Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL மர்மயோகி - Tamil Novel

அத்தியாயம் 23

மறுநாள் காலை நடக்கப் போகும் விபரீதம் எதையும் அறியாமல் சூரியன் கிழக்கே உதித்து கொண்டிருந்தது. பார்த்திபன் தான் முன்பே திட்டமிட்டபடி கோபுர மாடம் ஒன்றில் இரவே வந்து ஒளிந்து கொண்டு விட்டான். அவனது கைவசம் ஜெய் சிம்மனின் உயிரைக் குடிக்க இரண்டு அம்புகளும் ஒரு வில்லும் இருந்தன. அவன் மாடத்தில் இருந்து பார்த்ததால் கீழே மக்கள் நடமாட்டம் மிக தெளிவாக தெரிந்தது. அங்கிருந்து குறி வைத்தால் ஜெயசிம்மன் உயிர் தப்புவது மிகக் கடினம் என்பதையும் அவன் உணர்ந்தே இருந்தான். தன் வாழ்நாள் இலட்சியத்தை இன்னும் சிறிது நேரத்தில் அடையப் போவதை நினைத்து அவன் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான்.ஜெயசிம்மன் எப்போது வரப்போகிறான் என்று அவன் மனம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

அதே நேரம் கோவிலில் திரளான மக்கள் கூட்டம் கூடத் தொடங்கியிருந்தது. வாண வேடிக்கைகளுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகத் தொடங்கின. ஜெயசிம்மனின் வருகைக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படத் தொடங்கின.

விஜயபாகு தன்னுடைய மாளிகையில் நிலை கொள்ளாது உலாவிக் கொண்டிருந்தான். அவனுக்கு ஏனோ ஜெயசிம்மனை கொல்ல பார்த்திபன் முயற்சி செய்வதும் அதை மர்மயோகியிடம் மறைத்து விட்டு தனியனாக செயல்படுவதும் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இந்த விசயத்தில் பார்த்திபன் அகப்பட்டு கொண்டு விட்டால் அவனை மீட்க இவர்களைத் தவிர வேறு யாராலும் முடியாது என்பதால் இந்த விசயத்தை எப்படியாவது மர்மயோகியின் காதுகளுக்கு கொண்டு போக விரும்பினான். அதே நேரம் அவன் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவும் விரும்பவில்லை. அதனால் நடக்கப் போகும் கொலை முயற்சியை பற்றி விவரமாக எழுதி ஒரு ஓலையை தயார் செய்தான்.

அதை மடியில் வைத்துக் கொண்டவன் மாளிகையின் வாசலில் நின்றபடி இதை யாரிடம் கொடுத்து மர்மயோகியிடம் சேர்ப்பிப்பது என்று யோசித்தபடி நின்று கொண்டிருந்தான். அவனது நல்ல நேரமோ என்னவோ ஒரு சிறுவன் அழுதபடி தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தான். அவனைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த விஜயபாகு அவனை அருகே அழைத்தான்.

"சிறுவனே ! மகிழ்ச்சியான பண்டிகை காலத்தை கொண்டாடாமல் எதற்காக இப்படி அழுது கொண்டிருக்கிறாய்?" என்றான்.

தன்னைப் பார்த்து அன்புடன் பேசிய விஜயபாகு வை சிறுவனுக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது. தன் அழுகையை ஒருவாறு நிறுத்தியவன்" என் தந்தையிடம் கருப்பட்டி மிட்டாய் கேட்டேன். அதிகமாக தின்றால் தடுமன் பிடித்துக் கொண்டு விடும் என்று எனக்கு வாங்கி தர மறுக்கிறார். என் நண்பர்கள் பண்டிகையை கொண்டாட விதவிதமான இனிப்பு பல காரங்களை தின்று கொண்டிருக்கிறார்கள். நான் வெறும் வாயுடன் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்"

"அவ்வளவுதானா விசயம்?அழாதே.! உனக்கு தேவையான தின்பண்டங்களை வாங்க நான் காசு தருகிறேன்."

"எவ்வளவு தருவீர்கள்?"

"ஒரு பொற்காசு தருகிறேன். உனக்கு அதில் திருப்தி தானே?"

சிறுவன் மகிழ்ச்சியுடன் தலையை அசைத்தான். "ஆனால் அதற்கு முன்னால் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்"

"நான் உங்களுக்கு உதவ வேண்டுமா? என்னால் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்?"

"சின்ன உதவி தான்.சுந்தரேஸ்வரர் கோவில் மண்டபத்தில் தங்கியுள்ள மர்மயோகியை தெரியுமல்லவா ? அவரிடம் நான் கொடுக்கும் ஓலையை கொடுத்து விட வேண்டும். அந்த ஓலையை நான் தான் கொடுத்தேன் என்று நீ சொல்லி விடக் கூடாது."

"அதனாலென்ன? அப்படியே செய்து விடுகிறேன்." என்றான் சிறுவன் மகிழ்ச்சியுடன் .

தான் மறைத்து வைத்திருந்த ஓலையை எடுத்த விஜயபாகு அதை சிறுவனிடம் கொடுத்தான். அதை வாங்கி கொண்டு விட்ட சிறுவன் "அந்த பொற்காசு?" என்று தலையை சொரிந்தான்.

"ஓ! அதை நான் மறந்து விட்டேன்." என்ற விஜயபாகு தன் மடியிலிருந்த ஒரு பொற்காசை சிறுவனிடம் கொடுத்தான்.

அதை வாங்கி கொண்ட சிறுவன் மகிழ்ச்சியுடன் கோவிலை நோக்கி ஓடினான். அவன் ஓடுவதை பார்த்து கொண்டிருந்த விஜயபாகு திருப்திக்கு அடையாளமாக தன் தலையை ஆட்டி கொண்டான். எப்படியோ துறவியிடம் தகவலை சொல்லி விட்டோம் என்ற திருப்தியில் அவன் மனம் மகிழ்ந்தது. இனி துறவியாயிற்று, பார்த்திபனாயிற்று, ஜெயசிம்மனாயிற்று. இனி தனக்கும் எதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று நினைத்தவன் அதன் அடையாளமாக நீண்ட பெருமூச்சு ஓன்றை வெளியேற்றினான்.

தனக்கு முன்பாக வந்து நின்ற சிறுவனை கேள்விக்குறியோடு பார்த்தான் ஆதித்தன்" என்ன தம்பி? உனக்கு என்ன வேண்டும்?" என்று அன்புடன் கேட்டான் ஆதித்தன்.

"நான் மர்மயோகியை உடனே பார்க்க வேண்டும். அவர் எங்கே?" என்றான் பெரிய மனித தோரணையுடன்.

அவனது தோற்றமும், பேசும் முறையும், பெரிய மனித தோரணையும் ஆதித்தனுக்கு சிரிப்பை வரவழைத்தன.

"அவர் கிணற்றடிக்கு குளிக்கப் போயிருக்கிறார். ஏன் தம்பி என்ன விசயம்? எதற்காக நீ அவரைப் பார்க்க நினைக்கிறாய்?" என்றான் ஆதித்தன் தன் சிரிப்பை அடக்கி கொண்டு.

"நான் அவருக்கு ஒரு ஓலை கொண்டு வந்திருக்கிறேன். அதை அவரிடம் தான் தர வேண்டும்" என்றான் சிறுவன்

அதுவரை சிறுவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த ஆதித்தனின் சிரிப்பு அவன் ஓலை என்று சொன்னதும் சட்டென்று நின்றது. இது ஏதோ விவகாரமான விசயம் போலிருக்கிறதே என்று நினைத்தவன்" அதை அவரிடம் தான் கொடுக்க வேண்டுமா? ஏன் என்னிடம் கொடுக்க கூடாதா?" என்றான்.

"என்னிடம் ஓலையை கொடுத்தவர் அதை மர்மயோகியிடம் மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லியிருக்கிறார். அதை நான் மீற முடியாது" என்றான் குழப்பத்துடன் சிறுவன் அவனுக்கு இப்போது ஓலையை யாரிடம் கொடுப்பது என்ற குழப்பம் பிறந்திருந்தது.

"யார் அவர்?" என்றான் ஆதித்தன்

"அதை நான் உங்களிடம் கண்டிப்பாக சொல்ல மாட்டேன்."

"பரவாயில்லை. சொல்வதும் சொல்லாததும் உன்னுடைய இஷ்டம். நீ என்னிடம் ஓலையை கொடுத்தால் நான் அதைப் பிரித்துக் கூட பார்க்காமல் அப்படியே மர்ம யோகியின் கைகளில் ஓப் படைப்பேன் என்று உனக்கு உறுதி தருகிறேன். என்னை நம்பினால் நீ என்னிடம் ஓலையை தரலாம்" என்றான் ஆதித்தன் விநயமாக.

"உங்களை பார்த்தால் சற்று நல்லவன் போலத்தான் தெரிகிறது. அதனால் உங்களை நம்பி ஓலையை ஓப்படைக்கிறேன். அதைப் பிரித்துப் பார்க்காமல் யோகியிடம் ஒப்படைத்து விடுங்கள்" என்றான் சிறுவன்.

"என்னை நம்பியதற்கு நன்றி தம்பி! இந்த ஓலையை பிரிக்காமல் அப்படியே அவரிடம் ஒப்படைத்து விடுகிறேன்"

"நன்றி" என்ற சிறுவன் பலகார கடையை நோக்கி ஓட்டம் பிடித்தான்.

ஆதித்தன் ஓலையை பிரிக்க முயன்ற போது குளித்து விட்டு வந்த அரிஞ்சயன்" அது என்ன?" என்றான்.

"ஓலை அண்ணா. அடையாளம் தெரியாத ஒரு நபர் ஒரு சிறுவனிடம் இதை கொடுத்து அனுப்பியிருக்கிறார். "

" அடையாளம் தெரியாத நபரா? அது யாராக இருக்க கூடும்?"

"அவரைப் பற்றி சிறுவன் மூச்சுக் கூட விட மறுத்து விட்டான்."

"சரி. நீ ஓலையைபடி " என்றான் அரிஞ்சயன் .

ஓலையைப் படிக்க ஆரம்பித்த ஆதித்தனின் முகம் மாறியது. அவனது முகம் இருள்வதை கண்ட அரிஞ்சயன் அவனது கையில் இருந்த ஓலையைப் பிடுங்கி படித்தான். அதைப் படித்து முடித்த அரிஞ்சயனின் முகம் உருகிய உலோகத்தின் கொதிநிலையை அடைந்தது.

"இதென்ன பைத்தியக்காரத்தனம்? ஏன் இந்த பார்த்திபன் இவ்வளவு அவசரப்படுகிறான்? நம்மை அவன் நம்பவில்லை போலிருக்கிறதே?" என்றான் ஆவேசத்துடன் .

"நமக்கு தெரியாமல் அவன் ஜெயசிம்மனை கொல்ல முயற்சி செய்கிறேன். அவனது கூட்டாளிகளில் யாருக்கோ அவனது நோக்கம் பிடிக்கவில்லை. அதனால் தனது முகத்தை வெளிகாட்டாமல் நம்முடைய உதவியை நாடி இந்த ஓலையை அனுப்பியிருக்கிறான்."

" நீ சொல்வது சரிதான். இந்த காரியத்தை நமக்கு தெரியப்படுத்த அவன் முயற்சி செய்திருக்கிறான். அதில் வெற்றியும் பெற்று விட்டான். சுமை இப்போது இடம் மாறி நம் தலையில் ஏறி விட்டது."

"நாம் வேறு ஜெயசிம்மனுக்கு நம்மால் எந்த உயிரபாயமும் ஏற்படாது என்று நித்ரா தேவிக்கு உறுதியளித்து அவளை சகோதரியாக ஏற்று கொண்டு விட்டோம். அவளது தாலியை இறக்கத் துணிந்து விட்டான் பார்த்திபன். நாம் இதை எப்படியாவது தடுத்து நிறுத்தி அவளது வாழ்வை காப்பாற்ற வேண்டும்"

" ஆனால் இந்த ஓலையில் ஜெயசிம்மனை பார்த்திபன் கொல்ல போகிறான் என்று தான் எழுதியிருக்கிறது. அதை எப்படி எங்கேயிருந்து செயல்படுத்த போகிறான் என்று எந்த விவரமும் இதில் இல்லை."

"அது நமக்கு தேவையில்லை. ஜெயசிம்மனை கொலை செய்ய போகும் கொலையாளி நீ என்று நினைத்து கொள். அவன் இடத்தில் நீ இருந்தால் எந்த இடத்தை தேர்ந்தெடுப்பாய் என்று யோசித்து பார். பார்த்திபன் எங்கே பதுங்கி ஜெயசிம்மனை கொல்லகாத்துக் கிடக்கிறான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்துவிடும்."

ஆதித்தன் யோசிக்க ஆரம்பித்தான். கோவிலின் அத்துணை இடங்களும் அவனுக்கு அத்துப்படியாக மனதில் இருந்தன. ஆதித்தன் ஜெய சிம்மனை கொல்ல நினைத்தால் அவன் தேரை வடம் பிடித்து இழுக்கும் போது தான் கொல்ல முயற்சி செய்வான். அது கண்டிப்பாக தரை மார்க்கமாக மக்களின் இடையூறுக்கு நடுவே முடியாது என்பதால் கோவில் கோபுரமாடத்தில் இருந்துதான் கொலை முயற்சியை செய்வான்.
யோசித்து முடித்த ஆதித்தன் "அண்ணா.! அவன் கண்டிப்பாக கோவில் மாடத்தில் தான் மறைந்திருக்க வேண்டும். ெஜயசிம்மனை வீழ்த்த அதை விட நல்ல இடம் அமையாது " என்றான்.

அதே நேரம் தூரத்தில் எழுந்த இசை சத்தமும், வாண வேடிக்கைகளும் ஜெயசிம்மன் வந்து விட்டான் என்பதை அனைவருக்கும் அறிவித்தன.

மாடத்தில் பதுங்கி இருந்த பார்த்திபன் தன் வில்லையும் அம்பையும் எடுத்து கொண்டு தயாரானான். "வா எதிரியே " என்று அவனது உதடுகள் முணுமுணுத்தன.

சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

ஜெயசிம்மன் தேரடியை நெருங்கி கொண்டிருந்தான். பார்த்திபனின் அம்பின் நுனிஜெயசிம்மனின் மார்பை குறிவைக்க தொடங்கியது.
 
அத்தியாயம் 24

எப்போதும் வாக்கு கொடுத்து விட்டால் அதை மீறாத வழக்கம் கொண்ட இரண்டு சகோதர்களும் இப்போது நித்ரா தேவிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி விடுவோமோ என்று முதல் முறையாக அஞ்சத் தொடங்கினர்.ஜெயசிம்மனை தன் திட்டப் படி பார்த்திபன் தீர்த்துக் கட்டி விட்டால் தங்களுடைய வாக்குறுதி என்னாவது என்று இருவருமே நினைத்தனர்.

ஜெயசிம்மன் தன்னுடைய பரிவாரங்களுடன் கோவிலை நெருங்கி கொண்டிருப்பதை அங்கிருந்த மக்களின் பரபரப்பிலிருந்து தெரிந்து கொண்ட அரிஞ்சயன் 'ஆதித்தா! அதோ ஜெயசிம்மன் கோவிலை நோக்கி வர துவங்கி விட்டான் - இனி நாம் சிந்திக்க நேரமில்லை. நாம் இங்கே தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஜெயசிம்மனின் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. நீ எப்படியாவது கோவில் கோபுரத்தில் மறைந்திருக்கும் பார்த்திபனை சந்தித்து அவனது திட்டத்தை தடுத்து நிறுத்து. நான் என்னால் முடிந்தவற்றை செய்து ஜெயசிம்மனை காப்பாற்ற முயற்சி செய்கிறேன்." என்ற அரிஞ்சயன் அங்கிருந்து நகர்ந்தான்.

சூழ்நிலையின் கடுமையை நன்றாகப் புரிந்து கொண்டு விட்ட ஆதித்தன் உடனடியாக கோவிலின் நுழைவாயிலை நோக்கி நடந்தான். கோவிலுக்கு வருகை தரும் ஜெயசிம்மன் முதலில் கடவுளை வணங்கி விட்டு பிறகு தான் தேர் இழுக்கும் வைபவத்தில் கலந்து கொள்வான் என்பதால் நுழைவாயிலில் அவனை வரவேற்கும் விதமாக ஆரத்தி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வைத் தான் தனக்கான கொலை களமாக தேர்வு செய்திருந்தான் பார்த்திபன்.

கோவிலின் நுழைவாயில் கூட்டம் மிகுதியாக இருந்ததால் அதை மீறி ஆதித்தனால் உள்ளே செல்ல முடியவில்லை. கூட்டத்தை பிளந்து வழியை ஏற்படுத்தி உள்ளே செல்ல முடியாமல் தவித்தான் ஆதித்தன்.

அவன் படும்பாட்டை ஓரக்கண்ணால் கவனித்து கொண்டிருந்த அரிஞ்சயன் தன் தம்பி தன்னுடைய முயற்சியில் தோற்றுவிட்டதையும் இனி தான் ஏதாவது செய்து தான் ஜெயசிம்மனை காப்பாற்றியாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தான். தன் குதிரையிலிருந்து இறங்கி கோவிலை நோக்கி தன் பரிவாரங்களுடன் நடந்து வந்தான் ஜெயசிம்மன்.

கோவில் மாடத்தில் இருந்த பார்த்திபன் ஜெய சிம்மன் நடந்து வருவதைப் பார்த்து எச்சரிக்கையடைந்தான். தன் வில்லின் நாணை இழுத்து அம்பின் நுனிக்கு ஜெயசிம்மனை கொண்டு வந்தான்.

ஆரத்தி தட்டை எடுத்து வந்த இரண்டு பெண்கள் அதை ஜெயசிம்மனை நோக்கி சுற்றத் தொடங்கினர். அவன் அதை புன்சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான். அதே நேரம் கூட்டத்தை பிளந்து கொண்டு முன்னேறினான் அரிஞ்சயன் .அவன் மன்னரிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்ததால் யாரும் அவனை தடுக்க முனையவில்லை. மாறாக அவன் நடக்கும் பாதையில் இருந்த மக்கள் தாங்களாகவே ஒதுங்கி அவனுக்கு வழியை ஏற்படுத்தி கொடுத்தனர்.

தன்னை நோக்கி மர்மயோகி வருவதை பார்த்து கொண்டிருந்தான் ஜெயசிம்மன் . அவனுக்கு மிக அருகே வந்த மர்மயோகி ஆரத்தி எடுக்கப்பட்ட வெள்ளி தட்டை வானத்தை நோக்கி தட்டி விட்டான். அவனது இந்த அடாத செயலால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். வானத்தில் மேலும் கீழுமாக உருண்ட படி பறந்த வெள்ளி தட்டில் சூரியக்கதிர்கள் பட்டு எதிரொளித்து சில மின்னல் வீச்சுகளை உருவாக்கியது. அந்த மின்னல் கீற்றுகள் பார்த்திபனின் கண்களை கூச வைத்தன. எதிர்பாராமல் நடந்த இந்த நிகழ்வால் அவனது பார்வைத் திறன் பாதிக்கப்பட்டு அவனது குறிதவறியது.

ஜெயசிம்மனின் மார்புக்கு அவன் வைத்த குறி தவறாகி அருகிலிருந்த பாதுகாப்பு வீரனின் தோளில் பாய்ந்தது. "அய்யோ " என்ற அலறலுடன் அவன் கீழே விழுந்தான். யாரோ எதிரி ஜெயசிம்மனின் மீது தாக்குதல் நடத்துகிறான் என்பதை உணர்ந்த அவனது மெய் காவல் படை வீரர்கள் தங்களின் கேடயத்தால் அவனை சுற்றி வளைத்து பாது காத்தனர். அவர்களின் வியூகத்தில் மறைந்து நின்றான் ஜெயசிம்மன்

அம்பு பாய்ந்த திசையை கவனித்த வீரர்களில் ஒருவன் "கோவில் மாடத்தில் தான் அம்பு வந்தது. எதிரி அங்கே தான் மறைந்திருக்க வேண்டும்" என்றான்.

சில வீரர்கள் வாளை உருவிக்கொண்டு எதிரியை பிடிக்க கிளம்பினர். வியூக அமைப்பில் இருந்த ஜெயசிம்மன் "அவனை கொன்று விடாதீர்கள். எனக்கு அவன் உயிரோடு வேண்டும்" என்று உத்திர விட்டான்.

தன்னைத் தேடி வீரர்கள் மேலே ஏறி வருவதை உணர்ந்த பார்த்திபன் தான் கொண்டு வந்திருந்த இரண்டாவது அம்பை பிரயோகிக்க முடியாமல் பரிதாபமாக நின்றான். அவனது மொத்த கோபமும் தன் காரியத்தை இடையிட்டு தடுத்த மர்ம யோகியின் மீது குவிந்தது. தன்னுடைய கொலை முயற்சி அவனுக்கு எப்படி தெரிந்தது என்று ஒரு நிமிடம் குழம்பி போனான். தன்னுடைய ஆட்களில் யாரோ ஒரு புல்லுருவி இருக்கிறான். அவன் தான் மர்மயோகியிடம் தன் திட்டத்தை சொல்லியிருக்க கூடும் என்ற முடிவுக்கு வந்தான்.

தான் தப்பிக்க இருக்கும் ஒரே வழி மாடத்திலிருந்து குதிப்பது தான் என்று முடிவெடுத்தவன் தன் கைவசம் இருந்தவில்லையும் அம்பையும் தூர எரிந்தான். தன் உயிரே போனாலும் சரி என்று மாடத்திலிருந்து குதிப்பதற்காக பின்னோக்கி நகர்ந்த பார்த்திபனை உள்ளே நுழைந்த முதல் வீரன் பார்த்து விட்டான். "ஏய் ! நில்" என்றபடி பார்த்திபனை நெருங்கியவன் அவனது உறுதியான முகத்தை பார்த்ததும் எதிரி தன் உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்து விட்டான் என்று சட்டென்று புரிந்து கொண்டான்.

முன்னோக்கி ஓடிப்போய் குதிக்க முயன்ற பார்த்திபனை கையில் இருந்த வாளை தூர எரிந்து விட்டு ஓடிப்போய் அவன் கால்களை பற்றி இழுத்தான் அந்த வீரன். அவனுக்கு பின்னால் மாடத்திற்கு வந்த வீரர்களும் அவனது துணைக்கு வர வெகு எளிதாகப் பிடிபட்டு விட்டான் பார்த்திபன்.

தனக்கு முன்பாக கலைந்த தலையுடன் கசங்கிய உடைகளுடன் நின்ற பார்த்திபனை ஏற இறங்க பார்த்தான் ஜெயசிம்மன் .

"நான் வெகு நாட்களாக உன்னை சந்திக்க நினைத்து கொண்டிருந்தேன். நம் சந்திப்பு இப்படியா நிகழ வேண்டும்" என்றான் ஜெயசிம்மன்

"என்னை பார்த்த சிறிது நேரத்தில் நீ இறந்து விட வேண்டும் என்று நான் நினைத்தேன்.என் நினைப்பில் மண் விழுந்து விட்டது. நீ இன்னமும் உயிரோடு இருக்கிறாய்" என்றான் ஆற்றாமையோடு பார்த்திபன்

" உன் நினைப்பில் மண் விழுந்ததால் தான் வெட்கப்பட்டு மாடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தாயோ?, என்றான் பரிகாச சிரிப்புடன் ஜெயசிம்மன்

"என்னவர்களை உன்னிடம் காட்டி கொடுக்க கூடாது என்ற எண்ணத்தில் தான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். ஆனால் அதிலும் நான் தோற்றுவிட்டேன்"

"கவலைப்படாதே.! சிறைசாலையில் அவர்களின் பெயரை நீகண்டிப்பாக கூறுவாய். என்னுடைய ஆட்கள் அவர்களின் பெயரை கக்க வைப்பார்கள். இவனை உடனே சிறையில் அடையுங்கள். மன்னரை கொல்ல முயன்று கையும் காலுமாக பிடிபட்டவன் இவன். விசாரித்து தீர்ப்பளிக்கும் எந்த தகுதியும் இவனிடம் இல்லை. இவனுக்கு நேராக தண்டனை தான் " என்றான் ஜெயசிம்மன் கொடுர புன்னகையுடன் .

பார்த்திபன் காவல் வீரர்களால் அங்கிருந்து இழுத்து செல்லப்பட்டான். அவன் போவதையே பார்த்து கொண்டிருந்த ஜெயசிம்மனின் பார்வை இப்போது மர்மயோகியின் மீது திரும்பியது.

"எனது உயிரை காப்பாற்றியதற்கு மிகுந்த நன்றியோ கியாரே! அவன் என்னை கொல்ல அங்கே மறைந்து கிடந்தது உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?" என்று தன் மனதை அரித்த சந்தேகத்தை கேள்வியாக வீசினான்.

அவனது எதிர்பாராத கேள்வியால் சற்று தடுமாறிப் போன மர்மயோகி ஒரு நொடியில் தன்னை சுதாரித்து கொண்டான்.

"இது என்ன பெரிய விசயம் மன்னா? மாடத்திலிருந்து சூரிய ஒளியில் ஏதோ மின்னுவதை பார்த்தேன் .சற்றே கூர்ந்து பார்த்ததில் அது ஒரு அம்பு என்று தெரிந்தது. அதனால் தான் உங்களை காப்பாற்ற ஓடோடி வந்தேன். அப்போது நடந்த சிறு மரியாதை குறைவை மன்னர் பொறுத்து கொள்ள வேண்டும்"

"அதில் பாதகம் எதுவும் இல்லை. என் மதிப்பு மிக்க உயிரை உங்கள் மதியுகத்தால்
எப்படியோ காப்பாற்றி விட்டீர்கள் அதற்கு என்னுடைய நன்றிகள். உங்கள் உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன்" என்றான் ஜெயசிம்மன்.

"அது என்னுடைய கடமை மன்னா" என்றான் அரிஞ்சயன் .

தன் மீது நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சி ஏற்படுத்திய அதிர்ச்சியை சிறிதும் வெளியே காட்டிக் கொள்ளாத ஜெயசிம்மன் அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறந்து விட்டவன் போல் தேர் திருவிழாவை துவக்கி வைத்துவிட்டு இயல்பாகவே இருப்பதாக காட்டி கொண்டான்.

அவனது பாதுகாப்புக்கு வந்த வீரர்கள் தான் கண்ணில் விளக்கெண்ணை விட்டு கொண்டு கண்ணில் படுபவர்களையெல்லாம் சந்தேக கண்ணோடு பார்த்து கொண்டிருந்தனர். அவர்களின் கெடுபிடியால் மக்கள் சிறிது சிரமத்திற்கு ஆளானாலும் அதை வேறு வழியின்றி எந்த முணுமுணுப்பும் இல்லாமல் ஏற்று கொண்டனர். இல்லையென்றால் பி டிபட்ட வனின் கூட்டாளி என்று குற்றம் சாட்டப்படலாம் என்பதால் அந்த கெடுபிடிகளை அவர்கள் வேறு வழியின்றி சகித்து கொண்டனர்.

கூட்டம் மெல்ல கரைந்ததும் ஆதித்தனின் பக்கம் திரும்பிய அரிஞ்சயன்" இந்த முட்டாள் இப்படி அகப்படுவான் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை" என்றான்.

" அவன் வெற்றி அல்லது வீர மரணம் என்ற ஒரே குறிக்கோளுடன் இங்கே வந்திருக்கிறான். நல்ல வேளையாக உயிர் தப்பி விட்டான்"

"ஆனால் கார கிருகத்தில் மாட்டி கொண்டு விட்டான்."

" இருக்கிற சிக்கல்கள் போதாதென்று இவனை காப்பாற்றும் பொறுப்பும் கூடுதலாக வந்து சேர்ந்திருக்கிறது. இவனை நாம் எப்படி காப்பாற்ற போகிறோம்?" என்றான் ஆதித்தன்.

"அதைத்தான் யோசிக்கிறேன்" என்றான் அரிஞ்சயன்

சகோதரர்கள் இருவரும் பார்த்திபனை எப்படி காப்பாற்றுவது என்ற சிந்தனையில் மூழ்கினர்.
 
அத்தியாயம் 25

ஏற்கனவே ஜெயசிம்மனை என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் தவித்துக் கொண்டி ருக்கும் போது பார்த்திபன் வேறு ஜெயசிம்மனிடம் கைதியாக அகப்பட்டு கொண்டு புதிய தொல்லை ஓன்றை கொண்டு வந்து சேர்த்திருந்தான். இப்போது ஜெயசிம்மனை என்ன செய்வது என்ற நோக்கம் பின்னுக்கு போய் பார்த்திபனை எப்படி அவனிடம் இருந்து மீட்பது என்ற நோக்கம் பிரதானமாக இருந்தது. இருவரும் அதைப் பற்றி தீவிரமாக யோசித்து கொண்டிருந்தனர்.

அதே நேரம் அரண்மனையில் நித்ராதேவிக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான் ஜெயசிம்மன் .அவனை பார்த்திபன் கொல்ல முயற்சி செய்ததும் அவன் அதிலிருந்து தப்பிபிழைத்ததும் காற்றை விட வேகமாக நித்ராதேவியின் காதுகளுக்கு வந்து சேர்த்திருந்தது.

அரண்மனைக்குள் நுழைந்தவனை புயல் போல் சென்று கட்டி தழுவினாள் அவள். அவன் கண்களில் துளிர்த்த கண்ணீர் துளிகளை துடைத்து விட்ட ஜெயசிம்மன் அவளை ஆதுரத்துடன் அணைத்து கொண்டான்.

அவனது உடலை தலை முதல் கால் வரை சோதித்து பார்த்த நித்ராதேவி" உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லையே?" என்றாள் படபடப்புடன்.

" உன் அன்பு இருக்கும் வரை என்னை எந்த ஆபத்தும் தீண்டாது.கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது. என் ஆட்சிக்கு எதிராக கலக குரல் எழுப்பிய அந்த பார்த்திபன் பிடிபட்டு விட்டான். எனக்கு இருந்த ஒரே ஒரே தொல்லையும் ஒழிந்தது. " என்றான் மகிழ்ச்சியுடன் .

இருவரும் அந்தப்புரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.ஜெயசிம்மன் அவளிடம் சுந்தரேஸ்வர் கோவிலில் தன் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சியை விவரிக்க தொடங்கினான். சரியான நேரத்தில் தலையிட்டு மர்மயோகி தன்னை காப்பாற்றியதையும் அவன் சொல்ல மறக்கவில்லை. நித்ரா தேவிக்கு ஏனோ ஆதித்தனும் அரிஞ்சயனும் செய்து கொடுத்த சத்தியம் நினைவுக்கு வந்தது.

சகோதரர்கள் இருவரின் கூட்டணியில் இருக்கும் பார்த்திபன் அவர்களின் சம்மதம் இல்லாமல் இந்த கொலை முயற்சியில் இறங்கியிருக்க மாட்டான் என்றே அவள் நினைத்தாள். சகோதரர்கள் தனக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் பொருட்டே ஜெயசிம்மனை காப்பாற்றியிருக்க வேண்டும் என்று அவள் எண்ணினாள். அதை நினைத்து அவளிடம் ஒரு நிம்மதிப் பெருமூச்சு பிறந்தது.

அதே நேரம் தன் கொலை முயற்சியில் தோற்று சிறையில் அடைபட்டு கிடந்த பார்த்திபனோ நிலை கொள்ளாது நடந்து கொண்டிருந்தான். தன் கொலை முயற்சி தோல்வியடைந்ததைப் பற்றி கூட அவன் அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. அதை இடையிட்டு தடுத்த இரண்டு சகோதரர்கள் மீது தான் அவனது கோபம் திரும்பியிருந்தது.

அவர்களுக்கு இந்த கொலை முயற்சியை பற்றி தகவல் சொன்னதுரோகி யாராக இருப்பான் என்று அவன் யோசித்து கொண்டிருந்தான். ஒரு வேளை ெஜயசிம்மனின் ஒற்றர்கள் யாராவது தனது கூட்டத்தில் இருக்கிறார்களா என்று கூட அவன் சந்தேகிக்க ஆரம்பித்தான்.மர்மயோகியிடம் அந்த தகவலை சொன்ன நபர் நேரடியாகவே ஜெயசிம்மனிடம் அதே தகவலை கூறி அவனை எச்சரிக்கை செய்திருக்கலாம். ஆனால் அவன் அதை செய்யவில்லை என்பதால் அவன் ஜெயசிம்மனின் உளவு படையை சேர்ந்தவனாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு பார்த்திபன் வந்து சேர்ந்திருந்தான்.

சிறையில் அடைபட்டு கிடக்கும் தன்னை மீட்க தன் தோழர்கள் ஏதாவது முயற்சி செய்தால் கூட்டத்தில் இருக்கும் அந்த முகம் தெரியாத எதிரி தன் நண்பர்களை கூண்டோடு ஜெயசிம்மனிடம் மாட்டிவிட்டு விடும் அபாயம் இருப்பதை அவன் அறிந்தே இருந்தான்.

அவன் இப்படியான சிந்தனைகளில் மூழ்கியிருக்கும் போது பளியர் காட்டில் பதுங்கி கிடந்த அவனது தோழர்கள் காரசாரமான விவாதம் ஓன்றில் இறங்கியிருந்தனர்.

"பார்த்திபன் குறி வைப்பதில் வல்லவன். அவனது குறிமுதல்முறையாக தவறிவிட்டது."

"அதன் பலன் அவனுக்கு கிடைத்திருக்கும் சிறைவாசம்."

"அது தற்காலிகம் தான். அவனை தேசதுரோகி என்று ஜெயசிம்மன் அறிவித்து விட்டதால் அவனை விசாரணை எதுவும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் சிரச்சேதம் செய்யலாம்"

"அதற்குள் நாம் அவனை காப்பாற்றியாக வேண்டும்"

"அது மிக கடினம். அந்த சிறைசாலை கெடுபிடிகளுக்கு பெயர் போனது. அவனை அங்கிருந்து மீட்பது எளிதல்ல."

"அரசின் மேல் மட்ட தொடர்புகள் நமக்கு கிடைத்தால் சிறைசாலையின் கதவுகள் எளிதாக திறந்து விடும்."

"நாம் மக்களோடு அல்லவா பழகிக் கொண்டிருக்கிறோம்? அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் முழுவதும் எதிரி நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களிடம் உதவி கோருவது முதலையின் வாயில் தலையை விடுவதற்கு சமம். அவர்கள் அனைவரும் ஜெயசிம்மனின் விசுவாசிகள் .அவர்கள் நம் கூட்டத்தையும் சேர்த்து கைது செய்து விடுவார்கள்."

" விதி விலக்காக சிலர் இருக்கலாம்"

அவர்களை கண்டுபிடிக்க நமக்கு போதிய நேரமில்லை. அங்கே பார்த்திபனின் உயிர் ஊசலாடிகொண்டிருக்கிறது."

தோழர்களின் உரையாடல்களை ஒரு ஓரமாக உட்கார்ந்தபடி கேட்டு கொண்டிருந் தான் பளியர் குலத் தலைவன். அவன் உரையாடலில் தலையிடாமல் அமைதியாக இருந்தாலும் அவனது மனதில் தீவிரமான சிந்தனைகள் ஒடுவதை நெற்றி சுருக்கங்களின் மூலம் அறிய முடிந்தது.

அவன் எதுவும் பேசாமல் அமைதியாக அனைவர் பேசுவதையும் கூர்ந்து கவனித்து கொண்டிருப்பதை அப்போது தான் அனைவரும் அறிந்தனர். அவனது அமைதி அங்கிருந்த அனைவருக்கும் வினோதமாக இருந்தது.

" என்ன தலைவரே! அனைவரும் பேசுவதை கூர்ந்து கவனிக்கிறிர்களே தவிர உம்முடைய கருத்து என்னவென்பதை வெளிப்படையாக திறந்த மனதுடன் கூறலாமே?'' என்றான் கூட்டத்தில் ஒருவன்.

அனைவரையும் கனத்த அமைதியுடன் ஒரு முறை ஏற இறங்க பார்த்தான் பளியர் குலத் தலைவன். அவன் என்ன சொல்ல போகிறான் என்பதை அறிய அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர். பார்த்திபனின் ஆட்களுக்கு உணவும், உறைவிடமும் கொடுத்து ஆதரிப்பதால் தனது குரலுக்கு தனித்த செல்வாக்கு இருப்பதை அவன் நன்றாக அறிவான்.

தனது தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தான் பளியர் குல தலைவன்.

" தோழர்களே! என்னுடைய கருத்தை கேட்டதற்கு நன்றி. இங்கே இதுவரை எல்லா முடிவுகளையும் பார்த்திபன் மட்டும் தான் எடுத்து வந்தான். அவன் கூறுவது நல்லதோ கெட்டதோ நாம் இதுவரை அதை தட்டாது பின்பற்றி வந்திருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக இப்போது பார்த்திபன் ஜெயசிம்மனை கொல்ல முயன்று பிடிபட்டு எதிரியின் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறான். அவனை மீட்க வேண்டியது அவனது நண்பர்களான நம்முடைய கடமை. ஆனால் அதை எப்படி சாதிப்பது என்ற வழிமுறை மட்டும் தான் நமக்குத் தெரியவில்லை."

"சரியாக சூழ்நிலையை கணித்து விட்டீர்கள். உம்முடைய பேச்சை நாங்கள் கவனமாக கேட்கிறோம். மேலே தொடருங்கள்" என்றான் கூட்டத்தில் ஒருவன்.

"நாம் வெகு சீக்கிரமாக பார்த்திபனை மீட்கும் வழியை கண்டுபிடித்தாக வேண்டும். இல்லையென்றால் அவனது உயிர் பறவை உடலை விட்டு பறந்து விடும். நாட்டு மக்களின் ஒரே நம்பிக்கை பார்த்திபன் தான். அவனே இல்லாது போய் விட்டால் மக்கள் நம்பிக்கையை இழந்து விடுவார்கள். ெஜயசிம்மனை எதிர்க்க இனி யாரும் முன்வர மாட்டார்கள்"

" உண்மைதான். அவனை மீட்க நாம் நம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளத்தான் வேண்டும். சுணங்கி உட்கார்ந்து விட்டால் காரியம் நடக்காது."

எல்லோரையும் கூர்ந்து பார்த்த பளியர் தலைவன் "அவனை மீட்க நம்மால் இயலாது. ஆனால் அவனை மீட்கும் சக்தி படைத்த இரண்டு பேர் இங்கே இருக்கிறார்கள்"

அவர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது.பளியர் தலைவன் யாரைக் குறிப்பிட்டு சொல்கிறான் என்று யாருக்கும் புரியவில்லை.

"யார் அந்த இருவர் ?" என்றான் ஒருவன்.

"மர்ம யோகியும் அவனது பிரதான சீடனும் "கணி ரென்ற குரலில் சொல்லி முடித்தான் பளியர் தலைவன்.

கூட்டத்தினரிடையே பரபரப்பு எழுந்தது.

"இதென்ன பைத்தியக்காரத்தனம்? பார்த்திபனின் கொலைமுயற்சியை முறியடித்ததே அந்த இருவர் தானே?" என்றான் ஒருவன்.

"ஆமாம். அதை நான் மறுக்கவேயில்லை. அவர்கள் இருவரும் ஏற்கனவே நம் அணியில் நம்முடன் இருந்தவர்கள் தான். அவர்களும் ஜெயசிம்மனை அழிக்க வந்தவர்கள் தான். ஏதோ ஒரு காரணத்தால் அந்த கொலை முயற்சியை அவர்கள் தடுத்து நிறுத்தி விட்டார்கள். இப்போது பார்த்திபனை காப்பாற்ற அவர்களை தவிர வேறு யாராலும் முடியாது."

"பாரப்பா! துறவிகளிடம் கூட பகையை வளர்த்து வைத்திருக்கிறான் ஜெயசிம்மன் "

"அவர்கள் துறவிகள் அல்லர். ஜெயசிம்மனை வீழ்த்த துறவியாக வேடமிட்டு இருப்பவர்கள்."

"அப்படியானால் அவர்கள் யார்? எதற்காக துறவியாக வேடமணிந்து இங்கே நடித்து கொண்டிருக்கிறார்கள்.?"

"அவர்கள் இருவரும் யார் என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ந்துவிடுவீர்கள்"

"சொல்லுங்கள். நாங்கள் அதிர்ச்சியடைகிறோமா? இல்லையா என்பதை பிறகு பார்ப்போம்"

"அவர்கள் இருவரும் கள்வர் புரத்தின் பிரசித்தி பெற்ற கள்வர்கள்.அ, ஆ என்று அழைக்கப்படும் அரிஞ்சயனும், ஆதித்தனும் "

கூட்டம் திறந்த வாயை மூட மறந்தது.

"அவர்களா?" என்றான் ஒருவன் தன்னை சுதாரித்தபடி.

"அவர்களை பற்றி நாங்கள் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். இருவருமே மிகுந்த திறமைசாலிகள் என்று பலர் பேசகேள்வி "

"அவர்கள் இருவரும் தான் ஜெயசிம்மனை வீழ்த்த இங்கே வந்திருக்கிறார்கள். தன் நாட்டை காப்பாற்ற அவர்களை இங்கே அனுப்பி வைத்தது ரன தீரன்."

"இவையெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?"

"என்னை தனிமையில் சந்தித்த பார்த்திபன் தான் இந்த உண்மைகளை என்னிடம் கூறினான். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் மர்மயோகியும், பார்த்திபனும் ஓரே அணியில் தான் இருந்தனர். பார்த்திபன் செய்த ஒரே தவறு அவர்களுக்கு தெரியாமல் ஜெயசிம்மனை கொல்ல முயற்சி செய்தது மட்டும் தான். இந்த நிமிடத்தில் அரண்மனைக்குள் எந்த தடங்கலும் இல்லாமல் நுழைய கூடிய சக்தி படைத்தவர்கள் இவர்கள் இருவரும் தான். இவர்களால் மட்டும் தான் பார்த்திபனை உயிருடன் மீட்க முடியும் "

கூட்டம் தலையசைத்து பளியர் தலைவன் சொன்னதை ஆமோதித்தது.

"இப்போது மர்மயோகியின் உதவி நமக்கு தேவை " என்றான் கண்டிப்பான குரலில் பளியர் தலைவன்.
 
அத்தியாயம் 26

சிறையில் அடைபட்டு கிடக்கும் பார்த்திபனை மீட்க மர்மயோகியால் மட்டுமே முடியும் என்று பளியர் தலைவன் ஆணித்தரமாக கூறினான். எப்போது வேண்டுமானாலும் அரண்மனைக்குள் வந்து செல்லும் அதிகாரம் மர்மயோகிக்கு இருப்பதை அனைவருமே அறிந்திருந் தனர். ஆனால் அது வரை சாதாரண துறவியாக தாங்கள் நினைத்த நபர் ஆதித்தனின் அண்ணன் அரிஞ்சயன் என்பதை இப்போது தான் அனைவரும் தெரிந்து கொண்டனர். தன் தொண்டையைகனைத்து கொண்ட பளியர் தலைவன்

"அரண்மனையில் மர்ம யோகியின் கொடி பறக்கிறது. அவனை அங்கே சந்தேகிப்பவர்கள் யாருமில்லை. அவனாலும் அவனது சகோதரனாலும் மட்டுமே இப்போதைக்கு பார்த்திபனை காப்பாற்ற முடியும் . மேலும் மர்மயோகிக்கு இன்னொரு விசயம் சாதகமாக அமைந்து விட்டது."

" என்ன அது?"

" அவன் பார்த்திபனின் கொலை முயற்சியிலிருந்து ஜெயசிம்மனை காப்பாற்றி இருக்கிறான். அதனால் தன் உயிரைக் காப்பாற்றிய மர்ம யோகியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை அவன் வைத்திருக்கிறான். அந்த நம்பிக்கையை வைத்து அவனால் பார்த்திபனை காப்பாற்றி விட முடியும் "

"நல்ல யோசனை தான் தலைவரே! ஆனால் நம் யோசனையை யார் அவர்களிடம் கூறி சம்மதிக்க வைப்பது?"

"வேறு யார் ?நம் விஜயபாகுதான். அவனுக்குத் தான் இருவரிடமும் அதிக பழக்கமும் அறிமுகமும் உண்டு. அவனையே பேச வைப்போம்.என்ன சொல்கிறாய் விஜயபாகு ? " என்றான் பளியர் குலத் தலைவன்.

ஒரு ஓரமாக உட்கார்ந்து நடைபெறும் உரையாடல்களை கேட்டு கொண்டிருந்த விஜயபாகு தன் தலையை நிமிர்த்தினான். அவனது மனம் குற்ற உணர்ச்சியால் துடித்துக் கொண்டிருந்தது. தான் அனுப்பிய ஓலையால் பார்த்திபன் பிடிபடுவான் என்று அவன் கனவிலும் நினைத்தவனில்லை .அதை இப்போது சொன்னால் அவனை அவனது தோழர்களே துரோகி என்று வசைபாடி பழிப்பார்கள்.

செய்தியை சொன்ன மர்மயோகியிடம் அவன் தன்னை வெளிப்படுத்தி கொள்ளவும் விரும்பவில்லை. தான் செய்த தவறுக்கு பரிகாரமாக எப்படியாவது பார்த்திபனை காப்பாற்றி விட வேண் டும் என்று அவன் நினைத்தான்.

"நான் இதைப் பற்றி அந்த மர்ம யோகியிடமும் அவரது சீடனிடமும் பேசுகிறேன் எனக்கு இருக்கும் ஒரே சந்தேகம் அவர்கள் இதற்கு ஓப்பு கொள்வர்களா என்பது தான் "

"அவர்கள் கட்டாயம் இதற்கு ஒப்புக்கொள்வார்கள். உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்"

"பார்த்திபனை மீட்க நம்மிடம் ஏதாவது திட்டம் இருந்தால் நல்லது. அதை சொல்லி நான் ஆதித்தனை சம்மதிக்க வைப்பேன்."

"நம்மிடம் இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை விஜயபாகு .ஆனால் அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப திட்டமிடுவதில் வல்லவர்கள். அவர்கள் திட்டத்திற்கு நாம் உதவி செய்தால் மட்டும் போதும். இப்போதைக்கு அவர்களிடம் ஆட்பலம் கிடையாது. நம் உதவி அவர்களுக்கு கட்டாயம் தேவைப்படும் "

"சரி. நான் அவர்களிடம் பேசிப் பார்க்கிறேன். அவர்களும் நமக்கு உதவ மறுத்துவிட்டால் பார்த்திபனை நாம் இழந்து விடுவோம். நம் நாட்டின் விடுதலை கானல் நீராகிவிடும். ஆயுள் முழுவதும் பார்த்திபனை மீட்க தவறிய குற்ற உணர்ச்சி நம்மை கொன்று தின்று விடும்"

"அதை விட முக்கியமான விசயம். ஜெயசிம்மனை துணிவுடன் எதிர்க்க இனி யாரும் முன்வர மாட்டார்கள்."

"சிறையில் இருக்கும் பார்த்திபன் ஜெயசிம்மனின் சித்ரவதைகள் தாங்காமல் நம்மை காட்டி கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது."

"பார்த்திபன் உயிரே போனாலும் நம்மை காட்டி கொடுக்க மாட்டான். நீ சொல்வது போல் நடந்தால் நாம் அனைவரும் இப்போது ஆபத்தில் இருக்கிறோம் என்று பொருள்."

" இந்த காட்டிற்குள் பதுங்கி கிடக்கும் நம்மை ஜெயசிம்மனால் பிடித்து விட முடியுமா?"

"அது சிரமம்தான். ஆனால் நமக்கு உணவு கிடைக்கும் வழியை அவனால் தடுத்து நிறுத்திவிட முடியும். அதே நேரம் நகரத்தில் வசிக்கும் விசயபாகுவை அவனால் எளிதில் கைது செய்து விட முடியும்."

"பார்த்திபன் உயிரோடு நம்முடைய எதிர்காலமும் கலந்திருக்கிறது. அவன் உயிரோடு இருக்க வேண்டும். அதே நேரம் அவன் நம்மை காட்டி கொடுக்காமலும் இருக்க வேண்டும்"

"நாம் தாமதிக்கும் ஒவ்வொடு நொடியும் பார்த்திபனுக்கு மட்டும் ஆபத்தல்ல. நமக்கும் ஆபத்து தான்."

"விஜயபாகு நீ உடனடியாக செயலில் இறங்க வேண்டிய நேரமிது. ஒரு துளி தாமதமும் கூடாது"

விஜயபாகு உடனடியாக அங்கிருந்து கிளம்பினான். மற்றவர்கள் குழப்பத்தோடு அங்கிருந்து கலைந்தனர்.

வீரர்களில் ஒருவன் "பளியர் தலைவரே.! உங்களை வீணாக தொந்தரவு செய்து விட்டோம். நாளை ஜெயசிம்மன் உங்களை தேடி காட்டுக்குள் வந்தால் அதற்கு காரணம் நிச்சயம் நாங்கள் தான் " என்றான்.

"கவலைப்படாதே! அடிமையாக ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதை விட விடுதலை வீரனாக சில விநாடிகள் வாழ்ந்தாலும் போதும். மரணத்தை கண்டு நாங்கள் சற்றும் அஞ்சவில்லை. கொடிய மிருகங்களோடு வாழும் எங்களை இந்த மனிதர்கள் நிம்மதியாக வாழ விட மறுக்கிறார்களே என்பது தான் என்னுடைய கவலை."

அவனது தோளில் ஆறுதலாக தட்டி கொடுத்தான் பளியர் தலைவன்.

தன் முன்னால் வந்து நின்ற விஜயபாகுவைகேள்விகுறியோடு பார்த்தான் அரிஞ்சயன்

" இப்படி நடக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை சுவாமி "

"நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் கடவுளுக்கு என்ன வேலை?" என்று தத்துவார்த்தமாக எதிர் கேள்வி கேட்டான் அரிஞ்சயன்

"பார்த்திபனை எப்படியாவது மீட்க வேண்டும் என்று அவனது நண்பர்கள் நினைக்கிறார்கள்."

"நல்ல விசயம் தான் "

" ஆனால் அதை எப்படி செய்வதென்று அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் அனைவரையும் அரசாங்க வீரர்களுக்கு நன்றாக அடையாளம் தெரியும். அதனால் அவர்கள் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் அகப்பட்டு கொண்டு விடுவார்கள்."

"பார்த்திபன் அவர்களிடம் சொல்லிவிட்டு தானே கொலை முயற்சியில் ஈடுபட்டான். அவனை காப்பாற்றுவது அவனை தூண்டி விட்ட அவனது நண்பர்களின் கடமை. அவன் ஒரு வார்த்தை என்னிடம் கூறியிருந்தால் இப்போது சிறையில் அடைபட்டிருக்க மாட்டான். என் பேச்சை யார் கேட்கிறார்கள்.?ஏன் நீ கூட அந்த கொலை முயற்சியை பற்றி என்னிடம் மூச்சுக் கூட விடவில்லை. இப்போது எந்த முகத்தோடு என்னிடம் உதவி கேட்டு வருகிறாய்" என்றான் அரிஞ்சயன் கோபத்தோடு.

அவனது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தான் விஜயபாகு .அவனது தர்மசங்கடமான நிலையைப் புரிந்து கொண்டு விட்ட ஆதித்தன் அவனது உதவிக்கு வந்தான்.

"அண்ணா சற்று பொறுமையாக இருங்கள்.பார்த்திபன் வாலிபமுறுக்கிலும் தன் மீதான அதீத நம்பிக்கையிலும் நம்மை கலந்து கொள்ளாமல் ஒரு சிறு தவறு செய்து விட்டான்.பார்த்திபன் பிடிபட்டு கையறு நிலையில் நம் உதவியை நாடி வந்திருக்கிறார்கள். அவர்களை நாம் இப்போது சோதிப்பது முறையல்ல." என்றான் ஆதித்தன்.

"ஆமாம்.பார்த்திபன் செய்த சிறு தவறுக்கான கோபத்தை நீங்கள் என் மீது காட்டுவது முறையல்ல. வேண்டுமானால் பார்த்திபனை உயிரோடு மீட்டு விட்டு பிறகு அவனிடம் உங்கள் கோபத்தை காட்டுங்கள்"

"ஓஹோ .! எனக்கே கொக்கி போடுகிறாயா? என் கோபத்தை காட்டுவதற்காக நான் அவனை காப்பாற்ற வேண்டுமா? நன்றாயிருக்கிறது உனது பேச்சு " என்றான் அரிஞ்சயன் .
"என்னை என் வாய் துடுக்கான பேச்சிற்காக மன்னித்து விடுங்கள். நீங்கள் தான் எங்களுக்கு உதவ வேண்டும். உங்களை விட்டால் எங்களுக்கு வேறு மார்க்கமில்லை." என்றான் வீரபாகு திடீர் பணிவை கை கொண்டபடி.

தன் இளம் தாடியை தடவியபடி சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கிய அரிஞ்சயன் தன் கண்களை திறந்தவனாக " உங்களிடம் அவனை மீட்க ஏதாவது திட்டம் இருக்கிறதா? இருந்தால் சொல் " என்றான்.

"பார்த்திபன் திடிரென பிடிபட்ட அதிர்ச்சியிலிருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. அதனால் மேற்கொண்டு எந்த விசயத்திலும் எங்களால் ஈடுபட முடியவில்லை. ஆனால் அவனை மீட்க எங்களால் முடிந்தவற்றையெல்லாம் செய்ய தயாராக இருக்கிறோம்"

அரிஞ்சயனும் அப்படியான நிலையில் தான் இருந்தான். ஆனால் அவன் அதை வெளிகாட்டி கொள்ளவில்லை.வீரபாகு அதை மறைக்காமல் வெளிப்படையாக சொல்லி விட்டான்.

ஆதித்தனை கூர்ந்து பார்த்த அரிஞ்சயன் "ஆதித்தா! எனக்கு எந்த வழிமுறையும் பார்த்திபனை மீட்க தோன்றவில்லை. உனக்கு ஏதாவது ேதான்றுகிறதா?" என்றான்.

சிந்தனையில் மூழ்கிய ஆதித்தன் சற்று நேரத்தில் வாயை திறந்தான்.

"சத்ரு சம்ஹார யாகம்" என்று முணுமுணுத்தன அவனது உதடுகள்.

இருவரும் அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தனர்.

"அது எதிரிகளை அழிக்க செய்யும் வேள்வியல்லவா?" என்றான் அரிஞ்சயன்.

"ஆமாம். அதுதான் இப்போது நமக்கு உதவ போகிறது "

"நீ சொல்வது எனக்கு புரியவில்லை"

" எதிரியை அழிக்க செய்யும் அந்த யாகத்தை வைத்து தான் - ஜெயசிம்மனின்எதிரியான பார்த்திபனை மீட்க போகிறோம்"

"நீ சொல்வது எனக்குப் புரியவில்லை" என்றான் அரிஞ்சயன் குழப்பத்தோடு.

"எனக்கும் தான் " என்றான் வீரபாகு .

" என் மனதில் ஒரு திட்டம் உதயமாகி இருக்கிறது. அதை செயல்படுத்த சில பொருட்கள் தேவை "

" என்னவென்று சொல்லுங்கள். அவற்றை .உடனே ஏற்பாடு செய்கிறேன்"

"எனக்கு ஒரு பல்லக்கு வேண்டும்"

''அது பெண்களும், வயதானவர்களும் பயன்படுத்துவதாயிற்றே?"

"ஆம். ஆனால் அது எனக்கு வேண்டும். அது நித்ராதேவியின் பல்லக்கை போல் இருப்பது முக்கியம்"

"அரண்மனை தச்சரிடம் அதன் இன்னொரு பிரதி உண்டு அதை விலை கொடுத்து வாங்கி விடலாம். தர மறுத்தால் களவாடிவிடலாம்"

"களவாடிவிடுங்கள். ஒரு பொருள் கேட்ட பிறகு காணாமல் போனால் அதை கடைசியாக கேட்டவனின் மீது சந்தேகம் வருவது உலக இயல்பு. அதனால் பல்லக்கை விலைக்கு கேட்கவே வேண்டாம்." என்றான் ஆதித்தன்.

"அடுத்தது?" என்றான் விஜயபாகு .

ஆதித்தன் அடுத்ததாக ஒரு பொருளை கேட்டான் .அதை கேட்ட அரிஞ்சயன் கல்லாக சமைந்தான். விஜயபாகு இவனுக்கு பைத்தியம் ஏதாவது பிடித்து விட்டதா என்று குழம்பி போனான்.
 
அத்தியாயம் 27

ஆதித்தன் கடைசியாக கேட்ட பொருளை நினைத்து அரிஞ்சயனும். விஜயபாகுவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். விஜயபாகு ஆதித்தனுக்கு பைத்தியம் ஏதாவது பிடித்து விட்டதா என்று கூட அவனை சந்தேகிக்க ஆரம்பித்தான்..

அரிஞ்சயன் மட்டும் தன் தம்பியின் மீது மாறாத நம்பிக்கை வைத்திருந்தான். தன் தம்பியின் மனதில் ஏதோ ஒரு திட்டம் உருவாகிவிட்டது என்பதையும் அவனால் நிச்சயமாக பார்த்திபனை உயிரோடு மீட்டு விட முடியும் என்றும் நம்ப துவங்கினான்.

விஜயபாகு "அரசாங்க காவல் அதிகாரிகளின் சீருடைகள் உங்களுக்கு எதற்கு? அதை வைத்து நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?" என்றான் தனக்குள் குழம்பியபடி.

"பார்த்திபனை உயிரோடு ஜெயசிம்மனிடமிருந்து மீட்க வேண்டுமானால் என்னை எந்த கேள்வியும் கேட்காதே! நான் சொன்னதை மட்டும் செய்" என்றான் ஆதித்தன்.

தான் உதவி கேட்டு வந்த போது இருவரும் தனக்கு நிச்சயமாக உதவ மாட்டார்கள் என்று தான் விஜய பாகு நினைத்திருந்தான்.அரிஞ்சயன் துவக்கத்தில் கடுமையான முகத்தோடு இடக்கு மடக்காக தன்னிடம் பேசியபோது விஜயபாகு தன்னுடைய நம்பிக்கையை முற்றாக இழந்திருந்தான். அப்போது உரையாடலில் குறுக்கிட்ட ஆதித்தன் தான் தன் அண்ணனை சமத்காரமாக பேசி சம்மதிக்க செய்தான். அவனே இப்போது சற்று கடுமையாக பேசியதும் விஜயபாகு விற்கு அவனது பேச்சை கேட்பதை தவிர வேறு வழியில்லாமல் போனது.

இதற்கு மேல் இருவரிடமும் பேசி பயனில்லை என்பதை உணர்ந்தவன் "சரி. நீங்கள் சொன்ன அனைத்து பொருட்களையும் எப்படியாவது ஏற்பாடு செய்கிறேன்" என்றான்.

" நாளை இரவு உனது மாளிகையில் நாங்கள் பார்த்திபனின் நண்பர்களை சந்திக்க வேண்டும். அதற்கும் ஏற்பாடு செய்" என்றான் ஆதித்தன்.

" அப்படியே செய்கிறேன்." என்ற விஜயபாகு அங்கிருந்து விடை பெற்றுக் கிளம்பினான். எப்படியோ இருவரும் பார்த்திபனை காப்பற்ற சம்மதித்ததில் நிம்மதி பெருமூச்சு விட்டான் அவன். இந்த தகவலை எப்படியாவது தன் தோழர்களிடம் தெரிவித்து விட வேண்டும் என்று அவனது இதயம் துடியாக துடித்து கொண்டிருந்தது... தன் மாளிகையை சென்றடைந்தவன் உடனடியாக ஒரு ஓலையை எழுதி தன் பணியாளனிடம் கொடுத்து பளியர் தலைவனிடம் சேர்க்கும்படி அனுப்பி வைத்தான்.

ஆழ்ந்த சிந்தனையில் இருந்த தன் தம்பியை கூர்ந்து பார்த்தபடி இருந்தான் அரிஞ்சயன் .

"இந்த திட்டத்தில் நித்ராதேவியை ஏன் உள்ளே இழுத்தாய் ஆதித்தா?" என்றான் அரிஞ்சயன்

" என் திட்டத்தில் நித்ரா தேவிக்கு எந்த பாத்திரமும் கிடையாது. நித்ராதேவி பயன்படுத்தும் பல்லக்கிற்குத் தான் இதில் வேலை."

" பல்லக்கை கேட்டதும் நித்ராதேவியை இதில் பயன்படுத்துவாயோ என்று நினைத்தேன்"

" பயன்படுத்தத் தான் போகிறேன். ஆனால் அது நித்ரா தேவிக்கே தெரியாது"

" என்ன சொல்கிறாய் நீ? உன் திட்டம் என்னவென்று சொல் எனக்குதலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை"

"என் திட்டத்தை சொல்கிறேன்.கவனமாக கேளுங்கள்" என்ற ஆதித்தன் தன்னுடைய திட்டத்தை விஸ்தாரமாக விவரிக்க தொடங்கினான்.

அவனது திட்டத்தை இடைமறித்து பேசாமல் முழுதாக கேட்ட அரிஞ்சயன் தன் தம்பியின் மதியுகத்தை நினைத்து மகிழ்ந்தான்.

"உ ன்னுடைய திட்டம் வெகு பிரமாதம். ஆனால் இந்த திட்டத்தில் நமக்கு எந்த வேலையும் இல்லை. இதில் எந்த இடத்திலும் நம் தலை தென்படக்கூடாது. இந்த திட்டத்திற்கு பின்னால் நாம் இருக்கிறோம் என்பது ஜெயசிம்மனுக்கு தெரிந்தால் நம் தலை தப்பாது."

"ஆம். அதையும் நான் யோசித்து விட்டேன். இந்த திட்டத்தின் எந்த இடத்திலும் நாம் இல்லை. நாம் வகுத்து தரும் திட்டத்தை திறமையாக செயல்படுத்தகூடிய நபர் யார் என்று தான் நான் யோசிக்கிறேன்"

"விஜயபாகு ?"

"வாய்ப்பே இல்லை. அவனால் ஜெயசிம்மனை மிரட்டவும் முடியாது. இந்த திட்டம் நிறைவேறிய பின்பு பார்த்திபனுடன் தப்பி செல்லவும் முடியாது"

"இந்த திட்டத்திற்கு அவன் சரியான ஆள் இல்லை. ஆனால் வேறு ஒருவன் இந்த திட்டத்திற்கு வெகு பொருத்தமாக இருப்பான். ஜெயசிம்மனிடமிருந்து காப்பாற்றும் பார்த்திபனை அவனால் மறைத்து வைக்க முடியும். அதே நேரம் ஜெயசிம்மனின் கையில் சிக்காமல் அவனை அலைகழிக்கவும் முடியும் "

"யார் அவன்?" என்றான் அரிஞ்சயன் குழப்பத்துடன் .

" அவன் தான் பளியர் குலத்தின் தலைவன்"

" அவன் ஏற்கனவே பார்த்திபனை ஆதரித்தவன். அவன் தான் இதற்கு சரியான ஆள்.
ஜெயசிம்மனை எதிர்கொள்ள அவனால் மட்டும் தான் முடியும் "

" எல்லாம் சரி.ஆட்டத்திற்கான வியூகம் தயாராகி விட்டது. ஆனால் ஆட்டத்தை துவக்குவதற்கான முதல் பகடையை நாம் தான் உருட்ட வேண்டும்"

"அப்படியானால்?"

"நித்ராதேவியை நம் இடத்திற்கு வரவழைக்க வேண்டும்"

"நித்ரா தேவிக்கு நாம் யார் என்பது தெரியும். அதனால் அவள் நாம் சொல்வதை நம்ப மாட்டாள். ஆனால் ஜெயசிம்மனின் கட்டளையை அவள் மீறத் துணிய மாட்டாள். அதனால் ஜெயசிம்மனிடமிருந்து தான் நம்முடைய ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்."

"ஜெய் சிம்மனின் உயிரை நாம் காப்பாற்றி இருப்பதால் அவன் நம் பேச்சை அப்படியே நம்புவான். ஆனால் கர்ப்பமாக இருக்கும் பெண்ணை இவ்வளவு தொலைவு அனுப்புவானா என்பது தான் சந்தேகம் "

"அப்படியானால் அரண்மனையிலிருந்து சற்று தொலைவில் உள்ள பிள்ளையார் கோவிலை நம் திட்டத்திற்கு தேர்ந்தெடுப்போம்"

"அதுவும் நல்லது தான் "

"அப்படியானால் நீங்கள் தான் ஜெயசிம்மனை சந்தித்து பேச வேண்டும்"

"அதற்கென்ன? இப்போதே கிளம்புகிறேன்"

அரிஞ்சயன் தாமதிக்க விரும்பாமல் உடனடியாக அரண்மனையை நோக்கி கிளம்பினான். மர்மயோகியின் அரண்மனை வருகையை அறிந்த ஜெயசிம்மன் வாசலில் வந்து நின்று மர்மயோகியை வரவேற்றான்.

நைச்சியமாக தன் பேச்சை துவக்கினான்மர்மயோகி.

"அரசே! உன் உயிருக்கே ஆபத்து வந்த பின் நாம் சும்மா இருக்க கூடாது. உன் எதிரிகளை அழிக்க சத்குசம்ஹார யாகம் ஒன்று நடத்த உத்தேசித்திருக்கிறேன்"

" என் எதிரி தான் அகப்பட்டு விட்டானே துறவியாரே?"

"ஆனால் இன்னமும் உயிரோடு இருக்கிறான். அவனது நண்பர்கள் அவனை மீட்க தயாராகி கொண்டிருக்கிறார்கள். மேலும் ஒரு மறைமுக எதிரி உன் அரண்மனையில் இருக்கிறான்."

"யார் அவன்?"

"என் ஞானதிருஷ்டியில் அவன் அகப்பட மறுக்கிறான். அவன் தான் உன் இரு குழந்தைகளை கொன்றவன். இப்போது உன் மனைவியின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை கொல்ல காத்திருப்பவன். அவனை அழிக்கத்தான் இந்த யாகம்"

மர்மயோகியின் புதிய தகவலால் திக் பிரமை பிடித்து நின்றான் ஜெயசிம்மன் .இதுவரை தன் இரு குழந்தைகள் இறந்ததை விதி என்று நினைத்து வாளாவிருந்தவன் மர்மயோகியின் பேச்சை கேட்டதும் இது எதிரியின் வேலையாக இருக்குமோ என்று ேயாசிக்க ஆரம்பித்தான்.

மர்மயோகியின் புதிய தகவல் என்ன சொன்னாலும் அதை கேட்பதே நல்லது என்ற மனநிலைக்கு அவனை தள்ளியது.

"நீங்கள் சொல்லும் விசயம் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது"

"கலங்காதே ஜெயசிம்மா! உன் பிரதான எதிரியான பார்த்திபன் பிடிபட்டு விட்டான். இனி நமக்கு எதிரிகளே இல்லை என்று நீ நினைக்கிறாய். அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது தெரிந்து கொள். உன் அரண்மனையில் மறைந்திருக்கும் அவனை அழிக்க நான் யாகம் ஓன்றை நடத்த உத்தேசித்திருக்கிறேன். அதற்கு நீ உன் மனைவியை அனுப்பி வைக்க வேண்டும். உன் உயிரைக் காப்பாற்றவும் உன் குழந்தையின் உயிரைக் காப்பாற்றவும் இந்த வேள்வியில் அவள் கலந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அவள் கர்ப்பமாக இருப்பதை காரணம் காட்டி இந்த வேள்வியில் அவள் கலந்து கொள்வதை தடை செய்து விடாதே!" என்று ஏறக்குறைய எச்சரிக்கும் தொனியில் பேசி முடித்தான் மர்மயோகி.

வேறு வழியில்லாத சூழலில் மர்ம யோகியின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தான் ஜெயசிம்மன் அந்த முகம் தெரியாத எதிரியாராக இருப்பான் என்று அவன் மனம் முழுவதும் கேள்விகளால் நிரம்பி இருந்தது.

தான் வந்த காரணத்தை தனது சாதுர்யமான பேச்சால் நிறைவேற்றி கொண்டு விட்ட மர்மயோகி வெற்றிகரமாக தனது ஆட்டத்தின் துவக்கத்தை ஆரம்பித்து வைத்தான்.

அன்று இரவு .

அரண்மனை தச்சன் மதுபான விடுதியில் அமர்ந்திருந்தான். அப்போது அங்கே வந்த அடையாளம் தெரியாத ஒரு மனிதன் அவனது வேலை திறனைப் பாராட்டி பேச ஆரம்பித்தான். புகழ்ச்சியை விரும்பாத மனித மனம் ஏது? தன்னைப் பற்றிய புகழ்ச்சியில் மதிமயங்கி கொண்டிருந்தான் தச்சன் புதிய மனிதன் அவனது வேலையை புகழ்ந்து பேசியதுடன் மது வகைகளை வாங்கி பரிசளிக்கவும் ஆரம்பித்தான்.

அவனது அதீத அன்பினால் திக்குமுக்காடிப் போன தச்சன் அதை மறுக்க தோன்றாமல் குடித்துக் கொண்டே இருந்தான். அவன் தன் சுயநினைவை இழந்த பின் அவனை தன் நண்பனின் உதவியுடன் அவனது வீட்டிற்கு அழைத்து சென்றான்.

அப்போது வெகு லாவகமாக தச்சனின் இடுப்பில் இருந்த சாவி கொத்தை தனதாக்கி கொண்டான் அந்த புதிய மனிதன்.

அரண்மனை தச்சனை அவனது வீட்டில் விட்டுச் சென்ற புதிய மனிதன் அன்று இரவு தச்சன் வீட்டு கொட்டடியை திறந்து அங்கே தயாராக இருந்த பல்லக்கு ஒன்றை தன்னுடைய நண்பர்களின் உதவியுடன் களவாடினான். அதன் பிறகு கொட்டடியை பூட்டியவன் அதன் சாவியை தச்சன் வீட்டு வாசலில் வீசி எறிந்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அதே நேரம் அரசின் பண்டக சாலையில் இருந்த அரசாங்க காவலர்களுக்கான சீருடை மூட்டை ஓன்று களவாடப்பட்டது. ஆதித்தன் கூறிய இரண்டு பொருட்களும் பார்த்திபனின் நண்பர்கள் மூலம் களவாடப்பட்டு சரியான இடத்திற்கு கொண்டு செல்லப் பட்டது.

ஆதித்தனின் திட்டம் கனகச்சிதமாக உருப்பெற ஆரம்பித்தது. தன்னை மீட்க நடைபெறும் எந்த முயற்சிகளையும் அறியாமல் சிறையில் அடைபட்டு கிடந்தான் பார்த்திபன். அவன் மனதை உறுத்தி கொண்டிருந்தது ஒரு கேள்வி.

"மர்மயோகியிடம் தன் கொலை முயற்சியை கூறிய அந்த துரோகி யார்?"
 

New Threads

Top Bottom