Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL ஏ.எஸ் வைரஸ் - Tamil Novel

Status
Not open for further replies.

25

அந்தக் குட்டி விவேக் என்னும் சிறுவன் அழுது கொண்டிருப்பதைப் பார்த்ததும் அந்தச் சிறுபெண்ணால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. தாங்கள் நேரலையில் பேசிக் கொண்டிருக்கிறோம், தங்களைச் சில ஆயிரம் நபர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் மறந்து கத்தத் துவங்கிவிட்டாள்.

“யாருடா நீங்க?! எதுக்காகடா சேனலை ஹேக் பண்ணினீங்க?? உங்களுக்கு என்னதான் வேணும்?? பேமஸ் ஆகணும்ன்னா தனியா வீடியோ போடுங்கடா... இப்படி அடுத்தவன் உழைப்பை திருடாதீங்க.. இவன் ஒவ்வொரு நாளும் தூங்காம வீடியோ பண்ணினது எனக்குதான் தெரியும்... இதெல்லாம் என்ன பொழப்புடா? ஒழுங்கா அவன் ஐடியைத் திருப்பிக் கொடுத்துடுங்க... இல்லைன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது...” எனத் தன்னவனைத் தேற்றும் விதமாகப் பேசி முடிக்க, அவனின் விசும்பல் அதிகமானதேயன்றி குறைவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.

அவளும் தளராமல் நேரலையிலேயே, “பேபி... நீ அழாத பேபி.. எல்லாம் சரியாயிடும்... நீ இப்போ என்னாத்துக்கு அழுதுட்டு இருக்கிற?? இவனுங்கதான் அழனும்... நீ அழாத பேபி...” எனப் பலவாறாகக் கூறிக் கொண்டிருந்தாள்.

அவன் நிறுத்தாமல் அழுது கொண்டேயிருக்க, “பேபி... அழாத பேபி...” என்பதை மந்திரம்போலத் தொடர்ந்து கூறி ஜெபிக்கத் தொடங்கிவிட்டாள் அந்தச் சிறுமி.

அதற்குள் பக்கத்தில் அமர்ந்திருந்த அவனை ஈன்றெடுத்த தியாகச் செம்மல், “மருமகளே... மருமகளே...” எனக் குரல்கொடுக்க, இந்த முனையில் பேசிக் கொண்டிருந்த சிறுமி, “அத்தை... அத்தை... அவரை அழ வேணாம்னு சொல்லுங்க அத்தை... எனக்குக் கஷ்டமா இருக்கு..” என்றாள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒட்டுமொத்த தொண்ணூறுகளில் பிறந்த அனைவரின் இருதயமும் ஒருநிமிடம் நின்று துடித்தது. அன்றைய நாளுக்குப் பின்வந்த சில நாட்களுக்குத் தமிழ்நாட்டின் “ஹாட் ட்ரோல் டாப்பிக்” இவர்கள்தான்.

அங்கே காணொளி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, வெண்ணிலாவை நோக்கித் திரும்பினாள் ஜெனிதா. “மேம்.. நீங்க படிச்சவங்க... இங்கே நடந்துட்டு இருக்கிற சில விஷயங்களை வச்சு நாங்க ஏன் இங்கே உங்களைக் கூட்டிட்டு வந்திருக்கிறோம்ன்னு புரிஞ்சிருக்கும்ன்னு நம்பறேன்... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஒப்பீனியன் இருக்கலாம்.. ஆனா எல்லாத்தையும் மொத்தமா முடிஞ்சதுக்கு அப்புறமா டிஸ்கஸ் பண்ணலாமே... இது சுதந்திர தேசம்... தன்னோட கருத்துகளைப் பகிர்ந்துக்கிறது தப்பில்லை.. அதுக்கான டைம் அண்ட் ஸ்பேஸ் நாங்க நிச்சயமா தருவோம்... அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...” எனச் சற்றே தணிந்த குரலில் பேச, மௌனமாகத் தலையசைத்தாள் வெண்ணிலா.

சில நொடிகளில் நிமிர்ந்தவள்; “ஓகே மேம்... ஆனா தயவு செஞ்சு இந்த வீடியோவை மட்டும் ரெஸ்யூம் பண்ணி ஓட விட்டுடாதீங்க.. பார்க்கவே ரொம்பக் கொடூரமா இருக்குது.. திருத்தணிகையோட அம்மாவா என்னால இதை ஏத்துக்கவே முடியல.. என் பையனை இந்த மாதிரியான சமுதாயத்துல எப்படி வளர்த்தெடுக்கப் போறேன்னு எனக்குப் பயம் வந்துருச்சு... என் பையனோட திறமையை உலகறிய செய்யணும்ன்னு நான் வீடியோ பண்ணினேன்... ஆனா இப்படியானதொரு இருட்டு உலகம் இங்கே இருக்கும்ன்னு எனக்குத் தெரியவே தெரியாது...” என வருத்தத்துடன் பேசினாள்.

“ஆக்சுவலி இங்கே எல்லாருக்கும் அட்டென்ஷன் சீக் பண்றது மட்டும்தான் மோட்டிவ்... ஆனா அந்தத் தாகத்தோட அளவும் அதற்குத் தேர்ந்தெடுத்த வழிகளும்தான் வேற வேற.. பிரச்சனையோட தீவிரத்தைப் பொருத்துதான் ஒவ்வொருத்தரும் நல்லவங்களா கெட்டவங்களான்னு மெஷர் பண்றோம்... இன்னைக்கு உங்க பையனை உலகறிய செய்யுறதுக்காக வற்புறுத்தி பேச வச்ச நீங்க நாளைக்கே அவனை இந்த மாதிரியான வீடியோக்கள் செய்யுறதுக்கு அலோவ் பண்ண மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?? பேமஸ் ஆகுறதுதான் குறிக்கோள்ன்னு ஆனதுக்கு அப்புறம் எந்த வகையில் பேமஸ் ஆனா என்ன??” எனக் காட்டமாகக் கேட்கத் துடித்த உதடுகளை வெகுசிரமப்பட்டு அடக்கியவாறு அமர்ந்திருந்தான் ஜுபின். ஏனென்றால் இப்போது இதைக் கேட்டுவிட்டால் அவர்களது திட்டம் சரிவரச் செயல்படாதே!

“இப்போ வரைக்கும் இவங்க இப்படித்தான் சுத்திட்டு இருக்கிறாங்களா மேம்?” என வெண்ணிலா வேதனையின் உச்சத்தில் வினவ, “இல்லம்மா... இவங்களை அரெஸ்ட் பண்ணியாச்சு... இவங்களை மாதிரி இன்னும் நெறய பசங்க இருந்தாங்க.. ஸ்கூல் யூனிபார்ம்ல வீடியோ போடறது, லைவ்ல இன்டிமேசி க்ரியேட் பண்றவங்கன்னு நெறைய பேர்... நாங்க ஒரு சாம்பிளுக்காக டீசன்டா இதை எடுத்து உங்களுக்குக் காட்டறோம்... இவங்க எல்லார் மேலேயும், பேரன்ட்ஸ் மேலயும் சோசியல் ஆக்டிவிஸ்ட் ஒருத்தங்க கம்ப்ளெயின்ட் கொடுத்ததால அரெஸ்ட் பண்ணி கவுன்சலிங் கொடுத்திருக்கிறோம்... வீடியோ போடமாட்டோம்னு இவங்களும் வாக்கு கொடுத்திருக்கிறாங்க..” என ஜெனிதா கூறவும்தான் நிம்மதியில் பெருமூச்சு விட்டாள் வெண்ணிலா.

“இந்தப் போல்டர்ல இன்னும் ஒரே ஒரு ஃபைல் மட்டும் பார்க்க வேண்டியது இருக்குது மேம்... அதையும் ப்ளே பண்ணிடவா?” என வினித் கேட்க, “ம்ம்ம்... போடுங்க...” எனக் கண்களால் ஜாடை செய்தாள் ஜெனிதா. ஏனெனில் வெண்ணிலாவை உக்கிரத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லப் போகும் காணொளியல்லவா அது?!!!!

அவளது கட்டளையை ஏற்று, அவன் அதை ஒளிபரப்ப, திரையில் இருவர் “காதல் மன்னனா... நீயும் கண்ணனா...” என்னும் பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் பத்திற்கும் மேல் இருக்குமெனத் தோன்றியது. கண்களைக் குறுக்கி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, “இவங்களை உங்களுக்குத் தெரியாதா?? விஷு – கார்த்திக்... இவங்களும் நம்ம ஆப்ல ட்ரென்டிங் கப்பிள்தான்.. அப்பாவும் பொண்ணும் செமையா இருக்குதுல்ல...” என்றார் அருகிலிருந்தவர்.

இதைக் கேட்டதும் திக்கென்றிருந்தது அங்கிருந்த சிலருக்கு. அடுத்தடுத்த காணொளிகளில் பாரபட்சமே இல்லாமல், அம்மா – மகன், அக்கா – தம்பி, அண்ணன் – தங்கை, பாட்டி – பேரன், அப்பா – மகள், அக்கா கணவன் – கொளுந்தியாள் என இஷ்டமான பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்க, அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து சிலர்மீது வீசத் தொடங்கி விட்டாள் வெண்ணிலா.

அவளைப் பார்த்து முகத்தைச் சுளித்த அங்கிருந்த ஒருவர், “இந்தப் பொம்பளையை இங்கே இருந்து கூட்டிட்டு போங்கம்மா... மனநிலை சரியில்லாதவளை அழைச்சிட்டு வந்திருக்கிறீங்க..” எனக் கூறி முடிக்கும்முன்னரே, “யாருடி பைத்தியம்... யாரு பைத்தியம்... நானா?! இப்படிக் கேவலமான வீடியோவை அப்டேட் பண்றவங்களுக்கும், ரசிக்கிறவங்களுக்கும் நல்லவங்க... நான் பைத்தியமா??” என எதிர்த்து நின்றாள் வெண்ணிலா.

“உங்களுக்குத் தெரியுமா?? உறவுகளோட உன்னத வாழ்க்கையை வாழுற ஒரே நாடு நம்ம நாடுதான்... வெளிநாட்டுல எல்லாம் அங்கிள், ஆன்ட்டின்னு ஒரே வார்த்தையில முடிச்சிடுவாங்க... நம்ம ஊருலதான் பெரியப்பா – பெரியம்மா, சித்தப்பா – சித்தி, மாமா – அத்தைன்னு ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு உறவுமுறை வச்சு கொண்டாடுறோம்... ஒண்ணுவிட்ட அக்கா, சகலை, பங்காளி, சொக்காரன் இப்படி நெறைய நெறைய சொல்லலாம்.. சில உறவுகள் எப்பவுமே போற்றத்தக்கவை.. அதிலே அப்பா – பொண்ணு, அம்மா – பையன் போன்ற புனிதமான உறவுகளும் அடக்கம்... எல்லாருக்கும் அந்த உன்னதமான உறவுகள் கிடைச்சிடாது... அதைப் போய்.... ச்சே... நெனச்சு பார்த்தாலே உடம்பெல்லாம் கூசுது...” என உணர்ச்சிப் பொங்க பேசிக் கொண்டிருந்த வெண்ணிலாவின் அருகே சென்ற ஜெனிதா, “மேம்.. ப்ளீஸ்... இன்னும் கொஞ்ச நேரம்தான்.. இந்த வீடியோசை எல்லாருக்கும் போட்டு காட்டணும்ன்னு பி.எம் சொல்லியிருக்கிறார்... மொத்தமா பார்த்து முடிச்சிட்டா எல்லாரும் மொத்த்த்த்தமா.... போயிடலாம்...” எனக் கூற, “சாரி மேம்...” எனத் தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.

“ம்ம்ம்... தொடங்கட்டும்... அடுத்தக் காட்சி!!” என நாதன் இங்கிருந்தவாறே தன் தோழர்களுடன் கூற, காணொளி தொடங்கியது.

இதுவரை ஓடிய இணையர் காணொளி காட்சிகளைக்கூடச் சற்றே சகித்துக் கொண்டு பார்த்துவிடலாம் போல, இது அந்தளவிற்கு எரிச்சலூட்டுவதாக இருந்தது. இதற்கு அதுவே மேல் என எண்ண வைத்தது.

முதல் காட்சியிலேயே திரையில் காட்டப்பட்டது வெண்பாதான். அதைக் கண்டதும் தன் மகளைப் பார்த்து புன்னகைத்தார் சாரதா. அது அவள் ஆரம்பக் காலத்தில் பதிவேற்றிய காணொளி அன்று. வீட்டை விட்டு வெளியேறிய பின்னர்த் தங்களுக்கான வாய்ப்புத் தேடலின்போது பதிவேற்றிய ஒன்று.

தன் குடும்பத்தை விட்டு வெளியேறிய தாயும் மகளும் தங்களை அழைத்த குறிப்பிட்ட சின்னத்திரை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். தாங்கள் சவுகரியமாகத் தங்குவதற்கு வீடும் வாடகைக்குப் பிடித்து, குடியேறினர்.

வழக்கமாக மற்றவர்களின் கதைகளில் கேள்விப்படுவதைப் போலல்லாமல் எவ்வித ஏய்ப்புமின்றி அந்த வாய்ப்பு நன்றாகவே சென்று கொண்டிருந்தது. பள்ளியிலும் மாற்றுச் சான்றிதழை (Transfer Certificate) பெற்றுச் சென்றிருந்த சாரதா அவளை அருகிலேயே தங்களது படப்பிடிப்பைத் தடைசெய்யாத வண்ணம் தோதுவான ஒரு பள்ளியில் சேர்த்திருந்தார்.

கிடைத்த வாய்ப்புடன் சாரதாவின் ஆசை அடங்கிவிடவில்லை. மென்மேலும் முன்னேற வேண்டும் என்பதாகத் தழைத்து நின்றது அவருக்குள் இருந்த கவனமீர்ப்பு செய்யும் நுண்கிருமிகளின் தாக்கம்.

தங்களது இருப்பைக் கிங்காங் செயலியிலும் உணர்த்திக் கொண்டேயிருக்க வேண்டுமென முடிவு செய்தவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கும் காணொளிகளைப் பதிவிட ஆவன செய்திருந்தார்.

மற்றவர்களைப் போலத்தான். ஆரம்பத்தில் நாகரீகமான உடைகளை அணிந்து காணொளி பதிவுசெய்த வெண்பாவை சற்றே இறுக்கமான ஆடைகளை அணிந்துகொள்ள வலியுறுத்தினார். பாவம் பதின்பருவ பெண்! என்ன செய்வாள்? உற்றவளான தாய் உரைப்பதுதானே அவளுக்கு வேதமும் உபநிடதமும்!! எனவே ஏன், எதற்கு என்னும் கேள்விகளின்றிச் சாரதாவின் கட்டளைகளை அவ்வாறே சிரமேற்கொண்டு செய்தாள் அவள்.

“Costume Sponsor” என்பதெல்லாம் பெரிய விஷயமல்ல. சாதாரணமாகத் தொடர்ந்து காணொளி பதிவேற்றுபவர்களுக்கே உடைகளை வழங்குவதற்கு வரிசைகட்டி நிற்கையில், குறிப்பிடத்தக்கதொரு தொலைக்காட்சி சேனலில் நெடுந்தொடரில் நடிக்கும் வெண்பாவிற்கு ஆடைகளை வடிவமைத்து வழங்கமாட்டரா என்ன?? ஸ்பான்சர் செய்பவர்கள் குவிந்தனர்.

அவர்கள் அளிக்கும் ஆடைகளை அணிந்து விதவிதமான புகைப்படங்களைக் ‘க்ளிக்’க்கி புகைப்படங்களைப் பதிவிட்டு அவர்களைக் குறிப்பிடுவது, அவர்களைத் தொடர்புகொண்டு ஆடைகளைப் பெறுவது எல்லாம் சாரதாவின் வேலை. கிட்டத்தட்ட அவளின் மேலாளர் போல நடந்து கொண்டார்.

சின்னத்திரை காட்சிகள் என்றாலே தற்போதெல்லாம் நெருக்கமான காட்சிகள் வெகுசாதாரணமாகக் காட்டப்படுகின்றன. வெண்பாவின் காட்சிகள் காதல் காட்சிகளிலிருந்து அடுத்தகட்டத்திற்குப் பரிணமிக்கும் போது சற்றே நெருடலாகத்தான் இருந்தது. ஆனாலும் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதற்கும் இருவரும் சம்மதித்தனர்.

ஏற்கனவே கூறியதைப் போல, ‘குழந்தைத் தொழிலாளர்’ என்பதெல்லாம் பொருளாதாரத்தில் நலிந்த சிறுசிறு கூலித் தொழில்களுக்குத் தான் போல, திரைத்துறையில் எவரும் அதுகுறித்துச் சிந்திப்பதே இல்லை. பதினெட்டு வயதுகூட நிரம்பாத வெண்பா நெருக்கமான காட்சிகளில் வெகுதாராளமாக நடித்தாள்.

அதன்பின்னர் அவளை அணுகும் ஆடைவடிவமைப்பாளர்கள்கூடச் சற்றே கவர்ச்சிகரமான ஆடைகளையே வடிவமைத்து வழங்கினர். அதற்கெல்லாம் அசருவதாக இல்லை இருவரும். எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் அணியத் தொடங்கினாள் வெண்பா.

இருப்பினும் சாரதா எதிர்பார்த்த அளவு வாய்ப்புகளோ புகழோ கிட்டவில்லை. குறிப்பிட்ட தொடரைப் பார்ப்பவர்களைத் தவிர எவருக்கும் அவளைக் குறித்துத் தெரிந்திருக்கவில்லை. எனவே ஒரு சிறந்த திட்டத்துடன் குதித்தார் சாரதா.

மற்றொரு சமூக வலைத்தளத்தில் கணக்கைத் தொடங்கியவர்; அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் விதவிதமான புகைப்படங்களைப் பதிவேற்றத் தொடங்கினார். உடல்வளைவுகள் எல்லாம் தெரியும் வகையில் அவளை விதவிதமாகக் காட்சிப்படுத்திய புகைப்படங்கள் எல்லாம் பெரும்வரவேற்பைப் பெற்றன.

அவருக்குப் புரிந்துவிட்டது, எதை அனைவரும் எதிர்பார்க்கின்றனர் என. எனவே தினமும் ஆடைகுறைப்புச் செய்ய முடிவெடுத்து அதைச் செயல்படுத்தினார். அதன் கீழிருக்கும் கருத்துப் பக்கத்தில் போய்ப் பார்த்தால் கமெண்டுகள் காண சகிக்காது. அந்த அளவிற்கு மனதின் வக்கிரங்களைக் கொட்டித் தீர்த்திருப்பர் அனைவரும்.

“ஸ்வீட்டி, செல்லம், புஜ்ஜி....” என இன்னும் என்னன்னவோ... பல கருத்துரைகள் குவிந்தாலும் எதிர்மறையிலாவது தன் மகள் பிரபலமடைந்திருக்கிறாளே என மனதிற்குள் மகிழ்ந்தாள் அந்த ஏ.எஸ் வைரஸ் தாக்கப்பட்ட தாய்.

அவரின் அந்த வியூகம் வெற்றிபெற்று, பல வாய்ப்புகள் கிட்டின வெண்பாவின் பதினைந்தாவது வயதிலேயே. அவள் பிரபலமாக இருந்தாளே தவிர அவளின் எதிர்காலம் என்ன எனபது கேள்விக்குறிதான்?! உண்மையில் அநுதினமும் அவளை அப்டேட் செய்து கொண்டிருந்தாலொழிய அந்தத் துறையில் நிலைத்து நிற்பது சிரமம். ஏனென்றால் அவள் பிடித்திருப்பது புலிவாலை.

அதெப்படி எனில் அனைவரையும் தன்னை நோக்கி இழுக்கிறேன் என்னும் பெயரில் ஏதேதோ தகிடதத்தோம் வேலைகள் செய்து வைத்திருக்கின்றனர் இருவரும். இதற்குமேல் என்ன இருக்கிறது?? வயதுக்கு மிஞ்சிய வளர்ச்சியில் இருந்த வெண்பாவின் இடம் சற்றே ஆட்டம் காணுவதைப் போல இருக்கவும், அவளைப் பட்டினிபோட்டு உடலை இளைக்கச் செய்தார் சாரதா.

இவ்வாறாக அவர்களின் வளர்ச்சியும் , மேற்படி விஷயங்களும் வெண்பாவின் தந்தைக்குத் தெரியாமல் இல்லை. அவரும் எத்தனையோ முறை அலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துவிட்டார். சாரதா அழைப்பை ஏற்றாரில்லை. இரண்டு முறை நேரில் வந்தும், அவரைப் பார்க்காமல் தவிர்த்துவிட்டார் அவர்.

“நிகழ்காலத்தின் அற்ப சந்தோஷத்திற்காகத் தன் மகளின் எதிர்காலத்தை அடமானம் வைத்து, சிதைத்து விட்டாளே” என்னும் வேதனைதான் வெண்பாவின் தந்தைக்கு. அவளும் இவரது பேச்சைக் கேட்பதாக இல்லை. ஏனெனில் அவளுக்காக இத்தனை ரசிகர்களும், ரசிகப்பக்கங்களும் இருக்கின்றனரே. பின் தந்தையாவது, தக்காளியாவது?!

சாதாரணமாகப் பதிவிடும் காணொளிகளில் கூட உச்சக்கட்ட கவர்ச்சியும் ஆபாசமும் கலந்திருந்தது. இருவரும் எதிர்பார்த்தது போலவே ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவனம் பல கோடி செலவில் நடத்தும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகப் பல கோடி செலவில் ஒப்பந்தம் செய்யப்பட்டாள்.

இத்தனை அபரிமிதமான வளர்ச்சியும் பதினைந்து வயதிலேயே என்றால் பாராட்டத்தக்கதுதான், வியந்து நோக்கத்தக்கதுதான். ஆனாலும் இதன் பின்னதான வெண்பாவின் வளமான, நலமான, உத்திரவாதம் மிக்க எதிர்காலம் என்பது சற்றே கேள்விக்குரிய ஒன்றுதான்.

இதை வெறும் அனுமானம் என்றுகூடப் பலரும் சிந்திக்கலாம். அதற்கு நடைமுறை உதாரணங்கள் என அடுக்கத் தொடங்கினால் பட்டியல் பத்தைத் தாண்டும். மாதிரிக்கு இங்கே சிலரை குறிப்பிடுகிறேன் கேளுங்கள்.

சில்க் ஸ்மிதா...

ஷகீலா...

நமீதா....

சோனா...

யாஷிகா ஆனந்த்...

இவர்கள் அனைவரும் தங்களுக்குள் சமகாலத்தவர்கள் அல்லதான். இருப்பினும் கடந்த காலத்தில் விரல்விட்டு எண்ணும் வகையில் இருந்த பட்டியல் இப்போதெல்லாம் “Big Data” என்னும் அளவிற்கு மீமீமீமீ பெரிது. (ஷகீலா மம்மியை இங்கே சேர்த்து விட்டமைக்காக மன்னித்தருள்க. ஒருவேளை CWCக்கு வரவில்லை எனில் அவரது எதிர்காலம் கருமையன்றோ!?)
 
Last edited:

26

ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. “Great happenings take time; Earlier Success is a scam” என. இங்கே வெண்பாவின் விஷயத்திலும் அதுதான் நிகழ்ந்து கொண்டிருந்தது.

வெண்பா மட்டுமின்றி அடுத்ததாக இரண்டு மூன்று இளம்பெண்கள் காட்டப்பட்டனர். அவர்களும் குறிப்பிட்ட செயலி மூலம் பிரபலமடைந்தவர்கள் தான். ஆரம்பத்தில் பொழுதுபோக்கிற்காகத் தொடங்கிப் பின்னர் வெளியே வர இயலாத அளவிற்கு அமிழ்ந்து போனவர்கள்.

அவர்கள் பதிவேற்றியிருக்கும் காணொளிகள் குறித்ததான குறிப்புகள் எல்லாம் எழுத்து வரைமுறைக்கு அப்பாற்பட்டவை.

திரைப்பாடல்களில் பல வகைகள் உண்டு. அவை எவை என்றால் குத்துப்பாடல், டைட்டில் பாடல், இன்ட்ரோ பாடல், மெலோடி பாடல்... என. இவைகளில் ஒன்றுதான் இரட்டை அர்த்தம் தெறிக்கும் பாடல் வரிகள். பல பாடல்களில் இலைமறை காயாக வார்த்தைகள் பிரயோகம் செய்யப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு, “பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்... அடடா பிரம்மன் கஞ்சனடி!!” என்பதைப் போல. சில பாடல்களில் எல்லாம் பட்டவர்த்தனமாக அனைத்தையும் குறிப்பிட்டுவிடுவர். “திண்டுக்கல்லு திண்டுக்கல்லு... பெரிய பூட்டு எனக்கு... உன்கிட்டேதான் தொறந்து பார்க்க கள்ளச்சாவி இருக்கு..” என்பதாக.

கேட்பது எவ்வித மாறுபாடும் புலப்படாவிடினும் சற்றே உன்னிப்பாக நோக்கினால் அறுதியாகக் கணித்துவிடலாம் அதிலிருக்கும் விரசம் கக்கும் வரிகளை.

இவ்வாறான வார்த்தைகள் குவிந்து கிடக்கும் பாடல்களைத் தேடிப்பிடித்து அதற்கேற்ப பாவனைகள் செய்து காணொளிகள் பதிவிடுவது ஒரு சிலரின் வழக்கம். இந்த வழக்கம் எவ்வாறாக ஏற்பட்டது எனில் பார்ப்போரின் ஆதரவால்தான். மேலும் இந்தக் காணொளிகளுக்கான வரவேற்பிற்கு மற்றொரு காரணமும் உண்டு.

ஏனென்றால் இப்படிப்பட்ட காணொளிகள் பதிவேற்றும் அனைவரும் வெகுவிரைவில் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் தலைகாட்டும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். ஆகவே அதுதான் ஆதர்ச வழியென எவ்வித பரிசீலனையுமின்றிப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர் பலர்.

எடுத்துக்காட்டாகக் கூற வேண்டுமென்றால், “கூதக்காத்து கொல்லுதய்யா... மல்லுவேட்டி தாய்யா.... இல்ல மல்லுக்கட்ட வாய்யா...” என்னும் பாடல் எத்தனை வன்மைமிக்கப் பாடல் என்பது அனைவருக்கும் தெரியும். அந்தப் பாடலுக்கு அழகாக அங்க வளைவுகள் அனைத்தும் தெரியும் வகையில் பட்டுடுத்தி, அதீத ஒப்பனைகளைத் தீட்டி, அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப உதட்டைக் கடித்து, கண்களைக் குறுக்கி, முகப்பாவனைச் செய்து, காண்போரைக் கிறங்கடிக்கும் (கிளர்ச்சியடைச் செய்யும்) காணொளிகள் பதிவேற்றப்படும்.

இந்த வகைக் காணொளிகள் நம்மனைவருக்கும் புதிதல்ல. ஏறக்குறைய அனைவருமே ஆங்காங்கே சமூக வலைத்தளங்களில் கண்டிருப்போம். மேலும் கண்ணியத்திற்கு இழுக்கான பல வரிகளும், செயல்களும் அவற்றில் மிகுந்திருப்பதால் அவற்றை இங்கே குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறேன் என்பதைத் தயைகூர்ந்து கருத்தில் கொள்க.

இவ்வாறான பல காட்சிகள் காட்டப்பட, அனைவரும் தங்களுக்குள் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர். “என்னம்மா இது??! இப்படியெல்லாமா வீடியோ போடுவீங்க?? கொஞ்சமாவது மனசாட்சி வேணாமா?? நீங்க பேமஸ் ஆகணும்ன்னா என்ன வேணாலும் போஸ்ட் பண்ணுவீங்களா?? சின்னப் பசங்க யாராவது இந்த வீடியோவைப் பார்த்தா என்ன ஆகுறது??” என.

நாதனுக்கும் அவனைச் சார்ந்தோருக்கும் கோபமாக வந்தது. இவற்றைக் காண்கையில் சாமானியரான நாம் முகத்தைச் சுளிக்கிறோம், ஆனால் இவர்களோ அதைக் கூட உணராதவர்களாக இருக்கிறார்களே. அந்த அளவிற்காகப் புகழின்மீதும் கவனயீர்ப்பின்மீதும் மோகம் முற்றிவிட்டது என. இருப்பினும் ஜெனிதாவிற்கும் ஜுபினிற்கும் பயந்து, அவர்களது வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்களாக அமைதி காத்தனர்.

அமர்ந்திருந்த அனைவரிடமும் திரும்பிய ஜெனிதா, “இவங்க எல்லாரும் இந்த வீடியோவால பேமஸாகி, பெரிய பெரிய இடத்துக்குப் போனவங்க... பொதுவா மீடியாவைப் பொருத்தவரை கடின உழைப்புங்கறது ரொம்ப முக்கியம்.. பத்து வருஷம், பதினைஞ்சு வருஷம் ஹார்ட் ஒர்க் பண்ணினதுக்கு அப்புறம்தான் பலருக்கு ரெகக்னிஷன் கிடைச்சிருக்குது... சிலருக்கு கிடைக்காமலும் போயிருக்குது... இறுதிவரை அடிமட்ட லைட்மேனாவே வாழ்ந்து மடிஞ்சவங்க பல பேர்.. அப்படி இருக்கிறப்போ இவங்களுக்கு இவ்ளோ சின்ன வயசிலேயே, குறுகிய காலத்திலேயே இப்படி வாய்ப்பும் புகழும் கிடைச்சது சந்தோசம்தான்.. இதுக்குப் பின்னாடி இருக்கிற அரசியல், ட்ரிக்ஸ் எல்லாத்தையும் விட்டுடலாம்.. அதெல்லாம் இவங்க சாமர்த்தியம்... இதுமூலமா இவங்க எதிர்காலம் என்னவாகும் அப்படிங்கறதெல்லாம் இரண்டாம்பட்சம்... இப்போல்லாம் சமூக வலைத்தளத்துல போட்டோ போடாதீங்கன்னு சொல்லுறதுகூடப் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கிறதுன்னு சொல்லுறாங்க போலி பெண்ணியவாதிகள். நாமாகவே போய் ஏன் அடுத்தவங்களுக்கு மிஸ்யூஸ் பண்ற டெம்டேஷன் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கணும்ன்னு ஒரு பிரிகாஷனுக்காகதான் சொல்றது... ஆனாலும் பலர் புரிஞ்சிக்கத் தயாரா இல்ல.. ஓகே.. அது போகட்டும்... இப்படிப் பல கட்டுப்பாடுகளும், கண்ணியங்களும் நடைமுறையில் இருக்கிற நம்ம நாட்டுல இப்படிப்பட்டதான வீடியோக்கள் கொஞ்சம் தகுதிக்கு மீறியதுதான். அண்ட் இதன் தாக்கத்தால இவங்க தனிப்பட்ட வாழ்க்கையில ஏற்படுற பாதிப்புகள் எல்லாம் அவங்க அவங்க வினைப்பயனால் விளைஞ்சவை அப்படின்னு எடுத்துக்கிட்டா கூடச் சமுதாயத்துல எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படுதுன்னு ஒரு குட்டி டீசர் மாதிரி சூட் பண்ணியிருக்கிறோம்... பாருங்க...” எனக் கூறிவிட்டு திரும்பிக் கொண்டாள்.

அனைவரும் ஆர்வமுடன் அதைக் காணத் தொடங்கினர். முன்னர்க் காட்டிய பதின்வயது ஆர்வக்கோளாறுகள் செய்து கொண்டிருந்த அரும்பெரும் செயலை சிறுகுழந்தைகள் சிலர் செய்துகொண்டிருந்தனர்.

ஆம், அவர்கள் வாயசைவு செய்திருந்த ஆடியோக்கள் எல்லாம் வயதுக்கு மிஞ்சியவைதான்.

“கல்யாணம் ஆகிருச்சா??”

“இல்ல...”

“யாராச்சும் லவ்...”

“செட்டாவல...”

“அப்போ ஓகே...”

..........

“இந்தா பாப்பா.... அப்போ ஓகேன்னா என்ன??”

“ஷிப்ட் எட்டரை மணிக்கு முடிஞ்சிடும்... அப்புறம் வாங்க.. பேசலாம்...” எனத் திரைப்படத்தில் காட்டப்படும் காட்சிக்கு வாயசைத்து வைத்திருந்தாள் ஐந்து வயது சிறுமி.

“வரேன் அண்ணா... வரேன் அண்ணா...”

“ஏன் எங்களை மட்டும் அண்ணன்ன்னு சொல்ற... மாரிய சொல்லு...”

“அவரை அண்ணான்னு கூப்ட... எனக்கு நேச்சுரலா வரமாட்டிக்குது...” எனக் கூறி முடித்ததும் “டானு டானு டானு...” பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.

இதைப் பார்க்கையில் ஆத்திரமாக வந்தது பாதிப் பேருக்கு. அடுத்ததாகவும் அனைவரது ரத்தக் கொதிப்பையும் அதிகரிக்கும் வகையில் இதுபோன்ற காட்சிகள் பலவும் ஒளிபரப்பப்பட்ட பின்னர் ஒரு காட்சி வந்தது. அதில் அனைவருமே விக்கித்துப் போய்விட்டனர்.

அது என்னவெனில்...

1) ஒரு குழந்தை மெல்ல மெல்ல ஓசை கேட்காவண்ணம் நடந்து சென்று தனது தந்தையின் சட்டைப்பையில் வைத்திருக்கும் வெண்சுருட்டை (Cigarette) எடுக்கிறது. எடுத்த பின்னர் எவரும் தன்னைப் பார்க்கின்றனரா என உறுதி செய்து கொண்ட பின்னர்ப் பற்ற வைப்பானின் (Lighter) உதவியுடன் தன் தந்தை பற்ற வைப்பதைப் போலவே பற்ற வைத்து, இழுத்துப் புகைக்கிறது. இதைக்கூடப் பதிவுசெய்து பதிவேற்றியிருந்தார் அதன் தந்தை.

இதைக் கண்டதும் நாதனும் வினித்தும் தங்களுக்குள் புகைந்தனர். “என்னடா தகப்பன் இவன்.. பெத்த புள்ள இப்படிப் பண்றதைப் பார்த்தா அதைக் கண்டிப்பான், தானும் அந்தக் காரியத்தைச் செய்யாம மனசு மாறுவான்... ஆனா இங்கே என்னடான்னா உக்கார்ந்து வீடியோ எடுத்துட்டு இருக்கிறான்??” என நாதன் கோபத்தில் கொப்பளிக்க, “அடப் போடா... இவன் இப்படி வீடியோ எடுக்கிறதைப் பார்த்தா இவனே இப்படிப் பண்ண சொல்லிட்டு வீடியோ எடுத்தானோ என்னவோ?! இப்போதான் எல்லாரும் வியூஸ்க்காக என்ன வேணா பண்ணுறாங்களே...” எனச் சலித்துக் கொண்டான் ஒருவன்.

2) ஒரு குழந்தையை அடித்துத் துன்புறுத்துகிறான் ஒருவன். அதைக் கண்ட அண்ணனாகிய குழந்தை அவனை அடிக்க முயற்சிக்கிறது. அந்தக் குழந்தையை ஓரமாகத் தள்ளிவிட்டு, மீண்டும் அடிக்கிறான் அவன். அவனைக் கடித்து வைக்கிறது அந்தக் குழந்தை.

3) ஒரு குழந்தையிடம் கேட்கிறான் ஒருவன். “டேய்... நீ சங்கத்துல சேர்ந்துக்கிறியா??” என. “ம்ம்... சரி...” என்கிறது அந்தக் குழந்தை. “அப்போ போ... உங்க அப்பா பாக்கெட்டுல இருந்து ஐயாயிரம் ரூபா எடுத்துட்டு வா...” என அவன் கூறவும், “சாப்பிட்டுட்டு வாரேன்...” என்கிறது அக்குழந்தை. “சாப்பிட்டுட்டு வாரியா?? அப்போ சங்கம் வேணாமா உனக்கு?? சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா??” எனக் கேட்கையில், “அப்போ நான் சாப்பிட வேணாமா?? எனக்குப் பசிக்கும்ல..” என அழுகிறது அந்தக் குழந்தை.

4) ஒரு சிறுவனைத் தனியே காட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறான் ஒருவன். “யம்மோவ்... எங்கம்மா இருக்கிற?? இங்கே கூட்டிட்டு வந்து சாவடிக்கிறானுங்கம்மா என்னைய...” என அந்தக் குழந்தை கதறுவதைப் பதிவு செய்து பதிவிட்டிருந்தனர்.

இதைப் பார்த்ததும் சற்றே கோபப்பட்டாள் வெண்ணிலா. அவள் கோபத்தில் வார்த்தைகளைப் பேசுவதற்குள் எழுந்துவிட்டான் நாதன். “மேடம்... என்ன சொல்லப் போறீங்க?? இதைப் பார்க்கிறப்போ கோபமா வருதுன்னா?? இல்ல உங்க பையன் இந்தக் கேட்டகிரியில வரமாட்டான்னா?? இங்கே காட்டப்பட்ட வீடியோவுக்கும் உங்களுக்கும் பெருசா வித்தியாசம் ஒண்ணுமில்ல.. அந்த விஷயத்தோட வீரியம்தான் மாறுபட்டிருக்குதே தவிரப் பெருசா எந்த மாற்றமும் இல்ல..” என அவன் பேச, அவனுடன் இணைந்து கொண்டான் வினித்.

“ஆமாங்க... உங்க குழந்தையை டான்ஸ் ஆடவும் பாட்டுப் பாடவும் வற்புறுத்துற உங்களுக்கும் இந்த மாதிரி சிகரெட் குடிக்கிறதை வீடியோ எடுத்துப் போஸ்ட் பண்றவங்களுக்கும் எதாவது வித்தியாசம் இருக்குதா என்ன?? ஒட்டுமொத்தமா பார்த்தா ஒண்ணுதான்... ஒரு குழந்தையை அடிக்கிறது லீகல்லி அபென்ஸ்.. ஆனா அதையும் பார்த்து, சிரிச்சு ஊக்குவிக்கிறாங்க பார்க்கிறவங்க... நாங்கல்லாம் சின்ன வயசுல வீட்டைவிட்டு வெளியே போறப்போ அம்மா அப்பா சொல்லி விடுவாங்க.. யார் என்ன கொடுத்தாலும் வாங்கக் கூடாது, யார் என்ன கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிடக் கூடாதுன்னு.. இங்கே ஒரு பையனை உண்மையாவே வெளியே தூக்கிட்டுப் போனாங்களோ இல்லை செட்டப்போ தெரியல.. ஆனா இதெல்லாம் என்ன வகையான மனநிலை?? அந்தச் சாப்பிடனும்ல பசிக்கனும்ல வீடியோ போட்டதுக்கான நோக்கம் என்ன?? ஜஸ்ட் எண்டர்டெயின்மென்ட்தானா?? அடுத்தவங்க கேட்டா காசு எடுத்து கொடுத்துடணும்ன்னு ஊக்குவிக்கிறீங்களா என்ன?? சத்தியமா குழந்தைகள் இருக்கிற மாதிரி இந்த வீடியோஸ் எல்லாம் என்ன காரணத்துக்காகப் போடறீங்கன்னு எனக்குப் புரியவே மாட்டுது...” என வினித் பேசினான்.

“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?? குழந்தைகளுக்கு அஞ்சு வயசு ஆகுற வரைக்கும் போனை கொடுக்கவே கூடாது.. இப்போல்லாம் குழந்தை உங்களைத் தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு போனைக் கொடுத்து ஆ பண்ணிடறீங்க... சரி அதுதான் உங்க சூழ்நிலை அப்படின்னு வச்சிக்கலாம்... ஆனா... குழந்தை பண்ற சின்னச் சின்ன விஷயங்களையும் வீடியோ எடுத்து போடணும்ன்னு என்ன அவசியம் இருக்குது?? குழந்தை தம்மடிக்கிறதையும் தண்ணியடிக்கிறதையும் பார்த்து, ரசிச்சு, வீடியோ எடுத்துப் போஸ்ட் பண்ணி உலகத்துக்கே காட்டறது எல்லாம் வக்கிரத்தின் உச்சகட்டம்... இந்த வீடியோவை எல்லாரும் ஷேர் பண்ணி, திரும்பத் திரும்பப் பார்த்து ட்ரென்ட் ஆக்கிடுவீங்க... அப்புறமா அவங்களையும் பெரிய ஆளா இந்த உலகம் சித்தரிச்சிடும்... அவங்களும் செலிபிரிட்டி ஆகிடுவாங்க.. அவங்களையும் அவங்க பேரன்சையும் கூப்பிட்டு வச்சு ஒரு நாலு கேள்வி கேட்டு, கொஞ்சி வியூஸ் வாங்கிக்குவாங்க... இதெல்ல்லாம் வழக்கமா நடக்கிறதுதான்... ஆனா அந்தக் குழந்தைக்குக் கடைசி வரை தப்புன்னே தெரியாது... ஏதோ தன்னோட திறமையால முன்னுக்கு வந்த மாதிரி மார்தட்டிக்கும்... முன்னாடி சொன்ன மாதிரி இந்தக் குழந்தைகளோட எதிர்காலமும் கேள்விக்குறிதான்... இதுதான் உலகம்ன்னு இருக்கிறவங்க வாழ்க்கையில என்ன பண்ணுவாங்கன்னு நெனச்சா ரொம்ப வருத்தமா இருக்குது... பொண்ணுங்க பசங்கன்னு பாகுபாடே இல்லாம இப்போதான் எல்லாரும் கிங்காங் வீடியோ போடுறாங்களே... எல்லாரும் உலகம் இதோட முடிஞ்சு போகுதுன்னு தின்க் பண்ணிட்டு இருக்கிறாங்க... பொதுவா நம்ம ஊர்ல சொல்ற மாதிரி பசங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா அது அவனோட முடிஞ்சு போயிடும்... ஆனா கல்யாணம் ஆகாத பொண்ணுங்க இந்த மாதிரி வீடியோஸ் போஸ்ட் பண்றதால வர்ற விளைவுகள் பத்தியெல்லாம் யோசிக்கறதே இல்ல... ஜஸ்ட் அந்த நிமிஷ அட்டென்ஷன் சீக்கிங்க்காக என்னனவோ பண்ணிட்டு பியூச்சர் ஸ்பாயில் பண்ணிட்டு இருக்கிறாங்க...” என மூக்குவிடைக்கப் பேசினான் ஒருவன்.
 
Last edited:

27

தன்னைச் சுற்றியிருந்தவர்கள் இவர்கள் இவ்வாறு வாதம் புரிவதை பார்த்துக்கொண்டிருந்த முகுந்த்; “இவனுங்க என்னடா இப்படிப் பேசிட்டு இருக்காங்க?? இதுக்கே இப்படிப் பேசறாங்கன்னா நான் பார்த்தது எல்லாம் பார்த்தா என்னென்ன செய்வாங்க???” எனத் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

ஒரு கணம் தான் இதுவரை கண்ட கிங்காங் காணொளிகளை மனத்திரையில் மீள்பதிவு செய்து பார்த்தான். இளம்வயது பெண்ணொருத்தி அரைகுறையான ஆடைகள் அணிந்து, குறிப்பிடவே நாகூசும் அளவிலான பாவனைகளுடன் செய்திருந்த காணொளி எப்போதோ எதேச்சையாக அவனது முகநூல் காலக்கோட்டில் காட்டப்பட்டது.

“ஏன் இவங்க இப்படிப் பண்றாங்க?? இவங்க அப்பா அம்மா எல்லாம் கேக்க மாட்டாங்களா??” எனத் தன்னைத் தான் நொந்து கொண்டவாறே திறந்து பார்க்க, அடுத்ததாகக் குப்பை போல் அனைத்தும் வந்து கொட்டியது. அனைத்திலும் காட்டப்பட்டது அத்தனையும் திருமணமாகாத இளம்பெண்கள்.

பொழுதுபோக்கிற்காகக் காணொளிகள் பதிவேற்றலாம் தான்; ஆனாலும் அவர்கள் செய்த காரியங்கள் அனைத்தும் மீமிஞ்சியது. தோழிகளுடன் அமர்ந்து புகை பிடிப்பது போலவும் பாட்டிலை திறப்பது போலவும் தங்களுக்குள் இரட்டை அர்த்த வசனங்களைக் கூறிச் சிரிப்பது போலவும் எனப் பல கூத்துக்களை அரங்கேற்றி பதிவிட்டு இருந்தனர்.

கவனயீர்ப்புக்காக ஆடை குறைப்பிலும் ஆபாசத்தைப் புகுத்தி, முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளைப் பதிவேற்றி இருக்க ஒருவித ஒவ்வாமை சுழன்றது அவனது வயிற்றுக்குள். “இவங்கலாம் இவர்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தை தப்பான வழியில யூஸ் பண்ணிட்டு இருக்காங்க.. உண்மையான சுதந்திரம், உண்மையான பெண்ணியம்ன்னா என்னன்னு தெரியல போல....” எனத் தனக்குத் தானே நொந்து கொண்டவன்; அடுத்தக் காணொளியை தட்ட, அதில் ஒரு பெண் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

“இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னுடா இப்படி மோசமா கமென்ட் பண்ணிட்டு இருக்கிறீங்க?? நான் எப்படி வேணா ட்ரெஸ் பண்ணுவேன், என்னோட இன்னர்வேர் தெரியுதுன்னு கமெண்ட் போடுறீங்க! ஏன் உங்களுக்குத் தெரியாதா பொண்ணுங்கன்னா இன்னர்வேர் போடுவாங்கன்னு...” என அவள் கேட்கும் காரியம் சரிதான் எனத் தோன்றியது முகுந்த்திற்கு.

கமெண்ட் பண்றவங்க ஏன் எல்லாரையும் ஒரே ஸ்கேலால மெஷர் பண்றாங்க?? எனத் தனக்குத் தானே கேட்டு கொண்டவாறே அமர்ந்திருக்க, அவனது எண்ணம் தவறு என அடுத்தக் கணமே தோன்ற வைத்திருந்தது அந்தப் பெண்ணின் பேச்சு. “ஏன்டா நான் 2000 ரூபாய்க்கு இன்னொரு வாங்குறேன்... அதை நான் தெரியிற மாதிரி வீடியோ போட்டா என்ன தப்பு?? அப்படித்தான்டா போடுவேன்... என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ...” என வாய்க்கு வந்த போக்கில் அவள் பேசத் தொடங்க, இவளுக்கு ஆதரவாகவா யோசித்தோம், பேசினோம் எனத் தன்னைத் தான் தலையிலடித்துக் கொண்டான் முகுந்த்.

ஒரு அரை மணி நேரமாக அதற்குள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வந்தவனுக்குச் சேற்றில் புரண்டு எழுந்து வந்ததைப் போன்ற ஒரு உணர்வு!! நினைவிலிருந்து மீண்டு வந்தவன் சுற்றிப் பார்க்க, அங்கே அடுத்தக் கேட்டகிரி காணொளிகள் ஒளிபரப்பப்பட்ட தொடங்கியிருந்தன.

“அச்சச்சோ மிஸ் பண்ணிட்டேனே...” என்றவாறு அவன் ஆர்வமாகப் பார்க்க தொடங்க, அது வழக்கமாகச் செய்யும் எனப்படும் பிராங்க் எனப்படும் வீடியோக்கள்.

இப்போது தான் அதன் பெயர் பிராங்க்... ஆனால் நாம் சிறுவயதில் அவற்றை ‘சும்மா லுலுலாய்க்கி...” என்று குறிப்பிட்டு இருப்போம். உதாரணமாக, “டேய் இன்னைக்கி கணக்கு வாத்தியார் வரலடா..” என அருகில் இருப்பவனிடம் கூறிவிட்டு, அவர் வகுப்பிற்குள் நுழையும்போது “சும்மா சொன்னேனே... சொடக்கு விட்டேனே...” எனப் பாடி இருப்போம்.

ஆனால் இப்போது இந்த நவீன யுகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டதால், அனைத்துமே ஒரு விதத்தில் அப்டேட் ஆகிவிட்டது. விளையாட்டிற்காக எனச் சொல்ல வைத்து அனைத்துமே விளையாட்டு ஆகிவிட்டது என்பதால் அனைத்துமே இவர்களுக்கு விளையாட்டுதான். சீரியசாக எடுத்துக் கொள்வது கிடையாது.

அங்கே காட்டப்பட்ட காணொளிகளின் தொகுப்பு இதோ:

• ஐந்து பெண்கள் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் பின்னால் அலறியவாறே வந்து பயமுறுத்துகிறான் ஒருவன். அனைவரும் கத்திக்கொண்டு ஆளுக்கு ஒரு திசையில் ஓடிவிட, அவன் அனைவரையும் அழைத்து, “அங்கே கேமரா பாருங்க இது சும்மா பிராங்க் தான்..” என்கிறான் .அந்தப் பெண்கள் சற்று முறைத்தவறும் சிரித்தவாறும் கடந்து விடுகின்றனர்.

“கண்ணா இக்கட ச்சூடு..” என்பதாக ஜுபின் அவர்களைப் பார்க்க, இதையே வேறு ஒரு கோணத்தில் காணொளியாகப் பதிவு செய்திருந்தனர் ஜெனிதாவின் குழுவினர். அதே ஐந்து பெண்கள் இருக்குமிடத்தில் இப்போது சற்று நடுத்தர வயதினர் நான்கு பேர் நடந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் இருந்து கத்தியவாறு ஒருவன் ஓடி, வர தங்களால் இயன்ற மட்டும் அங்கிருந்து செல்ல சிலர் முயற்சிக்க, ஒருவர் அந்த அதிர்ச்சி தாளாது அந்தப் பாதையிலேயே மயக்கமுற்று விழுந்து விடுகிறார். அனைவரும் பதறி போய் வந்து பார்க்க, அவருக்கு மாரடைப்பு வந்திருக்கிறது.

அட்ரீனலின் சுரப்பு அனைவருக்குமே அதிகமாக இருக்கிறது. அனைவரும் சேர்ந்து அந்த வீடியோ செய்பவனைத் துவைத்து எடுக்கின்றனர்.

அடுத்தச் செட் காணொளிகள் :

• பொதுவாகச் சென்னை மாநகரத்தில் அனைவருமே காதில் எப்போதும் செவிட்டு மிஷின்.... மன்னிக்கவும்... ஹெட்செட், ஹெட்போன்களுடன் வலம் வருபவர்கள்தான். நடக்கையிலும் பேருந்தில் பயணிக்கையிலும் சதா காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இருப்பவர்கள்தான். இவ்வாறாக அந்தத் தெருவில் நடந்து கொண்டிருப்பவர்களில் ஏறத்தாழ அனைவருமே காதில் அதை மாட்டிக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர். ஒரு ஒரு இளைஞன் அவர்களுக்கு எதிரில் நடக்கிறான். கையில் அலைபேசி உடன் நடந்து கொண்டிருப்பவரின் கையைத் தட்டிவிட, அந்த ஹெட்போனும் மொபைலும் விழுந்துவிடுகிறது. “கேமரா பாருங்க... சும்மா... இதோ உங்களுக்காகப் புது ஹெட்போன்..” என அவன் கொடுக்கவும் சிலர் முறைத்தாலும் பலர் போனா போகுது என வாங்கிக் கொண்டு சென்றுவிட்டனர். ஏனென்றால் அவன் கொடுத்தது விலை உயர்ந்த ஒன்று.

இதையே மற்றொரு கோணத்தில் காட்ட முற்படுகையில் ஒரு பெண் கையில் அலைபேசியில் எதையோ பார்த்தவாறு ஹெட்போனுடன் சென்று கொண்டிருக்கிறாள். அவள் அருகே சென்று, அவன் அந்த அலைபேசியில் மாட்டியிருந்த ஹெட்போனை உருவி, தரையில் விசிறி அடிக்கவும் அந்தப் பெண் அழ தொடங்கி விட்டாள். “அச்சோ... மேம்... இது ஜஸ்ட் ஒரு பிரான்க் ஷோதான்... அங்கே பாருங்க கேமரா இருக்குது...” என அவன் கூறவும், அவனது கன்னத்தில் ஓங்கி அடித்தவள் தரையில் அமர்ந்து அழ தொடங்கி விட்டாள்.

அவனும் அவனது குழுவினரும் “என்னாச்சு... என்னாச்சு...” எனப் பதறியவாறு அருகில் வந்து, “மேம்... உங்க ஹெட்போன்ஸ் வெறும் முப்பது ரூபாய் தானே... இங்கே பாருங்க புது ஹெட்போன்... இது டூ தவுசன்ட் ருபீஸ்...” என நீட்ட, முன்னிலும் அதிகமாகக் கோபமாகி விட்டாள் அவள்.

“இது என் அப்பாவோட ஹெட்போன்; அவருக்கு நான் ஆசையா வாங்கித் தந்தது என்னோட முதல் மாத சம்பளத்தில... இப்போ அவர் என்னோட இல்ல.. உன்னோட டூ தவுசன்ட் ருபீஸ் ஹெட்போனை வச்சு என் அப்பாவை திரும்ப வர வைக்க முடியுமா?? இதை அவரை யூஸ் பண்ண வைக்க முடியுமா?? வைக்க முடியுமா சொல்லுடா... என்னடா லூசு மாதிரி பண்ணிட்டு இருக்கீங்க....” என்ன அவள் அழுது கொண்டே எழுந்து செல்ல, இதைக் காண்போரது இதயம் குருதியை உகுத்தது.

அடுத்ததாகக் கணவன் மனைவி ப்ராங்க் வீடியோக்கள் :

வீட்டிற்குள் ஒருமுறை செய்தால் பிரச்சனை இல்லை; பல முறையும் பிராங்க் செய்து, அதை அதற்கும் நடிப்பதற்கும் பயப்படுவது போல நடித்தால் அது எத்தனை பெரிய அபத்தம்?!! எத்தனை பெரிய லாஜிக் மிஸ்டேக்?? ஆனால் அவர்களுக்கு அந்த அறிவைக் கூட ஏற்படாத வண்ணம் அவர்களின் மூளையை மழுக்கி வைத்திருந்தனர்.

சமையலறையில் மனைவி சமைத்துக் கொண்டு இருக்கிறாள்; அவளுக்குத் திடீரென ஒரு யோசனை தோன்றுகிறது. நேராகக் குளிர்பதன பெட்டியில் இருக்கும் தக்காளி சாஸ் எடுத்து, அவள் தன் கையில் ஊற்றிக் கொண்டு “அம்மா... கையில கத்தி பட்டுருச்சு... ஐயோ.... அம்மா... ரத்தம்...” எனப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்க, “அச்சோ... என்னாச்சு??” என அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறான் அவளின் கணவன்.

“என்னாச்சும்மா??” என அவன் அவளது கையை நோக்க, தக்காளி சாஸ் எனத் தெரிந்ததும் அவன் அவளைப் பார்த்து முறைக்க, “சும்மா ப்ராங்க் பண்ணுனேன்... அங்கே கேமரா பாருங்க ங்க...” என்கிறாள் அவள்.

இங்கே யோசிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது இங்கே அடுத்தவரின் உணர்வுகளை நாம் காட்சிப் பொருளாக ஆக்குவது. மனைவிக்கோ இல்லை மகளுக்கோ அடிபட்டால் ஒரு கணவனாக, தந்தையாக ஓடிவருவது ஒருவனின் ஆழ்மனதில் நிலைத்த அன்பு; ஆனால் அதையும் இப்படி ஒரு கேலிக்கூத்தாக ஆக்குவது என்பது உணர்வுகளைச் சிதைக்கும் ஒரு மனசாட்சியற்ற நிலைதான். ஆனால் பலரும் அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றனர்.

“அப்பா நான் ஒரு பையனை லவ் பண்றேன்...” என்றவாறே வந்து நிற்கிறாள் மகள் ஒருத்தி. இதைக் கேட்டு அதிர்ச்சியான தந்தை, “என்னமா சொல்றே?? உன்னை நான் அப்படியா வளர்த்தேன்???” என மனவருத்தத்துடன் பேச, “அப்பா...எனக்கு அவரைக் கட்டி வைங்க... நான் இப்போ மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்” என அவள் கூறவும், அவர் கோபத்தின் உச்சத்திற்குச் சென்று அவளை அடிக்கக் கையை ஓங்குகையில் “அப்பா... அங்கே பாருங்கப்பா.. இது சும்மா.. விளையாட்டுக்கு... கேமிரா இருக்குது பாருங்க...” என்கிறாள் அவள்.

இதுவே இன்னொரு கோணத்தில் பார்த்தால், அந்தத் தந்தை தன் மகள் இவ்வாறாகச் செய்துவிட்டாள் என்னும் அதிர்ச்சியில் மாரடைப்பில் அந்த இடத்திலேயே விழுந்து உயிரை விட்டுவிடுகிறார்.

மற்றொன்று தன் மனைவியின் முன்னரே மற்ற பெண்களிடம் பேசுவது போல நடிக்கும் பிராங்க். அவனும் அவளும் காரில் ஒன்றாகச் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு அழைப்பு வருகிறது.

“ஆமா... ஆமா...

செல்லம்...

தங்கம்...

புஜ்ஜி..

அவளோட தான் வெளியே போய்க்கிட்டு இருக்கேன்...

ஆமா... என் பொண்டாட்டி தான்..” என அவன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, “யார் கிட்ட பேசுற நீ?? யார்கிட்டே பேசுற??? சொல்லு... சொல்லு...” என்பதாகக் கோபம் கொண்ட அவனது மனைவி அவனை அந்த இடத்திலேயே மொத்தத் தொடங்குகிறாள்.

கட்டிலில் கணவனும் மனைவியும் படுத்திருக்கின்றனர். கேமராவை ஆன் செய்துவிட்டு அவள் அருகே சென்றவன்; “விஜயா.. அடியேய் விஜயா...” என அழைக்க, “யாரு அந்த விஜயா... யாரு அவ???” என அவள் கத்தத் தொடங்க, “ஏய் சும்மா... சும்மா சொன்னேன்... அங்க பாரு... கேமரா ஓடிக்கிட்டு இருக்கு..” எனக் கை காட்டுகிறார்கள்.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும் விதமாக மற்றொரு காணொளி; அமர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் தன் கணவனிடம் வருகிறாள் மனைவி. “கார்த்திக்” என அழைக்க, அவன் நிமிர்ந்து பாராமல் வேலையிலேயே மூழ்கி இருக்கிறான்.

“கார்த்திக் நீ ஏன் எனக்காக டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்குற?? உனக்கு உன் வேலை தான் முக்கியமா போச்சு... அதனால நானும் உன் பிரண்ட் சஞ்சயும் சேர்ந்து வாழ தொடங்கிட்டோம்... இப்போ நான் இரண்டு மாதம் கன்சிவா இருக்கிறேன்...” என அவள் கூறவும் அவன் மடிக்கணினியை கீழே போட்டுவிட்டு அதிர்ச்சியில் எழுந்து கொள்கிறான்.

எத்தனை பெரிய அபத்தம் இது!! எத்தனை வீரியமான கலாச்சாரச் சீர்கேடு இது!! விளையாட்டுக்காகக் கூட இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல் தகுமா?? இவ்வாறு பயன்படுத்தவதே தவறு என்றால், அதைப் பதிவு செய்து, பதிவேற்றி, பகிர்தல் எத்தனை பெரிய முட்டாள்தனம்!! இங்கே பலரும் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றனர்.

அத்தோடு நில்லாமல் பக்கத்து வீட்டு நடுத்தரப் பெண்மணியை அழைத்து வந்து திருமணம் செய்துவிட்டேன் என நிற்கும் பதினாறு வயது சிறுவன், இவள் கர்ப்பமாக இருக்கிறாள் எனக் கூறும் அக்காவின் கணவன் என விதவிதமாக வந்து குவிய, இதுபோன்ற காணொளிகளைக் காண்கையில் அங்கிருந்த அனைவருமே தங்களுக்குள் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர்.

“டேய் நாதன்... இப்படி ஒரு விஷயம் எல்லாம் இருக்குனு எனக்குத் தெரியாமலேயே போச்சுடா.... செம கோவம் வருது... நாம பாட்டுக்கு நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்திருக்கிறோம்... ஆனா பாரு இங்கே இப்படி எல்லாம் நடந்து இருக்குதுன்னு... என்னதான் டிசைனோ??!! இவங்களுக்குக் கொடுக்கிற சுதந்திரத்தை ஏன் இப்படி எல்லாம் யூஸ் பண்றாங்க??” எனத் தனக்குள் தன் தோழர்களிடம் நொந்து கொண்டான் கார்த்திக்.

தெருவில் நடந்து கொண்டிருக்கும் பெண்ணிடம் சென்று, “இது எந்த ஊரு??” எனக் கேட்க, அவள் அதற்குப் பதில் கூற, அதன்பின்னர் “உங்களைப் பார்த்ததும் வழியையே மறந்துட்டேன்” எனக் கூறிவிட்டு, அவளை நாணச் செய்து அதைப் பதிவிட்டிருந்தனர்.

ஒரு இளம்வயது பெண்ணிடம் இதே போல் வழியைக் கேட்க, அவள் தெளிவாக அனைத்து பாதைகளையும் கூறிய பின்னர், “தேங்க்ஸ் ஆன்ட்டி...” எனக் கூறுதல் பொழுதுபோக்கு மெட்டீரியலாக இருந்தாலும் இவ்விடம் அந்தப் பெண்ணில் உதவும் குணம் மிதிக்கப்பட்டு, அவமதிக்கப்படுகிறது அல்லவா??

பெண்களின் வண்டியில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் பெண்ணின் முன்னே கையை நீட்டி, நிறுத்தி அவளிடம் ஏதாவது பேசி அதையும் பிராங்க் என்பது, எதிரில் வரும் பெண்ணைக் கட்டிப் பிடிப்பது போலச் சென்று பின்னால் நிற்பவனைக் கட்டிப்பிடித்து அந்தப் பெண்ணை அசௌகரியத்துடன் அங்கிருந்து நகரச் செய்வத இதெல்லாம் பிராங்கின் பல பரிமாணங்கள்.

கும்பலாக நின்று கொண்டிருக்கும் பெண்கள் கூட்டத்தில் நுழைந்து, திடீரென ஒரு பெண்ணிடம் ரோஜாப்பூவை நீட்டி, “உங்களை ரொம்ப நாளாக ஃபாலோ பண்ணிட்டு இருக்கிறேன்... உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு... ஐ லவ் யூ” என நீட்ட, அவள் ஒரு மாதிரியாகப் பார்க்கிறாள்.

இதையே வேறு கோணத்தில் காட்ட முற்படுகையில் அந்தப் பெண் ஒரு திருமணமாகாத பெண்ணாக இருந்து, அவளுக்கும் அந்தப் பையனை பிடித்துப் போய் விட்டால்??? இல்லையேல் சுற்றியிருக்கும் எவராவது அந்தப் பெண்ணின் உறவினராக இருந்துவிட்டால்??? அவளின் நிலை என்ன?? பிராங்க் என்னும் பெயரில் என்ன கூத்து வேணாலும் செய்யலாமா என்பதாகக் கேள்வி எழுந்தது அதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு.

இருப்பினும் ஜெனிதா என்னும் ஒற்றை மனுஷியின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அமைதியாக அமர்ந்திருந்தனர். வெண்ணிலாவின் முகத்தில் ஈயாடவில்லை. இத்தனை மோசமான வலைதளத்தில் தான் தன் மகனை உள்ளீடு செய்துள்ளோம் என.

தன்மீது தனக்கே கோபமாக வந்தது. அங்கிருந்து அனைவருக்குமே ஒருவித ஒவ்வாமை மனநிலைதான். தாங்கள் செய்தது தவறில்லைதான் ஆனாலும் சுற்றி இருப்பவர்கள் செய்தது தவறு என்பது போன்ற மனநிலை அவர்களுக்கு.

எப்போதும் அடுத்தவர்களை ‘நீதான்’ எனக் கை காட்டும் போது, எஞ்சிய மூன்று விரல்கள் நம்மை நோக்கி இருப்பது நமக்குத் தெரியாது. மேலும் நம்மில் பலர் கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுக்காது அடுத்தவர் கண்ணில் இருக்கும் துரும்பை பார்ப்பது தான் வழக்கமாக உள்ளது.

இவர்களும் தங்களைச் சுற்றி இருக்கும் பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்தாலும் தாங்கள் செய்தது சரி என்று நினைத்து வந்தனர். அப்போது ஜெனிதாவின் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. ஜுபினைப் பார்த்தவள் ‘பேசிட்டு வரேன்’ எனக் கூறியவாறே எழுந்துகொள்ள, அது ஒரு காணொளி அழைப்பு. பிரதம மந்திரி தான் அழைத்திருந்தார்.

அவர் அருகில் இருக்கும் பெண் பேசுவதை அங்கிருக்கும் அனைவருக்கும் நேரலையில் ஒளிபரப்புமாறு கூற, “ஓகே சார்...” என்றவாறே அங்கே வந்து அமர்ந்த ஜெனிதா; “வினித் இந்த வீடியோவை அங்கே கனெக்ட் பண்ணுங்க... பி.எம் லைன்ல வர்றாரு..” என அவனிடம் தன் அலைபேசியைக் கொடுத்தாள்.

அனைவருக்கும் பிரதம மந்திரி தங்களுடன் காணொளியில் பேசப் போகிறார் என்பதும் ஏக ஆனந்தம்!! இப்போது அலைபேசி மட்டும் இருந்திருந்தால் அவருடன் செல்பி எடுத்தோ இல்லை அவரது பேச்சையும் பதிவு செய்தோ தங்களைப் பின்தொடர்பவர்களுக்குக் காண்பிக்கும் விதமாகப் பதிவிட்டு இருக்கலாம் எனச் சலித்து, அங்கலாய்த்தனர்.

அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த பிரதம மந்திரி; தன் அருகில் அமர்ந்திருந்த பெண்ணைப் பேசுமாறு கூறினார். அந்தப் பெண் சோகமே உருவாக அமர்ந்திருக்க, அவளை “பேசுமா...” எனத் தைரியப்படுத்தினார் பிரதம மந்திரி. அவளும் சரி என்று தலையசைத்துவிட்டு பேசத் தொடங்கினாள்.
 
Last edited:

28

“வணக்கம்... என் பெயர் ரதி... என்னை ரதின்னு சொல்லி தெரிவதைவிட ஆதித்யா ரதின்னு சொன்னால்தான் நிறையப் பேருக்கு தெரியும்... ஏன்னா நாங்க ஆதித்யா ரதி அப்படிங்கிற பெயர்ல தொடர்ந்து வீடியோஸ் போட்டுட்டு வந்தோம்... என்னைப் பார்க்கிற நிறையப் பேருக்கு என்னைத் தெரியும்னு நினைக்கிறேன்... என்னுடைய பாலோவர்ஸ் அப்படின்னு நிறையப் பேர் சொல்லிட்டு இருக்கீங்க.. உங்க எல்லாருக்கும் நான் என்னுடைய கதையைச் சொல்லிட்டு போக வந்து இருக்கேன்... நான் காலேஜ் முதல் வருஷம் படிச்சிட்டு இருக்கும்போது தான் இந்த ஆப் எனக்குத் தெரிய வந்துச்சு.. நானும் என் கூடப் படிச்ச ஆதித்யாவும் சேர்ந்து அப்பப்போ வீடியோ பார்ப்போம்... அவனும் நானும் லவ் பண்ணிட்டு இருந்தோம்.. அப்போ ஒரு நாள் எனக்கு ஒரு ஆசை வந்தது... நாமளும் இந்த மாதிரி வீடியோ போட்டா என்ன?? அப்படின்னு... ஏன்னா பல பேர் எங்களை மாதிரி வீடியோ போட்டுட்டு இருந்தாங்க... நாமளும் போட்டா நல்ல ஃபேமஸ் ஆகும், அப்படின்னு நெனச்சிட்டு தான் போஸ்ட் பண்ண ஆரம்பிச்சோம்... நாங்க எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு... நாங்க ரெண்டு பேருமே மிடில் பெஞ்ச் ஸ்டூடண்ட்ஸ் தான்... எனவே எங்களுக்குப் பெரிய அளவில் பாராட்டு எல்லாம் இதுவரைக்கும் வாழ்க்கையில கிடைச்சதே கிடையாது.. அப்படி இருந்டேக எங்களுக்கு இவங்க கொடுத்த ஆதரவு எங்களுக்கு ரொம்பத் தன்னம்பிக்கை தருவதாகவும் மோடிவேட் பண்ணுறதாவும் இருந்துச்சு... அதனால நாங்க தொடர்ந்து வீடியோ போட ஆரம்பிச்சோம்... எல்லாரும் எங்களைக் கப்பிளா, ரியல் லைப் கப்பிளா அப்படின்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க... ஏற்கனவே காதலிச்சிட்டு இருந்த நாங்க கொஞ்சம் தைரியமாகவே வீடியோ போஸ்ட் பண்ண ஆரம்பிச்சோம்... அப்பதான் இந்த விஷயம் எங்க வீட்டுக்கு தெரிய வந்துச்சு... அப்பா கூப்பிட்டு கண்டிச்சார்... ஆனா இந்த விஷயத்தை நாங்க கிங்காங் ஆப்பில இருக்கும் எங்க ரசிகர்கள் கிட்ட சொன்னப்போ அவங்க நீங்க தான் மேஜர் ஆச்சே.. கல்யாணம் பண்ணிக்கோங்க அப்படின்னு சொன்னாங்க.. எங்களுக்கு அப்போது யோசிக்கிற தன்மை, மெச்சூரிட்டி எல்லாம் இல்ல... அப்படியே கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாதான் இருக்கும், நமக்குத் தான் காதல் இருக்குதே, சாப்பாட்டுக்குன்னு பார்த்தா இத்தனை பேரோட அன்பும் ஆதரவும் இருக்குதேன்னு தோணுச்சு... ஏன்னா அப்போ தான் எங்களுக்கு மாநாட்டைசேஷன் கிடைச்சிருச்சு.. இதுதான் உலகம், இதுல வர்ற வியூசும் காசும் தான் நிரந்தரம் அப்படின்னு நினைச்சிட்டு இருந்தோம் நாங்க... பத்தொன்பது வயசுல வீட்டைவிட்டு வெளியே வந்து கல்யாணம் பண்ணிகிட்டோம் ரெண்டு பேருமே... ஒரு டிகிரி கூட வாங்கலை, ஆனா எங்களுக்கு இந்த ஆப் மூலமா நிறையப் பணம் வந்துச்சு.. அதாவது எங்க குடும்பத்தை நடத்துற அளவுக்குப் பணம் வந்திருச்சு.. அதுக்கப்புறம் தான் எங்களுடைய தேவைகளுக்காக நாங்க நிறைய நிறைய வீடியோ பண்ண ஆரம்பிச்சோம்... எங்களுக்குள்ள நடக்கிற சின்னச் சின்ன விஷயங்கள் எல்லாத்தையும் ஷேர் பண்ணுவோம், ஃப்ரீ டைம்ல விதவிதமா மேக்கப் பண்ணிக்கிட்டு கப்பிள் வீடியோஸ் எல்லாமே பண்ணுவோம்.. இதெல்லாம் மக்கள் ரொம்ப ரசித்துப் பார்த்து அப்ரிசியேட் பண்ண ஆரம்பிச்சாங்க... அப்போதுதான் சாம் என் வயித்துல வந்தான்... அந்தக் கர்ப்பத்தை நாங்க ரொம்பக் கொண்டாடினோம்.. எங்களுடைய பாலவர்ஸ் கிட்ட இதைச் சொன்னப்போ ரொம்பச் சந்தோஷப்பட்டாங்க... அவங்க வீட்டு பொண்ணுக்கு நல்லது நடந்ததா நினைச்சு ரொம்பக் கொண்டாடினாங்க.... உண்மையாகவே உச்சி குளிர்ந்து போய் விட்டோம்... எங்களுக்கு அப்போ இதெல்லாம் தப்புன்னு தோணலை... ஒரு குழந்தையை வளர்க்குறதற்கான எந்த மெச்சூரிட்டியும் எதிர்காலத்தைக் குறித்ததான எந்த ஒரு பயமும் கவலையும் எங்களுக்கு இல்லை... அப்படியே வாழ்க்கை போய்க்கிட்டு இருந்துச்சு... கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் நாங்க பதிவு பண்ணி போஸ்ட் பண்ணிட்டு இருந்தோம்... நாங்க எங்க பேரன்ட்ஸ ஏமாத்திட்டு, நம்பிக்கையை உடைச்சிட்டு வந்ததால அவங்களோட வயித்தெரிச்சலோ இல்ல பல கண் பட்டால் பாம்பும் சாகும்ன்னு சொல்ற மாதிரி ஏற்பட்ட கண் திருஷ்டியோ தெரியலை சாம் பிறந்த அடுத்த ஒரு மாதத்திலேயே ஆதித்யாக்கு பெரிய ஆக்சிடென்ட் ஆச்சு... லட்சக்கணக்குல அவனுக்குத் தேவைப்படும்ன்னு சொன்னாங்க... எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல... எனக்கு அப்போ 20 வயசு தான்... 20 வயசு பொண்ணால எப்படி அத்தனை லட்சங்களைத் தனியா திரட்ட முடியும்னு தெரியல... அப்பவும் பாலவர்ஸ் கிட்டே தான் வந்தேன்... எனக்கு அப்ப இரண்டு லட்சம் பாலோவர்ஸ் இருந்தாங்க... ஒருத்தர் ஒரு பத்து ரூபாய் தந்தால் கூட அது மிகப்பெரும் அமௌன்ட் கிடைக்கும். அது மூலமா ஆதித்யாவை சரி பண்ணிடலாம்ன்று எவ்வளவோ ட்ரை பண்ணுனேன்... உண்மையான அன்புகொண்ட பாபலோவர்ஸ் கடந்து போய்விடல்லை... அன்பாகவே அனைத்து காசையும் அனுப்பினாங்க... அதனை என் ஆதித்யாவை குணப்படுத்த முயற்சி பண்ணினேன்... ஆனா என்னோட கெட்ட நேரமோ என்னவோ, எட்டு மாதம் போராடி என் ஆதித்யா அந்தக் கடவுள்கிட்ட போய்ச் சேர்ந்துட்டான்... எனக்கு ஆதரவா யாருமே இல்லை... 20 வயசுல கைக்குழந்தையுடன் இளம் விதவையா நான் நின்னேன்... கையில ஒன்றுமில்ல... இந்தப் புகழ் மோகம் என்னை அப்படி ஆக்கி வைத்து இருந்தது... எங்கேயும் வேலைக்குப் போகக்கூட முடியாத நிலையில் கூனிக்குறுகி இருந்தபோது ஆதித்யா அம்மா ஆதரவுக்கு வந்தாங்க... அவங்க சொன்னதைக் கேட்டு அடுத்த இரண்டாவது மாதமே ஆதித்யாவோட ப்ரென்ட் வினோத்தை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... அதையும் நாங்க பொதுவில் தான் வெளிப்படுத்தி, வீடியோ போட்டோம்.. அப்போ நிறையப் பேர் நிறையப் பேசினாங்க. எப்படி இரண்டு மாதத்தில் கல்யாணம் பண்ணிக்கலாம் என... பல மாதிரி பேசினாங்க.. ஆனால் அத்தை சொன்ன மாதிரி ஒரு பொண்ணு தனியா வாழ்றது கொஞ்சம் கஷ்டம் தான் அதுவும் இந்த மாதிரி ஒரு சொசைட்டில ஒரு கைக்குழந்தையுடன் ஒரு பெண்ணை வாழ்வது என்பது ரொம்பவே சவாலான காரியம்தான்... சோ நான் எல்லார்கிட்டயும் தெளிவா சொல்லிட்டுதான் ரெண்டாவது கல்யாணம் பண்ணினேன்... ஆனால் என்னோட கெட்ட நேரம் அவருடன் வாழ முடியல... ஏன்னா ஆதித்யா மட்டும்தான் என் மனசுல இருந்தான்.... அவனுடைய இடத்திலே இன்னொரு பையனை நினைத்து பார்க்க கனவுல கூட முடியாது... அதனால நான் திரும்ப அந்தப் பையனை விட்டு வந்துட்டேன்... எனக்கு ஆதித்யா போதும், அவன் நினைவுகளுடன் வாழ்ந்தா போதும் அப்படின்னு முடிவு பண்ணிட்டேன்... ஆனா அதுக்கும் பலர் பல மாதிரியா பேசினாங்க... சரியா முடிவெடுக்கத் தெரியாதவ, ஒழுக்கம் இல்லாதவ, இரண்டு பேரோட வாழ்க்கையை அழிச்சவ அப்படிலாம் பேசினாங்க... என்னால இதையெல்லாம் தடுக்க முடியல எப்பவும் எல்லா விஷயத்துலயும் பாசிட்டிவ் இருக்கிற அதே அளவுக்கு நெகட்டிவ்வும் இருக்கும் அப்படிங்கிற புரிதல் எனக்கு இல்லை... இந்தச் சோசியல் மீடியா, அட்டென்ஷன் சீகிங் எல்லாமே இருபுறமும் கூரான கத்தின்னு எனக்குத் தெரியாம போச்சுது... பாசிட்டிவா நாமம் உயரணும், அதுக்காக நான் எந்த ரிஸ்க் வேணா எடுக்கலாம் அப்படின்னு தைரியமாகத் துணிந்து நின்னேன்.. ஆனா அதனால நெகட்டிவ் வந்தாலோ இல்லை என்னுடைய பர்சனல் பாதிக்கப்பட்டாலோ அதை எப்படி ஃபேஸ் பண்றது அப்படின்னு தெரியாம போனேன்... இப்போவும் என்னுடைய கைக்குழந்தையை வைத்துக்கொண்டு பணத்துக்குப் போராட வேண்டிய சூழல்... ஒழுங்கா படிச்சிருந்தாலோ இல்ல அப்பா அம்மாவை மதிச்சு அவங்க சொல்ற பேச்சை கேட்டு இருந்தாலோ இந்த மாதிரி எல்லாம் நடந்து இருக்காது... அடுத்தவங்க போடுற சூப்பர், நைஸ் அப்படிங்கிற கமெண்ட்காக ஆசைப்பட்டு, என் வாழ்க்கையை மொத்தமாக அழிச்சுட்டேன்... இப்பவும் என்னால ஒழுங்கா வாழ முடியுமா என்னன்னு கூடத் தோணலை... என் குழந்தைக்கு ஒரு ஹார்லிக்ஸ் வாங்கிக் கொடுக்கிறதுக்குக் கூட என்கிட்ட காசு இல்ல... அதனால்தான் என் வாழ்க்கையை மாய்ச்சிக்க முடிவு பண்ணிட்டு, சூசைட் பண்ணிக்கப் போனேன்... ஆனால் அக்கம் பக்கத்துல இருக்கிற வாங்க என்னைக் காப்பாற்றிப் போலீஸ்ல தகவல் சொல்லிட்டாங்க... இந்த விஷயம் பிரதமர் வரைக்கும் போயிடுச்சு.. அவர் ஒரு கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணி, எனக்கு ஆலோசனை கொடுத்தாங்க.. அவங்க கொடுத்த ஆலோசனையின் பேரில் நான் ஓரளவு நார்மல் ஆகிட்டேன்... இப்பவும் என் குழந்தையை என்னோட வச்சிக்கிட்டு, நான் மகளிர் சுய உதவி குழுவில் சேர்ந்து சின்னச் சின்னத் தொழில்கள் பண்ணிக்கிட்டே தபால் முறையில் என்னுடைய படிப்பை தொடரலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்... தயவுசெய்து கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்... தயவு செய்து யாரும் என்னை மாதிரி ஆகிடாதிங்க.. கவன ஈர்ப்பு செய்வதற்காக என்ன வேணா பண்ணலாம் தான்.. ஆனால் நம்முடைய சொந்த வாழ்க்கையின்னு ஒன்னு இருக்குது.. பார்க்கிறவங்க, பேசுறவங்க ஈஸியா பாத்துட்டு, பேசிட்டு ஒரு கமென்ட் போட்டுட்டு போயிடுவாங்க... ஆனால் நாம தான் நம்மைச் சுத்தி இருக்கிற விஷயங்கள் எல்லாம் நம்மோட செயலால் பாதிக்காத வகையில பார்த்துக்கணும்.. சேத்துக்குள்ள மூழ்கினா கூட எழுந்து வந்திடலாம், ஆனா புதைக்குழிக்குள் விழுந்தா எழுந்துக்கவே முடியாது... அப்படி ஒரு புதைக்குழி தான் இந்த ஆப்... எல்லாரும் நம்மைப் பார்க்கணும் அப்படிங்கற ஆசையில் யாரும் இந்தப் புதைக்குழிக்குள் மூழ்கி உங்க கிடைச்ச வாழ்க்கையைத் தொலைச்சு விடாதீங்க.... ப்ளீஸ்... கொஞ்சம் யோசிச்சுப் பார்த்துட்டு எதுவா இருந்தாலும் பண்ணுங்க... புகழ் இன்னைக்கு வரும், நாளைக்குப் போகும்... ஆனா உயிர் போனா வராது... அதனால கொஞ்சம் யோசிச்சு பாருங்க... எனக்கு இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல... என்னுடைய அனுபவத்தை ஷேர் பண்ணினேன் அவ்வளவுதான்... அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம்... யோசிச்சுக்கோங்க...” எனக் கூறிவிட்டு அவள் அங்கிருந்து நகர, இப்போது பிரதம மந்திரி தொடர்ந்தார்.

“ஜெனிதா... அந்தப் பெரிய பைல் ஒன்று இருந்துச்சே!! அதை ப்ளே பண்ணியாச்சா??” எனக் கேட்க, “சார்... அது வந்து... இனி தான் ப்ளே பண்ணனும்.... ஆல்ரெடி போட்ட வீடியோஸ்க்கே கொஞ்சம் எதிர்ப்பு வந்துச்சு... அதெல்லாம் மைல்ட் வீடியோஸ் தான்.. இது போட்டா எல்லாரும் என்ன பண்ணுவாங்களோ தெரியலையே!!” எனத் தயங்கினாள்.

அவளைக் கடிந்து கொள்ளும் விதமாகச் சற்றே குரலை உயர்த்திப் பேசிய பிரதம மந்திரி, “அதைத் தானே நீங்க முதலில் பிளே பண்ணி இருக்கணும் ஜெனிதா... அப்பதானே எல்லாருக்கும் ஒரு மாற்றம் வரும் இப்போ தூண்டப்பட்டதைக் காட்டிலும் அது மாற்றத்தைக்கொஞ்சம் வேகமா ஏற்படுத்தும் இல்லையா??” எனக் கேட்க, “சாரி சார்... எனக்கு இது தோணலை... இதோ இப்பவே ப்ளே பண்றேன்...” என்றாள் ஜெனிதா.

“சரி ஓகே... நீங்க சீக்கிரமா அந்த வீடியோவை பிளே பண்ணிட்டு, மொத்தமா முடிச்சிடுங்க..” என அவர் கூற, அங்கிருந்த அனைவரும் தாங்கள் வெளியே செல்லப் போவதை நினைத்து மகிழ்ச்சியடைந்தனர்.

வெளியே சென்றதும் தங்களுக்குக் கிட்டிய இந்த வித்தியாசமான அனுபவங்கள் குறித்துத் தனியே ஒரு காணொளி பதிவிட வேண்டும், அனைத்தையும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனப் பலவாறாக யோசித்தவாறே தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

ஆனால் அவர் கூறிய தன் உள்ளார்ந்த அர்த்தத்தை ஜெனிதாவும் ஜுபினும் மட்டுமே அறிவர். வினித் அந்தக் குறிப்பிட்ட காணொளியை ஒளிபரப்ப முற்படுகையில் “இதைப் பாக்குறதுக்குக் கொஞ்சம் தைரியம் வேணும் தான்... ஆனாலும் எல்லாரும் மனசை ஸ்திரப்படுத்திக்கோங்க... ஒருவேளை இந்த வீடியோவை பார்த்ததுக்கு அப்புறம் உங்களுக்கு ஏதாவது தோணுச்சு அப்படினா நீங்க வெளியே ஓப்பனாகப் பேசலாம், சண்டை போடலாம்...” அது மட்டுமில்லாம உங்க மனசுல தோணுறதை சொல்லலாம்... கடைசியா ஒரு சந்தோஷமான விஷயம்... இங்கே நடக்கிற ஆர்கியூமென்ட் எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணி, உங்க எல்லாருடைய போனுக்கும் ஃபார்வேர்ட் பண்ணுவோம் உங்களுக்குத் தேவையான விஷயத்தை நீங்க கட் பண்ணி, உங்க கிங்காங் ஆப்ல போட்டுக்கலாம்... என்ஜாய்..” என ஜெனிதா கூறவும் ஆளாளுக்கு ஆர்வமாகக் கவனிக்க ஆரம்பித்தனர்.

முதலில் காட்டப்பட்டது மூர்த்திதான்; அவனது லீலைகள் தான். ஒவ்வொருவரையும் அவன், “எலேய்.. செத்த பயலுவளா... நாரப் பயலுவளா... யாம்ல இப்படிப் பண்ணிட்டு அலையுதிய... என்னல பண்ணி வச்சிருக்கிய??” எனப் பேசிக் கொண்டிருக்கும் காட்சி காட்டப்பட்டது.

இப்போது அவன் புகழேணியின் உச்சத்தில் இருக்கிறான். இவ்வாறு சபை நாகரீகம் தெரியாத சற்றும் அறியாத தெரியாத, மூளைக்கு வேலை தராத, வாய்க்கு வந்ததை எல்லாம் பொதுவெளியில் பேசும் ஒருவன் எவ்வாறு இப்படிப் புகழேணியில் ஏறினான் என அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.

அது எவ்வாறெனில் தொடர்ந்து அவன் “எலேய்... லூசால நீங்க... என்னல பிரச்சனை உங்களுக்கு...” என்பது போன்ற காணொளிகளைப் பதிவேற்றிக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவனுக்குப் பழக்கமாயினர் ‘ரவுடி பேபி’ சத்யா, கண்ணம்மா என இன்னும் பலர்.

அவர்கள் அனைவரும் இவனை ‘மாமா... மாமா...’ என அழைக்க, இவனும் அதைப் பயன்படுத்திக் கொண்டு இஷ்டத்திற்குப் பிதற்ற தொடங்கினான். இதைத் தெரிந்து கொண்ட உள்ளூர் யூடியூப் சேனல் ஒன்று இவனை அழைத்துச்சென்று பேட்டி எடுக்கிறேன் பேர்வழி என்று சிந்தையில் ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீர் என்னும் தீய எண்ணங்களை, தீய வார்த்தைகளைக் குத்தி விட. இவன் பேசிய வார்த்தைகள் கழிவுநீர் ஆறாக ஓடியது.

பலருக்கு இதைப் பார்க்கையில் ஒரு நகைச்சுவையாக இருந்தது. ஏனென்றால் இது போன்ற வார்த்தைகள் அவர்கள் கேள்விப்பட்டிராத ஒன்று; மேலும் அவர்களால் வெளிப்படுத்த இயலாத ஒன்று... இவ்வாறு தங்களால் கூடாததை ஒருவன் பேசுகிறான் என்பதனால் அவர்கள் அதை ரசிக்கத் தொடங்கினர்.

நாம் காணும் காட்சிகளும் கேட்கும் வார்த்தைகளும் நம் சிந்தனையின் வெளிப்பாடு என்பதையோ சிந்தையைச் சிதைக்கும் என்பதையோ அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

தற்காலிக சந்தோஷத்திற்காக அவனது காணொளிகளை மீண்டும் மீண்டும் பார்க்கத் தொடங்கினர்; தன்னைச் சுற்றி இருக்கும் மக்களிடம் சற்றே பிரபலமாகத் தொடங்கினான் அவன். உள்ளூர் யூடியூப் சேனல் அவனிடம் பேட்டி எடுத்து சென்ற பிறகு அடுத்ததாக மாவட்ட அளவில் ஏதோ ஒரு சேனல் அவனைப் பேட்டி எடுப்பதற்காக வந்தது.

பேட்டி ஒருபக்கம் இருந்தாலும் அவ்வப்போது அவன் தனது கிங்காங் செயலில் காணொளிகளைப் பதிவேற்றம் செய்ய மறக்கவில்லை.

தனது வழக்கமான தொனியில் பேசி, அனைவரையும் ரசிக்க வைத்துக் கொண்டிருக்க, அவனுக்கு அடித்தது அதிர்ஷ்டம். தமிழ்நாட்டின் முன்னணியில் இருக்கும் யூடியூப் சேனல் ஒன்று வருடா வருடம் விருதுகள் வழங்கி, யூடியூப் திறமையாளர்களையும் வளர்ந்துவரும் கலைஞர்களையும் ஊக்குவிப்பது வழக்கம்.

இப்போதுதான் எங்குக் காணினும் மூர்த்தியின் பேச்சும் அவனது அரும்பெரும்(!) வார்த்தைகளும் காண கிடைக்கிறதே!! எனவே அவனுக்கும் அழைப்பு விடுத்தனர்.

சிறந்த நகைச்சுவை திலகமாக அவனுக்கு ஒரு விருதையும் அளித்து, மேடையில் தலைசிறந்த மாடல் ஒருவருடன் கேட் வாக் நடக்கும் வாய்ப்பையும் நல்கினர். அவனுக்கு இது எவ்வாறு இருந்ததோ தெரியாது ஆனால் இதைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்களுக்கும் அவனைப் போலவே மோசமான வார்த்தைகளைப் பிரயோகித்துக் காணொளியை பதிவேற்றினால் இவ்வாறாக அங்கீகாரம் கிடைக்கும் என ஒரு தவறான உதாரணத்தை மனதிற்குள் ஆழமாக விதைத்தது.

இத்தோடு நில்லாது அந்த விருது குறித்து, அந்த விருதிற்கான முகாந்திரம் குறித்து அடுத்தடுத்த பேட்டிகள் வர, புகழின் உச்சத்திற்குச் செல்ல தொடங்கினாள் மூர்த்தி.

அத்தோடு நிறுத்தி விடாமல் அவனுக்கு இருக்கும் பிரபலத் தன்மையைத் தங்களது அடுத்தடுத்த செய்கைகளுக்கு மூலதனமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தனர் பலர். அனைவரும் அவனையும் ஒரு நகைச்சுவை நடிகராக நினைத்துக்கொண்டு தங்களது குறும்படங்களிலும் வெள்ளித்திரை படங்களிலும் அறிமுகப்படுத்த முன்வந்தனர்.

இதன் மூலம் அவனின் மார்க்கெட் எக்கச்சக்கமாக உயர்ந்தது. ஒருபுறம் ஷூட்டிங், வேலைகள், இன்டர்வியூ எனப் பிஸியாக இருந்தாலும் பழையது போலத் தனது ரசிகர்களைக் குஷிப்படுத்த மறக்கவில்லை மூர்த்தி.

பொது இடங்களில், பொது மேடைகளில் அவனைச் சிறப்பு விருந்தினராக அழைப்பவர்கள், அங்கேயும் அவனை “மூர்த்தி ஐயா... கொஞ்சம் அந்தச் செத்த பயலுவளா நாரப் பயலுவளா சொல்லுங்களேன்...” எனக் கேட்டு, அதை ஊக்குவிக்கத் தொடங்கினர்.

இவற்றையெல்லாம் தவறு என அறியாமலேயே பலர் ரசித்துக் கைதட்ட தொடங்கினர்; கல்லூரிகளுக்கு அவனை அழைத்தாலும் இதுவே நிகழ்ந்தது. கூட்டத்தைத் திரட்டுவது எனத் திரட்டி அதை நிலைப்பதற்காக மூர்த்தியின் பேச்சை அனைவரும் ஆமோதித்தனர்.

இப்போது மூர்த்தி மூன்று திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டிருக்கிறான். அவருக்குப் போட்டியாக அவ்வப்போது அவனைத் திட்டி காணொளி பதிவிடுவது ‘ரவுடி பேபி’ சத்யாவின் பழக்கம். அது ஏன் என்றால் ஒரு காலத்தில் அவளுடன் நெருங்கிய நட்பில் இருந்த மூர்த்தி இப்போது பிரபலம் அடைந்து விட்டதால் அவளைக் கண்டுகொள்வதில்லை என்கிற வருத்தம் அவளுக்கு. மேலும் சில நேரங்களில் மூர்த்தியின் பேச்சு கண்ணம்மாவிற்குச் சாதகமாக இருப்பதால் சற்றே வருத்தம்.

சரி விஷயத்திற்கு வருவோம் இப்போது திரையில் ஒரு வீடியோ கால் போன்ற காணொளி காட்டப்பட்டது. திரை சில பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்றில் மூர்த்தியின் காணொளி, மற்றொன்றில் ‘ரவுடி பேபி’ சத்யா. மற்றொன்றில் கண்ணம்மா, மற்றொன்றில் ‘நமஸ்தேவுங்கோ’ கலா எனப் பல பிரபலங்கள் இருந்தனர். ஆனால் இவர்களில் முக்கியமானவர்களாக இருந்தவர்கள் மேலே குறிப்பிட்ட நால்வர் மட்டுமே.
 
Last edited:

29

முதலில் மூர்த்தியின் காணொளி ஆன் செய்யப்பட்டது. “எலேய்... என்ன பண்ணிட்டு இருக்கிய?? கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா??? என்னலாம் பண்ணிட்டு இருக்கிய?? எதுக்குல என்னையே பேசிட்டு கிடக்கிய?? நேத்து ஒருத்தன் அனுப்பி இருக்கான், ‘தலைவரே... நல்லா இருக்கியளா?? நல்லா தூக்கம் வருதா?? தூங்குததுக்கு வந்து காத்து வீசவா’ன்னு... தூங்கினா என்ன தூங்கிட்டேன் உனக்கு என்னால தூங்கினா பக்கத்துல உட்கார்ந்து இருக்கப் போறியா இல்ல அவன் பலவாறாகக் திக்கி பேசிக் கொண்டிருக்க அடுத்ததாக ரவுடி பேபி சத்யா ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேட்க தான் அப்படித்தான் இருக்கு இந்த மூர்த்திப் பயலுக்கு விருது கொடுத்தது அவனுக்கு என்ன தெரியும்?? என்ன பண்ணிட்டான்னு அவனுக்கு விருது கொடுத்து இருக்கீங்க?? நாலு கெட்ட வார்த்தை தெரியும்.. அடஹி வச்சு விதவிதமா மாத்தி மாத்தி பேசி ஒப்பேத்திட்டு இருக்கான்... அப்படிக் கெட்ட வார்த்தை பேச தெரிஞ்சாதான் விருது குடுப்பீங்க அப்படின்னா எனக்கும் தெரியும்.... எனக்கும் பேச வரும்... பேசிக் காட்டவா??? காட்டவா??? வரவர நல்லதுக்குக் காலமே இல்லாம போச்சு... அவன் எப்படிப்பட்டவன் என்னவெல்லாம் பேசுவான், என்னவெல்லாம் பண்ணுவான்னு எனக்குத் தெரியும்.. எனக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிஞ்சுது?? நீங்க அவனைக் கூப்பிட்டு விருது குடிக்க அதுலயும் மாடல்கூட நடக்கச் சொல்லுறீங்க, கேட்டு வாக்காம் கேட்டு வாக்கு... அவனும் ஈஈன்னு சிரிச்சிக்கிட்டு நடக்கான்... அப்படின்னா எனக்கும் ரெண்டு விருது கொடுங்கப்பா...”

இப்போது மூர்த்தி : “மக்களே... இந்த ‘ரவுடி பேபி’ சத்யாவா சொத்யாவா அவ சொல்லுததை யாரும் நம்பாதீங்க... அவ ஒரு பொறாமை பிடிச்சவா... என்னத்தையாவது பேசணும்னு பேசிட்டு கெடப்பா... அவளுக்குக் கொஞ்சம் மனநிலை சரியில்ல... கொஞ்ச நாளைக்கு முன்னாடி மண்டையில் அடிபட்டுடு... அதான் ஏதாவது பேசிட்டு கிடைப்பா... அதான் நல்லா இருந்த குடும்பத்தை விட்டு வெளியே வந்தா... நல்லா இருந்த புருஷன், பிள்ளைளின் குடும்பத்தை விட்டுட்டு இப்போ வந்து சிக்காவா சுக்காவா எவனோ ஒருத்தன் கூடத் தனியா இருக்கா...இவள்லாம் என்னைப் பத்தி பேசுதா??? நான் பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே போவேன்...”

அடுத்ததாக ‘ரவுடி பேபி’ சத்யா : “மூர்த்தி... என் வீட்டை பற்றிப் பேச உனக்கு யார் உரிமை கொடுத்தா?? உனக்கு என்ன அருகதை இருக்கு?? உன் பொண்டாட்டி நல்ல பேரல் மாதிரி இருக்கா... அவளுக்குச் சாப்பாட்டுக்கே நீ உழைக்கணும்... அதனால வாயை மூடிக்கிட்டு இரு என்ன... ஏன் என்னைப் பத்தி பேசுற?? நான் அழகா இருக்கேன்.. அதனால நான் இப்படியெல்லாம் பண்ணுறேன்.. புதுசா பெரிய இவன் மாதிரி ஒழுக்கம், குடும்பம் பத்தியெல்லாம் பேசுற?? உனக்கு என்ன இந்த ஒழுக்கம் எல்லாம் ‘சத்யா சத்யா’ன்னு என்னைச் சுத்தி வரும்போது தெரியலயாக்கும்... சும்மா பெயரும் புகழும் வந்துட்டுன்னு ஆடாத... சரியா... நீ பேசினது எல்லாம் என்கிட்ட ரெக்கார்டு இருக்கு.. லீக் பண்ணினென்னு வச்சுக்கோ... அவ்வளவுதான் சந்தி சிரிச்சிடும்... நீ நடிக்கிற படம், உனக்குக் கொடுத்த விருது அது இது எல்லாம் செல்லாக்காசாகி போகும்... பாத்துக்க...”

மூர்த்தி : ஏய் ரவுடி பேபி... ஏய்... உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா?? என்னையே பேசிக்கிட்டு இருக்கிய... ஒழுங்கா போய் உன் குடும்பத்தைப் பாரு... அந்த டிக்கா பய பெண்டாட்டி வந்த என்கிட்டே அழுதா... என் புருஷனை எப்படியாவது மீட்டுக் கொடுன்னு...

ரவுடி பேபி சத்யா : மக்களே... மக்களே... நான் சொன்னேன்ல இந்த மூர்த்தி ஒரு பொறுக்கி பையன்னு.. அதான் சரியா அவனோட வேலையைக் காமிச்சிட்டான் பார்த்தீங்களா?? யை டிக்கா பெண்டாட்டி இவன்கிட்டே ஏன் வந்து சொல்லணும்?? அவகூட இவன் தொடர்புள்ள இருக்கான்னு தானே அர்த்தம்?? அவன்னு மட்டுமில்ல எல்லாப் பொண்ணுங்களோடவும் இவனுக்குத் தொடர்பு இருக்கு... எல்லாரோடவும் நல்லா பேசுவான்... ஆனா வெளியே பெரிய இவன் மாதிரி நடிப்பான்.. இவனையும் நல்லவன்னு நெனச்சிக்கிட்டு விருது ஒண்ணுதான் கொறச்சல்... அந்தக் கண்ணம்மா ‘மாமா மாமா’ன்னு அவன் கூடத் தான் சுத்துறா... அவ பாரதியை தேடி வந்தாளா என்னன்னுலாம் தெரியலை...

இப்போது கண்ணம்மாவின் குரலும் காணொளியும் திரையில் ஒளிர்ந்தது. “இங்க பாரு ரவுடி பேபி... தேவையில்லாம என்ன பத்தி பேசாத சொல்லிட்டேன்... உன்னைப் பத்தி யாரு பேசினா?? நான் எவ்வளவு கஷ்டத்துல இருக்கேன் தெரியுமா?? என் பாரதியை காணாம நான் தவிச்சுப் போயிருக்கிறேன்... எங்க போனாலாவது என் பாரதி கிடைச்சிடுவானான்னு அவனைத் தேடி பைத்தியம் மாதிரி ஊரு ஊரா சுத்திக்கிட்டு இருக்கேன்... சும்மா சும்மா என்ன பத்தி பேசாத சொல்லிட்டேன்... நான் அந்த மூர்த்திய பாக்கவே இல்ல... எனக்கு அவனை யாருன்னே தெரியாது.. என்னை என்ன உன்ன மாதிரி நினைச்சியா?? என் மனசுல பாரதி தவிர யாருக்குமே இடம் கிடையாது... வார்த்தையை அளந்து பேசு சொல்லிட்டேன்..”

இப்போது ரவுடி பேபியின் திரை ஒளிர்கிறது. “புதுசா ஒருத்தி வந்து இருக்கிறாளே... கண்ணம்மா.... ஆங்... அவதான்... என்ன? என்னை மாதிரி கிடையாதா??? நான் என்ன மோசமான பொண்ணா?? என்ன பத்தி பேசுறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்குது?? நீ ரோட்டுல ஒருத்தனுக்கு முத்தம் கொடுத்ததும் ரோடு ரோடா பாரதி, பாரதின்னு பைத்தியம் பிடிச்ச மாதிரி அலைஞ்சதும் யாருக்கும் தெரியாதுன்னு நெனச்சியா?? அடியேய்... நீயே தான போஸ்ட் பண்ணி உன் மானத்தை வாங்கிக்கிட்ட.. யாருக்கும் தெரியாதுன்னு நெனச்சியா?? திருநங்கைகள் கிட்ட மரண அடி வாங்கினதை மறந்துட்டியா?? அதைவிட அன்னைக்குக் கொடைக்கானல் மலையில் உன்னைப் போட்டுப் பந்தாடினாங்களே... மறந்துட்டியா?? எல்லாத்தையும் மறந்துட்டு சும்மா சும்மா வாய்க்கு வந்தபடி பேசாதடி...

கண்ணம்மா : “ரவுடி பேபி... நான் மட்டும் அங்கே வந்தேன்... உன்னை வகுந்துடுவேன்... நீ வந்து பாத்தியா என்ன நடந்துச்சுன்னு.. சும்மா வாய்க்கு வந்தபடி பேசாத... எனக்குத் தெரியும்... நீ ஏன் இப்படிலாம் பண்றன்னு... இப்போ உனக்கு மூர்த்தி மேல பொறாமை... அதுக்கு ஏதாவது ஒன்னு பேசணும்.. அதான் என்னைப் பேசிக்கிட்டு இருக்கே.. நான் என்னவோ பண்றேன்! உனக்கு என்னடி? இன்னைக்கு யூடியூப்ல இருக்கற முக்காவாசி சேனலுக்குக் கன்டென்ட் கொடுக்கிறதே நான்தான்... என்னை வச்சு தான் அவனுக லட்ச லட்சமாகச் சம்பாதிச்சிட்டு இருக்கானுங்க... நான் மட்டும் இப்படி எல்லாம் இல்லாம இருந்தா அவங்களுக்கு யாரு கண்டெண்ட் கொடுக்கிறது?? கன்டென்ட் குயினே நான் தான்டி ... யூடியூபின் ராணி... என்னை வச்சு தான் அந்த யூடியூபே ஓடுது தெரியுமா??

‘ரவுடி பேபி’ சத்யா : ஆமா அப்படித்தான் ஊருக்குள்ள சொல்லிக்கிட்டாங்க... உன்னைத் தெரிஞ்சவங்க எல்லாம் நீ பைத்தியம்ன்னு சொல்லுறாங்க.. அந்தப் பாரதின்னு ஒருத்தன் இருக்கானோ இல்லையோ ஒருவேளை இருந்திருந்தா அவன் நீ ஒரு பைத்தியம்ன்னு தெரிஞ்சுதான் ஓடிப் போயிருப்பான்... உன்னை விட்டு ஓடிப் போன அவனைக் கண்டுபிடிக்க வக்கு இல்ல... இதுல யூடியூப் ராணியாம்!! நீயும் அந்த நமஸ்தேவுங்க கலாவும் இப்பவும் அந்த மூர்த்திக்கு வலக்கை இடக்கையா இருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதுன்னு நெனச்சிட்டு இருக்கீங்களோ?? எல்லாம் எனக்குத் தெரியும்... நீங்க எப்போ எப்போ எங்க எங்க போறீங்க, எங்க மீட் பண்றீங்க?? எல்லாம் எனக்குத் தெரியும்... எல்லாத்துக்கும் வீடியோ ஆதாரம் வச்சிருக்கேன்... ரிலீஸ் பண்ணுனேன்னு வச்சிக்கோங்க... அவ்ளோதான்... ஜாக்கிரதையா இருங்கடி...

இப்போது நமஸ்தேவுங்க கலாவும் கண்ணம்மாவுடன் சேர்ந்து கொண்டாள். “யாருடி அது... ரவுடி பேபின்னு... உன்னை எல்லாம் ஒரு பொருட்டாவே எடுக்கலை... இவ்ளோ ஏன்?? நீ ஒருத்தி இருக்கிறதே எங்களுக்குத் தெரியாது... ஏன் தேவையில்லாம என்ன பத்தி பேசிக்கிட்டு இருக்க? என்ன பத்தி பேசுறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்குது?? நான் பாட்டுக்கு வீடியோ போட்டுட்டு என் பாட்டுக்கு போய்க்கிட்டு இருக்கேன்... உனக்கு எங்கடி வந்து குத்துது? தேவையில்லாம என்னைப் பத்தி பேசிட்டு இருந்த மரியாதை அவ்ளோதான்..”

‘ரவுடி பேபி’ சத்யா : ஹாஹாஹ ஹா... வந்துட்டாளே உத்தம பத்தினி... இவ போன வாரம்கூடக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு ஒருத்தன் கூட வீடியோ போட்டு இருந்தா என்னன்னு கேட்டா மறுநாளே அது சும்மா ‘பிராங்க்;... ஷூட்டிங் போனேன் அப்படின்னு சொல்றா... இன்னொரு நாளு இன்னொருத்தன் கூட நின்னுக்கிட்டு, ‘இவன் என் மாமா... நான் இவனோட கமிட்டாகிட்டேன்..’ன்னு சொல்லிக்கிட்டு அதையும் அடுத்த நாளே பிராங்க்ன்னு சொல்லிக்கிட்டு சுத்துறா... என்ன ஆளு இவ??? என்ன புத்தி இருக்குது இவளுக்கு??” என மூவரும் மும்முரமாகச் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அடுத்ததாகக் களமிறங்கினார் தலைவர் மூர்த்தி.

“மக்களே... இந்த ரவுடி பேபி சொல்றதை எல்லாம் கேட்காதீங்க... அவ என்னடான்னா அந்த டிக்கா கூட இருந்தா... திடீர்னு ஒரு நாள் நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டோம், எனக்கும் அவனுக்கும் எதுவும் இல்ல அப்படின்னு சொல்லி அவன விளக்குமாறால் அடிக்கிற மாதிரி வீடியோ போட்டா... அவனும் இவளை மோசமா திட்டி ஒரு வீடியோ போட்டான்... அடுத்த ஒரு வாரத்தில் திரும்பவும் சேர்ந்துக்கிட்டு கப்பிள் வீடியோஸ் போட்டாங்க... அதுக்கு எடுத்து திரும்பவும் பிரிஞ்சு திட்டிட்டு இருந்தாங்க... ஆம்பளை துணை இல்லாமல் ஒரு பொண்ணால இந்த ஊரில் வாழ முடியாதா என்ன? நான் தனியா வாழ்ந்து காட்டுவேன் அப்படின்னு இந்த ரவுடி பேபி வீடியோ போட்டா.. அவனும் என்னை நல்லா யூஸ் பண்ணிக்கிட்டு கழட்டி விட்டுட்டா அப்படின்னு வீடியோ போட்டான்.. அதுக்கு அப்புறம் திரும்பவும் சேர்ந்துட்டாங்க... இவங்க பண்ற கூத்து எல்லாம் இப்படித்தான் இருக்கு...” இப்படியாக அந்த அந்தக் காணொளி பயணித்துக் கொண்டிருக்க, அனைவருக்கும் அடிவயிற்றில் ஒருவித ஒவ்வாமை தோன்றியது.

“தயவுசெய்து இதை நிறுத்தி விடுங்கள்..” எனக் கெஞ்சத் தொடங்கிவிட்டனர்.
 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom