Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

அத்தியாயம் 31

நாட்கள் நகர்ந்துக் கொண்டு இருந்தன. துர்கா CA நுழைவு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாள். அவனுடைய தமையன் அவன் முன்பே கூறியது போல அவளை அவன் நண்பன் சொன்ன இன்ஸ்டிடியூட்டில் சேர்த்து விட்டு இருந்தான், அவளும் முன்பு வேலை செய்த நிறுவனத்தை விட்டு, இன்ஸ்டிடியூட் பக்கத்திலேயே வேறு நிறுவனத்தில் கணக்காளராக வேலையில் சேர்ந்தாள். தான் தேர்வில் தேர்ச்சி பெற்றதை போனில் சுஹேலிடம் சொல்ல, அவனும் மகிழ்ச்சியடைந்தான். "மை ஸ்வீட் லிட்டில் டார்லிங், கீப் இட் அப்" என்று சொல்லி அவளை நாணமுற செய்தான்.


அந்த இன்ஸ்டிடியூட்டிற்கு சென்றவுடன் முதலில் துர்காவிற்கு சற்று பயமாகத்தான் இருந்தது. அங்கு உள்ளவர்களை பார்க்கும் போது படிப்பாளிகள் போல் தோன்றியது. இவர்களுக்கு இணையாக நம்மால் படிக்க முடியுமா என்ற கலக்கம் தோன்றியது. அவர்களிடம் பேசவே துர்காவிற்கு தயக்கமாக இருந்தது. அவர்கள் ஏதாவது கேள்வி கேட்டு இவளுக்கு தெரியாமல் போய்விட்டால் மிகவும் அவமானமாகி போய்விடுமே என்று யாரிடத்திலும் பேசாமல் அமர்ந்திருந்தாள். அப்போது அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்த பையன், ஹலோ என் பெயர் சந்தோஷ், நானும் இன்று தான் இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன், உங்கள் பெயர் என்ன? என்று கேட்கவும், அவனின் அணுகுமுறை துர்காவிற்கு பிடிக்கவே, அவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அவன் பார்க்க ஒடிசலாக, சிவப்பாக இருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். சொல்லப்போனால் அந்த காலத்து சினிமா டைரக்டர் பாலச்சந்தர் அறிமுகம் படுத்திய பழைய விவேக் போல இருந்தான். அவனும் துர்காவும் சிறிது நேரத்திலேயே நெருங்கிய நண்பர்கள் ஆயினர். அவன் படிப்பிலும் படு சுட்டியாக இருந்தான். துர்கா தனக்கு தெரியாத கணக்குகளை எல்லாம் அவனிடத்தில் கேட்டு தெரிந்துக் கொண்டாள். அவன் அவளுக்கு நல்ல தோழனாக விளங்கினான். அவன் துர்காவிடம் அவனுக்கு அப்பா இல்லை என்றும் அம்மா அரசாங்க உத்யோகத்தில் இருப்பதாகவும், அவனுக்கு ஒரு தங்கை இருந்ததாகவும் ஆனால் ஐந்து வயதிலேயே கடும் காய்ச்சலால் இறந்து விட்டதாகவும் தெரிவித்தான். துர்காவிற்கு அவன் பழகும் விதம் மிகவும் பிடித்திருந்தது. எப்போதும் சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டே இருப்பான். அவன் பேருக்கு ஏத்தாற்போல் அடிக்கடி நகைச்சுவை செய்து அடுத்தவர்களை சிரிக்க வைத்து சந்தோஷம் காண்பான். அவனை ஒரு முறை வீட்டிற்கும் அழைத்து வந்தால் துர்கா. வீட்டில் உள்ளவர்களையும் தன் சிரிப்பில் திக்கு முக்காட செய்தான். அவனை போன் மூலம் சுஹேலுக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். அவன் பேசுவதை கேட்ட சுஹேல், பரவாயில்லை உனக்கு பொழுது போக்க ஒரு நல்ல நண்பன் கிடைத்து விட்டான். இனி இந்த காதலன் ஞாபகம் எல்லாம் வருமோ இல்லையோ என்று கேட்க, ஹே! அவன் கூட பேசுவது பழகுவது உனக்கு பொறாமையாய் இருக்கிறதா! என்று துர்கா கேட்க, பொறாமையெல்லாம் இல்லை. உன் புது நண்பனின் வரவால் என்னை மறந்து விடாமல் இருந்தால் சரி என்று கூற, உன்னை நினைக்காமல் இருந்தால் அல்லவா மறப்பதற்கு! நீதான் என் உயிர் வரை போய் அமர்ந்து இருக்கிறாயே! என்று கூற, அப்படியா! மை ஸ்வீட் லிட்டில் ஹார்ட் என்று அக மகிழ்ந்து போனான் சுஹேல்.


சந்தோஷ் அடிக்கடி துர்காவிடம்" நீ மட்டும் எப்போதும் அமைதியாய் இருக்கியே! எப்படி துர்கா உன்னால் முடிகிறது? நானும் ஒரு நாலாவது உன்னை போல் இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன் ஆனால் என்னால் இருக்கவே முடியவில்லை என்று கூற, அது உன்னால் இந்த ஜென்மத்தில் முடியாதுடா என்று துர்கா கூறி சிரிப்பாள். ஏன் முடியாது? கண்டிப்பாக ஒரு நாள் உன்னை போல் அமைதியாய் இருந்து காட்டுகிறேன் பார்! என்று அவன் சவால் விடுவான், ஆனால் தான் ஒரு நாள் இல்லை ஒரு வாரம் அப்படி இருப்பான் என்று அப்போது அவனுக்கு தெரியவில்லை!


பெரும்பாலும் துர்கா காலையில் ஆறு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி விடுவாள். இரண்டு மணி நேரம் CA வகுப்பை முடித்துக் கொண்டு பின் அருகில் இருக்கும் தான் வேலை செய்யும் அலுவலகத்திற்கு சென்று விடுவாள். அதற்கு பின் வீடு வந்து சேர இரவு ஏழு அல்லது எட்டு மணி ஆகிவிடும். முன்பு போல் அவளால் இரவு நேரங்களில் பார்வதிக்கு உதவி செய்ய முடியவில்லை, பார்வதியும் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. துர்காவை பார்க்கவே அவளுக்கு மிகவும் பாவமாக இருக்க, அவளை இரவு நேரங்களில் வேலை செய்ய வேண்டாம் என்று தடுத்து விட்டாள். துர்காவிற்கு அலுவலகத்திலிருந்து வந்ததும், சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் படித்துவிட்டு தூங்கவே சரியாக இருந்தது,


சாம்சன் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. அவன் வெளிநாட்டு ஆர்டர்களை அதிகமாக பிடித்தான். அவனிடத்தில் இருக்கும் வேலையாட்கள் போதவில்லை என்று புதிதாக நபர்களையும் நியமித்தான். காலை ஒன்பது மணிக்கு சென்றால் இரவு வீட்டிற்கு வர பதினோரு மணி ஆகிவிடும். அவன் வரும் நேரத்தில் கயல் ஆழந்த துயிலில் இருப்பாள். அவளை தொந்தரவு செய்யாமல் அவள் அருகில் படுத்து உறங்கி விடுவான். வார விடுமுறையில் தன் நிறுவனத்தை விரிவுபடுத்த தேவையான இயந்திரங்களையும் மற்றும் உதிரி பாகங்களையும் பார்த்து வெளிநாட்டில் இருந்து தருவிக்கவும், புதிதாக கட்டடம் கட்ட இடத்தை தேர்வு செய்யவும் அதற்காக வங்கி கடன் வாங்க அலைவது போன்ற வேலைகளே அவனுக்கு அதிகமாக இருந்தது. இதனால் கயலுக்கு அவனிடத்தில் சரியாக பேசக் கூட முடியவில்லை, அவளும் மருத்துவமனை செல்ல ஆரம்பித்திருந்தாள்.


ரெபேக்கா அவளுக்கு காலை எழுந்தவுடன் கையில் காபி கொடுத்து பின் காலை சிற்றுண்டி செய்து, அவள் எடுத்து செல்வதற்கு மதிய உணவும் கையில் கொடுத்துவிடுவாள். கயல் வேண்டாம் அத்தை. உங்களுக்கு ஏன் வீண் சிரமம், நான் வெளியில் பார்த்துக் கொள்வேன் அல்லது எங்கள் மருத்துவமனை கேன்டீனில் வாங்கி சாப்பிடுவேன் சொன்னால் கூட விட மாட்டாள. நான் இருக்கும் போது நீ ஏனம்மா வெளியில் சாப்பிடவேண்டும் அதெல்லாம் வேண்டாம். உடம்பு கெட்டுவிடும். நானே உனக்கு சமைத்து தருகிறேன் என்று மருமகளை தாங்கு தாங்கு என்று தாங்கினாள். கயலுக்கு சாம்சனிடம் ஒழுங்காக பேச முடியவில்லையே என்ற வருத்தத்தை தவிர அந்த வீட்டில் அவளுக்கு ஒரு குறையும் இல்லை. அவள் பேச்சுக்கு அந்த வீட்டில் மறுவார்த்தை இல்லை. அவள் அந்த வீட்டிற்கு சென்றதுமே நிறைய மாற்றங்கள் செய்தாள்.


வீட்டை முன்பு இருந்ததை விட இன்னும் அழகுபடுத்தினாள். வெளியில் இருக்கும் சிறிய இடத்தில் சிறு சிறு பூச்செடிகளை வைத்து அழகுபடுத்தினாள். தனக்கு புதிய ஆடை வாங்கும்போது தனது மாமியாருக்கும் பியூலாவுக்கும் சேர்த்து வாங்கினாள். ரெபேக்கா வாங்க மறுத்தும் அவளிடத்தில் வலுக்கட்டாயமாக கொடுத்து அவளை அணிய செய்தாள். பியூலாவின் விருப்பப்படி அவளை மருத்துவம் படிக்க தகுந்த கோச்சிங் சென்டரில் சேர்த்துவிட்டாள். படிப்பில் ஏற்படும் சிறு சிறு சந்தேங்கங்களை சளைக்காமல் சொல்லிக் கொடுத்தாள். ஜேக்கப்பிற்கு அடிக்கடி காலில் நரம்பு இழுத்துவிடும். அவர் வலியால் அவதிப்படும் போது அவருக்கு தகுந்த முதலுதவி செய்து மருந்து வாங்கி கொடுத்தாள். அந்த வீட்டையே தன் அன்பு கயிற்றால் கட்டி போட்டிருந்தாள். சாம்சனிடத்தில் இருந்து அவன் குடும்பத்திற்கு செய்யும் வேலைகளை எல்லாம் இவள் செய்தாள். ரெபக்காவுக்கு உதவியாக வேலை செய்ய ஒரு பெண்மணியை நியமித்தாள். அதன் மூலம் அவளுக்கும் சிறிது ஓய்வு கொடுத்தாள். தன் கணவனுக்கு தேவையானதையும் பார்த்து பார்த்து செய்தாள். ஆனால் சாம்சனோ தன்னுடைய மனைவி தன்னிடத்தில் இருந்து குடும்பத்தை கவனித்துக்கு கொள்கிறாள் என்ற சிந்தனையே இல்லாமல் தன் நிறுவனத்தை சுற்றியே அவன் நினைவு முழுவதும் இருந்தது. கயலுக்கு அவனை பார்க்க பார்க்க கோபமும் ஆதங்கமுமாய் இருந்தது. நாம் எப்படி இவனை விழுந்து விழுந்து காதலித்தோம்! இவன் தான் வேண்டும் என்று நம் பெற்றோரிடம் வாதாடி இவனை திருமணம் செய்தோம். இவனென்றால் நம்மிடம் ஒரு வார்த்தை பேசுவதற்கு கூட நேரம் இல்லாமல் இப்படி நிறுவனத்தை உயர்த்த வேண்டும் என்று அவனுடைய வேளையிலேயே கவனத்தை செலுத்துகிறானே! என்று தான் என் அன்பை, காதலை புரிந்து கொள்வானோ? என உள்ளுக்குள் மருகினாள்.

சாம்சனுக்கு கயல் உடனே இருக்க வேண்டும். அவளுடன் தனியாக வெளியில் சென்று வர வேண்டும் என்ற ஆசை தான். ஆனால் நிறுவனத்தின் வேலை அவனை அழுத்தியது. அவன் ஒருவனே ஒவ்வொவென்றையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும் என்பதால் அவனின் கவனத்தை கயலிடம் செலுத்தமுடியவில்லை


அன்று கயலுக்கு பிறந்த நாள் வந்தது. கயல் காலையிலேயே எழுந்து குளித்து விட்டு வந்தாள் அவள் கூடவே எழுந்த அவள் கணவன் அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. அவன் அவசரமாக கிளம்பி உணவு மேஜை முன் வர, கயலும் அவன் கூடவே வந்தாள், அப்போது அங்கிருந்த ரெபேக்கா அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல, கயல், ரெபேக்கா மற்றும் ஜாக்கோபின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாள். பின் ரெபேக்கா அவள் விரலை பிடித்து சிவப்பு நிற கற்கள் பதித்த டைமென்ட் வடிவ மோதிரத்தை அணிவித்தாள். கயல் அதனை பார்த்ததும் மிகவும் நன்றாக இருக்கிறது அத்தை என்று மகிழ்ச்சியுடன் கூற, உன்னை விடவா இது நன்றாக இருக்கிறது என அவள் கன்னத்தை பிடித்து வலிக்காத வண்ணம் கிள்ளி விட்டாள். பியூலா அவளிடம் வாழ்த்து அட்டை கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாள். அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு சாம்சனை பார்த்தாள். அவன் எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கயல் என்று சொல்லிவிட்டு செல்ல, கயலுக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கியது.


இருந்தும் அதை வெளிக் காட்டி கொள்ளாமல் " நான் இன்று என் பிறந்த வீட்டிற்கு செல்கிறேன் என்று கூற, சரி உன் விருப்பம். ஆனால் மூன்று மணிக்குள் வந்துவிடு என்று சொல்லவிட்டு அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல் சென்று விட்டான். ஒரு காதல் பார்வை, பேச்சு எதுவும் இல்லை சரி ! பிறந்த நாள் வாழ்த்தாவது சிரித்துக் கொண்டு சொன்னால்தான் என்ன? குறைந்தா போய்விடுவான்! ! இவன் சொன்னால் நான் மூன்று மணிக்குள் வந்துவிட வேண்டுமா என்று மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டே தன் பிறந்த வீட்டிற்கு கிளம்பலானாள்.


கயலை கண்டதும் வாஸந்தியின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் வாம்மா கயல்! என வரவேற்று, மாப்பிள்ளை வர வில்லையா? என்று ஏமாற்றத்துடன் கேட்க, அவரை பற்றி தான் உங்களுக்கு தெரியுமே அம்மா. அவர் விரைவிலேயே நம் வீட்டிற்கு கண்டிப்பாக வருவார் அம்மா என்று வாஸந்தியை சமாதானப்படுத்தினாள். ராகேஷ் வந்து வாழ்த்து கூறி பரிசு ஒன்றை அளித்தான். என்னடா அது? என்று திறந்து பார்க்க போக, ராகேஷ் தடுத்து, இதை இங்கே பார்க்காதே, உன் வீட்டிற்கு போய் மாமாவுடன் சேர்ந்து பார் என்று கூறவும், சரிடா! என்று புன்னகைத்து அதை தன்னிடம் வைத்துக் கொண்டாள். வாஸந்தி அவளை அமர வைத்து உள்ளே சென்று அவளுக்கு பிடித்த பால் பாயாசம் கொண்டு வந்து கொடுத்தாள். கயல் அதை சாப்பிட்டுக் கொண்டே, அப்பா எங்கேம்மா? என்று கேட்க, அவர் உன் பெயரில் அர்ச்சனை பண்ண கோவிலுக்கு போய் இருக்கிறார். நான் போகிறேன் என்றால் என்னை வேண்டாம் நீ இங்கேயே இரு கயல் வந்தால் அவளை பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டு சென்று இருக்கிறார். வாஸந்தி சொல்லி கொண்டே இருந்த போது கமலநாதன் உள்ளே நுழைந்தார். அவர் முகத்தில் பாசமும் பரிதவிப்பும் பார்த்த கயலுக்கு என்னமோ செய்தது.
 
Last edited by a moderator:
அத்தியாயம் 32


நல்ல இருக்கீங்களா அப்பா? என்று வினவ, நான் நல்லா இருக்கேன் குட்டி. நீ எப்படியம்மா இருக்கே? மாப்பிள்ளை உன்னை நல்லா பாத்துகிறாரா? நான் நல்லா இருக்கேன் அப்பா. நீங்க என்னை எப்படி பாத்துக்கிட்டிங்களோ அது போல் மொத்த குடும்பமும் என்னை நல்லா பாத்துக்கிறாங்க. என் மாமியார் என்னை தங்க தட்டில் ஏந்தாத குறைதான். எனக்கு அங்கே அம்மா ஞாபகமே வரலே அப்பா. அவ்வளவு அக்கறையா என்னை கவனிச்சுக்கிறாங்க.அவங்க இதுவரைக்கும் கோபப்பட்டு ஒரு வார்த்தை கூட என்னை பேசுனது இல்லைப்பா.புதுசா கல்யாணம் ஆன எத்தனை பேர் எனக்கு மாமியார் சரியில்லைன்னு குறை சொல்லுவாங்க. ஆன எனக்கு என் அம்மா போலவே மாமியார் அமைஞ்சிருக்காங்க. என்று கூறவும் கமலநாதன் கண்களில் இருந்து நீர் வழிந்தது. என்னப்பா ஆச்சு? என கயல் கேட்க, அன்னைக்கு நான் உன் புகுந்த வீட்டை பத்தி பேசினது தப்புதான்ம்மா. நான் எத்தனையோ நாள் அத நெனச்சி மருகி இருக்கேன். நான் அவங்களை அப்படி பேசினாலும் அந்த கோபத்தை காட்டாமல் உன்னை நல்லா பார்த்துகிறாங்க என உன் வாயால் கேட்கும்போது எனக்கு சந்தோஷத்தில் கண்ணீர் வந்துடிச்சி குட்டி. இனிமேல் எனக்கு ஒரு கவலையும் இல்ல. நீ நல்லா இருப்பே என்ற நம்பிக்கை எனக்கு வந்துடிச்சி என்று அவர் கூறவும், கயலுக்கும் அவர் பாசத்தை கண்டு கண்ணீர் வந்தது.


மாப்பிள்ளைக்கு என் மேல் உள்ள கோவம் இன்னும் தீரலையாம்மா! என்று கேட்க, அவருக்கு உங்க மேல கோவம் இல்லப்பா. வருத்தம் தான். அவர் தான் நல்ல நிலையை அடையவேண்டும் என்னை நல்லா பாத்துக்கணும்னு கடுமையாக உழைக்கிறார் அப்பா. நல்லா சாப்பிடுறது கூட இல்லை. அவரை நினச்சா தான் வருத்தமா இருக்கு அப்பா என்று கூற, எல்லாம் என்னால் தானே கயல். நான் வேண்டும்மென்றால் மாப்பிள்ளையிடம் மன்னிப்பு கேட்கவா! என்று கேட்டதும், கயல் அவசரமாக அதெல்லாம் வேண்டாம் அப்பா. அவர் அதெல்லாம் விரும்ப மாட்டார். இன்னும் சங்கடம் தான் படுவார். அவருக்கு தான் நல்ல நிலையில் வந்த பிறகு தான் இங்கு வரவேண்டும் என்ற வைராக்கியத்தில் இருக்கார் அப்பா. அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார், இங்கும் வருவார் அப்பா, எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறியதும் கமலநாதர் ஒரு வழியாக அமைதி பெற்று அவர் வெற்றி பெற நானும் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். சரி வாம்மா சாப்பிடலாம் என்று கயலை அழைத்துக் கொண்டு சாப்பிட சென்றார்


வாஸந்தி கயலுக்கு பிடித்தவற்றையெல்லாம் சமைத்திருந்தாள். அம்மா சமைத்தவற்றை எல்லாம் ஆசையோடு சாப்பிட்டாள் கயல். அன்றைக்கு மருத்துவமனைக்கு விடுப்பு எடுத்திருந்தபடியால் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று தன் அறைக்கு சென்று படுத்தாள். கட்டிலில் படுத்தது தான் தாமதம் அவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. என் பிறந்த நாளுக்காக அனைவரும் ஆசையாய் பரிசுகள் எல்லாம் தந்தனர். ஆனால் இவன் ஓடி ஓடி சம்பாதிக்கிறான், மனைவிக்கு ஒரு சின்ன பரிசு பொருள் கூட வாங்க மனமில்லை. அது கூட பரவாயில்லை. சிரித்த முகத்துடன் கூட பிறந்த நாள் வாழ்த்து சொல்ல மனமில்லை. இவன் என்ன உண்மையாகத்தான் என்னை காதலித்து மணம் புரிந்தானா? அல்லது காதலிக்கவே இல்லையா? " "இருடா சாம்ஸ், நான் வீட்டிற்க்கு வந்து உன்னை கவனித்துக் கொள்கிறேன் என்று பொருமிக் கொண்டே தூங்கி போனாள்.



தீடீரென்று கயல், கயல் உனக்கு போன் வந்திருக்கு என்று அவள் அம்மாவின் குரல் அவள் தூக்கத்தை கலைக்க, சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். வரேம்மா! என்று கூறிக்கொண்டு கடிகாரத்தை பார்த்தபோது மணி மதியம் இரண்டு என்று காட்டியது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டோமா? இந்த நேரத்தில் யார் போன் செய்வது என்று எண்ணிக் கொண்டே கீழே வந்து போனை எடுத்தாள். ஹலோ! என்று சொன்னவுடனேயே மறுமுனையில் இருந்து, "என்ன டாக்டரம்மா, அம்மா வீட்டிற்கு சென்றதும் நல்ல உறக்கமா! என்று கிண்டல் செய்ய, அவள் எதுவும் சொல்லாமல் அமைகியாகவே இருந்தாள். சரியா மூன்று மணிக்கு வீட்டிற்கு வந்திரு! உனக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கு என்று சொல்லி சாம்ஸ் போனை வைத்து விட்டான்.


பிறந்த நாள் வாழ்த்து கூட ஒழுங்காய் சொல்லவில்லை. இதில் என்ன சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார். நான் போக மாட்டேன் என்று ஒரு மனம் சொல்ல, என்ன வென்று போய்த்தான் பாரேன் என்று மற்றொரு மனம் சொல்லியது. முடிவில் என்னதான் என்று போய் பார்த்து விட்டால் தெரிகிறது என்று எண்ணியவளாக தன் புகுந்த வீடிற்கு கிளம்பினாள்.


வீட்டிற்கு வந்ததும் வீட்டில் யாருமே காணவில்லை. சாம்சன் மட்டும் ஹாலில் அமர்ந்திருந்தான். அவள் வந்ததும் அவளை தன் புறமாக இழுத்து, மை பர்த்டே டாலி என்று கொஞ்ச, அவள் திமிரி அவனிடம் இருந்து விலக பார்க்க, அவன் மேலும் தன் பிடியை இறுக்கினான். விடுங்கள், நான் உங்கள் மீது கோவமாக இருக்கிறேன் என்று அவள் சினுங்க, சரி சர்ப்ரைஸ் சொன்னானே என்னவென்று கேட்கவில்லையே என்று சாம்சன் கேட்க, அவள் மௌனமாக இருக்கவே, அவளின் கையை பிடித்து சாவி ஒன்றை திணித்தான். அவள் என்னவென்று பார்க்க அது ஒரு காரின் சாவி, அவள் புரியாமல் விழிக்க, என்னுடைய பிறந்த நாள் பாப்பாவுக்கு இந்த அடியேனின் பரிசு என்று சொல்ல அவள் கண்கள் விரிய அந்த கார் சாவியை பார்த்தாள்.


வா காரை போய் பார்க்கலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு கார் நிற்கும் இடத்திற்கு சென்றான். அங்கு அழகிய வெள்ளி நிறத்தில் புத்தம் புதிய கார் அமர்க்களமாய் நின்றிருந்தது. அவள் கண்கள் பளபளப்பாகி ரொம்ப அழகா இருக்கு என்று கூற, இந்த கார் உனக்கு மட்டும் தான். நான் வெளிநாடு ஆர்டர் எடுத்து அதன் மூலம் வந்த லாபத்தில் முதன் முதலில் இந்த காரை வாங்கியுள்ளேன் என்று கூற, உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு முதலில் வாங்கி தராமல் எனக்கு வாங்கி தந்து இருக்கீங்களே அவர்கள் கோபித்து கொள்ள மாட்டார்களா? என்று கயல் கேட்க, அவர்கள் அனைவருக்கும் சம்மதம் தான் என்று கூற, கயல் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ரொம்ப நன்றி சாம்ஸ். வாங்க ஒரு டிரைவ் போகலாம் என்று இருவரும் அதில் ஏறி அமர்ந்து காரை கயல் ஓட்ட கார் சர்ரென்று கிளம்பியது.



சிறிது தொலைவு சென்றவுடன் சாம்சன் தான் ஓட்டுவதாக கூறி ஓட்டுநர் இருக்கையில் அவன் அமர்ந்து ஓட்டினான். கார் நேரே ஒரு பெரிய உணவு விடுதி ஒன்றின் முன் நின்றது. இறங்கு கயல்! என்று அவளை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். வரவேற்பறையிலேயே கயலின் பேர் தாங்கிய பலகை அவர்களை வரவேற்றது. அதில் அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து பொன்னெழுத்துக்களால் போடப்பட்டு ஒரு முனையில் ஐந்து, ஆறு பலூன்கள் பறக்க விடப்பட்டிருந்தது.



கயலுக்கு ஒரே ஆச்சரியம. இது என்ன அடுத்த சர்பரைஸா ! என்று கேட்க, உள்ளே வா! இன்னும் நிறைய ஆச்சரியங்கள் உனக்காக காத்திருக்கு என்று சொல்லி உள்ளே அழைத்து சென்றான். அந்த உணவு விடுதியின் மேல் தளத்தில் வரிசையாக அறைகள் இருந்தது . அதில் ஒரு அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்தவுடன் அறை இருட்டாக இருக்க, சாம்சன் மின் பொத்தானை அழுத்த விளக்குகள் ஒளி வீசின. பிறகு கோரஸாக ஹாப்பி பர்த் டே கயல் என்ற குரல்களும், வித விதமான பலூன்களும் பறந்தன. கயல் ஆச்சரியத்தில் கண் விரிய பார்த்தாள், அங்கு அவள் மாமியார், மாமனார் , பியூலா மற்றும் அவளது நெருங்கிய தோழிகள், மருத்துவமனையில் அவளுடன் வேலை செய்யும் சிநேகிதிகள், வாஸந்தியும் கமலநாதனும் கூட நின்றிருந்தார்கள். அம்மா, அப்பா நீங்க எப்ப வந்தீங்க? என்று கயல் கேட்க, நீ கிளம்பியவுடன் மாப்பிள்ளை போன் பண்ணி இங்கே வரச் சொன்னாரும்மா என்று வாஸந்தி புன்னகை ததும்ப கூற, கயல் மகிழ்ச்சியின் எல்லையையே தொட்டாள்.



சிறிது நேரத்தில் அங்கு கொண்டு வரப்பட்ட கேக் கயலால் வெட்டப்பட, அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து பாடல்களை பாடினார்கள். பின் சாம்சன் ஒரு அழகிய பூங்கொத்தை எடுத்து சினிமா பாணியில் முட்டி போட்டுக் கொண்டு கயலிடம் "ஐ லவ் யு கயல்" என்று கூறிக் கொண்டே கொடுக்க, கயலை அதனை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. அவளால் நம்பவே முடியவில்லை, நடப்பதெல்லாம் கனவா என்று கூட தோன்றியது. "இந்த அன்பு போதுமடா என் வாழ்நாள் முழுமைக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டு "ஐ லவ் யு டூ" என்று சாம்சனை கட்டி அணைத்தாள். விருந்து பரிமாறப்பட்டு அனைவரும் சென்ற பிறகு இவர்கள் வீட்டிற்கு வர இரவு 10 மணி ஆகிவிட்டிருந்தது.



வீட்டை அடைந்ததும் கயல் குளித்து விட்டு உடை மாற்றி கொண்டு வர, பின் சாம்சனும் குளிக்க சென்றான். குளித்து முடித்து வந்ததும் கயல் சாம்சனிடம், இத்தனை ஏற்பாடுகளையும் எனக்கு தெரியாமல் எப்படி செய்தீர்கள்? என்னுடைய தோழிகளுக்கு போன் செய்து வரச் சொல்லி இருக்கிறீர்கள், அம்மா, அப்பாவையும் அழைத்து இருக்கிறீர்கள். அனைத்திற்கும் மிக்க நன்றி. காலையில் என் மனதில் எவ்வளவு வேதனை இருந்தது தெரியுமா? ஆனால் இப்போது நான் அடைந்திருக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்று கூறிக் கொண்டு அவன் மீது சாய்ந்து அமர்ந்தாள். அவன் அவளை தன மீது சாய்த்துக் கொண்டு, என்னுடைய அன்பை உனக்கு எப்படி தெரிவிக்கலாம் என்று ஒரு வாரமாகவே திட்டமிட்டு ஒவ்வொன்றாக செய்து வந்தேன் டாலி.



உனக்கு எல்லாம் பிடித்திருக்கிறதா? என்று சாம்சன் கேட்க. எனக்கு அனைத்திலும் மிகவும் பிடித்தது நீங்கள் என்னிடத்தில் சொன்ன ஐ லவ் யு தான் என்று கயல் சொல்ல, அப்போ நான் தினமும் காலையில் உன்னிடத்தில்

ஐ லவ் யு சொல்லிவிட்டு தான் என் வேலையை பார்க்க போவேன். என்று சாம்சன் கூற, அவள் சந்தோஷத்தில் அவன் நெஞ்சோடு தன்னை இணைத்துக் கொண்டாள். எவ்வளவு நேரம் இருவரும் அப்படி அமர்ந்திருந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. வானில் மேக கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று இடித்து இவர்களை வாழ்த்துவது போல் மழை பொழிய அந்த சத்தத்தில் சுய உணர்வு பெற்ற கயல் சாம்சனிடம் ராகேஷ் எனக்கு ஒரு பரிசு கொடுத்திருக்கிறான். அதை உங்களோடுதான் திறந்து பார்க்க சொன்னான். நான் சென்று அதை எடுத்து வருகிறேன் என்று கூறி பரிசினை எடுத்து வந்து ஆவலுடன் பிரித்து பார்க்க, அதில் கயலும் சாம்சனும் வண்ண ஓவியத்தில் அழகாக மிளிர்ந்தார்கள். அதை அவ்வளவு தத்ருபமாக வரைந்திருந்தான் ராகேஷ். அதை பார்த்த சாம்சன், என் மச்சானுக்கு இவ்வளவு கலை நயம் இருக்கிறதா? ரொம்ப அழகாக வரைந்திருக்கிறானே? என்று கூற, அவன் யாருடைய தம்பி ? என்னுடைய தம்பி என்று கயல் தனக்கு இல்லாத காலரை தூக்க, இருவரும் சிரித்தார்கள்.


நாட்கள் வேகமாக நகர்ந்தன. சுஹேலும் வெளிநாடு சென்று இரண்டு வருடம் ஆகிவிட்டது. அவன் தன் படிப்பை முடித்து, அங்கு இருக்கும் மருத்துவமனையில் இருதய நிபுணராக வேலை செய்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இந்தியாவில் பணி புரிய ஆசைதான். அவன் தன் நாட்டு மக்களுக்கு சேவை செய்யவே ஆசைப்பட்டான். ஆனால் இங்கு ஒரு வருடம் தங்கி இங்கு இருக்கும் தொழில் நுட்பங்கள் எல்லாம் கற்றுக் கொண்டு அதை தன் தாய் நாட்டிலும் செயல்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டான். துர்காவும் CA வில் inter முடித்து இறுதி தேர்வுக்கு தன்னை தயார் செய்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அடுத்த மாதம் இறுதி தேர்வு நடக்க இருப்பதால் அவளின் கவனம் முழுவதும் அதிலேயே இருந்தது. அதில் அவள் தேர்ச்சி பெற்று விட்டால் அவள் தணிக்கையாளர் ஆகலாம். அதனால் அவள் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தாள். பசி, தூக்கம் பாராமல் என் நேரமும் படித்துக் கொண்டிருந்தாள். இதனால் மிகவும் மெலிந்து காணப்பட்டாள். இருந்தும் தான் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே இலக்கே அவள் மனதில் இருந்தது. அவ்வப்போது சுஹேலும் போன் மூலம் அவளுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்து வந்தான்.
 
Last edited by a moderator:
அத்தியாயம் 33

உமருக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. அவரும் தன் செல்வாக்கை பயன்படுத்தி துர்காவை ஏதாவது செய்து விட வேண்டும் என்று துடித்தார். ஆனால் துர்காவின் பாதுகாப்பிற்காக சுஹேலின் ஏற்பாட்டால் போடப்பட்டிருந்த காவலர் சீருடை அணியாமல் அவளுடனே சுற்றிக் கொண்டிருந்தார். ஆதலால் உமரின் ஆட்களால் அவளை நெருங்கவே முடியவில்லை. இதில் நாம் தான் நேரடியாக இறங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உமர் அலி சென்னைக்கு கிளம்பினார்.

அன்று துர்காவிற்கு கடைசி தேர்வு அதை வெற்றிகரமாக எழுதி விட்டால் அவள் இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துவிடும். அன்று சீக்கிரமாகவே எழுந்து தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு தான் வழக்கமாக செல்லும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று பிள்ளையாரை மனமுருக பிராத்தனை செய்து விட்டு பின் தேர்வு மையத்தை அடைந்தாள். தேர்வில் அனைத்து கேள்விகளுக்கும் நன்றாக விடை எழுதிவிட்டு அப்பாடா என்ற நிம்மதியுடன் விடைத்தாளை கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டு வெளியே வந்தாள். வெளியே வந்ததும் ஜில்லென்று காற்று முகத்தில் வீச, மனமும் உடலும் லேசானது போல் தோன்றியது. சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து அங்கு இருக்கும் சூழ்நிலையை ரசித்த பின், நிதானமாக எழுந்து தன் பையை எடுத்துக் கொண்டு வெளியே வர, எதிரே வந்த இரு ஆட்கள் அவள் முகத்தில் எதையோ வைத்து மூட அவள் அப்படியே மயங்கி விழ சர்ரென்று வந்த ஒரு மாருதி வேனில் அவள் ஏற்றப்பட்டாள்.

வேனில் உள்ளே இருந்தவன், "டேய் யாரும் பாக்கலையே" என்று கேட்க, அங்கு யாருமே இல்லை, அதுதான் சீக்கிரமாகவே வேலையை முடிச்சிட்டேன். சரி ! ஐயா சொன்ன மாதிரி சீக்கிரமாக வேனை நம்ம பழைய கொடவுனுக்கு செலுத்து என்று கூற, அவர்கள் இருக்கும் வேன் சர்ரென்று கிளம்பி ஒரு மணி நேரத்தில் அந்த கொடவுனை அடைந்தது. பார்க்க மிகவும் பழுதடைந்த கட்டிடம் போல் தோன்றிய அந்த இடத்தில வேனை நிறுத்த, துர்காவை இருவரும் தூக்கி கொண்டு போய் ஒரு அறையில் அவளை அமர்த்தினர். அங்கு ஒரே தூசியும் தும்புமாக இருக்க அங்கு இருக்கும் பழைய நாற்காலியில் அமர வைத்து அவளை கயிற்றால் கட்டினர்.

அவள் கொண்டு வந்த பை ஓரமாக வீசப்பட, அவள் வாயில் பெரிய துணியை வைத்து அடைத்த பின் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

சுஹேலுக்கு அன்றைக்கு எழுந்ததில் இருந்தே என்னவோ போல் இருந்தது. மனதில் ஏதோ அழுத்துவது போல் உணர்ந்தான். ஆனால் அது என்னவென்று தான் அவனுக்கு விளங்கவில்லை. தன் அன்னையிடத்தும், தந்தையிடத்தும் போனில் நலம் விசாரித்தான். அவர்கள் யாரும் நலம் என்று தெரிந்ததும் அவனுக்கு சற்று நிம்மதி தான், இருந்தும் அவன் மனதை ஏதோ உருதிக் கொண்டே இருந்தது. அவனால் சரி வர வேலை செய்ய முடியவில்லை. அப்போதுதான் அவனுக்கு ஒன்று உரைத்தது. துர்காவிற்கு இன்று இறுதி தேர்வு ஆயிற்றே. இந்நேரம் தேர்வு முடிந்து இருக்குமே! ஏன் அவளிடத்தில் இருந்து போன் வரவில்லை. என்ன செய்வது? எப்படி அவளை தொடர்பு கொள்வது? என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும்போது சட்டென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்ற, நாம் அனீஸிடம் கேட்டால் என்ன? என்ற எண்ணம் தோன்ற, அவர்கள் வீட்டிற்கு போன் செய்தான். போனை பாத்திமா எடுக்க, நலம் விசாரித்த பிறகு, போனை அனீஸிடம் கொடுங்கள். அவளிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது என்று நைசாக கேட்க, இதோ கூப்பிடறேன் என்று அவள் போனை அனீஸிடம் கொடுத்தாள். அனீஸ் போனை வாங்கியதும், என்னடா திடீரென்று என்மீது பாசம் பொங்குது? எனக் கேட்க, துர்கா வீட்டிற்கு வந்துட்டாளானு பார்த்து விட்டு வா. நான் மறுபடியும் ஐந்து நிமிடம் கழித்து போன் பண்றேன் என்றதும், அதானே பார்த்தேன், என்னடா எல்லா எலியும் அப்படியே ஓட, ஒரு எலி மட்டும் டிரஸ் போட்டு ஓடுதேனு. உடனே சுஹேல், என்னடி ஏதோ உளர்ற ! பழமொழியை கூட தப்பு தப்பா சொல்ற! இது இந்த காலத்து பழமொழி என்று சிரிக்க, சரி நான் போனை வைக்கிறேன் என்று வைத்துவிட்டான். அவன் காரியத்தில் மட்டும் கண்ணா இருக்கான். விவரமான ஆள் தான் என்று முணுமுணுத்துக் கொண்டே துர்கா வீட்டை அடைந்து கதவை தட்டினாள். பார்வதி வந்து கதவை திறக்க, ஆண்ட்டி இன்னும் துர்கா வரலையா? என்று அனீஸ் கேட்டதும், இன்னும் வரலைம்மா! தேர்வு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே முடிந்திருக்கும். இன்னும் வீட்டிற்கு வரவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று அவள் பயத்துடன் கூற, கவலைப்படாதீங்க ஆண்ட்டி, வந்துருவா! கடைசி தேர்வு இல்லையா, அதனால் நண்பர்களுடன் பேசிவிட்டு வருவாள். சரி ஆண்ட்டி, நான் வரேன். துர்கா வந்ததும் எனக்கு சொல்லுங்க என்று கூறியபடி அனீஸ் அங்கிருந்து விடை பெற்று தன் வீட்டை நோக்கி சென்றாள். அனீஸ் வீட்டை அடைந்ததும் பாத்திமா நான் பக்கத்தில் இருக்கும் கடைக்கு போயிட்டு வரேன் என்று பாத்திமா கிளம்பியதும் மீண்டும் போன் அடிக்க சுஹேல் பேசினான்.

என்ன அனீஸ், துர்கா வந்துட்டாளா ? என்று கேட்க, வரவில்லை சுஹேல், அவர்கள் வீட்டிலும் ஒரே பதற்றமாக உள்ளார்கள் என்று அனீஸ் கூறவே, உன்னிடம் நான் பிறகு பேசுகிறேன் என்று போனை வைத்துவிட்டான். துர்காவிற்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்று அவன்உள் மனது சொல்ல, அவன் தன் நண்பன் இன்ஸ்பெக்டர் ரவிக்கு போன் செய்து தகவல் தெரிவிக்க, ரவி தான் பாதுகாவலாய் வைத்த நபரிடம் போன் செய்தான். "நான் உன்னை துர்கா என்ற பொண்ணை கண்காணிக்க சொன்னேனே, இப்போது அவள் எங்கிருக்கிறாள் என்று கேட்க, அவர்கள் தேர்வு மையத்தில் உள்ளே நுழைந்ததை பார்த்தேன் சார். அதன் பிறகு பார்க்கவில்லை. நான் தேர்வு மையத்தில் விசாரித்த போது எல்லோரும் கிளம்பி விட்டதாக சொன்னார்கள் என்று சொன்னதும், கண்காணிக்க சொன்னால் அதை விட்டு வேறு என்ன வேலை செய்கிறீர்கள், போனை வையுங்கள். பிறகு அழைக்கிறேன் என்று அவரிடம் எரிச்சலுற்று, சுஹேலுக்கு போன் செய்தான். அவங்க தேர்வு மையத்திற்கு போனது வரை எங்கள் ஆள் பார்த்திருக்கிறான். அதன் பிறகு அவர்களை பார்க்கவில்லை என்று சொல்கிறான். அதைக் கேட்ட சுஹேலுக்கு திக்பிரம்மை பிடித்தது போல் இருந்தது. என்ன சொல்ற ரவி, துர்காவை அதன் பிறகு காணவில்லையா? ஒரு வேளை அவளை கடத்தியிருப்பார்களோ? என்று கூற, அப்படியும் இருக்கலாம் சுஹேல். நான் அந்த சுற்று வட்டாரத்தில் விசாரிக்கிறேன் என்று கூறி போனை வைத்தான். சுஹேலுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவனுக்கு உடனே சென்னை செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, சென்னைக்கு விமான டிக்கெட் பதிவு செய்து, அதை ரவிக்கும் தெரிவித்து விட்டு புறப்படுவதற்கு ஆயத்தமானான்.

துர்கா மயக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டாள். கை கால்களை அசைக்க முடியாமல் கட்டி போடப்பட்டிருந்தது. வாயிலும் துணி அடைத்து வைத்திருப்பதை உணர்ந்து, இது எந்த இடம்? எதற்காக என்னை இங்கு கொண்டு வந்துள்ளார்க்கள்? என்று பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். அந்த அறை முழுவதும் தூசும் தும்புமாக இருந்தது. ஓரத்தில் இரு தடியர்கள் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். இவள் அவர்களையே பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த பொண்ணு கண்ணு முழிச்சிட்டா ! நாம நம்ம ஐயா கிட்ட சொல்லணும் என்று கூறி வெளியே சென்றான். இன்னொருவன் கை கழுவி விட்டு அவள் பக்கத்தில் நின்று கொண்டான். அவள் தன் கை கயிற்றை கழட்ட முயற்ச்சி செய்தாள் ஆனால் முடியவில்லை. இறுக்கமாக கட்டியிருந்தார்கள்.

சிறிது நேரம் சென்றதும் அந்த அறை கதவை திறந்து கொண்டு ஒரு ஐம்பது அல்லது ஐம்பத்தைந்து மதிக்க தக்க ஒருவர் அங்கு வந்தார். அவர் பின்னாடியே அந்த தடியனும் வந்தான். அவர் வந்ததும் அவளை முறைத்து பார்த்தார். பின் உனக்கு டாக்டர் பையன் கேக்குதா? அதுவும் எங்க இனத்தில். உனக்கு எவ்வளவு திமிரு இருக்கும், இன்னைக்கு தான் உனக்கு கடைசி நாள். உனக்கு பிடிச்ச கடவுளை வேண்டிக்கோ! இனிமேல் அந்த சுஹேல் பையன் என்ன செய்கிறானு நான் பார்க்கிறேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு, அந்த இரு தடியர்களையும் வெளியே கூட்டி போய் என்னமோ சொல்லிவிட்டு சென்று விட்டார். துர்காவிற்கு ஒரே நடுக்கமாக இருந்தது. அவளுக்கு பயத்தில் உடல் நடுங்கியது. உடல் முழுதும் வேர்வையால் நனைய, கண்களில் கண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது. அவளுக்கு அப்போது அவள் நினைவில் வந்தது சுஹேல் தான். உங்களிடம் வாழ எனக்கு கொடுத்து வைக்க வில்லை என்று மனதில் நினைத்துக் கொண்டு என்ன நடக்க போகிறதோ என்று பயத்துடன் அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரத்தில் அந்த தடியர்கள் இருவரும் இரு கட்டைகளை எடுத்து வந்தார்கள். துர்காவின் கை, கால்களை நைய புடைக்க, வாயில் துணி இருந்த படியால் அவளால் கத்தக் கூட முடியவில்லை. அந்த தளிர் மேனி வலியால் சுருண்டு காய்ந்த கொடி போல் நாற்காலியில் துவண்டு அப்படியே சுருண்டு உட்க்கார்ந்திருந்தாள். வலியை தாங்க முடியாமல் கண்கள் இரண்டும் சிவந்து விரிந்தது. ஒருவன் அவள் தலையை பலமாக தாக்க அவள் மூர்ச்சை அடைந்தாள். "டேய் இறந்து போயிட்டாடா" வாடா இந்த பொண்ணை எடுத்து போய் யாருக்கும் தெரியாமல் எங்காவது போட்டுடலாம் என்று கூறி அவளை தூக்கி அதே வேனில் ஏற்றி விரைந்து சென்றனர்.

வேனில் போய் கொண்டிருந்த போது அந்த தடியரில் ஒருவன் " இங்கே பக்கத்திலே எங்கே போட்டாலும் சந்தேகம் வரும். எங்க வீடு பக்கத்தில் தண்டவாளம் இருக்கு. அங்கே போய் போட்டுடலாம். எப்படியோ அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ட்ரெயின் அந்த பக்கமாக வரும், ட்ரெயின் அடிச்சு இந்த பொண்ணு செத்து போச்சு, தற்கொலை பண்ணிக்கிட்டானு காவல் துறை முடிவு பண்ணிடும். நமக்கும் எந்த தொந்தரவும் வராது என்று சொல்லிக்கொண்டே அங்கே சென்றனர். இருட்டும் வரை அங்கேயே காத்திருந்தனர்.

இங்கு பார்வதிக்கு இருப்பு கொள்ளவில்லை. வாசுதேவனும், பரந்தமானும் துர்காவை இன்னும் காணவில்லையே என்று பரிதவிப்புடன் தேடிக் கொண்டிருந்தனர். வாசுதேவன், துர்கா தேர்வு எழுதிய மையத்திற்கு சென்று விசாரி த்தபோது அனைவருமே அப்போதே கிளம்பிவிட்டனர் என்று அங்கிருந்த வாயிற்காப்பாளன் சொன்னபோது அவருக்கு மேலும் பயம் அதிகமாகியது. அவருக்கு, இவள் வீட்டில் சொல்லாமல் எங்கும் போகமாட்டாளே! எங்கு தான் போயிருப்பாள் என்று தெரியவில்லையே ! என்று மனம் பதைபதைத்தது. அவர் தன் வண்டியை எடுத்துக் கொண்டு அவளுடைய நண்பர்கள் இல்லம், தெரிந்தவர்கள் வீடு என்று தன்னால் இயன்றவரை தேடினார். எங்கு தேடியும் அவரால் துர்காவை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி, அவள் கிடைக்காததை சொன்னதும் வீட்டில் உள்ளவர்களுக்கு பதட்டம் இன்னும் அதிகமாகியது. விஷயத்தை கேட்டதும் பரந்தாமனுக்கு இரத்த அழுத்தம் அதிகமாகி மயக்கம் வந்துவிட்டது. பின்னர் அவருக்கு மயக்கம் தெளிவித்து, நிதானமாக அமரவைத்து, துர்காவை கண்டிப்பாக கண்டுபித்து விடுவோம் என்று ஆறுதல் கூறினர். இருந்தும் பெத்த மனது துடித்துக் கொண்டிருந்தது. வாசுதேவன் சிறிது நேரம் பொறுத்து பார்த்து விட்டு, "நான் காவல் நிலையம் சென்று புகார் அளித்து விட்டு வருகிறேன் என்று கிளம்பினார்.

வாசுதேவன் காவல் நிலையம் அடையும் போது சூரியன் தன் பொன்னிற கதிர்களை தன்னுடைய கூட்டுக்குள் அடக்கிக் கொள்ள துவங்கி இருந்தான். இதில் துயரம் என்னவென்றால் அவர் போகும் போது துர்காவை அடைத்து வைத்திருக்கும் வேனை கடந்து தான் சென்றார். அந்த மெல்லியலாள் மேனியில் குருதி கொட்டிக்கொண்டிருக்க, தன்னை மறந்த நிலையில் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள்.

தன்னுடைய தங்கை அந்த வேனில் தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அறியாத அந்த தமையன் காவல் நிலையம் நோக்கி சென்றார். காவல் நிலையம் அடைந்தவுடன் ஆய்வாளரிடம் நடந்ததை தெரிவிக்க அவர் வாசுதேவனிடம் ஆயிரம் கேள்விக்கு கணைகளால் துளைத்து எடுத்தார். அனைத்திற்கும் மனது காயப்பட்டாலும் பொறுமையாகவே வாசுதேவன் பதில் சொன்னார். பின்னர் துர்காவின் புகைப்படத்தையும் புகார் கடிதத்துடன் வாங்கிக் கொண்டார். நீங்க வீட்டுக்கு போங்க, நாங்க நடவடிக்கை எடுக்கிறோம், ஏதாவது தகவல் தெரிந்தால் கூப்பிடுகிறோம் என்று கூறி வாசுதேவனை அனுப்பி வைத்தார். பின் வாசுதேவன் சந்தோஷுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். அங்கிள், நாங்கள் ஒன்றாகத்தான் தேர்வு மையத்திற்கு சென்றோம். அவள் வேறு அறையிலும் நான் வேறு அறையிலும் இருந்த படியால் நான் அவளை பார்க்கவில்லை, நான் வெளியே வந்து பார்க்கும் போது கூட அவள் தென்படவில்லை . அவள் சீக்கிரமாக வீட்டிற்கு சென்று விட்டாள் என்று நினைத்தேன். அதன் பிறகு அவளை நான் பார்க்கவில்லை. நானும் அவளை தேடுகிறேன் அங்கிள். அவள் கிடைத்துவிடுவாள், கவலைபடாதீர்கள்! என்று கூறி விட்டு அவனும் தனது வண்டியை எடுத்துக் கொண்டு துர்காவை தேட கிளம்பினான்.
 
அத்தியாயம் 34​

துர்காவை கடத்தியவர்கள் ஊர் அடங்கட்டும் பிறகு அவளை தண்டவாளத்தில் போட்டு விடலாம் என்று வேனிலேயே காத்திருந்தவர்களை எதிரே இருந்து தண்ணீர் குடுவை மற்றும் சிறு தின்பண்டங்கள் வைத்து நடத்திக் கொண்டிருக்கும் அந்த சிறிய கடையின் வியாபாரி அந்த வேனையே பார்த்து கொண்டிருந்தான். "எப்போதும் இல்லாமல் இன்று ஒரு வேன் வெகு நேரம் நின்றுக் கொண்டிருக்கிறதே, வேனில் ஏதாவது வெடிபொருள் இருக்குமோ? உள்ளே ஆள் இருக்கிறாரா இல்லையா என்று சரியாக தெரியவில்லையே! அல்லது வேனுக்குள் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமோ? என்று பலவாறு சந்தேகங்கள் அவனுக்குள் தோன்ற அவன் உடனே காவல் துறைக்கு போன் செய்தான். வாசுதேவன் புகார் கொடுத்த இடமும் அந்த பகுதியை சார்ந்தது என்பதால், உடனே அங்கு வந்த காவல் துறையினர் அந்த வேனிடம் சென்று அந்த தடியர்களை விசாரிக்க, அவர்கள் தீடீரென்று காவலர்களை எதிர்பார்க்காதபடியால் பயத்தில் ஏதேதோ உளர, அவர்கள் சந்தேகப்பட்டு பின் இருக்கையை பார்த்த போது துர்கா இருந்தது தெரிய வர, அப்போதுதான் துர்காவை புகைப்படத்தில் பார்த்த அந்த காவலர் உடனே அடையாளம் தெரிந்து, அந்த தடியர்களுக்கு விலங்கிட்டு, துர்காவை மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் கொண்டு சென்றனர். அந்த காவலர்கள் வாசுதேவனுக்கு போன் செய்து தகவல் தெரிவிக்க, அவர் சந்தோஷையும் கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

அங்கு அவளை அவசர பிரிவு வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்தார்கள். அதற்குள் பார்வதி, அனீஸ் மற்றும் பாத்திமாவும் மருத்துவமனை வந்து சேர்ந்தார்கள். துர்காவை பார்த்து விட்டு வந்த மருத்துவர் அந்த பெண்ணை யாரோ நன்றாக அடித்து உள்ளார்கள். கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கு. தலையிலும் அடித்து உள்ளதால் இரத்தம் கசிந்து நிறைய இரத்தம் வெளியேறியிருக்கு. அவருக்கு மயக்கமும் இன்னும் தெளியாததாலே இரவை தாண்டினால் தான் எதுவும் சொல்ல முடியும் என்று சொல்லவும் அனைவரின் முகமும் பீதியில் உறைந்தது.

சந்தோஷிற்கு பேச்சே வரவில்லை. அவனால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. துர்கா எவ்வளவு அமைதியான பெண். ஈ, எறும்புக் கூட தீமை செய்யாத குணம் உள்ள இந்த பெண்ணிற்கா இந்த நிலை ஏற்பட வேண்டும் என்று எண்ணி துயர்வுற்றான். உற்ற தோழனான அவன் உள்ளம் விம்மியது.

சுஹேல் மறுநாள் வந்து விட்டான். அவன் நேரே ரவியின் இடத்தில் சென்று விசாரிக்க, ரவி நடந்ததை அவனிடம் கூறினான். சுஹேலுக்கு துக்கத்தில் தொண்டை அடைத்தது. "என் துர்காவிற்கா இந்த நிலை" என்று உள்ளுக்குள் நொந்து போனான். பின் நேரே மருத்துவமனைக்கு சென்று துர்காவை காண போனான். அவன் மருத்துவர் என்பதால் அவனை உள்ளே சென்று துர்காவை காண அனுமதித்தனர். அவனுக்கு துர்காவை பார்க்க பார்க்க வேதனையாய் இருந்தது. "யார் செல்லம்மா உன்னை இப்படி செய்தார்கள்?" குழந்தை போல் இருக்கும் உன் முகத்தை பார்த்தும் அவர்களுக்கு உன்னை அடிக்க எப்படி மனசு வந்தது? என்று பலதையும் நினைத்தவாறு அவன் குலுங்கி குலுங்கி அழுதான். அவள் கண்டிப்பாக பிழைக்க வேண்டும் அல்லா என்று இறைவனை நினைத்து வேண்டிக் கொண்டு வெளியே வந்தான்.

வெளியே பார்வதி மட்டும் இருந்தாள். சுஹேலை கண்டதும் அதிசயமாக அவனை பார்த்தாள். "இவன் எப்படி இங்கே வந்தான்? இவன் வெளிநாட்டில் அல்லவா இருந்தான், இவனுக்கு அதற்குள் துர்கா அடிபட்டு இருப்பது எப்படி தெரியும்? ஒரு வேளை இவன் மருத்துவர் என்பதால் பாத்திமா தகவல் சொல்லி இருப்பாளோ?என பலவாறு நினைத்து குழம்பினாள்.

சுஹேலுக்கு துர்காவை இப்படி செய்தவரை சும்மா விடக்கூடாது, அவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கி தர வேண்டும் என்று அவனுக்குள் ஒரு ஆவேசம் ஏற்பட்டது. அவன் உடனே ரவியை அழைத்து நான் முன்பே சொன்னனே துர்காவிற்கு ஏதோ பெரிய ஆபத்து வரப்போகிறது என்று, பார் அது இப்போது உண்மையாகி விட்டது. அந்த ஆபத்தில் இருந்து அவளைத்தான் காப்பாற்ற முடியவில்லை ஆனால் அதை செய்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டணை வாங்கி தர வேண்டும் ரவி. இதற்கு பின்னாடி யார் இருக்கிறார்கள் என்பதை நீ கண்டு பிடித்து தர வேண்டும் ரவி. அவர்களுக்கு தகுந்த தண்டணை வாங்கி தரும்வரை நான் ஓயமாட்டேன் என்று அவன் கோபமாய் கூறியதை கேட்ட ரவி, கண்டிப்பாக செய்கிறேன் சுஹேல். நான் நேற்று வந்து அந்த பெண்ணை பார்த்தேன் எனக்கே மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த தடியர்கள் என் பாதுகாப்பில் தான் உள்ளார்கள். நான் அவர்களை விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் ஒரு மணி நேரத்திற்குள் இப்படி செய்ய தூண்டியது யார் என்பதை கண்டுபித்து விடுவேன்.பிறகு உனக்கு தகவல் சொல்கிறேன் என்று கூறி போனை வைத்தான் ரவி.

சரியாக ஒரு மணி நேரத்தில் ரவி சுஹேலுக்கு போன் செய்தான். அவர்கள் உண்மையை சொல்லிவிட்டார்கள் சுஹேல். யாரோ உமர் அலியாமே? அவர் வாரணாசியில் தான் இருக்கிறாராம். அவர் தான் பணம் கொடுத்து துர்காவை கொல்ல சொன்னதாக கூறுகிறார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை சுஹேல். வாரணாசியில் இருப்பவருக்கு சென்னையில் இருக்கும் துர்கா மீது ஏன் இவ்வளவு கோபம்? என்று ரவி கூறியவுடனே சுஹேல் எனக்கு புரிந்து விட்டது. அவர் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கோபம். துர்கா தான் அவர் பெண்ணை நான் மணப்பதற்கு தடையாக இருக்கிறாள் என்பதற்காக அவளை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். ரவி அவரை சும்மா விடாதே. நான் அவர் மீது புகார் கொடுக்கிறேன். அவர் பணக்காரர் என்றெல்லாம் தயங்காதே! உன்னுடைய பதவியை உபயோகித்து அவரை கைது செய்ய ஏற்பாடு செய் என்று கூற, சுஹேலுடைய கோபத்தை பார்த்து ரவிக்கே ஆச்சரியமாக இருந்தது. சிறு வயதிலிருந்தே சுஹேலை ரவிக்கு தெரியும். அவன் இப்படி கோபப்பட்டு பேசியதை அவன் பார்த்ததே இல்லை. அமைதியாய் இரு சுஹேல். நீ ஒரு புகார் மட்டும் கொடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூற, சுஹேல், இரண்டு வருடம் முன்பு துர்காவிற்கு விபத்து நடக்க இருந்ததே, அது கூட இவர் வேலையாகத்தான் இருக்கும் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் அந்த வருடத்தில் தான் நான் அவர் பெண்ணை மணக்க மறுத்துவிட்டேன். அவர் என்னை உளவு பார்த்து என் மாமி குடும்பமும், துர்காவும் நானும் சினிமாவில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கு தெரியாமல் என்னையும் துர்காவையும் புகைப்படம் எடுத்து என் வீட்டிற்கு அனுப்பி கலகம் செய்தது. இப்போதுதான் எனக்கு எல்லாம் தெளிவாக விளங்குகிறது ரவி. நான் உயர் மட்ட அதிகரியிடத்திலும் புகார் தருகிறேன். இதில் நீ தீவிரமாக ஈடுபட்டு துர்காவிற்கு நியாயம் வாங்கி தரவேண்டும் என அவன் குரல் கம்ம சொல்வதை கேட்ட ரவி, நான் கண்டிப்பாக செய்கிறேன் சுஹேல் என்று கூறி போனை வைத்தான்.

அவன் வந்தது முதல் மருத்துவமனையிலேயே துர்கா கண்விழிக்க வேண்டும் என்று இறைவனை பிராத்தனை செய்துக் கொண்டு அங்கேயே காத்திருந்தான். பாத்திமா அவனை வீட்டிற்கு அழைத்த போதும் அவன் வர மறுத்துவிட்டான், பாத்திமாவிற்கு அப்போதுதான் தன் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்தது. சுஹேல் துர்காவை காதலிக்கிறான் என்ற உண்மை. அவளால் நம்பவே முடியவில்லை. ஆனால் சுஹேல் துர்காவின் மீது வைத்த அன்பு அவளால் நம்பாமல் இருக்க முடியவில்லை. இதற்கு இவன் தாய் தந்தை சம்மதிப்பார்களா? என்று உள்ளுக்குள் நினைத்து தயங்கினாள். அல்லா! இந்த இரண்டு அன்பு உள்ளங்களை நீங்கள் தான் சேர்த்து வைக்க வேண்டும் என்று அவள் இறைவனை வேண்டிக் கொண்டாள்.

மூன்று நாள் கழித்தும் துர்காவிற்கு மயக்கம் தெளியவில்லை. இன்னும் இரண்டு நாளில் அவள் கண் விழிக்க வில்லையென்றால் அவள் கோமா நிலையை அடைந்து விடுவாள் என்றும் பிறகு அவள் எப்போது சுய நினைவு அடைவாள் என்பது தெரியாது என்றும் மருத்துவர் கூறிவிட்டார். சுஹேலும் மருத்துவர் ஆதலால் அவனுக்கும் இது தெரிந்திருந்தது. அவன் ஒரு முடிவுடன் தான் இருந்தான். துர்கா கண் விழித்தாலும் சரி அல்லது அவள் கோமா நிலையை அடைந்துவிட்டாலும் சரி, எப்படி இருந்தாலும் அவளை தன்னுடன் அழைத்து சென்று பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அவள் இப்படி ஆனதற்கு மறைமுகமாக தானும் ஒரு காரணம் என்று எண்ணினான். ஆதலால் அவளை கை விட அவனுக்கு மனமில்லை.
 
அத்தியாயம் 35​



இந்த மூன்று நாளில் உமர் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாத்திமா மூலம் சுஹேல், துர்கா மீது வைத்த காதல் அவனுடைய தாய் தந்தைக்கும் எட்டியது. அவர்கள் சென்னை வந்து ஸுஹேலிடம் பேசினார். ஜரீனா எவ்வளவு அழைத்தும் சுஹேல் மருத்துவமனையை விட்டு வர மறுத்துவிட்டான். என்னால் தான் இந்த அப்பாவி பெண்ணுக்கு இந்த நிலை. அதனால் ஊருக்கு வந்தால் துர்காவுடன் தான் வருவேன். இல்லையென்றால் வர மாட்டேன் என்று அவன் அழுத்தமாக கூறியதை கேட்ட ஜரீனாவுக்கும் உசைனுக்கும் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை.

சந்தோஷும் துர்காவை வந்து தினமும் பார்த்து விட்டு செல்வான். அவனுடைய சிரித்த முகமும் நகைச்சுவையான பேச்சும் அவனை விட்டு எங்கே சென்றது என்றே தெரியவில்லை. எப்போதும் சோக முகத்துடனே வலம் வந்தான்.

ஆயிற்று. இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது. துர்காவிற்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. மருத்துவர் அனைவரும் அவள் கோமா நிலையை அடைந்துவிட்டதாக முடிவும் செய்துவிட்டனர். சுஹேலுக்கு அவளை காண காண துக்கம் தொண்டையை அடைத்தது. அவனால் அழுகையை அடக்க முடியவில்லை. அவளிடத்தில் அமர்ந்து "வா துர்கா வா" உன்னை என்னிடத்தில் இருந்து யாராலும் பிரிக்க முடியாது. நாம் கண்டிப்பாக நன்றாக வாழ்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறி கதறியதை கேட்ட உடன் இருந்த மருத்துவர்கள் அவனுக்கு ஆறுதல் கூறி அவனை சமாதானம் படுத்த முயன்றனர்.

பார்வதி, வாசுதேவன் இருவருக்கும் சுஹேலின் நிலையை காண வியப்பாகவும் அதே சமயம் பாவமாகவும் இருந்தது. வாசுதேவனுக்கோ என் தங்கை மீது இவனுக்கு இவ்வளவு காதலா! நம்பவே முடியவில்லை. இப்படி கூட ஒரு பெண் மீது ஒருவன் இவ்வளவு பித்தாக இருப்பானா? அதுவும் அவனிடத்தில் என்ன இல்லை? பணம், பதவி, அழகு, நல்ல குணம் எல்லாம் இருக்கிறது. இவ்வளவு இருந்தும் என் தங்கைக்காக இப்படி உருகுகிறானே? வெளியே கூட செல்லாமல் என் தங்கை நலமாக வேண்டும் என்று தவமாய் தவம் இருக்கிறான். கடவுளே! இவனின் அன்பை உணர்ந்து கொள்வதற்குக்காவது என் தங்கை விரைவில் சுய உணர்வு பெறவேண்டும் ! என்று மனதார பிராத்தனை செய்துக் கொண்டார். அப்போது வாசுதேவனுக்கு சுஹேலின் மதம் எல்லாம் கண்களுக்கு தெரியவில்லை அவனின் எல்லை இல்லா அன்பு மட்டுமே தெரிந்தது.

எல்லோர் வேண்டுதலும் அந்த எல்லை இல்லா பரஞ்சோதியின் காதில் விழுந்தது போலும், அன்று இரவு பதினோரு மணிக்கு துர்கா கண் விழித்தாள். அவள் காலடியில் ஒரு உருவம் உட்கார்ந்துக் கொண்டே உறங்குவதை பார்த்தாள். முதலில் அந்த உருவம் யார் என்பதை அவளால் அடையாளம் காண முடியவில்லை. மீண்டும் மீண்டும் பார்த்த போது தான் அது சுஹேல் என்பது அவளுக்கு தெரிந்தது. அவளுக்கு அவனை பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. சிவந்த நிறமும், ஆறடி உயரமும் அதற்கேற்ற கம்பீரமும் உள்ள சுஹேலா இவன்? அவளையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது.முகத்தில் ஒரு வாரம் தாடி இருக்க, உடல் மெலிந்து, தன்னை குறுக்கி அவள் காலடியில் அவன் உறங்குவதை பார்க்க பார்க்க அவள் மனம் துடித்தது. இவன் எப்பேர்ப்பட்ட மனிதன்? இவனா என் காலடியில்? என்று நினைத்து அவள் விம்மியபோது, அவள் உடல் குலுங்க, அந்த அசைவில் உடனே கண் விழித்த சுஹேல், துர்கா கண் விழித்ததை அறிந்து தன் உயிரே தன்னிடம் திரும்பி வந்தது போல் உணர்ந்தான். துர்கா இப்ப எப்படி இருக்கு? எங்காவது ரொம்ப வலிக்குதா? என்று ஆறுதலாக கேட்டு அவள் அருகில் சென்றான்.

அவள் தன்னுடைய க்ளுகோஸ் ஏற்றிக் கொண்டிருக்கும் கையால் அவன் கையை மெல்ல பிடிக்க, கையை அசைக்க கூடாது செல்லம்மா என்று கூறி, அவளுடைய மற்றொரு கையை பிடித்து தன் கைக்குள் வைத்துக் கொண்டு, இனிமேல் ஒரு பயமும் இல்லை மை ஸ்வீட் லிட்டில் டார்லிங் என்று கண்கள் பனிக்க அவன் சொன்னதை கேட்டு அவள் லேசாக புன்முறுவல் செய்தாள். சுஹேல் சென்று மற்ற மருத்துவர்களையும் அழைத்து வந்தான். அவர்கள் அனைவரும் துர்காவை பார்த்து, இது ஒரு மெடிக்கல் மிரக்ள் சுஹேல். உங்களுடைய ஆழமான காதல் தான் அவர்களை சுய உணர்வு பெற வைத்திருக்கிறது என்று கூறி துர்காவிற்கும் சுஹேலுக்கும் வாழ்த்து தெரிவித்தனர். பிறகு வெளியே இருந்த பார்வதியும், வாசுதேவனும் வந்து பார்த்தனர். அவர்களால் சந்தோஷத்தில் பேச கூட முடியவில்லை. அவர்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள் என்று செவிலியர் வந்து கூற, வாசுதேவனும் பார்வதியும் வெளியே வந்தனர். சுஹேலும், நீ நல்லா தூங்கி ஓய்வெடு! என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான்.

அவன் வெளியே வந்தவுடன் ஏதோ மனதை அழுத்தி கொண்டிருந்த பாரம் இறங்கியது போல் மனம் லேசானதை உணர்ந்தான். அங்கு இருக்கும் பார்வையாளர் அறையில் மேடை ஒன்று இருக்க அதிலேயே படுக்க , ஒரு வாரமாக அவன் சரியாக தூங்காத நிலையில் அன்று அவன் நிம்மதியாக படுத்து உறங்கினான்.

காலையில் ஆறு மணிக்கு கண் விழிக்க, துர்கா எப்படி இருக்கிறாள் என்று அவளை காண சென்றான். அவள் கண் விழிக்காமல் தூங்கி கொண்டிருக்க சுஹேல் அவள் பக்கத்திலே அமர்ந்து அவள் விழிக்கும்வரை காத்திருந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் பார்வதி, வாசுதேவன், பாத்திமா மற்றும் சந்தோஷ் அனைவரும் துர்காவை காண வந்தனர்.


அதற்குள் கண் விழித்த துர்கா சுஹேலை தன் பக்கமாக வரவழைத்து அவனின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். அவளை பார்த்த அனைவரும் ஆனந்தம் அடைந்தார்கள். பார்வதி, கடவுளே! இனிமேலும் இந்த பெண்ணுக்கு எந்த துன்பமும் தராதே! என்று மனதில் பிராத்தனை செய்துக் கொண்டாள். பரந்தாமனுக்கும் வந்து துர்காவை காண ஆசை தான். ஆனால் அவரின் உடல் நிலை அவரை வெளியே செல்ல விடாமல் செய்தது. அவளை பார்த்த சந்தோஷும், துர்கா உன்னை போல் அமைதியாக ஒரு நாளாவது நான் இருக்க வேண்டும் என்று உன்னிடத்தில் கூறி இருந்தேனே ஞாபகம் இருக்கிறதா? ஒரு நாள் இல்லை, ஒரு வாரம் என்னை அமைதியாய் இருக்க செய்து விட்டாய் என்று கூறவே, அவளும் உன் ஆசை நிறைவேறியது அல்லவா! என்று கூற, அப்பா போதுமடா சாமி ! இனிமேல் இப்படியெல்லாம் ஆசைபட மாட்டேன் என்று அவன் பயந்தவாறே கூற அனைவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

மருத்துவர் பார்த்து அவள் கை காலில் உள்ள எலும்பு முறிவு சரியாக ஒரு மாதம் ஆகும் என்றும் அவள் மிகவும் பலகினமாக உள்ளதால் அதுவரை இங்கு இருப்பது நல்லது என்றும் கூறவும் சுஹேலும் நான் துர்காவை பார்த்துக்கொள்கிறேன். அவளுடைய மருத்துவ செலவு முழுதும் நானே ஏற்கிறேன் என்று கூறவும் அந்த மருத்துவரும் புன்னகை புரித்தவாறே தலை அசைத்தார்.

சிறிது நேரத்தில் பார்வதியும் பாத்திமாவும் அங்கு வர, பாத்திமா சுஹேலிடம், "இந்த மருத்துவமனையிலேயே சாப்பிடாமல், தூங்காமல் ஒரு வாரம் இருந்து இருக்கிறாய். இன்றைக்காவது வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு நன்கு ஓய்வெடுத்து வா. நாங்கள் துர்காவை பார்த்துக் கொள்கிறோம். பார்வதியும் ஆமாம் தம்பி, நீ வீட்டிற்கு ! போப்பா! இன்னும் சிறிது நேரத்தில் துர்காவின் அண்ணனும் வந்துவிடுவார். சரி நான் வீட்டிற்கு சென்று குளித்து விட்டு வருகிறேன் என்று கூறி சென்றான். அவனுக்கு போகும் வழியெல்லாம் ஒரே யோசனையாக இருந்தது.

துர்காவும் படிப்பை முடித்துவிட்டாள். எப்படியும் அவள் தேர்வில் வெற்றி பெற்று விடுவாள். அவள் அவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறாள். நானும் என் படிப்பை முடித்து விட்டேன். நான் இப்போதே துர்காவை திருமணம் செய்தால் என்ன! என்ற எண்ணம் தோன்றவே, வீட்டை அடைந்தவுடன் சந்தோஷுக்கும் ரவிக்கும் போன் செய்து பதிவு திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய சொன்னான். ரவி போனிலேயே ஒரு மாதமாவது காத்திருந்து தான் பதிவு திருமணம் பண்ண வேண்டி இருக்கும் என்று சொல்ல, சரி என்று கூறிவிட்டு தன் பெற்றோருக்கு போன் செய்தான். போனை உசைன் எடுத்ததும், வாப்பா, நீங்களும் உம்மாவும் அடுத்த மாதம் சென்னை வரவேண்டியிருக்கும். உங்களுடைய பயண சீட்டை நானே எடுத்து விடுகிறேன் என்று கூறவும், அவர் என்னடா? என்ன விஷயம்? என்று கேட்க, நீங்கள் இங்கே வந்த பிறகு உங்களுக்கே தெரியும் வாப்பா! என்று கூறி போனை வைத்து விட்டான்.
 

New Threads

Top Bottom