Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel


அப்படியா ! அந்த டாக்டர் பொண்ணா உன்னுடைய நிறுவனத்திற்கு வந்தது, உன் மேல் அந்த பெண்ணிற்கு அவ்வளவு அக்கறையா? அந்த பொண்ணை பார்த்த ரொம்ப நல்ல பொண்ணா தெரியுது தம்பி, தான் டாக்டர் என்ற கர்வம் துளி கூட இல்லாம எல்லோரிடத்திலும் ரொம்ப அன்பாக பழகுது, உன்னை தேடி உன் இடத்திற்கே வந்தது என்றால் உன் மீது அந்த பெண்ணுக்கு ஏதாவது ஆசை இருக்குமோ? என்று நாசுக்காக கேட்டாள். அவளும் பெண் அல்லவா? ஒரு பெண்ணின் மனது பெண்ணிற்கு தான் புரியும் என்பதற்கேற்ப மிகவும் சரியாக ஊகித்தாள். அம்மா, நீ வேற, எதையாவது தப்பா சொல்லதேம்மா! அந்த பெண் எவ்வளவு அழகாக இருக்கிறாள், டாக்டரும் கூட, அவளை மணம் புரிய நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள். அவளுடைய நிலை வேறு , என்னுடைய நிலை வேறு, நான் எதோ இந்த சின்ன நிறுவனத்தை நடத்தி வருகிறேன், நான் மாநிறத்தை விட கூடுதலான நிறம், என் மேல் எல்லாம் எப்படிம்மா அவளுக்கு ஆசை வரும்? என்று ஏக்கத்துடன் கேட்க, "ஏம்பா ராசா !", உனக்கென்ன குறைச்சல்? களையா இருக்கே! யார்கிடடேயும் அடிமையாக வேலை செய்யாமல் சொந்தமா நிறுவனம் வைத்து அதை வெற்றிகரமாக நடத்துறே, நல்லாவும் படிச்சிருக்கே! உனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை, இதைவிட வேறென்ன தகுதி வேண்டும். அந்த பொண்ணே உன்கிட்டே வந்து உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னா, நீ சம்மதம் சொல்லிடு தம்பி, உன்னை கல்யாணம் பண்ணிக்கறத்துக்கு அந்த பொண்ணு தான் கொடுத்து வைத்திருக்கணும்! என்று அந்த தாய் தன் பையனை புகழுந்து பேச, உனக்கு உன் பிள்ளை எப்போதும் ஒசத்திதான்! என்று கூறிக் கொண்டே தன அறையை நோக்கி சென்றான். தன் அறையை சென்று படுத்ததும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. கயலையே நினைத்துக் கொண்டிருந்தான். திரும்ப திரும்ப அவனுக்கு, அவள் ஏன் என்னை தேடி வந்தாள்? என்ற கேள்வியே மேலோங்கி நின்றது. ஒரு வேளை அம்மா கூறியபடி, என்னை விரும்பிகிறாளோ? அடுத்த தடவை அவளை பார்க்க நேர்ந்தால் இதை எப்படியாவது தெரிந்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணிக் கொண்டே வெகு நேரம் விழித்துக் கொண்டிருந்தான். பின் எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. கபீர் கொண்டு போய் கொடுத்த கோப்பை திறந்து பார்த்த உமர் அலிக்கு கோபம் தலைக்கேறியது, அவன் தன் கையை மடித்து டீ ப்பாயின் மீது தட்ட, அங்கிருந்த செய்தி தாள்களெல்லாம் பறந்தது. " இதனால் தான் மும்தாஜை மணக்க மறுக்கிறானா? என்று மனதிற்குள் கொந்தளித்தவராக, அதில் உள்ள தகவல்களை எல்லாம் முழுதுமாக படித்து முடித்தார். அதில் சுஹேல் தங்கி இருக்கும் இடம், அவன் வேலை செய்யும் மருத்துவமனையின் பெயர் மற்றும் கூடுதல் தகவலாக அன்று அவனும் துர்காவும் திரையரங்கத்தில் ஒன்றாக அமர்ந்து பாப்கார்ன் சாப்பிட்டதையும் புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தார்கள், துர்காவை பார்த்ததும் உமர் அலிக்கு பற்றிக் கொண்டு வந்தது. இந்த பெண், என் பெண்ணை விட எந்த விதத்தில் ஒசத்தி? என் பெண்ணின் அழகுக்கு நிகர் ஆவளா இவள்? பார்த்தால் நடுத்தர வீட்டு பெண் போல் தெரிகிறது, என் பெண்ணிடத்தில் இல்லாதது என்ன இருக்கிறது இவளிடம்? இப்படி கிறங்கி கிடக்கிறான், இவன் என் கனவை எல்லாம் சுக்கு நூறாக்கி விடுவான் போல் இருக்கிறதே? இதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும், என்று எண்ணியவாறே ஹுசைனுக்கு போன் செய்தான். போனை எடுத்த ஹுசைன், நலம் விசாரித்த பிறகு, என்ன விஷயம் என்று கேட்க, உங்க மகனிடத்தில் பேசுனீர்களா? என்ன சொன்னார்? என்று கேட்க, நான் தான் அன்னைக்கே சொன்னேனே, அவன் வளர்ந்த பிள்ளை, அவனிடத்தில் எதையும் திணிக்க முடியாது. கொஞ்சம் விட்டு தான் பிடிக்க வேண்டும் என்று. " நீங்கள் விட்டு பிடிப்பதற்குள் அவன் ஓடி விட்டால் என்ன செய்வீர்கள்?" என்று உமர் கேட்க, "என்ன சொல்லுகிறீர்கள்?" எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. புரியும் படி சொல்லுங்கள். " உங்கள் மகன் ஸுஹேல், ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றுகிறான், என்ற தகவல் எனக்கு வந்திருக்கிறது. அந்த பெண்ண நம்ம இனம் கூட இல்லை. இப்போ என்ன செய்ய போகிறீர்கள்? என்று உமர் கேட்க, என்ன ! என் பையன் ஒரு பெண்ணோட ஊர் சுற்றுகிறானா? என்ன உளருகிறீர்கள்? என் பையன் அப்படிப்பட்டவன் அல்ல! நான் அவனை அப்படி வளர்க்கவில்லை, என்று கோபத்துடன் சத்தமாக பேச, அடுத்த அறையில் இருந்த ஜரீனா அந்த சத்தத்தை கேட்டதும் அவள் வயிறுக்குள் ஏதோ பிசைவது போல் இருந்தது. போனில் என்ன சொன்னார்கள்? இவர் ஏன் இப்படி கோபப்படுகிறார்? என்று தெரியாமல் தன் அறையை விட்டு வெளியே வந்தார், உங்கள் பெண்ணை என் மகனுக்கு தர மனமில்லை என்றால் விட்டுவிடுங்கள், அதற்காக என் பையனைப் பற்றி தவறாக பேசாதீர்கள் என்று ஹுசைன் மீண்டும் கத்த, மறுமுனையில், " நான் சும்மா உன் பையன் மீது பழி போடவில்லை. ஆதாரத்துடன் தான் பேசுகிறேன். உனக்கு வேண்டுமென்றால் அந்த ஆதாரத்தை தபாலில் அனுப்பி வைக்கிறேன், பார்த்து சந்தோஷப்படுங்கள் என்று கூறி போனை பட்டென்று வைத்து விட்டார் உமர் அலி. என்ன இவர் இப்படி பேசுகிறார்? இவர் கூறுவது எல்லாம் உண்மையாய் இருக்குமா? அப்படியானால் சுஹேலுக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது? என்று குழப்பத்துடன் யோசிக்கையில், அங்கு வந்த ஜரீனா, யாருங்க போனில்? என்ன விஷயம் ? ஏன் இப்படி கோபப்படுகிறீகள்? என்று கேட்கவும் தான் தாமதம், ஹுசைன்பொங்கி விட்டார், உமர் அலி பேசினார், " உன் பையன் ஏதோ ஒரு கழுதையோடு ஊர் சுத்துறானா! அந்த ஆதாரத்தை தபாலில் வேறு அனுப்பி வைக்கிறாராம், உன் பையனுக்கு அவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது? நான் உடனே சென்னை கிளம்புகிறேன், அவன் அங்கு வேலை செய்தது எல்லாம் போதும், அவனை கையோடு இங்கு அழைத்து வந்தால் தான் எனக்கு நிம்மதி, இதற்குத்தான் நிஹ்ஹா வேண்டாம் என்று சொன்னானா? எவ்வளவு தைரியம் அவனுக்கு? என்று மூக்கு விடைக்க பேசிக் கொண்டே இங்கும் அங்குமாக அந்த அறையை அளந்துக் கொண்டிருந்தார். சுஹேல் அப்படிப்பட்ட பையன் இல்லை, நாம் எடுத்து சொன்னால் கேட்பான். நான் வேணா அவன்கிட்ட பேசறேன் என்று ஜரீனா கூற, " நீ பேசினது எல்லாம் போதும்". நான் நேரடியாக இதில் இறங்கினால்தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும். நான் நாளையே சென்னை கிளம்பறேன், என் உடைகள் எல்லாம் எடுத்து வை,என்று கூறிவிட்டு தன் அறையை நோக்கி சென்றார். ஹுசைன் சென்றதும், ஜரீனாவுக்கு கை, கால்கள் எல்லாம் வெலவெலத்தது. இவர் சுஹேலிடத்தில் எப்படி நடந்துக் கொள்வார் என்று தெரியவில்லையே? மிகவும் கடுமையாக நடந்துக் கொண்டு, அவன் அதை தாங்காமல் ஏதாவது தவறான முடிவுக்கு சென்றால் என்ன செய்வது? என அந்த தாயின் உள்ளம் பலவாறு சிந்தித்தது, ஜரீனா அவர்கள் அறையை அடைந்தவுடன், அங்கு ஹுசைன் தூக்கம் பிடிக்காமல் விட்டதையே வெறித்துக் கொண்டிருந்தார். ஜரீனா அவரிடம் சென்று, " ஏங்க, நான் ஒன்னு சொன்னா கோவப்படமாட்டிங்களே?" கோவப்படுற மாதிரி என்ன சொல்ல போறே? என்று ஹுசைன் கேட்டதும், நம்மக்கிருப்பது ஒரே பிள்ளை, அவனிடத்தில் பக்குவமாக பேசி அழைச்சிட்டு வாங்க, தயவு செய்து அவனிடத்தில் உங்க கோவத்தை காட்டாதீங்க! நம்ம பிள்ளை நம் கையை மீறினா நம்மால் எதுவும் செய்ய முடியாத நிலை உருவாகி விடும். உங்க தங்கையிடம் கூட விஷயத்தை சொல்ல வேண்டாம். பிள்ளையை இங்கு அழைச்சிட்டு வாங்க, நல்ல புத்திமதி கூறி, அவனை நம்ம வழிக்கு கொண்டு வரலாம், என்று கூற ஹுசைனுக்கு ஜரீனாவின் பேச்சு சரியாக படவே, சரி! முடிந்தவரை அவனிடத்தில் சமாதானமாகவே பேசுகிறேன், என்று சொன்னவுடன் தான் ஜரீனாவுக்கு கொஞ்சம் மன நிம்மதி அடைந்தது. உமரலிக்கு மிகவும் கடுப்பாக இருந்தது. நாம் ஒன்று நினைத்தால் அது ஒன்று நடக்கிறதே! அந்த பெண்ணா ! அவ்வளவு சொத்துக்கும் சொந்தக்காரி ஆகப் போகிறாள், விடக்கூடாது, ஏதாவது செய்து அதை தடுத்தே ஆகவேண்டும். இந்த நேரத்தில் நாம் நிதானமாகத்தான் செயல்படவேண்டும். ஹுசைனின் நடவடிக்கையைப் பார்த்து தான் நம்முடைய அடுத்த அடியை வைக்கவேண்டும். நாம் பேசிய பேச்சுக்கு எப்படியும் சுஹேலை வாரணாசிக்கு அழைத்து வருவார், அதற்கு பின்பு தான், நாம் நம்முடைய வேலையை தொடங்க வேண்டும் என்று குரூர சிரிப்புடன், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கலானார்.
 

கயலுக்கு அன்று மருத்துவமனையில் விடுமுறை கொடுக்கப்பட்டிருந்தது. இரு வேளை இரவு பணி செய்ததால், அந்த வாரத்தில் ஒரு நாள் அவளுக்கு விடுமுறை கொடுத்தார்கள். அவள் அன்று சாம்சனை சந்திக்க, அவன் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தாள். அவளால் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. எதை பார்த்தாலும் அவன் நினைவாகவே இருந்தது. யாராவது நல்ல கலரில் சட்டை பேண்ட் அணிந்து சென்றால், இது சாம்சன் அணிந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று எண்ணுவாள். அழகான உடைகளை, மற்றும் காலணி, கைக்கெடிகாரம் முதலியவற்றை அவள் கற்பனையில் சாம்சனுக்கு அணிவித்து அழகு பார்த்தாள். எப்போதும் அவன் நினைவாகவே உழன்றாள் அவள். அன்று அவள் தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். அவளுக்கு அவளுடைய ஸ்கூட்டியை ரொம்ப பிடிக்கும். அதற்கு அவள் பெயர் கூட வைத்திருந்தாள். அந்த ஸ்கூட்டி ரோஸ் நிற வண்ணத்தில் இருந்ததால் அதற்கு ரோஸி என்று பெயர் வைத்திருந்தாள். அவள் எங்கு சென்றாலும் தன்னுடைய ரோஸியில் தான் செல்வாள். அவள் அவ்வப்போது அதை துடைத்து சுத்தமாக, பளிச்சென்று வைத்திருப்பாள். அவள் அம்மா எங்கு செல்கிறாள் என்று கேட்டதற்கு, தன்னுடைய தோழியை சந்திக்க செல்வதாக கூறிவிட்டு செல்லலானாள். வேறென்ன சொல்வது, தோழனை என்று சொன்னால் அவள் அம்மா விடுவாளா, " காதலில் இதல்லாம் சகஜம் அப்பா " என்று கவுண்டமணி பாணியில் தன்னை தானே தேற்றிக் கொண்டு சாம்சனின் வீட்டை நோக்கிச் சென்றாள். சரியாக ஒரு மணி நேரத்திற்குள் அவன் இருக்கும் வீட்டை அடைந்தாள். வீடு சிறியதாக இருந்தாலும் பார்க்க அழகாக இருந்தது. பழமையும் புதுமையும் கலந்து இருந்தது. வெளியில் வராண்டா இருந்தது. அதில் நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் அவனின் தந்தை ஜேக்கப். அவளை பார்த்தவுடன், வாம்மா, எப்படி இருக்கீங்க? என்று குசலம் விசாரித்து, அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார், வீட்டின் வாசலில் அழகாக பூக்கோலம் போடப்பட்டிருந்தது. அதை தாண்டிச் சென்றதும், வெல்கம் என்ற மிதியடி அவளை வரவேற்றது. உள்ளே ஒரு சிறிய ஹால், அதற்கு இருபுறமும் இரு அறைகள் இருந்தன. அதை தாண்டி சென்றால் சமையல் அறை இருந்தது. ஹால் சிறியதாக இருந்தாலும் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஹாலில் அமர சிறிய சோபாவும் அதன் இருபுறமும் இரு நாற்காலிகள், சோபாவின் எதிரில் சிறிய டீபாய் போடப்பட்டிருந்தது, அதன் மேல் ஒரு பூக்குவளை வைக்கப்பட்டிருந்தது. அதில் அழகாக அன்று பூத்த மலர்கள் இலைகளோடு அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுவரில் அழகிய இயற்கை காட்சி படங்கள் மாட்டப்பட்டிருந்தன. ஹாலில் ரெபேக்கா இருக்க, இவளைக் கண்டதும், முகமலர்ச்சியுடன் வாம்மா! உட்க்காருங்க! என்ன சாப்பிடறீங்க? என்று மகிழ்ச்சியுடன் வினவ, நீங்க என்னோட வயசில பெரியவங்க, அதனாலே என்னை வாங்க போங்கன்னு கூப்பிடாதீங்க ! என்னை வா, போ என்று கூப்பிடுங்க, என் பேர் சொல்லி கூப்பிட்டிங்கனா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்! ரெபெக்காவும் சரி என்று தலையாட்டினார். தம்பி, இங்கே யாரு வந்திருக்காங்கனு பாரு! என்று அவள் தன் மகனை அழைக்க, ஒரு அறையில் இருந்து கதவை திறந்துட் கொண்டு சாம்சன் அங்கு வந்தான். அவளை பார்த்தவுடன் அவன் பார்வையில் சிறு மின்னல் வந்து மறைந்தது. அவன் கைலியும் கட் பனியனும் போட்டிருந்தான். கொஞ்ச இருங்க இதோ வந்துடுறேன், என்று கூறி உள்ளே சென்று சட்டையை அணிந்து வந்து அவள் அருகில் அமர்ந்தான். அவள் அவர்கள் வீட்டிற்காக சில பழங்களையும், அவள் தங்கைக்கு சாக்லேட்டும் வாங்கி இருந்தாள். அவள் அந்த பொருள்களை எல்லாம் ரெபேக்காவிடம் நீட்ட, இதெல்லாம் எதுக்கம்மா! நீங்க வந்ததே எனக்கு மிகவும் சந்தோஷமா இருக்கு என்று கூறியதும், பரவாயில்லை, ஆன்ட்டி, வாங்கிக்கோங்க! என்று அவள் கையில் கொடுத்தாள். அவள் எங்கே உங்கள் தங்கை? என்று கேட்க, அவள் பள்ளிக்கு சென்றுள்ளாள், நான்கு மணிக்கு வந்துவிடுவாள். நீங்கள் வருவது முன்பே தெரிந்திருந்தால் அவளை லீவு போடச் சொல்லி வீட்டில் இருக்க செய்திருப்பேன், என்று சாம்சன் கூற, அவள் அன்னையும் ஆமாம்! கயல், நான் கூட ஏதாவது ஸ்பெஷல் ஐட்டம் உனக்காக செய்திருப்பேன், அப்படி எல்லாம் நீங்க கஷ்டப்படக்கூடாது என்று தான் நான் சொல்லாமலே வந்திருக்கேன் என்று சிறு புன்னகையுடன் கயல் கூறவே, அங்கு உள்ளவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பியது. கயலுக்கு அவர்கள் வீடும் கூடவே ரெபேக்கா, ஜாக்கோபையும் மிகவும் பிடித்து போனது. மருத்துவமனையில் அவர்களிடம் பழக சிறிது நேரமே கிடைத்ததால் அவர்களை பற்றி அவளால் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் போனது. இங்கு அவள் அவர்களிடம் வெகு நேரம் உரையாடினாள். ரெபேக்கா அவளுக்கு காய்கறிகள் கலந்த சாதமும் அதற்கு ஏதுவாக வெள்ளரிக்காய், கேரட் பச்சடியும் செய்திருந்தாள். கூடவே அண்ணாச்சி பழ கேசரியும் செய்திருந்தாள். கயல் உணவு சுவையாக இருக்கவே விரும்பி சாப்பிட்டாள். சொன்னபடியே மதியம் சரியாக நான்கு மணிக்கு அவனுடைய தங்கை பியூலா வந்தாள். அவளும் மாநிறமாக இருந்தாலும் பார்க்க அழகாக இருந்தாள், அவளை, கயலுக்கு சாம்சன் அறிமுகம் செய்து வைத்தான். சிறிது நேரத்திலேயே பியூலா அவளுடன் ஒட்டிக்கொண்டாள். வாய் ஓயாமல் சிறு குழந்தை போல் அவள் பேசிக் கொண்டே இருந்தது கயலுக்கு மிகவும் பிடித்து போனது. அக்கா, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!, நீங்க போட்டிருக்கிற சுடிதார் உங்களுக்கு ரொம்ப எடுப்பா இருக்கு என அவளை கண் விரிய ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டே போனதை கயல் மிகவும் ரசித்தாள். நல்லா படிப்பியா பியூலா? எனக் கேட்க, நான் தான் "என் வகுப்பில் முதல் மாணவி அக்கா" என பெருமை பொங்க கூறிவிட்டு, உங்களை பார்த்ததும் எனக்கும் உங்களை போல் டாக்டர் ஆக ஆசையாக உள்ளது அக்கா என உற்சாகமாக கூறினாள் எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாம படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண் பெறலாம். அப்படி பெற்றால் எளிதாக மருத்துவம் படிக்கலாம் பியூலா எனக் கூற,கண்டிப்பாக அக்கா, நான் நன்றாக படித்து நிச்சயமாக டாக்டர் ஆவேன்! என்று அவள் உறுதியுடன் கூறியதை பார்த்த கயலுக்கு, அவளுடைய தன்னம்பிக்கை அவளை மருத்துவர் ஆக்கும் என நம்பினாள்.
 

சாம்சன் அவள் வந்ததில் இருந்து அவளை கவனிக்க தவறவில்லை. அவள் மனசுக்குள் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் ஆவலுடன் அவளை அவன் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தான். ஆயினும் அவனால் அவளின் மனசை அறிய முடியவில்லை. அதனால்தான் கடலை விட ஆழம் பெண்ணின் மனசு என கவிஞர்கள் பாடினார்களோ? என தனக்குள் எண்ணியவாறே புன்னகை புரிந்தான். மணி ஐந்தை நெருங்கவே, கயல் வீட்டிற்கு புறப்பட ஆயத்தமானாள். நான் இங்கு வந்து வெகு நேரம் ஆகிவிட்டது, இதற்குமேல் இங்கு இருந்தால் அம்மா நான் இன்னமும் வரவில்லை என்று கவலைப்படுவார்கள் என்று சொல்லிவிட்டு சாம்சனையும் அவனின் வீட்டாரையும் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து சென்றாள், சாம்சன் அவளை வாசல் வரை வந்து வழி அனுப்பினான். ரெபெக்காவும் அவனுடனே வந்து, " நீ எப்போ வேணுன்னாலும் எங்க வீட்டுக்கு வரலாம்மா"! அடிக்கடி வாம்மா எனக் கூற, கயலும் ஆன்ட்டி நீங்க, அங்கிள், பியூலா மற்றும் சாம்சனோடு எங்க வீட்டுக்கு அவசியம் வரணும் என்று அழைக்க, ரெபெக்காவும் மர்ம புன்னகையுடன் கண்டிப்பாக வருகிறோம் என்று கூறி நகைத்தாள். வெளியே அவளின் ரோஸியில் ஏறி அமர்ந்து அவனுக்கு கை அசைக்க, அவனும் அவளுக்கு கை அசைத்து விடைக்க கொடுத்தான். சாம்சன் வீட்டிற்குள் வந்ததும் அனைவரின் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி. கயலின் வாசம் அந்த வீடு முழுக்க பரவியிருந்தது போல் உணர்ந்தான் அவன். அவனுக்கு இன்னமும் அவள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறாள் என்று கண்டுபி பிடிக்க முடியவில்லை. ஆனால் ரெபேக்கா பெண் அல்லவா? அவளுக்கு கயலின் மனசு நன்கு புரிந்தது. அவள் சாம்சனை விரும்புகிறாள் என்று, ஆனால் அவள் அதை தன் மகனிடம் கூறவில்லை, அவனாய் தெரிந்துக் கொள்ளட்டும், அப்போதுதான் அந்த காதலுக்கு உயிர் இருக்கும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு தன் வேலையில் மூழ்கலானாள். ஹுசைன் விடியற்காலையிலேயே சம்சுதீன் வீட்டின் கதவை தட்டினார். பாத்திமாதான் கதவை திறந்தார். வாங்க காக்கா! வாங்க! என்று வரவேற்று, அவரை அமர வைத்து, சற்று இருங்க வரேன், என்று அவருக்கு தேநீர் தயார் பண்ண உள்ளே சென்றாள். சம்சுதீன் அவரிடத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போதுதான் தொழுவதை முடித்துக் கொண்டு வந்த சுஹேல், தந்தையை பார்த்ததும் ஆச்சர்யப்பட்டான். என்ன வாப்பா? காலையிலேயே வந்திருக்கிங்க? என்ன விஷயம்? வீட்டில் எல்லோரும் சுகம்தானே எனக் கேட்டான். ஹுசைன் அவனை முறைத்து பார்த்து, எங்களுக்கென்ன நாங்க எல்லாம் நல்லாத்தான் இருக்கோம்! " நீ என் கூட ஊருக்கு கிளம்பற, நாளைக்கே நாம போறோம்". என்று கூறியதும் சுஹேலுக்கு பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. என்ன வாப்பா நாளைக்கே ஊருக்கு வரணுமா? அப்படி என்னப்பா அவசரம்? " நான் சொன்னா அது உன் நல்லதுக்கு தான் சொல்லுவேன்! என் சொல்லை எதிர்த்து பேசற அளவிற்கு என் பையன் வளர்ந்துட்டான்! என்று சம்சுதீனிடம் முறையிட, அவருக்கு இருவரின் வாக்குவாதமும் சங்கடமாகி போக, மச்சான், நீங்க பேசிகிட்டு இருங்க, எனக்கு வெளியிலே அவசரமா ஒரு வேலை இருக்கு, அதை முடிச்சிட்டு சீக்கிரமா வந்துறேன், என்று விட்டால் போதும் என்று அவசரமாக அந்த இடத்தை விட்டு நழுவினார். வாப்பா, எனக்கு இன்னும் ஒரு வாரத்தில் முக்கியமான ஆபரேஷன் ஒன்று இருக்கிறது. அதை நானும் தலைமை மருத்துவரும் செய்கிறோம். இந்த நேரத்தில் திடீர் ஊருக்கு வரச் சொன்னால் நான் எப்படி வாப்பா வர முடியும்? இது நீங்கள் செய்யும் துணி வியாபாரம் இல்லை, உயிரை காக்கும் தொழில். தொழில் என்பதை விட கடமை , இதில் என்னால் அலட்சியமாக இருக்க முடியாது வாப்பா! நான் சிறிது தவறு செய்தாலும் என்னை நம்பியவருக்கு பெரும் இழப்பு ஏற்படும், என்று கூற ஹுசைனுக்கு அவன் பேசியதை நம்பவே முடியவில்லை. என் பிள்ளையா இவன்? என் முன்னே நிக்கவே பயப்படுவான், இப்போ இவ்வளவு பேசறானே! அவனுடைய தொழில் அவனை பேச தூண்டுகிறதா? இல்லை அவனுடைய காதல் பேச தூண்டுகிறதா? அதுவும் இல்லை என்றால் சென்னை வாழ்க்கை இவ்வாறு மாற்றி அமைத்துள்ளதா? என்று ஒன்றும் புரியாமல் அவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, சுஹேல், " நீ என்ன செய்வாயோ எனக்கு தெரியாது, நாளையே நீ என்னுடன் வரவேண்டும். இது என்னுடைய கட்டளை! உனக்கு தாய் தந்தை மேல் கொஞ்சமாவது பாசம், அக்கரை இருந்தால் இதை நிறைவேற்று, இல்லையென்றால் நாங்கள் இறந்து விட்டதாக கருதி எங்களுக்கு ஈம சடங்குகள் செய்து விடு! நாங்கள் இனிமேல் உன்னை தொல்லை செய்ய மாட்டோம். என்று கூறவே சுஹேலால் ஒன்றுமே பேச முடியவில்லை என்ன வாப்பா! இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்? நீங்கள் பேசுவதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை, என்று அவன் கண்கள் பனிக்க பாவமாய் நிற்க, அதை பார்த்தும் மனம் தளராதவராய், இன்றைக்கு நீ மருத்துவமனைக்கு சென்று, அவசர வேலை எதாவது இருந்தால் அதை முடித்து விட்டு, அப்படியே உன் தலைமை மருத்துவரிடம் ஊருக்கு செல்லும் தகவலையும் சொல்லி விட்டு வா. நான் வரும்போதே உனக்கும் சேர்த்து விமானத்தில் நாளை செல்ல பயணச்சீட்டு வாங்கி வந்து இருக்கிறேன். சீக்கிரமாக ஊருக்கு செல்ல தயாராய் இரு, என்று சொல்லிவிட்டு குளியலறைக்குள் சென்று விட்டார். சுஹேலுக்கு அவன் தந்தை செய்வது, பேசுவதெல்லாம் ஒன்றும் புரிபடவில்லை. இவர் ஏன் நம்மை ஊருக்கு கிளப்ப இவ்வளவு அவசரப்படுத்திகிறார்? என்ன விஷயமாய் இருக்கும்? என்று ஒரே குழப்பத்துடன் இருந்தான். அவர் தந்தை குளித்து முடித்து வந்தவுடன் அவனிடத்தில் வேறெதுவும் பேசவில்லை, அவனும் அவசர அவசரமாக தயாராகி மருத்துவமனைக்கு சென்றான். அங்கு அவன் நேரே டாக்டர் நரசிம்மனை சந்தித்தான். " வெல்கம் பாய்" வா வா! வந்து உட்கார்! என்ன விஷயம்? இவ்வளவு காலையிலேயே என்னை பார்க்க வந்து இருக்கிறாய்? , " டாக்டர் எனக்கு அவசரமாக ஒரு வாரமாவது விடுமுறை வேண்டும் என்று கூறினான்.’’ அவர் அவனை பார்த்து, என்ன மேன், "anything serious" என்று வினவ அவன் இல்லை என்பது போல் தலையாட்ட, பின் அவர் புன்னகைத்துக் கொண்டே, அப்படி என்னப்பா அவசரம்? உனக்கு திருமணம் முடிவாகி உள்ளதா? என்று சிறு குறும்புடன் கேட்டார் அதெல்லாம் இல்லை டாக்டர், என்னுடைய தந்தை ஊரில் இருந்து வந்திருக்கிறார், அவர் என்ன விஷயம் என்று சொல்லவில்லை, உடனே ஊருக்கு கிளம்பும்படி உறுதியாக கூறிவிட்டார், என்னால் அவர் பேச்சை மீற முடியவில்லை, என்று அவன் பரிதாபமாக கூற, ok boy, " I understand your problem" பட் ரொம்ப நாள் விடுமுறை எடுக்காதே! நாம இரண்டு பேரும் சேர்ந்து செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை இந்த மாதத்திலேயே இரண்டு இருக்கு. அதன் அவசரமும் அவசியமும் உனக்கு புரியும்னு நினைக்கிறேன், என்று அவர் கூறியதும், டாக்டர் நான் ஒரு வாரத்திற்குள் எப்படியாவது வர முயற்சி செய்கிறேன்! என்று சுஹேல் கூறியதை கேட்ட நரசிம்மன் that's good, Anyway have a nice trip என்று கூறவும், அவருக்கு நன்றி தெரிவித்து கை குலுக்கிவிட்டுசுஹேல், தன் அறையை நோக்கி விரைந்தான். அங்கு கயல் இருக்கவே அவளிடம், நான் ஒரு வாரம் லீவு கயல், இந்த ஒரு வாரத்திற்கு எனக்கு பதிலா நீதான் பார்த்துக் கொள்ளணும், நோயாளிகளின் சிகிச்சை அறிக்கைகள் இந்த கோப்பில் உள்ளது. இதை பத்திரமாக வைத்துக் கொள். இந்த கோப்பில் உள்ளது போல் அவரவருக்கு ஏற்ற சிகிச்சையளி என்று அவளிடம் கூற, என்ன விஷயம், எதற்காக விடுமுறை என்று நாக்கு வரை வந்த சொல்லை அவள் அடக்கிக் கொண்டாள், ஏனெனில் அவன் முகத்தில் அத்தனை பரபரப்பு இருந்தது. அவன் பாதி தூரம் சென்று பின் திரும்பி வந்து, மறந்துட்டேன்! நான் ஒரு கவரை தருகிறேன், அதை நாளையோ நாளை மறுநாளோ ஒரு பெண் வருவாள். அவள் பெயர் துர்கா, அவளிடத்தில் கொடுத்து விடு. மற்றதெல்லாம் நான் வந்து பார்த்துக் கொள்கிறேன் என்று அவன் அறையில் இருந்து ஒரு தடித்த உறையை அவள் முன் நீட்டினான். அவள் அனைத்திற்கும் சரி என்று தலையாட்டிவிட்டு அதனை பெற்றுக்கொண்டாள், எதற்காக விடுமுறை எடுக்கிறான், அதுவும் ஒரு வாரம், என்ன விஷயமாக இருக்கும் என்று எண்ணியவாறு அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் கயல்.
 

சுஹேல் எப்படியாவது உடனே இந்த விஷயத்தை துர்காவிடம் சொல்ல எண்ணினான். எனவே அவளின் ஓய்வு நேரத்தை அறிந்து, அவளுக்கு போன் செய்தான். துர்கா போனை எடுத்ததும், " துர்கா நான் நாளைக்கு அவசரமாக ஊருக்கு போறேன், வர ஒரு வாரம், ஏன் அதற்கு மேலும் ஆகும், நான் உன்னுடைய CA நுழைவு விண்ணப்பத்தை என் நண்பன் மூலம் வாங்கி வைத்திருக்கிறேன். அதை நான் உன்னிடத்தில் இப்போது இருக்கும் சூழ்நிலையில் வீட்டில் கொடுக்க முடியாது. நீ, நான் ஊருக்கு கிளம்பியவுடன் நான் வேலை செய்யும் மருத்துவமனையில் வந்து பெற்றுக் கொள். அங்கு டாக்டர் கயல் என்று கேட்டால் அவளிடத்தில் உன்னை அனுப்புவார்கள். அவளிடத்தில் உன் பெயரை சொல்லி பெற்றுக் கொள். நீ நன்றாக படித்தால் தான் நுழைவு தேர்வில் வெற்றி பெற்று CA படிப்பில் சேரலாம், என்று அவன் சொல்லிக் கொண்டே போக, துர்காவிற்கு அவன் நாளைக்கு ஊருக்கு போகிறான் என்ற செய்தியே மனதிற்குள் பெரும் பாரமாய் இருந்தது. அவள் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக அனைத்தையும் சுரத்தையே இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். "என்ன துர்கா லைனில் இருக்கிறாயா? என்று கேட்க, அவள் ஹும் என்று மட்டும் கூறினாள். வீட்டில் என் தந்தை இருக்கிறார் நான் நாளைக்கு என் தந்தையுடன் தான் ஊருக்கு செல்லுகிறேன், என்ன விஷயம் என்று சொல்ல மறுக்கிறார், வீட்டில் ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன், அநேகமாக என்னுடைய திருமணம் விஷயம் என்று தான் நினைக்கிறேன். "நீ பயப்படாதே! " அந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று எனக்கு தெரியும்,என்று அவன் கூறவே எனக்கு ஒன்றும் பயம் இல்லை, ஒரு வேளை உங்கள் வீட்டார் அந்த பெண்ணை மணக்க சொன்னால் மணந்து கொள்ளுங்கள், உங்கள் தாய் தந்தையின் விருப்பதையாவது நிறைவேற்றுங்கள், என்று அவள் கூறியதை கேட்ட சுஹேல் துணுக்குற்றான். "உன்னை திருத்தவே முடியாது துர்கா!" நீ என்ன பெரிய தியாகி என்று மனதிற்குள் நினைப்பா!" உன் வாழ்க்கையை அடுத்தவருக்கு விட்டு கொடுக்க, "எல்லாம் எனக்கு தெரியும், நான் எப்படியாவது சமாளித்துக் கொள்வேன், நீ மட்டும் எது நடந்தாலும் கவலைப்படாதே! உன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்து, மற்றதெல்லாம் அந்த அல்லா பார்த்துக் கொள்வார். உன்னை ஒரு தடவை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் உன்னை பார்க்க இயலாது என்று நினைக்கிறேன், நாளை காலையிலேயே நான் செல்வதால், இங்கு முடிக்க வேண்டிய வேலை நிறைய உள்ளது. அதனால் நான் இரவும் வீட்டுக்கு வர நேரமாகும், நான் சீக்கிரமாக உன்னை காண திரும்பி வருவேன் துர்கா, என் நினைவுகள் எப்போதும் உன்னை சுற்றியே இருந்துக் கொண்டிருக்கும், குட் பை! என்று கூறி விட்டு போனை வைத்தான். அவன் தொலைபேசியை வைத்ததும் ஏனோ தெரியவில்லை, அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. என் மேல் இவ்வளவு அன்பு வைக்கும் அளவிற்கு நான் அவனுக்கு என்ன செய்துவிட்டேன், கடவுளே! நான் என்ன செய்து இந்த அன்பை அவனுக்கு திருப்பி செலுத்த போகிறேன் என்று அவள் தனக்குள்ளே விம்மினாள். மாலை வீடு வந்தவுடன் அனீஸ் வாசலிலேயே காத்திருந்தாள். என்னடி ரொம்ப சோர்வா இருக்கே? பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததா? என்று அவர்கள் பேசிக் கொண்டே இருக்கும் போதே சுஹேலின் அப்பா அங்கு வந்தார். துர்கா அவரை பார்த்தாள். அவர் சுஹேலின் ஜாடையில் இருந்தாலும் அவனிடம் இல்லாத வரட்டு கௌரவமும், பிடிவாதமும் அவர் முகத்தில் தென்பட்டது. இவரை எப்படி சுஹேல் சமாளிக்க போகிறான்? என்ற கேள்வி அவளுள் எழாமல் இல்லை. அனீஸ், துர்காவிற்கு சுஹேலின் அப்பாவை அறிமுகப்படுத்தி வைத்தாள். அவளும் வணக்கம் என்று கூறவே, அவர் சிறு புன்னகை புரிந்து, " இருவரும் நெருங்கிய தோழிகளா? என்று கேட்க, அனீஸ் ஆமாம், மாமா! நாங்கள் சிறு வயதிலிருந்தே ஒரே பள்ளிக்கூடத்திலும் பிறகு ஒரே கல்லூரியிலும் ஒன்றாக படித்தவர்கள்,எனக்கு ஏதாவது என்றால் அவள் தாங்க மாட்டாள். அதை போலத்தான் நானும் என்று அவள் பெருமையாக கூறியதைக் கேட்ட ஹுசைன், அப்படித்தான் இருக்கவேண்டும் மா. இந்த நெருக்கம் உங்கள் வாழ்க்கை முழுவதும் நிலைத்து நிற்கவேண்டும் என்று வாழ்த்த, அதைக் கேட்டவுடன் துர்காவின் முகத்தில் சிறு மலர்ச்சி ஏற்பட்டது. நன்றி அங்கிள், என்று அவள் புன்னகை மாறாமல் கூறிய போது அனீஸ் அவள் காதருகே குனிந்து மெதுவாக, " உன்னை யார் என்று தெரியாமல் உங்க வருங்கால மாமனார் வாழ்த்துகிறார், விஷயம் தெரிந்தால் என்ன சொல்லுவாரோ! என்று கிசுகிசுக்க, துர்காவின் முகம் பேயை கண்டது போல் இருண்டு போனது. அவள் செயற்கையாக புன்னகையை வரவழைத்துக் கொண்டு, நான் வரேன் அங்கிள், என்று அங்கிருந்து அகன்றாள். கயலுக்கு அன்று இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இருந்தது. பள்ளிக்கூடங்களுக்கு சென்று மாணவிகளுக்கு பொது பரிசோதனை செய்யும் குழுவில் இடம் பெற்று இருந்தாள். அவர்களை அழைத்துப் போக தனியாக பேருந்து ஒன்று மருத்துவமனையை ஏற்பாடு செய்திருந்தது. அந்த பேருந்தில் ஐந்தாறு மருத்துவர்களும், நான்கு செவிலியர்களும், மற்றும் இதர பணியாளர்களும் ஏறினார்கள். கூடவே மருத்துவ உபகரணங்களும் ஏற்றப்பட்டன. பேருந்துபெண்கள் படிக்கும் பள்ளியில் நிறுத்தப்பட்டது. அனைவரும் இறங்கி அவரவர் உடைமைகளை எடுத்துக்கொண்டு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை சென்று பார்த்தனர். அவர்களின் அனுமதி பெற்றதும், ஒவ்வொரு வகுப்பில் உள்ள மாணவிகளும் வரிசையாக வரவழைக்கப்பட்டனர். ஆங்காங்கே கூடாரம் அமைத்து மருத்துவ பரிசோதனைகள் நடந்துக் கொண்டிருந்தன. கயல், வரிசையில் நிற்கும் ஒவ்வொரு மாணவிகளுக்கும் பரிசோதனை செய்து அடுத்த மருத்துவரிடம் அனுப்பினாள். அப்படி வரிசையாக மாணவிகள் வரும்போது அங்கு பியூலாவை கண்டாள். அவளைக் கண்டதும் கயலுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. "ஏ பியூலா ! நீ இங்கு தான் படிக்கிறாயா? என்று கண்கள் விரிய கேட்டாள். ஆமாம் அக்கா, " நீங்க இங்க வருவீங்கன்னு நானும் எதிர்பாக்கலை, உங்களே பார்த்ததும் எனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்று கூறி அவளை தன்னுடைய சக தோழிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். மாலை பரிசோதனை எல்லாம் முடிந்ததும், மறுபடியும் பியூலா அவளை பார்க்க வந்தாள். கயல் அவளிடம் சாரி! பியூலா, உன்னிடம் சரியாக பேச முடியவில்லை. வீட்டில் அம்மா, அப்பா, அண்ணா எல்லோரும் நலம் தானே? என்று குசலம் விசாரிக்க, எல்லோரும் நல்லா இருக்கோம் அக்கா, நீங்க ஏன் என்கிட்ட சாரி எல்லாம் கேக்கிறீங்க? நீங்க உங்க வேலையில் மும்முரமாக இருந்தீங்க. அதுக்கெல்லாம் சாரி கேட்டு என்னை உங்களைவிட பெரிய மனுஷியா ஆகிடாதீங்க அக்கா! என்று அவள் வரிக்கு வரி அக்கா, அக்கா என்று கூறியது கயலுக்கு என்னவோ போல் இருந்தது. நாம் இவளின் அண்ணனை காதலிக்கிறோம், இவள் நம்மை அக்கா என்று அழைக்கிறாளே! எப்படி ஒத்துக்கொள்வது? ஆன்ட்டி என்றாலும் நல்லா இல்லை. நான் அவளை விட வயதில் பெரியவள். அதனால் பெயர் சொல்லியும் அழைக்க முடியாது. பின் அவளை எப்படி கூப்பிட சொல்லுவது? என்று உள்ளுக்குள் குழம்பினாள், அண்ணி என்று கூப்பிட சொன்னால், சின்ன பெண், என்னை பற்றி தப்பாக நினைப்பாளோ? பிறகு வீட்டிற்கு போய் ஏதாவது என்னைப் பற்றி தப்பாக சொல்லிவிட்டால் என்ன செய்வது? அது பெரிய பிரச்சனை அல்லவா ஆகிவிடும்! சாமிடம் காதலை வெளியிட்ட பின்பு தான் இவளை அண்ணி என்று கூப்பிட சொல்லவேண்டும். அதுவரை இவள் சொல்வதை சகித்து தான் போக வேண்டும். சாம்சன் எங்கே என்னிடம் வந்து காதலை சொல்லப்போகிறான், அவன் என்னை புரிந்துக் கொண்டால் தானே? சரியான களிமண்! களிமண் ! மண்டை முழுவதும் களிமண்ணுதான் இருக்கு. கடவுளே! இந்த பையனை வைத்து நான் என்னத்த குடும்பம் நடத்தி, பிள்ளைகளை பெற்று. அவர்களை வளர்த்து, அப்பாடா ! இப்பவே கண்ணை கட்டுதே! என்று வடிவேல் பாணியில் மனதில் புலம்பிக் கொண்டு, பியூலாவை பார்த்து ஒன்றும் தெரியாதவள் போல் சிரித்து வைத்தாள். பியூலா அவளிடம் சிறிது நேரம் பேசி விட்டு சென்றுவிட்டாள். அவள் சென்றதும் கயலுக்கு சாம்சனின் நினைவாகவே இருந்தது. இவனிடத்தில் எப்படி தன் காதலை வெளிப்படுவது? என்று யோசனையுடனே பேருந்தில் ஏறினாள். பேருந்தில் ஏறியவுடன் அவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த மற்றொரு மருத்துவர், என்ன கயல், ஏதாவது பிரச்சனையா? ஒரே யோசனையாவே இருக்கே? என்று கேட்கவும் தான் கயலுக்கு தான் எங்கு இருக்கிறோம் என்ற உணர்வே வந்தது, ஒன்னுமில்லையே! என்று தன் முகத்தில் புன்னகையை வர வழைத்துக் கொண்டாள். நாம் மனசிலே நினைக்கிறது எல்லாம் நம்முடைய முகம் காட்டி கொடுத்துடும் போலிருக்கே! சாம்ஸ் என்னை ஏன்டா இம்சிக்கிறே? என்று மனதிற்குள் திட்டியவாறே வீடு வந்து சேர்ந்தாள்.
 
அத்தியாயம் 20



வீட்டை அடைந்ததும், அவளுடைய அம்மா வாஸந்தி வாசலிலே காத்திருந்தாள், என்னடி இவ்வளவு நேரம்? ஒரு நாள் மெடிக்கல் கேம்ப் இல்லையா? மாணவிகள் எல்லோரையும் பரிசோதித்து, மருந்துகள் எல்லாம் எழுதிக் கொடுத்து, நாங்க எல்லோரும் கிளம்பி பேருந்தில் ஏறி மருத்துவமனையை அடைந்து அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி வர நேரம் ஆயிடுச்சிம்மா! என்று அவள் விவரிக்கவும் வாஸந்தி கொஞ்சம் சமாதானம் அடைந்தார். அம்மா! "நான் குளிச்சிட்டு வரேன்", இரவு சாப்பாடு எடுத்து வைம்மா! என்று கூறி குளிக்க சென்ற கயல், ஏதோ ஒரு யோசனையிலேயே டவலை எடுக்க மறந்து குளிக்க சென்று விட்டாள்.



குளித்து முடித்தவுடன் தான் டவலை மறந்து விட்டதை அறிந்து குளியறையில் இருந்தவாறே அம்மாவுக்கு குரல் கொடுக்க, வாஸந்தி இதோ வரேன்! என்று கூறியவாறு அவள் அறையில் இருந்த கதவு வைத்த பெரிய அலமாரியில் இருந்த டவலை எடுத்து கயலிடம் நீட்டினாள், அவள் அதை வாங்கி கொண்டு வெளியில் வந்தது தான் தாமதம், வாஸந்தி அவளை திட்ட ஆரம்பித்து விட்டாள்.



ஏண்டி, இவ்வளவு பெருசா வளர்ந்திருக்கே? பொறுப்பான டாக்டர் பணியில் வேற இருக்கே! ஒரு டவல் குளிக்க போகும்போது எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்ற ஞாபகம் இருக்காதா? என்று கேட்கவும், அம்மா! டவலுக்கும் நான் மருத்துவம் படித்ததுக்கும் என்னம்மா சம்பந்தம்? என்னாலே தாங்க முடியலேம்மா! என்று அலுத்துக் கொண்டே தன் உடையை சரி செய்தவாறே கூறிய பெண்ணை பார்த்த வாஸந்தி, நீ எப்படி கல்யாணம் பண்ணி உன் புருஷனையும் உன் புகுந்த வீட்டாரையும் கவனிக்க போறேனு தெரியலே ! என் பெயரை காப்பாத்துடி! என்று கெஞ்சலாக கூற,

நீ ஏம்மா அதை பத்தி எல்லாம் கவலைபடுறே? கல்யாணம் ஆனதும் பாரு, என் புருஷன் என்னை எப்படி தாங்குவார்னு ? நான் அவரையும் அவரின் குடும்பத்தையும் எப்படி கவனிச்சிப்பேனு என்று கண் சிமிட்டி கூறியதை கேட்ட வாஸந்தி அவளுடைய அழகிலும் குறும்பிலும் மயங்கி தான் போனாள் என்றாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல்,நானும் உன்னை கவனிச்சிட்டு தான் வரேன்! நீ கொஞ்ச நாளாகவே சரியில்லை. எப்ப பார்த்தாலும் ஏதோ யோசனையிலேயே இருக்க. கேட்டா ஒண்ணுமில்லை, மருத்துவமனையில், வேலையில் ஒரே டென்ஷன் என்று சொல்ற, என்னதாண்டி ஆச்சு உனக்கு? என்று ஒரு தாயாக கேட்க, கயலுக்கு என்னை நம்ம அம்மா சி,ஐ.டி வேலையெல்லாம் பாக்குறாங்க! இவர்களிடத்தில் நான் ஒருவனை ஒரு தலையாய் காதலிக்கிறேன், அவனை எப்படி என்னை காதலிக்க வைப்பது என்று யோசனையாய் இருக்கு, என்று உண்மையை சொல்ல முடியுமா?

என்னம்மா நீங்க? நான் எப்போதும் போலத்தான் இருக்கேன். பொண்ணு வேலை செஞ்சிட்டு வந்திருக்காளே, அவளுக்கு சோர்வா இருக்காதா! பசி எடுக்காதா! சாப்பாடு கொடுக்க வேண்டாமா, என்ற எண்ணமே இருக்காதாம்மா, என்று அவள் பேச்சை வேறு திசையில் திருப்ப, வாஸந்தியும் , அடாடா ! என் செல்ல குட்டிக்கு ரொம்ப பசிக்குதா ? வாம்மா! சாப்பாடு எடுத்து வைக்கிறேன்! என்று கூறியபடி சமையல் அறை நோக்கி சென்றாள். கயலுக்கு அப்பாடா ! தப்பிச்சாச்சு சாமி! என்றிருந்தது. அவள் மூச்சை ஆழமாக உள் இழுத்து விட்டவளாக சாப்பிட சென்றாள்.



துர்கா, சுஹேல் சென்று இரு நாள் கழித்து அவன் வேலை செய்யும் மருத்துவமனைக்கு சென்றாள். அவள் தன்னுடைய அலுவலகத்தில் 3 மணிக்கே செல்லவேண்டும் என்ற அனுமதி கேட்டு விட்டு தான் சென்றாள். மருத்துவமனையை அடைந்ததும் வரவேற்பறையில் சொல்லிவிட்டு காத்திருந்தாள்.



சிறிது நேரம் கழித்து, ஒரு பெண்மணி வந்து அவளை அழைத்துக் கொண்டு கயல் இருக்கும் இடத்தில் விட்டு விட்டு சென்றாள். ஐந்து நிமிடத்தில் கயல் வர, அவளை பார்த்ததும் துர்கா, அசந்து தான் போனாள். அப்பா! என்ன அழகு! பளிங்கு சிலை போல் இருக்கிறாளே! இவளையெல்லாம் மருத்துவமனையில் வைத்துக் கொண்டு தான் என்னை அழகு என்று சொல்லிக் கொண்டு திரிகிறானா இவன் ? இந்த மாதிரி அழகை விடவா என் அழகு சுஹேலை கவர்ந்தது? என்று மனதில் அதிசயத்துக் கொண்டே கயலை பார்த்தாள்.

கயலும் துர்காவை பார்த்தவுடன், "என்ன ஒரு அமைதியான அழகு! அலட்டல் இல்லாத இயற்கை அழகு! துடைத்து விட்ட குத்து விளக்கு போல் இருக்கிறாளே? பார்த்தால் கை எடுத்து கும்பிடவேண்டும் போல் இருக்கிறதே! எனக்கு தெரிந்து ஸுஹேலுக்கு பெண் தோழிகள் என்று யாரும் இல்லை! இங்கு உள்ள பெண் மருத்துவர்களிடம் கூட வீணாக பேசுவதும் அரட்டை அடிப்பதும் சுஹேலுக்கு பிடிக்காது, அப்படிப்பட்டவன் இந்த பெண்ணுக்காக ஏதோ ஒரு கவரை கொடுக்க சொல்லுகின்றான் என்றால் இவள் அவனுக்கு ப்ரதேகமானவளாக இருப்பாளோ? ஒரு வேலை காதலியாக இருப்பாளோ? என்று பலவாறு சிந்தித்தவாறே அவளும் துர்காவைப் பார்த்து புன்னகை புரிந்தாள், " நீங்க தான் துர்காவா?" என சிரித்த முகத்துடன் கேட்க, துர்காவும், ஆமாம், டாக்டர் ! நான் தான் துர்கா, சுஹேலின் அத்தை வீடு, எங்கள் பக்கத்து வீடுதான், தற்போது சுஹேல் அங்கிருந்து தான் வருகிறான், நாங்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் என்று தன்னை அறிகுமுகபடுத்திக்கொள்ள, கயலும், நான் சுஹேலுக்கு உதவி செய்யும் மருத்துவர், என்னை நீங்கள் கயல் என்றே கூப்பிடலாம் என்று சிநேக பாவனையுடன் புன்னகை புரிந்தாள். பிறகு சுஹேல் தந்த கவரை அவளிடம் நீட்டி, இதை வாங்க தானே வந்துள்ளீர்கள்? இந்தாருங்கள், என்று கவரை கொடுத்தாள். துர்கா அதை பெற்றுக் கொண்டு நன்றி! கயல், இது CA நுழைவு தேர்வு விண்ணப்ப படிவம். நான் CA படிக்க எனக்காக வாங்கி இருக்கிறார் என்று அவள் கன்னங்கள் சிவக்க கூறியதைக் கேட்ட கயலுக்கு, இதுங்க இரண்டு பேரின் செயலை பார்த்த நண்பர்கள் போல தெரியலையே! சுஹேல் என்னவோ இவளுக்காக படிக்க விண்ணப்பம் வாங்கி கொடுக்கிறார், அதை வீட்டில் தராமல் மருத்துவமனைக்கு வந்து வாங்கிக் கொண்டு போக சொல்லறான், இவள் அதை நாணத்தோடு வாங்குகிறாள், கண்டிப்பாக ஏதோ சம்திங் சம்திங் தான் என்று மனதிற்குள் நினைத்தவளாக, நீங்க நல்லா படிச்சு CA தேர்வில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்! என்று கூறிய பின், சுஹேல் என்னிடம் இது என்னவென்று கூட சொல்லவில்லை. நீங்கள் வந்தால் உங்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று மட்டும் தான் கூறினான், நீங்கள் சொல்லித்தான் எனக்கு விஷயமே தெரியும் என்று சொல்லவும், துர்காவிற்கு அட கடவுளே! நாமாகத்தான் தானாகவே எல்லா விஷயத்தையும் உளறிவிட்டோமா? என்று தயங்கியவாறு அவளைப் பார்த்து புன்னகை புரிந்தாள். சரிங்க! கயல், எனக்கு நேரமாச்சு! நான் வரேன்! என்று அங்கிருந்து விடைப் பெற்றுக்கொண்டு சென்றாள்.



அவள் சென்றதும் கயல், பார்க்க சாதுவாக இருக்காரு நம்ம டாக்டர், ஆனா காதல் எல்லாம் செய்யறாரு! என் ஆளும் இருக்கே! நான் என்ன சொன்னாலும் புரியாம, என்ன செஞ்சாலும் தெரியாம! சாம்ஸ் ! நீ ரொம்ப வேஸ்ட் ! உன்னை நான் தான் டா தேத்தனும்! என்று தனக்கு முணுமுணுத்துக்கொண்டே தன் வேலையை பார்கலானாள்.
 
Last edited by a moderator:

New Threads

Top Bottom