அத்தியாயம் - 3
புடவி - வருடம் - 1891
மாசறு திங்கள்!
மகிழம் பூக்கள்!
மங்கும் மாலை!
மயங்கிய இரவு!
விருட்சமாய் நான்!
காற்றாய் நீ!
சூரியன் இருளென்னும் போர்வை கொண்டு இழுத்து மூடித் துயில் கொண்டிருக்கிறான். நிசியின் வனப்பிற்கு கதகதப்பு அளிக்கும் வகையில் நிலவுப் பெண் காய்ந்து கொண்டிருந்தாள். ஊதையோ கூதையோ ஓலமிட்டு விரைந்தோட, இரவு மூளிப் பொழுதாய் கோலம் கொண்டது.
அதில் ஒரு விருட்சத்தின் வரிவடிவம். கிளைகிளையாய்ப் படர்ந்திருந்திருந்த விருட்சத்திற்கு கிளைக் கதைகளும் அதிகம். ஒவ்வொரு விழுதுக்கும் பல கதைகள் போல. ஓராயிரம் விழுதுகள். ஈராயிரம் கதைகள். போவோர் வருவோர் புனைந்த பெருங்கதைகளால் அம்மரம் நுகர்வோரின்றி, அமங்கலச் சின்னமாய் கைம்பெண் நோம்பு நோற்று நின்றது.
தீடிரென பச்சைமரம் பற்றி எரிந்தது. துயில் கொண்டிருக்கும் ஆதவன் நடுநிசியில் மீண்டெழுந்துவிட்டானோ என்ற ஐயம் எழுகிறது மனதில். மரத்தின் மென்மையான பாகங்கள் மொத்தமும் எரிந்து முடிந்திருந்தது. ஊதைக்காற்றுக்கு சற்று எரிச்சல் ஏற்பட்டது, மேலெழும்பும் புகையைச் சுவாசிக்க முடியாமல். மூச்சுத் திணறல் அதிகரித்து, ஓலமிட, மேகக்கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் வானம் பொத்துக்கொண்டது. விருட்சத்தை நனைத்து செந்தழலுக்கு விடுதலையளித்தது. 'சுர்' என்ற ஒலியெழுப்பி அடங்கியது நெருப்பு. காயம்பட்ட மரம், பட்ட மரமாய்க் கருகி நின்றது. இலைகளும் விழுதுகளும் எரிந்து சாம்பலாய் மழையின் புனலில் கரைந்தோட, கரிக்கட்டை ஒன்று வேரூன்றி நின்றிருந்தது.
தன் பருத்த உடலை மண்ணைவிட்டு பெயர்த்தெடுத்தது அம்மரம். மெதுவாய்த் தன் ராட்சத வேர்களால் சாலையில் நடக்க ஆரம்பித்தது. வேகத்தைக் கூட்டி அது உருண்டு திரண்டு சென்றதில் பாளம் பாளமாக வெடித்தது மண்தரை. சற்று தூரத்தில் இருந்த கிணற்றுக்குள் சென்று அமிழ்ந்து போனது.
முகத்தில் முத்துமுத்தாய் வியர்வைப்பூ பூத்திருக்க அலறியடித்து எழுந்தாள் கொடி. புழுக்கம் அதிகமாய் இருந்தது. எழுந்து சென்று ஜன்னலைத் திறந்தாள். அவள் கனவில் வந்த ஆலம், பிரபஞ்ச ரூபத்துடன் காட்சியளித்தது. எரியவும் இல்லை. மழையும் இல்லை. விருட்சம் தற்கொலை செய்யவும் இல்லை. அனைத்துமே அவள் ஆழ்மனதின் அதீத கற்பனைகள். அதிகாலை ஐந்து மணி என்றது புலர்ந்திருந்த பொழுது. அந்த மரத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் கொடி. பாட்டி கூறிய பல கதைகள் மண்டைக்குள் ஓடியது.
அந்த மரத்தைப் பற்றிய யோசனையில் இருந்ததால் விடிந்ததுகூடத் தெரியாமல் இருந்தாள்.
"கொடி... கொடி..." என்று கத்திக் கொண்டே வந்தாள் மலர்.
இவர்கள் இருவரும் உயிர்த்தோழிகள். தூங்கும் நேரம் தவிர இருவரும் ஒன்றாய் சுற்றுவது வழக்கம்.
"ஏ... கொடி என்னடி ஆச்சு?.. பேயடிச்ச மாதிரி இருக்க!!!.." மலர்
"அந்த மரம்!..."
"இவ ஒருத்தி. வேற பொழப்பே இல்லயாடி உனக்கு.. அந்த மரம் அங்கதான் புள்ள இருக்கு நூறு வருசமா. அது உன்னைய என்ன செஞ்சிச்சு?.."
"ராத்திரி ஒரு கனவு வந்துச்சு.. அந்த மரம் பத்தி எரியுது.. அதுவா நடந்து போய் கிணத்துல விழுந்திருச்சு" என்று குரலில் நடுக்கத்துடன் உரைத்தாள் கொடி. உண்மையில் அந்தச் சம்பவம் அவளை ஒரு உலுக்கு உலுக்கியிருந்தது. பச்சை மரத்தில் அடித்த பசுமரத்தாணியாய் மனதில் பதிந்துவிட்டது. இந்தக் கனவு என்ன உணர்த்துகிறது அவளுக்கு!!..
"அடிக் கிறுக்கி.. பச்சை மரம் எப்படி பத்தி எரியும். உம்ம மூளை ஏன் இப்படி சண்டித்தனமா யோசிக்கிது?."
"கனவு பலிக்கும்னு சொல்லுவாங்களே. இந்தக் கனவுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கும்ல. எனக்கு பயமா இருக்கு மலர். ஆச்சி சொன்ன கதையெல்லாம் நினைச்சா பயமா இருக்குடி."
"ஏய்.. கொடி.. அதெல்லாம் இங்க இருக்க கிழவிகளுக்கு பொழுது போகாம கட்டிவிட்ட கதை."
"இல்லடி... எங்க ஆச்சி சொல்லுச்சு.. இந்த மரம் அறுவது வருஷத்துக்கு முன்னாடி சாமியா இருந்துச்சாம். பல பேருக்கு கல்யாணம் முடிச்சு வச்சிருக்காம். பல பேருக்கு குழந்தை பாக்கியம் கொடுத்துருக்காம்" என்றாள் கொடி.
"அட... கேடுகெட்டவைங்க... வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லி வச்சுட்டு செத்துப் போயிருச்சுக எல்லாம். புள்ள வேணும்னா புருஷன சுத்துனா அதுல ஒரு ஞாயம் இருக்கு" என்று அலுத்துக் கொண்டாள் மலர்.
"அந்த மரம் ஏதோ சொல்ல வருது.. எனக்கு சில சமயம் அந்த மரத்தைப் பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு. சில சமயம் அந்த மரத்தைப் பார்த்தா ஏதோ பயமா இருக்கு" என்று தன் மனதின் தெளிவின்மையை விளக்கினாள் அவள்.
"ஆமா... புள்ளையாரு அசரமரத்தடியில போய் உக்கார்ந்து ஒண்டிக்கட்டையா போயிட்டாரு. இந்த மரத்தை சுத்துனா ஒண்டிக்கட்டையா வேணா போகலாம். கல்யாணமும் ஆகாது. புள்ளையெல்லாம் பொறக்காது. நீ அந்த மரத்தைப் பத்தி நினைக்கிறதையே நிறுத்து."
"ஏய்.. சும்மா இரு.. எல்லாத்தையும் கிண்டல் பண்ணிக்கிட்டு. நெருப்பில்லாம புகையுமா?... ஏதோ நடந்திருக்கு.."
"ஒண்ணும் நடக்கல... இருவது வருஷத்துக்கு முன்னாடி, இந்த மரத்துல ஒருத்தி தூக்குப் போட்டு தொங்கிட்டா.. அதனால இந்த மரமும் ராசியில்லாத மரமா போச்சு.. ஆமா வாழாம செத்த அவ, யாரு பக்கத்துல போனாலும் வாழ விடுறதில்லையாம். இப்படித்தான் சொல்லிக்கிட்டு திரியிறாங்க" என்றாள் மலர்.
"யாரோ ஒருத்தி தூக்குப்போட்டு செத்தா மரம் என்னடி செய்யும். அதுதான் அந்த மரம் கோவமா இருக்கோ? அதுதான் என் கனவுல வந்திருக்கு."
"அது சரி... அப்பறம் நீ ஏன் அந்த மரத்தை பாத்து பயப்புடுற."
"என்னமோ தெரியல. அந்த மரத்தை பார்க்கும் போதுலாம் மனசுல ஏதோ ஒரு உணர்வு. அது என்னனு சொல்லத் தெரியல."
"ஏய்.. நீ ஏன் இந்த கிழடுக சொல்றதெல்லாம் நம்புறியா?" என்றாள் கேள்வியாக.
"தெரியல டி... ஆனா அந்த மரத்தை பார்த்தா பயமா இருக்கு."
"எனக்கென்னமோ அதுல தூக்குப் போட்டு செத்தவ, ஆம்பளைங்களுக்கு மட்டும்தான் எதிரின்னு தோணுது. நமக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு இருக்கு. நம்மள கொன்னா அதுக்கு என்ன லாபம். எதுவும் புரியாம ஒரு கதையைத் திரிச்சு விடுறாங்க. நான் வேணா ஒன்னு செய்றேன். ஒருநாள் ராத்திரி அந்த மரத்துக்கு பக்கத்துல போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன். அப்போ உனக்கு பயம் போகுதான்னு பாக்கலாம்" என்று கூறிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பினாள்.
அதன்பிறகு வழக்கம் போல் ஊரையே சுற்றிவிட்டனர்.
*****************
********
***
அந்த ஊர் கோதையூர். பெயருக்கேற்றாற் போல் மங்கலம் நிறைந்திருக்கும் அந்த ஊரில். ஊரின் பெண்கள் அனைவரும் மஞ்சள் குங்குமத்துடன் மங்கலகரமாக வலம் வருவார்கள். அவர்களை பார்த்துவிட்டு ஒரு காரியம் செய்ய சுழி போட்டால் நிச்சயம் நிறைவேறிவிடும். மஞ்சள் பூசிய முகமும், அரக்கு நிற வட்டப் பொட்டும், மனம் கமழும் வெள்ளை மல்லிகையும் எங்கும் நிறைந்திருக்கும். இந்த மங்கலத்திற்கு பின்னணியில் மாபெரும் காரணம் ஒன்றும் இருக்கிறது.
ஊரின் நடுவில் அலங்கார மாளிகை ஒன்று. அதன் மதில் சுவரின் பிரமாண்டம் அந்த வீட்டின் செல்வ செழிப்பை உணர்த்தியது. காலம் காலமாக அரச பரம்பரையைச் சேர்ந்த குடும்பம் அது.
குடும்பத்தின் அங்கத்தினர் அனைவரும் மேசையில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தனர். இது அவர்கள் குடும்பத்தின் வழக்கம். அந்த குடும்பத்தலைவர் தேவர் பிள்ளை. குடும்பத் தலைவி கோகிலம் அம்மையார். அவர்களுக்கு ஒரே வாரிசு. அவன் செழியன். வாரிசில்லாமல் தவித்து தவமிருந்து பெற்ற பிள்ளை அவன். அதனால் அதீத செல்லம். அன்னையிடம் மட்டுமே. தந்தையிடம் செல்லம் செல்லுபடியாகாமல் போனது. ஊரில் உள்ள அனைவருக்கும் அவனின் தந்தையைக் கண்டால் பயம். அந்த ஊரின் ராஜா அவர். அவனுக்கும் அதே பயம் இருக்கிறது. அன்னையின் செல்லம் அவனை தவறான பாதையில் இட்டுச் சென்றதில்லை. நல்ல பிள்ளைதான்.
அனைவருக்கும் கோகிலம் அம்மையார் பரிமாறிக் கொண்டிருந்தார். இவர்கள் மூவருக்கு வேலைப் பார்க்க பல நூறு ஆட்கள்.
"அம்மாடி... இன்னைக்கு அந்த தரகர் வரதா சொல்லிருக்காரு. நம்ம புளளைக்கு சில பெரிய இடத்து சம்பந்தம் வந்திருக்காம். வந்தா என்னைய மில்லுல வந்து பாக்க சொல்லு" என்றார் அவர். மகனின் முகத்தில் நொடிக்கும் குறைவாய் நிகழ்ந்த மாற்றத்தையும் கணிக்கத் தவறவில்லை. அதுவரை கந்தன் சொன்னதில் பொய் இருக்குமோ என்று எண்ணினார். ஆனால் இப்பொழுது உறுதியாகிவிட்டது.
"அப்பா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான் அமைதியாக. பெற்ற இருவருக்கும் இது அதிர்ச்சிதான். மகன் தந்தையின் சொல்லை இதுவரை மீறியதில்லை. அவன் பேச வேண்டும் என்று மட்டும்தான் கூறியிருக்கிறான். இருந்தும் அவன் கூறிய சொல்லின் அழுத்தமும் வலிமையும் பல சங்கதிகள் உரைத்துவிட்டது இருவருக்கும்.
அவர்களின் அதிர்ச்சியைப் பொருட்படுத்தாது, "சாப்பிட்டு முடிச்சோன பேசலாம்ப்பா. இப்போ சரிவராது" என்று அடுத்த அஸ்திரத்தை தொடுத்தான்.
தேவர்பிள்ளையின் முகத்தில் ருத்ரம் தாண்டவமாடியது. பின் அவரின் சொல்லுக்கு உரிச்சொல் கூறும் கூட்டங்களுக்கு நடுவே எதிர்ச்சொல் கூற விழையும் மகனின் மேல் சீற்றம் பொங்கி வழிவதில் பிழையில்லையே.
அவர் பதிலேதும் கூறவில்லை. அவனும் உணவில் கவனமாய் இருந்தான்.
கோகிலம் அம்மையார் மனதில் பெரும் புயல் ஒன்று அடித்துக் கொண்டிருந்தது.
சாப்பிட்டு முடித்ததும் வரவேற்பறையில் இருவரும் அமர்ந்திருந்தனர்.
அவனே சொல்லட்டும் என்று அமைதி காத்தார் தேவர் பிள்ளை.
"அப்பா... நா கொடிய கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்.."
இதைக் கேட்டதும் அவர் மறுப்பைப் தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவர் வேறொரு வினாவை அவன் முன் வைத்தார்.
"ரொம்ப நல்லது தம்பி. அவ எந்த ராசா வீட்டு ராசகுமாரி தம்பி? பொண்ணு கேட்டு அனுப்பிவிடுறேன். விலாசம் சொல்லு" என்றார்.
"ராஜா வீட்ல மட்டும்தான் ராஜகுமாரி இருக்கணுமா அப்பா?" என்று எதிர்வினா தொடுத்தான் அவன்.
"நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்னா ராசா வீட்டு மகளா இருக்கணும்" என்றார் அழுத்தமாக.
"என்னோட முடிவை நான் மாத்திக்கிறதா இல்லை" என்றான் அறிவிப்பாக.
அடம் பிடிக்கும் மகனுக்கு, அறிவுரை கூறுவதால் இந்த சிக்கலை களைய முடியாது என்று புரிந்து கொண்டார்.
"அவ்வளவு தூரம் ஆயிருச்சா.. யார் அது?" என்றார் அடுக்கப்பட்ட கோபத்துடன்.
அவருக்கு அரட்டி உருட்டி மிரட்டியெல்லாம் பழக்கமில்லை. நச்சென்று உச்சந்தலையில் அடிப்பது போல் நாலு வார்த்தையில் நடுங்க வைத்துவிடுவார். இவரின் குணம் அறிந்த கோகிலத்தின் மனிதில் புயல் சுழன்றடித்தது.
"நம்ம வீட்ல வேலை செய்ற குமரன் வீட்டு ராஜகுமாரிப்பா?" என்றான் மகன். அவருக்கு அவனும் சளைத்தவனல்ல என்று நிறுபணம் செய்தான்.
சில வினாடிகள் அமைதி. கோகிலம் பயந்து நடுங்கி நின்றிருந்தார். அவருக்கு நன்றாக தெரியும். இதற்கு தன் கணவனின் பதில் என்னவாக இருக்கும் என்று.
"ராசா வீட்டுக்கு வேலை செய்ய வந்துட்டாலே அவன் வீட்ல உள்ள எல்லாரும் வேலைக்காரங்கதான். நீ ராசா வீட்டு புள்ள. உனக்கு அந்த புள்ளைய புடிச்சிருக்குன்னா..... கூடவே வச்சுக்கலாம்... பொண்டாட்டியா இல்ல.. புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். இது ராசாவுக்கு புதுசு ஒன்னும் இல்ல" என்று சொன்னவர், துண்டை எடுத்து உதறி, தன் மகனின் தலையில் தலைப்பாகையாக கட்டினார்.
"இந்த மரியாதை இந்த ஊர்லே உனக்கு மட்டும்தான் இருக்கு. அது நிலைச்சு இருக்கணும். நான் சொல்றத கேளுன்னு கெஞ்ச மாட்டேன். நான் நினைக்கிறதை உன்னை செய்ய வைப்பேன்."
அவன் அதிர்ந்து நின்றான். அவர் எதிர்க்கக்கூடும் என்று நினைத்திருந்தான். ஆனால் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை.
"அப்போ என்னோட சந்தோஷம்?" என்றான் குரலில் வருத்தத்துடன்.
"அதைப் பத்தி முன்னாடியே யோசிச்சிருந்தா, இப்படி வந்து நின்னிருக்கமாட்ட" என்று அவனிடம் தன் பிடியைத் தளர்த்தாமல் பதிலுரைத்தவர், அடுத்த காரியத்தை செய்யப் புறப்பட்டார்.
கோகிலம் சிலையாய் சமைந்து நின்றிருந்தார். பெற்ற பிள்ளையிடம் உரைக்கும் சங்கதியா இது. அவர்கள் பரம்பரையில் இது ஒன்றும் புதிதில்லைதான். அதை தவறென்றும் எவரும் கூறமாட்டர். ஆனால் அவர் கணவன் சற்று கரடுமுரடானவராக இருந்தாலும், இந்த விஷயத்தில் இதுவரை தவறியதே இல்லை. அதை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்வார். இவ்வளவு ஏன். அந்த ஒன்றுதான் அவரை அவருடன் பிடிப்புடன் வாழ வைத்தது என்றும் கூறலாம். பிணக்குள் இல்லாமல் இல்லை. எதிர்த்து ஒரு சொல் சொல்லவும் உரிமையில்லை. ஆனால் அனைத்து துக்கங்களையும் இந்த ஒற்றை விஷயம் சரிகட்டிவிடும். ஆனால் இன்று....
தன் வயிற்றில் உதித்த பிள்ளைக்கு அப்படி ஒரு வழியை தெரிவு செய்து கொடுத்திருக்கிறார் அந்த உத்தமர். இதுவரை அவரை பிடிக்கும் என்ற போர்வைக்குள் தன்னையே பிடித்துவைத்திருந்த, முலாம் பூசப்பட்ட ஒரு காரணம். இன்று பொய்த்து போய் பிரபஞ்ச ரூபம் எடுத்து நிற்கிறது.
செழியன் சிலையாய் அமர்ந்திருந்தான்.
"செழியா.... இந்த அம்மா சொல்றத கேப்பியா?"
"நீ என்னம்மா சொல்லப் போற. அதான் உனக்கும் சேர்த்து அவர் பேசிட்டு போய்ட்டாரே" என்று தனது இயலாமையை அன்னை மீது கொட்டினான்.
"அந்த புள்ளையோட நல்லா வாழணும்னு நீ நினைக்கிற. ஆனா ஒரு விஷயம் முடிவு கட்டிக்க. அந்த புள்ள வாழணும்னு நினைச்சா, அவள மறந்துட்டு அப்பா சொல்றத கேளு" என்று கூறிவிட்டு சென்றார்.
***************
பருவ மழை, வசந்த காலம், வற்றாத ஜீவநதி, கோடையில் மழை,
மண் வாசனை, மரகத வயல்வெளிகள்,
புல்லினங்களின் மெல்லிசைகள்,
கூதிரின் மென்னூதை காற்று,
உதிர்ந்து உரமான இலைகள்,
நன்னீர் சூழ் நிலங்கள்,
தூர் வாரப்பட்ட ஏரிகள்,
உயிர் உரமூட்டப்பட்ட நன்செய்கள் என்று ஊர் முழுக்க செழிப்பாய் இருந்தது.
இவ்வாறு அழியா பசும் நினைவுகளை பகலென்னும் பொழுதில் சுமந்திருக்கும் இடம் இப்பொழுது சூன்யமாக தெரிந்தது. இரவை எழுதிய தூரிகை கையெழுத்தாய் ஒற்றை நிலவை வெண்மையில் எழுதிவிட்டது. வெளிச்சம் நன்றாகவே இருந்தது போல் இருந்தது. நிலவின் ஒளியில் மரத்தின் வடிவம் சுந்தரமாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் அச்சுருத்துவதாய் இருந்தது.
ஒரு பெண் அந்த மரத்தின் அடியில் அமர்ந்திருந்தாள். உயிர் வாயு தாராளமாக இருந்த போதிலும் மூச்சு முட்டுவது போல் ஓர் உணர்வு.
திடீரென காற்று அதிவேகமாக சுழன்றடிக்க, மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தது. மரத்தில் அன்று பூத்திருந்த புது மலர்கள் அருவி போல் கொட்டிட, மனதை மயக்கும் புது மனம் ஒன்று தோன்றியது.
மரத்தை சுற்றியிருந்த கழனியில் யாரோ ஓலமிடும் சப்தம் மனதைப் பிழிந்தது. நேரம் செல்ல செல்ல அந்த ஓலம் அதிகமாகி, காற்றுக்குள் ஊடுருவல் செய்து செவிப்பறையைக் கிழித்தது.
விழிகள் பிதுங்கி நின்றிருந்தாள் அந்த பெண். அந்த பெண்ணை யாரோ அந்தரத்தில் தூக்கியடித்தனர். பின் காற்றுடன் சுழன்றிடிக்கப்பட்டாள் அவள். மரத்திலிருந்து ஒரு கிளை உடைந்து அவள் கழுத்தினுள் இறங்கியது. அவளின் மரண ஓலம் கேட்காதபடி காற்று அதீத ஒலியெழுப்பியது.
அலறியடித்து எழுந்தாள் கொடி. மீண்டும் கனவு போல.
எழுந்து சென்று ஜன்னல் அருகில் நின்றாள். நேற்றைய தினம்போல் மரம் அமைதியுடன் இருந்தது. கூதிரின் மென்னூதைக் காற்று ஜன்னல் வழியே உள் நுழைய, அவளின் திரேகம் சிறிது நடுங்க ஆரம்பித்தது. விடிந்ததும் மலரைக் காண அவள் வீட்டுக்கு சென்றாள்.
"மலரு... மலரு" என்று பதறிக்கொண்டே அவள் வீட்டிற்கு ஓடினாள்.
"கொடி.. என்னடி ஆச்சு.. ஏன் இப்படி ஓடி வர்ற.."
"இல்லடி.... திரும்ப கனவு வந்துச்சு.."
"உனக்கு வேற பொழப்பே இல்லையா? அந்த மரத்த என்னைக்கு மறக்குறியோ அன்னைக்குதான் நல்லாயிருப்ப சொல்லிட்டேன்" என்றாள் கோவமாக.
"நான் சொன்ன மாதிரி இன்னைக்கு ராத்திரி நான் அந்த மரத்துக்குப் பக்கத்துல போயிட்டு வரேன்... அப்போவாச்சும் நம்பித் தொலை" என்று அவளைக் கடிந்து கொண்டாள் அவள்.
"இல்ல..இல்ல.. நாம போகவே கூடாது" என்று கூறி கனவில் வந்த மொத்தத்தையும் கூறினாள்.
அதைக் கேட்ட மலரும் சற்று அரண்டுதான் போய்விட்டாள்.
"சரி விடு.. பயப்படாத.. நாம போக வேண்டாம்.. நீ சொல்ற கதையைக் கேட்டா எனக்கும் பயாமாத்தான் இருக்கு."
"கொடி.. நானே உன்னை பார்க்க வரணும்னு நினைச்சேன். செழியன் அண்ணே உன்னைப் பாக்கணும்னு சொல்லுச்சு. ஏதோ பிரச்சினை போல வீட்ல.." என்று மலர் கூறியதும் கொடியின் முகத்தில் யோசனை படர்ந்தது.
"ஏய்... என்னடி சொல்ற?... நான் எப்படி போய் பாக்க முடியும்?."
"உனக்கும் அவரை ரொம்பவே புடிக்கும்னு எனக்குத் தெரியும். போய் பாருடி. இல்ல வாழ்க்கையே திசை மாறிப்போனாலும் போயிரும்" என்றாள் மலர்.
அவளும் நிதர்சனம் அறிந்திருந்தாலும், தனது தோழிக்கு ஏதேனும் நல்லது நடந்துவிடாதா என்ற ஏக்கம்தான்.
"ஊர்க் கட்டுப்பாட்டையெல்லாம் மீறி எப்படிடி போய் பாக்குறது?. எனக்கு பயமா இருக்கு.."
"உனக்கு வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னா சரியா?" என்று அவள் கேட்ட கேள்வியே கொடியைக் கூராய் ஆய்ந்துவிட்டது.
"இன்னைக்கு சாயங்காலம் உன்னைக் கோவிலுக்கு கூட்டுட்டு வர சொல்லுச்சு எங்கிட்ட. நாம ரெண்டு பேரும் போய் பாத்துட்டு வரலாம்" என்றாள் அவள்.
அந்த ஊரின் கட்டுப்பாடுகள் அவை. செழியன் உயர்ந்த சமூகத்தில் பிறந்தவன். உண்மையில் மனித சமூகம் மட்டுமே புடவியில் உயர்ந்ததாய் இருந்தது. இந்த பாழாய்ப் போன மூளை என்று சிந்தனை செய்ய ஆரம்பித்ததோ, அன்று இந்த பிரிவினைகளும் வந்துவிட்டது போல. மனிதனின் இன்பம், துன்பம் அனைத்திற்கும் காரணம் மூளையே. பல இடங்களில் மனதைத் தின்று விடுகிறது மூளை.
கொடியும் செழியனும் நேரில் சந்தித்து உரையாடியதில்லை. ஆனால் இருவரும் பார்வையில் உள்ளப் பரிமாற்றம் செய்து கொண்டது என்னவோ உண்மை. அவர்கள் தம்பதியராய் சேர்ந்து வாழும் நாளைப் பற்றியெல்லாம் அவள் எண்ணியதில்லை. அதை நினைக்கவே அவளுக்கு பயமாக இருக்கும்.
தேவர் பிள்ளை தனது வேலையாள் குமரனை அழைத்தார்.
குமரன் வந்ததும், அவரை அமரச் சொல்ல, அவர் கீழே சென்று அமரப் போக, தடுத்து நிறுத்தினார் தேவர்.
"ஐயோ.. குமரா நீ போய் கீழ உக்காரலாமா? இங்க வா. இதுல வந்து உக்காரு" என்று தான் அமர்ந்திருக்கும் நாற்காலியை விட்டு எழுந்துகொண்டு வழிவிட, குமரன் பதறிவிட்டார்.
"ஐயா!!!. என்னங்கய்யா இதெல்லாம்?. நீங்க இந்த ஊரோட மகராசன். என்னைப் போய் உங்க நாக்காலில உக்கார சொல்றீக. நீங்க உங்காருங்க ஐயா" என்று அவன் கடிந்து கொண்டான்.
"அப்படியா சொல்ற?. உனக்குப் புரியுது. ஆனா உன்னோட மகளுக்குப் புரியலையே" என்றார் ஏற்ற இறக்கத்துடன்.
"என்னய்யா சொல்றீங்க! அவ என்ன செஞ்சா? எனக்கு ஒண்ணும் புரியலைங்களே" என்றான் குமரன்.
"ராசா வீட்டு மருமகளாகனுமாம் உன்னோட பொண்ணுக்கு" என்று அவர் கூற, குமரன் திடுக்கிட்டார்.
"அது அவளுக்கு ஏதோ வயசுக் கோளாறு. நான் உன்னை நம்புறேன். அதனால உன் பொண்ணுக்கு எடுத்து..... இல்ல... அது சரிவராது. வேற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிரு. என் மகனோடதான் வாழணும்னு ஆசைப்பட்டா வாழலாம்... பொண்டாட்டியா இல்ல.." என்று வக்கிரத்தை வஞ்சனையின்றி வசைமாரியாக பொழிந்துவிட்டு சென்றார்.
*******
கொடி கோவிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அன்னையிடம் உரைத்துவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டவளை குமரன் வழிமறித்து நின்றார்.
"எங்க கிளம்பிட்ட கொடி?" என்றார் அடக்கப்பட்ட கோபத்துடன். எவ்வளவு முயன்றும் வார்த்தைகளில் கடுமை குடியேறியதைத் தடுக்க இயலவில்லை.
"கோவிலுக்கு அப்பா. மலர் வரேன்னு சொன்னா. அவ கூடதான் போறேன்." அவரின் அதிர்ந்து ஒலித்த குரலில், சற்றே பயந்தாலும், பிசிறில்லாமல் பதிலுரைத்தாள்.
"அம்புட்டு அழகா பொய் சொல்ல பழகிட்ட போல."
"நான் ஏன் பொய் சொல்லணும்ப்பா?."
"சரி.. இப்போ இப்படி கேக்குறேன். யாரைப் பார்க்க போற?" என்றதும் சற்றே திடுக்கிட்டாள்.
குமரன் கொடியை அடித்து துவைத்துவிட்டார். கொடியின் அன்னை மங்களம் வந்து தடுத்துப்பார்த்தார். அவருக்கும் அடி விழுந்தது. மேலும் ஏச்சுக்களும் பேச்சுக்களும் என்று ஒரு யுத்தகளமாய் காட்சியளித்தது அவர்களது வீடு. மலர் வந்து பார்த்துவிட்டு ஒன்றும் செய்ய இயலாமல் சென்றுவிட்டாள்.
"ராசா வீட்டு பிள்ளை மேல ஆசப்படலாமா? உன்னைப் பெத்ததுக்கு என்னைத் தலை குனிய வச்சிட்டியே. ராசா வீட்ல எனக்கு எம்புட்டு மரியாதை தெரியுமா? உன்னால அம்புட்டும் போச்சு. ஒரு அப்பனா கேட்கக்கூடாத வார்த்தையை நான் கேட்டுட்டேன். சொல்லவே நாக்கு கூசுது. ராசாவோட மவனுக்கு கூ.... " என்று மிச்சத்தை முடிக்க முடியாமல் அழுதார் அவர்.
வாங்கிய அடியால் கொடி துவண்டு சுருண்டு போய்கிடந்தாள். நெஞ்சில் விழுந்த அடி ஆறா வடுவாய் வாழ்க்கை முழுக்க வரப்போகிறது. எத்தனை முறை மூளை எடுத்துரைத்தாலும் மனம் கேட்கவில்லை. செய்த தவறுக்கு தண்டனையாக இப்பொழுது தற்கொலை செய்து கொள்ளட்டும் மனம். அது இருந்தால்தானே கண்டதையும் பிதற்றி, மூளையின் நியாயங்களை ஆசை கொண்டு துடைத்தெறியும். வேண்டாம். இனி அந்த பாழாய்ப்போன மனம் வேண்டாம் என்று மனதிற்குள்ளே அரற்றி உருட்டினாள். இனி நடப்பது நடக்கட்டும் என்று முடிவெடுத்தாள்.
அன்று முழுக்க அவர்கள் வீடே மயான பூமியாய் காட்சியளித்தது. உணவு உண்ணவும் மறந்திருந்தனர். கொடி ஜன்னலோரம் அமர்ந்திருந்தாள். மீண்டும் அந்த மரம் நடுநிசியில் வரிவடிவமாய் தெரிந்தது. இப்பொழுது அது அவளுக்கு ஆறுதல் சொல்வதுபோல் இருந்தது.
மறுநாள் விடியலில் குமரன் எழுந்து உறுமிக் கொண்டிருந்தார்.
"இன்னைக்கு சாயங்காலம் கொடிய பொண்ணு பார்க்க வராங்க. எல்லாரும் தயாரா இருங்க" என்றார் அறிவிப்பாய். இது அவள் எதிர்பார்த்ததுதான். அதனால் அமைதியாகவே இருந்தாள் கொடி.
அவளைத் தயார் செய்ய மலர், கொடியின் வீட்டிற்கு வந்தாள்.
"கொடி உயிரோட வாழணும்னா, அவளுக்கு நல்லத எடுத்துச் சொல்லு" என்றார் மலரிடம். கட்டளையாகத்தான். இதைச் செய்ய வேண்டும் என்ற தொனி குரலிலிருந்து வெளிப்பட்டது.
மாப்பிள்ளை வீட்டினர் அனைவரும் வந்தாயிற்று. மணப்பெண் கோலம் பூண்ட பின்னும், அவள் முகத்தில் அப்பட்டமாக அப்பியிருந்த குழப்பம் மட்டும் அழிவதாய் இல்லை. தன் காதலை புதைக்குழியில் புதைத்து, மூளியாய் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் மங்கலத்தின் மறுவுருவமாய் மருவி நின்றிருந்தாள் சபையில். சுபமுகூர்த்த நேரத்தில் வெற்றிலை பாக்கு மாற்றி, திருமணத் தேதி நிச்சயிக்கப்பட்டது. அதுவும் அடுத்த சுபமுகூர்த்த தினத்தில் என்று லக்ன பத்திரிகை எழுதினர். அலங்கார மூளியாய் அமர்ந்திருந்தாள் கொடி.