மதியாக இருந்தது

மறுநாள் சுஹேல் ரவியை உணவு விடுதியில் சந்தித்து பேசினான், சுஹேல் நடந்ததையெல்லாம் விளக்கமாக கூறினான். ரவி அந்த ஏரியா என் கட்டுப்பாட்டில் இல்லை சுஹேல். இருந்தாலும் உனக்காக விசாரிக்கிறேன், என் நண்பன் தான் அந்த ஏரியாவில் இன்ஸ்பெக்டரா இருக்கான். இன்னும் இரண்டு நாள்லே அந்த லாரி யாருடையது? யார் இடிக்க வந்தா? என்ற விவரங்களோடு உன்னை தொடர்ப்பு கொள்கிறேன் என்று கூறவும், ரொம்ப நன்றி ரவி. இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று சுஹேல் உரைக்கவும், ஆமாம், அந்த பெண்ணுக்காக இவ்வளவு மெனக்கெடற, அந்த பொண்ணு உனக்கு ரொம்ப தெரிஞ்ச பொண்ணோ! என்று புன்னகை புரிய, ஆமாம் ரவி. நான் திருமணம் பண்ண போற பொண்ணு என்று இயம்ப, அது தான் அவ்வளவு அக்கறையா என்று கிண்டலடித்து சிரிக்க, சுஹேலும் சிறு புன்னகை புரிந்தான்.



இருவரும் தாங்கள் ஆர்டர் செய்த உணவு வகைகளை சாப்பிட்டனர். பின் சுஹேல் ரவியிடம், எனக்கு எப்படியும் அடுத்த மாதம் படிக்க வெளிநாடு செல்ல வேண்டி இருக்கும் நீ தாம்பா என் துர்காவை பாத்துக்கணும் அவளுக்கு தெரியாம அவளை கண்காணிக்கணும். இதை நான் தப்பான நோக்கத்தோடு சொல்லலை. எனக்கு என்னமோ அவளுக்கு பெரிய ஆபத்து வரும் என்று என் உள் மனது சொல்லிகிட்டே இருக்கு. சரி சுஹேல் கொஞ்சம் பொறுமையாய் இரு. எப்படியும் இரண்டு நாள்லே விஷயம் தெரிஞ்சிடும், அதுக்கப்புறம் அடுத்த நடவடிக்கையை எடுப்போம் என்று கூறவே சுஹேல் அமைதியானான்.



மறுநாள் கயல் மருத்துவமனைக்கு வந்த போது அங்கிருந்த அனைவரும் அவளுக்கு திருமணம் முடிவானதை குறித்து அவளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அனைவரின் வாழ்த்துக்களையும் ஏத்துக் கொண்ட கயல் நேரே சுஹேல் இருக்கும் அறையை நோக்கி விரைந்தாள். அவள் உள்ளே நுழைந்ததும் சுஹேல் "என்னம்மா புதுப்பெண்ணே எப்படி இருக்கிறாய்? திருமணம் நிச்சயம் நல்லபடியாக நடந்ததா? என்று விசாரித்தான். நல்லா நடந்தது சுஹேல், அப்பாவுக்கு தான் சிறிய மன வருத்தம். மற்றபடி எல்லாம் சுமுகமாக நடந்தது என்று புன்னகைத்தவாறே கூறினாள். பின், சுஹேல், நீ துர்காவிடம் பேசினாயா? அவள் அன்று நடந்தை உன்னிடம் சொன்னாளா? என்று கேட்க, சொன்னாள் கயல், அதைப்பறித்தான் உன்னிடமும் பேச வேண்டும் என்றிருந்தேன். என்ன பேச வேண்டும் சுஹேல்? கயல், நீ லாரி ஓட்டுநரை பார்த்தாயா? அவன் எப்படி இருந்தான்? அவசரத்தில் நான் அவனை கவனிக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவன் சாலையின் நடுவில் செல்லாமல் துர்காவையே குறி வைத்து வருபவன் போல் நடைமேடை ஓரமாக வந்தான். துர்கா பயப்படுவாள் என்று இதை நான் துர்காவிடம் கூட சொல்லவில்லை. அவளுக்கு யாராவது விரோதிகள் உண்டா சுஹேல்? எனக்கு தெரிந்து துர்கா மிகவும் அமைதியான பெண்.யாரிடமும் அதிகம் பேச மாட்டாள். அதுவும் ஆண் மகன் என்றால் பக்கத்தில் கூட செல்ல மாட்டாள் அவ்வளவு பயந்த சுபாவம். அவளுக்கு யார் விரோதி இருப்பார்கள் என்று ஒரே யோசனையாய் இருக்கிறது. என்னுடைய நண்பன் ஒருவன் போலீசில் இருக்கிறான். அவனிடத்தில் உதவி கேட்டிருக்கிறேன். அவன் இன்னும் இரண்டு நாளில் என்ன ஏது என்று விசாரித்து சொல்லுவதாக கூறியிருக்கிறான்.என்று சுஹேல் சொன்னதும், கயல், நல்ல முயற்சிதான் எடுத்திருக்கிறாய் சுஹேல். கண்டிப்பாக அந்த ஓட்டுநர் யார் என்று போலீசாரால் எளிதில்கண்டு பிடிக்க முடியும் என்று அவனிடம் கூற, நானும் ஏதாவது தகவல் கிடைக்குமா என்று தான் எதிர்பார்கிறேன் என்று கூறி முடித்தான்.



அன்று ஞாயிற்றுக்கிழமை. சுஹேலுக்கு அன்று விடுப்பு தான். அவன் வழக்கம் போல் காலையிலேயே எழுந்து தொழுகைக்கு சென்று விட்டு குளித்து சாப்பிட்டு முடித்தான். அன்றைய நாளிதழை புரட்டிக் கொண்டிருந்த போது கதவு தட்டப்பட, சுஹேல் போய் கதவை திறந்தான். அங்கு கயல் நின்று இருந்தாள். அவளை வரவேற்று அமரச் செய்த சுஹேல் அவளை அங்கு உள்ள அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான். கயல் தன்னுடைய திருமண பத்திரிகையை சுஹேலிடம் கொடுத்து, " நீங்கள் கண்டிப்பாக என்னுடைய திருமணத்திற்கு வரவேண்டும் என்று கூற, "சுஹேல் சாரி கயல்", அனேகமாக உன் திருமணத்தன்று நான் வெளிநாட்டில் இருப்பேன். என்னால் வர முடியாது. எனக்கு பதிலாக எனது குடும்பத்தில் உள்ளவர்கள் வருவார்கள் என கூற, சரி சுஹேல், நீ எப்போது மறுபடியும் இங்கே வருகிறாயோ அப்போது எங்களை சந்திக்க எங்கள் வீட்டுக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று கூற, கண்டிப்பாக உன்னையும் உன் வருங்கால கணவரையும் சந்திக்க வருவேன் என கூற, துர்காவிடம் என்னை அழைத்து செல்ல முடியுமா? அவளுக்கும் திருமண பத்திரிகை வைக்கவேண்டும் என்று கூற, அனீஸ், வாருங்கள்! நான் அழைத்து செல்கிறேன் என்று இருவரும் துர்காவின் வீட்டை நோக்கி வந்தனர்.கதவை தட்டியதும் பார்வதி வந்து கதவை திறந்தாள். அனீஸ், அவளிடம் ஆண்ட்டி, இவங்க கயல். மருத்துவராக இருக்கிறார், துர்காவை பார்க்கவேண்டும் என்று வந்திருக்காங்க என்று கூற, பார்வதி உடனே வாங்க! வாங்க! நீங்க தான் கயலா? நீங்கள் தான் எங்கள் துர்காவை பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றியவரா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அவளை திணறடித்தாள். அதற்குள் துர்காவும் வர இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் கயல், துர்கா நீயாவது கண்டிப்பாக என் திருமணத்திற்கு வரவேண்டும் என்று அழைக்க, நான் வராமல் இருப்பேனா! கண்டிப்பாக வருவேன் என துர்கா கூறவும் அதற்குள் பார்வதி அவள் பருகுவதற்கு காபி கொண்டு வர கயல் அதை அருந்திவிட்டு அனைவரிடமும் விடை பெற்று சென்றாள்.



துர்காவிற்கு அந்த கல்யாண பத்திரிகையை பார்த்ததும் மிகவும் ஆச்சர்யப்பட்டாள். அதில் மாப்பிள்ளை பெயர் சாம்சன் என்று இருக்கவே, ஓ! இவர்களும் கலப்பு திருமணம் தான் செய்து கொள்கிறார்களா? அப்படியென்றால் இவர்கள் திருமணமும் காதல் திருமணம் தான் போலும். நம்மிடத்தில் கயல் சொல்லவே இல்லையே! சரியான கள்ளி தான் ! என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்.

 
Last edited by a moderator:

இரண்டு நாள் கழித்து ரவி சுஹேலுக்கு போன் செய்தான். ரவியின் நண்பன் லாரி ஓட்டுனரை கண்டுபிடித்து விட்டதாகவும், அந்த இடம் டிராபிக் சிக்னல் உள்ள இடம் என்பதால் அங்கு புகைப்பட கருவி வைத்துள்ளதாகவும், அதை வைத்து கண்டுபிடித்து விட்டதாக கூறினான். அவனை விசாரித்ததில் லாரி ரங்கா என்பவருக்கு சொந்தம் என்றும், ஆனால் அன்று ஒட்டியது அவன் அல்ல என்றும் தெரிந்தது. அதை ஓட்டியவன் பெயர் சுறா சேகர் என்று தெரியவே அவனையும் விசாரித்ததில் அவன் அன்று குடித்து விட்டு வண்டி ஓட்டியதாக தெரிவித்தான். மேலும் விசாரித்ததில் அவர்கள் இருவரும் பழைய குற்றவாளிகள் என கண்டு பிடித்து உள்ளார்கள். இரண்டு பேரின் மீதும் F.I.R. போடப்பட்டுள்ளன. அவர்களை நன்கு கவனித்தும் இருக்கிறார்கள். இனிமேல் இது மாதிரி நடக்காது என்று எழுதிக் கொடுத்து இருக்கிறான் என்று விவரமாக கூறினான். அந்த ரங்கா ஏன் குடித்து விட்டு வருபவனிடம் லாரியை கொடுத்தானாம்? என்று சுஹேல் வினவ, அவன் லாரியை அந்த சுறா சேகரிடம் கொடுக்கும்போது அவன் குடிக்கவில்லையாம், பிறகு தான் ஏதோ இடத்தில நிறுத்தி குடித்தானாம் என்று கூறுகிறான். அவர்கள் பேசுவதை பார்த்தால் இது தற்செயலாக தான் நடந்ததாக தெரிகிறது என்று ரவி கூறியும் கூட சுஹேலுக்கு உள்மனதில் உருத்திக்கொண்டே இருந்தது. கயல் ஏன் அந்த ஓட்டுநர் துர்காவைதான் குறி வைத்து வருவது போல் இருந்தது என்று கூறினாள்? கயல் புத்திசாலி பெண். அவள் பொய் சொல்லும் பெண்ணும் அல்ல. சுஹேலுக்கு ஒரே குழப்பமாகவே இருந்தது. ரவி, துர்காவிற்கு தெரியாமல் அவளை கண்காணிக்க நம்பிக்கையான ஒரு காவலாளியை போடு. இந்த உதவியை தயவு செய்து எனக்காக செய் என கேட்க, கவலைப்படாதே சுஹேல்! நான் கண்டிப்பாக செய்கிறேன். நீ கவலை இல்லாமல் போய் வா என்று கூறி சென்று விட்டான். நாட்கள் உருண்டோடிவிட்டன. ஸுஹேல் வெளிநாடு செல்லும் நாளும் வந்தது. அன்றைக்கு துர்காவின் முகமே சரியில்லை. இவனை பிரிந்து எப்படி இருக்க போகிறோம்? என்று ஒரே கவலையாக இருந்தது. மனதில் எதோ ஒன்று அழுத்துவது போல் இருந்தது. சுஹேல் டெல்லிக்கு சென்று அங்கிருந்து வெளிநாடு செல்வதாக திட்டம் போட்டிருந்தான். அவனை வழி அனுப்ப அவனது பெற்றோர்கள் டெல்லி விமான நிலையத்திற்கு வருவதாக சொல்லி இருந்தார்கள். துர்கா தன் கண்ணீரை மறைக்க பெரு முயற்ச்சி செய்து கொண்டிருந்தாள். அவளது தந்தையோ தமயனோ, ஏன் அழுகிறாய்? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது. அதனால் முயன்று தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு வலம் வந்தாள். . சுஹேலுக்கு கிளம்புவதற்கு முன் துர்காவை தனியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுஹேல், துர்காவிடம் நான் இந்தியா வருவதற்குள் நீ உன் படிப்பை முடிக்க வேண்டும் துர்கா, நானும் என் படிப்பை முடித்து என்னை நிலைநிறுத்திக் கொள்வேன். எனக்கும் உன்னை விட்டு செல்ல மனம் இல்லை தான். இருந்தாலும் என்ன செய்வது? இந்த பிரிவு நாம் பிற்காலத்தில் சந்தோஷமாக இருப்பதற்கு தான் துர்கா என சுஹேல் சொல்ல சொல்ல துர்காவின் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல் வழிந்தோடியது. என்ன இது? குழந்தைத்தனமாக இருக்கிறது. நீ இப்படி அழுதுக் கொண்டே இருந்தால் என்னால் எப்படி செல்ல முடியும். நான் வேண்டும் என்றால் என்னுடைய வெளிநாடு பயணத்தை ரத்து செய்து விடவா? எனக் கூற ,வேண்டாம்! வேண்டாம் ! நான் அழவில்லை என்று அவசரமாக கூறினாள். அப்படியென்றால் மை ஸ்வீட் லிட்டில் டார்லிங் கொஞ்சம் சிரிக்கணும் என்று கூற துர்கா தன் அழுகையை மறைத்து லேசாக புன்முறுவல் செய்தாள். சரி! மாதத்திற்கு ஒரு முறை எனக்கு ISD கால் பண்ணு, அப்புறம் உடம்பை நன்றாக பார்த்து கொள், முக்கியமாக வெளியில் செல்லும்போது அக்கம் பக்கம் பார்த்து நட. நீங்களும் உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூற," சின்ன மேடம் சொன்னா கேக்காமல் இருப்பேனா?" என்று அவன் கிண்டல் அடிக்க, துர்கா அவளையும் மீறி சிரிக்கவும், இப்படிதான் எப்பவும் சிரித்துக் கொண்டே இருக்கனும் என்று கூறி பிரியா விடை கொடுத்தான் ஒரு மாதம் சென்றதே தெரியவில்லை கயலுக்கு. இந்த ஒரு மாதத்தில் சாம்சனிடம் அதிகம் பேச முடியவில்லை. இரண்டு அல்லது மூன்று தடவை தான் பேச முடிந்தது. அப்போது கூட அவன் அதிகம் பேசவில்லை. கயல் தான் பேசிக் கொண்டே இருந்தாள். திருமணத்திற்கு தேவையானதை வாங்கவும் அதற்காக அலைவதுமே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. திருமண மண்டபம் பார்ப்பது, சாப்பாடு , மண்டப அலங்காரம், மேல தாளங்கள் என நிறைய வேலைகள் இருக்கவே குடும்ப உறுப்பினர் அனைவரும் கல்யாண வேலைகளை பகிர்ந்துக் கொண்டனர். சாம்சனுக்கும் அவனுடைய நிர்வாக வேலை மற்றும் கல்யாண வேலைகள் இருக்க , இருவருக்குமே பேச வாய்ப்பு இல்லாமல் போனது. ஆயிற்று! திருமண நாளும் வந்து விட்டது. கயல் வீட்டில் அனைவரும் திருமண நாளுக்கு முன்தினம் மாலையே வந்துவிட்டனர். மாப்பிள்ளை வீட்டிற்கும் போன் செய்து அவர்களையும் வருமாறு கூறினர். கமலநாதன் மண்டபத்தின் அலங்காரத்தை கவனிக்க போய் விட்டார். வாஸந்தி கல்யாண சாப்பாட்டுக்கான மெனு எல்லாம் சரி பார்க்க சென்று விட்டாள். ராகேஷ் கல்யாணத்திற்காக வருவோருக்கு போக்குவரத்து வசதி மற்றும் அவர்கள் தங்க அறைகள் எல்லாம் ஒழுங்காக உள்ளனவா என்று பார்க்க சென்று விட்டான். கயல் மறுநாளைக்கு தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அப்போது சாம்சனும் அவனது குடும்ப உறுப்பினர்களும் மண்டபத்தினுள் நுழைந்தார்கள். சாம்சனின் அன்னை ரெபேக்கா நேராக மணப்பெண் அறைக்கு சென்று கயலை பார்த்தாள். என்ன கயல் தனியாக இருக்கிறாய்? அம்மா எங்கே? என்று கேட்க, வாங்க அத்தை! அம்மா இப்போதுதான் சமையல் செய்யும் இடத்திற்கு சென்றுள்ளார்கள். உட்காருங்கள் அத்தை! மாமா, பியூலா, சாம்சன் எல்லோரும் வந்துவிட்டார்களா? நான் போய் உங்களுக்கு எல்லாம் குடிக்க ஏதாவது கொண்டு வருகிறேன் என்று செல்ல முயல, நீ உட்கார் கயல். நாங்கள் வரும்போதே சாப்பிட்டு விட்டு தான் வந்தோம். உன்னை பார்த்தால் தான் சோர்வாக உள்ளது. நீ எதாவது சாப்பிட்டாயா கயல்? இரு. உனக்கு ஏதாவது குடிக்க நான் போய் கொண்டு வருகிறேன் என்று ரெபேக்கா சமையலறை நோக்கி விரைந்தாள். அங்கு வாஸந்தியை தேட, அவள் உட்புறமாக தலைமை சமையல்காரரிடம் பேசிக் கொண்டிருந்தாள். ரெபேக்கா சுற்றும் முற்றும் பார்க்க அங்கு ஒருவரையும் காணவில்லை, ஒரு பெரிய பாத்திரத்தில் பால் கொதித்துக் கொண்டிருந்தது. ரெபேக்கா பாலையாவது கயலுக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் ஒரு கோப்பையில் பாலை எடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு சமையல்காரரின் உதவியாளர் வர, அவனுக்கு ரெபேக்கா யார் என்று தெரியாததால், யார் நீங்கள்? இங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு இங்கே வர யார் அனுமதி தந்தது என்று பலவாறு கேள்விகள் கேட்க, ரெபேக்காவிற்கு அவன் கேள்வி மேல் கேள்வி கேட்கவும், அவளால் பதில் சொல்ல முடியாமல் விழிக்க, அந்த உதவியாளர் அவளை தவறாக புரிந்துக் கொண்டு கண்டபடி பேச, அந்த நேரம் பார்த்து அங்கு சாம்சன் வந்துவிட, என்னம்மா? என்ன ஆயிற்று? என்று கேட்கவும், ரெபேக்காவுக்கு வேறு வழி இல்லாமல் நடந்தை சொல்லும்படி ஆயிற்று. சாம்சனுக்கு எங்கிருந்து அந்த கோபம் வந்ததென்று தெரியவில்லை.அவன் சடாலென்று அந்த உதவியாளனை கன்னத்தில் அறைந்து விட்டான். சத்தம் கேட்டு உள்ளே இருந்து வாஸந்தியும் தலைமை சமையல்காரனும் ஓடி வர,வாஸந்தி சாம்சனிடம் என்னப்பா? என்ன ஆச்சு? என கலவரத்துடன் வினவ, சாம்சன் நடந்ததை கூறினான். தலைமை சமையல்காரனுக்கோ நடந்ததை கேட்டது கோபம் தலைக்கு ஏறியது. என் உதவியாளனை நீ எப்படி அடிக்கலாம் என சாம்சனிடம் சண்டைக்கு போக, வாஸந்தி இடையில் புகுந்து சமாதானம் செய்தாள். அப்போதும் அந்த சமையல்காரன் சமாதானம் ஆகாமல், எனக்கு இந்த மாதிரி அவமானம் எந்த கல்யாணத்திலும் நடந்ததில்லை. வாஸந்தி அம்மா, நான் செல்கிறேன், நீங்கள் வேறு யாராவது வைத்து சமையல் செய்துக் கொள்ளுங்கள். வாங்கிய முன் பணமும் திருப்பி தந்துவிடுகிறேன் என்று முறுக்கிக் கொண்டு போக, வாஸந்திக்கும் ரெபேக்காவுக்கும் தர்ம சங்கடமாகிவிட்டது. ரெபேக்கா அவனிடம் சென்று, என் பிள்ளை செய்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், மன்னித்து விடுங்கள். நாளைக்கு திருமணத்தை வைத்துக் கொண்டு இப்படி நீங்கள் விட்டு விட்டு போனால் நாங்கள் என்ன செய்வது? இவ்வளவு குறுகிய நேரத்தில் வேறு நபரை எப்படி தேடுவது? என அவனிடத்தில் மன்றாடி அவனை சமாதானம் செய்தாள்.
 
அத்தியாயம் 29


இதை பார்த்துக் கொண்டிருந்த சாம்சனுக்கு இன்னும் கோபம் அதிகமாக, அவனின் விழிகள் சிவந்தது. அவசரமாக ரெபேக்கா அவனை இழுத்துக் கொண்டு மணமகன் அறையை நோக்கி சென்றாள். வாஸந்திக்கோ என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்துக் கொண்டு நின்றிருந்தாள். ரெபேக்கா சாம்சனிடம் என்ன தம்பி இது? இவ்வளவு கோபம் உனக்கு எங்கிருந்து வந்தது? கல்யாணம் னா நல்லது கெட்டது இரண்டும் தான் இருக்கும். நாம் தான் இடத்திற்கு ஏற்றார் போல் நடந்துக் கொள்ளவேண்டும். நீ ஏம்பா அந்த பையனை அடித்தாய்? என்று கேட்க, என்னம்மா அந்த பையன் உன்னை கண்டபடி பேசியதை பார்த்து என்னால் எப்படி சும்மா இருக்க முடியும்? என்று கேட்க, அதற்காக கையை நீட்டலாமா? நீ இனிமேல் தாலி கட்டும் வரை இந்த இடத்தை விட்டு வெளியே வர கூடாது என்று அவனிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தாள். அதற்குள் இந்த விஷயம் கமலநாதனுக்கு தெரிய வர, நான் ஏற்பாடு செய்த சமையல்காரரை இவர் எப்படி அடிக்கலாம்? அதற்குத்தான் தராதரம் அறிந்து சம்மந்தம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். நமக்கு இணையாக சம்மந்தம் செய்து இருந்தால் இது நடந்திருக்குமா? என்று வார்த்தையை விட, அது அங்கிருந்த ஜேக்கப் காதில் விழுந்து விட்டது. அவருக்கும் கோபம் வர, இருந்தும் தன் பிள்ளை திருமணம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்பதற்க்காக அதனை அடக்கிக் கொண்டு, கமலநாதனை நோக்கி, சம்பந்தி நாங்கள் உங்கள் அந்தஸ்துக்கு இல்லை என்றாலும் நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் இல்லை. எங்கள் பிள்ளையும் நன்றாக தொழில் செய்கிறான். நன்றாகவும் சம்பாதிக்கிறான். படிப்பிலும் பொறியியல் துறையில் பட்டம் வாங்கி உள்ளான். பிற்காலத்தில் அவனுக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. எனவே இப்படியெல்லாம் பேசாதீர்கள்! என்று கூறி சென்று விட்டார். வாஸந்திக்கு பயத்தில் கண்ணீரே வந்துவிட்டது. என்ன இது சோதனை? கல்யாணம் ஆவதற்கு முன்பே இத்தனை பிரச்சனைகள். இன்னும் என்ன என்ன வருமோ? என்று கலங்கியவாறே "இறைவா நீ தான் என் பெண்ணை காப்பாற்றவேண்டும். அவள் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டார்.


மறுநாள் கயல் அமர்ந்திருக்க, அவளுக்கு நலங்கு வைக்கப்பட்டது. கயலுக்கு மனதில் பயம் இருந்துக் கொண்டே இருந்தது. நேற்று நடந்ததெல்லாம் வாஸந்தி மகளிடம் சொல்ல, அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருவரிடத்திலும் தவறு இருந்தபடியால் யார் பக்கம் பேசுவதென்றே தெரியவில்லை. சாம்சனும் அடித்திருக்க கூடாது, தன் தந்தையும் அதற்கு அப்படி பேசியிருக்கக்கூடாது. என்று எண்ணியவளாக சந்தோசம் மலர வேண்டிய முகத்தில் வருத்தமும் பயமும் குடிகொண்டிருந்தது.


பின் சாம்சனுக்கு நலங்கு வைக்கப்பட்டது. அவனின் முகமே அவன் கோவத்தில் உள்ளான் என காட்டியது. அவனின் அம்மாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவன் எதுவும் பேசாமல் திருமண சடங்குகளில் ஈடுபட்டு மௌனமாக இருந்தான். முகூர்த்த நேரம் வந்ததும் மங்கள வாத்தியங்கள் முழங்க, சாம்சன் கயலின் சங்கு கழுத்தில் தாலி கட்டினான். அனைவரின் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடந்து முடிந்தது. அக்னியை வலம் வந்து இருவரும் அவரவர் பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். சாம்சன் முகத்தில் மருந்துக்கு கூட சிரிப்போ சந்தோஷமோ இல்லை. அவன் நேற்று நடந்தவைகளையே மனதில் போட்டு உழன்று கொண்டிருந்தான். திருமணம் முடிந்ததும் அனைவரும் மணமேடை ஏறி மணமக்களுக்கு பரிசுகள் வழங்கி, புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



துர்கா, அனீஸ் மற்றும் பார்வதி மூவரும் திருமணத்திற்கு வந்திருந்தனர். துர்கா மற்றும் அனீஸ் மேடை ஏறி பரிசு தந்து கயலை வாழ்த்த, கயல் அவர்களுக்கு நன்றி கூறினாள். பின் துர்காவின் காதில் பிறருக்கு கேட்காவண்ணம் மெலிதான குரலில், எப்போது உங்களுக்கும் சுஹேலுக்கும் திருமணம் என்று கேட்க, துர்கா வெட்கத்தில் தலை குனிந்தாள்.


திருமணம் முடிந்து அனைவரும் சாப்பிட சென்றதும், மாப்பிள்ளையையும் மணப்பெண்ணையும் சாப்பிட அழைக்க, சாம்சன் கயலிடம் "கயல் வா! நாம் வீட்டிற்கு செல்லலாம், அங்கே போய் சாப்பிடலாம் என கூற, வாஸந்தி முன்னே வந்து, " மாப்பிள்ளை கல்யாணம் உங்களுக்கு என் பெண்ணுக்கும் தான். நீங்களே சாப்பிடவில்லை என்றால் ஏற்பாடு செய்த எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்காதா? உங்களுக்கு எங்கள் மீது கோபம் இருந்தால் தயவு செய்து அதை இன்றைக்கு காட்ட வேண்டாம், உங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன், சாப்பிட வாருங்கள் என கண் கலங்கி நிற்க, சாம்சனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. சரி வருகிறேன். என்று கயலுடன் சென்று பேருக்கு சாப்பிட்டேன் என்று இரண்டு கவளம் சாப்பாடை வாயில் போட்டு மென்று விழுங்கி எழுந்து விட்டான்.கயலோ நேற்று நடந்த களேபரத்தில் இரவு சரியாக சாப்பிடவில்லை, காலையிலும் சாப்பிடவில்லை, ஆதலால் அவளுக்கு நல்ல பசி. இருந்தும் சாம்சன் பேருக்கு சாப்பிட்டேன் என்று எழுந்து விட, அவளும் எழுந்து விட்டாள். இதை பார்த்த வாஸந்திக்கு மனம் பதைபதைத்தது. இந்த குழந்தைகளுக்கு தானே இவ்வளவு ஏற்பாடுகள் செய்தது, இவர்களே ஒழுங்காக சாப்பிடவில்லையே என்று உள்ளுக்குள் கலங்கினாள்.


சாப்பிட்டு முடித்தது சாம்சன், கயல் கிளம்பு, நாம் நம் வீட்டிற்கு போகலாம் என அழைக்க, வாஸந்தி இருங்க மாப்பிள்ளை, முதலில் எங்கள் வீட்டிற்கு வந்து பால் பழம் சாப்பிட்ட பின்பு தான் உங்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என கூற, அத்தை, இவ்வளவு நேரம் நீங்கள் சொல்வதையெல்லாம் நான் கேட்டு அதன் படியே செய்தது உங்களுக்குகாக மட்டும் தான், தயவு செய்து இனிமேலும் எங்களை தடுக்காதீர்கள், நாங்கள் வருகிறோம்! என்று கூறி கயலையும் அவன் வீட்டாரையும் அழைத்துக் கொண்டு எதுவும் சொல்லாமல் சென்று விட்டான்.


உமர் அலி ரங்காவிற்கு போன் பண்ணினார். மறுமுனையில் ரிங் போய்க் கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை. என்னவாயிற்று இவனுக்கு ? நான் போன் பண்ணினா உடனே எடுத்துடுவானே, இப்போது ஏன் எடுக்கவில்லை? என்று எண்ணிக் கொண்டு மறுபடியும் போன் செய்தார்.

மறுபடியும் ரிங் போய்க்கொண்டே இருக்க சரி வைத்து விட்டலாம் என்று நினைக்கும்போது "யாருங்கய்யா போன்ல? என்று ஒரு புது நபரின் குரல் கேட்டது. ரங்கா இல்லையா? என்று உமர் கேட்க, ஐயா அவருக்கு உடம்பு சரியில்லை. இப்ப அவரால யாரிடத்திலும் பேச முடியாதுங்க. நீ யாரு? என்று உமர் கேட்க, நான் அவரை பார்த்துக்க வந்த ஆளுங்க என்று பதில் சொன்னான். சரி! நீ அவரிடத்தில் சென்று உமர் பேசுவதாக சொல்லு என கூற, சரிங்க! கொஞ்ச நேரம் லைன்ல இருங்க என்று கூறிவிட்டு செல்ல, சிறிது நேரம் கழித்து, ஹலோ நான் ரங்கா தான் பேசுகிறேன் ஐயா என்று சன்னமாக குரல் கேட்கவே, என்ன ரங்கா என்ன ஆச்சு? அதையேன் கேட்கறீங்க ! நீங்க அந்த பொண்ணை தீர்த்து கட்ட சொன்னீங்களே! அதனாலே நான் நம்ம சுறா கிட்ட என் லாரியை கொடுத்து அந்த பொண்ணு மேல ஏத்தி கொல்ல சொன்னேன். அவனும் லாரியை எடுத்துண்டு போய் அந்த பொண்ணு மேல ஏத்த போகும்போது நடுவுலே வேற ஒரு பொண்ணு புகுந்து காரியத்தையே கெடுத்துட்ச்சி. ஐயா நீங்க கொல்ல சொல்லற பொண்ணு பெரிய இடத்து புள்ளையா? சுறா இடிச்சதை எப்படியோ போலீஸ் கண்டுபிடிச்சிட்டாங்க. லாரியும் எந்துதானு தெரிஞ்சிடுச்சி. என்னையும் சுறாவையும் பிடிச்சி பின்னி பெடல் எடுத்துட்டாங்க! இதிலே டி .ஸ்.பி யே தனிப்பட்ட முறையிலே விசாரிச்சதனாலே எங்களை செம்மையா கவனிச்சிட்டாங்க ஐயா. எல்லாமே உள் காயம், நடக்க கூட முடியல ஐயா. நானும் எத்தனையோ தப்பு செய்து சிறைக்கு எல்லாம் போயிருக்கேன், ஆனா இந்த மாதிரி அடி வாங்கினது இல்லை ஐயா. என் எலும்பை எண்ணிட்டாங்க. ஆனா உங்க பேரை மட்டும் நாங்க சொல்லல ஐயா. சுறா குடிச்சிட்டு வண்டி ஓட்டினதா சொல்லிட்டேன். இரண்டு பெரும் கடைசி வரைக்கும் அதையே தான் சொன்னோம். இனிமே இதுமாதிரி செய்ய மாட்டோம் என்று எழுதி வாங்கிட்டாங்க என்று சொல்லி மூச்சு வாங்கினான்.



இதைக் கேட்ட உமருக்கே பரிதாபமாக இருந்தது. சரி! சரி! நான் என் ஆளு மூலமா உனக்கு பணம் கொடுத்து அனுப்புறேன். அதை உன் மருத்துவ செலவுக்கு வைச்சுக்கோ. இந்த வேலையை கொஞ்சம் தள்ளி போடு. எங்க போய்டும் அந்த பொண்ணு என்று கூறவே, ஆமாங்க ஐயா, கொஞ்ச நாள் பொறுத்து தான் செய்யணும், சரிங்க! நான் போனை வச்சுடுறேன் என்று சொல்லி போனை வைத்தான். உமருக்கு பற்றிக் கொண்டு வந்தது. துர்கா உனக்கு ஆயுசு கெட்டி தான். ஆனாலும் உன்னை நான் சும்மா விட மாட்டேன் என்று தனக்குள் பொருமிக் கொண்டார்.


கயல் மற்றும் சாம்சன் குடும்பத்தினர் வீட்டிற்குள் நுழைந்தனர். ரெபேக்கா கயலை அழைத்து ஹாலில் பக்கத்தில் தொங்கப்பட்டிருக்கும் மேரியின் படத்தருகே அழைத்து போனாள். படத்தின் கீழே பொருட்கள் வைப்பதற்கான மரப்பலகை இருந்தது. அதில் மெழுகுவர்த்தி திரி சட்டம் ஒன்று இருந்தது, ரெபேக்கா அவள் கையில் மெழுகுவர்த்தி ஒன்றை கொடுத்து மேரி மாதாவை வணங்கி அத்தனை ஏற்றி அந்த சட்டத்தின் மேல் வைக்க சொன்னாள். கயலும் அவ்வாறே செய்தாள்.


ரெபேக்கா அவளிடம் உங்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லம்மா. நீங்கள் மாரியம்மனுக்கு விளக்கு ஏற்றுகிறீர்கள், நாங்கள் மேரி அன்னைக்கு மெழுகுவர்த்தி ஏற்றுகிறோம். சில சடங்குகள் தான் மாறுமே தவிர மனதால் அனைவரும் ஒன்றுதான் கயல். அனைத்து மதத்திலும் அன்பு தான் பிரதானமாக கூறப்பட்டுள்ளது என்று அவள் சொல்லி முடிக்கவும், அத்தை, நான் ஜாதி மதம் எல்லாம் பார்ப்பதில்லை. அப்படி பார்த்திருந்தால் உங்கள் மகன் தான் வேண்டும் என்று என் தந்தையிடம் வாதிட்டு இருக்க மாட்டேன். மண்டபத்தில் நடந்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அத்தை. என் தந்தை பேசினது தவறு தான். என் பெற்றோரின் நோக்கம் நான் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது தான் மற்றபடி வேறொன்றும் இல்லை, அவர் கோபத்தில் தான் என்ன பேசுவதென்று தெரியாமல் பேசிவிட்டார். மனதால் அவர் அப்படி இல்லை அத்தை. இருந்தால் இந்த திருமணதிற்கு சம்மதித்து இருப்பாரா? என்று கூறவும், ரெபேக்கா நடந்தது நடந்து விட்டது, நான் அதனை அப்போதே மறந்து விட்டேன் கயல். நீ என் மருமகள் மட்டுமல்ல; என் பிள்ளைக்கு உயிர் கொடுத்த எங்கள் வீட்டு தெய்வம், அப்படி தான் கயல் உன்னை நான் பார்க்கிறேன். என் உயிருக்கும் மேலாக உன்னை பார்த்துக் கொள்வேன். உன் சந்தோஷத்திற்கு இங்கு எந்த குறையும் வராது. ரெபேக்கா கூறியதை கேட்டு காலையில் இருந்து பயத்தில் இருந்த அவள் முகம் சற்று தெளிவாகி புன்னகை புரிந்தாள்.


ரெபேக்கா மகனிடம் திரும்பி, தம்பி இதையே நினைத்து கயல் மனதை காயப்படுத்ததே, இன்றிலிருந்து நீங்கள் புது வாழ்க்கை துவங்க போகிறீர்கள். அதை இருவரும் சந்தோஷமாக ஆரம்பியுங்கள் என்று அறிவுரை கூறினாள். பின் நீங்கள் இரண்டும் பேரும் சரியாக சாப்பிடவில்லை. நான் போய் இருவருக்கும் பால் கொண்டு வருகிறேன். குடித்து விட்டு சற்று நேரம் ஓய்வெடுங்கள். நான் அரை மணி நேரத்தில் சமைத்து விடுகிறேன் என்று கூறி சமையலறை நோக்கி சென்றாள்.


ரெபேக்கா சென்றவுடன் சாம்சன் தன் அறையில் நுழைந்து காலையில் அணிந்திருந்த வேட்டி சட்டையை கழற்றிவிட்டு பனியனும் லுங்கியுமாக மாறினான். பின் அவளிடத்தில் வந்து, "என்ன அப்படியே உட்க்கார்ந்து இருக்கிறாய்! போய் முகம் அலம்பிக் கொண்டு வேறு உடையை மாற்று என்று கூறியதும் கயல் எழுந்து அவனுடைய அறைக்கு சென்றாள். அறை சிறியதாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது. அந்த அந்த பொருள் அந்த அந்த இடத்தில் பாந்தமாய் அமர்ந்திருந்தது. சிறிய கட்டில் என்றாலும் இரண்டு தலையணைகள் புது பெட்ஷீட் என்று பார்க்க தூய்மையாக இருந்தது. அவள் நேரே குளியல் அறைக்கு சென்று முகம் அலம்பிக் கொண்டு வந்தாள். மாற்று துணி இல்லாததால் அவள் கல்யாண பட்டு புடைவையிலேயே இருந்தாள். வெளியே வந்து இருக்கையில் அமர போனவளை சாம்சன் பார்த்து, "என்ன வேறு உடை மாற்றவில்லையா" என கேட்க, நீங்கள் என்னை மண்டபத்தில் இருந்து கிளம்பு என்று அப்படியே அழைத்து வந்து விட்டீர்கள். பிறகு என்னுடைய பொருட்கள் எல்லாம் எப்படி என்னிடத்தில் இருக்கும்? எப்படியும் அம்மா வந்து இரவு கொடுத்து விட்டு போவார்கள் என கூறியதும், அதுவரை இந்த புடவையிலேயே இருப்பாயா? அம்மாவிடம் போய் கேள். அவர்கள் மாற்று உடை தருவார்கள் என கூற, சரி என்று கயல் சமையலறை நோக்கி சென்றாள்.
 
Last edited by a moderator:
அத்தியாயம் 30



ரெபேக்கா இவர்களுக்கு பால் எடுத்துக் கொண்டு வர, அத்தை உங்களிடத்தில் புடவை இருந்தால் தாருங்கள். காலையில் இருந்தே இதே புடைவையில் இருக்கிறேன் எனக் தயங்கியவாறு கூற, என்னம்மா நீ? இதற்கு ஏன் தயங்குகிறாய்? உனக்காக நான் இரண்டு மூன்று புடவை வாங்கி வைத்திருக்கிறேன். இரு கொண்டு வருகிறேன் என்று கூறி உள்ளே சென்று மூன்று புடவைகளை எடுத்து வந்தாள். இப்போதைக்கு ஒன்று போதும் அத்தைஎன்று கூறி ஒரு காட்டன் சாரியை எடுத்துக் கொண்டு போய் அணிந்து வந்தாள். கடல் நீல நிறத்தில் ரோஜா நிற சின்ன சின்ன பூக்கள் ஆங்காங்கு சிறியதாக இருக்க, அந்த புடவை கயலுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. ரெபேக்கா அவளை பார்த்து, இந்த புடைவையில் நீ ரொம்ப அழகா இருக்கேம்மா என்று கன்னத்தை தொட்டு திருஷ்டி கழித்தாள். சாம்சன் அவளையே தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதை பார்த்த கயலுக்கு புடவை அழகா இருக்கா இல்லையானு எதாவது சொல்றான பாரு, கடுவன் பூனை மாதிரி மூஞ்ச தூக்கி வச்சிட்டு முறைச்சு பாக்கிறத பாரு, சாம்ஸ் உன்னை அப்புறமாக கவனிச்சிக்கிறேன், என்று மனதில் சொல்லிக் கொண்டு அவனை பார்த்து செயற்கையாக சிரித்து வைத்தாள்.



சிறிது நேரத்தில் ரெபேக்கா சமைத்து விட, அனைவரும் கீழே அமர்ந்து உணவு உண்டனர். உணவு நன்றாக இருக்கவே, கயலுக்கு மிகுந்த பசியாதலால் ஒரு பிடி பிடித்தாள். எல்லாவற்றையும் சுத்தம் செய்து விட்டு ரெபேக்கா ஓய்வெடுக்க மற்றொரு அறைக்கு போக, கயலும் சாம்சனின் அறைக்குச் சென்றாள். அவள் பின்னாடியே சாம்சனும் வந்தான்.



ஒரு மாதம் சென்றுவிட்டது. துர்காவிற்கு சுஹேலுக்கு போன் பண்ண வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கோவிலுக்கு சென்று வரும் வழியில் உள்ள டெலிபோன் பூத்தில் தான் போன் செய்யவேண்டும் என்று நினைத்தவளாக, பார்வதியிடம் அண்ணி, நான் கோவிலுக்கு சென்று விட்டு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்றாள். அவள் சென்ற நேரம் கோவிலில் கூட்டம் அதிகம் இல்லை. விநாயகரை முதலில் வணங்கிய பின் அங்கிருக்கும் அம்மனை வணங்கிவிட்டு பிரகாரம் சுற்றிவிட்டு கொஞ்ச நேரம் அமர்ந்து செல்லலாம் என்று விநாயகர் பக்கத்தில் இருக்கும் மண்டபத்தில் அமர்ந்தாள். அங்கு இருக்கும் சூழ்நிலை அவள் மனதில் அமைதியை கொடுத்தது. அப்படியே கண்மூடி அந்த அமைதியை இரசித்துக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று அவள் காதில் "நீ விரும்புபவன் உன்னை விட அதிகமாக உன்னை விரும்புவான்" என்ற குரல் கேட்டு சட்டென்று கண் திறக்க , அங்கு ஒரு இருபது வயது மதிக்க தக்க ஒருவன் ஆடை கிழிந்த நிலையில், தலையில் முடி தாறுமாறாக களைந்து இருக்க, அவளை பார்த்து சிரித்தான் . அவனை பார்த்து பயந்தவளாக சற்றே பின்னே போனாள் துர்கா. அவன் அவளை பார்த்து சிரித்து எனக்கு பசிக்குது, ஏதாவது இருந்தா கொடேன் என்று கேட்கவும், அவளுக்கு சிறிது நேரம் பயத்தில் ஒன்றுமே விளங்கவில்லை.



பின் சுதாரித்தவளாக தன் கையில் இருக்கும் அர்ச்சனை பையில் இருக்கும் பழத்தை அவனுக்கு கொடுக்க அவன் முகத்தில் சிரிப்புடன் ஐய்யா! வாழைப்பழம் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான், துர்காவிற்கு ஒரு நிமிடம் மூச்சு நின்று திரும்பி வந்தது போல் இருந்தது. துர்கா அவன் போவதையே பார்த்துக் கொண்டிருக்க, அங்கு வந்த கோவில் ஐயர், என்னம்மா அந்த பையனை பார்த்து ரொம்ப பயந்திட்டியா! அவன் எதுவும் செய்யமாட்டன்ம்மா, யார்கிட்டயும் பேசவும் மாட்டான். சாப்பாடு கொடுத்தா சாப்பிடுவான். அப்புறம் சத்தம் எதுவும் பண்ணாம போயிடுவான். இங்கே தான் ரொம்ப வருஷமா சுத்திக்கிட்டு இருக்கான். பாவம் யார் பெற்ற பிள்ளையோ! ஆனா அவன் பேசி நான் பார்த்ததில்லை, இன்னைக்கு தான் உன் கிட்ட பேசியிருக்கான் என்று சொல்லிவிட்டு போனான்.



துர்கா இன்னும் பயத்தில் நடுங்கி கொண்டிருக்க, ஐயர் சொன்னது பாதி தான் காதில் விழுந்தது. சிறிது நேரத்தில் தன்னை சமன் படுத்திக்கொண்டு கோவிலுக்கு வெளியே வந்தாள். பின் சுஹேலுக்கு போன் பண்ண வேண்டும் என்ற ஞாபகம் வர போன் பூத்தை நோக்கி சென்றாள்.அவள் போன் பண்ணியதுமே சுஹேல் எடுக்க, ஹலோ மை லிட்டில் டார்லிங், எப்படி இருக்கே என்று கேட்க, நான்தான் போன் பன்னேறேன்னு எப்படி கண்டுபிடிசீங்க? என்று துர்கா கேட்க, என் உள் மனசு சொல்லிச்சு நீ தான் போன் பண்ணி இருப்பேன்னு, நான் நல்லா இருக்கேன் என்று சொல்ல, என்ன உன் குரல் என்னமோ போல் இருக்கு, உடம்பு சரியில்லையா என்று கேட்க, இல்ல சுஹேல், உடம்புக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லி கோவிலில் நடந்தவற்றை விளக்கினாள். அதைக் கேட்டதும் சுஹேல் சிரித்து, இதுக்கு போய் யாராவது இவ்வளவு நேரம் இப்படி பயப்படுவாங்களா? அவன் என்ன நல்லது தானே சொன்னான். பாரு! அவனுக்கு கூட தெரியுது, நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன் என்று அவன் சொல்லிக் கொண்டே போகவும், போதும் சார்! உங்க அன்பை பத்தி எங்களுக்கு தெரியாதா? அவன் தீடீரென்று காதில் வந்து சொல்லவும் நான் பயந்து விட்டேன் என்று கூற, சரி அதை விடு! உங்கள் வீட்டில் பார்வதி ஆண்ட்டி, குழந்தைகள் மற்றும் அங்கிள் எப்படி இருக்கிறார்கள் என கேட்க. எல்லோரும் நலமே, உங்கள் படிப்பு எப்படி இருக்கிறது? அங்கு உள்ள உணவு உங்களுக்கு பிடிக்கிறதா? பிடித்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் பசிக்கு ஏதாவது சாப்பிட்டு தானே ஆகவேண்டும். சரி துர்கா. ரொம்ப நேரம் பேசினால் உனக்கு தான் டெலிபோன் பில் அதிகமாகும். அப்புறம் பேசலாம் என்று கூறி போனை வைத்துவிட்டான். துர்கா வீட்டிற்கு சென்றதும் கோவிலில் நடந்ததை பார்வதியிடம் சொன்னாள், அனைத்தையும் சொன்னவள், அந்த பையன் காதில் வந்து என்ன சொன்னான் என்பதை மட்டும் மறைத்து விட்டாள். அதைக் கேட்டு கொண்டிருந்த பார்வதி "உனக்கு மட்டும் ஏண்டி நீ பயந்து நடுங்கும்படி எல்லாம் நடக்குது? என்று கூறி போய் சாப்பிடு என்று அவளை சாப்பிட அனுப்பினாள்.



கயல் அறைக்குள் நுழைந்ததும் கட்டிலில் மேல் சோர்வாக அமர, அவள் பக்கத்தில் சாம்சன் அமர்ந்தான். அவன் பக்கத்தில் அமர்ந்ததும் கயல் சற்று தள்ளி அமர்ந்து முகத்தை திருப்பி கொண்டாள். சாம்சன் வேண்டுமென்றே அவளை இடித்து கொண்டு அமர, அவள் அவனை பார்த்து முறைத்தாள். என்ன டாக்டரம்மா உங்களுக்கு இன்னும் என் மேல் இருக்கும் கோவம் போகலையா? என்று கூற, அவள் மண்டபத்தில் இருந்து சரியாக கூட சாப்பிடாமல், எங்கள் வீடிற்கு கூட செல்லாமல் அப்படியே அழைத்து வந்து விட்டால் கோபப் படாமல் கொஞ்சவா செய்வார்கள்! என் அப்பா, அம்மா மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்? நன்றாக இருக்கிறதே! உன் அப்பா பேசியதற்கு கோப படாமல் அங்கேயே இருந்து விருந்து உண்ணவா முடியும். இதுவே நாங்கள் பணக்காரார்கள் என்றால் இப்படி பேசுவார்களா! என வருத்ததுடன் சாம்சன் கூற, கயலின் மனம் பதைபதைத்தது.



என்ன சாம்சன் இது? இப்படி பேசுகிறீர்கள்? என்னுடைய பெற்றோர் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு எல்லாம் பார்ப்பவர் இல்லை. அப்பா சொன்னது தவறு தான். அவர் ஏதோ ஆதங்கத்தில் பேசிவிட்டார், அவருக்காக மறுபடியும் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அதை மறந்து விடுங்கள். என அவள் கெஞ்சலாக கூற சாம்சன் எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் மௌனமாக இருந்தான்.



அப்போது கயல் இங்கே வா, உங்கள் வீட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் என ரெபேக்காவின் குரல் கேட்க, கயல் அறையில் இருந்து வெளியே வந்தாள். அங்கே அவளின் அன்னையும் ராகேஷும் நின்றிருந்தார்கள். வாங்கம்மா, வா! ராகேஷ் என்று அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தாள். ரெபெக்காவும் அவர்களை அமரச் சொல்லி சமையல் அறைக்குச் சென்றாள். சாம்சன் வெளியே வந்து வாங்க! என்று மட்டும் கூறி மீண்டும் தன் அறைக்கே சென்றுவிட்டான். வாஸந்தி கயலிடம், "கயல் மாப்பிள்ளை இன்னும் கோபமாகத்தான் இருக்காரா? என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. வருத்தமாக இருக்கார். அப்பா அப்படி பேசி இருக்க கூடாது அம்மா என்று இறுகிய முகத்துடன் கூற, என்னம்மா பண்றது? அப்பாவுக்கு உன் மேல் பாசம் அதிகம் என்று உனக்கே தெரியும். அவர் இதற்கு முன்னே இப்படி கோபமாக பேசியது உண்டா ? அவர் உள் மனதில் உன்னை பற்றி வருத்தம், ஆதங்கம் தான் அப்படி பேசி விட்டார். நான் வேண்டுமென்றால் மாப்பிள்ளை இடத்தில் மன்னிப்பு கேட்கவா! என்று கூறிக்கொண்டே இருக்கையில் இருந்து எழ, அங்கே ரெபேக்கா கையில் காபி தட்டுடன் வந்தாள். அதெல்லாம் ஒன்னும் வேணாங்க. நீங்க வயசில் பெரியவங்க, நீங்க போய் அவன்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம். முதலில் இந்த காபியை குடிங்க! என்று காபியை வாஸந்திக்கும் ராகேஷிக்கும் கொடுத்தாள்.





வாஸந்தி அவளிடம் இன்னைக்கு அவர்களுக்கு சாந்தி முகூர்த்தம் இல்லையா, அதனால் எங்கள் பக்கத்தில் இருந்து சில சடங்குகள் செய்ய வேண்டியிருக்கு. உங்களுக்கு இதில் ஏதாவது ஆட்சேபனை இருக்கா என்று கூற, என்ன சம்பந்தி! இதுவும் உங்கள் வீடு போலத்தான். நீங்கள் பிள்ளைகள் நன்றாக வாழவேண்டும் என்று தானே செய்கிறீர்கள். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறவும், வாஸந்தி தன பைகளில் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைத்தாள். கயலிடம் துணிக் கவரை நீட்டி, இதில் உனக்கும் மாப்பிள்ளைக்கும் புது உடை வச்சிருக்கிறேன், இதை இரண்டு பெரும் உடுத்திக் கொண்டு வாங்க என்று கூறி கவரை கொடுக்க, கயல் அதை எடுத்துக் கொண்டு அவர்களின் அறைக்கு சென்று அந்த புது ட்ரெஸ்ஸை தாமும் அணிந்து கொண்டு சாம்சனையும் உடுத்த சொன்னாள். சாம்சன் முதலில் மறுத்தாலும் கயல் அவனிடத்தில் கெஞ்சும் பார்வையால் பார்க்க அவனும் வேறு வழியின்றி உடுத்திக் கொண்டான்.



இரண்டு பேரும் வெளியில் வந்தவுடன் வாஸந்தி தான் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் ரெபேக்காவின் உதவியுடன் சாம்சனின் அறையில் எடுத்து வைத்தாள். பின் தான் எடுத்து வந்த பூக்கள் மாலைகளை எல்லாம் வைத்து அந்த அறையை அலங்கரித்து விட்டு வெளியே வந்தார்கள். பின்னர் கயலும் சாம்சனும் ரெபேக்கா, ஜாக்கோபின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். பின்னர் வாஸந்தியின் காலிலும் விழ அவர் இன்னைக்கு தொடங்கப்போற உங்கள் வாழ்க்கை என்றும் சந்தோஷமாக அமையட்டும் என்று வாழ்த்தினார்.பின்னர் கயலிடத்தில் பால் சொம்பு தர, அவள் அதனை வாங்கி கொண்டு சாம்சன் அறையை நோக்கி சென்றாள். வாஸந்தியும் ராகேஷும் அனைவரிடமும் விடை பெற்று சென்று விட, ரெபேக்கா நிம்மதி பெருமூச்சு விட்டு, சமையல் அறையை சுத்தம் செய்ய சமையல் அறை நோக்கி சென்றாள்.



அங்கு சாம்சன் கட்டிலில் அமர்ந்திருக்க, கயல் அவனிடம் சென்று பாலை கொடுத்தாள். சாம்சன் அதை வாங்கி பக்கத்தில் இருக்கும் மேஜை மேல் வைத்து விட்டு, கயல் உன்னிடத்தில் கொஞ்சம் பேச வேண்டும், இப்படி வந்து உட்கார் என்று அவளை தன் புறத்தில் அமர்த்திக் கொண்டான். இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். பின் சாம்சனே பேசத் தொடங்கினான். கயல், எனக்கு வாழ்க்கையில் ஒரே லட்சியம் என்னுடைய நிறுவனத்தை பெரிதாக்க வேண்டும் என்று முன்பே நான் உன்னிடத்தில் சொல்லியிருக்கிறேன். அதற்காகத்தான் நான் அல்லும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன், இந்த திருமணம் நான் எதிர்பாராமல் நடந்த ஒன்று. அதற்காக உன்னை நான் காதலிக்கவில்லை என்றும், விருப்பமில்லாமல் திருமணம் செய்துக் கொண்டேன் என்றும் கூறவில்லை. நான் உன்னை என் வாழ்க்கையில் நுழைந்த அதிர்ஷ்ட தேவதையாகத்தான் நினைக்கிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் செல்லம்மா. உன் தந்தை அப்படி பேசியதில் இருந்து ஒரு வேளை உனக்கு நான் பொருத்தமில்லையோ என்று கூட நினைக்க தோன்றுகிறது. இந்த மன நிலையில் எப்படி என்னால் உன்னுடன் சந்தோஷமாக வாழ முடியும். எனவே என் தகுதியை உயர்த்திக் கொள்ள எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை. அதுவரைக்கும் எனக்காக காத்திருக்க முடியுமா என் செல்ல டாலி என்று கேட்க, அதென்ன டாலி என்று கேட்க, நீ பொம்மை மாதிரி இப்படி வழு வழு வென்று இருந்தால் உன்னை அப்படி தான் கூப்பிட தோன்றுகிறது என்று அவன் குறும்பாக கூற, அப்படியா என்று அவள் அவனையே உற்று நோக்க, இப்படியெல்லாம் என்னை பார்த்தால் நான் லட்சியம் பெரிசில்லை என்று அலட்சியமாக இருந்து விட்டு உன்னை.. என்று அருகில் வர நில்லுங்கள்! நில்லுங்கள்! உங்களுடைய லட்சியத்திற்கு நான் என்றும் தடையாக இருக்க மாட்டேன் சாம்ஸ். நீங்கள் சீக்கிரமாகவே மிக நல்ல நிலையை அடைவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூற, என்னை புரிந்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி கயல், நீ என்ன சொல்வாயோ என்று எனக்கு ஒரே யோசனையாய் இருந்தது. நீ சம்மதம் தெரிவித்தது எனக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது, நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையும் வந்துள்ளது என்று சாம்சன் கூறவும் கயல் புன்னகை புரிந்து சரி தூங்குவோமா? என கூறி கட்டிலின் ஓரமாய் அவள் படுக்க அவனும் அதே கட்டிலில் சற்று தள்ளி படுத்தான். இருவருக்கும் ஒரே அசதியாய் இருக்கவே சீக்கிரமாகவே தூங்கி போனார்கள்.
 
Last edited by a moderator:

New Threads

Top Bottom